கவிதைகள்

கவிதைகள்

போதி மாதவா? : நோர்வே நக்கீரா

Budha_in_Jaffnaபோதி மாதவா?

வன்னிவானத்தை இருள் கவ்வியது
ஈழத்தமிழர் வாழ்வு போல்

வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன
வெளிநாடுகளில் இருந்து
தருவிக்கப்பட்ட இடியும் மின்னலும்

சிவப்புக் கௌபோய் (cowboy)படம் எடுக்க
சீன இந்திய நடிகர்கள்

குறும்பார்வைக் குறையால்
வன்னிமந்தைகள் புலிகளாக
கண்ணீர்கள் வரிகளாக
மேய்போரே மந்தையை மேய்ந்தபோதும்
உருப்பெருக்கு வில்லைதேடி அலைந்தார்கள்
புவியியலாளர்கள்.

கண்வில்லைகள் போதாது என்று
வானவில்லைகள்

விலையுயர்ந்த வில்லைகளுக்குக் கூட
மனிதவிலைகள் தெரியவில்லை

உருப்பெருக்க வில்லைகள் ஐ.நாவிடம் இருந்தும்
கண்டுபிடிக்க முடிந்ததா மரணம்தரும் வைரசுக்களை.

வானமே வெடிகுண்டானது
அவதார புரிசர்களுக்கே
அடைக்கலம் தேவைப்பட்டது.

தலைகள் எல்லாம் கணனிகொண்டு
கொலைக்களங்கள் திரிந்தன.

கொம்பியூட்டர் கண்களில்
மக்கள் மறைந்தனர்
கணனியில் வைரசாம்

புதிய கணனியில்
புலத்துப் பணத்தில்
பணவீழம் அமைக்க
இன்றும் பலவைரசுகள்

அகதியாடு நனைகிறது என
ஓலமிடுகின்றன ஓநாய்கள்
நிலத்திலும் புலத்திலும்.

உதிரவெள்ளம் ஓடி அடங்க
பிணக்குவியல்களில் புழுக்கள் கிளம்ப
நிசப்தத்தின் மத்தியில் ஒரு நித்திய புருசன்
பிணங்களில் இருந்து பிரிந்து எழுந்தான்

உதிரம் வடியும் கண்களோடு
மனிதம் நிமிர்ந்த மார்புகளோடு
மேய்பனாக புத்தன்
விசுபரூபத்தில் போதிமாதவனாய்

மாயவனான மாதவன் கண்டு ஆதவன் அலற
சுடுகலன்கள் அனைத்தும் சுருண்டு போயின.

நிஸ்டையின் விரல்களை
நீட்டீயே காட்டி
வடக்கு கிழக்கு பிணங்களின் குவியல்
தெற்குத்திசையில் பசி பட்டிணியின் அவியல்
இதுவா தர்மம்!!
இதுவா நீதி!!!
இதுவா மனிதம்!!!!

மீண்டும் மறைந்தான்
உறைந்தது உலகம்
அறைபட்டது ஆத்மா.

விஸ்வமாக வளர்ந்த அசரீரி
அஸ்திரமாக நின்றது சமநீதி

”உலகம் எங்கணும் எல்லைகள் இல்லை
எல்லை உரிமை எவனுக்குமில்லை
மாதவ மனதில் சூனியம் இல்லை
வானம் பூமியில் வஞ்சகம் இல்லை
மனித மனங்களில் வஞ்சம் இருந்தால்
மீண்டும் வருவேன்
எரிக்கும் ஆதவனாக
சுழலும் சூறாவளியாக
சுனாமியாக.
அடங்காது போனால் கல்கியாக

எல்லா உடமையும் அனைவற்குமாகுக
பொல்லா மனநோய்கள் அணைந்து போகுக
வேதனம் என்பது வாழ்வுக்கானபின்
சீர்-தனம் எதற்கு சீர்கெட்ட மனிதா?

விகாரைகள் கட்டி
மனித விகாரம் எதற்கு
மனிதா (ஆ)லயம் கட்டு
ஆத்மா இலயிக்கும்

அரசு நடத்த அரசமரம் எதற்கு
அன்பை வளர்த்து அகிலத்தை ஆள்
ஆணவம் அழித்து கல்கியைக் கொல்

மனிதத்தின் மடியில் உலகம் உருள
அன்பின் அடியில் அடங்கும் அகிலம்”

மாதவனோடு
நோர்வே நக்கீரா
2.10.2010

ஆணி: நோர்வே நக்கீரா

TheNail_TheCrossஆணி

அவன் புனிதமானவனோ?
புண்ணியமானவனோ?
புரட்சிவாதியோ?
மீட்பனோ?
ஆடுகள் மேய்பனோ
யான் அறியேன்

முள்முடிதரித்து
மூன்று ஆணியிலோ
ஐந்து ஆணியிலோ
உயிரை இழந்த கர்த்தா என்பதை
என்வாசல் கதவுகளை உடைத்து
உக்கிரமாய் ஓதக் கேட்டேன்.

குடும்பச் சிலுவையை
சுமந்து கொண்டு
காசுக்கடவுள் அல்லாவிற்கு
சேவை செய்த ஆரியவதிக்கு
சம்பளமாய்
இருபத்திநான்கு ஆணிச்சிலுவை.
சுமப்பதற்கென்றே பிறந்ததா
இந்தப் பெண்ணினம்?

மத்திய கிழக்கில்
மன்னிக்கவும்
மத்திம கிழக்கில்
அல்லாவின் புனித
பொல்லாத பூமியில்
எம்தேசப்பெண் ஒருத்தி
சிலுவை ஏற்றப்பட்டாள்.
மனிதனே அல்லாதவனுக்கு
சேவை செய்த குற்றத்துக்காய்.

கூறான் சுமந்த
குறை மதியர்களால்
கூராணிகளால் அறையப்பட்டாள்
மனித முகங்களில்…..!!
மனித மனங்களில்…..!!!

ஐந்து ஆணியிக்குள்
ஆண்டவனுக்கே அரோகரா
மீண்டாரோ தாண்டாரோ
ஆண்டவனுக்கே தெரியாது.
இருபத்திநான்கு ஆணி ஏறியும்
மீண்டாள்
இலங்கை மீண்டாள்.

இனி
புதிய கூறானோ பைபிளோ
ஆண்டவள் ஆரியவதி என எழுதுமா?
அவள் பெண்ணென்பதால்
மீண்டும் புதையுமா?
சிதையுமா?

யேசுவின் உடலில் ஐந்து ஆணிகள்
பிரித்தது உயிர்
ஆரியவதிக்கோ
இருபத்திநான்கு ஆணிகள்
நாட்டில் மீண்டும் உயிர்த்தாள்
ஈழத்தமிழர் உடல்கள் எங்கும்
எத்தனை இலட்சம் ஆணிகள்
மரித்ததே மானிடம்.
மெனளமாய்
கைகொட்டிச் சிரித்ததே உலகம்.
மானிடம் பேசும் மானிடராலே
மானிடத்திற்கு மரணதண்டனை

ஆணிகளின் பின்னால்
அறைந்து கிடக்கிறன மனிதமும்
மானிடமும்.

சிலுவைகளுடன்
நோர்வே நக்கீரா

யாக்கையின் வாழ்க்கை!!! நோர்வே நக்கீரா

யாக்கையின் வாழ்க்கை!!!

பூக்கள் சிரிக்க
பூமகள் சிறப்பாள்
பாக்கள் பிறக்க
பாரே சிறக்கும்.

ஐரோப்பியப் பூக்கள் மலர
மகரந்தம் பறக்கும்
மகிழ்ச்சியை அழிக்கும்.
அழகிய மலர்களின் மகரந்தங்கள்
ஐரோப்பாவில் எமக்கு அலேர்ஜி
ஐரோ மட்டும் என்றும் அலாதி

சொண்டு உண்டு உண்டு என்று
சொண்டு உண்டு
சொண்டிழந்து போனவர்கள்
பொய்வாயை மெய்வாயாக்க
செவ்வாய் செய்கிறார்கள்.
அது செவ்வாயல்ல
செய்வாய்
அழகுறச் செய்வாய்
வாய்களில் மட்டுமா பொய்
வார்த்தைகள்??

கண்கெட்டுப் போனவர்கள்
கண்விட்டுப் போய்விடாது
கண்கீறிப்போகும்
காட்சிதான் அஞ்சனமோ?
கண்களின் வஞ்சகமோ?
கண்கீறிய காயங்கள்
விண்ணேறி வலித்தாலும்
பெண்மனத்தில் இல்லைப் பேதமை
கண்கனத்துக் கொண்டாது
கண்ணீரில் சாதனை

விதியின் கரங்கள்
முகத்தில் எழுதிய
வரைபடம்தானே வயது
அதன் முதிர்வு.
விதியைக் கூட
சதிசெய்து அழிக்கும்
சாதனைதானே மேக்கப்பு (ஒப்பனை)
பெண்ணே கீப்பப்பூ

ஒப்பனையில்லா ஒப்பனை கூட
வைப்பனையாகும் முகங்களிலே
செப்பனை செய்யா கற்பனைக்களத்தில்
காளியின் காட்சியின் தரிசனமே.

கண்ணுக்குக் கலர்வில்லை
கண்மயிருக்கு மஸ்காரா
தலைமுடிக்கு விலைகொடுத்து
கலர் அடித்துக் கலைகாணும்
பொய்முடி தரிக்கும்
மெய் மடிந்த பொய் வாழ்க்கை

கலர் கலராய் கலர் அடித்து- எம்மை
கலர்மனிதர்கள் எனக் கசக்கும்
நிறமிழந்த ஐரோப்பிய
நிஜமற்ற நிதவாழ்க்கை
துவேசம்.

பாசமெல்லாம்
ஆபாசமாகி
ஊர்வேசம் போடுகிறது
ஐரோப்பா

மெய்மேல் மெய் படுத்து
பொய்போகும் வாழ்க்கையை
மெய் என்றும் காட்டும்
காக்கைகளே தின்னத்துடிக்கும்
யாக்கையின் வாழ்க்கைதான்
வாழ்க்கையா?

இச்சேர்க்கையின் சீற்றம்
இலங்கையிலும் தொற்றுதே
தமிழினத்தில் ஒர் ஐரோப்பா
ஊரில் இனி உருவாகும்.

நோர்வே நக்கீரா
11.06.2010

சீனத்துப் பொதுவுடைமை : இதயச்சந்திரன்

Congo_Exploitationஅவர்கள் வரும்போது..
கொங்கோ தேசம், வெறும் ஜனநாய குடியரசு
என்ற பெயரோடு வாழ்ந்தது.
வீதிகள், ரயில் பாதைகள், வைத்தியசாலைகள்,
வானுயர்ந்த கட்டடங்கள் எல்லாம்
கட்டித்தருவேன் என்றார்கள்.
கட்டாந்தரையாக இருந்த தேசம் நிமிர்ந்தது.
 
பதிலாக, மண்ணில் புதையுண்டு கிடக்கும்
மூலவளங்களை சுரண்டிச்சென்றார்கள்.
 
இருபது வருடங்கள் கடந்து விட்டன.
ஒன்பது பில்லியன் டொலர்கள்,
நாற்பது பில்லியன்களாக திறைசேரியில் குவிந்தது.
 
இப்போது, தரைக்கு மேல் கொங்கோவில் கட்டடங்கள்.
மண்ணுக்கு கீழே, ஒன்றுமே இல்லை.
 
வெற்றுப் பூமியில் கோபுரங்கள்தான் மிச்சம்.
சுரண்டிய சீனா உலக வல்லரசு.
 
இதைத்தான் சீனத்துப் பொதுவுடைமை என்று சொல்வார்களோ!
 
இப்படியும் நடக்கலாம்…..
கற்பனையல்ல நிஜம்.

புலத்துத்தமிழா!! நோர்வே நக்கீரா

புலத்துத்தமிழா!!

ஊரை எண்ணி உருகினோம்
          உண்மை அறிய உயரினோம்
தாரை வார்த்து வந்த பூமி – என்றும்
         தாமரை இலைத் தண்ணீர்தானே

வேரை தேட முயல்வதனால்
         விழுதுகளில் வாழ முடிவதில்லை
ஊரை எண்ணி உளல்வதனால்
          உண்மையின் தரிசனம் தெரியதில்லை

பொக்குவாய் திறந்து என்பிள்ளை சிரிக்க
           பக்கென்று சுனாமி தெரியுதயையோ
திக்குவாய் திறந்து தீந்தமிழ் பிறக்க
          தொக்குவாய் ஒப்பாரி கேட்குதையோ

உடலிங்கு இருக்க உயிரங்கு வாழும்
          உரமிங்கு இருக்க பயிர்ரெங்கு போகும்.
கடலிங்கு இருக்க மீனெங்கு வாழும்
          கடனிங்கு இருக்க ஊரிலுடன்கட்டை ஏறும்.

சேவல் செத்த தேசத்தில்
          சேதி சொல்ல யாருமில்லை
ஏவல் செய்து வாழ்வதற்கு – காலையில்
         எகிறி அலறும் அலாரமிங்கே

பூங்காலை பிறக்கும் பூபாளம் பாடி – இங்கோ
          பனிவானம் கொட்டும் பகலள்ளி ஓடி
தேன்காலை என்று ரொட்டியைத் தின்றும்
         தேடிய பணமும் எமைத்தேடாது போகும்

வேரை அறுத்து வந்த உனக்கு
          வேற்று மண்ணில் பவுசுப்பெருக்கு
ஊரை ஊன்றிய மக்கள் தமக்கு
           உத்தமனாய் விடாதே கணக்கு

தலைவிதி தன்னை தானே தீர்க்கும்
           தலையாய கடமை தமிழர்க்குண்டு
கொலைவெறி கொண்டு ஈழம் என்று – மீண்டும்
            கொல்லநினைக்க முள்ளிவாய்காலிலுண்டு

பண்டா நினைத்ததை பிரபாகரன் முடித்தான்
            திண்டாடும் தமிழன் அரசியலைத் தொலைத்தான்
கொண்டாடும் கொடுவினம் கொடியுயர்த்தி கோலோச்ச
            மன்றாடி மகிழுதோ பின்னணியில் த.தே.முன்னணியும்

மண்ணை வேண்டிப் போராடி
           மண்ணாய் போன மன்னர்களே!
கண்ணாய் மனிதம் காட்டி
           காதலி தமிழை மனதில் ஊட்டி

தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்
          தவறிபோனால் இனத்தோடழிவான்
அமிழ் தினிய தமிழைக் காக்க
         எழுந்து வாடா இனத்தை மீட்க

பத்துப் பெத்தால் பரிசளிப்போம்
         பத்தாது போனால் பரிசகியோம்
முத்தாய் எம்மினம் முகிழ்வுறவே
         வித்தாய் விழைவோமா புலத்தினிலே

நோர்வே நக்கீரா

27.02 2010

தமிழ்!! – இனியவன் இஸாறுதீன்

tamilதமிழ்

மொழியெனப் படுவது
இதயங்களின்
உணர்வுத்தானம்

உணர்வுகளின்
இதயப்பாலம்

ஒருவரது சிந்தனையை
இன்னொருவர் அடைந்துகொள்ள
உதவும் வாகனம்

இத்தனை பயனைப் பெற்ற மாந்தர்
தங்களது தாய்மொழிக்குப்
பாராட்டுவிழா நடத்தினர்

அரேபியர் தங்கள் மொழியை
ஆன்மீகமொழி என்று
அறைந்தனர்

ஆங்கிலேயர் தங்கள் மொழியை
வணிகமொழி என்று
வாழ்த்தினர்

இத்தாலியர் தங்கள் மொழியை
இசைமொழி என்று
இயம்பினர்

பிரெஞ்சுக்காரர் தங்கள் மொழியை
காதல்மொழி என்று
கூவினர்

உருதுக்காரர் தங்கள் மொழியை
கவிதைமொழி என்று
‘கஜல்’ பாடினர்

ஆனால் தமிழே
உன்னைத்தான் உலகத்தமிழர்
இதயமொழி என்றே
இயங்குகின்றனர்

முத்துச் சிரித்தால்
உன்னை
முல்லைத்தமிழ் என்போம்

கண் மொழிந்தால்
உன்னை
கன்னித்தமிழ் என்போம்

பரஸ்பரம் நிகழ்ந்தால்
உன்னை
பிள்ளைத்தமிழ் என்போம்

ஆறுதல் வார்த்தையே
உன்னை
அன்னைத்தமிழ் என்போம்

உன் சுவாசம் இல்லையேல்
எம்மிடம்
இல்லை உயிர் என்போம்

தேகமெல்லாம் தித்திக்கும்
தாய்மொழியே

நீ
உதடுகளுக்கு
உண்மையளிக்கிறாய்

உள்ளங்களுக்கு
விருந்து வைக்கிறாய்

உணர்வுகளுக்கு
ஊட்டமளிக்கிறாய்

செவிகளுக்கு
மதுரமாகிறாய்

விழிகளுக்கு
சிற்பமாகிறாய்

உரைத்தால்
இதய நரம்புகளைத்
தித்திக்க மீட்கிறாய்

வரைந்தால்
விழி வழியே
வானவில்லாகிறாய்

இப்படி
உன் செப்படிவித்தையை
செப்புவதெப்படி
ஓ…
எத்தனை அற்புதம் தமிழே

தொன்மைக்காலத்துப் பிறப்பு நீ
மானுடஇதயங்களில்
முளை விட்டாய்

இலக்கியக்கிளைகளில்
வான்தொட்டாய்

இலக்கணத் தளைகளால்
விருட்சமிட்டாய்

அழகியல்க(இ)லைகளில்
நிழல் விட்டாய்

மானுடக்கலையை
மேம்படுத்தி மேம்படுத்தி
மானுடத்திலேயே
மகத்துவமுற்றாய்

எழுதுகோல் உழுதால்
நீ
எழுத்தாய் முளைப்பாய்

எழுத்துக்கள் முளைத்தால்
சொல்லாய் செழிப்பாய்

சொற்கள் செழித்தால்
வார்த்தையாய் விளைப்பாய்

சிந்தனை விளைந்தால்
அறிவாய் கிளைப்பாய்

அறிவாய் கிளைத்தால்
கேள்வியாய் வரமளிப்பாய்

உயிரோடு மெய்புணர்வாய்
உணர்ச்சிகளை வெளிப்படுத்துவாய்
ஜீவன் ததும்பும் சொற்கலையில்
ஓவியம் கொணர்வாய்

உன் ஒலிவடிவம்
இதயம் தொடும்போது
வரிவடிவங்களுக்கு
வனப்பும் கொடுப்பாய்

கற்றால்
எங்கள் கல்விக்கு
நீ
மெய்ஞானம் ஆவாய்

கேட்டால்
கேள்விக்கு
நீ
விஞ்ஞானம் ஈவாய்

மானுட உதடுகள்
இதயத்தில் செதுக்கிய
இதிகாசக் கல்வெட்டு நீ

உன் நயத்தால்
எங்கள் வாழ்வை
வளப்படுத்துகிறாய்

உன் நயனத்தால்
எங்கள் நாவுகளை
நெறிப்படுத்துகிறாய்

எதுவாயினும்
நீ
இதயங்களை
இணைக்கும்போதுதான்
நாங்கள்
பரவசமடைகிறோம் தமிழே

-இனியவன் இஸாறுதீன்-

வேட்டும் வோட்டும்! : ஈழமாறன்

Mahinda_and_Fonsekaகேட்டவன் ஒருவன்
கேட்டுக் கொண்டதால் – பார்த்துப் பாராமல்
வேட்டு வைத்தவன் ஒருவன் – வைத்துவிட்டு
தமிழன் ஓரமாய் இருப்பதாயின் இருக்கட்டும்
அன்றி உரிமை கேட்கின்
உரிவோம் கோவணத்தையும் – என்று
அமெரிக்கா சென்று அறிக்கை விட்டவன் ஒருவன்
அந்த அறிக்கை தவறென்று
மறுக்க மறுத்தவன் ஒருவன்.

அள்ளிக் கொண்டுபோய் துலைவார்
முள்ளிவாய்க்காலில் வைத்து
கொள்ளி வைத்தது போக
முள்ளுவேலிக்குள் அடைத்து வைத்து
வெள்ளத்துக்கு ஒதுங்க
வீடில்லாமல்
பிள்ளைக்கு கொடுக்க மருந்துமில்லாமல்
கூனிக் குறுகி எம்மினம் டெங்குக்
காச்சலில் செத்து மடிகையில்
நாடுகடந்த தமிழீழம் அமைக்க
ஒரு கூட்டம்
போடச் சொன்னவனுக்கு போடுவதா – இல்லை
போட்டுத் தள்ளினவனுக்குப் போடுவதா
ஏன்று வியன்னா சென்று
விவாதம் செய்தனர்
முகாமில் அப்போது டெங்கு பிடித்து
செத்தவர் தொகை நாற்பதைத் தாண்டிற்று
சம்பந்தன் ஜயாவோ
சாகாமல் இருப்பவர்கள் சாரவேண்டியது
யார் பக்கம் என்று
கரிகாலன் பாணியில் கணக்கு விடுகிறார்.

வன்னி மன்னன் வெள்ளைக் கொடியுடன்
பிணமாய் கிடக்க
குரு திசை மாறியது
திரு சம்பந்தன் ஜயாவுக்கு.
பெடறல் தொடங்கி தமிழீழமாகி – பின்
வடக்கு கிழக்காகி
அதுவும் இப்ப இல்லையென்றான பின்னே
சம்பந்தம் ஜயா
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு
சம்பந்தம் பேசுறார்.
பதின் மூன்றோ கூடவோ இல்லைக் குறையவோ
என்றெல்லாம் போய்
வட்டமேசை போட்டு வடையும் தேனீரும்
பானமும் பருகிய கூட்டணிக் கூட்டத்தின்
மிஞ்சிய ஆடு – வன்னி
நரி செத்தபின் சிங்கமாய் மாறி
கோரிககை ஏட்டுடன்
கூட்டடமைப்பின் புறோக்கறாய்
தமிழர் மானத்தை விபச்சாரம் செய்ய
ஏறிறார் பொன்சேகா வீட்டுப் படி
இறங்கிறார் மகிந்த கூற்றுப்படி.
ஜரோப்பவிலோ வட்டுக்கொட்டை
மன்னிக்க கோட்டை தீர்மானத்துக்கு
வாக்கு போட வரிசைல் புலன்பெயர் மாக்கள்.

தமிழருக்காய் இணைய மறுத்தது ஒரு புலி
புள்ளையானைப் போட்டுத் தள்ள
அமைச்சராய் ஆனது இன்னொரு புலி
அறிக்கை வந்தது.
மகிந்த வெல்வதற்கு நான் அம்மானோடும்
இணைவேன்
அம்மணமாயும் அலைவேன் என்று.
கிழக்கின் உதயம் குலுங்கி குலுங்கி அழுதது.

வன்னிப்போரில் விழுவது மாடாய் இருந்தாலும்
மனுசனாய் இருந்தாலும்
சுடுவதை நிறுத்தாதே என்று
கட்டளை போட்டவனும்
சுட்டதை நிறுவியவனும்
வாக்குக் கேட்டு வருவது யாரியடம்?
புலி சுட்டு புருசனை இளந்தவள்
கெலிசுட்டு தனையனை தொலைத்தவள்
பிறந்திரு நாட்களில் தலை வெடித்து
பிணமாய்ப் போன தன்
பிஞ்சுக் குழந்தையின் இரத்தம் காயாது
தினம் வெம்பி அழுபவள்
முறிந்த கால் இன்னும்
ரணமாய்க் கொதிக்க
பிணமாய் கிடப்பவள்
சுpதைந்த மார்பிலிருந்து
சீழ் வடிய கதறித் தவிப்பவள்
பட்ட காயங்கள் தீர சிறு கட்டு
மருந்துகூட இல்லாத
அப்பாவி மக்கள் இவர்கள்
ஈனரே எப்படிக் கேப்பீர் வாக்கு
ஏப்படிப் பாப்பீர் அவர் முகம்.

நாசமாய் போவார்
துலைவார் கூட்டமெல்லாம்
தலைமை எனச்சொல்லி
வாக்குக் கேட்டு வந்தால் – ஒரு பிடி மண்ணள்ளி
துலைவாரே நீவிரெல்லாம்
நாசமாய் போக என்று சபித்துவிடுங்கள்
அதைவிட உங்களிடம் வேறென்ன
வலு மிஞ்சியிருக்கிறது.

புத்தாண்டில் புதுயாகம்: நோர்வே நக்கீரா

2010.jpgபுத்தாண்டில் புதுயாகம்

கந்தகக்காற்று ஊர்கோலம் போனது
யார் யாரோ அரக்கர்களால் – எம்தேசம்
கேவலம்…போர் கோலமானது.

பட்டாசு வெடிக்க
சட்டமில்லை என்று
பாதுகாப்புச் சட்டம் போட்டது
சமாதான நாடு.
சங்காரம் செய்யும் அழிவாயுதப்படையலின்
பிரமாக்கள் என்று
அகிலச்சான்றிதழ் பெற்றது- எம்
நோர்வேயிய நாடு.

யாகம்…விஸ்வாமித்திர யாகம்
விஸ்வமான மித்துருக்களால்;
சத்துருக்க போர் யாகம்.

யாகம் போகம் மாறியும்
தாகம் தாகமென
தியாகம் தியாகமாக -காகம்
கல்லுச் சேர்த்ததே தியாகமானது
வேள்வி…கேலியாகி…கேள்வியானது போ.

அன்று…யாகம் காக்க இராம இலக்குவர்
இன்று எம்மைக்காக்க….யார் சிக்குவர்?
இலங்கையில் இராமாயணம்
இறப்பதே இல்லையோ?

துப்பாக்கிகளுடன் தூங்கி எழுந்து
குண்டுகளிடையே குறுக்கே விழுந்து
ஊரைக்காத்த உத்தம உயிர்கள்
வன்னிமக்களாய்
வனத்தினுள் வதங்கிப் போவதோ?

வெட்டிய தலைகள் மண்ணில் வீழவுமில்லை
வேட்டுவிழுந்து உடலிலுயிர் பிரியுமில்லை
உதிரம் சொட்டும் வாளுடன் வந்து
வோட்டுக்கேட்டு வருடம் பிறக்குதே!
மனிதம் மறந்து வாழ்வு சிறக்குமோ?

தமிழன்…தமிழன் என வேதம் ஓதி
ஈழம்…ஈழம் என்று எண்ணை ஊற்றி
வேளம் வந்து வேவுபார்க்க
சிம்மம் சினந்து சிம்மாசனம் போட்டது.
மிருகம் தூக்கிய மிருகத்தியாகம்
போகமின்றி மிருகமாய் போனது போ…!

தாகம்…தாகம் எனத்தண்ணீர்தேடி
காகம் கல்லைச் சேர்த்ததே மிச்சம்.
இனியும் வேண்டாம் பகைமையின் எச்சம்.
மனிதம் வாழ்ந்தால் அமைதி நிச்சயம்.

பிறக்கும் வருடம் சிறப்பாய் பிறக்க
வீழ்ந்தவை எல்லாம் மிருகமாய் போக
எழுவது எல்லாம் மனிதராய் எழுக
மிருகம் கொண்டு மிருகமானது போதும்.
வாய்மை கொண்ட மனிதவாழுமை வேண்டும்

சாதி சாதியென்று சாய்த்து
சாதித்தது என்ன?
மனிதசாதி ஒன்றே போதும்
மதமும் வேண்டாம்
மார்க்கமும் வேண்டாம் -எமக்கு
மனித மார்க்கமே போதும் போதும்.

வாழும் காலம் மனிதராய் வாழ
புத்தாண்டுப் பெண்ணே
புதுச்சேலை கட்டிவா!!!

நோர்வே நக்கீரா
01 01 2010

தரிசனம்! : நோர்வே நக்கீரா

criticsதரிசனம் – (தத்துவார்த்தக் கவிதை)

உன்முகத்தையே தரிசிக்க முடியாத நீயும்
என்றுமே உன்முகத்தையே தரிசிக்கும் நானுமாகத்தானே
இந்த உலகம் உருண்டு கொண்டிருக்கிறது.
நீ உனக்குரியவனே அல்ல.

முகத்தையே தரிசிக்க முடியாத நீ
அகத்தை எப்படித் தரிசிப்பாய்?
என்விமர்சனங்கள் மட்டுமே
உன் தரிசனம்.

கண்ணாடி முன்னாடி நின்று
பின்னாடியல்லவா தேடுகிறாய்
முன்னாடி நிற்பவனே!

அலங்காரம் செய்கிறாய்
யார் யாருக்கோ அழகாய் இருக்க.
உனக்காக நீ
எப்போ அழகாய் இருக்கப்போகிறாய்?

அது நீயே அல்ல
மாயையின் விம்பம்
நீயாக நீ நினைக்கும்
உன் எதிரி

கண்ணாடியின் பின்னாடி நிற்பவனை
எட்டி அடித்துப்பார்
மறுகையால் உன்னை அறைவான்.
இனியாவது புரிந்து கொள்வாயா
உனக்கு நீயேதான் எதிரி

நீ கண்ணாடியில் காண்பதெல்லாம்
நிதர்சனமே இல்லா தரிசனங்களே.

சுயவிமர்சனம் செய்
மனக்கண்ணாடியாவது தெழிவாகும்

உன்விம்பத்தை காண்பதற்கே
கண்ணா! உனக்கு
கண்ணாடியின் சேவை தேவை.
உன்னை நீ காண்பதற்கு
சுயவிமர்சனம் தேவை.

யார் யாரோ அழகுபார்க்க
மனச்சாட்சியைக் கொன்று
அலங்காரம் செய்யும் நீ
மனமெனும் கோயிலில்
மனச்சாட்சி முன் நின்று
உனக்கு நீயே அழகு செய்
சுயவிமர்சனம் எனும் பூசை செய்

உனக்கு நீயே பூசை செய்
செய்த பாவங்களுக்கு
கண்ணீரால் அபிசேகம் செய்;
சுயமாகும்; நிதர்சனம்
உன் சுயதரிசனம்.

ஆம் நீதானே கடவுள்
நீயே தான் கடவுள்.
கடந்தும் உள்ளவன் தானே கடவுள்
கடப்பாய் உன்னை கடவுளாக.

நோர்வே நக்கீரா
4.12.2009

ஆளுவோருக்கோர் அஞ்சல் : இனியவன் இஸாறுதீன்

IDPs_Cooking(விடுதலைப் புலிகளால் புதைத்துவைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே  முகாம்களிலுள்ள 280000 தமிழ்மக்களை மீளக்குடியேற்றுவோம் என்று கூறுகிறது அரச தரப்பு. அந்த தமிழ் மக்களில் விடுதலைப் புலிகளும் தலைமறைவாகி இருக்கிறார்கள் என்று கூறுகிறது குற்றப் புலனாய்வுப்பிரிவு. ஆனால் ‘நாங்கள் என்ன குற்றம் செய்தோம் – எங்களை இன்னமும் ஏன் அரசியற் கைதிகளாய் அடைத்து வைத்திருக்கிறீர்கள்? ’ என்று அந்த ஆறாத் துயர்கொண்ட அப்பாவித் தமிழ் மக்கள் கேட்கிறார்கள் தங்கள் தாய்மொழியில்)
 
எத்தனை காலம் நாம்
புதைத்து வைத்திருக்கிறோம்
எங்கள் அவலத்தை?

எத்தனை பேரிடம் நாம்
மறைத்து வைத்திருக்கிறோம்
எங்கள்  காயத்தை?

எத்தனை இடங்களில் நாம்
தொலைத்துவிட்டிருக்கிறோம்
எங்கள் கனவுகளை?

எத்தனை தலைமுறையாய் நாம்
தேடிக்கொண்டிருக்கிறோம்
எங்கள் வாழ்க்கையை?

உங்களிடம்தான் கேட்கிறோம்
சொல்லுங்கள் தலைவர்களே!

துடிக்கும் இதயம்
உங்களுக்கிருந்தால்
எங்கள் ஆன்மாவின் பாடலை
நீங்களும் கேட்கலாம்

எங்களை நீங்கள்
என்னவும் செய்யலாம்
எப்படியேனும்
தடுத்து வைக்கலாம்

மானுடத்தை மறுக்கலாம்
மனிதநேசம் எதிர்க்கலாம்
மக்கள் மகிழ்ச்சி கெடுக்கலாம்
மண்ணில் இருக்கத் தடுக்கலாம்

புலிகளை அழிக்கலாம்
போரை நிகழ்த்தலாம்
முட்கம்பி முகாமுக்குள்
முடக்கியும் வைக்கலாம்
ஆனால் நாங்கள்
விடுதலை பற்றியே சிந்திப்பதனை
எப்படித் தடுக்கலாம்?

புழுதியில் புரண்டாலும்
குருதியில் நனைந்தாலும்
வறுமையில் உழன்றாலும்
நாங்கள் வாழ்வதற்கான கனவுகளை
எப்படித் தடுக்கலாம்?

தாட்சண்யமில்லா உங்கள் மனச்சாட்சியை
தீட்சண்யத்தோடு தட்டி எழுப்பினால்
எங்கள் ஆன்மாவின் பாடலை
நீங்களும் இசைக்கலாம்

பேதத்தை வேதமாய்
போதித்துப் போதித்து
(இன)வாதம் வளர்க்கலாம்
சர்வ சன சமரசம் பேசிப்
போதமாய் கதைக்கலாம்

மனிதநெறி இழந்து
மதவெறி பிடித்த
தமிழீழத் தலைவர் போல்
மானுடத்தின் விதையழித்து
மக்களை ஏமாற்றலாம்

வீதிகளில் ஊர்வலம் போன
கொலையாயுதங்களையும்
குடிசைகளுக்குள் ஒழிந்துகொண்டு
எட்டிப் பார்த்த மனிதத்தை
சமாதானம் ஒழித்து
சமாதியாகிப்போன சர்வாதிகாரத்தை
எப்படி மறக்கலாம்?

எங்கள் வானமும்
இருண்டு கிடப்பதால்
எங்கள் சிறகுகளும்
வானம் அறியாததால்
நாங்கள்
சுதந்திரம் பற்றியே சிந்திப்பதை
எப்படித் தடுக்கலாம்?

என்ன நினைக்கிறீர்கள் நீங்கள்?

நீங்கள் நீட்டுகின்ற
கரட் துண்டுகளுக்காகக்
கழுத்தை நீட்டும் கழுதைகள் என்று
எங்களை நினைக்கலாம்
ஆனால்
எங்கள் கனவை
எங்கள் கவிதையை
எங்கள் விடியலை
எப்படித் தடுக்கலாம்?

அக்கிரமம் செய்த அராஜகவாதிகளையும்
அகிம்சாவாதிகளையும் பிரித்தறியும்
நேர்மை நியாயம் எனும் ரசாயனம்
இல்லாமல் போகலாம் உங்களிடம்
ஆனால்
எங்கள் பசியை
எங்கள் சிந்தனையை
எங்கள் ஆன்மாவின் துடிப்பை
எங்கள் தாய்மொழியின் ஓலத்தை
உங்களால் எப்படி ஒழிக்கலாம்?

கூட்டுக்குத் தீ வைத்த
குருவிகள் இல்லை
மனிதர்களில்தானே
நாட்டுக்குத் தீ வைத்த
நயவஞ்சகர்கள்
இதை உணராமலா
ஜனங்களோடும் ஜனநாயகத்தோடும்
விளையாடுகிறீர்கள்?

இழந்த குருதி
இழந்த கண்ணீர்
இழந்த வியர்வை
இப்படி
ஓவ்வொரு இழப்பிலும்
புத்தனின் ஞானம்
முருகனின் கருணை
ஏசுவின் இரக்கம்
அல்லாஹ்வின் அருள் எல்லாம்
மனித நாகரீகம் பார்த்து
மருண்டுகொண்டிருக்கின்றன

அதனால் எச்சரிக்கிறோம்
‘சாதுமிரண்டால் காடு கொள்ளாது’ என்பார்களே
ஆனால்
‘சத்தியம் நிமிர்ந்தாலோ ஜெகமே தாங்காது’