ஜென்னி ஜெ

ஜென்னி ஜெ

பாகம் 11: புளொட்டின் மத்திய குழு உருவாக்கமும் அதன் துஸ்பிரயோகமும் – உமாமகேஸ்வரன் மட்டும் பொறுப்பல்ல!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 11 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 11

தேசம்: புளொட்டின் மத்தியகுழுவில் பெரும்பாலான ஆட்கள் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்படித்தானா?

அசோக்: அப்படியல்ல. பெரும்பாலும் யாழ்ப்பாணத்திற்கு வெளியில் ஏனைய மாவட்ட ங்களை சேர்ந்தவங்கள்தான் அதிகம்.

இதில் தோழர் ஆதவன் மலையகம், வவுனியாவில் இருந்தவர். தோழர் முரளி வவுனியா. வாசுதேவா, ஈஸ்வரன், நான் மட்டக்களப்பு. பார்த்தன், ரகுமான்ஜான், கேதிஸ்வரன் கேசவன், திருகோணமலை. சலீம் மூதூர், சரோஜினிதேவி கிளிநொச்சி, ஆரம்ப காலம் யாழ்ப்பாணம் ஆக இருக்கலாம், இருக்கிற இடம் கிளிநொச்சி. ராஜன் பரந்தன், கிளிநொச்சி.

தேசம்: செந்தில்…

அசோக்: செந்தில் செட்டிகுளம், வவுனியா.

தேசம்: தீப்பொறியில் இருந்தவரா?

அசோக்: அதுல இல்ல உமா மகேஸ்வரனோடு கடைசி காலங்களில் முரண்பட்டு வெளியேறிவர்களில் இவரும் ஒருவர்.

தேசம்: மாறன்…

அசோக்: மாறன் ஆரம்ப காலத்தில் இருந்தவர். தெல்லிப்பளை என நினைக்கிறன். அவரைப் பற்றி எனக்கு பெருசா தெரியாது. 84 இராணுவத்தால கைது செய்யப்பட்டு ஜெ யிலில் இருந்தவர். பிறகு விடுதலையாகி புளொட்டில் வேலை செய்ததாக அறிந்தேன்.

தேசம்: இதைவிட இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பேர்…கிட்டத்தட்ட 20 பேர் இருந்திருக்கிறார்கள்…

அசோக்: முதல் 17 பேர் தான். இது 83 கடைசில உருவாக்கப்படுது. 84 ஜனவரி மத்திய குழுவில் இரண்டுபேர் மேலதிகமாக, நானும் செல்வனும் பிரேரிக்கப்படுறம்…

தேசம்: ரெண்டு பேரையும் உள்ளுக்கு எடுக்கினமோ?

அசோக்: அதுல ஒரு சிக்கல் நடந்தது இரண்டு பேரும் பிரேரிக்கப்பட்டு நான் மட்டும் உள்வாங்கப்பட்டேன். செல்வன் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால், செல்வனை சேர்க்கவில்லை. பிற்காலத்தில் நான், ரகுமான் ஜான் தோழரிடம் இதைப்பற்றி கேட்டேன்.

தேசம்: எதைப் பற்றி…

அசோக்: செல்வன் சேர்க்கப்படாததற்கு என்ன காரணம் சொல்லப்பட்டதென. ஏன் அவர் சேர்க்கப்பட வில்லை என்பது பற்றி. தற்சமயம் வேண்டாம், அவர் ஒரு பிரச்சனைக்குரிய ஆள் என்று, தோழர் பார்த்தன் கருத்து வைத்ததாகவும், அதனால்தான் சேர்க்கப்படவில்லை என்றும் சொன்னார்.

தேசம்: அவர் இந்தியாவுக்கு வந்து விட்டு திரும்பி வாரார்…

அசோக்: ஓம் திரும்பி வந்துட்டார். ஜனவரி சென்றல் கமிட்டியில் நான் மட்டும்தான் கலந்து கொள்கிறேன்.

தேசம்: இதுல கண்ணாடி சந்திரன் என்பது யார்?

அசோக்: அவர் கழகத்தில் எல்லா அதிகாரங்களுடனும் இருந்தவர். அவரைப்பற்றி பின்னாடி தளம் பற்றி வரும்போது கதைக்க வேண்டும். ஏனென்று கேட்டால், அவர் ஆரம்ப காலத்தில் பயங்கர உமாமகேஸ்வரன் விசுவாசி. தளத்தில் நடந்த தன்னிச்சையான பல செயற்பாடுகளுக்கு தவறான போக்குகளுக்கு முழுக்காரணமாக இருந்தவர். பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். அவருக்கு என்ன பொறுப்பு என்றே சொல்ல முடியாது. எல்லா அதிகாரங்களும் அவருக்கு இருந்தன. தளத்தில் ஒரு கட்டத்தில் ராணுவ பொறுப்பாளராக இருந்தார். பார்த்தன் இறந்த பின் இவரைத்தான் கட்டுப்பாட்டுக்குழு தள இராணுவப் பொறுப்பாளராக நியமனம் செய்யுது. எந்தவொரு இராணுவ பயிற்சியும், இராணுவக் கல்வியும் இல்லாத ஒருவர் இராணுவப் பொறுப்பாளாராக தளத்திற்கு நியமிக்கப்படுகின்றார் என்றால், நட்புக்காக அதிகார துபிரயோகம் எப்படி நடந்திருக்கு பார்த்தீங்களா? உலக போராட்ட வரலாற்றில் இப்படி ஒரு அதிசய சம்பவம் நடந்திருக்குமா…?

இந்த நேரத்தில பின் தளத்தில் இராணுவப்பயிற்சி எடுத்த, அரசியல் ரீதியில் வளர்ந்த தோழர்கள் பலர் இருந்தனர். என்ன நடந்தது என்றால், அந்த நேரத்தில் தளப் பொறுப்பாளராக தோழர் கேசவன் இருந்தார். தோழர் கேசவனுக்கும், தோழர் ரகுமான் ஜானுக்கும் கண்ணாடிச் சந்திரன் நெருக்கமானவர் என்பதால் இந்த நியமனம் நடந்தது.

தேசம்: கண்ணாடிச் சந்திரன் எப்ப இயக்கத்தில் சேர்ந்தவர்?

அசோக்: 83 ஜூலைக் கலவரத்திற்கு பிற்பாடு. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தவர் பிறகுதான் இயக்கத்துக்கு வாரார்.

தேசம்: ஜூலைக் கலவரத்தில் வந்து 3 மாதத்திலேயே இயக்கத்தில் சேருகிறாரா?

அசோக்: கண்ணாடிச்சந்திரன் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் ரகுமான் ஜானோடு ஒன்றாக படித்தவர். ஜானின் நண்பர் பிறகு படிக்க போயிட்டார் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு. கலவரத்துக்குப் பிறகு அங்கு தொடர்ந்து படிக்கமுடியாத சூழல் வரும் போது, வேலை செய்ய வாரார். வந்து மூன்று நான்கு மாதத்திலேயே மத்திய குழுவில் வந்துட்டார். அவர் மத்திய குழுவுக்கு வந்ததே வியப்புக்குரியது ஏனென்றால், பழைய நீண்டகாலமாக முழு நேரமாக வேலைசெய்த பல தோழர்கள் இருந்தாங்க.

தேசம்: இதுக்குள்ள வேறு யாரும் இப்படி குறுகிய காலத்தில் மத்திய குழுவில் வந்தவர்களா?

அசோக்: இல்லை இவர் தான் முக்கியமானவர். மற்ற ஆட்கள் எல்லாம் நிறைய காலம் இயக்கத்துடன் வேலை செய்தவர்கள். இவர் தெரிவு தொடர்பான விமர்சனங்கள் தளத்தில் இருந்தது.

தேசம்: அது என்ன விமர்சனம்?

அசோக்: எத்தனையோ நீண்ட காலமாக வேலை செய்யும் தோழர்கள் தளத்தில் இருக்கும் போது இவர் தெரிவு செய்யப்பட்டால் விமர்சனங்கள் வரும்தானே. பழைய தோழர்கள் நிறைய பேர் இருந்தவர்கள் தானே. செல்வன் உள்வாங்கப்படவில்லை. ராதாகிருஷ்ணன் என்று ஒரு தோழர் இருந்தவர். திருகோணமலையைச் சேர்ந்தவர். அகஸ்டின் செபமாலை அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர் நீண்டகாலமாக. வரதன் மட்டகளப்பு தோழர். இவர்கள் எல்லாம் பழைய தோழர்கள். அவர்கள் யாரும் உள்வாங்கப்படவில்லை. மிகத் தீவிரமாக, தங்களுடைய வாழ்க்கையை இழந்து வேலை செய்த தோழர்கள் இவர்கள். அப்படி நிறைய தோழர்கள் இருந்தார்கள். தங்கராஜா தோழர். தோழர்களுக்கு அரசியல் பாசறைகள் நடத்தியவர். நீண்ட காலமாக இருந்தவர். இவர்கள் யாரையுமே இவர்கள் தெரிவு செய்யல்ல.

அத்தோடு பெண்கள் பிரதிநித்துவம் மத்திய குழுவில் மிகக்குறைவு. சரோஜினிதேவி மாத்திரமே இருந்தாங்க. ஜென்னியை எடுத்திருக்க முடியும். ஜென்னி தொடர்பாய் பிற்காலத்தில் விமர்சனம் இருக்கலாம். பிற்காலத்தில் எல்லாப் பேர்களை பற்றியும் விமர்சனம் இருக்குத்தானே. ஆனா அன்றைய நேரத்தில ஜென்னி தீவிரமான செயற்பாட்டாளர். காந்தீயத்தின் தொடக்க காலத்திலிருந்து புளொட்டிக்கு வந்தவர். ஆனா விரும்பல்ல. வவுனியா தோழர் செந்தில் என்று. மிகத்தீவிரமாக வேலை செய்தவர். யாழ்ப்பாண யுனிவசிற்றில படித்துக் கொண்டு வவுனியாவிலும் யாழ்பாணத்திலும் வேலை செய்தவர். இப்படி நிறைய தோழர்கள் பெயர்கள் ஞாபகம் இல்ல.

தேசம்: இந்த சென்றல் கமிட்டி உறுப்பினர்களை யார் தெரிவு செய்கின்றார்கள்?

அசோக்: கட்டுப்பாட்டுக்குழுவில் இருந்த சந்ததியார், உமா மகேஸ்வரன், ரகுமான் ஜான், கண்ணன், சலீம் இவங்கதான். இது தனிநபர் அதிகாரங்களுக்கு ஊடாகத்தான் இந்த தெரிவுகள் நடந்தன.

தேசம்: ரகுமான் ஜானுக்கும் அந்த அதிகாரம் இருந்ததா?

அசோக்: ஓம் ஆரம்ப காலகட்டத்தில் இந்த ஐந்து பேருக்கு தான் அந்த அதிகாரம் இருந்தது. இல்லாட்டி கண்ணாடி சந்திரனை எவ்வாறு கொண்டு வர முடியும்? அதிகாரம் இருந்தபடியால் தானே. இவர்கள்தான் புளொட்டின் அதிகார துஷ்பிரயோகத்தின் ஆரம்ப கர்த்தாக்கள். வழிகாட்டிகள். உமா மகேஸ்வரனின் தன்னிச்சையான போக்குகளுக்கு, அதிகார செயற்பாடுகளுக்கு வழிகாட்டிகளாக இருந்தவங்க இவர்கள்தான். ஆரம்பத்திலேயே நாம் நேர்மையாக ஐனநாயக மத்தியத்துவ பண்புகளோடு தன்னிச்சையான போக்கு, குழு வாதம் தனிநபர் விசுவாசம், திறமையற்ற நபர்களை உள்வாங்கல் போன்றவற்றிக்கு எதிராக செயற்பட்டிருந்தால் உமா மகேஸ்வரனின் அதிகாரத்தையும் புளொட்டின் அழிவையும் தடுத்திருக்க முடியும்தானே. புளொட்டின் உட் கொலைகளுக்கும் அதன் சீரழிவுகளுக்கும் காரணமான உமா மகேஸ்வரனினால் பயன்படுத்தப்பட்ட அனேகர் சந்ததியாரல் கொண்டு வரப்பட்ட ஆட்கள்தானே. இவர்களை சரியான வழியில் அரசியல் சிந்தனை கொண்டவர்களாக ஏன் சந்ததியாரல் மாற்றமுடியாமல் போயிற்று?

யோசித்துப்பாருங்க.

தேசம்: அப்படிப் பார்த்தாலும் உமாமகேஸ்வரன், கண்ணன் இவர்கள் இரண்டு பேரும் வேற ஒரு அரசியலில் இருந்து வந்தவர்கள். அங்கால ரகுமான்ஜான், சந்ததியார், சலீம் மூன்று பேரும் கிட்டத்தட்ட தீப்பொறி…

அசோக்: சந்ததியாருக்கும் தீப்பொறி இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதை பிறகு கதைப்பம். உண்மையில் விமர்சன பூர்வமாக ஆராய்ந்தோமானால் ஆரம்பகால புளொட்டில் அதிகாரம் என்பது உமாமகேஸ்வரன் போன்றவர்களிடம் மட்டும் இருக்கல்ல. சந்ததியார், ரகுமான்ஜான், கேசவன் போன்ற தோழர்களிட மும் இருந்தது. இவர்கள் புளொட்டை இடதுசாரி அரசியல் கொண்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்ட அமைப்பாக வளர்த்தெடுத்து இருக்க முடியும். இடதுசாரி கருத்தியல் கொண்ட ஆட்கள் தானே… ஆரம்ப காலத்தில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் உமாமகேஸ்வரன் மீதோ, கண்ணன் மீதோ விமர்சனங்கள் வைக்க முடியாது . சந்ததியார், ரகுமான்ஜான் இவர்களோடு இணைந்துதானே எல்லாச் செயற்பாடுகளையும் தீர்மானித்துள்ளார்கள்.

உமாமகேஸ்வரன் போன்றவர்கள் அப்படி தன்னிச்சையான போக்கு கொண்டவர்களாக ஆதிக்கம் செலுத்துபவர்களாக உருவாகக் கூடிய சூழலை சந்ததியார், ரகுமான்ஜான் இல்லாமல் செய்திருக்க வேண்டும். அதற்கு நல்ல அரசியல் ஆளுமைகொண்ட சக்திகளை மத்தியகுழுவில் உள்வாங்கி இருக்க வேண்டும். இவர்களும் நேர்மையாக முன் மாதிரியாக நடந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது கோஸ்டி சேர்த்ததுதானே. இவர்களே தவறான வழிகாட்டிகளாகத்தானே இருந்திருக்காங்க. சந்ததியார், உமாமகேஸ்வரன் முரண்பாடு வந்ததன் பிறகு தான் உமாமகேஸ்வரன் சுயரூபம் தெரியுது. இந்த மோசமான அதிகாரத்தை தனிநபர் ஆதிக்கத்தை உமா மகேஸ்வரனுக்கு வழங்கியதில் இவர்கள் எல்லோருக்கும் பங்கு உண்டு. இதை முதலாவது மத்திய குழுக் கூட்டத்தில் நான் கலந்துகொண்ட போது உணரமுடிந்தது. ரகுமான் ஜான் தோழர் மிகத்திறமையாவர்.அரசியல் திறனும் இராணுவத்திறனும் கொண்டவர். கேசவன் தோழர் இடதுசாரிய அரசியல் கொண்டவர். சந்ததியாரும் அரசியல் ரீதியில் வளர்ந்தவர். இவர்கள் சரியான வழிகாட்டிகளாக இருந்திருந்தால் பின் தளத்தில் புளொட்டை இடதுசாரி கருத்தியல் கொண்ட அமைப்பாக வளர்த்தெடுத்திருக்கமுடியும். அதற்கான சந்தர்ப்பங்கள் இவங்களுக்கு நிறைய இருந்தது.

தேசம்: இந்த மத்திய குழு கட்டுப்பாட்டு குழு தொடர்பாக நீங்கள் முதல் தரம் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது…

அசோக்: இப்பவும் நல்ல ஞாபகம் இருக்குது. 84 ஜனவரி கேகே நகரில் தான் மீட்டிங் நடக்குது. எனக்கும் ஒரு கற்பனை தானே மீட்டிங் தொடர்பாக. இடதுசாரி இயக்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றி எல்லாம் படிச்சுப் போட்டு, இது தொடர்பான கற்பனையோடு, மத்திய குழுக் கூட்டங்கள் இப்படித்தான் நடக்கும், அரசியல் சித்தாந்த விவாதங்கள் நடக்கும் என்று சொல்லி அங்க போனால்…

முதலாவது சென்றல் கமிட்டி மீட்டிங்கில விவாதங்கள் எல்லாம் சம்பவங்களாத்தான் இருந்திச்சு. அதுக்குப் பிறகு நடந்த சென்றல் கமிட்டீ மீட்டிங்கில இந்தியா கொடுத்த ட்ரெய்னிங் தொடர்பாக பேசப்பட்டது. எல்லா இயக்கங்களுக்கும் ட்ரெய்னிங் கொடுக்க இந்தியா முடிவு பண்ணியிருந்த நேரம். புளொட்டுக்கு கொடுக்கபடவில்லை. அப்ப புளொட் ரெயினிங் எடுக்கப்போவதா இல்லையா என்பது பற்றி ஒரு விவாதம் நடந்தது. அது அரசியல் கருத்தியல் நடைமுறை சார்ந்த பிரச்சனை தானே.

தேசம்: ஓ.

அசோக்: ஆனால் அந்த விவாதம் கருத்தியல் சார்ந்து பெருசா நடக்கேல. கருத்தியல் சார்ந்து இந்தியா தரும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள் இதில் எதிர்கால சிக்கல்கள் எதைப்பற்றியும் உரையாட வில்லை. அவர்களை என்னென்று கையாளுவது என்பது பற்றி எதுவுமே இல்லை. ஆனால், பெரும்பான்மையான ஆட்கள் கட்டாயம் ட்ரெய்னிங் எடுக்கனும் என்ற நிலைப்பாட்டில்தான் கதைத்தாங்க. ரெயினிங் எடுப்பது பிரச்சனை அல்ல. குறைந்தபட்சம் இதை அரசியல் உரையாடலாக கொண்டு போய் இருக்கமுடியும். இவர்கள் யாருமே தயாராக இல்லை. டெலோவும் எடுக்குது. புலிகளும் எடுக்குது. ஈபிஆர்எல்எஃப்பும் எடுக்குது. நாங்களும் எடுக்கப் போவம் என்டு தான் ஒரு முடிவுக்கு வாராங்க. அதுல வார நன்மை தீமை – அதனால வாற பிரச்சனை இது பற்றி யாரும் ஆராயத் தயாராக இல்லை.

தேசம்: இந்த வங்கம் தந்த பாடம் எந்தகால கட்டத்தில வெளியிடப்பட்டது…?

அசோக்: வங்கம் தந்த பாடம் எண்பத்தி மூன்று காலகட்டத்தில் வெளியானது.

தேசம்: அப்படி என்டா நீங்க போன கூட்டத்திற்கு முன்பாகவே அது வெளியிடப்பட்டுட்டு விட்டது?

அசோக்: அதுக்கும் மத்திய குழுவுக்கும் தொடர்பில்லை. அது இலங்கையில் வெளியிடப்பட்டது. அது மத்திய குழு உருவாக்கப்படுவதற்கு முன்பு அது வெளியிடப்பட்டது. நாங்க மாவட்ட அமைப்பாளர்கள் இருந்தம்தானே அந்த காலத்திலேயே அடிக்கப்பட் டது…

தேசம்: அதாவது இதை வெளியிட்ட அவர்களுக்கு ஒரு கருத்தியல் இருக்குதானே…?

அசோக்: ஓ நிச்சயமாக.

தேசம்: அப்ப இந்தியா தொடர்பான அரசியல் மற்ற ஆபத்துகள் பற்றி விவாதிக்கப்படலையா..?

அசோக்: தமிழ் ஈழப்போராட்டம் தொடர்பாகவும் இந்தியா தொடர்பாகவும் எங்களிடம் சரியான அரசியல் பார்வை இருந்தது. அதன்ற வெளிப்பாடுதான் வங்கம் தந்த பாடம். எங்களிடம் இருந்த தெளிவு மத்திய குழுவைச் சேர்ந்தவர்களிடம் இருக்கவில்லை. மத்தியகுழு எப்படி உருவாக்கட்டது என்று முன்னமே கதைத்திருக்கிறம். புளொட்டில் ஆரம்ப காலங்களில் இருந்த லும்பன்களும், கடடுப்பாட்டுக்குழுவில் இருந்த உமா மகேஸ்வரன், சந்ததியார், ரகுமான்ஜான் விசுவாசிகளும்தானே மத்தியகுழுக்கு தெரிவு செய்யப்பட்டவங்க. அரசியல் கோட்பாட்டு நடைமுறை கொண்ட நேர்மையான தோழர்கள், எந்த முடிவெடுக்கும் அதிகாரமற்றவர்களாக வெளியில்தானே இருந்தாங்க.

மாவட்ட அமைப்புகளில் ஏனைய பொறுப்புக்களில் ஈழத்தில் இருந்த தோழர்கள் கருத்தியல் சார்ந்து வளர்ந்தவர்கள். இந்த மாவட்ட அமைப்பாளர்கள் எல்லாரும் மத்திய குழுவுக்கு போ கவில்லைத்தானே. மத்திய குழுவில் சிறை உடைப்பிலிருந்து வெளியே வந்தாக்கள்தான் அதிகம் பேர்.

தேசம்: இதில மாவட்ட பிரதிநிதிகளோ – மாவட்ட அமைப்பாளர்களோ இந்த மத்திய குழு அமைப்பில இருக்கல…? ஒராள் ரெண்டு பேர் இருந்திருக்கலாம்…?

அசோக்: முரளி, ஈஸ்வரன், குமரன் நான் எல்லாம் இருந்தனாங்க. எங்களை விட வளர்ந்த வேறு தோழர்கள் இருந்தார்கள். அவர்களையும் உள்வாங்கி இருந்திருக்கலாம்.

தேசம்: இந்தியாட்ட பயிற்சி பெறுவதா…? இல்லையா …? என்ற விவாதம் வங்கம் தந்த பாடம் வெளி வந்திருந்தாலும் கூட, ஒரு கருத்தியல் ரீதியான விவாதமா அங்க நடைபெறல..?

அசோக்: இது ஒரு நல்ல கேள்வி. வங்கம் தந்த பாடம் இந்தியாவுக்கு, அதனுடைய செயற்பாடுகளுக்கு எதிரான புத்தகம். வங்களாதேசில் இந்தியாவினுடைய வருகையும், அதனுடைய ஆக்கிரமிப்பு பற்றிய அது தொடர்பான ஒரு புத்தகம். வங்கம் தந்த பாடம் புத்தகத்தை நாங்க படிச்சிருப்பம் தானே. எனவே இது தொடர்பான பார்வையும், இந்தியா தொடர்பான எச்சரிக்கை உணர்வும் இருக்கத்தானே வேணும். அது எங்கேயும் வரலை. அப்படிப் பார்த்தால் புளோட்டா இந்த புத்தகம் அடிச்சது என்ற ஒரு கேள்வி தான் வரும் உங்க கிட்ட. அதுக்குப் பிறகு நான் கலந்து கொண்ட மத்திய குழுக் கூட்டம் எதுலயும் இந்த இந்திய ஆபத்து தொடர்பா பெருசா பேசப்படல. இந்த வங்கம் தந்த பாடம் எங்களுக்கு ஒரு அரசியல் விழிப்புணர்ச்சியை கொடுத்திருக்கணும். அது எப்பவுமே நடக்கல.

தேசம்: அந்த வங்கம் தந்த பாடத்தை யார் வெளியிட்டது. ?

அசோக்: 83ல் வெளியிடப்பட்டது என நினைக்கிறேன். தோழர் சந்ததியார், ரகுமான் ஜான், கேசவன் முக்கியமானவர்கள். இது மொழிபெயர்ப்பு புத்தகம். பங்களாதேஷ் இராணுவத்தில் இருந்த அபுதாகிர் என்கிற இராணுவத் தளபதி வெளியேறி J.S.D. என்ற கட்சி உருவாக்கினாங்க… மாக்சிசத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி இது. அபுதாகிர் பங்களாதேசில் இந்திய மேலாதிக்கத்தையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்தின் சதியையும் அம்பலபடுத்தினார். அமெரிக்க C.I.A யும், இந்தியாவும் சேர்ந்து அவரை தூக்கில போட்டுவிட்டது. அபுதாகிரின் நீதிமன்ற சொற்பொழிவின் தமிழாக்ககம்தான் இது.

தேசம்: இது வெளியிடப்பட்டது உமா மகேஸ்வரனுக்கு தெரியுமா..?

அசோக்: தெரியும். தமிழிழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பெயரிலதான் இது அச்சிடப்பட்டது.

தெரியாமல் செய்திருந்தால், பிரச்சனை வார காலத்தில் அது ஒரு பெரிய குற்றச்சாட்டா எங்களுக்கு எதிராக முன் வைக்கப்பட்டிருக்கும் தானே. அப்ப அது எங்கேயும் யாருக்கும் எதிராக வைக்கப்படல. ஆனா சந்ததியார் தொடர்பாக இந்தியா ரோவிடம் சந்ததியார்தான் இதனை வெளியிட்டவர் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டதாக அறிந்தேன். எங்களுக்கு எதிராக குறிப்பாக எனக்கு, தங்கராஜா தோழர், சண்முகலிங்கம் போன்றவர்களுக்கு எதிராக நாங்க JVP யில் இருந்து போனபடியால், சீனாச்சார்பானவர்கள் என்றகுற்றச்சாட்டு ரோவிடம் சொல்லப்பட்டது.

கிழக்கு முதல் வடக்கு வரை வீசும் வசந்தம்? : ஜெ ஜென்னி

Vadakku_Vasantham2006 முற்பகுதியில் மாவிலாறு தொடங்கி 2009 புதுமாத்தளன் வரை தொடரும் யுத்தமானது கடந்த மூன்றாண்டுகளாக எம் தமிழ்பேசும் மக்களை நிர்க்கதியாக்கி, வாழ்வியல் ஆதாரங்கள் எதுவுமே அற்று, தமது சொந்த நிலப்பரப்புக்களை இழந்து, உற்றம் – உறவு – சொந்தம் – பந்தமென உயிர்களையும் உடமைகளையும் பறிகொடுத்து எம் சொந்த நாட்டிலேயே அகதிக் கூட்டங்களாக மரணத்துள் வாழ்வதாக்கி உள்ளது. இதில் இலங்கை அரசின் இனவாத அழிப்பும் – புலிப் பயங்கரவாதத்தின் ஏகபிரதிநிதித்துவ தலைமை வெறியும் முட்டி மோதிக்கொள்ளும் நிலையில் தொடரும் இந்த யுத்தம் எமது மக்களைத் தான் பயணக் கைதிகளாக வைத்துள்ளது.

இலங்கை அரசின் இனவாத யுக்திகளைப் பார்ப்போமானால் நாடு சுத்ந்திரமடைந்த கடந்த 60 வருடங்களில் பிரித்தாளும் தந்திரங்களை பல வழிகளில் தமிழ் பேசும் மக்களின் மீதும், அப்பாவி சிங்கள பாமர மக்கள் ஊடாகவும் செயற்படுத்துகின்றது.

முதலாவதாக, தமிழ்பேசும் மக்களின் பிரதேசங்களிற்குள் அத்துமீறி, ஆனால் சட்ட ரீதியான ஆவணங்களை உருவாக்கி திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தமிழ் கிராமங்களின் எல்லைப் பிரதேசங்களில் ஏற்படுத்தியது. இந்தக் குடியேற்றும் சிங்கள மக்களையும் இனவெறியுட்டி ஆதிக்க உணர்வுகளை அடிப்படையாக்கி அந்தந்த கிராமத்திற்கு உள்ளேயே பழைய தமிழ் மக்களுக்கும், குடியேற்றிய புதிய சிங்கள மக்களுக்கும் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி முரண்பாடுகளை வளர்த்துவிட்டது. ஆரம்பத்தில் இருந்தே இனவெறியைத் தூபமிட்டு இலங்கைப் பேரினவாத அரசு காலத்திற்கு காலம் இரு கட்சி ஆட்சிமாறினாலும் இவ்விதமாக ஒரே திட்டமிட்ட இன ஒடுக்குமுறையைத்தான் செய்கின்றது.

இக்குடியேற்றமானது, தமிழ் பிரதேசங்களை மிக மோசமாக துண்டாடப் பண்ணி தமிழ் மக்களின் விகிதாசார கணக்கெடுப்புக்களையும் பரவலாக ஐதாக்கி, அந்தந்த பிரதேச உரிமைகளையும் தனித்துவத்தையும் சிதறுறச் செய்துள்ளது. இதனால் எமது சொந்தப் பிரதேசத்திற்குள் எமக்குள்ள முன்னுரிமையையும், குடிசன மதிப்பீட்டு விகிதாசாரப்படி இழக்கப்படுகின்றது.

எனவே இத்திட்டமிட்ட குடியேற்றமானது நன்கு திட்டமிட்டு, இனவாதிகளால் காலத்திற்கு காலம் வளர்க்கப்படுகின்றது. எனவே இந்த அடிப்படைப் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து பிரச்சனையை சுமுகமாக தீர்க்க வேண்டிய முதலாளித்துவ தமிழ் தேசிய தலைமைகளும் இதனை சரியாக கையாளவில்லை. காலத்திற்கு காலம் தமது தேர்தல் பிரச்சாரங்களில் இக்குடியேற்றப் பிரச்சனையை மெதுவாக தொட்டுச்சென்று காய்களை நகர்த்தியுள்ளனர்.

மொத்த்தில் குறித்த சில தமிழ் சிங்கள முதலாளித்துவ தலைமைகள் பெரும்பான்மையான பாமர தமிழ் சிங்கள தமிழ் மக்களை தமது அரசியல் ஆதாயங்களுக்காக இன மத மொழி பிரதேச முரண்பாடுகளை களையாமல் பகடைக்காய்களாக பயன்படுத்தியுள்ளனர். உண்மையில் இனமுரண்பாடுகளின் ஆணிவேர்களை அன்றே களைபிடுங்கியிருந்தால், இரு இனத்தவர்களும், ஏனைய இனக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் சமத்துவம் – சமாதானம் – சகோதரத்துவமாக தத்தமது இறைமைகளை பாதுகாத்துக்கொண்டு ஒரே நாட்டில் சகல உரிமையுள்ள பிரஜைகளாக கூடி வாழ்ந்திருக்கலாம்.

ஆனால், இந்த 60 வருடத்தில் அகிம்சைப் போராட்டம் கூடர்மையடைந்து, ஆயத போராட்டமாக மாறி, இன்று ஏகப்பிரதிநிதித்துவ தலைமையால் பயங்கரவாதமாக எமது போராட்டம் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தத்தில் நாம் போராட்டம் தொடங்கிய ஆரம்ப புள்ளிக்கே போய்விட்டோமோ என அங்கலாய்க்க வேண்டியுள்ளது.

இந்த ஆயுதப்போராட்டம் தனித் தலைமை வழிபாட்டை மையப்படுத்திய சர்வாதிகாரத் தன்மையினால், மறுப்க்கத்தில் இலங்கைப் பேரினவாத அரசை – பௌத்தசிங்கள இனவாத கொள்கையை செழுமைப்படுத்த வழிகோலியுள்ளது. இதன் மூலம் இலங்கையரசு பயங்கரவாதத்தை ஒழிப்பதாக கூறிக்கொண்டு தனது நன்கு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பிரித்தாளும் தந்திரோபாய வேலைத்திட்டங்களை திறம்படவே செயற்படுத்தி இனசுத்திகரிப்பை நடாத்தி வருகின்றது.

இரண்டாவதாக, இந்த பிரித்தாளும் தந்திர அரசு, தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதித்துவ கட்சிகள் அல்லது தலைமைகளிடையே முரண்பாடுகளை தூபமிட்டு வளர்த்தோ அல்லது சலுகைகளின் மூலமாக விலைபேசக் கூடிpயவர்களை விலைபேசியோ தமது செயற்பாட்டை நகர்த்துகின்றது.
இதில் புலிகளின் பயங்கரவாதத்தால், தமிழ் தலைமைகள் அங்கிருந்து தப்ப, இலங்கையரசின் பாதுகாப்பை நாட நிர்ப்பந்திக்கப்பட்டனர். இவர்கள் புலிப் பயங்கரவாதத்hதிற்கும் இலங்கையரசின் இனவாத காய் நகர்த்தலுக்கும் இடையில் அகப்பட்டு தத்தளிப்பது மட்டுமல்லாது பெரும்பான்மையான தமிழ்பேசும் மக்களின் சந்தேகப் பார்வைகளுக்கும், கேள்விக்குறிகளுக்கும் இவர்கள் ஆளாகின்றனர்;. இதனால் கனிசமான தமிழ் மக்களிடமிருந்து இத்தமிழ் கட்சிகள் அந்நியப்படுத்தப்படுகின்றன.

இதே நிலைதான் தமிழ் முஸ்லீம் இனக் குழுக்களிற்கிடையேயும் முரண்பாடுகள் வளர்க்கப்பட்டு இனஉறவுகள் சிதைக்கப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் உதாரணமாக அண்மைக் காலத்தில் “சிங்களகெலல உரிமைய’ வினதும் – இலங்கையரசினதும் சதிப்படி வட – கிழக்குப் பிரிவினையும், அதன்;சட்ட அமுலாக்கலும் அதைத் தொடர்ந்து அவசர அவசரமாக கிழக்கில் நடந்த தேர்தல் கூத்துக்களும் ஆகும்;.

இதில் இலங்கையரசு, ரீ.எம்.வி.பி.யை தத்துப் பிள்ளையாக்கி, தேர்தல் மூலம் தமது நிகழ்ச்சி நிரலை அப்படியே பிரதியிட்டு நடாத்துவதும்,படிப்படியாக தமது வெற்றிலைச்சின்ன கட்சியான ஐக்கிய முன்ணணிக்குள் இவர்களை உள்வாங்கியவையும் உலகறிந்த உண்மைகள். கிழக்கு பிரிவினையானது கிழக்கின் தனித்துவத்தை நிலை நிறுத்துவதே என இவர்களெல்லலாம் கூறி ‘சட்டத்தாலும் கிழக்கைப் பிரித்து தேர்தல்களாலும் வென்றுவிட்டோம் இனி தனித்துவத்தை முன்னெடுப்போம்’ என்று கூறிக்கொண்டு இன்று நடப்பவை என்ன?

ரீ.எம்.வி.பி. கட்சியிலிருந்து கருணா உட்பட 3000 பேரை மகிந்த சிந்தனையும் அதன் இலங்கையரசும் உள்வாங்கி அதற்கு பிரதியுபகாரமாக கருணாவை அமைச்சே இல்லாத அமைச்சராக்கி ரி.எம.வி.பி கட்சியை சுக்கு நூறாக உடைத்து கிழக்கு பிரதிநிதித்துவங்களை நிர்மூலமாக்கி உள்ளது. இந்த அமைச்சரவையில் இணைந்த கருணாவால் விடிந்த கிழக்கில் உடனடியாக 60 சிறிலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகங:கள் பரவலாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. சராசரி மாகாண சபைக்குள்ள உரிமைகளான பொலிஸ், காணி அதிகாரங்கள் கூட கிழக்கு மாகாணசபைக்கு வேண்டாம் என கருணாவால் முன்மொழியப்பட்டு இருக்கின்றது. இவையெல்லாம் கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தனித்துவத்தை முழுமையாக விலைபேசித் தமது சுயநல அரசியலை முன்னெடுப்பதற்கு தகுந்த சாட்சியமே.

இந்த விளையாட்டில் முதலமைச்சர் பிள்ளையான் தற்போ பிள்ளையார் பிடிக்கப் போன கதையாகிவிட்டார். கருணாவைப் போல் முற்றுமுழுதாக மகிந்தாவின் கட்சிக்குள் உள்வாங்க முடியாத நிலையில் பிள்ளையானின் உயிரும், பதவியும் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.

எனவே எப்படி விடிந்த கிழக்கில் கிழக்கின் தனித்துவம் என்று சொல்லப்பட்ட ரி.எம்.வி.பி. கட்சி சின்னா பின்னமாக்கப்பட்டு பிள்ளையான் – கருணா என்ற தலைமைகள் உடைக்கப்பட்டு, அக்கடசிக்குள்ளேயே குழுத்தலைமைகள் பகை முரண்பாட்டோடு திட்டமிட்டு வளர்க்கப்பட்டு மிக குறுகிய காலத்திலேயே கிழக்கின் பிரதிநித்துவம் என்றவர்கள் தங்களுக்குள்ளே தாங்களே முட்டி மோதி ஆயுதத்தையும், அதிகாரத்தையும் கையிலெடுத்து ஆளை ஆள் கணக்குத் தீர்க்கின்றனர். எம் கையைக் கொண்டே எம் கண்கள் குருடாக்கப்படுகின்றது. இவ்வாறே தொடரும் காலங்களில் கிழக்கில் தமிழ் முஸ்லீம் இனக்குழுக்களிடையே இலங்கை அரசு வழக்கமான கைங்கரியத்தை செயற்படுத்தும் என்பதை விரைவில் கிழக்கு மக்கள் உணர்வார்கள்.

Vadakku_Vasanthamஇலங்கை அரசின் விடிந்த கிழக்கின் அவலங்களைத்தான் வடக்கு வசந்தத்திற்கும் பிரயோகிக்க தகுந்த நேரத்தையும் – அதற்கான தேர்தல் உத்திகளையும் செய்யத் தொடங்கிவிட்டது.

எனவே இலங்கையரச பயங்கரவாதம் இப்படியென்றால், புலி பயங்கரவாத செயற்பாடுகள் இத்தனை வருடமாக இன்னும் இன்னும் எந்த மக்களைப் பற்றியும் சிந்திப்பதில்லையென இந்நிமிடம் வரை செயற்படுகின்றது.
 
கடந்த காலங்களில் நடந்த பேச்சு வார்த்தைகளில் கூட புலிகள் எம் மக்களுக்கான அரசியல் தீர்வினை முன்னெடுக்கக்கூடிய எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அதாவது சர்வதேச அழுத்தங்களால் இலங்கையரசுக்கும் – புலிகளுக்கும் இடையில் நடந்த எல்லா பேச்சு வார்த்தைகளையும் தமிழ் மக்களுக்கான தீர்வை நோக்கி நகர்த்தாமல் உருப்படியற்ற நிபந்தனைகளை ஒவ்வொரு பேச்சுவார்த்தை மேசையிலும் வைப்பதால் குறிக்கோளை தவறவிட்டனர். பேச்சு வார்த்தைக்கு வரவேண்டிய தகுதியான பிரதிநிதிகள் சிலர் புலிகளுக்குள்ளோ, அல்லது அதன் சார்பான மூத்த தலைமைகள் ‘தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளோ’ இருந்தும் அவர்களை முன்னிலைப்படுத்தாமலோ, என்றும் அரசியல் தந்திரோபாயங்களை முன்னெடுக்காமல் ஏகபிரதிநிதித்துவ ராணுவப் போக்கிலே மட்டுமே சர்வதேச அரங்குகளையும் கொச்சைப்படுத்தினர். இவ்வாறான பல நிகழ்வால் சர்வதேச நாடுகள் மட்டத்தில் புலிகள் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டனர்.

இப்படியே தமிழ் பேசும் மக்களை இலங்கையரசும் – புலிப் பயங்கரவாதமும் பேச்சுவார்த்தை நாடகங்களையும், யுத்த நிறுத்தத்தையும் பின் உலக நாடுகளில் நிதி வசூலிப்பதையும் தொடர்ந்து, தமது ராணுவங்களை பலப்படுத்துவதாக சொல்லிக் கொண்டு கோடிக்கசணக்கான பணத்தை, நாட்டையே அழிப்பதற்காகவே பயன்படுத்தி உள்ளனர்.

ஆனால் கிழக்கில் தொடங்கிய மனித யுத்தம் வன்னியின் குறுகிய நிலப்பரப்புவரை வந்தும் முடிவுக்கு வந்தபாடில்லை. வன்னிப் பிரதேசங்களில் நாளாந்தம் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுகின்றனர். இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் ஊனமுற்றோராக்கப்பட்டு உள்ளனர்.

கையிழந்து, காலிழந்து, கண்ணிழந்து, உறுப்புக்கள் உள்ளேயும் வெளியேயும் சிதைந்து, மனம் பேதலித்து, உறவு பந்தங்களை பிணக்குவியல்களிலும் பங்கர்களுக்குள்ளும் விட்டுவிட்டு ஓடித்திரிந்து, உயிர்மட்டும் மிஞ்சியிருந்தாலும் தறகாலிக கூடாரங்களும், தட்டேந்தி வாழும் அவலநிலையும் நிரந்தரமா? அவர்களின் உடல் – உள நிலைகள் எப்படியிருக்கும்? இப்படி யுத்தத்தின் ரணங்களால் எப்படி எல்லாம் இந்த சமூகம் சீரழிந்து போய்க் கொண்டிருக்கின்றது.

மேலும் இந்த இருதரப்பிலும் கூட ராணுவம் என்ற பெயரில் எத்தனை ஆயிரம் இளைஞரை நாளாந்தம் யுத்த முனைகளில் பறிகொடுத்தும் அங்கயீனர்களாக்கியும் அனாதைப் பிணங்களாக விட்டுச் சென்றும் போh முரசம் கொட்டுகின்றார்கள். இரு தரப்பும் மாறிமாறி எண்ணிக்கைகளை வீரப் பிரதாபங்களாக வெற்றி கொண்டோம், முன்னேறுகின்றோம் என பீற்றிக் கொண்டாலும் இந்த பயங்கரவாதத்தால் நாட்டின் பொருளாதாரங்கள், வளங்கள், உற்பத்திகள் எங்கே போய்விட்டன?

எனவே நாட்டு மக்கள் தத்தமது இறைமையுடன் நிம்மதியாக, சுபீட்சமாக வாழ வேண்டுமென்றால் யுத்தம் உடனடியாக ஒரு அரசியல் தீர்வின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டுவரப்படல் வேண்டும்.

யுத்தம் இடைநிறுத்தம் என்ற போர்வையில் இருபக்க யுத்தத்திலும் தமது இழப்பை ஈடுசெய்ய – அல்லது சிறு இடைநிறுத்தி தமது யுத்த பலங்களை அதிகரித்துவிட்டு தொடர்ந்தும் யுத்த கோரப்பசிக்கு மக்களை காவு கொடுக்க வேண்டுமா? இதுவரையில் இழந்தவை அடுத்தடுத்த தலைமுறையிலும் ஈடுசெய்யக் கூடியவைகளா? எனவே, இலங்கையரசோ புலிகளோ வெறும் யுத்த நிறுத்தம் மூலம் மட்டும் தமிழ் மக்களுக்கான தீர்வை முன்னெடுக்க முடியாது என்பது உண்மையே.

ஏனெனில் இருதரப்புமே இதுவரை
1) மக்களைப் பற்றி சிந்திக்காமல் ஏகபிரதிநிதித்துவ தலைமைவெறியுடன் யுத்தததை நடாத்தி நாட்டு மக்களை காவு கொடுப்பதுதான் தொடரப்போகின்றது.

2 மனித உரிமை மீறல்களை அடுக்கடுக்காக எல்லா சந்தர்ப்பங்களிலும் செய்து வருகின்றது.

3) கருத்துச் சதந்திரம், ஊடகச் சுதந்திரங்களை 3ம் தரப்பினர்க்கும், பொதுமக்களுக்கும் எதிராக காலத்திற்குக் காலம் நடாத்திவருகின்றது.

4) ஜனநாயக கருத்துக்களுக்கோ, மாற்றுக் கருத்துக்களுக்கோ இடம் கொடுக்காமல் அராஜக வடிவங்களை அத்தனை வழிகளிலும் இதுவரை பிரயோகித்து வருகின்றனர்.

5) தம் மக்களை மட்டுமல்லாது சர்வதேச மட்டத்திலோ அன்றி சர்வதேச மனிதாபிமான அழுத்தங்களுக்கோ செவி சாய்க்காமல் தமது ஆதிக்க வெறியையே நிலைநிறுத்த செயற்படுகின்றது.

6) தமது இருப்புக்களை மட்டுமே நிலைநிறுத்த யாரையும் – எதனையும் பலிகொடுக்கத்தயாராக உள்ளனர். ஏனெனில் நாளை இவ்விரு தரப்புக்குள் மட்டுமே ஓர் உடன்படிக்கையுடன் (புலிகள் பலமிழந்து நிhந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வருவது தொடர்ந்தால்) பேச்சுவார்த்தை நடந்தால் தமது சுய இருப்பை நிலைநிறுத்த எதனையும் செய்வார்கள். அதனை ராஜதந்திரமென்று வேறு சொல்வார்கள்.

ஏனெனில் இதே விடுதலைப் புலிகளும் பிரேமதாசாவும் இணைந்தே 1989ல் வட கிழக்கிணைந்த மாகாண சபையையும், அதை முன்நகர்த்திய இந்திய அரசையும் நிராகரித்து செய்த அட்டுழியங்களையும் இதனை முன்னெடுத்து செயற்படுத்திய ராஜீவ் காந்தி அவர்களை கொலை செய்தமையும் எமது தமிழ் பேசும் மக்கள் வரலாற்றில் இந்தளவு அழிவுக்கும் ஒட்டுமொத்த காரணமென்பதை வரலாற்றில் மறக்க முடியுமா?

7) கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கான தீர்வை மட்டுமே மையப்படுத்தி எம் மக்களின் பிரச்சனைகளை முன்னெடுக்காத ஒரு நிலையை நாம் அனைவரும் கருத்திற் கொண்டு இனியும் இந்த இருதரப்பையும் நம்பிக் கொண்டிராமல் இருதரப்பும் சாராத அல்லது இருதரப்பையும் இதுவரை நம்பி இழந்த அங்குள்ள தமிழ் தலைமைகளும், புலம் பெயர்நாடுகளிலுள்ள புத்திஜீவிகள் – முற்போக்காளர்கள், மனித உரிமைகளுக்காக போராடுபவர்களுமான பிரதிநிதிகளும், கிழக்கு அரசியலில் கூட அண்மைக் காலத்தில் இலங்கையரசால் துண்டாடப்பட்டு அங்குள்ள மக்களிடமிருந்து அந்நியப்பபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நல்ல சக்திகள் கூட எமது சிறு முரண்பாடுகளை மறந்து கொண்டோராக இவர்களுமாக எம் மக்களுக்கான விடிவுக்காய் சர்வதேச அரங்கிற்கு உண்மையான பிரச்சனைகளை முன்னிறுத்தி செயற்பட அனைத்து இப்படியான சக்திகளும் சேர்ந்து உடனடியாக ஒரு கூட்டுத்தலைமையை உருவாக்க வேண்டிய கடமைபாடுகளின் கடைசி விழிம்பில் நிற்கின்றோம்.
 
ஏனெனில் இருதரப்பையுமே நம்பி; ஏமாந்த நாம், மூன்றாவது தரப்பொன்று உருவாக்கவேண்டி எல்லோரும் சிந்தித்தாலும் செய்ய வேண்டிய இந்த நேரத்தில் இந்த ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்காவிடில் இந்த வெற்றிடங்களை மீண்டும் மீண்டும் பிழையான சக்திகளினாலேயே எமது மக்களின் போராட்டம் தொடர்ந்து கூறுபோடப்பபடும்.

தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுவது தமிழ் பெண்களின் விடுதலைக்கு மைல்கல்! : ஜெ. ஜென்னி

Freedom_it_is_a_rightஉலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட – ஒடுக்கப்படுகின்ற பெண்களை மையப்படுத்தி வருடா வருடம் பங்குனி 8ல் சர்வதேச மகளீர் தினத்தையொட்டி, உலகம் முழுவதும் மகளிர் பேரணிகள், எழுச்சிக் கூட்டங்கள், விடுதலை சுலோகங்கள், அறைகூவல்கள். அதேநேரம் எமது நாட்டில் இன்று நிமிடத்திற்கு நிமிடம் குண்டுமழையில் மரணித்துக் கொண்டும், வாழ்வாதாரங்கள் எதுவுமே அற்றும், நிர்க்கதியாக அல்லல்பட்டு அலைந்து திரியும் பெண்கள், குழந்தைகள், வயோதிபர் உட்பட்ட சமூகம், இன்று இனச்சுத்திகரிப்பிற்கு பலியாகி வருவது சர்வதேசமே அறிந்த விடயமாகும்.

யுத்த சூழலில் சிக்குண்ட பெண்கள், குழந்தைகளின் நிலையும் மிக மோசமானதாக உள்ளது. பொதுவாக ஒரு சமூகத்தின் பெண் விடுதலையானது, இரட்டைச் சுமைகளுக்கு எதிராகப் போராட வேண்டியதாக உள்ளது. நாளாந்த வாழ்வியல் பிரச்சனைகளை எதிர்கொள்வதும் சமூக ஒடுக்குமுறையை எதிர்கொள்வதுமாக அவளுடைய போராட்டம் தொடர வேண்டி இருக்கையில்  யுத்த சூழலின் மத்தியில் வாழும் நாடுகளில் பெண்ககள் 3வது சுமையையும் சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறாக வாழ்வியல் பிரச்சனை என்பது மறுதலையாக ‘பிரச்சனைகளும் – சுமைகளுமே வாழ்வியலாக” மாறிவிட்டது.

இந்த 3வது சுமைகளாக:
1)போர்ச்சூழலில் அல்லது வன்முறைக் கலாச்சாரத்தில் வாழும் சமூகத்தில் – கணவனையோ, அன்றி தந்தையையோ அன்றி சகோதரனையோ இழக்கும் பெண்கள் தனிமரமாக நின்று பொருளாதார நிலையுட்பட்ட அத்தனை குடும்பச் சுமைகளையும் அக்குடும்ப உறுப்பினர்களையும் தானே சுமக்க வேண்டி உட்படுகின்றாள்.
2)பயங்கரவாத சட்டங்கள் அல்லது போர்ச்சூழலால் கைதாக்கப்படும், அல்லது காணாமல் போகும் ஆண் உறவுமுறைகளை தேடியோ, அலைந்தோ, ஆர்ப்பாட்டங்கள் செய்தோ அன்றி சட்ட அலுவல்கள் மேற்கொண்டோ சிறிய கிராமங்களிருந்து கூட புறப்பட்டு பெருநகரங்கள் வரை வந்து நீதிக்காக போராட நிர்ப்பந்திக்கப்படுகின்றாள், அல்லது தேடி அலைகின்றாள்.
3)சமூகத்தில – கைதாகுதல், காணாமல் போதல், அடையாளம் தெரியாத படுகொலை என்ற பயநிலைப்பாடுகளால் ஆண்கள் இருக்கும் குடும்பங்களில் கூட, பெண்கள் சராசரி சுமைகளுடன் வாழ்வியல் ஆதாரமாக எல்லாவற்றிற்குமான குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.
4)தத்தமது குடும்பங்களின் அடிமட்ட வாழ்நிலைக்கோ, அன்றி பொருளாதார மேம்பாட்டிற்கோ மேற்குறிப்பிட்ட அத்தனை சுமைகளுக்கும் அப்பாலும், நகரங்களுக்கு இடம்பெயர்ந்தோ அன்றி மத்திய கிழக்கு நாடுகள் உட்பட அந்நிய நாடுகளுக்கு அலைந்தோ உழைக்க வேண்டியுள்ளது.
5)மேலும் இந்த வன்முறைக் கலாச்சாரம், மனித வாழ்வில் பின்னிப் பிணைந்து விட்டதால் மனித வெடிகுண்டுகளாக சில பெண்களும், கர்ப்பிணித் தாய்மார்களும் போராட்டம் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டதால் அனைத்து வயதுப் பெண்களும் கூட பாதுகாப்புநிலை, பரிசோதனை என பல சொல்லோணாத் துனபத்திற்கு ஆளாகின்றாள். இவற்றினூடாக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் கூட சட்டங்களால் நியாயப்படுத்தப்பட்டவைகளாகத் தான் கணிக்கப்படுகின்றன.

இப்படியாக போர்ச் சூழலில் வாழும் எந்த நாட்டுப் பெண்களாக இருந்தாலும் சரி, தமது வயதிற்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் மீறிய சுமைகளாக இந்த 3வது சுமை பல வடிவங்களில் பெண்களை மேலும் மேலும் சுமை தாங்கிகளாகத்தான் அழுத்துகின்றன.

இதனூடாக, பல கிராமத்து பெண்கள் உட்பட, வீடே உலகமென – இந்த இரட்டைச் சுமை வாழ்வே தமது தலைவிதியென்று வாழ்ந்து வந்த பெண்கள் இந்த 3வது சுமையை ஏற்க நேரிடும்போது குடும்பத்தில் மட்டுமல்லாது சமூகத்திலும், சமூகக் காரணிகளிலும் தானாகவே முன்வந்து தலைமைப் பொறுப்புக்களை பலவிதத்திலும் ஏற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றாள்.

‘பல தீமைகளிலும் ஒரு நன்மை” என்பது போல் இந்தப் பலவகை தலைமைப் பண்புகளால் ஒவ்வொரு பெண்ணின் அவரவர் சூழலுக்கேற்றவாறு ஆளுமை தோற்றுவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த ஆளுமை தொடர்ந்தும் சமூகத்தில் பெண்கள் மீதான பலவித அழுத்தங்களையும், சுமைகளையும் இழப்புக்களையும் மொத்தத்தில் அதிகரிக்கச் செய்கின்றது.

மேலும், உலகப் புரட்சிகள் உட்பட்ட அனைத்து உலகில் நடக்கும் யுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள், நாடு பிடிப்புக்கள் அனைத்திலும், காலத்திற்கு காலம் அதிகார வர்க்கங்களாலும் அதுசார்ந்த ராணுவத்தாலும், ஆக்கிரமிப்பாளார்களாலும் ஒடுக்கப்படும் மக்களின் மீதோ அன்றி, கைப்பற்றப்படும் பிரதேசங்களிலோ, அன்றி ராணுவ மற்றும் அராஜகவாதிகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாலோ பாதிக்கப்படுபவர்களில் மிக காட்டுமிராண்டித்தனமாக பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. விசாரணை என்ற பெயரிலோ, மிரட்டல் என்ற வடிவத்திலோ, ஆக்கிரமிப்பு தோரணையிலோ மிக அவமானப்படுத்தப்பட்டு ஒரு பெண் துன்புறுத்தப்படுவது இந்த பாலியல் வன்முறையால்தான்.

ஒரு ஆணிற்கு நடைபெறும் உடல் சார்ந்த சித்திரவதைகள், துன்புறுத்தலைவிட ஒரு பெண்ணிற்கு நடக்கும் உடல் சார்ந்த இந்த பலாத்காரம் என்பது காலாதிகாலத்திற்கும் அப் பெண்ணின் உடல் மனநிலை சார்ந்த பெரும் கொடுமை என்பதை ஒரு பெண்ணாக இருந்து சிந்தித்துப் பார்த்தால் தான் புரியும்.

அன்றிலிருந்து இன்றுவரை – இந்நிமிடம் வரை உலகம் நாகரீக வளர்ச்சியில் போய்கொண்டு இருந்தாலும் இந்த பாலியல் துன்புறுத்தல், பலாத்காரம் என்று வரும்போது பெண்களுக்கெதிரான இந்தக் கொடுமை ஒரே வடிவமைப்பில்தான் நடக்கின்றது.

இயற்கையில் ஒரு பெண்ணாணவள், உடலியல் ரீதியாக உயிரியல் படைப்பின் கருவறையை கொணடவள். இவள் ஒரு சமுதாயத்தின் சங்கிலித்தொடர். ஆனால் இந்தப் பெண்ணிற்கு இழைக்கப்படும் பாலியல் வல்லுறவுக் கொடுமையென்பது, அவளின் அத்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கும் அவலமாகும். எனவே இப்படியான கொடுமையிலிருந்து பாதிக்கப்பட்ட பெண் மீண்டுவர உடலாலும், மனதாலும் விசேடமாக எம் சமூக அமைப்பாலும் எவ்வளவோ துன்பங்களை கடக்க வேண்டியுள்ளது.

எனவே இந்த சர்வதேச மகளீர் தினநாளில் – உலகில் பல்வேறு நாடுகளில் பலவித பெண் விடுதலைக் கோசங்கள் வைக்கப்பட்டாலும் எம்மவரின் யுத்த பூமியில் அல்லல்படுதலும், அலைந்துதிரிதலும், மரணத்துள் வாழ்வுமாக குண்டுமழையில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாம் எந்த பெண் விடுதலைக் கோசங்களை வைக்க முடியும்.

அடிப்படை வாழ்வியல் உரிமையே அற்றுப் போகும் நிலையில் எந்தெந்த உரிமைகளை நோக்கி சிந்திப்பது? யுத்தத்தில் வாழும் பெண்கள் குழந்தைகள் உட்பட்ட எம்மவர் இதுவரை யுத்தத்தில் இழந்த உயிர்களைப் பற்றி சிந்திப்பதா? தமக்கு நடக்கும் உடல், உள ஊனங்கள், தனிமைகள், சுமைகள் விரக்திகள் பற்றி சிந்திப்பதா? தத்தமது உயிர்நிலைகளின் நிரந்தரமற்ற தன்மையை பற்றி சிந்திப்பதா? மொத்த்தில், யுத்தத்தின் வாழ்வு கூடட, பெண்ணை மேலும் மேலும் பாதிக்கப்பட்டவளாக, சுமை தாங்கியாக இருப்பு நிலைகளுக்காகவே அகதி முகாம்களில் எல்லாவற்றிற்கும் கையேந்துபவளாக, பெண்களின் பிரத்தியேக பிரச்சனைகளுக்குக்கூட வரிசையில் நின்று தமது திகதிகளை அறைகூறுபவளாக இப்படி எத்தனை விதத்தில் பெண் அங்கு துன்பப்படுகின்றாள்.

மரணத்து வாழ்விலும் பெண்களுக்கேயுரிய உடலியல் மாற்றங்கள் அசௌகரியங்கள்! எத்தனை கர்ப்பிணித் தாய்மாரின் அவசரமான – அவலமான பிரசவங்கள்! அந்த பச்சிலம் பாலகர்கள் யுத்த பூமிக்குள்ளும், தற்காலிக – நிரந்தரமான அகதிக் கொட்டகைகுள்ளுமாக புதிய வரவுகள். இதற்குப் பாலூட்ட இரத்தமே இல்லாத தாய்மார்கள்! எத்தனை குழந்தைகள் பெண்கள் உட்பட்ட அரை வயிறு கால் வயிறுடன் பட்டினியான நாட்கள், நலிவுற்ற வயதான ஊனமுற்ற வயோதிபர்! இப்படி எத்தனை எத்தனை அவலங்கள்!

ஓரளவு மனித உரிமையுள்ள, ஓரளவு ஜனநாயகம் நடைமுறையிலுள்ள சமூக அமைப்பில் தான் பெண்விடுதலை கோசங்களிற்கு இடமுண்டு ‘ஆனால் எம் இருப்பே எமக்கில்லை” என்ற பிற்பாடு, நாம் எதை ஆதாரமாக்கி – எவற்றை கோசமாக்குவது?

எனவே மொத்தத்தில், சர்வதேச மகளீர் தின கோசங்களாக எதை நாம் முன்னெடுப்பது?

இரு மருங்கிலும் உடன் யுத்தத்தை நிறுத்து!
உடன் சமாதானத்தை விரைவுபடுத்து!
பாதுகாப்பு பிரதேசங்களை விஸ்தரி!
நியாயமான சர்வதேச மத்தியஸ்தத்துடன் எம்மவர்களின் உரிமைகளும், இறைமைகளும் மீளப்பெறப்படல்!

இப்படியான கோசங்களும், அதன் நகர்வுகளும், அதனூடான வேலைத்திட்டங்களுமே அடிப்படை வாழ்வியலை மீட்டுத்தரும். அதனூடே எம்மகளிரின் விடுதலையையும் முன்னெடுக்க முடியும். ஏனெனில் வன்முறைக் கலாச்சாரத்தால் முற்றாக நிர்மூலமாக்கப்பட்ட எமது தமிழ் பேசும் மக்களின் மனித உரிமைகள் மறுசீரமைக்கப்படுவதுடன் இணைத்தே எம்மகளீரின் விடுதலையையும் பல தரத்திலும் முன்னெடுக்க முடியும்.