29

29

உள்ளூராட்சி தேர்தலை இலக்கு வைக்கும் பா.உ அர்ச்சுனா !

உள்ளூராட்சி தேர்தலை இலக்கு வைக்கும் பா.உ அர்ச்சுனா !

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனது கட்சியில் இணைந்து போட்டியிடுவதற்கு, யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், தனது கட்சியில் இணைய விரும்புபவர்களுக்கு படிவமொன்றையும் வெளியிட்டுள்ளார்.

குறித்த படிவத்தை நிரப்பி அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள அவர், உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட விரும்பினால் தனது கட்சியில் இணைந்து கொண்டு போட்டியிட முடியுமென்றும் தெரிவித்துள்ளார்

என்.பி.பி பயணிக்கும் பாதை சில மாதங்களில் அனைவருக்கும் தெரியும் – நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார !

என்.பி.பி பயணிக்கும் பாதை சில மாதங்களில் அனைவருக்கும் தெரியும் – நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார !

யோஷித்த ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கியதன் மூலம் அவர் வழக்கில் இருந்து விடுதலையாகியதாக கருத முடியாது. நாங்கள் என்ன செய்வது என இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள். அதன் பின்னர், தேசிய மக்கள் சக்தி பயணிப்பது புதிய பாதையிலா அல்லது கடந்த அரசாங்கங்கள் பயணித்த பாதையிலா என்பதை மக்களுக்கு தெரிந்துகொள்ள முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். யோஷித்த ராஜபக்ஷவுக்கு நீதிமன்ற பிணை வழங்கப்பட்டிருப்பது தொடர்பில் சமூகவலைத்தலங்களில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ஒருசில நடவடிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு இந்த அரசாங்கமும் பழைய அரசாங்கங்கள் சென்ற வழியிலேயே செல்கிறதா என சிலர் சந்தேகிக்கின்றனர் என தெரிவித்த நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, யாரையும் சிறையில் அடைத்து பழிவாங்குவதற்கு எங்களுக்கு எந்த தேவையும் இல்லை. அதனால் தீர்மானம் எடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம். என தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படை துப்பாக்கிப் பிரயோகம் எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் காயப்பட்டனர் – இந்தியா கண்டனம்!

இலங்கைக் கடற்படை துப்பாக்கிப் பிரயோகம் எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் காயப்பட்டனர் – இந்தியா கண்டனம்!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட தமிழக மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியமைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது .

நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்களை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்ய முற்பட்ட போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர் .

இதன்போது , இருவர் படுகாயமடைந்ததுடன் மூவருக்கு சிறு காயங்களும் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இந்திய துணைத்தூதவர் சாய் முரளி காயமடைந்த மீனவர்களை வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் புதுடெல்லியில் உள்ள இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகரை நேரில் அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சிடம் இந்த விடயம் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது . எந்த ஒரு சூழ்நிலையிலும் இத்தகைய தாக்குதல்களை நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்விடயத்தில் இரு அரசாங்கங்களுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ள இலங்கை கடற்படையினர், மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது, உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமல், இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர். இதனால் படகில் சில கடற்படையினர் இறங்க முற்பட்டபோது அவர்களது கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆக்ரோஷமாகவும் ஒழுக்கமின்றியும் நடந்து கொண்டனர். இதனாலேயே தாம் தாக்குதல் நடாத்தவேண்டியேற்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்து வடக்கு கடல் பிராந்தியத்தில் கடல் வளத்தையும் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் தாம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மீனவர்களை என்.பி.பி பாராளுமன்ற உறுப்பினரும் வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுர காலத்தில், நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என தமிழர்கள் நம்புகிறார்கள் – வடக்கு ஆளுநர் வேதநாயகன் !

ஜனாதிபதி அனுர காலத்தில், நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என தமிழர்கள் நம்புகிறார்கள் – வடக்கு ஆளுநர் வேதநாயகன் !

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வடக்கு மக்கள் நம்புகின்றனர் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூஸிலாந்துத் தூதுவர் டேவிட் பின்னியிடம் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், பொருளாதார மேம்பாடு தொடர்பிலும் குறிப்பாக சுற்றுலாத்துறை தொடர்பிலும் வடக்கு மாகாண ஆளுநரிடம், தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடு தொடர்பாகவும் அதன் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும், கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான உள்ளூர் விமான சேவைகளை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துவது தொடர்பிலும், நியூஸிலாந்துத் தூதுவருக்குத் தெரியப்படுத்தினார்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கம் வடக்கு மாகாணத்தில் எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பிலும், வடக்கில் அதிகரித்துள்ள உயிர்கொல்லி போதைப் பொருள் பாவனை மற்றும் அதனது தாக்கங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டியதன் அவசியம், மீள்குடியேற்றம், உள்கட்டுமான அபிவிருத்தி தொடர்பிலும் ஆளுநர், தூதுக் குழுவினருக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இலங்கை – ஒன்பதாயிரம் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் ! 

சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இலங்கை – ஒன்பதாயிரம் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் !

தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையின் அறிக்கைக்கு அமைவாக, 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை, 580 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகி உள்ளன. ஏனைய சிறுவர் தொடர்பான 8746 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. இதில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகளாக 2,746 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ளது.

சிறுவர்கள் மீதான சித்திரவதை தொடர்பாக 1,950 முறைப்பாடுகளும், சிறுவர்கள் யாசகம் பெறுவது தொடர்பாக 229 முறைப்பாடுகளும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 42 முறைப்பாடுகளும், பாலியல் செயல்களுக்கு சிறுவர்களை தூண்டுவது தொடர்பாக 25 முறைப்பாடுகளும், குழந்தை திருமணங்கள் தொடர்பாக 14 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் முத்தையா யோகேஸ்வரி என்ற சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி ரகுராமின் நண்பர், பேராசிரியர் ரி கணேசலிங்கம் பற்றி பெண்ணிய வாதியும் மனித உரிமை வாதியுமான ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வருமாறு கூறுகிறார்.

புலம்பெயர்ந்த தமிழருக்காக அநுர வீட்டைப் பறித்துவிட்டார் – மகிந்த ராஜபக்ச புலம்பல்

புலம்பெயர்ந்த தமிழருக்காக அநுர வீட்டைப் பறித்துவிட்டார் – மகிந்த ராஜபக்ச புலம்பல்

 

இல்லம் பறிக்கப்படுமென்றும் எனது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நீக்கப்படுவார்களென்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியது, தேர்தலில் அவர்களுக்கு உதவிய தமிழ் புலம்பெயர்ந்தோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுத்தது எனது அரசாங்கம்தான் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த , நாட்டின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பாதுகாப்பை இழந்ததற்கு பொதுமக்களின் எதிர்வினையை வரவிருக்கும் தேர்தல்களில் அரசாங்கம் அறிய முடியும் என்றும் பாதுகாப்பு அல்லது உத்தியோகபூர்வ இல்லம் குறித்து ஒருபோதும் புகார் செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது செய்வதற்கு எதுவுமறியாது முன்னுக்குப் பின் முரணாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். கடைசியில் இனவாதச் சீட்டையும் வைத்து ஆட்டத்தை ஆட நினைக்கின்றார். சிங்கள, தமிழ் அரசியல் தலைமைகள் இனவாதத்தை கக்கி உணர்ச்சி பொங்கப் பேசி வாக்கு வங்கியைத் தக்க வைக்க முடியும் என்ற பழைய சமன்பாட்டை கைவிட்டு மக்களோடு நின்றால் மட்டும் தான் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.

புலிகளை அழித்ததால் நழுவிய மகிந்த ராஜபக்சவின் நோபல் பரிசு கனவு – மகன் நாமல் கவலை !

புலிகளை அழித்ததால் நழுவிய மகிந்த ராஜபக்சவின் நோபல் பரிசு கனவு – மகன் நாமல் கவலை !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். .

“விடுதலைப் புலிகளை நசுக்கியதற்காக நாமும் எங்கள் பரம்பரையும் கூட கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்ற உண்மையை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்தோம். எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் நாங்கள் எமது அரசியலைத் தொடர்வோம் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கஜாவின் அழைப்பை புறக்கணிக்கின்றது தமிழரசுக்கட்சி !

கஜாவின் அழைப்பை புறக்கணிக்கின்றது தமிழரசுக்கட்சி !

தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் சிவிகெ சிவஞானத்திடம் வழங்கிய அழைப்பை தமிழரசுக் கட்சி புறக்கணிக்கின்றது. கடந்த 27ஆம் திகதி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரிடையே இடம்பெறவிருந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் தமிழரசுக்கட்சியினர் கலந்து கொள்ளாததால் கைவிடப்பட்டிருந்தது. தாங்கள் அடுத்த பெப்ரவரி 8 வரை தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக காத்திருப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் தமிழ் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார். ‘நாங்கள் முயற்சிகள் எடுத்தோம் தமிழரசுக் கட்சி ஐக்கியத்திற்குத் தயாரில்லை. எம் ஏ சுமந்திரன் ஐக்கியப்பட விடுகிறார் இல்லை’ என்று ஒரு கதையாடலை இதன் மூலம் அவிழ்த்துள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையாக அமைய போகிறது. அந்த நிலையில் தமிழர் தரப்பில் நாடாளுமன்றில் உள்ள 19 உறுப்பினர்களில் குறைந்த பட்சம் 10 உறுப்பினர்களாவது ஒன்றிணைந்து வரவுள்ள ஒற்றையாட்சியை எதிர்க்க வேண்டும். கட்சிகள், உறுப்பினர்கள் மற்றும் கொள்கைகள் மீது பலருக்கும் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் இருப்பை இல்லாதாக்கும் அரசியலமைப்பை தமிழ் மக்களாக நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். ஒற்றையாட்சி சிந்தனையோடு வரும் எந்த அரசியலமைப்பை ஏற்க முடியாது. சமஷ்டி தீர்வை மாத்திரமே ஏற்றுக்கொள்வோம். சமஷ்டி என்பதில் எந்த ஒளிவுமறைவும் இன்றி நேரடியாக சமஷ்டி தீர்வாகவே தீர்வுத்திட்டம் முன் வைக்கப்பட வேண்டும் என்றார்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களிடம் பேசியிருந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், சமஷ்டி தொடர்பில் பெரிதாக நாம் அலட்டிக்கொள்ள போவதில்லை என்றும் மாறாக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பில் தான் நாம் அதிக கவனம் செலுத்த முயற்சிக்கிறோம் என தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது

‘கல்விச் செயற்பாடுகளைத் சீர்குலைக்க வேண்டாம் – வேலை நிறுத்தத்தை நிறுத்துங்கள்’ அமைச்சர் உத்தரவு

‘கல்விச் செயற்பாடுகளைத் சீர்குலைக்க வேண்டாம் – வேலை நிறுத்தத்தை நிறுத்துங்கள்’ அமைச்சர் உத்தரவு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விவகாரத்தில் அரசாங்கம் தீர்வை வழங்கும். எனவே வேலை நிறுத்தங்களில் ஈடுபடாது கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து அறிக்கையொன்றைக் கோருவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. கல்வி அமைச்சு வெகு விரைவில் இவ்விவகாரத்தில் தலையிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும். எனவே எவ்வித வேலை நிறுத்தங்களும் இன்றி பல்கலைக்கழக நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறு கோருகின்றோம். எந்தவொரு பிரச்சினைக்கும் வேலை நிறுத்தங்களுக்குச் செல்வதற்கு முன்பு எம்முடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

விரிவுரையாளர்களானாலும், மாணவர்களானாலும் எந்த சந்தர்ப்பத்திலும் எம்முடன் கலந்துரையாட முடியும். அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு யாருக்கும் எவ்வித தடைகளோ கட்டுப்பாடுகளோ இல்லை. கடந்த காலங்களில் பல்வேறு காரணிகளுக்காக வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் கல்வி கற்பதற்குரிய சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டுள்ளன. எனவே பல்கலைக்கழக கட்டமைப்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தாமல், கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எமது தேவையாகும். அதற்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் நாம் வழங்குவோம் என்றார் அமைச்சர் நளிந்த.

கலைப்பீடாதிபதி சி ரகுராம், தான் எடுத்த முடிவுக்கு எதிராக பேரவை முடிவெடுத்ததால் கொதிப்படைந்து போட்ட நாடகமே பதவி விலகல். பின்னர் தன்னுடைய சார்பு மாணவர்களைத் தூண்டிவிட்டு, மீண்டும் பதவிக்கு வர கோரிகை வைக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார். அதற்காக ஆசிரியர் சங்கத்தில் சி ரகுராமுக்கு ஆதரவாக நின்ற காமுகப் பேராசிரியர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க, ஏனையவர்களும் வேறு வழியின்றி களத்தில் இறங்க வேண்டியதாயிற்று.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் மாணவிகள் மீது திணிக்கப்பட்டுள்ள பாலியல் லஞ்சம், அங்குள்ள பெண் விரிவுரையாளர்கள் எதிர்கொள்கின்ற பாலியல் லஞ்சம் மற்றும் மோசடிகள் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றுக்கு கல்வி அமைச்சு உத்தரவிட வேண்டும். உயர்கல்வி வரை இலவசக் கல்வி. ஆனால் பட்டதாரி மாணவர்கள் பேராசிரியர்களின் பழிவாங்கல்களால் மாதக் கணக்கில் வகுப்புத் தடை போடப்படுகின்றனர். தற்போது மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ் சிவகஜனுக்கு எழுந்தமானமாக வகுப்புத் தடை வழங்கப்பட்டுள்ளது. முன்னர் சி ரகுராமின் செல்லப்பிள்ளையாக இருந்த எஸ் சிவகஜனுக்கும் கலைப்பீடாதிபதி ரகுராமிற்கும் இடையேயான முரண்பாடு, தற்போது போதைப் பொருளுக்கு எதிரானதாக காண்பிக்கப்பட்டு வருகின்றது.

அண்மைய யாழ் பல்கழலக்கழகப் போராட்டம் பெயரளவில் போதைப்பொருளுக்கு எதிரானது என கலைப்பீடாதிபதி ரகுராம் தரப்பால் சொல்லப்பட்டாலும், இப்போராட்டம் முற்றிலுமாக சி ரகுராமின் தனிப்பட்ட நலன்களை முன்நிறுத்தியும், கலைப்பீடாதிபதி ரகுராமிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைப் பழிவாங்கவுமே மேற்கொள்ளப்படுகின்றது. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் மாணவர்களின் நலன்களை முன்நிறுத்தாமல், தனிப்பட்ட கலைப்பீடாதிபதியின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை நியாயப்படுத்தவே போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இவ்விடயத்தில் அரசு தனது உத்தரவை மிகத் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளால் கல்வி கற்றலுக்கான சந்தர்ப்பங்கள் இழக்கப்ட்டுள்ளது. இதனை இனிமேலும் தொடரமுடியாது என அமைச்சர் கோடிட்டு மிகத் தெளிவாகக் காட்டியுள்ளார். நாளை பேரவைக் கூட்டத்தில் இறுதியான முடிவெடுக்கப்படும் எனத் தெரிகின்றது.

படிப்பிக்க மாட்டோம்’ யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ! ‘வேலையில்லாமல் இருக்க இவர்களும் தான் காரணம்’ வேலையற்ற பட்டதாரிகள் 

படிப்பிக்க மாட்டோம்’ யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ! ‘வேலையில்லாமல் இருக்க இவர்களும் தான் காரணம்’ வேலையற்ற பட்டதாரிகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணித்து மாணவர்களுக்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பேராசிரியர் ரகுராம் மீள கலைப்பீடாதிபதி பதவியை ஏற்க வேண்டும், விதிமுறை மீறல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் கடந்த காலத்திலே உறுதியான நடவடிக்கைகளை எடுக்க தவறியமை குறித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பெருமளவான வேலையில்லா பட்டதாரிகளை தொழில் உலகிற்கு ஏற்ற திறன்கள் இல்லாமைக்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் இந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பேராசிரியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் வடக்கு கிழக்கில் உள்ள பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குமாறு கோரிய போராட்டங்களில் ஈடுபட்ட பட்டதாரி ஒருவர் தேசம்நெட்க்கு தெரிவிக்கையில், இறுதியாக வழங்கப்பட்ட அரச நியமனங்களில் எமது வயது ஒத்த – பிரிவை சேர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்களில் கற்றவர்களுக்கு நியமனம் கிடைத்த போதும் என்னுடன் கிட்டத்தட்ட 400ற்கும் அதிகமானோருக்கு நியமனம் வழங்கப்படவில்லை. காரணம் பல்கலைக்கழக கல்வியை முடிக்க காலதாமதமானதே காரணம். இதற்கான காரணம் விரிவுரையாளர்களின் சம்பள உயர்வு கோரிய போராட்டங்கள், வினாத்தாள் திருத்தங்களுக்காக மூன்று அல்லது நான்கு மாதங்கள் எடுக்கும் விரிவுரையாளர்களின் சோம்பேறித்தனம், தேவையற்ற வகுப்புத் தடைகள் போன்றனவே காரணம் என விசனம் வெளியிட்டிருந்தார்.

விரிவுரையாளர்கள் ஆடம்பரமான வாழ்க்கை கவர்ச்சிகரமான சம்பளம் என திளைக்கிறார்கள். ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு கற்க வரும் பெரும்பாலான மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் – வறுமையான குடும்பங்கள் ஆகியவற்றை சேர்ந்தவர்கள். இவர்களுக்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் தமது இஷ்டத்துக்கு போராட்டங்கள் செய்து மாணவர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் விரிவுரையாளர்களுக்கு எதிராக பல மாணவர்களும் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

அதே நேரம் ஜனாதிபதி அனுரா யாழ் வருகையை மேற்கொள்கையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள யாழ் வேலையற்ற பெரும்பாலும் கலைப்பீடப் பட்டதாரிகள் ஈடுபடவுள்ளதாக அவர்களின் சார்பில் பேசவல்ல கெ டெனீஸன் தெரிவித்துள்ளார். இச்சங்கத்தினர் அரசாங்கம் எவ்வித போட்டிப் பரீட்சைகளும் இன்றி திறமைகள் பற்றிய நேர்காணல்களுமின்றி தங்களுடைய பட்டப்படிப்பு சான்றிதழுக்கு வேலை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். கடந்த கால அரசுகள் காலத்துக்கு காலம் தங்கள் வாக்கு வங்கியை நிரப்புவதற்கு அரச பணிகளில் லட்சக்கணக்காணோரை நியமித்து நாடு அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே தள்ளாடும் நிலையை ஏற்படுத்தி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஒரு வேண்டுகோளை கிழக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் கிழக்கு ஆளுநரிடம் முன்வைத்த போது அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். புதிய ஆட்சேர்ப்புக்கள் வருகின்ற பட்சத்தில் துறைசார்ந்தே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தற்போது முன்வைத்துள்ள கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். வரப்போகும் வேலை வாய்ப்புகளுக்கு பலரும் ஆர்வம் காட்டுவதால் அரசு நியாயமான முறையில் நடந்துகொள்ளும் மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் எனவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.