September

September

போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் – நாமல் ராஜபக்ஸ

போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்து, அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களை சமூகமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று அவசியம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இந்நாட்களில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மறுசீரமைப்பு கூட்டங்களில்  கலந்துகொள்வதுடன், வெலிமடை நுகதலாவையில் இன்று நடைபெற்ற செயற்றிட்டத்திலும் பங்கேற்றிருந்தார்.

நிகழ்வை பதிவு செய்வதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், கூட்டத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது, போராட்டக்காரர்களுக்காக புனர்வாழ்வு பணியகங்களை அமைக்கும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்,

அவ்வாறானதொரு யோசனை அரசாங்க தரப்பிலிருந்து முன்வைக்கப்படவில்லை. போராட்டக்களத்துடன் தொடர்புடைய அப்பாவி இளைஞர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். அவர்களை சிறையில் அடைத்து , தடுத்து வைத்து குறைந்தபட்சம் வேலையொன்றையேனும் பெற்றுக்கொள்ள முடியாதவாறான சூழலை ஏற்படுத்துவது பிழையான விடயமாகும். எனது மனைவியின் வீட்டிற்கும் தீ வைத்தனர். எனது வீட்டிற்கும் தீ ​வைத்தனர். இதனை வழிநடத்தியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். எனினும், வழிநடத்தியவர்கள் வெளியில் சுதந்திரமாக இருக்கும்போது, அதற்கு ஆதரவு வழங்கிய இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் தடுத்து வைப்பதும் பயனற்றது. வழிநடத்தியவர்களை கைது செய்ய வேண்டும். போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்களை ஏதேனுமொரு வேலைத்திட்டத்தின் மூலம் சமூயமயப்படுத்த வேண்டும்.

“சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க களியாட்ட விடுதிகளோ, மதுபானங்களோ எவையும் இல்லை.”- சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனாகமகே கவலை !

“மக்கள் பணத்தை செலவழிப்பதற்கான வழிவகைகளை நான் உருவாக்குவேன்.” என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனாகமகே தெரிவித்துள்ளார்.

பகலில் வெளிநாட்டவர்களை ஆக்கிரமிப்பதற்கான கலாச்சார ரீதியாக கவரக்கூடிய விடயங்கள் இலங்கையில் காணப்படுகின்றன ஆனால் இரவுவாழ்க்கை என வரும்போது அதன் போட்டியாளர்களுடன் போட்டிபோட முடியாத நிலையில் இலங்கை உள்ளது என அவர் எக்கனமி நெக்ஸ்டிற்கு தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் தாய்லாந்து போன்ற நாடுகளில் காணப்படும் வீதியோர கடைகள் மற்றும் நள்ளிரவு களியாட்டம் போல இலங்கை சுற்றுலாப்பயணிகளிற்கும் உள்ளுர் மக்களிற்கும் இரவின் பின்னர் மேற்கொள்ளக்கூடிய செயற்பாட்டுகளிற்கான வாய்ப்பை வழங்கவில்லை  குறைந்தளவே வழங்குகின்றது.

சுற்றுலாப்பயணிகள் இரவில் பொருட்களை  கொள்வனவு செய்ய விரும்பினால் எந்த கடைகளும் திறந்திருப்பதில்லை. அவர்கள் நடனமாட விரும்பினால் இசையை ரசிக்க விரும்பினால் மது அருந்த விரும்பினால்  உணவருந்த விரும்பினால் இந்த நாட்டில் என்ன இருக்கின்றது.?

இலங்கை இரவில் மரணித்த தீவை போல காணப்படுகின்றது. களியாட்டங்களிற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதால் வெளிநாட்டு நாணய வருகை வீழ்ச்சியடைந்துள்ளது. பணத்தை செலவிடக்கூடிய நிலையில் உள்ள இலங்கையர்கள் தங்கள் பணத்தை செலவிட வெளிநாடுகளிற்கு செல்கின்றனா .?

அவர்கள் எங்கள் பணத்தை வெளிநாடுகளிற்கு கொடுக்கின்றனர் இதற்கு என்ன காரணம் இலங்கையில் அவர்கள் அனுபவிக்க எதுவுமில்லை.

என்னை விமர்சிப்பவர்கள் கசினோ மற்றும் விபச்சார கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட இரவு வாழ்க்கை பற்றி மாத்திரமே சிந்திப்பவர்கள் அவர்களால் பரந்துபட்ட அளவில் சிந்திக்க முடியாது. மக்கள் பணத்தை செலவழிப்பதற்கான வாழ்க்கையை அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டதே தனது நோக்கம்.

பொருளாதாரம் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்வதற்காகவே இதனை செய்ய விரும்புகின்றேன். கடைகள்  பொருட்கொள்வனவு  இசை போன்றன காணப்படவேண்டும்.

கலாச்சாரத்தையும் வரலாற்றையும் அபிவிருத்தியிலிருந்து பிரிக்கவேண்டும். எங்களிற்கு வரலாறு தேவை கலாச்சாரம் தேவை ஆனால் அதன் அர்த்தம் அத்துடன் நீங்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும்  நாட்டின் அபிவிருத்தியை தடுக்கவேண்டும் என்பதல்ல .

நாட்டை ஏதாவது ஒரு வழியில் அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்ற போதெல்லாம் மக்கள் மத கலாச்சார விடயங்களை கையில் எடுத்துள்ளனர் அது இன்று எங்களை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்து செயற்பட்டவர்களுக்கு இலங்கையில் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல் !

மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்ததற்காக இலங்கை உட்பட 42 நாடுகளில் உள்ள மக்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலாளர் இல்சே பிராண்ட்ஸ் கெஹ்ரிஸின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எவ்வாறு சந்தித்தார்கள் என்பது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுத்து வைத்தல், கட்டுப்படுத்தப்பட்ட சட்டத்தால் இலக்கு வைக்கப்படல் மற்றும் இணையங்கள் மூலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அத்துமீறல்கள் அனைத்தும் 2021 மே 1ஆம் திகதி முதல் 2022 ஏப்ரல் 30ஆம் திகதி வரையில் இடம்பெற்றுள்ளன என்றும் உதவி பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகள் காரணமாக, குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் உள்ளவர்கள் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைப்பதைத் தவிர்த்தனர் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச்செயலாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் வட மாகாணத்தில் எயிட்ஸ் (AIDS) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பாலியல் நோய் மற்றும் HIV தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் குறிப்பிட்டார்.

அதிகரித்த போதைப்பொருள் பாவனையும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றென வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் 11 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நோயாளிகளுக்கான மருந்துகளை பெற்றுக்கொள்வதிலும் பல சவால்கள் நிலவுவதாக அவர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் நெருக்கடியினால், உரிய மருந்துகளுக்கு பதிலாக மாற்று மருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், நோய் தொடர்பிலான முழுமையான விழப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு போதிய போக்குவரத்து வசதிகள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், உலக பெருந்தொற்றாகக் காணப்படும் HIV தொற்றை ஒழிப்பதற்கான திட்டங்களை உலகத் தலைவர்கள் முழுமையாக முன்னெடுக்கும் பட்சத்தில், 2030 ஆம் ஆண்டில் எயிட்ஸை முழுமையாக ஒழிக்க முடியும் என  ஐக்கிய நாடுகளின் இணைந்த திட்டம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயல் அரங்கேற்றி வருகின்றது.” – எம்.ஏ.சுமந்திரன்

“தொல்பொருள் திணைக்களம் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயல் அரங்கேற்றி வருகின்றது.” என ஜனாதிபதி சட்டத்தரணியுமான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடி , திரியாய் போன்ற பகுதிகளில் தமிழ் விவசாயிகளின் பூர்வீக காணிகளில் விவசாயத்தில் ஈடுபட தொல் பொருள் திணைக்களம் தடுப்பதற்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்ற வழக்கிலே ஆஜராகிய பின் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து குறித்த விடயம் தெர்டரபாக கருத்து தெரிவிக்கும் போது

தொல்பொருள் திணைக்களம் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயல் அரங்கேற்றி வருகின்றது. அதன் ஒரு பிரதிபலிப்புத் தான் திருகோணமலை மாவட்டம் திரியாய் மற்றும் தென்னமரவாடி கிராமத்தில் தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளில் அவர்கள் விவசாயம் செய்வதற்கு தடுத்த ஒரு சம்பவம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம் பெற்றது.

அந்த வேளையில் நிலத்திற்கு உரித்தான விவசாயிகள் மேல் நீதி மன்றத்திலே வழக்கு தாக்கல் செய்து ஒரு இடைக்கால தடை உத்தரவினைப் பெற்றிருந்தார்கள். அந்த வழக்கை ஆதரித்து வாதாடியவர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் இடைக்கால உத்தரவை மேல் நீதி மன்றம் வழங்கி தொல் பொருள் திணைக்களம் விவாயிகளுக்கு இடையூறு கொடுக்க கூடாது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்ய உரித்துடையவர்கள் என கட்டளை பிறப்பித்திருந்தது.

அந்த வருடம் விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களில் செய்கையை மேற்கொண்டு அறுவடை செய்யக் கூடியதாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகு தொடர்ச்சியாக விவசாயிகள் தடுக்கபட்டனர். வேறு பல அச்ருத்தல்களுக்கும் விவசாயம் செய்வதற்கான தடுப்புக்களும் மேற் கொள்ளப்பட்டு தங்களுடைய விவசாய நடவடிக்கைகளை இவ்வருடமும் மேற் கொள்ள முடியாதவர்களாக காணப்படுகின்றனர்.

இந்த பின்னனியிலே இறுதி விவாதத்திற்கு இன்று 30ம் திகதி மேல் நீதி மன்றத்திலே இந்த வழக்கு எடுக்கப்பட்டது. சட்டத்தரணி கேசவன் சயந்தனுடன் நானும் இந்த வழக்கிலே ஆஜராகி வாதாடி இருக்கின்றோம். மிக முக்கியமாக மாகாண மேல் நீதி மன்றுக்கு நிலம் சம்மந்தமான எழுத்தாணைகளை வழங்குகின்ற அதிகாரம் இல்லை என்ற வாதத்தை அரச தரப்பு முன் வைத்திருந்தது.

அரசியலமைப்பின் படி ஒன்பதாவது நிரலின் கீழ் காணி அதிகாரம் மாகாணத்திற்கென  வழங்கப்பட்டிருக்கின்றது. மாகாண நீதி மன்றம் எழுத்தாணை  வழங்குகின்ற போது எந்த ஒரு நபருக்கு எதிராகவும் மாகாண நிரலில் உள்ள விடயம் சம்மந்தமாக எழுத்தாணை வழங்க முடியும் என்று சொல்லபட்டிருக்கின்றது. அரசியல் அமைப்பில் உள்ள குறித்த விடயத்தை மன்றுக்கு நாம் சுற்றிக் காட்டியுள்ளோம்.

100 வருடங்களுக்கு முற்பட்ட காணி உறுதிகளை குறித்த காணி உரிமையாளர்கள் வசம் உள்ளது. அவற்றை நாம் வழக்கிலே காட்சிப் படுத்தி இருக்கின்றோம்.

ஆகையால் இது அரச காணி அல்ல தனியார் காணி இந்த காணியிலே தங்களுடைய விவசாயத்தை செய்வதற்கு அவர்களுக்கு உரித்துண்டு அதை தடுப்பதற்கு எவருக்கும் உரிதில்லை என்ற வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.

வழக்கினுடைய இறுதித் தீர்ப்பு எதிர்வரும் மார்கழி 02ம் திகதி என திகதியிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நவம்பர் மாதத்திலே இரு தரப்பினரும் எங்களுடைய வாதங்களுக்கு சார்பான எழுத்து மூல சமர்ப்பணங்களை செய்யலாம் என நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலங்கள் சம்மந்தமாக தொல்லியல் திணைக்களம் இது போல வெவ்வேறு சட்டங்களின் கீழ் இயங்கும் திணைக்களங்கள் மக்களுடைய காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடு வடக்கிலும் கிழக்கிலும் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றது. எனவே இந்த வழக்கின் தீர்ப்பு ஒரு முக்கியமான தீர்பாக அமையும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

“எதிர்த்தரப்பை ஒன்றிணைத்து அரசாங்கத்தை நிச்சயம் கவிழ்ப்போம்.” – லங்கா சுதந்திர கட்சி

“எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, டலஸ் அழகபெரும, விமல் வீரவன்ச ஆகியோரை ஒன்றிணைத்து அரசாங்கத்தை நிச்சயம் கவிழ்ப்போம்.” என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

புதிய லங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் அரசியல்,சிவில் தரப்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைய வேண்டும். பொதுஜன பெரமுனவை நாட்டு மக்கள் முழுமையாக வெறுக்கிறார்கள்.

ஆகவே அவ்வாறான நிலையில் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைய பிரதான எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமாயின் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் முதலில் ஒன்றுப்பட வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ,டலஸ் அழகபெரும,விமல் வீரவன்ச ஆகியோரை ஒன்றிணைத்து அரசாங்கத்தை நிச்சயம் கவிழ்ப்போம்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு,நாட்டு மக்களின் நன்மதிப்பை ஜனாதிபதி பெற பொதுஜன பெரமுனவினர் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்.

அத்துடன் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்கு நாட்டு மக்கள் அங்கிகாரம் வழங்க போவதுமில்லை,ஆகவே ஜனாதிபதி எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு பிறகு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை அவர் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை விரைவாக நடத்தாவிடின் அவரது அரசியல் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகும்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது சகோதர பாசத்துக்கு முன்னுரிமை வழங்காமல்,அரசியல் ரீதியில் சிரேஷ்டத்துவத்துக்கு முன்னுரிமை வழங்கியிருந்தால் இன்று நாடு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் மோசமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்காது என்றார்.

தெற்காசிய பெண்கள் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி – சாம்பியனானது இலங்கை மகளிர் அணி !

மாலைதீவில் இடம்பெற்ற தெற்காசிய மகளிர் கூடைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை வெற்றி வாகை சூடிக்கொண்டுள்ளது. ஐந்தாவது தெற்காசிய மகளிர் கூடைப்பந்து போட்டியின் இறுதி போட்டிமாலைதீவின் தலைநகரான மாலேயில் நேற்று (30) நடைபெற்றது.

இந்த ஐந்தாவது லீக் சுற்றின் முக்கியமான இறுதிப் போட்டியில் மாலைதீவை வீழ்த்தி இலங்கை அணி அபராவெற்றியை பெற்றுக்கொண்டுள்ளது.

தெற்காசிய பெண்கள் கூடைப்பந்து போட்டியில் 6 அணிகள் பங்கேற்றன. இதில் இலங்கை மற்றும் மாலைதீவு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. முதல் பாதி முடிவில் இலங்கை அணி 46க்கு 22 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியின் முடிவில் இலங்கையின் கூடைப்பந்தாட்ட வீரர்கள் 72 க்கு 59 புள்ளிகள் என முன்னிலை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

தெற்காசிய பெண்கள் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாவது தடவையாகவும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கடந்த மாதம் இடம்பெற்ற ஆசிய துடுப்பாட்ட போட்டி மற்றும் ஆசிய கூடைப்பந்தாட்ட போட்டிகளில் இலங்கை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

தொடரும் பொருளாதார நெருக்கடி – முதியோர் இல்லங்களுக்கு வழங்கப்படும் உணவு 90% குறைந்ததது !

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக முதியோர் இல்லங்களுக்கு வழங்கப்படும் உணவு முன்பை விட 90% குறைந்துள்ளதாக தேசிய முதியோர் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது. தேசிய முதியோர் செயலகம் ஆறு முதியோர் இல்லங்களை நடத்தி வருவதாகவும் இதன் கட்டுப்பாட்டின் கீழ் முந்நூற்று நாற்பது முதியோர் இல்லங்கள் இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலைமையின் அடிப்படையில் முதியோர் இல்லங்களுக்கு உலர் உணவு வழங்குமாறு உணவு ஆணையாளர் திணைக்களத்திடம் தேசிய முதியோர் தலைமைச் செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தேசிய முதியோர் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.

300 ரூபாய் செலுத்தவில்லை என்பதற்காக மாணவியை தாக்கிய அதிபர் கைது !

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தவிடயம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் தின நிகழ்வுக்காக தனது சகோதரன் 300 ரூபாய் செலுத்தவில்லை என தெரிவித்து, குறித்த அதிபர் மாணவியின் சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனையடுத்து “சேர் எனது சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்ட வேண்டாம் என்றும் தனது தந்தை அருகில் வேலை செய்வதால் அவரிமிருந்து பணத்தை வாங்கி தருவதாக” குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே அதிபர் குறித்த மாணவியை பிரம்பால் அமானுஷ்யமாக தாக்கியதாகவும் இதனையடுத்து பாடசாலைக்கு அருகில் வேலை செய்துக்கொண்டிருந்த மாணவியின் தந்தை, மகளின் அலறல் கேட்டு, பாடசாலைக்கு ஓடி மாணவியைக் காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கான மாணவியுடன் தனக்கு 4 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்த அத்தந்தை பொருளாதார பிரச்சினையில் தான் இருப்பதுடன், தனது மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன், தனது மகள் தாக்கப்பட்டமை தொடர்பில் திம்புளபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடையும் செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் வினவியபோது, ஒழுக்கம் விடயமாகவே குறித்த மாணவியை சிறு தடியொன்றில் தாக்கியதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே மாணவியின் வாக்குமூலத்தின் பின் அதிபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

டிக்டொக் செயலிக்கு அடிமையாகும் மாணவிகள் – யாழ்ப்பாணத்தில் அபாய நிலையில் பல மாணவர்கள் !

“டிக்டொக்” மற்றும் “இணைய விளையாட்டு” ஆகியவற்றுக்கு அடிமையாகி, அதில் இருந்து மீள்வதற்கு உளவள சிகிச்சைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிக்டொக் செயலிக்கு அடிமையாகி அதன் மூலம் காதல் வயப்படுதல், அதிக நேரம் டிக்டொக் செயலியுடன் செலவழித்தல் மற்றும் உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு முகம் கொடுத்த 10 பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட 16 மாணவர்கள் கடந்த 09 மாதங்களில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இவ்வாறான சிகிச்சைகளுக்கு பெரும்பாலும் விரும்பி சிகிச்சை பெற பலர் வைத்தியசாலைகளுக்கு செல்வதில்லை. அவ்வாறு இருக்கையில் கடந்த 09 மாதங்களில் 16 பாடசாலை மாணவர்கள் சிகிச்சை பெற வந்துள்ளனர் என்றால் , யாழில் இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவாக இருக்கலாம் என தாம் அஞ்சுவதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, தரம் 09 ஆம் வகுப்பு மேற்பட்ட 97 வீதமான மாணவர்கள் சொந்தமாக தொலைபேசிகள் வைத்திருப்பவர்களாகவோ, பெற்றோரின் தொலைபேசிகளை அதிகம் பாவிப்பவர்களாகவோ உள்ளனர்.

குறிப்பாக 12 வயது தொடக்கம் 17 வயது வரையிலான மாணவர்கள் பெரும்பாலும் இணைய விளையாட்டுக்களில் (ஒன்லைன் கேம்) ஈடுபடுபவர்களாக உள்ளனர்.

இவ்வாறாக கையடக்க தொலைபேசிகளுக்கு மாணவர்கள் அடிமையாவதால், நீரழிவு, உயர் குருதி அழுத்தம், கொலஸ்ரோல், நோய் எதிர்ப்பு தன்மை குறைவடைதல், என்புத்தொகுதி சார் நோய்கள் என்பவற்றுக்கு ஆளாவார்கள்.

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்தில் 16 தடவைகள் கண்ணை சிமிட்ட வேண்டும். இணைய விளையாட்டுக்களில் ஈடுபடும் போது, பார்வை குவிப்பை ஓர் இடத்தில் செலுத்துவதனால் , நிமிடத்திற்கான கண் சிமிட்டல் 8 தடவைகளை விட குறைகின்றன. இதனால் பார்வை குறைபாடுகள் ஏற்படும். சில வேளைகளில் பார்வை இழப்பையும் ஏற்படுத்தி விடலாம்.

எனவே பிள்ளைகள் மீதான பெற்றோரின் கண்காணிப்பும் , கண்டிப்பும் கவன குவிவான செயற்பாடுமே பிள்ளைகளின் உடல் – உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என குழந்தை மருத்துவ நிபுணர் கீதாஞ்சலி சத்தியதாஸ் தெரிவித்தார்.