செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இராஜபக்சக்களின் பின்வாங்கலும் ரில்வின் சில்வாவின் நேர்காணலும்  – இதயச்சந்திரன்

இராஜபக்சக்களின் பின்வாங்கலும் ரில்வின் சில்வாவின் நேர்காணலும்

இதயச்சந்திரன்

…………………….

ஐநாவின் அபிவிருத்திக்குழுவின் வருகையோடு தேர்தல்  திருவிழா சூடு பிடித்துள்ளது.

 

இந்த ஜனநாயகச் சடங்கில் வசைபாடலும், குழிபறித்தலும், அணி சேர்தலும், கோட்பாட்டு மோதலும் முதன்மை பெறுவதைக் காண்கிறோம்.

 

தமிழ்த் தேசியத்தை காப்பாற்ற வேண்டுமென்கிற முழக்கம் சகல மேடைகளிலும் எதிரொலிக்கிறது. ஒட்டாத குழுக்கள் அனைத்தும் தேச விடுதலை பற்றி பேசாமல். தேர்தலில் எத்தனை ஆசனங்களை கைப்பற்றுவது என்கின்ற இலட்சியத்தோடு இயங்குகின்றன.

 

தற்போதைய சூழலில் தேர்தல் வெற்றிக் கணக்குகள், விருப்புவாக்கு தெரிவுகள் குறித்தே பரவலாக ஆராயப்படுகிறது.

 

தமிழர் தாயக கணிப்புகள் பல, வன்னி மாவட்டத்தில் செல்வமும் ,காதர் மஸ்தானும் வெற்றி பெறுவார்கள் என கட்டியம் கூறுகின்றன. ஏனைய மாவட்டங்களில் எவரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாதென்கிறார்கள்.

 

மலையகத்தில் அனுஷா சந்திரசேகரன் , வடிவேல் சுரேஷ் , ஜீவன் தொண்டைமான் மற்றும் திகாம்பரம் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது.

 

வடக்கு -கிழக்கு தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரை திருக்கோணமலையிலும் அம்பாறையிலும் ‘மோதல் தவிர்ப்பு’ உடன்பாடு காணப்பட்டு தமிழரசுக் கட்சி போட்டியிடுகிறது.

சங்கின் உறுப்பினர்களும் திருக்கோணமலை வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திராவும் திசைகாட்டிச் சின்னத்தில் இறங்குவதால் போட்டி பலமான இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

இவ்விரண்டு உணர்திறன் மிக்க இடங்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற முன்னிற்கும் தமிழ்த் தேசியவாதிகள், ஏனைய மாவட்டங்களில் ஏன் ஒன்றிணையவில்லை என்கிற ஆதங்கம் மக்களிடம் உண்டு.

 

இனி தமிழர் தாயக அரசியலுக்கும் தென்னிலங்கை அரசியலுக்குமான மோதல்கள் ,முரண்பாடுகள் குறித்து பார்ப்போம்.

 

இளையோர் பார்வையானது அநுராவின் ‘ தேசிய மக்கள் சக்தியின் மீது குவிவதை தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் எச்சரிக்கை உணர்வோடு அவதானிக்கின்றன.

 

இதன் எதிர்வினை அரசியலாக, ‘வடக்கு கிழக்கு ஊழல் அரசியல்வாதிகளை அநுராவால் அம்பலப்படுத்த முடியுமா?’ என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ‘ ‘மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியலை (பார் லைஸென்ஸ்) அநுர வெளியிடுவாரா ? ‘ என்று சுமந்திரனும் கூறத் தொடங்கியுள்ளனர்.

 

உண்மையிலேயே சகல மட்ட ஊழல்களையும் அநுர அரசு அம்பலப்படுத்த வேண்டுமென்பதே மக்களின் பெருவிருப்பாகும்.

 

2015 இல் உருவாக்கப்பட்ட ‘நல்லாட்சி’ அரசின் மத்திய வங்கி கடன் முறி ஊழல் பற்றிய விசாரணைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பெறுமதி சேர் வரி (வாட் வரி)3.5 பில்லியன் ரூபாவை செலுத்தாத மூவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

 

‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதைப் போல, அநுர அரசிற்கு சவால் விடுத்த உதய கம்மன்பிலவிடமே , அதற்கான ஆதாரங்களை வெளியிடச் சொல்லி விஜித ஹெரத் எச்சரித்துள்ளார். திங்களன்று வருமென்கிறார் கம்மன்பில. பார்ப்போம் .

 

இராஜபக்சக்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தாலும், அக்குழுவின் இணை அனுசரணையாளர்களான கம்மன்பிலவும், விமல் வீரவன்சவும் தமது அரசியல் கருத்துக்களை உதிர்த்தவண்ணமுள்ளனர்.

 

இருப்பினும் இராஜபக்சக்களின் ‘ஈரடி பின்னால்’ நகர்வில் ஒரு அரசியல் தந்திரம் மறைந்திருப்பதாக ஊடக நண்பர் ஒருவர் தனது ஆய்வு நிகழ்வொன்றில் குறிப்பிட்டிருந்தார் .

 

சனாதிபதி தேர்தலில் அநுர தரப்பினரால் கட்டமைக்கப்பட்ட ‘ இராஜபக்ச எதிர்ப்பு’ பிம்பத்தை நாடாளுமன்றத் தேர்தலில் வலுவிழக்கச் செய்ய, இராஜபக்சக்கள் போட்டியிடவில்லை என்பதே நண்பரின் வாதம்.

 

குறைக்கப்படும் வாக்குகள் சஜித் பக்கம் கணிசமான அளவில் திரும்பும் என நண்பர் எதிர்பார்க்கின்றார். இது அநுராவின் வாக்குகளை உடைக்கும் மஹிந்தரின் தந்திரமாக இருக்கலாம்.

 

ஆனாலும் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வருவதன் ஊடாக, கடந்த ஆட்சியாளர்களை அரசியல் ஊடக வெளியில் முக்கிய பேசுபொருளாக வைத்திருக்கிறது தேசிய மக்கள் சக்தி.

 

ஆகவே இராஜபக்சக்கள் தற்காலிகமாக ஒதுங்கினாலும் அநுராவின் கிடுக்கிப்பிடி, தேர்தலின் பின்னரும் தொடரும் வாய்ப்புகள் அதிகம் போல் தெரிகிறது .

 

அடுத்ததாக ஜே. வி .பி இன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்கள் வழங்கிய நேர்காணலொன்று, தமிழ் ஊடகப் பரப்பில் பலத்த விவாதமொன்றினை ஏற்படுத்தியுள்ளது .

 

அதுபற்றி பேசாமல் கடந்து செல்ல முடியாது.

 

‘ அடித்தட்டு தமிழ் மக்களின் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினையே’ என்று கூறும் சில்வா , ‘ அம்மக்களுக்கு 13 அல்லது அதிகார பகிர்வு என்ற பிரச்சினை இல்லை ‘ என்கிறார்.

 

ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சி வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களையும் பாதிக்குமென்பது உண்மை.

தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினையை அவர் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார் என்பதை அந் நேர்காணலே எடுத்தியம்புகிறது.

 

ஆனாலும் இடதுசாரி கருத்தியலை வரித்துக்கொண்ட தோழர் டில்வின் சில்வா அவர்கள், ஒரு தேசிய இனத்தின் அரசியல் உரிமையினை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார் ?.

 

அரசியல் உரிமை மட்டுமல்ல…. பொருளாதாரத்தை பங்கிடும் இறைமையுடன் கூடிய உரிமையும் மக்களின் பிரச்சினைதான்.

 

இவர்களுக்கும் நம்மவர்களுக்கும், இந்த இரண்டையும் இணைத்து முன்னெடுக்கும் அரசியல் புரிய வேண்டும்.

 

இனப்படுகொலையை எதிர்கொண்ட தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமையைப் புறந்தள்ளி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

 

வல்லரசுக் கழுகுகள் வட்டமிடுகின்றன.

அவதானம் தேவை.

 

மக்களோடு பேசுங்கள். அவர்களே தமக்கான அரசியல் தீர்வு எதுவென்று சொல்வார்கள்.

இறந்தவனுக்கு ஏது தேசியம் ? வளமற்றவனது உயிரிலும் உழைப்பிலேயுமே தேசியம் ! : ரவி சுந்தரலிங்கம்

இறந்தவனுக்கு ஏது தேசியம் ? வளமற்றவனது உயிரிலும் உழைப்பிலேயுமே தேசியம்

இலங்கையில் தமிழ் சிங்கள தேசிய வாதங்களின் போரில் சார்பாகவும் எதிராகவும் ஈடுபட்டு . போராளிகள் சிப்பாய்கள் துரோகிகள் என சமகாலப் பட்டப் பெயர்களையும் தாங்கி மாண்டு போனவர்கள் தொகை என்ன என்பதை முற்றாகச் சொல்லக் கூடிய ஞானிகள் யாரும் whatapps தளங்களில் கூட உள்ளார்களா எனத் தெரியவில்லை . ” பயன் இல்லை என்றால் மறந்திடுவதே விதி ” , என இறந்தவர்கள் யாரென நினைவு கூருவதை சொந்த பந்தங்களே மறந்து கொண்டு போகும் நிலைதான் இன்று நிஜமானது .

 

இந்நிலைக்கு தமிழீழத்தலைவர் என இன்றும் சிலரால் கொண்டாடப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கூட விதிவிலக்கல்ல . ஆயுதப் போர்கள் முடிந்த மறுநாளிலிருந்தே

1. மற்றவருக்காக தம்மை அர்ப்பணிக்க முன்வந்தவர் யாவரையும் , ஒரே கண்ணுடன் நிலை கொள்ள வேண்டும் .

2. இறந்தவர் பட்டியல் ஒன்றினை தயாரிக்க வேண்டும் . 3.பிரபாகரனுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வொன்றினை நடத்த வேண்டும் .

4. இவர்கள் அனைவர் பேரிலும் ஒரேஒரு நாளினை தமிழ் பேசுவோரது இலங்கைத் தினமாக நடைமுகப் படுத்த வேண்டும் .

5. அமைப்புகள் பட்டப் பெயர்களைத் கடந்து , இறந்தவர்களை நினைவு கூரும் தலம் ஒன்றினை , முதலில் தற்காலமாக ஏதாவது ஒரு புகலிடத்திலும் , காலப் போக்கில் நிரந்தரமாக இலங்கையிலும் உருவாக்கிட வேண்டும் .

6.அவனை அல்லது இவனை மனித உரிமைக் கூண்டில் நிறுத்தப் போகிறோம் என்றபடி இலங்கையரது உழைப்பையும் , சொத்துகளையும் விரையம் செய்வதைத் தவிர்த்து , தென் ஆபிரிக்காவில் இடம் பெற்றது போல Truth and Reconciliation Commission ( TRC ) என்ற நடைமுறையாகக்கூடிய ஆணைக்குழுவை சட்ட பூர்வமாக நிலைநாட்ட வேண்டும் . என்ற ஆறு கோரிக்கைகளை பிரசுரமான ஆய்வுக் கட்டுரைகளிலும் , நேர்காணல்கள் போதும் . சகல விடுதலை அமைப்புகளது பிரதிநிகளுடன் நேரடியாகவும் , 2009 இல் இருந்தே குரல் கொடுத்து வந்ததால் பயன் எதுவும் இன்றும் இல்லை . ( Re : South Asia Research Group . Tamilview , Thesamnet , etc. , numerous meetings . } தேர்தல்களில் வாக்காளரது பட்டியல்களுடன் கதவுகள் தட்டும் தேசியம் பேசும் அரசில்வாதிகள் , கதவுகள் தட்டும் போது வீடுகளில் இறந்தவர்கள் உள்ளார்களா என விசாரித்து பட்டியல் செய்யக் கூடிய நிலமையை சாதகமாக்கியதோ கிடையாது.

சிங்கள சிப்பாய்களுக்கு இந்நிலை வேற்றுமையானதா ? இல்லை . ஆனால் , கைவசம் உள்ள அரசின் பணத்தை , தாமும் எடுத்து , அதேவேளை இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு சில சலுகைகளையும் வழங்கி அரசியல்வாதிகள் கொண்டாடி இருக்கலாம் . “ இறந்தவன் நினைவுகளில் மறைந்து போபவன் ” ” இறந்தவனுக்கே இறுதி நஸ்டம் ” என்ற நியதிகளையே சமூக நிலைப்பாடுகள் மீள் உணர்துகின்றன . இவ்விடத்தில் தமது வாழ்வின் இளமையை , பொருள் பண்டம் சேகரிக்கும் காலங்களை அதே தேசியவாங்களின் பெயரில் விரையம் செய்தவர்களை இங்கு நினைவுக்கு கொண்டுவந்து அவர்களது விரக்தியை மேலும் தூண்டிடும் நோக்கோ இங்கு இல்லை . ஆனால் , நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமது விரக்திகளை உள்ளடக்கி , சுய அறிவாக்கி ஆக்க பூர்வமாக தம்மை ஈடுபடுத்துபவர்கள் , இன்றும் தேசியவாத போலிக் கர்ச்சனைகளை தமது சொகுசான வீடுகளிலிருந்து கீச்சிடும் போது எப்படி கணிப்பது ?

” முதலாளிகள் மட்டுமல்ல , தேசியம் பேசும் போலிகளும் , வண்டி வளர்க்கும் மனிதப் பண்டிகள்தான் . அதுமட்டுமல்ல , இவர்கள் யாவரும் bloody bores . ” என்று ஆங்கிலம் பேசி முடித்து தன்னை அறிவித்தாரே அந்த whatsapp ஞானி , அவர் பெயர் ஞாபகம் இல்லை . ஆயினும் அவரது குரல் சில வேளைகளில் சுயஅறிவை மேவிடுவது தவிர்க்க முடியாமலே உள்ளது . தமிழுக்காக தீ குளிப்போர் இன்று தமிழகத்தில் இல்லை . அங்கு சாதிகள் அற்றுப் போவதற்கான சான்றுகள் உள்ளன என்று வேறு தகவல்கள் . இலங்கையிலோ , சிங்களவரது ‘ அறகலையா ‘ முடிந்து ஏதோ NPP என்ற பெயரில் ஒரு மாற்றம் நடப்பதாக தகவல்கள் . தமிழ் பேசுவோர்கள் யாவரும் தொப்பிரட்டிகளாக மாறி சிங்கள தேசியவாத தலைவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தமையும் ஊர்ஜிதம் . தமிழ் பேசுவோரை அடிமைப்படுத்த போதைப் பொருட்களை விற்கும் கடைகளை சிங்கள தேசியவாதிகள் எல்லா இடங்களிலும் உருவாக்குகிறார்கள் என்ற கூக்குரலுடனேயே போதைவஸ்து கடைகள் நடத்தும் தமிழீழ வாதிகள் , தேசியம் பேசும் அரசில்வாதிகள் , அவர்களது அடிவருடிகள் , மதவாதிகள் , சாதியவாதிகள் , பொருட்களை பதுக்கி தமிழ் மக்களை சூறையாடும் தேசியக் கடைக்கார்கள் , chattering monkeys , என்ற யாவரும் ஏதோ கெட்டவர்கள் என அடையாளம் காணும் காலம் கூட தமிழ் பேசுவோரிடையே பரவுகிறது என்ற வதந்தியும்தான் எட்டுகிறது . அப்படியானால் , இன்றும் அதே வார்தைகளுடன் அதே உருவங்களுடன் தேசியம் பேசும் அந்தப் பிராணிகள் எங்கே அதிகளவில் உள்ளார்கள் ? என்ற கேள்வியே எஞ்சுவது , தற்காலிகமானதாக இருந்தாலும் ஏதோ மனச் சுகத்தையும் தான் தருகிறது .

தமிழ் அரசுக் கட்சியும் ஜேவிபியும் – அன்றும் இன்றும் முன்னாள் கழகப் போராளி அரசியல் ஆய்வாளர் யோகன் கண்ணமுத்து

தமிழ் அரசுக் கட்சியும் ஜேவிபியும் – அன்றும் இன்றும்
முன்னாள் கழகப் போராளி அரசியல் ஆய்வாளர் யோகன் கண்ணமுத்து

வாகனங்களை மீள ஒப்படைத்த மகிந்த ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்ட மூன்று வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்திற்கு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு கையளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அந்த வாகனங்களில் ஒரு எம்புலன்ஸ், ஒரு வேன் மற்றும் ஒரு கெப் வண்டி ஆகியவை அடங்கியுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிப்படுத்திய உதய கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும், பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பிலும், அப்போதைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு 2019 ஜனவரி மாதம் முதல் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி வரை 13 புலனாய்வு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகைளை வெளியிடும் இன்றைய விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

 

இந்த 13 புலனாய்வு தகவல்களும் அப்போதைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் தற்போதைய அரசாங்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் ரவி செனவிரத்னவிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது.

 

கிடைக்கப்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச புலனாய்வு தகவல்களுக்கமைய ரவி செனவிரத்ன செயற்பட்டிருந்தால் மிலேட்சத்தனமான குண்டுத்தாக்குதலை தடுத்திருக்கலாம்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழு வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களையே நான் தற்போது முன்வைக்கின்றேன்.

 

இந்த விசாரணை அறிக்கையானது, ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் மூலம் தயார் செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் முன்வைத்துள்ள 25 குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மையை அறியும் வகையில், சனல் 4இன் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் போது பொலிஸார் மற்றும் புலனாய்வுத் துறையினர் ஆகியோர் ஏதேனும் தவறிழைத்துள்ளார்களா என்பதை ஆராயும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.

 

இந்த அறிக்கையின் 40வது பக்கத்தில் ரவி செனவிரத்னவுக்கு, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி தவ்ஹித்ஜமாத் என்ற அமைப்பு கத்தோலிக்கர்களை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தப் போவதாக வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தோனேஷியாவின் எட்டாவது ஜனாதிபதியாக முன்னாள் பிரபோவோ சுபியாண்டோ !

முன்னாள் இராணுவ ஜெனரல் பிரபோவோ சுபியாண்டோ இந்தோனேஷியாவின் எட்டாவது ஜனாதிபதியாக ஞாயிற்றுக்கிழமை (20) பதவியேற்றுள்ளார்.

 

பதவியேற்பின் பின் உரையாற்றிய அவர், நாட்டைப் பாதிக்கும் ஊழல் போன்ற உள் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதாகவும், மேலும் தன்னிறைவு பெறுவதாகவும் உறுதியளித்தார்.

 

பிரபோவோவின் அமைச்சரவையில் 100 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் 48 அமைச்சகங்கள் உள்ளன.

 

இதில் ஸ்ரீ முல்யானி இந்திராவதி மீண்டும் நிதியமைச்சராகவும், பஹ்லில் லஹடாலியா எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

 

இரண்டு முறை ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பிரபோவோ இறுதியாக பிப்ரவரி தேர்தலில் இரண்டு போட்டியாளர்களுக்கு எதிராக 58% வாக்குகளைப் பெற்ற பின்னர் மிக உயர்ந்த பதவிக்கு சென்றார்.

 

73 வயதான அவர், ஒரு முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்து, உரிமை மீறல்களில் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்று, 280 மில்லியன் மக்களைக் கொண்ட நாட்டை வழிநடத்துவது வரை குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார்..? பகிரங்கப்படுத்தினார் உதய கம்மன்பில!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவி ரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தற்சமயம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமாரவின் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கரிசனை!

நாட்டில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினருக்கு அழைப்புவிடுக்கும் வகையில், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

 

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அளவுகோல்களுக்குப் புறம்பாகப் பிறப்பிக்கப்படக்கூடிய இத்தகைய கட்டளைகளால் மனித உரிமைகள் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கம் ஏற்படக்கூடும் என அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

 

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் கீழ் 2024 செப்டெம்பர் 26ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட 2403/47ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக (முன்னைய அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்ட இக்கட்டளை மாதாந்தம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. செப்டெம்பர் 24ஆம் திகதி முதல் ஒரு மாதகாலத்துக்கு இலங்கையின் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

 

இதுகுறித்து, தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வுபெற்ற) எல்.ரீ.பி.தெஹிதெனிய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இலங்கை பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தினசரி முறைப்பாடுகள் – 400 ஐ கடந்த முறைப்பாடுகள்!

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் ஆணைக்குழுவிற்கு 58 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதுவரை கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும் வன்முறை தொடர்பான முறைப்பாடுகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற 401 முறைப்பாடுகளில் 309 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அனுர குமாரவுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – சஜித் பிரேமதாச

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் ஒத்துழைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தமது கட்சி நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவதற்கான திறனில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரம் ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி வேறு கட்சியில் இருந்தும் அரசாங்க உறுப்பினர்கள் வேறு கட்சியில் இருந்தும் நாட்டுக்கு செயற்படமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதன்படி தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமான தெரிவாக, நாட்டின் அபிவிருத்திக்கான தெளிவான பார்வையுடன் கூடிய பலமான அணியொன்றை தமது அணி கொண்டிருப்பதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.