18

18

ஓடும் ரெயிலில் ஸ்பா – மசாஜ் விசாரணைகள் ஆரம்பம் !

ஓடும் ரெயிலில் ஸ்பா – மசாஜ் விசாரணைகள் ஆரம்பம் !

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு என முன் பதிவு செய்து எடுக்கப்பட்ட ரெயில் பெட்டிகளில் மசாஜ் செய்யும் காணொலிகள் வெளியாகியதை அடுத்து அதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே மேலாளர் நேற்றுத் தெரிவித்துள்ளார். இந்த ரெயில் பெட்டிகளை முன்பதிவு செய்த நிறுவனம் இவ்வாறான தொழிலை தாங்கள் ரெயிலில் செய்வதைத் தெரியப்படுத்தவில்லை. இவ்வாறான மசாஜ் சேவைகளை வழங்குவதற்கு சட்ட அனுமதியில்லை எனவும் அம்மேலாளர் தெரிவித்தார்.

இலங்கையின் பரீட்சை ஆணையாளராக முதல் தமிழ் பெண் நியமனம் !

இலங்கையின் பரீட்சை ஆணையாளராக முதல் தமிழ் பெண் நியமனம் !

இலங்கையின் பரீட்சை ஆணையாளராக மைக்கல் திலகராஜா ஜீவராணி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் முதல் தமிழ் பேசும் பரீட்சை ஆணையாளரும் இவரேயாவார். இலங்கையின் பிரதி பரீட்சை ஆணையாளராக பதவி வகித்த திருமதி.மைக்கல் திலகராஜா ஜீவராணி தற்போது இலங்கையின் பரீட்சை ஆணையாளராக பதவி உயர்வு பெற்றுள்ளமை ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களுக்கும் முக்கியமாக பெண்களுக்கும் பெருமைக்குரிய விடயமாகும். இவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் தமிழ் பெண்களை தமிழ் தேசியம் ஓரம்கட்டி அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்திருக்கின்றனர். கட்சி வேறுபாடில்லாமல் தமிழ் தேசியம் பெண்களை, சைவ வெள்ளாள ஆண்களை வெல்ல வைப்பதற்காப் பயன்படுத்தும் போக்கே நிலவி வந்தது. போராட்ட காலங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் பெண்களை ஆயதங்களாகப் பயன்படுத்தினரே அல்லாமல், அவர்களுக்கான தலைமைத்துவப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை. மகளீரணிக்கு மட்டும் பெண்கள் தலைமை தாங்கினர். ஏனைய துறைசார் விடயங்களில் பெண்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படவில்லை.

தற்போது தேசிய மக்கள் சக்தி முன்னைய அரசுகள் கடைப்பிடித்த தமிழர் புறக்கணிப்பை முற்றாகக் கைவிட்டு, தகுதியுடையவர்கள் தமிழ் மக்கள் மத்தியிலிருக்கும் போது, அவர்களை தகுதிவாய்ந்த பொறுப்புக்களில் நியமித்து வருகின்றது. தற்போது பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் தமிழ் பெண்கள் இடம்பெற்றுள்ளனர். பொறுப்பான பதவிகளிலும் தகுதியானவர்களை, பெண்களை தேசிய மக்கள் சக்தி அரசு நியமித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசு தெற்கோடு கை கோர்க்க, தமிழ் தேசியம் மேற்கிற்கு மனுக் கொடுக்கின்றது !

இலங்கை அரசு தெற்கோடு கை கோர்க்க, தமிழ் தேசியம் மேற்கிற்கு மனுக் கொடுக்கின்றது !

உலக சனத்தொகையின், உலக சந்தையின் மிகப்பெரும் நாடுகளான சீனா – இந்தியாவோடு இலங்கை மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஜனாதிபதியின் சீன விஜயம் எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளமை பல்வேறுபட்ட பரஸ்பர ஒப்பங்தங்களிலும் வெளிப்பட்டு நிற்கின்றது. உலகின் சிறிய தீவுகளில் ஒன்றான இலங்கை உலகின் மிகப்பெரும் சந்தையைக் கொண்டுள்ள, பொருளாதார பலத்தைக் கொண்டுள்ள நாடுகளாலும் கௌரவிக்கப்பட்டுள்ளமை தேசிய மக்கள் சக்திக்கு கிடைத் வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே 21 ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகி உள்ளது.

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு ஜனாதிபதி நாடு திரும்பினார். நாடு திரும்புவதற்கு முன் காலையில் நிலையான அபிவிருத்தி மூலம் கிராமிய மறுமலர்ச்சியைக் கண்ட சென் கி மாதிரி கிராமத்தையும் தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப விவசாய மையத்திற்கும் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அபிவிருத்தியை ஜனநாயகப்படுத்தும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு இவை உதவும்.

சீனா கடன்பொறிக்குள் நாடுகளைத் தள்ளிவிடுகின்றது என்ற மேற்கு நாடுகளதும், அவர்களது ஊடகங்களினதும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எடுபட்டு, சீனாவின் முதலீடுகள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்தபோதும், அவை பொருளாதார விருத்திக்கான அடிக்கட்டுமானங்கள் என்பது வெளிச்சத்திற்கு வருகின்றது. இனிவரும் காலங்களில் இந்துசமுத்திரப் பிராந்தியம் சர்வதேச கப்பல் போக்குவரத்தின் முக்கிய பாதையாக அமைய இருப்பதும் இதற்கான காரணங்களாக சொல்லப்படுகின்றது.

ஆனால் இதனைக் கடுகளவும் புரிந்துகொள்ளாத தமிழ் தலைமைகள், ரோ புலிகளின் மதியுரைஞர் மு திருநாவுக்கரசு போன்றவர்களின் உலுத்துப்போன கதையாடல்களை வைத்துக்கொண்டு சீனாவுக்கு எதிராக எங்களைப் பயன்படுத்துங்கள் என்று சன்னதம் ஆடுகின்றனர். மறுபக்கம் எங்களுக்கு சீனாவின் புலமைப் பரிசிலும் வேண்டாம், படிப்பும் வேண்டாம் என்று யாழ் பல்கலைக்கழகம் அடம்பிடிக்கின்றது. கோட் ரை கட்டிய வெள்ளைக்காரன் அமெரிக்காவில் ஐரொப்பாவில இருந்து வந்து விசாரிக்க வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு, தற்போது உயிரோடு இல்லாதவர்களின் உறவுகள் வலிந்து கேட்கின்றனர். தமிழ் தேசியமும் அதற்கு பூஸ்ட் கொடுக்கின்றது.

தமிழ் தேசியத்திற்கு சர்வதேச அரசியல் புரியவில்லை என்பது ஒரு பக்கம், தங்கள் வீட்டு தெரு முழுக்க ஜேவிபி வந்த விடயமே இவர்களுக்கு நவம்பர் 15ம் திகதி தானே தெரிய வந்தது. அதுவரைக்கும் அவர்கள் ஊழல், மோசடி என்று போதையேறி மயக்கத்தில் இருந்தனர். கோமாவிலிருந்து எழும்பிய தமிழ் தேசிய மாமாக்களுக்கு கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையில், சர்வதேசத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்தது என்பதெல்லாம் மறந்து போய்விட்டது. மீண்டும் வெள்ளாள வெள்ளைக்கார ‘தொரைகளைச்’ சந்தித்து இன்னமும் கண்காணி வேலை எடுக்கத் திரிகின்றார்கள்.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் தோல்வியடைந்து, தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் சென்ற மனோகணேசன் பிரித்தானியத் தூதுவர் அன்ட்ரூ பற்றிக்கைச் சந்தித்துள்ளார். இலங்கையின் சமூக பொருளாதார தேசத்தைக் கட்டியெழுப்புவது பற்றியும் மலையகத் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றியும் அங்குள்ள குறைபாடுகள் பற்றியும் பிரித்தானிய ‘தொரை’யிடம் முறையிட்டுள்ளார்.

இதேசமயம் பா உ சிறிதரன் ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான் செஸ் அமோர், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மன் மொறேனோ உள்ளடங்கிய குழவினரை கொழும்பில் சந்தித்துள்ளார். அவர்களிடம் தமிழர்கள் சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வொன்றையே எதிர்பார்ப்பதாக வலியுறுத்தி உள்ளார். இச்சந்திப்பின் இறுதியில் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எவ்வாறு முன்மாதிரியாக, இதுவரை நடந்திராத வகையில், ஜனநாயகப்படியும், இனவாதமில்லாமலும், வன்முறையில்லாமலும் நடத்தப்பட்டது என்பதைச் சொல்லும் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு அறிக்கையின் பிரதியை சிறிதரனிடம் கையளித்தனர்.

ஆனால் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினையை இனவாதத்திற்கு எதிராக போட்டியிட்டு தமிழ் மக்களுடைய கணிசமான ஆதரவோடு ஆட்சிபீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தியோடு இது தொடர்பில் உரையாட, இவர்கள் தயாரில்லை. தமிழ் தேசியம் பேசுகின்ற தலைவர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வந்த தமிழ் மக்களின் ஆதரவைப் பெறாத, இனவாதத் தலைவர்களான ஜே ஆர் ஜெயவர்த்தனா, ரணசிங்க பிரேமதாச, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டபாய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க என எல்லோருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஆனால் தேசிய மக்கள் சக்தியை தீண்டத் தகாததாக நடத்த முற்படுகின்றனர்.

 

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் – வீழ்ச்சி வீதிவிபத்து மரணங்கள் வீழ்ச்சி !

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் – வீழ்ச்சி வீதிவிபத்து மரணங்கள் வீழ்ச்சி !

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் போக்குவரத்து நடவடிக்கைகளினால் வாகன விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் நாளொன்றுக்கு ஒன்பதாக இருந்தது. தற்போது அது நான்கு தொடக்கம் இரண்டாகக் குறைந்துள்ளது. அத்துடன் சில நாட்களில் எந்தவித உயிரிழப்பும் வீதி விபத்துக்களினால் பதிவாகவில்லை.

பொலிஸ் புள்ளிவிபரப்படி வீதிவிபத்துக்களால் தினமும் 10 தொடக்கம் 15 பேர் வரை நிரந்தரமாக ஊனமடைகின்றனர். இது போரின் போது ஒரு நாளைக்கு ஊனமுற்றவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர்களுக்கு மாபெரும் கோயில் கட்டுவேன் ! ஐ.பி.சி பாஸ்கரன் – முதலமைச்சராக்குவார்களா வடக்கு தமிழர்கள் ?

மாவீரர்களுக்கு மாபெரும் கோயில் கட்டுவேன் ! ஐ.பி.சி பாஸ்கரன் – முதலமைச்சராக்குவார்களா வடக்கு தமிழர்கள் ?

இல்லாத தெய்வங்களுக்கு கோயில் கட்டுவதை விட எங்களுடைய மாவீரர்களுக்கு என ஓர் ஆலயம் கட்டுவேன் என ஐ.பி.சி பாஸ்கரன் தெரிவித்துள்ளார். ஐ.பி.சிக்கு வழங்கிய சுயதம்பட்ட நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

சைக்கிள் கஜா – கஜா குழுவினரின் உசுப்பேற்றும் அரசியலை ஐ.பி.சி பாஸ்கரனிடமும் எதிர்பார்க்க முடியும் என பல தரப்பினரும் தெரிவித்து வரும் நிலையில் பாஸ்கரனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குமார் பொன்னம்பலத்திற்கு அண்மையில் மாலை அணிவித்த ஐபிசி பாஸ்கரன் முதலமைச்சராவதற்கான தடங்களை பதிக்க ஆரம்பிக்கின்றார்.

ஐ.பி.சி தமிழ் மற்றும் ரீச்சா பார் உரிமையாளரான பாஸ்கரன் தனது முதலைமைச்சர் கனவை நோக்கி படிப்படியாக நகர ஆரம்பித்துள்ளார். இது தொடர்பில் தேசம்நெட் பல தடவைகள் பதிவு செய்துள்ளது.

தமிழரசுக்கட்சியில் தனக்கு ஏதேனும் தேறுமா என எதிர்பார்த்த போது முன்னாள் பா.உ சுமந்திரனின் ஆதிக்கத்தால் தமிழரசுக்கட்சி பாஸ்கரனை தூரப்படுத்தியிருந்ததது. இதனை தொடர்ந்து சுமந்திரனை தமிழ்தேசியத்துக்கு எதிரானவராகவும் பா.உ சிறீதரனை மீட்பர் போலவும் ஐ.பி.சி உட்பட பாஸ்கரனின் ஊடகங்கள் காட்சிப்படுத்தி வருகின்றன.

தற்போது, மாகாண சபை தேர்தல்கள் தொடர்பான அறிவிப்புக்கள் வெளியாகிவரும் நிலையில் தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்ய முன்னணியின் கஜா – கஜா குழுவினருடன் கைகோர்த்துள்ளார் பாஸ்கரன். படுகொலை செய்யப்பட்ட குமார் பொன்னம்பலத்தின் 25வது ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டு இதை உறுதிசெய்திருந்தார்.

புலிகளின் பெயரை சொன்னாலே ஒருவருடைய பின்புலம் – மக்களுக்கான கடந்த கால அரசியல் செயற்பாடுகள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளாமல் அரசியல் அதிகாரங்களை தூக்கி கொடுத்துவிடுமளவிற்கு வடக்கு மக்கள் உள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காய் நகர்த்துகிறார் ஐ.பி.சி பாஸ்கரன் என அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.

பாராளுமன்றில் பாலியல் குற்றவாளிகளின் பதவிகள் பறிப்பு – யாழ். பல்கலைக்கழகத்திலும் மாற்றங்கள் நடக்குமா ?

பாராளுமன்றில் பாலியல் குற்றவாளிகளின் பதவிகள் பறிப்பு – யாழ். பல்கலைக்கழகத்திலும் மாற்றங்கள் நடக்குமா ?

நாடாளுமன்ற பெண் ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்கள் மூவரும் பதவி நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான பல கட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூவரும் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டுள்ளனர். அதையடுத்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் பரிந்துரையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மூன்று ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அரசுக்கு அறிவிக்கப்பட்டு மிகக்குறுகிய கால இடைவெளியில் இந்த பணிநீக்கம் இடம்பெற்றுள்ளமையானது மகளிர் அமைப்புக்கள் பலவற்றினுடைய பாராட்டையும் பெற்றுள்ளது.

இதேவேளை பல்கலைகழகங்களில் உள்ள பாலியல் சுரண்டல்கள் தொடர்பிலும் என்.பி.பி கவனம் செலுத்த வேண்டும் என பெண்ணிய செயற்பாட்டாளர்களின் குரல்கள் மேலோங்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சில விரிவுரையாளர்கள் மாணவிகள் மீதான பாலியல் சுரண்டல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் தமிழ்தேசியத்தின் பின்னால் அவர்கள் பாதுகாப்பாக ஒழிந்து கொண்டுள்ளனர் என்பதை பலரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

தமிழர்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை மீறி என்.பி.பி அரசு செயற்படுகிறது – அருட்தந்தை மா.சத்திவேல் விசனம் !

தமிழர்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை மீறி என்.பி.பி அரசு செயற்படுகிறது – அருட்தந்தை மா.சத்திவேல் விசனம் !

அரசியல் கைதிகள் என எவரும் சிறையில் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளமை தமிழ் மக்களை அவமதிக்கும் செயல் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் தமிழர்களின் மிக நீண்டகால அரசியல் கோரிக்கை. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாம் பதவிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம். இதற்கு தெற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தேர்தல் காலத்தில் உறுதியளித்திருந்தார்.

அதன் ஈரம் காயும் முன்னரே அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அரசியல் கைதிகள் என்று சிறைகளில் எவரும் இல்லை குறிப்பிட்டுள்ளமை அவர்களின் அரசியல் அநாகரிகத்தை அம்பலப்படுத்தி உள்ளது. என்.பி.பி வாக்களித்த தமிழர்களையும் ஏமாற்றி தமிழர்களின் அரசியலை அவமானப்படுத்தி உள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம் – என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள எந்தவொரு சிறைகளிலும் அரசியல் கைதிகள் என்றொருவரும் இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார் என வீரகேசரி செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மிகுந்த கரிசனை வெளிப்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ஹர்ஷண நாணயக்காரவின் கருத்து தமிழ் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை விதைத்துள்ளது.

அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார சிறைகளில் அரசியல் கைதிகள் இல்லை என்ற விடயத்தைத் தெளிவுபடுத்தியிருந்தாரே அல்லாமல் தமிழ் கைதிகள் இல்லை என்று குறிப்பிடவில்லை என்கிறார் ஆய்வாளர் வி சிவலிங்கம். தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார் வி சிவலிங்கம். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுகளில் மட்டும் செயற்பட்டவர்கள் அல்ல அப்படி ஒரு கட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளில் இருக்கவில்லை என்கிறார் சமூக செயற்பாட்டாளர் மயில்வாகனம் சூரியசேகரம். முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர், முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் ஆகியோருடைய கொலைகளிலும் வேறு படுகொலைகளிலும் சம்பந்தப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய பத்துக்கும் குறைவானவர்களே தற்போது சிறையில் இருப்பதாகவும் ஆய்வாளர் வி சிவலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இவர்கள் நாட்டின் சுதந்திர தினம் போன்ற காலங்களில் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வமைப்பின் ஆதரவாளரான சுடர்மணி கேதீஸ்வரன் தெரிவிக்கின்றார். பத்துக்கும் உட்பட்ட இக்கைதிகளை வைத்து அரசியல் செய்ய முற்பட்டு அவர்கள் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பை இல்லாமால் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் ஆய்வாளர் வி சிவலிங்கம் தெரிவித்தார்.

வீட்டுக்குப் பக்கத்திலேயே பணியிடத்தை கேட்கும் அரச அதிகாரிகள் – ஆளுநர் வேதநாயகன் அதிருப்தி !

வீட்டுக்குப் பக்கத்திலேயே பணியிடத்தை கேட்கும் அரச அதிகாரிகள் – ஆளுநர் வேதநாயகன் அதிருப்தி !
அரசாங்க வேலை கிடைத்தவுடன் தமது வீட்டுக்குப் பக்கத்தில் பணியிடம் கேட்கும் போக்கில் மாற்றம் தேவை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவிலில் நேற்று இடம்பெற்ற (17.01.2025) வடக்கு மாகாண பொங்கல் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, விவசாயத்தை வருமானம் அதிகம் தரக்கூடிய துறையாக மாற்ற வேண்டும். இன்றைய இளையோருக்கு விவசாயத்தின் மீதான நாட்டம் குறைந்து வருகின்றது. அரசாங்க வேலையையே அவர்கள் கோருகின்றனர். ஓய்வூதியம் மற்றும் பணிச்சுமை குறைவான வேலை என அதை அவர்கள் தெரிவு செய்கின்றார்களோ தெரியவில்லை. குடும்பம் முக்கியமானது. அரச பணியைப் பெற்றுக்கொண்டால் அதையும் சிறப்பாக செய்யவேண்டும் என்றார்.
தாம் நிர்வாக சேவைக்கு நுழைந்த காலத்தில் தொலைத்தொடர்பு வசதிகளோ ஏனைய வசதிகளோ இல்லை என்றும் மிகக் கஷ்டமான காலத்திலும் மனநிறைவான, சந்தோசமாக பணியாற்றியதையும் குறிப்பிட்ட ஆளுநர் இன்று பல வசதிகள் இருந்தும் மக்களுக்கு சிறப்பான சேவை கிடைக்கவில்லை எனவும் வேதனை வெளியிட்டார்.
அரச அதிகாரிகளுக்கான வருடாந்த இடமாற்றங்கள் வடக்கின் அனைத்து அரச அலுவலகங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இடமாற்றங்கள் தொடர்பான விடயங்கள் பேசுபொருளாகியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது. அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற அபிவிருத்தி குழுகூட்டத்தில் பேசியிருந்த பா.உ ஜெகதீஸ்வரன், நகர்ப்புற ஆசிரியர்கள் பின்தங்கிய கிராமப்புறங்களுக்கு இடமாற்றம் பெற்று சேவையாற்ற செல்வது கிடையாது எனவும் இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார். வடக்குமாகாண வேலையில்லா பட்டதாரிகளும் அரச வேலை மட்டுமே செய்வோம் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.