13

13

மொக்கு மோடையா’ அர்ச்சுனாவா ? சிங்களவனா ?’

மொக்கு மோடையா’ அர்ச்சுனாவா ? சிங்களவனா ?’

ஒரு கார் மட்டும் போகக் கூடிய வீதியில், மற்றுமொரு கார் ஏற்கனவே வந்துகொண்டிருக்கும் போது, பா உ அர்ச்சுனாவின் காரும் பிரதான வீதியிலிருந்து அதே வீதிக்குள் இறங்க, இரு சாரதிகளுக்குமிடையே ஏற்பட்ட தர்க்கம் சமூக வலைத்தளங்களில் பரவியது. தன்னுடைய காரை ஓட்டிவந்த அர்ச்சுனா எதிரே வந்தவருக்கு வழிவிட மறுத்து, காரை நிறுத்தினார். ஏற்கனவே அவ்வீதியில் பெருமளவு தூரத்தைக் கடந்திருந்த சிங்கள சாரதியும் தன்னாள் பின்னுக்கு நகர முடியாது என்று அடம் பிடித்தார்.

உலகெங்கும் உள்ள உபத்திரவம் பிடித்த விடாக்கொண்டனும் கொடாக்கண்டனும் ஆனா சாரதிகளுக்கு இந்தக் காட்சி மிகச் சிறந்த உதாரணம். இலங்கை வாகனப் பயிற்சி பெறுபவர்களுக்கு, விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு, நிச்சயமாக இதனைப் போட்டுக் காட்ட வேண்டும். ஒரு சாரதி எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கும், இந்த மண்டைக் கொதிப்பில் போய் இவர்கள் எப்படி அப்பாவிகளைப் பலியாக்குகிறார்கள் என்பதற்கும் இதைவிடச் சிறந்த காணொலி கிடைக்காது.

இந்த இரண்டு தனிப்பட்ட விட்டுக்கொடுப்பற்ற சாரதிகளின் சண்டையில் தெறித்த வார்த்தைகள் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையையும் அத்தெருவில் கொண்டு வந்து இறக்கியது. இன்னுமொரு இனக்கலவரம் ஒன்று ஏற்படுமளவிற்கு, இன உணர்வுகளைத் தூண்டும் வகையில், வார்த்தைகள் தெறித்தது. காரை ஓராமாக்கி வழிவிடுவதற்கு இடமிருந்த போதும், பா உ அர்ச்சுனா நீளக்களுசானும், அடிக்கிற வெய்யிலுக்க் முழுக்கை சேட்டும் ரையும் கட்டி கூலிங் கிளாசும் போட்டுக்கொண்டு அசல் தெருப்பொறுக்கி மட்டத்துக்கு கீழிறங்கி தர்க்கத்தில் ஈடுபட்டார். ‘நான் பாராளுமன்ற உறுப்பினர், டொக்டர். நீ மோடையனா நான் மோடையனா ?’என்று மொண்டசெரி பள்ளிக்கூடப் பிள்ளைகள் லெவலில் தர்க்கம் நிகழ்ந்தது.

கம்பவாருதி தலையில் வைத்து தோய்வதற்கு, தனது தங்கையின் சிறுநீரைப் பெற்றுக் கொடுக்க முன்வந்த அர்ச்சுனா, இன்று ‘கையாட்டம் செய்கிறியோ?’ என்று ஆரம்பித்துவிட்டார். மறுபக்கத்தில் வந்தவரும் இவருக்கு சளைத்தவரில்லை. ‘இவர் தான் எங்கள் எதிர்ககட்சித் தலைவரின் கதிரையில் இருந்தவர். கஜேந்திரகுமார் வாகனத்தால் மோதியது, இது எங்கள் நாடு’ என்றெல்லாம் அளந்தார்.

இதுபற்றி தன்னுடைய யூரியூப்பில் பதிவிட்ட பா உ அர்ச்சுனா, இந்தப் பிரச்சினையை வைத்து இனவாத அரசியலைக் கக்கினார். இந்தக் கார் பிரச்சினைக்கும் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. கார் வைத்திருக்கும் இரண்டு திமிர் கொண்ட, அந்த வீதியைப் பயன்படுத்தும் மற்றையவர்களைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறையற்ற இரண்டு மனிதர்கள் தங்களுடைய ஈகோவுக்காக சமூகங்களை இழுத்து விடுகின்றனர். “நான் தமிழன். நான் எப்பிடி ரிவேர்ஸ் எடுக்கேலும். சிங்னவனின்ட இடத்தில போய் சிங்களவனையே மொக்குமொடையா, மொக்கு மாடு, பன்றி என்டெல்லாம் பேசினனான்” என்று அவித்து இன உணர்வுகளைத் தூண்டுகிறார் அர்ச்சுனா.

தமிழரசுக் கட்சி, கார் இல்லாத காலத்தில், தாங்கள் வைத்திருந்த கார்களுக்கு ‘சிறி’ எழுத்து வந்ததால் ‘சிறி எதிர்ப்புப் போராட்டம்’ செய்தது. போராட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டது, அப்பாவி இளைஞர்கள். கார் வைத்திருந்த எம்பி மார் எல்லாம் சிங்கள பேரினவாதிகளோடு கூடி விருந்துண்டனர். அதைத்தான் எழுபது ஆண்டுகளின் பின் அர்ச்சுனாவும் செய்கிறார். தன்னையொரு தமிழ் தேசிய உணர்வாளனாக சித்தரிக்கும் அர்ச்சுனா விடுதலைப் போராட்டம் உச்சம்பெற்றிருந்த போது புலிகளில் இணைந்து போராடப் போகவில்லை. தன்னை முன்னேற்றுவதற்காகப் படித்தார். இப்ப இவர் படித்தவர். பாராளுமன்ற உறுப்பினர். போராடியவர்கள் படிக்காதவர்கள். ஊனமுற்றவர்கள். இதே நச்சுச் சூழலை மீண்டும் கொண்டு வருவதற்கும் தன்னுடைய யூரியூப் சனலை ரென்டிங் ஆக்கவும் என்ன கேவலம் எல்லாம் செய்ய முடியுமா அதையெல்லாம் அர்ச்சுனா செய்கின்றார் போலவே தோன்றுகிறது.

 

மலேசியாவில் ‘உலகத் தமிழ் சாதனையாளர் 2024’ விருது பிரித்தானியத் தமிழருக்கு!

மலேசியாவில் ‘உலகத் தமிழ் சாதனையாளர் 2024’ விருது பிரித்தானியத் தமிழருக்கு!

மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற, பாரதியாரின் 142வது பிறந்ததினத்தையொட்டி நடந்த நிகழ்விலேயே இவ்விருது வழங்கப்பட்டது. உலகத் தமிழ், சங்கம், சென்னைத் தமிழ் சங்கம், மலேசியத் தமிழ்ச் சங்கம் இணைந்து மலேசியாவின் 5 மாநிலங்களில் இந்நிகழ்வைக் கொண்டாடியிருந்தன. டிசம்பர் 10ல் நடைபெற்ற இந்நிகழ்விலேயே பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து வாழும் முன்னாள் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கரப்பிள்ளை முருகையாவுக்கு உலகத் தமிழ் சாதனையாளர் 2024 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் பிரித்தானியாவில் இயங்கும் லண்டன் தமிழ் கல்வியகத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் புலம்பெயர் தேசமான பிரித்தானியாவில் ஆற்றிவரும் கல்வி, சமூக பண்பாட்டு, கலாச்சார வளர்ச்சிக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. தேசம் சஞ்சிகையாக வெளியான காலங்களில் அதன் கட்டுரையாளராகவும் சங்கரபப்பிள்ளை முருகையா இருந்துள்ளார்.

 

கழிவு நீரை வீட்டு வளவுகளுக்குள் விட்டதற்கு மேற்கு மீசாலை மக்களிடம் அதிகாரிகள் மன்னிப்புக் கோரினர் !

கழிவு நீரை வீட்டு வளவுகளுக்குள் விட்டதற்கு மேற்கு மீசாலை மக்களிடம் அதிகாரிகள் மன்னிப்புக் கோரினர் !

தாங்கிகள் கழுவிய இரசாயனங்கள் கிருமிகொல்லிகள் கொண்ட தண்ணீரை வீடுகளுக்குள் பரவவிட்டதற்காக நீர்பாசனத் திணைக்கள அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மேற்கு மீசாலை மக்களிடம் மன்னிப்புக் கேட்டதுடன் அவர்களின் கிணறுகளையும் இறைத்து விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி 8ல் இக்கழிவு தண்ணீர் காணிகளுக்குள் விடப்பட்ட தகவல் தேசம்நெற்க்குத் தெரிவிக்கப்பட்டதும் ஊடகங்களின் தலையீடுகள் வரும் என்பதை உணர்ந்த அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு மறுநாளே தங்களுடைய தவறுக்காக மன்னிப்புக் கோரி பாதிக்கப்பட்டவர்களின் கிணற்றையும் இறைத்துக் கொடுத்தனர்.

எதிர்காலத்தில் இத்தண்ணீரை குழாயைப் பொருத்தி குடிமனைகள் இல்லாத பகுதிக்கு திசை திருப்புவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்துச் சென்றுள்ளனர். தங்களுடைய தவறை உணர்ந்து அதனைச் சரிசெய்ய முயன்றமையை அப்பகுதி மக்கள் வரவேற்றனர்.

ஆனால் இவ்வாறான திட்டமிடப்படாத பொறுப்பற்ற செயல்கள் தவிர்க்கப்பட்டால் தேவையற்ற செலவுகள் பாதிப்புக்களை குறைக்க முடியும். அதிகாரிகளும் பணியாளர்களும் வினைத்திறனுடன் செயற்திறனுடன் பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும். தங்களுடைய தவறைத் திருத்திக்கொள்ள முயற்சி எடுத்தமை பாராட்டத்தக்கது.

 

அமெரிக்கா காஸாவை அழிக்கின்றது ! அமெரிக்காவை காட்டுத்தீ அழிக்கின்றது !

அமெரிக்கா காஸாவை அழிக்கின்றது ! அமெரிக்காவை காட்டுத்தீ அழிக்கின்றது !

காசாவின் குழந்தைகளுக்கு, புத்தாண்டு தாக்குதல்கள், உணவு பற்றாக்குறை மற்றும் கடுங்குளிர் காரணமாக அதிக இறப்பு மற்றும் துன்பங்கள் நிகழ்ந்துள்ளது என யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.

யுனிசெப் அறிக்கைகளின்படி, 2025-ஆம் ஆண்டின் முதல் ஏழு நாட்களில் காசா பகுதியில் நடந்து வரும் வன்முறையால் குறைந்தது 74 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.

குறித்த அறிக்கை, 10 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இடம்பெயர்ந்து, போதிய மனிதாபிமான உதவியின்றி தற்காலிக கூடாரங்களில் வாழ்கின்றனர் என்றும், அங்குக் குடிமுறைக்குரிய ஒழுங்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் கூறியுள்ளது.

இத்துயரமான தருணத்தில், உடனடி போர்நிறுத்தம், அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை பின்பற்றுதல் மற்றும் துன்பத்தை போக்க மனிதாபிமான அணுகலை மேம்படுத்துதல் குறித்து வலியுறுத்தியுள்ள யுனிசெஃப் நிறுவனம், குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் மோசமான நிலைமைகளை எதிர்கொள்ளும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, உயிர்களைக் காப்பாற்ற உதவி விநியோகம் முக்கியமானது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இஸ்ரேலிய ஹமாஸ் மோதலின் முதல் 9 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பாலஸ்தீன சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களை விட மிகவும் அதிகம் என லான்செட் மருத்துவ சஞ்சிகை தெரிவித்துள்ளது. நீண்ட ஆய்வுகள் அடிப்படையில் வெளியான குறித்த சஞ்சிகையின் தகவல்களின் படி , 2023 முதல் 2024 ஜூன் இறுதிவரை இஸ்ரேலின் தாக்குதல்களினால் 64260 பேர் கடும் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளதுடன் இவ்வாறு உயிரிழந்தவர்களில் 59.1 வீதமானவர்கள் பெண்கள் சிறுவர்கள் 65வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் இடம்பெற்று வரும் இனப்படுகொலைகள் தொடர்பில் பெரிதாக உலக நாடுகளின் ஊடகங்கள் அலட்டிக் கொள்ளாத அதேவேளை அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பான விபரங்கள் உலக பிரபல்யமான ஊடகங்கள் தொடங்கி உள்ளூர் ஊடகங்கள் வரை அனைத்திலும் பிரசுரமாகியிருந்தது. அமெரிக்காவில் காட்டுத்தீ ஏற்பட்டதற்கே பதறும் ஊடகங்கள் பாலஸ்தீனில் அமெரிக்கா இஸ்ரேலை தூண்டி விட்டு செய்யும் படுகொலைகளை பற்றி பேசத் தயாரில்லை என பல அரசியல் செயற்பாட்டாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வடக்கில் இராணுவ குறைப்பு செய்வது தவறு – சரத் வீரசேகர ! 

வடக்கில் இராணுவ குறைப்பு செய்வது தவறு – சரத் வீரசேகர !

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தது முதல் தமிழர் பகுதிகளில் இராணுவத் தடைகளை முகாம்களை அகற்றி வருகிறது. மேலும் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழ் மக்களின் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் தான் வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அட்மிரல் சரத்வீரசேகர , தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவில்லை. இந்திய எதிர்ப்புக் கொள்கையை கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி, இன்று இந்தியாவுக்கு சாதகமாக செயற்படுகிறது. தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றன. இந்த நாடு 30 வருடகால பிரிவினைவாத போராட்டத்தை எதிர்கொண்டது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் தான் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதே தவிர அந்த அமைப்பின் நோக்கம் அழியடையவில்லை என தெரிவித்துள்ள சரத் வீரசேகர, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கையை கொண்டுள்ளவர்கள் இன்றும் உள்ளார்கள்கள். ஆகவே தேசிய பாதுகாப்பை அரசியல் தேவைகளுக்காக பலவீனப்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்காகவே பல்லாயிர இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்தார்கள். ஆகவே சமஸ்டியாட்சி அரசியலமைப்பை உருவாக்கி படையினரின் உயிர் தியாகத்தை மலினப்படுத்த இடமளிக்க முடியாது என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நொதேர்ன் வைத்தியசாலைக் தொற்று நோய்க் கிருமிகள், மலசலக் கழிவுகள் யாழ் திருநெல்வேலி வீதியில் ! தூக்கத்தில் யாழ் அதிகாரிகள் !

நொதேர்ன் வைத்தியசாலைக் தொற்று நோய்க் கிருமிகள், மலசலக் கழிவுகள் யாழ் திருநெல்வேலி வீதியில் ! தூக்கத்தில் யாழ் அதிகாரிகள் !

யாழ்ப்பாணத்தில் மருத்துவ மாபியாக்களால் மக்கள் படும் துன்பம் ஒருபுறம் இருக்க கொஞ்சம் கூட சமூக நோக்கு இல்லாமல் தனியார் வைத்தியசாலைகளும் இயங்கி மக்களை சிரமத்துக்குள்ளாக்கி வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் வைத்தியசாலையான நொதேன் வைத்தியசாலை கொஞ்சம் கூட சாதாரண மக்களை பற்றிய சிந்தனையுடன் இயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே முன்வைக்கபடுகின்றது.

இந் நிலையில் வைத்தியசாலை கழிவுநீர் பொதுமக்கள் பாவிக்கும் பாதைகள் மற்றும் வீடுகளை நோக்கி திருப்பிவிடுவதாக திருநெல்வேலி பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கழிவுநீர் கழிவுகளுடன், தொற்றுநோய் கிருமிகள், மற்றும் மலக்கழிவுகளும் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நொதேன் வைத்தியசாலையின் கட்டடங்கள் மின்னல் வேகத்தில் அயல் காணிகளை ஆக்கிரமித்து வருவதுடன் இந்த கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதிகள் மிக வேகமாக வழங்கப்பட்டு வருவது தொடர்பிலும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சாதாரண மக்கள் கட்டிடங்கள் அமைப்பது தொடர்பான அனுமதிகளை பெற மாதக்கணக்கில் – வருடக்கணக்கில், யாழ்ப்பாண உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை போன்றவற்றில் கடமையாற்றும் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படும் நிலையில், நொதேர்ன் வைத்தியசாலை போன்ற கோடிகளில் பணம் புரளும் நிறுவனங்களுக்கு மட்டும் இலகுவில் கட்டட அனுமதிகள் கிடைப்பது அரச அதிகாரிகள் விலைபோயுள்ளதை தெளிவாக காட்டுகிறது. இந்த நிலையை அண்மையில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனும் குறிப்பிட்டிருந்தார். சாதாரண மக்கள் அரச அலுவலகங்களுக்கு சென்றால் சேவையை பெற பல மாதங்களாகின்ற நிலையில் பணம் படைத்தவர்கள் இலகுவாக தங்கள் வேலைகளை அரச அலுவலகங்களில் செய்து முடிக்கிறார்கள் என ஆளுநர் வேதநாயகன் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

15 ஆண்டுகள் கன்னிகளியாத 500 உழவு இயந்திரங்கள் – வடமாகாண அதிகாரிகளின் சோம்பேறித்தனம் !

15 ஆண்டுகள் கன்னிகளியாத 500 உழவு இயந்திரங்கள் – வடமாகாண அதிகாரிகளின் சோம்பேறித்தனம் !

 

இந்திய அரசின் நன்கொடையின் கீழ் வழங்கப்பட்ட சுமார் ஐநூறுக்கும் அதிகமான உழவு இயந்திரங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித பயன்பாடுகளும் இன்றி விவசாய சேவை மையங்களில் காணப்படும் நிலையில், விவசாயிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அதனை வழங்கி வைக்குமாறு வடக்கு மாகாண விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

விவசாயிகள் இலவசமாக அல்லது தவணை அடிப்படையில் குறித்த உழவு இயந்திரங்களை கோரி வருகின்ற போதும் கூட அரசாங்க அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வடமாகாண சபை இயங்கிய காலத்தில் விவசாயத்துறை அமைச்சு பொன் ஐங்கரநேசனிடமே இருந்தது. அவர் இது தொடர்பில் அப்போதே நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

அண்மைய தரவுகளின் படி, முறையாகப் பயன்படுத்தப்படாமலும் பராமரிக்கப்படாமலும் குறித்த உழவு இயந்திரங்களின் மதிப்பு ஆண்டுதோறும் குறைந்து வருகின்றன. மதிப்புக் குறைப்பு மற்றும் கைவிடப்பட்ட அரசாங்க சொத்துக்களுக்கு யார் பொறுப்பு? என்ற கேள்வி விவசாய அமைப்புக்களால் எழுப்பப்பட்டுள்ள நிலையில், கொடுக்கப்பட்ட டிராக்டர்களின் உரிமை மாகாண சபையால் விவசாய சேவை மையங்களுக்கு மாற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கொள்முதல் வழிகாட்டுதல்களின்படி விவசாய சேவை மையங்களால் நடத்தப்பட்ட ஏலம் உரிமை முறையாக மாற்றப்படவில்லை எனவும் விவசாய சேவைக் குழுக்கள் மற்றும் விவசாய அமைப்புகள் விவசாயிகளுக்கு நன்கொடை அளிக்கவோ அல்லது விற்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிடும் விவசாய அமைப்புகள், இப்பிரச்சினையை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க கௌரவ ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

வடக்கு மாகாணத்தில் 52 கமநல சேவை நிலையத்தில் மட்டும் எந்த பழுதும் இல்லாமல் பயன்படுத்தாமல் வருடக்கணக்காக கிடந்து உக்கும் ஐநூறு உழவு இயந்திரங்களையும் ஒன்றில் பயன்படுத்த வேண்டும் இல்லையேல் விற்பனை செய்து விட்டு பணத்தினை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும். பாராமுகமாக விடுவதற்க்கான காரணம் என்ன எனவும் விவசாய அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.