::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் தப்பினார் ட்ரம்! அடுத்த ஜனாதிபதி ட்ரம் உறுதியாகிவிட்டது!

சில நிமிடங்களுக்கு முன் July 13 அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால் ட்ரம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது போல் தலைக்கு வைக்கப்பட்ட வெடி காதடியால் சிராய்த்துக் கொண்டு சென்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு காதடியில் பட்டதும் டொனால்ட் ட்ரம் உரையாற்றிக் கொண்டு நின்ற இடத்திலேயே குந்தி இருந்துவிட்டார்.

உடனடியாக ட்ரம்மைச் சுற்றி இருந்த மெய்ப்பாதுகாவலர்கள் அவரைச் சுற்றிவளைத்து அழைத்துச் சென்றனர். அவ்வாறு அழைத்துச் செல்கின்ற போது ட்ரம் தன் மணிக்கட்டை மடித்து காற்றில் குற்றி தன்னுடைய தைரியத்தை காட்டிச் சென்று வாகனத்தில் ஏற்றினர். வாகனத்தில் ஏறிய பின்னும் ட்ரம் கையை உயர்த்தி தன்னுடைய உறுதியைத் தெரிவித்து இருந்தார்.

ட்ரம் உரையாற்றிய மேட்டைக்கு எதிரே இருந்த கட்டிடத்தின் கூரையில் இருந்தே ரைபிளை வைத்திருந்த ஒருவர் ட்ரம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகம் செய்தவரை சிலர் ஒரு சில நிமிடங்கள் கண்டுள்ளனர். ஆனாலும் அவர் உடனடியாகக் கையளப்படவில்லை. ஆனால் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர், உடனடியாகவே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அதற்கு முன்னதாகவே துப்பாக்கிதாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பொதுமக்களும்காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் அரசியல் படுகொலை, படுகொலை முயற்சிகள் இது முதற்தடவையல்ல. ஆபிரகாம் லிங்கன், ஜெ எப் கென்னடி, மார்டின் லூதர் கிங் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு இருந்தனர். டொனால்ட் ட்ரம் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சம் ஏற்கனவே இருந்து வந்தது. அமெரிக்க அரச கட்டமைப்புக்கு புறம்பாக செயற்படுவார் என நம்பபப்பட்ட ட்ரம் நேட்டோவை பலவீனப்படுத்துவார், ரஷ்யாவுக்கு ஆதரவாகச் செயற்படுவார், உக்ரைன் யுத்தத்தை ரஷ்யாவுக்கு ஆதரவாக முடிவுக்கு கொண்டுவருவார் போன்ற காரணங்களால் இவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்படலாம் என்ற அச்சம் இருந்தது. தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜோபைடனுடன் ஒப்பிடுகையில் முன்னணியில் நிற்கும் டொனால்ட் ட்ரம், இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து உயிர்தப்பியதன் மூலமும் சம்பவம் நடந்த அடுத்த கணமே உஷாராக எழுந்து மணிக்கட்டை மடித்து கையை உயர்த்தி காற்றில் குத்தி தன்னுடைய தைரியத்தையும் ஆளுமையையும் உடல் ஆளுமையையும் காட்டியுள்ளார். தனது வயதால் உடல் தளர்ந்தும் பேச்சுத் தளர்ந்தும் உள்ள ஜோபைடன் ட்ரம் உடனான பேர்டியில் வெல்வதற்கு இனி வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

The World Press Photo of the Year – உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது !

2024 ஆம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் புகைப்பட விருதை வென்றுள்ளார் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம் என்ற பத்திரிகையாளர்.

 

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பிற்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது கிடைத்துள்ளது.

 

இந்தப் புகைப்படம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தெற்கு காசாவின் கான் யூனிஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

மருத்துவமனையின் சவக்கிடங்கில் துணியால் சுற்றப்பட்ட உயிரிழந்த தனது 5 வயது மருமகளின் உடலைப் பார்த்து பெண் ஒருவர் அழுவதை தனது கமரா கண்களின் வழியே படம் பிடித்திருந்தார் முகமது சலேம்.

ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாகக் கொண்ட வேர்ல்ட் பிரஸ் போட்டோ ஃபவுண்டேஷன் அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த படத்துக்கான விருதை வழங்கி வருகிறது.

 

அந்த வகையில் யுத்தம், மோதல் போன்ற பகுதிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை அங்கீகரிப்பது அவசியம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபரில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான மோதலில் சுமார் 99 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் தமது இன்னுயிரை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முகமது சலேம், 39 வயதான பலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவர். புகைப்பட பத்திரிகையாளர். 2003 முதல் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு கடந்த 2010இல் வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார்.

“காசாவின் நிலை என்ன என்பதை இந்தப் படம் விளக்குகிறது. தங்கள் அன்பானவர்களின் நிலையை குறித்து அறிந்து கொள்ள மக்கள் அங்குமிங்கும் அல்லாடிய நேரம் அது. அப்போது இந்தப் பெண், குழந்தையின் உடலுடன் கலங்கி நின்றார். அதனை நான் கவனித்தேன். அந்த வேதனையை ஒளிப்படத்தின் வழியே உலகுக்கு கடத்த நினைத்தேன்” என இந்தப் படம் எடுத்ததற்கான காரணம் குறித்து சலேம் விளக்கியுள்ளார்.

விருது வென்ற குறித்த புகைப்படம் கடந்த நவம்பர் மாதம் முதன்முதலில் பத்திரிகையில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் அணுசக்தி திட்ட நகரத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – மேலும் பதற்றமடையும் நிலவரம் !

இஸ்ரேல் ஈரானிற்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டுள்ளதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

 

அடுத்த 48 மணித்தியாலத்திற்குள் தாக்குதலை மேற்கொள்வோம் என இஸ்ரேல் அமெரிக்காவிற்கு தெரியப்படுத்தியது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

 

ஈரானின் அணுஉலைகளை தாக்கமாட்டோம் எனவும் இஸ்ரேல் அமெரிக்காவிற்கு உத்தரவாதம் வழங்கியிருந்தது.என சிஎன்என் தெரிவித்துள்ளது.

இதேவேளை; இஸ்ரேல் ஈரானில் தாக்குதலிற்கு தெரிவு செய்த இஸ்ஃபஹான் நகரம் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மையம் என முன்னாள் அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ஃபஹான்ம் நகரம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது ஏன் இஸ்ரேல் அந்த நகரத்தை தெரிவு செய்தது என்பது குறித்து அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்க செயலாளர் மார்க் கிமிட் பிபிசிக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

 

இஷ்பஹான் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மையம் என குறிப்பிட்டுள்ள அவர் பயிற்சி ஆராயச்சி மற்றும் ஈரானின் அணுசக்திதிறமையை உருவாக்குதல் போன்றவற்றிற்கு இந்த நகரமே பிரதானமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

 

இதன் காரணமாகவே இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

யூலியன் அசான்ஜ் – மக்ஸின் குஸ்ஸிநோவ்: ஒருவருக்கு கதாநாயகன் மற்றவருக்கு துரோகி – தொடரும் சர்வதேச படுகொலைகள்!

இவ்வாரம் சர்வதேச அரசியல் சூழலில் மிக முக்கியமான வாரம். சர்வதேச அரசியலில் யார் எந்தப் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அதன் சாதக பாதகங்களும் அமையும். பல் துருவ அரசியல் வலுப்பெற்று அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் இராணுவ அரசியல் ஆளுமையின் பலம் முன்னைய நிலையிலிருந்து சற்று பலவீனப்பட்டுப் போயுள்ளதன் பின்னணியில் இவற்றைக் காணலாம்.

மேற்குலகின் முழு ஒத்துழைப்புடன் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு 53 நாடுகளும் மூன்று நிறுவனங்களும் இணைந்து தொடுத்துள்ளன. பெப்ரவரி 19இல் ஆரம்பமான இவ்வழக்கில் 76 ஆண்டுகள் பாலஸ்தீனிய மண் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டது மற்றும் பாலஸ்தீனிய மக்கள் மீதான ஆக்கிரமிப்பின் சட்டத்தன்மை பற்றியும் சர்வதேச நீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் முடிவுக்கு, இஸ்ரேவேலின் ஊழல் குற்றவாளியும் இனப்படுகொலை பிரதமருமான பென்ஜமின் நெதன்யாகு கட்டுப்படப்போவதில்லை.

ஆனாலும் இந்த இனப்படுகொலைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிவரும் அமெரிக்க, பிரித்தானிய, மேற்குலக மற்றும் ஐரோப்பிய அரசுகள் தொடர்ந்தும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் துணை போனால் அவர்கள் போட்டிருக்கும் ஜனநாயகப் போர்வை முற்றாகப் பொசுங்கிவிடும். சர்வதேசத்தில் அவர்களும்; கொலையாளிகளாகவும் காட்டான்களாகவுமே பார்க்கப்படும் நிலையுள்ளது. அதனால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் தற்போது இஸ்ரேலை சற்று கண்டிக்க ஆரம்பித்துள்ளன. யுத்த நிறுத்தம் என்பது தீண்டத்தகாத சொல்லாக இருந்த நிலைமை மாறி யுத்த நிறுத்தம் வேண்டும் என்று கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும் ஐநாவில் அல்ஜீரியாவால் கொண்டுவரப்பட்ட உடனடி யுத்த நிறுத்தத் தீர்மானத்தை மீண்டுமொரு தடவை இன்று பெப்ரவரி 20 அமெரிக்கா எதிர்த்து வாக்களித்துள்ளது. பிரித்தானியா வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

பாலஸ்தீனத்தில் 30,000 உயிர்கள், பெரும்பாலும் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்ட போதும் ஒரு இனமே அழிக்கப்பட்டு வருகின்ற போதும் மனித உரிமைகள் பற்றி மூச்சுக்காட்டாமல் இருந்த அமெரிக்க நேட்டோ அணி ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி பெப்ரவரி 17இல் சிறையில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ந்து போனது. மேற்கு நாட்டு ஊடகங்கள் அனைத்தும் ரஸ்யாவை ‘பறையா ஸ்ரேட் – paraiah state’ என்று கூப்பாடு போட்டன. பல மேற்கு நாட்டு ஊடகங்கள் இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் கொண்டுவரப்பட்ட வழக்குப் பற்றி மௌனமாக இருக்கின்றன. ஆனால் பிரேஸில் ஜனாதிபதி லூல டி சில்வா காஸாவில் நடைபெறுவது இனப்படுகொலை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எதியோப்பியாவில் நடைபெற்ற ஆபிரிக்க ஒன்றிய நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதே பிரேஸில் ஜனாதிபதி லூல இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் அன்று ஹிட்லர் யூதர்களுக்கு செய்த அநீதியை இஸ்ரேல் தற்போது பாலஸ்தீனியர்களுக்கு இழைக்கின்றது என்றும் அன்று ஹிட்லர் செய்தது ஹொலக்கோஸ்ட். இன்று இஸ்ரேல் செய்வதும் ஹொலக்கோஸட் என்றும் ஒப்பிட்டு பெப்ரவரி 19இல் கருத்து வெளியிட்டார். ஒரு கண்ணியமிக்க அரசுத் தலைவர் இஸ்ரேலை இவ்வளவு பச்சையாகச் சாடியது இதுவே முதற்தடவை. இதே கருத்துப்பட துருக்கியின் ஆட்சித் தலைவர் ஏடவானும் கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பிரேஸில் – இஸ்ரேல் ராஜதந்திர உறவுகள் அடிமட்டத்துக்குச் சென்றுள்ளது.

இந்த அமளிதுமளிகள் அரங்கேறுவதற்கு சில தினங்களுக்கு முன் சரியான திகதி இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை, ரஷ்யரான மக்ஸின் குஸ்ஸிநோவ் என்பவர் ஸ்பெயினில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவர் மீது வாகனத்தையும் ஏற்றியுள்ளனர். ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டரை ஓட்டிச்சென்ற ரஷ்யர் மக்ஸின் குஸ்ஸிநோவ் உக்ரைனில் ஓகஸ்ட் 9, 2023இல் தரையிறங்கி உக்ரைனிடம் இருந்து 500,000 டொலரை சன்மானமாகப் பெற்றார். இதனை மிகப்பெரிய தேசத்துரோகம் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்ததுடன் அதற்கான தண்டணை வழங்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். கொல்லப்பட்டவர் விளாடிமிர் புட்டினால் சுட்டிக்காட்டப்பட்ட ரஷ்ய ஹெலிகொப்டரைக் கடத்திச் சென்று கூட இருந்த இரு ரஷ்ய வீரர்களைப் படுகொலை செய்த மக்ஸின் குஸ்ஸிநோவ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு துரோகி உக்ரைனுக்கும் நேட்டோ அணிக்கும் கதாநாயகனாக இருந்து இப்போது தியாகி ஆகிவிட்டார் மக்ஸி;ன் குஸ்ஸிநோவ்.

அலெக்ஸி நவால்னி, மக்ஸின் குஸ்ஸிநோவ் ஆகியோரின் மரணங்கள் பற்றி அவர்களது மனித உரிமைகள் பற்றி நேட்டோ அணி புலம்பிக்கொண்டிருக்கையில் உலகின் மிகப் பிரபல்யமான ஊடகவியலாளரான யூலியன் அசான்ஜ் யை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவது பற்றிய வழக்கு பிரித்தானிய நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் ஊடகவியலாளர் யூலியன் அசான்ஜ்யை விடுவிக்குமாறு கோரிய போதும் அதை எதனையும் பொருட்படுத்தாமல் யூலியன் அசான்ஜை சிறையில் வைத்துள்ளது, தன்னை மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் காவலாளியாகக் காட்டிக்கொள்ளும் பிரித்தானியா.

அன்றைய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹசைனிடம் பேரழிவு ஆயதங்கள் உள்ளது என அமெரிக்காவும் – பிரித்தானியாவும் கூட்டாகச் சதி செய்து ஈராக்கைத் தாக்கி அந்நாட்டை அதன் எண்ணை வளத்தை அபகரிக்க சின்னனாபின்னமாக்கினர். ஈராக்கில் அமெரிக்க இராணுவம் அப்பாவி மக்கள் மீதும் மிக மோசமான தாக்குதல்களை நடத்தியது. இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களைச் சித்திரவதை செய்தது. இவற்றை அம்பலப்படுத்தியதற்காக தலைசிறந்த ஊடகவியலாளரான யூலியன் அசான்ஜ் மீது அமெரிக்கா தேசத் துரோகக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இவர் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அலெக்ஸி நவால்னி போல் மரணத்தைத் தழுவுவார் என யூலியன் அசான்ஜ் உடைய மனைவி அச்சம் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு யூலியன் அசான்ஜ்யை படுகொலை செய்ய அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இக்குற்றச்சாட்டை யூலியன் அசான்ஜ்க்கு நீண்டகாலம் தனது தூதரகத்தில் அடைக்கலம் கொடுத்த ஈக்குவடோரும் உறுதிப்படுத்தியுள்ளது. யூலியன் அசான்ஜ் ஒரு நாள் அலெக்ஸி நிவால்னி போன்றோ அல்லது மக்ஸின் குஸ்ஸிநோவ் போன்றே ஆகலாம் என்ற நிலையேற்பட்டுள்ளது.

மேற்குலகு விதந்துரைக்கும் மனித உரிமைகள், ஜனநாயகம் என்பதெல்லாம் அவரவர் நலன்சார்ந்ததே. “ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லையடி” என்றும் கொள்ளலாம் இல்லையேல் “படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில் என்றும் கொள்ளலாம்”.

அன்று இனவாத பிரிட்டோரியா அரசோடு இணைந்து நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதி என்று முத்திரை குத்திய பிரித்தானியா இறுதியில் அதே நெல்சன் மண்டேலாவுக்கு தன்னுடைய நாட்டிலேயே சிலை எழுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டது. பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலைக்கு செய்யப்படுவதற்கு ஒத்துழைக்கும் பிரித்தானியா எதிர்காலத்தில் பாலஸ்தீன அரசை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிரித்தானியா உலகில் மிக மோசமான குரூரமான காலனித்துவத்தை ஈவிரக்கமின்றி விஸ்தரித்த நாடு. ஆனால் அரசியல் சூழல்கள் மாற்றமடையும்போது அதற்கேற்ப மாறி தன்னுடைய குறைந்தபட்ச நன்மதிப்பை முற்றிலும் இழக்காமல் காப்பாற்றிக் கொண்டுள்ளது.

தற்போது நான்கு மாதம் கழிந்தபின் முன்வைக்கின்ற யுத்தநிறுத்தக் கோரிக்கையும் தன்னுடைய ஜனநாயகப் போர்வை பொசுங்கி தான் அம்பலப்பட்டுப் போவேன் என்ற அச்சமே. அது போல் யுலியன் அசான்ஜ் நாடுகடத்தல் வழக்கில், அவர் நாடுகடத்தப்பட்டால் உலகில் கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரத்துக்கு விழும் மிகப்பெரும் அடியாக அது அமையும். அது வரலாற்றில் பிரித்தானியாவின் நீதித்துறைக்கு ஏற்படும் மிகப்பெரும் கறையாக அமையும். ஏனைய நாடுகளும் பிரித்தானிய சட்டத்துக்கு இணங்க ஊடகவியலாளர்களை படுகொலை செய்வதை நியாயப்படுத்தும்.

ஊழல் குற்றச்சாட்டு – தனது பதவியை ராஜினாமா செய்தார் சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் !

சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இ லஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

 

இருப்பினும், தாம் குற்றமற்றவரென அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் வாதிட்டுள்ளார்.

Formula One Grand Prix கார் பந்தயம் சிங்கப்பூரில் நடைபெற்ற போது, அந்நாட்டு சுற்றுலாத்துறையை மேற்பார்வை செய்தவராக அவர் நன்கு அறியப்படுகின்றார்.

 

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து, அவர் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஊழல், மோசடிகள் அற்ற ஆட்சி நடத்துவதாக சிங்கப்பூர் தெரிவித்து வருகின்ற நிலையில், அமைச்சர் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – இரண்டு சிறுவர்கள் பலி – அதிகரிக்கும் பதற்றம் !

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவுக்குச் சொந்தமான இரண்டு தளங்களைத் தாக்கி அழித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC) செவ்வாயன்று தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குஹே சப்ஸ் பகுதியில் குறிவைக்கப்பட்ட ஜெய்ஷ் உல்-அட்லின் தளங்கள் பயங்கரவாதக் குழுவின் மிகப்பெரிய தளங்களில் ஒன்றாகும் என்று அரசு நடத்தும் மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்த தளங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன” என்று ஈரானிய அரசு ஊடகம் விரிவாகக் கூறாமல் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இதேவேளை ஈரானின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான், இந்த தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்ததாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட கண்டனத்தில்

“பாகிஸ்தானின் வான்வெளியில் ஈரான் அத்துமீறி நுழைந்து இரண்டு அப்பாவி குழந்தைகளின் மரணத்திற்கு காரணமானதுடன் மூன்று சிறுமிகளை காயப்படுத்தியதை கடுமையாக கண்டிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இறையாண்மையை மீறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் இந்த சம்பவம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

“ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயங்கரவாதம் பொதுவான அச்சுறுத்தல் என்று பாகிஸ்தான் எப்போதும் கூறியுள்ளது. இத்தகைய ஒருதலைப்பட்சமான செயல்கள் அண்டை நாடுகளின் உறவுகளுக்கு எதிரான செயற்பாடாகும்.அத்துடன் இருதரப்பு நம்பிக்கையையும் கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தின் மீது  ஈரான் இராணுவம் ஏவுகணை தாக்குதல் !

ஈராக்கில் உள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தின் மீது  ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக  ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

ஈராக்கின் அரைசுயாட்சி குர்திஸ் பிரதேசத்தின் தலைநகரான எர்பிலில் பல வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன. நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் ஆறுபேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலனாய்வு நிலையங்கள் மற்றும் பிராந்தியத்தில் ஈரான் எதிர்ப்பாளர்கள் கூடும் பகுதிகளை இலக்குவைத்து ஏவுகணைதாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது என அந்த நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

சியோனிஸ்ட் அரசாங்கத்தின் சமீபத்தைய அநீதிகளுக்கு பதிலடியாக ஈராக்கின் குர்திஸ்தானில் உள்ள மொசாட்டின் புலனாய்வு அலுவலகம் ஏவுகணைகளால் அழிக்கப்பட்டது என தெரிவித்துள்ள ஈரான் இராணுவம் தியாகிகளின் இரத்தத்தின் கடைசி துளிகளிற்கு பதில் வாங்கும் வரை தாக்குதல் தொடரும் என தேசத்திற்கு உறுதியளிப்பதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் மனிதாபிமானமற்றது பயங்கரவாத தாக்குதல் என  எர்பில் ஆளுநர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஒரு  ஏவுகணைவீடொன்றிற்குள் விழுந்து வெடித்ததில் குர்திஸ்தானை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரும் குடும்பத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானின்  இந்த தாக்குதலை அமெரிக்கா கண்மூடித்தனமான நடவடிக்கை  என வர்ணித்துள்ளது.

ரஸ்யா, சீனா, மத்திய கிழக்கு, செங்கடல் என வருங்காலங்களில் பல யுத்தங்களுக்கு பிரித்தானியா தயார்! பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிரான் சாப்ப் போர் முழக்கம்! மக்கள் பொருளாதார நெருக்கடியில் சுகாதார நெருக்கடியில் திண்டாட்டம்!!!

“ரஸ்யா, சீனா, மத்திய கிழக்கு, செங்கடல் என வருங்காலங்களில் பல யுத்தங்களுக்கு பிரித்தானியா தயார்” என காலனித்துவ மிடுக்குடன் பிரித்தானியா யேமன் மீது தாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்தி நடத்தப்பட்ட பாராளுமன்ற விவாதத்திலேயே பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிரான் சாப் இன்று ஜனவரி 15, போர் முழக்கமிட்டுள்ளார்.

We're running out of patience': Defence Sec Grant Shapps warns Iran to stop  Houthi... - LBC

ஆளும் கட்சியான கொன்சவேற்றிவ் கட்சியும் எதிர்க் கட்சியான தொழிற்கட்சியும் யேமர் மீதான தாக்குதலை ஆதரித்த நிலையில், அடுத்த வருடம் தேர்தலை எதிர் நோக்கும் இரு கட்சிகளும் கொள்கை வேறுபாடு இன்றி போர் முழக்கம் செய்து, போர்களை உற்பத்தி செய்யவும் ஊக்குவிக்கவும் ஏட்டிக்குப் போட்டியாக செயற்படுகின்றன. குறிப்பாக அமெரிக்க – பிரித்தானிய ஆளும் கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிகள் சரிகின்ற போது ஏதாவது காரணத்தைக் கண்டுபிடித்து யுத்தத்திற்குச் செல்வது இது முதற்தடவையல்ல. ஈரானிய சார்புடைய யேமன் குர்த்திஸ் போராளிகளையும் மக்களையும் அழிக்க சவுதி அரேபியா மேற்கொண்ட யுத்தத்திற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் ஆயுதங்களை வாரி இறைத்தனர். அந்த நாட்டை இவர்கள் ஏற்கனவே சீரழித்த அப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியாவின் பட்டியலில் சேர்த்தனர்.

Yemen | History, Map, Flag, Population, Capital, & Facts | Britannica

இப்போது யேமன் அடுத்த அழித்தலுக்கு உரிய இலக்காக மாறியுள்ளது. யாசீர் அரபாத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை பலமிழக்கச் செய்ய இஸ்ரேல் மோசாட்டினால் வளர்த்து விடப்பட்ட ஹமாஸ் தற்போது வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல் இஸ்ரேல் மீது பாய ஆரம்பித்து ஒக்ரோபர் 7இல் இஸ்ரேலை கதிகலங்க வைத்தது. 1200 குடியேற்றவாசிகள் நிராயுத பாணிகளான மக்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டுகின்றது. அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் பெரும்பாலும் சிறார்கள் பெண்கள் என கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் எண்ணிக்கை 30,000த்தை எட்டுவதாக பிரித்தானிய பாராளுமன்ற விவாதத்தில் முன்னாள் தொழிற்கட்சித் தலைவரான ஜெரிமி கோபின் இன்று ஜனவரி 16 தெரிவித்தார்.

யேமனின் குத்திஸ் இராணுவம் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை யுத்தத்தை நிறுத்தாவிடில் செங்கடல் வழியாக இஸ்ரேலுக்குச் செல்லும் அல்லது இஸ்ரேலுக்குச் சொந்தமான கப்பல்களைத் தாக்குவோம் என்று எச்சரித்ததுடன், சில பல தாக்குதல்களையும் நடத்தி இருந்தனர். இதனால் செங்கடலூடாக சரக்குக் கப்பல்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கப்பல்கள் ஆபிரிக்க கண்டத்தைச் சுற்றி பயணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளது. உலக வர்த்தகத்தில் 12 வீதமான சரக்குக் கப்பல்கள் செங்கடல் வழியாகவே பயணிக்கின்றன. தற்போது ஒரு கொள்ளளவுப் பெட்டியின் பயணச் செலவீனம் 750 பவுண்களில் இருந்து 3250 பவுண்களாக அதிகரித்துள்ளது. மேலும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் பொருட்கள் விலையேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா கூட்டுத் தாக்குதலால் அதிரும் ஏமன்! - கனடாமிரர்

அமெரிக்க – பிரித்தானிய யுத்த ஆர்வம் மத்திய கிழக்கில் அமைதியின்மையை மேலும் அதிகரித்துள்ளது. யேமனின் குத்திஸ் படைகள் அமெரிக்க – பிரித்தானிய – இஸ்ரேலிய படைபலத்தோடு ஒப்பிடுகையில் மிகப்பலவீனமான படைகள். ஆனால் அவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அத்தோடு உக்ரைனில் யுத்தம் முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் பிரித்தானியாவும் – அமெரிக்காவும் மிகத் தீவிரமாக உள்ளனர். பல பில்லியன் டாலர்களை இறைத்து உக்ரைன் மக்களையும் இளைஞர்களையும் பலிகொடுத்து ரஸ்யாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் தேர்தலில் தங்கள் ஆளும் குழுமம் வெற்றி பெற வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ளனர். அதற்காக கூலிப்படைகளும் உக்ரைனில் இறக்கப்பட்டுள்ளனர்.

 

இதுவரை யுத்தத்தில் இறங்காத சீனாவை நோக்கியும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிரான் சாப் போர் முழக்கமிட்டுள்ளார். பிரித்தானிய ஊடகங்களும் பெரும்பாலும் ஆட்சியாளர்களின் போர் முழக்கத்துக்கு ஒத்து ஊதி வருகின்றனர். அமெரிக்க, பிரித்தானிய மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு பண உதவியும் இராணுவ உதவியும் வழங்க மற்றைய உலக நாடுகள் இந்தியா நீங்கலாக அனைத்தும் காசா படுகொலைகளை மிக வன்மையாகக் கண்டித்து வருகின்றன. வெள்ளையினத் துவேசத்தால் போராடி மீண்ட தென் ஆபிரிக்கா ஒருபடி மேலே சென்று சர்வதேச நீதி மன்றத்திடம் காசாவின் படுகொலையை நிறுத்தும்படி கோரி உலகின் கவனத்தையும் தலைமைத்துவத்தையும் நிரூபித்துள்ளது.

 

உலகின் பல பாகங்களிலும் தங்களுடைய அரசியல் நலன்களுக்காக தலையீடு செய்து அந்நாடுகளை அரசியல் பொருளாதார ரீதியாகச் சீரழித்த அமெரிக்க – பிரித்தானியக் கூட்டு பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தஞ்சம் கோரி வருபவர்களை இனவாதத்துடன் நடத்துவதுடன் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கவும் மறுக்கின்றனர். அந்தந்த நாடுகளில் அமெரிக்கா – பிரித்தானியா தலையீடு செய்யாமல் இருந்திருந்தால் அம்மக்கள் இங்கு அகதியாக வருவதற்கு எந்தத் தேவையும் இருந்திருக்காது. மேலும் கரீபியன் நாடுகளில் இருந்து தங்கள் தேவைகளுக்காக அழைத்து வரப்பட்டவர்களை அவர்களது இறுதிக் காலத்தில் – வின்ரஸ் ஜெனரேசன் – திருப்பி அனுப்பவும் அடம்பிடிக்கின்றனர். அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட கொடுப்பனவுகளையும் கொடுக்க மறுக்கின்றது இனவாத கட்டமைப்புடைய பிரித்தானிய உள்துறை அமைச்சு.

பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம்? ஆதரவை குவிக்கும் ரிஷி சுனக், போரிஸ்  ஜோன்சன்: முந்துவது யார்? - லங்காசிறி நியூஸ்

குடித்து வெறித்து யுத்தத்திற்கு வாரி வழங்கிய முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், தற்போதைய பிரதமர் ரிஸி சுனாக் கோவிட்டில் தங்கள் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போதே 20 பில்லியன் டொலரை லஞ்சத்தில் காணாமல் ஆக்கியவர்கள். பில்லியன் கணக்கில் பெரி சேவை நடத்தாத நிறுவனங்களுக்கு அதை நடத்துவதற்கே எண்ணியிராத நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுத்து மாட்டிக்கொண்டனர். இப்போது யுத்தங்களை வரவழைத்து கொள்ளை லாப மீட்டும் நிறுவனங்களுக்கு துணைபோகின்றனர் என்ற அச்சமே பிரித்தானிய மக்களிடம் உள்ளது.

 

பிரித்தானிய சுகாதார சேவைகள் வரலாறு காணாது கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மருத்துவர்கள், ஆசிரியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். சம்பள உயர்வுப் போராட்டங்கள் அதிகரித்துள்ளது. நடுத்தர குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு தள்ளப்படுகின்றனர். மாணவர்கள் பட்டினியோடு பாடசாலை வருகின்றனர். உள்ளுராட்சி மன்றங்கள் வழங்கும் அடிப்படைச் சேவைகள் ஒன்றன் பின் ஒன்றாக குறைக்கப்படுகின்றது அல்லது நிறுத்தப்படுகின்றது. தபாலக பொறுப்பாளர்கள் அப்பாவிகள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு 20 வருடங்களாகியும் அவர்களுக்கு நியாயம் வழங்க பிரித்தானியா தயாராகவில்லை. பொய்க் குற்றச்சாட்டுக்களால் தண்டணை பெற்ற பலர் குற்றவாளிகளாகவே இறக்கின்றனர். இவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லை. பிரித்தானியா யுத்தத்தைத் தூண்டுவதிலும் ஏனைய நாடுகளில் மக்களைக் கொல்வதிலும் காட்டும் ஆர்வத்தை தன்னுடைய மக்களுடைய வாழ்க்கையை அவர்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை சீரமைப்பதில் காட்டவில்லை.  அதிகார வெறியும் யுத்த வேட்கையும் தான் பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் உள்ளது. அவர்களிடம் எவ்வித மனிதத்துவப் பண்புகளும் கிடையாது. அமெரிக்க – பிரித்தானிய கூட்டு உலகத்தின் அமைதியின்மைக்கான முக்கிய காரணிகளாக மாறியுள்ளனர். அப்பாவிப் பிரித்தானிய மக்களின் பெயரில் இந்தக் குடிகாரக் கும்பல் சதிராடுகின்றது.

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் – நாளாந்தம் அங்கவீனர்களாகும் நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் !

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தமது கால்களை இழந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து Save the Children அமைப்பின் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில் ”3 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல், காசாவின் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இத்தாக்குதல்களினால் ஏராளமான சிறுவர்கள் கொல்லப்படுவதும், ஊனமாக்கப்படுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதவொன்றாக உள்ளது.

இத்தாக்குதல் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழந்துள்ளனர்”என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சுமார் 50 % க்கும் அதிகமான சிறுவர்கள் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதனால் சிறுவர்களின் உடல் நலத்துக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2024 ஜனாதிபதிதேர்தல் முடிவுகள் என்னை இரவு முழுவதும் உறங்காமல் வைத்திருக்கிறது – மிசெல் ஒபாமா

2024 ஜனாதிபதிதேர்தல் முடிவுகள் குறித்து அச்சமடைந்துள்ளதாக மிசெல் ஒபாமா தெரிவித்துள்ளார்.

என்னை இரவு முழுவதும் உறங்காமல் வைத்திருக்கும்  விடயங்களில் ஒன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் என்ன  நடக்கப்போகின்றது நான்  என்ன நடக்கலாம் என்பது குறித்து அச்சமடைந்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் எங்கள் தலைவர் யார் என்பது மிகவும் முக்கியமான விடயம் நாங்கள் யாரை தெரிவு செய்கின்றோம் யார் எங்களிற்காக பேசப்போகின்றார் என்பது முக்கியம் என மிச்செல்ஒபாமா  தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மக்கள் எதனையும் செய்யவில்லை மக்கள் நினைக்கின்றனர் என தெரிவித்துள்ள முன்னாள் முதல் பெண்மணி அரசாங்கம் எல்லாவற்றையும் எங்களிற்கு செய்யவேண்டுமா என்பதே எனது கேள்வி ஜனநாயகத்தை நாங்கள் சில வேளைகளில் அலட்சியமாக எடுத்துக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஜோ பைடன் தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த தொடங்கியுள்ள சூழலிலேயே மிச்செல் ஒபாமாவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

ஜனநாயகத்தின் எதிர்காலத்தை இந்த வருட தேர்தலே தீர்மானிக்கும் என்ற செய்தியை பைடன் முன்னிறுத்திவருகின்றார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் பைடனிற்கும் இடையில் கடும் போட்டி காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள  ஜனநாயக கட்சியினர் பைடனின் செய்தி மக்களை சென்றடையவில்லை என தெரிவித்து வருகின்றனர்.