March

March

பாகிஸ்தானில் முடிவுக்கு வருகிறது இம்ரான்கான் அரசின் காலம்..?

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நாளை(வியாழக்கிழமை) விவாதம் நடக்கிறது. அதை தொடர்ந்து 3-ந் திகதி ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்  இம்ரான்கான் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொள்வதாகவும், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் எம்.க்யூ.எம் கட்சி அறிவித்துள்ளது.

இதனால் இம்ரான்கானின் அரசு நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே பெரும்பான்மையை இழந்தது. ஆட்சியை தக்கவைக்க பெரும்பான்மைக்கு 172 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில்  இம்ரான்கானுக்கு 164 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளதால் ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளது.

“நான்கு  விடயங்களில்  ஜனாதிபதிக்கும்  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.” – இந்திய வெளியுறவு அமைச்சர்

“நான்கு  விடயங்களில்  ஜனாதிபதிக்கும்  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.” என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், சாதாரண வேகத்தில் விடயங்களை செய்ய முடியாது. எல்லாவற்றையும் வேகமாக கண்காணிக்க வேண்டும். எனவே தான் இந்தியா கூடுதல் நேரம் வேலை செய்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிறிலங்கா வந்திருந்த நிலையில், தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பத் தயாராகவுள்ள நிலையில்,  இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இலங்கையின் நெருக்கடியில் சிறந்த அண்டை நாடாக இந்தியா செயற்படுவாதகவும் அதேநேரம் அரசியலில் இருந்து விலகி இந்த நெருக்கடியான சூழலில் உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக சமீபத்தில் இறுதி செய்யப்பட்ட 1 பில்லியன் டொலர் கடன் திட்டம் மிக விரைவில் செயல்படுத்தப்படும்.

400 மில்லியன் டொலர் நாணய பரிமாற்றம், 500 மில்லியன் டொலர் கடன் ஒத்திவைப்பு, எரிபொருளுக்கான 500 மில்லியன் டொலர் கடன் மற்றும் ஒரு பில்லியன் டொலர் கடன் வரி என்பவற்றை புதுடில்லி இந்த ஆண்டு இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலை, காணி, காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அபிவிருத்தி ஆகிய நான்கு  விடயங்கள் ஜனாதிபதிக்கும்  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்போது இரு தரப்பினரும் குறிப்பிட்ட, செயற்படக்கூடிய புள்ளிகளை அடையாளம் கண்டு அவற்றில் இணக்கம் கண்டுள்ளனர் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

எனினும் இன்னும் உரையாடல் முடிவடையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆமை புகுந்த வீடும் ராகவன், நிர்மலா, ஷோபாசக்தி புகுந்த இலக்கியச் சந்திப்பும்! : பாகம் 34

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 34 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: நாங்கள் பரிசில் நடந்த கலை இலக்கிய முரண்பாடுகள் பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறோம். அதுல நீங்கள் சொல்லி இருந்தீர்கள் எக்ஸில் முரண்பாடு. அன்றைக்கு முக்கியமாக ஷோபாசக்தி அந்த முரண்பாட்டை தூண்டியதாக குற்றம்சாட்டி இருந்தீர்கள். அது என்ன மாதிரி நடந்தது? எக்ஸில் அது என்ன பிரச்சனை?

அசோக்: எக்சில் சஞ்சிகையில் ஏற்பட்ட முரண்பாடுகள் கோட்பாடு சார்ந்த பிரச்சனை இல்லைத்தானே கோட்பாடுகளில் சினேக முரண்கள்தோன்றினால் விவாதங்கள், உரையாடல்கள், கற்றல்கள் முலம் தீர்த்துக் கொள்ளலாம். கோட்பாடு ரீதியான பெரிய முரண்பாடுகள் வந்தா ஒன்று சேருவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகும். இது தனிப்பட்ட முரண்பாட்டில் இருந்து தான் தோற்றம் பெறுது. இங்க கோட்பாடும் இல்லை. சித்தாந்த பிரச்சனையும் இல்லை. முழுக்க முழுக்க தனிநபர் முரண்பாடுகள்தான். இங்க ஈகோ பிரச்சனைதான். இதை இலகுவாக தீர்த்திருக்க முடியும். திட்டமிட்டு சாதிய முரண்பாடாக்கி ஊதிப் பெருக்கடி வைத்த புண்ணியம் நம்ம சோபாசத்தியைத்தான் சாரும். இந்த காலகட்டத்திலதான் தமிழ்நாட்டில் தலித்திய இலக்கிய அரசியல் ஏழுச்சி கொள்ளுது. அப்ப இந்த தனிப்பட்டமுரண்பாடுகளை சாதிய பிரச்சனை சார்ந்த முரண்பாடாக கட்டமைத்தால் இவர்களுக்கு சாதகம் என சோபாசக்தியின் சாணக்கிய மூளை கணக்குப்போட்டு இருக்கும்.

தேசம்: இதுக்குள்ள சாதிய முரண்பாடு என்று சொல்லுற அளவுக்கு இல்லை. பெரும்பாலும் இதுக்குள்ள அரசியல்ரீதியாக இருந்தவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் சாதிய எதிர்ப்பை கொண்டவங்கதானே.

அசோக்: தனி நபர் முரண்பாட்டை கூர்மையாக்க மற்றவர்களின் ஆதரவை பெற கலைச்செல்வன், லக்சுமி ஆட்கள் மீது இவ்வாறன குற்றச்சாட்டை வைக்க வேண்டிய தேவை அவங்களுக்கு வருகிறது. இந்த முரண்பாட்டிக்கு நீங்கள் நியாயம் கற்பிப்பதற்கான தேவை ஒன்று ஏற்படும் தானே. ஒவ்வொரு சாதியிலும் பிறப்பது தற்செயல் நிகழ்வு. ஆதிக்க சாதியான வேளாளர்கள் என்று சொல்லப்படுகின்ற சமூகத்தில் பிறக்கிற ஆட்களை வந்து முழுக்க முழுக்க எங்கள் மீதான ஒடுக்குமுறையாளர்கள் என்று கருத இயலாது. ஏனென்றால் அதிலும் நல்ல சக்திகள் உண்டு. ஒடுக்குமுறைக்கு எதிராக செயற்படுகின்ற இடதுசாரி கருத்தியல் கொண்ட ஆட்கள் இருப்பார்கள். இலங்கையில் நடந்த சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை கவனித்தம் என்றால் அந்த போராட்டங்களில் தீவிரமாக முண்ணனி வகித்தவங்க வேளாள சமூகத்தை சேர்ந்த தங்களை சாதிய தற்கொலை செய்து கொண்ட இடதுசாரிய கருத்தியல் கொண்ட தோழர்களாக இருப்பாங்க.

எங்களை ஒடுக்கிற ஆதிக்கம் செலுத்துகிற தங்களின் சுய சாதியிலிருந்து விடுபட்டு தோழமையோடு எம்மை நோக்கி வருகின்ற சக்திகளை நாம் சாதியின் பெயரால் புறம் தள்ளக் கூடாதுதானே. இவங்களிட்ட சாதியம் தொடர்பான எந்த புரிதல்களும் இருக்கல்ல. கோட்பாட்டு அரசியலும் இருக்கல்ல. தங்களை முதன்மைப்படுத்துற அடையாள சிக்கல்தான் இவங்களிட்ட இருந்தது. இது கலைச்செல்வன், லக்சுமி பக்கத்திலிருந்து பறிக்கப்படுவதாக இவங்க நினைக்கும் போது இந்த முரண்பாடுகள் வருகிறது. இவங்களால சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்குதானே அந்தக் காரணங்கள் எல்லாம் வந்து சோடிக்கப்பட்ட கட்டுக்கதைகள் ஆகத்தான் இருந்தது. அதற்கான உருவாக்கத்திற்கான பின்புலமாக சோபாசக்தி தான் இருந்தவர். சோபாசக்தி நினைத்திருந்தால் அந்த பிரச்சனையை தீர்த்து இருக்கலாம்.

நான் எப்பவுமே புலிகள் மீதான விமர்சனத்தை வைப்பதற்கான காரணம் என்னவென்றால் புலிகள் எப்பவுமே ஒரு ஜனநாயக அமைப்புகளை ஜனநாயக சக்திகள் ஒன்று கூடுவதை எப்பவுமே விரும்புவது இல்லை. எங்க போராட்ட வரலாற்றை எடுத்து பார்த்தீர்களென்றால் ஈழத்தில் தமிழ்ப் பிரதேசங்களில், புகலிட நாடுகளில் சகல ஜனநாயக அமைப்புகளை உடைத்தது எல்லாம் புலிகள்தான். அதுக்குள்ள ஊடுருவுவார்கள் அல்லது அப்படியே உள்வாங்குவார்கள். அல்லது அதிகாரத்தை பயன்படுத்தி அப்படியே இல்லாமல் ஆக்குவார்கள். இதில் அபத்தம் என்னவென்றால் கலைச்செல்வன், லக்சுமி ஆளுமைக்குள் உட்பட்டிருந்த இவங்கள், சுயநலப்போக்கும், மோசமான அரசியலும் கொண்ட பிழையான சத்தியான சோபாசக்தியின் வலையில் சிக்கிக் கொண்டதுதான்.

தேசம்: புலிகள் எதையுமே உருவாக்கினது கிடையாது…

அசோக்: ஷோபாசக்தி புலிகளில் இருந்து வந்தபடியால் அவரிடமும் அந்த இயல்பு இருக்கும்.

நான் முதலே சொல்லிஇருக்கிறன் புலிகளிடமிருந்து வந்த யாரையும் நம்புவதும் இல்லை, நான் ஏற்றுக்கொள்வதும் இல்லை. போராளிகள் பற்றியதல்ல இந்த அபிப்பிராயம். புலிகளில் குறிப்பிட்ட மட்டங்களில் கருத்தியல் சார்ந்து இயங்கிய எல்லாரிடமும் தங்களைத் தவிர ஏனைய அமைப்புகள் உருவாகுவதையோ ஏனைய சக்திகள் உருவாகுவதையோ அவங்கள் விரும்புவது இல்லை. ஒரு இலக்கிய சஞ்சிகையோ, இலக்கிய சந்திப்போ சாதாரண அமைப்புகள் கூட தங்களை வரக்கூடாது என்றுதான் விரும்புவார்கள்.

தேசம்: தங்கட கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைக்கினம்…

அசோக்: அப்படி தங்கட கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றால் உடைப்பார்கள் அல்லது அவர்கள் மீது ஏதும் அதிகாரத்தை பிரயோகிப்பார்கள். இலக்கிய சந்திப்புக்கும் அதுதான் நடந்தது. எக்ஸிலுக்கும் அதுதான் நடந்தது.

தேசம்: நீங்கள் இதே குற்றச்சாட்டை தான் ராகவன் நிர்மலா நித்தி மீதும் வைத்தீர்களா?

அசோக்: என்னைப் பொருத்தவரை இவர்கள் புலிகளை எதிர்க்கின்ற இன்னொரு புலிகள்தான். அதுல நீங்கள் ராகவன் ஆக இருந்தால் என்ன, நித்தியானந்தனாக இருந்தா என்ன நிர்மலாவாக இருந்தால் என்ன, முழு பேரும் அந்த மனோநிலையோடு, அந்த அந்த ஆதிக்க உளவியல் கட்டமைப்போடுதான் சிந்திப்பாங்க செயற்படுவாங்க. இவர்களை எல்லாம் ஒரு ஜனநாயக சக்தியாக நான் ஒருபோதும் பார்க்கவில்லை. ஏனென்றால் இருக்கிற முரண்பாடுகளை தீர்க்கின்ற நபர்களாக அவர்கள் எப்பொழுதும் இருந்ததில்லை. முரண்பாடுகளை கூர்மையாக்கி, குழுவாதத்தை உருவாக்கி தாங்க நினைப்பதை சாதிப்பாங்க. அதற்கு நாங்களும் துணை போவம். நீங்க பார்த்தீங்க என்றால் இவங்களுக்கு பின்னால் நாங்கதான் போனோமே தவிர எங்களுக்கு பின்னால் அவங்க வரவில்லை. தங்களின் அதிகாரத்தில் மேலாதிக்கத்தில் அவங்க கவனமாக இருந்தாங்க.

எல்லாத்தின் உடைவுகளுக்கும் மூல காரணங்களை தேடி போனீர்கள் என்றால் புலிகளில் இருந்த பழைய உறுப்பினர்களாக தான் இருப்பார்கள். ஒன்று சோபாசக்தி ஆக இருக்கும் ஒன்று ராகவன் ஆக இருக்கும், ஒன்று நிர்மலாவாக இருக்கும், இவர்கள்தான் பின்புலமாக இருந்திருப்பார்கள். இலக்கியச் சந்திப்புகளின் உடைவுகளை தேடி போனீர்கள் என்றால் முடிவு அங்க தான் இருக்கும். ஆனா என்னதான் உடைவு இருந்தாலும் சோபாசக்தி, ராகவன், நிர்மலா எனைய முன்னாள் புலிகள் இவங்களுக்குள்ள ஒற்றுமை இருக்கும். ஒரே அணியில இருப்பாங்க. யோசித்துப்பாருங்க. புலிகளின் வன்முறைகளுக்கும் கொலைக் கலாச்சாரத்திற்கும் எதிராக புகலிடத்தில் செயற்பட்ட TBC ரேடியோவுக்கு என்ன செய்தார்கள்? உங்க தேசம் இணையத்தளத்தை முடக்க தங்களின்ற குழுவாத கும்பல்களோடு சேர்ந்து கையெழுத்து வேட்டை நடத்தினாங்களே. இதையெல்லாம் எந்த நோக்கத்தில் செய்தாங்க.

தேசம்: புலிகள் என்பதும் எங்களுடைய சமூகத்தின் ஒரு உற்பத்தி தானே. நீங்க சொல்லுற இந்த குணாம்சம் இந்தப் பிரிவிடம் மிகக் கூடுதலாக இருக்கு என்று சொல்லவாறீர்களா?

அசோக்: எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் குணாம்சம் கொண்டவர்கள்தான் புலிகளிடம் போகிறார்களா அல்லது புலிகளுக்கு ஒரு சிந்தனை முறை இருக்குதானே புலிகளுடைய பயிற்றுவிப்பு கல்வியூட்டல்கள் சிந்தனை முறை இருக்குதானே அது இப்படித்தான் இவர்களை உருவாக்கிறது. தங்களை மீறி யாரும் வரக்கூடாது என்று. ஜனநாயக சக்திகளோ, தங்களை கேள்வி கேட்கின்றவர்களோ தங்கட இருப்புக்கு அது தடையாக இருக்கிறது என்று நினைப்பார்கள். தங்கட இருப்புக்கு ஒரு அமைப்பு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள். இல்லாதபட்சத்தில் அதை அழிப்பார்கள். இல்லாட்டி இவ்வளவு ஆரோக்கியமான இலக்கியச் சந்திப்புக்கு கடைசியில் என்ன நடந்தது?

இன்னொன்றையும் நீங்க அவதானிக்கலாம். புலிகள் பலரிடம் இந்த திறமை இருக்கு. எங்கட பலவீனங்களை கண்டு பிடித்து அதற்கு தீனி போடுவாங்க. பலரும் இவங்க பின்னால் அலைவதற்கு இதுவும் ஒருகாரணம். முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்கிற நாங்க தனிப்பட்ட வாழ்வில் மிகமிக பலவீனமானவங்க. அத அவங்க தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாங்க. எவ்வளவுதிறமை சாலி அவங்க பாருங்க.

தேசம்: இலக்கிய சந்திப்பு எப்படி இப்படி உடைந்தது ?

அசோக்: இலக்கியச் சந்திப்பின் உருவாக்கம் சிறு சஞ்சிகைகளினுடைய ஆசிரியர்களின் வாசகர்களின் இணைவாக இருந்து ஒரு காலகட்டத்தில் அராஜகங்களுக்கு எதிரான ஒரு வடிவமாக வருது ஜனநாயகத்தையும், அதிகார எதிர்ப்பையும் முன்னிலைப்படுத்திய புகலிட இலக்கியச்சந்திப்பை சார்ந்தவர்கள், விடுதலைப் புலிகளால் புகலிடத்திலும், இலங்கையிலும் இருந்த அச்சுறுத்தலால், விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்களாக இருந்தது இயல்பாக இருந்தது. அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரான ஒரு இயல்பான அரசியல் அதுக்குள்ள மேலோங்கியிருக்கிறது.

நான் முதலாவது இலக்கிய சந்திப்பில் தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டு கலந்து கொள்கிறேன். அதுக்குப் பிறகு இரண்டு இலக்கிய சந்திப்பு பாரிசில் நடந்தது. அதை நாங்கள் லக்ஷ்மி, கலைச்செல்வன், புஸ்பராஜா, அசோக் பிரகாஸ், கிருபன், மோகன், உதயன், யோகராஜா நடத்தினோம். நாங்க எல்லா இலக்கிய சந்திப்புக்கும் போவோம். ஜெர்மனியில்தான் அதிகம்தான் நடந்தது. 2009 மே முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின்பு நிலைமை நிலமை மாறிப் போய்விட்டது. முள்ளிவாய்க்கால் பிரச்சனைக்குப் பிற்பாடு இலக்கிய சந்திப்பு ஒரு டேர்ன் எடுக்குது. முழுக்க முழுக்க புலிகள் அழிக்கப்பட்டதன் பிற்பாடு பாரிசில் நடந்த இலக்கிய சந்திப்பில் இலங்கை அரசு சார்பான ஒரு போக்கை அவர்கள் எடுக்கிறார்கள். அந்த எடுவைக்கு காரணம் அதுக்குள்ள இருந்த ஒரு சக்திதான். அதுல தலித் முன்னணி முக்கியமான ஆட்கள். அதுல ஷோபா சக்தியும் இருந்தவர். அடுத்தது ராகவன் ஆட்களும் அதுக்குள்ள இருந்தார்கள்.

புலிகள் மீது கடும் விமர்சனம் இருக்கு. முள்ளிவாய்க்கால் தொடர்பாக. பொதுமக்கள் அழிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம் புலிகளுடைய நடவடிக்கையும் ஒன்று. அது விமர்சிக்கப்பட வேண்டியது. புலிகள் மீது கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட வேண்டியது. அதற்காக நீங்கள் பேரினவாத அரசின் ஆதரவு சக்தியாக மாற முடியாது. நான் முள்ளிவாய்க்கால் படுகொலையை ஒரு இனப்படுகொலை என்றுதான் பார்க்கிறேன். அது தொடர்பாகக் கருத்து முரண்பாடு இருக்கலாம். மிக மோசமாக கொத்துக் கொத்தாக மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மறந்து இலங்கையில் ஜனநாயக சூழல் உருவாகிவிட்டது, ஜனநாயக இடைவெளி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லி இலங்கைப் பேரினவாத அரசு ஆதரவு நிலை கொண்டு நடத்தும் போது எப்படி எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியும். எப்படி நாங்கள் கலந்து கொள்ள முடியும்? அப்போ நான் அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டேன். இலக்கிய சந்திப்பின் பிரதான நோக்கத்தையே குழிதோண்டி புதைத்து விட்டார்கள்.

அதற்கு பிற்பாடு லண்டனில் நடந்த இலக்கிய சந்திப்பில் முரண்பாடு வருகிறது. இலக்கிய சந்திப்பை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி நடக்குது. இந்த இலக்கிய சந்திப்பு புகலிடத்திற்காக, அதன் அரசியல் இலக்கிய சமூக வெளிக்காக உருவாக்கப்பட்டது. எனவே, இலங்கைக்கு கொண்டு போக முடியாதென்று என்று பலரும் இதை எதிர்க்கிறாங்க. புகலிட இலக்கியச் சந்திப்பை இலங்கைக்கு கொண்டு போவதற்கான அவசியம், காரணம் என்ன என்ற முக்கியமான கேள்வி எங்களுக்கு எழுகிறது

தேசம்: புகலிடத்திற்காக உருவாக்கப்பட்ட இலக்கிய சந்திப்பை ஏன் இவர்கள் இலங்கைக்கு கொண்டு போக விரும்புகின்றார்கள்?

அசோக்: நல்ல கேள்வி. இவங்க முழுப்பேர்களுமே குறிப்பாக தலித் முண்ணனி, பிள்ளையான் அணி, ராகவனும் அவருடன் சேர்ந்த ஆட்களைப் பார்த்தீர்கள் என்றால், வெறும் இலங்கை அரசு ஆதரவாளர்களாக இருந்தார்களே தவிர தனித்துவ அடையாளங்கள் அற்றவங்க இவங்க. ஆழமான அரசியல் புரிதல்களோ, இலக்கிய ஆற்றலோ அற்றவங்க. இவங்க இலங்கைக்கு, வெறும் இலங்கை அரச விசுவாசத்தோடு தமிழ்ப் பிரதேசங்களுக்கு செல்லமுடியாது. அங்க யாரும் இவர்களை கவனிக்க மாட்டார்கள். அப்ப இவங்களுக்கு அடையாளம், ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. இலக்கிய சந்திப்புக்கு ஒரு வரலாற்று தடம் பங்களிப்பு இருக்கிறது. இலக்கிய சந்திப்பு பற்றி இலங்கையில் பெரிய எதிர்பார்ப்பு உண்டு. அப்ப இந்த இலக்கிய சத்திப்பினுடாக, அங்கு தங்கட அடையாளத்தை, இருத்தலை நிறுவ முயலுறாங்க இதுதான் நடந்தது.

தேசம்: இதை உங்களைப் போன்றவர்கள் எதிர்க்க வில்லையா?

அசோக்: இவர்கள் இலங்கை அரசு ஆதரவு நிலைப்பாடு எடுத்ததன் பின் இந்த இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்வதை நான் விட்டுட்டன். ஆனா இவர்களின் இந்த செயற்பாட்டிக்கு எதிராக கடும் கண்டனங்களை எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறன். நான் சிறிரங்கன், நாவலன் பலர் இதுபற்றி எழுதியுள்ளோம்.

இலங்கைக்கு கொண்டு போவதற்கு இவங்க முடிவு செய்த லண்டன் இலக்கிய சந்திப்பில் பலர் இதனை எதிர்த்திருக்காங்க. கிருஸ்ணராஜா, லட்சுமி, சுசிந்திரன், றஞ்சி, சிவலிங்கம் தோழர் போன்றவங்க. புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு இது. நீங்கள் நாட்டுக்கு கொண்டு போக இயலாது என்று. அதை மீறித்தான் அவங்க அங்கு கொண்டு போகிறார்கள். அப்போ இந்த ஜனநாயகப் பண்பை எப்பவும் ஏற்கவில்லை தானே இவர்கள். நாங்கள் எதற்காக ஒரு அமைப்பை உருவாக்கினோம், எதனை நோக்கி உருவாக்கினோம் என்ற அடிப்படை அம்சங்கள் எல்லாவற்றையும் இல்லாமலாக்கிப்போட்டு, நீங்கள் உங்களுடைய சுயநலத்துக்காக, உங்களுடைய அரசியலுக்காக கொண்டு போகின்ற போக்கு இருக்குதானே அது எனக்கு பெரிய அதிருப்தியாக இருந்தது.

இந்த ஜனநாயகத் தன்மை கொண்ட இலக்கிய சந்திப்பை தங்களின்ற அதிகார மேலாண்மை இருத்தலுக்காக பயகன்படுத்திக் கொண்ட இந்த நபர்களை பார்த்தால், இவங்களின்ற இந்த இலக்கிய சந்திப்பு தொடர்பு இடைக்காலத்தில்தான் ஏற்பட்டது. ஆனால் இந்த குறுகிய காலத்தில் தங்களுக்கேற்ற குழுவாதத்தை முரண்பாட்டை உருவாக்கி இலக்கிய சந்திப்பை தங்கள் உடமையாக்கிக் கொண்டாங்க. இதனைத்தான் நான் புலிக்குணம் என்றது. இதுதான் எனக்கு இருந்த விமர்சனமே தவிர தனிப்பட்ட ரீதியில் இவங்களோட எந்த முரண்பாடுகளும் எனக்கில்லை. சந்திக்கும்போது கதைப்பதுண்டு. அதேநேரம் கருத்துக்களும் விமர்சனங்களும் எனக்கு இருக்கும். இங்க ஒன்றை பதிவு செய்யணும். இவங்கட முரண்பாட்டிக்கு பிறகு இவங்க வெளியிட்ட எக்சில் சஞ்சிகையின் அட்டையில் லக்சுமியைபற்றி மிக மோசமாக தாக்கி எழுதி இருந்தாங்க. ஒரு இலக்கிய சஞ்சிகையின் அட்டையில் ஒருவரை தாக்கி மோசமாக எழுதி வெளியிட்ட பெருமை இவங்களைத்தான் சாரும்.

 

யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகள் இந்தியாவிடம் – இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட 6 உடன்படிக்கைகள் !

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரின் இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று (28) பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டன.

உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் நேற்று நடைபெற்றது.

இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்திய மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் உறவுவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.

 

குறித்த உடன்படிக்கைகள் வருமாறு,

  • காலி மாவட்டத்திலுள்ள 200 பாடசாலைகளுக்கு நவீன கணினி கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் பலகைகளை வழங்கும் வகையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.
  • இலங்கையில் விசேட இலத்திரனியல் அடையாளஅட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை.
  • சமுத்திர பாதுகாப்பு தொடர்பு மத்திய நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு மற்றுமொரு புரிந்துணர்வு உடன்படிக்கை.
  • இலங்கையிலுள்ள மீனவத் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் வகையிலான உடன்படிக்கை.
  • சுஷ்மா சுவராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை.
  • யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளில் ஐபிரிட் மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு போன்ற உடன்படிக்கைகள் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடையே கைச்சாத்திட்டுள்ளன.

94வது ஒஸ்கார் விருது விழா – அறிவிப்பாளரின் முகத்தில் பளாரென அறைந்த நடிகர் வில் ஸ்மித் – காரணம் என்ன..?

ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் நிகழ்ச்சி தொகுப்பாளரின் கிறிஸ் ரோக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹொவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவானது, இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது.

ஒஸ்கார் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக இந்த ஆண்டு ஒஸ்கார் விருதுக்கு வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார்.

அவர் நடிகர் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி நகைச்சுவையாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நடிகையின் கணவரும் ஹொலிவுட் நடிகருமான வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

பின்னர் அவர் தனது இருக்கைக்குத் திரும்பி, “என் மனைவியின் பெயரை உன் வாயிலிருந்து விலக்கிவிடு” கூச்சலிட்டார். நடிகர் வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை தனது மனைவியை கேலி செய்ததற்காக மேடையில் அறைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சிறந்த நடிகருக்கான ஒஸ்கர் விருதை ஹொலிவுட் நடிகர் “வில் ஸ்மித்” தட்டி சென்றுள்ளார். “கிங் ரிச்சர்ட்“ திரைப்படத்திற்காக வில் ஸ்மித்துக்கு ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது. ஒஸ்கர் விருது கிடைத்ததும் அப்படி நடந்து கொண்டதற்கு மன்னிப்பையும் கேட்டுக்கொண்டார் ஸ்மித்.

94 வது ஆஸ்கர் விருது விபரங்கள் – சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர்  வில் ஸ்மித்திற்கு !

நடப்பாண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர்  வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார்.
அமெரிக்க திரைப்படம் "டியூன்"  6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது
சிறந்த நடிகைக்கான விருது ஜெசிகா சாஸ்டைனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
The Eyes of Tammy Faye திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.
‘தி பவர் ஆஃப் தி டாக்’ திரைப்படத்தை இயக்கியதற்காக ஜேன் கேம்பியன் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதை வென்றார். கோடா சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றுள்ளது.
சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை ஜென்னி பீவன் வென்றுள்ளார்.
இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ் , ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.
டெனிஸ் வில்லெனு இயக்கிய அமெரிக்க திரைப்படமான “டியூன்”  திரைப்படம், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது என்கான்டோ திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.
ஜப்பானிய திரைப்படமான “டிரைவ் மை கார்” சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது.
சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை ‘தி குயின் ஆப் பேஸ்கட்பால்’ திரைப்படம் வென்றது.
கோடா திரைப்படத்தில் நடித்த  ட்ராய் கோட்சூர் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.
வெஸ்ட் சைடு ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த அரியானா டிபோஸ் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்றுள்ளார்.

மீண்டும் முடங்கும் சீனா !

சீனாவில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து உள்ளது. தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க சினாவில் மீண்டும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதிக்கத்தொடங்கி உள்ளது. ஏற்கனவே பல இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஷாங்காய் உள்பட பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதையொட்டி கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அங்குள்ள கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டு உள்ளன.

ஏற்கனவே அங்குள்ள டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா மூடப்பட்டு உள்ளது குறிபிடத்தக்கது. பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்தியாவிடமிருந்து மேலுமொரு பெரிய தொகையை கடனாக கோரியுள்ள இலங்கை !

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது அயல்நாட்டின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள வேளையில் இந்த தகவலை இரண்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனவரி 2020 முதல் அந்நியசெலாவணி கையிருப்பு 70 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதால் நாணயபெறுமதியை இறக்கத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய உணவுகள் மற்றும் எரிபொருளிற்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்வதில் பெரும்நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன் சர்வதேச நிதி வழங்குநர்களிடம் உதவிகளை கோருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

அரிசி கோதுமைமா தானியங்கள் சீனி மருந்துபோன்றவற்றை இறக்குமதி செய்வதற்கான புதிய கடனுக்கான வேண்டுகோளை பூர்த்திசெய்ய தயார் என இந்தியா தெரிவித்துள்ளது என இந்த விடயத்தை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை இந்தியாவிடமிருந்து மேலதிகமாக ஒரு பில்லியன் டொலரை கோரியுள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே இந்தியா உறுதியளித்துள்ள ஒரு பில்லியன் டொலர் கடனுதவிக்கு மேலதிகமாக இந்த உதவி கோரப்பட்டுள்ளது என அவை தெரிவித்துள்ளன. பேச்சுவார்த்தைகள் இரகசியமாக இடம்பெறுவதால் தகவலை தெரிவித்தவர்கள் தங்களை அடையாளம் காட்டமுன்வரவில்லை. இலங்கையின் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களும் இந்திய வெளிவிவகார அமைச்சும் இது குறித்த கேள்விகளிற்கு பதிலளிக்கவில்லை.

முக்கிய இறக்குமதிகளிற்கு செலுத்துவதற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்த மாதம் புதுடில்லியில் கைச்சாத்திட்டார். ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையின் நிதியமைச்சரை திங்கள்கிழமை சந்தித்தார்.
பொருளாதார நிலைமைகுறித்தும் இந்தியாவின் ஆதரவும் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன் என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

“புடின் ஒரு கசாப்புக் கடைக்காரர்.”- ஜோ பைடன் கடுமையான விமர்சனம் !

உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக விமர்சித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்து வருகிறார்.

உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு ஜோ பைடன் சென்று உள்ளார். போலந்து தலைநகர் வார்சாவில் ஜோ பைடன் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

உக்ரைனில் ரஷியாவுக்கு வெற்றி கிடைக்காது. இந்த போரில் சில நாட்களிலோ, சில மாதங்களிலோ வெற்றி பெற முடியாது. நீண்ட காலத்துக்கு தொடரக்கூடும். ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக பெரும் பொருளாதார நாடுகள் ஒன்றுபட வேண்டும். கடவுள் அருளால் இந்த மனிதர் (புடின்) ஆட்சியில் நீடிக்க கூடாது. அவர் அதிகாரத்தில் இருக்க முடியாது.

புடின் ஒரு கசாப்புக் கடைக்காரர். உக்ரைன் மீதான ரஷியாவின் ஊடுருவலை சுதந்திர உலகம் எதிர்க்கிறது என்றார்.

புடின் ஆட்சியில் நீடிக்க கூடாது என்ற ஜோ பைடன் கருத்துக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷிய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும் போது, ரஷியாவின் அதிபர், ரஷிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அதை ஜோ பைடன் முடிவு செய்யக்கூடாது என்றார்.

இந்த நிலையில் ஜோ பைடன் தெரிவித்த கருத்து தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறும் போது, புதின் குறித்த அதிபர் ஜோ பைடன் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அவர் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. அதிபர் ஜோ பைடனின் கருத்தின் அர்த்தம் என்னவென்றால் புதின் தனது அண்டை நாடுகள் மீது அதிகாரத்தை செலுத்த அனுமதிக்க முடியாது. ரஷியாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. புதினின் அதிகாரம் குறித்தோ அல்லது ஆட்சி மாற்றம் பற்றியோ அவர் விவாதிக்கவில்லை என்றார்.

“இந்த இம்ரான் கான் ஒருபோதும் தலைவணங்க மாட்டான்.” – பாக்.பிரதமர்

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு மீது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், இம்ரான் கானுக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்கட்சியை சேர்ந்த 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது இம்ரான் கானுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்று அரசு கவிழும் நிலை உள்ளது. எனவே, வாக்கெடுப்பு முன்பாகவே இம்ரான் கான் பதவி விலகலாம் என்ற தகவல் பரவியது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இம்ரான் கானின் பலத்தை காட்டும் வகையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆளும் கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இம்ரான் கான் பேசுகையில்,
தனது ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட பணிகளை குறிப்பிட்டார். பாகிஸ்தான் வரலாற்றில் தனது அரசாங்கம் மூன்றரை ஆண்டுகளில் செய்யாத பணிகளை, வேறு எந்த அரசாங்கமும் செய்யவில்லை என்று கூறினார்.
“ஒயிட் காலர் குற்றவாளிகளால் பாகிஸ்தான் ஏழை நாடாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் நாட்டை மூன்று எலிகள் சூறையாடி வருகின்றன.
இந்த இம்ரான் கான் ஒருபோதும் தலைவணங்க மாட்டான், தனது நாட்டை யாருக்கும் பணிய விடமாட்டான். நமது வெளியுறவுக் கொள்கை வெளியில் இருந்து கையாளப்படுகிறது. அரசாங்கத்தையும் வாழ்க்கையையும் தியாகம் செய்ய முடியும், ஆனால் குற்றவாளிகளை மன்னிக்க முடியாது’ என்றும் இம்ரான் கான் பேசினார்.