முதிர்ச்சியடையாத அணுவாயுதங்களை கொண்ட இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம்: இடையில் சிக்கித் தவிப்பது அப்பாவி மக்கள் !
இந்தியா பாகிஸ்தான் இரு நாட்டு காஷ்மீர் எல்லைப்பகுதிகளிலும் எப்போதுமே ஒருவிதமான போர்ப் பதற்றம் நீண்ட காலமாக நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் தீவிரவாதிகளுக்கும் இந்தியா இந்திய ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை அவ்வப்போது நடந்துள்ளது.
இப்படியானவொரு பதற்றச் சூழலில் காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியாவால் தடை செய்யப்பட்ட இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய பாகிஸ்தான்
எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலும் சில இடங்களில் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு இந்தியா மற்றும் பாகிஸ்தான் காஷ்மீரை அண்டிய பகுதிகளில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக கூறிக் கொண்டு இந்திய இராணுவம் மே 7 ஆம் திகதி காலை 2 மணி அளவில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 இடங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் அரசாங்கத்தை நேரடியாக குற்றம் சாட்டும் ஆளும் பிஜேபி அரசாங்கம் பாகிஸ்தான் மீதான அதனது இராணுவநடவடிக்கைக்கு “ஆபரேஷன் சிந்தூர்” எனப் பெயரிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 52 பேர் காயமடைந்து உள்ளனர் என ஷெபாஸ் ஷரீஃப் தலைமை தாங்கும் பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது . பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இந்தியாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
அதேநேரம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி இந்தியா தவறிழைத்து விட்டதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் பிரதமர். இந்தியாவிற்கு தக்க பதிலடி கொடுப்போம் என நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றியுள்ளார். பாகிஸ்தானும் தனது இராணுவம் ஐந்து இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், சில இந்திய வீரர்களை சிறைபிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்தியா தன்னால் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா பாகிஸ்தானில் தளம் அமைத்து இயங்குவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் ஆதரவளித்து வருவதாக தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகிறது.
தென்னாசியப் பகுதியில் சூழ்ந்துள்ள போர் பதற்றம் உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாட்டு இராணுவம் மற்றும் விமானப் படைகள் தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளும் மாறி மாறி போர் ஒத்திகைகளிலும் ஈடுபடுகின்றன. இரு நாட்டு அரசாங்கங்களும் தத்தமது நாட்டு மக்களை போர்ப் பதட்டத்தில் தள்ளியுள்ளன.
வழமையாக இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினாலே இந்தியா பாகிஸ்தான் போர் நடப்பது போன்றே ஆரவாரங்கள் நடக்கும். அப்படியிருக்க உண்மையான போரின் ஒத்திகைகள் தொடங்கிவிட்ட நிலையில் பரஸ்பரம் இரு நாட்டு ஊடகங்களும் சமுக ஊடகங்களும் வெறுப்பையும் பிரிவினைவாதத்தையும் பகையையும் பரப்பி வருகின்றன. சமூக ஊடகங்களில் நிறைய போலியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மேலும் இந்தியா – பாகிஸ்தான் மோதலால் ஆசிய விமான போக்குவரத்து வழித்தடத்திலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளமையும் குறிப்படத் தக்கது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள மோதல்
காரணமாக, பல ஆசிய விமான நிறுவனங்கள், ஐரோப்பா நோக்கி இயக்கப்படும் தமது விமானங்களின் போக்குவரத்து வழித்தடங்களை மாற்றியமைத்துள்ள நிலையில், சிலவற்றை இரத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளன.
முதிர்ச்சியடையாத அணுஆயுத சக்தி கொண்ட இந்த இரு நாடுகளுக்கிடையே கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு இப்போது பெரும் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்களிலும் இந்திய மற்றும் பாகிஸ்தானிடையேயான போர் ஒத்திகைச் செய்திகள் இடம்பிடித்துள்ளன. ஐக்கிய நாடுகளின் பிராந்தியத் தலைவர் இருநாடுகளையும் உச்சபட்ச பொறுமை காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதேமாதிரி 2023 இல் ஒக்டோபர் 7 ஆம் திகதி பாலஸ்தீன விடுதலைப் போராளிகளான ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல்ப் பகுதியில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பாலஸ்தீன பகுதியான ஹாஸா பள்ளத்தாக்கில் பெரும் போரில் ஈடுபட்டு வருகிறது. ஹாஸாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஹாஸாவில் மிகப் பெரிய மனிதவலம் உலகத்தின் முன் நடந்தேறி வருகிறது.
மேலும் இந்தியா பாக்கிஸ்தான் இடையிலான போர் இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை செலுத்தக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பல பொருட்களை இறக்குமதி செய்யும் இலங்கைக்கு அதில் தடங்கள் ஏற்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.ஏற்கனவே இலங்கை அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் என பொருளாதார நெருக்கடியில் சிக்கி மெதுவாக மீண்டு வர முயற்சிக்கின்றது. இலங்கை மட்டுமல்ல பாகிஸ்தானும் கூட பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளவொரு நாடாகும். அந்தவகையில் இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளையும் போர்ப் பதற்றத்தை தணித்து அமைதிப்பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினைகளை தீர்க்கும்படி மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இரு நாட்டு மக்களின் விருப்பமும் அதுவே என சமூகச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.