ஜெயபாலன் த

ஜெயபாலன் த

‘கன்னி கழியாத என்டொஸ்கோபி’ – டொக்டர் த சத்தியமூர்த்தி “அம்பியா? அந்நியனா?” தொடரும் குற்றச்சாட்டுகள்: “நான் உண்மைகளைச் சொன்னால் கொல்லப்படலாம்” யாழ் டொக்டர் வி நாகநாதன்

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த சத்தியமூர்த்தி தன்மீது வீண்பழிகள் சுமத்தியதாக அவ்வைத்தியசாலையில்; தற்போதும் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றும் டொக்டர் வி நாகநாதன் யூலை 25 அன்று குற்றம்சாட்டியுள்ளார். பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி இவ்வாறு பலர் மீதும் பாய்ந்துள்ளதாகவும் அவர் தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் உள்ளவர் கையில் உள்ள முட்டை கூட அம்மிக்கல்லையும் உடைக்கும் எனத் தெரிவிக்கின்றார், மிகுந்த மனவுறுதி கொண்ட டொக்டர் வி நாகநாதன். பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தியால் ஓகஸ்ட் 2017இல் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், டொக்டர் வி நாகநாதன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று குற்றம்சுமத்தி அவரை தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்ததோடு அவருக்கு வழங்கவேண்டிய சம்பளத்தையும் இடைநிறுத்தி வைத்;திருந்தார். பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி அதற்குப் பின் 2023 இல் இன்னுமொரு குற்றச்சாட்டையும் டொக்டர் வி நாகநாதன் மீது எழுப்பியிருந்தார். டொக்டர் வி நாகநாதன், தனது முகநூலில் தங்களுடைய ஸ்தாபனப் பணிக்கோவைக்கு மாறாக தகவல்களை வெளியிடுவதாக குற்றம்சாட்டி அக்கடிதத்தை சுகாதார அமைச்சுக்கு அனுப்பி இருந்தார்.

யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி, டொக்டர் வி நாகநாதனுக்கு எதிராக பனிப்போர் தொடுக்க என்ன காரணம்? இதற்குப் பின்னாலும் ஒரு மோசடி அம்பலப்படுத்தப்பட்டது காரணமாக இருந்துள்ளது. டொக்டர் த சத்தியமூர்த்தி, டொக்டர் வி நாகநாதனை தற்காலிகமாக இடைநிறுத்தி அவரது சம்பளமும் நிறுத்தப்பட்ட ஓகஸ்ட் 2017க்கு ஆறு மாதங்கள் முன்பாக பெப்ரவரி 2017இல் “கைபடாத என்டஸ்கோபி இயந்திரம்: கன்னி கழிவது எப்போது” என்ற யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல் மோசடியை அம்பலப்படுத்தும் அகரன் என்பவர் எழுதிய கட்டுரை புதுவிதி என்ற பத்திரிகையில் வெளியாகி இருந்தது. அக்காலகட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்தவர் இன்றும் அதே பதவியில் இருப்பவர் டொக்டர் த சத்தியமூர்த்தி. இந்த ஊழல் குற்றச்சாட்டுக் கட்டுரை பணிப்பாளர் டொக்டர் த சத்தியமூர்த்தியை வெகுவாகப் பாதித்திருக்கும் என்பது பொதுப்புத்திக்கு தெரிந்த விடயம். “இக்கட்டுரையை அகரன் என்ற பெயரில் எழுதியது புலனாய்வு ஊடகவியலிலும் தேர்ச்சி பெற்ற டொக்டர் வி நாகநாதன் அல்லது இவர் இக்கட்டுரைக்கான தகவலை அகரன் என்ற புனைப்பெயரில் எழுதியவருக்கு வழங்கியிருக்கு வேண்டும்” என்ற எண்ணப்பாடு அங்கு இருந்து என்கிறார் டொக்டர் வி நாகநாதன். ஆனால் அவர் அதனைத் தான் எழுதியதாகவோ அல்லது அதற்கான தகவல்களை வழங்கியதாகவோ குறிப்பிட மறுத்துவிட்டார். இந்தப் பின்னணியிலேயே டொக்டர் விநாகநாதன் சக மருத்துவர்களோடும் சக மருத்துவப் பணியாளர்களோடும் தகாதமுறையில் நடப்பதாகவும் இவருக்கு மனநோய் இருப்பதாகவும் குற்றம்சாட்டி பணிப்பாளர் த சத்தியமூர்த்தி இவரைத் தற்காலிகமாக வேலையிலிருந்து நிறுத்தியதுடன் அவருடைய சம்பளத்தையும் எவ்வித மனிதாபிமானமும் காட்டாமல் நிறுத்தியுள்ளார்.

டொக்டர் த சத்தியமூர்த்தியால் வைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் நீண்ட போராட்டத்தினூடாக வெற்றிகொண்ட டொக்டர் வி நாகநாதன் மருத்துவத்துறையில் யாழ் வைத்தியசாலையில் கட்டமைப்பு ரீதியான (பழிவாங்கல்கள்) செயல்கள் இடம்பெறுவதாகக் குற்றம்சாட்டினார். இன்றும் இக்குற்றச்சாட்டுக்களை வைத்துவிட்டு அவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு பணிக்குத் திரும்புகின்றார். டொக்டர் த சத்தியமூர்த்தியின் நிர்வாகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் – பணியில் உள்ளவர்கள் ஒரு நச்சுச் சூழலிலேயே பணியாற்றுவதாக தெரிகின்றது. தானோ சத்தியமூர்த்தியோ ‘ஒரு குட் மோர்னிங்’ கூடப் பரிமாறிக்கொண்ட ஞாபகம் தனக்கில்லை என்கிறார் டொக்டர் வி நாகநாதன்.

பணிப்பாளர் டொக்டர் த சத்தியமூர்த்தி குற்றச்சாட்டுகளை டொக்டர் வி நாகநாதன் மீது மட்டும் எழுப்பவில்லை. இவ்வாண்டு ஏப்ரலில் டொக்டர் என் ஜெயகுமரன் தொழில்முறை தவறி தன்னால் சிகிச்சை அளிக்கப்பட்ட புற்றுநோய் நோயாளிகளை யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதாக டொக்டர் த சத்தியமூர்த்தி குற்றம்சாட்டி கடிதம் அனுப்பி இருந்தார். பொது அறிவின் அடிப்படையில் மகரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமான யாழ் நோயாளிகள் தொடர்ந்தும் மகரகம சென்று செக்அப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நோயாளிகள் அலைக்கழியாமல் அந்தச் செக்அப்பை யாழிலேயே செய்ய முடியும். ஆனால் அதனைச் செய்யாமல் டொக்டர் ஜெயக்குமரன் மீது குற்றம்சுமத்தி த சத்தியமூர்த்தி கடிதம் எழுதியது ஏன்? என்ற கேள்வி அண்மையில் டான் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கேட்கப்படவில்லை. த சத்தியமூர்த்தியும் அதற்கான விளக்கத்தை அளிக்கவில்லை. “எனது கடமையைச் செய்கிறேன். குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பது எனது பொறுப்பல்ல என்ற வகையிலேயே அப்பதில் அமைந்தது.

டொக்டர் அர்ச்சுனா எய்த அம்பில் சிக்கிய டொக்டர் கேதீஸ்வரன், டொக்டர் இந்திரகுமார், டொக்டர் மயூரன், டொக்டர் பிரணவன் வரிசையில் டொக்டர் த சத்தியமூர்த்தி தொடர்ந்தும் பலரினால் குற்றம்சாட்டப்பட்டு வருகின்றார். முள்ளிவாய்க்கால் முடிவுவரை மருத்துவப் பணியில் ஈடுபட்டு பல உயிர்களைக் காத்தவர் டொக்டர் த சத்தியமூர்த்தி. இவர் மனித உரிமைக் கவுன்சிலில் அரசுக்கு சாதகமாக சாட்சியமளித்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அதனை யாரும் ஒரு தவறாகக் கருதவில்லை. தொடர்ந்தும் அவர் மக்களுக்கு சேவை வழங்க வந்திருப்பதை பலரும் வரவேற்றனர். அதன் காரணமாக இன்னும் பலருக்கும் டொக்டர் த சத்தியமூர்த்தி மீது ஒரு மென்போக்கு உள்ளது.

டொக்டர் என் ஜெயக்குமரன் யாழ் போதனா வைத்தியசாலையில், இடம்பெற்ற ஊழலை அம்பலப்படுத்தியதற்காகவே அவர் குடும்பத்தின் மீது கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டு, குடும்பத்துடனேயே யாழில் இருந்து உயிருக்கு அஞ்சி ஓட நிர்ப்பந்திக்கப்பட்டார், இச்சம்பவம் டொக்டர் பவானி பணிப்பாளராக இருந்த போது அவரின் பின்னணியில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. 2012 இல் இடம்பெற்ற அச்சம்பவத்திற்கும் டொக்டர் பவானிக்குப் பின் 2015இல் பணிப்பாளராக பொறுப்பேற்ற டொக்டர் த சத்தியமூர்த்திக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. டொக்டர் ஜெயகுமரனுக்கும், டொக்டர் சத்தியமூர்த்திக்கும் எவ்வித முன் விரோதமும் இல்லை. அப்படியிருந்தும் டொக்டர் த சத்தியமூர்த்தி எதற்காக டொக்டர் என் ஜெயகுமரனைக் குற்றம்சாட்டி அக்கடிதத்தை ஏப்ரல் 2024இல் எழுதினார். டொக்டர் த சத்தியமூர்த்தி அப்பாவி ‘அம்பியா ?’மாபியா கும்பலைத் திருப்திப்படுத்த அந்த முறையற்ற கடிதம் அனுப்பப்பட்டதா? இல்லை அவர் ‘அந்நியனா’ அவரும் மாபியா கும்பலின் பிரதிநிதியா?
டொக்டர் த சத்தியமூர்த்தி யாழ் சைவ வேளாள மேட்டுக்குடியைச் சேர்ந்தவரல்ல. யாழ் போதனா வைத்தியசாலைக்கு இவர் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதில் யாழ் சைவ வேளாள மேட்டுக்குடிக்கு எப்போதும் ஒரு புகைச்சல் இருந்துள்ளது. இன்றும் இப்புகைச்சல் இருக்கின்றது. கிளிநொச்சியில் வாழ்ந்த மலையகப் பின்புலத்தைக் கொண்ட வறுமைப்பட்ட குடும்பத்திலிருந்து மேலெழுந்தவர் டொக்டர் த சத்தியமூர்த்தி. அவர் பணிப்பாளராகப் பொறுப்பேற்றதன் பின் யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு சாதகமான பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகள் அனுமதிக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளும் உள்ளது. அவ்வாறான பல குற்றச்சாட்டுகளில் கை படாத என்டோஸ்கோபி இயந்திரம், கன்னி கழியாது சில ஆண்டுகள் அங்கு இருந்ததும் ஒன்று.

யாழில் பரீட்சை எடுத்து மருத்துவம் கற்கும் யாழ் மருத்துவ மாணவர்கள், ஏனைய தமிழ் மாவட்டங்களில் இருந்து மருத்துவம் கற்க வருகின்ற மாணவர்களை கிஞ்சித்தும் மதிப்பதில்லை எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில் மருத்துவத்துறைக்குத் தெரிவு செய்யப்பட்ட பெயர் குறிப்பிட விரும்பாத டொக்டர். ஏனைய தமிழ் மாவட்டங்களில் மருத்துவத்துறைக்கான வெட்டுப்புள்ளி யாழ் மாவட்டத்தைவிட குறைவாக இருப்பதால் அவர்கள் பகிடிவதை என்ற பெயரில் பல்கலைக்கழகம் புகுந்தகாலம் முதல் நையப்புடைக்கப்பட்டு இரண்டாம் தரமானவர்களாகவே கணிக்கப்படுகின்றனர். அவர்கள் மருத்துவர்களாகி பதவிகளைப் பொறுப்பேற்றாலும் இந்தப் பேதமை அவர்களின் ஆழ்மனங்களில் இருக்கின்றது என்றும் அந்த வன்னி டொக்டர் தெரிவிக்கின்றார். அப்படி இருக்கையில் கிளிநொச்சியிலிருந்து மலையகப் பின்னணியோடு மருத்துவரான த சத்தியமூர்த்தி தன்னுடைய பதவியைத் தக்க வைப்பதென்பதே மிகுந்த நெருக்கடியானது.

நிலைமை இப்படி இருக்கையில், டொக்டர் த சத்தியமூர்த்தி அங்கிருந்து யாழ் மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதனையும் எடுத்திருக்க முடியுமா? என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. பல்வேறு இன்னல்கள் மத்தியிலும் தான் அடைந்த அந்த முக்கிய பதவியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் யாராக இருந்தாலும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் டொக்டர் த சத்தியமூர்தி அங்கு வெளித்தெரியாத மருத்துவ மாபியாக்களின் சூழ்நிலைக் கைதியாக ஒரு ‘அம்பி’யாக இருக்க வாய்ப்புள்ளது. இல்லையேல் டொக்டர் த சத்தியமூர்த்தியும் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை கொண்டு அதற்கு அடிமைப்பட்டு அவரும் ஒரு ‘அந்நியனாக’ மருத்துவ மாபியாக்களில் ஒருவராக மாறியிருக்கலாம். டான் தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டது போல் “நான் எனது கடமையைச் செய்கிறேன். வரும் குற்றச்சாட்டுகள் பற்றி அக்கறையில்லை” என்று தொடர்ந்தும் தத்துவம் பேச முடியாது. வடக்கில் உள்ள பதினைந்து லட்சம் வரையான மக்களின் மருத்துவம் உயிர்வாழ்வு யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக த சத்தியமூர்த்தியின் முடிவுகளில் உள்ளது. அவர் வடக்கு தமிழ் மக்களுக்கு பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளார். 2015 முதல் அவர் சம்பாதித்த அசையும் அசையாச் சொத்துக்களை வெளிப்படுத்தி யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 2015 முதல் என்ன நடந்தது என்று சத்தியம் பேச வெண்டும்.

கடற்தொழில் அமைச்சராக இருந்தாலும், வடக்குக்கு பொறுப்பான அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டு வருகின்றார். தமிழ் தேசியம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் புறம்தள்ளப்பட்டு அமைச்சராக இருந்தாலும் மக்களால் அணுகக் கூடிய ஒருவராக டக்ளஸ் தேவானந்த பார்க்கப்படுகின்றார். யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய அபிவிருத்திச் சங்கமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதிகளின் கைகளிலேயே உள்ளது. இவர்களோடு நெருங்கிய ஒருவர் தேசம்நெற்க்கு இன்று தெரிவிக்கையில், “டொக்டர் த சத்தியமூர்த்தியின் கைகளும் சுத்தமான கைகள் அல்ல. ஆனால் அங்கு பணிப்பாளர் பொறுப்பை ஏற்பதற்கு அவரிலும் பார்க்க மோசமானவர்களே உள்ளனர்” எனத் தெரிவித்தார். தாங்கள் டொக்டர் த சத்தியமூரத்தியை பணிப்பாளர் பதவியிலிருந்து இறக்குவதற்கு கோரியதாக குறிப்பிட்ட சமூக செயற்பாட்டாளர், அதனால் தான் தாங்கள் அவரை மகாணப் பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கியதாகவும் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

டொக்டர் சத்தியமூர்த்தியின் தொழில்முறைக்கு முரணாண செயற்பாடுகள், தனிப்பட்ட பழிவாங்கள்கள் தொடர்பில் GMOA – ஜிஎம்ஓஏ டொக்டர் மதிவாணன் 30 வரையான பக்கங்களைக் கொண்ட அறிக்கையை தயாரித்து சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளார். இந்த விசாரணை தொடர்பிலேயே வெளிநாட்டில் கற்கைகளுக்காகச் சென்றிருந்த த சத்தியமூர்த்தி கற்கையை இடைநிறுத்தி அவசர அவசரமாக நாடு திரும்பினார். டொக்டர் அர்ச்சுனா பதவியை பொறுப்பேற்க முன்னமே அவரை யாழில் இருந்து விரட்ட விடாமுயற்சி எடுத்த ஜிஎம்ஓஏ, இறுதியில் அர்ச்சுனாவை வெளியேற்றும்வரை தென்மராட்சி மக்களின் உயிரைப் பணயம் வைத்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டது. ஆனால் டொக்டர் த சத்தியமூர்த்தி விடயத்தில் அவரைக் குற்றம்சாட்டுகின்ற அந்த அறிக்கை வெளியே வராமலேயே மூடி மறைக்கப்பட்டது. இந்த அறிக்கை மருத்துவ மாபியாக்கள் டொக்டர் த சத்தியமூர்த்தியை சூழ்நிலைக் கைதியாக்கும் ஆயதமா? என்ற கேள்வி எழுப்பப்படாமலிருக்க வாய்ப்பில்லை.

கபிடல் தொலைக்காட்சியின் அதிகாரம் நிகழ்ச்சியில் யூலை 25 டொக்டர் வி நாகநாதன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஷியா உல் ஹஸனுடன் மேற்கொண்ட உரையாடல் மருத்துவத்துறையை குறிப்பாக மருத்துவ மாபியாக்களின் பழிவாங்கல் செயற்பாடுகளை அம்பலப்படுத்தி உள்ளது. டொக்டர் வி நாகநாதன் மேலும் தெரிவிக்கையில் சிறுநீரக மாபியாக்கள், கருவள மாபியாக்கள் எனப் பல்வேறு ஊழல்கள் பற்றியும் பேசினார். மேலதிக தகவல்களை வெளியிடுவது தனது உயிருக்கும் ஆபத்தாக முடியும் என்கிறார் டொக்டர் வி நாகநாதன். வரும்நாட்கள் அவருடைய பணிக்கும் உயிருக்கும் சவாலாக அமையுமா? என்பதை காலம்குறித்துக்கொள்ளும்.

தமிழ் தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள்: த சித்தார்த்தன், எஸ் சிறிதரன், எம் சுமந்திரன், செ அடைக்கலநாதன், செ கஜேந்திரன், இவர்களின் அடிப்பொடிகள் தேசியம் பேசாதவர்கள்: ரா அங்கஜன் அவர் அடிப்பொடிகள், இவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு ரமேஸ் பத்திரண சென்று மக்களின் குறைகளை விசாரிப்பதை விரும்பவில்லை. அதற்குக் காரணம் டொக்டர் த சத்தியமூர்த்தி, டொக்டர் கேதீஸ்வரன், டொக்டர் இந்திரகுமார், டொக்டர் மயூரன், டொக்டர் ராஜீவ் போன்றவர்கள் இவர்களுக்குக் கொடுத்த அழுத்தம். இவர்களோடு மலையகப் பெண்களுக்கு குளியல் அறையை மறுத்து அவர்கள் வெளியே நீராடுவதை சிசிரிவியில் பதிவுசெய்து அச்சிறுமிகளை துன்புறுத்திய ஆறு திருமுருகன் நெருங்கிய நட்பிலும் உள்ளார். அண்மையில் அபயம் என்ற அறக்கட்டளை மேலுமொரு ஸ்கானிங் மெசினை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்திருந்தது.

மேற்குறிப்பிட்டவர்களுடைய பிறந்த தினங்களில் பாராட்டு நிகழ்வுகளில் ஆளுக்கு ஆளாள் துதிபாடும் ஆறுதிருமுருகன் தனது பெயருக்கு வெள்ளையடிக்க அந்த ஸ்கானிங் மெசின் வழங்கப்பட்ட புகைப்படத்திலும் தன்னைச் செருகிக் கொண்டார். ஆனால் அந்த மெசினை வாங்கிக்கொடுத் கொடைவள்ளல் அங்கில்லை. இந்த ஸ்கானிங் மெசினில் யாருடைய கையாவதுபடுமா? அல்லது அதுவும் என்டோஸ்கோபி மற்றும் சாவகச்சேரியில் உள்ள மெசி;ன்கள் போல் மூடிக்கட்டி வைக்கப்படுமா என்பதை காலம் தெளிவாகச் சொல்லும். வழித்தேங்காயை தெருப்பிள்ளையாருக்கு உடைத்துவிட்டு அதனை பொறுக்கிக்கொண்டு சென்று விற்கும் மாபியாக்கள் எல்லாம் ஓரணியில் திரள்கின்றனர். இவர்களுக்கு வக்காலத்து வாங்க கள்ள உறுதி முடிப்பதை கண்டுகொள்ள வேண்டாம் என்று கேட்ட குமாரவடிவேல் குருபரன் தலைமையிலான அப்புக்காத்துக்கள் பைலும் கையுமாகச் சுற்றுகிறார்கள். தமிழ் தேசியத்தை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியுமா?

மௌனம் சம்மதமல்ல: “எனது வீட்டை அடித்து நொருக்கி எரித்து என்னை யாழில் இருந்து விரட்டியது டொக்கடர் சத்தியமூர்த்தி அல்ல, மெடிகல் மாபியா” டொக்டர் ஜெயகுமரன்

யாழில் புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஜெயகுமரன் வீட்டை அடித்து நொருக்கி கழிவு எண்ணை ஊற்றி தன்னை விரட்டியது டொக்டர் த சத்தியமூர்த்தி அல்ல என்று டொக்டர் நடராஜா ஜெயகுமரன் இன்று யூலை 19 இணையத்தளப் பதிவில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சமூகவலைத் தளங்களில் பரவியுள்ள இந்தத் தவறான செய்தியால் தன்னுடைய நன்மதிப்பு பாதிக்கப்பட்டதுடன் தனக்கு அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ளதாக டொக்டர் சத்தியமூர்த்தி தேசம்நெற்றுக்கு அனுப்பிய குறும் செய்தியில் இன்று யூலை 19 குறிப்பிட்டுள்ளார்.

நேற்று யூலை 18 மாலை கப்பிடல் தொலைக்காட்சியின் அதிகாரம் நிகழ்வுக்கு நேரடியாக வந்து நேர்காணல் வழங்கிய மகரகம தேசிய புற்றுநோய் மருத்துவ நிபுணர் நடராஜா ஜெயகுமரன், நேர்கண்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர் சியா உல் ஹஸ்ஸன் 2012இல் வீட்டை அடித்து நொருக்கி எரித்தமை தொடர்பாக அழுத்திக் கேட்டதுடன் டொக்டர் சத்தியமூர்த்தியுடைய பெயரையும் அழுத்தமாகக் குறிப்பிட்டார். அப்போது டொக்டர் நடராஜா ஜெயகுமரன் மௌனமாகவே இருந்தார். அந்த ஒளிப்பதிவு டொக்டர் சத்தியமூர்த்தியே டொக்டர் ஜெயகுமரனை வெளியேற்றியத்தின் பின்னணியில் இருந்தார் என்பதை உருவகப்படுத்தியது.

டொக்கடர் அர்ச்சுனாவின் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிகின்ற நிலையில், அர்ச்சுனாவும் டொக்டர் சத்தியமூர்த்திக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்களை வைத்துள்ள நிலையில், டொக்டர் சத்தியமூர்த்தி மிகத் தவறாக குற்றம்சாட்டப்பட்டார். நேர்காணலை மேற்கொண்ட சியா உல் ஹஸ்ஸனோ அல்லது புற்றுநோய் நிபுணரோ இரு மணிநேரம் வரை நீடித்த நேர்காணலில் இதனைத் தெளிவுபடுத்தத் தவறியிருந்தனர்.

இந்நிகழ்ச்சி டொக்டர் சத்தியமூர்த்தி புற்றுநோய் நிபுணர் நடராஜா ஜெயகுமரன் அவர்கள் தொழில்முறைக்கு மாறாக தான் சிகிச்சை அளித்த நோயாளிகளை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புகின்றார் என்று இவ்வாண்டு மே மாதம் குற்றம்சாட்டி எழுதப்பட்ட கடிதம் தொடர்பாகவே அமைந்தது. அச்சமயத்தில் டொக்டர் அர்ச்சுனாவின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஊழல்கள் அம்பலப்படுத்தியதையும் சுட்டிக்காட்டி, தானும் யாழில் இருந்து வலிந்து துரத்தப்பட்டதை புற்றுநோய் நிபுணர் நடராஜா ஜெயக்குமரன் அந்நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த உரையாடல்களுக்கு மத்தியில் தனது வீடு அடித்து, நொருக்கி, எரிக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், அதனால் யாழில் இருந்து வெளியேறியதாகவும் புற்றுநோய் நிபுணர் ஜெயகுமரன் குறிப்பிட்டார். இந்தப் பின்னணியில் அந்த வீடு உடைக்கப்பட்ட பிரச்சினைக்கும் டொக்டர் சத்தியமூர்த்தியுடைய கடிதமும் தொடர்புபடுத்தப்பட்டதுடன் டொக்டர் சத்தியமூர்த்தி வீடுடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபடுவதாக அந்த நேர்காணல் நகர்ந்தது. இது தொடர்பில் புற்றுநோய் நிபுணர் ஜெயகுமரன் மௌனமாகவே இருந்தார். இதுவே டொக்டர் சத்தியமூர்த்தி மீது இந்த வீண்பழி விழக் காரணமானது.

ஆனால் அதனைத் தற்போது தெளிவுபடுத்தியுள்ள டொக்டர் ஜெயகுமரன், என்னை விரட்டியடித்ததும் எனக்கு தவறான முறையில் கடிதம் அனுப்பியதும் இரு முற்றிலும் வேறுபட்ட சம்பவங்கள் என்றும் மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட வேண்டாம் என்று கேட்டுள்ளார்.

அந்நேர்காணலில் யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் நிபுணராகக் கடமையாற்றிய தன்னை, ஊழல்களை வெளிப்படுத்தியதற்காக, உயிர் அச்சுறுத்தல் கொடுத்து வீட்டை அடித்து நொருக்கி எரித்து யாழில் இருந்து விரட்டி அடித்தனர் யாழ் மருத்துவ அதிகாரிகள் எனக் குற்றம்சாடினார் புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஜெயகுமரன். 2004 முதல் 2012 யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய இவர் அங்கு நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டுவந்ததால் தனக்கு எதிராக கடுமையாகவும் மோசமாகவும் நடந்து கொண்டதாக கபிடல் தொலைக்காட்சியின் அதிகாரம் நிகழ்வில் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவரின் பெயரைச் சொல்வதற்கே அருவருப்படைந்த டொக்டர் ஜெயகுமரன், பதவியைக் குறிப்பிட்டே இந்த விமர்சனத்தை வைத்தார். நேர்கண்ட சியா உல் ஹஸ்ஸன் டொக்டர் சத்தியமுமூர்த்தியின் பெயரைக் குறிப்பிட்டு இக்குற்றச்சாட்டை வைத்த போது டொக்டர் ஜெயக்குமரன் மௌனமாக இருந்தார். மௌனம் சம்மதமாக பார்வையாளர்களால் விளங்கிக்கொள்ளப்பட்டது.

தனது குடும்பத்தையும் இவர்கள் வன்முறையால் அச்சுறுத்தியதால் தன்னால் மேற்கொண்டு அங்கு பணிபுரிய முடியவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து மகரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனை – அபேஸ்கா வில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக புற்றுநோய் சிகிச்சை நிபுணராக அவர் கடமையாற்றி வருவதாகவும் டொக்டர் ஜெயகுமரன் அதில் தெரிவித்தார்.

யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் டொக்டர் அர்சுனாவால் அம்பலத்துக்கு வந்ததையடுத்து யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தனது சகோதரன் இராசரத்தினம் பிரகாஸ் இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் முதலுதவிச் சிகிச்சை கூட வழங்கபடாமல் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாமல் எட்டு மணி நேரத்துக்குப் பின் இரத்தப்போக்கால் உயிரிழந்த செய்தி யூலை 14 தேசம்நெற் இல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் உள்ள புற்றுநோய் மருத்துவ நிபுணர் டொக்டர் கிருசாந்தி தங்களது தந்தையர்களுடைய புற்றுநோய்யை குணமாக்குவதிலோ நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதிலோ எவ்வித அக்கறையும் காட்டவில்லை என கொடிகாமம், சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு ஆண்மகன்கள் நேரடிச்சாட்சியமளித்தனர். இவர்கள் மகரகமையில் டொக்டர் நடராஜா ஜெயகுமரனின் சிகிச்சையால் தங்கள் தந்தையர் குணமமைந்ததாகவும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை நம்பியிருந்திருந்தால் தங்கள் தந்தையர்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டார்கள் என்றும் மகன்மார் தெரிவித்தனர்.

புற்றுநோய்க்குள்ளான நோயாளியின் கணவர் தன்னுடைய மனைவிக்கு நடந்த கொடுமையை விபரிக்கையில் “ஆறாவது தடவை மருந்து ஏற்றும் காலம் தவறிவிட்டது” என்று டொக்டர் கிருசாந்தி தெரிவித்து இருக்கிறார். “அப்ப என்ன செய்யலாம் டொக்டர்?” என்று கணவர் கேட்க, “வீட்டை கூட்டிக்கொண்டு போய் நாளைக் எண்ணிக்கொண்டிருங்கோ” என்று அலட்சியமாக அதிகாரத்தோரணையில் தெரிவித்ததாக அக்கணவர் கண்கலங்கியவாறு தெரிவித்தார். அதன் பின் இந்தியா அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று மீண்டும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற போது “எங்கேயோ எல்லாம் போய் நீங்கள் ரீட்மன்ட் எடுத்திட்டு வாறத பார்க்கவோ நான் இங்க இருக்கிறன்” என்று டொக்டர் கிரிசாந்தி தெரிவித்ததாக அக்கணவர் தெரிவித்தார். மேலும் சிகிச்சைக்கு வந்து உதவும்படி கேட்ட போதும் டொக்டர் கிருசாந்தி மறுத்துள்ளார். எல்லாம் கையறுந்த நிலையில் மகரகம புற்றுநோய் மருத்துவ நிலையத்துக்குச் சென்றபோது காலம் கடந்துவிட்டது. அங்கும் புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை கூடுதாலக இருந்ததால் பாதிக்கப்பட்ட பெண் சிஅங்கு மரணத்தை தழுவினார்.

டொக்டர் ஜெயக்குமரனின் நன்மதிப்பை அறிந்து பலர் யாழில் இருந்து மகரகம சென்று சிகிச்சை எடுக்கின்றனர். முக்கிய சிகிச்சைகள் முடிவடைந்து குணமானவர்கள் ஊர் திரும்பியபின் வழமையான பரிசோதணைகளை யாழ் தெல்லிப்பளையில் செய்யும்படி மகரமக வைத்தியசாலை கடிதம் கொடுத்து விட்டால், யாழ் தெல்லிப்பளையில் இந்த நோயாளிகளை சிகிச்சை அளிக்காமல் அவர்களை அலைச்சலுக்கு உள்ளாக்குவதாக டொக்டர் நடராஜா ஜெயக்குமரன் தெரிவிக்கின்றார். இது தொடர்பில் டொக்டர் சத்தியமூர்ந்தி உட்பட ஐவர் கையெழுத்திட்டு டொக்டர் நடராஜா ஜெயகுமரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் அவர் தேவையற்ற விதத்தில் தன்னுடைய நோயாளிகளை தங்களுக்கு அனுப்பி வைப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஒவ்வொரு நோயாளிக்கும், தனக்கு பொருத்தமான வசதியான இடத்தில் சிகிச்சையைப் பெறுவதற்கு முழு உரிமையும் உண்டு. அரசாங்கம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கே மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்குகிறது. ஆனால் டொக்டர் சத்தியமூர்த்தி சிகிச்சை முடிவின்பின் மேலதிக சிகிச்சைகளை யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாழில் வழங்குவதற்கு ஏன் மறுப்புத் தெரிவிப்பது நோயாளர்களுக்கு மிகுந்த கஸ்டத்தையும் செலவீனத்தையும் ஏற்படுத்துகின்றது. இவர்கள் மருத்துவத்துறையை அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக அங்குள்ள கண்ணியமான கறைபடியாத மருத்துவர்களை அதிகாரிகளை விரட்டுவதிலும் யாழ் நோக்கி வரும் சிறந்த மருத்துவர்களை அதிகாரிகளை விரட்டுவதிலுமே குறியாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் வலுவடைந்து வருகின்றது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் என்ன நடந்ததோ அதுவே தனக்கு 2012 இல் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நிகழ்ந்தது என்கிறார் டொக்டர் நடராஜா ஜெயக்குமாரன். தான் தொடர்ச்சியாகவே இந்த டொக்டர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஐவர் கையொப்பமிட்ட கடிதம் வந்ததாகவும் அவர் தெரிவித்தார். டொக்டர் அர்ச்சுனாவை மிரட்டுகின்ற மருத்துவ மாபியாக்களே டொக்டர் ஜெயகுமரனை யாழில் இருந்து வெளியேற்றுவதிலும் ஈடுபட்டிருந்தது. 2012இல் சமூகவலைத்தளங்கள் ஆதிக்கம் பெற்றிருந்தால் தானும் டொக்டர் அர்ச்சுனா போன்றே செயற்பட்டிருப்பேன் என்றார் புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஜெயகுமரன்.
கபிடல் தொலைக்காட்சியின் தவறான திசைதிருப்பும் நேர்காணலை அடிப்படையாகக் கொண்டு செய்தி வெளியிட்டவர்கள் தற்போது செய்தியின் உண்மைத் தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்துவது அவசியம். மகரகம புற்றுநோய் மருத்துவநிபுணர் நடராஜா ஜெயகுமரனின் வீடு அடித்து நொருக்கப்பட்டு கழிவு எண்ணையும் ஊற்றப்பட்டது என்பது முற்றிலும் உண்மை. அது அவர் அங்கு நடைபெற்ற ஊழலை வெளிக்கொணர்ந்ததால் அதற்கான பழிவாங்கலாக மருத்துவ மாபியாக்களால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் டொக்டர் ஜெயக்குமரனின் வீடு தாக்கப்பட்டு அவர் யாழில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கும் டொக்டர் சத்தியமூரத்திக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்ற உண்மை பதிவுசெய்யப்பட வேண்டும்.

“பிரச்சினை இருக்கு ஆனா இல்ல. அவை விசயம் தெரியாம (தென்மராட்சியாருக்கு கொஞ்சம் அறிவு குறைவு) பெரிசாக்கி கதைக்கினம்” புளொட் தலைவர் த சித்தார்த்தன்

 

வடக்கின் சுகாதார நிலைகள் பற்றிக் கேட்டறிய நேற்று யூலை 18 சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண யாழ் விஜயம் மேற்கொண்டிருந்தார் அங்கு அவரைச் சந்தித்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சி சார்பில் எஸ் சிறிதரன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ராமநாதன் அங்கஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால் இவர்கள் வடக்கில் மக்களுக்கு சுகாதாரப் பிரச்சினைகளோ, பாதிப்போ இருப்பதாக எதுவும் குறிப்பிடவில்லை.

 

மாறாக புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்ற போது ரமேஸ் பத்திரணவின் தந்தைக்கு புகழாரம் சூட்டியதோடு தங்களுடைய பிரதேசத்துக்கு வந்ததற்கும் நன்றியும் தெரிவித்தார். தென்மராட்சி மக்களும் மற்றவர்களும் ஏதோ விசயம் தெரியாமல் கொஞ்சம் எல்லாத்தையும் பெருப்பித்துப் போட்டினம். பிரச்சினை இருக்குத் தான். ஆனா பிரச்சினை இல்லை” என்று மிகத் தெளிவாக மிக உறுதியாக சிரித்து சில்லெடுத்தார். இலங்கையில் உள்ள முதகெலும்பற்ற பிரயோசனமற்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்று பெயரெடுத்த சித்தார்த்தனுக்கு ஊன்றுகொலாக பா உ சிறிதரனும் அங்கு வந்திருந்தார். பக்கத்தில் உள்ள தென்மராட்சி மக்களின் குரலுக்கு செவிமடுக்காத எஸ் சிறிதரன், லண்டனில் தனது மகனை படிப்பிக்கும் கோயில்காரரின் தேருக்கு லண்டனுக்கு காவடி எடுக்கின்றார். பா உ எஸ் சிறிதரன் லண்டன் வந்தால் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டம் ஒன்றை நடத்த லண்டனில் வாழும் தென்மராட்சி மக்களும் அவர்களின் நண்பர்களும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிபேதமில்லாமல் தென்மராட்சி மக்களதும் தமிழ் மக்களதும் முதகில் குத்திவிட்டதாக கிளிநொச்சியில் வாழும் மனிதஉரிமைப் பாதுகாவலர், செயற்பாட்டாளர் த கிருஷ்ணன் தேசம்நெற்க்கு யூலை 18 வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். பா உ க்கள் எஸ் சிறிதரன், எம் சுமந்திரன், த சித்தார்த்தன், ராமநாதன் அங்கஜன், செல்வம் அடைக்கலநாதன், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் அவர்களது கட்சிகளும் தாங்களுக்கு தமிழ் மக்களது அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளில் அக்கறையில்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டிவிட்டார்கள் என த கிருஷ்ணன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

யாழ்ப்பாண வைத்தியசாலை ஐரோப்பிய வைத்தியசாலைகளின் தரத்தில் இருப்பதாக ரமேஸ் பத்திரண தெரிவித்ததை வேடிக்கையாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். இப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அவர்களது குடும்பத்தினருக்கோ இனிமேல் வயிற்றுவலி வந்தால், பாம்பு கடித்தால், பல்லுக் கொதித்தால், நெஞ்சு நொந்தால், பிள்ளைப்பேறு என்றால் அருகில் உள்ள ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும். அந்த டொக்டர் கையெழுத்துப் போட்டுவிட்டு ப்ரைவேட்டுக்கு போயிருந்தால், அவர் வரும்வரை இவர்கள் காத்திருக்க வேண்டும். அப்படி வந்து பார்த்து சரிவராது என்று சொன்னால் நீங்கள் யாழ்ப்பாணம் போதனா வைதியசாலைக்கு கொண்டு போய் உயிர் தப்பி வந்து சொல்லுங்கோ. “பிரச்சினை இருக்கு ஆனா இல்ல. தென்மராட்சியாருக்கு கொஞ்சம் அறிவு குறைவு அவை விசயம் தெரியாம கதைக்கினம்” என்று புளொட் சித்தார்த்தனும் சிறிதரனும் அங்கஜனும் சொல்றதை நாங்களும் ஏற்றுக்கொள்வோம்.

முதல்ல பென்ஸ்காரை குவிச்சு வைத்துக்கொண்டு சைக்கிள் சின்னத்தில தமிழ் தேசியம் பேசிய பொன்னம்பலம் கஜேந்திரகுமாரை ஐரோப்பிய தரத்தில் இருக்கிற யாழ் தேசிய மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளியுங்கள். இனிமேல் வடக்கில இருக்கின்ற ஒரு பாரளுமன்ற உறுப்பினரும் அரசாங்க வைத்தியசாலையைத் தவிர வேறு தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லக்கூடாது. உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எதற்கு உரிமை இருக்கிறதோ அதுதான் உங்களுக்கும்.

போல் சத்தியநேசன்: இன, மத, சாதி பேதங்கள் கடந்த மானிடன்!

நான் 1991 ஜனவரியில் பிரித்தானிய மண்ணுக்கு ஒரு அகதியாக புலம்பெயர்ந்த போது, இந்த மண்ணில் எனக்கு முதன் முதல் அறிமுகமாகியவர்கள் தயாமயூரனும், போல் சத்தியநேசனும். அப்போது போல் சத்தியநேசனை எனக்கு யாரென்றே தெரியாது. இரு வாரங்களாக இன்னுமொரு பாதுகாப்பான நாட்டினூடாக ஸ்பெயினூடாக பிரயாணம் செய்ததன் காரணத்தால் நாங்கள் விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டு திருப்பி அனுப்புவதற்கு பிரித்தானிய உள்துறை அமைச்சு முயற்சி எடுத்தது. நாங்கள் ஆறுபேர் தரையிறங்கி இருந்தோம். அந்த 1991 லண்டனில் வரலாறு காணாத பனிகொட்டி தலைநகரே ஸ்தம்பித்து இருந்தது. நாங்கள் தடுத்து வைத்திருந்த 14 வரையான நாட்களில் முதன் முதலாக ‘சீரியல்’ என்ற உணவை பார்த்தோம். அதற்கு பால் ஊற்றி சாப்பிட வேண்டும் என்பதும் தெரியாது. இலங்கையிலிருந்து கொண்டு வந்த சேர்ட், சறம், சப்பாத்து அணிந்து எதிர்காலம் பற்றிய ஏக்கத்தில் பேதலித்துப் போயிருந்த காலம். உறவுகளைப் பிரிந்து எதிர்காலம் கேள்விக்குறியாகி நின்றது.

அப்போது போல் சத்தியநேசனும் மற்றும் சிலரும் பிரித்தானியாவில் தமிழ் அகதிகளுக்கான அமைப்புகளை நிறுவி பெரும்தொகையில் வந்துகொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தார். வசந் என்னுடைய மூத்த சகோதரன். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சார்ந்தவர். அவரோடு பயிற்சி பெற்றவர், நண்பர் தயாமயூரன். நான் லண்டன் வந்திறங்கியதும் அவரைத் தொடர்புகொண்டேன். அப்போது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் வானொலிச் செய்திச் சேவைகளை ஆரம்பித்து இருந்தது. அன்று தகவல்தொழில்நுட்பம் வளராத காலகட்டம். தொலைபேசி, கடிதம் என்ற பாரம்பரிய தொடர்புசாதனங்களே வெளிநாடு வந்த தமழிர்களுக்கு பயன்பாட்டில் இருந்தது. இலங்கைச் செய்திகளைச் சேகரித்து அவற்றை தொலைபேசியில் பதிவிட்டு வெளியிடுவார்கள். அந்தத் தொலைபேசிக்கு போன் பண்ணினால் பதிவு செய்யப்பட்ட செய்தியைக் கேட்கலாம். இந்தச் செய்திப் பதிவை தற்போது பெர்ஸ்ற் ஓடியோ கலையகம் – பாமுகம் நடாமோகனே பதிவு செய்து வந்தார். நடாமோகனுடனேயே போல் சத்தியநேசனும் அக்காலத்தில் சேர்ந்து செயற்பட்டார். நடாமோகன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகச் செயற்பாட்டாளராக இருந்ததால் போல் சத்தியநேசனும் கழகச் செயற்பாட்டாளர் ஆனார். வெளிநாடுகளுக்கு ஆரம்பத்தில் புலம்பெயர்ந்தவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரே அதிகம். புளொட் அமைப்புக்குள் ஏற்பட்ட பிளவும் அதன்பின் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய விடுதலை அமைப்புகளை கொன்றொழித்ததாலும் போராடச் சென்ற எழுபதுகளுக்கு முன் பிறந்த அத்தலைமுறையினர் தங்கள் உயிரைப் பாதுகாக்க மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். அதனால் லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புகளின் செல்வாக்கு சற்று குறிப்பிடத்தக்கதாகவே இருந்தது.

அதன் பின் 1980க்களுக்கு முன் பிறந்த தலைமுறையினர் என் போன்றவர்கள் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்தோம். அவ்வாறு புலம்பெயர்ந்த எங்களுக்கு எங்களுக்குப் பின் புலம்பெயர்ந்தவர்களுக்கும் போல் சத்தியநேசனின் உதவிகள், செயற்பாடுகள் புதிய மண்ணைப் பற்றிக்கொள்வதற்கான ஆதாரமானது. இந்த உதவிகளுக்கு பின்னால் இன்னும் பலருடைய உழைப்புகளும் இருந்தாலும் போல் சத்தியநேசன் இதனை தனது முழுநேரக் கடமையாகவே செய்து வந்தார். நான் உட்பட என்னுடன் வந்த ஆறு பேரும் அரசியல் தஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இரு வாரங்களில் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டோம். அடுத்த ஆறு ஆண்டுகள் என்னை நிலைப்படுத்திக் கொள்ள, வந்த கடன் அடைக்க, குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை குறைக்க, சுற்றி உள்ளவர்களின் சுமைகளைக் குறைக்க என்று வேலை, படிப்பு என்று ஓடியது.

பின் படிப்படியாக எனது சமூக, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பிக்க போல் சத்தியநேசனுடனான உறவு வலுக்க ஆரம்பித்தது. 1997இல் தேசம் சஞ்சிகையை ஆரம்பித்தேன், 2000 மாம் ஆண்டுகளில் லண்டன் உதயனில் கடமையாற்றினே;. அதன் பின் லண்டன் குரல் பத்திரிகையை ஆரம்பித்தேன். 2007 இல் தேசம்நெற், 2023இல் தேசம்திரை என்று எனது ஊடகப் பயணம் தொடர எனக்கும் போலுக்குமான உறவு நெருக்கமானது. போல் சத்தியநேசன் பற்றிய செய்திகள் அன்றைய எனது ஊடகங்களில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். அப்போதெல்லாம் பெரும்பாலான நிகழ்வுகளில் போல் சத்தியநேசனும் நானும் கலந்துகொள்வோம். போல் சத்தியநேசனுக்கு மிகப் பிடித்த விடயம் ‘மைக்’ அதனை வாங்கினால் வார்த்தைகள் சரளமாக கிறிஸ்தவத் தமிழில் மடைதிறந்து பாயும். கருத்துக்களுக்கு பஞ்சமில்லாத, எந்தச் சூழலிலும் தனது கருத்தை லாவகமாக வைத்துவிடுவார். அந்தக் கருத்துக்களில் பெரும்பாலும் ஒரு முற்போக்கான அணுகுமுறை அல்லது மக்கள் நலன் இருக்கும். அது எனது ஊடகத்தில் அடுத்த இதழில் செய்தியாகிவிடும்.

அகதிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் செயற்பாடுகள், அகதிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள், தமிழ் மக்களை இம்மண்ணின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தும் விடயங்களில் போல் சத்தியநேசன் மிகத்தீவிரமாகச் செயற்பட்டவர்.

போல் சத்தியநேசனின் பாரிய முயற்சிகளில் ஒன்று தமிழ் மக்களிடையே உருவான வன்முறைகளைக் கட்டுப்படுத்துகின்ற முயற்சி. அதில் பாரிய வெற்றியையும் போல் சத்தியநேசன் அடைந்தார். ஒப்பிரேசன் என்வர் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கொட்லன்ட் யாட்டின் வன்முறைக்குழக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அத்திவாரம் இட்டவர் போல் சத்தியநேசன். லண்டன் தெருக்களில் தமிழ் இளைஞர்களின் இரத்தம் சொட்டுவதை அவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை கட்டுப்படுத்தியதில் போல் சத்தியநேசனின் பங்கு அளப்பெரியது. என்னையும் எனது குடும்பத்தையும் கொல்லுவோம் என்று என்னை மிரட்டிய குழுவைத் தேடிப் பிடித்து நண்பர் டேவிட் ஜெயத்தின் உதவியோடு சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்தேன். அப்போது என்னோடு கூட வந்து அந்த 30 வரையான இளைஞர்களோடும் உரையாடி அதனை சுமூகப்படுத்தியதில் போல் சத்தியநேசனின் பங்கு முக்கியமானது. நண்பர் தோழர் டேவிட் ஜெயம் இல்லையென்றால் அது சாத்தியமாகியிராது.

அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட விடயம் ‘தைத் திங்கள்’ கொண்டாட்டம். இதனை 20 ஆண்டுகளுக்கு முன்னரேயே திட்டமிட்டு கடந்த 20வது ஆண்டுகளாக ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரீற் நோத்தில் கொண்டாடி வந்தவர் போல் சத்தியநேசன். தைத் திருநாளன்று ஈஸ்ற்ஹாமில் உள்ள அலங்காரத் தெருவிளக்குகளை மேயரை அழைத்து வந்து ஏற்றி தமிழர் திருநாளான தைப்பொங்கலை ஈஸ்ற்ஹாமின் விழாவாக மாற்றியவர் போல் சத்தியநேசன் என்றால் மிகையல்ல. யூலை 12 போல் சத்தியநேசனுடைய நினைவுக் கூட்டம் அதே தைப்பொங்கல் விழா கொண்டாடப்படும் வீதியில் அவருடைய நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் உரையாற்றிய ஈஸ்ற்ஹாம் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரும் வேர்க் அன் பென்சன் (Work & Penssion Minister) அமைச்சருமான ஸ்ரிபன் ரிம்ஸ் (Stephen Timms) தனது உரையில் அதனை நினைவு கூர்ந்தார். அங்கு உரையாற்றிய ஏனைய கவுன்சிலர்கள் பலரும் அதனை நினைவு கூர்ந்தனர்.

போல் சத்தியநேசனிடம் உதவி, ஆலோசணை பெறாத ஒருவர் ஈஸ்ற்ஹாமில் இருப்பாரா என்பது சந்தேகம். அவருக்கு என்று ஒரு வீடு இருந்தாலும் ஹைஸ்ரிட் நோத் (High Street North) தான் போலின் முகவரி. அதிலுள்ள ஏதாவது ஒரு கடையில் அலுவலகத்தில் போலைக் காணலாம். இவ்வாறு போல் சத்தியநேசன் பற்றிய கதையாடலை அடுக்கிக் கொண்டே போகலாம். என்னைப் போல், போல் சத்தியநேசனை அறிந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கதையிருக்கும். போல் சத்தியநேசன் இல்லாமல் பிரித்தானிய தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்ய முடியாத அளவுக்கு வரலாறான தோற்றத்தால் மட்டுமல்ல பண்பாலும் உயர்ந்த மாநிடன். ஒரு கிறிஸ்தவ தமிழனாக இருந்த போதும் ஈஸ்ற்ஹாமிலும் லண்டனிலும் உள்ள சைவ ஆலயங்களின் திருவிழாக்களில் போல் சத்தியநேசனைக் காணலாம். பள்ளிவாசலிலும் காணலாம். அதனால் தான் ஈஸ்ற்ஹாமை போல் புண்ணிய பூமி என்று அடிக்கடி குறிப்பிடுவார்.

போல் சத்தியநேசன் ஒரு பெருமிதமற்ற மனிதர். அவர் ஒரு போதும் பணத்திற்கு ஆசைப்பட்டவரும் கிடையாது, அதற்கு பணிந்துபோனவரும் கிடையாது. அதனை வைத்திருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை மதிப்பவரும் கிடையாது. வயது வித்தியாசமின்றி அனைவரோடும் தன்னை இணைத்துக்கொண்டு உரையாடலை வளர்க்க அவர் ஒரு புள்ளியை இனம்கண்டுகொள்வார். குறிப்பாக பெண்களோடு உரையாடுவது என்றால் அவருக்கு தனிப்பிரியம். அதனை நாங்கள் நண்பர்கள் கூடினால் நையாண்டி பண்ணிக்கொள்வோம். நைற் கிளப்பிற்குச் சென்றிருந்த போது யாரையோ உரசியதற்காக உடனே வோஸ்ரூம் சென்று கையைக் கழுவி வந்த ‘சைவம்’ விரும்பும் மனிதன் போல் சத்தியநேசன் என நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை கொள்ளாத பிரம்மச்சாரியாகவே தன் வாழ்க்கையில் சிங்கிளாக இருந்து கெத்துக் காட்டியவர். போல் இருக்கும் இடம் என்றைக்குமே சச்சரவாகவும் கலகலப்பாகவும் இருக்கும். அண்மையில் கூட தன்னுடைய நண்பர்களோடு உரையாடும் போது, “நீங்கள் நான் போனபிறகு செத்தவீட்டுக்கு வந்து றீல் விடுறத விட்டுப்போட்டு இப்ப உயிரோட இருக்கேக்க சாப்பாடைக் கொண்டு வந்து பார்த்திட்டு போங்கோ’ என்று பகிடியாக சில நண்பர்களிடம் கூறியுள்ளார். “என்ர பொடியை வைச்சுக் கொண்டு செத்தவீட்டில எதாவது கணக்கு கதைச்ச ஆவியாய் வந்து அடிப்பன்” என்று சிலரை மிரட்டியும்உள்ளார்.

சில வாரங்களுக்கு முன் எனது இணையரோடு ஈஸ்ற்ஹாம் வந்திருந்த போது சந்தித்து, உணவருந்த அழைத்தேன். ‘விழுந்து நடக்க கஸ்டமாய் இருக்கு அடுத்த முறை வரும் போது போன் எடும், நான் வந்து சந்திக்கிறேன்” என்றார். அது தான் அவருடன் என்னுடைய கடைசி உரையாடல். யூலை 5 எனது பள்ளி மாணவர்களைக் கூட்டிக்கொண்டு பேர்மிங்ஹாம் சொக்லேட் பற்ரிக்கு சென்றிருந்தேன். செல்லும் வழியில்தான் போல் சத்தியநேசன் எம்மை விட்டுப் பிரிந்த செய்தியை அறிந்தேன். கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டுப் பயணத்தை மீள்பயணம் செய்து வந்திறங்கினேன். நோயின் அனைத்து வலிகளில் இருந்தும் அவருக்கு ஒரு விடுதலை கிடைத்துள்ளது. போல் சத்தியநேசனுக்கு என்று ஒரு தனிப்பட்ட குடும்பம் இல்லை. ஆனால் போல் சத்தியநேசனின் குடும்பம் மிகப்பெரியது. ஈஸ்ற்ஹாம் என்ற குடும்பத்தில் போல் தலைமகன். உலகெங்கும் வாழும் தமிழர்கள் அவர் உறவுகள்.

அண்மைய சில ஆண்டுகள் வரை இந்த உறவு தொடர்ந்தது. கவுன்சிலர் போல் முன்னாள் கவுன்சிலராக நோயும் ஆட்கொள்ள அவருடைய நடமாட்டங்களும் மட்டுப்படுத்தப்பட்டது. நானும் என்னுடைய ஆசியர் பயிற்சி, தொழில் நிமித்தம் லண்டனுக்கு வெளியே சென்றதால் எமது உரையாடல்கள் தொலைபேசி உரையாடல்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

நீண்ட காலமாகவே பல்வேறு நோய் பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருந்த போல் சத்தியநேசன் வீட்டில் கட்டிலால் வீழ்ந்து, கையில் நோபட்டு இருந்தார். அவரை யூலை நான்கு சில நாட்களுக்கு முன்னதாக மருத்துவமனையில் நண்பர்கள் அனுமதித்திருந்தனர். யூலை நான்கு இரவு நன்பர்கள், சகோதரர் உணவு பரிமாறி உரையாடித் திரும்பியதன் பின்னர் மறுநாள் அதிகாலை போல் சத்தியநேசன் உயிர்நீர்த்துள்ளர்.

குட்டி யாழ்ப்பாணமான ஈஸ்ற்ஹாம் உள்ளுராட்சி சபையின் முன்னாள் மேயர் கவுன்சிலர் அதற்கும் மேலாக அங்குள்ள மக்களின் மனங்களை வென்ற போல் சத்தியநேசனின் இறுதி நிகழ்வுகள் யூலை 17ம் திகதி முறையே அவர் வாழ்ந்த பேர்ஜஸ் றோட்டில் (Burgess Road உள்ள சென் போல் St Paul Church தேவாலயத்தில் காலை 10 மணி முதலும் அடுத்து மனோபார்க் மயானத்தில் மாலை 2 மணிக்கு நல்லடக்கமும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. இறுதியாக ப்ளேக் ஹோல் றோட்டில் (Blake Hall Road உள்ள சுவாமிநாராயணன் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் Swaminarayanan Sports World இல் மாலை 3 மணிக்கு ஒன்றுகூடலும் நடைபெற இருக்கின்றது.

இன, மத, சாதி பேதங்கள் கடந்த நல்லதொரு மானிடன் போல் சத்தியநேசன் ஈஸ்ற்ஹாமில் ஏற்பாடு செய்யப்பட்ட வெவ்வேறு நினைவு நிகழ்வுகளில் அப்பிரதேச மக்கள், லண்டனில் பல பாகங்களிலும் வாழும் தமிழர்கள், ஈஸ்ற்ஹாம் உள்ளுராட்சி சபையின் கவுன்சிலர்கள், நண்பர்கள், அவரின் பிறப்பிடமான உரும்பராயின் சொந்தங்கள், உற்றார், உறவினர்கள் என நூற்றுக்கணக்கில் வந்து அஞ்சலி செய்தனர். ஈஸ்ற்ஹாம் யை தன்னுடைய வாழ்விடமாக்கி அதற்கு ‘புண்ணிய பூமி’ என்று புகழ்ந்துரைக்கும் போல் சத்தியநேசன் அந்த மண்ணோடு சங்கமமாக உள்ளார்.

டொக்டர் அர்ச்சுனா சாவகச்சேரிக்கு வரலாம்? போராட்டம் தொடர வேண்டும்! : காணொலி

டொக்டர் அர்ச்சுனாவின் ஆறுநாள் விடுமுறை நிறைவடைந்த நிலையில், தான் தற்போதும் பொறுப்பிலிருப்பதாகத் தெரிவிக்கும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தான் செல்ல இருப்பதாக டொக்டர் அர்ச்சுனா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். டொக்டர் அர்சுனாவை மத்திய அரசே நியமித்த காரணத்தால், நாளை தனக்கு இடமாற்றம் தரப்பட்டால் அதற்குக் கட்டுப்படுவேன் எனத் தெரிவித்துள்ள அவர், இடமாற்றக் கடிதம் மத்திய அமைச்சிலிருந்து வழங்கப்படாவிட்டால் தான் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணியைத் தொடருவேன் என அவர் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னோடியாக நேற்றையதினம் (13) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மருத்துவக் குழுவினரும் சாவகச்சேரி மருத்துவமனை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். மருத்துவமனையின் அபிவிருத்திச் சங்கத்தினர் தற்போது பொறுப்பேற்றுள்ள மருத்துவ குழுவினர் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை வைத்ததுடன், மூன்றுநாட்கள் திடீர் போராட்டத்தை நடத்த உங்களுக்கு யார் உரிமை தந்தது என்று கேட்டு துளைத்தெடுத்தனர். டொக்டர் அர்ச்சுனா மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

நாளை சாவகச்சேரிக்கு டொக்டர் அர்ச்சுனா வருவார் என்ற நம்பிக்கையில் அவரை வரவேற்க மக்கள் பெருமளவில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டொக்டர் அர்ச்சுனாவின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்பாக பதின்ம வயது முதல் மக்கள் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட இடதுசாரிச் சிந்தனையாளரும் லண்டன் கம்டன் கவுன்சிலில் புரஜக்ற் மனேஜராக இருந்து ஓய்வுபெற்று 2009 முதல் யாழில் பல்வேறு சமூக செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவரும் மயில்வாகனம் சூரியசேகரம் இந்த மக்கள் போராட்டம் பற்றிய கள யதார்த்தத்தை தேசம்நெற் நேயர்களுடன் மனம் திறந்து பகிர்ந்து கொள்கின்றார்.

._._._._._.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முக்கியமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது அமைச்சருடைய அலுவலகத்தில் நேற்றையதினம் (13) இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையின் சீரற்ற பிரச்சனைக்கு காரணமானவர்கள் என்று வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவினாலும் மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலை போராட்டத்தில் கலந்துகொண்டவர்களால் குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியர்களின் பிரதிநிதிகளுக்கும் அந்த வைத்தியசாலை அபிவிருத்திசங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், வைத்தியர்கள் சார்பாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரன, வைத்தியர் கேதீஸ்வரன் மற்றும் தற்போதைய பதில் வைத்திய அத்தியகட்சகராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதவி ஏற்றிருக்க கூடிய வைத்தியர் ரஜீவ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் வைத்தியர் அர்ச்சுனாவினால் முன்வைக்கப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து வைத்தியசாலையை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் 21 ஆம் திகதி வைத்தியசாலை தொடர்பில் பரந்தளவான சந்திப்பை ஏற்படுத்தி கலந்துரையாடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 17 ஆம் திகதி சுகாதார அமைச்சர் தலைமையில் உயர் அதிகாரிகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மாகாண சுகாதார பணிமனையில் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் தப்பினார் ட்ரம்! அடுத்த ஜனாதிபதி ட்ரம் உறுதியாகிவிட்டது!

சில நிமிடங்களுக்கு முன் July 13 அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால் ட்ரம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது போல் தலைக்கு வைக்கப்பட்ட வெடி காதடியால் சிராய்த்துக் கொண்டு சென்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு காதடியில் பட்டதும் டொனால்ட் ட்ரம் உரையாற்றிக் கொண்டு நின்ற இடத்திலேயே குந்தி இருந்துவிட்டார்.

உடனடியாக ட்ரம்மைச் சுற்றி இருந்த மெய்ப்பாதுகாவலர்கள் அவரைச் சுற்றிவளைத்து அழைத்துச் சென்றனர். அவ்வாறு அழைத்துச் செல்கின்ற போது ட்ரம் தன் மணிக்கட்டை மடித்து காற்றில் குற்றி தன்னுடைய தைரியத்தை காட்டிச் சென்று வாகனத்தில் ஏற்றினர். வாகனத்தில் ஏறிய பின்னும் ட்ரம் கையை உயர்த்தி தன்னுடைய உறுதியைத் தெரிவித்து இருந்தார்.

ட்ரம் உரையாற்றிய மேட்டைக்கு எதிரே இருந்த கட்டிடத்தின் கூரையில் இருந்தே ரைபிளை வைத்திருந்த ஒருவர் ட்ரம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகம் செய்தவரை சிலர் ஒரு சில நிமிடங்கள் கண்டுள்ளனர். ஆனாலும் அவர் உடனடியாகக் கையளப்படவில்லை. ஆனால் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர், உடனடியாகவே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அதற்கு முன்னதாகவே துப்பாக்கிதாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பொதுமக்களும்காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் அரசியல் படுகொலை, படுகொலை முயற்சிகள் இது முதற்தடவையல்ல. ஆபிரகாம் லிங்கன், ஜெ எப் கென்னடி, மார்டின் லூதர் கிங் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு இருந்தனர். டொனால்ட் ட்ரம் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சம் ஏற்கனவே இருந்து வந்தது. அமெரிக்க அரச கட்டமைப்புக்கு புறம்பாக செயற்படுவார் என நம்பபப்பட்ட ட்ரம் நேட்டோவை பலவீனப்படுத்துவார், ரஷ்யாவுக்கு ஆதரவாகச் செயற்படுவார், உக்ரைன் யுத்தத்தை ரஷ்யாவுக்கு ஆதரவாக முடிவுக்கு கொண்டுவருவார் போன்ற காரணங்களால் இவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்படலாம் என்ற அச்சம் இருந்தது. தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜோபைடனுடன் ஒப்பிடுகையில் முன்னணியில் நிற்கும் டொனால்ட் ட்ரம், இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து உயிர்தப்பியதன் மூலமும் சம்பவம் நடந்த அடுத்த கணமே உஷாராக எழுந்து மணிக்கட்டை மடித்து கையை உயர்த்தி காற்றில் குத்தி தன்னுடைய தைரியத்தையும் ஆளுமையையும் உடல் ஆளுமையையும் காட்டியுள்ளார். தனது வயதால் உடல் தளர்ந்தும் பேச்சுத் தளர்ந்தும் உள்ள ஜோபைடன் ட்ரம் உடனான பேர்டியில் வெல்வதற்கு இனி வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

Well Done – வெல் டன் தென்மராட்சி ! மருத்துவர்களே நீங்கள் மக்கள் பக்கமா? மருத்துவ மாபியாக்களின் பக்கமா?

இலங்கையில் யாரும் கடமையைச் சரிவரச் செய்தால் கைது செய்யப்படலாம், விரட்டப்படலாம் என்ற நிலை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் மூலம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. 15 வருடங்களாக நடைபெற்றுக்கொண்டிருந்த மோசடி, ஊழல் என்பவற்றை வெளிக்கொண்டுவந்த டொக்டர் ராமநாதன் அர்ச்சுனாவைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளது இலங்கை அரசு. அவரை உடனடியாக இடமாற்றி விரட்டி அடிக்குமாறு ஐக்கிய தேசிய மக்கள் முன்னணித் தலைவர்களில் ஒருவரான செல்வராஜா கஜேந்திரன் ஆளுநரைக் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை அரசும் தமிழ் தேசியமும் யாழ் மெடிக்கல் மாபியாக்களும் கூட்டாக இணைந்து மக்களுக்காகச் சேவையாற்றிய டொக்டர் அர்ச்சுனாவை கைது செய்ய சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை நோக்கிப் படையெடுக்க தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு வைத்தியசாலையை முற்றுகையிட்டு, டொக்டர் அர்ச்சுனா கைது செய்யவிடமாட்டோம் என்று போராடி வருகின்றனர்.

‘We want Dr Archuna’ என்று சிங்களப் பொலிஸாருக்கும் தமிழ் தேசிய முன்னணி சட்டத்தரணிக்கும் விளங்கும் வகையில் உரத்துக் கோசம் எழும்பினார்கள் எழுச்சிகொண்ட தென்மராட்சி மக்கள். மேலும் ஆங்கிலத்தில் பொலிஸாருக்கு நிலைமையைச் சொல்லிய ஒருவர், “நீங்கள் ஏன் மக்களுக்கு சேவை செய்யும் ஒருவரை கைது செய்யப்பட்டாளமாக வந்திருக்கிறீர்கள். நீங்கள் கைது செய்ய வேண்டியது மக்களுக்குச் சேரவேண்டிய பொதுச் சொத்துக்களை சேவைகளை கொள்ளையடிக்கும் மருத்துவ மாபியாக்களைத் தான். அவர்களைப் போய் கைது செய்யுங்கள்’’ என்று தெரிவித்தார். அப்போராட்டத்திற்கு வந்திருந்த இன்னுமொருவர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் “எங்கள் பணத்தில் படித்து டொக்டரானவர்கள் எங்களையே கொள்ளையடிக்கின்றனர்” என்று குறிப்பிட்டதோடு “இவ்வாறான கொள்ளையர்கள் நாடுபூராவும் இருக்கின்றனர். மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். டொக்டர் அர்ச்சுனா உண்மையிலேயே ஒரு மக்கள் போராளி. அவரைக் கைது செய்ய அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார். இச்செய்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது இலங்கை நேரம் அதிகாலை இரண்டு மணி அப்போது வைத்தியசாலையில் 1000 பேருக்கு மேற்பட்ட பொதுமக்கள் கூடி டொக்டர் அர்ச்சுனாவை கைது செய்ய முடியாதவாறு தடுத்து நின்றனர்.

விடிந்தால் தென்மராட்சி பொது மக்கள், வர்த்தக சங்கம் உட்பட்ட 30 வரையான பொது அமைப்புகள் டொக்டர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாகவும் யாழ் மெடிக்கல் மாபியாக்களுக்கு எதிராகவும் கண்டனக் கடையடைப்புப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் போராட்டம் திட்டமிடப்பட்டதற்கு மாறாக முதல்நாள் யூலை 7 இரவே ஆரம்பமாகிவிட்டது. விடிவதற்குள் டொக்டர் அர்ச்சுனாவைக் கைது செய்து அவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றத் திட்டமிட்டனர். தனியார் மருத்துவமனைகளை நடத்துகின்ற அதில் பணியாற்றுகின்ற மருத்துவ மாபியாக்கள் அரச படைகளோடு கூட்டாக இணைந்து இரவோடு இரவாக டொக்டர் அர்ச்சுனாவைக் கைது செய்து விரட்டியடிக்க எடுத்த முயற்சியை தென்மாராட்சி மக்கள் வெற்றிகரமாகத் தடுத்துள்ளனர். ஆனால் அவர்களால் இந்த மாபியாக்களின் அதிகாரப் பலம் பொலிஸ்பலம் என்பவற்றுக்கு முன்னால் தொடர்ந்து போராட முடியுமா என்பது கேள்விக்குறியே.

காலிமுகத்திடலில் எழுந்த மேல்தட்டு மக்களின் போராட்டத்துக்கு மாறாக சாவகச்சேரி தென்மராட்சியில் அரச அதிகாரம், பொலிஸ், மெடிக்கல் மாபியாக்களுக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியோடு இரவோடு இரவாக வீறுகொண்டெழுந்துள்ளனர். காலையில் தென்மராட்சி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைப் போராட்டத்தில் பங்கெடுப்பது நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரஜையின் கடமை எனப் போராட்டகார்கள் சமூக வலைத்தளங்களினூடாக அழைப்பு விட்டு வருகின்றனர்.

இந்த மெடிக்கல் மாபியாக்களுக்கும் கைது செய்ய வந்திருக்கும் பொலிஸாருக்கும் ஆதரவாக தமிழ் தேசிய முன்னணியின் முன்னணித் தலைவர் செல்வராஜா கஜேந்திரன் கருத்து வெளியிட்டது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் அங்கு வந்திருந்த தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் சுபாசை சொற்கற்களால் தாக்கினர். ‘எங்கள் போராட்டத்தை குழப்புவதற்காக இங்கு வந்தீர்கள், உங்களுக்கு இங்கு என்ன வேலை என்று அவரை வார்த்தைகளால் நையப்புடைத்து திருப்பி அனுப்பினர்.

தென்மராட்சி மக்களின் இந்தத் தன்னெழுச்சி தமிழ், சிங்கள அதிகாரத் தலைமையையும் அரசியல் கட்சிகளையும் உலுப்பியுள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்த மெடிக்கல் மாபியாக்கள் செய்த மோசடி ஊழல் மற்றும் மௌ;ளமாரித் தனங்களால் பல நோயாளர்கள் அநீயாயமாக இறந்துள்ளனர். அல்ல கொல்லப்பட்டுள்ளனர். இதன் உண்மைப் புள்ளிவிபரங்கள் வெளிவந்தால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சீராக இயங்காததால் பல பத்து நோயாளர்கள் இறந்திருக்கலாம் என்ற உண்மை வெளிவரும் என்றும் மேலும் இவர்கள் யாழ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு பல கோடிகளைத் தாண்டும் எனவும் தன்னுடைய பெயரைக் குறிப்பிட விரும்பாத அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நெருங்கிய ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்த நேற்று யூலை 7 சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குச் சென்றிருந்த போது உறுதியான எந்தக் கருத்துக்களையும் தெரிவித்திருக்கவில்லை.

ஏனைய வடக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கள்ள மௌனம் சாதித்து வருகின்றனர். தமிழ் தேசியம் பேசியவர்கள் பெரும்பாலும் மெடிக்கல் மாபியாக்களின் பக்கம் நிற்கின்றனர். கள்ள மௌனம் காக்கின்றனர். தமிழ் தேசிய முன்னணி செல்வராஜா கஜேந்திரன் மட்டும் டொக்டர் அர்ச்சுனாவுக்கு எதிராகவும் தென்மாராட்சி மக்களுக்கு எதிராகவும் வெளிப்படையாகப் பேசி தன் விசுவாசத்தை மெடிக்கல் மாபியாக்களுக்கும் பொலிஸாருக்கும் வழங்கி இருந்தார். அங்கஜன் ராமநாதன் சில சமயம் இளைஞர் என்றளவில் டொக்டர் அர்ச்சுனாவுக்கு சாதகமாக ஊழல்கள் மோசடிகள் இடம்பெறுதைச் சுட்டிக்காட்டி இருந்தார்.

டொக்டர் என்றும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றும் மதிப்பளித்த மக்களுக்கு யாழ் மெடிக்கல் மாபியாக்கள் செய்த அநியாயங்கள், மோசடிகள் பலருடைய மரணத்துக்கு காரணமாக இருந்ததுள்ளது. அவ்வாறு மரணித்தவர்களின் உடலையும் வைத்து பிழைப்பு நடத்திய மக்கள் பணத்தில் படித்துப் பட்டம் பெற்றவர்களின் ஈனத்தனம் தற்போது டொக்டர் அர்ச்சுனா என்ற ஒரு மக்கள் போராளியால் வெளிவந்துள்ளது. தங்களை டொக்டர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் அநாகரிகமான உரையாடல்கள், சண்டித்தனம், அவர்கள் முழப் புசணிக்காயை ஒரு பிடி சோற்றுக்குள் மூட எடுக்கும் முயற்சிகள் இந்த தொழிற்துறையினர் மீதிருந்த நன்மதிப்பை அவர்களே அம்மணமாவதை வெளிப்படுத்தி நிற்கின்றது. ஆனால் டொக்டர் அர்ச்சுனா போன்று இலைமறை காயாக, மக்கள் சேவையை மகேசன் சேவையாக செய்பவர்களும் உள்ளனர். இந்த மெடிக்கல் மபியாக்கள் எமது சமூகத்தின் புற்றுநோய். இவர்களைப் போன்ற மாபியாக்கள் அனைத்துத் துறைகளிலும் உள்ளனர். இவர்கள் வேரறுக்கப்பட வேண்டும். இல்லாவிடடில் இவர்கள் சமூகத்தைச் சீரழித்துவிடுவார்கள்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விடயம் தொடர்பில் பெரும்பாலான மருத்துவர்கள் மௌனம் காக்கின்றனர். பேசுபவர்கள் பெரும்பாலும் டொக்டர் அர்ச்சுனாவுக்கு எதிரான பொது மக்களுக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கின்றனர். இது கிட்டத்தட்ட இறுதியுத்தத்தில் இராணுவம் யுத்தக் குற்றங்கள் எதுவும் செய்யவில்லை என்று இலங்கை இராணுவமும் அரசும் ஒற்றைக்காலில் நிற்பது போன்ற செயலே. மருத்துவத்தை மக்கள் சேவையாக எண்ணுபவர்கள் டொக்டர் அர்ச்சுனாவின் பக்கம் மக்களின் பக்கம் நிற்க வேண்டும்.

யாரும் தனியார் மருத்துவத்துறையில் பணியாற்ற வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பெறும் சம்பளத்துக்கான கடமையை உங்கள் கடமை நேரத்தில் சரியானபடி செய்யுங்கள் என்று தான் கேட்கின்றார்கள் மக்கள். ஆனால் அரச மருத்துவத்தைச் சீரழித்து உங்கள் பிரைவேட் கிளினிக்குக்கு பலாத்காரமாகச் செல்ல வைப்பதையே மக்கள் எதிர்க்கின்றனர். வயிற்றுக் குத்து என்று வருபவர்களிடமே எல்லா ஸ்கானையும் எடுக்கச் சொல்கிறீர்கள் எல்லா ரிப்போட்டும் எடுக்கச் சொல்லி லட்சக்கணக்கில் கொள்ளை அடிக்க வேண்டாம் என்று தான் மக்கள் கேட்கிறார்கள். பிணத்தை வைத்துக் கொண்டு சொந்த மக்களிடமே பணம் பறிக்கும் ஈனத்தனம் மிக அருவருப்பானது. மருத்துவர்களே நீங்கள் எந்தப் பக்கள் நிற்கப் போகின்றீர்கள்? மக்களின் மக்கமா மாபியாக்களின் பக்கமா?

மக்களை வழிநடத்த வேண்டியவர்கள் அரசியல் கட்சிகள். ஆனால் வடக்கில் எந்தவொரு அரசியல் கட்சியும் மக்கள் நலன்சார்;ந்து இயங்கவில்லை என்பதை தென்மராட்சி மக்கள் நிரூபித்துள்ளனர். தற்போது மக்கள் புரட்சிகரப் பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர், ஆனால் அவர்களுக்கு தலைமை தாங்கும் தகுதியுள்ள ஒரு கட்சி தமிழ் பிரதேசத்தில் இல்லை. வடக்கில் உள்ள அரசியல் கட்சிகளிலும் பார்க்க தெளிவான அரசியலை மக்கள் முன்னெடுக்கின்றனர். தென்மாராட்சி மக்களை முன்னுதாரணமாகக் கொண்டு சகலதுறைகளிலும் உள்ள மோசடிகள், ஊழல்களைக் களைந்து புதிய அரசியல் மாற்றத்திற்காக மக்கள் இவ்வாறான தன்னெழுச்சிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தத்தம் பிரதேசங்களில் உள்ள அரசியல் வாதிகளுக்கும் தங்கள் பலத்தைக் காட்டவேண்டும். தமிழ் தேசியம் பேசிக் கொண்டு மக்கள் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அரச இயந்திரத்தை யார் மக்களுக்கு எதிராகத் திருப்பினாலும் மக்கள் போராடத் தயாராக வேண்டும். வெல் டன் தென்மாராட்சி !

யாழ் மெடிக்கல் மாபியாக்களுக்கு எதிராகவும் டொக்டர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாகவும் தென்மராட்சி மக்கள் போராட்டம்!

“தனியார் மருத்துவமனைகளை வளர்ப்பதற்காக அரச மருத்துவமனைகளை முடக்கும் நடவடிக்கையில் சில யாழ் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர், இவர்கள் சாவகச்சேரிச் சிறுமியின் உடலைக் கூட மூன்று லட்சம் பெற்றுக்கொண்டே ஒப்படைத்துள்ளனர், பெரும்பாலும் தனியார் துறைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் அரச மருத்துவமனைகளில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதில்லை” எனப் பேராதனையில் மருத்துவராகக் கடமையாற்றி தற்போது தான் பிறந்த மண்ணுக்கு சேவையை வழங்க வந்துள்ள டொக்டர் ராமநாதன் அர்ச்சுனா தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இப்பதிவுகள் அவருடைய முகநூல் பதிவிலும் காணொலியாக உள்ளது. இவர் யூன் 14 அன்று பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்று வந்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையைக் கட்டியெழுப்பும் அவாவோடு வந்திருந்த டொக்டர் அர்ச்சுனா அங்கு 15 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் ஊழல்களையும் மோசடிகளையும் தட்டிக் கேட்டதற்காக மருத்துவ மாபியா ரவுடிகளால் தாக்கப்பட்டார். தங்களுடைய வருமானத்தில் மண் வீழ்ந்துவிட்டது என்றும் தாங்கள் அம்பலமாகப் போகின்றோம் என்றும் கொதித்து எழுந்த மருத்துவ மாபியாக் கும்பலைச் சேர்ந்த டொக்டர் மயூரன், டொக்டர் இந்திரகுமார், மருத்துவக் கல்வியில் பயிலும் தர்சன் மற்றும் டொக்டர் கமலா யோகுவின் கணவர் ஆகியோர் இணைந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்தப் பிரச்சினையில் முக்கிய பங்குவகிக்கும் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் மருந்தக மோசடிகள் தொடர்பிலும் குற்றம்சாட்டப்பட்டவர் என்பது மிக முக்கியமானது. இவர் டொக்டர் அர்ச்சுனாவின் அதிரடி நேர்மையை ஏற்கனவே அறிந்திருந்ததால் அர்ச்சுனா யாழ்ப்பாணத்திற்கு வந்து கடமையாற்றுவதை விரும்பியிருக்கவில்லை. அதனால் டொக்டர் அர்சுனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வருவதை தடுப்பதற்கு பல கைங்கரியங்களை மேற்கொண்டிருந்தார். ஆனாலும் அவை பலிக்கவில்லை. மத்திய சுகாதார அமைச்சு டொக்டர் அர்ச்சுனாவை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு பதில் பொறுப்பதிகாரியாக நியமித்தது. டொக்டர் அர்சுனா நேர்மையாக மின்னல் வேகத்தில் 15 ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை 15 நாட்களில் சீரமைக்க முற்பட்டார்.

டொக்டர்கள் என்ற பெயரில் திரிந்த யாழ் மருத்துவ மாபியாக் கும்பல் கதி கலங்கியது. மக்களுடைய, தொழிலாளர்களுடைய நலன்களுக்காகப் போராட வேண்டிய தொழிற்சங்கம் மக்களுக்கு எதிராகவும் மக்கள் நலனைப் பேண வேண்டும் என்று கோரும் மருத்துவர் டொக்டர் அர்ச்சுனாவுக்கு எதிராகவும் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினர். இது பற்றி முகநூலில் கருத்து வெளியிட்ட ரவீந்திரன் ரட்ணசிங்கம் “பணி செய்தால் தானே பணிப் புறக்கணிப்பு செய்ய வேண்டும்” என்று எழுதியுள்ளார். இந்த மருத்துவ மாபியாக் கும்பலின் விளக்கங்கள் நகைச்சுவையாகவும் நளினமாகவும் மக்களால் சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகின்றது. டொக்டர் அர்ச்சுனாவிற்கான ஆதரவு மக்கள் மத்தியிலும் பல்வேறு தளங்களிலும் பெருகிவருகின்றது.

இந்நிலை தொடர்பாக நிலைமையை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா, அவருடைய ஆலோசகர் எஸ் தவராஜா ஆகியோர் நேற்று யூலை 7 சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குச் சென்று டொக்டர் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகளைக் கேட்டறிந்தனர். இதற்கு முன்னதாக டொக்டர் அர்ச்சுனாவை தாங்கள் இடமாற்றி உள்ளதாக மருந்தக மோசடிகளில் சம்பந்தப்பட்ட வட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் அறுமுகம் கேதீஸ்வரன் கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால் தான் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டபடியால் அவர்களின் முடிவின்படியே செயற்படமுடியும் என டொக்டர் அர்ச்சுனா தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் உள்ளவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று புலம்பும் தேசிய சோம்பேறிகளுக்கு அங்குள்ள மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் வந்தால், எப்படியாவது அவர்களை தமிழ் பிரதேசங்களைவிட்டு கலைப்பதற்கான அதிகாரம் மட்டும் எப்படியோ வந்துவிடும். தங்களுக்குள்ள அவ்வளவு அதிகாரங்களையும் பயன்படுத்தி சாதிய ஒடுக்குமுறைகளைச் செய்வது, சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவது, அர்ப்பணிப்புள்ளவர்களை தங்களுக்கு வேண்டாதவர்களை தமிழ் பிரதேசங்களைவிட்டு கலைப்பது போன்றவற்றுக்கு பொலிஸாரோடு கைகோர்த்து தங்கள் அதிகாரங்களை நிலைநாட்டுவார்கள். வட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன், சுகாதார அமைச்சை மீறி வழங்கிய இடமாற்றக் கடிதம் அவ்வாறானதே.

டொக்டர் அர்ச்சுனா மருத்துவத்துறையில் உள்ள மோசடிகளை மட்டும் அம்பலப்படுத்தி உள்ளார். இதே மாதிரியான மோசடிகள் ஏனைய துறைகளிலும் பரந்துள்ளது. இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் நடைபெறுகின்றது. மேலும் அரசியல் வாதிகள் அளவுக்கு அல்லது அவர்களைக் காட்டிலும் அதிகாரிகளும் மிக மோசமான மோசடிகளிலும் சுரண்டல்களிலும் அதிகார துஸ்பிரயோகங்களிலும் ஈடுபட்டு வருகின்றன். அவர்கள் ஊதியம் பெறுவதற்கான உழைப்பை வழங்கத் தயாராகவில்லை. கிளிநொச்சி இரணைமடு குளத்தை விஸ்தரித்து அதன் நீர்க்கொள்வனவை அதிகரிக்க உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் டொலர் வேலைத் திட்டத்துக்கான நிதியை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பெற்றுக்கொடுத்திருந்தார். ஆனால் அதில் பணியாற்றிய வடமாகாணத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகளின் அசமந்த நடவடிக்கையால் அத்திட்டம் கைநழுவிச் சென்றதுடன் அவ்வளவு தொகையும் உலக வங்கியால் மீளப் பெறப்பட்டது.

மருத்துவ மாபியாக்களின் பிரச்சினை யுத்தம் முடிவுக்கு வந்த கையோடு ஆரம்பமாகிவிட்டது. மருத்துவத்துறையின் பல்வேறு முறைகேடுகள் பெரும்பாலும் ஒழித்து மறைக்கப்பட்ட போதும் அவ்வப்போது அவை வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றது.

அரச மருத்துவமனைகளைச் சீரழிப்பதன் மூலம் அரச ஆஸ்பத்திரிக்குப் போனால் இழுத்தடிப்பார்கள், ஒழுங்காகச் சிகிச்சை அளிக்கமாட்டார்கள், அங்கு தரும் மருந்துகளும் குணமாக்காது, அங்கு தேவையான உபகரணங்களும் இல்லை என்று எல்லோரும் குற்றம்சாட்டும் நிலையை அரச மருத்துவமனைகளில் பணியாற்றிக்கொண்டு தனியார் மருத்துவமனைகளை இயக்கும் உரிமையாளர்களான மருத்துவர்களும் அங்கு மருத்துவர்களாக பணியாற்றும் மருத்துவர்களும் ஏற்படுத்தி உள்ளனர். யாழில் பார்மசிகளில் மருத்துவமனைகளின் பிரச்சினைகளை ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக விளங்கிய எழுத்தாளர் டானியலின் மகன் சாம் ஏற்கனவே வெளிக்கொண்டு வந்துள்ளார்.

2009 யுத்தம் முடிவுக்குப் பின் டென்மார்க்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் குளொபல் மெடிக்கல் எய்ட் என்ற நிறுவனம் மூன்று மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியவசிய மருந்துப் பொருட்களை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நோயைக் குணமாக்கும் நோக்கோடு அரச அனுமதி பெற்று, அரச சுற்று நிருபத்தோடு வடக்கு கிழக்கில் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டது. ஆனால் வடக்கில் இலவசமாக வழங்கப்பட வேண்டிய இந்த மருத்துகளை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யவும் இல்லை. வழங்கவும் இல்லை. இதற்கு இலங்கையின் மருத்துவமனையொன்றில் பணியாற்றும் மருத்துவ அதிகாரி தந்த விளக்கம் அதிர்ச்சியானது. “இலவச மருந்துப்பொருட்களை யுத்தத்தின் விலியிலிருந்த மக்களுக்கு வழங்கினால் அவர்கள் மனதார வாழ்த்துவார்கள், ஆனால் அதனை வழங்கிய மருத்துவருக்கு எவ்வித பலனும் இல்லை. ஆனால் மெடிக்கல் ரெப் கொண்டுவரும் புதுப்புது மருந்துகளை மருத்துவர் நோயாளிக்குப் பரிந்துரை செய்தால் அவருக்கு கொமிஸன் கிடைக்கும், விடுமுறையை வெளிநாட்டில் களிப்பதற்கு விமானச்சீட்டு ஹொட்டல் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். அதனால் குளொபல் மெடிக்கல் எய்ட் வழங்கிய மருந்துப் பொருட்கள் பாவனைக் காலம் முடியும்வரை இருப்பில் வைக்கப்பட்டு இறுதியில் காலாவதியாகி குப்பைக்குள் போடப்பட்டது. பாவம் மக்கள்” எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இலங்கையில் பல்மருத்துவராகக் கடமையாற்றி தற்போது பிரத்தானியாவில் கடமையாற்றும் மருத்துவகலாநிதி தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் டொக்கடர் அர்சுனாவின் பதிவுகளைத் தொடர்ந்தும் பார்த்து வருவதாகவும் அவை நூறு சதவீதம் உண்யென்றும் அவருக்கு எதிராகக் கிளம்பியுள்ளவர்கள் உண்மையிலேயே மருத்துவ மாபியாக்களாகத்தான் இருக்க முடியும் எனவும் தெரிவித்தார். பிரித்தானியாவில் பல்மருத்துவர்கள் லட்சங்களில் சம்பாதிக்கும் போதும் 15 பவுண் 20 பவுண் மருத்துவராக உள்ள இவரிடம் நீங்கள் ஏன் இந்தக் கருத்தை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறீர்கள் என்ற போது பிழையெனத் தெரிந்திருந்தாலும் அதனைச் சுட்டிக்காட்டும் தகுதி எனக்கில்லை. ஏனென்றால் இலவசக் கல்வியில் கற்ற நான் இப்போது பிரித்தானியாவில் வாழ்கின்றேன் அதனைச் சுட்டிக்காட்டும் தகுதி எனக்கில்லை. ஆனால் அந்தத் தகுதியும் நேர்மையும் டொக்டர் அர்ச்சுனாவிற்கு உள்ளது. அதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை எனத் தெரிவித்தார். இவ்வாறான பதிவுகளை எமது வட்ஸ்அப் மருத்துவக் குழவில் பகிர்ந்தாலேயே அதனை நீக்கச்சொல்லி துசணத்தில் ஏசவார்கள் என்று தேசம்நெற்றுக்குத் தெரிவித்த அவர், மருத்துவத்துறை இலங்கையிலும் தான் பிரித்தானியாவிலும் தான் உலகம் பூராவும் தான் மருத்துவ மாபியாக்களின் கைகளுக்கு மாறிக்கொண்டுள்ளது. இதனை யாழில் தனியார் மருத்துவமனைக்கு தந்தையை அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றவரின் அனுபவத்தைக் கேளுங்கள்:

டொக்டர் அர்ச்சுனாவுக்கு இடமாற்றம் வழங்கி, வட மாகாணசபை சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேததீஸ்வரனால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டவர் டொக்டர் ரஜீவ். இவர் பொறுப்பதிகாரியாவதற்கான தகமையைப் பெறவில்லையென டொக்டர் அர்ச்சுனா குற்றம்சாட்டியிருந்தார். டொக்டர் அர்ச்சுனாவை மிரட்டி, அவரை அடித்து, தொழிற்சங்கப் போராட்டத்தை நடத்தி கரணம் போட்டும் அவர் பணியவில்லை. இந்த இயலாமையின் பிரதிபலிப்பாக இறுதியில் டொக்டர் ரஜீவையும் பொறுப்பதிகாரியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருக்க விரும்புகிறீர்களா என்று டொக்டர் அர்சுனாவிடம் மாகாண சுகாதார அத்தியேட்சகர் கேட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள டொக்டர் அர்ச்சுனா இப்போது எல்லாமே மக்களிடம் ஒப்படைத்து விட்டேன் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்பு என்று தெரிவித்துள்ளார். தற்போது தென்மராட்சி மக்கள், வர்த்தக சங்கம், பொது அமைப்புகள் நலன்விரும்பிகள் அனைவரும் இணைந்து யாழில் உள்ள டொக்டர்கள் என்ற பெயரில் உலாவும் மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக கண்டனக் கடையடைப்புப் போராட்டத்தில் யூலை எட்டு அன்று ஈடுபடவுள்ளனர். மருத்துவ சேவை என்பது இலாபமீட்ட மட்டும் அல்ல. இந்த மருத்துவ மாபியாக்களின் மத்தியில் டொக்டர் அர்ச்சுனா மக்களின் பக்கம் நின்றதால் இன்று அவர் மக்களின் மீட்பராகி உள்ளார். தங்களை யார் நேசிக்கின்றார்களோ மக்கள் அவர்களை நிச்சயம் நேசிப்பார்கள்.

தன்னுடைய கட்டுப்பாட்டுப் பகுதியில் மக்களுக்கு சேவை வழங்கிய இராணுவ அதிகாரி மாற்றலாகிப் போன போது ஊர்மக்கள் கோலகலமாக கண்ணீரோடு பிரியாவிடையை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது. அதே போல் வடக்கின் கடல் எல்லையில் ஈழத்தமிழ் மீனவர்களுக்காக போராடி களப் பலியான கடற்படை வீரனுக்காக 3,000 மீனவர்கள் ஒரு வாரத்திற்கு முன் தன்னிச்சையாக அவருடைய மரணச் சடங்கிக்கு தென்பகுதி சென்றனர். தற்போது டொக்டர் அர்ச்சுனா ஈழத்தில் மக்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளார். அவருக்காகவும் வடக்கின் மாபியா கும்பலுக்கு எதிராகவும் மக்கள் போராடத்தயாராகிவிட்டார்கள்.

சாதி, மதம், இனம் என்று மக்களைக் கூறுபோட்டு குறும்தேசியவாதத்தையூட்டி பிரித்து வைத்தாலும் தங்களை நேசிப்பவர்களை மக்கள் ஒருபோதும் சாதி, மதம், இனம் பார்த்து கைவிடமாட்டார்கள். உண்மைகள் உறங்குவதில்லை. மக்களை சிறிது காலம் சில காலம் ஏமாற்றலாம். எல்லாக் காலத்திலும் எப்போதும் ஏமாற்ற முடியாது.

ஆர் சம்பந்தன் காலமானார்: மரணம் யாரையும் மன்னிப்பதில்லை!

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் தமிழர்களின் முக்கிய அரசியல் தலைவருமான இரா சம்பந்தன் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். இவர் தனது 91வது வயதில் மரணத்தை தழுவியுள்ளார். தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி பின் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் என தன் நீண்ட அரசியல் பயணத்தைத் தொடர்ந்த இரா சம்பந்தன் இலங்கை அரசியலிலோ தமிழ் அரசியலிலோ ஒரு ஆளுமையாக உருவாகவில்லை. அ அமிர்தலிங்கத்தின் மரணமும் வி ஆனந்தசங்கரிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட முரண்பாடும் அவரைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக்கியது. தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பன்முக அரசியல் தன்மையைக் காட்ட வெளிப்படுத்திய முகம் தான் இரா சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரானது. எஸ் ஜெ வி செல்வநாயகம், அ அமிர்தலிங்கம் வரிசையில் அடுத்து வந்த இரா சம்பந்தன் தமிழ் அரசியல் வரலாற்றில் போராடாத தோற்றுப் போன ஒரு தலைவராகவே பார்க்கப்படுவார். அவருடைய மரணத்துடன் குற்றுயிரும் குலை உயிருமாக இருக்கும் தமிழரசுக் கட்சியும் மரணத்தைத் தழுவும் வாய்ப்பே நிறைய உள்ளது.

சுவிஸ் தொலைக்காட்சி: வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றை அம்பலப்படுத்தியது!

வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றை சுவிஸின் தேசியத் தொலைக்காட்சியான SRF “தமிழ்ப்புலிகளின் நன்கொடை ஊழல் : புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கிறாரா?” என்ற தலைப்பில் ஆவணப்படமாக வெளியிட்டது. சில தினங்களுக்கு முன் யூன் 19, 2024 அன்று ஒளிபரப்பப்பட்ட 14 நிமிடங்கள் ஏழு விநாடிகள் நீண்ட இந்த ஆவணப்படத்தில் வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றின் முக்கிய புள்ளிகள் மற்றும் துவாரகாவாகத் தோண்றுவதாக சொல்லப்படும் பெண்ணுடனான உரையாடல்கள் மற்றும் இவர்களை கேள்விக்கு உட்படுத்தும் பணத்தை இழந்து சிலரின் பதிவுகளும் ஒளிபரப்பப்பட்டது. தேசம்நெற் உட்பட தமிழ் சமூக வலைத்தளங்களில் நன்கு அலசி அம்பலப்படுத்தப்பட்ட வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றை தற்போது ஐரோப்பிய நாடொன்றின் தேசியத் தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தியிருப்பது இந்த மோசடியின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

சுவிஸில் உள்ள உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (World Tamil Coordination Committee – WTCC) தலைவர் அப்துல்லா என்று அறியப்பட்ட ஜெயபாலன் செல்லையாவின் இயக்கத்தில் உருவான வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றின் ஊடகத்துறைப் பொறுப்பாளர் அவுஸ்ரேலியாவில் இருந்து ஒளிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலியின் இயக்குநர் பாலசிங்கம் பிரபாகரன். காலம் சென்ற மதியுரைஞர் அன்ரன் பாலசிகத்துக்கு எடுத்துக் கொடுத்த உதவியாளர் சேரமான் என்று அறியப்பட்ட சிறிஸ்கந்தராஜா ஐஸ்வர்ரஞ்சித வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றின் மதியுரைஞர். சுவிஸ் SRF தொலைக்காட்சி அம்பலப்படுத்திய புரஜக்ற் எப்படி தங்களுக்கு சாதகமாக அமைந்தது என்று 37 நிமிட காணொளியை வெளியிட்டு தங்களது மீசையில் மண்படவில்லை என சேராமான் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றனர்.

SRF இவ் ஆவணப்படம் சுவிஸில் வாழும் முன்னாள் தமிழீழப் போராளிகள் எனக் கூறிக்கொள்பவர்கள், உயிருடன் வந்துள்ள புலிகள் தலைவருக்காக எனக் கூறி பெருந்தொகையான நிதித் திரட்டல் மோசடிகளில் ஈடுபடுவதாக இந்த ஆவணப்படம் குற்றம் சாட்டப்படுகின்றது. புலிகள் அமைப்பானது 15 வருடங்களுக்கு முன்னரே வெற்றி கொள்ளப்பட்டு துடைத்தழித்தொழிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் புலிகள் இலங்கையில் தமிழர்களாக ஒரு கடுமையான இரத்தம் தோய்ந்த யுத்தத்தை நடாத்தியது என்றும் இறுதியில் புலிகள் அமைப்பின் தலைவர் மற்றும் அவரது குடும்பம் உட்பட கொல்லப்பட்டதோடு அந்தப் பிரிவினைக்கான யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த நிதி மோசடி உண்மையிலேயே புலிகள் அமைப்பு அழிந்துவிட்டதா? என்ற ஐயப்பாடான கேள்வியை எழுப்பி உள்ளதாக SRF ஆவணப்படத்தில் கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் தற்போதைய SRF பின் ஆய்வில் ஒரு மோசடியான பெண் என்று கருதப்படுகிறவரோடு இணைந்து சுவிஸில் தமிழ்ப் புலிகள் செயற்பாடுகள் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது எனத் தெரிவிக்கின்றது.
அவ்ஆவணப்படம் மேலும் சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள்: “2009இல் முடிவடைந்த யுத்தம் சுவிஸ்லில் வாழும் தமிழர்களால் பொருளாதார ரீதியாக அனுசரனை வழங்கப்பட்டது. எப்படியிருந்த போதும் இப்போதும் கூட சுவிஸ்லில் வாழும் தமிழர்கள் தனி நாட்டை கோருகிறார்கள்.

ஒரு சிலர் புலிகள் தலைவரான பிரபாகரன் இறப்பு தொடர்பில் சந்தேகம் கொள்கின்றனர். அவர் உயிருடன் இருப்பதாக நம்புகின்றனர். சுவிஸில் ஒரு நினைவிடத்தில் மே 18 இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். அந்த நினைவிடத்தில் நின்று கொண்டு பிரபாகரன் உயிருடன் இருப்பதாக 100 வீதம் நம்புவதா கூறுகின்றனர். அது மட்டுமல்ல அதற்கு “ஆதாரமும் உண்டு. நான் நம்புகிறேன் பிரபாகரன் மகளும் உயிருடன் இருக்கிறார்” என்கிறார்கள்.

2023 பிரபாகரன் மகள் என்று கருதப்படுகிற ஒரு பெண் மாவீரர் தினத்தில் ஆற்றிய உரையை எங்கும் பகிருகிறார்கள். அந்த உரையில் வசதிபடைத்த தமிழர்கள் தாயகத்தில் வாழுபவர்களின் வறுமையை போக்க முன்வர வேண்டும் மற்றும் தன்னலமற்று போராடியவர்களை கருத்தில் கொண்டு புதிய தலைமையான தேசத்தின் புதல்வி பிரபாகரன் மகள் துவாராகாவின் தலைமையிலான வழிநடத்தில் நடக்கப்போகிற போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனை நம்பிய பல சுவிஸ் வாழ் தமிழர்கள் அடுத்த கட்ட போராட்டத்திற்கு பெருந்த தொகையான பணத்தை கொடுத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 3 இலட்சத்து எண்பதினாயிரம் பிராங்குகள். அவ்வாறு பணம் கொடுத்தவர்களை இவ்வாறு நம்ப வைத்துள்ளார்கள். “பிரபாகரனும் அவரது குடும்பமும் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் அவருடைய மனைவி, மகள், அவருடன் சேர்ந்து 16 நபர்கள் மற்றும் அவர் சமையல்காரர் உட்பட.”

SRF இன் ஆவணப்படத்தில் மேலும் கூறியதாவது “துவாரகா என வீடியோவில் தோன்றிய பெண் பல வருடங்களாக சுவிஸில் வாழ்ந்தவர். பல பேரிடம் ஏமாற்றி நிதி திரட்டி மோசடியில் ஈடுபட்டவர். பல தமிழர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றவர்” என்றும் அந்த ஆவணப்படம் சுட்டிக்காட்டியது. SRF, அந்தப் பெண்ணின் இருப்பிடத்தை அறிந்து, அவர் பல வருடங்களாக ஏமாற்றி சேகரித்த நூற்றுக்கணக்கான பிராங்குகள் தொடர்பில் விசாரித்தனர். துவாராகா என்று கருதப்படும் அப்பெண் வீடியோவில் முகம் காட்டவும் தனது பெயரை வெளிப்படையாக கூறவும் மறுத்தார். அப்பெண் தன் மீதான அத்தனை குற்றச் சாட்டுக்களையும் மறுக்கின்றார்.

அதனால் அந்தப் பெண்ணை அதிதி என்ற புனை பெயரால் அழைக்கும் SRF குறிப்பிட்ட பெண்ணின் படத்தையும் மாவீரர் உரை வீடியோவில் தோன்றிய பெண்ணின் படத்தையும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செய்த ஒப்பீட்டு ஆய்வு 95 வீதம் இரு புகைப்படங்களிலும் தோன்றும் நபர்கள் ஒரே நபராக இருக்கவே வாய்ப்புள்ளதாக கூறுகிறது. மற்றும் அப்பெண் உரையாடிய உரையாடல் பதிவுகளும் ஆதாரங்களாக காட்டப்படுகிறது. அதிதி என்று அழைக்கப்படும் அப்பெண்ணை நேரில் பார்த்தவர்களும் துவாரகாவும் ஒரே நபர் எனக் கூறுகின்றனர்.

அதேநேரம் அதிதி இக்குற்றச்சாட்டுக்களை மறுப்பதோடு இல்லாமல் தனது பெயரை கெடுப்பதற்கான ஒரு சதித்திட்டம் என்கிறார். இப் பெண்ணிடம் பணத்தை இழந்தவர்கள் மறுபக்கம் அப்பெண்ணுக்கு எதிராக வழக்குத் தொடுக்கவும் முற்பட்டுள்ளனர்.

இவை இப்படி இருக்க இந்தப் பெண்மணியின் பின்னால் இயங்கும் குழு யார்? என்ற தேடலிற்கு கிடைத்த விடை: சம்பந்தப்பட்ட மாவீரர் உரையை யூரியூப்பில் பதிவேற்றிய நபர் யாரெனில் சுவிஸில் பண சேகரிப்பில் ஈடுபட்ட புலிகளின் முன்னாள் தலைவரான அப்துல்லா எனும் நபர் என கண்டறியப்பட்டது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கு சுவிஸிலிருந்து 15 மில்லியன் பிராங்குகள் அனுப்பி வைத்ததாக குற்றச்சாட்பட்டவர் அப்துல்லா. அவர் உட்பட 2009 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் மோசடியான ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பித்து பல நூறாயிரம் பிராங்குகள் கடன் பெற்று, பயங்கரவாத அமைப்பு என பல நாடுகளில் அறிவிக்கப்பட்ட புலிகள் அமைப்புக்கு நிதிப்பங்களிப்பு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்கள். 2018 இல் ஆச்சரியமான வகையில் புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல, அடிப்படையில் அவர்கள் அனைவரும் மீதான வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் அவ்ஆவணப்படம் தெரிவித்திருந்தது. அப்துல்லா மட்டும் மோசடிக்காக இரண்டு வருடங்கள் அவர் தன்னுடைய நன்னநடத்தையை காட்டும் காலமாக குறைக்கப்பட்டது.

இந்த துவாராகா பண மோசடி விவகாரம் தொடர்பாக உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளரான அப்துல்லாவிடம் கேட்ட போது அப்துல்லா கூறியதாவது மாவீரர் தின உரையில் தோன்றியவரே துவாரகா எனவும் யுத்தம் முடிந்து 14 வருடங்களாக இலங்கைக்கு தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வில்லை என ஆதங்கப்படும் அவர் அதற்காக துவாராகவுடன் இணைந்து செயற்படுவதை ஏற்றுக் கொள்கிறார்.

அதேநேரம் புலிகளின் மீளெழுச்சிக்கு அடுத்த கட்ட போராட்டத்திற்கான நிதி திரட்டலில் ஈடுபடுகிறீர்களா என்ற கேள்விக்கு, நாங்கள் இதுவரை யாரிடமும் பணம் கேட்கவில்லையென மறுக்கிறார். ஆனால் SRF தொலைக்காட்சி அப்துல்லா தொலைபேசியூடாக ஒரு தமிழரிடம் நிதி சேகரிப்பில் ஈடுபடும் உரையாடல்ப் பதிவை ஆதாரமாக வெளியிட்டுள்ளது. அப்துல்லா தான் நிதி சேகரிப்பில் ஈடுபடவில்லை என மறுத்த போதும் அப்துல்லாவை நன்கு அறிந்த தமிழர்கள் அப்துல்லாவின் குரல்ப்பதிவை கேட்டு அக்குரல் அப்துல்லாவினுடையது என உறுதிப்படுத்துகின்றனர்.

அப்துல்லாவுடன் இணைந்து பல வருடங்கள் செயற்பட்ட முன்னாள் சுவிஸ் புலி உறுப்பினரும் 2009 ஆண்டு இடம்பெற்ற நிதி மோசடிக் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் அப்துல்லாவுடன் இணைந்து விடுதலை செய்யப்பட்ட குலம், அப்துல்லா குழுவின் தற்போதைய நடவடிக்கைகளை கண்டிக்கின்றார். தன்னால் பிரபாகரன் இறக்கவில்லை என்று அப்துல்லா குழு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்கின்றார். மேலும் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கும் போது, மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்து கண்டிக்கத்தக்கது என்கிறார். இவ்வாறான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் குடும்பங்களிலும் பிரச்சினைகளை கொண்டுவரும் எனக் கூறும் அவர், அப்துல்லா குழுவின் போருக்கான நிதி சேகரிப்பிற்கு வலுவான ஆதாரங்கள் இருக்குமானால் சுவிஸ் அரசாங்கம் சட்டப்படியாக நடவடிக்கை எடுத்து, இப்படியான மோசடிகளை தடுக்க வேண்டும் என்கிறார்.

சுவிஸ் நாட்டைப் பொறுத்தவரை இவ்விவகாரம் அங்கு வாழும் தமிழர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. மற்றும் முன்னாள் புலி உறுப்பினர்களையும் விசனமடைய செய்துள்ளது. பிரபாகரன் பெயரை பயன்படுத்தி நிதி சேகரிப்பில் ஈடுபடுவதை கண்டிக்கின்றனர். மீண்டும் ஒரு யுத்தம் இலங்கையில் ஏற்படுவதை கடுமையாக எதிர்க்கவும் செய்கின்றனர்.

மாறாக SRF இன் ஆவணப்படத்தில் தோன்றும் சேரமான் மற்றும் அப்துல்லா குழுவினர் மீண்டும் தமிழர்கள் தமது ஆயுத பலத்தை கட்டியெழுப்பி பலத்தோடு சர்வதேசத்தின் ஆதரவுடன் தமிழர்களின் போராட்டம் வெற்றியளிக்கும் என்கின்றனர்.

மே 18 இல் சுவிஸில் மாவீர்ர் நினைவு இடத்தில் கூடிய அப்துல்லா குழுவின் ஆதரவாளர்கள் என்று கருதப்படுகிற 200 மேற்பட்ட தமிழர்கள், புலிகளின் மீளெழுச்சியை பறைசாற்றுவதோடு அடுத்த கட்ட போராட்டத்தற்கான தாயாரிப்பு என்ற வகையில் தம்மை வெளிப்படுத்தி நிற்கின்றனர் என்பதையும் அவ் ஆவணப்படம் சுட்டிக்காட்டியுள்ளது.

2006 இல் ராஜபக்ச அரசு இணைத்தலைமை நாடுகளின் அனுசரணையோடு தீட்டப்பட்ட ‘புரஜக்ற் பீக்கன்’ திட்டம் பிரபாகரன் அவர் தளபதிகள் மற்றும் குடும்பத்தினரை 2009இல் அழித்தொழிக்க, 2023இல் அப்துல்லாவின் வசூல் ‘துவாரகா புரஜக்ற்’ பிரபாகரன், மதிவதனி, துவாரகாவை மீள உயிர்ப்பித்துக்கொண்டு வந்துள்ளது. பிரபாகரன் உயிருடன் தப்பிவிட்டார், குடும்பத்தினர் இன்னும் உயிருடன் இருக்கின்றனர் என்ற கதையளப்புகளுக்கு 2023 முற்பகுதியில் தான் வடிவம் கொடுக்க ஆரம்பித்தனர். ‘தலைவர் ஒரு நாள் இல்லை ஒரு நாள் வருவார்’ என்ற கதையாடல், ‘தலைவர் வரப் போகின்றார்’, ‘தலைவர் வந்துவிட்டார்’, ‘தலைவர் சுவிஸ்க்கு மதிவதனி அக்காவோடும் மகள் துவாரகாவோடும் வந்துவிட்டார்’ என்றானது. அதனை 2023 பெப்ரவரி 14இல் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ரோ இயக்கத்தில் செயற்படும் பழ நெடுமாறன் அணி அறிவித்தது.

“பிரபாகரன் ஐரோப்பாவிற்கு வந்துவிட்டார், அவர் நிதி நெருக்கடியில் இருக்கின்றார், அவர் போராட்டத்திற்கு ஆதரவு கேட்கின்றார்” என்ற கதைகள் அப்போது ஐரோப்பாவில் உலா வந்துகொண்டிருந்தது. இதன் உச்ச கட்டமாக பிரபாகரன் சுவிஸில் சிலரின் வீடுகளுக்கு சென்று விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதாகச் செய்திகள் பரப்பப்பட்டது. அதற்கும் மேலாக முஸ்லீம் பெண்களைப் போன்று பர்தா அணிந்த பெண்ணை சிலர் வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக தன்னை அடையாளப்படுத் முடியாது என மதிவதனி என்ற போர்வையில் வந்தவர் தெரிவித்தாகவும் தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது.

இந்தச் சந்திப்புகளின் மூலம் வர்த்தகப் புள்ளிகள் £150,000 பவுண்கள் வரை அன்பளிப்புச் செய்ததாகவும் அவர்கள் ஒரு மில்லியன் பவுண் வரை சேர்க்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் தேசம்நெற்க்கு தெரியவந்தது.
இப்பின்னணியில் சற்று பெரிய தொகையை வழங்க விருப்பம் தெரிவித்த லண்டன் வர்த்தகர், துவாரகாவை தான் சந்திக்க வேண்டும் என்று கோரி இருக்கின்றார். அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. துவாரகாவைத் தெரிந்திராத அந்த வர்த்தகரும் துவாரகாவைச் சந்தித்த போது துவாரகாவை அழைத்து வந்தவரைப் பார்த்து “துவாரகாவிற்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தது யார்?” என்று கேட்க துவாரகாவை அழைத்து வந்தவர் ஒரு தளபதியாகவிருந்த ஆண் போராளியின் பெயரைச் சொல்லியுள்ளார்.
சற்று விசயம் அறிந்த இந்த வர்த்தகர் துவாரகாவைச் சந்திக்க வருவதற்கு முன்னரேயே பேர்மிங்ஹாமில் உள்ள ஒரு மூத்த பெண் போராளியுடன் தொடர்பு கொண்டு தான் எப்படி அவர் துவாரகா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று கேட்டுள்ளார். ஏனெனில் மதிவதனி போல் அவரும் முக்காடு போட்டுக்கொண்டு வருவார் என்றே அவர் எண்ணினார். அவ்வாறே நடந்தது. அப்பெண் போராளி தான் அந்தக் கேள்வியைக் கேட்குமாறு இந்த வர்த்தகருக்கு கூறியிருந்தார். ஏனெனில் இப்பெண் போராளித் தளபதியே துவாரகாவுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுத்தவர். துவாரகா விடயத்தில் அவர்கள் ஏமாற்றியதை உணர்ந்த அந்த வர்த்தகர் வந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.

புலிகளின் தலைவர் வே பிரபாகரனோ அவர்களது குடும்பத்தினரில் ஒருவரோ உயிரோடு தப்பித்து இருந்தால் அதனை உறுதிப்படுத்துவதற்கு WTCC அப்துல்லாவோ, இன்பத்தமிழ் வானொலி பிரபாகரனோ, சேரமான் உரசலோ தேவைப்பட்டிருக்காது. பிரபாகரனோ குடும்பத்தினரோ உயிருடன் தப்பிவிட்டார்களா? எப்படி? என்றெல்லாம் கேள்வியே எழுந்திருக்க வாய்ப்பில்லை. பிரபாகரனும் அவர் குடும்பத்தினரும் உயிருடன் இல்லை என்ற ஒரு உண்மையை மறைத்து, அவர்கள் உயிருடன் இருக்கின்றனர் என்றொரு பொய்யில் ஆரம்பித்தவர்கள், இப்போது ஆயிரக்கணக்கான பொய்களையும் புழுகு மூட்டைகளையும் அவிழ்த்துவிட்டும் அக்குடும்பம் உயிருடன் இல்லை என்ற உண்மையை மறைக்க முடியவில்லை. ஆனால் ஆரம்பத்தில் பலர் பொய்யை நம்பி பல்லாயிரங்களை இந்த மோசடிக் கும்பலுக்கு வழங்கியுள்ளனர்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.