எஸ் குமாரி

எஸ் குமாரி

”இப்ப நாங்கள் அழுவதில்லை. சும்மா பார்த்துக் கொண்டிருப்பம். என்ன நடக்கிறது எண்டு.”: நேர்காணல் தொகுப்பு : ரி சோதிலிங்கம் & எஸ் குமாரி

வன்னி முகாமிலிருந்து தனது உறவினர்களால் பொறுப்பெடுக்கப்பட்டு சாவகச்சேரி – மிருசுவில் பகுதியில் மீள குடியேற சென்ற இளம்தாயொருவர் மனம்விட்டு தனது அனுபவத்தை தேசம்நெற்றுடன்  பகிந்துகொண்டார். சில நாட்களாக அவருடன் உரையாடியதைப் பதிவு செய்து இங்கு தொகுத்துள்ளோம். தனது அனுபவத்தையும் அங்குள்ள நிலைமைகள் மற்றும் தான் இடம்பெயர்ந்த வாழ்கையில் எதிர்கொண்டவற்றையும் அவர் பகிர்ந்து கொண்டார். அவ்விளம்தாய் கல்லூரிப் படிப்பையோ அல்லது பல்கலைக் கழகப்படிப்பையோ கற்றதாகத் தெரியவில்லை. ஆனால் கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் கற்க முடியாத வாழ்க்கைப் பாடத்தை அவர் கற்றுத் தெளிந்துள்ளார். ஆய்வாளர்களும் பேப்பர் மார்க்ஸிஸ்டுக்களும் கைவாராத வலிந்து நிறுவ முயலும் தங்கள் அறிவுப் புலமையை அந்த தாய் போகிற போக்கிலேயே சொல்லிச் செல்கின்றார். இத்தாயினுடைய வாழ்வியல் அனுபவம் ஒரு வரலாற்றுப் புத்தகம் என்றால் மிகையல்ல. தேசம்நெற் வாசகர்களுக்காக அந்தப் புத்தகத்தை திறந்தே வைக்கின்றோம்.

._._._._._.

கச்சாய் எங்கள் சொந்த இடம். எனக்கு ஆறு சகோதரர்கள். மூன்றாவது  சகோதரன் சாவகச்சேரி புலிகளின் பொறுப்பாளராக இருந்த கேடியால் சுட்டுக் கொல்லப்பட்டவர். எங்களுடைய குடும்பம் ரெலோக் குடும்பம் என்ற காரணத்திற்காக 1985ம் ஆண்டு இந்தக் கொலை நடந்தது. மற்றைய சகோரதங்கள் சாவகச்சேரியிலும் பளையிலும் இருந்தவர்கள். அவர்களுடனும் சிலகாலங்கள் தங்கி வாழ்ந்துள்ளோம், இது புலிகளுக்கு பயந்து வாழ்ந்தகாலம். இதன் பின்னர் நாங்கள் சாவகச்சேரியை சொந்த இடமாக ஆக்கிக் கொண்டோம். புலிகளின் காலத்தில் எல்லாம் நாங்கள் சாவகச்சேரி ஆட்கள் ஆகிவிட்டோம். எமக்கு படிப்பதற்கு காசு இல்லை. தொழில் இல்லை. அப்பா தோட்டம் அல்லது கூலி வேலைதான் செய்து பிழைப்பு நடக்கும். என் தம்பி ஜந்தாம் வகுப்பு படிக்கிற காலத்தில் புலிகளின் முகாம்களுக்கு போய் வேலை செய்வார். அந்த நேரத்தில் நல்ல காசு, நல்ல சாப்பாடு கிடைக்கும். எங்கள் குடும்பத்திற்கும் சாப்பாடு கொண்டு வருவார்.

ஆனையிறவு சண்டையுடன் தம்பி புலிகளோடதான். அதற்குப் பிறகு தம்பியுடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. அவர் எங்கேயெனத் தெரியாது. இந்தக்காலம் எங்களுக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை. நாங்கள் கச்சாய் அங்க இங்க என்று அலைந்து திரிந்தோம். எங்கேயாவது ஏதாவது தொழில் துறை கிடைக்குமா அல்லது தோட்டம் செய்ய இடம் கிடைக்குமா என்பதுதான் எங்கட ஏக்கம். அப்பா சாவகச்சேரியில் சந்தை வேலைகளில் கொஞ்சம் காசு உழைப்பார். வேலையில் சாப்பாட்டு சாமான்கள், சந்தை சாமான்கள் வரும். இப்படியே காலம் போய்விட்டது. 1994 களில் சாவகச்சேரியில் இராணுவம் புகுந்து சுடவும் குண்டுபோடவும் தொடங்கி விட்டது. ஒருநாள் அப்பா வீட்டுக்கு வரவில்லை. எங்களுக்கும் அப்பாவிற்கு என்ன நடந்ததென தெரியாது. இந்தக்காலத்தில சாவகச்சேரியில கடைகளுக்குள் சில உடல்களைப்போட்டு எரித்தவர்கள். அதிலதான் எங்கட அப்பாவும் என்று நாங்கள் நினைக்கிறோம். புலிகளும் திடீர் திடீர் என ஏதும் செய்வாங்கள். ஆமியும் அடிக்கும். இப்படி சிலகாலம். பிறகு சனங்கள் வன்னிக்கு போய்விட்டனர். கன காலம் சாவகச்சேரி வெறிச்சோடிக் கிடந்தது.

அம்மா நான் தங்கச்சி  மூன்றுபேரும் பூநகரி வந்தோம், பிறகு கிளிநொச்சிக்கு புலிகளின் பிரதேசத்திற்கு வந்திட்டோம். கிளிநொச்சி வரமுன்னரே அடுத்த தம்பியும் புலிகளுடன் போய்விட்டார். இங்கு வந்த பிறகு நாங்கள் புலிகளுக்கு உதவி செய்தால் காசு வரும் சாப்பாடு, உடுப்பு வரும். நான் அம்மா தங்கச்சி புலிகளின் வேலைகள் செய்வோம். கூட்டுதல், துப்பரவு, தோட்டங்கள் செய்தல், அவர்களின் இடங்கள் துப்பரவு வேலைகள் செய்வோம். இந்தக் காலத்தில் தம்பியின் தொடர்பு திரும்ப வந்தது. தம்பி வரும்போது ஏதேனும் தருவார். உதவிகள் செய்வார். இந்தக் காலம் எங்களுக்கும் காசு நல்ல புழக்கம். பிறகு 8ம் வாய்காலில் ஒருவீடு புலிகளின் ஆட்கள் தந்தார்கள். சின்ன வீடு ஓடுகள் இல்லை. நாங்கள் கிடுகு தகரங்களால் வேய்ந்து அங்கேயே இருக்க ஆரம்பித்தோம்.

எங்கள் மாமாமார் வேறு பெரிய சாதி ஆட்களை கட்டிக்கொண்டு போய்விட்டினம், அவர்கள் திரும்பி வரமாட்டினம். எங்களோட தொடர்புகளும் இல்லாமல் போய்விடும். இப்படித்தான் பல அம்மா வழித்தொடர்புகள் எங்களுடன் தொடர்பு இல்லாமல் போனது. இதுகள் நாங்கள் ஆரம்பத்தில் கச்சாயில் இருக்கும்போது நடந்தது. எங்கட அண்ணாவை சுட்டதில் அம்மாவுக்கு இப்பவும் தான் புலிகளில் கோபம். கேடி சாவகச்சேரி கொடிகாமம் பகுதியில் எத்தனை ரெலோ பொடியங்களை சுட்டவங்கள் என்று அம்மா திரும்ப திரும்ப சொல்லி அழுவா. வருடம் தீபாவளி நல்லநாள் பெருநாள் வரும்போதெல்லாம் அம்மா இதை சொல்லி அழுவா. அப்பாவும் போனபிறகு எங்களுக்கு எல்லாம் மரத்துப்போச்சு. எங்கட அண்ணா லோகல் ரெயினிங் எடுத்தவராம்.  சாவகச்சேரி பொலீஸ்சை ரெலோ தாக்கும்போது ரெலோவுக்கு வேலை செய்தவராம். அம்மா இப்பவும் இதை சொல்லுவா. அம்மாவுக்கு இது பெரிய தாக்கம். எங்களுக்கு அண்ணா என்றுதானே இருந்தது. ஆனால் அம்மா நெடுக கதைப்பா புலிகளைப் பற்றிய கதைவரும் போதேல்லாம் அம்மா அண்ணாவைப் பற்றிய கதையை தொடக்குவா.

நான் கலியாணம் கட்டினவர் புலிகளில் இருந்தது எனக்கு தெரியாது. நான் நினைத்தேன் இவரும் என்னைப்போல புலிகள் சொல்லும் வேலைகளை செய்யதானே வாறவர் எண்டு நினைத்து பழகிக் கொண்டேன். 2001ல் எங்களுக்கு ஒரு பிள்ளை. இப்ப அவரும் எங்க எண்டு எனக்கு தெரியாது. இந்த கடந்த மே சண்டைக்குள்ளே முடிஞ்சிருக்க வேணும். என்னோட அவர் குடும்பம் என்கிற மாதிரியே இல்லை. எப்ப பார்த்தாலும் புலிகளிட்டை போயிடுவார். இடைக்கிடை வந்து போவார். எனக்கு என்ன ஏது என்றெல்லாம் தெரியாது. இப்படித்தான் எங்கட வாழ்க்கை போனது. எதிலும் ஒரு நிரந்தரம் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டியிருக்கிறம். அவருடைய சாதி சனம் அப்பா அம்மா யார் எங்க என்றுகூடத் தெரியாமல்த்தான் இருக்கிறம். இப்ப இப்படி அகதி முகாமில இருக்கிறமெண்டால் ஏன்? எத்தனையோ கதைச்சிச்சினம். பேசிச்சினம். இப்ப என்னடாவென்றால் அகதி முகாமில அரசாங்கத்தின்ர சாப்பாட்டை கேட்டு நிக்கிறம். ஏன்? இவ்வளவு காலமும் சொன்னதுகள் எல்லாம் பொய்யா?

எனது கணவர் தப்பி ஓடியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. சிலருக்கு இயக்க வெறி ஆமியுடன் அடிபட்டுத்தான் சாவேன் என்கிற ஆட்கள். நான் நினைக்கவில்லை இவர் உயிருடன் இருப்பார் என்று. 

இயக்க பெயர் ‘தி…..’ சொந்தப்பெயர் ‘தி…… யோ…..’ பெயர்கள் எவ்வளவு உண்மையானவைகள் என்று கூட நாங்கள் யாரையம் கேட்டதில்லை. இப்ப நான் பல விடயங்களில் விடிந்து எழும்பினமாதிரி இருக்கிறது. இதற்கு முன்பு இப்படி யோசித்தது இல்லையே? வாழ்க்கை என்பது எவ்வளவு விடயங்கள் என்பதை இப்ப இந்த முகாமில் இருக்கும்போது யோசிக்கிறேன்.

இப்பதானே தெரியுது நாங்கள் என்ன மாதிரியான சூழ்நிலையில் இருந்திருக்கிறோம் என்று. இந்த கடைசியாக சண்டை பிடிக்கும்போது கனசனம், புலிகள் எல்லாரும் காட்டுக்கை ஓடினவையள், அவையளுக்கு என்ன நடந்ததோ?, சிலவேளை அவர்களும் பிடிபட்டு இருப்பினம், அல்லது சண்டைபிடித்து செத்திருப்பினம், ஆமிக்கு இது பெரிய பிரச்சினையாக தெரியவில்லை. ஏன் இவ்வளவு காலமும் இப்படியான அழிவை உருவாக்காமல் விட்டுட்டு இருந்தவையள். காட்டுக்கை ஓடின புலிகளுக்கு பிறகும் தொடர்பு இருந்தது. இவையள் சொல்ல சொல்ல அவையளும் அங்க இருந்து அடிச்சவையள் என்று கேள்விப்பட்டோம். எல்லாம் காலையில வெளிக்கிட்டால் மத்தியானம் சேர்ந்திடக்கூடிய காடுகள்தான் பெரிய தூரமில்லை.

முகாமில் நான் அம்மா பிள்ளை தங்கச்சி நாலுபேரையும் இன்னொரு குடும்பத்துடன் பொலிஸ் சேர்த்துவிட்டது. அவையும் 8ம்வாய்காலில் இருந்தவையள். ஆனா எங்களுக்கு அவையளை பழக்கமில்லை. இவையின்ர பிள்ளையை புலிகள் வீட்டுக்கு ஒரு ஆள் எண்டு பிடிச்சுப்போய் பிறகு பிள்ளையே தானாக ஓடிவந்துவிட்டது. இப்ப எங்களோட இருக்குது. பொலீஸ்க்கு தெரியாது. மே மாதம் சண்டை நேரம் இவைகளுக்கு ‘தப்பிப் போனா சுடுவோம்’ எண்டு புலிகள் மிரட்டியதாலே இவர்கள் தப்பி போகாமல் இருந்தவர்கள். ஒருநாள் இவையள் வெளிக்கிட்டு ஒடிப்போக புலிகள் பிடிச்சு வந்திட்டினம். இவர் அந்த நேரம் புலிகள் கேட்ட வேலைகள் செய்தவர் எண்டதால் சும்மா விசாரித்துப்போட்டு விட்டவையள். இல்லாட்டி சுட்டிருப்பினம். அதுக்குப்பிறகு புலிகள் இவையளை போகச் சொல்லியும் இவையள் போகவில்லை. போகச் சொல்லிப்போட்டு சுட்டுப்போடுவினம் எண்ட பயம். அவையள் கெட்டிக்காரர்கள் தங்கட குடும்பத்தோட வந்திட்டினம். கன குடும்பங்கள் தங்கட ஒரு குடும்ப உறுப்பினரை எண்டாலும் இழந்திருக்கினம். எவ்வளவு தான் புலிகள் என்ன சொன்னாலும் சனம் சரியான புத்திசாலிகள். எப்பிடி எங்கேயிருந்து தப்புவது எண்டு ஆட்களுக்கு தெரியும்.

இப்ப சாவகச்சேரி முந்தின மாதிரியே இல்லை. ரவுன் பக்கம் நல்ல மாற்றங்கள். ஆட்கள் கடைகள் கண்ணிகள் எண்டு தொடங்கி விட்டினம். சிலவேளை எங்களுக்கு வன்னி  நிலைமைகளுடன் பார்க்கும்போது இப்படியோ அல்லது முகாமில் இருந்து வரண்ட மண்டைக்கு இப்படி தெரியுதோ என்னவோ. முன்பக்கங்கள் எல்லாம் நல்லாக துப்பரவாகத்தான் இருக்கு. ஊர்மனைகள் பல நல்ல இடங்கள் தோட்ட காணிகள் எல்லாம் காடுபத்திப் போய்விட்டது. முன்பு நாங்க தோட்டம் செய்த காணிகள் பார்க்கவே ஏலாது. அம்மாவுக்கு எல்லா இடங்களும் தெரியும். எங்களுக்கு தெரிஞ்ச சனங்கள் ஒண்டு இரண்டு பேர்தான். மற்றவர்கள் எல்லாம் புதிய பரம்பரை. பழைய ஆட்கள் வெளிநாடு போய்விட்டினம். இல்லாட்டி கொழும்பிலாக்கும். என்னுடைய பார்வைக்கு முந்தினமாதிரி சாதி சனம் எண்டு பார்க்க முடியாதமாதிரி இருக்குது.

இப்ப எங்களுக்கு குடும்ப அட்டை தரப்பட்டுள்ளது. வேற இடங்கள் போகப் பயம். யாரும் என்ன கேட்பாங்களோ என்ற பயம். ஒரு கொஞ்சப்பேர் தாங்கள் தான் எல்லாம் எண்டு நடக்கினம். அவையளின்ர வேலையே யாரும் புலியோ – புலிகளுக்கு ஆதரவு கொடுக்கினமோ எண்டு அறிவது தான். வன்னியை விட இங்கே தான் ஆட்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் அதிகமாக பயப்பிடுகினம். ஆனால் ஆமி நல்லா நடக்குது. சனங்களிடம் தமிழில் பேசுகிறாங்கள் இப்படியே இருந்தா சனமும் பிரச்சினை எண்டு சொல்லாது தானே.

போர் முடிஞ்சது நல்லது போலக்கிடக்கு. எங்களுக்கு புதிய ஊர் வந்தமாதிரி இருக்கிறது. அப்பாவின் அண்ணா இங்கே இருக்கிறார்கள். அவர்களின் மகன்கள் தான் எங்களை இங்கே எடுத்தவர்கள். அவரோ அரசாங்கம் செய்தது சரி என்கிறார். அவையளுக்கு எண்டைக்குமே புலிகளைப் பிடிக்காது. அவருடைய மனைவி ஆட்கள் எல்லாரும் ஈபிஆர்எல்எப் இயக்கத்தோட தொடர்பில் இருந்தவையள். இவையள் எல்லாரும் இப்ப ஈபிடிபி யுடன் வேலை செய்கினம் போலிருக்கிறது. நாங்கள் எதுவும் நடக்கட்டும் எண்டு இருக்கிறம். பல தடவைகள் பல சாவுகளை கண்டுவந்தவர்கள் நாங்கள். இந்த கடைசி யுத்தத்தில்தான் இடம்மாறி மாறி ஓடுறம் என்றில்லை. நெடுக மாறிமாறித்தான் ஓடி ஒளித்து வாழ்ந்திருக்கிறோம். இந்த முறை யுத்தத்தில் இடம் மாறுவதுடன் செல்லடி ரவுண்ஸ் எண்டு ஓடிஓடி பயந்து திரிந்தோம். நாங்கள் கஸ்டப்பட்டு விட்டோம்.

இப்ப இருக்கும் வீடும் நிரந்தரமில்லை. இதுவும் யாருடையதோ தெரியாது. பெரிய வீடு, பெரிய வளவு. வன்னியில பல பேருடன் இருந்தோம், இப்ப தனிய. ஒரு தென்னைமரத் தோட்டம். இங்கு எங்களுக்கு யாரும் என்ன செய்தாலும் யாருக்கும் எதுவும் தெரியவராது. சனத்துக்கும் யாருக்கும் என்ன நடந்தாலும் தெரியவும் விருப்பமில்லை. இங்கே இருப்பது சரியான பயம். இப்ப கொஞ்சம் பயம் தெளியுது. முகாமில் இருக்கும்போதும் இவ்வளவு பயப்பிட வில்லை. யுத்தத்திலிருந்து வந்த எங்களுக்கு இதுதான் பயமாக இருக்கிறது எண்டாலும் எது வந்தாலும் எதிர்கொள்ளுவது நாங்கள் தானே, எத்தனைகளை கண்டநாங்கள். ஆனாலும் எதுவும் நடக்கட்டும் எண்டுதான் இருக்கிறோம்.

எத்தனையோ சாவுகளையும் அழுகைகளையும் பார்த்து விட்டோம். இப்ப நாங்கள் அழுவதில்லை. சும்மா பார்த்துக் கொண்டிருப்பம். என்ன நடக்கிறது எண்டு. பார்ப்பமே அடிபட வேணும் என்று ஒரு சூழ்நிலை வந்தால் என்ன செய்வது சந்தித்தே தீரவேணும். அதிலையும் நாங்களும் சாகலாம். நாங்கள் பிறந்ததே கஸ்டப்பட்ட குடும்பத்தில். பணக்கார குடும்பத்திற்கு தான் மரியாதை, சொத்து சேர்த்த பணம் எண்டு பிரச்சினை. எங்களுக்கு அப்படி ஒண்டுமில்லை. எங்களுக்கு எங்கள் வாழ்க்கை பற்றிய ஏக்கம், பயம் இல்லை. இது வன்னியில் புலிகளோட இருக்கும் போதே இது இல்லாமல் போய்விட்டது. புலிகளும் ஒருமாதிரியான தைரியத்தில் எங்களை வளர்த்திட்டாங்கள்.

நாங்கள் அமைதியாக இருக்கிறம். பெரிசா கொதிச்சு எழும்ப வேணும் என்றால், செய்வது என்றால் எல்லாம் சரிவந்தால் செய்வோம். நாங்கள் தமிழர்கள் போராடியவர்கள் என்ற நிலைப்பாட்டை புரிந்தவர்கள். என்னிடம் வந்தால் நாங்களும் இணைவோம்.

எனது பிள்ளை தானாக வளரும், தானாக படிக்கும். நான் எப்பிடி படித்தேன், வளர்ந்தேன். அப்படி அதுவும் நடக்கும். எல்லாருக்கும் ஏதோ ஒருவழி உண்டு. அது தானா வரும். எங்களிட்டை வரும் வரை பார்த்திருப்போம். இங்கு எல்லாரும் எல்லாரையும் பார்த்துக் கொண்டிருக்கிற இடம் சின்ன சின்ன சந்தேகங்களும் பெரிய பிரச்சினைகளை கொண்டுவரும் போல இருக்கு.

எனக்குப் படிக்க விருப்பம் எப்படி படிப்பது. ஆங்கிலம் படிக்க விருப்பம். நிறைய பத்தகங்கள் படிக்க விருப்பம். ஆங்கிலப் புத்தகங்கள்தான் சரியாக விடயங்களை எழுதும். குமுதம், ஆனந்த விகடன் என்று இந்த குப்பைகள் எங்களுக்கு என்ன சொன்னது. எப்ப சரி சனத்திற்கு நல்ல விடயங்களை எழுதியிருக்காங்களா? கற்பனையாகவே இருக்கும் ஒரு ஆனந்தவிகடன் குமுதத்தில் ஒவ்வொரு தடவையும் தோட்டங்கள் பற்றியோ, ஒரு விவசாயிகளுக்கு ஒரு புத்திமதியோ எழுதியிருந்தாலும் எங்களுக்கு உதவியிருக்கும். இந்த புத்தகங்கள் பணக்காரருக்கு ஒரு பிரச்சினையுமில்லை கற்பனையாக வாசிக்கத்தான் உதவும். எங்களுக்கு அல்ல.

சாவகச்சேரியில் இருக்கிற மக்கள் எல்லாருமே வெளிநாடுபோக வேண்டும் என்றே உள்ளனர். வெளிநாடுகளில் உள்ள நீங்கள் எல்லோரும் ஏதோ எல்லாம் பெரிசு பெரிசா காட்டினால் அதைத்தானே மற்றவர்களும் ஆசைப்படுவினம். ஏன் அவர்களும் ஆசைப்படக் கூடாதா? எனக்கு அப்படி இல்லை. ஆனால் வன்னியில் புலிகளின் பெரியாட்களின் பிள்ளைகள் எல்லோரும்  வெளிநாடு போவதும் வருவதும் எல்லோருக்கும் தெரியும். அவர்கள் தங்களுடைய கப்பல்களால்த்தான் போய்வருவதாக அறிகிறோம். அவர்களுக்கும் இராணுவத்தின் பெரியவர்களுக்கும் தொடர்புகள் அதிகம் உண்டு என எல்லோரும் பேசுகிறார்கள். போராளிகளுக்கும் அவர்களின் வெளிநாடுகளில் உள்ள சிலருக்கும் கூட தொலைபேசி தொடர்புகள் இருந்தது.

புலிகளின் கீழ்மட்ட உறுப்பினர்கள் பெரியாட்கள் பற்றி கதைக்க மாட்டினம். அதெல்லாம் இரகசியமாகவே கருதப்பட்டது. கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கு புலிகள் தங்களை சாக அனுப்புகிறார்கள் என்ற குற்ற உணர்வு பல காலமாகவே இருந்தது. புலிகளின் இயக்கத்திலிருந்த பிரச்சினை இது. ஆனால் இதுபற்றி யாரும் பெரிதாக பேசுவதில்லை. சிலர் தங்கள் தலைவர்களிடம் இதுபற்றி சத்தம் போட்டுள்ளனர். சில லோகல் தலைவர்கள் தாமும் சேர்ந்து சத்தம் போட்டுள்னர். சில பெரிய தலைவர்கள் இவர்களுக்கு அடித்தும் உள்ளனர். புலிகளின் கீழ்மட்டத்து போராளிகள் சிலர் இராணுவத்திடம் ஓடியதற்கு இதுவும் ஒருகாரணம். தாம் சாக வேண்டி வரும் என்ற காரணத்தை தெரிந்தே இப்படி தப்பி ஓடினார்கள். இது கிளிநொச்சியில் நடந்தது. சில பிரிவினர் ஆயுதங்களுடன் தலைவர்களால் அனுப்பப்பட்ட போதிலும் அவர்கள் ஆயுதங்களை எறிந்துவிட்டு உடுப்புக்களை எல்லாம் களைந்து விட்டு நடந்து போய் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர். இப்படி போனவர்களை பின்னால் இருந்த புலிகள் சுட்டும் கொலை செய்துள்ளனர். பலவந்தமாக பிடித்துப் போய் இயக்கத்தில் சேர்த்தவர்களில் பலர் இதை செய்துள்ளனர். இதுவும் ஒருவகையில் புலிகளிடமிருந்து தப்பி ஓடுதல்தான்.

புலிகளின் குறுப் லீடர்ஸ் பெரிதாக படித்தவர்கள் இல்லை. எப்பவும் சிங்களவனுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதிகமான குறுப்லீடர்ஸ் தலைவர்களை சந்தித்ததே கிடையாது. எப்ப சரி ஏதாவது விழாக்கள் மாவீரர் தினம் எண்டு நடந்தால்  கொண்டாட்டம் தான். பெரியவரைப் பார்க்க எண்டு போறது. அங்க சிலவேளை சின்ன தலைவர்கள் தான் வருவினம். பெரிய தலைவர்களை சந்திப்பதே பெரிய விடயம். பல போராளிகள் சொல்லுகிற இடத்தில நின்று அடிப்பாங்கள் சண்டை பிடிப்பாங்கள். மற்றது யார் அடுத்த பக்கத்தில நின்று அடிக்கிறாங்கள் என்றே தெரியாது. சொல்லுற பக்கம் சொல்லுகிற நூலுக்கு அடிப்பாங்க.சொல்லுகிற திசைக்கு அடிப்பாங்க தவறுவந்தால் இவர்களை குற்றம் சொல்லுவாங்கள். இந்தப் பிரச்சினை பற்றி பல புலி போராளிகள் முன்பே பிரச்சினையாக சொல்லுவாங்கள். இவங்கள் எங்களை எப்பிடி குறை சொல்லமுடியும் என்று சத்தம் போடுவாங்கள்.

ஆனால் புலிகளுக்கு இந்த நிலை வரும் என்று எந்தப்புலியும் கனவு கூட காணவில்லை. எப்படியும் தலைவர் ஒரு வழி காண்பார். திரும்பியும் எங்கட இடங்களை பிடிப்போம், அடிபடுவோம் என்றுதான் எல்லாரும் நினைத்தவை. படிச்ச சனம் தங்கட படிப்பு வேலை உத்தியோகம் எண்டதில் சரியான அக்கறை. அதுக்காக இதெல்லாம் தேவையில்லாத சண்டை என்ற பேச்சு அவர்களிடம் இருந்தது. தங்களுக்குள்ள கதைப்பினம். சிலர் புலிகளைப் பார்த்து பேசுவினம், திட்டுவினம் பெரிசா சொல்லப்பயம் சுடுவார்கள் என்று. புலிகள் இப்படி ஆட்களை சந்தேகம் எண்டதும் சுடுவதும் சுட்டதும் தவறு. இது பல பிரச்சினைகளின் ஆரம்பமாக இருந்திருக்கிறது. எல்லாம் காலம் கடந்து தவறி விட்டது.

நாங்கள் கொஞ்சக் காலம் இங்கே இருந்திட்டு மிருசுவில் போக உள்ளோம் எங்களின் வேறு சொந்தக்காரர்கள் உள்ளனர்.

இப்போது சாவகச்சேரி கொடிகாமத்தில் பெருவாரியான ஆட்கள் ஈபிடிபியை ஆதரிக்கிறார்கள் போலத் தெரிகிறது. அவரிடம்தான் எல்லாம் எடுக்கலாம் பெறலாம் என நம்புகிறார்கள். வயது வந்த ரெலோ ஆட்கள் இப்பவும் ரெலோவுக்குத்தான் ஆதரவாக உள்ளனர். இவர்கள் ரெலோ திரும்ப வந்து இயங்கும் என்று நம்புகிறார்கள். எனது உறவினர்கள் ஈபிடிபிக்கு தான் ஆதரவு காரணம் ஈபிடிபி நிறையவே செய்கிறார். வடக்கு அபிவிருத்தித் திட்டம் என்று நிறையவே வேலைகள் நடக்கின்றது. இந்த வேலைகளை குழப்ப யாரும் இடமளிக்க மாட்டார்கள். அரச உதவி டக்ளஸ் மூலம்தான் கிடைக்கும்என நம்புகினம்.

இளவயதினர் போன், வாக்மான், ஜபொட், கமரா, ரிசேட், கப் எண்டு இராணுவத்திடம் உறவு கொள்கிறார்கள். இராணுவம் நல்லா தமிழ் பேசுகிறார்கள். அவர்களுக்கும் பேச வசதியா இருக்கு. சில பெண்பிள்ளைகள் கூட இராணுவத்திடம் பேசுகிறார்கள். அவர்களுக்கு ஒத்த வயதானவர்களிடம் உறவுகளும் வளர்கிறது என எனது அவதானத்திற்கு நினைக்கிறேன். தாய் தகப்பன்மார்கள் கூட பிள்ளைகளை கட்டுப்படுத்த மாட்டார்கள். முன்பு புலிகளுக்கு ஆதரவு அளித்த பலர் இன்று டக்ளஸ்க்குத் தான் வேலை செய்கிறார்கள். இயக்கம் பெரிய பிழை விட்டுவிட்டது. எதுக்கெடுத்தாலும் சுடு, அடி, சண்டை எண்டு இருந்திட்டார்கள். சனங்கள் என்றோ அவர்களின் பிரச்சினை என்பதையோ மற்ற இயக்கங்களை சேர்த்து செயற்பட வேணும் எண்டோ யோசிக்கவில்லை. எல்லோரையும் சேர்த்து போயிருந்தா இந்த பிரச்சினைகள் பல வந்திராது.

முஸ்லீம்கள் இருந்திருந்தால் இயக்கம் எப்பவோ இல்லாமல் போயிருக்கும் ஏனெண்டால் அவை எப்பவும் அரசாங்க அணைவிலதான் இருக்க விரும்புவினம். அரசாங்கத்திற்காக எதையும் செய்வினம். மாறி மாறி வாற அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துதான் தாங்கள் தங்கட அரசியலை பார்க்கிறவர்கள். இயக்கத்துக்கு வேற வழியில்லை. அவையும் நாங்கள் போராட தங்களுக்கு மாநிலம் வேணும் எண்டால் இதென்ன. அவையும் அரசாங்கத்திற்கு எதிராக போராடலாம் தானே. எப்படி நாங்க போராட அவையள் அம்பாறையில் மாநிலம் கேட்பது. இதை முந்தியே கிழக்கு போராளிகள் அடிக்கடி கதைப்பினம்.

முஸ்லிம்கள் எப்பவும் சமயம்தான் முக்கியம். சமயம் தான் கதைப்பினம் தமிழ் இரண்டாம் பட்சம்தான். எங்களோட கதைக்கும்போது தமிழ் எண்டும் சிங்களவர்களோடு கதைக்கும்போது தாம் சிங்களம் படித்தவர்கள் என்றும் பேசுவார்கள். இதை நல்லாக நீங்களே அவதானிக்க ஏலும். இதனாலேதான் இயக்கம் இவர்களை நம்பவில்லை. அவர்களும் தமிழ்தான் தங்கட மொழி என்றால் ஏன் முஸ்லீம் கட்சிகள் தேவை. தமிழ் கட்சிகளல்லோ தேவை. அப்ப அவை சமயம் தான். இது எப்பவும் பிரச்சினையாகத்தான் இருக்கும்.

எனக்கு சிலர் காசு தந்தவைகள். பெரிசின்ர ஆட்கள் எண்டதான் நினைக்கிறேன். ஆனால் அவை சொல்லுகினம் எல்லாம் முடிஞ்சு போச்சு அங்க வன்னியில் ஒருத்தரும் இல்லை எல்லோரும் செத்துப் போயிட்டினம் என்று. எனக்கும் இது தெரியும். ஆனால் பல போராளிகள் கிளிநொச்சி சண்டையின் போது ஆனையிறவு பக்கத்தால் தப்பியோடினவர்கள். அப்படி வந்தவர்கள் இன்னும் பளை மிருசுவில் பகுதியில் இருப்பினம் என்றுதான் நான் நினைக்கிறேன். பிடிபடாமல் இருக்கவும் சந்தர்ப்பம் உண்டு. இதுதான் இராணுவம் இந்தப் பகுதியை கவனமாக அவதானிப்பது என்று நான் நினைக்கிறேன். அதனால் கொஞ்சம் சந்தேகம் எண்டாலே இராணுவம் வந்து விடும். எல்லாப் பக்கத்திற்கும் சந்தர்ப்பம் உண்டுதானே.

சாகவச்சேரி பிரதேசம் முன்னேற்றுவதை பார்த்தால் மகிந்தா யாழ்ப்பாணத்தில் தேர்தலில் வெற்றி பெறுவார் போல இருக்கிறது. சனத்திற்கு சந்தோசம் வாழ்க்கைதான் முக்கியம். சண்டை வேண்டாம் என்று நினைக்கிறார்கள்.

என்ன சொன்னாலும் சிங்கள நாட்டுக்காரங்களை நம்பவே முடியாது. எத்தனை வருடங்கள் எங்களின் உரிமைகளை ஏமாற்றியவர்கள்தான் இந்த சிங்களவர்களும் சுதந்திரக்கட்சியும், ஜக்கியதேசியக்கட்சியும்.

இங்க யாழ்ப்பாணத்தில சனங்களின் போக்கு மாறின மாதிரி வெளிநாடு போனசனங்களும் மாறியிருப்பார்கள். இனி எல்லாம் ஒன்றாகி விடுவாங்க எல்லாம் முடிந்துவிடும்.

ரிஎன்ஏ கூட்டணி எல்லோரும் முன்பு அடிபட்ட கோபம் வைச்சுத்தான் நடக்கிறார்கள். புலிகள் இவர்களை என்றுமே நம்புவதில்லை. நம்பவும் இல்லை. முன்பு புலிகள் மற்ற இயக்கங்களை கொன்றது தவறாகிப் போய்விட்டது. இதை எல்லோரும் கதைக்கினம். அவையள் திரைமறைவில செயற்படுவினம் என்பது புலிகளுக்கு தெரியும். அதால புலிகள் நம்பவில்லை. புலிகள் முந்தியே இந்த கட்சிகளுடன் சந்தோசமாக எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்து இருக்கலாம். பிழைவிட்டிட்டினம். அரசியலைப் பற்றி கவலைப்படாமல் எல்லாம் இராணுவ நடவடிக்கை தான் என இருந்திட்டாங்கள். இது பிழை எண்டு இப்ப விழங்குது. எல்லாம் காலம் கடந்து போய்விட்டது.

மன்னார்ப் பகுதிக்கு ஆமி அடிக்க வரும்போது புலிகள் தங்களுக்கு ஆபத்து என்று விளங்கிக் கொண்டார்கள். ஓடிவிட்டாங்கள். அங்க கொஞ்சம் பிடிச்சுப்போய் பயிற்ச்சி கொடுத்தவர்களை நின்று அடிபடுங்கோ என்றுவிட்டுவிட்டு ஓடிவிட்டாங்கள். அந்த புதிய பிள்ளைகளால் தாக்குபிடிக்க முடியாதுதானே. அதிலும் பலர் பெண் பிள்ளைகள். பலர் துவக்குகளை போட்டு விட்டுப்போய் சரணடைந்து விட்டார்கள். புலிகள் அப்பவே கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவுக்கு ஓடிவிட்டாங்கள். அதால கிளிநொச்சியில பெரிய அடிபிடி இல்லை. இதிலயையும் பிடிச்சு வந்த பிள்ளைகளை அடிபடச் சொன்னால் அவர்களும் சரணடைந்து விட்டார்கள். சரணடைந்தது மட்டுமல்ல ஆமிக்கு என்ன எங்க என்று எல்லா விபரங்களையம் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். ஆமிக்கும் கிளிநொச்சி பிடிக்க இலகுவாகிப் போய்விட்டது.

புலிகளிட்டை செல் இல்லை. பெரிய ஆட்டிலறி இல்லை. இருந்த ஒண்டு இரண்டுக்கு செல்கள் இல்லை. வந்த செல்கள் எல்லாம் கப்பலோட கடலில் அடித்து விட்டாங்கள். ஆட்டிலறி பெரிய சாமான்கள் இல்லாமல் சண்டையில் வெல்ல முடியாதுதானே. வெற்றியே பெரிய சாமான்கள் தான், தான் வெற்றியை தீர்மானிப்பது பெரிய சாமான்கள் தான். துப்பாக்கி சண்டை என்பது எல்லாம் இதற்குப்பிறகு தான். இந்த இடத்திலேயே தோல்வி புரிந்து விட்டது புலிகளுக்கு. ஆனால் புலிகள் மாற்று வழிதேடும் முயற்ச்சிகள் படுதோல்விதான். இந்த இழப்புக்கு காரணம் இது தலைமைகளின்ர தவறு. இதுபற்றி ஏற்கனவே யோசித்திருக்க வேண்டும் எத்தனை வருடமாக போரை நடத்திறவர்கள் இது பற்றி ஏன் சிந்திக்கவில்லையோ?

புலிகளுக்கு மட்டுமல்ல வன்னி சனங்களுக்கும் தெரியும் புலிகள் தோற்பினம் எண்டு. சனங்கள் வவுனியாவிற்கு ஓட வெளிக்கிட்டுவிட்டது. ஓடிப் போறவர்களை தடுப்பதே பெரிய போராகிவிட்டது. இதனால சனமும் புலிகளும் அடிபட தொடங்கி விட்டது. சனங்களை கட்டி இழுத்தால் பிறகு எப்பிடி மக்களுக்கு போராடுறோம் எண்டு சொல்லுறது. இதில இருந்து தான் இந்த தமிழ் மக்கள் அழிவு ஆரம்பிக்கிறது. மக்களை தன்பாட்டில் போகவிட்டிருந்தால் மக்களில் பலர் தப்பியிருப்பினம். இவ்வளவு இழப்புகளும் தமிழரின் சொத்துக்களும் அழிந்திருக்காது. முகாமில் இருக்கிற சனங்கள் இதை  திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கும். சில சனத்திற்கு இதால விசராக்கியும் போட்டுது. இதில் நிறைய உண்மையிருக்கு எண்டுதான் நானும் நம்புறேன். தலைமைக்கு இதுகள் விளங்கவில்லையோ. தங்களையும் தங்கட குடும்பங்களையும் பாதுகாக்கிறதிற்காக புதுசாக பிடித்தவர்களையும் இருக்கிற வளங்களையும் பாவித்தார்களே தவிர தமிழர் போராட்டம், மக்கள் என்பதை மறந்துவிட்டார்கள் என்றே சொல்லுவேன்.

கடைசி காலத்தில கிளிநொச்சி சண்டை காலங்களில் தலைமையின் நடத்தைகள் பற்றி பலருக்கும் ஒரே குழப்பம் இருந்தது. எங்கள் எல்லாருக்கும் விளங்குது ஆனா என்ன செய்யுறது யாரிட்டை யார் சொல்லுவது.

வெளிநாடுகளில் இருந்த புத்திமதி சொன்னவர்கள் பலரை தலைவர் நம்புவதில்லை. அவர்களும் இயக்கம் என்ற பெயரில் களவுகள் தங்களுக்கு சொத்துப்பத்து சேர்ப்பது என்று பல களவுகள் இது தலைவர் பெரிய ஆட்களுக்கும் தெரியும். ஆனால் இங்கேயும் பெரியவர்கள் தங்கட குடும்பங்கள் வசதிகள் எண்டுதானே பார்த்தவர்கள். கீழ்மட்டங்கள் பற்றி பெரிய கவலையே இல்லை. இப்பவும் முகாம்களில் உள்ள தலைவர்களின் மனைவிகள் சொந்தங்கள் இன்னும் அரசாங்கத்திட்ட பிடிபடாதவர்களுக்கு என்ன குறை. இப்பவும் நல்லாதானே இருக்கினம்.

கிளிநொச்சியிலேயே  புலிகளுக்குள்ளே ஆயுதங்களை கீழே போடுவம் என்று தொடங்கி தங்களுக்குள்ளேயே அடிபட்டார்கள். அதில் பெரிய தலைகளும் உருண்டது. சரியா தெரியாது யார் யார் எண்டு. இளந்திரையன் இதில தான் நடந்தது எண்டு பேசப்பட்டது. நான் பார்க்கப் போகவில்லை.  கிளிநொச்சியிலும் புலிகள் ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம் பிழைவிட்டிட்டினம் சனங்கள் இதை சொல்லி சொல்லி திட்டுவாங்கள்.

சனங்களை சுட்டது  நிறையவே நடந்தது. கிளிநொச்சியில சனங்களை தப்பி ஒடவிடாமல் தடுக்கும் நடவடிக்கையில தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையிலும் சனங்களை சுட்டாங்கள். இது பாரிய தவறு. அதுமட்டுமல்ல சனங்கள் இதை மறக்காது முகாமில இருக்கிற சனங்கள் திரும்ப திரும்ப பேசும். ஆமி செல்லடி ஒரு பக்கம் இப்படி புலிகள் சுட்டது இன்னோரு பக்கம். பெரிய பரிதாபம் சனம் மன்னிக்குமா?

சனத்தின்ர கொதிப்பை அகதி முகாமில இருந்து பார்த்திருந்தா தெரியும். வெளிநாட்டுகாரங்கள வந்தா இப்படி எண்டு எல்லாம் புலிகளைப் பற்றி சனம் அதிகம் பேசவில்லை. சனத்திற்கு முகாமில இருக்கிற பிரச்சினைதான் பெரிசா பட்டது வெளியால போறது தான் பெரிசா இருந்தது. இந்த புலிகளின்ட பிரச்சினையை விட தங்கட வாழ்க்கை அநியாயமாகப் போய்விட்டதே எண்ட கவலைதான் எப்பவும் சனத்திடம் இருந்தது. சும்மா சும்மா பிரச்சினைகள் வரேக்க சனங்கள் திட்டும்.

புலிகள் இப்படி சுட்டும் கட்டி இழுத்தும் கொண்டுவராமல் இவ்வளவு தூரம் சனத்தை கூட்டிவர முடியுமா? எல்லாம் கர்மம் தான். இப்படியும் செய்யாட்டி சனம் எப்பவோ ஆமியின்ர பக்கம் போயிருக்கும். சனம் எப்பவுமே தப்பிக்கவே பார்க்கும். ஏன் எத்தனை புலிகள் தப்பி ஓடி உள்ளனர். எவ்வளவு என்று தெரியாது. வேறு பலர் வள்ளம் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள். இந்தியாவுக்கு ஓடிவிட்டினம். யாழ்ப்பாணத்திற்குள் ஓடினவர்கள், காட்டுக்குள் ஓடினவர்கள் பலர் துப்பாக்கிகள் ரேடியோ வைத்திருந்தவர்கள். மே17ம் திகதிக்கு முன்பு புலிகளின் தலைமையுடன் தொடர்பு கொண்டவர்கள் என அறிகிறோம். பிறகு அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. சிலராவது சண்டைபிடித்து செத்திருப்பார்கள். சிலர் ஆமியிட்டை சரணடைந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன் அல்லது ஆமி ஆட்களை முடிச்சிருக்கும்.

இந்த கடைசி நேர சண்டைக்கு புலிகள் தங்களை தயார்படுத்தி இருக்கவில்லை. புலிகளுக்குள்ளே நிறையவே பிரச்சினைகள் நடந்தது. என்ன எண்டு பெரிதாக கீழ்மட்டங்களுக்கு தெரியாது. அதைவிட இடைமட்ட தலைமைகள் தங்கட சுகபோகங்கள், வீட்டுக்கு ஒருத்தரை பிடிப்பதில்தான்  அக்கறை. இதனால் சனங்களிட்டை வெறுப்பு.

பிடித்துவந்த புதியவர்கள் நாளுக்கு நாள் தப்பி ஓட்டம். இதனால் பல பிரச்சினைகள்  மிச்சம் இருந்து பிடித்து வந்தவர்களிடம் ஆயதங்களை கொடுத்து போராடு என்றால் நடக்கிற காரியமா? நடந்த காரியம் எல்லோருக்கும் தெரிந்தது தானே.

வெளிநாட்டில் இருக்கிறவர்கள் தங்கள் சுகபோக கனவுகளில்த்தான் கவனம். இவர்கள் வன்னி வந்து போகும் போதே எங்களுக்கு தெரியும். வன்னிக்கு வரும் போதும் அவர்கள் வெளிநாட்டவர்கள் என்ற மமதையில்தான் வருவார்களே தவிர தமிழர்கள் தமிழருக்காக போராடும் நாங்கள் இருக்கிறம் என்ற நோக்கமில்லாமல் அவர்களின் பேச்சுக்கள் இருக்கும். ஆனால் அவர்களின்ர பணத்திற்காக தலைமையும் அவர்களுக்கு சலுகைகள் கொடுத்து எங்ளை அவர்களுக்கு வேலை செய்விப்பாங்கள்.

சரி வெளிநாட்டில் இருக்கிறவர்கள் இப்ப என்ன செய்கினம். முகாமில் இருக்கிறவங்களுக்கு என்ன உதவிகள் செய்கினம். அவர்கள் புலிகளை அழித்தபிறகு சனத்திற்கு உதவி இல்லையே ஏன்? இப்ப மக்களைப் பற்றி கவனம் இல்லை எண்டால் இவர்களுக்கு முந்தியும் மக்களில் கவனம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இனிமேல் கதைத்து என்ன? எல்லாம் முடிஞ்சு போச்சு. எல்லாரும் தனித்தனியா இருந்து கஸ்டப்பட வேண்டியது தான். இவ்வளவு நாளும் செய்தது அத்தனையும் அவமாய்ப்போச்சு.

இங்க இருக்கிற சனத்திற்கு வெளிநாட்டுகாசு வருகுதாக்கும். யாரும் தோட்டம் செய்யிற அக்கறைகளை காணவில்லை. தோட்டக் காணிகள் எல்லாம் காடுபத்திப் போச்சு எவரைப் பார்ததாலும் வெளிநாடு வெளிநாடு எண்டுதான் பேச்சு. வெளிநாட்டில் எல்லாம் படிப்பு காசு எண்டதான் பேச்சு. டூறிஸ்ட், விசா, 30 லட்சம் இதுதான் கதை. எனக்கெண்டால் 30 லட்சம் எத்தனையோ தலைமுறைக்கு சாப்பிட போதுமான காசு. எனக்கு விளங்கவில்லை ஏன் சனங்கள் வெளிநாடு வெளிநாடு எண்டு பித்து பிடித்து நிற்கிறது என்று.

ஒரு தோட்டக்காணியை எடுக்க எவ்வளவு கஸ்டமாக இருக்கிறது. தோட்டம் செய்தால் வாழ்க்கை ஓடிவிடும். பிறகு இது சந்தை, தெரு என்று எல்லாம் தொடங்கிவிடும். இப்படித்ததான் வாழ்க்கையை தொடங்கலாம். இதைவிட்டிட்டு வெளிநாடு என்பதெல்லாம் எனக்கு விளங்கவில்லை ஊரில இருக்கிற எல்லாரும் வெளிநாடு போனா? என்ன இது? விளங்கவில்லை?

இங்க ஒரு காணிக்கை என்ன புதிசா ஒண்டு பெரிய மரமா வளர்ந்து நிற்குது எண்டு பார்த்தால் அது எல்லாம் நாலு ஜந்து வருடமாய் கவனிக்காத செடிகள். எத்தனையோ பராமரிப்பு இல்லாத தோட்டக்காணிகள் இங்க இருக்கிறது. சனங்கள் ஏன் திடீரென்று காணாமல் போனது வெளிநாட்டுக்கு போயிட்டினமோ? செத்துப் போய்விட்டார்களோ? சனத்திற்கு தோட்டம் போடுறததை விட வெளிநாடு போவதற்கு சரியான விருப்பம்.

கிளிநொச்சி போனால் குளத்து தண்ணியோட தோட்டம் செய்யலாம். இங்க கிணறுதான். கிணறு கஸ்டம். நாங்கள் எங்க தோட்டம் போட்டாலும் அந்த மாதிரி விளையும். கிழங்கு, மரவள்ளி வைச்சாலே போதும் கீரை, தக்காளி, மிளகாய், சட்டிக்கரணை இவ்வளவும் போதும். வாழ்க்கை நிமிர்ந்து விடும். மிச்சம் எல்லாம் வீட்டுக்கு வரும் எங்களுக்கு ரெண்டு ஏக்கர் தோட்டக்காணி இப்ப வேணும்.

வவுனியா தமிழருக்கு நாம் தீண்டத்தகாதவர்கள்; முகாமிலிருந்து வெளியேறிய பெண்ணின் சாட்சியம்: ரி சோதிலிங்கம் & எஸ் குமாரி

Realesed from camps and reached to Vavuniyaகிளிநொச்சியில் வாழ்ந்த ஒரு குடும்பத்தினர் முகாம் வாழ்க்கையின் பின்னர் அங்கிருந்து வெளியேறி வவுனியாவிற்கு இம்மாதம் 5ம் திகதி வந்துள்ளனர். கிளிநொச்சியில் தமது உயர்தர வகுப்புப் படிக்கும் இரு பிள்ளைகளையும் புலிகளிடமிருந்து பாதுகாக்கப் போராடி, பின்னர் செல்லடிக்குள் உயிர் தப்பினால் போதுமென போராடி, மாசி மாதத்தில் ஒரு பிள்ளையைப் பிரிந்த நிலையில் இவர்கள் முகாமிற்கு வந்தனர். ஒரு மாதத்தின் பின்னர் மற்றைய பிள்ளையை உறவினர்களுடன் சந்தித்த போதிலும் அவர்களின் மகன் புலிகளின் வலுக்கட்டாய பயிற்சியில் 10, 15 நாட்கள் அகப்பட்டதால் தற்போது நலன்புரி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களில் 2006ம் ஆண்டின் பின்னர் புலிகளால் கட்டாயப் பயிற்சிக்கு உட்படுத்தப் பட்டவர்களை ஒரு வருடத்தின்பின் தாம் விடுவிப்போம் எனக் கூறியுள்ளனர் எனவும் அவர் சொன்னார்.

தம்முன்னால் மகன் புலிகளால் இழுத்துச் செல்வதை கண்டு இருதய நோயால் பாதிக்கப்பட்ட கணவருடனும் மற்றைய பிள்ளையுடனும் முகாமினுள் அடுத்த போராட்ட வாழ்வை வாழ்ந்தார்கள். வெய்யில் என்றால் இருக்க முடியாத வெக்கை, மழை என்றால் ஈரம் ஊறும் நிலத்தில் பொலித்தீன் துணையுடன் படுக்கை, விடியமுதல் வரும் இலையான்கள், அட்டைகள் பாம்புகள் சுண்டெலிகள் இவற்றுடனும் ஒரு போராட்டம். தற்போது இவற்றைத் தாண்டி வவுனியா வந்தபோதும் தமது போராட்டம் ஓயவில்லை எனக்கலங்கினார்.

தாம் வவுனியாவில் எதிர்நோக்கும் வேதனைகளையும் எப்போது கிளிநொச்சி போவோம் எனகாத்திருப்பதன் காரணங்களையும் எம்முடன் உரையாடுகையில் வெளிப்படுத்தினார்.

நாம் வவுனியாவுக்குப் பதிவுசெய்து ஒருமாதிரி முகாமைவிட்டு வெளியேறிவிட்டோம். இங்கு வந்தால் நாங்கள் கிளிநொச்சிக்காரர் முகாம்காரர் அகதிகள் என்று வவுனியா மக்களுக்கு எங்களில் ஒரு கீழ்த்தரமான எண்ணம். முகாம்காரர் என்றால் ஏதோ குப்பைகள் கூளங்கள் என்றமாதிரி தாழ்வான எண்ணங்கள். எங்களோடு ஒட்டமாட்டினம்.

பள்ளிக்கூடம் போனால் முகாம்பிள்ளை என்று சுட்டிக் காட்டப்படுகிறார்கள். வித்தியாசமாய் நடத்துகிறார்கள். நாங்கள் அனுபவித்தமாதிரி வவுனியா மக்கள் அனுபவிக்கவில்லை. எங்களுக்கு இது சரியான தாக்கமாய் இருக்கிறது. எல்லாம் இழந்து வந்திருக்கிற எங்களை இவர்கள், வேறொங்கோ உலகத்திலிருந்து வந்த தீண்டத்தகாத ஆட்கள் மாதிரி நடத்துகிறார்கள்.

குடியிருக்க வீடு பார்க்கப் போனால் ஒரு இன்ரவியூவே நடத்துவினம். உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்ன வயது. பிள்ளைகள் எங்கே. ஒருபிள்ளை நலன்புரி முகாமில் இருக்கிறதென்று சொன்னாலும் பிரச்சினை. வீடு தரமாட்டாங்கள் என்ற பயம். சொல்லாவிட்டாலும் என்ன நடக்குமோ என்ற பயம். என்ன சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறோம். வசதியாக இருந்தவர்கள் என்று சொன்னால் வாடகை கூடக் கேட்பாங்களோ என்ற பயம். வசதி குறைந்தவர்கள் என்று சொன்னால் வீடு தரமாட்டார்களோ என்ற பயம். நேற்று முழுக்க வீடு பார்க்கப்போய் ஒவ்வொரு விதமான ஆட்களை சந்தித்து வந்தோம். ஜந்தாம் திகதி வந்தோம் இன்னும் ( Nov 18ம் திகதி) வீடு எடுக்க முடியாமல் அலைகிறோம்.

இரண்டு அறைகள் கொண்ட ஒரு மண்குடிசையில் ஒரு அறையில் நான்கு குடும்பம் இருக்கிறோம். இந்த வீட்டில் இருப்பவர்கள் எமக்கு உறவானவர்கள். எமக்கு சில மாதங்கள் முன்பாக வெளியேறினவர்கள். அட்வானஸ் றென்ட் என்று வீட்டுக்காரர் வாங்குவார்கள் ஆனால் மழைக்கு எல்லாப் பக்கத்தாலும் ஒழுக்கு ஒன்றும் செய்து தரமாட்டார்கள். எல்லாம் நாமே பார்த்துக்கொள்ள வேணும். புதிதாக ஒரு தட்டிகூட இறக்க விடமாட்டார்கள். நாங்கள் எவ்வளவு காலம் இருக்கலாம் என்று எதுவும் சொல்ல மாட்டினம் இருந்தாப்போல் எழும்பச் சொன்னால் எழும்ப வேணும் இதில் எதை நம்பி எந்தப் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பது என்றும் யோசிக்க வேணும்.

ஆஸ்பத்திரிக்குப் போனால் நீங்கள் முகாம்காரரோ. கடைக்குப் போனால் நீங்கள் முகாம்காரரோ. எங்கை போனாலும் கிளிநொச்சிகாரரோ முகாம்காரரோ அகதிகளோ என்று தாழ்வான எண்ணங்களே.

இடம்பெயர்ந்து வந்தனாங்கள் கையில் ஒன்றும் இல்லாமல் வந்தனாங்கள் இங்கையெண்டாலும் பிள்ளைகளைப் படிப்பிப்பம் என்று போனால் ‘என்ன சீருடை இல்லாமல் வாறீங்கள்’ என்று கேள்வி. பிள்ளைகளுக்கு ரெஸ்ட் வைத்துத்தான் எடுப்பார்கள். 3ம் வகுப்புப் பிள்ளைக்கும் தேவாரம் பாடச்சொல்லி வாய்பாடு கேட்டார்கள். பாஸ் என்றால்தான் சேர்ப்பார்கள். பெயில் விட்ட பிள்ளையென்றால் எங்கு போகுமோ எனக்குத் தெரியாது. பிள்ளைகளுக்கு படிப்பு முக்கியம் என்று அங்கு போனால் ‘என்ன நீங்கள் நிறச்சட்டை போட்டுக்கொண்டு வந்திருக்கிறீங்கள்? என்ன ஒண்டும் தெரியாதனீங்களே வன்னியில் இருந்தனீங்கள். யூனிபோம் போடவேணுமெண்டு தெரியாதோ?’ என்று கேள்வி. ஆசிரியர்கள் அதிபர் இவர்கள் எல்லாம் படித்தவர்கள் பண்பானவர்கள் நாட்டுநிலைமை தெரிந்தவர்கள் இந்தப் பிள்ளைகள் எந்தச் சூழ்நிலையில் இருந்து வந்தவர்கள் என்று யோசிக்கவில்லைத்தானே. அன்பாக என்றாலும் அவர்களை வரவேற்று கைகுடுக்கத் தெரியவில்லை. டீசன்ட் டிசுப்பிளின் தெரியாதவர்களா இவர்கள்.

வவுனியாவில் பள்ளிக்கூடங்களிலும் வசதிகள் குறைவு. முகாமில் இருந்த படிப்பு இங்கு இல்லை. முகாமினுள் அங்கிருந்து வந்த ரீச்சர்மாரே படிப்பித்தாங்கள். மேசை கதிரை கூட இல்லை. ஒருசில பிள்ளைகளுக்குத்தான் மேசை கதிரை இருந்தது. பிள்ளைகள் நிலத்தில் இருந்து மடியில் வைத்து எழுதுவாங்கள். இருந்த வீடுகளுக்கு லைட் இல்லை. பிள்ளைகள் றோட்டு லைட் வெளிச்சத்தில்தான் படிப்பார்கள். றோட்டு லைட்டுக்கு கீழே பாயைப் போட்டுவிட்டு மடியில் புத்தகங்களை வைச்சுப் படிப்பாங்கள். ஏதோ அந்த நிலைமைகளுக்கேத்த மாதிரி உணர்ந்து அவங்களும் இருந்தாங்கள். இங்கை பள்ளிக்கூடத்திலும் முகாம் பிள்ளையைப் பாருங்கோ நல்லாசெய்யுது என்று மற்றப் பிள்ளைகளுக்கு ரீச்சர் சொன்னாவாம்.

எதற்கும் முகாம் பிள்ளை முகாம்பிள்ளை என்று பிரித்துத்தான் பார்ப்பார்கள். ஒருக்கா உழுக்குளம் பாடசாலையில் ஒரு பிள்ளைக்கு குளவி கடித்து விதையொன்று வீங்கிவிட்டது. பிள்ளைக்கு அதில் ஒப்பறேசனும் செய்த இடம். ரீச்சரிடம் பிள்ளை போய் தனக்கு இப்பிடி என்று சொல்ல அவ அதிபரிடம் அனுப்பிவிட்டா. அதிபர் இன்னும் ரெண்டு பிள்ளைகளைப் பிடித்து அவர்களுடன் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். பிள்ளைக்கு எங்கை நோகுது என்ன நடந்தது என்று ஒருத்தரும் பார்க்கவேயில்லை. இன்னொரு பிள்ளைக்கு கிபீர் சத்தம் கேட்டாலே மயக்கம் வரும். ஒருக்கா கிபீர் வருகுதென்று ஓடிப்போய் ஒழிக்கையில் பிள்ளையின் தலையில் அடிபட்டுவிட்டது. பிள்ளைக்கு கை கால் குளிர்ந்து மயங்கி ஒருமாதிரி வந்து மருந்தெடுத்தது. சில நேரங்களில் அவனுக்கு ஒருமாதிரி வரும். நல்லாய் படிக்கக்கூடிய பிள்ளை. அந்தப் பிள்ளையின் பிரச்சினை என்னவென்று தெரியாமல் அவனை பழக்கவழக்கம் தெரியாத பிள்ளை என்று பேசியிருக்கினம். எங்கடை பிள்ளைகளை எப்பவும் தாழ்வாய்த்தான் நடத்துவினம். சரியான கவலையாக இருக்குது. முகாமிலை தண்ணியதுகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை முகாமிலேயே இருந்திருக்கலாம். வெளியாலை வந்து வவுனியாச் சனங்களோடை துன்பப்படுவது பெருங் கவலையாக இருக்கிறது.

நாங்கள் இங்கை படுகிறபாடு நீங்கள் இங்கை வந்து பார்த்தால்தான் தெரியும். என்னென்ன கஷ்டங்கள் எல்லாம் அனுபவிக்கிறம். என்ன வாழ்க்கையோ. புலிகளின் கட்டாயப் பயிற்சிக்காக சேர்க்கப்பட்ட எமது குழந்தைகள் இப்போது புலிப்பட்டம் சூட்டப்பட்டு உள்ளுக்கிருக்கினம். பொதுமக்கள் எங்களுக்கு அகதிப்பட்டமும் கம்பிவேலி வாழ்க்கையும். வவுனியா தமிழருக்கு நாம் தீண்டத்தகாதவர்கள். நாங்கள் வீடுவாசல் சொத்து சுகம் பிள்ளைகள் படிப்பு எதிர்காலம் எல்லாத்தையும் இழந்து போதாதற்கு வவுனியாவில் மரியாதையும் இழந்து நிக்கிறோம். முகாம் போன ஆட்கள் எல்லாம் பயிற்சி எடுத்த ஆட்கள் என்று பார்க்கினமோ என்னத்தை நினைத்துக்கொண்டு எங்களை இப்படி நடத்துகிறார்களோ தெரியவில்லை. இங்கையிருந்தும் ஒரு இடம்பெயர்வு வரும் என்றுதான் நான் நம்புகிறேன்.

இங்கு காசுக்குத்தான் முதலிடம். வன்னிக்குள் உறவினர்களுடன் நாங்கள் எப்பிடி வாழ்ந்தம். வன்னிக்குள் இருந்த எல்லாரும் ஒன்றாய்தான் இடம்பெயர்ந்து வந்தனாங்கள். ஆனால் இங்கை வந்து பார்த்தால் சொந்தக்காரரோ தள்ளி நிக்கிறாங்கள். வன்னிக்காரரோடை அண்டினால் பிரச்சினையாம். வீடுவாசல் கொடுப்பதற்குப் பஞ்சிப்படுகினம். சில சொந்தங்களுக்கு போன் பண்ணினால் எடுக்கிறாங்களேயில்லை. உங்களையெல்லாம் வைச்சிருந்து விட்டு பிறகு கோட்டு வழக்கு பொலிஸ் என்று நாங்கள் அலைய ஏலாது என்று சிலர் சொன்னார்கள். சொந்தங்களை வைத்திருந்தால் தமக்கு பொறுப்பு செலவு என்று வந்துவிடும் என்றும் யோசிக்கிறார்கள் போலிருக்குது. முகாமுக்குள் இருந்தவர்களை சொந்தச் சகோதரமே வந்து பார்ககாமலும் இருந்திருக்கினம். பிறகு தமக்கு ஏதும் தொல்லை வந்திடுமோ என்ற பயம். எனது தம்பி குடும்பம் முகாமில் இருக்கிறார்கள் அவர்களைப் பார்க்கப் போனபோது இங்கு நாங்கள் படுகிற கஷ்டம் எல்லாத்தையும் சொன்னோம். அங்கிருந்த அதிபர் ஒருவரையும் சந்தித்து கதைத்தேன். வவுனியா வந்து அடிமை வாழ்க்கை வாழுவதைவிட இங்கேயே இருந்துவிட்டு நாம் நேரடியாக கிளிநொச்சிக்கே போவோம் என்று முடிவெடுத்துள்ளார்கள். இந்த 54 வயதில் எதுவுமில்லாமல் வந்து இனிமேல்தான் புதிதாக எல்லாத்தையும் ஆரம்பிக்கவிருப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது என்றார்.

‘கிளிநொச்சி போக விடுகிறாங்களில்லை. ஏன் என்றும் தெரியாது. நாங்கள் எல்லோரும் எப்பிடி ஒன்றாய்ச் சேர்ந்து புலிகளை மீறி இராணுவத்திடம் வந்து சேர்ந்தோமோ எப்படி உந்த செல்லடி குண்டடிக்குள்ளால அடிபிடிக்குள்ளால் வெளியே வந்தோமோ அதேமாதிரி இனி வவுனியாவிலிருந்து நாங்கள் எல்லோருமாக சேர்ந்து உந்த முள்ளுவேலி இராணுவத்தை தள்ளிப்போட்டு கிளிநொச்சிக்கு வெளிக்கிட்டுப் போவதுதான் ஒரே வழி போலுள்ளது’ என வேகத்துடன் சொன்னார்.

”இந்த உயிர்களை கொண்டுவரப் பட்டபாடு கடவுள் ஒருத்தனுக்குத்தான் தெரியும்.” முள்ளிவாய்காலின் சாட்சியம் : ரி சோதிலிங்கம் & எஸ் குமாரி

Wanni_War_ZoneWanni_War_Mullivaykkalவன்னி முகாம்களில் உள்ள ஒவ்வொருவருமே இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் ஏற்பட்ட மிக முக்கிய திருப்புமுனையின் வரலாற்றுச் சான்றுகள். இவர்கள் ஒவ்வொருவருடைய வரலாற்றுப்பதிவும் மிக முக்கிய சாட்சியங்கள். அந்த வகையில் வன்னியில் உள்ள மக்களுடன் தேசம்நெற் தொடர்ச்சியாகத் தொடர்புகளை மேற்கொண்டு அவர்களுடைய கருத்துக்களையும் தகவல்களையும் பதிவு செய்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக வன்னி முகாம்களில் உள்ள சிலரின் கருத்துக்களையும் அவர்கள் தந்த தகவல்களையும் தேசம்நெற் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

ஒக்ரோபர் 16ல் வன்னி முகாமுக்கு தொடர்பு கொண்ட போது உருத்திரபுரம் 8ம் வாய்க்காலைச் சேர்ந்த குடும்பஸ்தருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை நாம் முன்னர் உரையாடியவர்கள் ஏற்படுத்தித் தந்தனர். இரண்டு பெண் குழந்தைகள் ஒரு பையன் என மூன்று குழந்தைகளின் தந்தையான இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும் பின்னைய வாழ்வு கிளிநொச்சியிலேயே சங்கமமமாகியது. இவரது பிள்ளைகள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தை தெரிந்திருக்கவில்லை. அவருடனான நீண்ட உரையாடல் முள்ளிவாய்க்காலின் கடைசி நாட்களைக் கண்முன் கொண்டு வந்த நிறுத்தியது. கேள்வியைக் கேட்பதற்கு எம்மிடம் தைரியம் இல்லை. அவர் என்ன சொன்னாரோ அதனைப் பதிவு செய்தோம். அவருடைய வார்த்தைகளிலேயே உங்கள் முன் பதிவிடுகிறோம்.

‘நான் உருத்திரபுரம், வட்டக்கச்சி, கட்டைக்காடு, விஸ்வமடு, பாரதிபுரம், ஆச்சிக்காணி, இருட்டுமடு, சுதந்திரபுரம், பொக்கணை, முள்ளிவாய்கால் என்று அலைந்து கடைசியில் வன்னி முகாமுக்கு வந்திருக்கிறேன்.

எங்களைக் கொண்டுவந்து முதலில் zone 4ல் விட்டார்கள். இப்ப இரண்டு மாதமாக அருணாசலம் முகாமில் ஒரு யுனிற்ரில் இருக்கிறோம். zone 4 முகாம் செட்டிக்குளம் காட்டுக்குள் இருக்கும் ஒரு சின்ன முகாம். கடைசியாக புலிகளின் பிரதேசத்திலிருந்து வந்தவர்களை இங்கே வைத்திருந்தார்கள். கடைசியாக பிரபாகரனுடன் இருந்த ஆட்கள் என்பதால் இந்த முகாமை ஆமியும் பொலிசும் இது பிரபாகரன் முகாம் என்றும் சொல்வாங்கள்.
 
புலிகள் கடைசியாக நகை அடைவு பிடித்தவர்கள். இது புலிகளின் வைப்பகம். இந்த வைப்பகத்தில் சனங்கள் நகைகளை அடைவுவைத்து காணி, விதைப்பு, உழுவதற்கு நிலம்வாங்க, உரம்வாங்க, புலிகளிடம் காசு கடன் வாங்குவது வழக்கம். மே மாத தொடக்கத்தில் குடும்ப அட்டை இலக்கங்களைத் தந்துவிட்டு உங்கட நகைகளை எடுத்துக் கொண்டு போங்கோ எனச் சொன்னார்கள். பின்பு நீங்கள் காசு கட்டலாம் என்றும் சொன்னார்கள். ஆனால் பிறகு இதையெல்லாம் நிப்பாட்டிப் போட்டுப் போயிட்டாங்கள். ஒருவருக்கும் ஒன்றும் கொடுக்கவில்லை.

பிறகு பார்த்தால் மூன்று உரப்பை நிறைய காசு வந்து கிடந்தது. புலிகள் மூன்று பேர் நின்று ‘காசை அரசாங்கம் எடுத்துப்போடும். சனங்களுக்கு கொடுப்பம்’ என்று சொன்னாங்கள். மற்றவன் ஒருத்தன் சொன்னான் ‘காசு கொடுக்க வெளிக்கிட்டால் சனம் கூட்டம் கூட அவன் ஷெல் அடிப்பான் சனம் சாகும்’ என்று சொல்லிப் போட்டு காசை எரித்து விட்டார்கள். வெள்ளைமுள்ளி வாய்க்கால் அங்காலையும் கடல் இங்காலையும் கடல். ஒரு குறிப்பிட்ட இடம்தானே. ஒரு மூலையில்தான் இருந்தனாங்கள். தொகையான சனங்கள். காசுக்கு சனம்குவிய வெளிக்கிட்டால் குண்டடிப்பான் என்றுதான் முழுக்காசையும் எரிச்சவங்க. ஒரு கிழவிக்கு மட்டும் 18 லட்சம் ரூபாய்கள் கொடுத்தாங்கள். அதை தபால் வாற பையில் போட்டுக்கொண்டு வந்தவ. முழுக்க 2000 நோட்டுகள் புதுக்காசு. எல்லா நோட்டிலும் கடைசி ரெண்டு சைபரும் வெட்டிக்கிடக்குது. அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. zone 4 வரைக்கும் கொண்டு வந்தவ.

5ம் மாதம் முதற் கிழமையிலிருந்து திரும்ப யோசித்தால் மிகப் பயங்கரம். 5ம் மாதம் 8ம் திகதிக்குப் பின்னர் எந்த உடல்களும் யாரும் புதைப்பதில்லை. எங்க பார்த்தாலும் உடல்கள். கடைசிச் சண்டை உக்கிரம். புலிகளும் சாரம் சேட்டுடன் ஆமிக்காரனும் சாரம் சேட்டுடன். யார் எவன் என்று தெரியாமல் நிக்கிறாங்கள். எல்லாப் பக்கமும் எல்லாரும் மாதிரி இருந்தது. முன்பு அரிசிக் கப்பல் புலிகள் வைத்திருந்தார்கள். அந்த இடத்தில் பனைகள் மரங்கள் திடீர் திடீரென எரியும். உக்கிரமாய் புலியும் ஆமியும் அடிபடும்.

நந்திக் கடலுக்குள்ளால் ஒருக்கா தப்பி ஓடிவர முயற்சிக்கையில் என்னுடைய பிள்ளையை புலிகள் பிடித்துப் போட்டாங்கள். எப்படி பிள்ளையை விட்டிட்டு வாறது. அதாலை நாங்கள் திரும்பிப்போய் அங்கேயே இருந்தோம். பிள்ளையையும் கூட்டிக்கொண்டு வரவேணும் எண்டதால் புலிகளின் இடங்களிலேயே சுத்தித் திரிந்தேன். எனது ரக்டர் அங்கு நிண்டது. தென்னங்குற்றிகள் ஏற்ற ரக்டர் ஓட வரச்சொல்லி புலிகள் கேட்டாங்கள். இப்படிச் செய்துகொண்டு இருக்கும்போது 5ம் மாதம் ஒன்பதாம் திகதி எனது பிள்ளையைக் கண்டேன். புலிகள் பிள்ளைக்கு பெற்சீற்றில ஒருசட்டையும் காற்சட்டையும் தைத்துக் கொடுத்திருந்தார்கள். பிள்ளையை ரக்டர் பெட்டிக்குள் தாய் ஏறச்சொல்ல பிள்ளை ஏறிவிட்டது. தளப்பாரால் பிள்ளையை மூடிக்கொண்டு வேற இடத்துக்கு வந்துவிட்டோம். 5, 6 நாளாக எங்களுக்கு சாப்பாடு இல்லை.

அங்க எங்கட ரென்ருக்கு முன்னுக்கு இருந்த தாய் தகப்பன் மகன் 3 பேரும் குண்டு விழுந்து ரென்டுக்குள்ளேயே முடிந்துவிட்டார்கள். பக்கத்து ரென்ட் கடைக்காரர் குடும்பம் 16 பேர். 16 பேரும் முழுதாக முடிந்து போனார்கள். எல்லாரும் ரென்ருக்குள் இருப்பதால் யாருடைய ஷெல் வந்து விழுகிறதென்று தெரியாது. எங்களுக்கு தெரிந்த ஆட்களின் உடல்களை உடனேயே எடுத்துப்போய் புதைப்போம்.

நாங்கள் 5 பேர். பிறகு இன்னொரு உறவினர்களும் சேர்ந்து கொண்டார்கள். இந்தக் காலத்தில் தப்பி ஓடுபவர்களை உடனடியாகச் சுடுவது வழக்கமாகி விட்டது. எங்களுக்குப் பக்கத்தில் ஒரு கலியாணம் கட்டாத வயது வந்த பெண் நின்றவ. அவ ‘சாப்பாடு இல்லை. பசி பட்டினியாய் இருக்குது. எங்களை போக விடுங்கோ’ எண்டு கேட்டு பேசுபட்டா. அவவை புலிகள் எங்களுக்கு முன்னாலேயே சுட்டாங்கள். எங்களை திரும்பிப் போகும்படி சொன்னாங்கள். வந்த இடத்திற்கு திரும்பிப் போய் ரக்டருக்குக் கீழே படுத்துக் கிடந்தோம். திரும்ப இரவு ஒன்பது மணிக்கு தப்பி ஓட நந்திக் கடல் பக்கம் வந்தோம். அன்றுதான் 72 மணித்தியாலத்தில் வெள்ளை முள்ளி வாய்க்கால் பிடிக்கிறது என்ற கடைசித் தாக்குதல் நடந்தது. இந்த இரவில் மட்டும் 1200 பேர்வரையில் செத்திருப்பார்கள். ரக்டர் பெட்டிக்கு கீழே லொறிக்குக் கீழே படுத்திருந்த ஆட்கள் என்று பலர் செத்துப் போச்சினம். தெருத்தெருவா எங்கை பார்த்தாலும் உடம்புகள் துண்டுகள் எண்டு பெரிய அழிவு.

கடைசியாய் 7 பஸ்ஸில் வரக்கூடிய ஆட்கள் மட்டுமே மிச்சம். இது 16ம் திகதி 5ம் மாதம். அப்பவும் புலிகள் ‘ஜசிஆர்சி வரும். ஒபாமா கப்பபல் வரும். போக வேண்டாம்’ என்று எங்களுக்குச் சொன்னார்கள்.

இப்பவும் புலிகளிடமிருந்து தப்பிவர நாங்கள் 18, 20 பேர்கள் வந்து இன்னுமொரு ரக்டர் பெட்டிக்குக் கீழே இருக்கிறம். 2, 3 பிரிவாக சனங்கள் படுத்திருக்கிறம். விடிய எழும்பி கேட்டால் குண்டு விழுந்திருக்குது. குடும்பத்தில் ஒரு பிள்ளையைத் தவிர மற்றவை எல்லாரும் சரி. குண்டுகள் எல்லா இடமும் எல்லா நேரமும் விழுகுது. யார் யாருக்கு என்ன எண்டு எதுவுமே தெரியாத இரவு. விடிந்தபிறகு பார்க்கிறதுகள்தான் மிச்சம்.

இங்க காம்பில் என்னோட என்ர எல்லாப் பிள்ளைகளும் இருக்கினம். பொழுதுபட இரவு நேரங்களில் சிஜடி வந்து எண்ணிப் பார்ப்பார்கள். இரவில் பெண்பிள்ளைகளை அம்புலன்ஸ் வந்து ஏற்றிக்கொண்டு போறாங்கள். விடிய கொண்டுவந்து விடுகிறாங்கள். கேட்டால் விசாரணை என்று சொல்கிறாங்கள். முகாமில் இருக்கிறவங்கள்தான் பொலிசுக்கு சொல்லிக் கொடுக்கிறது. ‘இந்தப் பிள்ளை புலி. புலிக்குப் பயிற்சி எடுத்தது’ என்று. இதை அவங்களும் நம்பி பிள்ளைகளை வவுனியா கச்சேரிக்கு முன்பாக ஒரு தகரத்தால் அடித்த சின்ன முகாம் உள்ளது. அங்கே கொண்டுபோய் விசாரிப்பாங்கள். பின்பு விடிய கொண்டுவந்து விடுவாங்கள். பிள்ளைகளை கொண்டு போனால் பின்னாலை தாய்மாரும் வெளிக்கிட்டு விசாரணை நடத்துற இடத்துக்குப் போய்விடுவினம். அம்புலன்ஸ்தான் பிள்ளைகளை எடுத்துக்கொண்டு போகும். ஏன் அப்படி இரவில் கொண்டு போகவேணும் என்று எனக்குத் தெரியாது. பிள்ளைகளுக்கு அப்பிடி ஏதுமொண்டு நடந்தால் பிள்ளைகள் தாய் தகப்பன் குடும்பம் மனம்சோர்வாக அழுது புலம்பிக்கொண்டு இருப்பினம். இல்லையோ? அப்படி நான் காணவில்லை. எங்கட முகாமிலை பெடியள் ஒருத்தரையும் அப்படி பிடிச்சுக்கொண்டு போகேல்லை. புலிகளில் இருந்த பெடியங்கள் என்று எங்கட காம்பில் ஒருத்தரும் இல்லை. அப்படி ஒண்டும் இல்லை.

முன்பு புலிகளில் இருந்தவர்களை ஓமந்தை வவுனியா மடுக்கந்தை பொலனறுவை இப்படியான இடங்களிலை உள்ளுக்கை கொண்டு போய் வைத்திருக்கிறாங்கள். தாய் தகப்பன்மார் ஜிஏ, ஜிஎஸ் மூலம் கடிதம் எழுதிக் கொடுத்து அனுமதி பெற்று மாதத்திற்கு ஒருக்காப் போய் பார்த்திட்டு வரலாம். அங்கே சாப்பாட்டுக்கு கன்ரீன் இருக்காம். காசு இருந்தால் எதுவும் வாங்கலாமாம். தாய் தகப்பன் போய் பார்த்திட்டு தங்களிட்ட இருக்கிற காசுகளை கொடுத்திட்டு வந்திருக்கிறார்கள். கொலை செய்யப்படுகிறார்கள் காணாமல் போகிறார்கள் என்று அப்படி ஏதும் நடப்பதாக பெற்றோர்கள் போய் வந்தவர்கள் சொல்லவில்லை. அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாகத்தான் போய் பார்த்திட்டு வந்தவர்கள் சொல்கினம்.

நாங்கள் தங்கி இருக்கிற யுனிட்டுக்கு வெளிநாட்டவர்கள் யாரும் வரமுடியாது. இங்கை எங்கட குடும்பத்திற்கு (ஜவர்) தண்ணீர் 6 லீற்ரர் மட்டும்தான். அதுவும் சிலவேளை இரவு 10 மணிக்குத்தான் கிடைக்கும். தண்ணீர் பெரிய தட்டுப்பாடு.

சாப்பாடு என்றால் மா அரிசி பருப்பு கிடைக்கிறது. வெள்ளிக் கிழமைகளில் தருவாங்கள். மற்ற எல்லாச் சாமான்களும் நாங்கள்தான் வாங்க வேணும். ஒருநாளைக்கு நூறு ரூபாவாதல் வேணும். சிலவேளை யாரும் நிறுவனங்கள் வந்தால் சட்டி, பானை, கரண்டிகள் தருவினம். முந்திமாதிரி சமைச்ச சாப்பாடு தாறதில்லை. நாங்கள்தான் சமைப்பது. பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம் உள்ளது. வெள்ளியும் செவ்வாயும் மரக்கறி வரும். வேற ஏதாவது தேவை எண்டால் காசு கொடுத்துத்தான் வாங்கவேணும்.

உடுப்பு துணிகள் யாரும் பார்க்க வருபவர்கள் கொண்டு வந்து தந்தாலேயொழிய மற்றும்படி வேற ஒண்டும் இல்லை.

ரொய்லெட் சிலவேளை கிழமைக் கணக்காய் துப்பரவு பண்ணாமல் இருக்கும். இருந்திட்டு ஒரு நாளைக்குத் தான் துப்பரவு செய்வாங்கள். ரொய்லெட் பெரிய பிரச்சினை.

ரென்ட்ருகள் மழை வந்தால் இருக்க ஏலாது. பெரிய பிரச்சினை வரலாம். தண்ணி உள்ள வரும். 13ம் யுனிட், 3ம் யுனிட் இருப்பது பள்ளமான இடங்களில். மழை வந்தால் மழை வெள்ளத்தில் நீந்த வேண்டிவரும். இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்களை எங்கேயோ கொண்டு போறாங்கள். எங்கேயோ புது காடுவெட்டி புது முகாம் போடுவதாகக் கேள்விப்படுகிறோம். எங்க என்று தெரியாது. மழைவந்தால் இங்க இருக்கேலாது எண்டதாலதான் மாத்துறாங்கள்.

வன்னியில் என்ன நிலவரம் என்று எமக்கு எதுவுமே தெரியாது. வேறு இடத்து செய்திகள் என்று கேட்க எங்கட காம்பில் ரேடியோ இருக்கிறது. தனித்தனிய எல்லோரிடமும் ரேடியோ இருக்கிறது. ஜபிசி ரேடியோ புலிரேடியோ எண்டு கேட்பதே பயம். ஜபிசி புலி ரேடியோ என்று பொலிஸ்காரனே சொல்வான்.

எங்களில் ஜந்துபேர் இன்னொரு குடும்பம் ஆறுபேர் பதினொரு பேர் இருக்கிறம். ஒரு தளப்பார் இருக்குது. பெண்களை உள்ளே படுக்க விட்டுவிட்டு ஆண்கள் வெளியே படுத்துக் கொள்வோம். இரவு பத்து மணிக்குப்பிறகு லைற் ஓவ் பண்ணிடுவாங்கள். எங்களுக்கு லாம்பு தந்திருக்கு.

பள்ளிக்கூடம் பக்கத்தில் உள்ளது. பின்னேரம் ஒரு மணிமுதல் மூன்று முப்பது வரை நடக்கும். பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகிறார்கள். 15ம் யுனிற்றிலும் 6ம்யுனிற்றிலும் ஒரு மருத்துவ சேவை உண்டு. அங்கே போகலாம். ஏலாது என்றால் ஆமிவந்து பார்த்து செட்டிக்குளம் ஆஸ்பத்திரிக்குத்தான் போக வேணும்.

இங்கே இருக்கேலாது. வெளியேவிட்டால் நிம்மதியாக இருக்கும். உறவினர் குடும்பம் வவுனியாவில் இருக்கினம். அவர்களோட போய் இருக்கலாம்.

கிளிநொச்சிக்கு ஆமி வந்தபோது புலிகள் எங்களை விட்டிருக்கலாம். நாங்கள் எங்கடபாட்டில எங்களிட்டை இருக்கிறத்தோடை ஆமியிட்டை போயிருக்கலாம். இப்ப புலிகள் எங்களை ஒண்டும் இல்லாமல் பண்ணிப் போட்டாங்கள். எல்லோரிடமும் நகைகளைச் சேர்த்துக்கொண்டு அவரவர்(புலிகள்) போய்விட்டினம். கையில் ஒண்டும் இல்லாமல் வந்தோம். ஆமி கொஞ்சம் தந்தது பிறகு ஜனாதிபதி மனைவி வந்து சேட்டு சாரம் தந்தார்கள். இது ஜந்தாம் மாதம் 30ம் திகதி என நினைக்கிறேன். பார்வைக்குறைபாடு உள்ளவைக்கு கண்ணாடி கொடுத்து உதவி செய்தார். ஒரு ஆஸ்பத்திரி கட்டித் தந்தவங்கள். படிக்கிற பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட உபகரணங்கள் புத்தகங்கள் உடுப்புகள் சப்பாத்துகள் எல்லாம் தந்தவைகள். எல்லாம் நொந்து கெட்டுப்போனம் அண்ணை. புலிகள் எங்களை கிளிநொச்சியிலேயே விட்டிருந்தால் இவ்வளவு பிரச்சினை அவலம் இல்லை.

காம்பிற்கு வந்தபிறகு zone 4ல் இலங்கை வங்கி வந்து அடைவு வைக்கிறவர்கள் அடைவு வைக்கலாம் என அறிவித்துக்கொண்டு வந்தது. அப்போது எங்களுடன் வரும்போது காசு கொண்டுவந்த மனிசி தன்னிடம் காசு இருக்குது என்றா. மகன் வெளிநாட்டில் இருந்து அனுப்பின காசு என்றும் சொன்னா. காசை எடுத்து வெளியே வைத்தால் 2000 ரூபா நோட்டுகள் எல்லாத்திலும் கடைசி ரெண்டு சைபரும் வெட்டியிருக்குது. இவவும் எதையும் திறந்து பார்க்காமல் காசை வாங்கிக் கொண்டு வந்தவ. செல்லடி ஒருபக்கம் பயம் ஒருபக்கம் யார்உதைப் பார்த்தது. ஆமிக்காரர் பஸ்ஸில் ஏத்திக்கொண்டு வரும்போது மனிசியும் எங்களோடைதான் வந்தவ. இது பொய்யான பணமாக செல்லாக்காசாக இருக்கவேணும். அது அனேகமாக புலிகளின் வைப்பகக் காசாகத்தான் இருக்கும். சிலவேளை வேறு என்ன சனியனோ தெரியாதுதானே அண்ணை. மனிசி கொண்டுவந்த காசு 18, 19 லட்சம் இருக்கும். உடனே பொலிசைக் கூப்பிட்டு கச்சேரி ஆட்களைக் கூப்பிட்டு 80 000 ரூபாய் புத்தகத்தில போட்டாங்கள். அவ்வளவுதான். மிச்சம் பறிமுதல். எனக்கு தெரிய அண்ணை ஆக 80000 ரூபாய்தான் கொடுத்தாங்கள்.

எங்களை வெளியே விடுவாங்களா? என்ன என்று ஒண்டுமே சொல்லுறாங்கள் இல்லையே. ‘முல்லைத்தீவுக்கு அல்லது யாழ்ப்பாணத்துக்கு பதியுங்கோ’ என்று கேட்டால் ஒரு பதிலுமே வருகுதில்லை. ‘கிளிநொச்சிக்கு இப்போதைக்கு போக இயலாது. உங்களுக்கு இங்க முகாம்களில் ஏதும் பிரச்சினை என்றால் கச்சேரிக்கு போய் அறிவியுங்கள்’ என்று சொல்லுவாங்கள். பொலிஸ் வந்து குடும்ப விபரம் இயக்கத்தில் இருந்தனீங்களோ தொடர்பு இருந்ததோ என்றெல்லாம் விபரங்கள் எடுப்பான். ‘சாப்பாட்டுச் சாமான்கள் தாறம் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருங்கோ. எல்லாம் நேரம் வரேக்கை விடுவம்’ என்று சொல்கிறாங்கள்.

‘சனங்களின் வாகனங்கள் கார் லொறி ரக்ரர் எல்லா வாகனங்களும் கிளிநொச்சி கச்சேரி மைதானத்தில் கொண்டுவந்து விட்டிருக்குது. எல்லாம் தரப்படும். பரந்தனில் ஒரு மைதானத்திலும் எல்லாப் பொருட்களும் இழுத்து வந்து விடப்பட்டுள்ளது. அவரவர் பொருட்கள் அவரவரிடம் தரப்படும்’ என்றும் சொல்கிறார்கள். எங்கட வாகனப் புத்தகங்கள் எங்களிட்ட இருக்கின்றது.

ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு தெரிந்த ஆட்களை போய்ப் பார்க்க கதைக்க விடுவார்கள் நான் போய்ப் பார்த்துள்ளேன். பக்கத்திலுள்ள முகாம்களுக்கு போய்வரலாம்.  ஆனந்தகுமாரசாமி முகாமுக்கு காவலுக்கு நிக்கிற ஆமிக்காரங்கள் கொஞ்சம் சேட்டைக்குணங்கள் உள்ளவங்கள். அதால அங்குபோக நான் முயற்சிக்கவில்லை. சில ஆமிக்காரங்கள் குடிச்சுப்போட்டு வெறியில்நிண்டு தெருவில் போய் வரும்போது பெண்களை சேட்டை செய்வாங்கள் மற்றும்படி வேற பிரச்சினைகள் இல்லை.

இங்கு அருணாசலம் முகாமில் பத்தாம் யுனிட்டில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கின்றது. காம்பில் மருத்துவம் செய்யும் சிங்கள டாக்டர் பெண்ணும் சேர்ந்துதான் இந்த கோயிலை அமைத்துத் தந்தார்கள். சனங்கள் கௌரி விரதம் இருக்கிறார்கள். அங்கே 50 ரூபாய்கள் கொடுத்து அர்ச்சனை செய்யப் போகிறார்கள்.

டக்ளஸ் தேவானந்தா எங்கட காம்பிற்கு வந்தார். அவர்தான் வந்து எங்களுக்கு என்ன தேவை என்று கேட்டு எல்லாப் பொருட்களும் அனுப்பி வைத்திருந்தார். எந்த விடயங்களும் எழுதிக் கொடுத்தால் அவரிடம் அது வந்து சேரும். 8, 9 பஸ்ஸில் எல்லோருக்கும் பார்சலாக உடுப்புக்கள் பொருட்கள் அனுப்பி வைத்தார். அவரை கட்டிப்பிடித்து கதைத்தவர்கள் பலர். அழுது குழறி அவரிடம் தங்கடை குறைகளை எல்லாம் சொல்லுவினம். புலிகள் செய்த அநியாயங்களையும், எப்படிச் சனங்களை கொன்று போட்டார்கள் என்றும் சனங்கள் ஒப்பாரி வைச்சு சொல்லிச்சினம். அவரிடம் எந்த விடயங்களும் எழுதிக் கொடுத்தால் அது கட்டாயம் வந்து சேரும். பிறகும் வந்து எல்லா மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கா என்று பார்த்துவிட்டுத்தான் போனவர். கூட்டமொன்றும் வைத்தவர். கூட்டத்தில் ‘ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் ஒற்றுமையாக இருக்கவேணும் நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்’ என்றார். வேறு ஆட்கள் யாரும் வந்து எங்களைப் பார்க்கவில்லை.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் எங்களால் வாக்களிக்க முடியாது. நாங்கள் எல்லாம் கைதிகள் அண்ணை. அங்கே எல்லோரும் எங்களை கைதிகள் என்றுதான் கதைப்பினம். வாக்களிக்க விட்டால் சனங்கள் ரணிலுக்குத்தான் போடும்.

முள்ளிவாய்க்காலில் சண்டை நடந்த காலங்களில் மே 8ம் திகதிக்குப் பிறகு எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. ரேடியோ இல்லை. ஒரு பாதர் இருந்தவர் அவர் ரேடியோ கேட்டுச் சொல்வார். ‘வெளிநாடுகளில் உண்ணாவிரதம் இருக்கினம்’ என்று சொன்னார். அந்த பாதரும் செத்துப் போனார்.

மே மாதம் 8ம் திகதியிலிருந்து மே மாதம் 18ம் திகதிவரை சரியாய்க் கஷ்டப்பட்டுப் போனம். பயம். எண்டைக்கும் இப்படிப் பயந்ததில்லை. மரணப்பயம். எங்களோடை இன்னொரு பொடியனும் இருந்தவர். அவர் மனைவியையும் தாயையும் அனுப்பிவிட்டு எங்களோட நிண்டவர். தானும் சேர்ந்து போனால் ஆம்பிளை எண்டுகண்டதும் கட்டாயம் புலிசுடும் எண்டதால் தான் நின்றுகொண்டு அவங்களை அனுப்பி வைத்தனான் என்று சொன்னார். உடுக்கிற சீலையில் பதினொரு மண்மூட்டைகள் கட்டி வைத்திருந்தனாங்கள். எந்த நேரமும் நாங்கள் தப்பியோட வழி பார்த்துக் கொண்டுதான் திரிந்தோம். இது மே மாதம் 12ம் திகதி பின்னேரம். தேத்தண்ணி போட சீனி இல்லை. பசிவேறு. சீனி வாங்க காசு இல்லை. ஒண்டரைக் கிலோ சீனி 5500 ரூபாவுக்கு விக்கிறாங்கள். 13ம் திகதி விடிய இந்தப் பெடியன் தேத்தண்ணி குடிப்பம் எண்டு கடைக்குப் போனவர் திரும்பி வரேல்லை. கடைக்குமேல் ஷெல் விழுந்து அதில நிண்ட எல்லாரும் சரி. இந்தப் பெடியன் யார், எவன், எந்த இடத்தவன் ஒன்றுமே தெரியாது. அந்தப் பெடியனை நாங்கள் கட்டின மண்மூட்டையை அவிழ்த்து மூடிப்போட்டு இடம் மாறிவிட்டோம்.

இடம் அடிக்கடி மாறுவோம். அந்த நேரம் ஒரு இடம் ஒரு பங்கர் எண்டு ஒண்டுமே நிரந்தரம் எண்டில்லை. அலைஞ்சு கொண்டும் ஓடிக்கொண்டும் பதுங்கிக் கொண்டும் தலைவிதிப்படி நடக்கட்டும் என்றுதான் திரிஞ்சோம். இப்படி கொஞ்சம் அல்ல பல பேர்கள். தாய் தகப்பன் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு ஒட புலிகள் பிள்ளைகளை சுட்டு செத்த சம்பவங்கள் பல நடந்தது. தப்பி ஓடுகிற சனங்களை தண்ணீக்கை போகவிட்டு புலிகள் சுட்டாங்கள். சனங்களின்ர கைகள் கால்கள் துண்டாடுகிற மாதிரி சுட்டவங்கள். அப்பிடியும் சனங்கள் தப்பி ஓடினது தான்.

15ம் திகதி ஆமி கிட்ட வந்திட்டாங்கள் நானும் பிள்ளைகளும் நிக்கிறம். என்ர கையில் ஒரு சாறம் சேட்டு மட்டும் தான். கட்டியிருந்த சாறம் அவிட்டுவிட ஏலாது கிழிஞ்ச சாரம். ஆமியிட்ட போவம் எண்டு வெளிக்கிட்டோம். வெளிக்கிட இயக்கம் ‘விடமுடியாது’ எண்டது. ‘ஜசிஆர்சி வருகுது. எங்கள் எல்லாரையும் காப்பாற்ற அமெரிக்க கப்பல் வருகுது. திரும்பிப் போங்கோ’ எண்டு கலைச்சு விட்டிட்டாங்கள். அப்படிச் சொன்ன புலி உறுப்பினர்கள் ‘யார் என்று தெரியுமோ’ என்று கேட்க இல்லை அவர்கள் எல்லாரும் புதியவர்கள். 7 பேர் நிண்டாங்கள். ‘நாங்கள் ஒரு கூட்டம் கூடி முடிவு எடுத்துள்ளோம். ஒபாமா கப்பல் அனுப்புகிறார். ஜசிஆர்சி கப்பல் வருது. ஒருபிரச்சினையும் இல்லை. எல்லாரும் தப்பிப்போகலாம்’ என்று தடுத்தார்கள். அந்த நேரம் நிண்ட ஆட்களும் மிக கொஞ்சம். கன சனம் தப்பி ஓடிவிட்டது. நான் பிள்ளைகளை தண்ணீக்காலை கொண்டு போகேக்கை புலிகள் சுட்டுப் போடுவாங்கள் எண்ட பயத்தில் தான் நிண்டனாங்கள்.

பிறகு நாங்கள் பனங்குத்திகளுக்கை படுத்துக் கிடந்தோம். இங்கே தான் அந்த நியாயம் கேட்ட பொம்பிளையை சுட்டவங்கள். இதில ஒரு பனை நிழலுக்கு அப்பிடியே நீளத்துக்கு சனங்கள் 20 பேர் மட்டில நிழலுக்கு இருந்தவைகள். இவர்கள் ஆமியின்ர பக்கம் ஒட ஆயத்தமாக இருந்தார்கள். ஆமியும் ஒரு கூப்பிடு தொலைவிலேதான் நிண்டது. ‘அங்கால போங்கோ இங்க நிக்காதேங்கோ’ எண்டு புலிகள் சத்தம் போட்டாங்கள். பிறகு ஆமிக்கு புலிகள் கிரனைட் எறிய ஆமி திருப்பி அடிச்ச ஷெல் இந்த சனங்களுக்குப் பக்கமாய் விழுந்து. அதில 17 பேர் செத்துப் போயிட்டினம். இது 16ம் திகதி பகல் 1 மணிக்கு நடந்தது. நாங்க ஒரு கொஞ்சப் பேர்தான் பெருந்தோகையான சனங்கள் வேறு வேறு இடங்களால ஓடித் தப்பிவிட்டினம். நாங்கள் ஒரு கொஞ்ச நாய்களிட்டை எம்பிட்டிட்டோம். நிண்டு அலைக் கழிஞ்சது தான். பிள்ளைகளை சுட்டுப்போடுவாங்க எண்ட பயம்.

எங்கட ஊரில நீர்ப்பாசன இலாகாவில் வேலை செய்தவர். அவரின் பிள்ளை இயக்கத்தில் பிடித்து வைத்திருந்தவங்கள். பிள்ளையையும் கூட்டிக் கொண்டு போய்த்தப்புங்கோ எண்டு புலி ஒருத்தன் கூட்டிக் கொண்டு வந்தான். இன்னுமொரு பொம்பிளைப் பிள்ளையும் – 10ம் வாய்க்கால் பிள்ளை -வந்தது. இந்தப் பிள்ளையின்ர தாய் தகப்பன் முந்தியே வவுனியாவுக்கை ஓடி வந்துவிட்டினம். இயக்கம் இந்தப் பிள்ளையையும் பொடியனையும் கூட்டி வந்து தப்பி போங்கோ என்று காட்டிவிட்டு முழங்கால் அளவு தண்ணீக்கை போகவிட்டுட்டு பொடியனையும் பொம்பிளைப் பிள்ளையையும் சுட்டுப் போட்டாங்கள். நான் ரக்ரரில் குத்திகளை ஏற்றி வந்து போட்டுவிட்டு பக்கத்தில பார்த்துக்கொண்டு நிண்டேன். இவ்வளவும் எனக்கு முன்னால நடக்குது. பொடியனுக்கு காதிலும் நெஞ்சிலும் காயம். பொம்பிளைப் பிள்ளை உடனேயே செத்துட்டுது பொடியன் காயத்துடன் ‘அப்பா அம்மா’ எண்டு தகப்பன்ர காலைப் பிடித்து கெஞ்சுகிறான். பொடியனை தூக்கிக் கொண்டு கிட்ட இருந்த இயக்கத்தின்ர ஆஸ்ப்பத்திரிக்கு போக ‘எங்களிட்டை மருந்து ஒண்டும் இல்லை. போங்கோ’ எண்டு கலைச்சு விட்டினம். பிறகு பொடியனும் செத்துப் போச்சு. மண்ணில் ஒரு அரை அடி தாளம் கிடங்கு கையால கிண்டி உடனேயே தாட்டுப்போட்டோம்.

அந்தப் பொடியனுக்கு ஒரு 22 வயது இருக்கும். இந்த பொடியன் இயக்கத்தில் இருக்கவில்லை. கோயில் துப்பரவு பண்ணி தேவாரம் பாடி கோயில் வேலை செய்கிற பொடியன். வீட்டுக்கு ஒருத்தர் வரவேண்டும் எண்டு கட்டாயப்படுத்தின நேரம் புலி பிடிச்சுக் கொண்டு போனது. பிறகு இவனை தகப்பன் இயக்கத்திலிருந்து களவாக கூட்டிவந்து மல்லாவியில் ஒளிச்சு வைச்சிருந்து. பிறகு திரும்ப முள்ளி வாய்க்காலில் இந்தப் பொடியன் பிடிபட்டுப்போச்சு.

எங்களுக்கு மற்றமற்ற பக்கங்களில் என்ன நடக்குது எண்டு தெரியாது. விடிய 5.30க்கு மேல் ஒருத்தரையும் காணவில்லை. புலிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. ஆமி ஒரு 50 யார் தூரத்தில் மண் மூட்டை கட்டி நிற்குது ‘கெதியா வாங்கோ. கெதியா வாங்கோ’ எண்டு ஆமி கையை காட்டினாங்க. நானும் பிள்ளையளோட ஆமியிட்டை ஒடிவந்திட்டோம். ஒரு பிஸ்கட் பைக்கட்டும் தண்ணீர்ப் போத்தலும் தந்தாங்க. பிறகு பஸ்ஸில் ஏத்தி இங்க வந்தோம்.” என்று தன் மரண அனுபவத்தை அவர் எம்முடன் பகிர்ந்துகொண்டார். ”முகாமில் முக்கியமான சில பெண்கள் இருக்கினம். அவர்கள் தான் யார் வந்தாலும் முன்னுக்கு போய் கேள்வி கேட்பார்கள். பிரச்சினைகளை சொல்லுவார்கள். அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அவர்களுடனும் கதைக்கலாம்” என்று ஒரு பெண்மணியிடம் தொலைபேசியை வழங்கினார்.

இராமநாதன் முகாம் குடும்பப் பெண் ஒருவரின் கதை இது: ”சேர்த்த பணங்களையும் சொத்துக்களையும் அநியாயமாக இழந்து ஒன்றுமில்லாமல் இருக்கிறோம். ஒரு இடி சாம்பலும் மக்களுக்கு செய்ய மாட்டாங்கள். தாங்கள் தங்கட வாழ்க்கையை பார்த்துக் கொண்டு போய்விட்டாங்கள். இவங்கள் எப்பவோ போயிருந்திருக்க வேணும். இந்தச் சிதறுவார் என்ன செய்தவங்கள். நாங்கள் கட்டின வீட்டிலும் இருக்க முடியவில்லை. உழைச்ச காசையும் நாங்கள் அனுபவிக்கவில்லை. எப்ப பாத்தாலும் வரி அது இது எண்டு காசை பறிப்பது தான் தொழில். மனிசருக்கு உதவாத நாய்கள் இவங்கள்.” என்று அப்பெண் கடும் கோபத்துடன் கூறினார்.

அப்போது அங்கு வந்த அப்பெண்ணின் மகளுடனும் கதைக்க முடிந்தது. மகள் வருமாறு தனது முகாம் அனுபவத்தைத் தெரிவித்தார். ”எனது பள்ளி நான் இருக்கும் முகாமுக்குள்ளேயே இருக்கின்றது. அன்று (16ம் திகதி) நான்கு பாடங்கள் தான் நடந்தது. மற்றப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் வரவில்லை. எனது சகோதரர்கள் கதிர்காமர் முகாமுக்குப் போய்ப் படிக்கின்றனர் (அவர்கள் உயர்தர வகுப்பினர்)” என்றும் கூறினார்.

படிக்கக்கூடிய தனது பிள்ளைகளுக்கு படிக்க வசதியான இடமில்லை என தாய் குறைபட்டா. தொடர்ந்து தாய் கதைக்கையில் ”தமக்கு அரிசி சீனி பருப்பு மா தேங்காய் எண்ணெய் இதோட ரின்மீனும் சோளன் மா பைக்கற்றும் தருவார்கள். இந்தக் கிழமை ரின்மீன் தரவில்லை. குடிக்கிற தண்ணீர் தரப்படும். குளிப்பதற்கு குழாய்க் கிணறு இருக்கின்றது. மற்றது லைன் பைப்பிலும் ஒரு யுனிட்டுக்கு ஒரு மணித்தியாலம் தண்ணீர் தருவாங்கள். நாங்கள் வாளியைப் போட்டுவிட்டு வரிசையாக நிண்டு குளிப்பம்” என்றார்.

ஒக்ரோபர் 17ல் எம்முடன் கதைத்த குடும்பத்தினருடன் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றபோது: ‘அவர்கள் அன்று தீபாவளி கோவிலுக்குப் போய்விட்டார்கள்’ என்று கூறினார்கள். எனவே வவுனியாவில் வதிபவரும் எனக்கு வேறு ஆட்கள் தொடர்புகள் கிடைக்க உதவுபவருமான ஒருவருடன் தொடர்பு கொண்டேன். “அவனவனன் இஞ்சையிருந்து எங்கையாவது வெளிநாட்டுக்கு ஓடித்தப்ப திரியிறான். நீங்கள் என்னடாவெண்டால் உங்கை இருந்துகொண்டு இங்கை என்ன நடக்குது எண்டு கேட்டுக்கொண்டு. உங்களுக்கு வேற வேலையில்லையோ?  உங்கட பிள்ளை குட்டி குடும்ப அலுவல்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருங்கோ” என்றார்.

இருந்தாலும் அவர் வவுனியாவில் உள்ள தன்னுடைய நண்பருடன் தொடர்பை ஏற்படுத்தித் தந்தார். ”வவுனியாவிற்கு சனங்கள் தொகையாக வெளியேறி வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு காம்பில் கொடுத்த சாமான்கள் கொடுத்த பருப்பு சீனி கூடுதலாக சேர்ந்தால் வெளியே வரும்போது கொண்டுவர விடுவாங்கள். அதை விற்றால்த்தான் அவர்களுக்கும் மற்றச் செலவுக்கு காசு வரும். அதால விக்கிறாங்கள். உள்ளுக்க பருப்பு 30 ரூபா என்றால் வெளியில் அதை 60 ரூபாக்கு விக்கினம். கொழும்பு மார்க்கற் 170 ரூபா. வெளியால வாறவங்க உள்ளுக்குள் இருக்கும் ஆட்களிட்டை 30 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டுவந்து 60 ரூபாய்க்கு விக்கினம். உள்ளுக்குள் இருப்பவனுக்கும் காசு. வெளியில வந்தவருக்கும் காசு. இப்படி பிழைக்கத் தெரியாட்டி வாழ இயலாது என்றார்.

கனசனத்தை வெளியால கொண்டுவந்து பள்ளிக்கூடத்தில வைச்சு தங்கட தங்கட ஆட்களோட போக விட்டிட்டாங்கள். இப்படி தொடர்ந்து நடக்குது.

இனிமேல் ஏதும் புதிசாய் பிரச்சினை வந்தாலும் அவன்ர ஆமி சமாளிக்கும் எண்ட துணிவு அரசாங்கத்திற்கு வந்து விட்டது” என்றார் அந்த நண்பர்.

உருத்திரபுரம் 8ம் வாய்க்காலைச் சேர்ந்த குடும்பஸ்தருடன் ஓக்ரேபார் 24ல் மீண்டும் கதைத்தேன். இப்போது முன்னர் உரையாடியவரின் மனைவியுடன் பேசினோம். அவர் சொன்னார் ”இன்று புதிதாக வவுனியா மானிப்பாய் போக உள்ளவர்களுக்கு ரோக்கன் தந்திட்டார்கள். எங்களுடைய ரோக்கன் நம்பர் இரண்டாயிரத்து எழுநூற்றிச் சொச்சம். நாங்கள் வவுனியா போக ஆயத்தம் எப்ப ஏற்றுவது என்று தெரியாது. முல்லைத்தீவு. மல்லாவி துணுக்காய், பாசியன்குளம் இடங்களுக்கு போக உள்ளவர்களுக்கும் ரோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. இனி சிஜடி விசாரித்து ஏற்றுவார்கள். வயது கட்டுப்பாடுகள் உள்ள பிள்ளைகளை புலிகளுடன் தொடர்புகள் இருந்தவர்களா என சிஜடி விசாரிப்பார்கள். சிலநேரங்களில் மற்றவர்கள் இவர்கள் புலியில் இருந்தவர்கள் என்றும் சொல்லிக் கொடுப்பார்கள். அப்படி புலிகளுடன் தொடர்பு உள்ளவர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி, மனம் மாறக்கூடிய பயிற்சிகள் அளிக்கப்படும். வயது கட்டப்பாடு உள்ள பிள்ளைகளுக்கு கட்டாயம் விசாரணைகள் இருக்கும்” என்றார்.

முகாமில் உள்ளவர்களிடம் புலிகளினால் ஏற்ப்படுத்தப்பட்ட வயது கட்டுப்பாடு உள்ளவர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் உண்டு. அதாவது இந்த இளம் வயதினர் முன்பு புலிகளிடம் அனுமதிபெற்றே போகவேண்டும். இன்று சிஜடி விசாரணையின் பின்பே போக அனுமதிக்கப்படும் அல்லது புனர்வாழ்வு முகாம் போக வேண்டி வரும்.

உருத்திரபுரம் 8ம் வாய்க்காலைச் சேர்ந்தவரின் மனைவி தொடர்ந்தார் ”வெளியேற பஸ்ஸில் ஏற்றும் மக்களை பள்ளிக் கூடங்களில் வைத்திருந்து அங்கிருந்து ஒவ்வொரு குடும்பங்களாக பேசி அவர்கள் வீடு தங்க இடம் ஏதும் இருக்கிறதா? அல்லது இவர்களுக்கு வேறு ஏதும் உதவிகள் தேவையா என ஆராயப்படும். எல்லோருக்கும் ஒவ்வொரு ரென்டும் கொடுக்கப்படும் 5 000 ரூபாய் பணமும் கொடுக்கப்படும். 20 000 ரூபாய் வங்கியில் இடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு தரும்வரை தெரியாதுதானே. முன்பு போனவர்களுக்கு 25 000 ரூபாயும் கொடுக்கப்பட்டு அதில் 4000 ரூபாய் இவர்கள் சாமான்கள் ஏற்றிச் சென்ற லொறிக்கு கூலி கேட்கப்பட்டதாகவும் நாங்கள் கேள்விப்பட்டோம் உண்மைகள் தெரியாது.

பள்ளிக்கூடங்களில் மக்களை இறக்கிவிட்டு அங்கே இருந்து அவரவர் வீட்டுக்கு கூட்டிச்செல்கின்றனர். அவரவர் வீடுகள் இருக்கா? அந்த வீட்டில் சீவிக்க முடியுமா? அல்லது இவர்களுக்கு இவர்களது வளவில் ரென்ட் வேணுமா? என பல விடயங்களைப் பார்த்தே வீட்டுக்கு அனுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. இனி நாங்கள் போகும் போதுதானே மிச்சம் மீதி தெரியவரும். சிலவேளை நாங்கள் போகும் போது நிலமைகள் வேறுமாதிரியும் மாறிவிடுமல்லோ. பாப்பம். உயிராபத்து இல்லாத அலுவல் என்றால் எங்களுக்கு ஓகே.

வவுனியாகாரர்களை வவுனியா கச்சேரியில் இறக்குவினம். அவை தாங்களே போகலாம் அங்க மிதிவெடி ஆபத்து பிரச்சினை இல்லைத்தானே. வன்னிப்பகுதிதானே பிரச்சினை. சும்மா நேரடியாக போக ஏலாதுதானே. வவுனியா போறவர்களுக்கு சொந்தக்காரர்கள் இருப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை. மற்றவை தங்கட பாடுகளை பாப்பினமாக்கும். வெளியிலவிடு வெளியில விடு எண்டு கேட்டு வெளியே போய்விட்டு யாரைக் கேட்பது. உள்ளே இருந்தால் சாப்பாடும் வசதிகளும் இவர்களின்ர (அரசாங்கத்தின்ர) பொறுப்பு. யோசிக்கவெல்லோ வேணும்.

கிளிநொச்சிபோக சனங்கள் பயப்பிடுதுகள் திரும்பி ஏதும் இதண்டாலும் எண்டு. நாங்கள் அதுதான் வவுனியாவிற்கும் பதிந்திருக்கிறோம். வவனியாவிலிருந்து பிள்ளைகளைப் பற்றி யோசிச்சு செய்வம். எனது பெரிய பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிப்போட்டு குழந்தைப் பிள்ளைகளுடன் கிளிநொச்சி போகலாம் எண்டு இருக்கிறம்.

காம்பிலிருந்து போறவர்களை பள்ளிக்கூடத்தில் வைத்திருந்து பிறகு தகரம் தளப்பார் சாமான்கள் கொடுத்து அவரவர் வீட்டுக்கு அனுப்புகினம். போய் வீடுகளை துப்பரவு பண்ணிப்போட்டு இருங்கோ எண்டு விடுகினமாம். எல்லோருக்கும் ஒரே மாதிரித்தான் கொடுக்கினம்.சிலவேளை நிலைமைகளைப் பார்த்து செய்ய அரசாங்கத்திற்கு வசதியாக இருக்குது போல. நாங்கள் அவங்கட பக்கத்தையும் பார்த்து தானே யோசிக்க கதைக்க வேணும்.

நாங்க நினைக்கிறோம் மழை வந்தால் இங்கை சில காம்புகள் அல்லோல கல்லோலமாய் போய்விட்டாலும் எண்ட பயம் போலவும் கிடக்கு. காணி வளவு உள்ளவர்கள் தங்கட பிட்டியான பகுதியான பகுதிகளில் ரென்டை போட்டு இருந்தாலும் அவைக்கு தெரியும்தானே மழை வெள்ளம் வந்தால் என்ன செய்யிறது என்று. எது செய்தாலும் பள்ளிக்கூடம் போய் முழுவிபரங்கள் கொடுத்து பதிஞ்சுதான் பிறகு போகலாம் சிலருக்கு பள்ளிக்கூடத்தில் இருந்து பதிஞ்சு தங்கட காணிகளுக்கு போய் துப்பரவு பண்ணிப்போட்டு, பிறகு மாலை 6 மணிக்கு பள்ளிக்கூடம் வாங்கோ என்றும் சொல்லுகினமாம்.

அரசாங்கம் பயப்பிடுகிறது அங்க போய் என்ன நடக்கும் என்று. சனமும் பயப்பிடுகுது. அங்கே போய் என்னென்ன சிக்கல்கள் வருமோ தெரியாது என்ற பயம்தான். காட்டுக்குள்ளே இருக்கினம் என்றுதான் சனம் பயப்பிடுகிறார்கள். இப்ப நாங்களும் அதுக்குதானே பயப்பிடுகிறோம். நாங்கள் திரும்பி போக அங்கினை எங்கேயும் இருந்துட்டு வந்து சாப்பாட்டைத்தா? அதைத்தா? இதைத்தா? என்று ஆக்கினைப் படுத்துகின்றாங்களோ என்று நாங்களும் இதுக்கு பயப்பிடுகிறோமல்லோ. சொல்லஏலாது முந்தினமாதிரி திரும்பி வந்து சாப்பாட்டைத்தா? பிள்ளையைத்தா? அப்பிடி இப்பிடி……….

ஆமியால பிரச்சினை என்று பயப்பிடேல்ல. இயக்கத்திக்குத்தான் பயப்பிட வேண்டி இருக்கு. எங்கே யார் இருக்கிறாங்க என்று தெரியாதெல்லோ பிறகு வந்து பிள்ளையளை இழுத்துக்கொண்டு போக வந்தாலும் எண்ட பயம்தான்.

போன கிழமை காம்பிலிருந்து கோவில்பற்றுக்கு போன எங்கட சொந்தக்காரர் போன் எடுத்தவர். அவருக்கு 2 வயது பிள்ளை இருந்ததால் அவருடைய தாய் கையெழுத்து போட்டு யாழ் கச்சேரிக்கு போய் பதிவுசெய்து நேரடியாக வீட்டுக்கு போய்விட்டார். அவருக்கு 25 000 ரூபாய் கையில் கொடுத்தது அரசாங்கம். இப்ப யாழ்ப்பாணம் போறவர்களுக்கு 5 000 காசும் 20 000 வங்கி புத்தகத்திலுமாம். கச்சேரியில் இருந்து கொஞ்சப்பேர் ஆட்டோவிலும் சிலர் கார் பிடித்தும் வீடுகளுக்கு போனவர்களாம்.

நாங்கள் வவுனியாவில் கொஞ்நாள் இருந்து பார்ப்போம். பிறகு பெரிய பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பத்தான் வேணும். இங்க வைத்திருப்பது ஆபத்து என்று யோசிக்கிறோம். நாங்கள் அவ்வளவு பட்டு தெளிந்து வந்து விட்டோம். எங்கட அடுத்த நடவடிக்கை மிக கவனமாக இருக்க வேணும்தானே. அதுதான் பயமாக கிடக்கு. இந்த உயிர்களை கொண்டுவரப் பட்டபாடு கடவுள் ஒருத்தனுக்குத்தான் தெரியும். போட்ட உடுப்போடதானே ஓடி வந்தனாங்கள். எங்களிட்டை ஒண்டும் இல்லை.

இங்கு காம்பில அரிசி மா பருப்பு தருவார்கள். வேறு மரக்கறிகள் வாங்கித்தான் சாப்பாடு சமைக்க வேணும். தாற உணவுப்பொருட்களுடன் சாப்பாடு சமைக்க மிச்ச சாமான்கள் வாங்க காசு வேணும். சரியான கஸ்டம். காசு இல்லாதவர்கள் எப்படி இந்த சாமான்களை வாங்க முடியும். காசு இல்லாத சனங்கள் சரியா கஸ்டப்படுகிறார்கள். அவர்கள் சோற்றை அவித்து பருப்பையும் அவித்து மாத்தளனில் சாப்பிட்ட மாதிரித்தான் சாப்பிடுகினம். வேறு என்ன செய்கிறது.

எங்கட ஏஎல் படிக்கிற பிள்ளையைத்தான் புலி பிடித்துப்போனது. கஸ்ரப்பட்டு பிள்ளையை இழுத்து வந்து சேர்த்திட்டோம். இப்ப பள்ளிக்கூடம் போகிறா? வவுனியாவிற்குப் போனால் வேற பள்ளிக்கூடம் போக வேண்டிவரும். வாற வருடம் ஆவணிக்கு ஏஎல் எடுப்பா! பிள்ளை கெட்டிக்காரி ஒஎல் 7ஏ எடுத்துபாஸ் பண்ணின பிள்ளை. 5ம் வருட ஸ்கொலர்சிப் பாஸ் பண்ணினவ.

கசிப்பு காய்ச்சி குடிப்பது பற்றி அவர் கதைக்கையில் உங்களுக்கு தெரியும் தானே எங்கட சனங்களை. சிங்களம் கதைக்கத் தெரிந்தவர்கள் ஆமிக்காரனோட கதைத்து அவன் சாமான் வாங்கி வந்து கொடுக்கிறான் காய்ச்சி, குடிக்கிற நாய்கள் வாங்கி குடிக்கும். இது விக்கிறவருக்கும் காசு, உழைப்பு. ஆமிக்காரனுக்கும் கசிப்பு. சனங்கள் கஸ்டம் தானே, சீவியத்தை கொண்டு போக. கசிப்பு காய்ச்சி வித்து சீவியம் நடாத்துதுகள். ஆமிக்காரன்களும் காசு கொடுத்து வாங்கி குடிப்பாங்களாம். இப்படி சிங்களம் கதைச்சு தங்கட அலுவல்களை பலர் பலவிதமாக பார்த்திருக்கிறாங்கள். சிலர் வெளியாலையும் போயிட்டினம்.

இந்த காம்பால் வெளியே போய் வவுனியாவில் உறவினர் குடும்பத்துடன் இருப்பம். அவர்கள் இருக்கிற வீடும் கஸ்டம்தான். கொஞ்ச நாளைக்கு ஏதோ பாப்போம் என்ன நடக்குது எண்டு. கிளிநொச்சி இப்ப போகமுடியுமோ தெரியாது. ஆனால் எங்களுக்கு போக பயமாக இருக்குது.” என்று அவர் பலதையும் பத்தையும் எம்முடன் பேசினார்.

இப்போது மீண்டும் குடும்பஸ்தவருடன் பேசினோம். ‘காம்பில் இருந்து இங்கு இரவும் பகலுமாக ஆட்களை ஏற்றுகிறார்கள். எத்தினையாயிரம் பேரோ தெரியாது ஆனால் ஏத்திக்கொண்டே இருக்கிறாங்கள். இங்கயும் ரென்டுக்கை இருக்க ஏலாது. ஒரே வெய்யில், சனங்களுக்கு கொப்புளிப்பான் சின்னமுத்து என்று நோய்களும். சனங்களுக்கு கஸ்டம். நாங்கள் முதலில் வவுனியா போய் இருந்து நிலமைகளைப் பார்த்து பின்னர் கிளிநொச்சி போவோம் எங்கட வீடுகள் உடைஞ்சு போய்விட்டதோ தெரியாது. எல்லாம் போனால்த்தான் தெரியும்” என்று முகாமை விட்டு வெளியே செல்லும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

உருத்திரபுரம் 8ம் வாய்காலைச் சேர்ந்த குடும்பத்தினருடன் இரு தினங்களுக்கு முன் தொடர்பு கொண்டதில் அவர்கள் முகாமை விட்டு வெளியேறி வவுனியாவில் உள்ள உறவினர்களுடன் தங்கி இருப்பதாகத் தெரிவித்தனர். அந்த உறவினர்களுடன் இவர்களுக்கு முன்னர் வெளியேறியவர்களும் தங்கி உள்ளனர். அதனால் அவர்களுடைய வீட்டுமுற்றத்தில் இன்னுமொரு சிறு கொட்டிலை அமைத்து அதில் தற்காலிகமாக சிறிதுகாலம் தங்கி இருக்கப் போவதாக அக்குடும்பத்தினர் தெரிவித்தனர்.

வன்னி முகாம்களின் சாட்சியங்கள் : ரி சோதிலிங்கம் & எஸ் குமாரி

A_Barber_in_Chettikulamவன்னி முகாம்களின் நிலை தொடர்பாக பல்வேறு விதமான செய்திகள் வெளிவருகின்றது. அம்மக்கள் சார்பாக பேசுவதாகவும் எழுதுவதாகவும் கற்பிதம் செய்கின்ற பலர் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளுடன் அவற்றை திரிபுபடுத்தி அங்குள்ள யதார்த்தத்தில் இருந்து புலம்பெயர் மக்களை அந்நியப்படுத்தி வைத்துள்ளனர். வன்னி முகாம்களில் உள்ள மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தங்கள் அரசியல் அடையாளத்தை உறுதிப்படுத்துகின்ற கோரிக்கைகள் அம்மக்களின் சார்பில் முன்வைக்கப்படுகின்றன. நாடுகடந்த தமிழீழம் முதல் வன்னி முகாம் மக்களுக்கும் வன்னி மக்களுக்கும் உதவுவது துரோகத்தனம் என்பது வரை புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் பரந்துவிரிந்தள்ளது.

ஆகவே அங்குள்ள மக்களின் வாழ்நிலையின் உண்மைத்தன்மையை அறிவது மிக மிக முக்கியமானது. அதனை அறிந்து கொள்வதன் மூலமே மக்களுக்கான தேவைகளையும் கோரிக்கைகளையும் அறிந்து கொள்ள முடியும். அதைவிடுத்து புலம்பெயர்ந்தவர்களின் போராட்டத்திற்காக அம்மக்களை ஆட்டிப்படைக்க முடியாது. அதனைக் கருத்திற்கொண்டு அண்மைக் காலமாக வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள பலருடனும் வவுனியாவில் வதிபவர்களுடனும் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். இவர்களில் சிலருடன் பல மணித்தியாலங்களாக பேசுவதும் வழக்கமாகிவிட்டதொன்று. அவர்களது உள்ளக்கிடக்கைகளை வெளிக்கொண்டுவரவே இவற்றை வெளியிடுகிறோம்.

ஓக்ரோபர் 6ல் மூன்று நாட்கள் வெளியே வந்து தங்கும் அனுமதியுடன் வந்தவருடன் தொலைபேசி மூலம் உரையாடும்போது அவர் தன்னைப் பற்றிய அறிமுகத்துடன் தொடர்ந்தார்.

இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வவுனியாவிலும் முத்தையன் கட்டிலும் வியாபாரியாக இருந்தவர். தனது இரண்டு வயது குழந்தையுடன் தான் தப்பி வந்து இடையில் ஏதும் நடந்தாலுமென்று, அங்கேயே நின்று பின்னர் புலிகளினால் ஒட்டுமொத்தமாக எடுத்துச் செல்லப்பட்ட மக்களுடன் முள்ளிவாய்க்கால்வரை சென்றார். பின்னர் மே மாதம் பத்தாம் திகதியளவில் பெருந்தொகையாக இடம்பெயர்ந்தவர்களுடன் சேர்ந்து இடம்பெயர்ந்தவர். தனது முகாம் வாழ்க்கை பற்றி இவ்வாறு சொன்னார்.

”நான் செட்டிக்குளம் ராமநாதன் காம்பில் இருக்கின்றேன். செட்டிக்குளம் டிஸ்றிக்கில் ஆனந்தகுமாரசாமி முகாம், ராமநாதன் முகாம், அருணாசலம் முகாம், Zone 4, வீரபுரம், கதிர்காமர் முகாம், Zone 5 என காம்ப்புகள் இருக்குது. ராமநாதன் காம்பில் 65 000 பேர் இருக்கிறோம். அங்கு பெரும்பாலான கட்டுப்பாடு பொலிஸ்தான். ஆமியும் வந்து போவார்கள்.

சாப்பாடு, தண்ணி, ரொய்லெட் வசதி வந்த புதிதில் மிகமோசம். இப்ப பிரச்சினை இல்லை. முந்தி நாங்கள் கொஞ்ச கொஞ்சப் பேராகச் சேர்ந்து ரேன் வைத்து மாறி மாறி எல்லாருக்குமாய் சமைப்போம். இப்ப எல்லாரும் தனித்தனிய குடும்பமாய்த்தான் சமைக்கிறோம். ஓவ்வொரு வியாழனும் World food சமையல் சாமான்கள் தருவார்கள். தண்ணீர் பைப் வசதி இருக்குது. ரியூப் வெல் அடிச்சு வைத்திருக்கிறார்கள். குடி தண்ணீர் கிடைக்கிறது. மரங்களை வெட்டி மண்றோட்டுகள் போட்டிருக்கிறாங்கள். கறண்ட் இருக்குது. பிள்ளைகள் படிக்கப் போகினம். ரென்ட்டுகளை வீடுகளாய் கட்டிவிட்டால் மாதிரிக் கிராமம்தான். ரென்ட் சரியான வெக்கையாய் இருக்கும். நாங்கள் பெரியஆட்கள் சமாளிப்பம். குழந்தைகள்பாடு சரியான கஸ்டம். மழை வந்தால் பெரிய சிக்கல் இந்த ரென்டுகள் தாங்காது. அதுதான் தொல்லை. வெய்யில் நேரங்களில் ரென்ட்டுக்குள் இருக்கேலாது அவ்வளவு வெக்கை.

மெனிக்பார்ம் பிரச்சினைகள்பற்றி கேட்டபோது ”நீங்கள் சொல்லுமாப்போல பெரிய பிரச்சனையாக நான் கேள்விப்படவில்லை. வன்னிக்குள் நடந்ததை விடபெரிசாய் என்ன நடக்கப் போகுது. காம்புக்குள்ளே சின்னச் சின்னதாய் பிரச்சினைகள நடக்கும்தானே. சாப்பிட்டுவிட்டு சும்மா இருக்கிற சனத்துக்கு வேற வேலை இல்லைத்தானே. என்ன செய்வதென்று தெரியாமல் சண்டை வரும்தானே. நீ புலி. அவன் புலி எண்டும் சண்டை வரும். சனங்கள் உங்கை சும்மா சும்மா கதைக்கினம்போல.

ஆமிக்காரன் ஆட்களை பிடிக்கிறது ஏத்திக்கொண்டு போறாங்களாமே எனக் கேட்டபோது ”எனக்குத் தெரிய நான் அப்படி எங்கட காம்பில் கேள்விப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விசயங்கள் நடந்திருக்கும்.

புலிகள் பற்றி ஒருத்தரும் கதைப்பாரில்லை. இலக்க்ஷன் பற்றி ஒருத்தருக்கும் அக்கறையில்லை. நான் நினைக்கிறேன் ரணில்தான் வருவாரெண்டு. காம்புக்கு டக்ளஸ்தான் ரெண்டு மூண்டுதரம் வந்தார். உதவிகள் கேட்டால் செய்வார். அந்த ஆள் யாழ்ப்பாணத்துக்கு நிறையச் செய்கிறார். எங்களுக்கு தேவை அபிவிருத்தி. அதை அவர் செய்கிறார் அது எங்களுக்கு நல்லது தானே.”

”எப்படி நீங்கள் வெளியே வந்தீங்கள்” என கேட்டபோது: ”அரசாங்கத்தின் லெட்டரோடை காம்புக்கு வெளியே வந்து மூன்று நாள் தங்கலாம். பிறகு திரும்ப வேணும். நான் அப்படி ரெண்டு மூண்டு தரம் வந்தனான். அடிக்கடி வந்தால் சந்தேகப்படலாம் என்பதால் ஏதும் தேவைக்காக வந்துபோவேன். அப்படி எல்லாரும் வரலாமோ இல்லையோ எனக்குத் தெரியாது. எனக்கு வந்து தங்க இடமிருக்குது சொந்தக்காரர் இருக்கினம் வாறேன். எல்லாருக்கும் அப்படி யாரையும் தெரிந்திராதுதானே. வந்தும் என்ன செய்வது. நான் வெளியே வந்து எனது குடும்பம் தங்க இடம் வேலை ஒன்று கடையில் எடுக்க அலுவல் பார்க்கிறேன். காம்பை விட்டு வெளியே போக கச்சேரியில் போர்ம் கொடுத்திருக்கிறேன். ஆமி கொமாண்டர் சைன்பண்ணி வந்ததும் போகலாம். சனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருக்கினம். எனக்குத் தெரிந்த சொந்தக்காரர் போனகிழமை போய்விட்டார். நான் இரண்டு வயதுப் பிள்ளையுடன் இருக்கிறேன். இந்த மாதக் கடைசிக்குள் நானும் போய்விடுவேன். ஊரில் தங்க இடம் இருக்கு. அங்கும் விதானையார் கையெழுத்துப் போட்டால் எங்களை விடுவினம் இப்படி பலர் போய்விட்டார்கள்.

குழந்தைகளோடை இருக்கிறவை முதல் ஊனமுற்றோர் இரண்டாவது கர்ப்பிணியாட்கள் மூன்றாவது என படிப்படியாய் ஒவ்வொரு காம்பிலும் இருந்து வெளியேபோக விடுகிறார்கள். அவர்களை வேறை காம்பில கொண்டு போய் வைத்திருப்பதாக நான் அறியவில்லை. எல்லாரையும் ஒரேயடியாக வெளியே விட ஏலாதுதானே. ஆட்களை விசாரிச்சு விசாரிச்சுத்தான் விடுவாங்கள்.

வெளியில் உதவிக்கு ஆட்கள் இருக்கிறவை போவினம். இல்லாதவை வெளியே வந்து என்ன செய்வது. எப்படிச் சீவிப்பது. வெளியில வாடகைவீடு 10 000, 15 000 என்று கேட்பார்கள். சாப்பாட்டுச் செலவு வேலை என்று எல்லாத்துக்கும் எங்கை போவது. இவ்வளவு காசு கொடுக்க இயலாத, அப்படியான ஆட்கள்தான் பெரும்பாலான ஆட்கள். அவர்கள் போனால் வன்னிக்குத்தான் போவம் இல்லாவிட்டால் எங்கும் போகமாட்டம் என்று பின்னடிக்கினம்.

என்னிடம் கைத்தொலைபேசி இல்லை. வைத்திருக்க விடமாட்டாங்கள். வைத்திருப்பவையும் ஒழித்து வைத்துத்தான் கதைப்பது. நான் உங்களுக்கு மற்றைய காம்பில் உள்ளவர்களின் தொலைபேசி இலக்கங்கள் எடுத்துத்தாறன் கதையுங்கோ” என்றார்.

”ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்குப் போவதில் தடையில்லை. சில பிள்ளைகள் ஒரு முகாமில் இருந்து மற்றமுகாமுக்குப் போய்ப் படிக்கிறார்கள்” என்றார்.

(இந்த தொலைபேசி அழைப்பில் எம்முடன் பேசியவர் ஒக்ரோபர் 12ம்திகதி முகாமிலிருந்து வெளியேறி தற்போது யாழ் கோவில்ப்பற்று பகுதியில் தனது பிறந்து வளர்ந்த வீட்டில் தனது உறவினர்களுடன் இணைந்துள்ளார்)

கதிர்காமர் முகாமின் உள்ளே இருக்கும் ஒருவருடன் ஓக்ரோபர் 8ல் தொடர்பு கொண்ட போது….

தனது கைத் தொலைபேசியை மற்றவர்களுக்கு கொடுத்து எம்முடன் கதைக்க உதவுபவர்களில் ஒருவர் மாவீரர் குடும்பமொன்றைச் சேர்ந்தவர் (அவரே சொன்னார்). ஜுன் மாதத்தில் எம்முடன் கதைக்கும்போது அவரின் பார்வையில் – இப்படித்தான் புலி வீழ்ந்தாலும் காலத்துக்கு காலம் மீண்டும் வரும் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் தென்பட்டது. இவர் சரளமாக கதைக்கமாட்டார். அது அவர் தன்மை என்பதே என் அனுமானம். ஒக்ரோபரில் கதைக்கையில் அவர் எதுவுமே கதைக்கப் பிரியப்படவில்லை. ”என்னத்தை அண்ணை சொல்ல” என்று மிகவும் மனச் சோர்வுடன் சலித்துக் கொண்டார். ”எனக்குப் பக்கத்தில் இப்ப நிக்கிறவர் நல்லாய்க் கதைப்பார். அவரிடம் கொடுக்கிறேன். கதையுங்கோ” என்றார்.

அந்த புதியவர் என்னிடம் ”நீங்கள் யார்? என்ன செய்கிறியள்?” என்று விபரம் கேட்டபோது நாம் என்ன செய்கிறோம் என்று சொன்னேன். ”ஏன் அண்ணை தேசம் எண்டு சொல்லுறியள். கோதாரி எண்டு சொல்லுங்கோ. இவ்வளவு காலமும் நடந்தது கோதாரி இல்லையோ?. கண்டறியாத போராட்டம். சனம் பற்றி யார் நினைச்சது. தாங்கள் தாங்கள் தங்கட நலனுக்குப் போராட்டம் என்று சனத்தைச் சாகடிச்சுக் கொண்டு தங்கட குடும்பத்தைப் பார்த்தவை. போராட்டம் நடத்தியிருந்தால் இப்பிடியா முடிஞ்சிருக்கும். என்ன பிள்ளைகளுக்கு சாப்பாடு உடுப்பு படிப்பு இதுக்குத்தான் அண்ணை இப்ப போராட்டம். எங்களுக்கு மொழி, சாதி இது என்னண்ணை?. சிங்களமொழி, சனங்கள் என்ன பிழை எண்டு சொல்லுங்கோ. சனங்கள் – மனிசர் எண்ட நினைப்பு இல்லாமல் எல்லாம் நடத்தியவையள். நடந்ததுகள் நினைவுக்கு வந்தால், திருப்பி யோசிச்சால் அழுகை வருகிறது. இளம் குழந்தைகள் பொடியன்கள் பிள்ளைகள் எல்லாம் அநியாயம். இயற்கைக்கு ஒத்து வராமல்தான் இப்படி இந்த திருவிழாவை இயற்கை முடிச்சு வைச்சது” என்றார்.

முன்னர் ஈபிஆர்எல்எப் ஆதரவாளராக இருந்த 42 வயதான வசாவிளானைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகளுடன் வன்னிக்கு இடம்பெயர்ந்தவர். இவர் தற்போது கைவசம் எதுவுமேயில்லாமல் எதிர்காலம் என்ன என்று நிச்சயம் இல்லாமல் தற்போது கதிர்காமர் முகாமில் இருக்கிறார்.

”தனிநாடு யார் அண்ணை கேட்டது. எல்லாமே புலிகளின் பம்மாத்தும் சுத்துமாத்தும் தானே. வன்னியில் இருந்த சாதாரண சனத்திடம் தனிநாடு என்ற நம்பிக்கை எண்டைக்குமே இருந்ததில்லை. புலிகளின் தொடர்ச்சியான கெடுபிடிகளே இருந்தது. புலிகள் கோவில் திருவிழா செய்வது போலவே எல்லாம் செய்தார்கள். யாரும் ஏன், எது, எப்படி என்று கேட்கமுடியாது. சொல்லும் எல்லாத்துக்கும் ஓம் சொல்ல வேணும்.

எப்பசரி மக்களின் கருத்துக்களைக் கேட்டார்களா? தாங்கள் செய்வது சரியா என்று யாரிடமும் கேட்கவில்லையே? யாருக்கும் எதுவும் தெரியாது. தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் எண்டு இப்ப தெரியுது இவையளுக்கு என்ன தெரியும் எண்டு” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

”முகாம்களுக்கு வெளிநாட்டு ஆட்கள் வந்து பார்த்ததாக கேள்விப்பட்டேன்” என்று நான் பேச்சை வளர்த்தேன். ‘நான் சந்திக்கவில்லை. டக்ளஸ் இப்பவும் வந்து மக்களின்ரை அபிப்பிராயத்தைக் கேட்கிறார். அவர் ஓ.கே. வளைந்து கொடுத்து செயல்படுகிறார். இப்ப எங்களுக்குத் தேவை உதவிகள். அதைப்பற்றி அபிப்பிராயம் கேட்கிறார். அரசியல் கதைப்பதேயில்லை. எல்லாம் வெளியே வந்தபின் அரசியல் கதைப்போம். இப்ப என்ன அவசரம் என்றார். அவர் சொல்லுறது சரிதானே இப்ப உள்ளது எங்கட பிரச்சினைகள்.

நான் வன்னியில் இருக்கும்போது 2 சாரம் 2, 3 சேட்டு இதைவிட ஒரு துவாய்; வேற எதுவுமில்லை. பிள்ளைகளுக்கு கொஞ்ச உடுப்பு. பழைய கொட்டில்தான் எங்கட வீடு. வேலையில்லை. புலிகளுக்கு வேலை செய்தா சம்பளம். கூலி வேலை. இப்ப வேலையில்லை. காம்பில் சாப்பாடு உடுப்பு தண்ணீர் எல்லாம் கிடைக்கிறது. பிள்ளைகள் படிக்கினம். ஆனால் அகதிமுகாம் எண்டு பெயர். பிள்ளைகள் எப்ப சரி ரெயினை புது பஸ்களை கண்டவையோ?

வன்னியில் நான் புலிகளுக்கு பதிவுக்கு கொடுத்தது சொந்தப் பெயரல்ல. ஊரில் இருந்து வரும்போதே நானும் எனது மனைவியும் இப்படித்தான் எண்டு யோசிச்சு கொடுத்தம். இல்லாவிட்டால் என்னை ஈபிஆர்எல்எப் என்று சுட்டுப் போட்டிருப்பாங்கள். இப்ப ராணுவத்திடம் எல்லாம் சொல்லி உண்மையான பெயர் கொடுத்துள்ளேன். என்னுடைய அரசாங்க அடையாள அட்டையை திண்ணை மண்ணுக்குள் புதைத்து மெழுகிவைத்திருந்தேன். இப்பத்தான் அதைப் பாவிக்கிறம்.

எனக்கு வேறு இடத்திலும் ஆட்கள் இல்லை. வேறு இடங்களுக்கு போக முடியாது. போனாலும் சாப்பாடு வீடு எல்லாத்துக்கும் என்ன செய்வது. எனது யாழ்ப்பாண வீடு இருந்த இடம் இப்ப இராணுவ முகாம். வீடு எல்லை அடையாளமே இல்லாமல் உள்ளது. திரும்பிப் போக அங்கு இடமில்லை. என்ன செய்யலாம் திடீரென்று போ என்றாலும் எங்க போறது ஒண்டுமே தெரியாத நிலவரம்.

வன்னிக்கு திரும்பப் போகமாட்டேன். புலிகளிடமிருந்த மிதிவெடிகளின் அளவு எனக்கல்லோ தெரியும். அவ்வளவும் ஊர் தேசம் எல்லாம் புதைச்சாங்கள். எல்லாம் மழை வெள்ளத்துக்கு மூடுப்பட்டிருக்கும். யாரோ துப்பரவு பண்ணித்தான் தீரவேணும். இனிமேல் வன்னிக்குள் போய் காலை கையை உயிரை இழப்பது புத்திசாலித்தனம் இல்லை. என்னை வெளியே விட்டாலும் வன்னிக்குப் போகமாட்டேன். நான் என்ன மடையனோ வன்னிக்குள்ள குடும்பத்தைக் கொண்டுபோய் கால் கையை முறிக்க. வன்னிக்குத் திரும்பப் போனால் அந்த கொலை மரண சம்பபவங்கள்தான் எங்களுக்கும் எங்கட பிள்ளையளுக்கும் திரும்ப திரும்ப நினைவுவரும். நான் வவுனியா மதவாச்சி அல்லது அனுராதபுரம் போய் இருப்பனே தவிர திரும்ப வன்னிக்குப் போகமாட்டேன். எங்கட சொந்த பந்தங்கள் எங்கே எண்டு தெரியாது எப்படி கண்டுபிடிக்கிறது.

முகாம்கள் மூடவேணும். மூடுவது என்றால் எல்லோருக்கும் எப்படி வசதிகள் செய்து கொடுக்கப் போகினம். யார் பொறுப்பு. புலி இல்லை. அரசாங்கத்திடம் எப்படிக் கேட்பது. அவனை – சிங்களவனை – கொல்ல திட்டம் போட்ட இனம் எண்ட பெயர் எங்களுக்கு. எப்படிக் கேட்க முடியும். 25 வருஷம் சனத்தின்ரை வாழ்க்கை அனியாயம். 3 வருஷம் இந்த அகதிமுகாமில இருக்கலாம். பிரச்சினையில்லை. இருக்கிற வீடு ரென்ட் சரியில்லை. மழை காத்து எண்டால் பிரச்சினை. மற்றும்படி தண்ணி கக்கூசு பிரச்சினை.

முன்னர் கொழும்பில் விவேகானாந்தா மேட்டில் கொஞ்சநாள் இருந்தனான். அங்க பொதுக் கக்கூசு தான் அண்ணை பாவித்தனான். அப்பிடியும் சீவித்த எங்களுக்கு இது என்ன புதிசோ?. இப்ப கக்கூசு அது இது எல்லாம் எங்களுக்கு பழகிப்போச்சு. அதைவிட கக்கூசு எல்லாம் திருத்தியாச்சு.

காம்பிற்கு வந்த புதிசில மன அழுத்தம் – மனப்பிரச்சினை – பெரிதாக இருந்தது. இப்ப அப்படியில்லை. வெளிநாட்டில் உள்ள புலிகள் ஆட்கள் என்ன செய்கினம். புலி முடிஞ்சா போராட்டம் முடிஞ்சுதாமோ? எங்களைப்போல சனங்கள் கஸ்ரப்பட்ட நாடுகளில் எப்பவுமே போராட்டம்தான். இந்தியாவில் சேரிப்புற மக்கள் வாழ்வது என்ன வாழ்க்கையோ?. அது போராட்டம்தானே. அதோடை பார்க்கையில் நாங்கள் இருக்கிற முகாம்களில் சாப்பாடு கிடைக்கிறது.

அவரிடம் ”உங்கள் அனுபவங்கள் கண்டது கேட்டவை எல்லாத்தையும் எழுதமாட்டீங்களா” எனக்கேட்டதற்கு எனக்கு அப்படி எழுத பெரிசாய் வராது. பேசுவேன். 30 வருஷமாக உலகத்தில் என்ன நடந்ததென்றே தெரியாது. எல்லாம் ஒரு இருண்ட காட்டில் இருந்த மாதிரி ஒரே விசயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு வாழ்ந்திட்டோம்.

(இந்த நண்பர்கள் இன்றும் அகதிமுகாமில் இருக்கிறார்கள்)

இவர்களது வாக்கு மூலங்கள் மட்டுமல்ல இன்னும் பலவும் தேசம்நெற் இல் வெளிவரும். உள்ளதை உள்ளபடி அவர்களுடைய மொழியிலேயே பதிவு செய்ய முயற்சிக்கின்றோம். அவர்களுடன் உரையாடும் போது அவர்கள் பட்டதுன்பங்களையும் இயலாமையையும் வெளிப்படுத்தும் போது அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வார்த்தைகள் இன்றி திக்குமுக்காட வேண்டியுள்ளது. குற்ற உணர்வில் மனம் குமைகின்றது. அவர்களிடம் கேள்விகளைக் கேட்கின்ற மனத்துணிவு வருவதில்லை. அவர்கள் என்ன சொல்கின்றார்களோ அதனை அவதானமாக கேட்டுக்கொண்டோம்.

வன்னி மக்கள் பற்றிய முன்னைய பதிவுகள்:

புலம்பெயர் புனைகதைக்குள் புகுந்துவந்த பயணம். : வவுனியன்

மனிதக் கொடுமையினூடாகப் பயணித்த இளம் தாயின் நேரடிச் சாட்சியம். : தொகுப்பு குமாரி

வன்னி முகாம்களை மூடுவது மட்டும் தீர்வாகாது! : த ஜெயபாலன்

அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வன்னி முகாம்களின் முட்கம்பிவேலி : த ஜெயபாலன்

மெல்ல வெளிவரும் நிஜங்கள் – வெளியேறி வருவோரின் வாக்கு மூலங்கள் : த ஜெயபாலன்

தொடரும் யுத்தமும் வன்னி மக்களின் ஏக்கமும் : த ஜெயபாலன்

நிறமூர்த்தங்கள் மாற்றியமைக்கப்பட்டதால் மனிதருக்கு உணவாகும் பருத்தி விதை.

cotton-buds.jpg7000 வருடங்களுக்கு மேலாக மனிதரினால் பயிரிடப்படும் பருத்தி இன்று 20 மில்லியன் (million) விவசாயிகளினால் 80 நாடுகளில் பயிரிடப்படுகின்றது.

உலகில் 40 சதவிகிதமான உடுபுடவைகள் பருத்தியினாலே தயாரிக்கப்படுகின்றது. ஆனால் 23 சதவிகித புரட்டீனைக் கொண்ட இப்பருத்தி விதைகள் மனிதரினால் உண்ணப்படுவதில்லை. காரணம் இந்த விதைகளில் உள்ள நச்சுத் திரவத்தை மனித உடலால் கட்டுப்படுத்த முடியாதிருந்தது.

பருத்தி விதையை பறவைகள், பன்றியிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டுள்ள இந்த நச்சுத்திரவம் (Toxin) ஆடு, மாடு போன்ற இரை மீட்டு உண்ணும் பிராணிகளால் மட்டுமே உட்கொள்ளக் கூடியதாக இருந்தது.

Texas A&M University இந்த நச்சுத்திரவம் சுரந்து கொள்ள முடியாதவாறு பருத்தி விதைகளின் நிறமூர்த்தங்களில் (RNA யில்) மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பருத்தி விதைகளை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் வருடாந்தம் 44 மில்லியன் தொன் உற்பத்தி செய்யப்படும் பருத்தி விதைகள் மிகவும் பெறுமதிமிக்க புரட்டீன்களை மனிதருக்கு உணவாக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

0.5 பில்லியன் (Billion)உற்பத்தி செய்யப்படும் பருத்தி விதைகள் மனித உணவாக பயன்படுத்தப்பட்டு மனிதர்களின் உணவுத் தட்டுப்பாட்டில் பெரும்பகுதிப் பிரச்சினைகள் தீர்க்கப்படக் கூடியதாகவும் உள்ளது.

இந்த நிறமூர்த்தங்களினால் மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகள் கடலை போன்ற சுவையுடையதாக கூறப்படுகிறது.

மனிதக் கொடுமையினூடாகப் பயணித்த இளம் தாயின் நேரடிச் சாட்சியம். : தொகுப்பு குமாரி

Nanthi_Kadal”கிளிநொச்சியைவிட்டு வெளியேற மறுத்தவர்கள் பட்ட அவஸ்தை இன்னமும் மனதில் நிலைத்துள்ளது. பச்சை மட்டையடி கொடுப்பது என்பதுதான் வெளிப்படையானது. வெளியேற மறுத்தவர்களின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டு புலிகளின் வாகனங்களுடன் கட்டப்படும். இந்நிலையில் வாகனங்கள் நகரும். இப்படியான மனிதாபிமானமற்ற செயலின் பின்னால் – இவ்வழிநடத்தலில் நாம் கிளிநொச்சியைவிட்டு வெளியேறினோம்.”

தமது இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பல இடங்களில் தங்கி சகல உடமைகளையும் இழந்து ஆனால் உயிர்தப்பி தற்போது முகாமில் இருக்கும் ஒரு இளம்குடும்பத்தினருடன் தொலைபேசி மூலம் உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அந்நேரடி உரையாடலில் அவர்கள் பகிர்ந்துகொண்ட, அவர்கள் அனுபவித்த துன்பங்கள் மனக்கசப்புகள் எதிர்பார்ப்புகளின் தொகுப்பே இக்கட்டுரையாகும்.

”கிளிநொச்சியில் ஏ9 அருகாமையில் அமைந்த எங்கள் வீடு, வசதிகளுடன் கூடிய பெரியவீடு. இவ்வீட்டை தம்மிடம் தரும்படி பலதடவைகள் புலிகள் எங்களிடம் கேட்டனர். ஜந்துபேரைக் கொண்ட எமது குடும்பத்திற்கு அறைகளற்ற குடிசை வீடுகளை பதிலாகக் காட்டினார்கள். உறுதியை எழுதி அவ்வீட்டை எம்மிடமிருந்து எடுப்பதும் அவர்கள் நோக்கமாக இருந்தது. எப்படியும் எமதுவீடு பறிபோய்விடும் என்ற பயம் எமக்கிருந்தது. எனவே இதை வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனத்தினருக்கு வாடகைக்குக் கொடுத்துவிட்டு டிசம்பர் 2008 நடுப்பகுதியில் நாம் அக்கராயன் நோக்கி இடம்பெயர்ந்தோம்.

தொழில் – கம வசதிக்காகவும் அக்கராயன் போனோம். அங்கு எமக்குக் கிடைக்கும் மாத வருமானத்தைவிட அதிகமான பணத்தை புலிகள் அறவிடுவார்கள். என்றுமே புலிகளுக்கு இதைச் சொல்லிக்கொள்ள முடிவதில்லை. அதற்கான சந்தர்ப்பத்தை அவர்கள் தரவுமில்லை. தாம் நினைத்ததை வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். இதன் காரணமாகவே தொழில்துறைகள் நஷ்டப்பட்டு அழிந்து போனது பலருடைய அனுபவங்கள். ஏ9 பாதையை அண்மித்த வியாபாரத் தளங்களின் வியாபாரிகள் இதற்கு நல்ல உதாரணம். எமது தொழில்துறைகளை அழித்தது மட்டுமல்ல கிளிநொச்சிக்கு இராணுவம் வருகின்றதென எவ்வித ஆயத்தங்களோ முன்னறிவிப்போ இன்றி உடனடியாக எம்மை வற்புறுத்தி வெளியேற்றியமை மிகவும் கொடுமையானது.

கிளிநொச்சியைவிட்டு வெளியேற மறுத்தவர்கள் பட்ட அவஸ்தை இன்னமும் மனதில் நிலைத்துள்ளது. பச்சை மட்டையடி கொடுப்பது என்பதுதான் வெளிப்படையானது. வெளியேற மறுத்தவர்களின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டு புலிகளின் வாகனங்களுடன் கட்டப்படும். இந்நிலையில் வாகனங்கள் நகரும். இப்படியான மனிதாபிமானமற்ற செயலின் பின்னால் – இவ்வழிநடத்தலில் நாம் கிளிநொச்சியைவிட்டு வெளியேறினோம். வெளியேறிய நாட்களிலிருந்து பல இடங்களில் தங்கினோம். எம்மிடமிருந்த உடமைகள் உடுப்புகள் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு இடத்திலும் தொலைத்தோம். குண்டுச் சத்தம் அருகாக கேட்கையில் பயத்தில் பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு ஓடுவோம். திரும்பி வந்து பார்க்கையில் எமது பொருட்கள் களவாடப்பட்டிருக்கும். எமது அன்றாட வாழ்வுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் இழந்தோம். இவையாவும் எமது மக்களுக்கான எமது தமிழ் இனத்திற்கான விடிவைத் தேடித்தரும் என்று நம்பினோமோ? இல்லையோ? இந்த வழியால் போய்த்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயநிலை எமக்கு.

இலங்கை அரசும் இராணுவமும் எமது எதிரியா? அல்லது நண்பனா? நாம் என்றுமே பரீட்சித்துப் பார்க்கவில்லை. ஆனால் எம்மீது விழும் குண்டுகள் எமது எதிரிகளே. இது யாரிடமிருந்து வருகிறது என்றும் எமக்கு தெரியாது? ஆனால் இலங்கை இராணுவத்தின் கொடுமை என்ற பேச்சிலிருந்து நாம் விலகுவதில்லை. குண்டு வரும் திசை பார்க்க எமக்கு தெரியாது. எல்லா திசைகளுமே ஒரே திசையாகவே தெரிந்தது.

இடம்விட்டு இடம்மாறுவது கூட யாரோ சொல்வார்கள், மக்கள் அசைவார்கள் நாமும் போவோம். ஏன் மாறுகின்றோம்? காரணம் எப்போதும் ஒன்றாகவே இருந்தது. அது இலங்கை இராணுவம் முன்னேறுகின்றது என்பதே. நாம் எங்கே போகிறோம் என்று யாரும் கேட்பதில்லை. விலகிப்போகிறோம். செல்விழுந்தால் ஓடுவோம். யார்மீது விழுந்தது? அவரது நிலை என்ன? திரும்ப வந்து பார்த்தது கிடையாது. விலத்திப் போகிறோம். புதிய மண், புதிய கிராமம், புதிய குறிச்சி நோக்கி போகிறோம். ஒவ்வொரு புதிய இடங்களிலும் ஒவ்வோரு புதிய பிரச்சினைகள் வரும். தண்ணீர் கிடையாது. தண்ணீர் கிடைத்தால் மரநிழல் கிடையாது. இருந்த பிறகு தான் தெரியும் நாம் கடியெறும்பின்மேல் இருந்து விட்டோம் என்று. ஒழுங்கான நித்திரை கிடையாது. நித்திரையானால் மீண்டும் கண்விழிப்பமோ தெரியாது என்ற மனப்பயம் எப்போதுமிருக்கும். எவ்வளவு கேவலமாகவெல்லாம் நாம் நடத்தப்பட்டோம்.

பாரதிபுரம் ரெட்பார்னா விஸ்வமடு உடையார்கட்டு குரவயல் இருட்டுமடு அம்பலவன்பொக்கணை மாத்தளன் ஆகிய கிராமங்களைத் தாண்டி நந்திக்கடல் அருகே வந்தோம்.

நாம் கிளிநொச்சியை விட்டு வெளியேறும் போது ஒரு உழவுயந்திரம் ஒரு லொறி சமையற்பாத்திரங்கள் மாற்று உடைகள் நகைகள் பணம் எம்மிடம் இருந்தன. இன்று எம்மிடம் எந்த உடமைகளோ பொருட்களோ இல்லை. உடுத்த உடுப்பும் கையில் உள்மாற்று உடுப்புகளும் மட்டுமே மிஞ்சியிருந்தது.

நாம் இத்தனைகளையும் ஏன் இழந்தோம்? எமக்கு தெரியவில்லை? இத்தனை கஸ்டங்களை அனுபவித்தோம் – எதற்காக என்றும் தெரியவில்லை. இது எதிர்காலத்தில் எதை தரப்போகின்றது? என்பதுவும் எமக்கு தெரியவில்லை. பசி களைப்பு. சாப்பாடு தண்ணி எங்கு கிடைக்கும் என்பதைத்தவிர வேறெந்த சிந்தனையும் எம்மிடம் இருக்கவில்லை.

கடந்த 3 ,4 மாதங்களாக நடந்த இந்த மக்கள் யாத்திரையில் எத்தனை நாட்கள் உணவு கிடைத்தது என்று எம்மால் கூற முடியும். எந்த இடங்களில் எந்த மரங்கள் காபய்க்கவில்லை. கனிகள் இல்லை என்பதுவும் எமக்கு தெரியும். எமக்கு உணவுதர யாரும் இல்லை! பாதை சொல்ல யாரும் இல்லை! நடைபயணம் மட்டும் வெற்றிகரமாக முன்னேறியிருந்தது.

குழந்தைகளும் நாமும் படும் அவலங்கண்டு மாத்தளன் பகுதியிலுள்ள ஒரு பெரியவர் நாம் தப்பி ஓடுவதற்கு உதவி புரிந்தார். இவரது வீட்டில் புலிகளுக்குத் தெரியாமல் ஒளித்திருந்து பலர் இந்த வழியாக நந்திக்கடலில் நீந்தி இராணுவம் உள்ள பக்கத்திற்கு போயிருந்தனர். புலிகளின் சென்றி பொயின்ற்றுக்கு பக்கத்தில் உள்ள வீடுகளில் மக்கள் ஒளித்திருந்து புலிகளின் சென்றி பொயின்ரில் அவர்கள் இல்லாத வேளைகளில் நந்திக்கடலினூடாக தப்பியோடுவார்கள். சிலசமயங்களில் புலிகள் வேறு இடத்தில் இராணுவத்தினரை மறிப்பதற்காக ஓடும்போதும் மக்கள் அலை அலையாக நந்திக்கடலில் இறங்கி ஓடுவது வழக்கமானது. பொதுவாக இரவு வேளைகளிலேயே தப்பியோடுவர்.

நந்திக்கடல் அருகே புலிகளின் நடமாட்டங்களை மற்றவர்கள் போல் நாமும் அவதானித்துக் கொண்டிருந்தோம். தப்பி ஓடுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். தற்போது எமக்கு இலங்கை இராணுவத்தின் திசை திட்டவட்டமாக தெரியும். அதை நோக்கி போக வேண்டும் என்பது மட்டுமே எமது இலக்காக இருந்தது.

இராணுவப் பகுதிக்குச் சென்றபின்னர் என்ன நடக்கும் என்றும் எமக்குத் தெரியாது. இலங்கை இராணுவம் உள்ள பக்கம் நோக்கிச் சென்றால் அங்கு எமக்கு தெரிந்த சிலராவது எமக்கு உதவுவார்கள் என நம்பினோம்.

எல்லோரையும் போலவே நாமும் புலிகளின் நடமாட்டத்தை அவதானித்துக் கொண்டிருந்தோம் சிலநாட்களுக்கு முன்பு போல் அல்லாது தற்போது புலிகளின் நடமாட்டம் குறைவடைந்தது. பசியால் கதறும் குழந்தைகளையும் கொண்டு நந்திக்கடலை கடப்பதைவிட வேறு வழியில்லை என புரிந்து கொண்டோம். எனது சகோதரத்தையும் சேர்ந்து வரக் கேட்டேன். அவர்கள் எமக்கு இருப்பதோ ஒரு குழந்தை அந்தப் பிள்ளையை நந்திக்கடலுக்கு பலிகொடுப்பதைவிட இங்கேயே இருப்போம் என்றார். அவரது நியாயம் எனக்கு விளங்கியது. நாம் எமது குழந்தைகளுடன் நந்திக்கடலில் இறங்கினோம். இரவு 06மணி 45 நிமிடம். இரவு கவிழ ஆரம்பித்த நேரம். நாம் வாழ்வா சாவா என்ற தாயக்கட்டையில் இருந்த அந்தகணப்பொழுது இன்றும் நினைவுவரின் பயப்பிடுகிறோம்.

தப்பிஓட முயன்ற பலர் நந்திக்கடலில் இறங்கும்போது இவர்களால் நந்திக்கடல் சிவந்தது. உடல்கள் மிதந்தது. சிலர் தப்பி ஓடினர். எமது குடும்பத்தினருக்கும் எதுவும் நடக்கலாம். என்னவும் நடக்கட்டும் என்று இறங்கினோம். எமக்கு வேறு மாற்றுவழி எதுவுமே இருக்கவில்லை எம்பின்னால் இருந்து துப்பாக்கி ரவைகள் எம்மீது பாய்ந்தது. ஒவ்வொரு சத்தத்துக்கும் குழந்தைகளும் நாமும் தண்ணீருக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து தலைகள் மட்டும் தண்ணீருக்கு மேல் தெரிய மிருகங்கள் போல் புலிகளிடமிருந்து தப்பித்து ஓடினோம். கடலில் மிதந்த சடலங்கள் இந்தக் கடலை நிரப்பியிருந்ததை நாமும் குழந்தைகளும் பார்த்துக்கொண்டே நகர்ந்தோம். இடையிடையே ஆழமான பள்ளங்களுள் ஆள்மாறி ஆள்மாறி விழுந்தெழும்பினோம். அருகேவந்த மற்றவர்களின் முதுகில் புலிகளின் துப்பாக்கி வேட்டுக்கள் பட்டு அலறும் சத்தம் கேட்கையில் எமக்கும் உயிர்போகும். குழந்தைகள் பல தடவைகள் செத்துப் பிழைத்தனர. இந்தப்பயணம் முன்னைய பயணங்கள் போல் அல்லாத பசிதீர்க்கும் பயணமாகவே இருந்தது. குடிதண்ணீர் கிடைக்கக் கூடிய பயணமாகவே இருந்தது. பல மணிநேர போராட்டத்தின் பின் நள்ளிரவில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி கரையேறினோம். நந்திக்கடலின் இறுதிக்கட்டத்தில் அடைமழை எம்மை மிகவும் வருத்திவிட்டது.

புலிகளின் பார்வையிலிருந்து தப்பி கரையேறும்போது இரவு 11மணி 30 நிமிடம் நாம் வரும்திசைகளை மிகதிட்டவட்டமாக அரச இராணுவம் அவதானித்திருந்தது. இந்த இருட்டினுள் இராணுவம் அடிக்கும் பரா லைட் வெளிச்சத்தில் எமது பயணம் தொடர்ந்தது. சிலர் வழிதவறிப் போய் நிலக்கண்ணி வெடியில் அகப்பட்டு உயிரிழந்தார்கள். அங்கங்களை இழந்தவர்களின் அலறும் குரல்களும் இருட்டினுள் அப்பா அம்மா என்று அலறும் குரல்களும் எம்மை மரணத்தின் விளிம்புக்கு எடுத்துப் போய்வந்தது. இவ்வளவு பரிதாபங்களையும் பராலைட் வெளிச்சத்தில் பார்த்துக்கொண்டு இருட்டில் அசையும் போது நாம் அனுபவித்த மனவேதனையை நினைத்துப் பார்க்கும் போது இப்போதும் அழுகைவருகிறது.

அந்த நள்ளிரவில் எமது கண்ணீரை கழுவிப் போன அடை மழையையும் நாம் மறக்கவில்லை. எமக்கு தப்பியோட உதவிய முதியவரையும் நாம் இன்றும் நன்றியுடன் நினைக்கிறோம்.

இராணுவத்தின் பரா லைட் எமக்கு பாதுகாப்பாகவும் வழிகாட்டியாகவும் புலிகளுக்கு எம்மை காட்டிக் கொடுக்கும் எமனாகவும் அதே நேரத்தில் இருந்தது. ஆனாலும் நாம் இராணுவத்திடம் போய் சேர்வது என்பதில் உறுதியாக இருந்தோம். எம்மை மரணத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய புலிகள் எம்மை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததை நாம் என்றும் மன்னிக்க மாட்டோம். இது எத்தனை சந்ததிக்கும் நினைவிருக்கும்.

மீண்டும் பசிப்போராட்டம். சாப்பிட ஏதும் இல்லை. இப்போது நாம் புலிகளின் பயறிங் றேஞ்சில் இல்லை (firing range) களைத்துப்போய் கரையில் பல மணிநேரம் இளைப்பாறினோம். குழைந்தைகளின் பசிக்களையை கண்டு கூட இருந்தவர் தான் கொண்டுவந்த ரொட்டியில் இரண்டை எமக்குத் தந்தார். அதை எனது மூன்று குழந்தைகளுக்கும் பிரித்துக் கொடுத்தேன். தூரத்தே இலங்கை இராணுவம் தெரிந்தது. அவர்களை நோக்கி நடந்தோம். கற்களும் முட்களும் நிறைந்தபாதை எமக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

மாத்தளனில் புலிகளின் துப்பாக்கிகள் அவர்களின் கைகளில் எம்மை நோக்கியபடியே இருந்தன. தற்போது இலங்கை இராணுவத்தினரின் துப்பாக்கிகள். ஆனால் அவை அவர்களின் தோளில் இருந்தன. அவர்கள் கைகளில் பிஸ்கட் பைக்கட்டுக்ளுனும் தண்ணீர்ப் போத்தல்களுடனும் எம்மை அணுகினர். சாப்பிட்டோம் தண்ணீர் குடித்தோம். எமது குடும்பம் தப்பித்துக் கொண்டது என்ற நிம்மதியில் மரத்தடியில் அடுத்த 7 மணித்தியாலங்கள் உறங்கிவிட்டோம்.

பின்னர் இராணுவம் எம்மை அகதி முகாமிற்கு அனுப்பி வைத்தது. 7 நாட்களின் பின்னர் மாற்று உடுப்பு கிடைத்தது. கிளிநொச்சியில் ஆரம்பித்த பயணம் பல மாதத்தின் பின்னர் வவுனியா அகதி முகாமில் முடிவடைந்துள்ளது இனி என்ன? எமது எதிர்காலம் என்ன? எல்லாம் கேள்வியாகவே உள்ளது. யாரிடமும் பதில் இல்லை!

தற்போது சைவப்பிரகாச நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளோம். 3600 பேர் இங்குள்ளனர். ஒருசிறு கட்டிடத்தில் 55 பேர்கள் ஒரு வகுப்பறையில் படுத்திருக்கிறோம். இரவில் ஒருவரின் தலையில் ஒருவரின் கால்படுவது சாதாரணமானது எனினும் நித்திரைக்குப் போகிறோம். நித்திரை உண்மையிலேயே நித்திரைதான. நித்திரை விட்டு நிச்சயமாக எழுவோம். என்ற நம்பிக்கையுண்டு.

முகாமில் சாப்பாடு ஒருதரம் என்றாலும் நிச்சயம் கிடைக்கும். சாப்பாட்டின் தரம் என்பதைவிட சாப்பாடு கிடைக்கின்றது. குடிதண்ணீர் கிடைக்கின்றது. குழந்தைகள் ஓடி விளையாடுகிறார்கள்.
 
முகாமில் மக்கள் தொகை அதிகமாதலால் பலவிதமான அசௌகரியங்களை சந்திக்கிறோம். மலசலகூடமும் அதன் சீர்கேடுகளும் துர்நாற்றங்களும் சகிக்க முடியாது. குளிப்பதற்கு நீண்ட வரிசை காத்திருக்கும். நான் இரவு 12 மணியளவிலேயேதான் குளித்துள்ளேன்.

எமது மருத்துவப் பிரச்சினைகளுக்கு வவுனியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். எமது குழந்தை ஒன்றின் இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு விசேட மருத்துவர் ஒழுங்கு செய்யப்பட்டும் தரப்பட்டுள்ளது.

எனது சகோதரர் குடும்பம் இறுதியாக வெளியேறிவர்களுடன் வெளியேறி வேறு முகாமில் உள்ளதாக அறிந்தேன்.

நாம் எப்போது எமது வீட்டுக்குத் திரும்பிப்போவோம் என்ற எதிர்பார்ப்புடன் முகாம்களில் காத்திருக்கின்றோம். எமது முகாமிற்கு டக்ளஸ் பல தடவைகள் வந்துள்ளார் எல்லோருடனும் தனித்தனியே கதைப்பார். நானும் கதைத்துள்ளேன். எமது தேவைகள் பற்றி சொல்லியுள்ளேன் பலர் கடிதங்களாக எழுதிக் கொடுப்பார்கள். நாம் எமது வாழ்விடங்களுக்கு திரும்பிப்போக வழிசமைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம். தற்போது நாம் இருக்கும் இந்தப் பள்ளிக் கூட அகதி முகாம் மிக விரைவில் உழுக்குளம் 6வது நிவாரணக் கிராமத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அறிகிறோம். பிரிந்த குடும்பங்களை ஒன்றாகச் சேர்க்கின்றார்கள். அதே வேளை தத்தமது வசிப்பிடங்களுக்கு போக விரும்புவர்களது பெயர்விபரங்களும் சேகரிக்கப்படுகின்றது.”
 
இவ்வாறு இந்த இளம்தாய் தனது நீண்ட கொடுமையான பயணத்தை விளங்கப்படுத்தினார். மிகவும் மனம் பாதிக்கப்பட்ட நிலையிலும் வெறுப்புடனும் உள்ள இவர்கள் மனஆறுதலுக்கு யாருடனாவது கதைப்பதற்கு ஏங்குவதை என்னால் உணரக் கூடியதாக இருந்தது. அவர்கள் இழந்தது சொத்து சுகமல்ல. அவர்களது வாழ்க்கை. தாம் வெளியேறிய பின்னர் நடந்த விடயங்கள் பற்றி கேட்டறிந்தனர். அவர்களுக்கு போர் முடிந்ததை தவிர எவ்வாறு முடிந்தது என்ற விபரம் தெரியாதுள்ளனர். தமது வாழ்வு வளம் தமது எதிர்காலம் எல்லாமே புலிகளால் அழிக்கப்பட்டுள்ளதாக குறைப்படும் இவர்களுக்கு தமது எதிர்காலத்தை எவ்வாறு ஆரம்பிக்கப் போகின்றோம் என்ற அச்சஉணர்வும் உள்ளது.

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் நிதிஉதவி அளித்துத்தானே புலிகளை இந்த யுத்தத்தை செய்விக்கத் தூண்டினீர்கள். நாம் இன்று இந்த நிலைமைக்கு வர நீங்களும்தானே காரணம். நாம் எமது வாழ்விடங்களுக்கு போய் வாழ நீங்கள் என்ன செய்ய உள்ளீர்கள்? எனக் கேட்கிறார்கள். அவர்களிடம் கேள்விகள் மட்டுமே நிறையவே உண்டு.

பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்திலிருந்து தமிழ் உண்ணாவிரதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தமிழ் இளையோர் – தமிழ் மாணவர் அமைப்பினரால் நடாத்தப்படும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட உண்ணாவிரதிகள் நேற்று சனிக்கிழமை 11ம் திகதி 2009 இரவு லண்டன் பொலீசாரினால் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை வீதியோரத்தில் தொடர்வதாக தெரியவந்துள்ளது

இத் தமிழர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ளதாக வெள்ளி மாலை பிபிசி-ஜரிவி என்பனவும் செய்தி வெளியிட்டிருந்தன.

தமிழர்களின் இனப்படுகொலையை கண்டித்து இன்று Wed. 8 April 4pm லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

சோசலிஸ்ட் கட்சியினால் (CWI- Socialist Party) ஆரம்பித்து வைக்கப்பட்ட தொடர் பிரச்சார நிகழ்வின் ஒர் அம்சமாக 8ம் திகதி புதன்கிழமை இன்று இந்திய தூதரகம் முன்பாக ஓர் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்தியா தமிழ்நாட்டை மையமாக கொண்டு இயங்கும் இந்த பிரச்சார ஏற்ப்பாட்டாளர்கள் குழு சர்வதேசம் எங்கும் பல நாடுகளில் ஒரே நாளில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த ஒழுங்கு செய்துள்ளனர்.

இலங்கையில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தின் தமிழ் போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவளித்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க உதவிய இந்தியா தற்போது நடைபெறும் மனித அவலங்களிலும், தமிழினப் படுகொலையிலும் பங்காளிகளாக இருப்பதை இன்று இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கை தமிழர்களின் மனித அவலங்களை நிறுத்த விருப்பமின்றி தனது இந்திய பொருளாதாரத்தை மட்டுமே கருத்திற் கொண்டு செயல்ப்படுவதையும்;

விடுதலைப்புலிகளை அழிப்து என்ற போர்வையில் தனது வல்லாதிகத்தை இலங்கையில் ஏற்ப்படுத்துவதும் இந்த மனித அவலங்களில் அக்றையற்ற சர்வதேசங்களின் மனச்சாட்சியையும்;

தமிழ் மக்களின்மீது நடாத்தப்படும் இந்த மனித அவலத்தின் பொறுப்பை தட்டிக்கழிக்கும் சர்வதேசத்தின் நிலையையும் இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

ஆளும் வர்க்கம் தமது நலனிலும் தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுவதில் மட்டுமே அக்கறையுடன் இருப்பதையும் தொழிலாளிகள் விவசாயிகள் தமிழ்பேசும் மக்கள் தமது உரிமைக்காக தாமே போராட வேண்டும் என்பதையும் இன்று இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்தும்.

International Day of Action – Protest at INDIA HOUSE, Aldwych, London, WC2B 4NA
http://www.stoptheslaughteroftamils.org/

Wednesday 8 April 4 – 5.30 pm

தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும்

A RACIST WAR IN SRILANKA’ Arundhati Roy – வன்னி மக்களுக்காக ஒலிக்கும் சர்வதேசக் குரல்கள்

தமிழர்களின் இனப்படுகொலையை கண்டித்து லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

(CWI- Socialist Party)

International Day of Action – Protest at INDIA HOUSE,
Aldwych,
London,
WC2B 4NA –

Wednesday 8 April 4 – 5.30 pm

சோசலிஸ்ட் கட்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தொடர் பிரச்சார நிகழ்வின் ஒர் அம்சமாக 8ம் திகதி புதன்கிழமை இந்திய தூதரகம் முன்பாக ஓர் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ்நாட்டை மையமாக கொண்டு இயங்கும் இந்த பிரச்சார ஏற்ப்பாட்டாளர்கள் குழு சர்வதேசம் எங்கும் பல நாடுகளில் ஒரே நாளில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த ஒழுங்கு செய்துள்ளனர்.

இலங்கையில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தின் தமிழ் போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவளித்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க உதவிய இந்தியா தற்போது நடைபெறும் மனித அவலங்களிலும், தமிழினப் படுகொலையிலும் பங்காளிகளாக இருப்பதை இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கை தமிழர்களின் மனித அவலங்களை நிறுத்த விருப்பமின்றி தனது இந்திய பொருளாதாரத்தை மட்டுமே கருத்திற் கொண்டு செயல்ப்படுவதையும்;

விடுதலைப்புலிகளை அழிப்து என்ற போர்வையில் தனது வல்லாதிகத்தை இலங்கையில் ஏற்ப்படுத்துவதும் இந்த மனித அவலங்களில் அக்றையற்ற சர்வதேசங்களின் மனச்சாட்சியையும்;

தமிழ் மக்களின்மீது நடாத்தப்படும் இந்த மனித அவலத்தின் பொறுப்பை தட்டிக்கழிக்கும் சர்வதேசத்தின் நிலையையும் இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

ஆளும் வர்க்கம் தமது நலனிலும் தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுவதில் மட்டுமே அக்கறையுடன் இருப்பதையும் தொழிலாளிகள் விவசாயிகள் தமிழ்பேசும் மக்கள் தமது உரிமைக்காக தாமே போராட வேண்டும் என்பதையும் இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்தும்.

தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும்

A RACIST WAR IN SRILANKA’ Arundhati Roy – வன்னி மக்களுக்காக ஒலிக்கும் சர்வதேசக் குரல்கள்

தமிழர்களின் இனப்படுகொலையை கண்டித்து லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

(CWI- Socialist Party)

International Day of Action – Protest at INDIA HOUSE,
Aldwych,
London,
WC2B 4NA –

Wednesday 8 April 4 – 5.30 pm

சோசலிஸ்ட் கட்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தொடர் பிரச்சார நிகழ்வின் ஒர் அம்சமாக 8ம் திகதி புதன்கிழமை இந்திய தூதரகம் முன்பாக ஓர் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ்நாட்டை மையமாக கொண்டு இயங்கும் இந்த பிரச்சார ஏற்ப்பாட்டாளர்கள் குழு சர்வதேசம் எங்கும் பல நாடுகளில் ஒரே நாளில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த ஒழுங்கு செய்துள்ளனர்.

இலங்கையில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தின் தமிழ் போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவளித்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க உதவிய இந்தியா தற்போது நடைபெறும் மனித அவலங்களிலும், தமிழினப் படுகொலையிலும் பங்காளிகளாக இருப்பதை இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கை தமிழர்களின் மனித அவலங்களை நிறுத்த விருப்பமின்றி தனது இந்திய பொருளாதாரத்தை மட்டுமே கருத்திற் கொண்டு செயல்ப்படுவதையும்;

விடுதலைப்புலிகளை அழிப்து என்ற போர்வையில் தனது வல்லாதிகத்தை இலங்கையில் ஏற்ப்படுத்துவதும் இந்த மனித அவலங்களில் அக்றையற்ற சர்வதேசங்களின் மனச்சாட்சியையும்;

தமிழ் மக்களின்மீது நடாத்தப்படும் இந்த மனித அவலத்தின் பொறுப்பை தட்டிக்கழிக்கும் சர்வதேசத்தின் நிலையையும் இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

ஆளும் வர்க்கம் தமது நலனிலும் தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுவதில் மட்டுமே அக்கறையுடன் இருப்பதையும் தொழிலாளிகள் விவசாயிகள் தமிழ்பேசும் மக்கள் தமது உரிமைக்காக தாமே போராட வேண்டும் என்பதையும் இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்தும்.

தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும்

A RACIST WAR IN SRILANKA’ Arundhati Roy – வன்னி மக்களுக்காக ஒலிக்கும் சர்வதேசக் குரல்கள்