25

25

கனடா விமான நிலைய துப்பாக்கிச்சூடு தொடர்பில் அல்பிரட் துரையப்பா பேரன் நிஸான் துரையப்பா விளக்கம்

கனடா விமான நிலைய துப்பாக்கிச்சூடு தொடர்பில் அல்பிரட் துரையப்பா பேரன் நிஸான் துரையப்பா விளக்கம்

கனடாவில் பியர்சன் விமான நிலையத்தில் பொலிஸார் சுட்டதில் 30 வயதுடைய நபர் கொல்லப்பட்டுள்ளார். விமானநிலைய புறப்பாடு பகுதி ஒன்றில் இரண்டு தொடக்கம் மூன்று நபர்களை உள்ளடக்கிய சிறு குழுவினருக்கிடையேயான முரண்பாட்டின் போது துப்பாக்கியை பயன்படுத்த முற்பட்ட வேளை அதனை தடுக்க பொலிஸார் சுட்டதாக கூறப்படுகிறது.

விமானநிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதாகவும் அதன் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் பீல் பிராந்திய தலைமை பொலிஸ் அதிகாரி நிசான் துரையப்பா தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவின் பேரனாவார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையத்தினை அண்டிய சில வீதிகள் மூடப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

புனித பாப்பரசரின் இறுதி ஆராதனை தினத்தை தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பிரகடனம் !

புனித பாப்பரசரின் இறுதி ஆராதனை தினத்தை தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பிரகடனம் !

இறந்த புனித பாப்பரசரின் இறுதி ஆராதனை முன்னிட்டு 2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை ஏப்ரல் 26 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அப்பிள் மற்றும் மெட்டா நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் !

அப்பிள் மற்றும் மெட்டா நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் !

அப்பிள் (Apple) மற்றும் பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு (Meta) ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்துள்ளது. அப்பிள் நிறுவனத்திற்கு 570 மில்லியன் டொலர் அபராதமும், மெட்டா நிறுவனத்திற்கு 228 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. சுமார் ஒரு வருடம் நீடித்த விசாரணைக்குப் பிறகு இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலையின் மதிய உணவை விஸ்தரிக்க அரசாங்கம் தீர்மானம் !

பாடசாலையின் மதிய உணவை விஸ்தரிக்க அரசாங்கம் தீர்மானம் !

பாடசாலை மாணவர்களுக்குப் போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு, அதனைச் செயல்படுத்துவதற்குக் கொள்கை ரீதியான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நேற்று தெரிவித்துள்ளார்.

குறைந்த போசாக்கு மட்டத்தினை கொண்ட மாணவர்களையுடைய மாவட்டங்களில் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்காக செயற்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்துடன், இணைந்ததாகப் பாடசாலை மாணவர்களிடையே இரும்புச்சத்து குறைபாட்டைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

இதற்கமைய மதிய உணவு வழங்கும் திட்டத்திற்காக அரசாங்கம் இந்த வருடத்தில் 32 பில்லியின் ரூபாயினை ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித தந்து தாதுவை மறு அறிவித்தல் வரை பார்வையிடுவதை தவிர்க்குமாறு போலீசார் கோரிக்கை!

புனித தந்து தாதுவை மறு அறிவித்தல் வரை பார்வையிடுவதை தவிர்க்குமாறு போலீசார் கோரிக்கை!

மறு அறிவித்தல் வரை புனித தந்ததாது கண்காட்சியைப் பார்வையிடுவதற்குக் கண்டிக்கு வருவதனை தவிர்க்குமாறு காவல்துறையினர் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

அதேநேரம், குறித்த கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக வரிசையில் காத்திருந்த பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார். அவருக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமையை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். அத்துடன் மேலும் சிலர் வெவ்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் வழிபாடுகளுக்காகப் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளமையினால் மறு அறிவித்தல் வரை புனித தந்ததாது கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு வருவதனை தவிர்க்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர். ஏற்கனவே, அதிகளவான மக்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் காவல்துறையினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பாடசாலையில் இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்த பிரதமர் !

பாடசாலையில் இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்த பிரதமர் !

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், தயவுசெய்து அமைச்சுக்கு அறிவியுங்கள் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். தொடங்கொட பகுதியில் ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, “ஒருமித்த கருத்தின் அடிப்படையில் சமூகத்தை மேம்படுத்த நாம் பாடுபடுகையில், தவறுகளைச் சரிசெய்து முறைமையை மாற்ற மக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தலையிடுகிறார்கள். இதுதான் நாம் எதிர்பார்த்த மாற்றம். இதுதான் ஜனநாயகம் என்பது. இப்போது, முன்னர் போன்று போலீசில் முறைப்பாடு அளிக்கச் சென்று திட்டுதல்களை நான் கேட்க வேண்டியதில்லை. கவனமாகக் கேட்டு, முறைப்பாடுகள் சரியாக பதிவுசெய்யப்படுகின்றன. சுமுகமாக உரையாடுகின்றார்கள், இதுதான் மக்கள் கேட்கும் மாற்றம் எனத் தெரிவித்தார் பிரதமர் ஹருணி.

தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமாக நடமாடினால் சோதனை செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு!

தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமாக நடமாடினால் சோதனை செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு!

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என அறிவித்து பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்த சந்தேகநபர்கள் தலை மற்றும் முகங்களை மறைக்கும் வகையில் தலைக்கவசங்களை அணிந்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனவே, மோட்டார் சைக்கிளில் பயணிக்காத போது பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்வது கண்டறியப்பட்டால், அந்த நபரையும் அவரது உடமைகளையும் ஆய்வு செய்யுமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவராம் யார் ? இரட்டை உளவாளியா ? நம்பிக்கைத் துரோகியா ? மாமனிதனா ?

சிவராம் யார் ? இரட்டை உளவாளியா ? நம்பிக்கைத் துரோகியா ? மாமனிதனா ?

ஏப்ரல் 28, சிவராம் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஆனால் சிவராம் யார் என்ற கேள்விக்கான விடை மிகக் குழப்பகரமானதாகவே உள்ளது. புளொட் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமே சிவராமைப் படுகொலை செய்ததாக பலமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. சிவராமின் கொலையாளிகள் முன்னாள் பா உ தர்மலிங்கம் சித்தார்த்தனின் வாகனத்தில் சென்று தான் சிவராமைக் கடத்தி கொலை செய்ததாக செய்திகள் கசகின்றது. இது தொடர்பில் முன்னாள் பா உ சித்தார்த்தன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவராம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினராக இருந்தவர். அதன் பின் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தவர். கருணா பிரிவின் போது கிழக்குத் தேசியத்தை கருணாவுக்கு ஊட்டியதன் பின்னணயில் சிவராம் இருந்துள்ளார். அதன் பின் வன்னிக்கு சிவராமை அழைத்த புலிகள் கருணாவின் பிரிவுக்கு எதிராக கட்டுரையொன்றை வெளியிட மிரட்டியதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் கருணாவுக்கு எதிரான கட்டுரையை வெளியிட்டதாகவும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

ஆனால் சிவராம், இரட்டை உளவாளியாக புலிகளுக்கும் கருணாவுக்கும் இடையே இருந்ததாக புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முல்லைமதி தேசம்நெற்க்குத் தெரிவித்தார். சிவராம் தமிழ் தேசியத்துக்காக புலிகளுக்காகச் செயற்பட்ட மாமனிதர் என்றார். அதற்காகவே அந்தப் பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டதாக முல்லைமதி ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

நோர்வேயைச் சேர்ந்த எழுத்தாளரும் சிவராமின் நண்பருமான என் சரவணன் தன்னுடைய முகநூல் பதிவில் வருமாறு குறிப்பிடுகின்றார்: “சிவராமிடம் இருந்து தள்ளியே நிற்கும்படியும், அதிக நெருக்கமான நட்பைப் பேண வேண்டாம் என்றும் எனக்கு தமிழீழ மக்கள் கட்சியினால் கட்டளை இடப்பட்டிருந்தது. அந்தளவு நம்பகம் இல்லாத ஒருவராக அவர் இருந்தார். கூடப் பழகிய எம் சக நண்பர்கள் பலரும் அதை அறிவார்கள். எனக்கே சிவராமுடனான அப்படிப்பட்ட தனிப்பட்ட அனுபவங்கள் உள்ளன.

தனிப்பட்ட சிவராமின் மீது ஏராளமான வெறுப்பும், விமர்சனங்களும் உள்ளன. ஆனால் அதே காரணத்துக்காக சிவராமின் படைப்புகளை கழித்திவிடவோ, நிராகரித்துவிடவோ, புறக்கணித்துவிடவோ முடியாது. சிவராமின் எழுத்துக்களில் உள்ள ஆழமும், கனதியும் அவ்வளவுக்கு நிலைத்து நிற்பவை.
சிவராமை களையெடுத்தவர்கள் வெறுமனே சிவராமின் எழுத்துக்காக மட்டும் அதை செய்யவில்லை. சிவராமின் அரசியல், சிவராமின் நம்பிக்கைத் துரோகம் என்பவற்றையும் கூறி நியாயப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள்.

மூன்று தசாப்த யுத்த காலத்தில் கொல்லப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட அத்தனை ஊடகவியலாளர்களின் சாவுக்கும் நீதி கிடைத்தாக வேண்டும்” என்று சொல்வி தன்னுடைய நண்பன் தராக்கி எனப் பின்னாளில் அறியப்பட்ட சிவராம் பற்றிய குறிப்பை பதிவு செய்துள்ளார் என் சரவணன்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி முக்கிய அரசியல் பிரமுகர்!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி முக்கிய அரசியல் பிரமுகர்!

2019 ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றவே ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்தப் பின்னணியில் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி ஒரு முக்கிய அரசியல் பிரமுகர் என என்பிபி வட்டாரங்கள் தகவல்களை கசியவிட்டுள்ளன.

குறிப்பிட்ட அரசியல் பிரமுகர் கைதாகும் போது தென்னிலங்கையில் திட்டமிட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்களை சம்பந்தப்பட்ட தரப்புகள் தூண்டினால் அதனை தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுள்ளதாக கூறப்படுகிறது. இராணுவம் மற்றும் பொலிஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

யார் அந்த முக்கிய பிரமுகரகாக இருக்க முடியும்? என்ற வாதங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டன. கைதாகப் போகும் நபர் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற ஊகங்களும் வெளியிடப்படுகின்றன. இடம்பெறப் போகிற கைது தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே தினத்தையொட்டி மேதினச் செய்தியாக இவ்விடயம் வெளிவரலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

“லிற்றில் ஜப்னா” படத்திற்கு எதிர்ப்பு !

“லிற்றில் ஜப்னா” படத்திற்கு எதிர்ப்பு !

லிற்றில் ஜப்னா” என்ற பெயரில், மீன் ஸ் ரீற்ஸ் (Mean Streets) தயாரிப்பு மற்றும் இளம் இயக்குநர் லோறன்ஸ் வாலின் என்பவரின் நெறிப்படுத்துதலில் உருவான இத்திரைப்படம், ஏப்ரல் மாத இறுதியில் பிரான்ஸ் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

பிரான்சில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படம் புலம் பெயர் ஈழத்தமிழர் வாழ்க்கையையும், வரலாற்றையும் புனைவுகள் மற்றும் பிழைகள் நிறைந்த முறையில் சித்தரிக்கிறது என்று கூறி ஈழத் தமிழ் திரைப்படச் சங்கம் இப்படத்தை வெளியிடக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்த திரைப்படம் நம் இளம் சமூகம் மற்றும் பிற இன மக்களிடம் தவறான எண்ணங்களை விதைக்கும் அபாயம் உள்ளதாகவும், திரைப்பட சங்கம் தெரிவித்துள்ளது. இப்படத்தை முழுமையாக தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைளையும் எடுக்க உத்தேசித்திருப்பதாகவும் இச்சங்கம் அறிவித்துள்ளது. இதற்காக கையெழுத்துப் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் வகையில், இப்படம் குறித்து பிரான்சில் உள்ள அனைத்து தமிழ்க் கட்டமைப்புகளையும், சமூக ஆர்வலர்களையும் ஒன்றிணைத்து, கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது. லிற்றில் ஜப்னா திரைப்படத்திற்கு மட்டும்மல்ல வேறு சில ஈழத்தமிழர்கள் வரலாற்றை மையமாக வைத்து தயாரித்த படங்களை வெளியிடக் கூடாது என்று அவ்வப்போது போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

இது அப்பட்டமான கருத்துச் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறையாகும். பிரான்ஸ் போன்று படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் சுதந்திரமான நாட்டிலிருந்து கொண்டு லிற்றில் ஜப்னா படத்தை தடை செய்யக் கோருவது சர்வதிகாரப் போக்கு என பிரான்ஸ் வாழ் படைப்பாளிகள் கண்டிக்கின்றனர். படைப்பாளிகளின் சுதந்திரத்தில் தலையிடுவது ஜனநாயக விரோதமான செயலாகும். மேலும் தமிழ் சமூகத்தில் உள்ள பல்வேறு முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் கருத்துக்கள், படைப்புக்கள் வருகின்ற போது அதனைத் தடைசெய்யக் கோரும் முட்டாள்தனமான கலாச்சாரம் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்தே ஆரம்பிப்பது வழமை. சாதிய ஒடுக்குமுறையை வெளிப்படுத்திய ஆவணப்படத்தை வெளியிட யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி ரகுராம் தடைவிதித்த்தார். அவ்வாறே சுயாதீன கருத்துக்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகின்றது.

பிரான்ஸ் நாட்டின் அறிஞரான வோல்ரயர்: “உன்னுடைய கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், உன்னுடைய கருத்தை வெளியிடுவதற்கு உனக்குள்ள உரிமைக்காக உயிரையும் கொடுப்பேன் எனத் தெரிவித்தார். வோல்ரயர் வாழ்த்த மண்ணில் தங்களுடைய மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம் மீறப்படுவதாகச் சொல்லி அரசியல் தஞ்சம் கோரியவர்கள் ஈழத் தமிழ் திரைப்படச் சங்கத்தினர். இபோது பிரான்ஸ் மண்ணில் வாழ்ந்துகொண்டு ஒரு படைப்புக்கு தடைவேண்டி கையெழுத்துப் போராட்டம் நடத்துகின்றனர்.

தங்களை கருத்துச் சுதந்திரர்களாகக் காட்டி கொண்ட சிலர் தேசம்நெற் தளத்தை மூடச்சொல்லி 17 ஆண்டுகளுக்கு முன் கையெழுத்துப் போராட்டம் ஒன்றை மேற்குநாடுகளில் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது வேறு சிலர் லிற்றில் ஜப்னா வுக்கு எதிராகக் கெம்பியுள்ளனர்.