அமெரிக்கா காஸாவை அழிக்கின்றது ! அமெரிக்காவை காட்டுத்தீ அழிக்கின்றது !
காசாவின் குழந்தைகளுக்கு, புத்தாண்டு தாக்குதல்கள், உணவு பற்றாக்குறை மற்றும் கடுங்குளிர் காரணமாக அதிக இறப்பு மற்றும் துன்பங்கள் நிகழ்ந்துள்ளது என யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.
யுனிசெப் அறிக்கைகளின்படி, 2025-ஆம் ஆண்டின் முதல் ஏழு நாட்களில் காசா பகுதியில் நடந்து வரும் வன்முறையால் குறைந்தது 74 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.
குறித்த அறிக்கை, 10 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இடம்பெயர்ந்து, போதிய மனிதாபிமான உதவியின்றி தற்காலிக கூடாரங்களில் வாழ்கின்றனர் என்றும், அங்குக் குடிமுறைக்குரிய ஒழுங்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் கூறியுள்ளது.
இத்துயரமான தருணத்தில், உடனடி போர்நிறுத்தம், அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை பின்பற்றுதல் மற்றும் துன்பத்தை போக்க மனிதாபிமான அணுகலை மேம்படுத்துதல் குறித்து வலியுறுத்தியுள்ள யுனிசெஃப் நிறுவனம், குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் மோசமான நிலைமைகளை எதிர்கொள்ளும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, உயிர்களைக் காப்பாற்ற உதவி விநியோகம் முக்கியமானது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை இஸ்ரேலிய ஹமாஸ் மோதலின் முதல் 9 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பாலஸ்தீன சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களை விட மிகவும் அதிகம் என லான்செட் மருத்துவ சஞ்சிகை தெரிவித்துள்ளது. நீண்ட ஆய்வுகள் அடிப்படையில் வெளியான குறித்த சஞ்சிகையின் தகவல்களின் படி , 2023 முதல் 2024 ஜூன் இறுதிவரை இஸ்ரேலின் தாக்குதல்களினால் 64260 பேர் கடும் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளதுடன் இவ்வாறு உயிரிழந்தவர்களில் 59.1 வீதமானவர்கள் பெண்கள் சிறுவர்கள் 65வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் இடம்பெற்று வரும் இனப்படுகொலைகள் தொடர்பில் பெரிதாக உலக நாடுகளின் ஊடகங்கள் அலட்டிக் கொள்ளாத அதேவேளை அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பான விபரங்கள் உலக பிரபல்யமான ஊடகங்கள் தொடங்கி உள்ளூர் ஊடகங்கள் வரை அனைத்திலும் பிரசுரமாகியிருந்தது. அமெரிக்காவில் காட்டுத்தீ ஏற்பட்டதற்கே பதறும் ஊடகங்கள் பாலஸ்தீனில் அமெரிக்கா இஸ்ரேலை தூண்டி விட்டு செய்யும் படுகொலைகளை பற்றி பேசத் தயாரில்லை என பல அரசியல் செயற்பாட்டாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.