February

February

புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச்சென்ற கப்பல் இத்தாலி அருகே விபத்து – 43 பேர் பலி !

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரைக்கு அருகே புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த இத்தாலி கடலோர காவல்படை மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மாலை நிலவரப்படி 43 சடலங்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். 80 பேர் உயிர் பிழைத்தனர். அவர்களில் சிலர் படகு விபத்துக்குள்ளானதும் நீந்தி கரைக்கு வந்துள்ளனர். கலப்ரியா பிராந்தியத்தின் ரிசார்ட் அருகே கடற்கரைக்கு சில மீட்டர் தொலைவில் உள்ள பாறைகள் மீது படகு மோதியதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. வேறு யாரேனும் உயிர் பிழைத்திருக்கிறார்களா? என கடற்பகுதியில் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்த கோர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். மேலும் கடலில் அதிக உயிரிழப்புகளைத் தவிர்க்க, முறையற்ற வகையில் புலம்பெயரும் பயணங்களை தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்தார்.

“ரஷ்யாவும், உக்ரைனும் விரைவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.” – சீனா

போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும், உக்ரைனும் விரைவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும், அனைத்து நாடுகளும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

உக்ரைனுக்குள் ரஷ்ய ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தத் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்திருப்பதை முன்னிட்டு, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக சீனா 12 அம்ச செயல் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: ”அனைத்து நாடுகளின் இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். (NATO) கூட்டு ராணுவத்தை வலுப்படுத்துவதன் மூலமோ விரிவுபடுத்துவதன் மூலமோ ஒரு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்திவிட முடியாது.

மோதலோ போரோ ஒருவருக்கும் நன்மையை அளிக்காது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ரஷ்யாவும் உக்ரைனும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரே திசையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். இந்தப் பேச்சுவார்த்தைக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு அளிக்க வேண்டும். இதன்மூலம் படிப்படியாக பதற்றம் குறைந்து போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வழிவகைகளைக் காண வேண்டும்.

பேச்சுவார்த்தையும் விட்டுக் கொடுத்தலுமே உக்ரைன் பிரச்சினைக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு சீனாவின் உறுதியான ஆதரவு தொடரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சீனாவின் இந்த செயல்திட்டத்தை அமெரிக்கா விமர்சித்துள்ளது. ”உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவியதற்கு மேற்கத்திய நாடுகளும் நேட்டோ அமைப்புமே மறைமுக காரணம்; அவைதான் போரை தூண்டின என மேற்கத்திய நாடுகளுக்கும் நேட்டோவுக்கும் எதிராக கருத்துக்களைக் கூறி வந்த நாடு சீனா. இதன்மூலம், சீனா ஒரு சார்பான நிலைப்பாட்டை ஏற்கெனவே எடுத்துவிட்டது” என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

 

பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து கூறி வரும் நிலையில், அந்த நிலைப்பாட்டுக்கு ஒத்த நிலைப்பாட்டை சீனா வெளிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இலங்கை !

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துமாறும், உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை உடனடியாக வெளியேறுமாறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை கலந்து கொள்ளவில்லை.

ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பீற்றர் ராம் சோரும் தனது இலங்கை விஜயத்தின் போது ரஷ்யாவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அ‍மெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான்,ஜேர்மனி, கனடா உள்ளிட்ட 141 உறுப்பு நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், ரஷ்யா, பெலாரஸ், ‍கொரியா, எரித்திரியா,மாலி, நிகரகுவா, சிரியா ஆகிய 7 உறுப்பு நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன. இ‍தேவேளை, இலங்கை, சீனா, பாகிஸ்தான், கியூபா  உள்ளிட்ட 32 உறுப்பு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

“ஒரு வருடத்தை தொட்டது ரஷ்ய – உக்ரைன் போர்” – இரண்டரை லட்சத்துக்கு மேற்பட்ட மனித உயிர்கள் பலி !

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தனது தாக்குதலை தொடங்கியது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து சின்னாபின்னமாகிவிட்டன.

இந்த சண்டையில் சுமார் 2 லட்சம் வீரர்களும், 42 ஆயிரம் பொதுமக்களும் உயிர் இழந்துவிட்டனர். 57 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். பலம் வாய்ந்த ரஷியாவிடம் உக்ரைன் சில நாட்களில் வீழ்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகள் அதி நவீன ஆயுத உதவிகள் செய்ததால் ரஷியாவை எதிர்த்து உக்ரைன் ஆக்ரோஷத்துடன் போரிட்டு வருகிறது.

இதனால் இந்த போர் மாதக்கணக்காக நீடித்து இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. போர் தொடங்கி இன்று 366-வது நாளை எட்டி உள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனாலும் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் அமைதி நிலைக்க ரஷியா போரை நிறுத்துவது தொடர்பாக 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.சபையின் சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் உக்ரைன் மீதான போரை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உக்ரைனை விட்டு ரஷிய படைகள் உடனே வெளியேற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

ரஷியாவுக்கு எதிரான இந்த தீர்மானத்தை ஆதரித்து 141 நாடுகளும், எதிராக 7 நாடுகளும் வாக்களித்தன. ஆனால் இந்த வாக்கெடுப்பில் இந்தியா, சீனா உள்ளிட்ட 32 நாடுகள் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. 141 நாடுகள் ஆதரவு கொடுத்ததால் ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.சபையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நடந்த விவாதத்தில் மேற்கத்திய நாடுகள் ரஷியாவை பிளவுபடுத்த முயற்சிப்பதாக ரஷிய பாதுகாப்பு துறை மந்திரி கெர்கய் குற்றம் சாட்டினார்.

 

3.4 மில்லியன் இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்துள்ள உலக உணவுத் திட்டம்!

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பின்மை தொடர்ந்தும் கவனம் செலுத்தும் நிலையிலேயே  உள்ளது என்று உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

உலக உணவுத்திட்டம் இன்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட வீட்டு உணவுப் பாதுகாப்பு ஆய்வின்படி 33 சதவீத குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தன.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, கொழும்பின் நகர்ப்புறங்களில் கடந்த ஜனவரியில் உணவுப் பணவீக்கம் 60.1 சதவீதமாக இருந்தாக உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் பொது உணவு விநியோகம், பாடசாலை உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவு மூலம் 3.4 மில்லியன் மக்களுக்கு உதவ தாம் திட்டமிட்டுள்ளதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

சஜித் பிரேமதாசா ஆட்சிக்கு வரமுன்பே யாழில் உள்ள உதவாக்கரைகளோடு கூட்டு! யாழில் சோபையிழந்த கூட்டம்!! கைதட்டவே மக்கள் கூச்சம்!!!

பெப்ரவரி 23 இல் யாழ் ரக்கா லேனில் சஜித் பிரேமதாஸாவின் சமாஜி ஜன பலவேய – ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. சில நூறுபேர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கடந்த ஆட்சியாளர்களைப் பற்றி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸாவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிச்சட் பதியுதீனும் உணர்ச்சி பூர்வமாக பேசிய போதும் யாரும் அவர்களது உரைகளுக்கு கரவோசம் பண்ணாமல், அவர்களது உரையை உதாசீனம் செய்பவர்களாக, அக்கூட்டத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லாதது போல் இருந்தனர்.

இக்கூட்டத்தை பணமோசடி மற்றும் குற்றச்செயல்களுக்காக பிரான்ஸில் சிறையிலடைக்கப்ட்ட வெற்றிவேலு ஜெயந்திரன் ஏற்பாடு செய்திருந்தார். இவர் தற்போது பெயரில் உள்ள எழுத்துக்களை இடமாற்றியும், வயதைப் பத்து வருடங்கள் குறைத்தும் மோசடியான அடையாள அட்டையோடு உலாவி வருகின்றார். ஆட்சியைப் பிடிக்கப்போவதாகக் கூறும் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் விரோத சக்திகளோடு கைகோர்த்துள்ளது.

இளம்பெண்களை போகப்பொருளாகப் பயன்படுத்தும் வெற்றிவேலு ஜெயந்திரன் பெண்களைப் பற்றி மிக மோசமாக இழிவுபடுத்தி மிகக்கேவலமாக தூசணங்கள் பேசிய விடியோபதிவு இரு வாரங்களுக்கு முன் தேசம்நெற் இல் வெளியானது. இச்செய்தியின் கீழும் அக்காணொலி இணைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தை வெற்றிவேலு ஜெயந்திரனுடன் இணைந்து கிருபாகரன், விஜயகாந், மதன்ராஜ் ஆகியோரும் ஏற்பாடு செய்திருந்தாக தெரிய வருகின்றது. இவர்களும் வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம் ரக்காலேனில் இடம்பெற்றதற்கும் ஜெயந்திரனுக்கும் மிகுந்த தொடர்பு உள்ளது. ஜெயந்திரனினால் நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்ட இளம்பெண்களின் நீண்ட படிட்டியலில் ஒருவர் ரக்கா லேனிலேயே வசித்தவர். ரட்சணிய சேனையில் இருந்த சகோதரியான பெண்ணை கவர்ந்து வந்து பின்னர் உதறிவிட்டுவிட்டு அவருடைய தங்கை பக்கம் தாவியவர் வெற்றிவேலு ஜெயந்திரன். பாதிக்கப்பட்ட அப்பெண் இன்னமும் திருமணமாகாமல் வாழ்கின்றார். இவ்வாறு பல இளம்பெண்களின் வாழ்வை சின்னா பின்னமாக்கிய ஒருவரை வைத்துக்கொண்டு ‘’இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவேன்” என்று சஜித் ரீல் விடுகின்றார். அதற்கு அக்கட்சியின் வடமாகாண அமைப்பாளர் பேச்சாளர் உமா சந்திரபிரகாஷ் நூல் எடுத்துக்கொடுக்கின்றார்.

வெற்றிவேலு ஜெயந்திரனின் முழுக் குற்றச்செயல்களையும் ஜெயந்திரனால் பாதிக்கப்பட்ட குறைந்தது நான்கு பெண்களை உமா சந்திரபிரகாஷிற்கு நன்கு தெரியும். ஆனாலும் ஐக்கிய மக்கள் சக்தி இத்தீய மக்கள் விரோத சக்திகளை வைத்தே யாழில் அரசியல் செய்கின்றது. “வெற்றிவேலு ஜெயந்திரன் போன்றவர்கள் தமிழ் பிரதேசங்களில் தேர்தலிலும் வெற்றி பெற்றால் யாழ் மண் மீள முடியாத சீரழிவுக்குள் தான் செல்லும்” என்கிறார் ஜெயந்திரனினால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர். அவர் மேலும் குறிப்பிடுகையில் “ராஜபக்சக்களைப் பற்றிக் கதைக்க இவர்கள் யார்?” என்று கேள்வி எழுப்பிய அவர் “ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்து கொள்ளையடித்தனர். ஆனால் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரமுன்னரேயே கொள்ளையர்களை கட்சியில் சேர்த்துள்ளது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதே ஆபத்தாகிவிடும்” என்றார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் இக்கூட்டம் பற்றி தெரிவிக்கையில் “நான் லக்ஸ் ஹொட்டலில் பார்டிகளில் கலந்துகொகிறனான். வற்புறுத்திக் கூப்பிட்டார்கள் வரமலிருப்பது சரியில்லை என்பதால் தலையை காட்டுவதற்காக வந்தேன்” என்றார். உங்களுக்கு கூட்டத்தில் கலந்துகொள்ள பணம் தந்தார்களா? எனக் கேட்டபோது “நான் பணம் வாங்கி வரவில்லை. ஆனால் மற்றவர்கள் பணம் வாங்கினார்களா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது” எனத் தெரிவித்தார். வெற்றிவேலு ஜெயந்திரனுடைய ஒலிப்பதிவைக் கேட்டீர்களா என்று கேட்டபோது “கேள்விப்பட்டேன். ஆனால் இப்ப இதையெல்லாம் யாரும் அவ்வளவு பெரிதாக எடுப்பதில்லை” எனத் தெரிவித்தார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் பெண்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘இன்று அரசியலில் வெற்றிவேலு ஜெயந்திரன் போன்ற மொள்ளமாரிகளும் முடிச்சவிக்கிகளும் தான் மாற்றத்தை கொண்டுவரப்போவதாக ஊளையிடுவதாக’ அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் தேசம்நெற் க்கு தெரிவித்தர். “அவர்களிடம் பண பலம் அரசியல் பலம் இருக்கு. அதை வைத்து எல்லாரது வாய்களையும் அடைத்துவிடுவார்கள்” என்று சலிப்புடன் தெரிவித்தார் அவ்வூடகவியலாளர்.

தமிழர்களை தன்னுடைய அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தி வரும் இந்தியா தான் தமிழரின் எதிரி – தேசம் திரை YouTube !

இந்திய அரசை நம்பியதினால் தமிழர்களுக்கு முதலில் ஏற்பட்டது அழிவு இரண்டாவது ஏற்பட்டது பேரழிவு இனி ஏற்பட இருப்பது மீள முடியாத பேரழிவு. இலங்கையில் தமிழ் – சிங்கள மக்களிடையே இருந்த முரண்பாட்டை தீர்த்து வைக்கத் திறமையற்ற, படித்த ஆனால் மூன்றாம் தர சிங்கள, தமிழ் அரசியல் தலைமைகள், தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்ப போட்டி போட்டு, இனவாதத் தீயை வளர்த்தன. இவர்கள் இலங்கையை அந்நிய சக்திகளிடம் கையளித்து, கடந்த 75 ஆண்டுகளாக நாட்டைச் சீரழித்து வருகின்றனர். அதன் உச்சமாக தற்போது இலங்கையின் இயற்கைத்துறைமுகமான திருகோணமலை எதிர்கால யுத்தத்தின் மையப்புள்ளியாக மாற்றப்பட்டு வருகின்றது. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 30 பேர்வரை இரு இரு விசேட விமானங்களில் பெப்ரவரி 14 அன்று இலங்கை வந்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர்.

இன்று பெப்ரவரி 18இல் தமிழகத்தின் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வவுனியா ஆலயத்தில் மதக் கலகத்தை தூண்டிவிடும் வகையில் உரையாற்றினார். இது “சிவ பூமி, ராமஜன்ம பூமி, ஆரியச் சக்கரவர்த்தி பிறந்த பூமி” என்றெல்லாம் புகழாரம் சூட்டி ராமாயண யாத்திரை இலங்கையில் இருந்து ஆரம்பிக்கும் என்றும் இந்தியாவில் இருந்தும் யாத்திரை வரும் அதற்காகவே தமிழகத்தில் இருந்து பலாலிக்கு விமானப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. மன்னார் – ராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்றெல்லாம் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெயரை உச்சரிக்காது அர்ஜூன் சம்பத் வெளிநாட்டவர்கள் இங்கு வந்து மதமாற்றம் செய்வதாகவும் ஈஸ்டர் குண்டுவெடிப்பு மதவாதத்தை தூண்டும் செயல் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஊடகவியலாளராக ஒளிப்பதிவாளராகக் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் “இந்தியாவின் தமிழகத்தின் சாத்தான்கள் வந்து எங்களுக்கு வேதம் கற்றுக் கொடுக்கிறார்கள்” என்று சினந்து கொண்டார். இந்த சாத்தான்கள் ராமர் யாத்திரையை இங்கும் நடத்தி மசூதிகளையும் தேவாலயங்களையும் நொருக்குவதற்கு இப்பவே திட்டமிட்டுவிட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். அந்த ஆலயத்தின் அடியவர் தேசம்நெற் வட்ஸ்அப்க்கு அனுப்பி வைத்த குறிப்பில் இவ்வாறான மதத்தை அரசியலோடு கலக்கின்ற பிரச்சாரங்களுக்கு ஆலயங்கள் இடமளிப்பதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்த மயூரன், சண்முகரத்தினம் போன்றவர்கள் இவ்வாறான மதஅடிப்படைவாதிகளை ஆலயங்களுக்கு அழைத்து எமது ஆலயங்களை மத அடிப்படைவாதிகளின் கூடாரங்கள் ஆக்குவதை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தேசம்நெற் க்கு கிடைக்கும் செய்திகளின்படி திருகோணாமலையில் உள்ள 90 எண்ணைக் குதங்களில் 80 வரையான குதங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகின்றது. அமெரிக்க ராஜதந்திரிகளின் வருகை திருமலை விவகாரம் பற்றியது அல்ல என அமைச்சர் பண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் ஒவ்வொரு எண்ணைக் குதமுமே நூறு பெற்றோல் நிலையங்களுக்கான பெற்றோலியத்தை சேகரித்து வைக்கும் கொள்ளளவைக் கொண்டன எனத் தெரிவித்தார். இவ்எண்ணெய்க் குதங்கள் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் யுத்த தளபாடங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பிரித்தானியாவால் உருவாக்கப்பட்டவை. இன்றைய உக்ரைன் நிலைமையொன்று அதாவது அமெரிக்க சக இந்தியா எதிர் சீனா உருவாகுமானால் அதன் முதல் பொறி திருகோணமலையிலேயே தெறிக்கும் என்பது உறுதியாகி வருகின்றது.

இந்தியா காலம் காலமாக தன்னுடைய நலனை மட்டும் கருத்தில் கொண்டே இலங்கைத் தமிழர்களைப் பகடைக்காய்களாக பாவித்து வருகின்றது. தமிழர்களும் தமிழ் தலைவர்களும் குனியக் குனிய இந்தியா மேலும் மேலும் தமிழர்களைக் குட்டிக்கொண்டே இருக்கின்றது. இந்தியாவின் இந்திய நலன்சார்ந்த அரசியலால் இதுவரை தமிழர்கள் இழப்பைத் தவிர எதனையும் சந்தித்தில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைக் கூட இந்தியா முழுமையாக அமுல்படுத்த முயற்சிக்கவில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 36 ஆண்டுகள் ஆகியும் அது இன்னமும் தமிழ் மக்களுக்கு எட்டாத கனியாகவே உள்ளது. 36 ஆண்டுகளாக நாய்க்கு எலும்புத்துண்டு போடுவது போல் இந்திய அரசு 13ஆவது திருத்தச் சட்டத்தைக் காட்டிக் காட்டி தமிழ் மக்களை அவர்களின் தன்மானத்தை நொறுக்கி வருகின்றது.

இலங்கையில் உள்ள இன முரண்பாட்டுக்கு உயிரூட்டி அதற்கு வன்முறை வடிவம் கொடுத்து. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உசுப்பி விட்ட இளைஞர்களை இந்திய உளவுப்படை கோழிக்குஞ்சுகளை பிடிப்பது போல் துப்பாக்கிகள் தாறோம், குண்டுகள் தாறோம், பயிற்சியும் தாறோம் என்று வளைத்துப் போட்டனர்.

சிங்கள கிராமங்களுக்குள் சென்று சிங்களவர்களைக் கொல்லுங்கள் நிறைய துப்பாக்கிகளும், குண்டுகளும், பயிற்சிகளும் தருவோம் என்றதும், நான் முந்தி நீ முந்தி என்று தமிழீழ விடுதலைப் புலிகள் முந்திக் கொண்டனர். கொக்கிளாய், நாயாறு, அனுராதபுரம் படுகொலைகள் நடந்தேறியது.

சாதியப் பாகுபாட்டிற்கு அமெரிக்காவின் சியட்டல் நகர சபை தடைவிதித்துள்ளது!

 

சாதி அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்த அமெரிக்காவின் முதல் நகரமாக சியாட்டில் மாறியுள்ளது. சியாட்டில் நகர சபை செவ்வாயன்று (February 21, 2023) நகரத்தின் பாகுபாடு எதிர்ப்புச் சட்டத்தில் சாதியையும் சேர்த்தது.

6 : 1 என்ற விகித்ததில் நிறைவேற்றப்பட்ட இந்த அவசரச் சட்டத்தை ஆதரிப்பவர்கள், சாதி அடிப்படையிலான பாகுபாடு, தேசிய மற்றும் மத எல்லைகளை மீறுவதாகவும், அத்தகைய சட்டம் இல்லாமல், சாதிய பாகுபாட்டை எதிர்கொள்பவர்களை பாதுகாக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

சியாட்டில் நகர சபையில் (சிட்டி கவுன்சில்) இந்து பிரதிநிதி ஒருவரால் ஒரு முன்மொழிவு அறிமுகப்படுத்தப்பட்டது, இது இந்திய வம்சாவளி மக்களிடையே விவாதத்தைத் தூண்டியது. இந்த முன்மொழிவு, சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடை செய்வதற்கான அவசர சட்டத்தைக் கொண்டுவருவது தொடர்பானது.

பிரதிநிதி ஷமா சாவந்த் கொண்டுவந்த முன்மொழிவு தொடர்பாக செவ்வாயன்று வாக்களிப்பு நடந்தது. அதன் பிறகு சாதி பாகுபாடு சட்டவிரோதமாக மாறிய அமெரிக்காவின் முதல் நகரமாக சியாட்டில் ஆனது.

பிரித்தானியாவிலும் இவ்வாறான ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சி 2010 ஈக்குவாலிற்றி அக்ற் (Equality Act 2010) வருகின்ற போது முயற்சிக்கப்பட்டது. அச்சட்டத்தின்படி 1. வயது, 2. பால் 3. மதம், 4. இனம் 5. ஊனம், 6. திருமணபந்தமும் சேர்ந்து வாழ்தலும், 7. தாய்மையும் மகப்பேறும், 8. பாலினமாற்றம் 9. பாலினச் சேர்க்கைமுறை ஆகிய இயல்புகளின் அடிப்படையில் ஒருவரை பாரபட்சமாக நடத்துவது குற்றமாக்கப்பட்டது. இந்த ஒன்பது இயல்புகளோடு சாதிய ரீதியாக ஒருவரைப் பாரபட்சமாக நடத்துவதும் குற்றமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அன்று முன்வைக்கப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை. ஆனால் தற்போது சியாட்டல் நகரம் முன்ணுதாரணமாக மேற்கொண்டுள்ள இம்முயற்சி, எதிர்காலத்தில் பிரித்தானியாவிலும் சாதிய பாரபட்சம் காட்டப்படுவது குற்றமாக்கப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் சியாட்டல் நகரின் முன்ணுதாரணமான நிகழ்ச்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். சியாட்டல் நகரை முன்ணுதாரணமாகக் கொண்டு ஏனைய நகரங்களும் இவ்வாறான சட்டங்களைக் கொண்டு வர முயற்சிக்கலாம் என்ற அச்சத்தினால் இந்து அமைப்புகள் இந்த சாதியபாகுபாட்டுத் தடைக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக தெற்காசிய சமூகத்தினரிடையே மாறுபட்ட கருத்து காணப்படுகின்றது. இந்த சமூகம் மக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர்கள் செல்வாக்கு மிக்க குழுவாக காணப்படுகிறார்கள். சமூக நீதி மற்றும் சமத்துவத்தை கொண்டு வருவதற்கு இது ஒரு முக்கியமான படி என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

மறுபுறம் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான மக்கள் அதை எதிர்க்கின்றனர். தெற்காசிய மக்களை குறிப்பாக இந்திய அமெரிக்கர்களை குறிவைப்பதே இந்த தீர்மானத்தின் நோக்கம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஷமா சாவந்த் ஒரு ஒடுக்கும் சாதிய சமூகத்தைச் சேர்ந்தவர். தெற்காசியாவில் எங்கு பார்த்தாலும் நிலவும் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு அமெரிக்காவில் பரவலாக காணப்படாவிட்டாலும், இங்கும் பாகுபாடு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

சாதியை சட்டத்தின் ஒரு அங்கமாக்குவதன் மூலம், அமெரிக்காவில் ´இந்துவெறி´ சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல அமெரிக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதும் 10 இந்து கோவில்கள் மற்றும் ஐந்து சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி மற்றும் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகளும் இதில் அடங்கும். இந்த சம்பவங்களை சிலர் இந்து சமூகத்தை அச்சுறுத்தும் முயற்சியாக பார்க்கின்றனர்.

அமெரிக்காவில் குடியேறியவர்களில் இந்திய வம்சாவளி மக்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். 42 லட்சம் இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் வசிக்கின்றனர் என்று 2018 ஆம் ஆண்டின் அமெரிக்க சமூக ஆய்வின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

சியாட்டல் சிட்டி கவுன்சிலின் இந்த சட்டம், 2021 இல் சாண்டா கிளாரா மனித உரிமைகள் ஆணையத்தில் ஈக்வாலிட்டி லேப் கொண்டு வர முயற்சித்ததைப் போன்றது.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் எதிர்ப்பைத்தொடர்ந்து இந்த திட்டம் நிராகரிக்கப்பட்டது.

சியாட்டிலில் கொண்டுவரப்பட்ட முன்மொழிவில் ஈக்வாலிட்டி லேபின் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் இந்து என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

அம்பேத்கர் ஃபுலே நெட்வொர்க் ஆஃப் அமெரிக்கன் தலித்ஸ் அண்ட் பகுஜன்ஸ் அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “பாதுகாக்கப்பட்ட பிரிவில் சாதியைச் சேர்ப்பது, தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த எல்லா மக்களையும் நியாயமற்ற முறையில் ஒதுக்கி வைக்கும். இதில் தலித் மற்றும் பகுஜன் சமாஜூம் அடங்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

“இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், சியாட்டில் முதலாளிகள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களை வேலைக்கு அமர்த்துவதைக் குறைப்பார்கள். இது தலித்துகள் மற்றும் பகுஜன்கள் உட்பட தெற்காசிய வம்சாவளியினர் அனைவருக்கும் வேலை மற்றும் பிற வாய்ப்புகளை எதிர்மறையாக பாதிக்கும்” என்று அந்த அறிக்கை கூறியது.

உரிமைகளுக்காக குரல் எழுப்பும் முக்கியமான அமைப்பான ஈக்வாலிட்டி லேப், திங்களன்று நகர சபை உறுப்பினர்களை ´ஆம்´ என்பதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு வலியுறுத்தியது.

“அமெரிக்காவின் பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் இனப் பாகுபாடு நிலவுகிறது என்பதை நாம் நீண்ட காலமாக அறிந்திருக்கிறோம். இருப்பினும் அது ஒரு மறைக்கப்பட்ட பிரச்னையாகவே உள்ளது, “என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

“வெறுப்பு குழுக்களின் தவறான தரவுகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படாத கூற்றுக்கள் மூலம் ஒரு சிறுபான்மை சமூகம் வெளிப்படையாக தனிமைப்படுத்தப்படுவதைப் பார்ப்பது திகைப்பூட்டுகிறது,” என்று வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணியின் புஷ்பிதா பிரசாத் கூறுகிறார்.

புஷ்பிதா பிரசாத்தின் குழு அமெரிக்கா முழுவதும் இத்தகைய திட்டங்களுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.

“முன்மொழியப்பட்ட அவசரச் சட்டம் சிறுபான்மை சமூகத்தின் (தெற்காசிய மக்கள்) சிவில் உரிமைகளை மீறும். ஏனெனில் முதலில் அது அவர்களை ஓரங்கட்டுகிறது. இரண்டாவதாக, மற்ற சமூகங்களை ஒப்பிடும்போது தெற்காசிய மக்களிடையே சாதி பாகுபாடு உள்ளது என்று இது கருதுகிறது. மூன்றாவதாக வெறுப்புக் குழுக்கள் அளிக்கும் தவறான தரவுகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது,” என்கிறார் அவர்.

அரசாணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பொதுப் பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன.

அதன் ஆதரவாளர்கள் அமெரிக்க செய்தித்தாள்களில் பத்திகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகின்றனர்.

வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டமைப்பு, நகர கவுன்சிலர்கள் மற்றும் தெற்காசிய மக்களுக்கு ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதை ´ஒரு மோசமான யோசனை´ என்று கூறவைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சுமார் 100 நிறுவனங்கள் மற்றும் வணிகங்களின் குழு இந்த வாரம் சியாட்டில் நகர சபைக்கு ஒரு கடிதம் அனுப்பியது. இந்த முன்மொழிவுக்கு எதிராக “இல்லை” என்று வாக்களிக்குமாறு அது வலியுறுத்தியது.

“உத்தேச அவசரச் சட்டம் அமலுக்கு வந்தால், இந்த ஒட்டுமொத்த சமூகமும், குறிப்பாக அமெரிக்காவில் வாழும் இந்துக்கள், தங்களை அப்பாவிகள் என்று நிரூபிக்காதவரை சாதி அடிப்படையிலான பாகுபாடுகளின் குற்றவாளிகள் என்று கருதப்படுவார்கள். இது அமெரிக்க கலாச்சாரம் அல்ல. அது தவறு” என்று வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணியின் தலைவர் நிகுஞ்ச் திரிவேதி கூறினார்.

மறுபுறம், யோசனையை முன்வைத்த பிரதிநிதியான ஷமா சாவந்தும் வாக்களிப்பிற்கு முன் தனது பிரச்சாரத்தை விரைவுபடுத்துவதில் மும்முரமாக இருந்தார்.

இரண்டு இந்திய-அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான ரோ கண்ணா மற்றும் பிரமீளா ஜெயபால் ஆகியோருக்கு கடிதம் எழுதி அவர் ஆதரவு கோரினார்.

இந்தியாவில் சாதி அடிப்படையிலான பாகுபாடு 1948 ஆம் ஆண்டில் தடைசெய்யப்பட்டது மற்றும் 1950 இல் இந்தக் கொள்கை அரசியலமைப்பிலும் சேர்க்கப்பட்டது.

இலங்கையில் இந்தியா அளவுக்கு சாதிய ஒடுக்குமுறை மோசமானதாக இல்லாவிட்டாலும் நாளாந்த வாழ்வில் சாதியப் பாகுபாடு என்பது மிக நுண்ணியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் தமிழர்களின் கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ்ப்பாணம் சாதியத்தில் ஊறிய ஒரு பிரதேசமாக உள்ளது. 30 ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தின் பின்னரும் சாதிய ஒடுக்குமுறையை ஒரு ஒடுக்குமுறை அம்சமாக எண்ணாத ஒரு சூழலே அங்கு காணப்படுகிறது. புரட்சிகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்த வேண்டிய யாழ் பல்கலைக்கழகத்தில் கூட சாதியம் ஆழமாக வேரூன்றியுள்ள. அங்கு காதல் கூட சாதிய அடிப்படையிலேயே மலர முடியும் என்ற நிலையுள்ளது. பல்கலைக்கழகத்தின் நியமனங்கள் கூட திறமையின் அடிப்படையில் அல்லாமல் பால், மதம், சாதியம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது.

இந்தப் பின்னணியிலேயே அடுத்த பொதுத் தேர்தலில் நாட்டின் ஆட்சியை கைப்பற்றக் கூடிய பிரதான கட்சியான எஸ்ஜேபி இன் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளராக சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட விளிம்புநிலைப் பெண்களை துஸ்பிரயோகம் செய்கின்ற ஜெயந்திரன் வெற்றிவேலு என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக இக்கட்சிக்கு பல்வேறு வழிகளிலும் அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருகின்ற போதும் பிரான்ஸில் உள்ள சிவன் கோவிலின் உரிமையாளரான இவரின் பண பலத்திற்காக குறித்தகட்சி அவரை பிரதான அமைப்பாளராக இன்னமும் வைத்துள்ளது. சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களை அனுபவிப்பது தங்களுடையதும் தனது தந்தையான பொன்னையா வெற்றிவேலுவினதும் பரம்பரை இயல்பு என் அவர் தன் வாயாலேயே கூறிய ஒலிப்பதிவை தேசம்நெற் சில வாரங்களுக்கு முன் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சியாட்டலில் சட்டம் கொண்டுவரப்பட்டு விட்டது. ஆனால் இந்தியாவிலும் இலங்கையிலும் சட்டங்கள் இருந்தும் அவை எதுவும் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றவில்லை.

ஜப்பானில் பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 13 இலிருந்து 16 ஆக அதிகரிப்பு !

ஜப்பானில் பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 13 இலிருந்து 16 ஆக அதிகரிப்பதற்கு அந்நாட்டு நீதியமைச்சு நியமித்த குழுவொன்று சிபாரிசு செய்துள்ளது.

பாலியல் வல்லுறவுகள் குறித்து முறைப்பாடு செய்வதற்கான அதிகபட்ச கால எல்லையும் 10 இலிருந்து 15 வருடங்களாக அதிகரிக்கப்படவுள்ளது.

ஜி7 நாடுகள் மற்றும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஜப்பானிலேயே பாலியல் உறவுக்கான சம்மதம் தெரிவிப்பதற்கான குறைந்தபட்ச வயது மிகவும் குறைவாக உள்ளது.

ஜேர்மனி, இத்தாலியில் இது 14 வயதாகவும், பிரான்ஸில் 15 ஆகவும், பிரிட்டன், அமெரிக்காவில் 16 ஆகவும் உள்ளது.

இந்நிலையில் ஜப்பானிலும் குறைந்தபட்ச வயதை 16 ஆக அதிகரிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானில் தற்போதுள்ள சட்டங்களின்படி, வல்லுறவு சம்பவங்களின்போது வன்முறை மற்றும் அச்சுறுத்தல் இருந்தது என்பதையும் தடுப்பது சாத்தியமற்றதாக இருந்தது என்பதையும் பாதிக்கப்பட்டவர்கள் நிரூபித்தாலேயே குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றவாளியாக்கப்பட முடியும். இது தொடர்பான சட்டங்களிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

ஜப்பானில் பாலியல் வன்முறை சந்தேக நபர்கள் வழக்குகளில் விடுவிக்கப்படுவது அதிகரித்ததால், பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்யக்கோரி 2019 ஆம் ஆண்டு பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன

அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது ரஷ்யா !

அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா,  ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. 1991ல் போடப்பட்ட ஒப்பந்தம் காலாவதியான நிலையில், 2010ம் ஆண்டு புதிய தொடக்கம் என்ற பெயரில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

2021ல் அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா உடனான அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக வெளியேறியது. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று பாராளுமன்றத்தில் பேசினார். ரஷ்யா இன்னும் ஒப்பந்தத்தில் இருந்து முழுமையாக விலகவில்லை.

அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை நடத்தினால், ரஷ்யா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் புடின் பேசினார். போர் நடைபெறும் உக்ரைனுக்கு சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சென்று ஆதரவு தெரிவித்த நிலையில், ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.