March

March

ஐ.பி.எல்.போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக ரி‌ஷப் பண்ட் தெரிவு !

ஐ.பி.எல்.போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக இருப்பவர் ஸ்ரேயாஷ் அய்யர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது அவருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஸ்ரேயாஷ் அய்யரால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு யார் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலக்கு காப்பாளரான இளம் வீரர் ரி‌ஷப் பண்ட் டெல்லி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டீவ் சுமித், அஸ்வின், ரகானே போன்ற மூத்த வீரர்கள் இருக்கும் போது டெல்லி அணி நிர்வாகம் ரி‌ஷப் பண்ட் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளது.

இந்தநிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் பதவிக்கு ரி‌ஷப் பண்ட் தகுதியானவர் என்று ஸ்ரேயாஷ் அய்யர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் பேசிய போது ,

ரி‌ஷப்பண்ட் சிறந்த மனிதர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. காயம் காரணமாக என்னால் ஐ.பி.எல். போட்டியில் ஆட முடியவில்லை. இதனால் டெல்லி அணிக்கு தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் ரி‌ஷப்பண்ட் சிறந்தவர். தலைவர் பதவிக்கு தகுதியானவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு ஸ்ரேயாஷ் அய்யர் கூறி உள்ளார்.

ஸ்ரேயாஷ் தலைமையில் டெல்லி அணி கடந்த ஐ.பி.எல். போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரி‌ஷப்பண்டுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும் சி.எஸ்.கே. அணியை சேர்ந்தவருமான சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த சீசனுக்கு டெல்லி அணியின் தலைவராகக நியமிக்கப்பட்டுள்ள ரி‌ஷப்பண்டுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அவர் சிறந்த தலைவராக உருவாகுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது சிறப்பான பணி மூலம் டெல்லி அணியை அவர் பெருமைப்படுத்துவார்.

இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வலது கையில் அறுவை சிகிச்சை !

ஸ்கேன் மற்றும் ஆலோசகர் மதிப்பாய்வைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வலது கையில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவுள்ளார்.

ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு சற்று முன்பு தனது வீட்டில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்ச்சருக்கு கையில் வெட்டு ஏற்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

குறித்த காயம் இந்தியா அணிக்கு எதிரான தொடரில் பிரகாசிக்க தடையாக இருந்த நிலையில் ஆர்ச்சர் குணமடைய இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

“அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கல் மோதல் ஏதுமின்றி பூமி பாதுகாப்பாக இருக்கும்.” – நாசா

அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கல் மோதல் ஏதுமின்றி பூமி பாதுகாப்பாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக Apophis எனும் விண்கல் பூமியை அடுத்த 100 ஆண்டுகளுக்கு தாக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இந்த விண்கல் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

Apophis எனும் விண்கல் பூமிக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது என நாசா விஞ்ஞானிகள் கருதியிருந்தனர்.

2029 மற்றும் 2036 ஆம் ஆண்டுகளில் இரண்டு விண்கற்கள் பூமியைத் தாக்கக்கூடும் எனவும் விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவை தடம் மாறிச் சென்றதால், அவற்றினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என நாசா விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.

எனினும், Apophis எனும் விண்கல் 2068 ஆம் ஆண்டிற்குள் பூமியை நோக்கி நெருங்கி வரும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 340 மீட்டர் விட்டம் கொண்ட Apophis எனும் விண்கல்லின் திசை மாறும் நிலையிலுள்ளதால், அடுத்து வரும் 100 ஆண்டுகளுக்கு பூமிக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும்” – அமெரிக்கா வேண்டுகோள் !

“இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும்” என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் ஜலினா போர்ட்டர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான மனித உரிமை பேரவை தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றே மனித உரிமைகளை மதிப்பதிலும் எதிர்கால அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கு அர்ப்பணிப்பதிலுமே இலங்கையின் நீண்டகால பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் தங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கையை கேட்டுக்கொள்வதற்காகவே அமெரிக்கா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும் கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு தீர்வை காண்பதற்கான நம்பகத்தன்மை மிக்க அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இலங்கையை கேட்டுக்கொள்வதற்காகவே அமெரிக்கா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் அறிக்கையிடும் தேவைகளை தீர்மானம் விஸ்தரித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்கால பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளுக்காக ஆதாரங்களை சேகரிப்பதற்கான ஆணையையும் வழங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி – வெற்றியுடன் ஆரம்பித்தது இந்தியா !

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் தவான் 98 ஓட்டங்களையும் , விராட் கோலி 56 ஓட்டங்களையும் , கே.எல் ராகுல் 62 ஓட்டங்களையும் , குருணால் பாண்ட்யா 58 ஓட்டங்களையும் பெற இந்தியா 50 பந்துப்பரிமாற்றங்களில் 5 இலக்கு இழப்பிற்கு 317 ஓட்டங்களை குவித்தது.
பின்னர் 318 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. பேர்ஸ்டோவ் 40 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஜேசன் ராய் 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஜேசன் ராய்- பேர்ஸ்டோவ் ஜோடி முதல் இலக்குக்கு 135 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 1 ஓட்டத்துடன் ஏமாற்றம் அளித்தார்.
இரண்டு இலக்கு வீழ்ந்தாலும் மறுமுனையில் பேர்ஸ்டோவ் வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் 94 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் இங்கிலாந்து இலக்குகள் மளமளவென சரிந்தது. மோர்கன் 22 ஓட்டங்களிலும், பட்லர் 2 ஓட்டங்களிலும், சாம் பில்லிங்ஸ் 18 ஓட்டங்களிலும், மொயீன் அலி 30 ஓட்டங்களிலும், சாம் கர்ரன் 12 ஓட்டங்களிலும் வெளியேற இங்கிலாந்து 42.1 பந்துப்பரிமாற்றங்களில் 251 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் இந்தியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 8.1 பந்துப்பரிமாற்றங்களில் 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சாதித்த பெண் !

தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.

தலைமன்னாரில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீந்த ஆரம்பித்து மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு நிறைவு செய்தார். ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள மணல் திட்டுக்களான ராமர் பாலமும் பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது.

தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதி இது. பாக் ஜலசந்தி கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு நீந்திக் கடந்தார். தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் பாக் ஜலசந்தியை தலை மன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரை நீந்திக் கடந்தார்.

வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971 ஆம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து தனுஸ் கோடிக்கு நீந்திச் சென்று, மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்தி வந்தடைந்து சாதனை படைத்தார்.

இந்நிலையில், பல்வேறு நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்த தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சியாமளா கோலி வயது-48, தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி சாதனை படைத்தார்.

சியாமளா கோலி, தலைமன்னாரிலிருந்து 30 கி.மீ தூரத்திலுள்ள தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணி 50 நிமிடங்களில் சுமார் 13 மணி 40 நிமிட நேரத்தில் சென்றடைந்தார்.

இதன் மூலம் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்த 13ஆவது நீச்சல் வீரராகவும் உலகளவில் இரண்டாவது வீராங்கனையாகவும், இந்திய அளவில் முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.

இது தொடர்பில் சியாமளா கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த ஆண்டு பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடப்பதற்கு இந்திய-இலங்கை அரசுகளிடம் அனுமதி கிடைத்தது. ஆனால் கெரோனா பரவல் காரணத்தினால் முடியாமல் போனது.

பாக் ஜலசந்தியை ஒரு பெண்ணாக நான் நீந்தி கடந்ததன் மூலம் பெண்களால் அனைத்து சாதனைகளையும், உயர்ந்த இலக்குகளையும் அடைவதற்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என தலைமன்னார் முதல் தனுஸ்கோடி வரையிலான கடலை நீந்தி கடந்த சியாமளா கோலி தெரிவித்தார்.

“ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் காணப்படுகின்றது” – பிரிட்டனின் நாடாளுமன்றில் சிபோன் மக்டொனாக் !

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் காணப்படுகின்றது என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனாக் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில்  இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான விவாதத்தின் மீது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் குறைவானதாக காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுப்பதன் மூலம் குற்றவியல் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகள் எவையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டிஸ் அரசாங்கம் பாதுகாப்பு சபையில் போதிய ஆதரவு கிடைக்காது என தெரிவித்ததை என்னால் நம்பவே முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச !

பங்களாதேஷிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை பங்களாதேஷின் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அதிகாரிகளினால் பிரதமர் வரவேற்கப்பட்டார்.

இந்த உத்தியோகபூர்வ பயணத்தின்போது பிரதமர், பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாகப் போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றில் கலந்துகொள்கின்றார்.

பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்ட ‘முஜிப் ஆண்டு’ தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று சிறப்புரையாற்றுகின்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தின்போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீத், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்களுடன் இருதரப்பு பேச்சுகளிலும் ஈடுபடவுள்ளார்.

கால்பந்து ஜாம்பவன் பீலேவின் சாதனையை முறியடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ !

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர், இத்தாலியில் உள்ள ஜுவன்டஸ் கிளப்புக்காக தற்போது விளையாடி வருகிறார்.

இத்தாலி கிளப் கால்பந்து போட்டி ஒன்றில் ஜுவான்டஸ்- காக்லியானி அணிகள் மோதின. இதில் ஜுவான்டஸ் 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ரொனால்டோ 3 கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இதன் மூலம் அவர் அதிகாரப்பூர்வ போட்டிகளில் ஜாம்பவன் பீலே (பிரேசில்) சாதனையை முறியடித்தார்.

இந்த 3 கோல்கள் மூலம் ரொனால்டோ 770 கோல்களை தொட்டார். அவர் பீலேவை முந்தினார். இந்த போட்டிக்கு முன்பு ரொனால்டோ அவரை சமன் செய்து இருந்தார். தற்போது பீலேவை முந்தி சாதனை படைத்துள்ளார்.

ரொனால்டோ கிளப் போட்டிகளில் 668 கோல்களும், போர்ச்சுக்கல் அணிக்காக 102 கோல்களும் அடித்துள்ளார். கிளப் போட்டிகளில் ரியல் மாட்ரிட்டுக்காக 450 கோல்களும், மான்செஸ்டர் யுனைடெட்டுக்காக 118 கோல்களும், ஜுவான்டஸ் கிளப்புக்காக 96 கோல்களும், ஸ்போர்ட்டின் லிஸ்பன் அணிக்காக 5 கோல்களும் அடித்துள்ளார்.

தனது சாதனையை முறியடித்த ரொனால் டோவுக்கு பீலே வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

“எப்போதும் மைதானத்தில் விளையாடும்போதும் என்னிடமும் மற்றவர்களின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டு வர விரும்புகிறேன்” – ரவிசந்திரன் அஸ்வின்

“எப்போதும் மைதானத்தில் விளையாடும்போதும் என்னிடமும் மற்றவர்களின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டு வர விரும்புகிறேன்” என இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் விளையாடாமல் உள்ள அஸ்வினிடம், எப்போது மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் அணிக்குள் திரும்புவீர்கள் என வினவிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உங்களுடன் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று சொல்வார்கள். நான் என்னுடன் எப்படிப் போட்டியிட வேண்டும், முழு நிம்மதியுடன் இருக்கவேண்டும் என்பதை அறிந்துள்ளேன்.

ஒருநாள், டி20 ஆட்டங்களுக்கு நான் எப்போது திரும்புவேன் என என்னிடம் கேட்பது நகைப்புக்குரியதாக உள்ளது. என் வாழ்வில் இப்போது நிம்மதியாக, மகிழ்ச்சியாக உள்ளேன். எனக்கு வாய்ப்பு வழங்கப்படும்போது இப்போதுள்ள நிலையில் என்னால் மகத்தான பங்களிப்பை வழங்க முடியும் என நம்புகிறேன்.

மக்களின் கேள்விகளையும் அவர்களுடைய கருத்துகளையும் பற்றி நான் கவலைப்படவில்லை. எப்போதும் மைதானத்தில் விளையாடும்போதும் என்னிடமும் மற்றவர்களின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டு வர விரும்புகிறேன்’ என கூறினார்.

34 வயதான அஸ்வின் இதுவரை 78 டெஸ்ட், 111 ஒருநாள் மற்றும் 36 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.