14

14

போலி வாக்குறுதிகளை வழங்காதீர்கள் : மல்வத்த பீடாதிபதி அறிவுரை

“மக்களின் நலன்கருதி வேறுபட்ட கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்திருப்பதை வரவேற்கும் அதேவேளை, பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதை அரசியல் கட்சிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கு கண்டி மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.

தமது கொள்கை விளக்கக் கோவையினை ஐக்கிய தேசிய முன்னணியினர் மல்வத்த பீடாதிபதியிடம் இன்று சனிக்கிழமை காலை கையளித்து ஆசிபெற்ற பின்னரே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“மாகாண சபைகளினூடாக மக்களுக்கு உரிய சேவைகள் ஆற்றப்படுவதில்லை என்பதே எனது கருத்தாகும். நாட்டுக்கு நிறைவேற்று அதிகாரமில்லாத மக்கள் பலம் கொண்ட ஆட்சி பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். இது எனது சொந்த அபிப்பிராயமாகும்.  நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்வதற்கு அரசியல் தலைவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்” என பீடாதிபதி இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

புலமைப்பரிசிலில் சித்தியடைந்தவர்களுக்கு விரைவில் பாடசாலை – கல்வி அமைச்சு நடவடிக்கை

261009school_child_dp.jpgஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாடசாலை மற்றும் நிதியுதவி வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கல்வி அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

விண்ணப்பங்கள் கிடைத்து மூன்று வார காலத்திற்குள் புதிதாக பாடசாலைகளை கேட்டுள்ளவர்களுக்கு அவற்றைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை பூர்த்திசெய்ய கல்வி அமைச்சு எதிர்பார்க்கின்றது. புதிதாக பாடசாலைகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை பெற்றோர்கள் அதிபர்களிடம் சமர்பிக்கவேண்டிய கால எல்லை கடந்த 12 ஆம் திகதியுடன் பூர்த்தியடைந்துள்ளது. அந்த விண்ணப்பங்களை அதிபர்கள் உடனடியாக வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கல்வி அமைச்சு பணித்துள்ளது. திங்கட்கிழமைக்குள் அவற்றை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஒப்படைக்க வேண்டும் என கல்வி அமைச்சு மேலும் அறிவுறுத்தியுள்ளது.

‘அமைச்சர்களதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் பதில்கள் சாதகமாக அமைந்தது’ புலம்பெயர் புலி ஆதரவுக் குழுவின் இலங்கை விஜயம்

நவம்பர் முற்பகுதி வரை நான்கு வாரங்களாக இலங்கைப் பயணத்தை மேற்கொண்டிருந்த புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் குழு தற்போது நாடு திரும்பியுள்ளது. ‘அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சாதகமாகப் பதிலளித்தனர்’ என இலங்கைக்கு விஜயம் செய்த குழுவின் சார்பில் சட்டத்தரணி கெ பத்மநாதன் தெரிவித்தார். சட்டத்தரணி கெ பத்மநாதன் (லண்டன்), ஆர் சோமஸ்கந்தன் (ஜேர்மனி), ரி தர்மகுலசிங்கம் (டென்மார்க்), ஆர் இலங்கைத் தேசியமன்னன் (லண்டன்) ஆகியோரே இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் தங்கள் விஜயத்தின் போது அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்த, விநாயகமூர்த்தி முரளீதரன் உட்பட பல அமைச்சர்களையும் எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து உரையாடி உள்ளனர்.

இக்குழுவில் பயணித்த சட்டத்தரணி கெ பத்மநாதன் ‘Stop Genocide’ பிரச்சாரத்திற்காக அமெரிக்க சட்டத்தரணி புருஸ் பெயினை வரவழைத்து பல்வேறு கூட்டங்களை லண்டனில் ஏற்பாடு செய்தவர். நெடுமாறன் தலைமையிலான உலகத் தமிழர் இயக்கத்தின் பிரித்தானிய இணைப்பாளராகவும் இவர் இருந்துள்ளார். ஆர் இலங்கைத் தேசியமன்னன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட இளைஞர் பேரவையின் தலைவராக இருந்தவர். தற்போது வெண்புறா அமைப்பின் அறங்காவலராக உள்ளார். ரி தர்மகுலசிங்கம் டென்மார்க்கில் கவுன்சிலராக உள்ளார். வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை முன்னெடுக்கும் கி பி அரவிந்தனின் ‘அப்பால்தமிழ்’ ஊடாக இலக்கிய நூல்களை வெளியிட்டு உள்ளார்.

இவர்களை விடவும் தமிழீழத் தேசியத் தலைவருடன் படம் எடுத்துக் கொண்ட கிழக்கு லண்டன் வர்த்தகப் பிரமுகர் திலகராஜாவும் (திலக் – Tilko property) அண்மையில் இலங்கை சென்று திரும்பியுள்ளார். முன்னர் புலிகளுடன் செய்து கொண்ட வர்த்தக உடன்பாட்டை தற்போது அமைச்சர் டக்ளஸ் ஊடாக அவர் செய்துகொள்ள முயற்சிப்பதாகத் தெரிகின்றது. இலங்கை அரசுடன் இணங்கிப் போக வேண்டும் என்று  தற்போது கருத்து வெளியிட்டு வருகின்றார்.

1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டமே தற்போதுள்ள அரசியல் சூழலில் சாத்தியமான தீர்வு என இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட குழு கருதுகின்றது. Center for Peace and Social Development என்ற டென்மார்க்கில் இயங்கும் அமைப்பே இவ்விஜயத்தை ஏற்பாடு செய்துள்ளது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டது, அவசரகாலச்சட்டம் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றது, பாதுகாப்பு வலயங்கள் என்பன பற்றிப் பேசியதாகத் தெரிவித்துள்ளனர். இனவாத பேச்சுக்கள் அறிக்கைகள் குற்றமாக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கேட்டதாகவும் அதற்கு அமைச்சர்கள் உடன்பட்டதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

தமிழ் மொழி முழுமையாக அமுல்படுத்துவதற்கு அமைச்சர்கள் சம்மதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள இக்குழுவினர் வடக்கு கிழக்கு பொலிஸ் பிரிவில் 90 வீதமான பொலிஸார் தமிழர்களாக இருப்பார்கள் என்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தனர்.

இக்குழுவினர் மன்னார், மாந்தை, வவுனியா, செட்டிகுளம் – மனிக் பாம், மாங்குளம், துணுக்காய், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு உள்ளனர். சில அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ள இக்குழுவினர் மாந்தையில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு போக்குவரத்து, பாடசாலை போன்ற அடிப்படை விடயங்கள் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி உள்ளனர். மக்கள் முகாம்களை விட்டு வீடுகளுக்கு செல்லவே விரும்புவதாகத் தங்களிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ள இக்குழு வரும் ஜனவரி மாத்த்திற்குள் முகாம்கள் மூடப்பட்டு விடும் என்ற உறுதியை ஓய்வு பெற்ற ஐஜிபி – அரச ஆலோசகர் சந்திர பெர்னான்டொ தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். இறுதியான யுத்தம் நடந்த பகுதியைத் தவிர ஏனைய பிரதேசங்களில் மீள்குடியேற்றம் இடம்பெறும் என அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டதாக இக்குழு தெரிவிக்கின்றது.

பூந்தோட்டம் முகாமில் 12000 போராளிகளும் 2000 சிறுவர் போராளிகளும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தென்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் காயப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் இக்குழுவினர் தெரிவிக்கின்றனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையகம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிறுவர்களைப் பாராமரிக்க முன்வரும்பட்சத்தில் அவர்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். துணுக்காயில் 15 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள இக்குழு புலம்பெயர்ந்த தமிழர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

கிழக்கில் 46 000 விதவைகள் இருப்பதாகவும் அதேயளவு எண்ணிக்கையில் வடக்கிலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ள இக்குழு இவர்களுக்கும் இவர்களது குழந்தைகளுக்கும் மிகுந்த உதவிகள் வழங்கப்பட வேண்டி உள்ளதாகவும் அதற்கு அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் இல்லையென்று குற்றம்சாட்டி உள்ளது.

இக்குழுவினர் இம்மாத முடிவில் மற்றுமொரு விஜயத்தையும் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

பொன்சேகாவின் கடிதத்துக்கு பொருத்தமான பதில் அளிக்க ஜனாதிபதி ராஜபக்ஷ உத்தரவு – சீருடையில் எழுதிய கடிதம் வெளியானது நெறிமுறையற்றது; அமைச்சர் சமரசிங்க

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா தனது சேவையிலிருந்து ஓய்வுபெறுவதற்கான அனுமதி கோரியும் தனது இந்த தீர்மானத்திற்கான காரணங்களை விளக்கப்படுத்தியும் எழுதிய கடிதத்திற்கு சரியான பதிலொன்றை அனுப்புமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜெனரல் பொன்சேகா தனது பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு அனுமதி கோரி அதற்கான காரணங்களை 3 பக்கங்களில் விளக்கி நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

இதற்கே உரிய பதிலொன்றை அனுப்புமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதுடன் இந்த பதிலை ஜெனரல் பொன்சேகாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சமரசிங்க நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.  ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவி விலகல் குறித்து ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் தடுத்து வைத்திருக்கும் விதம் மனிதாபிமானமற்றதென குறிப்பிட்டிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோதே மஹிந்த சமரசிங்க இந்த தகவலை தெரிவித்தார்.

இதேநேரம், ஜெனரல் பொன்சேகாவினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் விபரங்கள் தனக்குத் தெரியாதென உத்தியோகபூர்வமாக மறுத்த அமைச்சர் சமரசிங்க கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்ற வகையில் ஜெனரல் பொன்சேகா சீருடையுடன் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் பிற இடங்களுக்கு வெளியிடப்பட்டிருக்குமானால் அது நீதி நெறிமுறைகளுக்கும் நேர்மைக்கும் முரணானது என்றும் சுட்டிக்காட்டினார்.  இந்த நிலையில் ஜெனரல் சரத்பொன்சேகா தனது பதவியிலிருந்து ஓய்வுபெற உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அனுமதி வழங்கியிருப்பதாக ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர கட்சியின் வருடாந்த மாநாடு நாளை

041109ma.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு நாளை கட்சியின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இம்மாநாடு நாளை பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டையொட்டி சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் கெத்தாராம விளையாட்டரங்கு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்தது.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சுதந்திரமான நாட்டில் நடத்தப்படவுள்ள இம்மாநாடு பிரமாண்டமான ஏற்பாட்டுடன் நடைபெறுவதுடன் இம்மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கையுடன் நெருங்கிய உறவினைக் கொண்டுள்ள 35 நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

தேசிய சர்வதேச ரீதியில் இயங்கும் சுதந்திர கட்சி கிளைகளின் அமைப்பாளர் மற்றும் முக்கியஸ்தர்களுடன் ஒரு இலட்சம் பேர் இம்மாநாட்டில் கலந்து கொள்வரென மாநாட்டின் சார்பில் சர்வதேச தொடர்புகளுக்குப் பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சர்வதேச பிரதிநிதிகள் நேற்று முதலே வருகை தர ஆரம்பித்துள்ளனர். அத்துடன் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வடக்கு கிழக்கிலிருந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளை அமைப்பாளர்கள் உப தலைவர்கள் பேராளர்கள் பலரும் வருகை தரவுள்ளனர்.

மாநாட்டையொட்டிய பிரமாண்டமான முன்னேற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. வெளிநாட்டுப் பிரதிநிதிகள், தேசிய சர்வதேச கட்சி அமைப்பாளர்கள் ஆகியோருக்கு விசேட ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாடெங்கிலுமிருந்து இம்மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தருபவர்களுக்கென விசேட போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மாநாடு இடம்பெறும் பகுதியை ஊடறுக்கும் போக்குவரத்துப் பாதைக்குப் பதிலாக மாற்றுப் பாதைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டையொட்டியதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நான்காவது பதவிப் பிரமாண நிறைவும் (19ம் திகதி நிறைவு கூரப்படுவதால் இம்மாநாடு விசேடம் பெறுகிறது.

நாடு தேர்தல்களிரண்டை எதிர்கொள்ளவுள்ள இன்றைய கால கட்டத்தில் இம்மாநாட்டில் வெளியிடப்படவுள்ள தீர்மானங்கள் சகல தரப்பினரதும் ஆர்வங்களைத் தூண்டியுள்ளன. அத்துடன் அடுத்து வருவது ஜனாதிபதி தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா என்பதை வெளிப்படுத்துவதாகவும் இம்மாநாடு அமைகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது 58 வருட அரசியல் வரலாற்றைக் கொண்டது. நான்கு முக்கிய தலைவர்கள் இதற்கான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளதுடன் பல்வேறு சவால்கள், தடைகளுக்குள்ளும் முன்னேறும் கட்சியாக அது திகழ்கிறது. குறிப்பாக கடந்த 30 வருட காலமாக நாட்டை ஸ்தம்பிதமடையச் செய்த பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நாட்டில் அமைதிச் சூழல் நிலவும் தருணமொன்றில் அதற்குக் காரணமானவராகத் திகழும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறும் இம்மாநாடு சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்னம் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் புலனாய்வு பிரிவு பொலிசாரினால் வெள்ளிக்கிழமையன்று முதற்தடவையாக வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இவர் மீதான விசாரணைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை என பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, நீதவான் இவரை வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் வன்னிப் பிரதேசத்தில் சண்டைகள் தீவிரமடைந்தது முதல் கனகரட்ணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். முல்லைத்தீவு மாவட்டத்தைப் படையினர் கைப்பற்றிய போது, பொதுமக்களோடு, இவரும் தனது குடும்பத்தினருடன் இராணுவத்தினரிடம் சரணடைந்தவேளை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் படையினர் இவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருந்தார்கள். கடந்த ஆறுமாத காலமாக விசாரணை செய்ததன் பின்னர், புலனாய்வுப் பிரிவினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A9 பொதுமக்கள் யாழ் சென்றுவர பாதுகாப்பு அனுமதி தேவையில்லை – அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி லைசன்ஸ் இருந்தால் போதும்

road-a9.jpgஏ-9 வீதியூடாக யாழ். நகர் சென்று வருவதற்கு பயணிகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இலங்கைப் பிரஜையாகவுள்ள அனைவரும் ஏ-9 வீதியூடாக சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டிகள், மற்றும் விசேட பஸ் வண்டிகளூடாக சென்று வரலாம். பயணிகள் அனைவரும், தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றில் ஒன்றை காண்பித்து செல்லமுடியும்.

பயணிகள் அனைவரும் வவுனியா சோதனைச் சாவடியில் சாதாரண சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய ஏ-9 வீதி மக்களின் போக்குவரத்துக்காக 13 ஆம் திகதி திறக்கப்பட்டது. முதற் தடவையாக நேற்று 10 பஸ் வண்டிகளில் பயணிகள் யாழ். நோக்கி வவுனியா ஊடாக சென்றனர். வவுனியா இரட்டைப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் வழமையான பாதுகாப்பு சோதனைகளின் பின்னர் பயணிகள் பஸ் வண்டி புறப்பட்டன.

பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி ஏ-9 வீதியை திறப்பது தொடர்பாகவும் பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது பாதுகாப்பு செயலாளர் வீதியை திறப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தார். யாழ். குடாநாட்டிலிருந்து பொருட்களை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லவும், வெளிமாவட்டங்களிலிருந்து குடாநாட்டுக்குள் கொண்டு செல்லவும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென பயன்படுத்தப்படும் லொறிகள், பார ஊர்திகள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரிடம் பதிவு செய்யப்படல் வேண்டும். எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இந்தப் பதிவுகளை செய்துகொள்ள முடியும்.

ஏ-9 வீதியூடாக வவுனியா வரை வரும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி நடவடிக்கை எடுத்திருந்தார். கடந்த ஜுலை மாதம் 27ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே ஆளுநர் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தார்.

இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை வருகிறார்

1411prafp.jpgஇந்திய நிதியமைச்சரான பிரணாப் முஹர்ஜி அவர்கள்  இன்று இலங்கைக்கு  வரவுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ள அவர், இலங்கையில் மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களைத் தரக்கூடிய அதிகாரப் பகிர்வு, தமிழ் மக்களை தேசிய நீரோட்ட அரசிலுக்குள் இணைப்பதற்கான முயற்சிகள், அவர்களுக்கான நிவாரண மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள், இந்தியாவின் நிதியுதவிகளை அதிகரித்தல் ஆகிய விடயங்கள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் தற்போது நிலக்கண்ணிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்திய குழுக்களுக்கு உதவும் முகமாக மேலதிகமாக அங்கு பணியாளர்களை உதவிக்கு அனுப்புவது குறித்தும் அவர் இலங்கையில் கலந்துரையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

யாழ். எழுதுமட்டுவாள், கரம்பகம் பிரதேசங்களில் மீள்குடியேற்றம்

யாழ். தென்மராட்சி கிழக்குப் பிரதேசமான எழுதுமட்டுவாள், கரம்பகம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மீளக் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் பாவனைக்கு விடப்படாதிருந்த மேற்படி பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி மக்களை அப்பகுதியில் மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

தென்மராட்சிப் பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதன் கிழக்கு பகுதியான எழுதுமட்டுவாள் ஜே-334 கிராம சேவகர் பிரிவிலுள்ள பகுதிகளையும் கரம்பகம் ஜே-330 கிராம சேவகர் பிரிவிலுள்ள பகுதிகளையும் அப்பகுதிப் பொதுமக்களின் மீள்குடியேற்றத் திற்கான ஏற்பாடுகளை பாதுகாப்புப் படையினரின் இணக்கப்பாட்டுடன் மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் தென்மராட்சிப் பிரதேச செயலாளர் சி.ஸ்ரீனிவாசன், 523வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி ஹேமந்த பண்டார, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் சூசைமுத்து அலெக்சாண்டர் சாள்ஸ் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டனர். கடந்த 10 வருட காலமாக பொதுமக்கள் பாவனைக்கு விடுவிக்கப்படாமலிருந்த கரம்பகம், எழுதுமட்டுவாள் ஆகிய பகுதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கடும்பிரயத்தனத்தின் மத்தியில் மீள்குடியேற்றத்திற்கு விடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் மீளக்குடியேறத் தயாராக இருந்த மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது ஏற்பட்டுள்ள புதிய ஜனநாயக சூழ்நிலையில் நாம் கடந்த காலத்தில் இழந்தவற்றை ஈடுசெய்யும் பொருட்டு தொடர்ந்து பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மியன்மார் உயர்தலைவரின் இலங்கை விஜயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

myanmar_president.jpgமியன்மார் இராணுவ உயர்தலைவரின், இலங்கை விஜயத்தை கண்டித்து இன்று இலங்கையின் தலைநகர்  கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம், நடத்தப்பட்டது. இடதுசாரி கட்சிகள் உட்பட்ட சமூக அமைப்புகள் இதனை ஏற்பாடு செய்திருந்தன. மியன்மாரில் ஜனநாயக உரிமைகளை பேணுமாறு கோரி, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோசங்களை எழுப்பினர்.