31

31

சுவீடனில் குரானை எரித்த நபர் சுட்டுக்கொலை !

சுவீடனில் குரானை எரித்த நபர் சுட்டுக்கொலை !

2023ம் ஆண்டு சுவீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததன் மூலம் வன்முறை ஆர்ப்பாட்டங்களிற்கு வித்திட்ட சல்வான் மொமிகா என்ற 38 வயது நபர் ஸ்டொக்ஹோமில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுவீடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுவீடனில் வசித்த ஈராக்கியரான மொமிகாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்ற நிலையில் நேற்று தீர்ப்பு வெளியாகயிருந்த நிலையிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மொமிகா இஸ்லாமிய மதத்திற்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தில் மொமிகா இரண்டு தடவைகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் அவரின் நடவடிக்கைகளிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டன.

ஒரு தேர்தலில் கூட வாக்களிக்காதவரும் ஒரு தேர்தலில் 75 தடவைகள் வாக்களித்தவரும் எம்.பிகள் – யாழ் மக்களின் வினோத தெரிவு 

ஒரு தேர்தலில் கூட வாக்களிக்காதவரும் ஒரு தேர்தலில் 75 தடவைகள் வாக்களித்தவரும் எம்.பிகள் – யாழ் மக்களின் வினோத தெரிவு
இலங்கை அரசியலில் இருந்து விரைவில் விலகப் போவதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரத்தில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
“இந்த அரசியல் கலாசாரத்தின் மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. நான் இதுவரை யாருக்கும் வாக்களித்ததில்லை. தற்போது மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளேன். நீண்ட காலம் அரசியலில் நீடிக்கப்போவதில்லை. இருக்கும் வரை நேர்மையாக செயற்படவுள்ளேன்” என தெரிவித்தார்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு அனுராதபுரத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அனுராதபுரம் காவல்துறையினரால் கைதான பா.உ அர்ச்சுனா, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
ஒருபுறம் இதுவரை ஜனநாயக தேர்தலில் வாக்களிக்காத ஒரு நபரை யாழ்ப்பாண மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். மறுபுறம் புலிகளின் காலத்தில் தான் ஒரேநாளில் எழுபத்து ஐந்து தடவைகள் கள்ள வாக்குகள் அளித்த சிறீதரனை தெரிவுசெய்துள்ளார்கள் என குறைபடுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழில் இலங்கை தேசியகீதம் ! 

சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழில் இலங்கை தேசியகீதம் !

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் எனவும் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதிஒதுக்கப்பட்டள்ளது. சுதந்திர தின நிகழ்வில் வாகன அணிவகுப்பு இல்லை. தேசிய கொடியை ஏந்திச் செல்வதற்காக விமானப்படையின் 3 உலங்கு வானூர்திகள் மாத்திரம் பயன்படுத்தப்படும் எனவும் நிர்வாக அமைச்சர், மரியாதை அணி வகுப்புக்களில் பங்கேற்கும் படைவீரர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்க காலங்களில் சுதந்திர தின விழாவுக்கான செலவுகள் 250 மில்லியன் தொடங்கி 375 மில்லியன் வரை செலவிடப்பட்டிருந்தது. மேலும் 2018ஆம் ஆண்டு முதல் சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாத சூழல் நீடித்து வந்ததுடன் கடந்த ஆண்டு, நிகழ்வுகளின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது

நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாவுக்கு மதுபானம் விற்பனை !

நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாவுக்கு மதுபானம் விற்பனை

இலங்கையர்கள் நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாவை மதுபானத்திற்க்காக செலவழிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருதய நோய்கள், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் போன்ற தொற்றாத நோய்கள் ஏற்படுவதற்கு 83% மதுபானம் மற்றும் புகையிலை பாவனை காரணமாக இருப்பதாகவும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

2019ஆம் ஆண்டு இலங்கையர்கள் நாளொன்றுக்கு 510 மில்லியன் ரூபாவை மதுபாவனைக்காக செலவழித்து வந்ததாகவும் இந்த தொகை தற்போது அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்த மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிர்வாக இயக்குனர், சம்பத் டி சேரம் , மதுப்பழக்கத்தால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஆண்டொன்றுக்கு 214 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவழிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

புலிகள் காலத்தில் இல்லாத போதைப்பொருட்கள் தற்போது எங்கிருந்து வருகின்றன ..? – ரவிகரன் எம்.பி கேள்வி

புலிகள் காலத்தில் இல்லாத போதைப்பொருட்கள் தற்போது எங்கிருந்து வருகின்றன ..? – ரவிகரன் எம்.பி கேள்வி

வட பகுதி எங்கும் விடுதலைப்புலிகளின் காலத்தில் இல்லாத போதைப்பொருள் பாவனை தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் அதிகரிப்பை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை என முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது முல்லைத்தீவு மாவட்டம் உட்பட வடபகுதி எங்கும் புதுவிதமான பல போதைப்பொருட்கள் பெருகிவருவதாக மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர். யுத்தம் மௌனிக்கப்பட்ட பிறகு, கடந்தகால அரசாங்கங்கள் எமது தமிழ் மக்களை அழிக்கும் நோக்கில் இந்த போதைப்பொருள் பாவனையை எமது பகுதிகளில் ஊடுருவச் செய்து வேடிக்கை பார்த்தனர் .

தற்போதும் பெரியவர்கள் முதல் இளையோர் வரை பெருமளவானோர் போதைப்பொருள் பாவனைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அரசிடம் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் – கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழக மீனவர்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் – கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

பேச்சுவார்த்தை மூலம் இலங்கை கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படுமாக இருந்தால் அதற்கு இரண்டு கரங்களையும் உயர்த்தி நாங்கள் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

கடற்றொழிலாளர்களின் தலைவர்களை நாங்கள் வினயமாக கேட்டுக் கொள்வது என்னவென்றால், நாங்கள் உங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தயார். உங்களுடைய பிள்ளைகள் எங்களுடைய தொப்புள்கொடி உறவுகள், எங்களுக்கு அண்மித்த நாடு என தெரிவித்த அமைச்சர், நாங்கள் நல்ல முறையில் எங்களுடைய உறவுகளை பேணி பாதுகாப்பதற்கே முயற்சிக்கின்றோம்.அந்த முயற்சிக்கு வேட்டு வைக்கின்ற வேலையாகவே இந்திய தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றது என்றார்.

அண்மையில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடாத்திய விவகாரம் பாரிய பேசுபொருளாகியுள்ள நிலையில் இலங்கை கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாலியல் தொழிலில் சிறுமிகள் – ஜனவரியில் மட்டும் வடக்கில் 3 சம்பவங்கள் பதிவு

பாலியல் தொழிலில் சிறுமிகள் – ஜனவரியில் மட்டும் வடக்கில் 3 சம்பவங்கள் பதிவு

பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உட்பட மூவர் யாழில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று ரகசியமாக இந்த செயற்பாடு தொடர்பில் யாழ், மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 17 வயது சிறுமி உள்ளிட்ட இரு பெண்களும் அவர்களை வைத்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தில் 36 வயதுடைய ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் நபர் ஒருவரிடம் 15 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று, தமக்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தினை வழங்குவதாக கைது செய்யப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு மாத கால பகுதிக்குள், வடக்கு மாகாணத்தில் பதிவாகிய மூன்றாவது சம்பவம் இதுவாகும். கடந்த 6ஆம் திகதி கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 15 வயது சிறுமியை வைத்து பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் மற்றும் வீடு வாடகைக்கு வழக்கிய வீட்டு உரிமையாளர் கைதாகியிருந்தனர். கடந்த 12ம் திகதி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும், அவரது கணவரும் 12ம் திகதி கைதாகினர். இந்த நிலையிலேயே யாழில் குறித்த 3ஆவது சம்பவம் பதிவாகியுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் 213 சிறுமிகள் கருத்தரித்துள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் 167 சிறுமிகள் கருத்தரித்துள்ள நிலையில் கடந்த ஆண்டு அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.