September

September

ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்து செயற்பட்டவர்களுக்கு இலங்கையில் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல் !

மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்ததற்காக இலங்கை உட்பட 42 நாடுகளில் உள்ள மக்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலாளர் இல்சே பிராண்ட்ஸ் கெஹ்ரிஸின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எவ்வாறு சந்தித்தார்கள் என்பது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுத்து வைத்தல், கட்டுப்படுத்தப்பட்ட சட்டத்தால் இலக்கு வைக்கப்படல் மற்றும் இணையங்கள் மூலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அத்துமீறல்கள் அனைத்தும் 2021 மே 1ஆம் திகதி முதல் 2022 ஏப்ரல் 30ஆம் திகதி வரையில் இடம்பெற்றுள்ளன என்றும் உதவி பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகள் காரணமாக, குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் உள்ளவர்கள் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைப்பதைத் தவிர்த்தனர் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச்செயலாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருமணமாகாத பெண்ணுகளும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு – இந்திய உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

திருமணமான பெண்ணைப் போலவே திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என இந்திய உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கருக்கலைப்பு யாருக்கு எந்த சூழலில் செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய விதிமுறையை ஒழுங்குபடுத்துவது குறித்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், சட்டப்பூர்வமாக ,பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்றும் திருமணமாகாத பெண்களுக்கும் 20 முதல் 24 வார கர்ப்பத்தை கலைக்க உரிமை உண்டு என கூறியுள்ளது.

கருக்கலைப்பு விதிகளில் திருமணமாகாத பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு மனைவியின் அனுமதியின்றி, கணவன்மார்களால் ஏற்படும் பாலியல் வன்கொடுமையும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் கருக்கலைப்புக்கான விதிகளின் கீழ் ( marital rape) என எடுத்துக் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

எம்.டி.பி சட்டத்தின் விளக்கம் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என கூறியள்ள நீதிபதி  சமூகம் மாறும்போது சமூக இயல்புகள் மாறுகின்றன ,உருவாகின்றன மற்றும் சட்டங்கள் நிலையானதாக இருக்கக்கூடாது மற்றும் காரணத்தை முன்னெடுக்கக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ள உக்ரைனின் முக்கிய நகர மக்கள் !

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தலைநகர் கிவ், கார் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. துறைமுக நகரமான மரியு போலை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. அதேபோல் சில நகரங்களையும் ரஷ்யா தன்வசப்படுத்தியது.

தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே போரில் உக்ரைனின் லுகான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க திட்டமிட்ட ரஷ்யா, அதற்காக அப்பகுதிகளில் பொது வாக்கெடுப்பை நடத்தியது. நடமாடும் வாக்குப்பதிவு மையத்துடன் வீடு வீடாக சென்று வாக்கெடுப்பு நடத்தினர். நேற்று வரை 5 நாட்கள் வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டன. இந்தநிலையில் உக்ரைனின் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பில் வெற்றி கிடைத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு லுகான்ஸ்க் பகுதியில் 98.42 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைப்புக்கு ஆதரவாக வாக்களித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜபோரி ஜியாவில் 93.11 சதவீதமும், தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சனில் 87.05 சதவீதமும், டொனெட்ஸ்கில் 99.23 சதவீதமும், ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவிடன் இணைத்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் புடின் நாளை மறுநாள் (30-ந்திகதி) அறிவித்து உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து உளவுத்துறை அதிகாரிகள் கூறும்போது, “ரஷ்ய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அதிபர் புடின் 30-ந்திகதி உரையாற்றுகிறார். அப்போது உக்ரைன் பகுதிகளை ரஷியாவுடன் இணைத்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை புடின் வெளியிட வாய்ப்பு உள்ளது” என்றனர்.

இந்த பொது வாக்கெடுப்பு ஒரு ஏமாற்று வேலை என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “ரஷியா கைப்பற்றிய பகுதிகளில் உள்ள மக்களை உக்ரைன் பாதுகாக்கும். இந்த வாக்கெடுப்புகள் ஒரு கேலிக்கூத்தாக உள்ளது. வாக்கெடுப்புக்கு பிறகு ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஏதும் இல்லை” என்றார்.

கைதுசெய்யப்பட்ட அமைதிப்போராட்டக்காரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

கொழும்பில் கடந்த சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்மீது பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையையும் 84 பேர் கைதுசெய்யப்பட்டமையையும் கண்டித்திருக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், இதன்மூலம் எதிர்ப்புக்களைப் பொறுத்துக்கொள்ளமுடியாத இலங்கை அரசாங்கத்தின் போக்கு மீளுறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரித்திருக்கின்றன.

அரசாங்கத்தினால் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து சோசலிஸ இளைஞர் சங்கத்தினால் கடந்த சனிக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியைக் கலைப்பதற்கு பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் தடியடிப்பிரயோகமும் நடத்தப்பட்டது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இடைக்கால நிறைவேற்றுப்பணிப்பாளர் ரிறானா ஹஸன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:

உலகளாவிய ரீதியில் சிவில் சமூக இடைவெளியை ஒடுக்குவதற்கும், போராட்டக்காரர்களை அடக்குவதற்கும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களை அமைதிப்படுத்துவதற்கும் அரசாங்கங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான நடைமுறைகளைப் பயன்படுத்துவதை அவதானிக்கமுடிகின்றது.

அந்தவகையில் இவ்வார இறுதியில் (கடந்தவார இறுதி) அதற்கான சிறந்த உதாரணமாக இலங்கை அமைந்திருக்கின்றது. இருப்பினும் அதன்மூலம் இன்னமும் மக்களை நிறுத்தமுடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இவ்விடயம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

இன்றைய தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 84 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதன் மூலம் எதிர்ப்புக்களைப் பொறுத்துக்கொள்ளமுடியாத இலங்கை அரசாங்கத்தின் போக்கு மீளுறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இருப்பினும் இந்த அமைதிப்போராட்டக்காரர்கள் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே போராடுகின்றார்கள். எனவே கைதுசெய்யப்பட்ட அமைதிப்போராட்டக்காரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.

அதுமாத்திரமன்றி ஆர்ப்பாட்டங்களுக்கு மேலும் தடையேற்படுத்தும் வகையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ‘அதியுயர் பாதுகாப்பு வலய’ உத்தரவு தொடர்பிலும் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம். அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதென்பது ஓர் மனித உரிமையாகும் என்று அப்பதிவில் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் ஒரு கல்விச் சுனாமி! பல்கலைக்கழகம் செல்வோர் 200 பேர்வரையால் அதிகரிப்பு! நாடு முழவதும் பல்கலைக்கழகம் புகும் மாணர்களின் எண்ணிக்கை 16,000 மாணவர்களால் வீழ்ச்சி!!

அண்மையில் அரசு வெளியிட்ட சட் ஸ்கோர் அடிப்படையிலான பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை புள்ளிவிபரங்களின் படி 2021 பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 16,000 மாணவர்களால் மிகச் சரியாகச் சொல்வதானால் 15765 மாணவர்களால் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களிலில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் 192 மாணவர்களை 2020 கல்வியாண்டைக் காட்டிலிலும் 2021 கல்வியாண்டில் கூடுதலாக அனுப்பி வைத்து தீவில் ஒரு கல்விச் சாதனையை நிலை நாட்டியுள்ளது.

எண்பதுக்களில் கல்வியில் கோலோச்சிய யாழ் மாவட்டம் 2021 ஒன்று கல்வியாண்டில் 477 மாணவர்களைக் குறைவாக பல்கலைக்கழகம் அனுப்பி வைத்துள்ளது. 2020 கல்வியாண்டோடு ஒப்பிடுகையில் இது 9.5வீதம் குறைவாகும். மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய 24 மாவட்டங்களும் சராசரியாக 9.5 வீதமான மாணவர்களை குறைவாகவே பல்கலைக்கழகம் அனுப்பி வைத்துள்ளது. விகிதாசார அடிப்படையில் அனுராதபுரம், காலி, பொலநறுவை ஆகிய மாவட்டங்களிலேயே கூடுதலான 14 முதல் 15 வீதத்திற்கு வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் தலைநகர் கொழும்பில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 2377 மாணவர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.

பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி காணப்படுகின்றது. பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் வீழ்ச்சியும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் வீழ்ச்சியும் அண்ணளவாக ஒரே அளவில் அதாவது 16,000 ஆகக் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு:
மட்டக்களப்பிலும் ஏனைய மாவட்டங்களைப் போன்று உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டாலும் பல்ககை;கழககங்களுக்குச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை 5.3 வீதத்தால் அதாவது 192 மாணவர்களால் அதிகரித்து இருக்கின்றது. இது தொடர்பாக பிரித்தானியாவில் கென்ற்இல் வதியும் கணித ஆசிரியர் டேவிட் நோபல் தேசம்நெற்க்குக் கருத்துத் தெரிவிக்கையில் சூம் வழியான கல்விச் செயற்பாடுகள் மட்டக்களப்பு மற்றும் கல்வியில் பின் தங்கியிருந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார். மாணவர்கள் எந்த மூலையில் கிராமத்தில் இருந்தாலும் மறுமூலையில் உள்ள நல்லாசிரியர்களிடம் இருந்து கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனத் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டுப் பணமோகத்தின் தாக்கங்களும் அது ஏற்படுத்தும் போதைவஸ்து, மது அருந்தல் மற்றும் வாள்வெட்டுக் கலாச்சாரம் யாழ்ப்பாணத்துக்கு வெளியேயான தமிழ் மாவட்டங்களில் குறைவாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புக தகுதிபெற்ற மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 22வது இடத்திலிருந்து 2021 கல்வியாண்டில் 3வது இடத்திற்கு வந்து தீவில் ஒரு கல்விச் சுனாமியை ஏற்படுத்தியது. மட்டக்களப்பில் 2021 கல்வியாண்டில் 3804 பேர் பல்கலைக்கழகம் செல்லத் தகுதிபெற்றனர். அத்தோடு தமிழ்வாணணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானத்தில் தீவிலேயே அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விச் சுனாமி அதிரடியாக இருந்த போதும் மட்டக்களப்பு கல்வியில் இன்னமும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. தமிழ் மக்கள் செறிந் வாழ்கின்ற வடக்கு கிழக்கில், தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு ஆயிரம் பேருக்கு 6 மாணவர்களையே பல்கலைக்கழகம் அனுப்புகின்றது. கிழக்கு மாகாணத்தின் நிலையும் இதுவாகவே உள்ளது. ஆனால் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மட்டும் ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களைப் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது.

திருகோணமலை:
மூவின மக்களும் சரிக்குச் சமனாக வாழும் திருகோணமலை மாவட்டம் 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் 14வது இடத்தில் இருந்து 2ம் இடத்திற்குத் தாவியுள்ளது.

அம்பாறை:
அம்பாறை மாவட்டம் 2020 கல்வியாண்டில் ஆயிரம் பேருக்கு 7 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பியதில் இருந்து 2021 கல்வியாண்டில் ஆயிரம் பேருக்கு ஆறு மாணவர்களை மட்டுமே ஆனுப்பும் நிலைக்கு வந்துள்ளது. இருப்பினும் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் 2020இல் 24வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு வந்துள்ளது. பல்கலைக்கழகம் புகும் தகுதியுடைய மாணவர்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் முன்னேறிப் பாய்ந்துள்ளது.

முல்லைத்தீவு:
இலங்கையில் உள்ள மாவட்டங்களில் தங்களுடைய சனத்தொகைக்கு கூடுதலான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்ற நான்கு மாவட்டங்களில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்டம் இருக்கின்றது. 2021 கல்வியாண்டில் முல்லைத்தீவு மாவட்டம் ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்றது. வடக்கு கிழக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மட்டுமே ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைக்கின்றது. ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்ற ஏனைய மாவட்டங்கள் பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை.

பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் 2020இல் 17வது இடத்திலிருந்த முல்லைத்தீவு மாவட்டம் 2021 கல்வியாண்டில் 8 வது இடத்திற்கு முன்னேறி யாழ் மாவட்டத்திற்கு அடுத்த படியாக உள்ளது. ஆனாலும் ஏழாவது இடத்தில் உள்ள யாழ் மாவட்டத்தைக் காட்டிலும் முல்லைத்தீவு மாவட்டம் தனது சனத்தொகைக்கு அதிகமான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைக்கின்றது.

மன்னார்:
மன்னார் மாவட்டம் தீவில் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மாவட்ட அடிப்படையில் மிகக் கூடுதலாக 69 வீதமான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைத்து தீவின் முன்னணிக் கல்வி மாவட்டம் என்ற இடத்தைத் தக்க வைத்துள்ளது. யாழ் மாவட்டத்தைப் போன்று மன்னார் மாவட்டமும் ஆயிரம் பேருக்கு 7 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வருகின்றது.

வவுனியா:
பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் வவுனியா மாவட்டமும் முன்னேறிப் பாய்ந்துள்ளது. 2020 கல்வியாண்டில் தீவின் கடைசி மாவட்டமாக இருந்த வவுனியா 2021 கல்வியாண்டில் 15வது இடத்திற்கு தன்னை நகர்த்தியுள்ளது. மாணவர்களைப் பல்கலைக்கழகம் புகச் செய்யும் விகிதாசாரத்தை 59.5 வீதத்தில் இருந்து 63.5 வீதமாக வவுனியா மாவட்டம் அதிகரித்துள்ளது.

கிளிநொச்சி:
வடக்கு கிழக்கில் கிளிநொச்சி மாவட்டம் மட்டுமே கல்வியில் பாய்ச்சலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சறுக்கியுள்ளது. 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புகு விகிதாசாரத்தில் 21வது இடத்திலிருந்த கிளிநொச்சி மாவட்டம் 2021இல் 23வது இடத்திற்று சறுக்கியுள்ளது. மேலும் கிளிநொச்சியின் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதம் 2.5 வீகிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. வடக்கு கிழக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டுமே பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. யாழ் மாவட்டம் தன்னுடைய விகிதத்தை அதிகரிக்கத் தவறியிருந்தாலும் வீழ்ச்சியடையவில்லை. அண்ணளவாக தன்னுடைய முன்னைய நிலையை தக்க வைத்துக்கொண்டது.

இதன் மூலம் வடக்கு கிழக்கில் கல்வியில் பின்னிலையான மாவட்டமாக கிளிநொச்சி காணப்படுகின்றது.
இலங்கையிலேயே பல்கைலக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை ஆகக் கூடிய வீதத்தால் 4.72 வீதத்தால் உயர்த்திய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் முன்னணி வகிக்கின்றது. அதனைத் தொடர்ந்து பல்கைல்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை உயர்த்திய மாவட்டமாக வவுனியா மாவட்டம் திகழ்கின்றது. வவுனியா பல்கலைகம் புகும் மாணவர்களின் விகிதத்தை 3.95 ஆல் உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெற்கில் பதுளை, யாழ்ப்பாணம் போன்று தன்னுடைய முன்னைய விகிதத்தை தக்க வைத்துக்கொண்டது. மலையகத்தைச் சேர்ந்த நுவரெலியா மாவட்டம் மட்டும் தன்னுடைய பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை 1.78 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஏனை தெற்கு மாவட்டங்கள் அனைத்துமே பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தில் வீழ்ச்சி கண்டுள்ளன. ஆகக் கூடுதல் வீழ்ச்சி 5.42 வீகிதம் காலியிலும் அதனைத் தொடர்ந்து 4.94 விகிதம் வீழ்ச்சி கம்பகாவிலும் ஏற்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை கல்வியில் மட்டக்களப்பு பெரும் பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டம் கல்வியில் குறிப்பிடத்தக்க மைல்கலை எட்டியுள்ளது. வவுனியா மாவட்டம் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தை மட்டக்களப்பு மாவட்டத்தைப் போல் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மன்னார் மாவட்டம் தொடர்ந்தும் கல்வியில் தன் நிலையை முன்னேற்றி தற்போது முதல் இடத்தில் உள்ளது. யாழ் மாவட்டம் கல்வியில் குறிப்பிடத்தக்க அசைவை ஏற்படுத்தவில்லை. பெரும்பாலும் தன்னிலையை தொடர்ந்தும் தக்க வைத்து வருகின்றது. ஆனால் கிளிநொச்சி தொடர்ந்தும் தன் கல்விநிலையை உயர்த்தத் தவறிவருகின்றது.

மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் இத்தாலி – முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்கிறார் ஜார்ஜியா மெலோனி !

இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021 ஆம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார்.அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக்கொண்டனர். இதன் காரணமாக, பெரும்பான்மை இல்லாததால் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி கடந்த ஜூலை மாதம் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

கருத்துக் கணிப்புகளின்படி, ஜார்ஜியா மெலோனி தலைமையிலான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் கூட்டணி இந்தத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்றது. இதையடுத்து ஜார்ஜியா மெலோனி பிரதமராக தேர்வு பெற்றார்.

45 வயதான ஜார்ஜியா மெலோனி ‘ தீவிர தேசியவாதியாகவும், ஐரோப்பிய எதிர்ப்பு ஒற்றுமை தலைவராகவும் கருதப்படுகிறார். 2008 இல், பெர்லுஸ்கோனி பிரதம மந்திரியாக இருந்த போது மந்திரிசபையில் ஜார்ஜியா மெலோனியை விளையாட்டுத் துறை மந்திரியாக நியமித்தார். இந்நிலையில் தற்போது பெரும் செல்வாக்குடன் பிரதமர் வேட்பாளராக அவர் உயர்ந்துள்ளார்.

ரஷ்ய பள்ளியில் துப்பாக்கிச்சூடு – 6 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி !

ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் 20-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் நாஜி குறியீடுடன் கருப்பு கலர் டீ ஷர்ட் அணிந்திருந்ததும், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதும் தெரிய வந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி புடின், ரஷிய பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதல் மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதல் என கண்டனம் தெரிவித்தார் என கிரெம்ளின் மாளிகை குறிப்பிட்டுள்ளது.

மகளின் முக ஜாடை தன்னை போல இல்லை – மகளை கொலை செய்த தந்தை !

தமிழ்நாடு, மதுரையில் 8 வயது சிறுமியை கொலை செய்து துணியில் சுற்றி வாளிக்குள் அடைத்து, சடலத்தை வீட்டு பரணில் வைத்து விட்டு தலைமறைவான தந்தையை பொலிசார் தேடி வருகின்றனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் டெயிலர் காளிமுத்து. இவரது மனைவி பிரியதர்ஷினி இவர்களுக்கு எட்டு வயதில் தன்ஷிகா என்ற மகள் இருந்தாள்.

பிரியதர்ஷினி பாத்திரக்கடை ஒன்றில் வேலைப்பார்த்து வந்த நிலையில் கடந்த 13 ஆம் திகதி காளிமுத்து தனது மகள் தன்ஷிகாவுடன் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்றார். பிரியதர்ஷினி வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்த பின்னரும் கணவரும் மகளும் வீட்டிற்கு திரும்பவில்லை. கணவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தனது கணவரையும் , மகளையும் காணவில்லை என்று பிரியதர்ஷினி ஜெய்ஹிந்த் புரம் பொலிஸில் புகார் அளித்தார். பொலிஸார் அந்த புகாரை விசாரிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் பிரியதர்ஷினியின் வீட்டில் இருந்து துர் நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்ததால் அவர் பொலிஸாரின் உதவியுடன் வீட்டில் பரண் மீது இருந்த வாளியை கீழே இறக்கி பார்த்தார்

அதில் துணியில் சுற்றப்பட்ட நிலையில் சிறுமி தன்ஷிகா அழுகிய நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பொலிஸார் பிரியதர்ஷினியிடம் விசாரித்த போது கணவர் காளிமுத்துவின் சந்தேகக் கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது.

தினமும் கடையில் இருந்து வந்ததும் பிரியதர்ஷினியின் செல்போனை வாங்கிப்பார்க்கும் காளி முத்து, இன்னைக்கு யார் ? யாரிடம் ? பேசினாய் என்று கேட்டு அடித்து துன்புறுத்துவதை வாடிக்கையாக்கி இருந்துள்ளார். தனது மகளுக்கு 8 வயதாகும் நிலையில், மகள் பிறந்ததில் இருந்தே அவளது பிறப்பில் சந்தேகம் கொண்டு தகராறு செய்து வந்த காளிமுத்து, மகளின் முக ஜாடை தன்னை போல இல்லை என்று கூறி துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் தான் மகளை உறவினர் வீட்டுக்கு அழைத்துச்செல்வதாக கூறி ஏமாற்றிவிட்டு வீட்டில் வைத்தே மகளை கொலை செய்த காளி முத்து, சடலத்தை துணியில் சுற்றி வாளியில் அடைத்து பரண் மீது மறைத்து வைத்துவிட்டு தலைமறைவாகி இருப்பது பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவான காளிமுத்துவை பிடிக்க தனிப்படை அமைத்து பொலிசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் சில தினங்களாக லேசாக துர் நாற்றம் வீசிய போது ஏதோ எலி செத்துக்கிடக்கும் என்று நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்ததாக தெரிவித்த பிரியதர்ஷினியிடமும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹிஜாப் அணிய மறுத்த ஊடகவியலாளர் – நேர்காணலை இரத்து செய்ய ஈரான் அதிபர் !

22 வயதான மஹ்சா அமினியின் மரணத்திற்குப் பிறகு ஈரானில் ஏறக்குறைய ஒரு வார போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களில் சுமார் 50க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ள நிலையில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் இன்னும் தீவிரமடைய ஆரம்பித்துள்ளன.

இந்தநிலயில் ஹிஜாப் அணிய ஊடகவியலாளர் ஒருவர் மறுத்ததால் தொலைக்காட்சி நேர்காணலை இரத்து ஈரான் அதிபர் ரத்து செய்தமை சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

மூத்த பத்திரிகையாளர் கிறிஸ்டியன் அமன்பூர் வியாழனன்று ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் நேர்காணல் ரத்து செய்யப்பட்டது என்று அவர் கூறினார், அவர் தலையில் முக்காடு அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

செய்தி தொகுப்பாளர் ஹிஜாப் அணிய மறுத்ததால் ஈரான் அதிபர் செய்த செயல்! -  தமிழ்முரசம் செய்திச் சேவை

அமெரிக்க பொது ஒளிபரப்பு நிறுவனமான பிபிஎஸ்ஸில் நிகழ்ச்சியை நடத்தும் சிஎன்என் இன் தலைமை சர்வதேச தொகுப்பாளரான அமன்பூர், ஐ.நா பொதுச் சபையின் ஓரத்தில் புதன்கிழமை நேர்காணலுக்குத் தயாராக இருப்பதாக ஒரு உதவியாளர் தனது தலைமுடியை மறைக்க வலியுறுத்தினார்.

“நான் பணிவுடன் மறுத்துவிட்டேன். நாங்கள் நியூயார்க்கில் இருக்கிறோம், அங்கு தலையில் முக்காடு தொடர்பான சட்டமோ பாரம்பரியமோ இல்லை” என்று ஈரானிய தந்தைக்கு பிரிட்டனில் பிறந்த அமன்பூர் ட்விட்டரில் எழுதினார்.

“ஈரானுக்கு வெளியே நான் அவர்களை நேர்காணல் செய்தபோது முந்தைய எந்த ஈரானிய ஜனாதிபதியும் இது தேவையில்லை என்பதை நான் சுட்டிக்காட்டினேன்,” என்று அவர் கூறினார்.

“இந்த முன்னோடியில்லாத மற்றும் எதிர்பாராத நிபந்தனைக்கு என்னால் உடன்பட முடியாது என்று நான் சொன்னேன்.”

ரைசி இருந்த ஒரு வெற்று நாற்காலியின் முன் அமர்ந்திருக்கும் — முக்காடு இல்லாமல் — அவள் ஒரு படத்தைப் பதிவிட்டாள்.

கடும்போக்கு மதகுருவான ரைசியின் உதவியாளர், “ஈரானில் உள்ள சூழ்நிலையின்” காரணத்தால் தான் முக்காடு அணிவதை வலியுறுத்துவதாக அமன்பூரிடம் கூறினார்.

22 வயதான மஹ்சா அமினியின் மரணத்திலிருந்து ஈரானில் கிட்டத்தட்ட ஒரு வாரப் போராட்டங்கள் நடந்தன, அவர் பெண்கள் எப்படி உடை அணிவார்கள் என்பதில் மதகுருக்களின் விதிகளை அமல்படுத்தும் அறநெறிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் இறந்தார்.

எதிர்ப்புக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் குறைந்தது 31 ஈரானிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், இதில் பெண்கள் தலையில் முக்காடுகளை எரிப்பதைக் காண முடிந்தது என்று ஒரு அரசு சாரா குழு தெரிவித்துள்ளது.

இலங்கைக் கல்விமுறைமை மௌனமான உடைவுகள் … அல்ல முற்றாக தகர்கப்பட வேண்டியவை:

இலங்கை 1948இல் பெயரளவில் சுதந்திரம் பெற்றாலும் கல்வி, பொருளாதாரம், சிந்தனைமுறை போன்ற விடயங்களில் இன்னமும் காலனித்துவத்தின் பிடியில் இருந்து வெளிவர முயற்சிக்கவில்லை. அதற்குக் காரணம் இலங்கையில் இன்னமும் பிரித்தானியாவின் காலனித்துவக் கல்வி முறையே நடைமுறையில் உள்ளது. பொருளாதாரமும் பிரித்தானிய – அமெரிக்க நாடுகளில் தங்கியிருக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் பிணைக்கப்பட்டே கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கை ஒரு பொருளாதார நெருக்கடியை சந்திக்க நிர்ப்பந்திக்கப்பட்டதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்தப் பொருளாதார நெருக்கடியினால் சரியான பொருளாதாரப் பாதையில் இலங்கை சென்றுவிடக்கூடாது என்பதற்காக பிரித்தானிய – அமெரிக்க நவகாலனித்துவம் போராட்டத்தைத் தூண்டிவிட்டு இன்று மீண்டும் இலங்கையை தங்களது நலனுக்கு சேவை செய்ய நிர்ப்பந்திக்கின்றது. இங்கு பதிவு செய்ய வந்தவிடயம் பொருளாதாரம் அல்ல.

செப்ரம்பர் 16, 2022 அன்று ‘மௌனமான உடைவுகள் …‘ தொடரில் சோதணைகளும் … சாதனைகளும் … வேதனைகளும் என்ற தலைப்பில் அழகு குணசீலன் மட்டக்களப்பின் கல்வி பற்றி பேசி கல்வி தொடர்பான பரந்த ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார். அதற்கான எதிர்வினையே இது. அழகு குணசீலனின் பதிவின் சாரம்சம் இது தான்: சிறிய தொகையான மாணவர்கள் பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைக்கின்றார்கள் பெரும்பாலானவர்கள் வசதிகள், வாய்ப்புகள் இல்லாமல் தோல்வி அடைகிறார்கள். வேதனை அடைகின்றார்கள். அரசியல் வாதிகளும் கனவான்களும் சாதனைகளுக்கு மட்டுமல்ல வேதனைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டுமென்கிறார் அவர். இதற்கு ஏற்றத் தாழ்வான சமூக, பொருளாதார, அரசியல் சூழலலே காரணம் என்று மிகச் சரியாகவே அடையாளம் கண்டுள்ள அவர் சமூக நீதியைக் கோருகின்றார்.

இந்தக் காலனித்துவக் கல்விமுறை என்பதே ஏற்றத் தாழ்வான சமூக, பொருளாதார, அரசியல் சூழலை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட கல்வி முறை. இந்தக் கல்வி முறை ஒரு போதும் சமூக நீதியைக் கொண்டுவராது. இந்தக் கல்வி முறையை நீங்கள் சீர்செய்ய முடியாது. இந்தக் கல்வி முறை முற்றாகத் தகர்க்கப்பட வேண்டும். வறுமையின் பிடியில் கல்வி கற்று அமெரிக்க ஹவார்ட் பல்கலைக்கழக விரிவுரையாளரான போலோ பெரேரே இக்கல்வி முறையை ‘வங்கி வைப்பீட்டு முறைமை’க்கு ஒப்பிடுகின்றார். அதாவது ஆசிரியர்கள் மாணவர்கள் மீது தகவல்களை வைப்பிடுகின்றார்கள். திணிக்கின்றார்கள். இன்னும் விரிவாக ஆராய்ந்தால் (அரசியல்) அதிகார வர்க்கத்தினால் அதன் நலன்களுக்கு சேவை செய்யும் கல்விமுறை மாணவர்கள் மீது திணிக்கப்படுகின்றது என்கிறார் போலோ பெரேரே.

இந்தக் கல்விமுறையானது ஒடுக்குபவர்களால் ஒடுக்கப்படுபவர்கள் மீது திணிக்கப்படும் கல்வி முறையாகும். இக்கல்விமுறையானது ஒரு போதும் சமூக நீதியைக் கொண்டுவரமாட்டாது. இன்று மேற்குலகில் ஊட்ப்படுகின்ற கல்விமுறை கூட பெரும்பாலும் பெரும் கோப்ரேட் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை உருவாக்குகின்ற கல்விமுறையே. இக்கல்வி முறையில் முகாமையாளர்கள் நேர்மையானவர்களாகவும் தொழிலாளர்கள் களவாணிப்பயல்களாகவுமே சித்தரிக்கப்படுகின்றனர். இக்கல்விமுறை பரந்த சிந்தனையை தடுக்கின்றது. கட்டத்துக்கு வெளியே சிந்திப்பதைத் தடுக்கின்றது. ஆக்கத்திறனைத் தடுக்கின்றது. சமூகப் பார்வையைத் தடுக்கின்றது.

போலோ பெரேரே உடைய வாதத்தை ஆதரிக்கின்ற வகையிலேயே பிரித்தானிய பிரதமர்களின் தெரிவு அமைந்துள்ளது. தற்போதைய பிரித்தானிய பிரதமர் லிஸ் ரஸ்ட் வரையான 56 பிரதமர்களும் பெரும்பாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய கல்லூரிகளில்: ஈற்றின் கொலீஜ், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிஜ் பல்கலைக்கழகங்கம் ஆகியவற்றிலேயே கல்வி கற்றுள்ளனர். பிரித்தானியாவில் இன்றும் கிரம்மர் ஸ்கூல், ஸ்ரேற் ஸ்கூல் என்ற பிரிவினை உண்டு. தேவாலயங்களின் கட்டுப்பாட்டில் பெரும்பாலும் உள்ள கிரம்மர் ஸ்கூலுக்கு தெரிவுப் பரீட்சை மூலம் திறமையான மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள்.

இப்பாடசாலைகளுக்கு அரசு மேலதிக சலுகைகளை வழங்குகின்றது. இம்முறைமை பிரித்தானிய கொன்சவேடிவ் அரசினுடைய கொள்கை. வசதியானவர்களை திறமையானவர்களை ஊக்குவித்து அவர்களை அதிகார மையமாக்குவது. ஸ்ரேற் ஸ்கூல் என்பது அவ்வப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் கல்வி கற்பதற்கான அரச பாடசாலைகள்.

இதே மாதிரியான கல்விமுறையை இலங்கையிலும் காணலாம். யாழ்ப்பாண இந்துக் கல்லூரி, கொழும்பு ரோயல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் கற்றவர்கள் பொதுவாக அதிகார மையங்களாக உருவாகுவார்கள். முல்லைத்தீவில் என்னதான் படித்து வந்தாலும் பருந்தாக முடியாது. இது தான் தற்போதைய கல்விக்கொள்கைக்கு பின்னால் உள்ள நோக்கம். அதாவது அவரவர் அவரவர் இடத்திரேயே இருக்க வேண்டும். ஏழை ஏழையாகவும் பணக்காரன் பணக்காரணாகவும் இருக்க வேண்டும். வளர்முக நாடு வளர்முக நாடாக கடன் கார நாடாகவே தான் இருக்க வேண்டும். பொருளாதாரப் பிரச்சினைக்கு ஐஎம்எப் மற்றும் உலக வங்கியிடம் கடன் வாங்கித்தான் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று தான் இந்தக் கல்விமுறை ஊட்டி இருக்கின்றது. அதற்கு வெளியே மாற்றீடு பற்றிச் சிந்திப்பதற்கான சிந்தனை முறை இவர்களிடம் இராது. ஒரு உள்ளங்கையில் அடங்கும் அப்பிளை வைத்து அவர்கள் ஒரு தொகை பண்டங்களைத் தயாரிக்கின்றார்களே நாங்கள் அப்பிளைப் போன்று பத்து மடங்கு பெரிய பிலாப்பழத்தை வைத்து பெரிதாக எந்தப் பண்டத்தையும் செய்வதில்லை. காலணித்துவச் சிந்தனையும் காலணித்துவக் கல்விமுறையும் அதற்கு எங்களை அனுமதிக்காது.

பிரித்தானிய – அமெரிக்க கூட்டினால் தூண்டப்பட்டு நடைபெற்ற போராட்டத்தினால் பதவி துறந்த கோட்டபாய ராஜபக்ச அரசால் இவ்வாண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருந்தது. சில ஆண்டுகளாகவே பல மில்லியன்கள் செலவிடப்பட்டு, பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு பெருமளவில் பயிற்சிகளும் வழங்கப்பட்டு இருந்தது. ரணில் விகிகரமசிங்க பதவியேற்று ஒரு சில தினங்களிலேயே புதிய பாடத்திட்ட அமுலாக்கத்திற்காக உருவாக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டது. புதிய பாடத்திட்டம் நடைமுறையில் இருக்கும் பிரித்தானியாவின் காலனித்துவ கல்விமுறையான போட்டிப் பரீட்சையின் முக்கியத்துவத்தை மூப்பது வீதமாகக் குறைத்து மாணவர்களுக்கு நேரடியான செய்முறைத் திட்டங்கள் எழுபது வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

தற்போது நடைமுறையில் உள்ள போட்டிப் பரீட்சைமுறை மாணவர்கள் பரீட்சைகளில் சித்தியடைவதையே இலக்காகக் கொண்டுள்ளது. நடைமுறையில் தொழில்துறைகளுக்குக் கூட இக்கல்விமுறை பெரிதாக உதவவில்லை. இப்பரீட்சைகளில் மிகத்திறமையாக சித்தியடைந்த மாணவர்கள் கூட தங்களுக்கோ சமூகத்திற்கோ எவ்வித பயனும் இல்லாமல் வாழ்கின்றனர். அல்லது தற்கொலை செய்கின்றதை காண்கிறோம். இந்தக் கணணி உலகில் கூட பல மாதங்கள், ஆண்டுகள் கற்றதை மனனம் செய்து, ஞாபகத்திற்குக் கொண்டுவந்து பரீட்சை எழுதித் தான் ஒரு மாணவன் தன்னுடைய ஆளுமையை திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆயினும் இந்நடைமுறை இறுக்கமாக பின்பற்றக் காரணம் கல்வியை பலருக்கும் எட்டாக் கனியாக வைத்திருப்பதனூடாக சமூக ஏற்றத்தாழ்வுகளை தக்கவைத்து தற்போதைய சமூகக் கட்டமைப்பைப் பேணுவதே.

கடந்த அரசின் புதிய கல்வித்திட்டம் அமூல்படுத்தப்படுமானால் சுதந்திரத்திற்குப் பின் இலங்கையின் கல்விக் கொள்கையில் ஏற்பட்ட பாரிய திருப்பு முனையாக அது அமையும். போலோ பெரேரே குறிப்பிடும் விடுதலைக் கல்வி என்பதும் இது சார்ந்ததே. மாணவர்களை பிரச்சினைகளை எதிர்கொள்ள வைப்பதன் மூலம் அதற்கான தீர்வுகளைத் தேடத் தூண்டுவது. அதுவே மாணவர்களை அடிமைத் தளைகளில் இருந்து விடுதலை செய்யும் என்கின்றார்.