July

July

“தீவிரமாக பரவும் டெல்டா. இரண்டு தடுப்பூசிகளுமே பயனற்றவை.” – அமெரிக்கா அதிர்ச்சி அறிக்கை !

இந்தியாவில் பி.1.617.2 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு டெல்டா வைரஸ் என உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டி உள்ளது. இந்த வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையில் அதிக கைவரிசை காட்டியது.

டெல்டா வைரஸ், உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது. எதிர்காலத்தில் இது இன்னும் தீவிரமாக தாக்கும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சி.டி.சி. என்னும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கை ஊடகங்களில் கசிந்துள்ளன. அதில் பல முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த அறிக்கையில் ,

“டெல்டா வைரஸ் பெரியம்மை போல எளிதாக பரவும், கடுமையாக பாதிக்கும். மேலும், தடுப்பூசி போடாதவர்கள் என்ன வேகத்தில் பரப்புவார்களோ, அதே வேகத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களும் டெல்டா வைரசை பரப்புவார்கள். இது மெர்ஸ், சார்ஸ், எபோலா, ஜலதோஷம், பருவ காய்ச்சல், சிற்றம்மை போல வேகமாக பரவுகிற வைரஸ் ஆகும். இது பெரியம்மை போல தொற்றும். அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள். தடுப்பூசிகள் நோய்த்தொற்றின் 90 சதவீத தீவிரத்தை தடுக்கிறது. ஆனால் தொற்றை தடுப்பதிலும், பரப்புவதிலும் குறைவான செயல்திறனைத்தான் கொண்டுள்ளன.” என குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இதுபற்றி சி.டி.சி.யின். இயக்குனர் டாக்டர் ரோச்செல்லி வாலன்ஸ்கை கூறுகையில், “2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், தொற்று பாதிப்புக்குள்ளாகிறபோது, தடுப்பூசி போடாமல் தொற்று பாதிப்புக்குள்ளாகிறவர்கள் போலவே மூக்கிலும், தொண்டையிலும் அதிகளவிலான வைரசை சுமந்து செல்வார்கள். சிற்றம்மை, பெரியம்மை போல மிகவும் பரவுகிற வைரஸ் டெல்டா வைரஸ். பள்ளிக்கூடங்களில், மாணவர்கள், ஊழியர்கள், வருகிறவர்கள் என அனைவரும் கண்டிப்பாக முககவசத்தை எல்லா நேரமும் அணிந்திருக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

ஐ.நா. அலுவலகம் மீது தலிபான்கள் தாக்குதல் !

மேற்கு ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐ.நா. அலுவலகம் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பொலிசார் ஒருவர் உயிரிழந்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே நீண்டகால போர் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் பல சுற்று முடிவில் உடன்பாடு எட்டப்படவில்லை. அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து படைகளை விலக்கி கொள்வது என அமெரிக்க அரசு முடிவு செய்தது.

எனினும், திட்டமிட்டபடி கடந்த முதலாம் திகதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு பதிலாக தள்ளி போனது. இதன்பின் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஹெராட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய வளாகத்தை ‘தலிபான்கள்’ தாக்கியதால் ஆப்கானிஸ்தான் பொலிஸார் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் சில அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த அவுஸ்ரேலியாவில் களமிறக்கப்பட்ட இராணுவம் !

கொவிட் முடக்கநிலை கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவுவதற்காக அவுஸ்ரேலியா அரசாங்கம், சிட்னிக்கு நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது.

ஜூன் மாதம் தொடங்கிய டெல்டா மாறுபாடு கிட்டத்தட்ட 3,000 தொற்றுநோய்களை உருவாக்கியது மற்றும் ஒன்பது இறப்புகளுக்கு வழிவகுத்தது.

அவுஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர்கள், திங்கட்கிழமை நிராயுதபாணியான ரோந்துப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் வார இறுதியில் பயிற்சி பெறுவார்கள். ஆனால், இராணுவ தலையீடு அவசியமா என்று பலர் கேள்வி எழுப்பினர்.

முடக்கநிலை கட்டுப்பாடுகள் குறைந்தபட்சம் ஒகஸ்ட் மாதம் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட வாய்ப்புள்ளது. அத்தியாவசிய உடற்பயிற்சி, ஷாப்பிங், கவனிப்பு மற்றும் பிற காரணங்களைத் தவிர மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்து வாரங்கள் முடக்கப்பட்ட போதிலும், நாட்டின் மிகப்பெரிய நகரத்தில் நோய்த்தொற்றுகள் தொடர்ந்து பரவி வருகின்றன. அதிகாரிகள் 170 புதிய தொற்றுகளை வெள்ளிக்கிழமை பதிவு செய்தனர்.

10 கிமீ (6.2 மைல்) பயண வரம்பை உள்ளடக்கிய விதிகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்ய இராணுவ வீரர்கள் கண்கானிப்பில் ஈடுபடுவார்கள்.

“ஆப்கான் மண்ணை சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.” – தலிபான்கள்

“ஆப்கான் மண்ணை சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.” என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

தலிபான்களுடன் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி தீவிரப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுவந்த நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை தலிபான்கள்  புதன்கிழமை சந்தித்தனர்.

ஆப்கானிஸ்தானின் தற்போதையை நிலை குறித்தும், அமைதி, அரசியல், பொருளாதாரம் ஆகியவை குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டன. இரு நாட்டு உறவு குறித்தும் பேசப்பட்டது.

இந்த நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சரிடம் ஆப்கன் நிலத்தை சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்த விடமாட்டோம் என்று தலிபான்கள்  உறுதி அளித்ததாகவும், ஆப்கன் விவகாரத்தில் சீனா தலையிடாது என்றும், நாட்டில் அமைதியை ஏற்படுத்த சீனா உதவும் என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதியளித்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேற்றத்துக்குப் பிறகு, இராக், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எல்லையோரப் பகுதிகளை தலிபான்கள்  கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

“தலிபான்களும்  சாதாரணக் குடிமக்களே.” – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேற்றத்துக்குப் பிறகு, ஈராக், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எல்லையோரப் பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்தப் போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்கப் படைகளின் கீழ் போரிட்டன.

தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இந்தப் போரில் இதுவரை அமெரிக்க தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கான் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “தலிபான்களும்  சாதாரணக் குடிமக்களே. அவர்கள் இராணுவ உடை அணிந்தவர்கள் அல்ல என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இம்ரான்கான் கூறும்போது,

”பாகிஸ்தானில் உள்ள அகதி முகாம்களில் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் தலிபான்கள் இனக்குழுவைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். தலிபான்கள் ராணுவ உடை அணிந்தவர்கள் அல்ல. அவர்களும் சாதாரணக் குடிமக்களே” என்று தெரிவித்தார்.

தலிபான்களுக்கு பாகிஸ்தான் உதவுகிறதா? என்ற கேள்விக்கு,

“இதில் உண்மையில்லை. ஆப்கானில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். செப்டம்பர் இரட்டை கோபுரத் தாக்குதலில் எங்களுக்குத் தொடர்பில்லை” என்றார்.

“2 வாரங்களில் 20 கோடியை தொடவுள்ள கொரோனா.” – உலக சுகாதார அமைப்பு அச்சம் !

உலக அளவில்  கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது திடீரென பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
கொரோனா அதிகரிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த வாரம் 69 ஆயிரம் கொரோனா உயிரிழப்புகள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ளன. கொரோனா புதிய பாதிப்புகள் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் மொத்த பாதிப்பு 19 கோடியே 56 லட்சத்தை தாண்டி விட்டது.

இதேரீதியில் சென்றால், இன்னும் 2 வாரங்களில் 20 கோடியை மிஞ்சிவிடும். அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் புதிய பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் 19.5 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 41.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் 6.1 லட்சம் பேரும், இந்தியாவில் 4.22 லட்சம் பேரும், பிரேசிலில் 5.52 லட்சம் பேரும் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இருபது கோடியை அண்மிக்கும் உலக கொரோனா தொற்று – 41.92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக  கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் உலுக்கி வருகிறது.  இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.59 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17.76 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41.92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.41 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 85 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களை கொன்று குவிக்கும் தலிபான்கள் – மீள உதவிக்கரம் நீட்டுகிறது அமெரிக்கா !

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்க படைகள் வெளியேறி வருகின்றன. அடுத்த மாதம் 31-ந் திகதிக்குள் படைகள் முற்றிலும் வாபஸ் ஆகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தலிபான் பயங்கரவாதிகள் நாட்டை கைப்பற்ற முயற்சித்து வருகிறார்கள்.

நாட்டின் பாதி இடங்கள் தற்போது தலிபான்கள் வசம் சென்றுள்ளன. மற்ற பகுதிகளை காப்பாற்ற ஆப்கானிஸ்தான் இராணுவம் போராடி வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அமெரிக்க அதிபருடன் பேசினார்.

அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு சில உதவிகளை செய்ய அமெரிக்கா முன் வந்துள்ளது. தலிபான்கள் மீது தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை செய்யப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பல இடங்களிலும் தலிபான்களின் முன்னேற்றத்தை ஆப்கானிஸ்தான் விமானப்படைகள் குண்டு வீசி தடுத்து வருகின்றன. அமெரிக்காவின் உதவி நீடிக்கும் என்று அறிவித்திருப்பதால் ஆப்கானிஸ்தான் விமானப்படை இன்னும் தாக்குதலை இன்னும் தீவிரமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தலிபான் பயங்கரவாதிகள் பல இடங்களிலும் எதிரிகளை கொன்று குவித்து வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக உள்ள கிராம மக்களை குறிவைத்து கொல்கிறார்கள்.

காசினி என்ற கிராமத்தில் புகுந்த தலிபான் பயங்கரவாதிகள் 43 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர். பின்னர் வீடுகளில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். பல வீடுகளுக்கு தீ வைத்தார்கள்.

பல இடங்களில் அரசு ஊழியர்களை தலிபான்கள் கொன்றுள்ளனர். தலிபான்களின் இந்த தாக்குதலால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தலிபான்களின் தாக்குதலில் பொதுமக்கள் 100பேர் பலி !

ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 100 பேர் பலியாகியுள்ளதாக ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து  உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில்,

”காந்தஹார் மாகாணத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தலிபான்கள் பொதுமக்கள் 100 பேரைக் கொன்றுள்ளனர். பாகிஸ்தானின் ஆணைக்கு இணங்க  தலிபான்கள் செயல்படுகின்றனர். அப்பாவி ஆப்கன் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. கடத்தல் சம்பவங்களிலும்  தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேற்றத்துக்குப் பிறகு தலிபான்கள், இராக், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எல்லையோரப் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

என் குடும்பத்தின் எதிர்காலத்தையும் எம் இனத்தின் எதிர்காலத்தையும் புரட்டிப் போட்ட நாள்: கருப்பு யூலை!

ரவி என் அண்ணா, ஊரில் அவனை எல்லோருக்கும் அப்படித்தான் தெரியும். தனபாலன் பதிவுப் பெயர். நாங்கள் அனுராதபுரத்தில் தான் பிறந்தோம். அவன் முதற் பிள்ளை பெரிய உயிரைக் காப்பாற்றுவதா? சின்ன உயிரைக் காப்பாற்றுவதா? என்ற போராட்டத்தோடு தான் அண்ணா சத்திரசிகிச்சை மூலம் இவ்வுலகிற்குக் கொண்டு வரப்பட்டான். அதனால் அவனை இந்த உலகிற்குக் கொண்டுவந்த டொக்கடர் தனபாலனின் பெயரே அவனுக்கும் சூட்டப்பட்டது. அவனையும் ஒரு டொக்டர் ஆக்க வேண்டும் என்ற கனவோடு தான் அம்மா அவனை வளர்த்தார். ஏ எல் பயோ சயன்ஸ் படித்தான். யாழ் வட்டு இந்துக் கல்லூரியில் படித்தான். யாழ் நியூ மாஸ்ரருக்கு ரியூசனுக்குப் போய் வந்தான். ஊரில் நல்ல பிள்ளை என்று பெயர். படிப்பிலும் பரவாயில்லை. ஆனால் டொக்டர் கனவை எட்டியிருக்க முடியுமா தெரியவில்லை. பெரும்பாலான நேரம் அவன் அரசியல் கூட்டங்கள் என்று தான் திரிந்தான்.

யாழ் வட்டு கார்த்திகேய வித்தியாலயத்தில் ஒரு சிவராத்திரி விழா என்று தான் நினைக்கிறேன்; அப்போது அ அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர்; திரு திருமதி அ அமிர்தலிங்கம் உரையாற்றுவதற்காக வந்திருந்தனர். அப்போது கிளர்ச்சியூட்டும் கோசங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தின் உரைகள் பொறி பறக்கும். அந்தக்காலம் அ அமிர்தலிங்கம் தளபதி. கையைக் கீறி இரத்த திலகம் இடுவதுதான் அன்றைய வைரல் ரென்ற். அன்றைய கூட்டத்தில் அண்ணாவும் அ அமிர்தலிங்கத்திற்கு இரத்த திலகம் இட்டான். ஏ எல் முடித்துவிட்டு கொக்குவில் ரெக்கில் படித்தான்.

1983 யூலை 23 இரவு யாழ் திருநல்வேலியில் 13 இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் ஆங்காங்கு எழுந்தமானமான அசம்பாவிதங்களை ஏற்படுத்தினர். இளைஞர்கள் தாக்கப்பட்டனர்.

அப்போது எனக்கு வயது 12. அண்ணாவுக்கு வயது 19. இராணுவ கெடுபிடி என்றாலும் அவன் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கவில்லை. எப்போதும் ஓடி ஆடித் திரிந்துகொண்டுதான் இருப்பான். ஆனால் மாலை ஆறு மணி ஏழு மணிக்குள் வீட்டிற்கு வரவேண்டும். அப்போதெல்லாம் வேலியில் தடியயை முறித்து கோட்டைக் கறீ, கோட்டுக்குள் பிள்ளைகளை நிற்க வைத்து அடிப்பது நல்ல பெற்றோரின் ஸ்ரைல். பத்தொன்பது வயதிலும் அம்மா கீறிய கோட்டைத் தாண்டாமல் துள்ளித் துள்ளி அடிவாங்குவான்.

நாங்கள் யாழ்ப்பாணத்தில். அப்பா அனுராதபுரத்தில் வேலை. ஆண்மகனாக அப்பாவின் இடத்தில் அண்ணா தான் வெளிநிர்வாகம் முழுவதும். அவனுக்கு நட்புகளுக்கும் குறைவில்லை. அவனும் அவனது தலைமுறையும் தேசியவாத அலையில் அள்ளுண்டனர். அதைவிட அங்கு பெரிய மாற்றீடு இருக்கவில்லை. ஊரோடு ஒத்தோடி இருப்பார்கள். ஆனையிறவை பெரிதாக தாண்டாத சிங்களவர்களையோ வேற்று ஆட்களையோ கண்டிராத ஒரு சமூகம். அப்போது என்ன பெரிய அரசியல் அறிவு இருந்திருக்கும். ஈழநாடு சுதந்திரன் போன்ற பத்திரிகைகளின் கருத்தோடு அள்ளுண்ட காலங்கள் அவை.

1976 இல் வட்டுக்கோட்டையில் தமிழீழப் பிரகடனம் செய்தது அப்போது எங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. 1977 கலவரம் வரை நாங்களும் எல்லோரும் அனுராதபுரத்தில் தான் வாழ்ந்தோம். கலவரம் ஆரம்பிக்கப்பட்டபோது அண்ணா அனுராதபுரம் விவேகானந்தக் கல்லூரியில் ஓல் படித்திருக்க வேண்டும். அன்று பாடசாலைநாள். காடையர்கள் தமிழர்களைத் தாக்க ஆரம்பித்துவிட்டனர். தமிழர்களின் வீடுகள் கடைகள் எரியூட்டப்பட்டது. அப்பாவோ சின்னையாவோ தெரியவில்லை பள்ளிக் கூடம் சென்றிருந்த அண்ணாவை ஓடிப்போய் கூட்டிவந்து பக்கத்தில் இருந்த சிங்கள நண்பரின் வீட்டில் ஓரிரு நாட்கள் ஒளிந்துகொண்டோம். சில மங்களான ஞாபகங்கள் இன்றும் உள்ளது.

அனுராதபுரத்தில் யாழ்ப்பாண சந்திக்கு அருகில் இருந்த எங்கள் வீடும் எரிக்கப்பட்டதாக சொன்னார்கள். ஓரிரு நாட்களில் நாங்கள் பொலிஸ் பாதுகாப்போடு அனுராதபுரம் கச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டோம். அப்போதும் கடையர்கள் பெற்றோல் குண்டுகளோடு துரத்தினர். அனுராதபுரம் கச்சேரியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இராணுவ பாதுகாப்போடு வவுனியா வரை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டோம். மாங்குளத்தில் காடையர்கள் பஸ்ஸை கற்கள் கொண்டு தாக்கினர். அக்காலத்திலும் உண்மைச் சம்பவங்களும் வதந்திகளும் சேர்ந்து மரண பயத்தை ஏற்படுத்தி இருந்தது. அப்போது எனக்கு இதனைப் புரிந்துகொள்ளும் வயதில்லை. ஆனால் அண்ணாவுக்கு இவை தெளிவாக மனதில் பதிந்து இருக்கும். அந்த உணர்வுகளோடு தமிழ் தேசியத்தின் தலைநகரான யாழ் மண்ணில் அவன் இளைஞனான்.

கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல் கொழும்புக்கு மறுநாள் மாலையளவில் கொண்டு செல்லப்பட அங்கு பதட்டம் ஏற்பட்டது. கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் இருந்த தமிழர்கள், அவர்களின் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் தாக்குதலுக்கு இலக்கானது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் ஆட்சியில், இக்கலவரம் கட்சி ஆதரவாளர்களால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக யூலை 25 மாலை வெலிக்கடை சிறையில் அடைத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் 35 பேர் சிறைச்சாலை அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்போடு படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 17 அரசியல் கைதிகள் யூலை 27 இல் படுகொலை செய்யப்பட்டனர். பரவலாக தென்பகுதியில் குறிப்பாக கொழும்பில் நடந்த வன்முறையில் சிங்களக் காடையர்களால் 800 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போதெல்லாம் 24 மணிநேரச் செய்திச் சேவைகள் கிடையாது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சொல்வதுதான் செய்தி. லங்கா புவத் – ப்பொறு புவத் என்று கிண்டலாக அழைக்கப்பட்டது. அன்றும் அசம்பாவிதங்கள் வதந்திகளாக வந்துகொண்டிருந்தது. நாளாந்த வாழ்க்கை சீர்குலைந்தது. சமைத்து சாப்பிடுவதே கஸ்டமானதாக இருந்த நாட்கள். ஒவ்வொரு வீட்டுலுமே இழவு நிகழ்ந்தது போன்ற உணர்வு. மாலை ஆறு மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் செய்திகளுக்காக எல்லோரும் மயான அமைதியோடு காத்திருந்தோம். வெலிகடைப் படுகொலைகள் பற்றி சொல்லி கொல்லப்பட்டவர்களின் பெயர்களும் சொல்லப்பட்டது. அண்ணா குமுறினான். அருகில் இருந்தவற்றை தூக்கி எறிந்தான். கொல்லப்பட்டவர்களில் அவனுக்கு நெருக்கமான மாஸ்ரரும் ஒருவர். கொல்லப்பட்டவர்களில் சிலர் அவனுக்கு நெருக்கமாக இருந்தனர் அல்லது அவர்கள் தனக்கு நெருக்கமாக இருந்ததாக உணர்ந்து இருக்க வேண்டும்.

அப்பொழுதெல்லாம் நாளாந்தம் செய்தி கேட்பது நாளாந்த வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை ஒழிப்பு மறைப்பு கூட்டுத்தாபனமானது. அதனால் செய்திகளுக்கு இந்தியாவின் ஆகாசவானியின் செய்திகள், மாநிலச் செய்திகள், பிபிசி இன் தமிழோசை, பிலிப்பைன்ஸில் இருந்து வெரித்தாஸ் வானொலி ஆகியன தமிழ் வீடுகளின் நாளாந்த பெயர்களாக அறியப்பட்டிருந்தது. தமிழ் இயக்கங்கள் கரந்தடிப் படைகள் என வெரித்தாஸ் வானொலியால் என்று தான் நினைக்கிறேன் அழைக்கப்பட்டது.

அவனுடைய போக்குகள் மாற்றம் அடைந்தது. அவன் தன் பொறுப்புகளை உணர்ந்தவன் போல் ஆனான். மேற்கொண்டு தான் படிக்கத் தயாரில்லை என்ற முடிவுக்கு வந்தான். ஊர்விட்டு வேலை விடயமாக வேறோர் ஊரக்குப் போகப் போவதாகக் கூறினான். அவன் பொய் சொல்கிறான் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது சாத்தியமில்லை என்று அவனை நம்ப வைப்பதற்கு எங்களால் முடியவில்லை. நாட்கள் நகர்ந்தது. அவனது நடவடிக்கைகள் முற்றாக மாற்றம் அடைந்தது. ஒரு நாள் இரவு வேலைக்கு போவதாகக் கூறி வெளிக்கிட்டான். ஒரு பாக்கிற்குள் சில உடுப்புகளை எடுத்து வைத்தான். இது எங்களுடைய வீட்டில் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் உள்ள பல வீடுகளில் இதுதான் நடந்தது.

அம்மா கட்டி அணைத்து அழுதா. அவவுடைய கனவுகள் அனைத்தும் அன்று உடைந்தது. அனாலும் அவன் எடுத்த முடிவில் அவன் வெற்றி பெற வேண்டும் என்ற ஆதங்கம் இருந்திருக்க வேண்டும். அம்மா கத்தியை எடுத்து கையை கீறி அவனுக்கு இரத்த திலகம் இட்டா. அவன் எந்த சலனமும் இல்லாமல் இருளோடு கரைந்து, படலைக்கு வெளியே அவனை ஏற்றிச் செல்வதற்காக நின்றவரோடு சைக்கிளில் பயணமானன்.

இவ்வாறு ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் புறப்பட்டனர். புறப்பட்டவர்களில் பலருக்கும் புறப்படுவதற்கான காரணம் பெரும்பாலும் அன்றைய அரசியல் சூழல்தான். சில தனிப்பட்ட காரணங்களும் அவர்களை அதனை நோக்க உந்தியிருக்கும்.

அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் எழுச்சிக் கொண்டது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. யூலைப் படுகொலைகள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பண்பு நிலை மாற்றத்தை தோற்றுவித்தது. இதுவரை சீராக படிமுறை வளர்ச்சி பெற்று வந்த போராட்டம்; தலைமைகளிடம் வீவேகத்தின் அவசியத்தை வலியுறுத்தி இருந்தது. ஆனால் யூலைக் கலவரம் அதனைப் புரட்டிப்போட்டது. விவேகமற்றவர்கள், அவசரக் குடுக்கைகள் தலைமைகளுக்கு முன் தள்ளப்பட்டனர். வெறும் உணர்ச்சிப் பிளம்பில் போராட்டம் வீறுகொண்டு எழுந்தது.

ஆனால் அவர்களுடைய போராட்ட இலக்கையும் வடிவத்தையும் அவர்களோ அவர்களுடைய தலைமைகளோ தீர்மானிக்கவில்லை. மாறாக எதிரியான பேரினவாத அரசிடமும் இந்திய உளவுத்துறையிடமும் அது கையளிக்கப்பட்டுவிட்டது. ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான்’, ‘நாங்கள் ஆயதம் ஏந்த வேண்டும் என்பதையும் எதிரி தான் தீர்மானிக்கிறான்’ என்று பெருமையாக அன்று முழங்கினார்கள். அது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை இன்று உணர முடிகிறது. ஏனெனில் இறுதியில் இவர்களை முள்ளிவாய்காலில் முடிப்பது என்று எதிரியான சிங்கள அரசும் இந்திய உளவுத்துறையும் தான் தீர்மானித்தது. ‘ஒப்ரேசன் பிக்கன்’ என்ற 2006 இல் போடப்பட்ட தீட்டத்திற்கமைய அதன் கால அட்டவணப்படியே தமிழீழ விடுதலைப் போராட்டம் நகர்ந்து 2009 இல் முடிவுக்கு வந்தது.

சகோதரப் படுகொலைகளையும் சில அங்கொன்றும் இங்கொன்றுமான நாளாந்த தாக்குதல்களைத் தவிர எமது விடுதலைப் போராட்டத்தை பேரினவாத அரசும் இந்திய உளவுத்துறையுமே நடத்தியது.

எமது சகோதரர்களும் சகோதரிகளும் விட்டில் பூச்சிகளாக மடிந்து மறைந்தனர். இன்று எமது வரலாறுகளை பேரினவாத அரசும் இந்திய உளவுத்துறை முகவர்களுமே மும்மரமாக எழுதுகின்றனர். யாழ் நூலகத்தை எரிக்க முன்நின்ற காமினி திஸ்ஸநாயக்காவை பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த எட்வேர்ட் குணவர்த்தன தனது நூலின் மூலம் காப்பாற்றியது போல் இந்திய உளவு முகவர்கள் எமது போராட்டத்திலும் படுகொலைகளிலும் இந்திய உளவுத்துறையின் இரத்தக்கறைகளை கழுவ முயல்கின்றனர். அதற்காகவும் தங்கள் செயல்களை மறைக்கவும் இன்னுயிர் ஈர்ந்த சகபோராளிகள் மீது வீண்பழி சுமத்துகின்றனர் இந்த உளவுத்துறை முகவர்கள்.

இலங்கையில் ஆயத வன்முறையயை ஏற்படுத்துவதில் இந்திய உளவுத்துறையின் பங்கு தீர்மானகரமானது. தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழீழ விடுதலை இயக்கமும் காத்திரமான அரசியல் இல்லாத அமைப்புகள் என்பதால் அவர்களுக்கு ஆயதங்களை இறைத்து அப்பாவி சிங்கள மக்களைப் படுகொலை செய்யவும் அவர்களைத் தூண்டியது. அதனால் இவ்விரு அமைப்புகளுமே இராணுவ கட்டமைப்பில் பலம்பெற்று இறுதியில் விடுதலைப் புலிகள் ஏகபோக தலைமையாகினர்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்த இந்தியாவுக்கு எதிரானவர்களை பலவீனப்படுத்தும் முயற்சியாக சந்ததியார் படுகொலை. பின்னர் உமாமகேஸ்வரன் இலங்கை அரசுடன் நெருக்கமாக அவருடைய படுகொலை, மாலைதீவு தாக்குதல் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை கொண்டு நடத்தியதே இந்திய உளவுத்துறையே. உளவு நிறுவனங்கள் நேரடியாக வெளிப்படையாக தாங்கள் முன்நின்று எதனையும் செயற்படுத்துவதில்லை. ஆனால் அவ்வாறு செயற்படுவதற்கான சூழலை அந்தந்த அமைப்புகளில் உள்ள தங்கள் விசுவாசிகளுடாக அவர்கள் அறியாமலேயே உருவாக்கி விடுவார்கள். இது தான் காகம் இருக்க பனம் பழம் விழுவதென்பது.

ஒரு விடுதலைப் போராட்டத்தின் மத்திய குழுவில் இந்திய உளவுத்துறை அதிகாரியும் இருந்தார் என்றால் அது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தான். இந்திய இராணுவத் தளபதியான சேகர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர். இந்திய உளவுத்துறை இன்னமும் பலரையும் தனது முகவர்களாக வளர்த்துக்கொண்டது. இவ்வாறான முகவர்கள் எல்லா இயக்கங்களிலும் இருந்தனர். இன்று இவ்வாறான முகவர்களைக் கொண்டு இந்திய உளவுத்துறை தனது செயல்களுக்கு வெள்ளையடிக்க முயற்சி செய்கின்றது.

தனபாலன் இயற்பெயர். ஊரில் ரவி. தமிழீழ மக்கள் கழகத்தில் வசந்தன் என அறியப்பட்டவன். கழகத்தின் சமூக விஞ்ஞான கல்லூரியில் கற்றவன். இந்த சமூக விஞ்ஞானக் கல்லூரி இந்திய உளவுத்துறைக்கு பிடித்தமான ஒரு அம்சமாக ஒரு போதும் இருந்ததில்லை. இந்திய உளவுத்துறைக்கு அரசியல் தெரிந்து இந்தியாவை தெரிந்துகொள்பவர்களை விரும்பவில்லை. இந்தியாவுக்கு விசுவாசமான முகவர்களும் தாங்கள் சொல்வதைக் கேட்டு களமிறங்கக் கூடியவர்களுமே தேவைப்பட்டனர். சிந்திக்கக் கூடியவர்கள் அவர்களுக்கு ஒரு போதும் தேவைப்பட்டதில்லை.

தோழர் எஸ் பாலச்சந்திரன் தமிழகத்தில் வசந்தனோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர். அங்கிருந்த இடதுசாரி அமைப்புகளுக்கு வசந்தனூடக உதவிகளைப் பெற்றுக்கொடுத்தவர். இன்றும் அந்த நாட்களை நினைவு கூருகின்றார். அண்ணா வசந்தன் பின்நாட்களில் வவுனியா முள்ளிக்குளம் முகாமில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மூன்று நாட்களாக நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டான். இம்மோதலில் தமிழீழம் கேட்டுப் போராடச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பெரும்பாலும் இம்மோதலில் கொல்லப்பட்ட பலரின் உடல்களை அருகே இருந்த கிறிஸ்தவ பாதிரியாரே அடக்கம் செய்திருந்தார். சில மாதங்களுக்குப் பின் அப்பகுதிக்குச் சென்று எம் தந்தையார் அந்த பாதிரியாரைச் சந்தித்து வந்தார். அம்மா சில ஆண்டுகளாகவே அவன் சிலவேளை எங்காவது தப்பியோடி இருந்து வருவான் என்ற நம்பிக்கையிலேயே இருந்தா. அண்ணாவின் உற்ற நண்பனான பரமானந்தன் தான் எனது மூத்த சகோதரியயை மணம் முடித்தார். அவரின் ஞாபகமாகவே அவர்களுடைய மூத்த மகளுக்கு வசந்தினி என்றும் மகனுக்கு வசந்தன் என்றும் பெயர் சூட்டப்பட்டது.

(வசந்தனோடு போராடச் சென்ற சக போராளியான நேதாஜி – என்றழைக்கப்படும் பிரேம்சங்கரின் காணொலி கீழே கொமன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.)

இவ்வாறாக பல ஆயிரம் போராளிகள் விட்டில் பூச்சிகளாக பேரினவாதத்தினதும் சர்வதிகாரத்தினதும் உளவு நிறுவனங்களினதும் நோக்கங்களுக்காக பலிகொடுக்கப்பட்டனர். வேடர்கள் எழுதுவது வரலாறு அல்ல. வியட்கொங்கின் வரலாற்றை சிஐஏ முகவர்களும் ஹொலிவூட்டும் எழுத முடியாது. அது போல தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வரலாற்றை இந்திய உளவு முகவர்கள் எழுத முடியாது. உண்மையான போராளிகளை வரலாறு பதிவு செய்யும். அல்லாதவர்களை வரலாறு காட்டிக்கொடுத்துவிடும்.