புலம்பெயர் வாழ்வியல்

புலம்பெயர் வாழ்வியல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுடைய வாழ்வியல், சமூக, அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

போல் சத்தியநேசன்: இன, மத, சாதி பேதங்கள் கடந்த மானிடன்!

நான் 1991 ஜனவரியில் பிரித்தானிய மண்ணுக்கு ஒரு அகதியாக புலம்பெயர்ந்த போது, இந்த மண்ணில் எனக்கு முதன் முதல் அறிமுகமாகியவர்கள் தயாமயூரனும், போல் சத்தியநேசனும். அப்போது போல் சத்தியநேசனை எனக்கு யாரென்றே தெரியாது. இரு வாரங்களாக இன்னுமொரு பாதுகாப்பான நாட்டினூடாக ஸ்பெயினூடாக பிரயாணம் செய்ததன் காரணத்தால் நாங்கள் விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டு திருப்பி அனுப்புவதற்கு பிரித்தானிய உள்துறை அமைச்சு முயற்சி எடுத்தது. நாங்கள் ஆறுபேர் தரையிறங்கி இருந்தோம். அந்த 1991 லண்டனில் வரலாறு காணாத பனிகொட்டி தலைநகரே ஸ்தம்பித்து இருந்தது. நாங்கள் தடுத்து வைத்திருந்த 14 வரையான நாட்களில் முதன் முதலாக ‘சீரியல்’ என்ற உணவை பார்த்தோம். அதற்கு பால் ஊற்றி சாப்பிட வேண்டும் என்பதும் தெரியாது. இலங்கையிலிருந்து கொண்டு வந்த சேர்ட், சறம், சப்பாத்து அணிந்து எதிர்காலம் பற்றிய ஏக்கத்தில் பேதலித்துப் போயிருந்த காலம். உறவுகளைப் பிரிந்து எதிர்காலம் கேள்விக்குறியாகி நின்றது.

அப்போது போல் சத்தியநேசனும் மற்றும் சிலரும் பிரித்தானியாவில் தமிழ் அகதிகளுக்கான அமைப்புகளை நிறுவி பெரும்தொகையில் வந்துகொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தார். வசந் என்னுடைய மூத்த சகோதரன். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சார்ந்தவர். அவரோடு பயிற்சி பெற்றவர், நண்பர் தயாமயூரன். நான் லண்டன் வந்திறங்கியதும் அவரைத் தொடர்புகொண்டேன். அப்போது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் வானொலிச் செய்திச் சேவைகளை ஆரம்பித்து இருந்தது. அன்று தகவல்தொழில்நுட்பம் வளராத காலகட்டம். தொலைபேசி, கடிதம் என்ற பாரம்பரிய தொடர்புசாதனங்களே வெளிநாடு வந்த தமழிர்களுக்கு பயன்பாட்டில் இருந்தது. இலங்கைச் செய்திகளைச் சேகரித்து அவற்றை தொலைபேசியில் பதிவிட்டு வெளியிடுவார்கள். அந்தத் தொலைபேசிக்கு போன் பண்ணினால் பதிவு செய்யப்பட்ட செய்தியைக் கேட்கலாம். இந்தச் செய்திப் பதிவை தற்போது பெர்ஸ்ற் ஓடியோ கலையகம் – பாமுகம் நடாமோகனே பதிவு செய்து வந்தார். நடாமோகனுடனேயே போல் சத்தியநேசனும் அக்காலத்தில் சேர்ந்து செயற்பட்டார். நடாமோகன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகச் செயற்பாட்டாளராக இருந்ததால் போல் சத்தியநேசனும் கழகச் செயற்பாட்டாளர் ஆனார். வெளிநாடுகளுக்கு ஆரம்பத்தில் புலம்பெயர்ந்தவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரே அதிகம். புளொட் அமைப்புக்குள் ஏற்பட்ட பிளவும் அதன்பின் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய விடுதலை அமைப்புகளை கொன்றொழித்ததாலும் போராடச் சென்ற எழுபதுகளுக்கு முன் பிறந்த அத்தலைமுறையினர் தங்கள் உயிரைப் பாதுகாக்க மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். அதனால் லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புகளின் செல்வாக்கு சற்று குறிப்பிடத்தக்கதாகவே இருந்தது.

அதன் பின் 1980க்களுக்கு முன் பிறந்த தலைமுறையினர் என் போன்றவர்கள் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்தோம். அவ்வாறு புலம்பெயர்ந்த எங்களுக்கு எங்களுக்குப் பின் புலம்பெயர்ந்தவர்களுக்கும் போல் சத்தியநேசனின் உதவிகள், செயற்பாடுகள் புதிய மண்ணைப் பற்றிக்கொள்வதற்கான ஆதாரமானது. இந்த உதவிகளுக்கு பின்னால் இன்னும் பலருடைய உழைப்புகளும் இருந்தாலும் போல் சத்தியநேசன் இதனை தனது முழுநேரக் கடமையாகவே செய்து வந்தார். நான் உட்பட என்னுடன் வந்த ஆறு பேரும் அரசியல் தஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இரு வாரங்களில் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டோம். அடுத்த ஆறு ஆண்டுகள் என்னை நிலைப்படுத்திக் கொள்ள, வந்த கடன் அடைக்க, குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை குறைக்க, சுற்றி உள்ளவர்களின் சுமைகளைக் குறைக்க என்று வேலை, படிப்பு என்று ஓடியது.

பின் படிப்படியாக எனது சமூக, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பிக்க போல் சத்தியநேசனுடனான உறவு வலுக்க ஆரம்பித்தது. 1997இல் தேசம் சஞ்சிகையை ஆரம்பித்தேன், 2000 மாம் ஆண்டுகளில் லண்டன் உதயனில் கடமையாற்றினே;. அதன் பின் லண்டன் குரல் பத்திரிகையை ஆரம்பித்தேன். 2007 இல் தேசம்நெற், 2023இல் தேசம்திரை என்று எனது ஊடகப் பயணம் தொடர எனக்கும் போலுக்குமான உறவு நெருக்கமானது. போல் சத்தியநேசன் பற்றிய செய்திகள் அன்றைய எனது ஊடகங்களில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். அப்போதெல்லாம் பெரும்பாலான நிகழ்வுகளில் போல் சத்தியநேசனும் நானும் கலந்துகொள்வோம். போல் சத்தியநேசனுக்கு மிகப் பிடித்த விடயம் ‘மைக்’ அதனை வாங்கினால் வார்த்தைகள் சரளமாக கிறிஸ்தவத் தமிழில் மடைதிறந்து பாயும். கருத்துக்களுக்கு பஞ்சமில்லாத, எந்தச் சூழலிலும் தனது கருத்தை லாவகமாக வைத்துவிடுவார். அந்தக் கருத்துக்களில் பெரும்பாலும் ஒரு முற்போக்கான அணுகுமுறை அல்லது மக்கள் நலன் இருக்கும். அது எனது ஊடகத்தில் அடுத்த இதழில் செய்தியாகிவிடும்.

அகதிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் செயற்பாடுகள், அகதிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள், தமிழ் மக்களை இம்மண்ணின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தும் விடயங்களில் போல் சத்தியநேசன் மிகத்தீவிரமாகச் செயற்பட்டவர்.

போல் சத்தியநேசனின் பாரிய முயற்சிகளில் ஒன்று தமிழ் மக்களிடையே உருவான வன்முறைகளைக் கட்டுப்படுத்துகின்ற முயற்சி. அதில் பாரிய வெற்றியையும் போல் சத்தியநேசன் அடைந்தார். ஒப்பிரேசன் என்வர் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கொட்லன்ட் யாட்டின் வன்முறைக்குழக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அத்திவாரம் இட்டவர் போல் சத்தியநேசன். லண்டன் தெருக்களில் தமிழ் இளைஞர்களின் இரத்தம் சொட்டுவதை அவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை கட்டுப்படுத்தியதில் போல் சத்தியநேசனின் பங்கு அளப்பெரியது. என்னையும் எனது குடும்பத்தையும் கொல்லுவோம் என்று என்னை மிரட்டிய குழுவைத் தேடிப் பிடித்து நண்பர் டேவிட் ஜெயத்தின் உதவியோடு சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்தேன். அப்போது என்னோடு கூட வந்து அந்த 30 வரையான இளைஞர்களோடும் உரையாடி அதனை சுமூகப்படுத்தியதில் போல் சத்தியநேசனின் பங்கு முக்கியமானது. நண்பர் தோழர் டேவிட் ஜெயம் இல்லையென்றால் அது சாத்தியமாகியிராது.

அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட விடயம் ‘தைத் திங்கள்’ கொண்டாட்டம். இதனை 20 ஆண்டுகளுக்கு முன்னரேயே திட்டமிட்டு கடந்த 20வது ஆண்டுகளாக ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரீற் நோத்தில் கொண்டாடி வந்தவர் போல் சத்தியநேசன். தைத் திருநாளன்று ஈஸ்ற்ஹாமில் உள்ள அலங்காரத் தெருவிளக்குகளை மேயரை அழைத்து வந்து ஏற்றி தமிழர் திருநாளான தைப்பொங்கலை ஈஸ்ற்ஹாமின் விழாவாக மாற்றியவர் போல் சத்தியநேசன் என்றால் மிகையல்ல. யூலை 12 போல் சத்தியநேசனுடைய நினைவுக் கூட்டம் அதே தைப்பொங்கல் விழா கொண்டாடப்படும் வீதியில் அவருடைய நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் உரையாற்றிய ஈஸ்ற்ஹாம் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரும் வேர்க் அன் பென்சன் (Work & Penssion Minister) அமைச்சருமான ஸ்ரிபன் ரிம்ஸ் (Stephen Timms) தனது உரையில் அதனை நினைவு கூர்ந்தார். அங்கு உரையாற்றிய ஏனைய கவுன்சிலர்கள் பலரும் அதனை நினைவு கூர்ந்தனர்.

போல் சத்தியநேசனிடம் உதவி, ஆலோசணை பெறாத ஒருவர் ஈஸ்ற்ஹாமில் இருப்பாரா என்பது சந்தேகம். அவருக்கு என்று ஒரு வீடு இருந்தாலும் ஹைஸ்ரிட் நோத் (High Street North) தான் போலின் முகவரி. அதிலுள்ள ஏதாவது ஒரு கடையில் அலுவலகத்தில் போலைக் காணலாம். இவ்வாறு போல் சத்தியநேசன் பற்றிய கதையாடலை அடுக்கிக் கொண்டே போகலாம். என்னைப் போல், போல் சத்தியநேசனை அறிந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கதையிருக்கும். போல் சத்தியநேசன் இல்லாமல் பிரித்தானிய தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்ய முடியாத அளவுக்கு வரலாறான தோற்றத்தால் மட்டுமல்ல பண்பாலும் உயர்ந்த மாநிடன். ஒரு கிறிஸ்தவ தமிழனாக இருந்த போதும் ஈஸ்ற்ஹாமிலும் லண்டனிலும் உள்ள சைவ ஆலயங்களின் திருவிழாக்களில் போல் சத்தியநேசனைக் காணலாம். பள்ளிவாசலிலும் காணலாம். அதனால் தான் ஈஸ்ற்ஹாமை போல் புண்ணிய பூமி என்று அடிக்கடி குறிப்பிடுவார்.

போல் சத்தியநேசன் ஒரு பெருமிதமற்ற மனிதர். அவர் ஒரு போதும் பணத்திற்கு ஆசைப்பட்டவரும் கிடையாது, அதற்கு பணிந்துபோனவரும் கிடையாது. அதனை வைத்திருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை மதிப்பவரும் கிடையாது. வயது வித்தியாசமின்றி அனைவரோடும் தன்னை இணைத்துக்கொண்டு உரையாடலை வளர்க்க அவர் ஒரு புள்ளியை இனம்கண்டுகொள்வார். குறிப்பாக பெண்களோடு உரையாடுவது என்றால் அவருக்கு தனிப்பிரியம். அதனை நாங்கள் நண்பர்கள் கூடினால் நையாண்டி பண்ணிக்கொள்வோம். நைற் கிளப்பிற்குச் சென்றிருந்த போது யாரையோ உரசியதற்காக உடனே வோஸ்ரூம் சென்று கையைக் கழுவி வந்த ‘சைவம்’ விரும்பும் மனிதன் போல் சத்தியநேசன் என நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை கொள்ளாத பிரம்மச்சாரியாகவே தன் வாழ்க்கையில் சிங்கிளாக இருந்து கெத்துக் காட்டியவர். போல் இருக்கும் இடம் என்றைக்குமே சச்சரவாகவும் கலகலப்பாகவும் இருக்கும். அண்மையில் கூட தன்னுடைய நண்பர்களோடு உரையாடும் போது, “நீங்கள் நான் போனபிறகு செத்தவீட்டுக்கு வந்து றீல் விடுறத விட்டுப்போட்டு இப்ப உயிரோட இருக்கேக்க சாப்பாடைக் கொண்டு வந்து பார்த்திட்டு போங்கோ’ என்று பகிடியாக சில நண்பர்களிடம் கூறியுள்ளார். “என்ர பொடியை வைச்சுக் கொண்டு செத்தவீட்டில எதாவது கணக்கு கதைச்ச ஆவியாய் வந்து அடிப்பன்” என்று சிலரை மிரட்டியும்உள்ளார்.

சில வாரங்களுக்கு முன் எனது இணையரோடு ஈஸ்ற்ஹாம் வந்திருந்த போது சந்தித்து, உணவருந்த அழைத்தேன். ‘விழுந்து நடக்க கஸ்டமாய் இருக்கு அடுத்த முறை வரும் போது போன் எடும், நான் வந்து சந்திக்கிறேன்” என்றார். அது தான் அவருடன் என்னுடைய கடைசி உரையாடல். யூலை 5 எனது பள்ளி மாணவர்களைக் கூட்டிக்கொண்டு பேர்மிங்ஹாம் சொக்லேட் பற்ரிக்கு சென்றிருந்தேன். செல்லும் வழியில்தான் போல் சத்தியநேசன் எம்மை விட்டுப் பிரிந்த செய்தியை அறிந்தேன். கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டுப் பயணத்தை மீள்பயணம் செய்து வந்திறங்கினேன். நோயின் அனைத்து வலிகளில் இருந்தும் அவருக்கு ஒரு விடுதலை கிடைத்துள்ளது. போல் சத்தியநேசனுக்கு என்று ஒரு தனிப்பட்ட குடும்பம் இல்லை. ஆனால் போல் சத்தியநேசனின் குடும்பம் மிகப்பெரியது. ஈஸ்ற்ஹாம் என்ற குடும்பத்தில் போல் தலைமகன். உலகெங்கும் வாழும் தமிழர்கள் அவர் உறவுகள்.

அண்மைய சில ஆண்டுகள் வரை இந்த உறவு தொடர்ந்தது. கவுன்சிலர் போல் முன்னாள் கவுன்சிலராக நோயும் ஆட்கொள்ள அவருடைய நடமாட்டங்களும் மட்டுப்படுத்தப்பட்டது. நானும் என்னுடைய ஆசியர் பயிற்சி, தொழில் நிமித்தம் லண்டனுக்கு வெளியே சென்றதால் எமது உரையாடல்கள் தொலைபேசி உரையாடல்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

நீண்ட காலமாகவே பல்வேறு நோய் பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருந்த போல் சத்தியநேசன் வீட்டில் கட்டிலால் வீழ்ந்து, கையில் நோபட்டு இருந்தார். அவரை யூலை நான்கு சில நாட்களுக்கு முன்னதாக மருத்துவமனையில் நண்பர்கள் அனுமதித்திருந்தனர். யூலை நான்கு இரவு நன்பர்கள், சகோதரர் உணவு பரிமாறி உரையாடித் திரும்பியதன் பின்னர் மறுநாள் அதிகாலை போல் சத்தியநேசன் உயிர்நீர்த்துள்ளர்.

குட்டி யாழ்ப்பாணமான ஈஸ்ற்ஹாம் உள்ளுராட்சி சபையின் முன்னாள் மேயர் கவுன்சிலர் அதற்கும் மேலாக அங்குள்ள மக்களின் மனங்களை வென்ற போல் சத்தியநேசனின் இறுதி நிகழ்வுகள் யூலை 17ம் திகதி முறையே அவர் வாழ்ந்த பேர்ஜஸ் றோட்டில் (Burgess Road உள்ள சென் போல் St Paul Church தேவாலயத்தில் காலை 10 மணி முதலும் அடுத்து மனோபார்க் மயானத்தில் மாலை 2 மணிக்கு நல்லடக்கமும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. இறுதியாக ப்ளேக் ஹோல் றோட்டில் (Blake Hall Road உள்ள சுவாமிநாராயணன் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் Swaminarayanan Sports World இல் மாலை 3 மணிக்கு ஒன்றுகூடலும் நடைபெற இருக்கின்றது.

இன, மத, சாதி பேதங்கள் கடந்த நல்லதொரு மானிடன் போல் சத்தியநேசன் ஈஸ்ற்ஹாமில் ஏற்பாடு செய்யப்பட்ட வெவ்வேறு நினைவு நிகழ்வுகளில் அப்பிரதேச மக்கள், லண்டனில் பல பாகங்களிலும் வாழும் தமிழர்கள், ஈஸ்ற்ஹாம் உள்ளுராட்சி சபையின் கவுன்சிலர்கள், நண்பர்கள், அவரின் பிறப்பிடமான உரும்பராயின் சொந்தங்கள், உற்றார், உறவினர்கள் என நூற்றுக்கணக்கில் வந்து அஞ்சலி செய்தனர். ஈஸ்ற்ஹாம் யை தன்னுடைய வாழ்விடமாக்கி அதற்கு ‘புண்ணிய பூமி’ என்று புகழ்ந்துரைக்கும் போல் சத்தியநேசன் அந்த மண்ணோடு சங்கமமாக உள்ளார்.

சுவிஸ் தொலைக்காட்சி: வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றை அம்பலப்படுத்தியது!

வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றை சுவிஸின் தேசியத் தொலைக்காட்சியான SRF “தமிழ்ப்புலிகளின் நன்கொடை ஊழல் : புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கிறாரா?” என்ற தலைப்பில் ஆவணப்படமாக வெளியிட்டது. சில தினங்களுக்கு முன் யூன் 19, 2024 அன்று ஒளிபரப்பப்பட்ட 14 நிமிடங்கள் ஏழு விநாடிகள் நீண்ட இந்த ஆவணப்படத்தில் வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றின் முக்கிய புள்ளிகள் மற்றும் துவாரகாவாகத் தோண்றுவதாக சொல்லப்படும் பெண்ணுடனான உரையாடல்கள் மற்றும் இவர்களை கேள்விக்கு உட்படுத்தும் பணத்தை இழந்து சிலரின் பதிவுகளும் ஒளிபரப்பப்பட்டது. தேசம்நெற் உட்பட தமிழ் சமூக வலைத்தளங்களில் நன்கு அலசி அம்பலப்படுத்தப்பட்ட வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றை தற்போது ஐரோப்பிய நாடொன்றின் தேசியத் தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தியிருப்பது இந்த மோசடியின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

சுவிஸில் உள்ள உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (World Tamil Coordination Committee – WTCC) தலைவர் அப்துல்லா என்று அறியப்பட்ட ஜெயபாலன் செல்லையாவின் இயக்கத்தில் உருவான வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றின் ஊடகத்துறைப் பொறுப்பாளர் அவுஸ்ரேலியாவில் இருந்து ஒளிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலியின் இயக்குநர் பாலசிங்கம் பிரபாகரன். காலம் சென்ற மதியுரைஞர் அன்ரன் பாலசிகத்துக்கு எடுத்துக் கொடுத்த உதவியாளர் சேரமான் என்று அறியப்பட்ட சிறிஸ்கந்தராஜா ஐஸ்வர்ரஞ்சித வசூல் ‘துவாரகா புரஜக்ற்’றின் மதியுரைஞர். சுவிஸ் SRF தொலைக்காட்சி அம்பலப்படுத்திய புரஜக்ற் எப்படி தங்களுக்கு சாதகமாக அமைந்தது என்று 37 நிமிட காணொளியை வெளியிட்டு தங்களது மீசையில் மண்படவில்லை என சேராமான் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றனர்.

SRF இவ் ஆவணப்படம் சுவிஸில் வாழும் முன்னாள் தமிழீழப் போராளிகள் எனக் கூறிக்கொள்பவர்கள், உயிருடன் வந்துள்ள புலிகள் தலைவருக்காக எனக் கூறி பெருந்தொகையான நிதித் திரட்டல் மோசடிகளில் ஈடுபடுவதாக இந்த ஆவணப்படம் குற்றம் சாட்டப்படுகின்றது. புலிகள் அமைப்பானது 15 வருடங்களுக்கு முன்னரே வெற்றி கொள்ளப்பட்டு துடைத்தழித்தொழிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் புலிகள் இலங்கையில் தமிழர்களாக ஒரு கடுமையான இரத்தம் தோய்ந்த யுத்தத்தை நடாத்தியது என்றும் இறுதியில் புலிகள் அமைப்பின் தலைவர் மற்றும் அவரது குடும்பம் உட்பட கொல்லப்பட்டதோடு அந்தப் பிரிவினைக்கான யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த நிதி மோசடி உண்மையிலேயே புலிகள் அமைப்பு அழிந்துவிட்டதா? என்ற ஐயப்பாடான கேள்வியை எழுப்பி உள்ளதாக SRF ஆவணப்படத்தில் கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் தற்போதைய SRF பின் ஆய்வில் ஒரு மோசடியான பெண் என்று கருதப்படுகிறவரோடு இணைந்து சுவிஸில் தமிழ்ப் புலிகள் செயற்பாடுகள் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது எனத் தெரிவிக்கின்றது.
அவ்ஆவணப்படம் மேலும் சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள்: “2009இல் முடிவடைந்த யுத்தம் சுவிஸ்லில் வாழும் தமிழர்களால் பொருளாதார ரீதியாக அனுசரனை வழங்கப்பட்டது. எப்படியிருந்த போதும் இப்போதும் கூட சுவிஸ்லில் வாழும் தமிழர்கள் தனி நாட்டை கோருகிறார்கள்.

ஒரு சிலர் புலிகள் தலைவரான பிரபாகரன் இறப்பு தொடர்பில் சந்தேகம் கொள்கின்றனர். அவர் உயிருடன் இருப்பதாக நம்புகின்றனர். சுவிஸில் ஒரு நினைவிடத்தில் மே 18 இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். அந்த நினைவிடத்தில் நின்று கொண்டு பிரபாகரன் உயிருடன் இருப்பதாக 100 வீதம் நம்புவதா கூறுகின்றனர். அது மட்டுமல்ல அதற்கு “ஆதாரமும் உண்டு. நான் நம்புகிறேன் பிரபாகரன் மகளும் உயிருடன் இருக்கிறார்” என்கிறார்கள்.

2023 பிரபாகரன் மகள் என்று கருதப்படுகிற ஒரு பெண் மாவீரர் தினத்தில் ஆற்றிய உரையை எங்கும் பகிருகிறார்கள். அந்த உரையில் வசதிபடைத்த தமிழர்கள் தாயகத்தில் வாழுபவர்களின் வறுமையை போக்க முன்வர வேண்டும் மற்றும் தன்னலமற்று போராடியவர்களை கருத்தில் கொண்டு புதிய தலைமையான தேசத்தின் புதல்வி பிரபாகரன் மகள் துவாராகாவின் தலைமையிலான வழிநடத்தில் நடக்கப்போகிற போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனை நம்பிய பல சுவிஸ் வாழ் தமிழர்கள் அடுத்த கட்ட போராட்டத்திற்கு பெருந்த தொகையான பணத்தை கொடுத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 3 இலட்சத்து எண்பதினாயிரம் பிராங்குகள். அவ்வாறு பணம் கொடுத்தவர்களை இவ்வாறு நம்ப வைத்துள்ளார்கள். “பிரபாகரனும் அவரது குடும்பமும் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் அவருடைய மனைவி, மகள், அவருடன் சேர்ந்து 16 நபர்கள் மற்றும் அவர் சமையல்காரர் உட்பட.”

SRF இன் ஆவணப்படத்தில் மேலும் கூறியதாவது “துவாரகா என வீடியோவில் தோன்றிய பெண் பல வருடங்களாக சுவிஸில் வாழ்ந்தவர். பல பேரிடம் ஏமாற்றி நிதி திரட்டி மோசடியில் ஈடுபட்டவர். பல தமிழர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றவர்” என்றும் அந்த ஆவணப்படம் சுட்டிக்காட்டியது. SRF, அந்தப் பெண்ணின் இருப்பிடத்தை அறிந்து, அவர் பல வருடங்களாக ஏமாற்றி சேகரித்த நூற்றுக்கணக்கான பிராங்குகள் தொடர்பில் விசாரித்தனர். துவாராகா என்று கருதப்படும் அப்பெண் வீடியோவில் முகம் காட்டவும் தனது பெயரை வெளிப்படையாக கூறவும் மறுத்தார். அப்பெண் தன் மீதான அத்தனை குற்றச் சாட்டுக்களையும் மறுக்கின்றார்.

அதனால் அந்தப் பெண்ணை அதிதி என்ற புனை பெயரால் அழைக்கும் SRF குறிப்பிட்ட பெண்ணின் படத்தையும் மாவீரர் உரை வீடியோவில் தோன்றிய பெண்ணின் படத்தையும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செய்த ஒப்பீட்டு ஆய்வு 95 வீதம் இரு புகைப்படங்களிலும் தோன்றும் நபர்கள் ஒரே நபராக இருக்கவே வாய்ப்புள்ளதாக கூறுகிறது. மற்றும் அப்பெண் உரையாடிய உரையாடல் பதிவுகளும் ஆதாரங்களாக காட்டப்படுகிறது. அதிதி என்று அழைக்கப்படும் அப்பெண்ணை நேரில் பார்த்தவர்களும் துவாரகாவும் ஒரே நபர் எனக் கூறுகின்றனர்.

அதேநேரம் அதிதி இக்குற்றச்சாட்டுக்களை மறுப்பதோடு இல்லாமல் தனது பெயரை கெடுப்பதற்கான ஒரு சதித்திட்டம் என்கிறார். இப் பெண்ணிடம் பணத்தை இழந்தவர்கள் மறுபக்கம் அப்பெண்ணுக்கு எதிராக வழக்குத் தொடுக்கவும் முற்பட்டுள்ளனர்.

இவை இப்படி இருக்க இந்தப் பெண்மணியின் பின்னால் இயங்கும் குழு யார்? என்ற தேடலிற்கு கிடைத்த விடை: சம்பந்தப்பட்ட மாவீரர் உரையை யூரியூப்பில் பதிவேற்றிய நபர் யாரெனில் சுவிஸில் பண சேகரிப்பில் ஈடுபட்ட புலிகளின் முன்னாள் தலைவரான அப்துல்லா எனும் நபர் என கண்டறியப்பட்டது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கு சுவிஸிலிருந்து 15 மில்லியன் பிராங்குகள் அனுப்பி வைத்ததாக குற்றச்சாட்பட்டவர் அப்துல்லா. அவர் உட்பட 2009 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் மோசடியான ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பித்து பல நூறாயிரம் பிராங்குகள் கடன் பெற்று, பயங்கரவாத அமைப்பு என பல நாடுகளில் அறிவிக்கப்பட்ட புலிகள் அமைப்புக்கு நிதிப்பங்களிப்பு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்கள். 2018 இல் ஆச்சரியமான வகையில் புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல, அடிப்படையில் அவர்கள் அனைவரும் மீதான வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் அவ்ஆவணப்படம் தெரிவித்திருந்தது. அப்துல்லா மட்டும் மோசடிக்காக இரண்டு வருடங்கள் அவர் தன்னுடைய நன்னநடத்தையை காட்டும் காலமாக குறைக்கப்பட்டது.

இந்த துவாராகா பண மோசடி விவகாரம் தொடர்பாக உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளரான அப்துல்லாவிடம் கேட்ட போது அப்துல்லா கூறியதாவது மாவீரர் தின உரையில் தோன்றியவரே துவாரகா எனவும் யுத்தம் முடிந்து 14 வருடங்களாக இலங்கைக்கு தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வில்லை என ஆதங்கப்படும் அவர் அதற்காக துவாராகவுடன் இணைந்து செயற்படுவதை ஏற்றுக் கொள்கிறார்.

அதேநேரம் புலிகளின் மீளெழுச்சிக்கு அடுத்த கட்ட போராட்டத்திற்கான நிதி திரட்டலில் ஈடுபடுகிறீர்களா என்ற கேள்விக்கு, நாங்கள் இதுவரை யாரிடமும் பணம் கேட்கவில்லையென மறுக்கிறார். ஆனால் SRF தொலைக்காட்சி அப்துல்லா தொலைபேசியூடாக ஒரு தமிழரிடம் நிதி சேகரிப்பில் ஈடுபடும் உரையாடல்ப் பதிவை ஆதாரமாக வெளியிட்டுள்ளது. அப்துல்லா தான் நிதி சேகரிப்பில் ஈடுபடவில்லை என மறுத்த போதும் அப்துல்லாவை நன்கு அறிந்த தமிழர்கள் அப்துல்லாவின் குரல்ப்பதிவை கேட்டு அக்குரல் அப்துல்லாவினுடையது என உறுதிப்படுத்துகின்றனர்.

அப்துல்லாவுடன் இணைந்து பல வருடங்கள் செயற்பட்ட முன்னாள் சுவிஸ் புலி உறுப்பினரும் 2009 ஆண்டு இடம்பெற்ற நிதி மோசடிக் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் அப்துல்லாவுடன் இணைந்து விடுதலை செய்யப்பட்ட குலம், அப்துல்லா குழுவின் தற்போதைய நடவடிக்கைகளை கண்டிக்கின்றார். தன்னால் பிரபாகரன் இறக்கவில்லை என்று அப்துல்லா குழு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்கின்றார். மேலும் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கும் போது, மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்து கண்டிக்கத்தக்கது என்கிறார். இவ்வாறான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் குடும்பங்களிலும் பிரச்சினைகளை கொண்டுவரும் எனக் கூறும் அவர், அப்துல்லா குழுவின் போருக்கான நிதி சேகரிப்பிற்கு வலுவான ஆதாரங்கள் இருக்குமானால் சுவிஸ் அரசாங்கம் சட்டப்படியாக நடவடிக்கை எடுத்து, இப்படியான மோசடிகளை தடுக்க வேண்டும் என்கிறார்.

சுவிஸ் நாட்டைப் பொறுத்தவரை இவ்விவகாரம் அங்கு வாழும் தமிழர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. மற்றும் முன்னாள் புலி உறுப்பினர்களையும் விசனமடைய செய்துள்ளது. பிரபாகரன் பெயரை பயன்படுத்தி நிதி சேகரிப்பில் ஈடுபடுவதை கண்டிக்கின்றனர். மீண்டும் ஒரு யுத்தம் இலங்கையில் ஏற்படுவதை கடுமையாக எதிர்க்கவும் செய்கின்றனர்.

மாறாக SRF இன் ஆவணப்படத்தில் தோன்றும் சேரமான் மற்றும் அப்துல்லா குழுவினர் மீண்டும் தமிழர்கள் தமது ஆயுத பலத்தை கட்டியெழுப்பி பலத்தோடு சர்வதேசத்தின் ஆதரவுடன் தமிழர்களின் போராட்டம் வெற்றியளிக்கும் என்கின்றனர்.

மே 18 இல் சுவிஸில் மாவீர்ர் நினைவு இடத்தில் கூடிய அப்துல்லா குழுவின் ஆதரவாளர்கள் என்று கருதப்படுகிற 200 மேற்பட்ட தமிழர்கள், புலிகளின் மீளெழுச்சியை பறைசாற்றுவதோடு அடுத்த கட்ட போராட்டத்தற்கான தாயாரிப்பு என்ற வகையில் தம்மை வெளிப்படுத்தி நிற்கின்றனர் என்பதையும் அவ் ஆவணப்படம் சுட்டிக்காட்டியுள்ளது.

2006 இல் ராஜபக்ச அரசு இணைத்தலைமை நாடுகளின் அனுசரணையோடு தீட்டப்பட்ட ‘புரஜக்ற் பீக்கன்’ திட்டம் பிரபாகரன் அவர் தளபதிகள் மற்றும் குடும்பத்தினரை 2009இல் அழித்தொழிக்க, 2023இல் அப்துல்லாவின் வசூல் ‘துவாரகா புரஜக்ற்’ பிரபாகரன், மதிவதனி, துவாரகாவை மீள உயிர்ப்பித்துக்கொண்டு வந்துள்ளது. பிரபாகரன் உயிருடன் தப்பிவிட்டார், குடும்பத்தினர் இன்னும் உயிருடன் இருக்கின்றனர் என்ற கதையளப்புகளுக்கு 2023 முற்பகுதியில் தான் வடிவம் கொடுக்க ஆரம்பித்தனர். ‘தலைவர் ஒரு நாள் இல்லை ஒரு நாள் வருவார்’ என்ற கதையாடல், ‘தலைவர் வரப் போகின்றார்’, ‘தலைவர் வந்துவிட்டார்’, ‘தலைவர் சுவிஸ்க்கு மதிவதனி அக்காவோடும் மகள் துவாரகாவோடும் வந்துவிட்டார்’ என்றானது. அதனை 2023 பெப்ரவரி 14இல் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ரோ இயக்கத்தில் செயற்படும் பழ நெடுமாறன் அணி அறிவித்தது.

“பிரபாகரன் ஐரோப்பாவிற்கு வந்துவிட்டார், அவர் நிதி நெருக்கடியில் இருக்கின்றார், அவர் போராட்டத்திற்கு ஆதரவு கேட்கின்றார்” என்ற கதைகள் அப்போது ஐரோப்பாவில் உலா வந்துகொண்டிருந்தது. இதன் உச்ச கட்டமாக பிரபாகரன் சுவிஸில் சிலரின் வீடுகளுக்கு சென்று விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதாகச் செய்திகள் பரப்பப்பட்டது. அதற்கும் மேலாக முஸ்லீம் பெண்களைப் போன்று பர்தா அணிந்த பெண்ணை சிலர் வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக தன்னை அடையாளப்படுத் முடியாது என மதிவதனி என்ற போர்வையில் வந்தவர் தெரிவித்தாகவும் தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது.

இந்தச் சந்திப்புகளின் மூலம் வர்த்தகப் புள்ளிகள் £150,000 பவுண்கள் வரை அன்பளிப்புச் செய்ததாகவும் அவர்கள் ஒரு மில்லியன் பவுண் வரை சேர்க்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் தேசம்நெற்க்கு தெரியவந்தது.
இப்பின்னணியில் சற்று பெரிய தொகையை வழங்க விருப்பம் தெரிவித்த லண்டன் வர்த்தகர், துவாரகாவை தான் சந்திக்க வேண்டும் என்று கோரி இருக்கின்றார். அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. துவாரகாவைத் தெரிந்திராத அந்த வர்த்தகரும் துவாரகாவைச் சந்தித்த போது துவாரகாவை அழைத்து வந்தவரைப் பார்த்து “துவாரகாவிற்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தது யார்?” என்று கேட்க துவாரகாவை அழைத்து வந்தவர் ஒரு தளபதியாகவிருந்த ஆண் போராளியின் பெயரைச் சொல்லியுள்ளார்.
சற்று விசயம் அறிந்த இந்த வர்த்தகர் துவாரகாவைச் சந்திக்க வருவதற்கு முன்னரேயே பேர்மிங்ஹாமில் உள்ள ஒரு மூத்த பெண் போராளியுடன் தொடர்பு கொண்டு தான் எப்படி அவர் துவாரகா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று கேட்டுள்ளார். ஏனெனில் மதிவதனி போல் அவரும் முக்காடு போட்டுக்கொண்டு வருவார் என்றே அவர் எண்ணினார். அவ்வாறே நடந்தது. அப்பெண் போராளி தான் அந்தக் கேள்வியைக் கேட்குமாறு இந்த வர்த்தகருக்கு கூறியிருந்தார். ஏனெனில் இப்பெண் போராளித் தளபதியே துவாரகாவுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுத்தவர். துவாரகா விடயத்தில் அவர்கள் ஏமாற்றியதை உணர்ந்த அந்த வர்த்தகர் வந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.

புலிகளின் தலைவர் வே பிரபாகரனோ அவர்களது குடும்பத்தினரில் ஒருவரோ உயிரோடு தப்பித்து இருந்தால் அதனை உறுதிப்படுத்துவதற்கு WTCC அப்துல்லாவோ, இன்பத்தமிழ் வானொலி பிரபாகரனோ, சேரமான் உரசலோ தேவைப்பட்டிருக்காது. பிரபாகரனோ குடும்பத்தினரோ உயிருடன் தப்பிவிட்டார்களா? எப்படி? என்றெல்லாம் கேள்வியே எழுந்திருக்க வாய்ப்பில்லை. பிரபாகரனும் அவர் குடும்பத்தினரும் உயிருடன் இல்லை என்ற ஒரு உண்மையை மறைத்து, அவர்கள் உயிருடன் இருக்கின்றனர் என்றொரு பொய்யில் ஆரம்பித்தவர்கள், இப்போது ஆயிரக்கணக்கான பொய்களையும் புழுகு மூட்டைகளையும் அவிழ்த்துவிட்டும் அக்குடும்பம் உயிருடன் இல்லை என்ற உண்மையை மறைக்க முடியவில்லை. ஆனால் ஆரம்பத்தில் பலர் பொய்யை நம்பி பல்லாயிரங்களை இந்த மோசடிக் கும்பலுக்கு வழங்கியுள்ளனர்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

 

விநாயகம் மறைவு: தியாகத்துக்கும் – துரோகத்துக்கும் உள்ள இடைவெளி மறைந்துவிட்டது! மரணம் யாரையும் துரோகி ஆக்குவதுமில்லை புனிதர்கள் ஆக்குவதுமில்லை!! : த ஜெயபாலன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளக புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த விநாயகம் என்று அறியப்பட்ட கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி தனது அறுபதாவது வயதில் யூன் 4 பிரான்ஸில் காலமானார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த இவர் கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் உட்பட பல தாக்குதல்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். இவ்வாறான ஒரு போராளியின் மறைவையொட்டி ஒருசாரார் இரங்கலைத் தெரிவிக்க இன்னுமொரு சாரார் அவரின் மரணத்தை ‘துரோகத்தின் பரிசு’ என்று எள்ளி நகையாடுகின்றனர். அவர் நரகத்திற்கு செல்கின்றார் என்றும் சில பதிவுகள் வெளியாகி யுள்ளது. அரசியலற்ற தனிமனித ஆளுமைகளின் கீழ் கட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட உட்பூசல்கள், அவ்வமைப்பை சுக்குநூறாக சிதறடித்துள்ளது. தனிப்பட்ட நபர்களைத் தவிர இவ்வமைப்புகள் தங்களை ஒருங்கமைப்பதற்கான அரசியலைக் கொண்டிருக்கவில்லை. இவர்களில் சற்று அரசியல் விளக்கமுடையவர்கள் முற்றாக மே 18க்குப் பின்னான புலி அமைப்பிலிருந்து தங்களை அந்நியப்படுத்திக்கொண்டுள்ளனர். ஒரு போராளியின் கடைசி மூச்சுக் காற்று கரைந்து செல்வதற்கு முன்னரேயே அவதூறுகள் சமூகவலைத் தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. ஒரு போராளி துரோகியானது எப்படி?

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் ‘துரோகத்தின் பரிசு’ பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கு ஆதாரங்கள் அவசியமில்லை. வந்திகளும், தனிப்பட்ட கோபதாபங்களும், போட்டிகளுமே போதுமானது. யுத்தம் முடிவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் கடந்தும் ‘தியாகி – துரோகி’ என்ற கருப்பு வெள்ளை பைனரி அரசியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் இன்னமும் வரமுடியவில்லை. இன்று பழிசொல்வதற்கு ஆளில்லாமல் தங்களுக்குள்ளேயே தியாகி – துரோகி முத்திரைகளைக் குத்துகின்றனர்.

வவுனியாவில் அன்றைய காலத்தில் நன்கு அறியப்பட்ட கொடுங்கோலன் மாணிக்கதாசன். மாணிக்கதாசனின் மறைவு இன்றும் நினைவுகூரப்படுகின்றது. மாணிக்கதாசன் தமிழ் மக்களுக்காகப் போராட ஆயதமேந்திய போதும் மாணிக்கன்தாசன் இழைத்த அநீதிகள் மிக மிக அதிகம். மாணிக்கன்தாசன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிம்ம சொப்பனமாய் இருந்தார் என்பதற்காக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அவரைத் தியாகி ஆக்குவது சரியா என்ற கேள்வி மிக நியாயமானதே.
இந்த வகையில் விநாயகம் துரோகி ஆக்கப்படுவதற்கு வலுவான எந்தக் காரணமும் கிடையாது. வந்திகள், தனிநபர் போட்டி பொறாமை போன்றவையே இந்த அவதூறுகளுக்கு இட்டுச்சென்றுள்ளது. இதற்கு ஒரு நீண்ட பின்னணியும் உண்டு.

எண்பதுக்களின் பிற்பகுதியில் மேற்குநாடுகளுக்கு தமிழர்கள் புலம்பெயர்ந்த ஆரம்பகாலங்களில், விடுதலைப் புலிகள் தங்களுக்கான அமைப்புகளை மேற்குலகில் நிறுவினர். நிதி வசூலிப்புகளையும் மேற்கொண்டனர். மேற்குலகில் தங்களோடு பணியாற்ற விடுதலைப் புலிகளில் இருந்து, மரண தண்டனையில் இருந்து தப்பி வெளிநாடு சென்ற பாரிஸில் உள்ள சுக்லா போன்றவர்கள் உட்பட பலர் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டனர். மாற்று இயக்கங்களைச் சார்ந்தவர்களும் இக்கட்டமைப்புகளுக்குள் உள்வாங்கப்பட்டனர். இவர்கள் புலிகளுக்கான நிதி சேகரிப்பு மற்றும் நிதி சேகரிப்பு நிகழ்வுகளை ஒழுங்கமைப்பது என்று ஆரம்பித்து, மாவீரர் தின நிகழ்வு, பொங்கு தமிழ் ஆகியவற்றை மேற்கொண்டு வந்தனர். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லாதவர்கள் ஏற்பாடு செய்யும் ஒன்றுகூடல்களைக் குழப்புவது, கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றையும் செய்து வந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்புப் பற்றி கருத்து வெளியிட்ட இந்திய இராஜதந்திரி ஒருவர் இந்திய நிதி அமைச்சுக்கு தெரியாது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களிள் வருமானம் பற்றி. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களின் வருமானத்தை தெரிந்து வைத்திருந்ததுடன் அவர்களிடம் கணக்குப் பார்த்து வரியையும் அறவிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

இரண்டாயிரத்தின் நடுப்பகுதியில் ஒஸ்லோ உடன்படிக்கையில் கிடைத்த யுத்த இடைவேளையின் போது சர்வதேச கட்டமைப்புகள் கேபி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாபனின் பொறுப்பிலிருந்து கஸ்ரோவுக்கு கை மாறியது. கேபி இன் செயற்பாடுகள் முடக்கப்பட்டது. பிற்காலத்தில் கேபி யிடம் இருந்து ஆயுத கொள்முதல், விநியோகம் ஆகியவையும் பறிக்கப்பட்டது. ஆயுத கொள்முதல் விநியோகத்தில் நீண்ட கால அனுபவம் மிக்க கேபி யிடம் இருந்து அது பறிக்கப்பட்டது முதல் ஆயதக் கொள்வனவில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மேற்கு நாடுகளின் உளவுத்துறையினரிடமே ஆயுத பேரம் பேசி மாட்டிக்கொண்டனர். இறுதி யுத்தத்தில் புலிகளுக்கான ஆயுதங்கள் வந்தடையாததற்கு இதுவும் முக்கிய காரணம். அடுத்து இந்தியா செய்மதிகளுடாக சர்வதேச எல்லையையும் கண்காணித்ததால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கொண்டு சேர்க்கவும் முடியவில்லை. 1993 இல் சர்வதேச எல்லைக்குள் வைத்து கிட்டு பயணித்த கப்பலை இந்திய கடற்படையினர் கைப்பற்றியதும், கிட்டுவை கைது செய்ய முற்பட்டதும், கிட்டு கப்பலோடு எரிந்தது உயிர் மாய்த்ததும் வரலாறு.

கஸ்ரோ விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்புகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டதும், தாயகத்தில் இருந்து சில போராளிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பபட்டு அக்கட்டமைப்புகள் நேரடியாக கஸ்ரோவின் கண்காணிப்புக்குள் கொண்டுவந்தனர். அனைத்துலகச் செயலகம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்று இயங்கிய அமைப்புக்களுக்குள் புதிதாக வந்தவர்கள் தடாலடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நிதி சேகரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டனர். பல முதலீடுகளையும் மேற்கொண்டனர். நிதி சேகரிப்பவர்களுக்கு அவர்கள் சேகரிக்கும் நிதித் திரட்சியைப் பொறுத்து சம்பளமும் போனஸ்சும் வழங்கப்பட்டது. இதுவரை தமது நேரத்தை ஒதுக்கி தங்களது கடமை சேவை என்ற அடிப்படையில் பணியாற்றிய சிலர் இவ்வமைப்புகளில் இருந்து தங்களை விலத்திக்கொண்டனர்.

இறுதி யுத்தம் உச்சத்தைத் தொட்டிருந்த 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆண்டு வருமானம் 300 மில்லியன் டொலர்கள் என அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சிஐஏ மதிப்பிட்டிருந்தது. 300 மில்லியன் டொலர் ஆண்டு வருமானத்தை ஈட்ட தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 300 பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்கள் சர்வதேசம் எங்கும் இருந்திருக்க வேண்டும் என்றும் அந்த மதிப்பீடு தெரிவிக்கின்னறது.

2009 மே 18க்கு மறுநாளே இச்சொத்துக்களில் பெருமளவு காணாமலாக்கப்பட்டது. இறுதி யுத்தத்தில் தப்பிய தளபதிகள், போராளிகள் இந்த சர்வதேச வலைப்பின்னல் தொடர்பைக் கொண்டிருந்தால் அவர்கள் அத்தொடர்பைப் பயன்படுத்தி இராணுவ, மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வெளிநாட்டுக்கு வந்தனர். இது பெரும்பாலும் இங்கு வலைப்பின்னலில் நிதிக்குப் பொறுப்பாக இருந்தவர்களின் நெருங்கிய உறவுகள், தளபதிகளின் குடும்பத்தினரை அழைக்கப் பயன்படுத்தப்பட்டது. இங்கும் யாழ் மையவாதம் மிகத் கச்சிதமாக காரியத்தை நகர்த்தியது. மற்றும் சாதராண போராளிகள், போராட்டத்தில் ஊனமுற்றவர்கள் வெளிநாடுகளில் உள்ள சொந்தபந்தங்களின் உதவியோடு வெளிநாடு வந்து சேர்ந்தனர். ஏனையவர்கள் கைவிடப்பட்டவர்களாக இன்னமும் இலங்கையிலும் இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் நாளாந்த வாழ்வுக்காகப் போராடிக்கொண்டுள்ளனர். கிழக்குப் போராளிகள், வன்னிப் போராளிகள், மலையகப் போராளிகள், ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்த வந்த போராளிகள் பெரும்பாலும் கைவிடப்பட்டனர். சர்வதேச தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புகளும் அவர்களை கூலிப்படைகளாகவே கணித்தனர். கைவிட்டனர். தற்போது பதுக்கப்பட்ட நிதியில் தங்களை விடுதலைப் புலிகளாக அறிவித்து இயங்கியவர்கள் அவர்களின் குடும்பங்களின் சாமத்திய வீட்டுக்கு ஹெலிக்கொப்டரில் வந்து இறங்குகின்றனர். பூத்தூவுகின்றனர்.

உள்ளக புலனாய்வுக்குப் பொறுப்பாக இருந்த விநாயகமும் சிலரும் இறுதி யுத்தத்தில் கடைசிநேரத்தில் மே14ம் திகதி நந்திக் கடல் பிரதேசத்திலிருந்து தப்பித்து சென்றதாக சொல்லப்படுகின்றது. அவ்வாறு தப்பித்த அவர் குறுகிய காலம் சில மாதங்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றார். அதன் பின் விநாயகம் பாரிஸ் வந்தடைந்தார். 2009க்குப் பின்னான காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைத்தளத்திலிருந்த நிதியை பயன்படுத்த தங்களுக்கும் உரிமையுண்டு. அதற்கு அனுமதி வேண்டும் என இறுதி யுத்தத்தின் போது வெளியேறிய விநாயகம் போன்றவர்கள் கோரிக்கை வைத்தனர். இவர்கள் ஏற்கனவே அனைத்துலக வலைப்பின்னலிலிருந்து வெளியேறியவர்களையும் இணைத்துக்கொண்டு தலைமைச் செயலகம் என்ற அமைப்பை நிறுவினர். இரு மாவீரர் நிகழ்;வுகள் நடைபெற்றதன் பின்னணி இதுவே. இந்த விடயங்களுக்காக விநாயகம் லண்டனுக்கும் வந்திருந்தார். பிரித்தானியாவில் வரலாற்று மையம் அமைக்கப்பட்டதன் பின்னணியிலும் விநாயகம் செயற்பட்டிருந்தார்.

ஆனால் வெகுவிரைவிலேயே விநாயகம் துரோகி ஆக்கப்பட்டார். நந்திக் கடலில் இருந்து துவாரகா, மதிவதனி, பிரபாகரன் மூவரும் தப்பிவந்தார்கள் என்பதை நம்புபவர்கள் அவர்களுக்கு நான்கு நாளுக்கு முன் மே 14இல் விநாயகம் தப்பி வந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கின்றனர். புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த பல களமுனைகளைக் கண்ட விநாயகத்திற்கு அங்கிருந்து தப்பி வருவதற்கு வாய்ப்பே இல்லை என யாரும் முற்றுமுழுதாக மறுக்க முடியாது. அவ்வாறு தப்பி வந்தபடியால் அவர் இலங்கைப் புலனாய்வுத்துறையின் உதவியுடனேயே தப்பி வந்துவிட்டார், அதனால் அவர் துரோகி என ஒரு சாரார் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இறுதி யுத்தத்தில் விநாயகத்தின் மனைவி பிள்ளைகளும் சரணடைந்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். விநாயகம் இலங்கைப் புலனாய்வுத்துறைக்கு உதவியதால் தான் அவருடைய மனைவி பிள்ளைகள் விடுவிக்கப்பட்டதாக இன்னொரு தரப்பு விநாயகத்தை துரோகி என்கிறது. இதனால் விநாயகம் தலைமைச் செயலகத்திலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த வந்திகளின் அவதூறுகளின் உண்மைத் தன்மை யாருக்கும் தெரியாது. ஆனால் விநாயகம் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பதற்காக இலங்கைப் புலனாய்வுத்துறையுடன் தொடர்புபட்டிருந்தால் கூட அதில் எவ்வித தவறும் இல்லை. அதற்காக அவரைத் துரோகியாக்க முடியாது. விநாயகத்தை துரோகி என்பவர்கள் தங்களை தாங்களே மதிப்பீடு செய்வது மிக முக்கியம்.

இவை இவ்வாறிருக்க இலங்கை அரசு விநாயகம் மீது வழக்கைப் பதிவு செய்து அவருக்கு பிடிவிறாந்தை அனுப்பியது. இன்ரபோலில் விநாயகம் தேடுதலுக்குரிய நபரானார். பிரான்ஸ் உள்துறை அமைச்சு அவருக்கு வழங்கிய விசாவை மீளப்பெற்றது. விநாயகம் குறுகிய காலத்திலேயே ஓரம்கட்டப்பட்டார். துரோகியாக்கப்பட்டார். மௌனிக்கப்பட்டார். கடந்த சில வாரங்களாகவே புற்றுநோய்க் கொடுமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு யூன் 4இல் மரணத்தை தழுவினார். அவர் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தாயகத்தில் வறணியில் வாழ்ந்த அவருடைய மனைவி பிள்ளைகளைக் காணவில்லை. மூத்த மகன் கனடா வந்தடைந்துள்ளார். அவருடைய மனைவியும் மற்றைய பிள்ளைகளும் விசிற்றேர்ஸ் விசாவில் அண்மையில் கனடா வந்துள்ளனர். விநாகயத்தின் பூதவுடலை கனடாவில் உள்ள அவருடைய மனைவி பிள்ளைகளிடம் அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மரணம் யாரையும் துரோகி ஆக்குவதுமில்லை புனிதர்கள் ஆக்குவதுமில்லை. விமர்சனங்களோடும் மனிதாபிமானத்தோடும் அப்போராளியின் வாழ்வை மதிப்பீடு செய்ய வேண்டும். தமிழ் மக்களுக்காக தன்னை தியாகம் செய்ய முன்வந்த போராளியாக அவருக்கு எனது அஞ்சலிகள்.

 

ஈழத்தமிழ் ஆண் காடையர்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை!

பாலியல் வன்புணர்வு செய்தவனுக்கு கௌரவம்! பிரபாகரனைக் காதலித்தவளுக்கு நடுத்தெருவில் அறை!! ஈழத்தமிழ் ஆண் காடையர்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை!!!

மலையகச் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த கணேசலிங்கம் பேராசிரியர் தமிழ் தேசியத் தூண்! பிரபாகரனை காதலித்த கொழும்புப் பெண் ‘கொழும்பு வேசை’ நடுத்தெருவில் வைத்து புலிப்படை கொண்டு தாக்குவார்கள் அதனை நியாயப்படுத்த மனித உரிமை வீரர்கள் கொடுக்குக் கட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டார்ககள்.

சுஜூகூல் என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் பிரபல்யமான ஜூலியட் சுரேஸ், குறுகிய காலம் கிளிநொச்சி பரந்தனில் வாழ்ந்த பெருமாள்சிங்கராயரின் மகளாவார். ஈழத் தமிழ் சமூகம் பேசுகின்ற தமிழ் தேசியத்தின் முதகெலும்பாக இன்னும் இருக்கும் யாழ் மையவாதம், ஏனைய பிரதேசத்தவர் மீதான காழ்ப்புணர்வு, மலையகத் தமிழர் மீதான காழ்ப்புணர்வு, சாதிய வன்மம், பெண்ணடிமைத்தனச் சிந்தனை அனைத்தும் ஒரு புள்ளியில் இணைந்துகொண்டதே ஏப்ரல் 3 இரவு ஏழுமணியளவில் இடம்பெற்ற சுஜூகூல் என்ற இரு குழந்தைகளின் தாயின் மீதான தாக்குதல். தன்னை ஆண்டாளின் பாணியில் பிரபாகரனைத் தன் காதலனாகக் கற்பனை செய்யும் ஒரு பெண் சுஜூகூல்.

அது மட்டுமல்லமால் சுஜூகூலையும் அவரது ஒன்பதே வயதான மகளையும் வன்கொடுமை செய்ய வேண்டும் என்று சிஎம் கழுகுவேட்டை என்ற நிக்சன் – அக்காகடை பாலமுரளி தலைமையிலான கும்பல் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் இருந்தனர். அவரது ஆடைகளை கழற்றி அவமானப்படுத்தவும் முயன்றுள்ளனர். தனக்கு மாதவிடாய் என்று குறிப்பிட்ட போதும் இந்தக் காமுகர்கள் விடவில்லை.

இராணுவக் காடையர்கள் சிலர் இறுதி யுத்தத்தில் இசைப்பிரியாவை கொடுமைப்படுத்தியதும் புங்குடுதீவில் வித்தியாவை ஈழத்துக் காடையர்கள் காமுகர்களை தொலைபேசியில் கூவி அழைத்து கொடுமைப்படுத்தியதும் அவ்வளவு இலகுவில் மறக்கக் கூடியதல்ல. இதனைப் பிரதிபலிக்கும் வகையிலேயே பாரிஸில் உள்ள சிஎம் கழுகுவேட்டை நிக்ஸன் – பாலமுரளி கும்பல் சுஜூகூல் பொதுவெளியில் பாலியல் ரீதியில் அவமானப்படுத்துவதற்கு தாக்குதலை நடத்துவதற்கு பாரிஸில் வாழும் காமுகர்களை எல்லாம் ரிக்ரொக் வலைத்தளத்தினூடாகக் கூவி அழைத்தனர். இசைப்பிரியாவுக்கு நடந்த கொடுமைகளை இராணுவக் காடையர்கள் ஒளிப்பதிவு செய்தது போல் ஒன்பது வரையான லாச்சப்பல் காடையர்கள் இந்தக் காட்சிகளை live stream செய்ய, இன்னும் இருபது பேர்வரையான காடையர்கள் புலிகளின் பெயரில் பிரபாகரனின் பெயரில் சுஜூகூலைத் தாக்கினர். புலிப்பாடல்களைப் போட்டு தாக்குதலைக் கொண்டாடினர்.

இந்தத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? இதன் பின்னணி என்ன? என்று தெரிந்துகொள்ளவே விரும்பாதவர்கள் இதனை நியாயப்படுத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரையும் புலித் தேசியத்தையும் வைத்து வயிறு வளர்ப்பவர்கள், அரசியல் செய்பவர்கள், கானொலி செய்து தங்கள் வியூக்களை கூட்டத் துடிப்பவர்கள், ஐபிசி பாஸ்கரன் அடியான்கள், ஹொட்டலியர்களின் அடியான்கள் எல்லோரும் சேர்ந்து தன்னந்தனியாக நின்ற இரு குழந்தைகளின் தாயை நடுத்தெருவில் வைத்து தாக்கியவர்களுக்கும் அவளின் ஒன்பது வயதுக் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டும் என்று துடித்தவர்களுக்கும் வக்காலத்து வாங்கி செய்திகளை, நேர்காணல்களை, பதிவுகளை இட்டனர்.
இந்த விசிலடிச்சான் குஞ்சுகள் யாழ் சைவ வேளாள ஆண்கள் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் போது கண்டுகொள்வதில்லை. லண்டனில் பல பாலியல் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்ற போது பாலியல் துஸ்பிரயோகம் செய்த காமுகர்களுக்கு வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயத் தலைவர் உட்பட 42 பேர் நற்சான்றிதழ் வழங்கினர். மலையகச் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த செய்த தமிழ் தேசியத்தின் தூணாகத் தன்னைக் காட்டும் அரசியல்துறைப் பேராசிரியர் கணேசலிங்கம் இன்றும் பேராசிரியர். இவ்வாறான காமுகர்களின் உதவியோடு துறைத் தலைவரான ரகுராம் இன்றும் அந்தப்புரத்துக்கு ஆள் பிடிக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் அவரின் பாசறையில் வளர்ந்தவர்களையும் கேவலப்படுத்தும் யாரையும் யாரும் தட்டிக்கேட்பதில்லை. ஆனால் ஒரு அபலைப் பெண் தன்னையும் தன் குடும்பத்தினரையும் தூசண வார்த்தைகளால் திட்டியதற்குப் பதிலடியாக தூசண வார்த்தைகளால் திட்டியதும் யாழ் சைவ வேளாள ஆண்களின் ஆண்மை பீறிட்டுக் கொண்டது. உடனே அவள் பேசிய சொற்களை வெட்டி ஒட்டி அதனை அவள் நேசித்த பிரபாகரனுக்கும் ஈழத்துப் பெண்களுக்கும் எதிரானதாக அவற்றை எடிட் செய்து ஒரு கும்பலே அவளுக்கு எதிராக திரண்டெழுந்து உள்ளது. சிங்களத்தி, கொழும்பு ‘வே’ன்னா, வடக்கத்தையாள் மற்றும் தகாத வார்த்தைகளால் பாலியல் வன்புணர்வு செய்யும் இதே கும்பலும் இவர்களுக்கு ஜால்ரா போட்டு விசிலடிப்பவர்களும் தான் தமிழ் மக்களின் தமிழ் தேசியத்தை முன்னெடுக்கின்றனர். பிரபாகரன் குடும்பத்தை உயிர்ப்பித்து எழுப்பி வருகின்றனர், தமிழர்களின் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றனர்.

இந்த விசிலடிச்சான் கும்பல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிச்சினனத்தையும், புலிக்கொடியையும், பிரபாகரனதும் இறந்த தளபதிகளினது படங்களையும் கார்த்திகைப் பூவையும் ஐடியாக வைத்துக்கொண்டே இவ்வளவு அநியாயங்களையும் ஈனத்தனங்களையும் புரிகின்றனர். தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வியில் முடிந்ததற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர் நாளாந்தம் களங்கப்படுவதற்கும் இவர்களைப்போன்றவர்களே பிரதான காரணமாக உள்ளனர். இந்தக் காமுகர்களும் இவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களும் ஈழஅரசியலில் இருந்து அரசியல் நீக்கம் செய்யப்படும் வரை ஈழத்தமிழர்களுக்கு விடிவே இல்லை.

அன்று உண்மையில் என்ன நடந்தது என்ற பதிவு விரைவில் வெளிவரும்…

‘றோ இன்றி ஒரு புலியும் அசையாது’ பாவம் தலைவர்: அழித்தவர்களின் முகவர்களே டென்மார்க்கில் அஞ்சலியும் செய்தனர்!

கார்திக் மனோகரன் தன்னுடைய சித்தப்பாவான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் அஞ்சலி செய்ய முற்பட்ட நிகழ்வு, தலைவரை அவமானப்படுத்துவதாகவும் அவர் உயிரோடு இருக்கும் வரை வாழ்ந்த லட்சியக் கனவை வன்புணர்வு செய்ததாகவும் அமைந்தது எனத் தெரிவிக்கின்றார் முன்னாள் பெண் போராளியான விமிலினி சிவநேசன். இறுதி யுத்தத்திற்கு முன்னரே போராட்டத்தில் தனது காலை இழந்த அவர் தம்பி கார்த்திக் மனோகரன் சித்தப்பாவிற்கும் அவர் குடும்பத்திற்கும் அஞ்சலி வைக்க வேண்டும் என்று எடுத்த முடிவை தான் வரவேற்றதாகத் தெரிவித்த விமிலினி, அதனை அவர் தங்கள் குடும்ப நிகழ்வாக எல்லோரையும் அழைத்து செய்திருக்க வேண்டும். அதனை விடுத்து தலைவரின் இலட்சியங்களுக்கு விரோதமான புல்லுருவிகளை அழைத்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது, தலைவரின் இலட்சியங்களை வன்புணர்வு செய்ததற்குச் சமன் என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் 2009 இலேயே வீர வணக்க அஞ்சலியைச் செய்திருக்க வேண்டும். அது 15 ஆண்டுகள் கடந்து தற்போதாவது நிகழ்கின்றதே என்ற எண்ணம் வே பிரபாகரனின் இலட்சியக் கனவில் பயணித்த பலருக்கும் இருந்தது. அவர்களும் வெளியே இருந்து நிகழ்வின் உண்மைத் தன்மை தெரியும் வரை வரவேற்றனர். ஆனால் நிகழ்வில் இந்திய உளவுத்துறையான றோ தமிழீழம் வாங்கித் தரும் என்று சன்னதமாடும் பாரதிய ஜனதா கட்சி சங்கிகள் நிகழ்வை நடத்தினார்கள் என்ற பின்னணி வெளியே வந்ததும் இந்நிகழ்வு பிரபாகரனின் இலட்சியக் கனவை வன்புணர்வு செய்ததாகவே அமைந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது அரசியலற்ற பார்வை தொடர்பிலும் அதீத இராணுவ பிரம்மை தொடர்பிலும் கடும் விமர்சனங்கள் இருந்த போதும் தன்னையும் தனது குடும்பத்தையும் தமிழ் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த அந்த இலட்சியம் தொடர்பில் அவரது எதிரிகளும் கூட முரண்படவில்லை. பிரபாகரனுக்கு ஒரு விடுதலைப் போராளியான கௌரவத்துடனும் மரியாதையுடனும் வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். தன்னிடம் தோற்றுப்போன எல்லாளனைக் கௌரவித்தவன் துட்டகைமுனு. இன்றும் அந்த கௌரவம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அவரின் பாசறையில் வளர்ந்ததாகக் கூறிக்கொள்பவர்கள் தற்போது இந்திய உளவுப்பிரிவான றோ வுக்கும் மோடிக்கும் சங்கூதிக்கொண்டு பிரபாகரனனுக்கு அஞ்சலி செய்வது மிக வேடிக்கையானது.

இந்திய அமைதிப்படை காலத்தில் பதுக்கி வைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் காட்டிக்கொடுத்து, பல புலி உறுப்பினர்களையும் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்த ஆக்கிரமிப்பு இராணுவத்திற்குக் தலையாட்டிக் காட்டிக்கொடுத்தவர் ‘சுக்லா’ என்றழைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர். இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அங்கு மரண தண்டனை விதித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அன்று யாழ்ப்பாணத்திலிருந்து சுக்லா வை இந்திய இராணுவம் தனது ஹெலிகொப்டரில் கொண்டு வந்து கட்டுநாயக்காவில் தரையிறக்கியது. 90களில் சுக்லா புலம்பெயர்ந்து பாரிஸில் தரையிறங்கினார். அன்று புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கு ஆட்பற்றாக்குறை இருந்ததால் புலிகளைக் காட்டிக்கொடுத்தவர்களும் புலிகளால் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டவர்களும் புலிகளால் மரண தண்டணை விதிக்கப்பட்டவர்களும் புலம்பெயர் தேசங்களில் தீவிர புலிகளாக இயங்க ஆரம்பித்தனர். அவ்வாறு மாறியவர்களுள் சுக்லாவும் குறிப்பிடத்தக்கவர். தற்போதும் பிரான்ஸில் தான் இவர் வாழ்கின்றார். பாம்பு கூரூப் என்ற வன்முறைக் குழுவின் பின்னணியிலும் இவர் இருந்தவர். பாரிஸில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் பின்னணியிலும் இவர் இருந்துள்ளார். குறிப்பாக பாரிஸ் சபாலிங்கத்தின் படுகொலையை இவரது குழுவே மேற்கொண்டதாக நம்பப்படுகின்றது. தற்போது கனடாவில் வாழும் முன்னாள் சுவிஸ் பொறுப்பாளர் முரளியின் நெருங்கிய நண்பர் சுக்லா. சுவிஸில் பாம்பு கூரூப் உருவாக்கப்பட்டதே முரளிக்கு சில பல காரியங்களைச் செய்வதற்காகவே. சபாலிங்கத்தின் படுகொலையில் முரளியினதும், சுக்லாவினதும் கரங்கள் இருப்பதாகவே தற்போதும் நம்பப்படுகின்றது.

இவ்வாறானவர்கள் பிரபாகரனுக்கு இறுதி அஞ்சலி கொண்டாடும் அவல நிலை ஏனைய அமைப்புகளின் தலைவர்களுக்கு ஏற்படவில்லை. பிரபாகரனால் படுகொலை செய்யப்பட்ட சிறிசபாரத்தினம், பத்மநாபா, அ அமிர்தலிங்கம் போன்றவர்களும் சரி பிரபாகரனால் படுகொலை செய்யப்படாத உமா மகேஸ்வரனானாலும் சரி அவர்களுக்கான நினைவு நிகழ்வுகள் அவர்கள் இறந்த நாள் தொடக்கம் அவர்களது அமைப்பினால் ஒரு அரசியல் உரையாடல் நிகழ்வாக முன்னணி அரசியல் செயற்பாட்டாளர்களின் அரசியல் உரைகளோடு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

முப்பது வருடங்கள் ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு தலைவனுக்கு றோ தமிழீழம் பெற்றுத் தரும் இந்தியாவை எதிர்க்காமல் அணி திரண்டு வாருங்கள் என்று போராட அழைக்கின்றது இந்த றோ கும்பல். இவர்கள் 2009 மேல் ஒரு தடவை மரணித்த வே பிரபாகரனதும் அவரது குடும்பத்தின் மீதும் கோசலம் அடித்து அவமானப்படுத்துகின்றனர்.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நேசக்கரம் அமைப்பின் சாந்தி வவுனியன் அரசியல் ஒழுக்கமற்ற ஒருவர். இவர் 2009இற்கு பின் தமிழகத்திற்கு தப்பி வந்த பெண் போராளிகளோடு தொடர்பு கொண்டு மரியாதைக் குறைவாக அவர்களோடு உரையாடியவர். சில தகவல்களை வைத்துக்கொண்டு கதைகளைப் புனைந்து தனது விருப்பு வெறுப்புக்கமைய குழுசார்பு மனப்பான்மையுடன் செயற்படுபவர். பசையுள்ள இடத்தில் ஒட்டிக்கொள்ளும் இவர் ஐபிசி பாஸ்கரனையோ சுபாஸ்கரனையோ கூட அடுத்த தேசியத் தலைவர் என்று அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்நிகழ்ச்சியில் மாவீரன் பிரபாகரன் உரை நிகழ்த்திய நிலா என்ற பாலநந்தினி பாலசுப்பிரமணியம், றோ தமிழீழம் பெற்றுத்தரும் தலைவர் பிரபாகரன் இந்தியாவுடன் மோதியது தான் அவரது தவறு இல்லாவிட்டால் இந்திய றோ வே தமிழீழம் பெற்றுத் தந்திருக்கும் என்கிறார். அக்கூட்டத்தில் தலைவர் பிரபாகரன் இறந்தாலும் அவருடைய இலட்சியங்கள் இறக்கவில்லை என்று சொல்லும் நிலா, றோ வோடு சேர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வென்றெடுக்க அழைப்பு விடுக்கின்றார். இந்த திபாகரன் – நிலா கூட்டின் மதியுரைஞர் தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆலோசகர் மு திருநாவுக்கரசு. மு திருநாவுக்கரசு, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், பழ நெடுமாறன், வெற்றிச் செல்வன் ஆகியோர் நேரடியாகவே றோவின் பராமரிப்பில் உள்ளவர்கள். இவர்கள் ஒருவரோடு ஒருவர் நெருங்கிச் செயற்படுபவர்கள்.

ஈழ அரசியலில் றோ இன்றி ஒரு புலியும் அசையாது என்ற நிலையே தற்போதுள்ளது. தற்போது அரசியலில் ஈடுபடுபவர்களில் புலித்தேசியம் பேசுகின்ற அல்லது புலிகளுக்காக வக்காலத்து வாங்குகின்றவர்கள் மிகப்பெரும்பாலானோர் இந்திய, இலங்கைப் புலனாய்வுப் பிரிவுகளோடு சேர்ந்து செயற்படுபவர்களாகவே உள்ளனர். இதற்கு தமிழ் நாட்டில் கலையகத்தை வைத்துச் செயற்படும் ஐபிசியும் லங்காசிறியும் பாஸ்கரனும் விதிவிலக்கல்ல. இந்திய உளவுத்துறைக்குச் சேவகம் செய்ய இவர்கள் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு செயற்படுகின்றனர்.

றோ வின் ஒரு பிரிவு பழ நெடுமாறன் கவிஞர் காசி ஆனந்தன் அணி துவாரகா வந்துவிட்டார், பிரபாகரன் வந்துகொண்டிருக்கிறார், அவருக்குப் பின்னால் மதிவதனி வருகிறார் என்று கதையளக்க, முன்னாள் இந்திய இராணுவ மேஜர் மதன்குமார் அதற்கு ‘பில்ட்அப்’ கொடுக்கின்றார். மறுபக்கம் றோவின் மற்றைய பிரிவு மு திருநாவுக்கரசு வழிகாட்டலில் இயங்கும் திபாகரன் – நிலா கூட்டு துவாரகா வரவில்லை. தலைவரும் வரமாட்டார், மதிவதனியும் வரமாட்டார். அவர்களுக்கு வீரவணக்க அஞ்சலி செய்வோம் என்று கார்த்திக் மனோகரனின் நிகழ்வை தங்களுடைய நிகழ்வாக ஹைஜாக் பண்ணி ஒரு விடுதலைப் போராளியின் நிகழ்வில் கோசலம் அடித்துள்ளனர்.

இவ்வாறு மற்றவர்களுடைய நிகழ்வுகளில் புகுந்து அவற்றை ஹைஜாக் பண்ணுவதை தங்களுடைய திறமை என்று றோவின் ஈழத்தமிழ் ஊதுகுழலாகச் செயற்படும் லங்காசிறியிலும் ஐபிசியிலும் மார்தட்டி வருகின்றார் திபாகரன். தமிழரசுக் கட்சியின் பிரித்தானியக் கிளையைக் கைப்பற்ற இவர்கள் போட்ட திட்டத்தை தேசம்நெற் அம்பலப்படுத்தி இருந்தது. அரசியலில் ஏடே தொடங்கியிராத கார்த்திக் மனோகரன் சித்தப்பாவுக்கும் குடும்பத்துக்கும் நிகழ்த்திய வீரவணக்க நிகழ்வில் றோ – மோடி கூட்டம் கோசலம் அடித்தது மிகக் கேவலமானது. ஒரு காலத்தில் மாற்றுக் கருத்தாளர்கள் வைக்கும் கூட்டங்களில் தங்களைப் புலிகளாகக் காட்டிக்கொள்ளும் இவ்வாறான விரோத சக்திகள் புகுந்து அட்டகாசம் பண்ணுவது வழமை. இப்போது அவர்கள் தங்கள் தலைவனின் வீரவணக்க நிகழ்வையே அவ்வாறு அசிங்கப்படுத்துகின்றனர்.


இந்திய புலனாய்வுத்துறையும், இந்திய இராணுவத்தால் பயிற்றப்பட்ட இலங்கைப் புலனாய்வத்துறையும் இணைந்தே இறுதி யுத்தத்தை நடத்தியதாக அதன் பின்னர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தற்போது கனடாவில் வாழும் இவர் தான் இலங்கைச் சிறையில் நான்காம் மாடியில் இருந்த போதும் தன்னைக் கைது செய்ததும் விசாரணை செய்ததும் இந்திய புலனாய்வுப் பிரிவினர் என்று தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவு என்றொன்று இலங்கையில் இல்லை என்றும் அங்கு இருப்பதும் இந்திய புலனாய்வுப் பிரிவால் பயிற்சி அளிக்கப்பட்ட இந்தியாவின் நலன்களுக்காகப் பணியாற்றும் புலனாய்வுப் பிரிவு என்றும் அவர் தெரிவித்தார்.

றோ இன்றி ஒரு புலியும் அசையாது என்பது போல் பிரபாகரனும் அவரது குடும்பத்தில் ஒருவரும் உயிருடன் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டது இந்திய புலனாய்வுப் பிரிவு. அதன் படி அக்குடும்பத்தையே படுகொலை செய்தவர்களின் முகவர்கள் அக்குடும்பத்திற்கு வீரவணக்கம் செலுத்த, ஆயிரம் ஆயிரம் போராளிகளும் மக்களும் அதனை வேடிக்கையாக கடந்து செல்கின்றனர். பாவம் பிரபாகன். அவருக்கு ஒரு கௌரவமான வீர வணக்கத்தை ஈழத்தமிழர்கள்: ஒடுக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம், மலையக மற்றும் சமூகங்களுடனும் ஒடுக்கப்பட்ட உலக மக்களோடும் இணைந்து சுயவிமர்சனத்தோடு செய்ய வேண்டும்.

 

பாரிஸ் கவர்ச்சிச் ‘செல்லம்’ சுஜியின் அரசியல் அதிரடி! வீறுகொண்ட லாச்சப்பல் ‘புளி’ முரளி!!!

பாரிஸில் முப்பதினாயிரம் வரையான பெரும்பாலும் ஆண்களைத் தன் ரிக்ரொக் வலைப்பக்கத்தில் வீழ்த்தி தன்னைப் பின்தொடரச் செய்து, ஈழத்தமிழர் மத்தியில் அரசியல் அதிர்வொன்றை ஏற்படுத்தி உள்ளார் சுஜி கூல் என்ற பெயரில் உலாவரும் பெண். மாலை மயக்கம் தரும் தமிழ் சினிமாப் பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் இட்டு ரிக்ரொக் பதிவிடும் சுஜி இடைக்கிடை அரசியல் பதிவுகளும் இட்டுவருகின்றார். இவருடைய பதிவுகளில் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனைப் பற்றியும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் ஈழத் தமிழர்கள் பற்றியும் மிகத் தரக்குறைவாக பதிவுகளை இட்டுவருகின்றார். அவ்வாறு கடைசியாக அவரால் இடப்பட்ட பதிவில் சுஜி தமிழ் தூஷண வார்த்தைகளை தாராளமாகவே வீசி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனை வசைபாடியுள்ளார்.

இதனைக் கண்டு வீறுகொண்டெழுந்த ரிக்ரொக் ‘புளி’கள், இவர்களும் கவர்ச்சிச் செல்லத்தை பின்தொடரும் முப்பதினாயிரத்தில் அடங்குவர். இவ்வாறு வீறுகொண்டெழுந்த கச்சா சிவம் என்ற கனடாப் ‘புளி’, இவளுக்கு (சுஜி க்கு) ஏன் இன்னும் சம்பவம் நிகழ்த்தப்படவில்லை என்ற தொணியில் பொங்கியெழுந்து ரிக்ரொக் பதிவொன்றை வெளிட்டுள்ளார். அந்தப் பதிவைப் பார்த்து உசுப்பேறிய கிட்டத்தட்ட இருபது வருடங்கள் வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு கடைக்காரரான, லாச்சப்பல் அக்கா கடை உரிமையாளர் முரளி என்று அறியப்பட்ட பாலசிங்கம் பாலமுரளி செல்லத் தங்கச்சி சுஜீயை பத்து வரையான ஆண்கள் சகிதம் சேர்ந்து தாக்கியுள்ளார். சுஜியின் கையை உரிமையோடு பிடித்து கன்னத்தில் சில தடவைகள் அறைந்தததுடன் அவருடைய சட்டையையும் இழுத்து சேட்டைகள் செய்துள்ளனர். அத்தோடு சுஜியின் மீது முட்டைகளையும் வீசி அடித்துள்ளனர். சுஜி தன்னுடைய ரிக்ரொக்கில் என்னென்ன வசை பாடினாரோ அவ்வளவு வசையையும் பாலசிங்கம் பாலமுரளியும் அவருடன் வந்த கும்பலும் படியது. சுஜி தனக்கு மாதவிடாய் வந்துவிட்டதாக தெரிவித்த போதும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை.

இத்தாக்குதல் சம்பவத்தின் போது தன்னை அணுகியவர்களை அண்ணா, அண்ணா என்றழைத்த சுஜி, ஒரு கட்டத்திலும் முரளி கும்பலின் வன்முறைக்குப் பணியவில்லை. “நீங்கள் செய்வது பிழை என்பதை உணருவீர்கள்” என்பதை மட்டுமே திரும்பத் திரும்பக் குறிப்பிட்டு வந்தார். பத்து வரையான வெறி கொண்ட சருகு புலிக் கும்பலிடம் மாட்டிய இளம் பெண்ணாக அந்த விடியோவில் சுஜி காணப்பட்டார். ராஜபக்சவை தீவிரமாக ஆதரிக்கும் சுஜி விடுதலைப் புலிகளின் தலைவருக்கு எதிராகவும் அவ்வமைப்புக்கு எதிராகவும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் தூஷண வசை பாடியுள்ளார் என்றால் அதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது. சொல்லப் போனால் அது சிறுமைப்படுத்திச் சொல்வதாகத் தான் அமையும். ரிக்ரொக்கில் காட்டும் ஆக்ரோஷம் பத்து வீறுகொண்ட ரிக்ரொக் புலிப் போராளிகளைக் கண்டதும் அடங்கிப் போனது. முரளி கும்பலும் ஆனையிறவு முகாமை தகர்த்த கணக்கில் புலிப்பாடலோடு அப்பெண்ணைத் தாக்குவதை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். அதற்கு ஈழத்தமிழ் சமூக வலைத்தள போராளிகள் பலர் உணர்ச்சி பொங்க ‘இவளுக்கு இது தேவைதான்’ என்ற கணக்கில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் பற்றி தேசம்நெற்க்குத் கருத்துத் தெரிவித்த தாயகத்தைச் சேர்ந்த மனித உரிமைவாதியும் பெண்ணிய வாதியுமான நளினி ரட்ணராஜா, சுஜி வெளியிட்டது அரசியல்பதிவேயல்ல அவை வெறுப்புப் பேச்சுக்கள் மட்டுமே என்கின்றார். “சுஜி ஒரு அமைப்பு கிடையாது, அறியப்பட்ட ஒரு புள்ளி கிடையாது. சட்டத்தை உங்கள் கையில் எடுக்கின்ற அதிகாரத்தை யார் தந்தது? வீட்டில் உள்ள மனைவி, பிள்ளைகள், தாயார் போன்றவர்களையும் இந்த ஆண்கள் இவ்வாறு தானே நடத்துகின்றனர்?” என்று கேள்வி எழுப்பினார் பெண்ணியவாதி நளினி ரட்ணராஜா.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் பற்றியும் அதன் தலைவர்கள் பற்றியும் இவ்வாறான விமர்சனங்கள் அதுவும் பச்சைத் தூஷணத்தில் சமூக வலைத்தளங்களில் தினமும் பதிவு செய்யப்படுகின்றது. குறிப்பாக ஹிளப் ஹவுஸ் என்கின்ற மேடையில் இவ்வாறான பச்சைத் தூசணப் பேச்சுப் போட்டிகள் நாளாந்தம் மாலையில் அரங்கேறி அதிகாலை வரை நடைபெறும். அதில் பாலியல் வக்கிரம் மடை திறந்த வெள்ளம் போல் பாயும். அரசியலில் தங்களது பெயரும் அறியப்பட வேண்டும் என விரும்பும் முகவரியற்ற பலர் இத்தளங்களைப் பயன்படுத்தி வருவது ஒன்றும் இரகசியமல்ல. இவ்வாறு இயக்கங்களின் மோதல்களால் சமூக வலைத்தளங்கள் நாற்றமெடுப்பது ஒன்றும் புதிதல்ல. கோட்டும் சூட்டும் போட்டு நுனி நாக்கில் அந்நிய மொழி பேசி நடித்தாலும் கீபோட்டும் மைக்கும் கிடைத்தால் இந்தக் கனவான்களின் பேச்சு கூவத்தையும் மிஞ்சும் நாத்தம் அடிக்கும்.

இவ்வாறான தூஷண மாலைகளைத் தாங்கிய பலர் இன்றும் எம்முன் உயிருடன் உள்ளனர். இந்த முரளி போன்ற ‘புளி’கள் ஆய்வாளர் வி சிவலிங்கம், ரிபிசி ராம்ராஜ், பெண்ணியவாதி ராஜேஸ் பாலா என ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மாற்றுக் கருத்தாளர்களை பச்சைத் தூஷணத்தில் வசைபாடி அவர்களது குடும்பங்களையும் குடும்பப் பெண்களையும் வலைத்தளங்களில் இழுத்து வம்பு செய்து வந்தனர். மனித உரிமைவாதி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பாரிஸில் வாழும் எல்லாளன் என்ற ‘புளி’யும் இவ்வாறான தூஷண மன்னன். மகனுக்கு பிரபாகரன் என்று தான் பெயரும் வைத்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தியதில் இந்தப் புலம்பெயர்ந்த ‘புளி’க்கும்பலுக்கு முக்கிய பங்குண்டு.

இப்போது எழுந்துள்ள அலை ஒரு பெண் எப்படித் தூஷணத்தில் தங்களைக் கேட்கலாம் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே. தங்களுக்கு நிகராக தூஷணத்தில் வசைபாடுகிறாள் என்ற ஆதங்கம் அவர்களுடைய மொழியில் தெரிகின்றது. ஆண்களுக்கு மட்டும் தான் தூஷணம் சொந்தம் அல்ல என்பதை தலைவரை வைத்து சுஜி கட்டுடைத்து விட்டாள் என்ற ஏமாற்றத்தின் வெளிப்பாடாகவே சுஜி தாக்கப்பட்டுள்ளாள். சுஜி ஒரு உதிரிப் பெண். வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகின்றது. தனக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் கூறுகின்றாள். ஆனால் அது உண்மையா என்பது தெரியவில்லை. பிரான்ஸில் வாழும் இப்பெண் வே பிரபாகரன் பற்றியும் அவ்வமைப்பு பற்றியும் வெளியிட்டுள்ள பதிவுகள் சாதாரண மனநிலையுடைய ஒருவர் செய்யக்கூடிய பதிவல்ல. அப்படியிருந்தும் சுஜியின் வலையில் வீழ்ந்து முப்பதினாயிரம் வரையானோர் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். ஏன்?

இவர்கள் பற்றி நகைச்சுவையாகத் தேசம்நெற்க்குத் தெரிவித்த முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர், “கச்சா சிவமும் முரளியும் மட்டும் கட்டையரோடு நின்றிருந்தால், தமிழீழம் எப்பவோ கிடைத்திருக்கும்” என்றார். மற்றுமொரு போராளி இது பற்றிக் குறிப்பிடுகையில் அப்துல்லா கஸ்டப்பட்டு மீட்டுக்கொண்டு வந்த தலைவர் இவங்கள் செய்யிறதப் பார்த்து சயனைட் கடித்துவிடப்போகிறாராம்” என்றார்.

ஒரு உதிரிப் பெண்ணான, எதிலிப் பெண்ணான சுஜியைத் தாக்க, பாரிஸ் லாச்சப்பல் தமிழர் வர்த்தக சங்கத்தின் செயலாளர் பாலசிங்கம் பாலமுரளி பொங்க என்ன காரணம். இவர்கள் போன்ற நூற்றுக்கணக்காணோர் இப்பெண்ணுடன் தொடர்பிலும் இருந்துள்ளனர். ஏன்? அவரிடம் அப்படியென்ன அரசியல் கலந்துரையாடல்களை இவர்கள் செய்துள்ளனர்? இவர்களுடைய உடல்மொழியும் வாய்மொழியும் இவர்கள் சமூகத்தின் முன் பொதுத் தளங்களுக்கே வரத்தகுதியற்றவர்கள் என்பதையே காட்டுகிறது. ஆனால் துரதிஸ்டவசமாக யாழ் பல்கலைக்கழகமாக இருந்தாலென்ன லாச்சப்பல் வர்த்தக சங்கமாக இருந்தாலென்ன இவ்வாறான பொறுப்பற்ற தகுதியற்ற நபர்கள் தான் பொறுப்பான பதவிகளில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது அயோக்கியத்தனங்களை மறைக்க சுஜி போன்ற எதிலிகளிடம் வீரத்தைக் காட்டி தங்கள் தமிழ் தேசியப்பற்றை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றனர். தற்போது தமிழ் தேசியக் கூடாரத்திற்குள் தங்கிருக்கின்ற பெரும்பாலானவர்கள் அயோக்கியர்களாக இருப்பது தமிழ் தேசியவாதத்தின் மிகப் பெரிய பலவீனம் என்றால் மிகையல்ல.

லாச்சப்பலில் உள்ள அத்தனை கடைகளில் தமிழர் வர்த்தக சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு பண்பாளன் இல்லாமல் போனது லாச்சப்பலில் கடை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் அவமானம். பாலசிங்கம் பாலமுரளி தூஷண பூஷணம் செய்வது இதுவொன்றும் முதற்தடவையல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் லாச்சப்பல் உணவகமொன்றில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி, தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஜெனாவை தாக்க முயற்சித்து இருந்தார். மேலும் பாரிஸில் இடம்பெற்ற தமிழர் எழுச்சி மாநாட்டிலும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசி மாவை சேனாதிராஜாவைத் தாக்க முயன்றார்.

பணபலத்தையும் தமிழீழ விடுதலைப்புலிகள் தாங்கள் தான் என்ற கோஷத்தையும் வைத்துக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் உள்ள ‘புளி’ கும்பல் செய்யும் அலப்பறை தாங்கமுடியாத அளவுக்கு கேவலமாகிக் கொண்டுள்ளது. இத்தோடு லாச்சப்பல் வர்த்தகர்களுக்கு பெரும்பாலும் இலங்கைத் தூதரகத்தோடும் நல்ல உறவு நிலையுள்ளது. பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் பெரும்தொகையான நிதிவசூலிப்பும் நடைபெறுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட போராளிகளின் வாழ்வில் மாற்றம் இல்லை என்ற வீடியோப் பதிவுகளே தினமும் வெளிவருகின்றது. எல்லாம் இவர்களுடைய வங்கிக் கணக்கிற்குத் தான் வெளிச்சம். தம்மன்னா, சுஜி … இனியொரு ரஜி இவர்களுக்கு கிடைக்காமலா போகும்.

ஈழத் தமிழ் சமூகம் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இன்னமும் அரசியல் ரீதியாக அறிவற்றவர்களாக ஒடுக்குமுறையாளர்களுக்கும் பணத்தையும் அதிகாரத்தையும் வைத்திருப்பவர்களுக்கும் பின்னால் ஓடுபவர்களாகவும் அவர்களுக்கு சேவகம் செய்பவர்களாகவுமே உள்ளனர். ஒடுக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைக் கருத்துக்களுக்கும் எதிராகவும் இவர்கள் மூச்சுவிடுவதில்லை. சுஜி போன்ற உதிரிகளும், எதிலிகளும் அகப்பட்டால் இவர்களுக்கு ‘ஜெயசுக்குரு’தான்.

சமூக வலைத்தளங்களை இயக்கும் பெரும் கோப்ரேட் நிறுவனங்கள் அதனை இயக்குவதற்குக் காரணம் மக்களை வளப்படுத்தவோ அரசியல் தெளிவு பெறச்செய்யவோ அல்ல. இந்த சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி கோப்பிரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை உங்களுக்கு மிக அவசியமானதாக்கி அதனை விற்பனை செய்வதற்கே. அதற்கு சுஜி மற்றும் முரளி கும்பலின் ஏட்டிக்குப் போட்டியான பதிவுகள் உணர்வுகளைத் தூண்டி பலரை இதனைப் பார்க்க வைக்கும். அதனால் சமூக வலைத்தளங்களில் இவ்வாறான குப்பை கூளங்கள் தினமும் குவியும். சமூகவலைத்தளங்களை நடத்தும் கோப்பிரேட் நிறுவனங்கள் இந்தத் தரம்தாழ்ந்த பதிவுகளால் இன்னும் இன்னும் மில்லியன் கணக்கில் லாபத்தையீட்டுவார்கள்.

மாறாக இவ்வாறான பதிவு வெளியிடுபவர்களின் நட்பை முறியுங்கள். அவர்களைப் பின்தொடராதீர்கள். மக்களுக்கு அரசியல் தெளிவைக் கொடுக்கும் வகையில் கருத்துக்களை வையுங்கள். அதைவிட்டு தமிழ் சமூகத்தை, நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை பொதுவெளியில் அவமானப்படுத்தும் வகையில் கொச்சைப்படுத்தும் வகையில் பதிவிடாதீர்கள்.

உன்னுடைய கருத்தோடு எனக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது. ஆனால் உனக்கு அக்கருத்தைச் சொல்வதற்கான உரிமைக்காக உயிரையும் கொடுப்பேன். (பிரென்ஞ் அறிஞர் வோல்ரயர்)

சுஜியின் அரசியல் பதிவுகள் கருத்துக்கள் அல்ல அவை வெறுப்புப் பேச்சுக்கள் மட்டுமே என்பதன் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பில் மனித உரிமைவாதி நளினி ரட்ணராஜா தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணல் நாளை வெளியிடப்படும்.

‘ஹலால் ஜிம்’ கொமன்ற் – இஸ்லாமிய விரோதத்தையும் குடும்பப் பெண்களின் படங்களையும் சமூக வலைத்தளங்களில் பரப்பும் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன்

லண்டன் மேயர் சித்திக் கானை இஸ்லாமிய தீவிரவாதிகள் இயக்குகிறார்கள் என்று வலதுசாரி கொன்சவேடிவ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லீ அன்டர்சன் பெப்ரவரி பிற்பகுதியில் குற்றம்சாட்டி இருந்தார்;. இக்கருத்து தவறானது என்று தெரிவித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக், அது இஸ்லாமிய விரோதக் கருத்துடையது என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷி சுனாக்குக்கு எதிராக தலைமைத்துவப் போட்டியில் களமிறங்க உள்ள மற்றுமொரு தீவிர வலதுசாரி சுவலா பிரவர்மன், பாலஸ்தீனியர்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டங்களை ‘கலகக் கும்பல்கள்’ என்று விபரித்து வருகின்றார். அதே கட்சியின் முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் ‘லெட்டர் பொக்ஸ்’ பகிடி 2018இல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொறிஸ் ஜோன்சன் இஸ்லாமிய பெண்களின் கலாச்சார ஆடையைப் பற்றி பின்ருமாறு கூறினார்: பெண்கள் தபால் பெட்டிகள் போலவும் வங்கிக் கொள்ளையர்கள் போலவும் உடையணிந்து கொள்வது மிகவும் அபத்தமாக இருக்கின்றது – “it was “absolutely ridiculous” women chose to “go around looking like letterboxes” and “bank robbers”. பாலஸ்தீனத்தில் 30,000 உயிர்கள் கொல்லப்பட்டு பாலஸ்தீனக் குழந்தைகள் பட்டினியில் மரணத்தை தழுவ ஆரம்பித்துள்ள இந்நிலையில் மேற்கு நாடுகளில் இஸ்லாமிய விரோதப் பரப்புரைகளால் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்மம் கொழுந்துவிட்டெரிகின்றது.

இந்நிலையில் உரிமைப்போராட்டத்தை நடத்திய ஈழத்தமிழ் சமூகத்திலிருந்து வந்து, லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உரிமையாளராகவும் லண்டன் சைவத்திருக்கோயில்கள் அமைப்பிலும் இருக்கும் ஆர் ஜெயதேவன் ‘ஹலால் ஜிம்’ என்று கருத்துப் பதிந்து முஸ்லீம் பெண்கள் உடற் பயிற்சி செய்வதை கிண்டலடிக்கும் குறும் காணொலி ஒன்றை இன்று பெப்ரவரி 28இல் பகிர்ந்துள்ளார். அதனை நீக்குமாறு தேசம் ஜெயபாலன் விடுத்த வேண்டுகோளையும் நிராகரித்துள்ளார்.

லண்டன் வெம்பிளியில் உள்ள ஈழபதீர்வரர் ஆலயமும் அதன் உரிமையாளரும் எப்போதும் சர்ச்சைக்குப் பெயர் பெற்றவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் கைகளில் இருந்த ஆலயம் ஆர் ஜெயதேவனின் கைக்கு மாறியது முதல் இன்று வரை சர்ச்சைகள் ஓயவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தையும் தனக்குப் பிடிக்காதவர்களையும் தாக்குவதற்காக ஆர் ஜெயதேவன் இருபது ஆண்டுகளுக்கு முன் ‘விடுதலை’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். அன்ரன் பாலசிங்கத்தையும், தனக்கு பிடியாதவர்களையும் திட்டித் தீர்த்து நான்கு இதழ்களோடு அது நின்றுவிட்டது.

இப்போது ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் சமூக வலைத்தளங்களில் இனக்குரோதத்தை வளர்க்கும் வகையில் முஸ்லீம் சமூகத்தை கிண்டல் அடிக்கின்ற வீடியோ ஒன்றை லண்டன் சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் சமூகவலைத் தளத்தில் ‘ஜெ‘ என்ற பெயரில் பதிவிட்டுள்ளார். லண்டன் சைவத் திருக்கோயில்களின் அறங்காவலர்கள், உரிமையாளர்கள், பக்தர்கள் உள்ள இந்த வட்ஸ்அப் சமூகவலைத் தளத்திலேயே இப்பதிவு ஏற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமியப் பெண்கள் தங்களுடைய இஸ்லாமிய கலாச்சார உடையோடு வெவ்வேறு உடற் பயிற்சிகளைச் செய்வதை அந்த வீடியோ காட்டுகின்றது. கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழையும் ஒரு கறுப்பின இளைஞன் அவர்கள் இஸ்லாமிய கலாச்சார உடையோடு உடற் பயிற்சியை மேற்கொள்வதை விசித்திரமாகப் பார்த்துவிட்டு தனது நளினத்தை தலையசைத்து காட்டியவாறு அங்கிருந்து வெளியேறுவதாக, அக்குறும் காணொலி காட்டுகிறது. இந்த வீடியோவுக்கு ஆர் ஜெயதேவன் ‘ஹலால் ஜிம்’ பாருங்கள் எனும் வகையில் கையால் திரையைக் குறிப்பிடும் குறியீட்டையும் சிரிப்புக்கான குறியீட்டையும் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோபதிவு முஸ்லீம் பெண்கள் தங்கள் இஸ்லாமிய கலாச்சார உடையணிந்து உடற்பயிற்சி செய்வதாக காட்டப்பட்டாலும் அது போலித் தன்மையுடையதாகவே உள்ளது. இது முஸ்லீம் பெண்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் சில விசமிகளால் தயாரிக்கப்பட்ட போலியான வீடியோ போன்றேயுள்ளது. அந்த வீடியோ போலியானதோ உண்மையானதோ என்பதல்ல இங்கு பிரச்சினை. இதனை ‘ஹலால் ஜிம்’ என்று சொல்லி ஈழபதீஸ்வரர் ஆலயத்தினதும் லண்டன் சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தினதும் முக்கியஸ்தரும் தன்னை ஜனநாயகவாதியாகவும் சமூக அக்கறையுடையவராகவும் மாற்றுக் கருத்துடையவராகவும் விம்பம் கட்டும் ஆர் ஜெயதேவன் சமூகவலைத்தளங்களில் பகிருவதற்கு பின்னாலுள்ள மனநிலையும் மற்றைய சமூகங்களை மதங்களை எள்ளி நகையாடுவதும் ஆபத்தானது.

லண்டனில் தவறணை நடத்துபவர்கள், பார் நடத்துபவர்கள் இவ்வாறான பதிவுகளை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது அவ்வாறானவற்றை பகிருவது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஏனெனில் மது வியாபாரத்தை அதிகரிக்க பெண்களின் கவர்ச்சியை மூலதனமாக்கி அதில் மூழ்கிக்கிடப்பவர்கள் போல் ஆலயங்களின் உரிமையாளர்களும், அறங்காவலர்களும் செயற்படுவது ஆரோக்கியமானதல்ல.

இந்தத் தகவலை எனக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தவர் வேறுயாருமல்ல, கிழக்கு லண்டனில் உள்ள லண்டன் சைவத்திருக்கோயில்கள் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஆலயத்துடன் நெருக்கமான ஒருவரே. அவர் இதுபற்றித் தெரிவிக்கையில் “இவனுகள் எல்லாம் கோயில் நடத்தினால், சைவம் எப்படி உருப்படும் ?” என்றார். “இவனுகள் ஊரிலும் போய் நிம்மதியாய் இருக்கின்ற சமூகங்களை வெட்டுக்குத்தில தான் இறக்குவான்கள்” என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பாரம் தூக்கும் போட்டியில் போட்டியிட்ட தமிழ்ப் பெண் சேலைகட்டி வந்து பாரம் தூக்கும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார். உடலில் இரத்தம் கசியுமளவுக்கு காயம் ஏற்படுத்தக்கூடாது என்றாலும் லண்டனிலும் பறவைக்காவடி எடுக்கின்றோம். இவற்றை மற்றய இனத்தவர், மதத்தவர் கொச்சைப்படுத்துவது சரியா?

அதுமட்டுமல்ல, ஒரு இளம் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று நிரூபிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறார். மேலும் தனக்கு பிடிக்காதவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களின் படத்தை கொச்சைத்தனமாக எழுதி பொதுத்தளங்களில் பரப்பி வருகின்றார்.

நீண்டகாலமாகவே இஸ்லாமிய விரோதக் கருத்துக்களை வெளியிட்டுவரும் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளரான இவர் இறுதி யுத்தத்திற்குப் பின் மோடியின் கோசலம் பருகி பிஜேபி க்கு விசுவாசியாகியுள்ளார். இறுதி யுத்தத்திற்கு முன் ஈழபதீஸ்வரர் கோயிலை தங்களிடமிருந்து பறித்தார் என்ற குற்றச்சாட்டில் புலிகளால் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டார். அப்போது இவரை விடுதலை செய்யக் கோரி இவரது முஸ்லீம் நண்பர்கள் ரிபிசி வானொலியூடாகவும் ஏனைய ஊடகங்களுடாகவும் குரல் எழுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட பதிவை நீக்குமாறூம் பெண்களது படங்களை கொச்சைப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவததை நீக்குமாறும் அதே சமூகவலைத் தளத்திலேயே ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவனுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோளை தேசம் ஜெயபாலன் விடுத்திருந்தார். அதனைக் கீழே பதிவு செய்துள்ளேன். ஆனால் எனது குற்றச்சாட்டுகள் தனக்கு எதிராகவும் ஈழபதீஸ்வரர் ஆலயத்துக்கும் சைவ ஆலயங்களுக்கும் எதிராகவும் நான் தொடர்ந்து மேற்கொள்ளும் பழிசுமத்தல்களே என்று ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் தேசம் ஜெயபாலன் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இதே போன்றதொரு மதவிரோதக் கருத்து, இதே சமூகவலைத்தளத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இவ்வாறான பதிவுகளை நீக்குமாறு நானும் இன்னும் சிலரும் கோரியிருந்தும், எதுவும் ஆகவில்லை. அதனால் “நாய் வாலை நிமித்த முடியாது” என்று கூறி சிலர் அந்த சமூகவலைத்தளத்திலிருந்தே வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளரின் இந்த முஸ்லீம் விரோதச் செயற்பாடுகள் பற்றி பாருக் மொகமட் தெரிவிக்கையில், “மேற்குலகமும் அதன் ஊடகங்களும் முஸ்லீம் விரோதத்தைக் கக்குகின்றன. இதில் ஜெயதேவன் போன்ற மத அடிப்படைவாதிகள், வலதுசாரிகள் மற்றும் இனவாதிகள் முஸ்லீம் விரோதம் பேசுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல” என்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் மக்களின் கலாச்சார விழுமியங்களைப் பாகாக்க வேண்டிய ஆலயங்கள் மற்றும் சமூகக் கட்டமைப்புகளில் ஜெயதேவன் போன்றவர்கள் ஊடுருவி, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் காட்டிக்கொண்டு, இன ஐக்கியத்தை குலைக்கும் இவ்வாறான செயல்களைச் செய்வது மிகத்தவறானது எனத் தெரிவித்தார்.

ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உரிமையாளர், பெண்களது படங்களை கொச்சையாக எழுதி சமூகவலைத்தளங்களில் பரப்புவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை புரிந்தவர்களுக்கு வக்காலத்து வாங்கி நற்சான்றிதழ் வழங்குவது, பெண்கள் உடற்பயிற்சியில் என்ன உடை உடுத்த வேண்டும் என்று சொல்வது எல்லாமே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் இவர்கள் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று பல்லின, பல்கலாச்சார, பெண்ணுரிமைகளை மதிக்கின்ற சட்டங்கள் உள்ள நாடுகளுக்குப் போனபோதும் மத அடிப்படைவாதிகளாகவும் இனவாதிகளாகவும் வலதுசாரிகளாகவும் பெண்களுக்கு எதிரானவர்களாகவும் செயற்படுவது ஆச்சரியமாக உள்ளது என்கிறார் வன்னியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் முன்னாள் போராளியும் பெண்ணியவாதியுமான மரியதாஸ் ஜொய்சிமலர்.

Thesam Jeyabalan’s letter to Mr R Jeyadevan:

Dear Mr. Jeyadevan (Jey),

I am writing to you urgently about concerns that have recently surfaced regarding certain comments and content attributed to you on various public platforms, including WhatsApp and social media.

It has come to my attention that the video you shared today and the comments made are being perceived as Islamophobic and misogynistic. Additionally, there are concerns about the use of female family members in addressing issues with individuals, particularly when it involves making misogynistic comments and sharing their photos. The video also shows Muslim women exercising in a gym with their traditional clothing, and your comment referring to it as ‘halal gym’ has raised concerns.

Such actions and comments are not aligned with the principles of unity and respect that are crucial in our diverse communities.

Furthermore, there are claims that you provided a character certificate to an individual who was found guilty of abusing a young girl. This has raised questions about the values upheld by the Eelapatheeswarar Temple and the Association of London Saiva Temples, of which you are a trustee.

As a trustee responsible for running these esteemed institutions, it is imperative to ensure that our actions and words align with the values of inclusivity, tolerance, and harmony. Saivam, as a belief system, encourages understanding and compassion rather than promoting hatred.

I kindly request that you review and consider removing any content that may be perceived as Islamophobic and misogynistic. Such comments have the potential to harm the reputation of the institutions you represent and may create divisions within the community.

Addressing these concerns in a transparent and respectful manner will contribute to fostering a more inclusive and harmonious environment. I appreciate your prompt attention to this matter and trust that you will take the necessary steps to maintain the positive reputation of the Eelapatheeswarar Temple and the Association of London Saiva Temples.

Thank you for your understanding and cooperation.

Sincerely,
T. Jeyabalan

பணம் – பக்தி – பாலியல்: ஓம் சரவணபவ! பல மில்லியன் பவுண்கள் என்ன ஆகும்? சமூக வலைத்தளங்களில் முறைப்பாடு செய்யப்பட்டு நீக்கப்பட்ட செய்தியின் எழுத்துரு!

‘ஓம் சரவணபவ’ என்ற லண்டன் மதக்குழுமத்தைப் பற்றிய தேசம்திரை வெளியிட்ட காணொலியை ஓம் சரவணபவவும் அவர்களுக்கு துணைபோகும் வர்த்தக நிறுவனமும் (நிறுவனங்களும்) சேர்ந்து முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இரு தடவைகள் காணொலியை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கி உள்ளனர். அக்காணொலியின் எழுத்து வடிவவே இது. சில ஆண்டுகளுக்கு முன் இதே பாணயில் லண்டனில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார ஊடகமான ‘ஒரு பேப்பர்’ லைக்கா நிறுவனரை விமர்சித்ததற்காக அதன் பிரதிகள் கடைகளில் இருந்து எடுக்கப்பட்டு எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘ஆதவன் தொலைக்காட்சி’ நடாத்தி வரும் லைக்கா நிறுவனமும் அதன் ஸ்தாபகரும் ஊடகங்களுக்கு எதிராகந் நடந்துகொண்டதோடு ஓரு பேப்பர் ஊடகவியலாளரையும் மிரட்டி இருந்தனர். தற்போது ஓம் சரவணகவ பற்றிய செய்திகளை தேசம்திரை வெளியிட்டதையடுத்து அச்செய்தியை வெளியிடாமல் தடுப்பதில் மக்கள் விரோத பாலியல் குற்றங்களுக்கு துணைபோவோர் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உண்மைகள் உறங்குவதில்லை என்ற தாரக மந்திரத்தோடு இயங்கும் தேசம்நெற் இவ்வாறான பூச்சாண்டிகளுக்கு அஞ்சப் போவதில்லை எனத் தெரிவிக்கின்றது. உண்மையே நிலைக்கும் என்று அவர்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர்.

சமூக வலைத்தளத்திலிருந்து மக்கள் விரோத பாலியல் குற்றங்களுக்கு துணைபோகும் வியாபார நிறுவனம் அல்லது நிறுவனங்களால் நீக்கப்பட்ட ஓம் சரவணபவ பற்றிய செய்தியின் எழுத்து வடிவம்:

இன்றைய பொருளாதாரக் கொள்கைகளை இரு நுறு ஆண்டுகளுக்கு முன் விமர்சித்து, அதற்குத் துணைபோகின்ற ‘மதம் ஒரு அபின்’ என்றவர் அரசியல் பொருளாதாரச் சிந்தனையாளர் கார்ள் மார்க்ஸ். வறுமை – பக்தி – பட்டினியில் கிடந்தால் யேசுவைச் சந்திக்கலாம் என்று போதித்த கென்ய மதக் குழுத் தலைவர் போல் மக்கன்சி ன்தன்கே பல நூறு ஏழைகளை பட்டினி இருந்து சாவதற்குக் காரணமானார். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது பிணை மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சியற்ற கல்வியில் வறுமைப்பட்ட சமூகத்தில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்பார்க்கக் கூடியதே.

ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக, பணம் – பக்தி – படுக்கையில் கடவுளை (தன்னை)ச் சந்திக்கச் சொன்னார் லோக்கல் (local) முருகக் கடவுள் ஓம் சரவணபவ என்று அறியப்பட்ட முரளிகிருஸ்ணன் புலிக்கள் (புலிக்கள் தெற்கு ஆசியாவில் பொதுவான ஒரு குடும்பப் பெயர்). இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றது லண்டனில் செழிப்பான செல்வந்தர்கள் மிக்க மேற்கு லண்டன் உள்ளாட்சிப் பிரிவுகளில். பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட ஓம் சரவணபவ, பிணை மறுக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 5இல் ஆரம்பிக்கப்படும் வழக்கின் முடிவு வரை தடுத்து சிறை வைக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த ஓம் சரவணபவ?

இந்திய கேரள மாநிலத்தின் பாலக்காட்டைச் சேர்ந்த முரளிகிருஸ்ணன் புலிக்கள் என்பவர் லண்டனில் ஓம் சரவணபவ என்றொரு மதக்குழுமத்தை உருவாக்கி உள்ளார். 1979 மே மாதம் பிறந்த, தற்போது 45 வயதுடைய முரளிகிருஸ்ணன் புலிக்கள் 2009இல் லண்டன் வந்து தன்னுடைய மதக்குழுமத்தை லண்டனிலும் ஸ்தாபித்துள்ளார். அதற்கு முன்னரேயே தென்னிந்தியாவில் இவர் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டு துரத்தப்பட்டவர். இவர் லண்டனில் இருந்து கொண்டு இந்தியாவில் கடவுச்சீட்டு தொடர்பில் போட்ட விண்ணப்பத்திற்கு எதிராக கேரளா நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. அதற்குக் காரணம் கேரளா பொலிஸ் பிரிவில் முடிவடையாத கிரிமினல் வழக்கு ஒன்று இவருக்கு உள்ளது. இந்தப் பின்னணியில் தற்போது ‘விஸிற்றர் விசாவில் – visitor visa’ லண்டனில் வாழும் முரளிகிருஸ்ணனுக்கு பிரித்தானிய உள்துறை அமைச்சும் விசா மறுத்து இருந்தது. ஆனால் லண்டனில் அவரைச் சுற்றியிருந்த செல்வந்தர்களின் அணைவால் அவர் விசாவைப் புதுப்பித்துக் கொண்டு இருந்தார்.

யார் இவரை லண்டனில் காலூன்றச் செய்தது?

பாலியல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு துரத்தப்பட்ட ‘ஜீலேபிசாமி ‘ என்று அறியப்பட்ட முரளிகிருஸ்ணனுக்கு அடைக்கலம் வாழங்கியவர் பிற்காலங்களில் தேவா அம்மா ஆகிய தெய்வதீஸ்வரி செல்வேந்திரன். தெய்வதீஸ்வரியின் முன்னாள் கணவர் கிழக்கு லண்டனில் பெற்றோல் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர். பணவசதி உள்ளவர். ஹரோவில் ஒரு ப்ரன்சைஸியாக தபாலகம் ஒன்றையும் நடத்தி வருபவர். பணவசதி படைத்த தெய்வதீஸ்வரி ஜீலேபி சாமியுடைய பக்தையாகி கேரளா சென்று தரிசனம் பெற்று வருபவர். தெய்வதீஸ்வரி தற்போது விவாகரத்து ஆன போதும் இன்றும் முன்னாள் கணவர் செல்வேந்திரனின் பெயரையே பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தேவா அம்மா முரளிகிருஸ்ணனுடைய பக்தி மார்க்கத்தில் தன்னுடைய மகள் கௌசல்யாவையும் இணைத்துக்கொண்டுள்ளார். மகளின் கணவரும் இந்த மதக்குழுமத்தில் இணைந்துகொண்டார்.

இவர்களால் உருவாக்கப்பட்டது தான் ஓம் சரவணபவ சேவா ரஸ்ட். இது பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழவின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் நான்கு ரஸ்டிகள் உள்ளனர் அவர்கள்: முரளிகிருஸ்ணன் புலிக்கள் (ஓம் சரவணபவ), தெய்வதீஸ்வரி செல்வேந்திரன் (தேவா அம்மா), கௌசிகா செல்வேந்திரன் (தேவா அம்;மாவின் மகள்), பேராசிரியர் ராம்நாத் நாராணயசாமி (தேவா அம்மாவின் மருமகன்)

கோவிட் பெருநோய் காலத்தில் ஆலயங்கள் பூட்டப்பட்டு ஆலயங்களின் வருமானம் வீழ்ச்சியடையை ஓம் சரவணபவ சேவா ரஸ்டின் வருமானம் எகிறி 2021இல் ஒரு மில்லியனைத் தாண்டியது. இது உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட கணக்கு அறிக்கை. இந்த ரஸ்டின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் கணக்காளர் ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் இதற்குள் வராத பணம் இதனைக் காட்டிலும் பத்து மடங்கு இருக்கும் எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அதாவது பத்து மில்லியன் பவுண்கள் இந்தக் குழுமத்திடம் இருப்பதாகக் கணிப்பிட்டார்.

ஏன் ஓம் சரவணபவனிடம் செல்கின்றனர்?

ஆரம்பத்தில் யாருக்கும் ஓம் சரவணபவனுடைய பின்னணி தெரிந்திருக்கவில்லை. ஓம் சரவணபவனிடம் மற்றவர்களைக் கவருகின்ற ஒரு ஆளுமை இருப்பதாகக் குறிப்பிடுகின்றார், தனியனாக தன்னுடைய இரு விசேட தேவைகளுடைய பிள்ளைகளையும் வளர்த்து வரும் ஆன்மீக ஈடுபாடுடைய ஒருவர், அவர் மேலும் குறிப்பிடுகையில் அவர் பேச்சாற்றலுடையவராகவும் மற்றையவர்களோடு பேசுகின்ற போதே அவர்களை மதிப்பீடு செய்து பேசக்கூடியவராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இவற்றுக்கும் மேலாக எவ்வாறோ மற்றையவர்களின் மனப்பதிவுகளை வாசிக்கவும் செய்கின்றார் என்கிறார், ஓம்சரவணபவ தன்னுடைய கடந்த காலம் பற்றிக் மிகத்துல்லியமாகக் குறிப்பிட்டதாக தேசம்நெற் இடம் அவர் தெரிவித்தார். இது போன்ற காரணங்களாலும் பெரும்பாலானவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாலும் இழுத்தங்களுடன் வாழ்வதாலும் அவர் மீது ஈர்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தான் ஈர்க்கப்பட்டதற்கு தன்னுடைய நெருக்கடிகளும் தனக்கிருந்த அழுத்தங்களும் கூடக் காரணம் என்றவர் அவரிடம் இருந்த சில திறமைகளை அவர் மிகச் சாதுரியமாகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். பல பெண்கள் அவரிடம் செல்வதற்கு அவர்கள் முகம் கொடுக்கும் குடும்ப நெருக்கடிகளும் மன அழுத்தங்களுமே காரணம் என்கிறார் அவர்.

ஏன் செல்வந்தர்கள் விட்டில் பூச்சிகளாக ஓம் சரவணபவனிடம் வீழ்ந்தனர்?

பணம், அது இல்லாதவர்களுக்கு, பணம் குறைவாக உள்ளவர்களுக்கு அதனை அடைவது அவசியமானது. அது உந்துதலைக் கொடுக்கும். அதனை அடைவது ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் பணம் படைத்தவர்களுக்கு பணம் பெருக்குவது கிளர்ச்சியையோ மகிழ்ச்சியையோ குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படுத்துவதில்லை. அதனால் அவர்கள் அந்தக் கிளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் வெளியே தேடுவார்கள். போதைப்பொருள் (drugs), கம்பிளிங் (gambling), சொப்பிங் (shopping), பார்டியிங் (partying) என்று அதில் ஆன்மீகமும் ஒன்று. ஆனால் இவர்கள் தங்களுக்குள்ள பண அந்தஸ்தை பயன்படுத்தியே அக்கிளர்ச்சியைத் தேடுவார்கள். அதன் மூலம் ஒரு சமூக அங்கிகாரத்தையும் அந்தஸ்தையும் விரும்புவார்கள். இந்தச் செல்வந்தர்களின் இந்தப் பலவீனத்தை ‘ஓம் சரவணபவ’ முதலீடாக்கியது. ‘ஓம் சரவணபவ’ மட்டுமல்ல சுவாமி பிரேமானந்தா, நித்தியானந்தா, மேல்மருவத்தூர் அம்மா சாமி, சற்குரு ஜக்கி முதல் ஆலயங்களில் உள்ள ஐயர்கள் வரை எல்லோரும் இந்தச் செல்வந்தர்களில் அல்லது செல்வந்தர்களாக தங்களை பாவனை செய்ய விரும்புபவர்களை இந்த ரெக்னிக்கை வைத்துத் தான் வீழ்த்துகிறார்கள்.

இதனையே ஓம் சரவணபவ மிகக் கச்சிதமாக பயன்படுத்தினார். உங்களுக்கு என்ன தெரியும் என்பது முக்கியமல்ல உங்களுக்கு யாரைத் தெரியும் என்பது தான் முக்கியம். லண்டனில் கும்பிடுவதற்கு சாமியில்லாமல் கேரளாவரை சென்று தரிசனம் பெற்ற தெய்வதீஸ்வரியை கணக்குப் பண்ணி வளைத்துப் போட்டார் ஓம் சரவணபவ. ஒரு வர்த்தகப் பிரமுகரின் மனைவியாக இருந்தவரின் நட்புவட்டம் குசெலினிகளாக இருக்க வாய்ப்பில்லை. தெய்வதீஸ்வரி ‘நான் பெற்ற இன்பம் பெறுக செல்வந்தர்காள்! என்று லண்டனில் உள்ள தமிழ் வர்த்தகப் புள்ளிகளுக்கு ஓம் சரவணபவாவை அறிமுகப்படுத்தினார். சாமியை வீட்டுக்கு அழைத்து புஜை நடத்துவது செல்வந்தக் குடும்பங்களின் மத்தியில் அவர்களின் அந்தஸ்தை உயர்த்தியது.

கிளேஹோலில் (Clayhall) நடந்த இவ்வாறான பூஜையில் ஒரு குடும்பத்தினரைக் கொண்டு இறக்கிவிட்ட ரக்ஸி றைவர் (taxi driver) தேசம்நெற் க்கு தெரிவிக்கையில் ஓம் சரவணபவவை வீட்டுக்கு அழைத்த குடும்பத்தினர் அவருக்கு 2,500 பவுண்கள் வழங்கியவையாம். அந்தப் பூஜைக்கு வந்திருந்த குடும்பங்கள் 500, 1000 பவுண்கள் என்ற வழங்கியவையாம் என்றார். அன்றைய இரு மணிநேரத்தில் ஓம் சரவணபவவின் கலெக்சன் 10,000 பவுண்கள் என்றும் தெரிவித்தார். ‘சுவாமியின்’ காலைக் கழுவிக் குடித்ததற்கு கட்டணம் 10,000 பவுண்கள்.

லண்டனின் பெரும் வர்த்தகப் புள்ளிகள் சாமியின் வலையில் வீழ்ந்தனர். லைக்கா மோபைல் நிறுவனத்தின் முக்கியஸ்தர் பிரேம், சம்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுரேன், மற்றும் வர்த்தக உரிமையாளர்கள், கணக்காளர்கள், மருத்துவர்கள் என்று பணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பலர் ஓம் சரணவபவ வுக்கு ‘ஓ’ போட்டனர். அவர்களுடைய துணைவியரும் அவர்களோடு சேர்ந்து ‘ஓ’ போட்டனர். அவருடைய காலைக்கழவிக் குடித்தனர். தாங்கள் குடித்தது காணாது என்று அவரை புங்குடு தீவு, நயினா தீவு என்று இலங்கைக்கு கூட்டிச் சென்று அங்குள்ளவர்களுக்கும் குடித்துக் காட்டி அவர்களையும் அந்தக் கால் கழுவிய தண்ணியைக் குடிக்க வைத்தனர்.

எவ்வாறு ஓம் சரவணபவ நிர்வாணமானார்?

ஓம் சரவணபவ ஹரோவில் உள்ள பிரிஸ்டன் ரோட்டில் கடை விரித்தார். ஆச்சிரமம், கோயில் கட்டினார். படுக்கையும் விரித்தார்.

பக்தைகள் ஆச்சிரமத்தில் கூடிய நேரம் செலவழித்தனர். கணவன்மாருக் கதைப்பதற்கு நேரமும் பொறுமையும் இல்லை. சாமிக்கு வேலையா வெட்டியா காலை நீட்டிக்கொண்டு நல்லா கதை கேட்டார். அவர்களுக்கு கதை விட்டார். முருகப்பெருமானோடு ஐக்கியமாக்கினார் ஓம் சரவணபவ! யாமிருக்கப் பயமேன்!! சில குடும்ங்களையும் பிரித்து மேய்ந்தார் என்று தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

“களவு செய்துவிட்டு அதனைவிட்டுவிட்டால் பிடிபடுவது கஸ்டம் என்பது வர்த்கர்கள் நன்கு அறிந்த தொழில் ரகசியம். ஓம் சரவணபவவிற்கு ஓவர் கொன்பிடன். அல்லது அவரும் செல்வம் – செல்வாக்கு – செக்ஸ் என்ற போதைகளுக்கு அடிமையானார். இப்போது சாமிவேசம் குறைந்து சுயரூபம் வெளிவரத் தொடங்கியது. அவருடைய நடவடிக்கைகள் எல்லை மீறியது” என்கிறார் எட்ச்வெயரைச் சேர்ந்த ரரின் சொக்கலிங்கம்.
“மிகக் கீழானவர்களை விமர்சிக்க தமிழர்கள் ஒரு மோசமான சொல்லாடல் வைத்துள்ளனர். ‘சாப்பிட்ட கோப்பையிலேயே பேழ்கிறான்’. அது தான் ஓம் சரவணபவ மாட்டக் காரணம். பெரும்புள்ளிகளின் குடும்பங்களிலேயே, அக்குடும்பப் பெண்களிலேயே, அவர்களின் பிள்ளைகளிலேயே கை வைத்தார் ஓம் சரவணபவ. அப்போது தான் அவருக்கு ஏழரைச் சனி ஆரம்பித்தது. மற்றவர்களுக்கு நடக்கும் போது கண்டும் காணாமல் இருந்தவர்கள் தங்கள் குடும்பங்களில் என்றதும் பதறினர். அதே சமயம் தங்கள் குடும்ப உறுப்பினர்களது பெயர் வெளிவராமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஓம் சரவணபவாவுடன் லைக்காவுக்கு என்ன சம்பந்தம்?

ஓம் சரவணபவா பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாதவர்களின் ஆன்மீக குரு. அந்த வலையில் லைக்கா சுபாஸ்கரனின் வலது கரமான பிரேம் மற்றைய செல்வந்தர்கள் போல் வீழ்ந்தார். தன்னுடைய வீட்டுக்கும் ஓம் சரவணபவவை அழைத்து காலைக் கழுவிக்கு குடித்தார். மற்றைய செல்வந்தர்கள் போல் தன்னுடைய வங்கிக் கணக்கும் இரட்டிப்பாகும் புண்ணியம் கூரையை பிய்த்துகொண்டு வளரும் செய்த பாவம் செய்கின்ற பாவம் செய்யப் போகும் பாவம் எல்லாவற்றிலும் இருந்தும் விடுதலை கிடைக்கும் என்று மற்றவர்களைப் போல் தானும் நம்பினார். அது மட்டுமல்லா சுபாஸ்கரனும் ஓம் சரவணபவ சுவாமியை தன் வீட்டுக்கும் அழைத்து அதையே செய்தார். விஸ்கி அடித்த கூட்டம் சரவணபவனின் கால் கழுவிய தண்ணி அடித்தது.

இப்போது இந்த வழக்கு விடயத்தில் லைக்கா தொடர்ந்தும் மௌனமாகவே உள்ளது. இது பற்றி பேராசிரியர் பெக்கோ என்ற புனைப்பெயரில் எழுதிவருபவர் நகைச்சுவையாக வருமாறு குறிப்பிட்டார்: “ஓம் சரவணபவ சுவாமியின் வழக்கை சுபாஸ்கரன் சுவாமியும் பிரேம் சுவாமியும் நடத்துவதாக முன்னாள் போட்டியாளரான லெப்ரா பாஸ்கரன் சுவாமி ஐபிசி ஊடாக கசியவிடுவதாக ஒரு தகவல். லைக்காவின் அபிமானி கண்ணன் சுவமி அதிர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதகமாக லைக்காவைக் காப்பாற்ற நாலுவரி போட ஹரோ ஜெ சுவாமி பொங்கி எழ லண்டனில் சுவாமிகளின் மோதல் உக்கிரமடைந்துவிட்டது. இதுக்குள் தேவா அம்மா இடையாள சைக்கிளோடி ஆட்டையைப் போட்டுவிட்டா என்று ஜெவாலு சாமி பீலிங்கில தண்ணி அடிக்கிறார். சுவாமியின் கால் கழுவின தண்ணியல்ல.”

அடுத்தது என்ன?

ஓம் சரவணபவனினால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறைந்தது மூவர் முரளிகிருஸ்ணன் புலிக்கள்க்கு எதிராக குற்றம்சுமத்தியுள்ளனர். பாலியல் வல்லுறவு, பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் முரளிகிருஸ்ணன் புலிக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இவர்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டும் உள்ளது.
யூன் 12ம் திகதி ஈலிங் மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் முரளிகிருஸ்ணன் புலிக்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. அவருக்கு பிணையும் மறுக்கப்பட்டது.

அதற்கு ஒரு மாதத்திற்குப் பின் யூலை 10 ஹரோ கிறவுண் கோர்ட்டில் முரளிகிருஸ்ணன் புலிக்களின் பிணை மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. முரளிகிருஸ்ணன் புலிக்கள் அரச தரப்பின் சாட்சியங்களை தொந்தரவு செய்வார் என்ற அச்சத்தின் அடிப்படையிலும் பிணை மறுக்கப்பட்டிருக்கலாம் என ஓம் சரவணபவ வின் முன்னாள் பக்தர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

முரளிகிருஸ்ணன் புலிக்களின் வழக்கு டிசம்பர் 5 முதல் ஆறு நாட்கள் நடைபெறுவதற்கு திகதியிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முரளிகிருஸ்ணன் புலிக்கள் விடுதலையாவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகவும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டால் தண்டனைக்காலம் முடிவடைந்ததும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படுவார் என்றும் சட்டவல்லுனர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

முரளிகிருஸ்ணன் புலிக்கள் பிணை மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது அவருடைய வழக்கில் பல்வேறு நெருக்கடிகளையும் ஏற்படுத்தி இருக்கும் ஏனெனில் பொது அமைப்புகளின் ஆணைக்குழுவுக்கு வழங்கிய கணக்கறிக்கையில் அவர்களுடைய பெரும்பாலான சொத்துக்கள் பணம் அல்லது இலகுவில் பணமாக்கக் கூடியதாகவே உள்ளது. மேலும் கணக்கறிக்கைக்கு புறம்பான பெருமளவு நிதியும் வெளியே உள்ளது. இவற்றில் பெருமளவு பங்கை தேவா அம்மா என்ற தெய்வதீஸ்வரியே கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இந்த வழக்குக்கான செலவை யார் செலவு செய்கின்றார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஓம் சரவணபவ சேவா ரஸ்ட் செலவழிக்கின்றதா அல்லது லைக்கா போன்ற பக்தர்கள் செலவு செய்கின்றார்களா? ஓம் சரவணபவவின் கணக்குக்கு உட்பட்ட உட்படாத பல மில்லியன் அசையும் அசையா சொத்துக்களுக்கு என்ன நடக்கும்? இவ்வாண்டு முடிவுக்குள் பல முடிச்சுகள் அவிழும். பல முடிச்சவிக்கிகளும் வெளித் தெரிவார்கள்.

லண்டனில் தமிழர்கள் மத்தியில் இவ்வாண்டு நீதிமன்றம் வந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் லண்டனின் செல்வச் செழிப்பு மிக்க பகுதிகளான ஹரோ பார்னற் பகுதியில் இருந்தே வந்துள்ளது. தற்போது ஓம் சரவணபவ சுவாமியும் அவ்விடத்திலேயே கோயில் ஆச்சிரமம் வைத்து வாழ்பவர். பிரேமகுமார் ஆனந்தராஜா, சுப்பிரமணியம் சதானந்தன் ஆகியோர் ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்கள். யாழ் இந்ததுக்கல்லூரி பழைய மாணவர்கள் பள்ளி நண்பர்கள். அப்பிரதேசத்திலேயே வாழ்ந்தவர்கள். பிரேமகுமார் ஆனந்தராஜா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பின்பும் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கிய ஆன்மீக கனவான்களும் கனவாட்டிகளும் இந்தப் பிரதேசத்திலேயே வாழ்கின்றனர்.

இப்பகுதியில் இன்னும் சில ஆன்மீக வாதிகள், கலைஞர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வைத்தால் தங்களையே தூற்றுவார்கள் என்பதால் பல இளம்பெண்கள் தங்கள் மௌனத்தை கலைக்கத் தயங்குவதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகின்றது.

பாலியல் குற்றவாளி பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு 42 பேர் நற்சான்றிதழ் வழங்கியமை ஏற்கனவே தேசம்நெற் இல் அம்பலப்படுத்தப்பட்டது. தற்போது முரளிகிருஸ்ணன் புலிக்கள்க்கும் ஆதரவாக பலர் செயற்பட்டு வருகின்றனர். தங்களுடைய தேவைகளை லாபங்களைக் கருதாமல் அனைத்து வகையான பாலியல் சுரண்டல்கள், பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் எதிரான எண்ணம் அனைவரிடமும் ஏற்பட வேண்டும்.

லூட்டன் (பிரித்தானியா) பொதுப் பூங்காவில் தமிழ் கடைக்காரரின் உடல் மீட்பு! கொலையா? தற்கொலையா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை!

யாழ் சாவகச்சேரி சரசாலையைச் சேர்ந்த கந்தசாமி பிரபாகரன் (39) என்ற கடைக்காரர் ஒருவரின் உடல் மார்ச் 17ம் திகதி லூட்டன் எல்யூ 1 (LU1) என்ற பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டதாக தேசம்நெற்க்கு தெரிய வருகின்றது. தனது கடைக்கு பொருட்களை வாங்குவதற்கு மொத்தக் கொள்வனவாளர்களிடம் சென்றவர் மார்ச் 17ம் திகதி சடலமாக மீட்கப்பட்டதாக கொல்லப்பட்டவரின் சகோதரருக்கு நெருக்கமான நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இது பற்றி தேசம்நெற்குத் தெரியவருவதாவது பிரபாகரன் மார்ச் 17 காலம் தாழ்த்தி காலையுணவை முடித்துக்கொண்டு கடைக்கு பொருட்களைக் கொள்வனவு செய்ய, அங்குள்ள மொத்தக் கொள்வனவு நிலையத்துக்கு செல்வதாகக் கூறி வெளிக்கட்டுள்ளார். பிரபாகரன் நீண்ட நேரமாக வராததினாலும்; தொலைபேசிக்கு பதிலளிக்காததாலும்; மற்றையவர்களுக்கும் தொடர்புகொண்டு விசாரித்தும் பதிலில்லாத நிலையில், அவருடைய மனைவி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பொலிஸார் பின்னர் இவருடைய தொலைபேசியின் சிக்னலைக்கொண்டு அது இருக்கும் இடத்தை அடைந்துள்ளனர். அன்றைய தினம் இரவு பிரபாகரனின் உடல் தூகிடப்பட்டநிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டது என அந்நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

பிரபாகரன் கந்தசாமி எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு வந்தவர். யாழ் சாவகச்சேரியில் ஓரளவு வசதியான வர்த்தகக் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய சகோதர் அதற்கு முன்னரேயே லண்டன் வந்தவர். அவர் கடையை நடத்தி வந்தார். அதன் பின் பிரபாகரனும்; ஒரு கடையை ஆரம்பித்தார். பிரபாகரன் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி அவருக்கு நான்கு வயதில் ஒரு குழந்தையும் ஒன்றரை வயதில் ஒரு கைக் குழந்தையும் உண்டு. குடும்பம் மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் இருந்ததாகவும் தற்கொலை செய்வதற்கான எந்தக் காரணமும் குடும்பத்தில் இருக்கவில்லை என்றும் அக்குடும்பத்திற்கு நெருக்கமான மற்றொருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

பிரபாகரனின் உடல் கண்டெடுப்பதற்கு சிறிது காலம் முன்பாக அவர் கெபாப் (Kebab) உணவகமொன்றுக்கு சென்றிருந்ததாகவும் அங்குள்ளவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்ததாகவும் பிரபாகரனின கடைக்கு அருகில் கடை நடாத்திவரும் இன்னுமொரு கடைக்காரர் தேசம்நெற்குக்குத் தெரிவித்தார். இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானவருக்கு குறிப்பிடத்தக்க அளவு காயங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டு இருந்ததாகவும் அக்கடைக்காரர் மேலும் குறிப்பிட்டார். இது தொடர்பாக தேசம்நெக்கு மேலும் ஒரு உறுதிப்படுத்தப்பட முடியாத தகவலும் கிடைத்தது. அதன்படி பிரபாகரன் தாக்குதலுக்கு உள்ளானவர்களைச் சந்தித்து வழக்கில் இருந்து வெளியேறுவதற்கு பேச்சுவாரத்தையில் ஈடுபட்டதாகவும் செல்லப்படுகிறது. இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

இளம் குடும்பஸ்தரான உயிரிழந்த பிரபாகரன், சாவகச்சேரியில் பல உதவித்திட்டங்களை மேற்கொண்டுவந்ததாகவும் அவர் மிகுந்த சமூக அக்கறை கொண்டவர் என்றும் தெரியவருகின்றது.

சில ஊடகங்கள் இதனை ஒரு படுகொலை என்று தீர்க்கமானதாக செய்தி வெளியிட்டுள்ளதுடன் அப்படுகொலை ஹரோவில் வெறிச்சோடிய பகுதியில் நடைபெற்றதாகவும் ஹெரோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் முற்றிலும் தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர்.

பிரபாகரனின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் லூட்டன் பொலிஸார் எவ்வித தகவல்களையும் யாருடனும் பரிமாற வேண்டாம் என குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகின்றது. பிரேத பரிசோதணையின் பின்னரேயே இம்மரணம் தொடர்பில் வேறு யாரும் தொடர்புபட்டுள்ளனரா என்பதை பொலிஸாரல் உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும். இம்மரணம் தொடர்பில் லூட்டன் பொலிஸார் எவ்வித அறிக்கையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை.

பல்கலைக்கழக மாணவியை சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆனந்தம் கிரியேசன் ஆனந்தராஜவுக்கு 30 மாதங்கள் சிறை!!!

பெப்ரவரி 2இல் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசாமிக்கு 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அறியாப் பருவத்தில் பெண் பிள்ளையை தன் பாலியல் இச்சைக்கு உட்படுத்திய தமிழ் வர்த்தகப் பிரமுகரான பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கே 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பிரேமகுமார் ஆனந்தராஜா ( Anandarajah Bremakumar ) வுக்கு எதிரான பாலியல் இம்சைக் குற்றச்சாட்டு டிசம்பர் முற்பகுதியில் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு இருந்தது முதற் தடவையாக தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. வூட் கிரீன் கிரவுண் நீதிமன்றில் நடந்த பிரேமகுமார் ஆனந்தராஜாவின் வழக்கின் முடிவில் இன்று பெப்ரவரி 02இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு 30 மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவருடைய பெயர் பாலியல் துஸ்பிரயோகம் செய்வோர் பட்டியலிலும் சேர்க்கப்படும் எனவும் அதனால் இவர் சிறுமிகள் சிறுவர்கள் உள்ள பொது இடங்களில் நடமாடவும் தடை செய்யப்படும் எனவும் தெரியவருகின்றது.

அறுபத்தியொரு வயதான பிரேமகுமார் ஆனந்தராஜா சம்பந்தப்பட்ட சிறுமியைவிடவும் ஏனைய சிலருடனும் தவறாக நடந்துகொண்டவர் என்றும் அனால் மற்றையவர்கள் நீதிமன்று வரை செல்லவில்லை எனவும் தெரியவருகின்றது. பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு டயபிற்ரீஸ் மற்றும் நோய்க் காரணங்களைச் சுட்டிக்காட்டி அவருக்கு வழங்கப்பட்ட தண்டணை மனிதாபிமான அடிப்படையில் 30 மாதங்களுக்குக் குறைக்கப்பட்டது. தண்டனை வழங்கும் போது தனது குற்றத்தை பிரேமகுமார் ஆனந்தராஜா ஒத்துக்கொண்டிருக்க வேண்டும் என நீதிபதி சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. மேலும் குற்றவாளியின் தரப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய தாயின் நன்நடத்தையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடந்துகொண்டதையும் நீதிபதி வன்மையாகக் கண்டித்திருந்தார்.

பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மனைவி, சகோதர சகோதரிகள் மற்றும் ஆச்சுவே ஆலயம் சார்ந்தவர்கள் அவருடைய மோசமான பாலியல் துஸ்பிரயோகத்தை அறிந்திருந்தும் அவருக்கு சாதகமாகச் செயற்பட்டனர். இவருடைய தங்கைகளில் ஒருத்தி அண்ணனுக்கு கொஞ்சக்காலம் தான் தண்டனை கொடுக்கப்பட்டு உள்ளது என்று அதற்குள் பெருமையடித்துள்ளார். பிரேமகுமார் ஆனந்தராஜா இவ்வாறான மோசமான பாலியல் துஸ்பிரயோகம் செய்த போதும்: அவருடைய பண வசதி, சமூகத்தில் ஆனந்தம் கிரியேசன் என்ற அமைப்பினூடாக பரதநாட்டியம், அரங்கேற்றம் போன்ற நிகழ்வுகளை நடாத்தி பெற்றுவந்த செல்வாக்கு, ஆலயங்களுக்கு மேளம் நாதஸ்வரம் போன்ற இசைக் கலைஞர்களை வரவழைத்துக் கொடுப்பது என்று பிரேமகுமார் ஆனந்தராஜா சமூக அந்தஸ்தைப் பெற்றிருந்தார். அதனைப் பயன்படுத்தியே இவர் இந்தப் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தார்.

2022 டிசம்பர் முற்பகுதியில் இவ்வழக்கில் பிரேமகுமார் ஆனந்தராஜா குற்றவாளியாகக் காணப்பட்டு 2023 பெப்ரவரி 2இல் அவருக்கு தண்டணை வழங்க்பட்ட போதும் இவ்வழக்கின் வரலாறு 13 ஆண்டுகள் நீண்டது. 2010இல் அப்போது 13 வயதேயான குழந்தையான சிறுமிiயையே பிரேமகுமார் ஆனந்தராஜா அவளே அறியாத பருவத்தில் துஸ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மனைவியும் மிக நெருங்கிய நண்பிகள். பாதிக்கப்பட்ட சிறுமியின் பூப்புனித நீராட்டுவிழாவில் கூட அக்குழந்தையின் தாய்மாமனாகவும் மாமியாகவும் ஆனந்தராஜா தம்பதிகளே அழைக்கப்பட்டுடிருந்தானர். அவ்வளவு நம்பிக்கையோடு பழகியவர்களின் வீட்டுச் சிறுமியையே பிரேமகுமார் ஆனந்தராஜா அனுபவிக்க முற்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் சிநேகிதி தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். 2010இல் சிறுமிக்கு 13 வயதாக இருக்கும் போதே இத்துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றது. ஆனாலும் அது வேறு யாருக்குமே தெரியாது.

சிறுமி தனது 21வது பிறந்த தினத்தன்று தாயாருக்கு தனக்கு ஏற்பட்ட அக்கொடிய அனுபவங்களை சொல்லியுள்ளார். அதனைக் கேட்டு கதிகலங்கிய தாயார் தன்னுடைய நெருக்கமான தோழியான ஆனந்தராஜாவின் மனைவிக்கு இதனைத் தெரிவித்து நியாயம் கோரியுள்ளார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம் கெஞ்சி மன்றாடிய ஆனந்தராஜாவின் மனைவி தன்னுடை பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் அதற்கு அப்பால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவிடாமல் தடுத்தார்.

அதன் பின் மருத்துவத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண், ஒரு விரிவுரையின் போது பெண் பிள்ளைகள் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாவதை எவ்வாறு அறிந்துகொள்வது என்பது பற்றிய விரிவுரை நடந்தது என்றும் அதன் போது சம்பந்தப்பட்ட பெண் அழ ஆரம்பிக்கவே பல்கலைக்கழகம் அப்பெண்ணின் நிலையை உடனேயே அறிந்து கொண்டனர். பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அன்று சந்தேக நபரான பிரேமகுமார் ஆனந்தராஜாவை விசாரணைக்கு வருமாறு கோரியும் இருந்தனர். அப்போது மருத்துவத்துறையில் பயின்று கொண்டிருந்த அப்பெண் தன் கல்வி முன்னேற்த்தை எதுவும் தடைப்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக நடவடிக்கையில் இறங்கவில்லை. தன்னுடைய இறுதித்தேர்வின் இறுதிப் பரிட்சையையும் முடித்துக்கொண்ட பின் நேரடியாக் பொலிஸாரிடம் சென்று பிரேமகுமார் ஆனந்தராஜா மீதான குற்றச்சாட்டை மீள்புதுப்பிக்கும்படி கோரி; பொலிஸாருக்கு முழமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

அதனைத் தொடர்தே பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கி சந்தேக நபரைக் கைது செய்து அவர் குற்றவாளி என்பதையும் நிரூபித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணோடு கூடப் படித்தவர் இது பற்றித் தெரிவிக்கையில் “அவர்கள் அனுபவித்த துயரை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது” எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பாதிப்பு வலியுடன் இருக்கின்ற போது பிரேமகுமார் ஆனந்தராஜாவை காப்பாற்றும் சில முயற்சிகளிலும் சில சமூகப்பெரும் புள்ளிகள் ஈடுபட்டுள்ளனர். அது பற்றி பாதிக்கப்பட்டவர் “இவங்களுக்குள்ளையா நாங்கள் வளர்ந்தனாங்கள்” என்று மனம் வெதும்பியதாக அப்பெண்ணின் சிநேகிதி தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இவ்வழக்கு தொடர்பான மேலதிக விபரங்கள் அடுத்த பதிவில்.