Multiple Page/Post

கோவிட் 19 இன் மீள்வருகையா ? கடந்து வந்த காலங்கள் !

கோவிட் 19 இன் மீள்வருகையா ? கடந்து வந்த காலங்கள் !

உலனத்தின் பெரும்பாலான மாற்றங்கள் கண்டுபிடிப்புக்கள் அழிவுகளைத் தொடர்ந்தே உருவானது. இன்று நாங்கள் அனுபவிக்கின்ற தொழில்நுட்பங்களும் வாழ்க்கை முறையும் இரண்டாவது உலக யுத்தத்தின் விளைவு. இன்று பெண்கள் அனுபவிக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் கூட இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவு தான்.

COVID-19 ஒரு புதிய வாழ்க்கை முறையைக் கற்றுத்தந்து முன்னேற்றங்கள் தொலைவேலை (Work from Home) ஒரு புதிய பணியாற்றும் முறை என அறிமுகமானது. ஆன்லைன் கல்வி, டிஜிட்டல் சுகாதார சேவைகள் முக்கியத்துவம் பெற்றன. மக்கள் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையுடன் செயல்பட்டனர்.

இருப்பினும் தற்போது covid 19 மீண்டும் பரவ ஆரம்பித்து உள்ளமை மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. வருமுன் காப்பதே பொருத்தமானது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந், ஹொங்கொங் ஆகிய நாடுகளில் கோவிட் 19 மீண்டும் தலையெடுக்கின்றதா எனப் புருவங்கள் உயர்கின்றது.

மனித இனத்தின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தொற்றுநோய்களில் ஒன்றாக COVID-19 (கொரோனா வைரஸ் நோய்) கருதப்படுகிறது. இது 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் ஊஹான் நகரில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. குறுகிய காலத்திலேயே உலகெங்கும் பரவிய இந்த நோய், கோடிக்கணக்கான மக்களின் உயிரை வாங்கி அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு துறையையும் மாற்றியமைத்தது.

சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல், சுவை மற்றும் மணம் இழப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தான நிலைகளையும் உருவாக்குகிறது. வைரஸின் வேகமான பரவலைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கு, சமூக இடைவெளி, முகக்கவசம், தடுப்பூசி ஆகியவை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன.

COVID-19 வைரஸ், மருத்துவ ரீதியில் “SARS-CoV-2” என அழைக்கப்படுகிறது. இது முதலில் விலங்குகளில் இருந்த வைரஸாக இருந்து, மனிதர்களிடம் பரவ ஆரம்பித்ததாக நம்பப்படுகிறது. ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவருக்கு சிறுநீரகம், இருமல், தொடுதல் போன்ற வழிகளில் பரவுகிறது.

அதிக வேகத்தில் பரவும் தன்மை காரணமாக, உலக சுகாதார அமைப்பு (WHO) 2020 மார்ச்சில் இதனை “பாண்டமிக்” என அறிவித்தது. அதன் பின்பு உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து, மருத்துவ வசதிகளை மேம்படுத்த தொடங்கின.

மிகவும் மோசமான நிலைமையில், இது குருதிச்செறிவு, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பரிதாப நிலைகளுக்கு வழிவகுக்கும்.உலகெங்கும் இந்த வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
COVID-19 உலகின் இயங்கும் முறைமைகளைத் தற்காலிகமாக முடக்கி வைத்தது. தொழில்கள் மூடப்பட்டன, பணியிழப்பு ஏற்பட்டது, பல நாடுகளில் பொருளாதாரம் சரிந்தது. கோடிக்கணக்கான உயிர்கள் இழந்தன. பள்ளி மற்றும் கல்லூரிகள் அடைக்கப்பட்டதால் மாணவர்கள் ஆன்லைன் கல்விக்கே மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பின. மருத்துவர், செவிலியர்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளானார்கள்.

தனிமைப்படுத்தல், பயம், நோயிழப்பு போன்ற காரணங்களால் மக்களில் மன அழுத்தம், கவலை, மன உளைச்சல் போன்ற மனநிலைச் சிக்கல்கள் அதிகரித்தது.

COVID-19 ஐ கட்டுப்படுத்தும் மிக முக்கியமான வழியாக தடுப்பூசி விளங்கியது. Pfizer-BioNTech, Moderna, AstraZeneca, Covaxin, Covishield ஆகியவை முன்னிலை பெற்ற தடுப்பூசிகளாகும். தடுப்பூசி பெறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம் நோயின் தாக்கம் குறைக்கப்பட்டு, மரண விகிதமும் குறைந்தது.

2025 ஜூன் 4 ஆம் தேதியின்படி, இந்தியாவில் COVID-19 தொற்றுநோயின் நிலைமை மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய COVID-19 நிலவரப்படி 4,302 பேருக்கு நோய் தொற்று அடையாளம் காணப் பட்டு உள்ளது. 24 மணி நேரத்தில் 864 பேருக்கு தொற்றியுள்ளது. மொத்தமாக 44 பேர் உயிரைந்துள்ளனர். 24 மணி நேரத்தில் 7 மரணங்கள் பதிவாகியுள்ளது. முக்கியமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களாக கேரளாவில் 1,373 நோயாளிகள், மகாராஷ்டிரா 510, குஜராத்: 397, டெல்லி: 393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தற்போது பரவி வரும் COVID-19 வைரஸ் வகைகள்: LF.7; XFG; JN.1; NB.1.8.1; இந்த வகைகள் அனைத்தும் Omicron வகையின் துணை வகைகளாகும். NB.1.8.1 வகை தற்போது உலக சுகாதார அமைப்பால் ‘Variant Under Monitoring’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் இடம் இருந்து எம்மை காத்துக் கொள்ள முகக்கவசம் அணியவும், கைகளை அடிக்கடி கழுவவும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களைத் தவிர்க்கவும், அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் தற்போது COVID-19 தொற்று தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் செயல்பாட்டில் உலகளாவிய அதிகரிப்பு 2025 பிப்ரவரி முதல் பதிவாகியுள்ளது.

இலங்கையின் சுவாச கண்காணிப்பு அமைப்பின்படி, 2024 ஆம் ஆண்டில், SARS-CoV-2 வைரஸிற்காக சோதிக்கப்பட்ட சுவாச மாதிரிகளில் 3% நேர்மறையான முடிவுகளை வழங்கியுள்ளன. இந்த எண்ணிக்கை 2024 மே மாதத்தில் 9.6% ஆக உயர்ந்தது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டு இதுவரை SARS-CoV-2 வைரஸின் சராசரி நேர்மறையான முடிவுகள் கிட்டத்தட்ட 2% ஆக உள்ளன. தற்போது சிறியளவிலான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, உடனடியாக எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்று கூறியுள்ளார். இருப்பினும், அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் இலங்கையில் பரவி வருவதாக பகிரப்படும் பல தகவல்கள் உண்மை இல்லை என Fact Crescendo போன்ற உண்மை கண்டறியும் நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பிற நாடுகளில் ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து போன்ற சில நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவ, சமீபத்திய கொவிட்-19 வைரஸின் திரிபு மிகவும் பாரதூரமானது அல்ல எனவும், உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியில் அதிக கவனம் செலுத்தியதால் வைரஸின் வீரியம் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். சுருக்கமாக, இலங்கையில் கோவிட்-19 வைரஸ் தொடர்பாக சிறியளவிலான அதிகரிப்பு காணப்பட்டாலும், குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. மேலும், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

COVID-19 என்பது வெறும் ஒரு தொற்றுநோய் மட்டுமல்ல. அது மனித இனத்திற்கே ஒரு நெருக்கடியான பாடமாக இருந்தது. இது நம்மை எச்சரிக்கிறது மனிதன் இயற்கையுடன் சுமூகமாக வாழ்கின்ற அளவிற்கே பாதுகாப்பானது.

நாம் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட தொற்றுநோய்களை எதிர்கொள்ள எச்சரிக்கையுடன், முன்னெச்சரிக்கையுடனும், அறிவுடனும் செயல்பட வேண்டும். சுகாதார ஒழுங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது அறிவு ஆகியவை இனிமேலும் நம் வாழ்க்கையில் முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.

COVID-19 ஒரு எச்சரிக்கையாகும் இயற்கையோடு நமக்கு இருக்க வேண்டிய சமநிலையை உணர்த்தியது. எதிர்காலத்தில் இப்படிப் பட்ட தொற்றுநோய்களை எதிர்கொள்வதற்கான சீரான மருத்துவ மற்றும் சமூக தயாரிப்புகள் அவசியம் என்பதை COVID-19 நமக்கு உணர்த்தியுள்ளது.

இலங்கையில் ஓக்ரோபர் 27, 2024 திகதியில் வெளியான விபரங்களின் படி கோவிட் இனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 6,72,754; இறந்தவர்களின் எண்ணிக்கை: 16,897; அன்று பாதிக்கப்பட்டிருந்தவர்கள்: 5 பேர் மட்டுமே. நோயிலிருந்து குணமடைந்தவர்கள்: 6,55,852 பேர்; இறப்பு வீதம்: 2.5 சதவிகிதம்; பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 36 இலட்சம் பேர்.

மெய்பொருள் காணுமா யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன் யுகெ ?

மெய்பொருள் காணுமா யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன் யுகெ ?

1970 பதுக்களில் யாழில் பல்கலைக்கழகம் அமைவதற்கு எதிராக தமிழ் தேசியம் போர்க்கொடி தூக்கியது. தமிழரசுக் கட்சி யாழில் பல்கலைக்கழகம் உருவாவதை எதிர்த்தது. தமிழ் காங்கிரஸ் யாழில் இந்து பல்கலைக்கழகம் உருவாக வேண்டு; என்று கோரினர். ஆனால் பொன்னம்பலத்தின் குடும்பத்தில் யாரும் இந்துநாகரீகம் கற்கவில்லை. ஆனால் இப்போதும் தாங்கள் இந்துநாகரீகத்தை வளர்க்க யாழில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தருமாறு கோருகின்றனர். ஆனால் இந்துநாகரீகமும் கலைப்பீடத்தில் படித்தவர்களும் வேலை வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். அக்காலத்தில் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது சிறிலங்கா சுதந்திரக் கட்சி. ஆட்சியிலிருந்த இடதுசாரிகளின் தூண்டுதலால் 1974இல் உருவாக்கப்பட்டது தான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

அன்று யாழில் பல்கலைக்கழகம் உருவாவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய யாழ் தமிழ் தேசியம் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தை தனது கோட்டையாக்கியுள்ளது. காலங்கள் உருண்டோடி யாழ் பல்கலைக்கழகம் தனது 50 ஆண்டுகளை எட்டுகின்றது. பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது முதல் தமிழீழ விடுதலைப் போராட்டம் வீச்சுப் பெற்ற 1980க்களின் நடுப்பகுதி வரையான முதற் பத்து ஆண்டுகள் யாழ் பல்கலைக்கழகத்தில் இடதுசாரி – சோசலிச சிந்தனை வீச்சுப் பெற்றிருந்தது.

தற்போது யாழ்பாணத்துக்கு வெளியே, இலங்கைக்கு வேளியே சென்ற பல்கலைக்கழக பட்டதாரிகள் ஒன்று சேர்ந்து தாங்கள் தாங்கள் வாழும் நாடுகளில் அமைப்புகைள உருவாக்கி வருகின்றனர். அவ்வாறான ஒரு அமைப்பை பிரித்தானியாவில் அமைக்க பல முயற்சிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட போதும் அது நீண்டகாலமாகக் கைகூடவில்லை. ஆனால் இந்த ஆண்டு அதில் அவர்கள்; வெற்றி பெற்று 1100 பேர்வரை கலந்துகொண்ட நிகழ்வை லண்டன் கிறிஸ்றல்பலஸில் கடந்த ஆண்டு நவம்பர் 30 இல் ஏற்பாடு செய்திருந்தது.

மண்டபம் செலவு 30,000 பவுண் உட்பட மொத்தமாக 44,000 பவுண் செலவில் இந்நிகழ்வு வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களது வருமானம் 52,000 பவுண்களாகவும் செலவு போக 8,000 பவுண்கள் மிகுதியாகவும் கிடைத்துள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ கிறிஸ்ரல்பலஸில் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்த போதே இந்தச் சங்கத்துக்குள்ளே குழப்பநிலை ஆரம்பமாகிவிட்டது. முதற் கோணல் முற்றும் கோணல் என்ற நிலையில் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ உள்ளது. இது தொடர்பில் சாந்தி ரதுலோச்சனன் பதிவு செய்த குறிப்பு அங்குள்ள பிரச்சினையின் ஆழத்தை மிகத் தெளிவாகக் குறிப்பிடுவதாக உள்ளது. “ஒரு பெண் 01.10.24லிருந்து 29.12.24 வரை செய்த வீட்டுக்கு கூரை போட வந்துள்ளார்கள் சிவகுரு ஜெயானந்தன், புனிதா கணேஸ்வரன். ஒரு பழைய மாணவர்களுக்கும் அறிவிக்காது, தன்னைத் தலைவராக நினைத்து, யூலை 07, 2024 அன்று ஒரு வெளிநாட்டு நிறுவனத்துக்கு பொன் விழாவை தாரைவார்த்துக் கொடுத்தவர். இதைத் தவிர எந்த சமூகப் பணியிலும் ஈடுபடவில்லை”. யாழ் பல்கலையில் 1984-85 இல் பௌதீக விஞ்ஞான பீடத்தில் கற்ற இவர், தன்னோடு தலைமைப் பதவிக்கு போட்டியிட்டவர் தொடர்பில் பதிவிட்ட கருத்து.

யுகெ அலுமினி அசோசியேசன்ஸ் நவம்பரில் தங்களுடைய நிகழ்வை கொண்டாடுவதற்கு முன் அதற்கான விடயங்களை சிவகுரு ஜெயானந்தன் என்பவர் தன்னிச்சையாக மேற்கொண்டு செயற்பட்டார் என்று குற்றம்சாட்டப்படுகின்றது. இங்கு சாந்தினி குறிப்பிடும் வெளிநாட்டு நிறுவனம் லிஃப்ற் என்கின்ற அமைப்பு. ஜெயானந்தன் இந்த லிஃப்ற் என்ற அமைப்புடனும் நெருக்கமாக உள்ளார். யாழ் பல்கலைக்கழக யுகெ அலுமினி அசோசியேஸன்ஸை உருவாக்க சாந்தி ராகுலேஸ்வரன் போன்ற சிலர எண்ணிய போதும் அதனை நடைமுறைச்சாத்தியமாக்கியது லிஃப்ற் – LIFT என்ற அமைப்பே என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத சிவகுரு ஜெயானந்தனின் நண்பர். அமெரிக்காவில் இருந்து வந்து நின்ற மூவர் இந்நிகழ்வை அரங்கேற்ற முழுமுயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவர் தங்களுடைய நோக்கத்தை வெளிப்படையாகக் குறிப்பிடாமல், இந்த அலுமினி அசோசியேஸனை வைத்து லிஃப்ற் என்ற தங்களுடைய அமைப்புக்கு நிதி திரட்டும் முயற்சியை மறைமுகமாக மேற்கொண்டிருந்தனர். அதனையொட்டியே பிரச்சினை உருவானது.

ஆனால் தொடர்ச்சியாக லிஃப்ற் அமைப்புக்கு எதிராக யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன்ஸைச் சேர்ந்த பலரும் கருத்துக்களை வெளியிட்டதும் அதில் நேர்மைத் தன்மை இல்லாததும் லிஃப்ற் அமைப்பு யூகே அலுமினி அசோசியேசன் யுகெ இலிருந்து ஒதுங்க நிர்ப்பந்திக்கப்பட்டது. நவம்பர் 30 கிடைத்த லாபத்தில் பங்கும் வழங்கப்பட வில்லை. ஆனாலும் இது தொடர்பில் தொடர்ந்தும் சந்தேகம் எழுப்பப்படுகின்றது. லிஃப்ற் அமைப்பின் சின்னம் பொறிக்கப்பட்ட சேர்ட்ஷடகள் அலுமினி அசோசியேசன்ஸ் சார்ந்த நிகழ்வில் விற்கப்பட்டது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தகின்றது. அத்தோடு லிஃப்ற் அமைப்பின் பிரதிநிதியாகக் கருதப்படும் சிவகுரு ஜெயானந்தன் தொடர்ந்தும் யாழ் பல்கைலக்கழக யூகெ அசோசியேசன்ஸ் தலைவராக இருப்பது முரண்பட்ட நலன்கள் கொண்ட செயற்பாடக பார்க்கப்படுகின்றது.

தற்போது யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ இன் யாப்பு விதிகளை அமைப்பதற்கு ஒரு குழு உருவாக்கப்பட்டு அக்குழு யாப்பு விதிகளை உருவாக்கி வருகின்றது. அந்த விடயம் யூன் 15 மட்டில் நிறைவடையும் என தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி உருவாக்கப்படும் யாப்பின் பிரகாரம் தற்போது உள்ள அலுமினி அசோசியேசன்ஸ் தற்போதைய செயற்கழு கலைக்கப்பட வேண்டும். புதிய யாப்பின் பிரகாரம் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு அதன் செயற்குழுவுக்கான தேர்தல் நடத்தப்பட்டு புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட வேண்டும்.

1993 முதல் இப்போது வரையான 30 ஆண்டு காலத்தில் யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ யை உருவாக்க ஐந்து தடவைகள் முயற்சி எடுக்கப்பட்டதாகத் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றார் சங்கரப்பிள்ளை முருகையா. எஸ் முருகையா யாழ் பல்கலைக்கழகத்தின் புவியில்துறையில் கற்று விரிவுரையாளராகவும் இருந்தவர்.அவர் மேலும் குறிப்பிடுகையில் “தற்போது யாப்பு தயாரிப்பு வேலைகள் முடிவுக்கு வந்தள்ளது. அதனடிப்படையில் செயற்பட்டு பல்கலைக்கழகத்திற்கும் நாட்டுக்கும் நாங்கள் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும”; எனத் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் இன, மத, பிரதேச, சாதிய வேறுபாடுகள் இல்லாமல் இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் கல்வி கற்கின்றனர். அதனால் பிரித்தானியாவில் உருவாக்கப்படும் அலுமினி அசோசியேசன்ஸ் அங்கு கற்ற அனைத்து மாணவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செயற்படுவதே பொருத்தமானதாக அமையும் என்கிறார் சங்கரப்பிள்ளை முருகையா. மாறாக மற்றையவர்களைப் புறக்கணித்து வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்களுக்கான அலுமினி அசோசியேசன்ஸ் என்று உருவாக்குவது அரோக்கியமானதாக இராது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் தற்போது கணித விஞ்ஞான பீடங்களில் கற்பவர்களில் 70 வீதமானவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தினர், கலைப்பீடத்தில் கணிசமான தொகையில் மலையகத் தமிழர்கள் கற்கின்றனர். நாடுமுழுவதும்; இருந்து முஸ்லீம் மக்கள் கற்கின்றனர். இவர்களையெல்லாம் புறக்கணித்து வடக்கு – கிழக்கு தமிழ் மாணவர்களுக்கான அலுமினி அசோசியேசன் என்றமைப்பது அனைவருக்குமான அலுமினி அசோசியேசன் ஒன்று உருவாவதற்கு அத்திவாரம் இடுவதாகவே அமையும் என்பதையும் எஸ் முருகையா தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் சாந்தி ரதுலோச்சனன் தலைவராக தெரிவு செய்யப்படும் வாய்ப்பு இருந்த போதும் அவர் இறுதி நேரத்தில் வெளியிட்ட நேர்காணலில் தன்னை வல்வெட்டித்துறை வீரப்பெண் என்றும் அதனால் தனக்கு வாக்களிக்கும்படி கேட்டதும் அவரது வாய்ப்பை இழக்கச் செய்ததாக சிலர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர்.

ஆனால் தற்போது தலைவராக உள்ள சிவகுரு ஜெயானந்தனும் செயலாளர் புனிதா கணேஸ்வரனும் தற்போதைய செயற்குழுவை தொடர முயற்சிக்கின்றனர.; இதுவும் தற்போது அலுமினி அசோசியேசன்ஸ்க்குள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ இன் வட்ஸ்அப் குறூப்பில் பதிவு செய்யப்படும் கருத்துக்கள் நாகரீக சமூகம் ஏற்றுக்கொள்ளத் தகாத வகையிலும் அமைந்துவிடுகின்றது என சிலர் தங்கள் அதிருப்தியை தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அருள் பொன்னையா தனது விசனத்தை வருமாறு வெளியிட்டுள்ளார்: ஒரு விழாவை ஏற்பாடு செய்வதும் அதனை திறம்பட நடத்துவதும் இ சிக்கல்கள் வந்தால் உள்வீட்டுக்குள்ளேயே தீர்த்துக் கொளலளவும் முடியாதஇ கல்வி அறிவையும் ஆளுமையையையும் தான் பல்கலைக் கழக கல்வி தந்ததா என்ற கேள்வி எழுவதுடன் வயது என்பது கூட பக்குவத்தை கொடுக்கவில்லையா? என்ற கேள்வியும் எழ வைக்கிறது…

மோதல்கள் தொடர்வது உள ஆரோக்கியத்தையும் நிம்மதியையும் கெடுக்கும். அனேகமானவர்கள் உடல் உள ஆலோக்கியத்தை கட்டாயம் பேணவேண்டிய வயதுக்கு வந்து விட்டீர்கள். ஆவன செய்க.” என அருள் பொன்னையா சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அலுமினி அசோசியேசன் யுகெ விடயத்தை வலிந்து அரசியல் மயப்படுத்தும் போக்கும் துரோகி தியாகி எனக் கன்னம் பிரித்து ஆடும் நிலையும் ஆங்காங்கே தலைதூக்குவதாக சிலர் கவலைகொள்கின்றனர்.

பெண்களின் நாளாந்த வாழ்வை அச்சுறுத்தும் – கர்பணித் தாயின் தலையை வெட்டிக் கொய்யும், அதனைக் கொண்டாடும் காட்டுமிராண்டி மனநிலை !

பெண்களின் நாளாந்த வாழ்வை அச்சுறுத்தும் – கர்பணித் தாயின் தலையை வெட்டிக் கொய்யும், அதனைக் கொண்டாடும் காட்டுமிராண்டி மனநிலை !

நேற்றைய தினம் வவுனியாவில் கணவனால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலை ஆசிரியையும் கர்ப்பணித் தாயுமான சொர்ணலதா விவகாரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் சமூகத்திற்கு ஒரு மிகப் பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் பகுதியில் குடும்ப வன்முறையின் உச்ச கட்டமாக இதனைப் பார்க்க வேண்டும். கொலையான பெண் தவறு இழைத்தாரா?அல்லது இழைக்கவில்லையா? என்ற விவாதத்திற்கு அப்பால் அப்பெண்ணை கொலை செய்யும் அதிகாரம் கொலை செய்த ரா ஜூட் என்ற கணவனுக்கு இல்லை.

யுத்த காலம் கண்டிராத கொடூரத்தை தமிழ் பெண்கள் தற்போது அனுபவிக்கின்றனர். புங்குடுதீவு வித்தியா முதல் வவுனியா சொர்ணலதா வரை தமிழ் சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏதும் நிகழவில்லை. மாறாக பெண்களை பாலியல் பண்டங்களாகவும் பிண்டங்களாகவும் நோக்கும் கருத்தியல் தமிழ் தேசிய மனநிலையாக ஆண்கள் மத்தியில் உருவாகி வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் எந்தச் சந்தர்ப்பத்திலும் பெண்களை கண்ணியக் குறைவாக அணுகவில்லை. ஆனால் பிரபாகரனையும் மாவீரர்களையும் வைத்து அரசியல் செய்யும் அரசியல் தலைவர்களும் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் அவர்களது பெயரைச் சொல்லும் ரிக்ரொக் விசிலடிச்சான் குஞ்சுகளும் தமிழ் தேசியத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டு பாலியல் லஞ்சம், பாலியல் சுரண்டல், பெண்களை இழிவுசெய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இந்த தமிழ் தலிபான்கள் தமிழ் மக்களுடைய முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். ஒரு கர்பிணித் தாயின் தலையைக் வெட்டிக் கொய்வதும் அவர்களை மாவீரர்களாக்குவதும் இதிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது.

ஆசிரியையின் படுகொலை விவகாரத்தில் வழமை போலவே சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடும் பெரும்பாலான தமிழ் ஆண்கள் கொலை செய்த கணவனை மாவீரனாக புகழ்கிறார்கள். வக்கிரமான கருத்துக்களை பதிவிடுகிறார்கள். மேலும் மற்றைய ஆண்களை கத்திகளை தீட்டி தயாராக வையுங்கள் என உற்சாகப்படுத்துகிறார்கள். கொலையான ஆசிரியை தன்னை விட வயது குறைந்த இளைஞர் ஒருவரோடு உறவில் இருந்தமையே இக்கொலைக்கான பின்னணி என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஏதாவது உண்மை உள்ளதா ? அல்லது வழமையாக சில கணவன்களுக்கு இருப்பது போன்ற சந்தேக புத்தியில் வந்ததா? அல்லது படுகொலை செய்யப்பட்ட பெண் தொடர்பில் குறித்த இளைஞன் பரப்பிய கிசுகிசுவா ? என்ற எவ்வித விசாரணையும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிரான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

இந்த ஆண்மையவாதச் தமிழ் தலிபான்கள் சொல்வது போல் திருமண உறவைத் தாண்டிய உறவைப் பேணுபவர்களின் தலையை வெட்டிக் கொய்யலாம் என்றால் இந்த சமூகவலைத் தளங்களில் புகழாரம் சூட்டும், மற்றும் பல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆண்களின் தலைகள் பல தடவை கொய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தப் படுகொலை விவகாரம் வெறுமனே திருமண உறவை தாண்டிய உறவு தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் என கடந்து செல்ல முடியாது. திருமண உறவில் நம்பிக்கைத் துரோகம் செய்யும் துணையை கொலை செய்து தான் தண்டிக்க வேண்டும் என்று பாதிக்கப்படுவோர் கிளம்பினால் பொலிஸ் ஸ்ரேசன் வாசலில் நூற்றுக்கணக்கான ஆயிரக் கணக்கான உயிரற்ற மனித தலைகள் தான் உருளும்.

பொதுவில் ஒரு ஆண் திருமண உறவில் இருந்து கொண்டு வேறொரு பெண்ணுடன் உறவை ஏற்படுத்தும் போது அது சமூகத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்துவதில்லை. அந்த விவகாரம் மானம் போன இழிச் செயலாக கருதப்படுவதில்லை. ஆண் என்றால் அப்படித்தான் ”சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் கழுவுவான்” என சமூகம் சமாதானம் கூறுகிறது. மறுபுறமாக பெண் என்றால் “சேலை முள்ளில் விழுந்தாலும், முள் சேலையில் விழுந்தாலும் சேலை தான் கிழியும்“ என பெண்களை பயமுறுத்தி பெண்கள் மீதே பழி போடுகிறார்கள். வவுனியாவில் கொலையான கர்ப்பணித் தாய் மீதான அவரது கொலை வெறித் தாக்குதல் வரலாற்றுக்கு முந்திய கடைத்தனம் மிருகத்தனமானம் நிறைந்தது. இதனை வரவேற்பவர்கள் மிகமோசமான அடிப்படைவாதிகள். இவர்கள் நவீன சமூகத்தில் வாழத் தகுதியற்ற மனிதர்கள். இது பெண்களை உடமையாக பார்க்கும் ஆணாதிக்க கருத்தியலின் மனப்பாங்கின் வெளிப்பாடாகும். கொடூரமாக கொலை செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்க்காக குரல் கொடுக்காத சமூகம் அப்பெண்ணின் நடத்தையே அவர் கொலையானதற்கு காரணம் என அவதூறு பேசுகிறது. இதுவொரு இரட்டைக்கொலை.

சமீபத்தில் மட்டக்களப்பில் பட்டப்பகலில் வீட்டில் தனியே இருந்த 37 வயது குடும்பப் பெண் விதுஷாவும் மர்மமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளி அல்லது கொலையாளிகள் கண்காணிப்புக் கமராப் பதிவு றிசீவரை எடுத்துச் சென்றுள்ளனர். கொலை நடந்து நாலைந்து நாட்கள் கடந்தும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொலையாளிகள் கொலை செய்யப்பட்டவருக்கு தெரிந்தவராக இருக்க வாய்ப்பு உண்டு. கொலைக்கான பின்னணியும் மர்மமாகவேயுள்ளது. பெரும்பாலும் பெண்கள் வீட்டு வன்முறைகளில் தமது கணவன் மற்றும் நெருங்கிய உறவினர்களாலேயே கொல்லப்படுகின்றனர்.

உலகமயமாக்கமும் பரந்துபட்ட இணையப் பயன்பாடும் பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளை அதிகரித்திருக்கின்றன. கட்டற்ற இணையப் பயன்பாடு பெண்கள் மீதான விரோத மனப்பாங்கை மற்றும் கருத்தியலை கட்டியெழுப்ப பேருதவி புரிகின்றன. தற்போதைய நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பெண்களை நிர்வாணமாக்கி அவர்களது படங்களை பகிர்வதையும் அவர்களுக்கு எதிராக கருத்துக்களைப் பதிவதையும் தமிழ் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்நின்று செய்கின்றனர். வேழமாளீதன் போன்ற பாலியல் லஞ்சம் கோருபவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக நியமித்துள்ளார். இவர்களே வெவ்வேறு பெயர்களில் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் வலைத்தளங்களை முகநூல்களை உருவாக்கி பெண்கள் மீதான தங்களுக்கு பிடிக்காதவர்கள் மூலமான தாக்குதல்கலை தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்கின்றனர்.

தனியார் கல்வி நிறுவனத்தின் கலைவிழாவில் நடனமாடிய மாணவியை பாலியல் தொழிலாளியாக சித்தரிக்கும் ஊழல் ஒழிப்பு அணி வன்னியின் அட்டூழியம். நிஜ உலகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகள், ஒடுக்குமுறைகள், வீட்டு வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளுக்காக மேலாக இணையத்தில் மோசமான கருத்தியல் ரீதியான வன்முறைகள் நாள்தோறும் நடக்கின்றன.

எம்பி அர்ச்சுனா இராமநாதனின் பினாமிகளால் நடத்தப்படும் ஊழல் ஒழிப்பு வன்னி அணி என்னும் போலி முகநூலின் பின்னால் மறைந்து கொண்டுள்ள ஒரு பாலியல் வக்கிரம் கொண்ட ஆண்மையவாத கூட்டம் சமூகவலைத்தளங்களில் தமிழ்ப் பெண்கள் மீதான மோசமான தாக்குதலை மேற்கொள்கின்றது. இவர்களே வெவ்வேறு பெயர்களில் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் வலைத்தளங்களை முகநூல்களை உருவாக்கி பெண்கள் மீதான தங்களுக்கு பிடிக்காதவர்கள் மூலமான தாக்குதல்கலை தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்கின்றனர். ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களை நிர்வாணமாக்கி அதன் மூலம் விளம்பரம் தேடுகின்றனர்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக காட்டும் எதிர்வினை தமிழ்ச் சமூகத்தில் மிக அசமந்தமாகவே உள்ளது. இந்தப் போக்கினை சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும் போதும் காணலாம். சமீபகாலங்களாக பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகள் அல்லது இளம்பெண்கள் தொடர்பில் காட்டும் கரிசனத்தை விட சம்பந்தப்பட்ட குற்றம் சுமத்தப்பட்ட ஆண்களை பாதுகாக்கும் சமூக மனப்பாங்கே காணப்படுகின்றது. இந்த பாரபட்சமான வக்கிரமான மனப்பாங்கு ஆண்மையவாத அரசியல், சமூக, சமய மற்றும் கலாச்சார கருத்தியலின் விளைவாகும். இதனை கொழும்பு கொட்டாஞ்சேனையில் ஏப்பிரல் 29 ஆம் திகதி 7 ஆவது மாடியிலிருந்து குதித்த இறந்த மாணவி டில்ஷி அம்ஷிகாவின் தற்கொலை விடயத்திலும் கணவனால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சொர்ணலதா விடயத்திலும் சமூக ஊடகங்களின் பின்னூட்டல்களில் இடப்படும் கருத்துக்களிலிருந்து அப்பட்டமாக தெரிகிறது.

பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் – தெரிவாகாத மூன்று லட்சம் மாணவர்களுக்குமான வழிகாட்டி – #Pathfinde

பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் – தெரிவாகாத மூன்று லட்சம் மாணவர்களுக்குமான வழிகாட்டி – #Pathfinde

சமூக செயற்பாட்டாளர் மருத்துவ கலாநிதி அருள் கோகிலன் உடன் ஒரு கலந்துரையாடல்

புலிகளின் கட்டுப்பாடு மிக கடுமையாக இருந்தது. தங்கள் திசைமாறும் எனக் கருதப்படும் வேறு தமிழர்ச் சிறுகட்சிகள், அமைப்புகள், தனிநபர்கள் கூட ஒழிக்கப்பட்டனர்.

புலிகளின் கட்டுப்பாடு மிக கடுமையாக இருந்தது. தங்கள் திசைமாறும் எனக் கருதப்படும் வேறு தமிழர்ச் சிறுகட்சிகள், அமைப்புகள், தனிநபர்கள் கூட ஒழிக்கப்பட்டனர்.

இதனால் பல தமிழர் இயக்கங்கள் அழிக்கப்பட்டன (ஊர்மாறன், TELO, EPRLF, PLOTE ஆகியவை). இதுவே சகோதரப்படுகொலைக்கு வழிவகுத்தது — ஒரு மக்கள் போராட்டம் பலவீனமாக்கப்பட்டு, ஒரே ஆதிக்கம் கொண்ட இயக்கமாக மாற்றப்பட்டது.

கஜாவின் முன்னணியைக் கைவிடும் தமிழ் மக்கள் ! தமிழ் கட்சிகளும் கைவிடும் அபாயம் !

கஜாவின் முன்னணியைக் கைவிடும் தமிழ் மக்கள் ! தமிழ் கட்சிகளும் கைவிடும் அபாயம் !

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் அரசியல் கண்ணாடியாக உண்மையைப் பிரதிபலித்து நிற்கின்றது. சமூக வலைத்தளங்களும் பாரம்பரிய ஊடகங்களும் கட்டமைத்த பிம்பங்களை இத்தேர்தல் முடிவுகள் தகர்த்து எறிந்துள்ளது என்றால் அது மிகையல்ல. ‘அபிவிருத்தி என்பது சலுகை எங்களுக்கு சலுகை வேண்டாம் உரிமை தான் வேண்டும் என்று கோரி’ தமிழ் மக்களின் முன்னேற்றத்ததைத் தடுத்து வந்தன இந்தத் தமிழ் தேசியக் கட்சிகள். ஆனால் தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளின் அடிப்படை என்ற அபிவிருத்தி என்பதை மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டு அதற்கேற்ப வாக்களித்துள்ளனர். தமிழ் மக்களின் மனோநிலையை G L Tharshan னின் இக்காணொலிப் பதிவு மிகத் தெளிவாக முன்வைக்கின்றது.

இனவாதக் கருத்துக்களை கக்கி உரிமை தவிர வேறேதும் சலுகை வேண்டாம் என்ற கோடீஸ்வரர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தையிட்டி காணிப் பிரச்சினைக்காக ஒவ்வொரு பௌர்ணமியும் போராடி வருகின்றது. உரிமைப் பிரச்சினை, காணிப் பிரச்சினையை முன்வைத்து தன் அரசியல் வாக்கு வங்கியைக் கட்டமைத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி இத்தேர்தலில் மிகுந்த பின்னடைவைச் சந்தித்தது. இக்கட்சியானது உதிரிகளான பலரையும் ஒன்றிணைத்து தமிழரசுக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் ஒரு சவாலாக இருப்பதாக கற்பிதம் செய்திருந்தது.

தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் நேரடிப் பிரதிநிதிகள் போலவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலை தாங்களே முன்னெடுப்பதாகவும் இவர்கள் தங்களைத் தாங்களே நம்ப ஆரம்பித்துவிட்டனர். அதற்கும் ஒருபடி மேலே போய் தேசியத் தலைவருக்குப் பின் அடுத்த தேசியத் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பிரச்சாரப் பிரங்கியான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்தார்.

ஆனால் தேர்தல் முடிவுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கீழ் நிலைக்குத் தள்ளியுள்ளது. 2018 பெப்ரவரியில் நடந்த உள்ளுராட்சித் தேர்தலில் 0.69 வீத வாக்குகளைப் பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வாக்கு வங்கி 0.68 வீத வாக்குகளாகக் குறைந்தது. 85,000 வாக்குளை 2018 இல் பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் 71,000 வாக்குகளையே பெற்று வடக்கு கிழக்கில் 4வாது இடத்துக்கு தள்ளப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்னமும் குண்டுச் சட்டிக்குள் குதிரையோடுவது போல் பெரும்பாலும் குடா நாட்டிற்குள்ளேயே செயல்படும் ஒரு கட்சியாகவே இன்றும் உள்ளது.

சுமந்திரனுக்கு எதிராக தனிப்பட்ட தாக்குதலை நடாத்தி வந்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தங்களுடைய பரம்பரை எதிரியாக உள்ள தமிழரசுக் கட்சியை அதன் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரனை நிராகரிக்க வேண்டும் என்பதையே அவர் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனமாகக் கொண்டிருந்தார். கடந்த பத்து ஆண்டுகளாக சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அவர்களுடைய பிரதான ஆதரவுத்தளமான புலம்பெயர் தமிழர்களும் மேற்கொண்டு வந்தனர். ஆனால் வாக்குரிமையைக் கொண்ட களத்தில் வாழும் மக்கள் தங்கள் வாக்குகளை தமிழரசுக் கட்சிக்கும் சமந்திரனுக்கும் ஆதரவாகத் திருப்பி உள்ளனர். 2018 தேர்தலில் 2.73 விகித வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி கடந்த வாரம் நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் 2.96 விகித வாக்குகளைப் பெற்றுள்ளது.

கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கட்சியாக கூட்டணியாகப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கடந்த வாரம் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் தனித்தப் போட்டியிட்ட போதும் கணிசமான வாக்குகளை அவர் பெற்றிருந்தனர். ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 0.85 வீத வாக்குகளைப் பெற்று 106 ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது. அதே போல் தேசிய மக்கள் சக்தியும் கடந்த காலங்களில் எவ்வித ஆசனங்களும் இல்லாமல் தனது பயணத்தை ஆரம்பித்து இன்று வடக்கு கிழக்கின் இரண்டாவது பெரும் கட்சியாக தன்னை நிலைப்படுத்தி உள்ளது. எம் ஏ சுமந்திரனின் தேர்தல் வியூகம் அவர் இழந்த பலத்தை மீளப் பெறுவதற்கு வாய்ப்பைக் கொடுத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியுடைய அரசியல் செயற்பாடுகள் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் தமிழ், சிங்களக் கட்சிகள் எதிர்கால அரசிலை தலைமுழுக வேண்டும் என்கிறார் ஒரு பெரியவர். அவரின் கணிப்பின் படி தேசிய மக்கள் சக்தி மிக மெதுவாக ஆனால் ஸ்தீரமாக முன்னேறுகின்றது.

அவர்களைக் கையாளும் ஆற்றல் தமிழ் தேசியக் கட்சிகளிடம் போதாமையாக இருப்பதை ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரேன் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சிக்கும் – தமிழ் காங்கிரஸ்க்கும் இடையே உள்ள பரம்பரைப் போட்டியும் தனிநபர் தாக்குதலும், இவ்விரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான சூழ்நிலையைக் கடினமாக்கி உள்ளது. அதனால் எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. இதனை ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரேன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர்கள் யாழ் மாநகர சபையில் ஈபிடிபி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் கூட இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக குருசாமி சுரேன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

 

நாளாந்த பயணம் – இறுதிப் பயணமாகிறது ! 21 பேர் மரணம் ! இலங்கையின் வீதிகள் மரணவாயில்களா ?

நாளாந்த பயணம் – இறுதிப் பயணமாகிறது ! 21 பேர் மரணம் ! இலங்கையின் வீதிகள் மரணவாயில்களா ?

மே 11 கொத்மலையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 21 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயப்பட்டுள்ளனர். இவ்வாவான விபத்துக்கள் நாளாந்த நிகழ்வுகளாகிவிட்டாலும் ஒரே விபத்தில் இவ்வளவு பெரும்தொகையானவர்கள் கொல்லப்பட்டது அண்மையில் நிகழ்ந்த கொடூரமான விபத்தாக மாறியுள்ளது. வழமையாக ஒரு விபத்தில் ஓரிருவரே கொல்லப்பட்டு வந்தனர். இலங்கையில் விபத்துக்கள் தற்செயலானவையல்ல. அவை தினமும் எதிர்பார்க்கப்படுபவையாக உள்ளது. இதற்கு கடந்த தசாப்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் மோசடிகள் முக்கிய காரணங்களாக இருந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் மலையகத்தில் நிகழ்ந்த மற்றுமொரு விபத்தில் வீதிப் பாவனைக்குரிய நிலையில் இல்லாத பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு பள்ளத்தில் வீழ்ந்தில் சிலர் கொல்லப்பட்டனர். இவ்வாறு பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

பாதுகாப்பற்ற – வீதிகள், மோசடியான வீதிப் பாவனைக்குரிய சான்றிதழ்கள், சரியான முறையில் பயிற்றுவிக்கப்படாத அல்லது லஞ்சம் கொடுத்து பெறப்படும் வாகன அனுமதிப் பத்திரங்கள், வீதிப் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காத சாரதிகள் இவ்வாறு பல்வேறு காரணங்கள் இந்த விபத்துக்களுக்கு காரணமாகின்றது. அந்த வகையில் பொருத்தமற்ற வாகனச் சோடிணைகள் அகற்றப்பட்டுள்ளது. ஏனைய விடயங்கள் தொடர்பில் கூடுதல் இறுக்கங்கள் கொண்டுவரப்பட வேண்டும். வீதிப் போக்குவரத்து மிகக் கடுமையாக்கப்பட வேண்டும். நாளாந்த பயணங்கள் இறுதிப்பயணங்களாகக் கூடாது. 2024 இல் மட்டும் 2541 பேர் வீதி விபத்துக்களில் கொல்லப்பட்டுள்ளனர். 2019இல் 3,097 ஆக இருந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் இது இன்னமும் குறைக்கப்பட வேண்டும்.

மேலும் மரணங்களைத் தவிர உடல் ஊனங்கள் மற்றும் குடும்பத்தின் பொருளாதார இழப்பு, மனநிலை பாதிப்பு, எதிர்காலம் என மதிப்பிட முடியாத பல துன்பியலுக்கு இந்த விபத்தக்கள் காரணமாகின்றன. இலங்கை போன்ற 22 மில்லியன் சனத்தொகை கொண்ட ஒரு நாட்டுக் இந்த விபத்துக்களும் அதனால் ஏற்படுகின்ற பொருளாதாரப் பாதிப்புகளும் மிக அதிகம். 70 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1,650 பேர் வரையானவர்களே வீதி விபத்துக்களில் இறந்துள்ளனர்.

இலங்கையில் இன்று இடம்பெற்ற விபத்தில் இந்த 21 பேரைத் தவிரவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மேலும் ஐந்து பேர் வரை கொல்லப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விபத்து மரணங்கள் தொடர்பில் இருக்கின்ற சட்டங்களை இறுக்கமாக அமுல்படுத்துவதுடன் தேவைப்பட்டால் புதிய சட்டவிதிமுறைகளைக் கொண்டுவரவேண்டும். மேலும் வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்தி சாரதிகளுக்கான தொடர்ச்சியான பயிற்சிமுறைகளை அமுஸ்படுத்த வேண்டும். வாகன வரியும் அதிகரிக்கப்பட வேண்டும். பொதுப் போக்குவரத்தை பாதுகாப்பானதாக்க வேண்டும்.

ஒற்றுமை மட்டும் போதாது – அபிவிருத்தியும் முக்கியம் ! சுமந்திரனை வைத்து அல்ல கட்சியின் கொள்கை அடிப்படையிலேயே உள்ளூராட்சி கூட்டுக்கள் அமையும் !

ஒற்றுமை மட்டும் போதாது – அபிவிருத்தியும் முக்கியம் ! சுமந்திரனை வைத்து அல்ல கட்சியின் கொள்கை அடிப்படையிலேயே உள்ளூராட்சி கூட்டுக்கள் அமையும் !

டிரிஎன்ஏ பேச்சாளர் குருசாமி சுரேன் எதிர்கால உள்ளூராட்சி சபைகள் கூட்டணிகள் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட உரையாடல்..!

சீரோவில் இருந்து ஹீரோவான என்பிபி வருகையால் தமிழ் தேசியக் கட்சிகள் அபிவிருத்தி பற்றியும் சிந்திக்கின்றன !

சீரோவில் இருந்து ஹீரோவான என்பிபி வருகையால் தமிழ் தேசியக் கட்சிகள் அபிவிருத்தி பற்றியும் சிந்திக்கின்றன !

அரசியல் சமூக செயற்பாட்டாளர் சோலையூரான் என அறியப்பட்ட முருகவேள் யோகராஜாவுடன் ஒரு உரையாடல்..

முதிர்ச்சியடையாத அணுவாயுதங்களை கொண்ட இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம்: இடையில் சிக்கித் தவிப்பது அப்பாவி மக்கள் !

முதிர்ச்சியடையாத அணுவாயுதங்களை கொண்ட இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம்: இடையில் சிக்கித் தவிப்பது அப்பாவி மக்கள் !

இந்தியா பாகிஸ்தான் இரு நாட்டு காஷ்மீர் எல்லைப்பகுதிகளிலும் எப்போதுமே ஒருவிதமான போர்ப் பதற்றம் நீண்ட காலமாக நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் தீவிரவாதிகளுக்கும் இந்தியா இந்திய ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை அவ்வப்போது நடந்துள்ளது.

இப்படியானவொரு பதற்றச் சூழலில் காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியாவால் தடை செய்யப்பட்ட இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய பாகிஸ்தான்
எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலும் சில இடங்களில் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு இந்தியா மற்றும் பாகிஸ்தான் காஷ்மீரை அண்டிய பகுதிகளில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக கூறிக் கொண்டு இந்திய இராணுவம் மே 7 ஆம் திகதி காலை 2 மணி அளவில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 இடங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் அரசாங்கத்தை நேரடியாக குற்றம் சாட்டும் ஆளும் பிஜேபி அரசாங்கம் பாகிஸ்தான் மீதான அதனது இராணுவநடவடிக்கைக்கு “ஆபரேஷன் சிந்தூர்” எனப் பெயரிட்டுள்ளது.

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 52 பேர் காயமடைந்து உள்ளனர் என ஷெபாஸ் ஷரீஃப் தலைமை தாங்கும் பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது . பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இந்தியாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

அதேநேரம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி இந்தியா தவறிழைத்து விட்டதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் பிரதமர். இந்தியாவிற்கு தக்க பதிலடி கொடுப்போம் என நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றியுள்ளார். பாகிஸ்தானும் தனது இராணுவம் ஐந்து இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், சில இந்திய வீரர்களை சிறைபிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்தியா தன்னால் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா பாகிஸ்தானில் தளம் அமைத்து இயங்குவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் ஆதரவளித்து வருவதாக தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகிறது.

தென்னாசியப் பகுதியில் சூழ்ந்துள்ள போர் பதற்றம் உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாட்டு இராணுவம் மற்றும் விமானப் படைகள் தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளும் மாறி மாறி போர் ஒத்திகைகளிலும் ஈடுபடுகின்றன. இரு நாட்டு அரசாங்கங்களும் தத்தமது நாட்டு மக்களை போர்ப் பதட்டத்தில் தள்ளியுள்ளன.

வழமையாக இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினாலே இந்தியா பாகிஸ்தான் போர் நடப்பது போன்றே ஆரவாரங்கள் நடக்கும். அப்படியிருக்க உண்மையான போரின் ஒத்திகைகள் தொடங்கிவிட்ட நிலையில் பரஸ்பரம் இரு நாட்டு ஊடகங்களும் சமுக ஊடகங்களும் வெறுப்பையும் பிரிவினைவாதத்தையும் பகையையும் பரப்பி வருகின்றன. சமூக ஊடகங்களில் நிறைய போலியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மேலும் இந்தியா – பாகிஸ்தான் மோதலால் ஆசிய விமான போக்குவரத்து வழித்தடத்திலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளமையும் குறிப்படத் தக்கது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள மோதல்
காரணமாக, பல ஆசிய விமான நிறுவனங்கள், ஐரோப்பா நோக்கி இயக்கப்படும் தமது விமானங்களின் போக்குவரத்து வழித்தடங்களை மாற்றியமைத்துள்ள நிலையில், சிலவற்றை இரத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளன.

முதிர்ச்சியடையாத அணுஆயுத சக்தி கொண்ட இந்த இரு நாடுகளுக்கிடையே கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு இப்போது பெரும் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்களிலும் இந்திய மற்றும் பாகிஸ்தானிடையேயான போர் ஒத்திகைச் செய்திகள் இடம்பிடித்துள்ளன. ஐக்கிய நாடுகளின் பிராந்தியத் தலைவர் இருநாடுகளையும் உச்சபட்ச பொறுமை காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதேமாதிரி 2023 இல் ஒக்டோபர் 7 ஆம் திகதி பாலஸ்தீன விடுதலைப் போராளிகளான ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல்ப் பகுதியில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பாலஸ்தீன பகுதியான ஹாஸா பள்ளத்தாக்கில் பெரும் போரில் ஈடுபட்டு வருகிறது. ஹாஸாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஹாஸாவில் மிகப் பெரிய மனிதவலம் உலகத்தின் முன் நடந்தேறி வருகிறது.

மேலும் இந்தியா பாக்கிஸ்தான் இடையிலான போர் இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை செலுத்தக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பல பொருட்களை இறக்குமதி செய்யும் இலங்கைக்கு அதில் தடங்கள் ஏற்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.ஏற்கனவே இலங்கை அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் என பொருளாதார நெருக்கடியில் சிக்கி மெதுவாக மீண்டு வர முயற்சிக்கின்றது. இலங்கை மட்டுமல்ல பாகிஸ்தானும் கூட பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளவொரு நாடாகும். அந்தவகையில் இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளையும் போர்ப் பதற்றத்தை தணித்து அமைதிப்பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினைகளை தீர்க்கும்படி மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இரு நாட்டு மக்களின் விருப்பமும் அதுவே என சமூகச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.