15

15

முடிவுக்கு வருகிறது அம்பிகை செல்வகுமாரின் உண்ணாவிரத போராட்டம் !

பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமாரால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் முடிவுக்குக் கொண்டு வரப்படவுள்ளது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி 17 வது நாளாக அம்பிகை செல்வகுமார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

பிரித்தானிய அரசிடம் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடுவேன் என தெரிவித்து கடந்த 17 நாட்களாக அம்பிகை செல்வகுமார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

அவரின் கோரிக்கைகளில் ஒன்று முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே உண்ணாவிரதத்தை வெற்றியுடன் முடித்துக்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்பிகை செல்வக்குமாரின் போராட்டம் இன்று பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 3.00 முதல் 5.00 மணியளவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“அம்பிகையின் உண்ணாவிரதம் கவனிக்கப்படாது வீண்போகவில்லை” – பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் !

“அம்பிகையின் உண்ணாவிரதம் கவனிக்கப்படாது வீண்போகவில்லை” என்று பிரிட்டன் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சேம் டெர்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி லண்டனில் 16 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவாக காணொளியொன்றை வெளியிட்டுள்ள அவர் அந்தக்காணொளியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் அநீதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களை மிக உயர்ந்த மட்டத்துக்குக் கொண்டு செல்லத் தாம் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் தான் பெருமை அடைகின்றார் எனவும், இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் தன்னுடன் அடிக்கடி கதைக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பிகையின் உண்ணாவிரதம் கவனிக்கப்படாது வீண்போகவில்லை என்றும் பிரிட்டன் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சேம் டெர்ரி மேலும் தெரிவித்துள்ளார்.