January

January

சுவீடனில் குரானை எரித்த நபர் சுட்டுக்கொலை !

சுவீடனில் குரானை எரித்த நபர் சுட்டுக்கொலை !

2023ம் ஆண்டு சுவீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததன் மூலம் வன்முறை ஆர்ப்பாட்டங்களிற்கு வித்திட்ட சல்வான் மொமிகா என்ற 38 வயது நபர் ஸ்டொக்ஹோமில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுவீடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுவீடனில் வசித்த ஈராக்கியரான மொமிகாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்ற நிலையில் நேற்று தீர்ப்பு வெளியாகயிருந்த நிலையிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மொமிகா இஸ்லாமிய மதத்திற்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தில் மொமிகா இரண்டு தடவைகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் அவரின் நடவடிக்கைகளிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டன.

ஒரு தேர்தலில் கூட வாக்களிக்காதவரும் ஒரு தேர்தலில் 75 தடவைகள் வாக்களித்தவரும் எம்.பிகள் – யாழ் மக்களின் வினோத தெரிவு 

ஒரு தேர்தலில் கூட வாக்களிக்காதவரும் ஒரு தேர்தலில் 75 தடவைகள் வாக்களித்தவரும் எம்.பிகள் – யாழ் மக்களின் வினோத தெரிவு
இலங்கை அரசியலில் இருந்து விரைவில் விலகப் போவதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரத்தில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
“இந்த அரசியல் கலாசாரத்தின் மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. நான் இதுவரை யாருக்கும் வாக்களித்ததில்லை. தற்போது மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளேன். நீண்ட காலம் அரசியலில் நீடிக்கப்போவதில்லை. இருக்கும் வரை நேர்மையாக செயற்படவுள்ளேன்” என தெரிவித்தார்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு அனுராதபுரத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அனுராதபுரம் காவல்துறையினரால் கைதான பா.உ அர்ச்சுனா, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
ஒருபுறம் இதுவரை ஜனநாயக தேர்தலில் வாக்களிக்காத ஒரு நபரை யாழ்ப்பாண மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். மறுபுறம் புலிகளின் காலத்தில் தான் ஒரேநாளில் எழுபத்து ஐந்து தடவைகள் கள்ள வாக்குகள் அளித்த சிறீதரனை தெரிவுசெய்துள்ளார்கள் என குறைபடுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழில் இலங்கை தேசியகீதம் ! 

சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழில் இலங்கை தேசியகீதம் !

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் எனவும் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதிஒதுக்கப்பட்டள்ளது. சுதந்திர தின நிகழ்வில் வாகன அணிவகுப்பு இல்லை. தேசிய கொடியை ஏந்திச் செல்வதற்காக விமானப்படையின் 3 உலங்கு வானூர்திகள் மாத்திரம் பயன்படுத்தப்படும் எனவும் நிர்வாக அமைச்சர், மரியாதை அணி வகுப்புக்களில் பங்கேற்கும் படைவீரர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்க காலங்களில் சுதந்திர தின விழாவுக்கான செலவுகள் 250 மில்லியன் தொடங்கி 375 மில்லியன் வரை செலவிடப்பட்டிருந்தது. மேலும் 2018ஆம் ஆண்டு முதல் சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாத சூழல் நீடித்து வந்ததுடன் கடந்த ஆண்டு, நிகழ்வுகளின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது

நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாவுக்கு மதுபானம் விற்பனை !

நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாவுக்கு மதுபானம் விற்பனை

இலங்கையர்கள் நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாவை மதுபானத்திற்க்காக செலவழிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருதய நோய்கள், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் போன்ற தொற்றாத நோய்கள் ஏற்படுவதற்கு 83% மதுபானம் மற்றும் புகையிலை பாவனை காரணமாக இருப்பதாகவும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

2019ஆம் ஆண்டு இலங்கையர்கள் நாளொன்றுக்கு 510 மில்லியன் ரூபாவை மதுபாவனைக்காக செலவழித்து வந்ததாகவும் இந்த தொகை தற்போது அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்த மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிர்வாக இயக்குனர், சம்பத் டி சேரம் , மதுப்பழக்கத்தால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஆண்டொன்றுக்கு 214 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவழிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

புலிகள் காலத்தில் இல்லாத போதைப்பொருட்கள் தற்போது எங்கிருந்து வருகின்றன ..? – ரவிகரன் எம்.பி கேள்வி

புலிகள் காலத்தில் இல்லாத போதைப்பொருட்கள் தற்போது எங்கிருந்து வருகின்றன ..? – ரவிகரன் எம்.பி கேள்வி

வட பகுதி எங்கும் விடுதலைப்புலிகளின் காலத்தில் இல்லாத போதைப்பொருள் பாவனை தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் அதிகரிப்பை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை என முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது முல்லைத்தீவு மாவட்டம் உட்பட வடபகுதி எங்கும் புதுவிதமான பல போதைப்பொருட்கள் பெருகிவருவதாக மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர். யுத்தம் மௌனிக்கப்பட்ட பிறகு, கடந்தகால அரசாங்கங்கள் எமது தமிழ் மக்களை அழிக்கும் நோக்கில் இந்த போதைப்பொருள் பாவனையை எமது பகுதிகளில் ஊடுருவச் செய்து வேடிக்கை பார்த்தனர் .

தற்போதும் பெரியவர்கள் முதல் இளையோர் வரை பெருமளவானோர் போதைப்பொருள் பாவனைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அரசிடம் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் – கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழக மீனவர்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் – கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

பேச்சுவார்த்தை மூலம் இலங்கை கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படுமாக இருந்தால் அதற்கு இரண்டு கரங்களையும் உயர்த்தி நாங்கள் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

கடற்றொழிலாளர்களின் தலைவர்களை நாங்கள் வினயமாக கேட்டுக் கொள்வது என்னவென்றால், நாங்கள் உங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தயார். உங்களுடைய பிள்ளைகள் எங்களுடைய தொப்புள்கொடி உறவுகள், எங்களுக்கு அண்மித்த நாடு என தெரிவித்த அமைச்சர், நாங்கள் நல்ல முறையில் எங்களுடைய உறவுகளை பேணி பாதுகாப்பதற்கே முயற்சிக்கின்றோம்.அந்த முயற்சிக்கு வேட்டு வைக்கின்ற வேலையாகவே இந்திய தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றது என்றார்.

அண்மையில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடாத்திய விவகாரம் பாரிய பேசுபொருளாகியுள்ள நிலையில் இலங்கை கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாலியல் தொழிலில் சிறுமிகள் – ஜனவரியில் மட்டும் வடக்கில் 3 சம்பவங்கள் பதிவு

பாலியல் தொழிலில் சிறுமிகள் – ஜனவரியில் மட்டும் வடக்கில் 3 சம்பவங்கள் பதிவு

பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உட்பட மூவர் யாழில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று ரகசியமாக இந்த செயற்பாடு தொடர்பில் யாழ், மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 17 வயது சிறுமி உள்ளிட்ட இரு பெண்களும் அவர்களை வைத்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தில் 36 வயதுடைய ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் நபர் ஒருவரிடம் 15 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று, தமக்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தினை வழங்குவதாக கைது செய்யப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு மாத கால பகுதிக்குள், வடக்கு மாகாணத்தில் பதிவாகிய மூன்றாவது சம்பவம் இதுவாகும். கடந்த 6ஆம் திகதி கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 15 வயது சிறுமியை வைத்து பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் மற்றும் வீடு வாடகைக்கு வழக்கிய வீட்டு உரிமையாளர் கைதாகியிருந்தனர். கடந்த 12ம் திகதி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும், அவரது கணவரும் 12ம் திகதி கைதாகினர். இந்த நிலையிலேயே யாழில் குறித்த 3ஆவது சம்பவம் பதிவாகியுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் 213 சிறுமிகள் கருத்தரித்துள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் 167 சிறுமிகள் கருத்தரித்துள்ள நிலையில் கடந்த ஆண்டு அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன – முதலில் தனியார் துறையில் விண்ணப்பியுங்கள் வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் அமைச்சு அறிவுரை !

தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன – முதலில் தனியார் துறையில் விண்ணப்பியுங்கள் வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் அமைச்சு அறிவுரை !

வேலையற்ற பட்டதாரிகள் தனியார் துறையிலும் வேலைவாய்ப்புக்களை பெற முன்வர வேண்டுமென, தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்> வேலையற்ற பட்டதாரிகளென தங்களை அடையாளப்படுத்தும் இவர்கள், முதலில் தனியார் துறையில் குவிந்திருக்கும் வேலை வாய்ப்புக்களைப் பெற முன்வரவேண்டும். அரச துறையில் மாத்திரம் வேலைவாய்ப்பு வேண்டுமென இளைஞர், யுவதிகள் பிடிவாதமாக இருக்கக்கூடாது. அனைவருக்கும் அரச துறையில் வேலைவாய்ப்புகள் இல்லை. தனியார் துறைகளில் அதிகமான வேலைவாய்ப்புக்கள் காத்திருக்கின்றன. எனவே, இன்றைய இளையோர் தனியார் துறையிலும் வேலை செய்ய முன்வர வேண்டும். அதைவிடுத்து வீதிகளில் இறங்கிப் போராடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?. படித்தவர்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரச பணிகள் கிடைத்தால் வேலை செய்யாமலேயே சம்பளம் எடுக்கலாம் என்ற எண்ணம் இளைஞர், யுவதிகளிலே காணப்படுவதை வெளிப்படுத்தும் நகைச்சுவை காணொலிகள் பலவும் வேலையற்ற பட்டதாரிகளது போராட்டங்கள் தொடர்பில் வெளிவந்துள்ளது.

“இலங்கைக் கடல் எல்லையை அத்துமீற வேண்டாம் !” இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு இலங்கை அமைச்சர்கள் பதில் !

“இலங்கைக் கடல் எல்லையை அத்துமீற வேண்டாம் !” இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு இலங்கை அமைச்சர்கள் பதில் !

இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இந்திய மீனவர்கள் காயப்பட்டதற்கு, இந்திய வெளிவவாகார அமைச்சு, டெல்லியில் உள்ள இலங்கைத் தூதுவரை அழைத்து எச்சரித்திருந்தது. அதன் பின் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்சல் சம்பத் துய்யகொந்தா, இலங்கை கடற்பரப்புக்குள் வரும் எந்தவொரு படகுக்கும் இடமளிக்க முடியாது. இந்திய படகாக இருந்தாலும் சரி வேறு நாட்டின் படகாக இருந்தாலும் சரி அவை கட்டாயம் கண்காணிக்கப்படும். அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி உள் நுழைவதே அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக வடமராட்சிக் கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கடற்றொழில் நீர்வளத்துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறுவதுடன் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழித்து வருகின்றனர். இந்திய மீனவர்களை கைது செய்ய முனைந்த இலங்கைக் கடற்படை வீரர் ஒருவர் கடந்த ஆண்டு இந்திய மீனவர்களால் கொல்லப்பட்ட சம்பவம் தெரிந்ததே. தென்பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரரின் இறுதி நிகழ்வில் யாழில் சில ஆயிரம் மீனவர்கள் கடற்படை வீரரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

காயப்பட்ட மீனவர்களை பார்வையிடச் சென்ற அமைச்சர் சந்திரசேகர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இறைமையுள்ள நாடு, அதன் கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றனர். இந்திய அத்துமீறிய மீன்பிடி விவகாரம். இன்று நேற்று உருவான விடயம் அல்ல. பல வருடங்களாக நீடித்து வரும் பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு எமது ஆட்சியில் தீர்வைக் காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களை தொடர்ச்சியாக கண்ணீர் விட வைக்க முடியாது. அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடாதீர்கள். எமது மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள் என்று நாங்கள் பலமுறை இந்திய கடற்றொழிலாளர்களை தயவாகக் கேட்டுள்ளோம் என்றார்.

தக்கன பிழைக்கும், மாவை ஒரு அரசியல் விலங்கு !

தக்கன பிழைக்கும், மாவை ஒரு அரசியல் விலங்கு !

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது 82 வயதில் காலமானார். இவர் ஜனவரி 28 இல் செவ்வாய்க்கிழமை வீட்டில் தவறி விழுந்தமையால் , தலையில் நரம்பு வெடிப்பு ஏற்ப்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 29 ஆம் திகதி புதன்கிழமை ஜனவரி இரவு 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறப்புச் செய்தி கேள்விப்பட்டதும் கட்சி பேதமின்றி என்பிபி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உட்பட்ட தமிழரசுக்கட்சியின் முன்னாள் மற்றும் இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழரசுக் கட்சியினரும் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு உடனடியாக வருகை தந்திருந்தனர். மாவை சேனாதிராஜாவின் விருப்பத்திற்குரிய பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரனும் அஞ்சலி செலுத்த ஓடி வந்திருந்தார்.

சோமசுந்தரம் சேனாதிராஜா 1942 ஒக்டோபர் 27 இல் மாவிட்டபுரத்தில் பிறந்தார். அதனாலேயே அவர் மாவை என்ற அடைமொழியோடு மாவை சேனாதிராஜா என அழைக்கப்பட்டு வந்தார். யாழ். வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர், இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றுக்கொண்டார்.

மாவை தனது அரசியல் பயணத்தை 1960 களில் ஆரம்பித்தார். 1962 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்த இவர் 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றியிருந்தார். சத்தியாக்கிரப் போராட்டங்களிலில் பங்குபற்றிய மாவை இலங்கை அரசாங்கங்களால் வெவ்வேறு காலகட்டங்களில் கைது செய்யப்பட்டு மொத்தமாக ஏழு ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். இதுவே அரசியலில் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். அவரை அரசியலில் தக்க வைத்ததும் இதுவே.

1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராகவும் செயற்பட்டார். 1989 இல் முதன்முதலில் யாழ்ப்பாணப் மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் 1989 இல் அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்ட போது அவரினுடைய இடத்திற்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார். அதேமாதிரி மீண்டும் 1999 இல் நீலன் திருச்செல்வம் கொலைசெய்யப்பட்ட போது தேசியப் பட்டியல் மூலம் இரண்டாவது முறையாக பாராளுமன்றம் சென்றார். பெரும்பாலும் படுகொலைகளினால் வெற்றிடங்கள் வந்தபோது அதனூடாக மேலே வந்தவர் மாவை சேனாதிராஜா.

தொடர்ந்து 2000ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். 2001 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அக்கட்சி சார்பாக போட்டியிட்டு 2001,2004,2010 மற்றும் 2015 ஆகிய நான்கு தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தூண்டுதலால் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகளாக அங்கீகரிக்கும் தீர்மானத்தில் பின்னணியிலிருந்து செயற்பட்டிருந்தார். இதன்போது சம்பந்தர் – மாவை அணியோடு வி ஆனந்தசங்கரி மிகக் கடுமையாக முரண்பட்டார். வி ஆனந்தசங்கரி தமிழீழ விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகள் என அங்கீகரிக்க மறுத்துவிட்டதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இரா சம்பந்தனுக்குக் கிடைத்தது. அதனால் மாவையும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். 2014இல் சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து 10 வருடங்கள் தலைவராக செயற்பட்டு வந்தார்.

இதற்கிடையே 2024 பொதுத்தேர்தலின் பின்னர் மாவை தானாகவே தலைவர் பதவியிலிருந்து விலகி ஜனநாயக ரீதியாக தெரிவான சிறிதரன் சிவஞானத்தை தலைவராக செயற்பட கேட்டுக்கொண்டார்.

மாவையின் இராஜினாமாவை இலங்கை தமிழரசுக் கட்சியின் ஒரு அணியான சுமந்திரன் தரப்பு, மற்றைய அணியான சிறிதரன் தரப்பும், சிறிதரனும் மாவையையே தலைவராக தொடர கேட்டுக் கொண்டனர்.

இந்த விவகாரத்தில் தமிழரசுக் கட்சியினர் குழாயடிச் சண்டை போட்டதும் இந்த விவகாரம் ஊடகங்களில் தூற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஜனவரி 21, 2024 இல் திருகோணமலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சிறிதரன் 184 வாக்குகளை எடுத்து அப்பதவிக்கு போட்டியிட்ட எம். ஏ. சுமந்திரனை தோற்கடித்து தமிழரசுக் கட்சிக்கு தலைவராகினார். ஆனால் அத்தெரிவானது முறையாக இடம்பெறவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மாவை 2024 டிசம்பர் 28 இல் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பங்கேற்றவில்லை. அவருடைய தலைமைப் பதவிக்கு பதில் தலைமையாக சி. வி. கே. சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் மாவை சேனாதிராஜாவுக்கு அரசியல் குழு தலைவர்பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. மாவை இலங்கை தமிழரசுக்கட்சி தலைவராக மட்டுமல்ல 2004 முதல் 2014 வரை பத்து வருடங்கள் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். அந்த வகையில் ஒரு முழுநேர அரசியல்வாதியான மாவை யாழ்ப்பாண மேட்டுக்குடியை பிரதிநிதிவப்படுத்தியிருந்தார்.

அவருடைய இறுதிச் சில மணி நேரங்களிலும் கூட கட்சிப் பதில் தலைவர் சிவிகெ சிவஞானம் மற்றும் பா உ பா சத்தியலிங்கம் ஆகியோர் அவரைச் சந்தித்ததாகவும் அவர்களிடையே அரசியல் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அதன் பின்னரேயே அவர் கீழேவீழ்ந்து காயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சமீப நாட்களில் அவர் மாறி மாறி அரசியல் ரீதியாக வெளியிட்ட அறிக்கைகளும் தெரிவித்த கருத்துக்களும் பெரும் விமர்சனத்தையும் சர்ச்சைகளையும் தோற்றுவித்திருந்தன. குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டமை. மறுநாள் அதனை மறந்து சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக கூறியமை என குழப்பாகவே இருந்தார். பல சந்தர்ப்பங்களில் மாவையின் ஞாபகசக்தி தொடர்பிலும் சந்தேகம் எழுந்திருந்தது. எவ்வாறெனினும் மாவை சேனாதிராஜா ஈழத்தமிழர் அரசியல் தளத்தில் மணல் தடத்தைப் பதித்து சென்றுள்ளார்.

அவருடைய இறுதிச் சில மணி நேரங்களிலும் கூட கட்சிப் பதில் தலைவர் சிவிகெ சிவஞானம் மற்றும் பா உ பா சத்தியலிங்கம் ஆகியோர் அவரைச் சந்தித்ததாகவும் அவர்களிடையே அரசியல் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அதன் பின்னரேயே அவர் கீழேவீழ்ந்து காயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.