அழகி

அழகி

இவர்கள் தானா ஈழத்தைப் பெற்றுத்தர இருந்தார்கள்?! :அழகி

Kuppi_Cynideபுலம்பெயர் தமிழ் மக்களே!
இன்று பனிவிழுந்து வெள்ளை வெளீரென்று ஜரோப்பிய மண்ணெங்கும் அழகாய் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. நத்தார் பண்டிகைக் காலமாதலாலும் அழகினை வேண்டியும் மெழுகுவர்த்திகளை ஏற்றி அதன் அழகை ரசித்துக் கொண்டிருப்பீர்கள். மெழுகுவர்த்தியும் தன்னை எரித்து, தானே உருகி, தன்னையே அழித்தும் ஒளியைக் கொடுத்து மற்றவர்களைச் சந்தோசப்படுத்திக் கொண்டிருக்கும்.

இப்படித்தான் ஒரு போராளி என்பவனும் இருக்க வேண்டும். ஒரு உண்மையான போராளி இப்படித்தான் இருப்பான். ஒரு இனத்துக்காகவும் ஒரு வர்க்கத்துக்காகவும் போராடும் போராளி தன் சுக போகங்களை மறந்து தன் உடன் பிறப்புக்களையும் துறந்து தியாக மனப்பான்மையுடன் வாழ வேண்டும். அத்துடன் சுதந்திரம் வேண்டி நிற்கும் அந்த மக்களையும் நேசிக்க வேண்டும். இப்படிப்பட்ட உத்தமர்கள் தான், மக்களுக்கு தலைமையேற்க வேண்டும். இப்படிப்பட்ட உத்தமர்களைத் தான் வரலாறும் நேசித்துக் கொண்டிருக்கின்றது.

உலகத்தில் இன விடுதலையையும் வர்க்க விடுதலையையும் அடைந்த நாடுகளையும் அதன் வரலாறுகளையும் எடுத்துப் படிக்கும் போது அந்தந்த நாட்டுக்காக தங்களையே அர்ப்பணித்த மாபெரும் தலைவர்கள் பற்றியும் அவர்கள் செய்த தியாகங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். கியூபா புரட்சியைவென்ற சேகுவரா பிடல்கஸ்ரோ, நிக்குரவாவின் புரட்சியை வென்ற சன்ரிஸ்தா ஒட்டகே, ரசியப் புரட்சியைத் தந்த லெனின், சீனாவில் புரட்சியை வெடிக்கச் செய்த மாவோ வியட்நாமில் கொசுமினும் தன் வாழ்க்கையின் அரைவாசிக் காலத்தை தன்னின மக்களுக்காய் சிறையிலே கழித்தனர். இன்றுவரையும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நெல்சன் மண்டேலா பற்றியும் அவர்கள் பட்ட கஸ்ரங்கள் பற்றியும் அறியலாம். அவர்கள் படங்களைப் பாருங்கள் இப்படியான தலைவர்கள் வாடி வதங்கி தோலும் தடியுமாகவே காட்சியளிப்பார்கள். ஏன்….? மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடி வதங்கியிருக்கும் போது இவர்கள் வயிறு புடைக்கச் சாப்பிட்டுக் கொண்டிருக்கவில்லை. இவர்கள் எப்பொழுதும் மக்கள் சிந்தனையுடனும், மக்களோடுமே சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்டினியால் செத்து மடிந்து கொண்டிருந்த வேளையில் பிரபாகரனும் அவரது சகாக்களும் தமிழ் நாட்டு நடிகர்கள் போல மினுமினுத்துக் கொண்டே காட்சியளித்தார்கள். இவ்வளவு பிரச்சினைகள் மத்தியில் இவர்களுக்கு உணவு எங்கிருந்து வந்தது….?

புலம்பெயர் தமிழ் மக்களே, இங்கு புலிக்கு பணம் சேர்ப்பவர்களை தயவுசெய்து கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள். அவர்களின் வீடுகளுக்குச் சென்று பாருங்கள். அவர்கள் எல்லோரும் எப்படி எல்லாம் வாழ்கின்றார்கள் என்பதைக் கண்டு கொள்வீர்கள். ஏதாவது விடுதலை உணர்வு கொஞ்சமாவது இருக்கின்றதா…? ஆனால் சில பேர் விடுதலையென்றும் போராட்டம் என்றும் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டுக்குப் போய் ஆயுதம் ஏந்திப் போராட இவர்களோ அல்லது தங்கள் பிள்ளைகளையோ அனுப்ப இவர்கள் தயாராக இருக்கின்றார்களா..? இதற்கு புலிக்கொடியைத் தூக்குபவர்கள் எல்லோரும் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள்.

நாம் திரும்பத் திரும்ப இந்த விடயங்களைத் தான் எழுத வேண்டியுள்ளது. அத்திவாரம் இல்லாமல் எப்படிக் கட்டிடம் கட்ட முடியாதோ அப்படித்தான் விடுதலை அமைப்புக்களும். ஆனால் எந்தவொரு விடுதலை பற்றியும் தெரியாத, புரியாத ஒரு கூட்டம் தான் புலிக்கொடியுடன் அலைந்து கொண்டு திரிகின்றது. முள்ளிவாய்க்காலில் இறுதி நேரத்தில் நடந்த எம் மக்களின் அழிவுகளைக் காணும் போதும், தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் காணொளிக் காட்சிகளைப் பார்க்கும் போதும் எப்படியெல்லாம் நாம் எப்படிப் புரிந்து கொண்டிருக்கின்றோம். இராணுவத்தாலும் புலிகளாலும் எமது கலாச்சாரம் பெண்மை தாய்மை கிழித்தெறியப்பட்டு சீரழிக்கப்பட்டிருக்கின்றது. இவையெல்லாம் ஏன் நடந்தது. இதைத் தடுத்திருக்க முடியாதா..? எமது பலம் பலவீனம் எல்லாம் புரிந்து கொண்டிருந்தோமோ இவையெல்லாவற்றையும் நாம் ஆராயவில்லை. முயற்சியும் செய்யவில்லை. இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் புலிகளும் புலிகளுக்கு ஆதரவான மாமாக்களும் தான். நடந்து முடிந்த போரின் வடுக்களும் வேதனைகளும் இன்னுமே எம்மை உருக்கிக் கொண்டிருக்கும் வேளையிலும்.. ஏன் இறந்து போனவர்களின் இரத்தவாடையும் பிணவாடையும் கூட இன்னும் மாறாத நிலையில் இங்கே அடுத்த கட்டப்போருக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

எமது மக்களையும் எமது மண்ணையும் கொடுரமாகச் சிதைத்த இந்தப் பாசிசப் புலிக்கூட்டம் மீண்டும் தலைமை தாங்க முற்படுவது வேதனைக்கும் வெட்கத்துக்குமுரிய விடயமாகும். உலக நாடுகள் புலிகளை ஏன் தடைசெய்தது எனப் பார்ப்போமாயின் பிரபாகரனுக்கும் பில்லாடனுக்கும் நிறையவே ஒற்றுமைகள் இருக்கின்றது.
1.இரண்டு பேரும் ஆயுதப்பிரியர்கள்
2.இரண்டு பேரும் கல்வியை பற்றிய தெளிவில்லாதவர்கள்.
3.இரண்டு பேரும் பெண்களை மதிக்காதவர்கள்.
4.இரண்டு பேரும் தாக்குதலில்தான் கவனம் கொண்டவர்கள். பின் விளைவுகள் பற்றிய அறிவில்லாதவர்கள்.
5.பில்லாடன் உலகவர்த்தக மையத்தைத் தாக்கி ஈராக் மக்களையும் ஆப்கானிஸ்த்தான் மக்களையும் கொண்டு குவிக்க காரணமானார்.
6.பிரபாகரன் தற்கொலைக் குண்டுதாரிகளைப் பயன்படுத்தி சிங்கள தமிழ் இந்திய அரசியல் வாதிகளைக் கொன்றதோடு சாதாரண அப்பாவிப் பொது மக்களையும் கொன்று குவித்தார்.
7.பில்லாடன் பாடசாலைக்குப் போன பெண்பிள்ளைகளைக் கொலை செய்தார்.
8.பிரபாகரன் பாடசாலைக்குப் போய் கொண்டிருந்த 12 வயதுக்கும் /அதற்குக் குறைந்த வயதொத்தப் பிள்ளைகளையும் கட்டாயமாகப் பிடித்து இயக்கத்தில் சேர்த்து அவர்களுக்கு குண்டுகள் கட்டி வெடிக்கச் செய்து கொலை செய்தார்.
9.பில்லாடன் பல மனைவிமார்களுடன் வாழ்ந்தார். பிரபாகரன் தன் மனைவி குழந்தைகள் குடும்பமென வாழ்ந்தார்.
இப்படியாக இருவரிலும் நிறையவே ஒற்றுமைகள்.

உண்மையில் பிரபாகரன் தமிழ்ப் பெண்களை மதித்திருந்தால் இறுதிக்கட்டப் போரில் இந்தப் பெண் பிள்ளைகளை எல்லாம் இராணுவத்திடம் நிராயுதபாணிகளாக சரணடையச் செய்திருக்க மாட்டார். ஏற்கனவே இராணுவம் பற்றித் தெரிந்திருந்தும் இப்படி நடந்த கொண்டதற்குக் காரணம் தானும் தன் குடும்பமும் அழியும் போது மற்றத் தமிழ் மக்களும் அழியட்டுமே என்ற குறுகிய நோக்கம்தான். மக்களை நேசிக்கும் ஒரு உண்மையான தலைவவன் எந்த இடர் வந்தாலும் இறுதிவரை மக்கள் பற்றியே சிந்தித்திருப்பான். மக்கள் பற்றியே சிந்திக்கவும் வேண்டும். இந்தப் புலம்பெயர் நாடுகளில் மனித நேயமற்றவர்கள் இன்றும் புலிக்கொடியைத் தூக்கிக் கொண்டு திரிகின்றார்கள். சிந்தனை என்பது இவர்களுக்கு இல்லை. தங்களைக் கதாநாயகர்களாகக் காட்டி திருமணம் செய்து கொள்வதற்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவுமே திரிகின்றார்கள். இவர்களை இப்படியே விட்டு வைப்பீர்களேயானால் ஈழத்தில் ஒரு தமிழருமே மிஞ்சமாட்டார்கள். இவர்கள் ஈழத்தில் செய்த தியாகம் தான் என்ன…? இவர்கள் ஏன் புலிக்கொடியைத் தூக்குகிறார்கள் என்றால் ஈழநாட்டுக்குப் போய் போராடி மரணிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே. வாழத்தெரிந்த கூட்டம்.  இவர்கள் கூடவிருந்தே குழிபறிப்பார்கள். தமிழினமே இனிமேலும் மோசம் போகாதீர்கள். தமிழ் மக்கள் புலிகளிடம் மோசம் போனது போதும். எல்லோரும் இனியாவது விழித்திருங்கள்.

நித்திரை கொள்பவனை எழுப்பி விட முடியும். ஆனால் நித்திரை கொள்பவன் போல் இருப்பவனை எழுப்பி விட முடியாது. மனித நேயமுள்ளவர்கள் எல்லோருமாக சேர்ந்து எமது ஈழத்தை மீட்டெடுக்கும் வேலைகளில் இறங்க வேண்டும். எமது உள்ளங்களால் இப்போதும் நாம் ஈழப்போராட்டத்திலே தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முதலில் நாம் முன்பு விட்ட தவறுகளுக்கு எம்மை உட்படுத்தாமல் முன்பு எமது போராட்டத்தினுள் இருந்த மோசடிகாரர்கள் வியாபாரிகள் சந்தர்ப்பவாதிகள் என்போரை இனங்கண்டு இந்தப் போராட்டத்தில் இருந்து அவர்களை ஒதுக்கிவிட வேண்டும். போராட என்ற போர்வையில் இயக்கங்களுக்குள் வந்து சுகபோகங்களை அனுபவிக்கவென கொள்ளையடித்து பழிவாங்கி தங்களது குடும்பங்களை மாத்திரம் முன்னேற்றி இன்று பலர் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யார்? இவர்கள் ஏன் இன்னமும் வெளிநாடுகளில் இனங் காணப்படவில்லை? இந்த நிலமைகளுக்கு முதலில் தமிழ் மக்களாகிய நாங்கள் விடை தேட வேண்டும். தயவு செய்து தமிழ் மக்களே, உங்கள் கல்போன்ற இதயங்களை கொஞ்சமேனும் வெடிக்க வைத்து சில பசுமையான தாவரங்களை வளர விடுங்கள். அப்பொழுதுதான் அனாதைகளான எங்கள் உறவுகள் சந்றேனும் ஆறுதலடைய முடியும். மாவீரர்கள் யார்? கப்டன், கேணல், 1ம் கப்டன், வீரவேங்கை இவர்கள் எல்லாம் யார்? போராளிகளை எப்படி தரம் பிரித்தீர்கள்? பலவந்தமாக பிடித்துக் கொண்டு போய் குண்டுகளை கட்டி வெடிக்க வைத்து படம் பிடித்து பணம் சேர்த்தீர்களே இவர்கள் யார்? எதிரியிடம் பிடிபடாமல் சயனைட் விழுங்கி உயிர் இழந்தார்களே இவர்கள் யார்? இவ்வளவு காலமும் மற்றவர்களுக்கு சயனைட் கொடுத்து மற்றவர்களுக்கு குண்டுகளை கட்டி கொன்று தொலைத்த பிரபாகரனும் அவரது சகாக்களும் எக்காளமிட்டு முழங்கி கொண்டு இருந்தார்களே இவர்கள் யார்? முள்ளிவாய்காலில் தம்மை காப்பாற்றுவதற்கு மக்களை பணயமாக்கி கொன்று குவித்தார்களே – தப்பியோட முயன்ற பொது மக்களை தனது வாளினால் வெறிகொண்டு மூர்க்கமாக வெட்டி வெட்டி கொன்றாரே பிரபாகரனின் மகன் சாள்ஸ் இந்தப் புலிப் பிரகிருதிகள் எல்லாம் யார்? மக்கள் பட்டினியால் சாகும்போது அத்தியாவசியப் பொருட்களை விற்று காசு பண்ணினார்களே இவர்கள் யார்?

உங்களை எல்லாம் பத்திரமாக வெளிநாடு ஒன்றிற்கு அனுப்புகின்றோம் என்றவுடனேயே பிரபாகரனும் அவரது குடும்பமும் உடனடியாக சரணடைந்ததே இவர்களெல்லாம் யார்? இறுதியாக முள்ளிவாய்க்காலில் நெஞ்சமெல்லாம் வெடித்து சிதறும் வண்ணம் தமிழ் பெண்கள் இராணுவத்தால் குதறி எறியப்பட்ட காட்சிகளைப் பார்க்கிறோமே இதற்கெல்லாம் காரணமானவர்கள் யார்? இறுதிநேரத்தில் நடந்த எம் மக்களின் அழிவுகளைக் காணும்போதும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் காணொளிக் காட்சிகளைப் பார்க்கும் போதும் எப்படியெல்லாம் நாம் எப்படிப் புரிந்து கொண்டிருக்கின்றோம். இராணுவத்தாலும் புலிகளாலும் எமது கலாச்சாரம் பெண்மை தாய்மை கிழித்தெறியப்பட்டு சீரழிக்கப்பட்டிருக்கின்றது. இவையெல்லாம் ஏன் நடந்தது. இதைத் தடுத்திருக்க முடியாதா.. ? எமது பலம் பலவீனம் எல்லாம் புரிந்து கொண்டிருந்தோமோ? இவையெல்லாவற்றையும் நாம் ஆராயவில்லை. முயற்சியும் செய்யவில்லை. இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் புலிகளும் புலிகளுக்கு ஆதரவான மாமாக்களும்தான். நடந்து முடிந்த போரின் வடுக்களும் வேதனைகளும் இன்னுமே எம்மை உருக்கிக் கொண்டிருக்கும் வேளையிலும். . ஏன் இறந்து போனவர்களின், இரத்தவாடையும் பிணவாடையும் கூட இன்னும் மாறாத நிலையில் இங்கே அடுத்த கட்டப்போருக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

உலக நாடுகளில் பயங்கரவாதப் பட்டியலில் இருக்கும் விடுதலைப் புலிகள் அல்லது தடை செய்யப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் கொடியை எந்த தமிழர் போராட்டங்களிலும் தூக்கி பிடிக்கிறார்களே யார் இவர்கள்? ஈழ மக்கள் குற்றுயிரும் குலையுயிருமாக குதறப்படும் காட்சிகளை விற்று இங்கு காசு சேர்த்தவர்கள் யார்? அடி அத்திவாரத்தோடு பிடுங்கி எறியப்பட்ட பண்பு கெட்ட புலிகளை இன்னும் தூக்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்களே இந்த புலம்பெயர் தமிழர்கள் இவர்கள் யார்?

வெறும் பணத்திற்காகவும் தமது சுயநல தாகங்களுக்காகவும் ஜிரிவி எனும் விபச்சார தொலைக்காட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்களே – எப்போதாவது மக்களுக்கு சிறு உண்மையைக் கூட சொல்லாமல் ஐரோப்பாவெங்கும் மந்தைகளாக்கி வைத்திருக்கிறார்களே யார் இவர்கள்? இப்பொழுதும் எமது போராட்டம் வளர முடியாதவாறு புலிகள் என்ற பெயரில் அறிக்கைள் விட்டுக் கொண்டிருக்கிறார்களே இவர்களை நாம் எப்போது இனங்காணப் போகின்றோம்? பிரபாகரன் இன்னமும் காட்டிற்குள் இரண்டாயிரம் போராளிகளுடன் பாதுகாப்பாக இருக்கிறார் என வாய்சவடால் விட்டு மற்றவர்களை மடையர்களாக்கி கொண்டிருக்கிறார்களே இவர்கள் எல்லாம் யார்? புலிகளுக்கு பணம் சேர்த்து திரிந்தவர்களெல்லாம் மிக விலை உயர்ந்த கார்களில் உலா வருகின்றார்களே அவை எங்கனம் சாத்தியம்?
இவை குறித்து முதலில் நாம் தெளிந்த சிந்தனையுடன் சிந்திப்போமானால் என்ன தவறுகள் விட்டிருக்கிறோம் என்பது தெரியவரும். இவ்வளவு காலமும் தவறு செய்துள்ளோம் என்ற சிந்தனை ஒவ்வொருவர் மனதிலும் வர வேண்டும். அப்பொழுதுதான் இந்த அரசியற் பொறுக்கிகளை சமூக விரோதிகளை நமது போராட்டத்தைக் கருவறுத்தவர்களை ஓரங்கட்ட முடியும். ஓரம் கட்ட வேண்டும்.

தனி ஈழம் இல்லாமல் தமிழ் மக்களுக்கு விடிவு இல்லை என்பதையே சமீப காலம் வரை இலங்கைப் பேரினவாதம் இடித்துரைக்கின்றது. தியாக உணர்வுடன் தெளிந்த சிந்தனையுடன் எமது போராட்டத்தை நாம் மீள அமைத்துக் கொள்ள வேண்டும். கும்பலிலே கோவிந்தா என எமது போராட்டம் கொச்சைப்படுத்தப்படக் கூடாது. உண்மையான போராளிகள் எப்போதும் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. பிரபாகரன் மாதிரி எதிரியிடம் உயிர் பிச்சை கேட்க மாட்டார்கள். பிரபாகரனால் போசித்து வளர்க்கப்பட்ட பலரும் ராஜபக்சவின் காலடியில் வீழ்ந்து உயிர்ப்பிச்சை கேட்டு காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவையாவும் புலம்பெயர் மக்கள் தம் கண்முன்னே பார்த்து தெரிந்து கொண்ட விடயம். மரணபயம் என்பது பயங்கரமானது என்பது உண்மை. ஆனால் தனது கையில் அதிகாரம் இருக்கிறது என்ற நினைப்பில் ஏராளமான அப்பாவி தமிழ் மக்களை பிரபாகரனும் அவனது சகாக்களும் கொன்று குவித்தார்களே. அப்போதெல்லாம் பிரபாகரனுக்கு மற்றவர்களின் மரணபயம் ஏன் விளங்கவில்லை? ஏனெனில் பிரபாகரன் மனிதனாக வாழ்ந்திருக்கவில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்திய போராட்ட வீரன் பகத்சிங்தான் நினைவுக்கு வருகின்றான். (தேசியத் தலைவர் தனது முன்னுதாரணம் பகவத் சிங் கட்டபொம்மன் என்றெல்லாம் எத்தனை சவடால் விட்டிருக்கிறார்.) தன்னை தூக்கில் போடும் போது தனது தலையை கறுப்புத் துணியால் மூடவேண்டாம் நான் சாகும் போதும் எனது தாய் மண்ணை பார்த்துக் கொண்டே சாக விரும்புகின்றேன் என முழங்கினான். இவனல்லவா வீரன்!! இவனல்லவா போராளி! இவனல்லவா மாமனிதன்! இவனல்லவா தியாகி! இவனல்லவா சூரிய புதல்வன்! இத்தகையவர்களிடம் இருந்து தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் போராடப் புறப்பட வேண்டுமாயின் இலட்சக் கணக்கான மக்களின் குருதியை வீணடித்த தமிழ் பெண்களின் மானத்தை பலி கொடுத்த சரணடைவு என்ற அவமானத்தை பெற்றுத் தந்த புலிக்கொடி முதலில் அழிக்கப்பட வேண்டும். புலி பினாமிகள் தமது தொடர்ச்சியான சுகபோக வாழ்வை தக்கவைத்துக் கொள்வதற்காக ஈழமக்களை விற்பனை செய்வதை இத்தோடு நிறுத்த வேண்டும்.

தந்தை செல்வநாயகமும் தனயன் பிரபாகரனும்! : அழகி

Pirabakaran V_LTTESelvanayagam_SJVவரலாறுகள் ஆராயப்பட வேண்டும் என்பது முக்கியமானது. அதில் தவறுகள் இருப்பின் அவற்றை திருத்தி செம்மையாக நடக்கவும் பழகிக் கொள்ள வேண்டும். ஈழமக்களின் துயரங்கள் இன்னமும் நின்றபாடில்லை. அவை மேலும் தொடருவதற்கான வாய்ப்புக்களே தெரிகின்றன. ஏன்? ஈழத்தமிழர்கள் ஒரு போதும் சமுதாயத்தை நேசிப்பது கிடையாது. சமூகங்கள் ஒன்றுபட்டு வாழ்ந்ததும் கிடையாது. இப்பொழுது உள்ள இந்த நாகரீக வளர்ச்சியடைந்த தொலைத் தொடர்புகள் உலக மக்களை மிகவும் கிட்ட கொண்டு வந்துள்ள போதிலும் கூட எம்மவர்களாலே எமக்கு அழிவு, நாம் எப்போதும் ஒரு உணர்ச்சி உந்துதலுக்கு அடிமையாகவே எம்மை ஆட்படுத்தி கொண்டுள்ளோம். இதிலிருந்து எப்படி நாம் மீள வேண்டும்? மீண்டு வருவதற்கான தேவை என்ன? எதற்காக நாம் மீள வேண்டும்?

புலம்பெயர்ந்த நாடுகளில் ஒவ்வொரு இணையத்தளத்தையும் உருவாக்கி கொண்டு எந்தவொரு உடன்பாட்டிற்கும் வராமல் வரமுடியாமல் மாக்ஸியம் லெனினிஸம் பேசுவதில் யார் கெட்டிக்காரர் என்பதில் தான் நாம் மேதாவித்தனத்தை காட்டுவதற்கு முயற்சி செய்து கொண்டுள்ளோம். எப்பொழுது தான் இந்த மேதாவித்தனங்கள் முடிவுக்கு வரப் போகின்றது? இவ்வளவு காலமும் நாம் காட்டிய மேதாவித்தனங்கள் போதுமானது என்றே நான் நினைக்கிறேன். அப்படியானால் இதற்கு மேல் நாம் என்ன செய்ய வேண்டும்?

1) எமது அரசியல் தலைமைகள் அறுபது வருடமாக ஈழத்தமிழர்களுக்கு என்னதான் செய்திருக்கிறார்கள்?

2)எல்லா இயக்கங்களிலும் நடந்த படுகொலைகளையும் வெளிக் கொணர்ந்து போராடவென வந்தவர்களை ஏன் அடித்தும் விச ஊசி போட்டும் துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் எரித்தும் புதை குழிகளிலும் கொன்று தள்ளினார்கள் என உரிய விளக்கங்களை சம்மந்தப்பட்டவர்கள் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். ஏனெனில் இதன் மூலம் இப்படியான மனநோயாளிளை இனங்கண்டு நடந்து முடிந்த மனிதப் பேரழிவுகளை மீண்டும் வராது தடுக்க முடியும் என நினைக்கிறேன்.

கடந்த கால ஈழத்து அரசியலில் நாம் விட்ட தவறுகளை வெளிக் கொண்டு வரும் நோக்கில் சில தகவல்களை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதில் சரி பிழை இருப்பின் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

1948 ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. எப்போதும் சுதந்திரம் கிடைத்த மக்கள் சந்தோசமாகவே இருந்திருப்பார்கள். அப்படியென்றால் தமிழர்களும் சந்தோசமாகவே இருந்திருக்க வேண்டும். தமிழர்கள் வாழ்வு அமைதியை இழந்திருந்தால் அங்கே பிரிவினை என்றொரு பேச்சு இருந்திருக்கும். அக்கால கட்டத்தில் பிரிவினை என்ற எண்ணம் தோன்றியிருப்பின் ஏன் இவர்கள் ஆங்கிலேயரிடம் பிரிவினை என்ற கொள்கையை வைக்கவில்லை. ஏன்? தெரிந்தவர்கள் பதில் தாருங்கள். பெரிய படித்தவர்கள் அரசியல் வாதிகள் குறிப்பாக ஜி ஜி பொன்னம்பலம் போன்றோர் அக்கால கட்டத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

தமிழர் இளைஞர் காங்கிரஸ் பின்பு காங்கிரசாக மாறியபோது ஜிஜி பொன்னம்பலம் தலைவராக இருந்தார். அந்த காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் மூன்றாம் கட்ட தரத்தில்தான் செல்வா இருந்திருக்கிறார். அப்படி இருந்த செல்வா ஏன் தமிழரசு கட்சியை ஸ்தாபித்தார்? என்பது தான் எனது கேள்வி. ஜனநாயக முறையில் எத்தனை கட்சிகளும் ஆரம்பிக்கலாம். தவறில்லை. ஆனால் என்ன பிழையைக் கண்டு பிடித்து பிரிந்து சென்றார்? இதுவும் எனது கேள்வி. இப்படியே பல தமிழ் தலைவர்கள் எமது மக்களை ஏதோ ஒரு மாயவலைக்குள் சிக்க வைத்து தமது அரசியல் லாபங்களுக்காகவும் சுயநல சுகபோகங்களுக்காகவும் எமது மக்களை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது அறுபது வருட அரசியலில் எம்மால் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. எந்த ஒரு அடிப்படைத் தேவையான பூகோள ரீதியான பரந்த சிந்தனை இல்லாமலே எமது மக்களை வெறும் உணர்ச்சியூட்டி நெருப்பாகவே அதை உருவாக்கி காய்ந்து கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து தமிழ் மக்களே அரசியல் கற்றவர்களே எமது கடந்த கால வரலாற்றை ஆராயும் போது அதன் தவறுகள் வெட்ட வெளிச்சமாகவே வெளிப்படும். எமது தமிழினம் எப்பொழுதும் கடந்த கால வரலாற்றை படித்துப் பார்ப்பதற்கு விருப்பமில்லாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். ஏன் என்பதுதான் எமக்கு புரிவதே இல்லை. பல தடவைகள் நாம் எமது அறிவை ஒழுங்காக பயன்படுத்தி இருந்தால் இப்படியொரு முள்ளிவாய்க்கால் பேரவலம் ஒன்று நடக்காதவாறு தடுத்திருக்கலாம்.

தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் தமது இருப்பை இழந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான் இரு கட்சிகளும் சேர்ந்து தம்மை வளர்த்துக் கொள்வதற்காகவே பிரிவினை என்ற கோசத்தையும் சுயாட்சி சமஸ்டி ஆகியவற்றையும் முன் மொழிந்து 1977 ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு வேப்பிலை அடித்து திருநீறு எறிந்து 22 பேரும் பாராளுமன்றம் சென்றார்கள். இவர்களுடைய ஆக்கிரோசமான நெருப்பான வார்த்தைகள் காற்றை விட மோசமான வேகத்தில் இளைஞர்களை வன்முறைக்கு உந்தி தள்ளியது. ஆனால் இந்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எந்தவிதமான அடிப்படையான ஆயுத போராட்ட உணர்வுகளும் இருந்திருக்கவில்லை. ஆங்காங்கு நன்கு அரசியல் தெரிந்தவர்கள் தொலை நோக்கு கொண்டவர்கள் இவர்களுடைய அரசியல் தவறு என்று விமர்சித்து இருக்கிறார்கள். விமர்சித்தவர்களை கூட்டணியின் முக்கியஸ்தர்கள் துரோகிகள் என்றே வருணித்திருக்கிறார்கள். இங்குதான் கல்வியாளர்கள் மக்களை நேசித்தவர்கள் பண்புள்ளவர்கள் எல்லோரையும் அழித்தொழிக்க ஆரம்பிக்கிறார்கள்.

பின் பலர் உணர்ச்சி மிக்க இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். எந்தவித விசாரணைகளுமின்றி விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கப்படாமல் பல உயிர்களை சுட்டுக் கொல்கிறார்கள். இந்த கொரூர கொலைகளை த.வி.கூட்டணி எந்த கண்டனங்களுமின்றி மௌனமாகவே இருந்து இந்த படுகொலைகளுக்கு உரம் எறிந்து எண்ணை ஊற்றி ஆதரித்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த அரசியல் சுயநல நோக்கங்களுக்கான இளைஞர் வளர்ப்புக்கள் இறுதியில் இவர்களையே கொலை செய்து விடுகிறது. தமிழ் மக்களாகிய நாங்கள் எந்தவிதமான சிந்தனையும் இல்லாமல் எப்படி த.வி. கூட்டணியை நூறு வீதம் ஆதரித்து எமது விடிவிற்காக பாராளுமன்றம் அனுப்பினோமோ அவர்களைக் கொன்றவர்களையும் பின்பு ஆதரித்துள்ளோம். பல இயக்கங்களையும் உன்னத மனிதர்களையும் ஒன்று விடாமல் அழித்துக் கொன்ற தமிழ்ஈழ விடுதலைப் புலிகளையும் நாம் ஆதரித்துக் கொண்டுதான் இருந்தோம். இந்தக் காட்டு மிராண்டிகள் உலக அரங்கிலே எமது பிரச்சனைகளைப் பேசுவதற்கே மனிதர்கள் இல்லாத அளவிற்கு கொன்று புதைத்து போட்டிருந்தார்கள்.

இப்பொழுதும் கூட ஐம்பதாயிரம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டு ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் அங்கவீனர்களாகி வறுமையிலும் பிச்சைஎடுத்துக் கொண்டும் உள்ளார்கள். அவ்வளவு கொடுமைகள் நடந்து முடிந்து விட்ட நிலையிலும் பல போராளிகள் பொதுமக்கள் உயிருடனே சித்திவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையிலான புகைப்படங்கள் காட்சிகள் வந்து கொண்டு இருக்கின்றன. இப்படியான கோரமான பிடியில் இருந்து தமிழ் மக்கள் இன்னும் மீளவேயில்லை. ஆனால் புலம்பெயர் புலிப்பினாமிகளும் அவர்கள்சார்ந்த தமிழினமும் கடந்தகாலத்தில் நிகழ்ந்த குற்றங்களை உணராமல் ஆராயாமல் ஈழத்தமிழ் மக்களின் குருதி காய்வதற்கு முன்னமே வட்டுக் கோட்டை தீர்மானம் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம் எனக் கூறிக் கொண்டு கிளம்பி விட்டார்கள். உண்மையில் இதயமுள்ள மனிதர்களா இவர்கள்?

நாம் வாழும் இந்த ஐரோப்பிய நாடுகளில் எத்தகைய ஐனநாயகத்தை மனிதப் பண்பை சட்டங்களை மதித்து எப்படி வாழ்கிறார்கள். ஒவ்வொரு வேலை செய்யும் போதும் எப்படியெல்லாம் ஆராய்ந்து முடிவு எடுக்கிறார்கள் என்பதெல்லாம் எம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. ஆனால் தமிழர்களாகிய நாங்கள் மாத்திரம் மனிதப்பண்பை இழந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

மீண்டும் ஜிரிவி தனது பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுக் கொண்டுள்ளது. ஜிரிவி யின் அழுகுரல்கள் உண்மையில் எந்தக் கருங்கல் இதயம் கொண்டவர்களையும் கரைத்து விடும் சோகம் வேதனை நிறைந்தது. ஆனால் இந்த அழுகுரல்களால் தமிழரைத் தவிர வேறெந்த இன மக்களையும் எம்மோடு சேர்ந்து கவலைப்பட வைக்க முடியவில்லை. ஏன்? ஜிரிவி உரிமையாளர்களுக்கு புலம்பெயர் தமிழர்களின் அனுதாபங்களில் தான் அவர்களுடைய பிழைப்பு ஓட்டப்படுகிறது. இது சிந்திக்கத் தெரிந்த அனைவருக்கும் புரிந்த ஒன்று. எப்படி இந்த அரசியல் அறிவு மனிதப் பண்பு இரக்கம் இல்லாத பிரபாகரனை இந்த தமிழனம் ஆதரித்ததோ அதே போல் நாடு கடந்த அரசாங்கத்தையும் ஆதரிக்க கோருகின்றது. பிரபாகரனை ஆதரித்த குற்றத்திற்காக மூன்று லட்சம் தமிழர்கள் மரணத்தை அடைந்து, கைகால்களை இழந்து, முள்ளிவாய்காலில் பிரபாகரனுடைய பிணம் நாதியற்று உரிமை கோர ஒரு ஈ காக்கா கூட இல்லாமல் கோவணத்துடன் கிடந்தது செய்திகளாக வந்து சேர்ந்தது.

முப்பந்தைந்து வருட போராட்டம் அரசியல் பற்றாக்குறையாலும் சர்வாதிகார போக்காலும் தமிழ் மக்களை அநாதையான நிலைக்கு தள்ளிற்று. ஏன் இவ்வாறு தள்ளப்பட்டது என யாராலும் ஆராயப்படவில்லை. ஆனால் புலிப்பினாமிகள் தமிழ் மக்களுக்குள் இருந்த துரோகிகள் தான் காரணம் என வரலாற்றை புரட்டிச் சொல்கிறார்கள். மேலும் பிரபாகனும் அவரது குடும்பமும் தமிழ் மக்களுக்காகத்தான் உயிர் கொடுத்தார்கள் எனவும் சூரிய தேவன், கரிகாலன், ராஐகோபுரம் என்றெல்லாம் புகழ் பாடுகிறார்கள். ஆனால் தலைவரும் புலிகளும் தமது உயிர்கள் பறிக்கப்பட போகின்றன என தெரிந்தும் மோசமான கொடுமைகளை இறுதி நேரத்திலும் தமிழ் மக்களுக்கு செய்தார்கள்.

1)மக்களுக்காக அனுப்பப்பட்ட சீனி பருப்பு போன்றவற்றை விற்று காசு பார்த்தார்கள்.

2)சாப்பாட்டிற்கே வழியற்ற குடும்பங்களின் 10, 12 வயது பிள்ளைகளை பிடித்து சென்றார்கள். பெண் குழந்தைகளின் தலைமுடியை கட்டையாக வெட்டி இராணுவத்துக்கு காட்டிக் கொடுத்தார்கள்.

(3)தாம் தமிழினத்தின் காவலர்கள் என சொல்லி தமது இனத்தை தாமே கொன்று குவித்து போர் குற்றம் செய்தார்கள்.

இலங்கை அரசு போர் குற்றம் செய்தது என கண்டிக்கும் நாம் புலிகள் செய்த போர் குற்றங்களையும் வெளியே கொண்டு வர வேண்டும். அப்போதுதான் சுயநலம் மிக்க தமிழர்கள் தமது மக்கள் மத்தியில் அம்பலமாவார்கள். ஆனால் ஜிரிவி ஒற்றுமை இல்லை எல்லோரும் ஒன்றுபடுவோம் என்றே அறைகூவல் விடுத்துக் கொண்டு இருக்கிறது. ஏன் இவர்கள் ஒன்றுமே தெரியாத ஞான சூனியங்களாக இருக்கிறார்கள். இத்தனை அவலங்கள் நடந்து மக்களை அகதிகளாக முகாம்களிலும் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்களின் செய்திகளை அறிந்து பார்த்த பின்பும் எந்தவித நடவடிக்கைகளுக்கும் தங்களை தயார்ப்படுத்தாமல் தமிழீழ அரசாங்கம் என ஒன்று தயாரித்து இருக்கிறார்கள். இவர்களுடைய தயாரிப்புக்களில் தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் என்ற பிரமாண்டமான படம் சுக்கு நூறாக உடைக்கப்பட்டு, எரிக்கப்பட்டு கடலிலே கரைக்கப்பட்டு விட்டது. இந்தப் படத்திற்கான சுய விமர்சனம் இவர்களால் ஒருபோதும் முன்வைக்கப்படவில்லை. ஓன்றுமே நடக்காத மாதிரி இப்போது மே 18 ம் திகதி நாடுகடந்த தமிழீழ அரசு என்ற அகிம்சைப் படத்தை திரைக்கு விட்டிருக்கிறார்கள். தயவு செய்து தமிழ் மக்களே இந்தப் படத்திற்கான விமர்சனத்தை முன்வையுங்கள்.

அத்தோடு தமிழ் மக்களே! மற்றவன் தமிழ் ஈழத்தை எடுத்துத் தருவான் நாம் இங்கிருந்து எமது பிள்ளைகளை டாக்டர்களாக்கி பட்டதாரிகளாக்கி உள்ள கலைகளெல்லாம் கற்பித்து அரங்கேற்றங்கள் செய்து, நாங்களும் வீட்டு வாசலில் ஏறினால் கார் இறங்கினால் கார் காஞ்சிபுரம், பனாரஸ் பட்டுவேட்டி -கட்டி கட்டியாய் தங்கம், வறுத்த கோழி, பீட்ஸா என தின்று குடித்து உள்ள சுக போகங்களையும் கைவிடாது- போனால் போகுது இலங்கை அரசாங்கம் இதற்கெல்லாம் ஊருக்கு போகும் போது கோபிக்கவா போகின்றது என வட்டுக் கோட்டை, நாடுகடந்த அரசாங்கம் போன்றவற்றிற்கு கைகளில் மைதடவி வாக்களித்து – ஜிரிவிக்கு தொலைபேசி எடுத்து அரசியல் விமர்சனங்ளைப் பேசிக் கொண்டு துளி இரத்தம் சிந்தாமல் ஐரோப்பாவின் ஜனநாயக உரிமைகளையும் அனுபவித்துக் கொண்டு ஈழத்தின் அப்பாவி மக்களின் குருதியிலே வாழ்ந்தது போதும்!

ஐயா புலம்பெயர் தமிழினமே! ஒவ்வொருவரும் முதலில் உங்களது பிள்ளைகளைப் போல் மற்றவர்களுடைய பிள்ளைகளையும் நேசியுங்கள். ஐரோப்பாவில் இருக்கும் புலிப் பினாமிகளே! சுயநல பேய்களே! நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சிறு காய்ச்சல் என்றால் கூட வேலைக்கு உடனடியாகவே லீவு போட்டு விட்டு வைத்தியரிடம் கொண்டு ஓடுகிறீர்கள். சொல்லப் போனால் உங்களுடைய பிள்ளைகள் வைத்தியராகவோ பொறியியலாளராகவோ ஆக்குவதற்கு துடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஆண் பெண் என எந்த பேதமும் பாராமல் புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துக் கொண்டு போய் பலியிட்ட போது எத்தனை பச்சிளம் பாலகர்கள் குண்டடிபட்டு துடித்திருப்பார்கள். அதை படம் பிடித்து உங்கள் தொலைக்காட்சிகளில் கண்ணுங்கருத்துமாய் ஒளிபரப்பி காசு சேர்த்தீர்கள்.

புலி பினாமிகளே! புலம்பெயர் நாடுகளில் இருந்து எத்தனை பேர் உங்கள் பிள்ளைகளை தற்கொடை படைக்கு அனுப்பி வைத்துள்ளீர்கள். தயவு செய்து பதில் தாருங்கள். ஜிரிவி அறிவிப்பாளர்களே! மிகவும் கவலை தோய்ந்ததாக முகங்களை வைத்துக் கொண்டு உணர்ச்சியுடன் பிரச்சாரம் செய்கிறீர்களே உங்களுடைய பிள்ளைகள் யாராவது ஈழத்தில் போராட அனுப்பப்பட்டு கொல்லப்படடுள்ளார்களா? ஈவு இரக்கம் இருந்தால் நீங்கள் விட்ட தவறுகளுக்கு மன்னிப்பு கேளுங்கள்.

இறுதியாக, தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் தனிநாடு பிரிந்து தான் ஆக வேண்டும். சந்தர்ப்பம் தன்னலமற்ற தியாகம் நேரம் இவைகள் சரியான தருணங்களில் பாவிக்கப்படும் போது நிச்சயம் ஈழம் மலரும். தயவு செய்து புலப்பினாமிகளே தமிழர் தொலைக்காட்சிகளே நீங்கள் ஈழப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருங்கள். நீங்கள் முற்றாக ஒதுங்கி இருக்கும் பட்சத்தில் தரமான நேர்மையான மனிதநேயம் மிகுந்தவர்களால் ஈழப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

முதலில் அங்குள்ள மக்களின் வறுமை அகன்று நிம்மதியாக மூன்று வேளை உணவு உண்ண ஏற்பாடு செய்ய வேண்டும். அங்குள்ள குழந்தைகளின் கல்வியை குறிப்பாக வளர்க்க வேண்டும். இவற்றை திட்டமிட்டு நடத்தி வெற்றி காணவேண்டும். ஏனெனில் சிங்கள் அரசு திட்டமிட்டு இவற்றை அழித்து கொண்டிருக்கிறது. ஆனால் புலிப் பினாமிகளே!! நீங்கள் அமெரிக்காவில் பாராளுமன்றம் கட்டவென பணம் சேர்த்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. நீங்கள் நடக்க முடியாதவைகளை சொல்லித் தான் இதுவரை காசு சேர்த்தீர்கள். இனியும் சேர்ப்பீர்கள்.

தமிழ் மக்களே! இனியும் தொடர்ந்து ஏமாளிகளாக இருக்காதீர்கள். தமிழினம் மேலும் அழிவதற்கு காரணமாக இருக்காதீர்கள்.

அழகான பனைமரமும் எரியூட்டப்பட்ட ஈழமும்!! : அழகி

Palmyra_Treeகடந்த முப்பது வருடங்களுக்கு முன்பு எமது ஈழம் எப்படி இருந்தது? கொள்ளை அழகோடு மக்களின் மகிழ்ச்சியோடு தான் இருந்தது என நான் நினைக்கிறேன். வயல் வெளிகள், வெங்காயத் தோட்டங்கள், தேயிலை பயிர்கள் போல் பசுமையாய் காட்சியளித்த புகையிலை, மிளகாய்கன்றுகள் இன்னும் சொல்லப் போனால், ஐம்பது வயது தாண்டிய கிழடுகளுடன் ஒரு சக நண்பனைப் போல ஒற்றை மாட்டு வண்டி நீர் இறைக்கச் செல்லும் காட்சி, தான் விளைவிக்கும் பயிர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் விவசாயி, மாணவர்கள் பள்ளி செல்லும் காட்சி என எல்லாம் நினைவில் வந்து மனதை வாட்டுகின்றது. இந்தியாவில் உள்ளவர்களை விட நாம் சுதந்திரமாக இருந்ததாகவே எனக்கு தோன்றுகின்றது. இதை இங்கு ஏன் குறிப்பிடுகின்றேன் எனில் எமது சுதந்திரங்களை நாம் ஏன் இழந்தோம். பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு இருந்த கோவணத்தையும் இழந்தவர்களாகி விட்டோம். இதை ஏற்படுத்தியவர்கள் யார்?

இந்த அவலத்தை எமக்கு தந்தவர்கள் யார்? அவர்களை மக்களாகிய நாம் எப்படி அனுமதித்தோம். சுதந்திரம் என்பது என்ன? அது யாருக்கு தேவைப்பட்டது? இப்பொழுதாகிலும் புலம்பெயர் தமிழர் புரிந்து கொள்கிறார்களா? சுதந்திரத்தை பணம் கொடுத்து வாங்க முடியுமா?
1) தற்கொலை போராளிகளை அனுப்பி வாங்க முடியுமா?
2) ராணுவ தளத்தை ஐம்பது தற்கொலை தாக்குதல் நடத்தி எல்லாளனைக் காட்டினால் அடைய முடியுமா?
3) அரசியல் சாணக்கியம் அற்ற ஆயுததாரிகளால் முடியுமா?
4) எந்த விதமான கேள்விக்கும் இடமின்றி எமது இனத்தில் இரண்டு லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளார்களே இப்போதாவது சுதந்திரம் கிடைத்ததா?
5) வெறும் மாக்ஸியம் , லெனிஸிஸம் , ரொக்ஸிஸம் பேசிக் கொண்டு இவ்வளவு அழிவுகளுக்கிடையிலும் சிங்களவர்கள் எமது உடன்பிறப்புக்கள் என கூறிக் கொண்டு மேதாவித்தனத்துடன் உலா வந்து கொண்டிருந்தால் சுதந்திரம் கிடைத்து விடுமா?

கடந்த காலங்களில் பல சம்பவங்களை கேள்வியுற்று இருந்தேன். தமிழ் இளைஞர்கள் ஏன் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்? படித்த பட்டதாரிகளுக்கு வேலையில்லை – சிங்கள அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றெல்லாம் சொன்னார்கள். என்னை பொறுத்தவரை எமது ஊரில் பல்கலைக்கழகம் சென்று படித்து முடித்தவர்கள் எல்லோரும் வேலையில் தான் இருந்தார்கள். தரப்படுத்தல் என்ற பிரச்சனை இருந்தது என்பது உண்மையே. இதனால் சில மாணவர்கள் பாதிப்படைந்து கவலைப்பட்டார்கள். ஆனால் பலர் நன்கு படித்து பல்கலைக்கழகம் வரை சென்றார்கள். என்னைப் பொறுத்தவரை எமது இன விடுதலை என்றால் என்னவென்று தெரியாமல் – கல்வியறிவு குறைந்தவர்களால், ஆதிக்க வெறியர்கள் சிலரால் ஆங்காங்கே சில இன உணர்ச்சிகளை தூண்டி இளைஞர்களை சேர்த்து குழுக்களை அமைத்துக் கொண்டார்கள். இவர்கள் எப்படி வளர்ந்தார்கள்? எமது தமிழினத்தின் குறைபாடு என்னவெனில் சமுதாயத்தை நேசிப்பதில்லை. மாறாக எது நடந்தாலும் தன்னை பாதிக்காத வகையில் மௌனமாக இருக்கும். இந்த குணத்தினாலேயே கடத்தல்காரனான குட்டிமணி அரச சொத்துக்களை கொள்ளையடித்த போது மௌனமாக இருந்தார்கள். மேலும் குட்டிமணியை சிலர் பொலிசிடம் பிடித்து கொடுக்க முற்பட்டபோது குட்டிமணியால் கொல்லப்பட்டார்கள். ஆனால் மக்கள் அங்கு பேசிக் கொண்டது என்னவெனில் அரசாங்கத்தின் சொத்தை கொள்ளையடித்தால் இவர்களுக்கென்ன? இதை வாய்ப்பாக பயன்படுத்தி குட்டிமணி, பிரபாகரன், உமாமகேஸ்வரன், சபாரட்னம் இன்னும் ஏனைய குழுக்கள் மேலும் மேலும் கொள்ளையடித்து கேள்வி கேட்க ஆளில்லாமல் கண்மூடித்தனமாக எமது மக்களுக்கெதிராக காட்டுத் தர்பார் நடத்தினார்கள்.

சமூக விரோதிகள் என்ற பெயரில் தமிழ் மக்களை மின்கம்பங்களில் கட்டி நெற்றியில் வெடிவைத்து கொன்றார்கள். இதையும் மக்கள் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதோடு நிறுத்தாமல் ‘பெடியள் வெடி வைத்தால் நெற்றி வெடிதான்” என கேவலமாக குரூரமாக வர்ணித்தார்கள். பக்கத்தில் இருந்து ரிவோல்வரை நெற்றியில் வைத்துதானே சுட்டார்கள் – இதில் கிலாகித்து பேச வீரம் எங்கே இருக்கிறது. மக்கள் இதை சொல்வதிலே பெருமை கொண்டார்கள். அது இந்த பயங்கர குழுக்களுக்கு வலுவூட்டுவதாய் அமைந்தது. இதில் சில குழுத்தலைவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். சில தலைவர்கள் விபச்சாரப் பெண்களிடம் சென்று வந்தார்கள். சிலர் ஒவ்வொரு இரவும் குடிபோதையில் மிதந்தார்கள். இப்படியே கொள்ளையடித்த பணம், மக்கள் கொடுத்த பணம் எல்லாவற்றையும் அனுபவித்தார்கள். இவர்களுடைய ராஜபோக வாழ்விற்கு இடைஞ்சலாக இருப்பவர்களை தேசதுரோகி என்ற பட்டத்துடன் கொலையும் செய்தார்கள். கேட்பதற்கு யாரும் இல்லை. இவர்கள் செய்த எல்லா துரோகங்களையும் புலம்பெயர்ந்த தமிழர் கண்மூடித்தனமாக ஆதரித்தார்கள். இப்பொழுது ஈழத்தில் எல்லாம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புலிகளின் அதிகாரவெறியினால் கேட்பதற்கு நாதியில்லா நிலையில் பலரின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு தமது ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. மீண்டும் புலம்பெயர் தமிழீழம் என்று பேசிக் கொண்டுதான் திரிகிறார்கள். இப்பொழுதும் மக்கள் மௌனிகளாகவே இருக்கின்றார்கள்.

இப்படியாயின் சுதந்திரம் என்பதுதான் என்ன? அதை மக்கள் மக்களுக்காக தாமே கட்டியெழுப்ப வேண்டும். எப்படி? முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். பின்பு பலருடன் விவாதம் செய்து ஆராய வேண்டும். மக்களை நேசிக்க வேண்டும். மக்களை நேசிப்பது என்பது என்ன? வாய்ப்பில்லாதவன், வசதியற்றவன், மென்மனம் கொண்டவன், துணையற்றவன், அமுக்கப்பட்டவன் என பலவகைப்பட்ட சமுதாயப் பிரஜைகளையும் மரியாதையாகவும் இரக்கமுடனும் எதிர்கொண்டு அவனுக்காக செயல் புரிதலே மக்களை நேசிப்பதாகும். போராட்டத்தை அந்த மக்களுடையதாக உருவெடுக்க வைத்தல் வேண்டும். போராட்டம் மக்களுடையதாக உருவாகி வரும் போதுதான் நல்ல அரசியல், இராஜதந்திர அனுபவங்களுடன் ஆயுதம் ஏந்த வேண்டும். உயிர்களின் மீது நேசமும் அவற்றின் அருமையும் தெரிந்திருக்க வேண்டும்.

ஐரோப்பிய மண்ணில் நல்ல வசதி வாய்ப்புக்கயோடு மிகவும் சுதந்திரமாக இருந்து கொண்டு போராட்டம் என்றால் மக்கள் அழியத்தான் வேண்டும். தவிர்க்க முடியாது எனவும், மக்கள் வெளியேற தவித்தபோது வன்னி மண் உங்கள் பூர்வீகம் அங்குதான் நீங்கள் இருக்க வேண்டும், நீங்கள் செத்தால்தான் வெள்ளைக்காரன் மனங்கசிந்து ஓடோடி வருவான் என்றெல்லாம் கூறிய ஈவு இரக்கமில்லா புலிப் பினாமிகளே!! உங்களுடைய ஒரு பிள்ளையை என்றாலும் யுத்தத்திற்கு அனுப்ப முடியுமா?

நாட்டில் நிலவிய பசி, பட்டினி – வறுமை என்ற நிலைகளைப் பயன்படுத்தி ஒன்றுமறியாக் குழந்தைகளுக்கு குண்டுகளைக் கட்டி அனுப்பி கொலை செய்து அதை கண்டு களித்ததீர்கள். இரக்கமில்லாத மனித முண்டங்களே, எத்தனை விலைமதிப்பற்ற போராளிகளை எல்லாம் கொன்றொழித்து விட்டு கிட்டு, குமரப்பா, நடேசன், சங்கர், பால்ராஜ் போன்றவர்களை கொண்டாடுகிறீர்கள்? யார் இவர்கள்? இவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்? புலி ஆதரவாளர்களே! இதற்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.

எனது இளம்பருவத்தில் கல்வி கற்கும்போது எமது ஆசிரியர் அடிக்கடி நல்ல மனிதர்கள் எப்படி வாழவேண்டும் என்று கூறுவார். அதை கீழே குறிப்பிடுகின்றேன். ஒரு பகுதி மக்களை அவர் வாழைக்கு ஒப்பிடுவார். வாழைக்கு நீங்கள் எவ்வளவு தண்ணீர் கொடுக்கிறீர்களோ அதற்கு தகுந்த பலனை தரும். இரண்டாவதாக தென்னைக்கு ஒப்பிடுவார். தென்னைக்கு கொஞ்ச தண்ணீர் கொடுத்தால் போதும் பலன் தரும். ஆனால் பனை மரம் மனிதர்கள் எந்த உதவியும் செய்யாமலே மனிதர்களுக்கு உதவி செய்யும்.

இப்படித்தான் போராளிகளும், அல்லது இனிவரும் காலத்தில் நடக்கும் போராட்டங்களாக இருந்தாலும் பனை போன்ற குணமுடையவர்களால் தான் வழிகாட்டப்பட வேண்டும். இப்பொழுது இவ்வளவு வரட்சிக்கும் அழிவுக்கும் மத்தியிலும் பனை கம்பீரமாக காட்சி தருகிறது. பனைக்கு கற்பகதரு என்ற பெயரும் உண்டு.

நாம் கேணல், லெப்டினட், மாமனிதன், தேசப்பற்றாளன் என்றெல்லாம் பெயர்கள் வைக்கிறோம். ஆனால் இன்று பெயர் வாங்கினவனும் இல்லை. பெயர் வைத்தவனும் இல்லை. இத்தனை அட்டூழியங்கள் இந்த புலிகளால் செய்யப்பட்டும், அழிந்தும் திருந்தவில்லை. இவர்கள் எப்போதுதான் திருந்தப் போகின்றார்கள்? ஜிரிவியும், புலிகளும் முதலில் அகதிகள் முகாமில் இருக்கும் இளைஞர் யுவதிகளை தயவு செய்து ஒரு ஆயிரம் பேரையாவது இந்த ஐரோப்பாவிற்கு அழைத்து தாங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பார்களானால் புண்ணியமாதல் கிடைக்கும். நன்றிகெட்ட மனிதர்களே, இப்பொழுதாவது திருந்தப் பாருங்கள். மேலும் மேலும் தவறுகள் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு மன்னிப்பே கிடைக்காது போய்விடும்!!

சிறையில் எம்தமிழினம்! : அழகி

IDPs_Cookingஇப்பொழுது புயலுடன் பூகம்பமும் சுனாமியும் சேர்ந்து எமது ஈழத்து மக்களை நிர்க்கதியாக்கி விட்டு சென்று விட்டது. இதிலிருந்து எமது இனத்தை எப்படியும் நாம் காப்பாற்றியாக வேண்டும். முதலில் நல்ல மனிதர்கள், மக்களின் மேல் இரக்கமுடையவர்கள், பண்புடையவர்கள், நன்றியுணர்வுடையவர்கள் முன்வந்து தலைமை ஏற்று இந்த முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டுக்கிடக்கும் எமது சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும். சிங்கள இராணுவமும் இலங்கையின் இனத்துவேசமிக்க, அரசியல் தலைமைகளாலும் எமது இனம் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றொழிக்கப்பட்டு கொண்டு திட்மிட்டு உருத்தெரியாமல் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏவ்வகையான துரோகங்களை எமது மக்களுக்கு செய்கிறார்கள் என்பதையிட்டு நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

மக்களை பசி பட்டினி போட்டு சிந்திக்கும் ஆற்றலை மழுங்கடிக்கிறார்கள். ஒரு இடத்தில் நிம்மதியாக இருக்க விடாமல் செய்கிறார்கள். குடிப்பதற்கு தண்ணீர் ஒழுங்காக கொடுக்கிறார்கள் இல்லை. இளம் குழந்தைகளுக்கு போதிய உணவு வழங்குவதில்லை. பலரை கைது செய்து விசாரணை இல்லாமல் கொன்றொழித்து கொண்டிருக்கிறார்கள். இளம் பெண்களை இரகசியமாக நடு ராத்திரியில் வலுக்கட்டாயமாக கைது செய்து வல்லுறவுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமக்கு நேரும் கொடுமைகளை பெண்களோ ஏனையவர்களோ வெளிப்படுத்தும் தைரியம் அற்றவர்களாக நாள் தோறும் மனதுள் அடக்கி குமுறிக் கொண்டிருக்கிறார்கள். புலியின் கொடுமைகளுக்குள் முடங்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மக்கள் அதற்கு ஈடான அரசின் அடக்குமுறைகளை முகம் கொடுத்து எதிர்க்க தைரியமற்றவர்களாக ஆக்கப்பட்டு விட்டனர். இவர்களைக் காக்க நாம் ஏதேனும் முயற்சிகள் செய்தோமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பிரபாகரன் என்ற தனிமனிதன் இலங்கை ராணுவத்தின் இரும்பு பிடியில் சிக்கி தனது மரணத்தை எண்ணிக் கொண்டிருந்த வேளையில் குறிப்பாக லண்டனில் உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் என பல மாதங்களாக புலம்பெயர் தமிழர்கள் கொதித்தெழுந்து கொண்டிருந்தார்கள். இதற்கு தமிழ் தொலைக்காட்சிகளும் இருபத்தி நாலு மணிநேரமும் துணை நின்றன. இந்த போராட்டங்களில் புலியை தீவிரமாக எதிர்த்த நபர்களும் பங்கு பற்றினார்கள். சுhதாரண குடும்ப பெண்களும் கலந்து கொண்டார்கள். ஆனால் மூன்று லட்சம் மக்கள் சிங்கள அரசினாலும் அதன் ராணுவத்தாலும் மக்களின் சொந்த நிலத்தில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு மிருகங்கள் போல் முட்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட போது இந்த தருணத்தில் எந்தவொரு உண்ணாவிரதமோ ஆர்ப்பாட்டமோ ஐரோப்பாவில் நிகழவில்லை. மக்களுக்காக போராடுகிறோம் மக்களுக்காக கலந்து கொள்கிறோம் என பதிலிறுத்தவர்கள் மௌனமாகினர். ஏன்? தமிழ் மக்களே இப்போதாவது நீங்கள் எல்லாம் புரிந்து கொண்டீர்களா? இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஏன் செய்தார்கள்? லண்டனில் இரண்டு லட்சம் தமிழர்கள் தாங்கள் பெரிய சாணக்கியர்கள்- நாங்கள் தெருவில் இறங்கினால் நாம் நினைப்பது நடக்கும் தானே என மிகவும் தேர்ந்த அரசியல் உணர்வாளர்களாய் எண்ணிக் கொண்டு தெருக்களில் நின்றார்கள். ஏன் என்பதை இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள்.

எமது மக்கள் மழை, வெயில், பனி என்று பாராது திறந்த வெளி சிறையினில் அடிப்படை வசதிகள் கூட இன்றி அல்லல்படுகிறார்களே. ஆவற்றை மிகவும் இராஜதந்திர நோக்குடன் மிக நுண்ணியமாக செயற்பட்டு தீர்ப்பதற்கு யார் முன்வந்தார்கள்.? ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.? குரங்கில் இருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று எத்தனையோ யுகங்கள் கடந்து விட்டன. ஏன் இப்போதும் குரங்கின் புத்தியுடன் சுகபோகமாக வாழ்வதற்கு மற்றவர்களின் குருதியை தேடுகிறீர்கள். கூட்டமைப்பு சிறீகாந்தா வன்னியில் யுத்தத்தை நிறுத்த முற்பட்டிருந்தால் அது புலம்பெயந்தவர்களுக்கு அவமானமாகி போயிருக்கும் என பேட்டி கொடுக்கிறார்.

துடிக்கத் துடிக்க மக்கள் கொல்லப்படுவதைக் கண்டு ஒரு கணமேனும் உங்கள் மனங்கள் பதைபதைக்கவில்லை என்றால் யுத்தம் முடிந்து புலியின் பக்கமாகவோ அரசின் பக்கமாகவோ கிடைக்கப் போகிற சொகுசு வாழ்க்கைகாகவா காத்திருந்தீர்கள். கூட்டமைப்பு இதுவரை மக்களின் பெயரால் பெற்ற சம்பளம் எவ்வளவு.? இந்த சம்பளம் அவர்கள் படித்து பட்டம் பெற்று வேலை செய்ததற்காகவா கிடைத்தது? மக்களின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் தானே சுகபோகம் அனுபவிக்கிறார்கள். இவர்கள் தமது சம்பளத்தின் எத்தனை வீதத்தை இந்த நாதி இழந்த மக்களுக்கு கிள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். தங்கள் எம்பி பதவியை குறிப்பிட்ட காலங்கள் வரையில் தக்கவைத்து விட்டால் அதன்பிறகு வாழ்நாள் முழுதும் கிடைக்கப் போகின்ற அரச சலுகைகளுக்காகவும் தமது குழந்தை குட்டிகளுக்காகவும் வன்னிமக்களின் குருதியில் நீச்சலடித்த வெட்கங் கெட்ட இந்த கூட்டமைப்பு முதலில் அரசியலை விட்டு இனி வெயியேற வேண்டும். பணம் பதவிக்காக ஏன் தமிழினத்தை விற்கிறீர்கள்.

தமிழ் ஈழ மக்களே! இப்பொழுது மிகவும் நொந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு அறிவுரை கூற முடியாது. ஆனாலும் எச்சரிக்கையாய் சொல்கிறேன். இன்றைக்கு இருபத்தைந்து வருடங்களின் முன்பு இயக்கங்களின் தலைவர்கள் செய்த படுபாதகமான கொடூரங்களை நாம் பிரசுரமாக 1985 ம் ஆண்டு வெளிக் கொண்டு வந்தோம். அன்று நாம் புலிகளாகிய சுக்கிளா, ரவி போன்ற ஈன இரக்கமில்லா கொலைகாரர்களால் அச்சுறுத்தப்பட்டு நாட்டை விட்டு விரட்டப்பட்டோம். ஊண் உறக்கமின்றி, இரவு பகல், நேரம், காலம் என பார்க்காமல் விடுதலைக்காய்  முழு மூச்சாய் நேர்மையாக உழைத்தவர்கள் அனைவரையும் இந்த கொலை வெறியர்கள் அடியோடு சாய்த்து மண்ணோடு மண்ணாக்கி விட்டார்கள்.  கிழக்கு மாகாணத்தின் விடிவெள்ளியாகி விட்ட கருணா செய்த கொடூரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு கணமேனும் கள்ளம் கபடமின்றி சிரிக்க முடியாத இந்த கருணாவை பிரபாகரனை எப்படி வெறுத்து ஒதுக்குகிறீர்களோ அப்படியே வெறுத்து ஒதுக்குங்கள். கருணா செய்த கொலைகளையும், கொள்ளைகளையும், பாலியல் வல்லுறவுகளையும் வெளியே விடுங்கள்.

எம்மையெல்லாம் முள்வேலிக் கம்பிகளுக்குள்ளும், அன்னிய தேசங்களிலும், ஆழ்கடலுக்குள்ளும் தள்ளியது போதாது என்று மீண்டும் எம்மை அழித்து இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு தயார்படுத்த வேலை தொடங்கியுள்ளார்கள். நாடு கடந்த தமிழ் ஈழம் வட்டுக் கோட்டை தீர்மானம் என வரிந்து கட்டிக் கொண்டு புறப்படடுள்ள இந்த பேரவைகாரர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன்.

யார் இவர்கள்.? ஏப்படி இந்த தமிழர் பேரவையை உருவாக்கினார்கள்.? ஏவ்வளவு மக்கள் இவர்களை தேர்ந்தெடுத்தார்கள்.? என்ன சேவை செய்ததற்காக தேர்ந்தெடுத்தார்கள்.? இவர்களின் பின்னணி என்ன.? இவர்களை மேலும் கேட்கிறேன்.

1)நீங்கள் ஒவ்வொருவரும் யார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.!

2)உங்களின் சமுதாய பின்னணி கடந்த காலம் முழுவதும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதையும் தெரியப்படுத்துங்கள்!.

3)உங்களது பொருளாதார பலம் என்ன. உங்கள் சொந்த உழைப்பில் எவ்வளவு எம் இனத்திற்காக செலவழித்திருக்கிறீர்கள்.!

4)இளமைக் காலத்தில் உங்களது சமுதாயச் செயற்பாடுகள் என்ன என்பதையும் தெரியப்படுத்துங்கள்.

தமிழ் மக்களே! இப்படியே நாம் தொடர்ந்தும் மௌனமாக இருந்தோமானால் மேலும் பல கொடியவர்கள் எமக்கு தலைவனாக தோன்றி மிச்சம் மீதி இருக்கின்ற எம் இனத்தை கூண்டோடு அழித்து விடுவார்கள். மிகவும் எச்சரிக்கையோடு இருங்கள். மனிதன் எப்போதும் போராடிக் கொண்டுதான் இருக்க வேண்டும். ஆனால் சரியான நல்ல வழிமுறைகளைப் பின்பற்றி எமது சமுதாயத்தை மற்றவர்கள் வெறுக்காதபடி போராட வேண்டும்.

உலக தமிழனமே எமது தேசத்தில் இவ்வளவு கொடூரமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கையில் 25 கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும் மக்களையும் வேறுபடுத்தி முதலில் நாம் இனம்காண வேண்டும். கோடிக்கணக்கான பணத்தை வைத்துக் கொண்டு, தள்ளாடும் வயதில் இன்னமும் அரசியலில் வெல்வதற்காக எமது மக்களை அடகுவைத்தவர்ளை முதலில் தூக்கி எறியுங்கள்.

எமது போராட்டம் அதற்கான தீர்வுகள் என்பவற்றை நாம்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களை நம்பி மீண்டும் எனது இன மக்களை இன்னொரு தடவை பீரங்கிக் குண்டுகளுக்கும், செல்லடிகளுக்கும் இரை கொடுக்கும் நிலைக்கு உட்படுத்தாதீர்கள். வன்னி மக்களுக்கு உதவ விரும்பினால் ஒவ்வொருவரும் உங்கள் சொந்தங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஊடாக முயலுங்கள். அதை விடுத்து இங்கு வரும் உண்டியல்காரரிடமும் அரசியலில் நண்பன் யார்? பகைவன் யார்? என்ற அரிச்சுவடியே தெரியாத ஞான சூனியங்களிடமும் ஏமாறாதீர்கள்!

ஒற்றுமை ஏன் எதற்காக? : அழகி

Pongu Thamil Kudaiஎமது தமிழ் தொலைக்காட்சிகளைத் திறந்தாலே அங்கே பேசப்படுவது தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை, அதனால்தான் எமது போராட்டம் இவ்வளவு அழிவுகளையும் சந்தித்து தோற்றுக் கொண்டு இருக்கிறது என்பதேயாகும். பல நேரடி நிகழ்சிகளிலும் கூட பல தமிழர்கள் தொலைபேசியூடாக வந்து ஒற்றுமையில்லை – தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கிறார்கள் – ஒட்டுக்குழுக்கள் பணத்திற்காக எதையும் செய்வார்கள் – எமது ஊர்வலங்களிலும் பார்த்த முகங்களையே காணக்கூடியதாக இருந்தது – எமது தலைவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளுவார் என இப்படியே மாரடிக்கும், அரசியல் அறிவைப் பெறாமல் இவ்வளவு காலமும் இந்த தொலைக்காட்சிகள் ஊடாக பிதற்றி வந்திருக்கிறார்கள்.

1986 ம் ஆண்டே ரெலோ போராளிகளை ரயர் போட்டு கொளுத்தி எந்த தார்மீகங்களுக்கும் மதிப்பழிக்காது கொன்று குவித்த அன்றே தமிழர் போராட்டம் பகிரங்கமாக இந்த உலகிற்கு காட்டிக் கொடுக்கப்பட்டு விட்டது என்பதை ஒற்றுமை இல்லை எனப் புலம்பும் இந்த பிரகிருதிகளுக்கு ஒரு போதும் உறைக்கவில்லை.

இதைவிட மேலும் நகைப்பிற்குரிய விடயம் இவர்கள் எல்லாம் உலக அரசியல் பேசுவதுதான். அமெரிக்க அரசியல், இங்கிலாந்து அரசியல் இந்திய அரசியல், உலக ராணுவ அரசியல் எல்லாவற்றையும் தண்ணீர்பட்ட பாடாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் பேசிய தமிழ் ஈழ அரசியல் புலி அரசியல் தலைவர் அரசியல் – எங்கட தலைவர் அரசியல் எல்லாம் வேரோடு பிடுங்கப்பட்டு புதை குழி தோண்டிப் புதைக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக கரைத்து இவர்களுடைய சாம்பலையும் கடலிலே வீசி விட்டார்கள். இவர்களுக்கு நடந்தது முன்னமே பல தடவைகள் வரலாற்றில் நிகழ்ந்தவைதான். ஆனால் எல்லா அரசியலும் பேசிய இவர்களுக்கும் அதே வரலாறு ஏன் நிகழ்ந்தது?

ஏன் இவர்களுடைய அரசியல் இப்படி பரிதாபமாகரமான நிலைக்கு சென்றது? எதற்காக? எமது அப்பாவி தமிழினத்தின் உயிர்களோடும் உடமைகளோடும் பெண்களோடும் குழந்தைகளோடும் விளையாடினார்கள்? இவர்கள் விடை சொல்லியே ஆக வேண்டும். எமது மக்களை இந்த இழிநிலைக்கு கூண்டோடு கொண்டு சென்றது ஏன்? தமிழினம் தமது வரலாற்றில் ஒரு நேர உணவுக்கும், குடி நீருக்கும், உடுபுடவைக்கும் ஏங்கும் நிலைக்கு ஏன் கொண்டு வந்து விட்டார்கள்?

தியாகம் என்பது என்ன? மற்றவர்கள் துன்பப்படும் போது அந்த துன்பத்தை போக்கி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து அவர்களுடைய முகங்களிலே மகிழ்ச்சியை உருவாக்கி தானும் மகிழ்ச்சியடைபவனே தியாகி. ஆனால் எமது போராட்டத்திற்குள் வந்தவர்கள் (ஒரு சிலரை தவிர) இப்படி நடந்தார்களா? ஈழ மக்களின் குருதியை குடித்தார்கள். அவர்களின் உழைப்பையெல்லாம் தட்டிப் பறித்தார்கள். ரௌடித்தனத்தாலும், கொலைகளாலும், பாலியல் வன்புணர்வுகளாலும் வாழ்க்கையின் சுக போகங்களை அடைவதற்கெனவே இயக்கங்களுக்கு சேர்ந்தவர்கள் பலர். இவர்களால் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தி விட முடியுமா?

புலம்பெயர் தமிழர்களை நோக்கினாலோ அவர்கள் பல வகையினர். 1986 ம் ஆண்டு ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்த நேரம். போராட்டத்தை மாற்று இயக்கங்கள் மீது புலிகள் படுகொலைகளைப் புரிந்து காட்டிக் கொடுத்தபோது இதில் இருந்து தப்பி வந்தவர்கள். இவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1) உண்மையான போராளிகள்.
2) இயக்கப் பணத்தைக் கொள்ளையடித்து வெளிநாடு வந்தவர்கள்.
3) இவர்கள் எப்போதும் சுயநலம் மிக்கவர்கள்.

இயக்கப் பணத்தைக் கொள்ளையடித்தவர்களும் சுயநலம் மிக்கவர்களும் இங்கு ஒன்று சேர்ந்தார்கள். எந்த அரசியல் நோக்கும் இல்லாமல் தங்களை மேலும் வளர்த்துக் கொள்வதற்காக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டும் கொலைகள் செய்தும் கப்பம் வாங்கியும் எமது போராட்டததை வலுவிழக்கச் செய்து விட்டார்கள். மக்கள் எல்லோரையும் புலிகள் ஈழத்திலே கொன்றொழிக்க உறுதுணையாக இணையம் மூலமும், வானொலி, தொலைக்காட்சி, ஊர்வலங்கள், பொதுக் கூட்டஙகள், கொண்டாட்டங்கள், கோயில்கள், தமிழ் பாடசாலைகள், பொது அமைப்புக்கள், நிதி சேகரிப்பு, வியாபார நிறுவனங்கள் என சமூகத்தின மூலை முடுக்கெல்லாம் நுழைந்து செயற்பட்டுள்ளார்கள். இவற்றையெல்லாம் புலம்பெயர் மக்கள் சிந்திக்க தவறி விட்டார்கள்.

ஆனால் இன்று ஒற்றுமை இல்லை, தோற்று விட்டோம் என நேரலைகளில் வந்து கூப்பாடு போடுகிறார்கள்!

இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் விடப்பட்ட தவறுகள் என்ன என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். தவறு விட்டவர்கள் தமது தவறுகளை மனந்துணிந்து அதே தொலைக்காட்சிகள் ஊடாக மன்னிப்பு கோர வேண்டும். புலம்பெயர் தமிழர்களை மிகவும் தவறாக வழிநடத்திய தீபம், தினேஸ், அனாஸ், டாக்டர் மூர்த்தி, இராஜமனோகரன், குமார் போன்ற முன்னணியில் நின்றவர்களும் இவர்களுக்கு பின்னணியில் நின்றவர்களும் அரசியலைக் கரைத்துக் குடித்த இவர்களைப் போன்றவர்கள் முரண்டு பிடிக்காமல் அரசியலில் இருந்து பேசாமல் ஒதுங்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் சேர்க்கப்பட்ட பணம் முழுவதும் அந்தந்த நாட்டு முகவர்கள் ஊடாக திருப்பி வழங்கப்பட வேண்டும். இவர்கள் விட்ட தவறுகளுக்கு மனம் வருந்த வேண்டும். புலம்பெயர் நாடுகளில் வீதி வீதியாக கத்திக் குழறி, உண்ணாவிரதம் இருந்து மிரட்டி, பாதைகளை மறித்து ஆட்டம் போட்டும் முள்ளிவாய்க்காலில் தலைவரோடு, ஆயிரக்கணக்கான மக்களையும் சேர்த்து பலியிட்டதற்கு, ஏன் அப்படி நடந்தது என்பதற்கு, இன்னமும் தொலைக்காட்சிகளில் ஒன்றும் தெரியாதவர்கள் மாதிரி ஆய்வுகளும் காரணங்களும் தேடிக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும்.

இதை விடுத்து ஒற்றுமை இல்லை, ஒற்றுமை இல்லை என திரும்ப திரும்ப சொல்லக் கூடாது. தமிழ் மக்களின் ஐக்கியத்தை தாங்களே ஒட்டுக்குழு துரோகிகள் என பிரித்து விட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒற்றுமை என்றால் என்ன? தம் தவறுகளை உணர்ந்து திருந்தி மன்னிப்புக் கேட்டு மனிதர்களாக செயற்பட வேண்டும். நல்ல காரியங்கள் நல்ல மனிதர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும். பெரும்பான்மையான மக்களால் அவர்களின் விருப்புக்களோடு 100 வீதம் செயற்பட வேண்டும். எமது சமூகம் நற்சிந்தனைகளால் வளர்க்கப்பட வேண்டும். ஒருவன் இன்னொருவனை ஏமாற்றினால் ஒவ்வொருவனும் தலைகுனிய வேண்டும். ஏமாற்றுபவனைத் திருத்த முற்பட வேண்டும். ஏமாற்ற நினைப்பவனுக்கு ஊக்கம் கொடுத்து தங்கள் நலன்களை வளர்த்துக் கொண்டதால் ஒரு இனமே இன்று கண்முன் அழிந்து கொண்டிருக்கிறது.

நாம் ஓரளவிற்கேனும் ஜனநாயகம் இருக்கும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறோம். இந்த நாடுகளில் இருந்து நல்லவற்றைக் கற்றுக் கொண்டே ஆக வேண்டும். பொது விடயங்களில் எப்படி நடக்க வேண்டும், பொதுப் பணத்தை எப்படி கையாள வேண்டும் (கையாட அல்ல) என்பவற்றைக் கற்றுக் கொண்டாலே எமது மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.

விடுதலை என்ற பெயரில் தமிழ் மக்களை கொன்றொழித்த பிரபாகரனுக்கு பின்னால் அணிதிரளுங்கள் என்று சொன்னதும் – சொல்வதும் மிகவும் வேதனையான விடயமே. ஏழை, எளிய மக்களின் பிள்ளைகளுக்கு தற்கொலைக் குண்டுகளைக் கட்டி விட்டு; தமது பிள்ளைகளை அரச பரம்பரை மாதிரி வளர்த்ததற்கு பெயர் போராட்டமா?

இறுதியாக ஒற்றுமை ஒற்றுமை என போலியாக கூக்குரல் இடுபவர்கள் தமது உள்ளங்கiளில் கை வைத்து சொல்லட்டும் – என்னத்திற்கு ஒற்றுமை வேண்டும்? இப்பொழுதாவது தமிழ் மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். சுயமாக சிந்திக்க வேண்டும். எமது சமூகத்தை சுயநலமற்ற தமது வாழ்க்கைக்கு பொதுப் பணத்தை கையாடாத நல்லவர்களை முன்னிறித்தி சரியான சிந்தனைகளோடு எமது போராட்டத்தை முன்னெடுத்து செல்லலாம். இப்பொழுதும் நாம் சிந்திக்கவில்லையென்றால் இப்போதிருந்து எமது ஈழத்தில் எமக்கான நிலம் இல்லாமலே போய்விடும். தயை செய்து புலம் பெயர் தமிழர்கள் விழித்து செயற்படுங்கள்.

தமிழர்கள் மறந்த மறக்கடிக்கப்பட்ட கதை : அழகி

srilanka-refugees.jpgஇலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பும், பின்பும் நாம் கேட்டு வளர்ந்த வார்த்தைகள் சுயாட்சி, சமஸ்டி, ஐம்பதுக்கு ஐம்பது, இன்னும் ஒருபடி மேல் போய் ஈழ விடுதலை, தமிழ் ஈழம் என இப்படியே பலர் எம்மக்களை ஏமாற்றியே வந்திருக்கின்றனர். முதற் கூறிய சுயாட்சி, சமஸ்டி, ஐம்பதுக்கு ஐம்பது பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட அன்றைய தமிழ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டவை.  அன்றைய அரசியல்வாதிகள் இளையோர் மற்றும் பொது மக்களைக் கொல்லவில்லை. 

1980ம் ஆண்டு தொடக்கத்தில் தமது சுய தேவைகளுக்காக தமிழ் மக்களை  பிழையான பாதையிலே வழி நடத்தி பாரிய கொலைகளையும் கொள்ளைகளையும இந்த விடுதலை அமைப்புக்கள் நடத்தி ஏறக்குறைய  100 000 தமிழர்களை கொன்று குவித்திருக்கிறார்கள்.

யார் இவர்கள்? எப்படித் தோன்றினார்கள்?  இவர்கள் பின்னணி என்ன? கொஞ்சமேனும் தமிழினம் சிந்திக்க தவறி விட்டது. ஏன்? எதற்காக?

சுருக்கமாக எமது இன மக்களை கூறுவதானால் ஏனைய சமூக மக்களிடம் இருந்து வேறுபடுகிறார்கள். முதலில் எமது சமுதாயத்தில் எது சரி எது பிழை என்பதை பிரித்துப் பார்ப்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும். நாம் ஒரு நல்ல சமுதாயமாக முதலில் உருவெடுக்க வேண்டும்.  பின்புதான் எமது விடுதலையைப் பற்றிப் பேச வேண்டும்.

குறிப்பாக LTTE, PLOTE, TELO  உட்பட விடுதலை என்ற பெயரில் அமைப்புக்கள் செய்த கொடூரங்கள் வெளிக் கொண்டுவரப்பட வேண்டும். விவாதிக்கப்பட வேண்டும். தமது மக்களுக்கு அவர்கள்  எந்த கொடுமைகளும் செய்யாத மாதிரி அடுத்த கட்டத்திற்கு தாவ முற்பட அனுமதிக்கக் கூடாது. இப்பொழுது இருக்கும் தலைவர்களுக்கு விசாரணைகளின் பின் குற்றவாளிகளாக காணுமிடத்தில் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

எவ்வளவோ உன்னத சிந்தனையுடனும் தியாக மனப்பாங்குடனும் இந்த அமைப்புக்களுக்குள் சென்ற எத்தனையோ போராளிகள்  இந்த இயக்கங்களின் தலைவர்களின் சுயநல சுகபோகங்களுக்கு இடைஞ்சலாக இருந்தபடியால் கொன்று ஒழிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் முதன்மையானவர் பிரபாகரனே!

மேலும் புலம் பெயர் நாடுகளில் இயங்கும் தொலைக்காட்சிகள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.  குறிப்பாக தீபம், ஐரிவி ஆகியவை  பிரபாகரன் தமிழ் மக்களுக்கு செய்த கொடூரங்களையும் துரோகங்களையும் மூடி மறைத்து இன்று வரை ஐரோப்பா வாழ்  தமிழ் மக்களை பிழையான பாதையில் இட்டுச் செல்லுகின்றன. இவர்கள் யார் ஏன் எதற்காக இப்படி நடந்து கொள்ளுகிறார்கள்?  இவர்கள் பத்திரிகை துறை தொடர்பாக எதையும் கற்றுக் கொள்ளவில்லை. ஆதலால் ஒரு ஊடகம் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்;, எப்படி மக்களை வழி நடத்த வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உயிரை அழித்தவனை விட  சமுதாயத்தை முன்னேற விடாமல்;, உண்மைகளை மக்கள் முன் கொண்டு செல்ல தயாராக இல்லாத மோசமான கருத்துக்களைப் பரப்புரை செய்த இந்த தொலைக்காட்சி சேவையை நடத்துபவர்கள் முதன்மையான குற்றவாளிகளாவர்.

பத்திரிகைத் துறை என்றால் இந்த ஐரோப்பாவில் இந்த நாடுகளை  அரசியல்வாதிகளின் தவறுகளை சுட்டிக் காட்டி செவ்வனே நடத்துவதற்கு உதவி வருகின்றன. அமைதியும் அபிவிருத்தியும் கண்டு மேலும் முன்னேறி வருகின்றன. நடுநிலை, உண்மைகளை வெளிக் கொண்டு வருதல், துரோகத்தனத்தை எதிர்தல் என மக்களை நல்வழிப்படுத்துவதே சிறந்த பத்திரிகையாளனுக்கு அழகு. அதுவே பத்திரிகைத் துறையின் மக்கள் பணி! ஆனால் தீபமும் ஐரிவியும் புலம்பெயர் மக்களுக்கு ஆற்றிய பணிகளினால் அங்குள்ள மக்களும் இங்குள்ள மக்களும் இன்று நடுத் தெருவில் நிற்கிறார்கள்!

மேலும் ஆங்காங்கு தலைவர்கள் முளைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் உருப்படியான, தமிழ் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தக் கூடிய தலைவர்களை காணவில்லை. தனது குடும்பம் – எப்படி காசு அடிக்கலாம் – எப்படி அண்டிப் பிழைக்கலாம் போன்ற எண்ணங்களுடனேயே  தலைவர்கள் முளைக்கிறார்கள்.

தமிழ் மக்களே!! உசாராக இருக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. இனிமேலும் காலம் தாழ்த்தாதீர்கள். நல்ல தலைவன் ஒருவனை தேட வேண்டும். செயற்பட வேண்டும்.  முகத்தை மூடி மறைக்கும் பத்மநாதன் போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு தலைமையை வழங்க முடியாது. பத்மநாதன்  பிரபாகரனின் கொள்கைகளை முன்னெடுக்கப் போவதாக கூறுகின்றார். பிரபாகரன் கொலைகள் மீது கொண்ட அடங்காத தாகத்ததால் எண்ணுக்கணக்கற்ற அப்பாவி இளைஞர்கள்;, யுவதிகள் கொன்றொழிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு விட்டார்கள். இந்த தமிழினத்தின் வரலாற்றில் இப்படியொரு கற்பனைக்கெட்டாத  கொடூரமான அழிவை பிரபாகரனைத் தவிர வேறெவராலும் நடத்திக் காட்டியிருக்க முடியாது. மீண்டும் ஒரு பிரபாகரன் வாரிசாக வரும் பத்மநாதனை முளையோடு கிள்ளி எறியுங்கள். (KP இன் கைதுக்கு முன் ஓகஸ்ட்/ 1 /2009 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.)

தமிழ் மக்களே! இப்பொழுது மிக மோசமான இனப்படுகொலை நடந்து முடிந்து உள்ளது. தயவு செய்து இதை மறக்க வேண்டாம். இந்த இனப் படுகொலையை எப்படியாவது சர்வதேச  உலகத்திற்கு வெளிக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாக ஏற்றுக் கொண்டு செயற்பட வேண்டும். உதாரணத்திற்கு யூதர்கள் தங்களுடைய இனப்படு கொலையை  எப்படி வெளிக் கொண்டுவந்து வருடா வருடம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதே போல் எமது உடன்பிறப்புக்கள் பல உருத் தெரியாமல் அழிந்து விட்டார்கள். இதை ஒவ்வொரு தமிழனும் தமது மூச்சுக் காற்றுடன் சேர்த்து நினைவு கூருதல் வேண்டும். வருடா வருடம் தமிழர்கள் அழிக்கப்பட்ட நாள் எமது விடுதலையின் தொடக்கமாக தீபங்கள் ஏற்றப்பட வேண்டும். தமிழர்களுடைய தாயகம் மலர வேண்டும்.