செல்வராஜா என்

செல்வராஜா என்

புலம்பெயர்ந்தோரிடையே கலாநிதிகளும் கல்லாநிதிகளும்: என்.செல்வராஜா

._._._._._.

தமிழர்களின் டொக்டர் மாயையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில கல்வித்துறை வியாபாரிகளும் காசுக்கு இரண்டு டொக்டர்ப் பட்டம் என்று விற்க ஆரம்பிக்க எம்மவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு அதை வாங்கித் தமது பெயருக்கு முன்னால் செருகிக்கொண்டு “நானும் ஒரு டொக்டர் அல்லது கலாநிதி பார்த்தியளே” என்று வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.
._._._._._.

காலம் காலமாகத் ஈழத்தின் தமிழர் சமூகம் கல்வியை முன்நிலைப்படுத்தி வாழும் ஒரு சமூகமாகத் தம்மை இனம்காட்டி வந்துள்ளது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின்கீழ் தொழில் வாய்ப்பைப்பெற்று அரச ஊழியனாகி “கோர்ணமெந்து” உத்தியோகத்தனாகிய தமிழன் சமூகத்தில் முன்நிலைப்படுத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் அரச ஊழியம் படிப்படியாக அடிபட்டுப் போய்விட்டாலும் தமது பிள்ளைகளை டொக்டர், இஞ்சினியர், லோயர், எக்கவுண்டன்ட் என்ற நான்கு கட்டமைப்புகளுக்குள் ஏதாவதொன்றினுள் புகுத்திவிட்டு தான் ஒரு படித்த குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற பெருமையைப் பெற்றுவிடுவதில் தமிழன் உடல் பொருள் ஆவியையும் கொடுக்கத் தயாராகியிருந்தான். தப்பித்தவறி ஒரு குடும்பத்தில் இந்த நாலுக்குள் ஒன்று இல்லாது போனால் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் முக்கித் தக்கி தனது குடும்பத்தில் ஏதாவதொரு தலைமுறையில் இருந்த ஒரு டொக்டரையோ இஞ்சினியரையோ தேடிப்பிடித்து தனது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொண்டான்.

“அட காசுதான் இருக்கு- படிப்பில்லையே” என்ற கவலை கொண்ட இன்னொரு வகைக் காசுக்காரத் தமிழன், சீதனம் என்ற பெயரில் காசைக்கொட்டி இந்த நால்வகை மாப்பிள்ளைகளையும் தன் குடும்பத்துக்கள் விலைக்குவாங்கிச் சேர்த்துக்கொண்டு தன் சமூகத் தரத்தை உயர்த்திக்கொண்டான்.

இந்தக் கூத்துகள் தாயகத்தில் தான் நடந்து முடிந்ததென்றால் இப்போது புகலிடம் வரையும் தொடர்வது தான் வேதனையாக இருக்கின்றது. திறந்த கல்விவசதி, எவருக்கும் பல்கலைக்கழக வாய்ப்பு என்ற நிலை புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ளது. விதம்விதமான புதிய கல்வித்துறைகள் எம் இளஞ்சந்ததியினரின் முன்னே விரிகின்றன. இங்கும் இந்த நால்வகைத் துறைகளையும் மீறித் தன் பிள்ளைகளை சுயவிருப்பத்துடன் வேறு நல்ல துறைகளை நாடவிடாமல் சிறுபிராயம் முதலே மூளைச்சலவை செய்து விடுகிறார்கள் நம்மவர்கள். அதனால் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தாலும், மனமொத்துத் தன் கல்வியைத் தொடரமுடியாமல் பல தமிழ் மாணவர்கள் தம் கல்வியைத் துறப்பதும், தாமதமாகத் தமது துறைகளை மாற்றிக்கொள்வதும் நிகழ்கின்றன.

அடையாளச் சிக்கல்

கல்வியே எமது புலம்பெயர் சமூகத்தின் அடையாளச் சிக்கலாகிவிட்ட நிலை இன்ற காணப்படுகின்றது. அரச பாடசாலைகளிலிருந்து தனியார் கல்வியை நாடுவதும், டியுஷன் படிப்புக்கு பிள்ளைகளைத் தூண்டிவிடுவதும் இந்த நால்வகைத்துறைகளில் ஒன்றுக்குள் குறிப்பாக டொக்டர் இஞ்சினியர் படிப்புக்குத் தம் பிள்ளைகளைத் தயார்செய்வதற்காகத்தான் என்ற நிலை இன்று பரவலாகிவிட்டது.

டொக்டர் என்ற சொல் சமூக அந்தஸ்தில் மிக உயர் ஸ்தானத்தில் வைக்கப்பட்டிருப்பதான ஒரு மாயை காலம்காலமாகத் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. அதை புலம்பெயர்ந்த வந்தவர்களும் தமது பொதிகளுடன் இங்க கொண்டுவந்து சேர்த்துவிட்டார்கள். மற்றவரைப் பெயர்சொல்லிக் கூப்பிடலாம் ஆனால் டொக்டரான ஒருவரைமட்டும் டொக்டர் இன்னார் என்று விழித்தால் தான் கூப்பிட்டவருக்கும் செமிக்கும் – கூப்பிடப்பட்டவருக்கும் செமிக்கும். புகலிடத்தில் டொக்டர்கள் படும் பாட்டை இவர்கள் அறியாதவர்களா என்ன?

இங்குதான் வேறு ஒரு சிக்கல் ஏற்படுகின்றது. டொக்டர் என்ற பதம் மருத்துவத்துறைக்கு மாத்திரமல்லாது அறிவியல்துறையில் முனைவர் பட்டத்தையும் குறிக்கப் பயன்படுவதால் இவர் எந்த டொக்டர் என்று தலையைப்போட்டு உடைத்துக்கொள்ளவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுவிடுகின்றன.

தமிழர்களின் டொக்டர் மாயையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில கல்வித்துறை வியாபாரிகளும் காசுக்கு இரண்டு டொக்டர்ப் பட்டம் என்று விற்க ஆரம்பிக்க எம்மவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு அதை வாங்கித் தமது பெயருக்கு முன்னால் செருகிக்கொண்டு “நானும் ஒரு டொக்டர் அல்லது கலாநிதி பார்த்தியளே” என்று வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

கவிஞர்கள், ஓவியக்காரர்கள், நடன ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் என்று வந்த பிறகு ஐயர்மாருக்கும் கலாநிதிப் பட்டத்தில் ஆசை வந்தவிட்டது. ஐக்கிய அமெரிக்காவின் பாலைவன மாநிலமான அரிசோனாவில் பென்சன் மானிலத்தில் உலகப் பல்கலைக்கழகம் என்று ஒரு பல்கலைக்கழகம் இயங்குகின்றது. Dr. Howard John Zitko வினால் 1946இல் ஏதோ ஒரு புனிதமான நோக்கத்துக்காக தாபிக்கப்பட்டது. இன்று பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகிவிட்ட நிலை அதற்கு. இந்தியாவில் வாரனாசியிலும், மும்பாயிலும், நைஜீரியாவில் எனுகுவிலும் அதன் கிளைகள் இருப்பதாக அதன் இணையத்தளத்தில் காண முடிகின்றது.

காலக்கிரமத்தில் எம்மவர்களில் சிலர் மோப்பம் பிடித்து அந்தப் பல்கலைக்கழகத்தை அணுகி அவர்கள் வழங்கும் Cultural Doctorate பட்டத்தைப் பெற, இன்று சிவனே என்று இருந்தவரெல்லாம் திடீரென்று கலாநிதிப் பட்டத்தைச்சுமக்க ஆரம்பித்து விட்டார்கள். பின்புலம் எதுவுமில்லாமல், திடீரென்று கலாநிதிப் பட்டத்தைத் தபாலில் வாங்கிச் செருகிக்கொண்டால் சமூக அந்தஸ்து கூடிவிடுமா என்ன? கலாநிதிப் பட்டம் என்றால் பொன்னாடையா என்ன?

முத்திரை பதிப்பித்தல்

இப்படித்தான் கனடாவின் தபால் திணைக்களம் கள்ளம் கபடமில்லாமல் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தது. கனேடிய தபால் தலைகளில் உங்கள் புகைப்படத்தைப் பதிந்து நல்ல நாள் பெருநாள்களில் அதை நண்பர்கள் உறவினர்களுக்கு தபாலில் அனுப்பிக் கொஞ்சம் முஸ்பாத்தி பண்ணலாம் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. வீட்டில் புதிய குழந்தை பிறந்ததும், திருமணம் முடித்தால், பிறந்தநாள் கொண்டாடினால், என்று அந்தப் படத்தை கனேடிய உள்ளுர் முத்திரைகளில் பதித்து அதை உறவினர்களுக்கு அனுப்பும் தபால்களில் சட்டபூர்வமான தபால் தலைகளாகப் பயன்படுத்தக் கொஞ்சம் காசை வாங்கிக்கொண்டு அச்சடித்து வழங்கியது.

கொஞ்சக்காலம் எல்லாம் நன்றாக நடந்தது. எங்கள் தமிழரின் மூளை என்ன லேசுப்பட்டதா? அடித்தார்கள் முத்திரை குமார் பொன்னம்பலத்துக்கு. விழா நடத்தி அதை விற்று நிதியும் திரட்டிவிட்டார்கள். குமார் பொன்னம்பலத்துக்கு மட்டுமா முத்திரை அடித்தார்கள். பட்டியல் போடலாம் யார் யாருக்க அடித்தார்கள் என்று. கட்டுரை நீண்டுவிடும். இலங்கையில் வாழ்ந்து மறைந்த பலருக்கும் புகலிடத்தில் பிள்ளைகள் முத்திரை அடித்து இலங்கையில் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி, பண்டிதமணி கணபதிப்பிள்ளை ரேஞ்சுக்குத் தமது தந்தையரையும் கொண்டவர நினைத்தார்கள். நினைத்ததுடன் நிற்காமல் முத்திரையை இலங்கைக்கும் அனுப்பி அதை தமிழ் பேப்பரிலும் அல்லவா செய்தியாக்கி விட்டார்கள். எந்த மாதிரியாக விளம்பரம் இருக்கும் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா? “ ஈழத்தமிழரான அமரர் இன்னாரின் சேவைநலம் பாராட்டி கனேடிய அரசாங்கம் முத்திரை வெளியிட்டு கௌரவித்தது என்றல்லவா போட்டுவிட்டார்கள். அதை இலங்கைப் பத்திரிகைகளும் சந்தோஷமாக ஏன் எப்படி என்று கேள்விகெட்காமல் மீள்பிரசுரம் செய்துவிட்டன.

இதைப்பார்த்துவிட்டு தேசியத் தலைவருக்கு முத்திரை அடிக்கப்போன ஒருவர் பேராசையில் எக்கச்சக்கமான பிரதிகள் கேட்கப் போய் கனடா தபால் திணைக்களம் விழித்துக்கொண்டுவிட்டது.

பிரிட்டனிலும் ரோயல் மெயில் Smilers என்ற புதிய திட்டத்தை அமுலாக்கினார்கள். கனடாக்காரர் பெற்ற அனுபவத்தின் வெளிப்பாடாக இங்கிலாந்தில் முன்எச்சரிக்கையாக நடந்துகொண்டார்கள். முத்திரையில் இடம்பெறுவதற்காக அனுப்பும் புகைப்படம் வேறாகவும், மகாராணியின் இலச்சினை பொறித்த ஒரிஜினல் முத்திரை வேறாகவும் தெளிவாகப் பிரிக்கப்பட்டு அச்சிட முடிவுசெய்தார்கள். யாரும் முத்திரை அடிக்கலாம். 20 தபால்தலைகளுக்குக் குறையாமல் அடிக்கவேண்டும். நல்லவேளை லண்டனில் பெரிதாக இதுவரை யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. குடும்பப் படங்கள் எடுத்துப் பதிந்து மகிழ்வதுடன் சரி.

இந்த விடயங்களை எவரும் இதுவரை சீரியசாக எடுத்ததாகத் தெரியவில்லை. இப்பொழுதும் கௌரவப் பட்டங்கள் வழங்கப்படவும், முத்திரையில் படம் பொறிக்கப்படவும் நடவடிக்கைகள் மும்முரமாக நடந்தபடிதான் உள்ளது. தமிழகத்துக்கு மேடையேறப் போகும் இலக்கியப் பிரமுகர்கள் பெரும்பாலும் ஏதோவொரு பட்டத்துடன் தான் திரும்பி வந்துசேர்கிறார்கள். இந்தக்கட்டுரை எழுதும் இந்த நிமிடத்தில்கூட ஐரோப்பிய நாடொன்றில் அரிசோனா பட்டம் பெற்ற ஒரு இலக்கியவாதிக்கு எழுத்தாளர் சங்கமொன்றினால் விழா எடுக்கப்படுகின்ற செய்தி கிடைக்கிறது. லண்டனில் சிலர் கிடைத்த பட்டத்தை எப்படிப் பேப்பரில் போட்டு சனத்துக்குத் தெரியப்படுத்துவது என்று தலையைச் சொறிந்துகொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் விரைவில் அம்பலத்துக்கு வரத்தானே செய்யும்.

பட்டம் தான் ஒருவனை சமூகத்தில் உயர்ந்த மனிதனாக்குமா? பட்டம் பெற்றவர்கள் தான் சமூகத்தை நேர்வழிப்படுத்த அரகதையுள்ளவர்களா? பட்டம் பெறாதவர்கள் எல்லாம் என்ன செல்லாக்காசுகள் என்ற எண்ணமா? சுப்பிரமணிய பாரதியார் என்ன பட்டம் பெற்றுத்தான் பல்கலைக்கழகப் பாடப்பத்தகங்களில் இடம்பெற்றாரா? இன்றளவில் அமைதியாகச் சமூகப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு மக்கள் மனதில் நிலையான இடம்பெற்றிருப்பவர்களின் பட்டம் என்ன என்று பார்த்தா நாம் மதிக்கிறோம்.

அண்மையில் மலேசிய உள்ளுராட்சி அமைச்சு விடுத்த அறிவித்தல், பட்டங்களால் தடுமாறிநிற்கும் மலேசியர்களைச் சற்று சிந்திக்க வைத்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் முறையாகச் சேர்ந்து முழுமையான அரச அங்கீகாரம் பெற்ற கலாநிதிப்பட்டத்தைத் தவிர்ந்த பிற கௌரவப் பட்டங்களை தமது பெயரின் முன்னாலோ பின்னாலோ பொது நிகழ்ச்சிகளிலோ, அரசாங்க செயற்பாடுகளிலோ பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேடையில் மாலை, பொன்னாடைகள் போர்த்துவது கௌரவிப்பக்காக மட்டுமே. அமைப்புகளால் வழங்கப்படும் பட்டங்களும் அவ்வாறே. கூட்டம் முடிந்ததும் மாலையையும் பொன்னாடையையும் சுருட்டிப் பக்குவப்படுத்துவோமா அல்லது அதைப் போர்த்தபடியே ஜாம் ஜாமென்று ஊரெல்லாம் நடந்து திரிவோமா?

தயவுசெய்து காசுக்கு வாங்கும் பட்டங்களால் சமூகத்தில் மற்றொரு பிரிவினை உருவாக்காதீர்கள். நீங்கள் செய்யும் பணி மக்கள் மனதில் நீங்கள் இல்லாத போதும் உறைக்க வேண்டும். நீங்கள் விட்டுச்செல்லும் வெறுமை, மக்கள் மனதில் ஆழப்பதிய வேண்டும். அது தான் உண்மையான கௌரவம். அதைவிடுத்து போலித்தனமான கடின உழைப்போ, ஆய்வுத்திறனோ அற்றதும் பணத்தை அடிப்படையாகக் கொண்டதுமான இந்தப் பட்டம் பதவிகள் எல்லாம் சமூகத்தின் நோய்க்கிருமிகள். தயவுசெய்து கிட்ட நெருங்கவிடாதீர்கள்.

நன்றி:

நூல்தேட்டம் 7777
தேடலே வாழ்க்கையாய்: ஒரு ஈழத்து நூலகரின் மனப்பதிவுகள். என்.செல்வராஜா. டென்மார்க்: வி.ஜீவகுமாரன், விஸ்வசேது இலக்கியப் பாலம், Hojvangsparken 7, 4300 Holbaek, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).
88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

நூலகவியலாளர் என்.செல்வராஜா எழுதி அவ்வப்போது ஊடகங்களில் பிரசுரமான 17 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் நந்தி, கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன், எஸ்.எம்.கோபாலரத்தினம், கிருஷ்ணா வைகுந்தவாசன், கோபன் மகாதேவா, நயீமா சித்தீக், ச.வே.பஞ்சாட்சரம், அரங்க முருகையன், அமுதுப் புலவர், அகஸ்தியர் ஆகியோர் பற்றிய மனப்பதிவுகளும், காலைக்கலசத்தினூடாக ஒரு நூலியல் பயணம், புலத்திலும் புகலிடத்திலும் மலரும் வெளியீடுகளை சர்வதேச நூலகங்களில் பாதுகாத்தல், மலேசியத் தமிழர்களின் நீள்துயில் கலைகின்றதா, புலம்பெயர்ந்தோரிடையே கலாநிதிகளும் கல்லாநிதிகளும், தமிழ்மண்ணில் ஒரு சிரமதான அமைப்பு (சர்வோதயம்), நா.சுப்பிரமணியனின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் ஒரு பார்வை, ஈழநாடு சிறுகதைகள்: ஒரு பிராந்திய இலக்கிய வரலாற்று மூலநூல் ஆகிய சமூக, இலக்கிய கட்டுரைகளும் இதில் அடங்குகின்றன.

இக்கட்டுரை தேசம் சஞ்சிகையில் ஏற்கனவே வெளிவந்திருந்தது. காலப்பொருத்தம் கருதி மீண்டும் பிரசுரிக்கின்றோம்.

மோசடிக் கலாநிதிப் பட்டங்கள் தொடர்பான முன்னைய பதிவுகள்:

பட்டங்கள் கட்டி கல்வியையும் கல்வித் தகமையையும் மலினப்படுத்தும் உலகத் தமிழர் பல்கலைக்கழகம் https://www.thesamnet.co.uk//?p=90646  
தேசத்தின் செய்தியை அடுத்து பட்டம் வழங்கும் நிகழ்வைப் பிற்போட்டது உலகத் தமிழ் பல்கலைக்கழகம் https://www.thesamnet.co.uk//?p=90733

தெற்கில் நூல்களை வாரி வழங்கும் தமிழ் நேசகன்! : சந்தரெசி சுதுசிங்ஹ

என் செல்வராஜா ஒரு நூலகம்! தற்போது தெற்கில் அவரின் பெயரில் ஒரு நூலகம் உருவாகின்றது!

இலங்கையர்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் பற்றி பத்திரிகைகளில் வெளிவந்து மறைந்த போதும் இலைமறை காயாக சில உறவுகள் தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் மலர்ந்து நறுமணம் கமழ்கின்றது. 1981 மே 31 இரவு யாழ் நூலகம் எரிக்கப்பட்ட துன்பியல் நிகழ்வினால் தெற்கில் இன்றும் பலர் மனவேதனையிலும் வெப்பிகாரத்திலும் இருப்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது. அப்படிப்பட்டவர்கள் இணைந்து நூலகவியலாளர் என் செல்வராஜாவின் வாழ்நாள் சேவையை கௌரவிக்கும் வகையில் அவருடைய பெயரில் தெற்கில் ஒரு சிறு நூலகம் அமைக்க முன்முயற்சிகள் எடுக்கப்படுகின்றனர். நூலகவியலாளர் என் செல்வராஜா பற்றி சந்தரெசி சுதுசிங்ஹ The Colombo Post என்ற இணையத்தில் வெளியிட்ட பதிவின் தமிழாக்கம் தேசம்நெற் இல் பிரசுரிக்கப்படுகின்றது.
._._._._._.

தெற்கில் நூல்களை வாரி வழங்கும் தமிழ் நேசகன்!

இந்தியா மீதுள்ள எனது பற்றை தகர்த்து என்னை தன் வசப்படுத்தி இந்திய நட்பை காட்டிலும் யாழ்ப்பாண உறவு பாலத்தை கட்ட வேண்டும் என்று மனதுக்குள் ஒலிக்கிறது. அந்த உறவை நினைக்கையில் விட்டுக்கொடுக்க முடியாத உணர்வு ஏற்படுகிறது. எனது உண்மையான உணர்வை மறைத்து மனதை அடக்கி வைக்க எனக்கு இஷ்டம் இல்லை. எனக்கு அவர் மீது காதல் தோன்றுகிறது? எவ்விடத்திலும் துணிச்சலுடன் அதை எடுத்துக்கூற தயங்கமாட்டேன். உறவு என்பது காதலை தவிர வேறு என்ன? அப்படிப்பட்ட நேசத்திற்குரிய மனிதரைப் பற்றிய பாசக் கதைதான்.

இக்கதையின் நாயகனை பற்றி கலாநிதி உருத்திரமூர்த்தி சேரன் என்னிடம் கூறினார். இடைவிடாது கேட்கும் கேள்விகளுக்கு பதில்களை கூறுவதும் அப்பதில்கள் உயிரோட்டம் கொண்டிருப்பதும் அவரது தனித்துமே. அப்படி ஒரு விடைக்காக அறிமுகப்படுத்திய மனிதர் தான் பல்லாயிரம் கேள்வி கனைகளுக்கு பதிலாக
இருப்பவர் தான் நடராஜா செல்வராஜா அவர்கள்.

செல்வராஜா என்பவர் இலங்கையில் மட்டுமல்லாமல் உலக நூலக வரலாற்றில் மிளிரும் தாரகை. அறிவு, மனிதநேயம் நிறைந்த படைப்பே இத்தாரகை. அவ்வப்போது எனக்கு தேவையான தகவல்களை இந்த பதில் கூறும் மனிதரிடம் பெற்றுக்கொண்டேன். இவர் இலங்கை திருநாட்டுக்கு மட்டுமல்லாது முழு ஆசிய பிராந்தியத்திற்குமே பெருமைக்குரிய சின்னமாக விளங்குகிறார். பிரித்தானிய வழங்கும் IPRA (பொதுமக்கள் தொடர்புக்கான விருது) என்ற விருதை பெற்ற முதலாவது இலங்கையாராகவும் ஆசிய இனமாகவும் இவர் கொண்டாடப்படுவதே இதற்கு காரணம். இவர் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நூல்களின் பட்டியலை தயாரித்தவரும் மனிதநேயம் கொண்ட மனிதர்களுக்கு முற்போக்கான பதிலும் இவரே.

நடராஜா செல்வராஜா:

அண்மை காலத்தில் இவர் வடக்கிலும் தெற்கிலும் நூலகங்களின் தொடர்பினை ஏற்படுத்தி கொடுத்த இவர் தன் தலையாய கடமையாக அதனைச் செய்தார். ‘வெள்ளவத்தையில் இந்த நூலகத்திற்குச் செல்லுங்கள், இதோ அந்த நிறுவனத்தின் தொலைபேசி இலக்கம், யாழ்ப்பாணத்தில் இதோ இந்த இடத்தில் தகவல்களை பெறலாம்’ என்று தங்கையை போல என்னை வழிநடத்திய இவர் யாழ்ப்பாண காதலின் இன்னுமொரு மைல்கல்லாக நிற்கின்றார்.

அண்மையில் நான் ‘புத்தகமும் நானும்’ என்ற நிகழ்ச்சியின் நெறியாளர் மஹிந்த தசநாயக்க பற்றி ஒரு குறிப்பை எழுதினேன். அதை பார்த்துவிட்டு அண்ணன் செல்வராஜா என்னையும் மஹிந்த அண்ணாவையும் அழைத்து சுவாரசியமான ஒரு கதையைச் சொன்னார்.

‘நான் உங்களுக்கு புத்தகங்களை தருகிறேன். ஆனால் அவற்றை வடக்கிலோ மலையகத்திலோ இருக்கும் தமிழ பிள்ளைகளுக்கு கொடுப்பதற்கு அல்ல. இங்குள்ள சிங்கள பிள்ளைகளுக்குத் தான் நான் அவற்றை கொடுக்கின்றேன் என்றார்’. அந்த பதில் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் ஆணித்தனமாக அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். எங்கள் கேள்வி ஏக்கங்களுக்கு இவ்வாறு விளக்கம் கொடுத்தார்.

‘இதுதான் விஷயம். நான் “Book Abroad” நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு பெரும் எண்ணிக்கையான நூல்களை அனுப்புகிறேன். கொல்களன் கணக்கில் அனுப்புகிறேன். நாங்கள் வடக்கில் பிள்ளைகளுக்கு அவற்றை பகிர்ந்தளிக்கின்றோம். அதேபோல மலையகச் சிறுவர்களுக்கும் அனுப்புகிறோம். ஆனால் ஒன்றை மறந்துவிட்டோம் அதுதான், வடக்கிலுள்ள பிள்ளைகளுக்கு வெளிநாட்டிலிருந்து கொடையாளர்களிடமிருந்தும் இன்னும் பல வழிகளிலும் இப்படி புத்தகங்கள் கிடைத்தாலும் சிங்கள பிள்ளைகளுக்கு அரசாங்கமோ வேறு நிறுவனங்களோ இப்படி புத்தகங்களை வழங்குவதில்லை என்ற விடயம். அதனால் தான் சொல்கிறேன், இப்புத்தகங்களை பின்தங்கிய கிராம புறங்களைச் சேர்ந்த சிங்கள பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டுமென்று. நான் அனுப்புகின்ற புத்தகங்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் இருக்கின்றன. அவற்றை நான் தருகிறேன். அதேபோல ஆங்கில புத்தங்களுக்கு மேலதிகமாக சிங்கள புத்தகங்களை வாங்க நான் பணம் தருகின்றேன்’. இப்படி கூறிய அவரை கௌரவிக்கும் முகமாக நாங்கள் பின்தங்கிய கிராமங்களை தேடிச் சென்று புத்தகங்களை பெற்றுக்கொடுக்க பணியாற்றுவோம்.

நாங்கள் எப்போதும் நூலக வசதிகளே இல்லாத பாடசாலையைத் தேடிப் பிடித்து நூலகமொன்றை உருவாக்குவதற்கு முயற்சிப்போம். நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்காக அவரது பெயரை ‘நடராஜா செல்வராஜா’ அந்நூலகத்திற்கு சூட்ட முடியுமென்றால் அதுவே இச்சமூகத்திற்கு சிறந்த ஒரு செய்தியாக அமையக்கூடும். வடக்கில் நூலகங்களுக்கு தீ வைத்த இருண்ட நினைவுகள் இருக்கும் தருவாயில், வடக்கிலிருந்து தெற்கிலுள்ள சிங்கள பிள்ளைகளுக்காக இதுபோன்ற கருணை காட்டுவதன் மூலம் வெளிப்படுத்தப்படுவது என்னவெனில், அவர்களுக்கும் எமக்கும் எவ்வித இடைவெளியும் இல்லை என்பதையும், எம்மிடையே பிரிவினை, மோதல் இருப்பதாக கூறிவரும் பலருக்கு அது தவறான புரிதல் என்பதை உணர்த்தும். தற்போது நாம் அதற்காக உழைக்கின்றோம்.

நன்றாக சிங்களத்தில் உரையாற்றும் இவருக்கு தென்னிலங்ககையில் பலர் இருக்கின்றார்கள். நீர்கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் (இன்றைய விஜயரத்தினம் மகா வித்தியாலயம்) கல்வி பயின்ற இவர் இலங்கை நூலக விஞ்ஞான சங்கத்தில் டிப்ளோமா பெற்றவராவார். ‘தங்கை, நம் இரு சமூககங்களுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் கிடையாது சிங்கள, தமிழ் என்று அரசியல் வாதிகளுக்குத் தான் பிரச்சினை உள்ளது’ அப்படித்தான் அவர் சுருக்கமாக கூறுவார். எனது யாழ்ப்பாண மக்கள் நமக்கும் தென்னிலங்கை மக்களுக்கும் இடையில் குரோதம் இருப்பதாக என்னிடம் ஒருபோதும் கூறியதில்லை.

‘தங்கை தாங்கள் என் மூத்த மகளை விட ஒரு வயது இளையவர்.. உங்களை போன்றவர்கள் இந்த நிலத்திற்கு பெறுமதிமிக்கவர்கள்’. அவர்களது அன்பில் நாம் எம்மை காணுகிறோம். செல்வராஜா என்ற மனிதர் இந்நாட்டில் வடக்கு தெற்கு பிரிவினையை மறந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து வாசிக்க கூடிய ஒரு புத்தகம் போன்றவர். நாங்கள் அப்புத்தகத்தை வாசிக்கின்றோம். இப்புத்தகம் நாட்டின் தமிழ் சிங்கள அனைவராலும் அன்போடு நேசிக்கும் புத்தகமாக அமையுமென நம்புகின்றோம்.

நான் யாழ்ப்பாண நேசகி,
சந்தரெசி சுதுசிங்ஹ
மாத்தறையிலிருந்து
sandaraseepriyathma@gmail.com

அமுதுப் புலவர் பற்றிய ஆய்வுநூல் ஒன்று. : என் செல்வராஜா (நூலகவியலாளர்)

Selvarajah_Nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்புக் கலைமாணிப் பட்டதாரிகளை உருவாக்கி வெளியேற்றி வருவதை நாம் அறிவோம். பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும் பயிலும் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தேர்வுக்காக ஒவ்வொருவரும் துறைத்தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட, தெரிந்தெடுத்த ஒரு விடயத்தை வைத்து விரிவான ஆய்வினை மேற்கொண்டு 100 பக்கம் வரையிலான ஆய்வாக அதனைத் தமது இறுதித் தேர்வின் ஒரு பகுதியாக தாம் சார்ந்த துறைப்பீடத்திற்கு வழங்குவதுண்டு.

மற்றைய பல்கலைக்கழகங்களைப் போலல்லாது  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமக்கென்று ஒரு பதிப்பகப் பிரிவினை ஒருபோதும் கொண்டிராததால், இவ்வாய்வுகளை நூலுருவில் கொண்டுவந்து அதனைத் தான் சார்ந்த சமூகத்திற்கு வழங்கித் தமது கல்விசார் அடைவினை சமூகமயப்படுத்துவதற்கும், அவ்வாய்வேடுகள் பரவலாக சமூகத்தின் பிற புத்திஜீவிகளிடம் சென்றடையச்செய்து பல்கலைக்கழகத்தின் கற்றல் கற்பித்தல் மற்றும் ஆய்வுப் புலமையை பட்டைதீட்டிக்கொள்வதற்கும் இன்றளவில் வாய்ப்பில்லாது போய்விட்டது. இதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தான் சார்ந்துள்ள தமிழ்ச் சமூகத்துடன் மேற்கொள்ளக்கூடிய ஒரு உறவுப்பாலத்தை போக்குவரத்திற்காகத் தடைசெய்துவருகின்றது.

இதனால், ஆய்வினை மேற்கொள்ளும் பட்டதாரிகள் தாம் பெரும் பணச்செலவினதும் உடல் உழைப்பினதும் கால விரயத்தினதும் பெறுபேறாக உருவாக்கிய ஆய்வுகள் கிணற்றில் போட்ட கற்களாக பல்கலைக்கழக பீடங்களின் துறைத்தலைவர்களின் இறாக்கைகளில் தஞ்சமடைவதுடன் தமது பிறவிப் பெரும்பயனை எய்திவிடுகின்றன. ஒரு சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் ஆய்வு மாணவரின் சுயமுயற்சியால், அல்லது இவ்வாய்வு பற்றிய தகவல் அறிந்த சிலரால் வெளியாரின் உதவியுடன் நூலுரவாக்கி வெளியிட்டுள்ளனர். இத்தகைய ஆய்வுகளை நூலுரவாக்கி வெளியிடுவதில் மற்றைய பதிப்பகங்களைவிட, கொழும்பு குமரன் புத்தக இல்லம் அதீத அக்கறை காட்டிவருவதும் இங்கு குறிப்பிடப்படவேண்டும்.

இந்நிலையில் நூலுரவாக்கப்பட்ட அய்வுகள் பற்றிய பட்டியலையோ, அவற்றின் இருப்பு பற்றிய தகவல்களைக்கூட பல்கலைக்கழகங்கள் பேணிவருவதாகத் தகவல் இல்லை. பல்கலைக்கழக வட்டாரத்தின் மூலமல்லாது, தினசரிப் பத்திரிகைச் செய்திகளின் வாயிலாகவே இவ்வாய்வுநூல்களின் இருப்பு பற்றி அறியமுடிகின்றமை கவலைக்குரியதாகும்.

அமுதுப் புலவருக்கு அஞ்சலி: விடைபெறுவீர் அமுதுப் புலவரே….. : என்.செல்வராஜா (நூலகவியலாளர், லண்டன்.)

இவ்வகையில் அண்மையில் எனக்குக் கிட்டிய பத்திரிகைத் தகவல்- 2006ஆம் ஆண்டு தமிழ்த்துறையில் இறுதித்தேர்வினை மேற்கொண்ட டயானா மரியதாசன் என்பவர் தனது சிறப்புக் கலைமாணித் தேர்வுக்காக லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்ந்து அண்மையில் 23.2.2010 அன்று மறைந்த இளவாலை அமுதுப் புலவர் பற்றிய விரிவான ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளார் என்பதாகும். இவரது ஆய்வு தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற தலைப்பில் 99 பக்கங்களில் ஒரு நூலாக வெளிவந்துள்ளது. இதனை அருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ளார். 2006இல் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வென்ற வகையில் இது அவரது மறைவுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இளவாலைக் கிராமத்தை வாழ்விடமாகவும் கொண்டவர் அமுதுப் புலவர். இளவாலை தம்பிமுத்து –சேதுப்பிள்ளை தம்பதியினரின் மகனாக 1918ம் ஆண்டு செப்டெம்பர் 15ம் திகதி பிறந்த இவர், தன் ஆரம்பக் கல்வியை புனித சார்ள்ஸ் வித்தியாலயத்திலும், இடைநிலைக்கல்வியை யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், உயர் கல்வியை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர். யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த்துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றிருந்த இளவாலை அமுது, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டத்தையும், இலங்கைக் கல்வித் திணைக்களத்தின் பண்டிதர் பட்டத்தையும் பெற்றவர்.
ஓய்வுபெற்ற முதலாம் தர ஆசிரியரான இவர், இளவாலை அமுது என்று ஈழத்துத் தமிழ்; இலக்கிய உலகில் பரவலாக அறிமுகமானவர். 1984ம் ஆண்டு முதல் தாயகத்திலிருந்து குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வந்து லண்டன் மிடில்செக்ஸ் பிரதேசத்திலுள்ள ஹரோ நகரின் நோர்த்ஹோல்ட் பகுதியில் தான் மரணிக்கும்வரை வாழ்ந்துவந்தார்.

அமுதுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டினைக் கெளரவிக்கும் வகையில் பல்வேறு அறிவுசார் நிறுவனங்களும் அவரைக் கௌரவித்திருக்கின்றன. இவரின் சமய இலக்கியத் தொண்டினை கௌரவித்து 2004ம் ஆண்டில் ரோமாபுரியில் பரிசுத்த பாப்பரசரினால் செவாலியர் விருது வழங்கப்பட்டது. பின்னர் 2005இல் இலங்கை அரசு கலாபூஷணம் விருதையும் அமுதுப் புலவருக்கு வழங்கியிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கொளரவ இலக்கிய கலாநிதிப் பட்டத்தையும் அதே ஆண்டில் வழங்கியிருந்தது. 2006இல் கனடாவிலிருந்து தமிழர் தகவல் நிறுவனம், தமிழர் தகவல் விருதினையும் வழங்கியிருந்தது.

அமரர் இளவாலை அமுது பற்றிய ஆறு இயல்களைக்கொண்ட இவ்வாய்வு நூலின் இயல் ஒன்றில் அமுதுப் புலவரின் வாழ்க்கை வரலாறும், இயல் இரண்டில் அவரது கவிதைப் படைப்புகள் பற்றியும், இயல் மூன்றில் அவரது ஆய்வு நூல்கள் பற்றியும், இயல் நான்கில் அவரது வாழ்க்கை வரலாற்று நூல்கள் பற்றியும், இயல் ஐந்தில் அவரது பிற பணிகள் பற்றியும் பேசும் இவ்வாய்வின் ஆறாம் இயல் அமுதுப் புலவரின் வாழ்வும் பணிகளும் பற்றிதொரு விரிவான மதிப்பீடாக அமைந்துள்ளது. அமுதுப் புலவரின் இலக்கிய உலா, விருது வழங்கல், பிறந்த தினம், மேடைப் பேச்சுக்கள் என்பன பற்றிய புகைப்படக்காட்சிப் பதிவுகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 

இலங்கையில் இந்நூல் 200 ரூபாவுக்கு புத்தக விற்பனை நிலையங்களில் பரவலாக விற்பனையிலுள்ளன.

மரணத்தின் வாசனை: போர் தின்ற சனங்களின் கதை : என் செல்வராஜா, (நூலகவியலாளர்)

Smell_of_Death_Book_Coverஇளம் படைப்பாளி, த.அகிலன் எழுதியுள்ள மரணத்தின் வாசனை என்ற அருமையானதொரு சிறுகதைத் தொகுப்பு நூலொன்று வெளிவந்துள்ளது. “போர் தின்ற சனங்களின் கதை” என்ற உப தலைப்புடன் வெளிவந்துள்ள இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் த.அகிலன், ஈழ விடுதலைப் போரின் ஆரம்ப காலகட்டத்தில் அதாவது 1983இல் வடபுலத்தில் பிறந்தவர். மரணத்துள் வாழ்ந்த ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக இன்று கொள்ளத்தக்கவர். தான் புலம்பெயர்ந்து வந்தபின்னர், உறவினருடன் அவ்வப்போது மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களினூடாகத் தன் செவிகளுக்குள் வந்துசேர்ந்த பன்னிரண்டு மரணச்செய்திகளின் வாயிலாக விரியும் உறவின் பரிமாணமே இச்சிறுகதைகளாகும். ஒவ்வொரு கதையும் ஒரு மரணத்தை மட்டுமல்லாது, அந்த மரணத்துக்குரியவரின் வாழ்வு – அவ்வாழ்வினோடு தனது வாழ்வு பின்னப்பட்ட சூழல் என்பன மிக அழகாகவும் உணர்ச்சிகரமாகவும் போர்க்கால இலக்கியமாக இச்சிறுகதைத் தொகுதிக்குள் பதிவாகியுள்ளன. இந்நூல் சென்னையிலிருந்து வடலி வெளியீடாக 180 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது பதிப்பு ஜனவரி 2009இலும், 2வது பதிப்பு மே 2009இலும் வெளியிடப்பட்டுள்ளது.

இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பன்னிரு சிறுகதைகளும், முன்னதாக அப்பால் தமிழ் என்ற இணையத்தளத்தில் மரணத்தின் வாசனை என்ற தொடராக வெளிவந்திருக்கின்றன. இச்சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரையையும் அப்பால் தமிழ் இணையத்தள நெறியாளரான திரு.கி.பி.அரவிந்தன் அவர்கள் பாரிசிலிருந்து வழங்கியிருக்கிறார்.

அவர் நூலுக்கு வழங்கிய தனது முன்னுரையில் குறிப்பிடும் சில வரிகளை வாசகர்களுடன் நானும் பகிர்ந்துகொள்கின்றேன்.

“மரணத்துள் வாழத்தொடங்கிய ஈழத்தமிழ் சமூகத்தில் 1983இல் பிறக்கும் த.அகிலன் எதிர்கொள்ளும் மரணங்களே, அம்மரணங்கள் வழியாக அவனுள் கிளறும் உணர்வுகளே இவ்வெழுத்துக்கு வலிமையைச் சேர்க்கின்றன. மரணத்தின் வாழ்வினுள் பிறந்து அதன் வாசனையை நுகர்ந்து வளரும் ஒரு முழுத் தலைமுறையின் பிரதிநிதியாகவே த.அகிலன் எனக்குத் தென்படுகின்றான். அந்தத் தலைமுறையின் எண்ணத் தெறிப்புகளே இங்கே எழுத்துக்களாகி உள்ளன. தந்தையைப் பாம்புகடித்தபோது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புத் தடுக்கின்றது. அப்படி அதன் பின் அகிலன் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மரண நிகழ்வின் பின்னாலும் இராணுவ ஆக்கிரமிப்பின் கொடுங்கரங்கள் தடம் பதிக்கின்றன. இந்த மரணத்தின் வாசனை என்பதே ஆக்கிரமிப்பின் நெடிதான். மரணத்தினுள் வாழ்வு என்பதன் ஓரம்சம் இராணுவ ஆக்கிரமிப்பு என்றால் அதன் அடுத்த அம்சம் ஊர்விட்டு ஊர் இடம் பெயர்தல். அகிலன் ஊர்விட்டு ஊர் இடம்பெயர்கிறான் காடுகள் ஊர்களாகின்றன. ஊர்கள் காடுகளாகிப் போகின்றன. அலைதலே வாழ்வாகிப் போகின்றது.” இது கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்கள் அகிலனின் நூலுக்கு வழங்கிய முன்னுரையின் ஒரு பகுதியாகும்.

Smell_of_Death_Book_Coverத.அகிலனின் மொழிநடை வித்தியாசமானது. இடையிடையே ஈழத்தமிழரின் பேச்சு வழக்கில் கலந்து அமைந்தது. இந்த மொழி வழக்கில் இடையிடையே இயல்பாகக் கலந்துவரும் அங்கதச் சுவையே அவரது சிறுகதைகளுக்கு வெற்றியைத் தேடித்தருகின்றது என்று நம்புகின்றேன். தமிழகத்தில் வெளிவந்துள்ள இந்த ஈழத்து நூல் வெற்றிகரமான சந்தை வாய்ப்பினையும் அங்கு பெற்று இரண்டாவது பதிப்பும் வெளிவந்திருக்கின்றது என்பது அவர் பயன்படுத்தியுள்ள சுவையான ஈழத்து மொழி நடையை தமிழக வாசகர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதை எமக்கு உணர வைக்கின்றது. இந்த நூலின் தொடக்கத்தில் சொல் விளக்கக் குறிப்புகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். சில பிராந்திய சொற் பிரயோகங்கள் ஈழத்து வாசகர்களையே விளக்கக் குறிப்பினை நாடவைக்கும் என்பதால், தமிழகத்தில் வெளியிடப்படும் ஈழத்தமிழரின் பிராந்திய மொழிவழி நூல்களுக்கு சொல் விளக்கக் குறிப்புகள் தவிர்க்கமுடியாதவையாகும்.

இந்நூல் ஈழத்தின் போர்க்கால சமூக வரலாற்றில் ஒரு முக்கிய காலகட்டத்தினை எம் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது. அந்தச் சூழலில் அகிலனுடன் வாழ்ந்துவந்துள்ள எமக்கு, இன்று சிறுகதைகளாக வாசிக்கும்போது, உணரப்படும் பகைப்புலங்கள் பல நினைவுகளை கனத்த நெஞ்சுடன் அசைபோட வைக்கின்றன. ஒவ்வொரு கதையை வாசித்த பின்னரும் நீண்டநேரம் அந்த அசைபோடல் எமது உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் நிலைத்து நின்று குறுகுறுக்கின்றது. மரணத்துள் வாழ்ந்த ஈழத்தமிழர்களின் சமூக வாழ்வின் ஒரு பக்கத்தை தமிழகத்தின் வாசகர்கள் உணர்வுபூர்வமாகத் தரிசிக்கவும் இந்நூல் வழிகோலுகின்றது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் – குறிப்பாக புலம்பெயர் இலக்கிய வரலாற்றின் ஒரு பரிமாணத்தை இந்நூல் பதிவுசெய்கின்றது என்றால் அது மிகையாகாது. இந்த நூல் இந்திய விலையில் 125 ரூபாவாக தமிழகத்திலும், வடலி வெளியீட்டாளர்களின் இணையத்தளத்திலும் விற்பனைக்குள்ளது.

நா சுப்பிரமணியனின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் – ஒரு பார்வை : என்.செல்வராஜா, (நூலகவியலாளர்)

Eelathu_Tamil_Naval_Ilakkiyam_Cover“ஈழத்திலும் ஈழத்தவர் புலம்பெயர்துறையும் நாடுகளிலும் உருவாகும் தமிழிலக்கிய ஆக்கங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இலக்கிய நெங்சங்களுக்கு” காணிக்கையாக்கி வெளியிடப்பட்டுள்ள “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்” என்ற நூல் அண்மையில் நான் இலங்கை சென்றிருந்த வேளையில் என் கைகளுக்கெட்டியிருந்தது.

1978ம் ஆண்டு இதே தலைப்பில் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் யாழ்ப்பாணம், முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் வழியாக ஒரு நூலை வெளியிட்டிருந்தார். 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்நூல் குமரன் புத்தக இல்லத்தினால் இரண்டாவது பதிப்பாக வெளியிடப்படுகின்றது. இப்பதிப்பு 1978ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் நிகழ்ந்த வரலாற்றுச் செல்நெறிகளை இனம்காட்டும் பின்னிணைப்புகளுடன் வெளியிடப்படுவதாக தலைப்புப் பக்கத்திலேயே விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். முதல் 143 பக்கங்கள் மூல நூலாகவும்  144ம் பக்கம் முதல் 309ம் பக்கம் வரை (நூலின் பாதிப்பகுதி) பின்னிணைப்புகளாகவும் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
மூல நூல் எனக்கொள்ளப்படுவது, நூலாசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்கள் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் வழிகாட்டலில் 1970-1972 காலப்பகுதிகளில் தனது முதுகலைமாணிப் பட்டத்திற்காக மேற்கொண்ட ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பான ஆய்வின் அடிப்படையில் உருவானதாகும். ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றை ஐந்து முக்கிய கட்டங்களாக வகைப்படுத்தி இவ்வாய்வை இவர் மேற்கொண்டுள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஈழத்திலே தமிழ்நாவல்கள் எழுதப்படுவதற்கான சூழலை விளக்கி அதன் ஆரம்ப முயற்சிகளை மதிப்பிடுவதாக ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் என்ற முதலாம் இயல் அமைகின்றது. இருபதாம் நூற்றாண்டின் முதல் நாற்பதாண்டுக் காலப்பகுதியில் எழுதப்பட்ட நாவல்கள் பற்றி சமுதாய சீர்திருத்தக்காலம் என்ற இரண்டாம் இயல் ஆராய்கின்றது. அக்காலப்பகுதியை அடுத்து எறத்தாழ 25 ஆண்டுக்காலப்பகுதி எழுத்தார்வக் காலம் என்ற தலைப்பிலும், அடுத்துள்ள 15 ஆண்டுக்காலம் சமுதாய விமர்சனக் காலம் என்ற தலைப்பிலும் வகைப்படுத்தப்பட்டு அவ்வக்காலகட்டத்தில் வெளியான ஈழத்து நாவல்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. பின்னைய ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியானது பிரதேசங்களை நோக்கி என்ற இறுதி இயலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

காணிக்கைப் பதிவு தந்த நம்பிக்கையினாலும், தலைப்புப் பக்கம் தந்த உந்துதலினாலும் ஆர்வத்துடன் பின்னிணைப்பைத் தட்டிப்பார்த்தேன். நூலின் அரைப்பங்கை பின்னிணைப்புகள் ஆக்கிரமித்துள்ளன. அனைத்தும் மிக முக்கியமான வரலாற்றுப் பதிவுகள். முதலாவது பின்னிணைப்பு 1977க்குப் பிற்பட்ட வரலாற்றுச் செல்நெறிகள் என்ற தலைப்பில் அமைந்துள்ளது. 1978 முதல் 1988 வரையிலான காலகட்டத்து ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத்தின் வளர்ச்சி முதற்பிரிவில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இது தனிக்கட்டுரையாக ஏழு பகுதிகளில் மல்லிகை இதழில் ஏப்ரல் 1988 முதல் மார்ச் 1989 வரையிலான காலப்பகுதியல் வெளிவந்திருந்தது.

முதலாவது பின்னிணைப்பின் இரண்டாவது பிரிவு 1988க்குப் பின் தாயகத்திலும், புகலிடத்திலும் எழுந்த ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியம் பற்றிய விரிவான ஆய்வாக அமைகின்றது.
இரண்டாவது பின்னிணைப்பு ஆசிரியரின் தனிக்கவனத்தைப் பெற்ற இருநாவல்கள் பற்றிய ஆய்வுரையாக அமைகின்றது. மங்களநாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இருதயம், தேவகாந்தனின் கனவுச் சிறை ஆகிய இரண்டு நாவல்கள் பற்றிய இக்கட்டுரை 2005இல் வெளிவந்த ஆசிரியரின் கட்டுரைத் தொகுப்பான கலாநிதி நா.சுப்பிரமணியனின் ஆய்வுகள், பார்வைகள், பதிவுகள்: தொகுதி 2இல் ஏற்கெனவே பிரசுரமாகியுள்ளது.

மூன்றாவது பின்னிணைப்பில் ஈழத்துத் தமிழ்நாவல்களின் விரிவான பட்டியல் ஒன்று பிரசுரமாகியுள்ளது. ஆசிரியர் பெயர். நாவலின் தலைப்பு, (சில இடங்களில்) வெளியீட்டாளர் விபரம், வெளியிட்ட ஆண்டும் பக்கமும், தகவல் தெரியாதவிடத்து கேள்விக்குறிகள் (?) என்றவாறாக இப்பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.

முதலாவது பகுதியில் 1977 வரையிலான நாவல்களின் விபரங்களும், இரண்டாவது பகுதியில் 1977க்குப் பின்னைய நாவல்களின் விபரமும் இடம்பெற்றுள்ளன. இது 2007 வரை நீளுகின்றதையும் அவதானிக்க முடிகின்றது.

இவ்விடத்தில் மேலதிகமான தகவல் ஒன்றையும் குறிப்பிடப்படவேண்டும். நூலாசிரியர் நா.சுப்பிரமணியன்  1885-1977 காலப்பகுதியில் வெளியான 407 நாவல்கள் பற்றிய விபரங்களைத் தொகுத்து, சில பதிவுகளுக்கு (நூல்தேட்டத்தில் நான் குறிப்பிடுவதுபோன்று) குறிப்புரையுடன் ஒரு நூலை எழுதியிருந்தார். இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் யாழ்ப்பாண வளாக நூலக வெளியீட்டு இலக்கம் 2 என்ற தொடரில் தமிழ் நாவல் நூற்றாண்டு நினைவாக, கல்லச்சுப் பிரதியுருவில் (ஊலஉடழளவலடநன) ஈழத்துத் தமிழ் நாவல்கள்: நூல்விபரப்பட்டியல் 1885-1976 என்ற தலைப்பில் பெப்ரவரி 1977இல் வெளிவந்திருந்தது. ஆக்கியோன் பெயர் வரிசை ஒழுங்கில் தொகுக்கப்பெற்றிருந்த இந்நூற்பட்டியலில் முதற்பகுதியில், நூல் வடிவில் வெளியான 212 நூல்களில் இடம்பெற்ற 220 நாவல்களும், இரண்டாவது பகுதியில் ஊடகங்களில் வெளியானதும் நூலுருப்பெற்றமை பற்றிய தகவல் அறியமுடியாததுமான 94 நாவல்களும் இடம்பெற்றிருந்தன. ஈழத்துத் தமிழ் நாவல் பற்றி எழுதப்பட்டு ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள், மற்றும் நூல்களின் விபரங்களும் பின்னிணைப்பில் காணப்பட்டன. (பார்க்க: நூல்தேட்டம் தொகுதி 2, பதிவு இலக்கம் 1006).

நூலின் நான்காவது பின்னிணைப்பும் ஒரு தேர்ந்த பட்டியலாகும். இதில் ஈழத்துத் தமிழ் நாவல் தொடர்பான ஆய்வுகள் பற்றிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கும் 1977 வரை வெளியான விமர்சன நூல்கள், கட்டுரைகள் என்பன ஒரு பிரிவாகவும், 1977க்குப் பின்னர் வெளியான நூல்களும் ஆய்வேடுகளும், திறனாய்வுகள் மற்றும் “பட்டியல் முயற்சிகள்”, அணிந்துரைகள், அறிமுக உரைகள் மற்றும் மதிப்புரைகள் முதலியனவும் இடம்பெற்றுள்ளன. இங்கு திரு. நா.சுபபிரமணியம் அவர்களின் தீவிரமான தேடலில் அகப்படாத இரண்டு விடயங்கள் பற்றியும் நான் இங்கு குறிப்பிடவேண்டும்.
அவர் இன்று புலம்பெயர்ந்து வாழும் கனேடிய மண்ணில் 2005ம் ஆண்டில் தமிழர் தகவல் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட “தமிழர் தகவல்” ஆண்டுமலரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். தமிழர் தகவல்- எஸ்.திருச்செல்வம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கனடாவில் வெளிவரும் ஒரு மாத இதழ். (மலேசியத் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு: ஒரு வரலாற்றுப் பதிவு. தமிழர் தகவல் 14ஆவது ஆண்டு மலர்; (P.O.Box 3, Station F.Toronto, Ontario, M4Y 2LA, Canada)பெப்ரவரி 2005, ப.124-129.) அதில் ஈழத்தவர்கள் மலாயா மண்ணில் புலம்பெயர்ந்து வாழ்ந்த காலத்தில் மேற்கொண்ட படைப்பாக்க முயற்சிகள் பற்றி விரிவான தகவல்களை வழங்கியிருந்தேன். இந்த நூலில் அந்தக்கட்டுரை பற்றிய எவ்வித குறிப்பும் இல்லாததால், திரு. நா.சுப்பிரமணியனுக்கு தமிழர் தகவல் ஆண்டு மலர் கிடைக்கவில்லை போலுள்ளது. இதே கட்டுரை பின்னாளில் இலங்கையில் ஞாயிறு தினக்குரலில் 1.5.2005 முதல் 22.5.2005 வரை நான்கு இதழ்களில் தொடராகவும் வெளியிடப்பட்டது. கோலாலம்பூரில் வல்லினம் சஞ்சிகையும், மலேசிய நண்பன் பத்திரிகையும் இக்கட்டுரையை மீள்பதிப்புச் செய்திருந்தன.

புலம்பெயர்ந்த ஈழத்தவரின் நாவல்களில் பல மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல்துறை நூலகத்தில் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது பற்றி எனது மலேசிய-சிங்கப்பூர் நூல்தேட்டம் தொகுப்பில் அவற்றை நேரில் பார்வையிட்டுத் தொகுக்கப்பட்ட விரிவான விபரங்கள் உள்ளன. ஆசிரியரின் விரிந்த தேடலில் நிச்சயம் மலேசிய நூல்தேட்டம் தொகுதி கிட்டும் என்று நம்புகின்றேன். மலாயாவுக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தவருள் ஒருவரான புலோலியூர் க.சுப்பிரமணியம் எழுதிய நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு என்ற நூல் பற்றி, சுப்பிரமணியன் தனது பின்னிணைப்புப் பட்டியலில் பக்கம் 267இல் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் புலோலியூர் க.சுப்பிரமணியம் (எஸ்.கே.சுப்பிரமணியம்) மலேசிய மண்ணில் வாழ்ந்த காலத்தில் எழுதிய பிற நாவல்கள் பற்றிய வேறு பதிவுகள் எதுவும் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தில் குறிப்பிடப்படவில்லை. மலேசியாவில் முசயைn டுiஉநளெiபெ டீழயசன இல் அங்கத்தவராயிருந்த இந்நாவலாசிரியர் யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்தவர். பின்னாளில் புலம்பெயர்ந்து மலாயாவுக்குச் சென்றவர்.
நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு என்ற நாவல் பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ளது. (நூலகப் பதிவிலக்கம்: 35334) இந்நாவலின் முன்னுரையில் ஆசிரியர் தன்னுடைய முன்னைய நூலான பலசுந்தரம் அல்லது சன்மார்க்கஜெயம் என்ற நூலின் தொடர்ச்சியே இந்நூல் என்று குறிப்பிடுகின்றார். பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் இரண்டு பாகங்களில் வெளிவந்திருந்தது. மலேசியாவில் பினாங்கு, சி.அரிகிருஷ்ண நாயுடு பதிப்பகத்தினர் இந்நூலின் இரண்டாவது பாகத்தை 1918 இல் வெளியிட்டிருக்கிறார்கள். (அச்சகம்: எட்வார்ட் பிரஸ், இல. 80, ஊhரடயை ளுவசநநவ, பினாங்கு). முதல் 21 அத்தியாயங்கள் முதலாம் பாகத்திலும், 22ம் அத்தியாயத்திலிருந்து 36ம் அத்தியாயம் வரை இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுகின்றன.
அந்நாவலில்; நீலாக்ஷி ஒரு பிரதான பாத்திரமாகச் சித்திரிக்கப்படுகின்றார். துர்அதிர்ஷ்டவசமாக பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் நாவலின் இரண்டாவது பாகத்தையே மலாயாப் பல்கலைக்கழகத்தில் என்னால் பார்வையிட முடிந்தது. இந்நூலின் முதலாம் பாகத்தை எங்கும் காணமுடியவில்லை. மலேசிய தமிழ் நாவல் இலக்கியம் தொடக்க காலத்திலேயே சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் பொதிந்தனவாக அமைய ஆரம்பித்துவிட்டன என்பதற்கு இந்நாவல் எடுத்துக்காட்டாகவுள்ளது. ஒழுக்கம் நேர்மை ஆகியவற்றால் வரும் உயர்வைப்பற்றி விளக்கும் இந்நாவலில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலவிய மலாயா நாடு கதைக்களமாகின்றது. பிரித்தானியர் ஆட்சி, கோலாலம்பூர் நகர உருவாக்கம், கிறிஸ்தவ சமயப் பரம்பல், இலங்கை – இந்தியத் தமிழர்களுக்கு இடையிலான பிணக்குகள் முதலிய பல வரலாற்றுத் தகவல்கள் கதையில் விதைக்கப்பட்டுள்ளன. இந்நாவலின் தொடர்ச்சியே நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு என்ற நாவலாக அமைந்துள்ளது.

மலேசிய தமிழ் நாவல் இலக்கிய வரிசையில் இடம்பெறும் இந்நாவல் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் தமிழ் இலக்கியப் பாலமாக அமைந்துள்ளது. இந்நாவலின் முதற்பாகம் வெளிவந்திருக்கக்கூடிய ஆண்டு விபரம் பற்றிய தகவல்களை அறியமுடியவில்லை. அதனால் இன்றையளவில் மலேசிய நாவல் இலக்கிய வரலாற்றில் வெளிவந்த இரண்டாவது நாவல் என்ற நிலையையே இது எய்தியுள்ளது. இன்றளவில் மலேசியாவின் முதல் நாவல் 1917இல் வெளியான “கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி” என்ற நாவலாகும். இது ஒரு இந்தியரால் எழுதப்பட்டது.

ஈழத்துத் தமிழ் நாவல் வரலாறு பற்றி ஆராயப்புகும் நா.சுப்பிரமணியன் செங்கை ஆழியான் போன்றோருக்கு ஈழத்தமிழ் நாவல் வரலாறு இலங்கை என்ற பிரதேச வரம்புக்குள் மட்டும் அடங்கிவிடக்கூடியது அல்ல என்பதை இலக்கிய உலகம் வலியுறுத்தவேண்டியுள்ளது. ஈழத்தவரின் முதலாவது புலப்பெயர்வு 1870களில் மலாயாவை நோக்கி ஏற்பட்ட காலம்முதலாக ஈழத்தமிழர்கள் பலர் புலம்பெயர்ந்த நாடுகளில் வைத்து நாவல்களை எழுதியிருக்கிறார்கள். இன்றைய புகலிடத்தில் வாழும் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்பக்களை ஈழத்து படைப்புக்களாகவும், அவர்களை இன்னமும் (புலம்பெயர்ந்த) ஈழத்துப் படைப்பாளிகளாகவும் குறிப்பிட்டுவரும் இலக்கிய ஆய்வாளர்கள் முன்னைய தலைமுறையினரான இவர்களின் படைப்புக்களையிட்டும் அக்கறை கொள்ளவேண்டும். இவர்களையும் நாம் ஈழத்துப் படைப்பாளிகளாகவே ஏற்று அவர்களுக்கும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு இடத்தை வழங்கவேண்டும்.

மலேசிய இலக்கியத்துக்கு உயிர்கொடுத்த எம்மவர்கள் பற்றிய எனது விரிவான ஆய்வில் பல படைப்பாளிகள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன். இவர்களின் பெயர்களை இன்றளவில் வெளிவந்த கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராசன் போன்றவர்களின் பட்டியல்களில் தேடினால் எமக்கு ஏமாற்றமும் எரிச்சலுமே மிஞ்சும்.

ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தின் ஆசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியம் அவர்களுக்கு மற்றுமொரு தகவலையும் வழங்கக் கடமைப்பட்டுள்ளேன். நூல்தேட்டம் என்ற பெயரில் 2002ம் ஆண்டுமுதல் ஒரு பாரிய தொகுப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றேன். தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ்நூல்களுக்கான குறிப்புரையுடன் வெளிவந்துள்ள நூல்விபரப்பட்டியல் இதுவாகும். ஏழாவது தொகுதிக்கான தொகுப்புப்பணிகள் முடிவடைந்துவிட்டன. ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்கள் என்றவாறாக இதுவரை (உங்கள் நூல்களும் உள்ளிட்ட) 7000 நூல்கள் வரை பதிவாக்கியிருக்கின்றேன். பதிவுகள் பிரதான பதிவு தூவிதசாம்சப் பகுப்புமுறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டும், பாடவாரியாகப்; பதியப்பட்டுமுள்ளது. நூல் தலைப்பு வழிகாட்டி, ஆசிரியர் வழிகாட்டி என்பவற்றுடன் இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் படைப்புக்களும், முன்னைய தொகுதியின் பதிவுகளுக்கான மேலதிக தகவல்களும் தரப்பட்டுள்ளமை நூலின் சிறப்பம்சமாகும்.

நூல்தேட்டம் தொகுப்பின் 800ஆவது பிரிவு இலக்கியத்துக்கானதாகும். இதில் மற்றைய பாடத்துறைகள் போன்றே நாவல்களுக்கென்றும் தனியான பிரிவொன்றை ஒதுக்கி, குறிப்புரையுடன் நூல்பற்றிய நூலியல் விபரங்களை முழுமையாகத் தந்திருக்கின்றேன். இவை அனைத்தும் நான் நேரில்சென்று நூலகங்களிலும், தனியார் இருப்புகளிலும் பார்வையிட்ட நூல்கள். (எவ்விதமான கேள்விக்குறிகளும் பதிவகளில் இல்லை) எனது ஆதங்கம் என்னவென்றால், பலநூறு நூல்களைப் பார்வையிட்டு ஆய்வுசெய்துள்ள நீங்கள் – நூல்தேட்டம் பற்றி எதுவுமே அறியாதிருப்பது நம்பமுடியாததாக உள்ளது. இரண்டாம் பதிப்பாக புத்தாக்கங்களையும் உள்ளடக்கி நீங்கள் வெளியிட்டுள்ள “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்” என்ற நூலில் ஓரிடத்தில்கூட இதுபற்றிப் பிரஸ்தாபிக்கவில்லை என்பது மனதை நெருடுகின்றது. நீங்கள் வெளியிட்டுள்ள நூலை என்னைப் போன்றவர்களுக்காகக் காணிக்கையாக்கியிருக்கும் உங்கள் உணர்வை மதிக்கிறேன். நீங்களும் 1977இல் ஒரு பட்டியலை நாவல்களுக்காகத் தொகுத்தவர். தொகுப்பின் உழைப்பும், வலியும் உங்களுக்குப் புரியாததல்ல. நாவல்களையும், மற்றும் சிறுகதை கவிதை இலக்கியவடிவங்களையும் மாத்திரமல்லாது ஈழத்தின் முழுமையான நூலியல் வரலாற்றைப் பதிவுசெய்யும் நோக்குடன் தனிமனித முயற்சியாகத் தமிழ் நூல்களையும் பரந்த புவியியல் பரப்பை உள்ளடக்கித் தொகுத்துவரும் என்போன்றவர்களுக்கு எமது பணிபற்றிய சிறிய குறிப்பும் பேருவகைதரும் மருந்தாகும். “இருட்டடிப்பு” என்ற சொல்லை அறவே வெறுப்பவன் நான். ஆவணப்படுத்தலில் அதனை கிட்டவும் நெருங்கவிடக்கூடாது. படைப்பாளியினதும் படைப்பினதும் நம்பகத்தன்மையை வரலாறு கேள்விக்குள்ளாக்க அது வழிசமைத்துவிடும். (உங்கள் தகவலுக்காக: நூல்தேட்டம் இலங்கையில் அச்சிடப்படுகின்றது. இலங்கையின் அனைத்து பிரதான நூலகங்களிலும் புத்தகசாலைகளிலும் கிடைக்கும். நீங்கள் வாழும் கனடாவில் ஸ்கார்பரோவில், உலகத்தமிழர் நூலகத்திலும் ஒரு தொகுதி பேணப்படுகின்றது).

நன்றி : தினக்குரல்

ஊடகவியல்: ரூபன் மரியாம்பிள்ளையின் ஊடகவியல் நூல்கள் ஒரு அறிமுகம் : என் செல்வராஜா (நூலகவியலாளர்)

Rubanmariam_Pillai இக்கட்டுரை ஊடகவியல்துறையில் ஈடுபாடுள்ளவர்களுக்கு, அத்துறையில் அண்மைக் காலத்தில் வெளியிடப்பட்ட எட்டு நூல்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டு உள்ளது.

இவை அனைத்தையும் எழுதியவர் அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளை. சில்லாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை 1959 ஜுன் மாதம் 24ம் திகதி பிறந்தவர். சில்லாலை ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் 1965,ல் தன் ஆரம்பக் கல்வியையும், பின்னர் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் 1972ல் தன் உயர் கல்வியையும் பெற்றவர்.

கண்டி மாவட்டத்தின் அம்பிட்டிய தேசிய இறையியல் கல்லூரியில் 1982லும், புனித பிரான்சிஸ் குருத்துவக் கல்லூரியில் 1984லும் தன் இறையியல் கல்வியை மேற்கொண்டவர். 1986முதல் யாழ். மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கக் குருவானவராக பணியாற்றுபவர். 1979ஆம் ஆண்டு மௌன ஊர்வலம் என்ற பாதுகாவலன் பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை மூலம் பத்திரிகைத்துறைக்கு அறிமுகமானவர் இவர். அன்றிலிருந்து இன்றுவரை ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பாதுகாவலன் பத்திரிகையில் எழுதியுள்ளார்.

பத்திரிகைத்துறையில் நீண்டகால அனுபவம் பெற்ற ரூபன் மரியாம்பிள்ளை அடிகளார், யாழ்ப்பாணத்தில் மிக நீண்ட வரலாறு கொண்ட பாதுகாவலன் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவர் பாதுகாவலன் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தபோதே அப்பத்திரிகை 2000ஆம் ஆண்டிற்கான சிறந்த வடிவமைப்புக்கொண்ட தமிழ்ப் பத்திரிகைக்கான தேசிய விருதினைப் பெற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஈழநாடு, முரசொலி, போன்ற பத்திரிகைகளில் தவக்காலச் சிந்தனைகள் என்ற பகுதியின் வழியாக அறிமுகமான இவர் ஈழநாடு பத்திரிகையில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். நான் என்ற உளவியல் சஞ்சிகை, இறையியல் கோலங்கள், புதிய உலகம், மற்றும் மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தொண்டன் போன்றவற்றிலும் இவரது பல ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. உதயன் பத்திரிகையில் ஏறக்குறைய 30க்கும் அதிகமான சமயக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையில் சான்றிதழ் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட இவர், பின்னர் தன் பத்திரிகைத் துறைக்கான பட்டப்பின் படிப்பையும், முதுகலைமாணிப் பட்டத்தையும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டவர்.

தற்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் ஊடகத்துறையில் கலாநிதிப் பட்டத்திற்கான உயர் ஆய்வினை இங்கிலாந்தின் Sheffield ஹாலம் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகின்றார்.

ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்தின் முகாமையாளராகப் பணியாற்றிய அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை, பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் கல்விசார் செயற்பாடுகளுக்கான இணைப்பாளராகக் கடந்த பல வருடங்களாகப் பணியாற்றி வருகின்றார்.

யாழ். ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களின் நினைவாக, Bishop Savundram Media Centre என்ற பத்திரிகையியல் கல்வி நிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் 2000ம் ஆண்டில் உருவாக்கி இன்றுவரை இயக்கியும் வருகின்றார். இத்தகைய ஊடகவியல் பின்னணியில் இவர் எமக்கு வழங்கியுள்ள கனதியான நூல்களைப் பற்றிய தகவல்களை உள்ளே காணலாம். Pirasurakalam_5June2010

இவ்விதழில் குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள் அனைத்தையும் ஒரு தொகுதியாக விற்பனை செய்ய அதன் ஆசிரியர் முன்வந்துள்ளார். எட்டு நூல்களையும் பெற விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி இலக்கம்: செல்வராஜா (0044) 07817402704 selvan@ntlworld.com Single copy £ 10.00 Set Price £ 60.00 (Postage included).

ஊடகவியலாளர் அ.மயூரனின் “இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை” நூல் வெளியீட்டு விழா

Mayooran_Bookகடந்த 05.06.2010. சனிக்கிழமை லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை என்ற நூலின் வெளியீட்டு விழா, லண்டன் சுடரொளி வெளியீட்டகத்தினரின் அனுசரணையுடன் நடைபெற்றது. இதில் ஊடகவியலாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் என நூற்றிஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர். சுடரொளி வெளியீட்டகத்தின் செயலாளர் ஐ.தி.சம்பந்தன் தனது துணைவியாரை இழந்ததனால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

கடந்த சனிக்கிழமை லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் மாலை 3மணியளவில் நூல்தேட்டம் வாசகர் வட்டத்தினரின் ஏற்பாட்டில் ஈழத்துப் பதிப்பகங்களின் புதிய நூல்களின் கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது. சுமார் 135 தலைப்புகளில் இந்நூல்கள் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியுடன் மலிவு விலையில் நூல்விற்பனையும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து மாலை 5மணியளவில் நூல் வெளியீட்டுவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்த நூல் வெளியீட்டுவிழாவிற்கு லண்டன் புவுஏ தொலைக்காட்சியின் அறிவிப்பாளர் தினேஷ்குமார் அவர்கள் தலைமைதாங்கினார். அதனைத் தொடர்ந்து ஆரம்ப நிகழ்வுகளான மங்கள விளக்கேற்றல், அகவணக்க நிகழ்வு, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் என்பன நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் திபாகரன் அவர்களின் வரவேற்புரையும் தினேஷ் அவர்களின் தலைமையுரையும், சிவஸ்ரீ கனக பாலகுமாரக்குருக்களின் ஆசியுரையும் இடம்பெற்றன. அதன் பின்னர் நாட்டிய விஷாரத் ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவின் மாணவியான நாட்டியக் கலாயோகி செல்வி ஷஸ்ரியா யோகராஜா அவர்களின் தனிநடன நிகழ்வு இடம்பெற்றதனைத் தொடர்ந்து வாழ்த்துரைகள் இடம்பெற்றன. வாழ்த்துரைகளை திரு. ஸ்ரீரங்கன், திரு. யோகநாதன், திரு. ஜோய் பூரணச்சந்திரன், திரு. பரந்தாமன் ஆகியோர் நிகழ்த்தினர்.

இதன்பின்னர் கவிஞர் நிலா அவர்களின் நூலின் மீதான் பார்வை என்ற கவிதையும், சற்குணராஜா கனகசபையின் பாடல் நிகழ்வும், ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவின் மாணவிகளின் குழுநடனமும் இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து நூல் வெளியீட்டுவிழா இடம்பெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவினை நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்கள் சிறப்புரையாற்றி வெளியீட்டுவைக்க, நூலின் முதற்பிரதியை இந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய பிரபல வரலாற்றாய்வாளர் சிவ தியாகராஜா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் நூல் விமர்சன நிகழ்வு இடம்பெற்றது. இந்த நூல் விமர்சன நிகழ்வினை மாதவி சிவலீலன், மூத்த ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா, வேலன் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த திரு. கருணானந்தராஜா ஆகியோரும் நிகழ்த்தினர். உன்மையில் இந்த நூல் விமர்சனம் ஒரு காத்திடமான நிகழ்வாகவே காணப்பட்டது. ஒரு காரசாரமான, சுவாரஸ்யம் நிறைந்த நிகழ்வாக இவை இடம்பெற்றதனைக் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்விற்கு தனது உடல்நிலை காரணமாக வரமுடியாமல் போனாலும் தனது எழுத்துக்கள் மூலம் விமர்சன உரையினை சமூகவியல் ஆய்வாளர் சி.யோ பற்றிமாகன் அவர்கள் சமர்ப்பித்திருந்தார். அதேபோல்த்தான் சுடரொளி வெளியீட்டகத்தின் நிறுவனர் ஐ.தி. சம்பந்தன் அவர்களும் தனது உரையினை எழுத்துக்கள் மூலம் சமர்ப்பித்திருந்தார். இந்த எழுத்துமூலமான உரையினை ஸ்ரீரங்கன் அவர்கள் வாசித்தார்.

Mayooran_BookLaunchஅதன்பின்னர் திருமதி சுகதினி பாணுகோபன் அவர்களின் கவிதை நிகழ்வென்றும் திருமதி ஜெயந்தி யோகராஜாவின் மாணவியி;ன் நடனநிகழ்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வின் இறுதியாக இந்நூலின் ஆசிரியர் ஊடகவியலாளர் அ.மயூரன் அவர்களின் ஏற்புரையினை நிகழ்த்தினார். இவ்ஏற்புரை விமர்சனஉரைகளில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பனவாக அமைந்திருந்தன. கிட்டத்தட்ட மாலை 9.15 மணியளவில் இந்நூல் வெளியீட்டுவிழா இனிதே நிறைவுபெற்றது.

நூல் வெளியீட்டு விழா – ‘இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை விமர்சன ரீதியான ஒரு மதிப்பீடு’

Mayooran_Bookசுடரொளி வெளியீட்டுக் கழகத்தின் ஆதரவில் இடம்பெறும் ஊடகவியலாளர் அ.மயூரனின்  ‘இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை விமர்சன ரீதியான ஒரு மதிப்பீடு’ என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று யூன் 5, 2010ல் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

ஜுன் 05, 2010 சனிக்கிழமை, மாலை 4.00 மணி தொடக்கம் 9.00 மணி வரை நடைபெறவுள்ளது.

ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோவில் மண்டபம்
5 Chapel Road, West Ealing, London W13 9AE

கலை நிகழ்ச்சிகளும், தொடர்ந்து இராப்போசன விருந்துபசாரமும் நடைபெறும்.

குறித்த நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்க உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகின்றோம்.

அன்றையதினம், ஈழத்தில் வெளியான புதிய தமிழ் நூல்களின் கண்காட்சியும் விற்பனையும் வாசகர் வட்டம் அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

அ.மயூரன்
நூலாசிரியர்
078 9498 6780

ஐ.தி.சம்பந்தன்
செயலாளர்,
சுடரொளி வெளியீட்டுக் கழகம்
020 8552 6992

ஈழத்துத் தமிழ்நூல்களின் கண்காட்சியும் விற்பனையும் : என்.செல்வராஜா (நூலகவியலாளர்)

scan0004.jpgநூல்தேட்டம் வாயிலாக ஈழத்துத் தமிழ் நூல்களை பதிவுசெய்யும் எனது தொடர் பணியின் ஓரங்கமாக அண்மையில் இலங்கைக்கு விஜயம்செய்து பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பிற நூலகங்களிலும் ஏழாவது தொகுதிக்கான நூல்களை தேடிப்பதிவுசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அவ்வேளையில் ஈழத்துத் தமிழ்ப் பதிப்பகங்கள் சிலவற்றுடன் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தேன். அவர்களின் வேண்டுகோளின்பேரில் ஒரு கலந்துரையாடலும் ஒழுங்குசெய்யப்பட்டது.
 
அதில் ஈழத்துத் தமிழ் நூல் வெளியீட்டாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் தமது வெளியீடுகள் புகலிடத்தைச் சென்றடையும் வாய்ப்பு இல்லாமை பற்றி குறிப்பிட்டார்கள். ஈழத்தின் போர்ச்சூழலால் எமது மக்களிடையே வாசிப்புக் கலாச்சாரம் அதள பாதாளத்தை நோக்கிச் சென்றுவிட்ட நிலையை அவர்கள் புள்ளிவிபரங்களுடன் குறிப்பிட்டார்கள். தாயகத்தில் மாத்திரம் நிலைபெற்ற விடயம் அல்ல இது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒட்டுமொத்த ஈழத்துத் தமிழ் இனத்தையும் பாதிக்கும் விடயம்.
 
தரமான புத்தக விற்பனையாளர்கள் இல்லாத நிலையில் தனி மனித முயற்சியாகவாவது ஈழத்துத் தமிழ் நூல்களை புலம்பெயர்ந்த வாசகர்களிடம் எடுத்துச் செல்லும் பாரிய பொறுப்பொன்றையும் பரீட்சார்த்தமாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.
 
இதன் முதற்கட்டமாக லண்டனில் தேர்ந்தெடுத்த ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கி அவர்களின் உதவியுடன் இலங்கைத் தமிழ் நூல்களையும் புகலிடத்து வாசகர் விரும்பும் நூல்களையும் லண்டனுக்கு வரவழைத்து விநியோகிக்கும் நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டு வருகின்றேன்.
 
அவ்வப்போது சிறிய புத்தக விற்பனை நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதன்மூலம் ஈழத்து நூல்களை ஆர்வமுள்ள வாசகர்களிடம் சேர்ப்பிப்பது மற்றொரு முயற்சியாகும்.
 
இவ்வகையில் எதிர்வரும் ஜுன் 5ம் திகதி ஊடகவியலாளர் அ.மயூரனின் இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை என்ற நூல் வெளியீட்டு நிகழ்வின்போது ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் (London) சிறியதொரு நூல் கண்காட்சியும் விற்பனையும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
 
பிற்பகல் 3.00மணியிலிருந்து நூல்வெளியீட்டு நிகழ்ச்சி ஆரம்பமாகும்வரை இவ்விற்பனை இடம்பெறும். இந்நிகழ்வுக்காக கொழும்பிலிருந்து சேமமடு பொத்தகசாலையினரும் குமரன் புத்தக இல்லமும் தத்தமது அண்மைக்கால படைப்புக்களை அனுப்பிவைத்திருக்கிறார்கள். பல்துறைசார் நூல்கள் கொண்ட இத்தொகுதியில்  இருந்து நீங்களும் சில நூல்களைத் தேர்வுசெய்து கொள்வனவு செய்வீர்கள் என்று மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றேன்.
 
இது எவ்வித லாபநோக்கமும் இன்றி இடம்பெறும் ஒரு நிகழ்வு. நூலில் குறிப்பிடப்பட்ட இலங்கை விலையுடன் அதற்கான Air Fright செலவையும் சேர்த்த ஒரு தொகையே புத்தகத்தின் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
ஈழத்தின் அருகிவரும் புத்தக வெளியீட்டை புத்துயிர்பெறச் செய்யும் நோக்கிலும் புகலிடத்தில் ஒரு வாசிப்புக் கலாச்சாரம் உருவாகவும் இங்குள்ள வாசகர் வட்டங்களும் இலக்கிய வட்ட ஆர்வலர்களும் தமிழ்ப் பள்ளிகளும் தயவுசெய்து முன்வாருங்கள். உங்கள் வட்டத்தினருக்கும் புதிய நூல்களை அறிமுகப்படுத்த முயற்சிசெய்யுங்கள்
 
ஜுன் 5ம் திகதி ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் மாலை மூன்று மணியிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரமாவது அங்கு காட்சிக்கு வைக்கப்படும் புதிய நூல்களை பார்வையிட்டு பெற்று குடும்ப நூலகங்களை உருவாக்க உதவுங்கள்.
 
அன்புடன்
என்.செல்வராஜா
24.05.2010

குடும்ப நூலகத் திட்டம் ஒரு அறிமுகம்! : என் செல்வராஜா (நூலகவியலாளர்)

Home_Libraryஅன்புடையீர்புகலிடத்தில் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பின்றி நல்ல பல வாசகர்களும் வாசிப்பில் நாட்டமில்லாது போய்விடுகின்றனர். அதே வேளையில் ஈழத்துத் தமிழ்நூல் வெளியீட்டுத்துறையும் உரமின்றி வாடும் செடிபோன்று ஆதரவின்றி அல்லல்படுகின்றது. இந்நிலையில் எனது கடந்த மாத இலங்கை விஜயத்தின்போது சில தொடர்புகளை மேற்கொண்டிருந்தேன். குமரன் புத்தக இல்லம், மலையக வெளியீட்டகம், ஞானம் வெளியீட்டகம். சேமமடு புத்தகசாலை ஆகிய நிறுவனத்தினர் என்னுடன் தொடர்புகொண்டு தங்களது நூல்களில் 25 நூல்களையாவது புகலிடத்தில் விற்பனைசெய்து தந்தால் தமது வெளியீட்டுத்துறைக்கு அது ஆக்கபூர்வமாக உதவும் என்று கேட்டுக்கொண்டார்கள். புகலிட நாடுகளில் ஒரு நூலுக்கு 25 வாசகர்களைத் தேடுவது கடினமாக இருக்குமா என்று ஒரு கணம் சிந்தித்தேன்.

உள்ளுர் விலையுடன் விமானப்பொதியாக நூல்களை எனக்கு அனுப்பும் செலவையும் சேர்த்தால் சராசரி ஒரு நூல் 5 பவுண் வரையில் தான் வருகின்றது என்று அங்கு கணக்கிட்டோம்.

இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுவதன் நோக்கம் என்னவென்றால், நீங்களும் உங்கள் நண்பர்கள் ஒன்றிரண்டு பேரையும் இணைத்து மாதம் 5 பவுண்களை ஈழத்து நூல்களை வாங்க ஒதுக்குவீர்களாயின் ஒரு வாசகர் வட்டமாகச் சேர்ந்து என்னால் மேற்குறிப்பிட்ட பதிப்பாளர்களுக்கும் வாசகர் வட்டத்திற்குமான இணைப்பாளராகச் செயற்படமுடியும்.  உங்கள் வீட்டு முகவரிக்கு தபால் மூலம் மாதாந்தம் ஒரு நூலை அனுப்பிவைக்க முடியும். அதனை உங்கள் குடும்ப நூலகத்தில் சேர்த்துக்கொள்ளலாம். அல்லது வாசிப்புப் பழக்கத்தை எம்மிடையே வளர்த்தெடுக்க ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன் மூலம் பல அனுகூலங்கள் ஏற்படும்.
1. எம்மவரின் வீடுகளில் விரும்பியோ விரும்பாமலோ குடும்ப நூலகங்கள் உருவாகும்.
2. இலங்கைத் தமிழ்ப் படைப்புகளுக்கான வாசகர் சந்தை வளரும்
3. எம்மிடையே மறைந்துவரும் புத்தகக் கலாச்சாரம் துளிர்விடும்.
4 லண்டனில் நல்லதொரு புத்தகசாலை இல்லாத குறை நீங்கும்.(தற்காலிகமாகவேனும்)

இவை அனைத்தும் நீங்கள் உங்களது மாத வருவாயிலிருந்து ஒதுக்கும் 5 பவுண் பெறுமதியான பணத்தில் செய்யலாம் என்று நம்புகின்றேன். இது எவ்வித வர்த்தக நோக்கத்துடனும் மேற்கொள்ளப்படும் முயற்சியல்ல என்பதைப் புரிந்துகொள்வீர்கள். ஈழத்துப் படைப்புலகத்துடனும், பதிப்புலகத்துடனும் மிக நெருங்கிய உறவைக் கொண்டவன் என்பதால் ஏற்பட்ட எதிர்காலம் பற்றிய பயம் காரணமாக இருக்கலாம்.

வாசகர் வட்டம் பற்றிய உங்கள் கருத்துக்களுடன் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

அன்புடன் என்.செல்வராஜா
(0044) 01582 703786
selvan@ntlworld.com