புலம்பெயர் வாழ்வியல்

புலம்பெயர் வாழ்வியல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுடைய வாழ்வியல், சமூக, அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

பணம் – பக்தி – பாலியல்: ஓம் சரவணபவ! பல மில்லியன் பவுண்கள் என்ன ஆகும்? சமூக வலைத்தளங்களில் முறைப்பாடு செய்யப்பட்டு நீக்கப்பட்ட செய்தியின் எழுத்துரு!

‘ஓம் சரவணபவ’ என்ற லண்டன் மதக்குழுமத்தைப் பற்றிய தேசம்திரை வெளியிட்ட காணொலியை ஓம் சரவணபவவும் அவர்களுக்கு துணைபோகும் வர்த்தக நிறுவனமும் (நிறுவனங்களும்) சேர்ந்து முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இரு தடவைகள் காணொலியை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கி உள்ளனர். அக்காணொலியின் எழுத்து வடிவவே இது. சில ஆண்டுகளுக்கு முன் இதே பாணயில் லண்டனில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார ஊடகமான ‘ஒரு பேப்பர்’ லைக்கா நிறுவனரை விமர்சித்ததற்காக அதன் பிரதிகள் கடைகளில் இருந்து எடுக்கப்பட்டு எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘ஆதவன் தொலைக்காட்சி’ நடாத்தி வரும் லைக்கா நிறுவனமும் அதன் ஸ்தாபகரும் ஊடகங்களுக்கு எதிராகந் நடந்துகொண்டதோடு ஓரு பேப்பர் ஊடகவியலாளரையும் மிரட்டி இருந்தனர். தற்போது ஓம் சரவணகவ பற்றிய செய்திகளை தேசம்திரை வெளியிட்டதையடுத்து அச்செய்தியை வெளியிடாமல் தடுப்பதில் மக்கள் விரோத பாலியல் குற்றங்களுக்கு துணைபோவோர் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உண்மைகள் உறங்குவதில்லை என்ற தாரக மந்திரத்தோடு இயங்கும் தேசம்நெற் இவ்வாறான பூச்சாண்டிகளுக்கு அஞ்சப் போவதில்லை எனத் தெரிவிக்கின்றது. உண்மையே நிலைக்கும் என்று அவர்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர்.

சமூக வலைத்தளத்திலிருந்து மக்கள் விரோத பாலியல் குற்றங்களுக்கு துணைபோகும் வியாபார நிறுவனம் அல்லது நிறுவனங்களால் நீக்கப்பட்ட ஓம் சரவணபவ பற்றிய செய்தியின் எழுத்து வடிவம்:

இன்றைய பொருளாதாரக் கொள்கைகளை இரு நுறு ஆண்டுகளுக்கு முன் விமர்சித்து, அதற்குத் துணைபோகின்ற ‘மதம் ஒரு அபின்’ என்றவர் அரசியல் பொருளாதாரச் சிந்தனையாளர் கார்ள் மார்க்ஸ். வறுமை – பக்தி – பட்டினியில் கிடந்தால் யேசுவைச் சந்திக்கலாம் என்று போதித்த கென்ய மதக் குழுத் தலைவர் போல் மக்கன்சி ன்தன்கே பல நூறு ஏழைகளை பட்டினி இருந்து சாவதற்குக் காரணமானார். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது பிணை மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சியற்ற கல்வியில் வறுமைப்பட்ட சமூகத்தில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்பார்க்கக் கூடியதே.

ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக, பணம் – பக்தி – படுக்கையில் கடவுளை (தன்னை)ச் சந்திக்கச் சொன்னார் லோக்கல் (local) முருகக் கடவுள் ஓம் சரவணபவ என்று அறியப்பட்ட முரளிகிருஸ்ணன் புலிக்கள் (புலிக்கள் தெற்கு ஆசியாவில் பொதுவான ஒரு குடும்பப் பெயர்). இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றது லண்டனில் செழிப்பான செல்வந்தர்கள் மிக்க மேற்கு லண்டன் உள்ளாட்சிப் பிரிவுகளில். பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட ஓம் சரவணபவ, பிணை மறுக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 5இல் ஆரம்பிக்கப்படும் வழக்கின் முடிவு வரை தடுத்து சிறை வைக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த ஓம் சரவணபவ?

இந்திய கேரள மாநிலத்தின் பாலக்காட்டைச் சேர்ந்த முரளிகிருஸ்ணன் புலிக்கள் என்பவர் லண்டனில் ஓம் சரவணபவ என்றொரு மதக்குழுமத்தை உருவாக்கி உள்ளார். 1979 மே மாதம் பிறந்த, தற்போது 45 வயதுடைய முரளிகிருஸ்ணன் புலிக்கள் 2009இல் லண்டன் வந்து தன்னுடைய மதக்குழுமத்தை லண்டனிலும் ஸ்தாபித்துள்ளார். அதற்கு முன்னரேயே தென்னிந்தியாவில் இவர் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டு துரத்தப்பட்டவர். இவர் லண்டனில் இருந்து கொண்டு இந்தியாவில் கடவுச்சீட்டு தொடர்பில் போட்ட விண்ணப்பத்திற்கு எதிராக கேரளா நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. அதற்குக் காரணம் கேரளா பொலிஸ் பிரிவில் முடிவடையாத கிரிமினல் வழக்கு ஒன்று இவருக்கு உள்ளது. இந்தப் பின்னணியில் தற்போது ‘விஸிற்றர் விசாவில் – visitor visa’ லண்டனில் வாழும் முரளிகிருஸ்ணனுக்கு பிரித்தானிய உள்துறை அமைச்சும் விசா மறுத்து இருந்தது. ஆனால் லண்டனில் அவரைச் சுற்றியிருந்த செல்வந்தர்களின் அணைவால் அவர் விசாவைப் புதுப்பித்துக் கொண்டு இருந்தார்.

யார் இவரை லண்டனில் காலூன்றச் செய்தது?

பாலியல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு துரத்தப்பட்ட ‘ஜீலேபிசாமி ‘ என்று அறியப்பட்ட முரளிகிருஸ்ணனுக்கு அடைக்கலம் வாழங்கியவர் பிற்காலங்களில் தேவா அம்மா ஆகிய தெய்வதீஸ்வரி செல்வேந்திரன். தெய்வதீஸ்வரியின் முன்னாள் கணவர் கிழக்கு லண்டனில் பெற்றோல் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர். பணவசதி உள்ளவர். ஹரோவில் ஒரு ப்ரன்சைஸியாக தபாலகம் ஒன்றையும் நடத்தி வருபவர். பணவசதி படைத்த தெய்வதீஸ்வரி ஜீலேபி சாமியுடைய பக்தையாகி கேரளா சென்று தரிசனம் பெற்று வருபவர். தெய்வதீஸ்வரி தற்போது விவாகரத்து ஆன போதும் இன்றும் முன்னாள் கணவர் செல்வேந்திரனின் பெயரையே பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தேவா அம்மா முரளிகிருஸ்ணனுடைய பக்தி மார்க்கத்தில் தன்னுடைய மகள் கௌசல்யாவையும் இணைத்துக்கொண்டுள்ளார். மகளின் கணவரும் இந்த மதக்குழுமத்தில் இணைந்துகொண்டார்.

இவர்களால் உருவாக்கப்பட்டது தான் ஓம் சரவணபவ சேவா ரஸ்ட். இது பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழவின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் நான்கு ரஸ்டிகள் உள்ளனர் அவர்கள்: முரளிகிருஸ்ணன் புலிக்கள் (ஓம் சரவணபவ), தெய்வதீஸ்வரி செல்வேந்திரன் (தேவா அம்மா), கௌசிகா செல்வேந்திரன் (தேவா அம்;மாவின் மகள்), பேராசிரியர் ராம்நாத் நாராணயசாமி (தேவா அம்மாவின் மருமகன்)

கோவிட் பெருநோய் காலத்தில் ஆலயங்கள் பூட்டப்பட்டு ஆலயங்களின் வருமானம் வீழ்ச்சியடையை ஓம் சரவணபவ சேவா ரஸ்டின் வருமானம் எகிறி 2021இல் ஒரு மில்லியனைத் தாண்டியது. இது உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட கணக்கு அறிக்கை. இந்த ரஸ்டின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் கணக்காளர் ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் இதற்குள் வராத பணம் இதனைக் காட்டிலும் பத்து மடங்கு இருக்கும் எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அதாவது பத்து மில்லியன் பவுண்கள் இந்தக் குழுமத்திடம் இருப்பதாகக் கணிப்பிட்டார்.

ஏன் ஓம் சரவணபவனிடம் செல்கின்றனர்?

ஆரம்பத்தில் யாருக்கும் ஓம் சரவணபவனுடைய பின்னணி தெரிந்திருக்கவில்லை. ஓம் சரவணபவனிடம் மற்றவர்களைக் கவருகின்ற ஒரு ஆளுமை இருப்பதாகக் குறிப்பிடுகின்றார், தனியனாக தன்னுடைய இரு விசேட தேவைகளுடைய பிள்ளைகளையும் வளர்த்து வரும் ஆன்மீக ஈடுபாடுடைய ஒருவர், அவர் மேலும் குறிப்பிடுகையில் அவர் பேச்சாற்றலுடையவராகவும் மற்றையவர்களோடு பேசுகின்ற போதே அவர்களை மதிப்பீடு செய்து பேசக்கூடியவராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இவற்றுக்கும் மேலாக எவ்வாறோ மற்றையவர்களின் மனப்பதிவுகளை வாசிக்கவும் செய்கின்றார் என்கிறார், ஓம்சரவணபவ தன்னுடைய கடந்த காலம் பற்றிக் மிகத்துல்லியமாகக் குறிப்பிட்டதாக தேசம்நெற் இடம் அவர் தெரிவித்தார். இது போன்ற காரணங்களாலும் பெரும்பாலானவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாலும் இழுத்தங்களுடன் வாழ்வதாலும் அவர் மீது ஈர்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தான் ஈர்க்கப்பட்டதற்கு தன்னுடைய நெருக்கடிகளும் தனக்கிருந்த அழுத்தங்களும் கூடக் காரணம் என்றவர் அவரிடம் இருந்த சில திறமைகளை அவர் மிகச் சாதுரியமாகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். பல பெண்கள் அவரிடம் செல்வதற்கு அவர்கள் முகம் கொடுக்கும் குடும்ப நெருக்கடிகளும் மன அழுத்தங்களுமே காரணம் என்கிறார் அவர்.

ஏன் செல்வந்தர்கள் விட்டில் பூச்சிகளாக ஓம் சரவணபவனிடம் வீழ்ந்தனர்?

பணம், அது இல்லாதவர்களுக்கு, பணம் குறைவாக உள்ளவர்களுக்கு அதனை அடைவது அவசியமானது. அது உந்துதலைக் கொடுக்கும். அதனை அடைவது ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் பணம் படைத்தவர்களுக்கு பணம் பெருக்குவது கிளர்ச்சியையோ மகிழ்ச்சியையோ குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படுத்துவதில்லை. அதனால் அவர்கள் அந்தக் கிளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் வெளியே தேடுவார்கள். போதைப்பொருள் (drugs), கம்பிளிங் (gambling), சொப்பிங் (shopping), பார்டியிங் (partying) என்று அதில் ஆன்மீகமும் ஒன்று. ஆனால் இவர்கள் தங்களுக்குள்ள பண அந்தஸ்தை பயன்படுத்தியே அக்கிளர்ச்சியைத் தேடுவார்கள். அதன் மூலம் ஒரு சமூக அங்கிகாரத்தையும் அந்தஸ்தையும் விரும்புவார்கள். இந்தச் செல்வந்தர்களின் இந்தப் பலவீனத்தை ‘ஓம் சரவணபவ’ முதலீடாக்கியது. ‘ஓம் சரவணபவ’ மட்டுமல்ல சுவாமி பிரேமானந்தா, நித்தியானந்தா, மேல்மருவத்தூர் அம்மா சாமி, சற்குரு ஜக்கி முதல் ஆலயங்களில் உள்ள ஐயர்கள் வரை எல்லோரும் இந்தச் செல்வந்தர்களில் அல்லது செல்வந்தர்களாக தங்களை பாவனை செய்ய விரும்புபவர்களை இந்த ரெக்னிக்கை வைத்துத் தான் வீழ்த்துகிறார்கள்.

இதனையே ஓம் சரவணபவ மிகக் கச்சிதமாக பயன்படுத்தினார். உங்களுக்கு என்ன தெரியும் என்பது முக்கியமல்ல உங்களுக்கு யாரைத் தெரியும் என்பது தான் முக்கியம். லண்டனில் கும்பிடுவதற்கு சாமியில்லாமல் கேரளாவரை சென்று தரிசனம் பெற்ற தெய்வதீஸ்வரியை கணக்குப் பண்ணி வளைத்துப் போட்டார் ஓம் சரவணபவ. ஒரு வர்த்தகப் பிரமுகரின் மனைவியாக இருந்தவரின் நட்புவட்டம் குசெலினிகளாக இருக்க வாய்ப்பில்லை. தெய்வதீஸ்வரி ‘நான் பெற்ற இன்பம் பெறுக செல்வந்தர்காள்! என்று லண்டனில் உள்ள தமிழ் வர்த்தகப் புள்ளிகளுக்கு ஓம் சரவணபவாவை அறிமுகப்படுத்தினார். சாமியை வீட்டுக்கு அழைத்து புஜை நடத்துவது செல்வந்தக் குடும்பங்களின் மத்தியில் அவர்களின் அந்தஸ்தை உயர்த்தியது.

கிளேஹோலில் (Clayhall) நடந்த இவ்வாறான பூஜையில் ஒரு குடும்பத்தினரைக் கொண்டு இறக்கிவிட்ட ரக்ஸி றைவர் (taxi driver) தேசம்நெற் க்கு தெரிவிக்கையில் ஓம் சரவணபவவை வீட்டுக்கு அழைத்த குடும்பத்தினர் அவருக்கு 2,500 பவுண்கள் வழங்கியவையாம். அந்தப் பூஜைக்கு வந்திருந்த குடும்பங்கள் 500, 1000 பவுண்கள் என்ற வழங்கியவையாம் என்றார். அன்றைய இரு மணிநேரத்தில் ஓம் சரவணபவவின் கலெக்சன் 10,000 பவுண்கள் என்றும் தெரிவித்தார். ‘சுவாமியின்’ காலைக் கழுவிக் குடித்ததற்கு கட்டணம் 10,000 பவுண்கள்.

லண்டனின் பெரும் வர்த்தகப் புள்ளிகள் சாமியின் வலையில் வீழ்ந்தனர். லைக்கா மோபைல் நிறுவனத்தின் முக்கியஸ்தர் பிரேம், சம்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுரேன், மற்றும் வர்த்தக உரிமையாளர்கள், கணக்காளர்கள், மருத்துவர்கள் என்று பணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பலர் ஓம் சரணவபவ வுக்கு ‘ஓ’ போட்டனர். அவர்களுடைய துணைவியரும் அவர்களோடு சேர்ந்து ‘ஓ’ போட்டனர். அவருடைய காலைக்கழவிக் குடித்தனர். தாங்கள் குடித்தது காணாது என்று அவரை புங்குடு தீவு, நயினா தீவு என்று இலங்கைக்கு கூட்டிச் சென்று அங்குள்ளவர்களுக்கும் குடித்துக் காட்டி அவர்களையும் அந்தக் கால் கழுவிய தண்ணியைக் குடிக்க வைத்தனர்.

எவ்வாறு ஓம் சரவணபவ நிர்வாணமானார்?

ஓம் சரவணபவ ஹரோவில் உள்ள பிரிஸ்டன் ரோட்டில் கடை விரித்தார். ஆச்சிரமம், கோயில் கட்டினார். படுக்கையும் விரித்தார்.

பக்தைகள் ஆச்சிரமத்தில் கூடிய நேரம் செலவழித்தனர். கணவன்மாருக் கதைப்பதற்கு நேரமும் பொறுமையும் இல்லை. சாமிக்கு வேலையா வெட்டியா காலை நீட்டிக்கொண்டு நல்லா கதை கேட்டார். அவர்களுக்கு கதை விட்டார். முருகப்பெருமானோடு ஐக்கியமாக்கினார் ஓம் சரவணபவ! யாமிருக்கப் பயமேன்!! சில குடும்ங்களையும் பிரித்து மேய்ந்தார் என்று தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

“களவு செய்துவிட்டு அதனைவிட்டுவிட்டால் பிடிபடுவது கஸ்டம் என்பது வர்த்கர்கள் நன்கு அறிந்த தொழில் ரகசியம். ஓம் சரவணபவவிற்கு ஓவர் கொன்பிடன். அல்லது அவரும் செல்வம் – செல்வாக்கு – செக்ஸ் என்ற போதைகளுக்கு அடிமையானார். இப்போது சாமிவேசம் குறைந்து சுயரூபம் வெளிவரத் தொடங்கியது. அவருடைய நடவடிக்கைகள் எல்லை மீறியது” என்கிறார் எட்ச்வெயரைச் சேர்ந்த ரரின் சொக்கலிங்கம்.
“மிகக் கீழானவர்களை விமர்சிக்க தமிழர்கள் ஒரு மோசமான சொல்லாடல் வைத்துள்ளனர். ‘சாப்பிட்ட கோப்பையிலேயே பேழ்கிறான்’. அது தான் ஓம் சரவணபவ மாட்டக் காரணம். பெரும்புள்ளிகளின் குடும்பங்களிலேயே, அக்குடும்பப் பெண்களிலேயே, அவர்களின் பிள்ளைகளிலேயே கை வைத்தார் ஓம் சரவணபவ. அப்போது தான் அவருக்கு ஏழரைச் சனி ஆரம்பித்தது. மற்றவர்களுக்கு நடக்கும் போது கண்டும் காணாமல் இருந்தவர்கள் தங்கள் குடும்பங்களில் என்றதும் பதறினர். அதே சமயம் தங்கள் குடும்ப உறுப்பினர்களது பெயர் வெளிவராமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஓம் சரவணபவாவுடன் லைக்காவுக்கு என்ன சம்பந்தம்?

ஓம் சரவணபவா பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாதவர்களின் ஆன்மீக குரு. அந்த வலையில் லைக்கா சுபாஸ்கரனின் வலது கரமான பிரேம் மற்றைய செல்வந்தர்கள் போல் வீழ்ந்தார். தன்னுடைய வீட்டுக்கும் ஓம் சரவணபவவை அழைத்து காலைக் கழுவிக்கு குடித்தார். மற்றைய செல்வந்தர்கள் போல் தன்னுடைய வங்கிக் கணக்கும் இரட்டிப்பாகும் புண்ணியம் கூரையை பிய்த்துகொண்டு வளரும் செய்த பாவம் செய்கின்ற பாவம் செய்யப் போகும் பாவம் எல்லாவற்றிலும் இருந்தும் விடுதலை கிடைக்கும் என்று மற்றவர்களைப் போல் தானும் நம்பினார். அது மட்டுமல்லா சுபாஸ்கரனும் ஓம் சரவணபவ சுவாமியை தன் வீட்டுக்கும் அழைத்து அதையே செய்தார். விஸ்கி அடித்த கூட்டம் சரவணபவனின் கால் கழுவிய தண்ணி அடித்தது.

இப்போது இந்த வழக்கு விடயத்தில் லைக்கா தொடர்ந்தும் மௌனமாகவே உள்ளது. இது பற்றி பேராசிரியர் பெக்கோ என்ற புனைப்பெயரில் எழுதிவருபவர் நகைச்சுவையாக வருமாறு குறிப்பிட்டார்: “ஓம் சரவணபவ சுவாமியின் வழக்கை சுபாஸ்கரன் சுவாமியும் பிரேம் சுவாமியும் நடத்துவதாக முன்னாள் போட்டியாளரான லெப்ரா பாஸ்கரன் சுவாமி ஐபிசி ஊடாக கசியவிடுவதாக ஒரு தகவல். லைக்காவின் அபிமானி கண்ணன் சுவமி அதிர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதகமாக லைக்காவைக் காப்பாற்ற நாலுவரி போட ஹரோ ஜெ சுவாமி பொங்கி எழ லண்டனில் சுவாமிகளின் மோதல் உக்கிரமடைந்துவிட்டது. இதுக்குள் தேவா அம்மா இடையாள சைக்கிளோடி ஆட்டையைப் போட்டுவிட்டா என்று ஜெவாலு சாமி பீலிங்கில தண்ணி அடிக்கிறார். சுவாமியின் கால் கழுவின தண்ணியல்ல.”

அடுத்தது என்ன?

ஓம் சரவணபவனினால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறைந்தது மூவர் முரளிகிருஸ்ணன் புலிக்கள்க்கு எதிராக குற்றம்சுமத்தியுள்ளனர். பாலியல் வல்லுறவு, பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் முரளிகிருஸ்ணன் புலிக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இவர்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டும் உள்ளது.
யூன் 12ம் திகதி ஈலிங் மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் முரளிகிருஸ்ணன் புலிக்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. அவருக்கு பிணையும் மறுக்கப்பட்டது.

அதற்கு ஒரு மாதத்திற்குப் பின் யூலை 10 ஹரோ கிறவுண் கோர்ட்டில் முரளிகிருஸ்ணன் புலிக்களின் பிணை மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. முரளிகிருஸ்ணன் புலிக்கள் அரச தரப்பின் சாட்சியங்களை தொந்தரவு செய்வார் என்ற அச்சத்தின் அடிப்படையிலும் பிணை மறுக்கப்பட்டிருக்கலாம் என ஓம் சரவணபவ வின் முன்னாள் பக்தர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

முரளிகிருஸ்ணன் புலிக்களின் வழக்கு டிசம்பர் 5 முதல் ஆறு நாட்கள் நடைபெறுவதற்கு திகதியிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முரளிகிருஸ்ணன் புலிக்கள் விடுதலையாவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகவும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டால் தண்டனைக்காலம் முடிவடைந்ததும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படுவார் என்றும் சட்டவல்லுனர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

முரளிகிருஸ்ணன் புலிக்கள் பிணை மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது அவருடைய வழக்கில் பல்வேறு நெருக்கடிகளையும் ஏற்படுத்தி இருக்கும் ஏனெனில் பொது அமைப்புகளின் ஆணைக்குழுவுக்கு வழங்கிய கணக்கறிக்கையில் அவர்களுடைய பெரும்பாலான சொத்துக்கள் பணம் அல்லது இலகுவில் பணமாக்கக் கூடியதாகவே உள்ளது. மேலும் கணக்கறிக்கைக்கு புறம்பான பெருமளவு நிதியும் வெளியே உள்ளது. இவற்றில் பெருமளவு பங்கை தேவா அம்மா என்ற தெய்வதீஸ்வரியே கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இந்த வழக்குக்கான செலவை யார் செலவு செய்கின்றார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஓம் சரவணபவ சேவா ரஸ்ட் செலவழிக்கின்றதா அல்லது லைக்கா போன்ற பக்தர்கள் செலவு செய்கின்றார்களா? ஓம் சரவணபவவின் கணக்குக்கு உட்பட்ட உட்படாத பல மில்லியன் அசையும் அசையா சொத்துக்களுக்கு என்ன நடக்கும்? இவ்வாண்டு முடிவுக்குள் பல முடிச்சுகள் அவிழும். பல முடிச்சவிக்கிகளும் வெளித் தெரிவார்கள்.

லண்டனில் தமிழர்கள் மத்தியில் இவ்வாண்டு நீதிமன்றம் வந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் லண்டனின் செல்வச் செழிப்பு மிக்க பகுதிகளான ஹரோ பார்னற் பகுதியில் இருந்தே வந்துள்ளது. தற்போது ஓம் சரவணபவ சுவாமியும் அவ்விடத்திலேயே கோயில் ஆச்சிரமம் வைத்து வாழ்பவர். பிரேமகுமார் ஆனந்தராஜா, சுப்பிரமணியம் சதானந்தன் ஆகியோர் ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்கள். யாழ் இந்ததுக்கல்லூரி பழைய மாணவர்கள் பள்ளி நண்பர்கள். அப்பிரதேசத்திலேயே வாழ்ந்தவர்கள். பிரேமகுமார் ஆனந்தராஜா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பின்பும் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கிய ஆன்மீக கனவான்களும் கனவாட்டிகளும் இந்தப் பிரதேசத்திலேயே வாழ்கின்றனர்.

இப்பகுதியில் இன்னும் சில ஆன்மீக வாதிகள், கலைஞர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வைத்தால் தங்களையே தூற்றுவார்கள் என்பதால் பல இளம்பெண்கள் தங்கள் மௌனத்தை கலைக்கத் தயங்குவதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகின்றது.

பாலியல் குற்றவாளி பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு 42 பேர் நற்சான்றிதழ் வழங்கியமை ஏற்கனவே தேசம்நெற் இல் அம்பலப்படுத்தப்பட்டது. தற்போது முரளிகிருஸ்ணன் புலிக்கள்க்கும் ஆதரவாக பலர் செயற்பட்டு வருகின்றனர். தங்களுடைய தேவைகளை லாபங்களைக் கருதாமல் அனைத்து வகையான பாலியல் சுரண்டல்கள், பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் எதிரான எண்ணம் அனைவரிடமும் ஏற்பட வேண்டும்.

லூட்டன் (பிரித்தானியா) பொதுப் பூங்காவில் தமிழ் கடைக்காரரின் உடல் மீட்பு! கொலையா? தற்கொலையா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை!

யாழ் சாவகச்சேரி சரசாலையைச் சேர்ந்த கந்தசாமி பிரபாகரன் (39) என்ற கடைக்காரர் ஒருவரின் உடல் மார்ச் 17ம் திகதி லூட்டன் எல்யூ 1 (LU1) என்ற பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டதாக தேசம்நெற்க்கு தெரிய வருகின்றது. தனது கடைக்கு பொருட்களை வாங்குவதற்கு மொத்தக் கொள்வனவாளர்களிடம் சென்றவர் மார்ச் 17ம் திகதி சடலமாக மீட்கப்பட்டதாக கொல்லப்பட்டவரின் சகோதரருக்கு நெருக்கமான நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இது பற்றி தேசம்நெற்குத் தெரியவருவதாவது பிரபாகரன் மார்ச் 17 காலம் தாழ்த்தி காலையுணவை முடித்துக்கொண்டு கடைக்கு பொருட்களைக் கொள்வனவு செய்ய, அங்குள்ள மொத்தக் கொள்வனவு நிலையத்துக்கு செல்வதாகக் கூறி வெளிக்கட்டுள்ளார். பிரபாகரன் நீண்ட நேரமாக வராததினாலும்; தொலைபேசிக்கு பதிலளிக்காததாலும்; மற்றையவர்களுக்கும் தொடர்புகொண்டு விசாரித்தும் பதிலில்லாத நிலையில், அவருடைய மனைவி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பொலிஸார் பின்னர் இவருடைய தொலைபேசியின் சிக்னலைக்கொண்டு அது இருக்கும் இடத்தை அடைந்துள்ளனர். அன்றைய தினம் இரவு பிரபாகரனின் உடல் தூகிடப்பட்டநிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டது என அந்நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

பிரபாகரன் கந்தசாமி எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு வந்தவர். யாழ் சாவகச்சேரியில் ஓரளவு வசதியான வர்த்தகக் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய சகோதர் அதற்கு முன்னரேயே லண்டன் வந்தவர். அவர் கடையை நடத்தி வந்தார். அதன் பின் பிரபாகரனும்; ஒரு கடையை ஆரம்பித்தார். பிரபாகரன் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி அவருக்கு நான்கு வயதில் ஒரு குழந்தையும் ஒன்றரை வயதில் ஒரு கைக் குழந்தையும் உண்டு. குடும்பம் மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் இருந்ததாகவும் தற்கொலை செய்வதற்கான எந்தக் காரணமும் குடும்பத்தில் இருக்கவில்லை என்றும் அக்குடும்பத்திற்கு நெருக்கமான மற்றொருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

பிரபாகரனின் உடல் கண்டெடுப்பதற்கு சிறிது காலம் முன்பாக அவர் கெபாப் (Kebab) உணவகமொன்றுக்கு சென்றிருந்ததாகவும் அங்குள்ளவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்ததாகவும் பிரபாகரனின கடைக்கு அருகில் கடை நடாத்திவரும் இன்னுமொரு கடைக்காரர் தேசம்நெற்குக்குத் தெரிவித்தார். இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானவருக்கு குறிப்பிடத்தக்க அளவு காயங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டு இருந்ததாகவும் அக்கடைக்காரர் மேலும் குறிப்பிட்டார். இது தொடர்பாக தேசம்நெக்கு மேலும் ஒரு உறுதிப்படுத்தப்பட முடியாத தகவலும் கிடைத்தது. அதன்படி பிரபாகரன் தாக்குதலுக்கு உள்ளானவர்களைச் சந்தித்து வழக்கில் இருந்து வெளியேறுவதற்கு பேச்சுவாரத்தையில் ஈடுபட்டதாகவும் செல்லப்படுகிறது. இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

இளம் குடும்பஸ்தரான உயிரிழந்த பிரபாகரன், சாவகச்சேரியில் பல உதவித்திட்டங்களை மேற்கொண்டுவந்ததாகவும் அவர் மிகுந்த சமூக அக்கறை கொண்டவர் என்றும் தெரியவருகின்றது.

சில ஊடகங்கள் இதனை ஒரு படுகொலை என்று தீர்க்கமானதாக செய்தி வெளியிட்டுள்ளதுடன் அப்படுகொலை ஹரோவில் வெறிச்சோடிய பகுதியில் நடைபெற்றதாகவும் ஹெரோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் முற்றிலும் தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர்.

பிரபாகரனின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் லூட்டன் பொலிஸார் எவ்வித தகவல்களையும் யாருடனும் பரிமாற வேண்டாம் என குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகின்றது. பிரேத பரிசோதணையின் பின்னரேயே இம்மரணம் தொடர்பில் வேறு யாரும் தொடர்புபட்டுள்ளனரா என்பதை பொலிஸாரல் உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும். இம்மரணம் தொடர்பில் லூட்டன் பொலிஸார் எவ்வித அறிக்கையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை.

பல்கலைக்கழக மாணவியை சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆனந்தம் கிரியேசன் ஆனந்தராஜவுக்கு 30 மாதங்கள் சிறை!!!

பெப்ரவரி 2இல் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசாமிக்கு 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அறியாப் பருவத்தில் பெண் பிள்ளையை தன் பாலியல் இச்சைக்கு உட்படுத்திய தமிழ் வர்த்தகப் பிரமுகரான பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கே 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பிரேமகுமார் ஆனந்தராஜா ( Anandarajah Bremakumar ) வுக்கு எதிரான பாலியல் இம்சைக் குற்றச்சாட்டு டிசம்பர் முற்பகுதியில் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு இருந்தது முதற் தடவையாக தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. வூட் கிரீன் கிரவுண் நீதிமன்றில் நடந்த பிரேமகுமார் ஆனந்தராஜாவின் வழக்கின் முடிவில் இன்று பெப்ரவரி 02இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு 30 மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவருடைய பெயர் பாலியல் துஸ்பிரயோகம் செய்வோர் பட்டியலிலும் சேர்க்கப்படும் எனவும் அதனால் இவர் சிறுமிகள் சிறுவர்கள் உள்ள பொது இடங்களில் நடமாடவும் தடை செய்யப்படும் எனவும் தெரியவருகின்றது.

அறுபத்தியொரு வயதான பிரேமகுமார் ஆனந்தராஜா சம்பந்தப்பட்ட சிறுமியைவிடவும் ஏனைய சிலருடனும் தவறாக நடந்துகொண்டவர் என்றும் அனால் மற்றையவர்கள் நீதிமன்று வரை செல்லவில்லை எனவும் தெரியவருகின்றது. பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு டயபிற்ரீஸ் மற்றும் நோய்க் காரணங்களைச் சுட்டிக்காட்டி அவருக்கு வழங்கப்பட்ட தண்டணை மனிதாபிமான அடிப்படையில் 30 மாதங்களுக்குக் குறைக்கப்பட்டது. தண்டனை வழங்கும் போது தனது குற்றத்தை பிரேமகுமார் ஆனந்தராஜா ஒத்துக்கொண்டிருக்க வேண்டும் என நீதிபதி சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. மேலும் குற்றவாளியின் தரப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய தாயின் நன்நடத்தையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடந்துகொண்டதையும் நீதிபதி வன்மையாகக் கண்டித்திருந்தார்.

பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மனைவி, சகோதர சகோதரிகள் மற்றும் ஆச்சுவே ஆலயம் சார்ந்தவர்கள் அவருடைய மோசமான பாலியல் துஸ்பிரயோகத்தை அறிந்திருந்தும் அவருக்கு சாதகமாகச் செயற்பட்டனர். இவருடைய தங்கைகளில் ஒருத்தி அண்ணனுக்கு கொஞ்சக்காலம் தான் தண்டனை கொடுக்கப்பட்டு உள்ளது என்று அதற்குள் பெருமையடித்துள்ளார். பிரேமகுமார் ஆனந்தராஜா இவ்வாறான மோசமான பாலியல் துஸ்பிரயோகம் செய்த போதும்: அவருடைய பண வசதி, சமூகத்தில் ஆனந்தம் கிரியேசன் என்ற அமைப்பினூடாக பரதநாட்டியம், அரங்கேற்றம் போன்ற நிகழ்வுகளை நடாத்தி பெற்றுவந்த செல்வாக்கு, ஆலயங்களுக்கு மேளம் நாதஸ்வரம் போன்ற இசைக் கலைஞர்களை வரவழைத்துக் கொடுப்பது என்று பிரேமகுமார் ஆனந்தராஜா சமூக அந்தஸ்தைப் பெற்றிருந்தார். அதனைப் பயன்படுத்தியே இவர் இந்தப் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தார்.

2022 டிசம்பர் முற்பகுதியில் இவ்வழக்கில் பிரேமகுமார் ஆனந்தராஜா குற்றவாளியாகக் காணப்பட்டு 2023 பெப்ரவரி 2இல் அவருக்கு தண்டணை வழங்க்பட்ட போதும் இவ்வழக்கின் வரலாறு 13 ஆண்டுகள் நீண்டது. 2010இல் அப்போது 13 வயதேயான குழந்தையான சிறுமிiயையே பிரேமகுமார் ஆனந்தராஜா அவளே அறியாத பருவத்தில் துஸ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மனைவியும் மிக நெருங்கிய நண்பிகள். பாதிக்கப்பட்ட சிறுமியின் பூப்புனித நீராட்டுவிழாவில் கூட அக்குழந்தையின் தாய்மாமனாகவும் மாமியாகவும் ஆனந்தராஜா தம்பதிகளே அழைக்கப்பட்டுடிருந்தானர். அவ்வளவு நம்பிக்கையோடு பழகியவர்களின் வீட்டுச் சிறுமியையே பிரேமகுமார் ஆனந்தராஜா அனுபவிக்க முற்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் சிநேகிதி தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். 2010இல் சிறுமிக்கு 13 வயதாக இருக்கும் போதே இத்துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றது. ஆனாலும் அது வேறு யாருக்குமே தெரியாது.

சிறுமி தனது 21வது பிறந்த தினத்தன்று தாயாருக்கு தனக்கு ஏற்பட்ட அக்கொடிய அனுபவங்களை சொல்லியுள்ளார். அதனைக் கேட்டு கதிகலங்கிய தாயார் தன்னுடைய நெருக்கமான தோழியான ஆனந்தராஜாவின் மனைவிக்கு இதனைத் தெரிவித்து நியாயம் கோரியுள்ளார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம் கெஞ்சி மன்றாடிய ஆனந்தராஜாவின் மனைவி தன்னுடை பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் அதற்கு அப்பால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவிடாமல் தடுத்தார்.

அதன் பின் மருத்துவத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண், ஒரு விரிவுரையின் போது பெண் பிள்ளைகள் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாவதை எவ்வாறு அறிந்துகொள்வது என்பது பற்றிய விரிவுரை நடந்தது என்றும் அதன் போது சம்பந்தப்பட்ட பெண் அழ ஆரம்பிக்கவே பல்கலைக்கழகம் அப்பெண்ணின் நிலையை உடனேயே அறிந்து கொண்டனர். பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அன்று சந்தேக நபரான பிரேமகுமார் ஆனந்தராஜாவை விசாரணைக்கு வருமாறு கோரியும் இருந்தனர். அப்போது மருத்துவத்துறையில் பயின்று கொண்டிருந்த அப்பெண் தன் கல்வி முன்னேற்த்தை எதுவும் தடைப்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக நடவடிக்கையில் இறங்கவில்லை. தன்னுடைய இறுதித்தேர்வின் இறுதிப் பரிட்சையையும் முடித்துக்கொண்ட பின் நேரடியாக் பொலிஸாரிடம் சென்று பிரேமகுமார் ஆனந்தராஜா மீதான குற்றச்சாட்டை மீள்புதுப்பிக்கும்படி கோரி; பொலிஸாருக்கு முழமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

அதனைத் தொடர்தே பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கி சந்தேக நபரைக் கைது செய்து அவர் குற்றவாளி என்பதையும் நிரூபித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணோடு கூடப் படித்தவர் இது பற்றித் தெரிவிக்கையில் “அவர்கள் அனுபவித்த துயரை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது” எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பாதிப்பு வலியுடன் இருக்கின்ற போது பிரேமகுமார் ஆனந்தராஜாவை காப்பாற்றும் சில முயற்சிகளிலும் சில சமூகப்பெரும் புள்ளிகள் ஈடுபட்டுள்ளனர். அது பற்றி பாதிக்கப்பட்டவர் “இவங்களுக்குள்ளையா நாங்கள் வளர்ந்தனாங்கள்” என்று மனம் வெதும்பியதாக அப்பெண்ணின் சிநேகிதி தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இவ்வழக்கு தொடர்பான மேலதிக விபரங்கள் அடுத்த பதிவில்.

காண்டீபன் அமிர்தலிங்கம் – ஒரு அரசியல் ஆளுமையின் இழப்பு!

காண்டீபன் அமிர்தலிங்கம் இன்று காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டது மட்டுமல்ல தமிழீழ இராணுவம் என்ற அமைப்பையும் இவர் கட்டமைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்தார். ஈரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று இயற்கை எய்தியதாக தமிழீழ விடுதலைக் கூட்டணி நண்பர்கள் தெரிவித்தனர். தமிழரசுக் கட்சி தமிழ் காங்கிரஸ்சோடு சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி அதன் தலைவராகி எதிர்க்கட்சித் தலைவருமானவர் இவருடைய தந்தையார் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். இலங்கைத் தமிழர்களிடையே அரசியல் குடும்பமாக மிகவும் அறியப்பட்டது அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி குடும்பத்தினர். இவர்களுடைய மூத்தமகனே காண்டீபன் அமிர்தலிங்கம். இவருடைய இளைய சகோதரர் பகீரதன் அமிர்தலிங்கம் மருத்துவர் லண்டனில் வாழ்கின்றார். இந்த அரசியல் குடும்பத்தில் இறுதியாக எம்மத்தியில் வாழ்பவர் இவர் மட்டுமே.

காண்டீபன் இலங்கைத் தமிழ் அரசியல் வேகமாக கொதிநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையிலேயே பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கின்ற காலத்திலேயே தாயும் தந்தையும் அரசியல் போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தப் பின்னணியில் வளர்ந்த காண்டீபன் தீவிர அரசியலில் விருப்பம் கொண்டதில் ஆச்சரியம் இல்லை. வே பிரபாகரன் யாழ்ப்பாண மேயர் துரையப்பாவை படுகொலை செய்யத் திட்டம் போட்ட காலங்களில் காண்டீபனும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். வே பிரபாகரனும் காண்டீபனும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அமைப்பில் இருந்த தீவிர செயற்பாட்டாளர்கள். நெருங்கிய நண்பர்கள். அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கு பிரபாகரன் மீது அபரிதமான நம்பிக்கையும் நெருக்கமும் இருந்தது. பிரபாகரன் அல்பேர்ட் துரையப்பாவை படுகொலை செய்ததும் இந்தக் குழு தலைமறைவானது. அவ்வாறு தலைமறைவானவர்களில் காண்டீபனும் ஒருவர்.

மேயர் துரையப்பாவின் கொலையை புதிய தமிழ் புலிகள் உரிமை கோரினர். அத்தோடு தமிழ் இளைஞர்களுக்கு இடையே தலைமைத்துவப் போட்டிகளும் தலை தூக்க ஆரம்பித்துவிட்டது. தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் என்பன ஓரளவு அமைப்பு வடிவம் பெற ஆரம்பித்துவிட்டது. இந்த இயக்கங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வந்த நிலைசற்றறு நெகிழ்ச்சி பெறத் தொடங்கிவிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியை இந்த அமைப்புகள் விமர்சிக்கவும் ஆரம்பித்து விட்டன. அச்சமயத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சொல்லுக்கு கட்டுப்பட்ட ஒரு இராணுவக் கட்டமைப்பு இருந்தால் நல்லது என்ற எண்ணம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இருந்ததாகவும் அவ்வாறான ஒரு அமைப்புக்கு தங்களோடு மிக நெருக்கமாக இருக்கும் இந்தியா பூரண ஆதரவு வழங்கும் என்று அவர்கள் நம்பியுள்ளனர். இந்தப் பின்னணியில் ‘தமிழீழ இராணுவம்’ என்ற அமைப்பை காண்டீபன் உருவாக்கினார்.

இந்த அமைப்பு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அ அமிர்தலிங்கத்தின் ஆதரவோடு உருவாக்கப்பட்டது என்ற பரவலான அபிப்பிராயம் இருந்த போதும் அமிர்தலிங்கம் அதனைக் கடுமையாக எதிர்த்ததாகவும் அவருடைய ஆதரவு இல்லாததால் அவ்வமைப்பு முளைவிட முன்னரே கிள்ளி எறியப்பட்டுவிட்டதாகவும் அன்றைய காலத்தில் காண்டீபனுடன் தொடர்பில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

காண்டீபன் வன்முறை அரசியலில் நாட்டம் கொள்ள குடும்பத்தினர் இவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இருந்தாலும் இவருடைய அரசியல் நாட்டம் வெளிநாட்டிலும் தொடர்ந்தது. காண்டீபன் அரசியல் தஞ்சம்கோரி முதலில் ஐரோப்பாவுக்கு பிரான்ஸ்க்கு புலம்பெயர்ந்தார். பின்னர் லண்டனுக்கு வந்தார். பிரான்ஸ்ம் மனிதவுரிமைகள் சாசனத்திற்குக் கட்டுப்பட்ட, அரசியல் தஞ்சம் கோருக்கூடிய நாடு என்ற வகையில் பிரித்தானியா அவரை மீண்டும் பிரான்ஸ்க்கு நாடு கடத்தியது. அதன் பின் பிரபல சட்டத்தரணி ரொனி பற்றரசன் அவருடைய வழக்கை எடுத்து நடாத்தி காண்டீபனை லண்டனுக்கு எடுத்தார்.

லண்டன் வந்த காண்டீபன் மேயர் அல்பேர்ட் துரையப்பா கொலைசெய்யப்பட்டபின் தலைமறைவாகி இருந்தது பிரபாகரனின் மைத்துனியின் வீட்டில். அத்தலைமறைவின் போது மலர்ந்த காதல் பின் லண்டனில் திருமணத்தில் முடிந்து அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் கிடைத்தது. காண்டீபன் லண்டன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப்பாளராகச் செயற்பட்டார். அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையின் தலைவராக சிருனிவாசனும் செயலாளராக பொன் சிவசுப்பிரமணியமும் இருந்தனர்.

துரதிஷ்டவசமாக அடுத்தடுத்த தலைமுறையினரின் பொது வாழ்க்கை மட்டுமல்ல அதன் தாக்கத்தால் தனிப்பட்ட வாழ்;கையும் போராட்டமாகவே மாறியது. பலர் கல்வியைத் தொடர முடியவில்லை. அவ்வாறு காண்டீபன் பிறந்து வளர்ந்தது மட்டுமல்ல அவருடைய போராட்டம் இறுதிவரை தொடர்ந்தது.

இந்தப் பின்னணியில் 1989 யூன் 13 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது பற்றி திருமதி மங்கையற்கரசி ஒருதடவை குறிப்பிடுகையில் “பிரபாகரனிடம் துப்பாக்கியைக் கொடுத்து அவரைச் சுடு என்று சொன்னால், ஒரு போதும் பிரபாகரன் சுட்டிருக்கமாட்டார்” என்று கூறி இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது வைத்திருந்த அபார நம்பிக்கை காரணமாக அவர்கள் ஆயுதங்களுடனேயே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதன் விளைவு அன்று அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு படுகொலை செய்த சம்பவம் இதுமுதற் தடவையுமல்ல. இது முற்றுப்புள்ளியுமல்ல.
அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கு அவர் கொல்லப்பட்டது என்பதற்கும் அப்பால் தமிழீழ விடுதலைப் புலிகள் அவரைப் படுகொலை செய்தமை மிகவும் தனிப்பட்டவகையில் அவர்களைத் தாக்கியது. ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம்’ செய்ததாகவே கருதுகின்றனர். விடுதலைப் புலிகளின் பயிற்சிகளில் நம்பவைத்து கழுத்தறுக்கும் இவ்வகையான மனிதநேயமற்ற செயற்பாடுகள் அவவமைப்பில் இருந்த சில உறுப்பினர்களால் இன்றும் கடைப்பிடிக்கப்படுவதைக் காணலாம்.

அமீரின் மறைவுக்குப் பின் சிவசிதம்பரம் அவர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள மங்கையற்கரசி அமிர்தலிங்கம் இலங்கை சென்றிருந்தார். அப்போது தமிழ்ச்செல்வன் அவரின் பக்கத்தில் அமர்ந்துகொண்டார். “அவரை என்னத்துக்காக கொலை செய்தீர்கள்” என்று கேட்டபோது தமிழ்ச்செல்வன் பதிலளிக்கவில்லை என அவர் பொதுவெளியில் குறிப்பிட்டு இருந்தார். இதே கேள்வியை முதல் போராளி சிவகுமாரன் மற்றும் சிவசுப்பிரமணியத்தின் தாயார் தன்னுடைய மகனுக்காக பிரபாகரனிடம் கேட்டிருந்ததாகவும் அதற்கு பிரபாகரன், “அதுதன்னுடைய உத்தரவில்லை, அது மாத்தையாவின் செயல்” என்று குறிப்பிட்டதாகவும் பொன் சிவசுப்பிரமணியம் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார்.

மேலும் பிரபாகரன் காண்டீபனின் நண்பனும். அப்படி இருக்கையில் தன் தந்தையை தன்னுடைய நண்பனே கொலை செய்யத் துணிந்தான் என்ற தாக்கமும் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக காண்டிபனின் திருமணமும் முடிவுக்கு வர காண்டிபன் என்ற ஆளுமை தமிழ் அரசியலில் காணாமலேயே போய்விட்டார். வாழ்க்கை போராட்டமாக மது துணையானது.

ஆவரை நான் கடைசியாக அவருடைய தாயாரின் இறுதிக்கிரியைகளில் சந்தித்தேன். பெரிய நெருக்ம் இருக்கவில்லை. ஒரிரு தடவை கண்டிருப்பேன். அன்று அவர் அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினார். இப்பதிவை விரும்பு வெறுப்பில்லாமல் எழுத வேண்டும் என்று தோண்றியது. காண்டீபன் ஒரு வரலாற்றின் சாட்சியம். ஒரு ஆளுமையை தமிழ் சமூகம் இழந்தது. இன்று அவர் பௌதீக உயிர் தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்டது.

அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் அனைவருடனும் என் துயரைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

புலம்பெயர்ந்தோரிடையே கலாநிதிகளும் கல்லாநிதிகளும்: என்.செல்வராஜா

._._._._._.

தமிழர்களின் டொக்டர் மாயையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில கல்வித்துறை வியாபாரிகளும் காசுக்கு இரண்டு டொக்டர்ப் பட்டம் என்று விற்க ஆரம்பிக்க எம்மவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு அதை வாங்கித் தமது பெயருக்கு முன்னால் செருகிக்கொண்டு “நானும் ஒரு டொக்டர் அல்லது கலாநிதி பார்த்தியளே” என்று வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.
._._._._._.

காலம் காலமாகத் ஈழத்தின் தமிழர் சமூகம் கல்வியை முன்நிலைப்படுத்தி வாழும் ஒரு சமூகமாகத் தம்மை இனம்காட்டி வந்துள்ளது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின்கீழ் தொழில் வாய்ப்பைப்பெற்று அரச ஊழியனாகி “கோர்ணமெந்து” உத்தியோகத்தனாகிய தமிழன் சமூகத்தில் முன்நிலைப்படுத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் அரச ஊழியம் படிப்படியாக அடிபட்டுப் போய்விட்டாலும் தமது பிள்ளைகளை டொக்டர், இஞ்சினியர், லோயர், எக்கவுண்டன்ட் என்ற நான்கு கட்டமைப்புகளுக்குள் ஏதாவதொன்றினுள் புகுத்திவிட்டு தான் ஒரு படித்த குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற பெருமையைப் பெற்றுவிடுவதில் தமிழன் உடல் பொருள் ஆவியையும் கொடுக்கத் தயாராகியிருந்தான். தப்பித்தவறி ஒரு குடும்பத்தில் இந்த நாலுக்குள் ஒன்று இல்லாது போனால் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் முக்கித் தக்கி தனது குடும்பத்தில் ஏதாவதொரு தலைமுறையில் இருந்த ஒரு டொக்டரையோ இஞ்சினியரையோ தேடிப்பிடித்து தனது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொண்டான்.

“அட காசுதான் இருக்கு- படிப்பில்லையே” என்ற கவலை கொண்ட இன்னொரு வகைக் காசுக்காரத் தமிழன், சீதனம் என்ற பெயரில் காசைக்கொட்டி இந்த நால்வகை மாப்பிள்ளைகளையும் தன் குடும்பத்துக்கள் விலைக்குவாங்கிச் சேர்த்துக்கொண்டு தன் சமூகத் தரத்தை உயர்த்திக்கொண்டான்.

இந்தக் கூத்துகள் தாயகத்தில் தான் நடந்து முடிந்ததென்றால் இப்போது புகலிடம் வரையும் தொடர்வது தான் வேதனையாக இருக்கின்றது. திறந்த கல்விவசதி, எவருக்கும் பல்கலைக்கழக வாய்ப்பு என்ற நிலை புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ளது. விதம்விதமான புதிய கல்வித்துறைகள் எம் இளஞ்சந்ததியினரின் முன்னே விரிகின்றன. இங்கும் இந்த நால்வகைத் துறைகளையும் மீறித் தன் பிள்ளைகளை சுயவிருப்பத்துடன் வேறு நல்ல துறைகளை நாடவிடாமல் சிறுபிராயம் முதலே மூளைச்சலவை செய்து விடுகிறார்கள் நம்மவர்கள். அதனால் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தாலும், மனமொத்துத் தன் கல்வியைத் தொடரமுடியாமல் பல தமிழ் மாணவர்கள் தம் கல்வியைத் துறப்பதும், தாமதமாகத் தமது துறைகளை மாற்றிக்கொள்வதும் நிகழ்கின்றன.

அடையாளச் சிக்கல்

கல்வியே எமது புலம்பெயர் சமூகத்தின் அடையாளச் சிக்கலாகிவிட்ட நிலை இன்ற காணப்படுகின்றது. அரச பாடசாலைகளிலிருந்து தனியார் கல்வியை நாடுவதும், டியுஷன் படிப்புக்கு பிள்ளைகளைத் தூண்டிவிடுவதும் இந்த நால்வகைத்துறைகளில் ஒன்றுக்குள் குறிப்பாக டொக்டர் இஞ்சினியர் படிப்புக்குத் தம் பிள்ளைகளைத் தயார்செய்வதற்காகத்தான் என்ற நிலை இன்று பரவலாகிவிட்டது.

டொக்டர் என்ற சொல் சமூக அந்தஸ்தில் மிக உயர் ஸ்தானத்தில் வைக்கப்பட்டிருப்பதான ஒரு மாயை காலம்காலமாகத் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. அதை புலம்பெயர்ந்த வந்தவர்களும் தமது பொதிகளுடன் இங்க கொண்டுவந்து சேர்த்துவிட்டார்கள். மற்றவரைப் பெயர்சொல்லிக் கூப்பிடலாம் ஆனால் டொக்டரான ஒருவரைமட்டும் டொக்டர் இன்னார் என்று விழித்தால் தான் கூப்பிட்டவருக்கும் செமிக்கும் – கூப்பிடப்பட்டவருக்கும் செமிக்கும். புகலிடத்தில் டொக்டர்கள் படும் பாட்டை இவர்கள் அறியாதவர்களா என்ன?

இங்குதான் வேறு ஒரு சிக்கல் ஏற்படுகின்றது. டொக்டர் என்ற பதம் மருத்துவத்துறைக்கு மாத்திரமல்லாது அறிவியல்துறையில் முனைவர் பட்டத்தையும் குறிக்கப் பயன்படுவதால் இவர் எந்த டொக்டர் என்று தலையைப்போட்டு உடைத்துக்கொள்ளவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுவிடுகின்றன.

தமிழர்களின் டொக்டர் மாயையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில கல்வித்துறை வியாபாரிகளும் காசுக்கு இரண்டு டொக்டர்ப் பட்டம் என்று விற்க ஆரம்பிக்க எம்மவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு அதை வாங்கித் தமது பெயருக்கு முன்னால் செருகிக்கொண்டு “நானும் ஒரு டொக்டர் அல்லது கலாநிதி பார்த்தியளே” என்று வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

கவிஞர்கள், ஓவியக்காரர்கள், நடன ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் என்று வந்த பிறகு ஐயர்மாருக்கும் கலாநிதிப் பட்டத்தில் ஆசை வந்தவிட்டது. ஐக்கிய அமெரிக்காவின் பாலைவன மாநிலமான அரிசோனாவில் பென்சன் மானிலத்தில் உலகப் பல்கலைக்கழகம் என்று ஒரு பல்கலைக்கழகம் இயங்குகின்றது. Dr. Howard John Zitko வினால் 1946இல் ஏதோ ஒரு புனிதமான நோக்கத்துக்காக தாபிக்கப்பட்டது. இன்று பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகிவிட்ட நிலை அதற்கு. இந்தியாவில் வாரனாசியிலும், மும்பாயிலும், நைஜீரியாவில் எனுகுவிலும் அதன் கிளைகள் இருப்பதாக அதன் இணையத்தளத்தில் காண முடிகின்றது.

காலக்கிரமத்தில் எம்மவர்களில் சிலர் மோப்பம் பிடித்து அந்தப் பல்கலைக்கழகத்தை அணுகி அவர்கள் வழங்கும் Cultural Doctorate பட்டத்தைப் பெற, இன்று சிவனே என்று இருந்தவரெல்லாம் திடீரென்று கலாநிதிப் பட்டத்தைச்சுமக்க ஆரம்பித்து விட்டார்கள். பின்புலம் எதுவுமில்லாமல், திடீரென்று கலாநிதிப் பட்டத்தைத் தபாலில் வாங்கிச் செருகிக்கொண்டால் சமூக அந்தஸ்து கூடிவிடுமா என்ன? கலாநிதிப் பட்டம் என்றால் பொன்னாடையா என்ன?

முத்திரை பதிப்பித்தல்

இப்படித்தான் கனடாவின் தபால் திணைக்களம் கள்ளம் கபடமில்லாமல் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தது. கனேடிய தபால் தலைகளில் உங்கள் புகைப்படத்தைப் பதிந்து நல்ல நாள் பெருநாள்களில் அதை நண்பர்கள் உறவினர்களுக்கு தபாலில் அனுப்பிக் கொஞ்சம் முஸ்பாத்தி பண்ணலாம் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. வீட்டில் புதிய குழந்தை பிறந்ததும், திருமணம் முடித்தால், பிறந்தநாள் கொண்டாடினால், என்று அந்தப் படத்தை கனேடிய உள்ளுர் முத்திரைகளில் பதித்து அதை உறவினர்களுக்கு அனுப்பும் தபால்களில் சட்டபூர்வமான தபால் தலைகளாகப் பயன்படுத்தக் கொஞ்சம் காசை வாங்கிக்கொண்டு அச்சடித்து வழங்கியது.

கொஞ்சக்காலம் எல்லாம் நன்றாக நடந்தது. எங்கள் தமிழரின் மூளை என்ன லேசுப்பட்டதா? அடித்தார்கள் முத்திரை குமார் பொன்னம்பலத்துக்கு. விழா நடத்தி அதை விற்று நிதியும் திரட்டிவிட்டார்கள். குமார் பொன்னம்பலத்துக்கு மட்டுமா முத்திரை அடித்தார்கள். பட்டியல் போடலாம் யார் யாருக்க அடித்தார்கள் என்று. கட்டுரை நீண்டுவிடும். இலங்கையில் வாழ்ந்து மறைந்த பலருக்கும் புகலிடத்தில் பிள்ளைகள் முத்திரை அடித்து இலங்கையில் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி, பண்டிதமணி கணபதிப்பிள்ளை ரேஞ்சுக்குத் தமது தந்தையரையும் கொண்டவர நினைத்தார்கள். நினைத்ததுடன் நிற்காமல் முத்திரையை இலங்கைக்கும் அனுப்பி அதை தமிழ் பேப்பரிலும் அல்லவா செய்தியாக்கி விட்டார்கள். எந்த மாதிரியாக விளம்பரம் இருக்கும் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா? “ ஈழத்தமிழரான அமரர் இன்னாரின் சேவைநலம் பாராட்டி கனேடிய அரசாங்கம் முத்திரை வெளியிட்டு கௌரவித்தது என்றல்லவா போட்டுவிட்டார்கள். அதை இலங்கைப் பத்திரிகைகளும் சந்தோஷமாக ஏன் எப்படி என்று கேள்விகெட்காமல் மீள்பிரசுரம் செய்துவிட்டன.

இதைப்பார்த்துவிட்டு தேசியத் தலைவருக்கு முத்திரை அடிக்கப்போன ஒருவர் பேராசையில் எக்கச்சக்கமான பிரதிகள் கேட்கப் போய் கனடா தபால் திணைக்களம் விழித்துக்கொண்டுவிட்டது.

பிரிட்டனிலும் ரோயல் மெயில் Smilers என்ற புதிய திட்டத்தை அமுலாக்கினார்கள். கனடாக்காரர் பெற்ற அனுபவத்தின் வெளிப்பாடாக இங்கிலாந்தில் முன்எச்சரிக்கையாக நடந்துகொண்டார்கள். முத்திரையில் இடம்பெறுவதற்காக அனுப்பும் புகைப்படம் வேறாகவும், மகாராணியின் இலச்சினை பொறித்த ஒரிஜினல் முத்திரை வேறாகவும் தெளிவாகப் பிரிக்கப்பட்டு அச்சிட முடிவுசெய்தார்கள். யாரும் முத்திரை அடிக்கலாம். 20 தபால்தலைகளுக்குக் குறையாமல் அடிக்கவேண்டும். நல்லவேளை லண்டனில் பெரிதாக இதுவரை யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. குடும்பப் படங்கள் எடுத்துப் பதிந்து மகிழ்வதுடன் சரி.

இந்த விடயங்களை எவரும் இதுவரை சீரியசாக எடுத்ததாகத் தெரியவில்லை. இப்பொழுதும் கௌரவப் பட்டங்கள் வழங்கப்படவும், முத்திரையில் படம் பொறிக்கப்படவும் நடவடிக்கைகள் மும்முரமாக நடந்தபடிதான் உள்ளது. தமிழகத்துக்கு மேடையேறப் போகும் இலக்கியப் பிரமுகர்கள் பெரும்பாலும் ஏதோவொரு பட்டத்துடன் தான் திரும்பி வந்துசேர்கிறார்கள். இந்தக்கட்டுரை எழுதும் இந்த நிமிடத்தில்கூட ஐரோப்பிய நாடொன்றில் அரிசோனா பட்டம் பெற்ற ஒரு இலக்கியவாதிக்கு எழுத்தாளர் சங்கமொன்றினால் விழா எடுக்கப்படுகின்ற செய்தி கிடைக்கிறது. லண்டனில் சிலர் கிடைத்த பட்டத்தை எப்படிப் பேப்பரில் போட்டு சனத்துக்குத் தெரியப்படுத்துவது என்று தலையைச் சொறிந்துகொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் விரைவில் அம்பலத்துக்கு வரத்தானே செய்யும்.

பட்டம் தான் ஒருவனை சமூகத்தில் உயர்ந்த மனிதனாக்குமா? பட்டம் பெற்றவர்கள் தான் சமூகத்தை நேர்வழிப்படுத்த அரகதையுள்ளவர்களா? பட்டம் பெறாதவர்கள் எல்லாம் என்ன செல்லாக்காசுகள் என்ற எண்ணமா? சுப்பிரமணிய பாரதியார் என்ன பட்டம் பெற்றுத்தான் பல்கலைக்கழகப் பாடப்பத்தகங்களில் இடம்பெற்றாரா? இன்றளவில் அமைதியாகச் சமூகப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு மக்கள் மனதில் நிலையான இடம்பெற்றிருப்பவர்களின் பட்டம் என்ன என்று பார்த்தா நாம் மதிக்கிறோம்.

அண்மையில் மலேசிய உள்ளுராட்சி அமைச்சு விடுத்த அறிவித்தல், பட்டங்களால் தடுமாறிநிற்கும் மலேசியர்களைச் சற்று சிந்திக்க வைத்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் முறையாகச் சேர்ந்து முழுமையான அரச அங்கீகாரம் பெற்ற கலாநிதிப்பட்டத்தைத் தவிர்ந்த பிற கௌரவப் பட்டங்களை தமது பெயரின் முன்னாலோ பின்னாலோ பொது நிகழ்ச்சிகளிலோ, அரசாங்க செயற்பாடுகளிலோ பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேடையில் மாலை, பொன்னாடைகள் போர்த்துவது கௌரவிப்பக்காக மட்டுமே. அமைப்புகளால் வழங்கப்படும் பட்டங்களும் அவ்வாறே. கூட்டம் முடிந்ததும் மாலையையும் பொன்னாடையையும் சுருட்டிப் பக்குவப்படுத்துவோமா அல்லது அதைப் போர்த்தபடியே ஜாம் ஜாமென்று ஊரெல்லாம் நடந்து திரிவோமா?

தயவுசெய்து காசுக்கு வாங்கும் பட்டங்களால் சமூகத்தில் மற்றொரு பிரிவினை உருவாக்காதீர்கள். நீங்கள் செய்யும் பணி மக்கள் மனதில் நீங்கள் இல்லாத போதும் உறைக்க வேண்டும். நீங்கள் விட்டுச்செல்லும் வெறுமை, மக்கள் மனதில் ஆழப்பதிய வேண்டும். அது தான் உண்மையான கௌரவம். அதைவிடுத்து போலித்தனமான கடின உழைப்போ, ஆய்வுத்திறனோ அற்றதும் பணத்தை அடிப்படையாகக் கொண்டதுமான இந்தப் பட்டம் பதவிகள் எல்லாம் சமூகத்தின் நோய்க்கிருமிகள். தயவுசெய்து கிட்ட நெருங்கவிடாதீர்கள்.

நன்றி:

நூல்தேட்டம் 7777
தேடலே வாழ்க்கையாய்: ஒரு ஈழத்து நூலகரின் மனப்பதிவுகள். என்.செல்வராஜா. டென்மார்க்: வி.ஜீவகுமாரன், விஸ்வசேது இலக்கியப் பாலம், Hojvangsparken 7, 4300 Holbaek, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).
88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

நூலகவியலாளர் என்.செல்வராஜா எழுதி அவ்வப்போது ஊடகங்களில் பிரசுரமான 17 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் நந்தி, கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன், எஸ்.எம்.கோபாலரத்தினம், கிருஷ்ணா வைகுந்தவாசன், கோபன் மகாதேவா, நயீமா சித்தீக், ச.வே.பஞ்சாட்சரம், அரங்க முருகையன், அமுதுப் புலவர், அகஸ்தியர் ஆகியோர் பற்றிய மனப்பதிவுகளும், காலைக்கலசத்தினூடாக ஒரு நூலியல் பயணம், புலத்திலும் புகலிடத்திலும் மலரும் வெளியீடுகளை சர்வதேச நூலகங்களில் பாதுகாத்தல், மலேசியத் தமிழர்களின் நீள்துயில் கலைகின்றதா, புலம்பெயர்ந்தோரிடையே கலாநிதிகளும் கல்லாநிதிகளும், தமிழ்மண்ணில் ஒரு சிரமதான அமைப்பு (சர்வோதயம்), நா.சுப்பிரமணியனின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் ஒரு பார்வை, ஈழநாடு சிறுகதைகள்: ஒரு பிராந்திய இலக்கிய வரலாற்று மூலநூல் ஆகிய சமூக, இலக்கிய கட்டுரைகளும் இதில் அடங்குகின்றன.

இக்கட்டுரை தேசம் சஞ்சிகையில் ஏற்கனவே வெளிவந்திருந்தது. காலப்பொருத்தம் கருதி மீண்டும் பிரசுரிக்கின்றோம்.

மோசடிக் கலாநிதிப் பட்டங்கள் தொடர்பான முன்னைய பதிவுகள்:

பட்டங்கள் கட்டி கல்வியையும் கல்வித் தகமையையும் மலினப்படுத்தும் உலகத் தமிழர் பல்கலைக்கழகம் https://www.thesamnet.co.uk//?p=90646  
தேசத்தின் செய்தியை அடுத்து பட்டம் வழங்கும் நிகழ்வைப் பிற்போட்டது உலகத் தமிழ் பல்கலைக்கழகம் https://www.thesamnet.co.uk//?p=90733

பொருளாதார வங்குரோத்தை மறைக்க பிரித்தானிய அரசு அகதிகளுக்கு எதிராகத் திரும்புகிறது! முன்னணி சட்டத்தரணி கணநாதன், லண்டன் வட்டுக்கோட்டை ஒன்றிய ஒன்று கூடலில்

பிரித்தானிய அரசு, தாங்கள் எதிர்நோக்கும் பொருளாதார வங்குரோத்தை மறைக்க அகதி அந்தஸ்து கோரும் விளிம்புநிலை மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். பிரித்தானியாவில் உள்துறை அமைச்சுக்கு எதிராக பல தஞ்சக் கோரிக்கை வழக்குகளை முன்னெடுத்து அவற்றில் சிலதை முன்மாதிரியான வழக்குகளாக்கியவர் சட்டத்தரணி அருண் கணநாதன். அவருடைய 25 வருடகால சட்ட சேவையை கௌரவிக்கும் வகையில் அவருக்கு கௌரவிப்பும் நடந்தது. அவரோடு மருத்துவ கலாநிதி லோகேந்திரன் மற்றும் பத்மநாபஐயர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். இந்கிழ்விற்கு முன்னாள் யாழ் நீதிபதி விக்கினராஜா பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.

அருண் கணநாதன் யாழ் வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச் சேர்ந்தவர், இவர் கௌரவிப்பை ஏற்று சில வார்த்தைகள் குறிப்பிட்ட போது தற்போது பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம்கோருவோருக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவற்றுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அதற்கு மக்களின் ஆதரவையும் வலியுறுத்தி இருந்தார். இதனை மக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றே சபையினர் அர்த்தப்படுத்தி இருந்தனர். இது தொடர்பாக தேசம்நெற் விளக்கம் கேட்ட போது, சட்டப் போராட்டங்களையே தான் குறிப்பிட்டதாகவும் அரசியல் தஞ்சம்கோருவோரும் அவரைச் சார்ந்தவர்களும் தங்களோடு முழுமையாக ஒத்துழைத்தாலேயே நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார். ‘அரசியல் தஞ்சம் கோருவோருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கின்றதா’ என தேசம்நெற் கேட்டபோது, “பிரித்தானிய நீதிமன்றங்களில் அரசின் கொள்கைகள் மீது விசனம் கொண்ட பல நீதிபதிகள் இன்னும் உள்ளனர். நாங்கள் தக்கமுறையில் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தால், நீதி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு” என்றார்.

தற்போதைய கொன்சவேடிவ் கட்சியின் போக்குகளை மிகக்; கடுமையாக விமர்சித்த சட்டத்தரணி அருண் கணநாதன் இக்கட்சியும் இவர்கள் சார்ந்த வலதுசாரி ஊடகங்களும் துவேசத்தைத் தூண்டி அகதி அந்தஸ்து கோரும் விளிம்புநிலை மக்களுக்கு எதிராக துவேசிகளை ஏவிவிடுவதாகக் குற்றம்சாட்டினார். சில நாட்களுக்கு முன் தீவிர வலதுசாரியான ஒருவர் இங்கிலாந்தின் கென்ற் என்ற பகுதியில் உள்ள தி வியடக்ட் அகதிகள் தடுப்பு மையத்தின் மீது தாக்குதலை நடத்தி விட்டு தானும் தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதிஸ்ரவசமாக இத்தாக்குதலில் இருவர் மட்டுமே சிறு காயங்களுக்கு உள்ளாகினர். இத்தாக்குதலையடுத்து இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 700 அகதி அந்தஸ்து கோரியோர் கென்ற் பகுதியில் உள்ள மேஸ்ட்ரன் தடுப்பு மையத்திற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இடமாற்றப்பட்டனர்.

ஏற்கனவே மேஸ்ட்ரன் தடுப்பு மையம் தஞ்சம் கோருவோரோல் நிரம்பி வழிக்ன்றது. 1500 பேர்களை மட்டுமே கொள்ளக் கூடிய முன்னாள் இராணுவத்தளத்தில் அரசு 4,000 பேரைத் தடுத்து வைத்திருப்பதாகவும் அங்கு பலரும் நிலத்தில் படுக்க வேண்டி இருப்பதாகவும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலை ஹமன்ஸ்வேர்த் தடுப்பு மையத்திலும் உள்ளதாக சட்டத்தரணி அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இத்தடுப்பு மையங்களின் பாதுகாப்பு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் இந்நிறுவனங்கள் தஞ்சம்கோருவோரை மிருகத்தனமாக நடத்துவதாகவும் அருண் கணநாதன் குற்றம்சாட்டினார். இதனை உறுதிப்படுத்தும் செய்திகள் அண்மையில் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இன்று ஹெமன்ஸ்வேர்த் தடுப்பு மையத்தில் மூன்று மணிநேரங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் கணநாதன் சுட்டிக்காட்டினார்.

சில வாரங்களுக்குள்ளேயே மூன்று பிரதமர்களைக் கண்ட பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதமரும் அவருடைய முக்கிய அமைச்சர்களும் சிறுபான்மைச் சமூகங்களாக இருந்தபோதும் அவர்களுடைய அரசியல் கொள்கைத் திட்டங்கள் மோசமான வலதுசாரித் தன்மையுடையதாகவும் சிறுபான்மையினருக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் எதிரானதாகவே உள்ளது. குறிப்பாக பொறிஸ் ஜோன்சன் பிரதமாராக இருந்த போது உள்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ப்ரித்தி பட்டேல் அவரைத் தொடர்ந்து 44 நாட்கள் பிரதமராக இருந்து நாட்டின் பொருளாதாரத்தை ஆதாள பாதாளத்துக்கு இட்டுச்சென்ற லிஸ் ரஸ் பிரதமராக இருந்த போது உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சுவலா ப்ரவர்மன், தனது சொந்த மின் அஞ்சலைப் பயன்படுத்தி பாதுகாப்பு விதிகளை மீறியமைக்காக லிஸ் ரஸ்ஸால் பதவியில் இருந்து தூக்கப்பட்டவர். ஆனால் தற்போதைய பிரதமர் ரிஷி சுனாக் பதவியேற்றதும் சுவலா ப்ரவர்மன் மீண்டும் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இவர் இந்திய வம்சாவழியாக இருந்த போதும் பிரித்தானியாவுக்கு குடிபெயரும் அகதிகள் பற்றி மோசமான கருத்துக்களை வெளியிடுவதுடன் வலதுசாரிகளையும் துவேசிகளையும் தூண்டிவிடும் வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். முன்னாள் உள்துறை அமைச்சர் ப்ரிதி பட்டேல் தஞ்சம் கோரி பிரித்தானியா வருபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்க அந்நாட்டு அரசோடு ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அவருடைய காலப்பகுதியில் தஞ்சம் கோரியவர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப எடுத்த முயற்சி முற்றிலும் தோல்வி கண்டது. பிரித்தானியாவினதும் ஐரோப்பாவினதும் நீதிமன்றங்கள் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சின் ருவாண்டா திட்டத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கின.

நிலைமை அப்படியிருக்கையில் சுவாலா ப்ரவர்மன் “பிரித்தானியாவுக்கு தஞ்சம் கோரிவருபவர்கனை ருவாண்டாவுக்கு அனுப்புவது தனது கனவு என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது இன்னுமொரு படி மேலே சென்று அகதிகள் படகுகளில் பிரித்தானியா மீது படையெடுப்பதாகத் தெரிவித்துள்ளார். வாழ்வதற்கு வழியற்று நிர்க்கதியாகி அகதிகளாக வருபவர்களை ‘படையெடுக்கிறார்கள்’ என்று சுவாலா ப்ரவர்மன் குறிப்பிட்டது, அகதி அந்தஸ்து கோருபவர்கள் தொடர்பான அவருடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது முதல் பிரான்ஸ் ஆங்கிலக் கால்வாய் ஊடாக படகு மூலம் பயணிப்பவர்கள் மீதான கண்காணிப்பை கைவிட்டது. பிரித்தானியாவின் எல்லையை பாதுகாப்பது தமது பொறுப்பல்ல என பிரான்ஸ் தீர்மானித்தது. இதனால் ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரித்தானியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாக அதிகரித்து வருகின்றது. இது பிரித்தானியாவின் முன்யோசணையற்ற பிரிக்ஸிற் கோரிக்கையின் பலாபலன்.

ரிஷி சுனாக் அரசு என்ன தான் தீவிர வலதுசாரித்துவத்தின் பக்கம் சாய்ந்தாலும் 2024 இல் நடைபெறும் தேர்தலில் ரிஷி சுனாக் வேறும் காரணங்களோடு அவருடைய நிறத்திற்காகவும் பிரதமராக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார். ஆனாலும் இவர்கள் தங்களை தீவிர வலதுசாரி துவேசிகளுடன் இணைத்துக்கொள்வார்கள்.

300 பேர்வரை கலந்துகொண்ட இந்நிகழ்வை தேவசேனா மற்றும் சந்துரு ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வட்டுக்கோட்டையின் விருந்தோம்பல் வெளிப்பாடாக உணவை விரயம் செய்யாமல் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் வீட்டுக்கும் உணவை எடுத்துச் செல்லும் வகையில் ஒழுங்குகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வு மூலம் திரட்டப்படும் நிதி வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் உள்ள முன்பள்ளிகளின் வளர்ச்சிக்கு வழங்கப்படும் என தேவசேனா தெரிவித்தார். குறிப்பாக காட்டுப்புலம் மற்றும் மூளாய் போன்ற பகுதிகளில் உள்ள முன் பள்ளிகளின் வளர்ச்சிக்கு இந்நிதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இலங்கையின் வடக்கில் உள்ள சனத்தொகை அடர்த்தி கூடிய தொகுதி வட்டுக்கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொழும்பிற்கு அடுத்ததாக புதிய ஸ்ரைல் வருவது வட்டுக்கோட்டையிலும் மானிப்பாயிலும். காரணம் இப்பகுதிகளில் கிறிஸ்தவர்களின் தாக்கம் கணிசமான அளவில் காணப்பட்டமை. துரதிஸ்ட் வசமாக சாதிய முரண்பாடு அன்று மட்டுமல்ல இன்றும் கூர்மையாக உள்ள பிரதேசங்களில் வட்டுக்கோட்டையும் ஒன்று. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய அரசியலைத் தீர்மானிக்கும் ‘தமிழீழ பிரகடனம்’ செய்யப்பட்டது வட்டுக்கோட்டையில் உள்ள பன்னாகம் என்ற இடத்திலேயே. இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை வட்டுக்கோட்டையைத் தவிர்த்து எழுத முடியாது. சோமசுந்தரப் புலவர், எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், அல்பிரட் துரையப்பா, ரெலி ஜெகன் என்று முக்கிய புள்ளிகளும் இம்மண்ணில் வாழ்ந்துள்ளனர்.

ஆமை புகுந்த வீடும் ராகவன், நிர்மலா, ஷோபாசக்தி புகுந்த இலக்கியச் சந்திப்பும்! : பாகம் 34

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 34 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: நாங்கள் பரிசில் நடந்த கலை இலக்கிய முரண்பாடுகள் பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறோம். அதுல நீங்கள் சொல்லி இருந்தீர்கள் எக்ஸில் முரண்பாடு. அன்றைக்கு முக்கியமாக ஷோபாசக்தி அந்த முரண்பாட்டை தூண்டியதாக குற்றம்சாட்டி இருந்தீர்கள். அது என்ன மாதிரி நடந்தது? எக்ஸில் அது என்ன பிரச்சனை?

அசோக்: எக்சில் சஞ்சிகையில் ஏற்பட்ட முரண்பாடுகள் கோட்பாடு சார்ந்த பிரச்சனை இல்லைத்தானே கோட்பாடுகளில் சினேக முரண்கள்தோன்றினால் விவாதங்கள், உரையாடல்கள், கற்றல்கள் முலம் தீர்த்துக் கொள்ளலாம். கோட்பாடு ரீதியான பெரிய முரண்பாடுகள் வந்தா ஒன்று சேருவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகும். இது தனிப்பட்ட முரண்பாட்டில் இருந்து தான் தோற்றம் பெறுது. இங்க கோட்பாடும் இல்லை. சித்தாந்த பிரச்சனையும் இல்லை. முழுக்க முழுக்க தனிநபர் முரண்பாடுகள்தான். இங்க ஈகோ பிரச்சனைதான். இதை இலகுவாக தீர்த்திருக்க முடியும். திட்டமிட்டு சாதிய முரண்பாடாக்கி ஊதிப் பெருக்கடி வைத்த புண்ணியம் நம்ம சோபாசத்தியைத்தான் சாரும். இந்த காலகட்டத்திலதான் தமிழ்நாட்டில் தலித்திய இலக்கிய அரசியல் ஏழுச்சி கொள்ளுது. அப்ப இந்த தனிப்பட்டமுரண்பாடுகளை சாதிய பிரச்சனை சார்ந்த முரண்பாடாக கட்டமைத்தால் இவர்களுக்கு சாதகம் என சோபாசக்தியின் சாணக்கிய மூளை கணக்குப்போட்டு இருக்கும்.

தேசம்: இதுக்குள்ள சாதிய முரண்பாடு என்று சொல்லுற அளவுக்கு இல்லை. பெரும்பாலும் இதுக்குள்ள அரசியல்ரீதியாக இருந்தவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் சாதிய எதிர்ப்பை கொண்டவங்கதானே.

அசோக்: தனி நபர் முரண்பாட்டை கூர்மையாக்க மற்றவர்களின் ஆதரவை பெற கலைச்செல்வன், லக்சுமி ஆட்கள் மீது இவ்வாறன குற்றச்சாட்டை வைக்க வேண்டிய தேவை அவங்களுக்கு வருகிறது. இந்த முரண்பாட்டிக்கு நீங்கள் நியாயம் கற்பிப்பதற்கான தேவை ஒன்று ஏற்படும் தானே. ஒவ்வொரு சாதியிலும் பிறப்பது தற்செயல் நிகழ்வு. ஆதிக்க சாதியான வேளாளர்கள் என்று சொல்லப்படுகின்ற சமூகத்தில் பிறக்கிற ஆட்களை வந்து முழுக்க முழுக்க எங்கள் மீதான ஒடுக்குமுறையாளர்கள் என்று கருத இயலாது. ஏனென்றால் அதிலும் நல்ல சக்திகள் உண்டு. ஒடுக்குமுறைக்கு எதிராக செயற்படுகின்ற இடதுசாரி கருத்தியல் கொண்ட ஆட்கள் இருப்பார்கள். இலங்கையில் நடந்த சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை கவனித்தம் என்றால் அந்த போராட்டங்களில் தீவிரமாக முண்ணனி வகித்தவங்க வேளாள சமூகத்தை சேர்ந்த தங்களை சாதிய தற்கொலை செய்து கொண்ட இடதுசாரிய கருத்தியல் கொண்ட தோழர்களாக இருப்பாங்க.

எங்களை ஒடுக்கிற ஆதிக்கம் செலுத்துகிற தங்களின் சுய சாதியிலிருந்து விடுபட்டு தோழமையோடு எம்மை நோக்கி வருகின்ற சக்திகளை நாம் சாதியின் பெயரால் புறம் தள்ளக் கூடாதுதானே. இவங்களிட்ட சாதியம் தொடர்பான எந்த புரிதல்களும் இருக்கல்ல. கோட்பாட்டு அரசியலும் இருக்கல்ல. தங்களை முதன்மைப்படுத்துற அடையாள சிக்கல்தான் இவங்களிட்ட இருந்தது. இது கலைச்செல்வன், லக்சுமி பக்கத்திலிருந்து பறிக்கப்படுவதாக இவங்க நினைக்கும் போது இந்த முரண்பாடுகள் வருகிறது. இவங்களால சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்குதானே அந்தக் காரணங்கள் எல்லாம் வந்து சோடிக்கப்பட்ட கட்டுக்கதைகள் ஆகத்தான் இருந்தது. அதற்கான உருவாக்கத்திற்கான பின்புலமாக சோபாசக்தி தான் இருந்தவர். சோபாசக்தி நினைத்திருந்தால் அந்த பிரச்சனையை தீர்த்து இருக்கலாம்.

நான் எப்பவுமே புலிகள் மீதான விமர்சனத்தை வைப்பதற்கான காரணம் என்னவென்றால் புலிகள் எப்பவுமே ஒரு ஜனநாயக அமைப்புகளை ஜனநாயக சக்திகள் ஒன்று கூடுவதை எப்பவுமே விரும்புவது இல்லை. எங்க போராட்ட வரலாற்றை எடுத்து பார்த்தீர்களென்றால் ஈழத்தில் தமிழ்ப் பிரதேசங்களில், புகலிட நாடுகளில் சகல ஜனநாயக அமைப்புகளை உடைத்தது எல்லாம் புலிகள்தான். அதுக்குள்ள ஊடுருவுவார்கள் அல்லது அப்படியே உள்வாங்குவார்கள். அல்லது அதிகாரத்தை பயன்படுத்தி அப்படியே இல்லாமல் ஆக்குவார்கள். இதில் அபத்தம் என்னவென்றால் கலைச்செல்வன், லக்சுமி ஆளுமைக்குள் உட்பட்டிருந்த இவங்கள், சுயநலப்போக்கும், மோசமான அரசியலும் கொண்ட பிழையான சத்தியான சோபாசக்தியின் வலையில் சிக்கிக் கொண்டதுதான்.

தேசம்: புலிகள் எதையுமே உருவாக்கினது கிடையாது…

அசோக்: ஷோபாசக்தி புலிகளில் இருந்து வந்தபடியால் அவரிடமும் அந்த இயல்பு இருக்கும்.

நான் முதலே சொல்லிஇருக்கிறன் புலிகளிடமிருந்து வந்த யாரையும் நம்புவதும் இல்லை, நான் ஏற்றுக்கொள்வதும் இல்லை. போராளிகள் பற்றியதல்ல இந்த அபிப்பிராயம். புலிகளில் குறிப்பிட்ட மட்டங்களில் கருத்தியல் சார்ந்து இயங்கிய எல்லாரிடமும் தங்களைத் தவிர ஏனைய அமைப்புகள் உருவாகுவதையோ ஏனைய சக்திகள் உருவாகுவதையோ அவங்கள் விரும்புவது இல்லை. ஒரு இலக்கிய சஞ்சிகையோ, இலக்கிய சந்திப்போ சாதாரண அமைப்புகள் கூட தங்களை வரக்கூடாது என்றுதான் விரும்புவார்கள்.

தேசம்: தங்கட கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைக்கினம்…

அசோக்: அப்படி தங்கட கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றால் உடைப்பார்கள் அல்லது அவர்கள் மீது ஏதும் அதிகாரத்தை பிரயோகிப்பார்கள். இலக்கிய சந்திப்புக்கும் அதுதான் நடந்தது. எக்ஸிலுக்கும் அதுதான் நடந்தது.

தேசம்: நீங்கள் இதே குற்றச்சாட்டை தான் ராகவன் நிர்மலா நித்தி மீதும் வைத்தீர்களா?

அசோக்: என்னைப் பொருத்தவரை இவர்கள் புலிகளை எதிர்க்கின்ற இன்னொரு புலிகள்தான். அதுல நீங்கள் ராகவன் ஆக இருந்தால் என்ன, நித்தியானந்தனாக இருந்தா என்ன நிர்மலாவாக இருந்தால் என்ன, முழு பேரும் அந்த மனோநிலையோடு, அந்த அந்த ஆதிக்க உளவியல் கட்டமைப்போடுதான் சிந்திப்பாங்க செயற்படுவாங்க. இவர்களை எல்லாம் ஒரு ஜனநாயக சக்தியாக நான் ஒருபோதும் பார்க்கவில்லை. ஏனென்றால் இருக்கிற முரண்பாடுகளை தீர்க்கின்ற நபர்களாக அவர்கள் எப்பொழுதும் இருந்ததில்லை. முரண்பாடுகளை கூர்மையாக்கி, குழுவாதத்தை உருவாக்கி தாங்க நினைப்பதை சாதிப்பாங்க. அதற்கு நாங்களும் துணை போவம். நீங்க பார்த்தீங்க என்றால் இவங்களுக்கு பின்னால் நாங்கதான் போனோமே தவிர எங்களுக்கு பின்னால் அவங்க வரவில்லை. தங்களின் அதிகாரத்தில் மேலாதிக்கத்தில் அவங்க கவனமாக இருந்தாங்க.

எல்லாத்தின் உடைவுகளுக்கும் மூல காரணங்களை தேடி போனீர்கள் என்றால் புலிகளில் இருந்த பழைய உறுப்பினர்களாக தான் இருப்பார்கள். ஒன்று சோபாசக்தி ஆக இருக்கும் ஒன்று ராகவன் ஆக இருக்கும், ஒன்று நிர்மலாவாக இருக்கும், இவர்கள்தான் பின்புலமாக இருந்திருப்பார்கள். இலக்கியச் சந்திப்புகளின் உடைவுகளை தேடி போனீர்கள் என்றால் முடிவு அங்க தான் இருக்கும். ஆனா என்னதான் உடைவு இருந்தாலும் சோபாசக்தி, ராகவன், நிர்மலா எனைய முன்னாள் புலிகள் இவங்களுக்குள்ள ஒற்றுமை இருக்கும். ஒரே அணியில இருப்பாங்க. யோசித்துப்பாருங்க. புலிகளின் வன்முறைகளுக்கும் கொலைக் கலாச்சாரத்திற்கும் எதிராக புகலிடத்தில் செயற்பட்ட TBC ரேடியோவுக்கு என்ன செய்தார்கள்? உங்க தேசம் இணையத்தளத்தை முடக்க தங்களின்ற குழுவாத கும்பல்களோடு சேர்ந்து கையெழுத்து வேட்டை நடத்தினாங்களே. இதையெல்லாம் எந்த நோக்கத்தில் செய்தாங்க.

தேசம்: புலிகள் என்பதும் எங்களுடைய சமூகத்தின் ஒரு உற்பத்தி தானே. நீங்க சொல்லுற இந்த குணாம்சம் இந்தப் பிரிவிடம் மிகக் கூடுதலாக இருக்கு என்று சொல்லவாறீர்களா?

அசோக்: எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் குணாம்சம் கொண்டவர்கள்தான் புலிகளிடம் போகிறார்களா அல்லது புலிகளுக்கு ஒரு சிந்தனை முறை இருக்குதானே புலிகளுடைய பயிற்றுவிப்பு கல்வியூட்டல்கள் சிந்தனை முறை இருக்குதானே அது இப்படித்தான் இவர்களை உருவாக்கிறது. தங்களை மீறி யாரும் வரக்கூடாது என்று. ஜனநாயக சக்திகளோ, தங்களை கேள்வி கேட்கின்றவர்களோ தங்கட இருப்புக்கு அது தடையாக இருக்கிறது என்று நினைப்பார்கள். தங்கட இருப்புக்கு ஒரு அமைப்பு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள். இல்லாதபட்சத்தில் அதை அழிப்பார்கள். இல்லாட்டி இவ்வளவு ஆரோக்கியமான இலக்கியச் சந்திப்புக்கு கடைசியில் என்ன நடந்தது?

இன்னொன்றையும் நீங்க அவதானிக்கலாம். புலிகள் பலரிடம் இந்த திறமை இருக்கு. எங்கட பலவீனங்களை கண்டு பிடித்து அதற்கு தீனி போடுவாங்க. பலரும் இவங்க பின்னால் அலைவதற்கு இதுவும் ஒருகாரணம். முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்கிற நாங்க தனிப்பட்ட வாழ்வில் மிகமிக பலவீனமானவங்க. அத அவங்க தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாங்க. எவ்வளவுதிறமை சாலி அவங்க பாருங்க.

தேசம்: இலக்கிய சந்திப்பு எப்படி இப்படி உடைந்தது ?

அசோக்: இலக்கியச் சந்திப்பின் உருவாக்கம் சிறு சஞ்சிகைகளினுடைய ஆசிரியர்களின் வாசகர்களின் இணைவாக இருந்து ஒரு காலகட்டத்தில் அராஜகங்களுக்கு எதிரான ஒரு வடிவமாக வருது ஜனநாயகத்தையும், அதிகார எதிர்ப்பையும் முன்னிலைப்படுத்திய புகலிட இலக்கியச்சந்திப்பை சார்ந்தவர்கள், விடுதலைப் புலிகளால் புகலிடத்திலும், இலங்கையிலும் இருந்த அச்சுறுத்தலால், விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்களாக இருந்தது இயல்பாக இருந்தது. அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரான ஒரு இயல்பான அரசியல் அதுக்குள்ள மேலோங்கியிருக்கிறது.

நான் முதலாவது இலக்கிய சந்திப்பில் தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டு கலந்து கொள்கிறேன். அதுக்குப் பிறகு இரண்டு இலக்கிய சந்திப்பு பாரிசில் நடந்தது. அதை நாங்கள் லக்ஷ்மி, கலைச்செல்வன், புஸ்பராஜா, அசோக் பிரகாஸ், கிருபன், மோகன், உதயன், யோகராஜா நடத்தினோம். நாங்க எல்லா இலக்கிய சந்திப்புக்கும் போவோம். ஜெர்மனியில்தான் அதிகம்தான் நடந்தது. 2009 மே முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின்பு நிலைமை நிலமை மாறிப் போய்விட்டது. முள்ளிவாய்க்கால் பிரச்சனைக்குப் பிற்பாடு இலக்கிய சந்திப்பு ஒரு டேர்ன் எடுக்குது. முழுக்க முழுக்க புலிகள் அழிக்கப்பட்டதன் பிற்பாடு பாரிசில் நடந்த இலக்கிய சந்திப்பில் இலங்கை அரசு சார்பான ஒரு போக்கை அவர்கள் எடுக்கிறார்கள். அந்த எடுவைக்கு காரணம் அதுக்குள்ள இருந்த ஒரு சக்திதான். அதுல தலித் முன்னணி முக்கியமான ஆட்கள். அதுல ஷோபா சக்தியும் இருந்தவர். அடுத்தது ராகவன் ஆட்களும் அதுக்குள்ள இருந்தார்கள்.

புலிகள் மீது கடும் விமர்சனம் இருக்கு. முள்ளிவாய்க்கால் தொடர்பாக. பொதுமக்கள் அழிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம் புலிகளுடைய நடவடிக்கையும் ஒன்று. அது விமர்சிக்கப்பட வேண்டியது. புலிகள் மீது கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட வேண்டியது. அதற்காக நீங்கள் பேரினவாத அரசின் ஆதரவு சக்தியாக மாற முடியாது. நான் முள்ளிவாய்க்கால் படுகொலையை ஒரு இனப்படுகொலை என்றுதான் பார்க்கிறேன். அது தொடர்பாகக் கருத்து முரண்பாடு இருக்கலாம். மிக மோசமாக கொத்துக் கொத்தாக மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மறந்து இலங்கையில் ஜனநாயக சூழல் உருவாகிவிட்டது, ஜனநாயக இடைவெளி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லி இலங்கைப் பேரினவாத அரசு ஆதரவு நிலை கொண்டு நடத்தும் போது எப்படி எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியும். எப்படி நாங்கள் கலந்து கொள்ள முடியும்? அப்போ நான் அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டேன். இலக்கிய சந்திப்பின் பிரதான நோக்கத்தையே குழிதோண்டி புதைத்து விட்டார்கள்.

அதற்கு பிற்பாடு லண்டனில் நடந்த இலக்கிய சந்திப்பில் முரண்பாடு வருகிறது. இலக்கிய சந்திப்பை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி நடக்குது. இந்த இலக்கிய சந்திப்பு புகலிடத்திற்காக, அதன் அரசியல் இலக்கிய சமூக வெளிக்காக உருவாக்கப்பட்டது. எனவே, இலங்கைக்கு கொண்டு போக முடியாதென்று என்று பலரும் இதை எதிர்க்கிறாங்க. புகலிட இலக்கியச் சந்திப்பை இலங்கைக்கு கொண்டு போவதற்கான அவசியம், காரணம் என்ன என்ற முக்கியமான கேள்வி எங்களுக்கு எழுகிறது

தேசம்: புகலிடத்திற்காக உருவாக்கப்பட்ட இலக்கிய சந்திப்பை ஏன் இவர்கள் இலங்கைக்கு கொண்டு போக விரும்புகின்றார்கள்?

அசோக்: நல்ல கேள்வி. இவங்க முழுப்பேர்களுமே குறிப்பாக தலித் முண்ணனி, பிள்ளையான் அணி, ராகவனும் அவருடன் சேர்ந்த ஆட்களைப் பார்த்தீர்கள் என்றால், வெறும் இலங்கை அரசு ஆதரவாளர்களாக இருந்தார்களே தவிர தனித்துவ அடையாளங்கள் அற்றவங்க இவங்க. ஆழமான அரசியல் புரிதல்களோ, இலக்கிய ஆற்றலோ அற்றவங்க. இவங்க இலங்கைக்கு, வெறும் இலங்கை அரச விசுவாசத்தோடு தமிழ்ப் பிரதேசங்களுக்கு செல்லமுடியாது. அங்க யாரும் இவர்களை கவனிக்க மாட்டார்கள். அப்ப இவங்களுக்கு அடையாளம், ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. இலக்கிய சந்திப்புக்கு ஒரு வரலாற்று தடம் பங்களிப்பு இருக்கிறது. இலக்கிய சந்திப்பு பற்றி இலங்கையில் பெரிய எதிர்பார்ப்பு உண்டு. அப்ப இந்த இலக்கிய சத்திப்பினுடாக, அங்கு தங்கட அடையாளத்தை, இருத்தலை நிறுவ முயலுறாங்க இதுதான் நடந்தது.

தேசம்: இதை உங்களைப் போன்றவர்கள் எதிர்க்க வில்லையா?

அசோக்: இவர்கள் இலங்கை அரசு ஆதரவு நிலைப்பாடு எடுத்ததன் பின் இந்த இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்வதை நான் விட்டுட்டன். ஆனா இவர்களின் இந்த செயற்பாட்டிக்கு எதிராக கடும் கண்டனங்களை எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறன். நான் சிறிரங்கன், நாவலன் பலர் இதுபற்றி எழுதியுள்ளோம்.

இலங்கைக்கு கொண்டு போவதற்கு இவங்க முடிவு செய்த லண்டன் இலக்கிய சந்திப்பில் பலர் இதனை எதிர்த்திருக்காங்க. கிருஸ்ணராஜா, லட்சுமி, சுசிந்திரன், றஞ்சி, சிவலிங்கம் தோழர் போன்றவங்க. புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு இது. நீங்கள் நாட்டுக்கு கொண்டு போக இயலாது என்று. அதை மீறித்தான் அவங்க அங்கு கொண்டு போகிறார்கள். அப்போ இந்த ஜனநாயகப் பண்பை எப்பவும் ஏற்கவில்லை தானே இவர்கள். நாங்கள் எதற்காக ஒரு அமைப்பை உருவாக்கினோம், எதனை நோக்கி உருவாக்கினோம் என்ற அடிப்படை அம்சங்கள் எல்லாவற்றையும் இல்லாமலாக்கிப்போட்டு, நீங்கள் உங்களுடைய சுயநலத்துக்காக, உங்களுடைய அரசியலுக்காக கொண்டு போகின்ற போக்கு இருக்குதானே அது எனக்கு பெரிய அதிருப்தியாக இருந்தது.

இந்த ஜனநாயகத் தன்மை கொண்ட இலக்கிய சந்திப்பை தங்களின்ற அதிகார மேலாண்மை இருத்தலுக்காக பயகன்படுத்திக் கொண்ட இந்த நபர்களை பார்த்தால், இவங்களின்ற இந்த இலக்கிய சந்திப்பு தொடர்பு இடைக்காலத்தில்தான் ஏற்பட்டது. ஆனால் இந்த குறுகிய காலத்தில் தங்களுக்கேற்ற குழுவாதத்தை முரண்பாட்டை உருவாக்கி இலக்கிய சந்திப்பை தங்கள் உடமையாக்கிக் கொண்டாங்க. இதனைத்தான் நான் புலிக்குணம் என்றது. இதுதான் எனக்கு இருந்த விமர்சனமே தவிர தனிப்பட்ட ரீதியில் இவங்களோட எந்த முரண்பாடுகளும் எனக்கில்லை. சந்திக்கும்போது கதைப்பதுண்டு. அதேநேரம் கருத்துக்களும் விமர்சனங்களும் எனக்கு இருக்கும். இங்க ஒன்றை பதிவு செய்யணும். இவங்கட முரண்பாட்டிக்கு பிறகு இவங்க வெளியிட்ட எக்சில் சஞ்சிகையின் அட்டையில் லக்சுமியைபற்றி மிக மோசமாக தாக்கி எழுதி இருந்தாங்க. ஒரு இலக்கிய சஞ்சிகையின் அட்டையில் ஒருவரை தாக்கி மோசமாக எழுதி வெளியிட்ட பெருமை இவங்களைத்தான் சாரும்.

 

தேசம்நெற் பதிவை நீக்கக்கோரிய விண்ணப்பத்தை பிரித்தானிய நீதிமன்றம் நிராகரித்தது!

அபிராமி கணேசலிங்கம், ராகுலன் லோகநாதன் ஆகியோர் கூட்டாக தம்பிராஜா ஜெயபாலன் உட்பட ஒன்பது பேருக்கு எதிராக கொண்டுவர முற்பட்ட இடைக்காலத் தடையை வில்சன் கவுன்ரி கோட் நிராகரித்துள்ளது. மாவட்ட நீதிபதி கன்வர் முன்நிலையில் அபிராமி கணேசலிங்கம் தன்பக்கத்து வாதத்தை வைத்து தடையுத்தரவைக் கோரி இருந்தார். இந்த விண்ணப்பத்தில் அபிராமி கணேசலிங்கம் முதலாவது வாதியாகவும் ராகுலன் லோகநாதன் இரண்டாம் வாதியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தனது விண்ணப்பத்தை முன்வைத்து அபிராமி கணேசலிங்கம் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கையில் தானும் தனது குடும்பமும் சட்டவிரோத மோசடிகளில் ஈடுபட்டதாக ஒன்லைன் வெளியீடு ஒன்றில் குறிப்பிட்டு இருந்ததாகவும், அதனால் தனது குடும்பத்தினர் பயமுறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், பிரதிவாதிகள் தங்களுடைய நன்மதிப்பை பாதிக்கும் வகையில் இவ்விணையத்தளத்தில் கருத்துக்களை எழுதியதாகவும், அதனால் அப்பதிவை நீக்குவதற்கான இடைக்காலத்தடையுத்தரவை அவர் கோரியிருந்ததாக அந்த விண்ணப்பத்தை நிராகரித்து வழங்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இடைக்காலத்தடையுத்தரவைக் கோரிய விண்ணப்பதாரிகளான அபிராமி கணேசலிங்கம், ராகுலன் லோகநாதன் பற்றிய தம்பிராஜா ஜெயபாலனால் எழுதப்பட்ட செய்தியொன்று தேசம்நெற்றில் பெப்ரவரி 15 அன்று வெளியிடப்பட்டு இருந்தது. வாதிகளில் ஒருவரான ராகுலன் லோகநாதன் இயக்குநராக இருந்த ரெய்டன் (Raidenn Ltd) என்ற நிறுவனம் பற்றியும் அதன் வாடிக்கையாளர்கள் பற்றியும் அச்செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. குறிப்பிட்ட நிறுவனத்தின் செயற்பாடுகளால் தாங்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி இருந்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அச்செய்தியின் கீழ் அபிராமி கணேசலிங்கம் ராகுலன் லோகநாதன் ஆகியோருக்கு சார்பாகவும் எதிராகவும் கருத்தக்கள் வெளியிடப்பட்டு இருந்தது.

மேலும் அச்செய்தியில் ராகுலன் லோகநாதன் இச்செய்தி தொடர்பாக தம்பிராஜா ஜெயபாலனோடு தொடர்புகொள்வார் என்று அபிராமி கணேசலிங்கம் தம்பிராஜா ஜெயபாலனுக்கு உறுதியளித்து இருந்தார் என்றும் ஆனால் பல வாரங்களாகியும் பல்வேறு வகையில் முயற்சித்தும் ராகுலன் லோகநாதன் தொடர்பு கொள்ளவில்லை என்பதையும் அச்செய்தி சுட்டிக்காட்டி இருந்தது.

இதன் பின்னணியிலேயே அபிராமி கணேசலிங்கன் மற்றும் ராகுலன் லோகநாதன் ஆகியோர் வில்சன் கவுன்ரி கோர்ட்டில் இச்செய்திக்கு எதிராகத் தடையுத்தரவைக் கோரியிருந்தனர். பெப்ரவரி 17இல் நீதிபதி கன்வர் அபிராமி கணேசலிங்கம் மற்றும் ராகுலன் லோகநாதன் ஆகியோரின் விண்ணப்பம் சிபிஆர் 3.40 (CPR 3.40. க்கு அமைவாக அமையாததன் அடிப்படையில் அதனை நிராகரிப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.

அக்கட்டளை வருமாறு குறிப்பிடுகின்றது: The application for Injunction part 8 claim are struck out pursuant to CPR 3.40. இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள்: இந்த விணப்பத்துக்கான நியாயமான காரணங்கள் இல்லாமல் இருக்கலாம், இது நீதிமன்ற செயன்முறைகளை துஸ்பிரயோகம் செய்வதாக அமையலாம் எனப் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கலாம் என ஜஸ்ரிஸ்.கோ.யுகெ இணையத்தில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

இந்த விண்ணப்பத்தில் இச்செய்தியை எழுதிய தம்பிராஜா ஜெயபாலன் முதலாம் எதிரியாகவும் ரவிச்சந்திரன் சேனாதிராஜா இரண்டாம் எதிரியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ரவிச்சந்திரன் சேனாதிராஜாவின் துணைவியார் புஸ்பாவதி சேனாதிராஜா மூன்றாம் எதிரியாகவும் இவர்களுடைய மகள் சிவானி ரவிச்சந்திரன் நான்காம் எதிரியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ரவிச்சந்திரன் சேனாதிராஜா தன்னுடைய நண்பரான செல்வராஜா செல்வச்சந்திரனை ரீமோட்கேஜ் செய்து கொடுப்பதற்காக அபிராமி கணேசலிங்கத்திடம் அறிமுகப்படுத்தியதாக தேசம்நெற்றிடம் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பின்னாட்களில் இந்த ரீமோட்கேஜ் விடயம் விபரீதமாக ரவிச்சந்திரன் சேனாதிராஜா அபிராமி கணேசலிங்கம் தம்பதிகளின் வீட்டுக்கு நியாயம் கேட்கச் சென்றதாகவும் அப்போது தாங்கள் தன்னை தாக்க வருவதாக அவர் பொலிஸில் முறையிட்டு இருந்ததாகவும் தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். இவை எதுவற்றிலுமே தன்னுடைய மனைவிக்கும் மகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தங்கள் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயற்படுவதாக அபிராமி – ராகுலன் தம்பதியினரால் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 5ம் எதிரி செல்வராஜா செல்வச்சந்திரன். ஆறாம் எதிரி செல்வராஜா செல்வச்சந்திரனின் துணைவியார் ஜெயவதனி செல்வச்சந்திரன். செல்வச்சந்திரன் – ஜெயவதனி தம்பதிகளின் மகள் கௌசிகா செல்வச்சந்திரன் ஏழாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்டு உள்ளார்.

எட்டாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்ட நடராஜா ரபீன்திரன் தேசம்நெற் இல் வெளியான வயதான தம்பதிகளோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர். ரெய்டன் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் இவர் தொடர்பில் உள்ளதாக தெரியவருகிறது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

கடைசி எதிரியான ரூபன் நடராஜா யாழ் நல்லூரைப் பூர்வீகமாகக் கொண்ட அபிராமி கணேசலிங்கத்தின் மிக நெருங்கிய உறவினர். தான் வெளிநாடு வருகின்ற போது அபிராமி பிறந்திருக்கவில்லை என அவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். தானும் அபிராமியின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் முதலீட்டுக்காக நூறாயிரம் பவுண்களை வழங்கியதாகவும் ஆனால் ஆரம்பத்திலேயே ஏதோ சரியாகப்படவில்லை என்பதை உணர்ந்து பணத்தை மீளப்பெற முயன்றதாகவும் இன்னமும் தனக்கு பணம் வந்து சேரவில்லை எனவும் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

இச்செய்தி தொடர்பாக அபிராமி கணேசலிங்கம் – ராகுலன் லோகநாதன் ஆகியோரோடு தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவர்கள் தேசம்நெற்றை தொடர்புகொள்ளும் பட்சத்தில் அவர்களுடைய பக்கதை சொல்வதற்கான முழுமையான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

லண்டனில் தமிழர்கள் தமிழர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி முதிய தமிழ் தம்பதியர் வீட்டை இழக்கும் அபாயம்!!!

லண்டன் குரொய்டனில் தங்கள் சொந்த வீட்டில் வாழும் முதிய தம்பதியினர் தங்கள் வீட்டை பறிகொடுக்கும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 200,000 பவுண்களை (6.6 கோடி ரூபாய்) முதலீட்டுக்காகப் பெற்றுக் கொண்ட தமிழர் ஒருவரால் நடத்தப்படும் நிறுவனம் ரெய்டன் – Raidenn Limited அவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளது. ரகு லோகன் என அறியப்பட்ட ராகுலன் லோகநாதன் (43) என்பவரினால்; கொம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனத்திற்கே இத்தம்பதியினர் முதலீட்டுக்காக 200,000 பவுண்களை வழங்கி இருந்தனர். தற்போது இந்நிறுவனம் அவர்களுடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் கட்டிடம் இருக்கின்றதேயொழிய அங்குள்ள யாருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை.

ஹரோ பகுதியில் வாழும் எஸ் செந்தூரன் எனத் தன்னை அறிமுகப்படுத்தியவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் தானும் ஒரே கல்லூரியிலேயே கல்விகற்றதாகவும், தாங்கள் சில சமயம் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதாகவும் தானும் இவ்வாறான ஒரிரு சம்பவங்கள் பற்றிக் கேள்விப்பட்டதாகவும் தெரிவித்தார். இதற்கு மேல் தன்னால் எதுவும் தெரிவிக்க முடியாது என்று மேலதிக தகவல்களைத் தர மறுத்துவிட்டார்.

அப்பகுதியில் நீண்ட காலமாக நிதி ஆலோசகராக வீடு வாங்குவதற்கான ஆலோசணைகளை வழங்குவது மோற்கேஜ் பெற்றுக்கொடுப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் தேசம்நெற் க்கு தெரிவிக்கையில் அபி என்றொரு பெண் ரீமோட்கேஜ் இன்வெஸ்ற்மன்ற் என்று செயற்பட்டதாகவும் இதனால் சிலர் பாதிக்கப்பட்டதாக தனக்கு தெரியவந்ததாகத் தெரிவித்தார். இப்போதெல்லாம் ஊரை கொள்ளையடித்து ஏப்பம் விடும் சிலரும் மோட்கேஜ் செய்து தருகின்றோம் என்று கடைவிரிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

ராகுலன் லோகநாதன், அபி கணேசலிங்கம் (படங்கள்) ஆகிய இருவரும் ரீமோட்கேஜ் எடுத்து முதலீடுகளை மேற்கொண்டு லாபமீட்ட முடியும் என ஆசை வார்த்தைகளைக் கூறி நம்பிக்கையூட்டி இந்த வயோதிபத் தம்பதிகள் உட்பட சிலரை அவ்வாறு செய்ய வைத்துள்ளனர். ஆனால் முதலீட்டில் இருந்து வருமானம் ஈட்டுவது என்பது பல்வேறு புறச் சூழல்களிலும் தங்கியுள்ளது. ஆனால் இந்த முதலீட்டை மேற்கொண்டவர்களுக்கு இதன் ஆபத்துக்கள் பற்றி சொல்லப்பட்டதா என்பதோ சம்பந்தப்பட்ட இருவருமே நிதி ஆலோசணைகளை வழங்கத் தகுதி உடையவர்களா என்பதும் உறுதிபடத் தெரியவில்லை.

ஆனால் இவ்விருவரும் ஒரு மேட்டுக்குடித்தன வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். ராகுலன் லோகநாதன் பிரித்தானியாவின் மட்டுமல்ல உலகெங்கும் அறியப்பட்ட உதைபந்தாட்ட விளையாட்டு பிரமுகர் டேவிட் பெக்கத்துடன் நின்று எடுத்த புகைப்படங்களை எல்லாம் தன் முகநூலில் பரிமாறியிருந்தார்.

இத்தம்பதியினரின் சில படங்களும் அவர்களின் டாம்பீகமான வாழ்க்கையை வெளிப்படுத்தி நின்றன. ஆனால் இவர்களை நம்பி முதலீட்டை மேற்கொண்டவர்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இவர்களை நம்பி முதலிட்டவர்களுடனான சகல தொடர்புகளையும் ரகு – அபி தம்பதியினர் துண்டித்துள்ளதைத் தொடர்ந்தே இவ்விடயம் பொதுத் தளத்திற்கு வந்துள்ளது.

பிரித்தானியா குறிப்பாக லண்டன் சுதந்திரமான செயற்பாட்டுக்கான களமாக இருந்தாலும் இந்தச் சுதந்திரம் என்பது மோசடிகளுக்கான சுதந்திரமாகவும் இருக்கின்றது. இந்த மோசடிகளுக்கு நடைமுறை விதி முறைகளில் உள்ள ஓட்டைகளும் உதவுகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். லண்டன் உலகின் நிதிப்பரிவர்த்தனையின் தலைநகரமாக இருக்கின்ற அதே நேரம் நிதி மோசடியாளர்களின் கூடாரமாகவும் இருக்கின்றது. உலக மோசடியாளர்கள் பலரதும் வாழ்விடமாகவும் லண்டன் இருப்பது ஒன்றும்; இரகசியமானது அல்ல. அவர்களுக்கு எதிராக பிரித்தானிய அரசும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றது. ரஷ்யாவின் பெரும் பணமுதலைகள் கூட பிரித்தானியாவிலேயே ஒழிந்து கொண்டுள்ளனர். பிரித்தானிய பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மத்திய கிழக்கு பணமுதலைகளுக்கு லண்டனில் கோடிக்கணக்கில் சொத்துப் பத்துக்கள் உள்ளன. தற்போது பிரதமர் பொறிஸ் ஜோன்சனே தவறான வழிகளில் தனது வீட்டைத் திருத்துவதற்கான செலவை செலுத்த முற்பட்டு அம்பலப்பட்டு உள்ளார். இந்தப் பின்னணியிலேயே லண்டனின் மோசடிகளை அணுக வேண்டியுள்ளது. லண்டனில் மோசடிகள் இடம்பெறுவது ஒன்றும் புதிதல்ல. தமிழர்கள் மத்தியிலும் இம்மோசடிகள் நிறைந்துள்ளது.

“வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்” என்ற பழமொழி; ஒரு மனிதனின் வாழ்வில் வீட்டைக் கட்டுவது அல்லது வாங்குவது திருமணம் செய்து கொள்வது என்ற இரு விடயங்களுமே மிக முக்கிய அம்சங்களாக கணிக்கப்படுவதை குறித்து நிற்கின்றது. அப்படியான கஸ்டங்களுக்கு மத்தியில் வாங்கிய வீட்டை முதுமைiயில் பறிகொடுப்பது என்பது மிகக் கொடுமையானது. அவ்வாறான ஒரு நெருக்கடியில் தமது முதுமையில் கணவன் அல்ஸ்மியர் என்ற மறதி நோய்க்கு ஆளாகிய நிலையில் வீட்டையும் இழக்கும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். லண்டன் குரொய்டனில் வாழும் இத்தம்பதியினரை நேரடியாகச் சந்தித்து அவர்கள் சேகரித்து இருந்த கட்டு ஆவனங்களையும் தேசம்நெற் பார்வையிட்டு இருந்தது.

இன்றைய காலகட்டங்களில் வீடு வாங்குவது என்பது அவ்வளவு இலகுவான பொறிமுறையல்ல. பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளில் மனிதர்கள் நேர்மையாக பொறுப்போடு நடந்துகொள்வார்கள் என்று நீங்கள் நம்பினால் அதற்கு பாரிய விலையை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். இந்த வீடு வாங்குவது விற்பது தொடர்பில் சற்று அசந்தாலும் பாரிய இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த வீடு வாங்கும் விற்கும் விடயங்களில் சட்டத்தரணிகளுக்கூடாகவே நிதிப் பரிமாற்றம் நிகழும். இவ்வாறான பரிமாற்றங்களில் சட்டத்தரணிகளே நிதியை கையாடிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது என்கிறார் கிழக்கு லண்டனில் மோற்கேஜ் ஏற்பாடுகளைச் செய்துகொடுத்து வருபவர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் கிழக்கு லண்டனைச் சேர்ந்த ஜெயசீலன் – ராணி தம்பதியினரும் அடக்கம். இவர்கள் 100,000 பவுண்களை (3.3 கோடி ரூபாய்) சட்டத்தரணியிடம் இழந்தனர். மற்றுமொரு இளைஞர் வாங்காத வீட்டுக்காக மோற்கேஜ் கட்டிக்கொண்டுள்ளார்.

குரொய்டன் தம்பதியினரிடம் இருந்து பெற்ற 200,000 முதலீட்டுக்கான வருமானம் செப்ரம்பர் 2021இல் நின்று போனது. இது தொடர்பாக தம்பதிகள் ரெய்டன் நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது இந்தா பணத்தை போடுகின்றோம் என்று சொல்லப்பட்டதேயல்லாமல் பணம் போடப்படவில்லை. மாதாந்தம் 1500 பவுண்களும் 400 பவுண்களுமாக 1900 பவுண் பணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேசம்நெற்றை அத்தம்பதியினர் டிசம்பரில் தொடர்பு கொண்ட போது அத்தம்பதியினருக்கு கடந்த மூன்று மாதங்களாக அவர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு இருந்தது. ரெய்டன் நிறுவனத்துடனனா அவர்களுடைய தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு இருந்தது. “தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலில்லை. மின் அஞ்சல்கள் பதிலளிக்கப்படவில்லை. தபால்களுக்கும் பதிலில்லை. ஹரோ விலேஜ் வேயில் இருக்கும் அந்நிறுவனத்திற்கு நேரடியாகப் போனபோது அது பூட்டிக்கிடந்தது. அருகில் உள்ள பிரபலமான ரெஸ்ரோறன்ருக்கு போனால் அவர்கள் புதிய வாடிக்கையாளர்களை அங்கு வரும்படி சொல்லி சந்திப்பதாக அறிந்தோம்” என அத்தம்பதியினர் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.

இந்நிலையில் தேசம்நெற் ராகுலன் லோகநாதன் மற்றும் அங்கு பணியாற்றியதாக சொல்லப்பட்ட அபி கணேசலிங்கம் ஆகியோரது தொலைபேசியூடாக தொடர்புகொள்ள முயற்சித்தோம் ஆனால் அது பலனளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர்களுடைய முகநூலூடாகவும் அவர்களுடைய நண்பர்களுடைய முகநூலூடாகவும் தொடர்புகொள்ள முயற்சித்து அபி கணேசலிங்கம் ரகு லோகநாதனை தொடர்பு கொள்ளுமாறு கேட்டிருந்தோம். அந்நிலையில் அபி கணேசலிங்கம் தேசம்நெற்றை தொடர்பு கொண்டார்.

அவரிடம், முதலீடு செய்யலாம் என்று சொல்லி ரீமோட்கேஜ் எடுத்து கொடுத்து தற்போது அவர்கள் தங்கள் முதலீட்டுக்கான வருமானம் இல்லாமல் வீட்டை இழக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீங்கள் இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று தேசம்நெற் கேள்வி எழுப்பியது. அவர் உடனடியாகவே தனக்கும் ரெய்டன் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்று விட்டார். அப்படியானால் நீங்கள் எப்படி பாதிக்க்பட்ட க்ளைன்ற்றோடு தொடர்பில் இருந்தீர்கள் என்று தேசம்நெற் கேட்டபோது தான் 2013 அளவில் அதில் வேலை செய்ததாகவும் தாங்கள் ரீமோட்கேஜ் போன்றவற்றை செய்து கொடுப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

அப்படியானால் பாதிக்கப்பட்டவர் எப்படி குறித்த முகவரியில் வந்து ரீமோட்கேஜ் பற்றி பேசியுள்ளார் என தேசம்நெற் கேள்வி எழுப்பியது. திரு பில்சாட் என்பவரே மோட்கேஜ் விடயங்களை கையாண்டவர் என்றார். அவரே அந்நிறுவனத்தின் பிரென்ஜைஸி எனத் தெரிவித்ததுடன் அதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றார். அப்படியானால் அதன் பிரென்ஜைசர் யார் (தாய் நிறுவனத்தின் உரிமையாளர்) எனக் கேட்ட போது ராகுலன் என்றார். ராகுலன் உங்கள் கணவரா? என்று தேசம்நெற் சார்பில் கேட்கப்பட்ட போது. ‘ஓம்’ என்றார் அபி.

அப்படியானல் உங்கள் கணவருடைய நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றி இருக்கின்றீர்கள். பாதிக்கப்பட்டவருடைய மோட்கேஜ் விடையத்தை நீங்கள் கையாண்டு இருக்கிறீர்கள்? என்று தேசம்நெற் தனது கேள்விகளைத தொடர்ந்தது. என்னுடைய கணவருக்கு இருக்கும் வர்த்தக தொடர்புகள் பற்றி தனக்குத் தெரியாது அதனை அவரோடு தான் கதைக்க வேண்டும் என்றவர், ஆனால் தான் தனக்கு குழந்தை கிடைப்பதற்கு முன் வரை வேலை செய்ததாகவும், குழத்தைகள் பிறக்க 2013இல் வேலையை விட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்கள் இல்லை. நீங்கள் சில மாதங்களுக்கு முன் வரை மின் அஞ்சல் தொலைபேசியூடாக தொடர்பில் இருந்துள்ளீர்கள் அதற்கான ஆதாரங்கள் தேசம்நெற் இடம் உள்ளது என்று தெரிவித்ததுடன் அவருடைய கணவரை தொடர்பு கொள்ளுமாறு தேசம்நெற் கேட்டுக்கொண்டது.

இச்செய்தி எழுதப்படும் வரை ராகுலன் லோகநாதன் தேசம்நெற்றோடு தொடர்பு கொள்ளவில்லை. அபி கணேசலிங்கம் முதலும் கடைசியுமாக அன்றைய உரையாடலின் பின் தேசம்நெற்றோடு தொடர்பு கொள்ளவில்லை. அந்த உரையாடலை அடுத்து ராகுலன் லோகநாதன் அபி கணேசலிங்கம் இருவரது முகநூல்களும் மூடப்பட்டது. அதேச சமயம் தேசம்நெற் அபி கணேசலிங்கத்துடன் உரையாடியதன் பின் பாதிக்கப்பட்ட சிலருடன் ரெய்டன் தொடர்பு கொண்டதாக தேசம்நெற்க்கு தெரியப்படுத்தப்பட்டது.

ஆபி கணேசலிங்கம் தேசம்நெற்க்கு கூறியதற்கு மாறாக அவர் பாதிக்கப்பட்ட தம்பதியரோடு யூன் 7 2021 மற்றும் ஒக்ரோபர் 4 2021 இல் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஜனவரி 18 2021 காலை 8:23 மின் அஞ்சல் அனுப்பி உள்ளார். அதனால் அபி கணேசலிங்கம் 2013இற்குப் பின் வேலை செய்யவில்லை என்பது உண்மைக்குப் புறம்பானது.

கம்பனி ஹவுஸ் ஆவணங்களின் படி ரெய்டன் நிறுவனத்தின் பெறுமதி வெறும் ஒற்றைத்தான ஆயிரத்திற்குள்ளேயே இருக்கின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட இந்த தம்பதியினர் ரெய்டனில் வைப்பீட்டுக்கு வழங்கிய முதலீடு முத்தான ஆயிரமாக இருந்தது. ரெய்டன் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களிடம் வாங்கிய பணத்தை கஃப்லிங் என்ற நிறுவனத்திலேயே முதலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி தங்களையே முதலான தொடர்பாளர்களாகவும் ரெய்டன் பதிவு செய்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உண்மையான முதலீட்டாளர்களுக்கும் இடையே எவ்வித சட்ட ரீதியான தொடர்பும் இல்லை.

அபி கணேசலிங்கம் இல்லாத நேரங்களில் பிரியா, மேகா ஆகிய பெயர்களில் சிலர் மின் அஞ்சலில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக பாதிக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பையும் ரெய்டன் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் முதலீட்டுக்கு என்ன ஆனாது என்று தெரியாமல் இருண்ட எதிர்காலத்தோடு தாங்கள் குடியிருக்கும் வீட்டை இழக்கும் அச்சத்துடன் வாழ்கின்றனர்.

இங்கிலாந்தில் மோசடிகள் அதிகரிக்கின்றது! தமிழர்கள் தமிழர்களையே மோசடி செய்கின்றனர்!!!

இங்கிலாந்தில் பல்வேறு விதமான மோசடிகள் தொடர்ந்து வருவதும் இந்த மோசடிகளினால் அப்பாவிகள் பலர் பாரிய இழப்புகளுக்கும் உள்ளாகி வருவதும் தொடர்கதையாகி வருகின்றது. வியாபாரம், இலாப மீட்டுவது என்ற பெயரில் ஊரையடித்து உலையில் போடும் வேலைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். லண்டன் தமிழர்கள் சிலரும் தங்களை சமூகத் தலைவர்களாகக் காட்டிக்கொள்பவர்களும் கூட இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பணத்தை எப்படியாவது ஈட்டலாம் அதுவே தங்களது திறமை எனக்கருதும் இந்த உதவாக்கரைகள் தனிப்பட்ட பலரின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கு துணை போகின்றனர்.

இந்த மோசடிகளில் பெரும் இழப்பை ஏற்படுத்துவது வீட்டை வைத்து மேலதிக கடன்பெற்று முதலீடு செய்வது தொடர்பான மோசடிகள். ஹரோவில் இளம் தம்பதியினர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட சிலர் ஆதாரங்களை வழங்கி உள்ளனர். அவர்களுக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கைகளும் தயாராகி வருகின்றது. ஒரு வயதான தம்பதிகள் இவ்வாறான ஒரு முதலீட்டு திட்டத்தில் 200,000 பவுண்களை வழங்கி கடந்த சில மாதங்களாக எவ்வித வருமானத்தையும் பெறாமல் அவர்கள் இருக்கின்ற வீடே தற்போது வங்கியினால் விற்கப்படும் அபாய நிலைக்கு வந்துள்ளது. இவ்வாறு பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் வீடுகளை வாங்குவதற்கு சட்டத்தரணிகளுக்கு செலுத்தப்படுகின்ற பணத்தை ஒரு சில சட்டத்தரணிகள் கையாடல் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளனர். இவ்வாறு வீட்டை வாங்கவதற்கு வாங்குபவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 100,000 பவுண் வரை செலுத்திய தம்பதியினர் வீடும் வாங்காமல் அவ்வளவு பணத்தையும் இழந்து தொடர்ந்தும் வாடகை வீட்டில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

பப் அல்லது பார் – தவறணை நடத்துகிறோம் என்ற பெயரில் அரை நிர்வாண நடனங்களை ஏற்பாடு செய்து அவ்வாறான இடங்களில் போதைப்பொருட்களையும் கண்டும் காணாமல் அனுமதித்து இளம் சமூதாயத்தை அழிக்கும் தொழிலிலும் ஒரு சில தமிழ் தவறணை உரிமையாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அதீதமாக ஆசைப்பட்டு இல்லாதவர்களை ஆவணங்களில் உருவாக்கி தனிப்பட்ட மோசடிகளில் ஈடுபட்டு இருந்ததையும் இழந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் வீட்டையும் வைத்துக் கொண்டு அரச உதவிகளையும் எடுக்கும் பேராசையில் வீட்டை அவணங்களில் ஒருவரை உருவாக்குவது அல்லது இன்னொருவரின் பெயரில் வீட்டை மாற்றுவது போன்ற மோசடிகளும் தொடர்ந்து இடம்பெறுகின்றது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவபவர்கள் இங்குள்ளவர்களின் பெயர்களில் வீட்டை வாங்கி அந்த வீட்டில் இருந்துகொண்டே அரச உதவியை எடுப்பது போன்ற பல்வேறு மொள்ளமாரித்தனங்களிலும் ஈடுபடுகின்றனர்.

கிறடிட்காட் மோசடி மிகச் சாதாரணமான மோசடியாக இன்னமும் காணப்படுகின்றது. அண்மையில் கிங்ஸ்ரன் மருத்துவமனையில் மரணமானவரின் கிறடிட் காட்களை காணவில்லை என அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் கிறடிட் காட் தொலைத்துவிட்டதாக தாங்களே முறைப்பாடு செய்துவிட்டு அதனை பயன்படுத்திய சம்பவங்களும் சாதாரணமாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறானவர்கள் சிலர் மாட்டுப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

பிரித்தானிய பிரதமரே தன்னுடை இல்லத்தைத் திருத்துவதற்கான செலவை மூடி மறைத்த மோசடி தேசிய ஊடகங்களில் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இந்த நேர்மையின்மை சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் வெளிப்பட்டு வருகின்றது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம் 13 தடவைகள் பாங்கிரப்சி செய்து ஜனாதிபதியானார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மதப் படுகொலைகளுடன் சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டு இன்னமும் பலமாக உள்ளது. மோசடிகளைச் சகித்துக்கொள்கின்ற சமூகம் ஒன்று உருவாகிக்கொண்டு இருக்கின்றது.