“லிற்றில் ஜப்னா” படத்திற்கு எதிர்ப்பு !
லிற்றில் ஜப்னா” என்ற பெயரில், மீன் ஸ் ரீற்ஸ் (Mean Streets) தயாரிப்பு மற்றும் இளம் இயக்குநர் லோறன்ஸ் வாலின் என்பவரின் நெறிப்படுத்துதலில் உருவான இத்திரைப்படம், ஏப்ரல் மாத இறுதியில் பிரான்ஸ் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
பிரான்சில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படம் புலம் பெயர் ஈழத்தமிழர் வாழ்க்கையையும், வரலாற்றையும் புனைவுகள் மற்றும் பிழைகள் நிறைந்த முறையில் சித்தரிக்கிறது என்று கூறி ஈழத் தமிழ் திரைப்படச் சங்கம் இப்படத்தை வெளியிடக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இந்த திரைப்படம் நம் இளம் சமூகம் மற்றும் பிற இன மக்களிடம் தவறான எண்ணங்களை விதைக்கும் அபாயம் உள்ளதாகவும், திரைப்பட சங்கம் தெரிவித்துள்ளது. இப்படத்தை முழுமையாக தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைளையும் எடுக்க உத்தேசித்திருப்பதாகவும் இச்சங்கம் அறிவித்துள்ளது. இதற்காக கையெழுத்துப் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் வகையில், இப்படம் குறித்து பிரான்சில் உள்ள அனைத்து தமிழ்க் கட்டமைப்புகளையும், சமூக ஆர்வலர்களையும் ஒன்றிணைத்து, கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது. லிற்றில் ஜப்னா திரைப்படத்திற்கு மட்டும்மல்ல வேறு சில ஈழத்தமிழர்கள் வரலாற்றை மையமாக வைத்து தயாரித்த படங்களை வெளியிடக் கூடாது என்று அவ்வப்போது போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
இது அப்பட்டமான கருத்துச் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறையாகும். பிரான்ஸ் போன்று படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் சுதந்திரமான நாட்டிலிருந்து கொண்டு லிற்றில் ஜப்னா படத்தை தடை செய்யக் கோருவது சர்வதிகாரப் போக்கு என பிரான்ஸ் வாழ் படைப்பாளிகள் கண்டிக்கின்றனர். படைப்பாளிகளின் சுதந்திரத்தில் தலையிடுவது ஜனநாயக விரோதமான செயலாகும். மேலும் தமிழ் சமூகத்தில் உள்ள பல்வேறு முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் கருத்துக்கள், படைப்புக்கள் வருகின்ற போது அதனைத் தடைசெய்யக் கோரும் முட்டாள்தனமான கலாச்சாரம் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்தே ஆரம்பிப்பது வழமை. சாதிய ஒடுக்குமுறையை வெளிப்படுத்திய ஆவணப்படத்தை வெளியிட யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி ரகுராம் தடைவிதித்த்தார். அவ்வாறே சுயாதீன கருத்துக்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகின்றது.
பிரான்ஸ் நாட்டின் அறிஞரான வோல்ரயர்: “உன்னுடைய கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், உன்னுடைய கருத்தை வெளியிடுவதற்கு உனக்குள்ள உரிமைக்காக உயிரையும் கொடுப்பேன் எனத் தெரிவித்தார். வோல்ரயர் வாழ்த்த மண்ணில் தங்களுடைய மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம் மீறப்படுவதாகச் சொல்லி அரசியல் தஞ்சம் கோரியவர்கள் ஈழத் தமிழ் திரைப்படச் சங்கத்தினர். இபோது பிரான்ஸ் மண்ணில் வாழ்ந்துகொண்டு ஒரு படைப்புக்கு தடைவேண்டி கையெழுத்துப் போராட்டம் நடத்துகின்றனர்.
தங்களை கருத்துச் சுதந்திரர்களாகக் காட்டி கொண்ட சிலர் தேசம்நெற் தளத்தை மூடச்சொல்லி 17 ஆண்டுகளுக்கு முன் கையெழுத்துப் போராட்டம் ஒன்றை மேற்குநாடுகளில் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது வேறு சிலர் லிற்றில் ஜப்னா வுக்கு எதிராகக் கெம்பியுள்ளனர்.