Multiple Page/Post

பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (23) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

 

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு முறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வன்னி தேர்தல் அதிகாரியினால் முன்னர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது.

 

அதனையடுத்து, பரராஜசிங்கம் உதயராசா மற்றும் இருவரினால் கடந்த வாரம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், மாவட்ட தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை நிராகரித்ததாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.

 

மேலும், மாவட்ட தேர்தல் அதிகாரியின் முடிவு சட்டத்திற்கு முரணானது என்றும், அந்த முடிவை செல்லாது என்று உத்தரவிடுமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

இந்த நிலையில், உண்மைகளை கருத்திற்கொண்ட உயர் நீதிமன்றம், பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை நிராகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என இன்று தீர்ப்பளித்தது.

 

அதேநேரம், அவரது வேட்பு மனுவை அங்கீகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் இஸ்ரேலியர்கள் – எச்சரிக்கிறார் ரெஹான் ஜெயவிக்கிரம

இலங்கை தற்போது கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும் இதனால் சுற்றுலாத்துறை மீட்சிக்கான நாட்டின் முயற்சிகள் பாதிக்கப்படலாம் என வெலிகமவின் முன்னாள் மேயரும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான ரெஹான் ஜெயவிக்கிரம தெரிவித்துள்ளார்.

அறுகம் குடாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அமெரிக்கா (USA) விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பில் இன்று (23) தனது எக்ஸ் (x) தளத்தில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அவருடைய பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையில் இஸ்ரேலிய  சுற்றுலாப் பயணிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை தற்போது கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது. இதன் காரணமாக சுற்றுலாத்துறை மீட்சிக்கான நாட்டின் முயற்சிகள் பாதிக்கப்படலாம்.

அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கவேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அதனை அலட்சியம் செய்துவிட்டது.

 

இந்த பிரச்சினைக்கு அவசர தீர்வை காண வேண்டும். தொடர்ந்தும் அலட்சியம் செய்தால் எதிர்விளைவுகள் நாங்கள் எதிர்பார்ப்பதை விட மோசமானதாக அமையலாம்.

அறுகம் குடா பருவம் முடிவடைந்த நிலையில், தென்கிழக்கு பருவம் தொடங்குகிறது. எனினும், வெலிகமவில் பாரிய வீதித் தடைகள் இருப்பது ஏற்கனவே சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களின் பாதுகாப்பு உணர்வின் மீது நிழலை வீசுகிறது.

ஸ்திரமின்மையை குழப்பத்தை ஏற்படுத்தும் இஸ்ரேலியர்களிற்கு ஒன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன், ”உலகின் ஏனைய பகுதிகளில் செய்ததை போன்று எங்கள் மண்ணை நீங்கள் சட்டவிரோதமாக பலவந்தமாக ஆக்கிரமிக்க முடியாது, நீங்கள் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது, ஏனையவர்களின் வாய்ப்புகளை அழிக்க முடியாது.

நாங்கள் உங்களை இந்த அழகான தேசத்திற்கு வரவேற்றுள்ள போதிலும், இது உங்களுடைய நாடில்லை இந்த நாட்டின் சட்டங்களை நீங்கள் மதிக்கவேண்டும்” என ரெஹான் ஜெயவிக்கிரம தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து வருடங்களுக்குள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவோம் – சஞ்சீவ எதிரிமான்ன

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்த நாட்டின் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கான அதிகாரம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாற்றம் செய்ய வேண்டுமாயின் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் நாட்டு மக்களில் மாற்றம் செய்யப்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறினால் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகும் முன்னதாக இந்த அரசாங்கத்தை கவிழ்த்து நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்த நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

தேர்தலுக்கு முன்பு செய்வதாக கூறிய எதையுமே செய்வதற்கு ஜனாதிபதி அனுர குமார நடவடிக்கைகள் எடுக்கவில்லை – வே. இராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

நாட்டின் சந்தையில் தற்பொழுது தேங்காய் விலை அதிகரித்துள்ளது. பாக்கின் விலை அதிகரித்துள்ளது. முட்டை ஒன்று 30 ரூபாய்க்கு தருவதாக சொன்னார்கள். ஆனால் தற்பொழுது 50 ரூபாய்க்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுவா மாற்றம்” என ஐக்கிய மக்கள் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலை இலக்காக கொண்டு நேற்று (22) மாலை நுவரெலியா – நானுஓயா காந்தி கலாச்சார மண்டபத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணனின் தலைமையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பங்குபற்றலுடன் இக்கூட்டம் இடம்பெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள், தோட்டத் தலைவர்கள், தலைவிமார்கள், இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய வே. இராதாகிருஷ்ணன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஈஸ்டர் குண்டு தாக்குதல் செய்தவர்களை பிடிப்பதாக ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் இன்று வரை அதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அத்தோடு தற்பொழுது சந்தையில் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. முட்டை ஒன்று 30 ரூபாய்க்கு தருவதாக சொன்னார்கள். ஆனால் தற்பொழுது 50 ரூபாய்க்கு அதிகமான விலையில் முட்டை ஒன்று விற்பனை செய்யப்படுகிறது. அத்தோடு ஜனாதிபதி கூறியிருந்தார். தன்னிடம் ஊழல் செய்த அரசியல்வாதிகளின் கோப்புகள்  அதிகமாக இருப்பதாகவும், அதனை தான் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்று வரை அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தற்பொழுது மலையகப் பகுதியில் உள்ள மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தது தவறு என அநேகமானவர்கள் சொல்கிறார்கள். தமிழ் பிரதிநிதித்துவம் கட்டாயம் தேவை அதற்கு நாங்கள் வாக்களிப்போம் என பலரும் தற்பொழுது உணர்ந்துள்ளனர். தேசிய மக்கள் சக்தியில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடக் கூடியவர்கள் எவருமே மக்களுக்கு நன்கு பரீட்ச்சியம் ஆனவர்கள் கிடையாது.

ஆகையால் மக்கள் இப்பொழுது தெளிவாக இருக்கிறார்கள். அத்தோடு தேர்தல் மறுசீரமைப்பு வந்தால் உங்களுக்கு தெரியும் நுவரெலியா மாவட்டத்தை பொருத்தவரையில் மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 2 ஆசனங்களை மட்டுமே பெற முடியும். ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் குறைந்தபட்சம் 5 ஆசனங்களையாவது பெற முடியும். இப்பொழுது இருக்கும் சூழ்நிலையிலும் இதை ஒழிப்பதற்கு தற்பொழுது அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது.

அத்தோடு உங்களுக்குத் தெரியும் கோட்டாபய அரசாங்கம் ஒரே நாளில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியிருந்தது. இதனால் நாட்டின் உற்பத்தி குறைந்து பொருளாதார வீழ்ச்சி அடைந்திருந்தது. அதன் ஒரு நடவடிக்கையாக தான் அவரின் ஆட்சி மாற்றத்திற்கு உள்ளாகி இருந்தது என தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது !

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்திருந்தார்.

சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கத் தயார் என நேற்று (22) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய வெளிநாட்டவர்களுக்கு மரணதண்டனை!

10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

 

2016 ஆம் ஆண்டு 146 கிலோகிராம் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியதற்காக இந்த 10 வெளிநாட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி 9 ஈரானியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகிந்த ராஜபக்சவை பாதுகாக்க வேண்டியது ஜனாதிபதி அநுரகுமாரவின் பொறுப்பாகும் – நாமல் ராஜபக்ச

நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு பலர் முயற்சித்து வரும் சூழ்நிலையில், போரை முடிவுக்குக்கொண்டு வந்த மகிந்த ராஜபக்சவை பாதுகாக்க வேண்டியது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் பொறுப்பாகும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதற்கும், தமது இலக்கை அடைவதற்கும் பலர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அதேபோல் உலகளவில் அடிப்படைவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிராதம் தலைதூக்கியுள்ளன.

இவற்றுக்கு எதிராகப் போராடி, போரை முடித்த தலைவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் கடப்பாடாகும்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச்செய்து கொடுக்க வேண்டியதும் அரசின் பொறுப்பாகும். அதேவேளை, எமது அரசியல் முகாம் தான் இந்த நாட்டை அபிவிருத்தி செய்தது.

எனவே, நாட்டை வீழ்த்துவதற்குரிய குரோத அரசியலில் ஈடுபடுவதற்கு நாம் தயாரில்லை. உலகில் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்.

ராஜபக்சக்கள் சட்டவிரோதமாக எதையேனும் சேமித்து வைத்திருந்தால் அவற்றைக்கொண்டு வாருங்கள். அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்றார்.

முன்னதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அரசின் அறிவிப்பின் பெயரில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் பல குறைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள்!

இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட 10ஆயிரத்து 323 சிறுவர்கள் கடுமையான போஷாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதாரப் பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வறிக்கையின்படி ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளிலும் ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளிலும் இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளிலும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது. எனினும்இ இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 763 ஆக இருந்தது.

ஐந்து வயதுக்குட்பட்ட 13ஆயிரத்து 1649 சிறார்களை பதிவு செய்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.

இந்த மதிப்பீட்டில் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எடையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் – கோட்டாபய ராஜபக்ச

லலித், குகன் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி ரொமேஸ் சில்வா ஊடாக இன்று உயர்நீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளார்.மேல்முறையீட்டு நீதிமன்றத்தின்முன்னைய தீர்ப்பினை சவாலுக்குஉட்படுத்தும் விதத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளையே கோட்டாபயவின் சட்டத்தரணி தனது கட்சிக்காரரின் பாதுகாப்பு கரிசனை குறித்து தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுற்றுலா தளங்களை இலக்கு வைத்து பாரிய தாக்குதல் – எச்சரிக்கும் அமெரிக்கா!

இலங்கையில் அருகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;

 

இலங்கையில் அருகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என தூதரகத்திற்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.

 

இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள கடுமையான ஆபத்து காரணமாக, தூதரகம் உடனடியாக மற்றும் மறு அறிவித்தல் வரை அறுகம் பேக்கான பயணத் தடையை தூதரக பணியாளர்களுக்கு விதித்துள்ளது.

 

மறுஅறிவிப்பு வரும் வரை அறுகம் வளைகுடா பகுதியை தவிர்க்குமாறு அமெரிக்க குடிமக்கள் கடுமையாக வலியுறுத்தப்படுகிறார்கள்.

 

அந்தவகையில் அமெரிக்க பிரஜைகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாக,

 

அனைத்து சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் மற்றும் அவசரநிலைகளை 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அழைத்து உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

அதேவேளை, எப்பொழுதும் விழிப்புடன் இருங்கள் மற்றும் உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் உள்ளத்தை நம்புங்கள், ஒரு சூழ்நிலை சரியாக இல்லை என்றால், அதிலிருந்து வெளியேறுங்கள்.

 

உங்களிடம் எப்பொழுதும் ஏதேனும் ஒரு வகையான தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசிகளை வைத்திருத்தல் வேண்டும்.

 

செய்திகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.