April

April

மருத்துவமனைகளில் சிறுபான்மையின பணியாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகளைப் பெறுவதில் சிரமம்!

பிரித்தானிய மருத்துவமனைகளில் பணியாற்றிய ஆசிய ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு அங்கிகளைப் பெறுவதில் பெரும்பான்மை யினத்தவர்களைக் காட்டிலும் சிக்கல்கள் இருந்ததாக குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளது. மருத்துவமனைகளில் கோவிட்-19 தாக்கத்தினால் இறந்தவர்களில் ஆசிய ஆபிரிக்க சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை அடுத்தே அதனை அறிவதற்கான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டு இருந்தது. இன்று வெளிவநதுள்ள அறிக்கையில் ஆசிய ஆபிரிக்க சிறுபான்மையின பணியாளர்கள் பாதுகாப்பு அங்கிகளைப் பெறுவதில் கூடுதல் தடைகள் காணப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து மருத்துவமனைகளில் 44 விதமான மருத்துவர்களும் 22 வீதமான மருத்துவ தாதிகளும் ஆசிய ஆபிரிக்க இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த சனத்தொகையில் இவர்கள் 14 வீதத்தினரே.

மேலும் கோவிட்-19 தாக்கத்தில் ஆசிய ஆபிரிக்க இனத்தோர் கூடுதலாக மரணமடைவதற்கு ஆவர்கள் மத்தியில் கூடுதலாகக் காணப்படும் ஏனைய நோய்க்காரணங்களும் காரணமாக உள்ளது. அதைவிடவும் அவர்களுடைய பொருளாதார நிலை, ஒரே வீட்டில் மூன்று தலைமுறையினர் வரை ஒன்றாக வாழ்வது, பொருளாதார நிலைகாரணமாக வீடுகளில் கூடுதலான எண்ணிக்கையானோர் வாழ்வது போன்றனவும் ஆசிய ஆபிரிக்க சிறுபான்மைச் சமூகங்களில் கோவிட்-19 தாக்கம் அதிகமாகக் காணப்படுவதற்கு காரணமாக உள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸிற்கு பலியானவர்கள் 50,000 யை தாண்டிவிட்டது!

– பழம் பிடுங்கவும் ஆட்களில்லை வைத்தியம் பார்க்கவும் ஆட்களில்லை. சேர்ந்து வாழவும் தயாரில்லை –

பிரித்தானியாவில் கொரோனா வைரஸிற்குப் பலியானவர்கள் அரசு இன்று வெளியிட்டுள்ள எண்ணிக்கையைக் காட்டிலும் இரட்டிப்பானது என்பதே மிகக் கசப்பான உண்மை. இதுவரை அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் இறக்கின்ற போதே கொரோனா வைரஸினால் இறந்தவர்கள் எனப் பதிவு செய்கின்றனர். வயோதிபர் இல்லங்களில் மரணமடைந்தவர்கள் நேற்றுவரை இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆனால் இன்று முதல் வயோதிபர் இல்லங்களில் கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைபவர்களும் இப்பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக நேற்றுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 26,097 என்றே அரசு அறிவித்து உள்ளது.

அப்படியானால் 50,000 பேர் என்ற கணிப்பு எப்படி வந்தது என்பது முக்கியம். பதிவு செய்யப்படும் ஒவ்வொரு மரணமும் ஓஎன்எஸ் – Office for National Statistics புள்ளிவிபரத்திற்கு வந்தடையும். அதன்படி கடந்த ஆண்டுகளில் மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட மரணங்களுக்கும் இந்த ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட மரணங்களுக்கும் இடையே உள்ள எண்ணிக்கை வேறுபாடே 50,000 பேர் கோவெட்-19 காரணமாக நிகழ்ந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றது.

அப்படியானால் அரச புள்ளி விபரம் எப்படி இந்த இருட்டடிப்பைச் செய்தது என்ற மற்றுமொரு கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. அரசு ஏற்கனவே வீடுகளிலும் வயோதிபர் பராமரிப்பு இல்லங்களிலும் நிகழும் மரணங்களை கோவிட்-19 எனப் பதிவு செய்வதை தவிர்க்கின்ற வகையில் கடுமையான பதிவுமுறைகளை மேற்கொண்டுள்ளது. அதனால் பொதுமருத்துவர்கள் வயோதிபர்களின் மரணத்தைப் பதிவு செய்கின்ற போது கோவெட்-19 அல்லாத காரணங்களால் (chronic conditions such as heart disease, cancer, stroke, diabetes, and Alzheimer’s disease) மரணம் சம்பவித்ததாக பதிவு செய்கின்றனர். மேலும் கோவெட்-19 ரெஸ்ட் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்த மரணங்கள் கோவெட்-19 அல்லாத காரணங்களால் நிகழ்ந்ததாகவே பதிவு செய்யப்படுகின்றது.

மற்றுமொரு தொகை மரணங்கள் கோவெட்-19 அல்லாத காரணங்களினால் தூண்டப்படுகின்றது. குறிப்பாக புற்றுநோய், மாரடைப்பு, மற்றும் உயிராபத்து ஏற்படுத்தும் நோய்களைக் கொண்டவர்கள் மருத்துவமனைக்கு செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். மேலும் மருத்துவ வளங்கள் மனிதவளம் உட்பட கோவெட்-19க்கு திசை திருப்பப்பட்டு உள்ள நிலையில் பல அவசர சத்திர சிகிச்சைகள் கூட பிற்போடப்பட்டு உள்ளது. இவைகளும் கூட மரண எண்ணிக்கையை அதிகரிக்கின்றது. அரச அறிவிப்புகளிலேயே 25 வீதமான கூடுதலான மரணங்கள் நிகழ்வதை உறுதிப்படுத்தி உள்ளது.

பத்து ஆண்டுகள் கொன்சவேடிவ் ஆட்சியில் பிரித்தானிய மருத்துவத்துறை மிகப்பலவீனமான நிலையில் இருந்த போதே கோவெட்-19 ஆபாயத்திற்கு முகம் கொடுத்தது. அப்போது 50.000 வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலையிலேயே பிரித்தானிய சுகாதார சேவைகள் கோவிட்-19 உடனான தனது போரை ஆரம்பித்தது. தற்போது உலகின் வறிய நாடுகளில் இருந்து மருத்துவ தாதிகளை வரவழைப்பதற்கான கட்டுப்பாடுகளை உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் தளர்த்தி உள்ளார். அவ்வாறான மருத்துவ தாதிகளையும் மருத்துவர்களையும் வரவழைக்க முயற்சிக்கும் உள்துறை அமைச்சர் அவர்களின் குடும்பங்களை அழைத்து வருவதற்கான கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் இறுக்கமாகவே வைத்துள்ளார்.

பழம் பிடுங்கவும் ஆட்களில்லை வைத்தியம் பார்க்கவும் ஆட்களில்லை. ஆனால் மற்றையவர்களோடு சேர்ந்து வாழவும் தயாரில்லை என்ற நிலையில் பிரித்தானிய கொன்வேட்டிவ்கள் செயற்பட்டு வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வீம்போடு வெளியேறியவர்கள் இப்போது எல்லாவற்றுக்கும் மற்றவர் கைகளை எதிர்பார்க்கின்றனர்.

பிரித்தானியாவில் கோவிட்-19 தமிழர்களுக்கான உதவிச் சேவை

தமிழர்களுக்கான உதவிச்சேவை ஒன்று அண்மையயில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. கோவிட்-19 நெருக்கடியான இக்காலகட்டத்தில் வீட்டில் இருந்தவாறே தொலைபேசி மூலமாக உங்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை தங்களால் வழங்க முடியும் என இவ்வமைப்பினர் தங்கள் இணையத் தளத்தில் குறிப்பிட்டு உள்ளனர். குறிப்பாக மருத்துவ ஆலோசணைகள் மனநலம் சார்ந்த மருத்துவ ஆலோசணைகள் இன்று குறிப்பாகத் தேவைப்படுகின்ற அரச உதவித் திட்டங்கள் பற்றிய ஆலோசணைகள், சட்ட ஆலோசணைகள், கல்வி தொடர்பான ஆலோசணைகள் சுகாதார சேவைகள் பற்றிய ஆலோசணைகளையும் இவர்கள் தமிழிலேயே உரையாடி வழங்கக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

எமது நினைவுவெளிகளுக்கு அப்பால் நடந்துதுகொண்டிருக்கும் மிகப்பெரும் நெருக்கடியான நிலையில் இவ்வாறான ஆலோசணைகளும் உதவிகளும் வழிகாட்டல்களும் நிச்சயம் பலருக்கும் உதவியாக அமையலாம்.

இவ்வமைப்பை மருத்துவர் புவிநாதன் முன்னெடுத்துள்ளார். ஆலோசணைகளை வழங்குபவர்கள்: கணக்கியல் பால முரளி, ஆனந்தன் ஆர்நோல்ட், மருத்துவம் – மருத்துவர்கள் புவிநாதன், கவன், செல்வராணி பத்மபாஸ்கரன், தாரணி சிறிசற்குணம், ஹிமா புவிநாதன், சமூக சுசாதாரசேவை – ராஜேஸ்வரி சுப்பிரமணியம், அரச உதவித் திட்டங்கள்: கௌரி பரா

அவர்களுடைய தொடர்பு விபரங்கள்:

http://tamilshelpline.org/

United Kingdom
02035001573
07525050010

Medical@tamilshelpline.org
immigration@tamilshelpline.org
lawyer@tamilshelpline.org
business@tamilshelpline.org
finance@tamilshelpline.org
benefits@tamilshelpline.org
youth@tamilshelpline.org
community@tamilshelpline.org
housing@tamilshelpline.org

Opening Hours
Monday – Friday
09:00 – 18:00

Saturday
09:00 – 18:00

Sunday
10:00 – 16:00

பிரிடிஸ் ஏயர்வெய்ஸ் 12,000 பேரை இன்று வேலைநீக்கம் செய்தது!

பெரும் நிறுவனங்கள் வேலையில் இருந்து வேலைசெய்வோரை நிறுத்த ஆரம்பித்து விட்டன. இன்று பிரிடிஸ் ஏயர்வெய்ஸ் 12,000 பேரை வேலையில் இருந்து நிறுத்தியுள்ளது. கொரோனா வந்த அதிஸ்ரம் பெரும் நிறுவனங்கள் எல்லாம் கொள்ளை இலாபமீட்டும் வகையில் தங்கள் நிறுவன வேலைக்கட்டமைப்புகளை மாற்ற உள்ளன. சோசல் டிஸ்ரன்ஸ் வேர்க்கிங் புறம் ஹோம் எல்லாமே இந்த நிறுவனங்களுக்கு சாதகமாகிப் போய்க் கொண்டிருக்கின்றது. மேலும் சுப்பர்மாக்கற்றுக்கள் ஓட்டோமேட்டட் சிஸ்டத்தை ஏற்கனவே அறிமுகப்படுத்தி விட்டனர்.

இன்னும் பத்து ஆண்டுகளில் இப்போது நடைமுறையில் உள்ள 50 வீதமான வேலைகள் இல்லாமல் போய்விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த கொரோனாவின் வரவால் பத்து ஆண்டுகள் அல்ல இன்னும் சில ஆண்டுகளிலேயே தற்போதுள்ள பல வேலைகள் காணாமல் போய்விடும்.

அப்ப இந்த நுகர்வுப் பொருளாதாரத்துக்கு என்ன ஆகும்? வேலை இல்லாதவனிடம் காசு இல்லை. காசு இல்லாதவன் என்த்தை வாங்குவான். உலக நாடுகள் பொருளாதாரக் கொள்கையை மீள்வரைபு செய்ய நெருக்க வேண்டிய காலகட்டம் இது.

இவர்களில் ஒருவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தாள் என்ன ஆறுதல் சொல்வீர்கள்?

நேற்று முன் தினம் இடம்பெற்ற குழந்தைகளின் படுகொலையும் தந்தையின் தற்கொலை முயற்சியும் எமது சமூகம் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினைகளின் கொடுரமான வெளிப்பாடு.

– என் அன்புச் சினேகிதி ஒருத்திக்கு எழுதிய மடலில் இருந்து. –

கனடாவில் சில ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்த மூன்று குழந்தைகளின் தாய் – இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் தனது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த போது காப்பாற்றப்பட்டார். லூசியம் பகுதியில் ஒரு இளம் தாய் தனது மூன்று பிள்ளைகளை கத்தியால் குத்திய பின் தற்கொலை செய்ய முயற்சித்த போது தாயும் ஒரு பிள்ளையும் மட்டும் காப்பாற்றப்பட்டனர். இவ்வாறான ஒரு சம்பவம் ஹரோவிலும் இடம்பெற்றது. இதே போல் அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழரை மணம் முடித்த வியட்நாம் பெண்ணும் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்ட போது காப்பாற்றப்பட்டார்.

இச்சம்பவங்கள் எல்லாம் கடந்த 10 ஆண்டுகளுக்குள் இடம்பெற்ற நிகழ்வுகள். இவற்றை செய்திகளாக பத்திரிகைகளில் அவர்களின் படங்களோடு பதிவு செய்திருக்கிறேன். லூசியத்தில் நடந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட குழந்தைகளின் இறுதி நிகழ்விலும் கலந்துகொண்டேன்.

நான் இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்குக் காரணம் இந்த மனம் தகவல்களைக் கையாள்கின்ற முறை, சிந்தனை, எண்ணங்கள்; அன்பும் அரவணைப்பும் கொண்ட இளம் தாய்மாரை எவ்வளவு மோசமான கொடுமையை, தங்கள் கருவில் உருவான பத்துமாதம் சுமந்த குழந்தைகளுக்கு செய்ய வைத்திருக்கின்றது பார்த்தீர்களா?

இந்தக் கொலைகளைச் செய்த தாய்மாருடைய மனநிலை அவர்கள் தங்கள் குழந்தைக்கு கொடுமை செய்வதாக எண்ணவில்லை. அக்குழந்தைகள் தாங்கள் இல்லாமல் கஸ்டப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே கொலை செய்யப்பட்டனர். இன்றைக்கும் இத்தாய்மார் உயிரோடு சிறையிலும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் உள்ளனர்.

இந்தத் தாய்மாருக்கு எற்பட்டது போஸ்ட் நட்டல் அல்லது போஸ்ட் ரோமற்றிக் டிஸ் ஓடர் – Postnatal Depression / Post Traumatic Depression – என்ற மனநிலை பாதிப்பு. அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டுகொண்டிருந்தால் இவர்களை மிக இலகுவாக இயல்பு வாழ்க்கைக்கு திருப்பி இருக்க முடியும். அந்த குழந்தைகளும் உயிரிழக்க வேண்டி வந்திராது. தாய்மாருடைய எதிர்காலமும் இவ்வாறு சீரழந்திருக்க மாட்டாது.

எமக்கு துன்பம் அல்லது கஸ்டம் வருகின்ற போது எங்களுடைய மனம் எமக்கு ஏற்பட்ட துன்பமான சம்பவங்கள் அல்லது கஸ்டமான விடயங்களை எல்லாம் ஞாபகத்துக்கு கொண்டு வந்துவிடுகின்றது. அது எங்களை மேலும் மேலும் வேதனைக்கு உட்படுத்தி எங்களை பலவீனப்படுத்திவிடும். இதனை நீங்கள் புரிந்து கொண்டு துன்பங்களையும் கஸ்டங்களையும் மீள மீள அசை போடாமல் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.
எமது மூளையில் தகவல்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டே சேமிக்கப்படுகிறது. துன்பங்களை கஸ்டங்ளை அசை போட்டால் அது தொடர்பான சம்பவங்கள் ஞாபகத்துக்கு வரும்.. மாறாக மகிழ்ச்சியான பொழுதுகளை நினைவுபடத்தினால் நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சியான காலங்கள் தொடர்ந்து வரும். இது கிட்டத்தட்ட google search பண்ணுவது போல். நீங்கள் தேடும் சொல்லோடு தொடர்புபட்ட எல்ல விடயங்களையும் தேடிக்கொண்டு வந்து கொட்டுகிறதல்லவா அப்படித்தான் எமது மனமும். அதனால் ‘எனக்குத் தான் எல்லா கஸ்டமும் வருகிறது’ என்று எண்ணி உங்களைப் பலவீனப்படுத்தி விட வேண்டாம்.

எங்கள் உடலில் இதயம் நுரையீரல் குடல் மூளை கை கால் என்றெல்லாம் அங்கங்கள் உறுப்புகள் இருக்கின்றது. ஆனால் எங்கள் உடலில் ‘மனம்’ என்றொரு அங்கம் உறுப்பு இல்லை. மூளையின் நினைவுப் (conscious mind) பகுதியிலும் நினைவுக்கு அப்பாற்பட்ட (unconscious mind) பகுதியிலும் பதிவில் உள்ள தகவல்களைக் கையாள்வதையே நாங்கள் ‘மனம்’ என்கிறோம்.

அன்பு, பாசம், காதல், மகிழ்ச்சி, துயரம், வேதனை, கோபம், விரக்தி எல்லாமே இந்த தகவ்களைக் கையாள்வதாலும் எமது உடலில் உள்ள ஹோர்மோன்களினாலுமே ஏற்படுகின்றது.

மனம் இந்தத் தகவல்களைக் கையாளும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த மனிதர்களால் முடியும். ஆனால் துரதிஸ்டவசமாக பலரும் அதனை முயற்சிப்பதில்லை. நாங்கள் சிந்திக்கின்ற முறையில் அல்லது நாங்கள் புரிந்துகொள்கின்ற முறையில் சிறிய மாற்றங்களை செய்வோமானால் பலரும் தங்கள் துன்பியல் வட்டத்துக்கு வெளியே வந்துவிடலாம். அப்படி வரத்தவறினால் இன்னும் இன்னும் துன்பியலை நோக்கியே அவர்கள் இழுக்கப்படுவார்கள்.

தமிழ் சமூகம் மனநிலை பாதிப்பு என்பதை ‘பைத்தியம்’ ‘சைக்கோ’ என்று மட்டுமே அறிந்து வைத்துள்ளது. சமூகத்தில் இது பற்றிய விழிப்புணர்வு இன்றும் இல்லை என்றே சொல்லலாம். இந்நிலை மாற வேண்டும்.

புத்தர் ஞானம் பெற்றதே இழப்பு தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த போதே. உறவும் பிரிவும் வாழ்வின் யதார்த்தம். அதனையும் கடந்து – மறந்து அல்ல – வாழ்வு நகர வேண்டும். எம்மீது அன்பும் பாசமும் காதலும் கொண்டவர்கள் பிரிகின்ற போது அவர்கள் நினைவுகளைச் சுமந்து – சோகத்தை அல்ல – மகிழ்ச்சியோடு முன்னேற வேண்டும். அதே போன்றே கொபத்தையும் வஞ்சத்தையும் கடந்து செல்ல வேண்டும்.

ஒருவருடைய பிரச்சினையை இன்னொருவரால் தீர்த்து வைப்பது என்பது மிகக் கடினமானது. அதுவும் குறிப்பாக மனம் சார்ந்த பிரச்சினைகளை இன்னொருவரால் தீர்த்து வைக்க முடியாது. இந்த ஆற்றுப்படுத்துபவர்கள் – counsellors – உங்கள் கவலைகளைக் கேட்டு தெரிந்துகொண்டு; உங்களை நீங்களே புரிந்துகொள்ள வைப்பதன் மூலம்; நீங்களாகவே இந்தத் துன்பியல் சுழற்சியில் இருந்து வெளியே வருவதற்கு உதவுவார்கள். இது ஓரிரு சந்திப்புகளிலும் நடக்கலாம் அல்லது வருடங்களும் ஆகலாம். அது பாதிக்கப்பட்டவருடைய மனநிலை அவர் எவ்வளவுதூரம் ஒத்துழைப்பார் என்பதில் தங்கி உள்ளது. பாதிக்கப்பட்டவர் முன்வருகின்ற போதே பாதித் துன்பியலுக்கு முடிவு வந்துவிடும் மிகுதி விரைவிலேயே காணாமல் போய்விடும்.

ஆனால் துன்பியலுக்குள்ளேயே வாழப் பழகிக் கொண்டால் அதற்குள்ளிருந்து வெளிவருவது மிகக்கடினமானதாகிவிடும்.

சிறுவர்கள் மத்தியில் புதிய நோய்த் தாக்கம் கவனத்தில் கொள்வதற்காக: தேவையேற்படின் மருத்துவ உதவியை நாடவும்!

அண்மைய நாட்களாக சிறுவர்கள் மத்தியில் புதிய நோய்த்தாக்கம் ஒன்று ஏற்ப்ட்டு வருவதாகவும் அதனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ஐசியு இல் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் என்எச்எஸ் அறிவித்து உள்ளது. சிறார்களின் உடலில் வித்தியாசமான தாக்கம் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு என்எச்எஸ் அறிவித்துள்ளது.

இது கோவிட்-19இன் தாக்கமா இல்லையா என்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் பாதிக்கபட்ட சிறார்களில் கோவிட்-19 வைரஸ் இருந்துள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. உடலில் புள்ளி புள்ளி வீக்கங்கள் அவதானிக்கப்பட்டு உள்ளது.

கிழக்கு லண்டன் பகுதியில் இரு தமிழ் குழந்தைகள் பலி!!!

தனது இரு குழந்தைகளை படுகொலை செய்து தன்னையும் படுகொலை செய்ய முற்பட்ட நீதி குமார் (40) அருகில் உள்ள தமிழ் கடையில் பணியாற்றி வந்துள்ளார். நீதி அன்பான தந்தை என அவரை அறிந்த அவர் பணியாற்றிய கடையின் முதலாளி தெரிவித்து இருந்தார்.கணவரின் செயலைக் கண்டு தெருவுக்கு வந்து கதறி அழுதுள்ளார் மனைவி நீஸா. என்ன காரணத்தால் இக்கொடூரம் நிகழ்ந்தது என்பது இதுவரை தெரியவரவில்லை.

கிழக்கு லண்டன் பகுதியில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் மாலை 5:40 மணியளவில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். ஒரு வயதுடைய பெண் குழந்தையும் மூன்று வயதுடைய ஆண்குழந்தையும் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்து உள்ளனர். காயமடைந்த நிலையில் 40 வயதான ஆண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெண் குழந்தை ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாகவும் ஆண் குழந்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரின் பிள்ளைகளே படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. பொலிஸார் இப்படுகொலை தொடர்பாக வேறுயாரையும் தேடவில்லை என அறிவித்துள்ளனர். இதன்படி குடும்பத்தகராறு காரணமாவே இப்படுகொலைகள் இடம்பெற்றதாக அஞ்சப்படுகிறது. இக்குடும்பத்தினர் இல்போர்ட் அலட்ப்றோ றோட் நோத்தில் உள்ள விநாயகன் ஸ்ரோரிற்கு மேல் வசித்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக இக்குடும்பத்தினரை அறிந்த ஒருவர் தேசம் நெற் க்கு தெரிவிக்கையில் கணவன் மனைவிக்கு இடையே இடம்பெற்ற தகராற்றில் தந்தை பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்வதற்கு தன்னைத்தானே குத்தியதாகத் தெரிவித்தார்.

கொரோனா லொக்டவுன் இக்கு பின்பாக குடும்ப வன்முறைகள் வீடுகளில் அதிகரித்து வருவதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தி வருகின்றமை தெரிந்ததே.

“எங்கட சனத்துக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?”

இப்படிக் கேட்டது வேற யாருமல்ல என்னுடைய நண்பர் அதிதரனும் அவருடைய நண்பர் தர்சனும். இருவருமே மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள். அதிதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி. கருணாவின் பிளவுக்கு முன்னதாகவே இயக்கத்தை விட்டு வெளியேறியவர். அவர்களுடைய கேள்வி யாழ்ப்பாணத்தார் எல்லாம் வெளிநாட்டுக்கு வர உயிரைக் கொடுத்து போராடியது நாங்கள். ஆனால் எங்களுக்கு நீங்கள் தந்த பட்டம் காட்டிக் கொடுத்தவங்கள் என்று. நாங்கள் பிரிந்த பிறகு உங்களால் ஒரு யுத்தத்தை தன்னும் வெல்ல முடிந்ததா? நீங்கள் வெளிநாடுகளுக்கு வந்து உங்கட உங்கட ஊர்களுக்கு செய்கிறியள் “எங்கட சனத்துக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று என்னைக் கேட்டனர். உண்மையிலேயே என்னிடம் பதில் இல்லை.

கடந்த பத்து வருடங்களாக லிற்றில் எய்ட் கணணிக் கல்வி நிலையம் கிளிநொச்சியில் இயங்குகிறது. கிழக்கில் நாங்கள் குறிப்பாக எதுவும் செய்யவில்லை. மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே. மிகச் சிறிய வீதத்தினரே ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வெளியே செய்வது மிகக் குறைவு. அப்படிச் செய்தாலும் வடக்கைத் தாண்டுவது இன்னும் குறைவு. வடக்கு கிழக்கு இணைய வேண்டும் என்று கூப்பாடு போடும் யாரும் செயலளவில் கிழக்கை புறக்கணித்தே வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் வலி மிகக் கொடியது. மௌனம் மட’டுமே பதிலாகிறது.

பொறிஸ்க்கும் முதலாளித்துவத்திற்கும் பாடம் கற்பிக்கும் கொரோனா!

முதலாளித்துவ சிந்தனையின் அடிநாதமாகச் செயற்பட்ட மார்க்கிரட் தட்சர் ‘சமூகம் என்ற ஒன்றில்லை என்றும் ஆண்களும் பெண்களும் அவர்களுடைய குடும்பங்களுமே இருப்பதாகத் தெரிவித்தார். மக்களே தங்களை தாங்கள் முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மூன்று தசாப்தங்களுக்குப் பின் அதே கொன்சவேடிவ் கட்சியில் இருந்து பிரதமரான பொறிஸ் ஜோன்சன், மார்கிரட் தட்சரினதும் கொன்சவேடிவ் கட்சியினதும் ஒட்டுமொத்த முதலாளித்துவத்தினதும் கொள்கைக்கு மாற்றாக “சமூகம் என்ற ஒன்று இருக்கின்றது” எனத் தெரிவித்து இருந்தார். கொரோனா வைரஸ் தாக்கிய நிலையில் சுகாதார சேவையாளர்கள் அடிமட்ட தொழிலாளர்கள் கொரோனாவுக்கு எதிராக தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிக்கொண்டிருக்கையிலேயே பொறிஸ்க்கு இந்த ஞானோதயம் ஏற்பட்டது.

“They are casting their problems at society. And, you know, there’s no such thing as society. There are individual men and women and there are families.” – Margret Thatcher, 1987

“There really is such a thing as society”. – Boris Johnson, 2020

நாட்டு மக்களுடைய நலனை முன்நிறுத்தியே லொக்டவுன் தளர்வு! பொருளாதாரத்தை வைத்தல்ல!

காச்சலும் கொரோனாவும் அவனவனுக்கு வந்தால் தான் தெரியும் அதன் வலி. இது இப்போது பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு நல்லாகவே உறைத்திருக்கிறது. காலம் கடந்த ஞானம் என்றாலும் இப்பவாவது ஞானம் பிறந்தது நல்லதே. நாட்டு மக்களுடைய நலனை முன்நிறுத்தியே ‘லொக்டவுன்’யைத் தளர்த்துவது பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டும் என்றும் பொருளாதாரத்தையும் மக்கள் நலனையும் ஒப்பிட்டு முடிவு எடுக்கப்பது தவறானது என்றும் தற்போது கருத்து தெரிவித்து உள்ளார். இதனை முன்னரே உணர்ந்து இருந்தால் எத்தினையாயிரம் உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்

நாட்டின் அரசியலில் எவ்வித அக்கறையும் இல்லாமல் இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டாலென்ன எதுவும் மாறாது என்று பீற்றிக்கொண்டிருக்கும் ஜென்மங்களுக்கு இப்போதாவது ஏதாவது உறைத்திருக்குமா?