ஸ்பெயின், போர்த்துகல், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மின்சார வெட்டு !
திங்கள் கிழமை மதியம் ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் பிரான்ஸின் சில பகுதிகளில் திடிரேன எதிர்பாராத மின்சார வெட்டு எட்டு மணிநேரம் நிகழ்ந்தது. இதனால் பல மில்லியன் பவுண்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்ரநெட், தொலைத் தொடர்பு, போக்குவரத்து, நிதிப்பரிமாற்றம், மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் எனப் பல்வேறு பாதிப்புகளையும் இது ஏற்படுத்தி உள்ளது.
உலகிலேயே ஸ்பெயின் தான் அதிகமாக மீள்பயன்பாடுள்ள வளங்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றது. 43 சதவீதமான சக்தி இவ்வாறே உற்பத்தி செய்யப்படுகின்றது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் போர்த்துக்கல்லுக்கும் பிரான்ஸ்க்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அதனாலேயே ஸ்பெயினில் உருவான பிரச்சினை போர்த்துக்கல்லுக்கும் பிரான்ஸ்க்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதுவரை ஏன் இந்த மின்சார வெட்டு வழமையான சாதாரணமான ஒரு நாளில் ஏற்பட்டது என்ற குழப்பத்தில் ரெட் எலக்ரிக்கா என்ற மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் ஸ்பெயின் நிறுவனம் மண்டையைப் போட்டு உடைக்கின்றது. இதற்கிடையே இவ்வாறான ஒரு சம்பவம் ஜேர்மனியில் நிகழ்தாலும் என்பதைக் கவனத்தில் கொண்டு மூன்றுநாட்களுக்குத் தேவையான தண்ணீர், மெழுகுதிரி போன்றவற்றை கொள்வனவு செய்து வைத்திருக்குமாறு ஜேர்மனியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினில் இந்த மின்சார வெட்டுக்கான சரியான காரணம் இதுவரை அறியப்படாததால் அது சைபர் தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் தொடர்கின்றது. இவ்வாறான சைபர் தாக்குதல்கள் அமெரிக்காவில் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது. அதனால் இது தொடர்பில் மேற்குலகம் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்படுகின்றது.