February

February

கோத்தபாயாவின் மந்திரவாதி ஞானக்காவுக்கு 28 மில்லியன் இழப்பீடு

கோத்தபாயாவின் மந்திரவாதி ஞானக்காவுக்கு 28 மில்லியன் இழப்பீடு

 

கோத்தாவின் ஆஸ்தான சோதிடர் ஞானக்காவுக்கு 28 மில்லியன் அள்ளி வீசிய ரணில் . 2022 ஆம் ஆண்டில் மக்கள் போராட்டத்தின் போது வீடுகள் அழிக்கப்பட்ட அரசியல்வாதிகள் அல்லாத தனிநபர்களுக்கான இழப்பீடாக முந்தைய அரசாங்கம் மேலும் 1,125 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்தொகை அரசியல்வாதிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட ரூ.1,221 மில்லியனுக்கு மேலதிகமானதாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஆதரவாளரும் அவர்களின் ஆஸ்தான சோதிடருமான ஞானாக்காவுக்கும் அனுராதபுரத்தில் உள்ள அவரது வழிபாட்டுத்தலம் அழிக்கப்பட்டதற்காக 28 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்தியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஆதரவாளரும் அவர்களின் ஆஸ்தான சோதிடருமான அநுராதபுரத்திலுள்ள ஞானக்காவின் வீடு, கோவில், ஹோட்டல் என்பன அரகலய போராட்டத்தில் மக்களால் முற்றுகையிடப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு நாட்டுமக்கள் மீது திடீர் பாசம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு நாட்டுமக்கள் மீது திடீர் பாசம்

 

மக்களை பற்றி யோசிக்காத அரசியல் கட்சிகளே நாட்டில் உள்ளன – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கவலை. தற்போதுள்ள அரசியல் கட்சிகள் பொறுப்பற்றவையாகவும், தேசிய நலன்கள் தொடர்பில் சிந்திக்காதவையாகவும், அடுத்த தேர்தலில் என்ன செய்யலாம்? வெல்வோமா, தோற்போமா என சிந்திப்பவையாகவும் உள்ளன என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், பொறுப்பற்ற அரசியல் கட்சிகள் உள்ள இந்த இலங்கையை பொறுத்தமட்டில் முதலாவதாக அரசியல் நெறிமுறைகள் மாற்றமடைய வேண்டும். அரகலயவின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட மிக வலுவான செய்தியை இன்னமும் பாரம்பரிய அரசியல் கட்சிகள் சரிவர புரிந்துணரவில்லை என்றே தெரிகிறது.

நாம் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முன்னெடுத்த முயற்சிகள் யாவும் பாராளுமன்றத்துக்குள்ளிருந்து தூக்கியெறியப்பட்டன. எனவே வேறெதனையும் செய்வதற்கு முன்பதாக, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பல அரசியலமைப்பு வரைபுகள் நிலுவையில் உள்ளன. அவற்றை ஒன்றிணைத்து, தற்கால சூழ்நிலைக்கு பொருத்தமானதொரு வரைபை தயாரிப்பது இலகுவானதாக இருக்கும். எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பையும் மேற்கொள்வதற்கு முன்னதாக நாட்டின் அரசியல் சூழ்நிலையிலும் தலைவர்களின் அரசியல் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.

இப்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்போரில் பெரும்பான்மையானோர் அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை நிராகரித்துள்ளனர். இல்லாவிடின் அவர்களது கட்சி அதனை நிராகரித்துள்ளது. அவ்வாறிருக்கையில் தற்போது மாத்திரம் அவர்களால் இதனை எவ்வாறு செய்ய முடியும் என எனக்குத் தெரியவில்லை என்றார். தற்போது அதிகாரத்திலிருக்கும் என்பிபி அரசிற்கு மக்கள் அறுதிப்பெரும்பான்மையை வழங்கியுள்ளதால் சந்திரிக்கா அம்மையார் கவலைப்படத் தேவையில்லை என அரகல்ய போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி அநுர ஒரு நாளைக்கு 6 மணித்தியாலங்களே ஓய்வெடுக்கிறார்

ஜனாதிபதி அநுர ஒரு நாளைக்கு 6 மணித்தியாலங்களே ஓய்வெடுக்கிறார்

 

ஜனாதிபதி அனுர திஸாநாயக்க ஒரு நாளைக்கு 18 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பணியாற்றுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால குறிப்பிடுகின்றார்.

ஜனாதிபதி முன்னுதாரணமான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளதாகவும், அதற்கேற்ப அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் அந்த முன்னுதாரணத்தை கொண்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.

“நாமல் ராஜபக்ச தொடங்கி யார் மீதும் நாம் அரசியல் பழிவாங்கல் நோக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை – எடுக்கவும் மாட்டோம்” – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

நாமல் ராஜபக்ச தொடங்கி யார் மீதும் நாம் அரசியல் பழிவாங்கல் நோக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை – எடுக்கவும் மாட்டோம்” – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

 

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நாம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

 

நாம் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ளவில்லை. எதிர்காலத்திலும் அது இடம்பெறாது.விசாரணை நடவடிக்கைகள் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவில்லை. எனவே தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமையவே அதன் தொடர்புடைய தரப்பினர் அழைக்கப்படுகிறார்கள். இதில் பெரிதாக அலட்டிக் கொள்ள ஒன்றுமில்லை.இது தொடர்ச்சியாக இடம்பெறும்.அரசியல் நோக்கத்தை கொண்ட அந்த பழைய அரசியல் முறைமை இங்கு இருக்காது.அது நாமல் ராஜபக்ஷவோ அல்லது வேறு ஒருவராக கூட இருக்கலாம். பொலிஸார் தமது கடமைகளை நிறைவேற்றுவர்.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது.அதனை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பார்களாயின் அது தொடர்பில் நாம் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.

தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படும் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ! 

தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படும் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்

 

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாவதுடன் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதாக மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் சுவிஸ் அரசாங்கம் மனத் உரிமைச் செயற்பாட்டாளர் மரியதாஸ் பொஸ்கோவை ஆள்கடத்தல் முகவர் என முத்திரை குத்துகிறது.

மேலும், பல பெண் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கும்போது தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுவரும் ஒடுக்குமுறைகள் மற்றும் மீறல்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. திறந்த வெளிச் சிறச்சாலையான ஹாசாவில் நாற்பதினாயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட்ட பாலஸ்தீனமக்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்ற போது அதனை தடுக்க முடியாத காலாவதியாகிப் போன அமைப்பு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு. ஈழத்தமிழர்கள் இனியும் இந்த அமைப்பை நம்புவதில் கால விரயமே. உபாயங்களை மாற்றிக் கொண்டு உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

என்.பி.பியின் வரவுசெலவு திட்டத்திற்கு ரெலோ ஆதரவு  – விளக்கம் தருகிறார் பா.உ செல்வம் அடைக்கலநாதன் !

என்.பி.பியின் வரவுசெலவு திட்டத்திற்கு ரெலோ ஆதரவு

கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ்மக்களுக்கு சாதகமான பல விடயங்கள் உள்ளதால் வரவு, செலவுத்திட்டத்துக்கு ஆதரவளித்ததாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பா.உ செல்வம் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்தமை விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து இது தொடர்பில் அவர் தனது தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவித்த போது,

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற கோசத்துடன் மக்களின் ஆணையைக் கோரிய ஜனாதிபதி அநுரவின் முதலாவது வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அவர்கள் வடக்குக்கு அதிக ஒதுக்கீடுகளைச் செய்துள்ளார். அதனைவிடவும், சாதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் வரவு, செலவுத்திட்டத்தின் முன்மொழிவுகள் அமைந்திருக்கின்றன என்பதை கட்சி அரசியலுக்கு அப்பால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், அவர்களின் முன்மொழிவுகள் உரிய வகையில் செயற்படுத்தப்பட்டு நடைமுறைச்சாத்தியமாக வேண்டும் என்பது எனது வலியுறுத்தலாக இருக்கின்றது. கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசுகள் முன்மொழிவுகளை கவர்ச்சிகரமாக முன்வைத்தாலும் அவற்றை செயற்படுத்துவதில்லை.

பொருளாதாரரீதியாக வரவு,செலவுத்திட்டம் முன்னேற்றகரமாக இருந்தாலும் அவற்றை செயற்படுவதில் அரசாங்கம் அதீதமான முனைப்பினைக் காண்பிக்க வேண்டியுள்ளது. அதேநேரம், அரசாங்கமானது, தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற நீண்டகால பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டியது அவசியம். இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களையும் தாமதமன்றி முன்னெடுக்க வேண்டும் என்றார்.

ஞானசார தேரர் சிறைச்சாலைக்கு சுற்றுலாச் செல்லவில்லை 

ஞானசார தேரர் சிறைச்சாலைக்கு சுற்றுலாச் செல்லவில்லை
கடந்த காலங்களைப்போல் வீட்டுச் சாப்பாடு சிறையில் கிடைக்கவில்லை குமுறிய ஞானசார தேரர்.
சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும் வைத்தியர்கள் பரிந்துரைத்தும், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாடியுள்ளார்.
இதற்கு முன்னர் 4 சந்தர்ப்பங்களில் சிறை தண்டனை அனுபவித்த போது நான் இவ்வாறு நடத்தப்படவில்லை. உண்மையில் இது அரசாங்கத்தின் முடிவா அல்லது சிறை அதிகாரிகளின் தன்னிச்சையான செயலா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று சமூக வலைத்தளங்களை அதிகமாக உபயோகப்படுத்துவோர் செல்வாக்கு மிக்கவர்களாகவுள்ளனர். அவ்வாறானவர்களது அழுத்தங்கள் காரணமாகவே எனக்கான மருத்துவ தேவைகள் கூட புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுப்பயணங்களும் அரசியல் இலஞ்சமாக இருந்தன  !

வெளிநாட்டுப்பயணங்களும் அரசியல் இலஞ்சமாக இருந்தன !

 

ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்ட தொகையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் நேற்று வெளியிட்டார்.

இதன்படி, 2010 -2014 வரையான காலப்பகுதியில் மஹிந்த ராஜபச்ச 3,572 மில்லியன் ரூபாவும், 2015-2019 வரையான காலப்பகுதியில் மைத்திரிபால சிறிசேன 384 மில்லியன் ரூபாவும், 2020-2022 வரையான காலப்பகுதியில் கோட்டபய ராஜபக்ச 126 மில்லியன் ரூபாவும், 2023-2024 வரையான காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க 533 மில்லியன் ரூபாவும் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

2024.09.21 முதல் 2025 பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 1.8 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது எனவும் மக்களுக்கு சுமையாக இருக்காமல், செலவுகளை இயலுமான வகையில் குறைத்துக் கொண்டுள்ளோம் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ள 33 பயணங்களில் எதிர்க்கட்சியினர் உட்பட மொத்தமாக 154 பேர் பங்குப்பற்றியுள்ளனர் எனத் தெரிவித்துள்ள பிரதமர் இதுவும் அரசியல் இலஞ்சம் எனவும் சிறப்புரிமைகள் முறைகேடான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அனுரவில் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் யதார்த்தத்துக்கு புறம்பானவை என பாராளுமன்ற உறுப்பினர் டிலித் ஜெயவீர தெரிவித்துள்ளார். வெறும் 1.8 மில்லியன் ரூபாயில் மூன்று நாடுகளுக்கு எவ்வாறு ஜனாதிபதியால் பயணம் செய்ய முடிந்தது என்றும் மிதிபலகையில் நின்று பயணம் செய்தாலும் இவ்வளவு குறைந்த தொகையுடன் மூன்று நாடுகளுக்கு அவர் எப்படி பயணம் செய்தார் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.

எம்பி அர்ச்சுனா கைவிடப்பட்ட ஹபரண சைவக் கோயிலுக்கு தீபம் காட்ட அழைக்கிறார் 

எம்பி அர்ச்சுனா கைவிடப்பட்ட ஹபரண சைவக் கோயிலுக்கு தீபம் காட்ட அழைக்கிறார்

 

அநுராதபுர மாவட்டத்தில் திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள ஹபரண பகுதியில் உள்ள பழமையான கோயில் ஒன்றினுடைய முன்பகுதி உடைக்கப்பட்டு பேரூந்து தரிப்பிடம் கட்டப்பட்டுள்ளதாக பத்திரிகைகளிலும் – சமூக வலைத்தளங்களிலும் செய்தி வெளியாகியிருந்தது. இத்தகவல் பலவாறு திரிபுபடுத்தப்பட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது. தையிட்டி விகாரை உடைப்பை நியாயப்படுத்த ஹபரண பேரூந்து தரிப்பிடம் கையாளப்பட்டது. சைவ கோயிலை உடைத்து பேரூந்து நிலையம் கட்டியது தவறு எனவும் இது இனவாத நாடு எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினர் பெரும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பரப்பப்பட்ட படங்களில் சைவக் கோயில் இடிபாடுகளுடன் கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது. கிட்டத்தட்ட இந்தக் கோயில் பல ஆண்டுகளுக்கு முன்பே வழிபாடுகள் இடம்பெறாமல் கைவிடப்பட்டுள்ளதாகவே கருதமுடியும். அக்கோயில் பிள்ளையார் கோயில் எனவும் அம்மன் கோயில் எனவும் மாறுபட்ட கருத்துக்களே வெளிவருகின்றன. கோயிலின் தல வரலாறே தெரியாத நிலமை தான் காணப்படுகின்றது. அவ்வாறு அழிவடைந்துள்ள ஒரு கோயிலை இடித்து ஏன் பேரூந்து நிலையம் கட்ட வேண்டும். பகுத்தறிவுள்ளவர்கள் கேட்க வேண்டிய கேள்வி ஹபறணையில் உள்ள சைவக் கோயில் ஏன் அழிவடைந்துள்ளது. ஏன் கைவிடப்பட்டுள்ளது. இந்துசமய காவலர்கள் என கூச்சலிடும் சிவசேனா அமைப்பினர் கண்களில் இது ஏன் படவில்லை. அடிப்படைவாத இந்து அமைப்பான சிவசேனா தையிட்டியில் அரசியல் செய்து சமூகங்களில் பிளவுகளை ஏற்படுத்த விரும்புகின்றது.

சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரையை உடைப்பது இனவாத பிரிவினைகளை ஊக்குவிக்கும் என பா.உ இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டிருந்ததையும் மேற்கோள்காட்டி ஹபரண கோயில் இடிக்கப்பட்டது தொடர்பாக உங்களுடைய நிலைப்பாடு என்ன என அர்ச்சுனாவின் போட்டி அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இப்படியிருக்க பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்றுமுன்தினம் ஹபரணையில் உள்ள இடிக்கப்பட்டதாக கூறப்பட்ட கோயிலுக்கு நேரடியாக கள விஜயம் செய்து தகவல்களை தனது யூடியூப் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, அப்பகுதியில் தமிழர்கள் யாருமே இல்லாமையால் கோயில் உடைக்கப்பட்டுள்ளது. எனினும் கோயில் உடைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பில் கட்டாயம் பாராளுமன்றத்தில் பேசுவேன். சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களையும் துணைக்கு அழைத்து கோயிலை இடித்து அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை அகற்றி மீளவும் அப்பகுதியில் கோயிலை அமைக்க என்னாலான நடவடிக்கைகளை எடுப்பேன் என தெரிவித்துள்ளார். வழிபாடு செய்ய யாரும் இல்லாவிடில் கோயிலை மீளக் கட்டி என்ன பலன். அதற்கு பதிலாக அந்த இடத்தில் ஒரு பாடசாலையை அல்லது ஒரு சனசமூக நிலையத்தை கட்டலாம். ஆளில்லா தேநீர்க்கடையில் தேநீர் ஆற்றி என்ன பலன்? . ஹபறணையில் மட்டுமல்ல வடக்கு கிழக்கிலும் பல கோயில்கள் கைவிடப்பட்டுள்ளன.

அர்ச்சுனா கோயில் கட்ட முதல் ஹபறணயில் இந்துமக்கள் வாழ்கிறார்களா என அறிய வேண்டும். யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தமிழர்களால் கோடிகளை கொட்டி கட்டப்படும் புனருத்தாரணம் செய்யப்படும் கோயில்களில் மாடுகள் தான் படுத்துறங்குகின்றன. எம்பி அர்ச்சுனாவுக்கு இன்னுமொரு தார்மீக கடமை உண்டு. வடக்கு கிழக்கில் உள்ள சகல இந்து ஆலயங்களுக்கும் கள விஜயம் செய்து கிளீன் செய்ய வேண்டும். முக்கியமாக 25 கோடி செலவில் புங்குடுதீவில் மாடுகள் படுத்துறங்க கட்டிய இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு விஜயம் செய்ய வேண்டும் . உணர்ச்சி அரசியல் நீடித்த சமாதானத்தை கொண்டு வராது. புத்திசாலித்தனமான அரசியலே தமிழ்மக்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்கும். ஹபறண கோயில் வருடக்கணக்காக யார் கவனத்தையும் ஈர்க்கவில்லை. இப்போது அந்த இடத்தில் மக்கள் நிழலில் நின்று பயணம் செய்வது கண்ணை குத்துகிறது.

அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம் ஆகியோரும் உதிரிகள், தமிழரசுக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் மட்டுமே வடக்கு கிழக்கில் இரு கட்சிகள் !

அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம் ஆகியோரும் உதிரிகள், தமிழரசுக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் மட்டுமே வடக்கு கிழக்கில் இரு கட்சிகள் !

 

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு கட்சிகளே உள்ளது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் மட்டுமே தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் ஆய்வாளர் வி சிவலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பா உ இராமநாதன் அர்ச்சுனா போல் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும், செல்வம் அடைக்கலநாதனும் கூட உதிரிகள் தான். இவர்களை கட்சி என்ற அடையாளத்துக்குள் கொண்டுவர முடியாது. இதே போல் ஒன்பது கட்சிக் கூட்டணியில் உள்ளவர்கள் கூட கட்சி என்று வரையறைப்படுத்த முடியாது எனத் தெரிவித்தார். ஆய்வாளர் வி சிவலிங்கம்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியை மட்டுமே தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சியாகக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார். அதற்கு விளக்கமளித்த வி சிவலிங்கம் தமிழரசுக் கட்சி மட்டுமே வடக்கு கிழக்கின் அனைத்து பிரதேசங்களிலும் கட்சிக் கட்டமைப்பை வைத்துள்ளது என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்களுக்கு வாக்கு வங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். அந்த அடிப்படையில் தமிழரசுக் கட்சி மட்டுமே வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தேசிய நலன்களை முன்னெடுப்பதாகவும் ஆய்வாளர் வி சிவலிங்கம் சுட்டிக்காட்டினார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஏனைய உதிரிகளும் கட்சிகளுமல்ல அவர்கள் யாழ் மக்களின் நலன்களைக் கூட முன்னெடுக்கவில்லை, அவர்கள் சில தொகுதிகளில் மட்டும் செல்வாக்கைக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிர், மலையகத் தமிழர்களுக்கு எதிர், ஓடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிர் என்று இருக்கின்ற போது, இவர்கள் எப்படி தமிழ் தேசியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பும் ஆய்வாளர் வி சிவலிங்கம், இவர்கள் குறும் தேசியவாத வலதுசாரிப் பிற்போக்குசக்திகள் என்றும் இவர்கள் பற்றி தமிழ் மக்கள் விழப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.