10

10

நிவாரணக் கிராமங்களில் இன்னும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேரே இருக்கின்றனர் – ஜனாதிபதி

0511mainpic.jpgநிவாரணக் கிராமங்களில் இன்னும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேரே இருக்கின்றனர். இவர்களின் உயிர்களுக்கு நானே பொறுப்பு என்பதால் அப்பிரதேசங்களிலுள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே குறிப்பிட்ட பிரதேசங்களில் மீள்குடியேற்ற முடியும் ஜனஹமுவ என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்நாட்டை மக்கள் என்னிடம் கையளித்தபோது, நாடு இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. இதனை ஐக்கியப்படுத்துவது மக்களினது எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. புலிப் பயங்கரவாதிகளின் இராணுவக் கட்டமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. எதிர்காலப் பரம்பரைக்கேற்ற வகையில் நாட்டை உருவாக்கியுள்ளோம். எமது நடவடிக்கைகள் தேர்தலை நோக்காகக் கொண்டதல்ல. மாறாக, நாட்டின் அபிவிருத்தியைக் குறியாகக் கொண்டது. கிழக்கின் உதயம் தோன்றியுள்ள அதேவேளை, வடக்கின் வசந்தம் தொடர்பிலான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எமது நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டிருப்பதாக பல கதைகள் கூறப்பட்டன. முழு உலகிலுமே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், எமது நாட்டின் சிறந்த முகாமைத்துவம் காரணமாக உலக சவால்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளாது செயற்பட முடிந்தது.

நான் பிரான்ஸில் இருந்தோ அல்லது இங்கிலாந்தில் இருந்தோ வரவில்லை. ஆகவே, எனக்கு இங்குள்ள நிலைமைகளை நன்கறிய முடியும். யுத்தத்தை வெற்றி கொள்ள முடியாது என்ற நிலையை மாற்றியமைத்து, அதனை நாம் முடிவுக்குக் கொண்டு வந்தோம். யுத்த காலத்தின் போது நாம் கிளிநொச்சியை நெருங்கிய சந்தர்ப்பத்தில், தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இதுபோன்ற அழுத்தங்கள், நெருக்குதல்கள் எமக்கு வந்தன. இதனை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும். ஊழியர்கள் மட்டுமல்லாது, அனைவருமே தமது தாய்நாடு தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

மே மாதம் 19ஆம் திகதி தான் யுத்தம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் சுமார் 3 லட்சம் வரையிலான மக்கள் எமது பிரதேசத்திற்கு வருகை தந்தனர். யுத்த காலத்தில் பெருமளவிலான மக்கள் இங்கு வருகை தரக் கூடும் என அறிந்திருந்தமையால், சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கான தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், ஒரேயடியாக 3 லட்சம் மக்கள் வருகை தந்தமையால் அவர்களுக்கான தேவைகளையும் நிறைவேற்ற வேண்டியதாயிற்று. அதனையும் நாம் செய்தோம்.

அரசாங்கத்தை நம்பி வந்த மக்களை அவர்களது பிரதேசங்களில் மீள்குடியேற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனை இப்போது நாம் மேற்கொண்டு வருகிறோம். இற்றை வரையில் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ளோம். மீட்கப்பட்ட பிரதேசங்களில் கண்ணிவெடிகள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே, கண்ணிவெடிகளுக்குள் மக்களை தள்ளிவிட முடியாது. மீண்டும் ஒரு பயங்கரவாத நிலைமை உருவாவதற்கு இடமளிக்கவும் முடியாது. அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தங்குமிட வசதிகள், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. உள்நாட்டின் அழுத்தம் காரணமாகவோ அல்லது சர்வதேச நெருக்குதல் காரணமாகவோ நாம் இதனை மேற்கொள்ளவில்லை” என்றார்.

துப்பாக்கி முனையில் கட்டிய தமிழ்தேசியம் ஈடாடுகிறது. ததேகூ உள்ளுராட்சி உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இணைவு. : த ஜெயபாலன்

Trincomalee_Mapதமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றத் தலைவரான ஆர் சம்பந்தனின் மாவட்டமான திருகோணமலை மாவட்டத்தின் நகரசபை பிரதேச சபைத் தலைவர்களும் உறுப்பினர்களும் இவ்வாறு ஆளும் சுதந்திரக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த போதிலும் ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் மற்றவர்களுடன் கலந்தாலோசியாமலேயே முடிவுகளை மேற்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் சிவாஜிலிங்கம் இலங்கை செல்வதற்கு சில தினங்களுக்கு முன் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார். அவர்கள் தம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவதைத் தவிர்த்து இருந்ததாகவும் எம் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

மிகுந்த அரசியல் அனுபவம் மிக்கவராகக் கருதப்படும் ஆர் சம்பந்தன் தன்னுடைய மாவட்டத்தின் நகரத்தின் நகர சபை பிரதேச சபை தலைவர்களையும் உறுப்பினர்களையும் வென்றெடுக்க முடியாதவராக இருந்துள்ளார். இதுவரை காலமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் துப்பாக்கி முனையில் பேணப்பட்டு வந்த தமிழ்த் தேசிய ஒருமைப்பாடு அவர்களுடைய துப்பாக்கிகள் பறிக்கப்பட்டதும் ஈடாடிப் போயுள்ளது. இப்பிளவு தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் மட்டுமல்ல வே பிரபாகரனை தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்ட அத்தனை புலித் தேசிய அமைப்புகளிலும் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் கட்சித் தாவல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும் புள்ளிகளின் கட்சித் தாவலுக்கு கட்டியம் கூறுவதாக அமைந்தள்ளது.

பாராளுமன்றத் தலைவர் ஆர் சம்பந்தன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாபெரும் மனித அவலம் இடம்பெறப் போவதை அறிந்திருந்த போதிலும் அவர்கள் அதனைத் தடுப்பதற்கு எவ்விதமான காத்திரமான முயற்சியும் எடுக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்களாக இருந்து காலத்திற்குக் காலம் தங்கள் இருப்பைக் காட்டுவதற்கான அறிக்கைகளை விட்டதற்கு அப்பால் அவர்களுக்கு அரசியல் இருக்கவில்லை. தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற புலி சார்பு அமைப்புகள் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன. அதற்கான அழுத்தங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஆளும் சுதந்திர ஐக்கிய முன்னணி அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளும் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. உறுதியான தலைமையும் உறுதியான கொள்கையும் இன்றி தங்கள் பாராளுமன்ற ஆசனங்களைக் காப்பாற்றுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வே பிரபாகரனுக்குப் பதிலாக இன்னுமொரு எஜமானனுக்கு கீழ் அந்தப் பாராளுமன்ற ஆசனங்களைத் தக்க வைக்க முடியுமென்றால் அதனை நோக்கி நகரவே முயற்சிக்கும்.

நவம்பர் 09ல் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்மைப்பு, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ், மற்றும் ஐக்கிய தேசியக் உறுப்பினர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். மேலும் சிறிரெலோ உறுப்பினர்கள் பதினொருவரும் இவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். நாட்டினை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லும் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதற்கே தாம் சுதந்திரக் கட்சியில் இணைந்ததாக சிறிரெலோவைச் சேர்ந்த சிவம் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார். இந்நிகழ்வில் மொத்தமாக 26 பேர் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். ஏற்கனவே மட்டு மாவட்ட மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட மட்டக்களப்பு நகரசபை பிரதேச சபை உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டமை தெரிந்ததே.

Trincomalee_Map2006ல் இடம்பெற்ற திருகோணமலை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி)ல் போட்டியிட்டு வெற்றி பெற்ற நகரசபை, பிரதேசசபை உறுப்பினர்களே தற்போது சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர். திருகோணமலை நகரசபைத் தலைவர் எஸ் கௌரிமுகுந்தன், உப்புவெளி பிரதேச சபைத் தலைவர் ரி காந்தரூபன், உபதலைவர் வி சுரேஸ்குமார், மற்றும் உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர்கள் ரி பாலசுப்பிரமணியம், கெ வைரவநாதன் மற்றும் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் யு ரவிக்குமார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்ட ரெலொ அமைப்பு தங்கள் அடிமட்ட உறுப்பினர்களைக் கைவிட்டுவிட்டதாகக் கூறி பாரிஸில் இருந்து சென்ற சயந்தன், உதயராஜா (உதயன்) ஆகியோர் சிறிரெலோவை உருவாக்கினர். லண்டனைச் சேர்ந்த முன்னாள் ரெலோ உறுப்பினர் மாணிக்கம் நகுலேந்திரன் (கீரன்) அண்மையில் இலங்கை சென்று சிறிரெலோவுடன் இணைந்து செயற்பட்டார். தற்போது சிறிரெலோவின் தலைமையும் தங்கள் அடிமட்ட உறுப்பினர்களை கைவிட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டி சிவம் தலைமையில் ஒரு பகுதியினர் சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர். இன்னும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அவ்வாறு இணைய உள்ளதாகவும் அவர்கள் தேசம்நெற்றுக்கு தெரிவித்தனர்.