வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

யூலியன் அசான்ஜ் – மக்ஸின் குஸ்ஸிநோவ்: ஒருவருக்கு கதாநாயகன் மற்றவருக்கு துரோகி – தொடரும் சர்வதேச படுகொலைகள்!

இவ்வாரம் சர்வதேச அரசியல் சூழலில் மிக முக்கியமான வாரம். சர்வதேச அரசியலில் யார் எந்தப் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அதன் சாதக பாதகங்களும் அமையும். பல் துருவ அரசியல் வலுப்பெற்று அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் இராணுவ அரசியல் ஆளுமையின் பலம் முன்னைய நிலையிலிருந்து சற்று பலவீனப்பட்டுப் போயுள்ளதன் பின்னணியில் இவற்றைக் காணலாம்.

மேற்குலகின் முழு ஒத்துழைப்புடன் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு 53 நாடுகளும் மூன்று நிறுவனங்களும் இணைந்து தொடுத்துள்ளன. பெப்ரவரி 19இல் ஆரம்பமான இவ்வழக்கில் 76 ஆண்டுகள் பாலஸ்தீனிய மண் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டது மற்றும் பாலஸ்தீனிய மக்கள் மீதான ஆக்கிரமிப்பின் சட்டத்தன்மை பற்றியும் சர்வதேச நீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் முடிவுக்கு, இஸ்ரேவேலின் ஊழல் குற்றவாளியும் இனப்படுகொலை பிரதமருமான பென்ஜமின் நெதன்யாகு கட்டுப்படப்போவதில்லை.

ஆனாலும் இந்த இனப்படுகொலைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிவரும் அமெரிக்க, பிரித்தானிய, மேற்குலக மற்றும் ஐரோப்பிய அரசுகள் தொடர்ந்தும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் துணை போனால் அவர்கள் போட்டிருக்கும் ஜனநாயகப் போர்வை முற்றாகப் பொசுங்கிவிடும். சர்வதேசத்தில் அவர்களும்; கொலையாளிகளாகவும் காட்டான்களாகவுமே பார்க்கப்படும் நிலையுள்ளது. அதனால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் தற்போது இஸ்ரேலை சற்று கண்டிக்க ஆரம்பித்துள்ளன. யுத்த நிறுத்தம் என்பது தீண்டத்தகாத சொல்லாக இருந்த நிலைமை மாறி யுத்த நிறுத்தம் வேண்டும் என்று கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும் ஐநாவில் அல்ஜீரியாவால் கொண்டுவரப்பட்ட உடனடி யுத்த நிறுத்தத் தீர்மானத்தை மீண்டுமொரு தடவை இன்று பெப்ரவரி 20 அமெரிக்கா எதிர்த்து வாக்களித்துள்ளது. பிரித்தானியா வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

பாலஸ்தீனத்தில் 30,000 உயிர்கள், பெரும்பாலும் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்ட போதும் ஒரு இனமே அழிக்கப்பட்டு வருகின்ற போதும் மனித உரிமைகள் பற்றி மூச்சுக்காட்டாமல் இருந்த அமெரிக்க நேட்டோ அணி ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி பெப்ரவரி 17இல் சிறையில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ந்து போனது. மேற்கு நாட்டு ஊடகங்கள் அனைத்தும் ரஸ்யாவை ‘பறையா ஸ்ரேட் – paraiah state’ என்று கூப்பாடு போட்டன. பல மேற்கு நாட்டு ஊடகங்கள் இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் கொண்டுவரப்பட்ட வழக்குப் பற்றி மௌனமாக இருக்கின்றன. ஆனால் பிரேஸில் ஜனாதிபதி லூல டி சில்வா காஸாவில் நடைபெறுவது இனப்படுகொலை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எதியோப்பியாவில் நடைபெற்ற ஆபிரிக்க ஒன்றிய நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதே பிரேஸில் ஜனாதிபதி லூல இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் அன்று ஹிட்லர் யூதர்களுக்கு செய்த அநீதியை இஸ்ரேல் தற்போது பாலஸ்தீனியர்களுக்கு இழைக்கின்றது என்றும் அன்று ஹிட்லர் செய்தது ஹொலக்கோஸ்ட். இன்று இஸ்ரேல் செய்வதும் ஹொலக்கோஸட் என்றும் ஒப்பிட்டு பெப்ரவரி 19இல் கருத்து வெளியிட்டார். ஒரு கண்ணியமிக்க அரசுத் தலைவர் இஸ்ரேலை இவ்வளவு பச்சையாகச் சாடியது இதுவே முதற்தடவை. இதே கருத்துப்பட துருக்கியின் ஆட்சித் தலைவர் ஏடவானும் கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பிரேஸில் – இஸ்ரேல் ராஜதந்திர உறவுகள் அடிமட்டத்துக்குச் சென்றுள்ளது.

இந்த அமளிதுமளிகள் அரங்கேறுவதற்கு சில தினங்களுக்கு முன் சரியான திகதி இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை, ரஷ்யரான மக்ஸின் குஸ்ஸிநோவ் என்பவர் ஸ்பெயினில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவர் மீது வாகனத்தையும் ஏற்றியுள்ளனர். ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டரை ஓட்டிச்சென்ற ரஷ்யர் மக்ஸின் குஸ்ஸிநோவ் உக்ரைனில் ஓகஸ்ட் 9, 2023இல் தரையிறங்கி உக்ரைனிடம் இருந்து 500,000 டொலரை சன்மானமாகப் பெற்றார். இதனை மிகப்பெரிய தேசத்துரோகம் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்ததுடன் அதற்கான தண்டணை வழங்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். கொல்லப்பட்டவர் விளாடிமிர் புட்டினால் சுட்டிக்காட்டப்பட்ட ரஷ்ய ஹெலிகொப்டரைக் கடத்திச் சென்று கூட இருந்த இரு ரஷ்ய வீரர்களைப் படுகொலை செய்த மக்ஸின் குஸ்ஸிநோவ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு துரோகி உக்ரைனுக்கும் நேட்டோ அணிக்கும் கதாநாயகனாக இருந்து இப்போது தியாகி ஆகிவிட்டார் மக்ஸி;ன் குஸ்ஸிநோவ்.

அலெக்ஸி நவால்னி, மக்ஸின் குஸ்ஸிநோவ் ஆகியோரின் மரணங்கள் பற்றி அவர்களது மனித உரிமைகள் பற்றி நேட்டோ அணி புலம்பிக்கொண்டிருக்கையில் உலகின் மிகப் பிரபல்யமான ஊடகவியலாளரான யூலியன் அசான்ஜ் யை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவது பற்றிய வழக்கு பிரித்தானிய நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் ஊடகவியலாளர் யூலியன் அசான்ஜ்யை விடுவிக்குமாறு கோரிய போதும் அதை எதனையும் பொருட்படுத்தாமல் யூலியன் அசான்ஜை சிறையில் வைத்துள்ளது, தன்னை மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் காவலாளியாகக் காட்டிக்கொள்ளும் பிரித்தானியா.

அன்றைய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹசைனிடம் பேரழிவு ஆயதங்கள் உள்ளது என அமெரிக்காவும் – பிரித்தானியாவும் கூட்டாகச் சதி செய்து ஈராக்கைத் தாக்கி அந்நாட்டை அதன் எண்ணை வளத்தை அபகரிக்க சின்னனாபின்னமாக்கினர். ஈராக்கில் அமெரிக்க இராணுவம் அப்பாவி மக்கள் மீதும் மிக மோசமான தாக்குதல்களை நடத்தியது. இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களைச் சித்திரவதை செய்தது. இவற்றை அம்பலப்படுத்தியதற்காக தலைசிறந்த ஊடகவியலாளரான யூலியன் அசான்ஜ் மீது அமெரிக்கா தேசத் துரோகக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இவர் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அலெக்ஸி நவால்னி போல் மரணத்தைத் தழுவுவார் என யூலியன் அசான்ஜ் உடைய மனைவி அச்சம் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு யூலியன் அசான்ஜ்யை படுகொலை செய்ய அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இக்குற்றச்சாட்டை யூலியன் அசான்ஜ்க்கு நீண்டகாலம் தனது தூதரகத்தில் அடைக்கலம் கொடுத்த ஈக்குவடோரும் உறுதிப்படுத்தியுள்ளது. யூலியன் அசான்ஜ் ஒரு நாள் அலெக்ஸி நிவால்னி போன்றோ அல்லது மக்ஸின் குஸ்ஸிநோவ் போன்றே ஆகலாம் என்ற நிலையேற்பட்டுள்ளது.

மேற்குலகு விதந்துரைக்கும் மனித உரிமைகள், ஜனநாயகம் என்பதெல்லாம் அவரவர் நலன்சார்ந்ததே. “ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லையடி” என்றும் கொள்ளலாம் இல்லையேல் “படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில் என்றும் கொள்ளலாம்”.

அன்று இனவாத பிரிட்டோரியா அரசோடு இணைந்து நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதி என்று முத்திரை குத்திய பிரித்தானியா இறுதியில் அதே நெல்சன் மண்டேலாவுக்கு தன்னுடைய நாட்டிலேயே சிலை எழுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டது. பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலைக்கு செய்யப்படுவதற்கு ஒத்துழைக்கும் பிரித்தானியா எதிர்காலத்தில் பாலஸ்தீன அரசை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிரித்தானியா உலகில் மிக மோசமான குரூரமான காலனித்துவத்தை ஈவிரக்கமின்றி விஸ்தரித்த நாடு. ஆனால் அரசியல் சூழல்கள் மாற்றமடையும்போது அதற்கேற்ப மாறி தன்னுடைய குறைந்தபட்ச நன்மதிப்பை முற்றிலும் இழக்காமல் காப்பாற்றிக் கொண்டுள்ளது.

தற்போது நான்கு மாதம் கழிந்தபின் முன்வைக்கின்ற யுத்தநிறுத்தக் கோரிக்கையும் தன்னுடைய ஜனநாயகப் போர்வை பொசுங்கி தான் அம்பலப்பட்டுப் போவேன் என்ற அச்சமே. அது போல் யுலியன் அசான்ஜ் நாடுகடத்தல் வழக்கில், அவர் நாடுகடத்தப்பட்டால் உலகில் கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரத்துக்கு விழும் மிகப்பெரும் அடியாக அது அமையும். அது வரலாற்றில் பிரித்தானியாவின் நீதித்துறைக்கு ஏற்படும் மிகப்பெரும் கறையாக அமையும். ஏனைய நாடுகளும் பிரித்தானிய சட்டத்துக்கு இணங்க ஊடகவியலாளர்களை படுகொலை செய்வதை நியாயப்படுத்தும்.

‘குண்டு வீசுவதை நிறுத்துங்கள்!’, ‘குழந்தைகளை கொல்வதை நிறுத்துங்கள்!!’ சனிக்கிழமை காலை லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!


நாளை பிரித்தானிய நாட்காட்டியில் மிக முக்கியமான நாள். ‘Rememberance Day’ – ‘ஞாபகார்த்த தினம்’ உலக மாகா யுத்தம் நவம்பர் 11ம் திகதி 11 மணிக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டநாள். அதையொட்டி அந்த யுத்தத்தில் உயிரிழந்த வீரர்களை கௌரவிக்கின்ற தினம். தற்போது முதலாம் இரண்டாம் உலகப் போர்களில் மட்டுமல்ல அதன் பின்னான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் அதில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களையும் நினைவு கூருகின்ற மிக முக்கிய சடங்காக 11 / 11 மாறியுள்ளது.
இவ்வருடம் இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டவழித்து விடப்பட்ட பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இன அழிப்பு, குழந்தைகள் அழிப்பு யுத்தத்திற்கு அமெரிக்க, பிரித்தானிய அரசுகளும் இராணுவ பொருளாதார பங்களிப்புகளை வழங்கி இந்த இன அழிப்பு குழந்தைகள் அழிப்பு யுத்தத்தின் பங்காளிகளாகி உள்ளனர்.இவற்றைக் கண்டித்து: குண்டு வீசுவதை நிறுத்துங்கள்! குழந்தைகளைக் கொல்வதை நிறுத்துங்கள்!! என்று கோரி பாலஸ்தீனியர்களின் சுதந்திரத்திற்காக் குரல்கொடுக்கின்ற மாபெரும் மக்கள் போராட்டம் ஹைப்பாக்கில் இருந்து சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஆரம்பிக்க உள்ளது.

ஒடுக்குமுறையை எதிர்க்கின்ற மனிதத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் இப்போராட்டத்தில் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவது அவசியம். பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையை, பாலஸ்தீனிய குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதை கண்டிக்கத் தவறினால், அதனைத் தடுக்கத் தவறினால், அதிகாரமும் இராணுவ பலமும் உடையவர்கள் தாம் விரும்பியதை எந்த விலையைக் கொடுத்தும் அடைய முடியும் என்பது உறுதிப்படுத்தப்படுவதுடன் நாளைய எதிர்காலம் மிக மோசமானதாக்கப்பட வாய்ப்பாக அமையும்.

இனவெறிக் கருத்துக்களை விதைத்து ஏழை, நலிந்த மக்களை தரக்குறைவாக மதிப்பிடும் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் சுவலா பிரவர்மன் Rmemberance Dayயைக் காரணம் காட்டி இந்த போராட்டத்தை நிறுத்தவும் பெரு முயற்சியில் இறங்கியிருந்தார். அதனையும் மீறி மெற்றோபொலிட்டன் பொலிஸார் ஊர்வலத்தை தடை செய்ய மறுத்திருந்தனர்.

இந்த போராட்ட நாளில் ‘தமிழ் சொலிடாரிட்டி’ அமைப்பு பாலஸ்தீனியர்களின் சுதந்திரத்திற்காகக் குரல்கொடுத்து இப்போராட்டத்தில் தமிழர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்ததுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் – சமூக வலைத்தளங்களில் வெளியாகிய படங்களால் பரபரப்பு !

தமிழ்நாடு பணியாற்றும் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பெண் குழந்தைகளிடம் இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் நேற்று சிதம்பரத்தில் விசாரணை மேற் கொண்டார்.

சிதம்பரம் நடராஜர் கோயில்தீட்சிதர்கள் குழந்தை திருமணங் கள் செய்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணையில் அச்சிறுமிகளிடம் கன்னித் தன்மைபரிசோதனைக்காக, தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் கடந்த 9-ம் திகதி கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் லட்சுமி வீரராகவன் மற்றும் உறுப்பினர்கள் இளங்கோவன், பெனிட்டா, முகுந்தன், செந்தில் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தி, இதுதொடர்பான விசாரணை அறிக்கையை தங்களது தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நேற்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் சிதம்பரத்திற்கு வருகை தந்தார்.

 

நடராஜர் கோயிலுக்கு சென்று ஆதிமூலநாதர் சந்நிதி அருகே அறுபத்து மூவர் சந்தியில் பாதிக்கப்பட்ட தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ம.ராஜசேகரன் மற்றும் இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர், பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமிகளின் வீடுகளுக்கு சென்று சிறுமிகளிடமும், அவர்களது பெற்றோரி டமும் தனியாக விசாரணை மேற்கொண்டு பதிவு செய்தார். அப்போது சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கறிஞர் ஜி.சந்திர சேகரன் உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த், “இச்சம்பவத்தில் தானாக முன் வந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்துகிறது. இதுதொடர்பாக தமிழக காவல் துறை தலைவரிடம் விளக்கம் பெறப்பட்டது. தமிழக தலைமை செயலரிடமிருந்தும் அறிக்கை பெறப்பட்டது. அந்த அறிக்கை சரியா என்பதை விசாரித்தோம்.

முதலில் பாதிக்கப்பட்ட தீட்சிதர்கள், இரண்டாவதாக காவல் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், மூன்றாவதாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் என மூன்று கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவிரல் பரிசோதனை நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை.

விசாரணை அறிக்கையை ஆணைய தலைவரிடம் விரைவில் அளிக்க உள்ளேன். அந்த அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். தானாக முன்வந்து குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்துகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயில் குழந்தை திருமணம் விவகாரம் - புகைப்படங்கள் வெளியீடு

 

இவ்வாறு குழந்தை திருமணம் நடைபெறவில்லை என சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கூறியிருந்த நிலையில், திருமண படங்கள் வெளியாகி இன்றைய தினம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

செய்தி மூலம் – இந்து தமிழ், டேய்லி தந்தி

பிரித்தானிய அமைச்சரவையில் வரலாறு காணாத ராஜினாமாக்கள்! ஜெயவர்த்தனபுரவில் கோட்டா Go Home – லண்டனில் பொறிஸ் Bye Bye …!!!

இன்று இரவு வரை பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனை வெளியேறும்படி வற்புறுத்தி 43 அமைச்சர்கள், இளைய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமாச் செய்துள்ளனர். 24 மணி நேரத்தில் இவ்வளவு தொகையான அமைச்சர்கள் ராஜிநாமாச் செய்தது நவீன பிரித்தானிய அரசியல் வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். நேற்று மாலை ஆறு மணியளவில் சுகாதார அமைச்சுச் செயலாளர் சஜித் ஜாவட் ராஜிநாமாச் செய்து ஆரம்பித்து வைத்த இந்த அரசியல் நாடகத்தில் அடுத்த பத்து நிமிடங்களில் நிதியமைச்சர் ரிஷி சுனாக் ராஜிநாமாச் செய்தார். இன்று பிரித்தானியாவில் இயங்கும் அரசு இல்லாத நிலையேற்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக இவ்வாறான அரசியல் நெருக்கடி ஏற்படுகின்ற சூழலில் பிரதமர் ராஜிநாமாச் செய்வதே ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமையாக இருந்து வந்துள்ளது. ஆனால் இது எதற்கும் அசைந்து கொடுக்காமல் தடித்த தோலுடன் எவ்வித சுரணையும் இன்றி தான் தொடர்ந்தும் பதவியில் இருப்பேன் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்து இருக்கின்றார். பிரதமர் பொறிஸ்க்கு முன்னர் அப்பதவியில் இருந்த திரேசா மே, டேவிட் கெமரூன், மார்பிரட் தட்சர் கூட நெருக்கடிகள் ஏற்பட்ட போது கௌரவமாக தங்கள் பதவியை ராஜிநாமாச் செய்தனர். ஆனால் பிரதமர் பொறிஸ் பதவி விலகுவதற்கான எவ்வித சமிஞ்சையையும் வெளியிடவில்லை. மாறாக தன்னிடம் மக்களாணை இருக்கின்றது என்றும் அடுத்த தேர்தல் வரை பதவியில் இருப்பேன் என்றும் தெரிவித்து வருகின்றார்.

ஆனால் பிரித்தானிய பிரதமருக்கு மிகநெருக்கமானவரான உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் இன்று பிரதமர் பொறிஸை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது. பிரதமர் பொறிஸ்க்கு நெருக்கமான நதீம் சகாவி, கிராம் சாப் போன்ற அமைச்சர்களும் அவரை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது. தற்போது மூழ்கிக்கொண்டிருக்கும் கொன்சவேடிவ் அமைச்சரவைக் கப்பலில் இருந்து குதித்துத் தப்புவதிலேயே அமைச்சர்கள் தீவிரமாக உள்ளனர்.

கடந்தவாரம் கொன்சவேடிவ் கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 38 வாக்குகளால் தோல்வி கண்டது. ஆனால் இன்னுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் 38 பேர் கூட பிரதமர் பொறிஸ்க்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஜெயவர்த்தனபுர பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வந்தபோது ‘கோட்டா கோ ஹோம்’ என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோசம் எழுப்பினர். அதேபோல் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் பொறிஸ் கேள்வி நேரம் முடிந்து செல்லும் போது ‘bye bye … பொறிஸ்’ என்று இனிமேல் பாராளுமன்றம் வரவேண்டாம் என்று வழியனுப்பி வைத்தனர்.

இன்னும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் ஏற்படவுள்ள பிரித்தானிய பிரதமர் பதவி வெற்றிடத்திற்கு பத்து வரையான கொன்சவேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் அணி வகுத்துள்ளனர். முதலில் தன் அமைச்சுப் பதவியை ராஜநாமாச் செய்த சஜித் ஜாவட் உட்பட முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக் மற்றும் பலர் பொறிஸ்க்கு எதிரான அணியில் இருந்து போட்டியிட உள்ளனர். கல்வி அமைச்சராக இருந்து தற்போது கடந்த 24 மணிநேரம் நிதி அமைச்சராக இருக்கும் நதீம் சகாவி மற்றும் உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் உட்பட இன்னும் சிலர் பொறிஸின் வெற்றிடத்தை நிரப்ப அவர் பக்கம் இருந்து போட்டியிடுவார்கள் எனத் தெரியவருகின்றது.

பிரித்தானியாவில் அடுத்த தேர்தல் 2024 இலேயே நடைபெற வேண்டும். ஆனால் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மீது கட்சியின் அழுத்தம் மேலும் மேலும் இறுக்கமடைந்தால் பொறிஸ் ஜோன்சன் பொதுத் தேர்தலுக்கு அறிவிப்பு விடவும் வாய்ப்பு உள்ளது. அதனால் பொறிஸ் ஜோன்சனுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால் அத்தேர்தலில் வெற்றி பெற்றால் ‘போனால் மயிர். வந்தால் மலை’ என்பது தான் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கணிப்பாக இருக்கும். இன்று தூக்கத்தில் அவருடைய சிந்தனை “தோல்வியை ஏற்றுக்கொண்டு எதுவுமே இல்லாமல் வெளியேறுவதா? அல்லது அடுத்த தேர்தலை அறிவித்து மீண்டும் மக்களிடம் செல்வதா?” என்பதாகவே இருக்கும்.

இவ்வாறான ஒரு பொதுத் தேர்தல் நடந்தால் அதில் பொறிஸ் ஜோன்சன் வெல்வார் என்பதும் கேள்விக்குறி. ஏனெனில் ஏற்கனவே பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பற்றி கட்டப்பட்ட விம்பம் சுக்குநூறாகி விட்டது. ஐரோப்பாவில் இருந்து வெளியேறுவதை – பிரிக்ஸிற்றை வைத்து தேர்தலில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்ற பொறிஸ் ஜோன்சனால் ஐந்தாண்டு பதவிக்காலத்தைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை.

இந்நிலைமை இலங்கையின் அரசியலுடன் ஒப்புநொக்கக் கூடிய வகையில் உள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தை வென்று தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டபாய ராஜபக்சவால் தற்போது அரசைக் கொண்டு நடத்த முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஒரு விடயத்தை சாதித்துவிட்டோம் என்பதற்காக அதுவே காலம் பூராவும் வாக்குகளைக் குவிக்கும் என எண்ணுவது மடமை. ஆப்பிரஹாம் மாஸ்லோவின் படிநிலைத் தேவை விதிக்கமைய ஒரு தேவை நிறைவேற்றப்பட்டால் மக்கள் அத்துடன் திருப்தியடைந்து அதே நிலையில் இருக்க மாட்டார்கள். அவர்களது தேவை படிநிலையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடும். புதிய தேவையை ஆட்சியாளர்கள் பூர்த்திசெய்யாது விட்டால் மக்களின் எதிர்ப்புக்கு ஆட்சித்தலைமை உள்ளாகும். பிரித்தானியாவிலும் இலங்கையிலும் நடப்பது அதுவே.

அதுமட்டுமல்லாமல் நாடு மிகப்பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளது. அண்மைய வரலாறு காணாத விலைவீக்கம், அதனால் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கீழ்நிலையில் இருந்த வட்டிவீதம் தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. செல்வந்த நாடுகளின் கூட்டில் பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது ஸ்தம்பிதத்துக்கு வந்துவிட்டது. அதனால் பிரித்தானியா பொருளாதார நெருக்கடிநிலையை சந்தித்துள்ளது.

உக்ரைன் யுத்தத்திற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் கூடுதல் கரிசனை காட்ட அல்லது யுத்தத்தைத் தூண்டிவிட அந்நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை மறைத்து மக்களைத் திசை திருப்பும் எண்ணமும் முக்கிய காரணம். பிரித்தானிய பிரதமரின் லொக்டவுன் குடி கும்மாளம், அடுக்கடுக்காக அவர் அவிழ்த்துவிட்ட பொய்கள், உள்ளடக்கம் இல்லாமல் மிகைப்படுத்திப் பேசுவது, இறுதியாக பாலியல் குற்றங்கள், துஸ்பிரயோகங்கள் செய்தவர்களைக் கண்டுகொள்ளாமல் அவை பற்றித் தெரிந்திருந்தும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அமைய பதவி உயர்வுகள் வழங்கியது, பின் அவற்றை மறைக்க பொய்புரட்டுக்களை அவிழ்த்துவிட்டது என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் உள்நாட்டில் தங்கள் இருப்பைத் தக்க வைக்க உக்ரெய்னில் உக்கிரமான யுத்தத்தை நடத்தி வந்த போதிலும்; உள்நாட்டில் அவர்களுக்குள்ள நெருக்கடியை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. இத்தலைவர்களின் கயமைக்கு உக்ரெய்ன் மற்றும் பிரித்தானிய அமெரிக்க மக்கள் விலையைச் செலுத்துகின்றனர்.

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் கௌரவமாகப் பதவி விலகுவாரா? இல்லையேல் அவர் பலாத்காரமாக கட்சியினால் வெளியேற்றப்படுவாரா? இல்லையேல் அவர் பொதுத் தேர்தலை அறிவிப்பாரா என்பது இன்றும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் தெரியவரும். பொருளாதாரம் அரசியல் கற்போருக்கு அதனை அவதானித்து வருவோருக்கு இதுவொரு உலக ஆய்வுகூடம்.

முன்னைய செய்தி : https://www.thesamnet.co.uk//?p=86949

பிரித்தானியாவின் முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா! ஜனாதிபதி கோட்டாவுக்கு முன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நிரந்தரமாகவே வீட்டுக்குப் போக வேண்டி வரலாம்!!

சில மணிநேரங்களுக்கு முன்பாக குறிப்பாக பிரித்தானிய July 05, நேரம் மாலை ஆறுமணி இரு நிமிடங்கள் அளவில் பிரித்தானிய சுகாதாரத்துறைச் செயலாளர் சஜித் ஜாவட் அமைச்சுப் பதவியில் இருந்து ராஜிநாமாச் செய்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த பத்து நிமிடங்களில் பிரித்தானிய சான்சிலர் ஒப் எஸ்செக்கர் என்றழைக்கப்படும் நிதியமைச்சர் ரிஷி சுனாக் பதவி விலகினார். பிரித்தானியாவின் மிக முக்கியத்துவமான இரு அமைச்சர்கள் பத்து நிமிட இடைவெளியில் பதவி விலகியுள்ளனர்.

“அரசாங்கம் சரியாகவும் தகமையுடனும் கனதியுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதற்கு தகுதியுடையவர்கள்” என்றும் இந்த அடிப்படைகளுக்காக போராடுவது அவசியம் என்பதால் தான் பதவி விலகுவதாக ரிஷி சுனாக் தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

“பணிவு, பற்றிக் கொள்ளல், புதிய பாதை என்பனவே கடந்த மாதம் பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் அடிப்படை. ஆனால் கவலைக்குரிய விடயம் அது உங்கள் தலைமையில் சாத்தியமில்லை. அதனால் அமைச்சுப் பொறுப்பை ராஜிநாமாச் செய்கின்றேன்” என்று சுகாதார அமைச்சர் சஜித் ஜாவட் தெரிவித்து இருந்தார்.

பிரித்தானிய பிரதமரின் நேர்மையற்ற, ஓழுக்கமற்ற போக்குகள் நாட்டை முடக்கத்தில் போட்டுவிட்டு அரசு குடித்து கும்மதாளம் போட்டது போன்ற விடயங்கள் அண்மைக்காலமாக பெரும் நெருக்கடியை பிரித்தானிய அரசியலில் ஏற்படுத்தி இருந்தது. இவ்வாறான நெருக்கடிகளின் போதெல்லாம் உண்மைக்குப் புறம்பாக எல்லாவற்றையும் மூடி மறைத்து பொய்யை உண்மையாகவே சொல்லும் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், உண்மைகள் அம்பலத்துக்கு வந்ததும் அதனை வெறும் கண்துடைப்புக்காக ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோருவார். இது ஒன்றல்ல இரண்டல்ல பல தடவைகள் நடந்தேறி பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நம்பத்தகுதியற்ற ஒருவராக ஆனார்.

இதைவிட பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் ஆளும் கன்சவேடிவ் கட்சிக்குள் பாலியல் வல்லுறவு துன்புறுத்தல் சம்பவங்கள் மிகவும் சாதாரணமாக இடம்பெற்று வந்தது. இவ்வாறான கயவர்களுக்கு எதிராக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் எவ்வித இறுக்கமான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.

இந்நிலையில் கிறிஸ் பின்சர் கொன்சவேடிவ் கட்சியின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு பொறுப்பான உதவித் தலைவராக நியமிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் கிரிஸ் பின்சர் பாலியல் தொந்தரவு பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருபவர் என்ற குற்றச்சாட்டு ஏழுந்திருந்தும் பிரதமர் உடன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கடுமையான அழுத்தங்கள் வரவே விசாரணைகள் முடியும் வரை கிரிஸ் பின்சர் பாராளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலத்தி வைக்கப்பட்டார்.

ஆனால் தற்போது அமைச்சர்கள் பதவி விலகுகின்ற அளவுக்கு போனதற்குக் காரணம், பிரித்தானிய பிரதமர் தெரிவித்த இன்னுமொரு பொய். அதாவது கிரிஸ் பின்சரை இந்த முக்கிய பதவியில் அமர்த்துகின்ற போது அவர் ஒரு பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர் என்ற விடயம் தனக்கு தெரியாது என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்து இருந்தார். ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரே பிரதமருக்கு தனக்கு ஏற்பட்ட பாதிப்பை எடுத்துக் கூறியிருக்கின்றார். தற்போது எல்லாம் அம்பலமானதும் பிரதமர் பொறிஸ் தனது நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோரி இருக்கின்றார்.

ஏற்கனவே குடியும் கும்மாளமும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கி இருக்கையில், கிறிஸ் பின்சர் விவகாரமும் அதனைத் தொடர்ந்து முக்கிய அமைச்சர்கள் ராஜிநாமாச் செய்ததும் பிரித்தானிய அரசியலில் பெரும் நெருக்கடி நிலையைத் தோற்றுவித்துள்ளது. கொன்சவேடிவ் கட்சிக்குள் தலைமைத்துவப் போட்டி இடம்பெற்றால் சஜித் ஜாவட் உம் ரிஷி சுனாக் கும் களமிறங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் தங்களை அடுத்த தலைமைத்துவப் போட்டிக்கு தயார்படுத்தவே பதவி விலகியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.

பிரித்தானிய பிரதமரின் முடிவின் ஆரம்பம்! நம்பிக்கையிலாப் பிரேரணையில் தற்போது தப்பித்துக்கொண்டார் பிரதமர் பொறிஸ்!!!

இன்று யூன் ஆறாம் திகதி சில நிமிடங்களுக்கு முன் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் தப்பித்துக்கொண்டார். ஆனால் அவருடைய எதிர்காலம் மிகக் குறுகியதாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது. ஆளும் கொன்சவேடிவ் கட்சியின் 359 பாராளுமன்ற உறுப்பினர்களில் 211 கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 148 கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது தங்களுக்கு நம்பிக்கையிலை என வாக்களித்தனர். ஆட்சியில் உள்ள தங்களுடைய பிரதமருக்கு எதிராக அவர்களுடைய கட்சி உறுப்பினர்களே நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததால் அக்கட்சியை தலைமை தாங்குவதில் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பெரும் சவால்களை எதிர்கொள்ள உள்ளார்.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பொறுப்பற்ற தலைமைத்துவம் அவருடைய குடியும் கும்மாளமும் பற்றி தேசம்நெற் தொடர்ச்சியாக விமர்சித்துவந்ததுடன் வாக்காளர்களிடம் நம்பிக்கையிழந்து வந்ததை சுட்டிக்காட்டி இருந்தோம். இன்று பிரதமர் 32 வாக்குகளால் பதவியை தக்க வைத்துக்கொண்டார். ஆனால் நீண்டகாலத்திற்கு இவரால் பதவியில் நீடிப்பது மிகக் கடினமாக இருக்கும். மே 6ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சித் தேரதலில் ஆளும் கொன்சவேடிவ் கட்சி கணிசமான ஆசனங்களை இழந்ததால் பொறிஸ் ஜோன்சன் தலைமையில் அடுத்த தேர்தலை எதிர்கொண்டால் தாங்கள் தோற்றுப் போவோம் என பல கட்சி உறுப்பினர்களும் கருதுவது தான் அவர்கள் இவ்வாறான சடுதியான தாக்குதலை நடத்த காரணமாக இருந்தது.

இன்னும் இரு வாரங்களில் இரு இடைத்தேர்தல்கள் வருகின்றது. இத்தேர்தல் முடிவுகள் கட்சிக்கு எதிரானதாக மாறினால் பொறிஸ் ஜோன்சனின் எதிர்காலம் இன்னும் ஆபத்தானதாகும்.

முன்னாள் பிரதமர் திரேசா மே மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அவர் பெற்ற நம்பிக்கை வாக்குளிலும் குறைவான வாக்குகளையே பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இப்போதைய நம்பிக்கையிலாப் பிரேரணையில் பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் தெரேசா மே நம்பிக்கை வாக்குகளைப் பெற்ற போதும் கணிசமான எதிர்ப்பின் காரணமாக அவரால் தொடர்ந்தும் பிரதமராக செயற்பட இயலாமல் போனமையினால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஏழு மாதங்களில் பதவியை இராஜிநாமச் செய்தார். பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அவ்வாறு பதவியை இராஜினாமாச் செய்யும் இயல்புடையவரல்ல. ஆனாலும் அவருடைய எதிர்காலம் முடிவை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது என்றே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

பாராளுமன்ற ஜனநாயகத்தின் தாயாக தன்னை முன்னிலைப்படுத்தும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களுக்கு பிரதமர் பொய் சொல்லி இருக்கின்றார். லொக்டவுன் அறிவித்து நாட்டுமக்களை வீட்டுக்குள் இருக்கச்செய்ய விதிமுறைகளை அறிவித்து விட்டு அந்த விதிமுறைகளை மீறி பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லாமான 10 டவுனிங் ஸ்ரீற்றில் அதிகாலை மூன்றுமணிவரை கூத்தும் கும்மாளமும் என்று இருபது தடவைகள் பார்ட்டி நடந்துள்ளது. அவ்வாறு நடக்கவில்லை என்று பாராளுமன்றத்தில் பொறிஸ் பொய்யுரைத்தார். இதனை ஆதாரங்களுடன் வெளிப்படுத்த ஸ்கொட்லண்ட் யாட் பிரதமருக்கும் பார்ட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் எதிராக அபராதாம் விதித்தது. சூ கிரேயின் சுயாதீனா விசாரணை அறிக்கையும் பல விடயங்களை அம்பலப்படுத்தியது தெரிந்ததே.

உக்ரைனுக்காகக் குரல்கொடுத்ததுஇ உக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்கியது, உக்ரைன்னுக்கு பறந்து சென்றதெல்லாம் லண்டனில் தனது இருப்பை தக்க வைக்கவே. பெரியளவிலான எரிபொருள் கொடுப்பனவை வழங்க முன் வந்ததும் தனது பொட்டுக்கேடுகளை மறைக்கவே.அது போதாது என்று தானே அறிமுகப்படுத்திய அமைச்சர்களுக்கான கட்டுப்பாட்டு விதிகளையும் கிழித்தெறிந்தார். அதாவது அமைச்சர்கள் தவறுவிட்டால் பதவிவிலகவேண்டும் என்ற விதியை நீக்கிவிட்டார். தனது தவறுகளுக்காக தான் பதவி விலகவேண்டி வரும் என்பதால். போறிஸ் ஜோன்சனாக இருந்தாலும் முழப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க முடியுமா?

உக்ரைன், ரஷ்யாவோடு உடன்பாட்டை எட்டுவது அல்லது சரணடைவதே அறிவுபூர்வமானது!

பாறாங்கல்லை தலையால் அடித்து உடைப்பது ஒன்றும் கெட்டித்தனமான காரியம் அல்ல. அப்படிச் செய்ய நினைப்பது முட்டாள்தனமானது. இந்த முட்டாள் தனத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் செய்து அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை நிரூபித்துச் சென்றனர். சாட்சிக் காரனின் காலில் வீழ்வதைக் காட்டிலும் சண்டைக்காரனின் காலில் வீழ்ந்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதே புத்திக் கூர்மையுடையவர்கள் செய்யக் கூடியது. இதில் நியாயம், நீதி, தர்மம் எல்லாம் எங்கட பக்கம் இருக்கு என்று கதை சொல்லிக் கொண்டிருக்கவும் கேட்கவும் நல்லாத்தான் இருக்கும் ஆனால் அதனால் எந்தப் பிரயோசனமும் கிடையாது.

நாங்கள் இந்த ஹோமோ சப்பிபயன்ஸ் சப்பியன்ஸ் கள், எங்களுடைய முதாதையர்களை கொன்றொழித்தே இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். சார்ள்ஸ் டாவினின் ‘தக்கன பிழைக்கும்’ என்ற விதி இன்றைக்கும் மிகப்பொருத்தமானதே. சார்ள்ஸ் டார்வின் நியாயம் பிழைக்கும், நீதி பிழைக்கும், தர்மம் பிழைக்கும் என்றெல்லாம் ரீல் விடவில்லை. ‘செர்வைவல் ஒப் தி பிற்றஸ்ற்’ என்று தான் சொல்லி இருக்கின்றார். அந்தந்தச் சூழலில் தன்னை தக்கவைத்து இனவிருத்தி செய்யக் கூடிய இனங்களே தங்களை தக்க வைத்துக்கொள்ளும் என்பதே கூர்ப்புக் கொள்கை. இதனையே ‘ஆலமரமும் நாணல் புல்லும்’ கதையில் சிறு வயதில் படித்துக்கொண்டோம். அது தமிழர்களுக்கும் பொருந்தும் உக்ரேனியர்களுக்கும் பொருந்தும்.

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின்னணிக்கு வருவதற்கு முன் ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பானது மிக மோசமானது. மிலேச்சத்தனமானது. அப்பாவி உக்ரைன் மக்களின் நாளாந்த வாழ்வியலைத் தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பும் யுத்தமும் மிகப் பாரிய மனித அவலத்திற்கு இட்டுச் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உக்ரைன் மக்களின் பக்கம் நீதி, நியாயம், தர்மம் எல்லாம் இருக்கின்றது. ஆனால் யுத்தம் தொடர்ந்தால் அவர்களைக் காப்பாற்ற எந்தக் கடவுளரும் வர மாட்டார்கள். உக்ரைனை உசுப்பி விடும் அமெரிக்கா – பிரித்தானியா உட்பட்ட நேட்டோ நாடுகளும் வரமாட்டார்கள். அவர்களால் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவையே நிறுத்த முடியவில்லை. தங்களுடைய எரிபொருள் தேவைக்கு ரஷ்யாவிலேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில் ‘அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது’ போலாகிவிட்டது உக்ரைனுக்கு. இது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடக்கும் யுத்தம் அல்ல. இது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் நடக்கின்ற யுத்தம். அதற்கு உக்ரைன் களப்பலியாகி உள்ளது.

பெப்பரவரி; 21: ரஷ்யாவின் ஆட்சித் தலைவர் விளாடிமீர் பூட்டின் மேற்குலகின் பின்னணியில் இருக்கும் உக்ரைனின் கிழக்குப் பிராந்திய பிரதேசங்களான டொனேற்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிரதேசங்களை தனிநாடாக அங்கீகரித்தார்.

பெப்பரவரி 22 ரஷ்ய மக்களுக்கு ஆற்றிய ஒரு மணிநேர நீண்ட தொலைக்காட்சி உரையில் டொனேற்ஸ்க் மக்கள் குடியரசு லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றின் இறையான்மையை அங்கீகரிப்பதாக ரஷ்யத் தலைவர் அறிவிதார். அத்தோடு ரஷ்யாவுக்கு வெளியே நாட்டுப்படைகளை பயன்படுத்துவதற்கு ரஷ்ய பாராளுமன்றம் அங்கீகரித்தது.

பெப்ரவரி 23: உக்ரைன் நாடுதழுவிய அவசரகாலச் சட்டத்தை அறிவித்தது.

பெப்ரவரி 24: ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்தன. பெப்ரவரி 16 அன்று ரஷ்ய படைகள் உக்ரைனை ஆக்கிரமிக்கும் என மேற்கு நாட்டு உளவு ஸ்தாபனங்கள் கணிப்புகளை வெளியிட்டு இருந்தன.அதற்கு ஒரு வாரம் களித்து ரஷ்யா தனது தாக்குதலை ஆரம்பித்தது. இதனை ஒரு விசேட இராணுவ நடவடிக்கையாக ரஷ்யா அறிவித்தது. உக்ரைன் மீது படையெடுப்பு அல்லது ஆக்கிரமிப்பு என்ற பதங்கள் தற்போது ரஷ்யாவில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்ரை மீது படையெடுக்கும் என உக்ரைன் அரசோ உக்ரைன் மக்களோ எதிர்பார்க்கவில்லை. தங்களை மிரட்டுவதற்காகவே ரஷ்யா கடந்த எட்டு ஆண்டுகளாக தங்கள் எல்லைகளில் படைகளை குவித்து வருவதாகத் தெரிவித்து வந்தனர். ரஷ்யப் படைகள் உக்ரைனுள் நுழைவதற்கு சில தினங்கள் முன்பாகவும் உக்ரைனின் நாளாந்த வாழ்வு அவ்வளவு பதட்டத்துடன் காணப்படவில்லை. ஆனால் லண்டன், பாரிஸ், நியூயோர்க் நகரங்கள் மிகுந்த பதட்டத்துடனேயே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் இந்நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகளை சரிக்கட்டுவதற்கு அவர்களுக்கு உக்ரைன் மீது ரஷ்யப் படையெடுப்பு மிக வாய்ப்பானதாக அமைந்தது.

பிரித்தானிய பிரதமரின் வீட்டுக்கு வர்ணம் அடிக்க நிதியயை வழங்கியவருக்கு அரச ஒப்பந்தம் ஒன்று வழங்குவது பற்றியும் பேசப்பட்டு இருந்தது. அத்தோடு கோவிட் லொக் டவுன் காலத்தில் தனது உத்தியோக பூர்வ வாசஸ்தலமான நம்பர் ரென் டவுனிங் ஸ்ரீற்றில் 17 வரையான குடியும் கும்மாளமும் இடம்பெற்றிருந்தது. இதில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் கலந்துகொண்டிருந்தார். அதற்கு எதிரான விசாரணைகள் முடக்கி விடப்பட்டு பொறிஸ் ஜோன்சன் அம்பலப்பட்டு இருந்த சமயத்திலேயே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கப் போகின்றது என்ற துருப்புச் சீட்டை பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வீசி தன் இருப்பை தக்க வைத்துக்கொண்டார்.

அதே போல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனாலும் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியை அவரால் தக்க வைக்க முடியாத நிலையில் இருந்தார். பொருளாதாரப் பிரச்சினைகள் அதனைத் தொடர்ந்து அவருக்கான அதரவும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தது. மேலும் அடுத்த தேர்தலிலும் அவர் டொனால் ட்ரம்மை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சமும் அவருக்கு இருந்தது. வழமையாக உள்நாட்டில் தங்கள் செல்வாக்குகள் சரியும் போது அதனை நிமிர்த்துவதற்கு அமெரிக்க, பிரித்தானிய தலைவர்களுக்கு ஒரு யுத்தம் தேவைப்படும். இத்தடவை இவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் பூட்டின் நல்ல வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பு ரஷ்யாவுக்கு எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் ஜோ பைடனுக்கும் பொறிஸ் ஜோன்சனுக்கும் சுக்கிரன் உச்சத்தில்.

உலக இயக்கம் என்பது கள்ளன் – பொலிஸ் விளையாட்டுப் போன்று அவ்வளவு கருப்பு – வெள்ளை அளவுக்கு தெளிவான வேறுபாடுடையது அல்ல. இப்பொழுதெல்லாம் இந்த மேற்குலக ஆங்கில ஊடகங்களில் ரஷ்யாவை ‘பறையா ஸ்ரேற் – Pariah State’ என்ற அடைமொழியோடே அழைக்கின்றனர். ‘பறையா – Pariah’ என்பது தமிழில் இருந்து ஆங்கில மொழியால் தத்தெடுக்கப்பட்ட சொல். இந்தியாவில் தீண்டத்தகாதவர்களாகக் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு சாதியயைக் குறிக்கின்ற இச்சொல்லையே இவர்கள் தங்களுக்கு எதிரானவர்களை கேவலப்படுத்தும் நோக்கத்தோடு பயன்படுத்துகின்றனர். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் வெளியார் தீண்டத்தகாதோர் என்போரை குறிப்பிட்டு பயன்படுத்தப்படும் இச்சொல்லை தற்போது விளாடிமீர்பூட்டினுக்கும் ரஷ்ய அரசுக்கும் எதிராக மேற்குலகம் பிரச்சாரப்படுத்தி வருகின்றது. சாதியம் இன்னும் கொழுந்துவிட்டெரியும் தெற்காசியப் பிராந்தியத்தில் இவ்வாறான சாதிய அடைமொழிகள் குறிப்பிட்ட சமூகங்களின் மீதான அழுத்தங்களை இன்னும் பல ஆண்டுகளுக்கு மேலும் ஒடுக்குவதற்கே உதவியாக அமையும்.

இதுவரை யாரும் செய்யாத அநீதியை ரஷ்யா செய்துவிட்டது போன்று மேற்கு நாடுகளும் மேற்கு நாட்டு ஊடகங்களும் ஒப்பாரி வைக்கின்றன. உண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் முடிவுகளை மீறி தம் இஸ்டத்திற்கு எந்த நாட்டின் மீதும் படையெடுக்கலாம் எந்த நாட்டின் ஆட்சியையும் வீழ்த்தி தங்களுக்கு சாதகமான ஆட்சியை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தை உலகிற்கு வழங்கியதே அமெரிக்காவும் பிரித்தானியாவும் இவற்றினது ஜால்ரா கோஸ்டியும் தான். ஈராக், அப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் இந்த மேற்கு நாடுகள் புரிந்த யுத்தக் குற்றங்கள் பல லட்சங்கள், கோடிகள். இவர்கள் தங்களது பிரச்சினை என்று வருகின்ற போது ஜனநாயகம் பற்றியோ மனித உரிமை பற்றியோ சுயாதீன ஊடகங்கள் பற்றியோ மூச்சுவிடுவதில்லை. ஈராக் யுத்தத்திற்கு எதிராக ஒரு மில்லியன் பிரித்தானியர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். மேற்குலக யுத்த வெறியர்களான ஜோர்ஜ் புஷ்சோ ரொனி பிளேயரோ அதற்கு செவிசாய்க்கவில்லை. இவர்களின் யுத்தக் குற்றங்களை அம்பலப்படுத்திய எட்வேர்ட் சுனோடன், யூலியன் அசான்ஜ் ஆகியோரை பிரித்தானியாவும் அமெரிக்காவும் அவர்களுக்கு மரணத்தை வழங்கத் துடித்துக்கொண்டுள்ளனர். எதற்காக? குவான்டனாமோ பேயிலும் ஈராக்கிலும் சிறைக்கைதிகளை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்திய தகவல்களை அம்பலப்படுத்தியதற்காக.

ஆனால் இப்போது எந்தவொரு ஜனநாயக நாடும் இன்னொரு நாட்டின் மீது படையெடுக்குமா? மனித உரிமைகள் மீறப்படுகின்றது யுத்தக் குற்றங்கள் நிகழ்கின்றது, ஊடக சுதந்திரம் இல்லை என்றெல்லாம் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் உக்ரேனியர்களின் கைகளில் ஆயதங்களைக் குவிக்கின்றனர். அதனை மேற்கு நாட்டு ஊடகங்கள் கொண்டாடுகின்றனர். சாதாரணர்களின் கைகளில் சக்தி வாய்ந்த ஆயதங்கள் வழங்கப்படுவதன் மூலம் இவ்வாயுதங்கள் தகாதவர்களின் காடையர்களின் கைகளையும் அடைந்துள்ளது. அங்கு களவு, கொள்ளை, தனிப்பட்ட பழிவாங்கல்களிலும் இவ்வாயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றது. இன்னும் சில வாரங்களில் உக்ரைன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் வாரி வழங்கப்பட்ட இந்த ஆயதங்களும் மேற்குலகம் அங்கு தொடர்ச்சியாக விநியோகிக்கும் ஆயதங்களும் உக்ரைனின் எதிர்காலத்தை இருளாக்கும் என்பது மட்டும் உறுதியாகி வருகின்றது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான பிரச்சினை இவ்வாறு யுத்த மூலம் வன்முறையால் தீர்க்கப்பட முடியாதது. உக்ரைன் ரஷ்யாவோடு நல்லுறவாக இருந்த காலப்பகுதியில் மட்டுமே உக்ரைனால் பொருளாதார வளர்ச்சியை அடைய முடிந்தது. 50 மில்லியன் மக்களைக் கொண்ட உக்ரைனில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வீதமாக உள்ளது. இளம்தலைமுறையினரால் முந்தைய தலைமுறையினரை பராமரிப்பதற்கான செலவை (வரியை) ஈட்ட முடியவில்லை. இளம் தலைமுறையினர் உக்ரைனை விட்டு வேகமாக வெளியேறி வருக்னிறனர். இவர்களது முதலாவது இலக்காக ரஷ்யாவே இருக்கின்றது. மேலும் உக்ரைனின் 17 வீதமானவர்கள் ரஷ்யர்கள்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பானது மிகத்தவறான அணுகுமுறையே. ஆனாலும் அந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மீது வைக்கின்ற எந்தவொரு அருகதையும் மேற்கு நாட்டு தலைமைகளுக்கு கிடையாது. இவர்கள் சர்வதேச ரீதியாக மேற்கொண்டு வரும் அடாவடித்தனங்கள் விளாடிமீர்பூட்டினது அடாவடித்தனங்களிலும் பார்க்க எவ்விதத்திலும் குறைந்தது அல்ல. உண்மையில் சொல்லப் போனால் மேற்கு நாட்டு தலைமைகள் மேற்கொள்ளும் அடாவடித்தனங்கள் அராஜகங்கள் விளாடிமீர்பூட்டினைக் காட்டிலும் மோசமானது. இந்த மேற்கு நாட்டு தலைமைகளின் பூரண ஆதரவுடனேயே இஸ்ரேல் பாலஸ்தீனர்களை வகைதொகையின்றி கொன்றொழிக்கின்றனர். சவுதிய அராபிய யேர்மன் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டை சின்னாபின்னாமாக்கி வருகின்றது. பர்மிய அரசு ரொஹிஞ்சா மக்களைக் கொன்றொழித்த போது இந்த மேற்கு நாட்டு அரசுகள் எல்லாம் பர்மிய அரசோடு வியாபாரத்தில் ஈடுபட்டுத்தானே இருந்தனர். இப்போது உக்ரைன் மீது தாக்குதல் நடப்பதற்கு முன்னமே இந்த நேட்டோ அணிகள் உரு வந்தது போல் ஜிங்கு ஜிங்கு என்று ஆடுகிறார்கள்.

சோழியன் குடுமி சும்மா ஆடுமா? 1949 இல் 12 நாடுகள்: அமெரிக்கா, பிரித்தானியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லண்ட், இத்தாலி, லக்ஸ்சம்பேர்க், நெதர்லாந், நோர்வே போரத்துக்கல் ஆகியன இணைந்து நேட்டோவை உருவாக்கின. 1997 இல் இந்த நேட்டோ விஸ்தரிப்பு ரஷ்யாவின் எல்லையை நெருங்கியது. ஹங்கேரி, செக் ரிபப்ளிக், போலந்த், பல்கேரியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவெனியா, ரொமேனியா, சுலொவேனியா, அல்பானியா, குரொவேசியா ஆகிய ரஷ்யாவின் எல்லை நாடுகள் அல்லது எல்லையை அண்மித்த நாடுகள் நேட்டோவோடு இணைக்கப்பட்டு நேட்டோ விஸ்தரிக்கப்பட்டது.

இந்நாடுகள் சுதந்திரமான இறைமையுள்ள நாடுகள் தான். தாங்கள் யாராடு இணையலாம் என்பதை தீர்மானிக்கும் உரிமை இந்நாடுகளுக்கு உள்ளது என்பது உண்மையே. அப்படியானால் அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் ரஷ்ய சார்பான கியூபாவில் ரஷ்யா ஏன் படைத்தளத்தை உருவாக்க முமயாது. ரஷ்யாவின் நட்பு நாடான லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுவெலாவில் ரஷ்யா ஏன் தனது இராணுவத்தளத்தை நிறுவ முடியாது. நேட்டோ அணிகள் அதனை அனுமதிக்கத் தயாரா. இந்த விடயத்தில் சீனா மிகத் தெளிவாக அறிவித்துள்ளது. பிராந்திய பாதுகாப்புப் பற்றிய ரஷ்யாவின் விசனத்தில் நியாயம் இருப்பதை சீனா வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளது. நேட்டோவின் பொருளாதாரத் தடைகளை தாங்கள் பின்பற்றப் போவதில்லை என்பதோடு ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளை சீனா வலுப்படுத்தி உள்ளது. இந்தியாவும் தாங்கள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

மேற்கு நாடுகளின் சர்வதேச ரவுடித்தனத்திற்கு ரஷ்ய – உக்ரைன் (நேட்டோ) மோதல் முடிவு கட்டும். இதுவரை சர்வதேச வர்த்தகம் டொலரிலேயே இடம்பெற்று வந்ததால் அமெரிக்கா யார் மீதும் பொருளாதார தடையைக் கொண்டுவந்து ஆட்டிப்படைக்கலாம் என நினைக்கின்றது. ஆனால் எதிர்காலத்தில் அதற்கு மாற்றீடாக சீனா தனது நாணயத்தை சர்வதேச வர்த்தகத்திற்கு பயன்படுத்த ஆரம்பிக்கும். அதன் முதல் எத்தனிப்பு ரஷ்யா – சீனா வர்த்தகமாக அமையும். BRICS – பிரிக்ஸ் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா நாடுகள் தங்கள் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதன் மூலமும் விஸ்தரிப்பதன் மூலமும் உலக சந்தையை இவர்களால் எதிர்காலத்தில் கட்டுப்படுத்த முடியும்.

இன்று மேற்கு நாட்டு நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவுடனான தங்கள் உறவை நான் முந்தி நீ முந்தி என்று துண்டித்து வருகின்றன. இதுவொன்றும் உக்ரைன் மக்கள் மீதான அனுதாபத்தில் கிடையாது. எங்கே தங்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு தங்கள் நிறுவனத்தின் பெயர் பாதிக்கப்பட்டால் பின் தங்களுடைய நிலைமை அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாகிவிடக்கூடாது என்ற ஒரு தற்காப்பு உத்தியே. புpரச்சினைகள் மெல்லத் தணிய கள்ளக் காதலியிடம் போவது போல் சத்தமில்லாமல் மீண்டும் போய் கடைவிரித்து விடுவார்கள். இந்நிறுவனங்களால் ரஷ்யாவுக்கு எவ்வளவு பெரிய நன்மைகள் கிடையாது. இந்நிறுவனங்கள் பெரும்பாலும் ரஷ்யாவின் நடுத்தர வர்க்கத்தை குஷிப்படுத்தும் பொருட்களையே விற்பனை செய்கின்றன. ஒரு வகையில் ரஷ்யாவின் செல்வத்தை இவர்கள் வெளியே கொண்டு செல்கின்றனர். ஆனால் இதற்கு மாற்றீடான பொருட்கள் ரஷ்யாவிலோ ஆசியாவிலோ உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் ரஷ்யா எரிவாயுவை பெற்றோலை நிறுத்தினால் நேட்டோ அணி நாடுகளில் அடுப்பு எரிப்பதே போராட்டமாகும். இதுவரை மின்சாரத்திற்கும் எரிவாயுவிற்கும் காலாண்டுக்கு 300 பவுண்கள் செலுத்தி வந்தனான் இப்போது மாதத்திற்கு 300 பவுண்கள் செலுத்த வேண்டியுள்ளது. ஈராண்டுகளுக்கு முன் பெற்றோலுக்கு லீற்றருக்கு ஒரு பவுண் செலுத்தியது இன்னும் சில மாதங்களில் லீற்றருக்கு இரு பவுண்களாகிவிடும் அபாயம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவில் ஏற்பட்ட வறட்சியால் கோதுமை விலையேறி பாணிண் விலையேறியது. உலகின் பாண் கூடையாக கருதப்படுவது ரஷ்யாவும் உக்ரைனும். இவர்களே 30 வீதமான கோதுமையை உலகிற்கு வழங்குகின்றனர். ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு அடுத்ததாக பெரிய நாடு உக்ரைன் அதுவும் இப்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
நேட்டோ அணிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் நாளை நெருங்கிக் கொண்டுள்ளனர். இன்றைய வரைக்கும் ஈரானோடும் வெனிசுவெலாவோடும் வம்பிளித்துக்கொண்டு இருந்தவர்கள் இப்பொழுது ஈரானிடமும் வெனிசுவெலாவிடமும் மடிப்பிச்சைக்கு போய் நிற்கப் போகின்றனர். பெற்றோல் பிச்சை.

மூக்குக்கு அணியும் மாக்ஸ், வைத்தியர்களுக்கான பாதுகாப்பு கவசம் இல்லாமல் தங்கள் சொந்த மக்களையே ஆயிரக்கணக்கில் மரணிக்க விட்டவர்கள் இன்றும் நூற்றுக்கணக்கில் மரணித்துக் கொண்டிருப்பதைப் பற்றி அக்கறையற்றவர்கள் லாபத்தை மட்டுமே சுவாசிக்க விரும்பும் இந்த முதலைகளின் நீலக்கண்ணீரில் மயங்காமல் உக்ரைன், ரஷ்யாவோடு உடன்பாட்டை எட்டுவது அல்லது சரணடைவதே அறிவுபூர்வமானது!

ஈயுனிஸ் மணித்தியாலத்திற்கு 125 கி மீ வேகத்தில் பிரித்தானியா மீது தாக்குதல்! மூவர் பலி!! ரஷ்யா அல்ல இயற்கை!!!

பிரித்தானியாவும் – அமெரிக்காவும் உக்ரைனில் ரஷ்யப் படையெடுப்பிற்கு சகுனம் பார்த்துக்கொண்டிருக்க இன்று காலை முதல் ஈயுனிஸ் புயல்காற்று மணித்தியாலத்திற்கு 125 கிமீ வேகத்தில் பிரித்தானியாவை தாக்கிக் கொண்டுள்ளது. இச்செய்தி எழுதப்படும் வரை லண்டன், இங்கிலாந்து, வட அயர்லாந்து ஆகிய பிரதேசங்களில் மூவர் கொல்லப்பட்டு உள்ளனர். தலைநகர் லண்டனில் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரிகள் வீசப்பட்டு நிலத்தில் வீழ்த்தப்பட்டனர். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஈயுனிஸின் தாக்குதல் மோசமாக இருந்தது. மூன்று தசாப்தங்களுக்குப் பின் ஏற்பட்ட மிகப்பெரும் புயலாக ஈயுனிஸ் வர்ணிக்கப்படுகின்றது. அதிவேக வீதிகளில் பயணித்த இரு பெரும் லொறிகள் அருகருகே புரட்டிப் போடப்பட்டது. ஈயுனிஸ் புயல்காற்று மணிக்கு 70கிமீ முதல் 122 கிமீ வேகத்தில் நாடு முழுவதும் பரந்த தாக்கத்தைக் கொடுத்துள்ளது.

பிரித்தானியாவில் அம்பர், யலோ, ரெட் எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளது. முதற் தடவையாக லண்டன் ரெட் எச்சரிக்கைப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 1,250,000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அவற்றில் 750,000 வீடுகளுக்கு மீளிணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 500,000 வீடுகள் இன்றைய இரவை இருளிலேயே களிக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

லண்டனின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஓற்று அரினாவின் கூரை பிய்த்தெறியப்பட்டு உள்ளது. நூற்றுக்கணக்கான மரங்கள் வீழ்ந்து போக்குவரத்துக்கு பாரிய தடைகளை ஏற்படுத்தி உள்ளது. விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் தள்ளாடிய காட்சி காணொலியாக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்துகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சில ரெயில் போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டது. வேல்ஸில் விமான, ரெயில் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டதுடன் பாடசாலைகளும் மூடப்பட்டது.

ஈயுனிஸ் எவ்வளவு மோசமான நட்டத்தினை ஏற்படுத்தியது என்ற கணக்கை அரசு கணக்கிட ஆரம்பித்துள்ளது. இவ்வாறான புயல்களுக்கு பிரித்தானியா தயார் நிலையில் இருக்கின்றதா என்ற கேளிவியும் எழுப்பப்படுகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் வாகனப் போக்குவரத்தும் சக்தியும் மின் இணைப்பிலேயே தங்கியுள்ளதால் மின்வெட்டுக்கள் துண்டிக்கப்படும் பட்சத்தில் அதனை துரிதகெதியில் சீரமைக்க வேண்டிய அவசரமும் அவசியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது இயற்கை அழிவுகள் மேற்கு நாடுகளிலும் பரவலாக நடைபெற ஆரம்பித்துள்ளது. வெள்ளம், புயல், கோவிட் என்று இயற்கையின் சீற்றத்துக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்கு அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. இருந்தாலும் அதனைவிடுத்து மேலும் அழிவுகளை ஏற்படுத்தும் யுத்த தளபாடங்களுக்கும் இராணுவ விஸதரிப்புகளுக்குமே அரசுகள் முன்னுரிமை தருகின்றன.

பிரிடிஸ் இளவரசராக இருந்தால் என்ன பிரதமரக இருந்தால் என்ன எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியுமா!!!

               Photo by Nils Jorgensen/REX 

வழமைபோல் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது தைப்பொங்கள் வாழ்த்துக்களை ‘வணக்கம்’ என்று ஆரம்பித்து ‘நன்றி’ என்று கூறி முடித்தார். அவருடைய 100 செக்கன்கள் கொண்ட வாழ்த்துச் செய்தியில் பெரும்பாகம் கோவிட் கால நடைமுறைகளை மீள ஞாபகப்படுத்தி அதன்படி தைப்பொங்கலை கொண்டாடும்படி கேட்டுக்கொண்டார். தமிழர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் கோவிட் நடைமுறைகளை அடிக்கடி ஞாபகப்படுத்தும் பிதரமர் தனக்கென்று வரும்போது அவற்றை மறந்துவிடுகின்றார். இந்த தமிழ் புதுவருடமோ ஆங்கிலப் புதுவருடமோ நமக்கெல்லாம் எப்படி அமையப் போகிறதோ இல்லையோ பிரதமர் பொறிஸ்க்கும் பிரித்தானிய மகாராணி எலிசபத்தின் செல்ல மகன் அன்ரூவுக்கும் அட்டமத்தில் சனி ஆரம்பித்துவிட்டது.

பிரதமர் பொறிஸ் ஒரு கவர்ச்சிகரமான அரசியல்வாதி. வாயாலேயே சுடச்சுட வடை சுட்டுத்தரும் வல்லமை அவருக்கு உண்டு. அவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே ‘அவுன் ரெடி’ டீல் இருப்பதாக மக்களை ஏமாற்றியவர். பதவிக்கு வந்து இவ்வளவு காலமாகிவிட்டது இன்னமும் அந்த இழுபறி முடிந்தபாடில்லை. பொதுவாகவே பிரித்தானிய பிரதமர் நாட்டு மக்களோடு கதைக்கின்ற போதோ அல்லது நாட்டு தலைவர்களோடு கதைக்கின்ற போதோ கூட உள்ளடக்கம் இல்லாமல் நுனிப்புல் மேயும் போக்கிலேயே பேசுவார். அவருடைய உரைகளில் உள்ளடக்கம் மட்டுமல்ல உண்மையும் இருப்பதில்லை என்பது பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆனால் அவரது பதவியை பாதிக்காத விடயமாக இதுவரை இருந்தது. இவர் தமிழ் மக்களுக்கு தலைவராகவோ அல்லது ஆசிய நாடுகள் ஒன்றின் தலைவராகவோ இருந்திருந்தால் அவருடைய மரணம் வரை அவர் தலைவராக இருந்திருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். நிறம் மட்டும் திராவிட நிறமாக இருந்திருந்தால் பொறிஸ் தமிழர்களுக்கே தலைவராகி இருக்க முடியும்.

துரதிஸ்டவசமாக பொறிஸ் பிரித்தானிய பிரதமராக இருப்பதால் அவருடைய அண்மைய எதிர்காலம் அவ்வளவு இலகுவானதாக இருக்கப் போவதில்லை. மக்கள் பிரித்தானியாவின் பின்னடைவுக்கு ஐரோப்பிய ஒன்றியமே காரணம் என நம்பவைக்கப்பட்டனர். ஆரம்பத்தில் மதில் மேல் பூனையாக நின்ற அன்றைய பொறிஸ் பின்னர் பிரதமர் பதவிக்கு வருவதற்கு கொன்சவேடிவ் கட்சியின் அடிப்படைவாதத்தை ஏற்றுக்கொள்வதே சரியெனத் தெரிவுசெய்து, ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா வெளியேறினால் சுபீட்சம் வந்துவிடும் என்று பிரச்சாரம் செய்து, 2016 கருத்துக்கணிப்பில் வெற்றி பெற்று, பின் 2019இல் பிரதமரும் ஆனார்.

அவர் பிரதமராகி ஓராண்டுக்கு உள்ளாக கோவிட் தலைவிரித்தாடியது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் பிரதமர் பொறிஸ் ஒரு காத்திரமான தலைவர் அல்ல. அவருக்கு மக்களைக் கவர்ந்து அவர்களது வாக்குகளைக் கவர்ந்து ஆட்சிக்கு வர முடியுமேயொழிய ஆட்சியை திறம்பட நடத்தும் ஆற்றலும் பொறுப்புணர்வும் இருக்கவில்லை.

அவருடைய பொறுப்பற்ற முடிவுகளால் குறிப்பாக மிக்க காலதாமதமாக முதலாவது லொக்டவுன் கொண்டுவரப்பட்டது முதல் பல அடுத்தடுத்த தவறுகளால் முதல் ஆண்டில் பிரித்தானியாவிலேயே அதன் மக்கள் தொகைக்கு கூடுதலான மக்கள் கோவிட்-19 இல் கொல்லப்பட்டனர். இந்த கோவிட் காலத்தில் பிரித்தானிய பெற்றுக்கொண்ட கடன் தொகை 200 பில்லியன் பவுண்கள். பிரதமர் பொறிஸின் நட்பு வட்டங்களில் இருந்த நிறுவனங்கள் கோவிட் பாதுகாப்பு அங்கிகளை இறக்குமதி செய்வதற்கு அங்கிகாரம் வழங்கி, அதற்கு செலுத்தப்பட்ட லஞ்சம், வாங்கப்பட்ட கடனில் 10 வீதம் 20 பில்லியன் பவுண்கள்.

இவையெல்லாம் போதாது என்று 2021 ஏப்ரலில் புதிய பிரளயம். பிரதமர் பொறிஸ் தனது வீட்டை அழகுபடுத்துவதற்கு கட்சிக்கு நன்கொடை வழங்கும் ஒருவர், அவர் பிரபுக்கள் சபைக்கு தெரிவானவர், அதற்கான செலவு 200,000 பவுண்களை செலுத்தி இருந்தார். அதனை அந்த நபர் இலவசமாகச் செய்யவில்லை. அதற்கு பிரதியுபகாரமாக மற்றுமொரு கொன்ராக் பேசப்பட்டுள்ளது. இந்தப் பொட்டுக்கேடுகளெல்லாம் வெளிச்சத்திற்கு வர பொறிஸ் ஓடிப்போய் தானே திருத்தச் செலவின்கான நிதியைச் செலுத்தினார்.

இதற்கு முன்னரே பிரதமரின் விசேட ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ் கோவிட்-19 விதிகளை மீறியது தொடர்பில் சிக்கலில் இருந்தவர். இவரே அன்றைய நாட்களில் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தவர் என கொன்சவேடிவ் கட்சிக்குள்ளேயே பெரும் புகை கிளம்பிக்கொண்டிருந்தது. இறுதியில் 2020 நவம்பரில் கட்சி அவரை பிரதமரின் நம்பர் 10 உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இருந்து கலைத்துவிட்டது.

அன்று டொமினிக் கம்மிங் கோவிட் -19 விதிகளை மீறியதாகக் குறம்சுமத்தப்பட்டது. கடந்த சில வாரங்களாக நம்பர் 10 இல் நடந்த குடியும் கும்மாளங்களும் அம்பலத்துக்கு வந்துள்ளது. 2020 முதலாம் இரண்டாம் லொக்டவுன்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அரசு அனைவரையும் தனிமைப்படுத்தச் சொல்லிவிட்டு அந்த விதியை உருவாக்கிய அரசின் மைய அலுவலகத்திலேயே குடியும் குத்துப்பாட்டு கும்மாளங்களும் இடம்பெற்றுள்ளது.

இதில் ஒரு கும்மாளத்தில் பிரதமர் பொறிஸ் 25 நிமிடங்கள் கலந்துகொண்டுள்ளார். அவர் அடிக்கடி வந்து பார்ட்டியில் கலந்துகொண்டு அம்பலப்படாமல் இருக்க அவரை கீழே பார்ட்டிக்கு வரவிடாமல் தடுக்க கதிரைகளை அடுக்கி அவரை கீழே வரவிடாமல் வேறு செய்துள்ளனர். கிட்டத்தட்ட குழந்தைப் பிள்ளைகளுக்கு சைல்ட் லொக் (chilf-lock) போடுவது போல் என இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடி நடவடிக்கைக்கு வைக்கப்பட்ட பெயர் ‘protect the top wild dog‘. இவையெல்லாம் அம்பலமாகி வரும் வேகத்தைப் பார்த்தால் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அடுத்த தேர்தல் வரை தாக்குப் பிடிப்பாரா என்ற சந்தேகம் பரவலாக எழுந்து வருகின்றது.

இதுவரை பிரதமர் தப்பிக்கொண்டதற்கு காரணம் கொன்சவேடிவ் கட்சிக்குள் பிரதமர் பொறிஸ்க்கு எதிரான காத்திரமான தலைமைகள் இல்லாததே அல்லது இருந்தும் யார் பூனைக்கு மணி கட்டுவது என்ற பிரச்சினையாகவும் இருக்கலாம். அடுத்த தலைமைக்கு தயாராக இருப்பவர்களில் முக்கியமானவர்கள் மைக்கல் கோவ், ரிஷி சுனாக், சஜித் ஜாவட், ஜெரிமி ஹன்ட். ப்ரித்தி பட்டேலும் அதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளார்.

தற்போது கொன்சவேடிவ் கட்சியில் 360 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 54 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே பொறிஸ்க்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முடுக்கிவிட முடியும். இப்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வெறும் 22 உறுப்பினர்களே உள்ளனர். ஆனால் தற்போது நம்பர் 10 இல் இடம்பெற்ற பார்டிகள் பற்றி தனக்கு பெரிதாக எதுவும் தெரியாது என்றும் அவை வெறும் வேலை நேர அல்லது வேலையுடனான கூட்டே என பிரதமர் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றார்.

பிரதமரின் நம்பர் 10 கார்டின் 24 மணி நேர சிசிரிவி பொருத்தப்பட்டு அது பொலிஸாரின் கண்காணிப்பிலும் இருந்து வந்தது. இந்தப் பார்ட்டியை சிசிரிவி யில் பார்த்தும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இதையே மாணவர்கள் செய்த போது பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். அபராதம் வித்தித்தனர். தமிழ் திருமணங்களில் கலந்துகொண்ட பலருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரமும் பணமும் உள்ளவர்களுக்கு ஒரு சட்டம். இல்லாதவர்களுக்கு இன்னொரு சட்டம்.

பல்வேறு அழுத்தங்கள் காரணமாகவும் தற்போது சூ க்ரேவ் என்பவர் தலைமையிலான விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. சூ க்ரேவ் இன் அறிக்கையிலேயே பிரதமர் பொறிஸ்ஸின் எதிர்காலம் ஊசலாடுகின்றது. சூ க்ரேவ் ஓரளவு நேர்மையுடன் செயற்படுவார் எனவே பலரும் எதிர்பார்க்கின்றனர். அவரை பிரதமரே நியமித்தும் உள்ளார். பிரதமரே சர்ச்சைக்குள்ளான ஒருவராக இந்த விசாரணையில் இருக்கின்ற போது அவரால் நியமிக்கப்பட்டவர் எப்படி பிரதமருக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டை விசாரிக்க முடியும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகின்றது. சூ க்ரேவ் உண்மையில் நம்பர் 10 இல் என்ன நடந்தது என்பதையே ஆராய்கின்றார்.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் எதிர்காலத்தை கொன்சவேடிவ் கட்சியும் பாராளுமன்றமுமே தீர்மானிக்கும். அடுத்த வாரம் வரவேண்டிய அறிக்கை இன்று வெளியான புதிய தகவல்களை ஆராய மேலும் ஒருவாரம் நீடிக்கப்பட்டு இருக்கின்றது. இன்றைய தகவலின் படி நம்பர் 10 இல் குடிவகைகளை ஸ்ரோர் பண்ணுவதற்கு குளிரூட்டி ஒன்று கொண்டுவரப்பட்டு, அதில் குடிபானங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள வெயிற்ரோஸ் சுப்பர்மார்க்கற்றுக்கு சூட்கேஸ் கொண்டு சென்று குடிபானங்களை வாங்கி கையிருப்பிலும் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

ஜெப்ரி எப்ஸ் ரீன் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்கள் புரிந்து வந்த ஒரு செல்வந்தர். முதலீட்டாளர். அமெரிக்கர். இவர் இளம் பெண்களை ஆசை வார்த்தைகளைக் காட்டி மயக்கி தனதும் தன்னைச் சார்ந்தவர்களது பாலியல் இச்சைக்கும் வழங்கி வருபவர். ஜெப்ரி எப்ஸ் ரீன் இந்த மாமா வேலைக்கு உடந்தையாக அவருடைய மிகச் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த க்ளைன் மகஸ்வெல் இருந்துள்ளார். இவ்வாறான கிரிமனல் சிந்தனையுடையவர்களுக்கு வின்சர் அரண்மனையில் மகாராண எலிசபத்தின் செல்ல மகன் அன்ரூ விருந்துபசாரம் செய்துள்ளார். ஜெப்ரி எப்ஸ் ரீனின் விடுமுறை வாஸஸ்தலங்களில் அன்ரூ சென்று தங்கியும் வந்துள்ளார். அதனை அவர் ஏற்றுக்கொண்டும் உள்ளார்.

பல பாலியல் குற்றங்களுக்காக 2019 யூலை 6 ஜெப்ரி எப்ஸ் ரீன் கைது செய்யப்பட்டு பிணை மறுக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். சில வாரங்களில் 2019 யூலை 23 இல் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக அறிவிக்கப்பட்டது, 84 வீதமான அமெரிக்கர்கள் ஜெப்ரி எப்ஸ் ரீன் தற்கொலை செய்துகொண்டதை நம்ப மறுக்கின்றனர். 45 வீதத்தினர் அவர் கொலை செய்யப்பட்டதாகவே நம்புகின்றனர். அந்த வழக்கு நீதி மன்றத்துக்கு வந்திருந்தால் ஜெப்ரி எப்ஸ் ரீன் யாருக்கு யாருக்கு எல்லாம் இளம் பெண்களை வழங்கி இருந்தார் என்பது அம்பலமாகி இருக்கும்.

பிரித்தானியா உட்பட மேற்கு நாடுகளில் மதுக்குடில்களில் (தவறணைகளில்) இளம்பெண்களை அரைநிர்வாண நடனங்களில் ஆட வைப்பதும் இதன் பின் அவர்களை இச்சைகொள்வதும் போதைவஸ்து பாவனையும் கண்டும் காணாமல் நடைபெறும் வியாபாரங்கள். தவறணை உரிமையாளர்களின் முக்கிய வருமானங்கள் இவ்வாறுதான் வரும்.

இந்த இச்சைக்கு பிரித்தானிய மகாராணியன் செல்ல மகன் அன்ரூவும் மயங்கி வேர்ஜினியா கிவ் என்ற பதின்ம வயதுப் பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். வேர்ஜினியா கிவ் இன் இடுப்பை இளவரசர் அன்ரூ பற்றி நிற்பதும் அருகில் க்ளைன் மக்வெல் நிற்கும் படமும் பிரித்தானிய சம்ராஜ்யத்தின் மையத்தை தற்போது ஆட்டம்காண வைத்துக் கொண்டிருக்கின்றது. ஒரு பொய்யை மறைக்க இன்னுமொரு பொய் என்று இளவரசர் வேர்ஜினியா கிவ் என்பவரை தனக்கு தெரியவே தெரியாது என்று மறுத்து வருகின்றார். ஆனால் இவருடைய லீலைகள் பொதுவாக எல்லோராலும் அறியப்பட்ட விடயங்களாக இருந்தது. இளவரசர் அன்ரூ பிரித்தானிய இராணுவ பட்டங்கள் அதிகாரங்கள் உடைய பொறுப்பில் இருந்தவர்.

கடந்த வருட இறுதியில் க்ளைன் மகஸ்வெல் அமெரிக்காவில் குற்றவாளியாகக் காணப்பட்டதுடன் இவ்வாரம் இளவரசர் அன்ரூவ்க்கு எதிரான சிவில் வழக்கை ஆரம்பிப்பதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து இளவரசர் அன்ரூவின் எதிர்காலம் சிக்கலானது. நேற்று தைப்பொங்கலன்று இளவரசர் அன்ரூவின் பதவிகளை பறிக்க வேண்டும் அவருக்கு வழங்கப்பட்ட பதங்கங்களை நீக்க வேண்டும் என பிரித்தானிய இராணுவ தலைமைகள் மகாராணியை கேட்டுக்கொண்டதற்கு இணங்க இளவரசர் அன்ரூவின் பதவியும் பதக்கங்களும் பறிக்கப்பட்டு அவர் அரண்மனையின் உத்தியோகபுர்வ பங்குபற்றுதல்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இனிமேல் அவருக்கு மரணம் வரை இவை மீளளிக்கப்பட மாட்டாது. ஆனால் தொடர்ந்தும் இளவரசர் என்றே அழைக்கப்படுவார். பதவியும் பதக்கமும் ஆடை ஆபரணங்களும் இல்லாவிட்டாலும் இளவரசர்.

செல்வத்திலும் அதிகாரத்திலும் அதன் உச்சியில் இருந்தாலும் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.

வாழ்வதற்கான உரிமைக்குள் ஒளிந்திருப்பது சாவதற்கான உரிமையே!! இந்த வாரம் பார்சல் டெலிவரி மோசடி 500,000 ஆக அதிகரிப்பு!!!

கிறிஸ்மஸ் மற்றும் நியூஇயர் காலக் கொண்டாட்டங்கள் பிரித்தானியாவில் நடைபெறும் பார்சல் தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பை கொண்டுள்ளன. இவ்வாராம் பார்சல் டெலிவரிகளின் மிக உச்சமான காலமாகையால் மோசடிகளின் எண்ணிக்கையும் எகிறியுள்ளது. ஸ்கொட்லன்ட் யாட் இன் மோசடிதடுப்புப் பிரிவின் கணிப்பின்படி இவ்வாரம் மட்டும் 500,000 மோசடிகள் நடைபெறும் என மதிப்பிட்டுள்ளது.

எனக்கு ஹேர்மிஸ் டெலிவரி நிறுவனத்தின் பெயரில் ஒரு கைத்தொலைபேசி இலக்கத்தில் இருந்து டிசம்பர் 21இல் அனுப்பி வைக்கப்பட்ட குறும்தகவலில் தாங்கள் டெலிவரி செய்ய முயற்சித்த போது நாங்கள் வீட்டில் இல்லாததால் நான் மேலதிகமாக 1.45 செலுத்த வேண்டும் என்று சொல்லி அதற்கான இணைப்பை வழங்கி இருந்தனர். இந்த இணைப்பைக் க்கிளிக் செய்தால் அது எங்களின் மிக முக்கியமான தகவல்களைப் பெற்று அதிலிருந்து எம்மி;டம் இருந்து பணத்தைக் கறக்கின்றனர். நான் பொதுவாகவே ஒன்லைனில் எதுவும் ஓடர் செய்வதில்லை என்பதால் எனக்கு அதன் நம்பகத்தன்மையில் ஒரு சந்தேகம் ஏற்பட்டு இருந்தது. இன்று பிபிசி செய்தியில் இவ்வாறான மோசடிகள் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன.

மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இலங்கையில் இருந்து புத்தகப் பார்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. டிபிடி குறித்த திகதியில் பார்சலை டெலிவரி செய்யவில்லை. அவர்கள் டெலிவரி செய்ய முயற்சித்த தினத்தில் நான் வீட்டில் இல்லை. அவர்கள் அருகில் உள்ள அவர்களின் கலக்சன் பொயின்ற்றில் பார்சலை விட்டுச் செல்ல வேண்டும். ஆனால் ஏதோ காரணத்தால் அவர்கள் அதனைச் செய்யவில்லை.அவர்களுடைய டெப்போவுக்கு போன் பண்ணி அதனை பெற்றுக்கொள்ள முயன்றால் கொரோனா காரணமாக நாங்கள் டெப்போ பக்கமே வர இயலாது என்றார்கள். போனில் இருந்த பெண்ணும் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கவில்லை. எனக்கும் இரத்தக் கொதிப்பாகியது. மனேஜரை கூப்பிடச் சொன்னால் மனேஜரும் அரை மணிநேரத்திற்குள் போன் எடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால் போன் எடுக்கவேயில்லை. திருப்பியும் இன்னொரு சுற்று அதே பதில் அதே விளைவு. இன்று ஒரு மாதம் கடந்தும் அந்த பார்சலுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது.

இதற்கிடையே பார்சலை அனுப்பியவர் தான் இன்னுமொரு பார்சல் அனுப்பி உள்ளதாகவும் அது புதிய முகவரிக்கு வரும் என்றும் சொன்னார். அதுவும் குறித்த டெலிவரியில் வரவில்லை. அதன் பின் அமெக்ஸ் டெலிவரி நிலையத்தில் இருந்து ஒரு குறும் தகவல் வந்தது 11:25க்கும் – 12:25க்கும் இடையே பார்சல் வரும் என்று. அன்று பார்சல் வரவில்லை.

அதன் பின் மறுநாள் மாலை 18:40க்கும் – 19:40க்கும் இடையே பார்சல் வரும் என்று டிஎச்எல் இல் இருந்து ஒரு குறும்தகவல் வந்தது. ஆனால் பார்சல் வரவில்லை. குறும்தகவல் வந்தது. உங்களுடைய பார்சல் டெலிவரி செய்யப்பட்டதாகவும் நான் – ஜெயபாலன் பார்சலை பெற்றுக்கொண்டதாகவும்.

ஆனால் பார்சல் அதன் பின் 48 மணிநேரங்களிற்குப் பின்னரே என் கைக்கு வந்தது. புத்தகம் என்பதால் யாரும் அதனை களவாடியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் பெறுமதியான பொருட்கள் என்றால் சில வேளை இந்தப் பார்சல் எனக்கு கிடைத்தே இருக்காது.

ஒரு பார்சலை டெலிவரி செய்வதற்கு ஏன் இத்தனை நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையே. தங்களுடைய பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதற்காக வெவ்வேறு பெயர்களில் இயங்கி மக்களை ஏமாற்றுகின்றனர். நீங்கள் பொருளை அனுப்புவதற்கான பணத்தைக் கட்டும்வரை தான் அவர்களுக்கு கஸ்டமர். அதற்குப் பின் நீங்கள் யாரோ அவர்கள் யாரோ. அவர்களுக்கு பணத்தையும் கட்டி அவர்களுக்கு போன் பண்ணி அவர்களுக்காக காத்திருந்து நேரத்தையும் வீணடித்து அமசோன் நிறுவன உரிமையாளர் ஜெப் பெஸோஸ் போன்றவர்களை அதீத செல்வந்தராக்கி கொண்டிருக்கிறோம். எமது நுகர்வோர் கலாச்சாரமே அவர்களது அதீத செல்வத்தின் பின்னணி. எமக்கு என்ன வேண்டும் என்பதை இன்று இவர்களே தீர்மானிக்கின்றனர்.

இந்தப் பெரும் நிறுவனங்களும் லாப நோக்கில் டெலிவரி ரைவர்களை மிகவும் கசக்கி புளிகின்றனர். ப்றிலன்ஸாக தங்கள் வாகனத்தை பயன்படுத்தும் இவர்களுக்கு சிறுநீர் கழிக்க நேரம் இல்லாத அளவுக்கு டெலிவரி செடுயூல் போடப்பட்டு இருக்கும். அவர்கள் வானில் உள்ள போத்தலிலேயே சிறுநீர் கழிக்கின்றனர். வாகனத்தை ஓட்டிக் கொண்டே உணவருந்துகின்றனர். எல்லாத் தவறுகளும் எல்லா பொறுப்புகளும் அவர்கள் தலையிலேயே கட்டப்படுகின்றன. சம்பளம் பெறும் நவீன கூலி அடிமைகளாக்கப்பட்டு உள்ளனர். கொன்சவேடிவ் அரசின் சிரோ அவர் கொன்ராக் இந்த மல்டிநஷனல் நிறுவனங்கள் லாபத்தை குவிக்கவே உதவுகின்றது. தொழிலாளர்களின் நலன்பற்றியோ மக்களின் நலன்பற்றியோ எவ்வித கரிசனையும் கிடையாது.

திறந்த சந்தைப் பொருளாதாரம் உங்களுக்கு தேர்வு செய்வதற்காக உரிமையை வழங்குவதாக மார்தட்டி பீற்றிக்கொள்கின்றது. அந்த தேர்வு என்ன? ரைட் செடுயூலில் சிறுநீரை போத்தலில் களித்து வேலையைச் செய்ய வேண்டும். இல்லையேல் வேலையில்லாமல் பிச்சைப் பணத்திற்கு கையேந்த வேண்டும். இந்த மேற்கு நாடுகளின் வாழ்வதற்கான உரிமை என்பதற்குள் ஒளிந்திருப்பது சாவதற்கான உரிமையும் தான். அதனை கோவி;ட் அம்மணமாக நிரூபித்துள்ளது. கோவிட்இல் வறுமைகோட்டில் வாழ்வோரே பெரும்பாலும் உயிரிழந்தனர். உயிர் இழந்துகொண்டிருக்கின்றனர். உயிரிழப்பர். 2000க்கும் மேற்பட்ட அதீத செல்வந்தர்களின் லாபம் கோவிட் காலத்தில் ரொக்கட் வேகத்தில் அதிகரித்துள்ளது.