April

April

‘Ana Than’ யார் இந்த முகநூல் பொறுக்கி: பாரிஸ் முதல் யாழ் வரை பெண்களுக்கு எதிராக சமூக வலைத்தள வன்முறையும் – துஷ்பிரயோகங்களும்!

தமிழ் சமூகத்தில் பொதுவெளியில் முன்னேறி வரும் பெண்களை சாதாரணர்களையும் கூட இலகுவாக விழுத்தித்தள்ளுவதற்காக ஆணகள் கையில் எடுக்கும் பாரிய ஆயுதம் தான் நிர்வாணம் சார்ந்த வசையாடல்கள். இதனை கலாநிதிகளும் கல்லாநிதிகளும் வேறுபாடின்றி செய்கின்றனர். அதனைச் செய்ய முடியாதவர்கள் இவ்வாறு செய்பவர்களுக்கு லைக் போட்டு சிற்றின்பம் காண்கின்றனர்.

‘Ana Than’, என்ற முகம்மூடிய முகநூல் நபரால் உருவாக்கப்பட்ட “பாதிக்கப்பட்ட ஆண்கள் கட்சி – சுண்ணாகம்” என்ற முகநூல் பக்கம் ஒன்று தேசம் நெட் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மாதம் ஏப்ரல் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த முகநூல் கணக்கில் திட்டமிட்ட வகையில் ஒரு பெண் மீதான தங்களுடைய வக்கிரத்தை கொட்டித் தீர்ப்பதற்காக அந்த கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதை தெளிவாக காண முடிகின்றது. நேரடியான கணக்கில் இருந்தே பிரச்சினையை வெளிப்படுத்த தைரியம் இல்லாத இந்த ஆண்கள் குழு ஒன்று போலி கணக்கில் இருந்து பெண் ஒருவரின் நிர்வாணத்தை தாக்கி தங்களை வீரர்களாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஆகப்பெரிய கொடுமை என்னவென்றால் அந்த பெண்ணை நிர்வாணம் சார்ந்து கொச்சைப்படுத்தும் குறித்த பேஸ்புக் கணக்கில் சுமார் 400 வரையானவர்கள் நட்பு பட்டியலில் உள்ளனர். Ana Than என்ற முகநூல் கணக்கிலுள்ளவர் குறித்த பெண் தொடர்பான நிர்வாண படங்களை அதிகம் பதிவேற்றி பகிர்ந்துள்ளார். இதே நேரம் தேசம் ஜெயபாலன் குறித்த முகநூல் பக்கத்தில் அதிகமான பதிவுகளை இட்ட குறித்த கணக்கில் பின்தொடர்பவர்களாக உள்ள Ana Than மற்றும் Thabesan Krishna ஆகியோருடன் தொடர்பு கொள்ள முற்பட்டும் பதில் ஏதும் கிடைக்கவில்லை.

Ana Than என்ற பெயரில் முகநூலைக் கொண்டுள்ள நபரே குறித்த பெண் பற்றிய மோசமான பதிவுகளை வெளியிட்டுள்ளார். இவர் தான் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றுவதாகக் கூறி இட்ட பதிவுக்கு 93 பேர் லைக் இட்டுள்ளனர். குறித்த நபர் தான் சுண்ணாகத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இத்தகவல்கள் உண்மையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் அனா தன் என்ற இந்நபர் குறித்த பெண்ணை நன்கு அறிந்தவராக உள்ளார். அப்பெண் மீது காதல் கொண்டது போல் வசனங்கள் பாடல்கள் என்பவற்றை பெப்ரவரி மார்ச் மாதத்தில் வெளியிட்டு பதிவிட்டுள்ளார். அதன் பின் ஏப்ரல் மாதம் முதல் அப்பெண் பற்றி தாறுமாறான பதிவுகளை வெளியிட்டு வருகின்றார். பாதிக்கப்பட்ட ஆண்கள் கட்சி சுண்ணாகம் என்ற முகநூல் பற்றிய விபரம் அந்நூல் திறக்கப்பட்டதும் இவருடைய முகநூல் தளத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது.

இந்நபருடைய முகநூல் தளத்தில் 3200 பேர் நட்பாக உள்ளனர். இவர்களில் பலரும் இவருடைய முகநூலைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பலநூறு பேர் மோசமான பதிவுகளைப் பார்த்துவிட்டு, அப்பெண்ணை அரை நிர்வாணக்கோலத்தில் அனா தன் எடிட் செய்த படங்களை போட அதற்கும் லைக் கொடுத்துள்ளனர். ராம் சன்ட் என்பவர் மட்டும் கண்டித்து ஒரு பதிவை இட்டதைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. இந்த நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் ஆண்களின் ஈனத்தனமும் பாலியல் வக்கிரமும் ஆண்களுக்கே அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இவர்களுக்கு தாய், சகோதரிகள், பெண் பிள்ளைகள் உறவு எதுவும் இல்லாமல் இவர்கள் வானத்தில் இருந்தா குதித்தார்கள் என்று கேள்வியை எழுப்புகின்றது. இந்த மனநோயாளிகளை யாரோ ஒரு அப்பாவிப் பெண் மணம் முடித்து தன் வாழ்க்கை அழிக்கப் போகின்றாளே என்ற அச்சம் என் போன்ற சகோதரர்களுக்கும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கும் ஏற்படுகின்றது என்கிறார் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரன்.

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகம் உள்ள தாயகத்தில் ஈழத்துப் பெண்களின் நிலைமை இதுவென்றால். புலம்பெயர்ந்த ஈழத்து ஆண்கள் சிலர் ஈழத்தில் வாழும் சில ஆண்களிலும் பார்க்க மோசமான காட்டுமிராண்டிகளாக உள்ளனர். புலிகள் தொடர்பில் பேசியதற்காக அண்மையில் பிரான்ஸில் வைத்து “சுஜிகூல்” என்ற சமூக வலைதள பிரபலம் ஒருவரை தாக்கியதுடன் நின்று விடாது வேசி என்ற சொல்லில் தொடங்கி அந்த பெண் என்னென்ன தகாத வார்த்தைகளை பேசினாள் என்று தாக்கினோம் என கூறி விமர்சனங்கள் முன்வைத்தனரோ அதே வார்த்தைகளை ஏன் அதை விட அந்த பெண்ணின் பிறப்பு தொடங்கி அம்மா அப்பா அனைவரையும் சேர்த்து பேசி பழிவாங்கியதாக ஆர்கஸம் அடைந்து கொண்டனர் புலம்பெயர் தமிழ் தேசியவாதிகள்.

சுஜிகூல் விடுதலைப் புலிகளின் தலைவரை மதித்தே அவருடைய படத்தை தன்னுடைய அறையில் மாட்டியிருந்தார். ஆனால் சுஜிகூலைத் தாக்கிய அக்கா கடை உரிமையாளர் முரளி மற்றும் பதினைந்துவரையான ஈழத்து ஆண்கள் உட்பட முப்பதினாயிரம் வரையானோர் ரிக்ரொக்கில் அப்பெண்ணின் மாலை மயக்கத்தில் இருந்துள்ளனர். இந்த ஈழத்து ஆண்கள் சுஜிகூலை கொழும்பாள், வடக்கத்தையாள் என்றெல்லாம் பிரதேசவாதத்தை இழுத்து அவருடைய பெண்ணுடல் சார்ந்த வசையாடல்களைப் பொழிய சுஜிகூல் அவர்களுடைய வசையாடல் மொழியிலேயே பதிலடி கொடுத்தார். அந்த உரையாடல்களில் பாலியல் வக்கிரத்துடன் தாங்கள் பேசியவற்றை நீக்கிவிட்டு சுஜிகூலின் வசையாடலை மட்டும் பதிவிட்டு தங்களை ஆனையிறவுத் தாக்குதலில் இருந்து திரும்பிய மாவீரர்களாக படம் காட்டினர் லாச்சப்பல் அக்கா கடைச் சருகு புலிக் கும்பல்.

இவர்கள் புலிகளாகக் காட்டிக்கொண்டே இந்த வசையாடல்களைப் புரிந்தனர். புலிகளின் தலைவர் பிரபாகரனை பாரிஸில் தெருவுக்கு இழுத்துவிட்டு ஆனையிறவுத் தாக்குதல் பாடலையும் போட்டு கேவலப்படுத்தியது அக்காகடை உரிமையாளர் முரளி தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட கும்பலே. இவர்கள் ரிக்ரொக்கில் தங்கள் மனைவிமார் காதலியுடன் சல்லாபிப்பது போல் ஆரம்பித்த விளையாட்டே லாச்சப்பலில் புலிகளின் தலைவரையும் சந்திக்கு இழுத்துவி;ட்டது. இச்சம்பவத்திற்குப் பின்னரும் ரிக்ரொக்கில் இந்த அந்தரங்கக் கூட்டம் வசையாடல்களை இன்றும் தொடர்கின்றது. இந்த ஆண்களே சுஜிகூல்களை உருவாக்கிக்கொண்டுள்ளனர்.

இதே போலத்தான் புலிகளை பாஸிஸ்டுகள் என கூறியதற்காக பெண் சட்டத்தரணி ஒருவரை தேவடியா, அந்த மகளே இந்த மகளே என்றெல்லாம் கொட்டித்தீர்த்தார்கள் நமது புலிக்குட்டிகள்.

இது சாதாரணமான ஒரு விடயமாக கடந்து செல்ல முடியாதது. யாரோ ஒரு பெண் தானே என் கடந்து செல்வோமாயின் இது நாளை நம் வீட்டு பெண்களுக்கும் நடக்கும் அப்போது மட்டும் நியாயம் தேவை நீதி தேவை என வந்து விடுகின்றோம்.

சில மாதங்களுக்கு முன் யாழில் ஒரு ரவுடிக்கும்பல் ஒரு இளம் பெண் இன்னுமொருவரை காதலிக்கின்றார் என்று தெரிந்தும் அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது தெரிந்தும் அவரைப் பலாத்காரப்படுத்தி காதலிக்க வைக்க முயன்றுள்ளனர். இறுதியில் அக்கும்பல் வன்முறையில் இறங்கி பொலிஸ் அழுத்தங்களை ஏற்படுத்தி அக்காதல் தம்பதியின் திருமணத்தை குழப்புவதற்கு முழு முயற்சியும் எடுத்தனர். இறுதியில் அப்பெண் பற்றி முகநூலில் வசையும் பாடினர். இத்தனைக்கும் அப்பெண்ணின் தந்தை ஒரு நீதிபதி, முற்போக்குத் தளத்தில் நன்கு அறியப்பட்ட சமூக செயற்பாட்டாளர். ஒரு ஆண் நினைத்தால் குறிப்பாக ஈழத்து ஆண், எதனையும் செய்யலாம் என்ற நிலையில் தான் ஈழத்துப் பெண்கள் தாயகத்திலும் புலத்திலும் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையுள்ளது.

மேலும் ஆண்கள் தங்களுக்குள் பிரச்சினைகள் வருகின்ற போது அவர்கள் மோதிக்கொள்வதை விடுத்து மறு தரப்பினரின் குடும்பப் பெண்களின் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பாலியல் வக்கிரத்துடன் எழுதுவதை தினம் தினம் காண்கின்றோம். இதனை பாரிஸில் உள்ள லாக்குர்னே ஆலயத்தின் தலைவர் தற்போது சஜித் பிரேமதாஸாவின் கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளராக இருக்கும் குடுமி ஜெயா என்ற ஜெயந்திரன், முன்னர் புலிகளிடம் இருந்த லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் தலைவர் ஆர் ஜெயதேவன் அவருடைய சகபாடி ரரின் கொன்ஸ்ரன்ரைன் போன்றவர்களும் செய்து வருகின்றனர். இதற்கான பல ஆதாரங்கள் தேசம்நெற் இல் ஏற்கனவே வெளியிட்ப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தேசம் திரை காணொளி ஒன்றில் பேசியிருந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நளினி ரத்னராஜா இந்த நிலை பற்றி கூறிய போது “இது ஒருவிதமான உளவியல் நோய். தன்னை ஒரு பெண் நிராகரிக்கும் போது வேறு வழியின்றி உண்மையை ஏற்க மறுத்து அவள் தொடர்பான தூஷணங்கள் பேசுவது, சமூக வலைத்தளங்களில் தேவையற்ற பதிவுகளை இடுதல், குறித்த பெண்ணின் நிர்வாண படங்களை பதிவிடுதல் எல்லாமே அந்த உளவியல் நோயின் ஒரு வெளிப்பாடே – அதுவும் ஒருவிதமான இயலாமையின் வெளிப்பாடு தான். பாலின சமத்துவம் தொடர்பான கல்வி அடிப்படையில் இருந்து வழங்கப்படுதல் இந்த நிலமைகளை எதிர்கொள்ள உதவும்” என அவர் மேலும் குறித்த நேர்காணலில் தெரிவித்தார்.

குறித்த பெண் சரியானவரோ? பிழையானவரோ? என்பது தேவையற்ற விவாதம். இங்கு தேவையான கேள்வி: இவர்கள் யார்..? யாரோ ஒரு பெண்ணை பொதுவெளியில் வைத்து நிர்வாணப்படுத்தவும் – அந்த பெண்ணுடைய தொலைபேசி இலக்கத்தை பகிரவும் – வீட்டு விலாசத்தை பகிரவும் – குடும்பத்தை பற்றி பொதுவெளியில் பேசவும் யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது. ஆண் என்பதைத்தவிர எவ்வித மனிதத்துவ விழுமியங்களுமற்ற இவர்கள் ஈழத்தமிழ் சமூகத்தின் தீவிரமாகப் பரவிவரும் ஒரு புற்றுநோய். ஈழத் தமிழ் பெண்க்ளை அவர்கள் தாயகத்தில் வாழ்ந்தாலென்ன புலத்தில் வாழ்ந்தாலென்ன இவ்வாறான ஈழத்து பாலியல் வக்கிரம் கொண்ட சில ஆயிரம் ஆண்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது.

கெடுதல் செய்பவனை காட்டிலும் அதனை ஆமோதித்து அமைதியாக இருப்பவனே ஆபத்தானவன் என்பார்கள். குறித்த முகநூல் கணக்கில் நட்பு பட்டியலில் உள்ள 400க்கும் அதிகமான நண்பர்கள் தான் மிக்க மோசமானவர்கள். அதிலும் சிலர் நைஸ், முகவரி என்ன..? ஃபோன் நம்பர் என்ன என விசாரிப்பதும் அதற்கு லைக்ஸ் கிடைப்பதெல்லாம் அத்தனை வக்கிரமான நிலைக்கு தமிழ்ச்சமூகம் சென்று கொண்டிருப்பதையே காட்டுகிறது. குறித்த முகநூல் கணக்கை பின்பற்றும் முகநூல் கணக்குகளில் முற்போகாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், மற்றும் அம்மான் படையணி வடமாகாணம், வலி தெற்கு பிரதேசசபை, தோப்புக் காடு விளையாட்டு கழகம், நண்பர்கள் நற்பணி மன்றம், ஆணைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகம், சுழிபுரம் கிழக்கு கண்ணகி அம்பாள் ஆலயம் ஆகிய முகநூல் கணக்குகள் நட்பு பட்டியலில் உள்ளன. என்ன அடிப்படையில் நண்பர்களாகினரோ தெரியாது . ஆனால் இந்த கணக்குகளில் இருந்து ஒருவர் கூட இந்த குறித்த பெண்ணுக்காக பேசத் தயாரில்லை.

யாரோ ஒரு பெண் தானே என் கடந்து விட முடியாது. ஏனெனில் இது தான் நாளை நமது வீட்டு பெண்களுக்கும் நடக்கும். யாரோ ஒரு ஆண் நினைத்தால் ஒரு பெண்ணை பொதுவெளியில் எத்தனை தரக்குறைவாகவும் பேசி விடலாம் என்ற தைரியத்தை குறித்த பதிவுக்கு லைக் போட்ட 400 வரையான முதெகெழும்பு அற்ற ஆண்களும் வழங்குகிறார்கள். இங்கு பெண் யார் என்பது பற்றிய விபரங்கள் தேவையற்றது. ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒருவரை சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக நிர்வாணம் சார்ந்த வசையாடல்களால் விவரிப்பது என்பது உங்களுடைய பக்குவப்படாத மனநிலையை அது காட்டுவதுடன் யார் யாருக்கு எதிராக அதை செய்தாலும் தவறு தான்.

அண்மைய காலங்களில் இலங்கையில் மேற்குறித்த பெண்ணுக்கு நடந்தது போன்றுதான சமூக வலைத்தளங்களில் நடக்கும் துஷ்பிரயோகங்கள் இலங்கையில் சடுதியாக அதிகரித்து வருவதையும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரையான முறைப்பாடுகள் கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான இணைய சமூக வலைத்தள துஷ்பிரயோகம் தொடர்பில் பதிவாகியுள்ளதாக அறிய முடிகிறது.

இதே வேளை அண்மையில் இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்ட போது “சமூக வலைத்தளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்கள் பதிவுகளை இடுவோருக்கு 5 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படுவதற்கான சட்ட ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளார். மேலும் FACEBOOK சமூக ஊடகங்களில் தனி நபர் அவமதிப்பு, அவதூறு, பேக் ஐடி, நிர்வாண புகைப்படங்கள் பதிவேற்றப்படல், தேவையற்ற பிரச்சினைகளை கொடுப்பவர்கள் மீது 24 மணிநேரத்தில் புகார் செய்து அதற்கான நீதியும், தண்டனையும் பெற்றுக் கொள் புகார் ஒன்லைன் விண்ணப்பத்தை ஸ்ரீலங்கா பொலிஸார் மக்கள் பாவனைக்காக வழங்கியுள்ளமையும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. http://www.telligp.police.lk என்ற இணைய முகவரியை அணுகி குறித்த பாதிப்பு தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என இலங்கை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

பாரதிபுரம் கிராமத்தில், 8 தமிழர்கள் கொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொலிஸாருக்கு 25 ஆண்டுகளின் பின்பு ஆயுள் தண்டனை !

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில், 8 தமிழர்கள் கொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, பாரதிபுரம் பொலிஸ் நிலையத்தனி முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு வடமத்திய மாகாண உயர் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தம்பலகாமம் – பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வீடொன்றில் வீடு குடி புகுதல் நிகழ்வின்போது 8 தமிழர்கள் ஆயுதம் தாங்கிய குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட தம்பலகாமம் – பாரதிபுரம் எனும் கிராமத்தில் 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த நாள் குறித்த குற்றச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த கொடூரச் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டு, குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட அன்றைய காலப்பகுதியில் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர், உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் 3 பொலிஸ் சார்ஜன்ட்களுக்கே ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தவைகயில், கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பொலிஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம். ரணராஜ பண்டார, உப பொலிஸ் பரிசோதகர் ஜி.எல்.சோமரத்ன, பொலிஸ் சார்ஜன்ட்களான சந்திரரத்ன பண்டார, கே.எம். நிஹால் பிரேமதிலக்க, ஏ.ஆர்.சோமரத்ன பண்டார ஆகியோருக்கே இவ்வாறு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை மாத்திரம் குற்றமற்றவர்கள் என அறிவித்து விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரினால் அவசரகால உத்தரவு வழக்குகள் நடைமுறைகள் சட்டத்தின் 26 (1) பிரிவின் பிரகாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

காஸா போர் நிறுத்தம் – இஸ்­ரேலின் பதில் முன்மொழிவு அறிக்கை தொடர்பில் ஆராய்வதாக ஹமாஸ் இயக்கம்  அறிவிப்பு!

காஸா போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரி­மாற்றம் தொடர்­பான தமது முன்­மொ­ழி­வு­க­ளுக்கு இஸ்­ரேலின் பதில் முன்மொழிவு அறிக்கை தமக்கு கிடைத்­துள்­ள­தா­கவும், இதை தாம் ஆராய்ந்­து ­வ­ரு­வ­தா­கவும் ஹமாஸ் இயக்கம்   தெரி­வித்­துள்­ளது.

ஹமாஸ் அர­சியல் பிரிவின் பிரதித் தலைவர் கலீல் அல்-­ஹேயா சனிக்கிழமை (27) விடுத்த அறிக்­கை­யொன்றில், ‘ஹமாஸ் இயக்­கத்தின் நிலைப்­பாடு தொடர்பில் எகிப்து மற்றும் கட்டார் மத்­தி­யஸ்­தர்­க­ளுக்கு ஏப்ரல் 13 ஆம் திகதி அனுப்­பிய முன்­மொ­ழி­வுக்கு ஸியோ­னிச ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­களின் உத்­தி­யோ­க­பூர்வ பதில் முன்­மொ­ழிவு இன்று இந்த இயக்­கத்­துக்கு கிடைத்­துள்­ளது. இந்த முன்­மொ­ழிவை ஹமாஸ் ஆரா­ய­வுள்­ளது. அதன் பின்னர் அது தனது பதிலை கைய­ளிக்கும்’ எனத் தெரி­வித்­துள்ளார்.

காஸா போர்­நி­றுத்தம் தொடர்­பான புதிய சுற்று பேச்­சு­வார்த்­தை­க­ளுக்­காக எகிப்­திய மத்­தி­யஸ்­தர்கள் வெள்­ளிக்­கி­ழமை இஸ்­ரேலை சென்­ற­டைந்த நிலையில், இஸ்­ரேலின் பதில் யோச­னைகள் ஹமா­ஸுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன.

எகிப்­திய மற்றும் இஸ்­ரே­லிய பிர­தி­நி­தி­களின் நோக்­கு­களின் இடை­வெ­ளியை குறைப்­பதில் அவ­தா­னிக்­கத்­தக்க முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது என எகிப்­திய புல­னாய்வுச் சேவை­யுடன் தொடர்­புள்­ள­தாகக் கூறப்­படும் அல் கஹேரா அலை­வ­ரிசை தெரி­வித்­துள்­ளது.

காஸாவின் ரஃபா நகரம் மீது சனிக்கிழமை இரவும் இஸ்­ரேலின் வான் தாக்­குதல் தொடர்ந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்­பான புதிய எதிர்­பார்ப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன.

ஒக்­டோபர் 7 ஆம் திகதி முதல் காஸாவில் 34,388 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர் எனவும் 77,437 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர் எனவும் காஸா சுகா­­தார அமைச்சு  நேற்று தெரி­வித்­துள்­ளது.

ஒக்­டோபர் 7 ஆம் திகதி இஸ்­ரேலில் ஹமாஸ் நடத்­திய தாக்­கு­தல்­களில் சுமார் 1,200 பேர் கொல்­லப்­பட்ட பின்னர், கடத்­தப்­பட்ட 250 பேரில் இன்னும் 129 பேர் காஸாவில் உள்­ள­தாக இஸ்ரேல் நம்­பு­கி­றது.

கடந்த நவம்பர் மாதம் போர் நிறுத்த காலப்­ப­கு­தியில் 81 இஸ்­ரே­லி­யர்­களும் 24 வெளி­நாட்­ட­வர்­களும் விடு­விக்­கப்­பட்­ட­துடன், இஸ்­ரே­லிய சிறை­க­ளி­லி­ருந்து 71 பெண்கள், 169 சிறார்கள் உட்­பட  240 பலஸ்­தீ­னர்கள்  விடு­விக்­கப்­பட்­டனர்.

இதே­வேளை, பலஸ்­தீ­னத்தின் மேற்குக் கரை பிராந்­தி­யத்­தி­லுள்ள ஜெனின் நக­ருக்கு அருகில், பலஸ்­தீ­னர்கள் இருவர் இஸ்­ரே­லிய படை­யி­னரால் நேற்று சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ளனர்.  இரா­ணுவ காவ­லரண் ஒன்றின்மீது தாக்­குதல் நடத்தியவர்களே கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

லெபனானின் தென் பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அங்கத்த­வர்கள் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர் என ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.

சிட்னி தேவாலய தாக்குதல் – கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினர் உயிரிழக்க தயாராகயிருந்தனர் !

சிட்னியில் சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினர் சிட்னி தேவாலய தாக்குதலின் பின்னர் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டு பலரை கொலை செய்துவிட்டு உயிரிழக்க தயாராகயிருந்தனர் என  அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது ஏழு பதின்மவயதினர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் ஆறுபேர் சிட்னி தேவலாயத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞனின் சகாக்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் பயங்கரவாத தாக்குதலிற்கு திட்டமிட்டமை உட்பட பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினரில் நால்வர் தேவாலய கத்திக்குத்து இடம்பெற்ற சில நாட்களின்பின்னர் மறைகுறியாக்கப்பட்ட செய்தியிடல் செய்தியான சிக்னல் மூலம் உரையாடியுள்ளனர்.

நான் உயிரிழக்க விரும்புகின்றேன் நான் கொலை செய்ய விரும்புகின்றேன் நான் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன் என அவர்கள் தங்களுக்குள் தெரிவித்துள்ளனர்.

எப்படியும் நாங்கள் கொல்லப்போகின்றோம் பொறுமையாகயிருக்கவேண்டும் என 16 வயது இளைஞன் தெரிவித்துள்ளான்.

அவன் திட்டம் உயிருடன் பிடிபடுவதா இறப்பதா என மற்றுமொரு இளைஞன் கேள்வி எழுப்பியுள்ளான்.

நாங்கள் திட்டமிடப்போகின்றோம் தப்பிப்பதுதான் எங்கள் திட்டம் ஆனால் என்ன நடந்தாலும் அது அல்லாவின் வலிமை என அவன் தெரிவித்துள்ளான்.

அல்லாவின் படைவீரர்கள் என்ற பெயரை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்  த டெய்லி டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

இரண்டு இளைஞர்கள் துப்பாக்கிகளை கொள்வனவு செய்யதிட்டமிட்டனர் என காவல்துறையினர் குற்றம்சாட்டவுள்ளனர்.

இந்த இளைஞர்கள் தாங்கள் யாரை இலக்குவைக்கவேண்டும் என்பது குறித்தும் சிக்னலில் உரையாடியுள்ளனர்.

நான் யூதர்களை இலக்குவைக்க விரும்புகின்றேன் என 15 வயது இளைஞன் தெரிவித்துள்ளான்.

பட்டித்திடல் படுகொலைச் சம்பவம் – 37வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை !

பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு இதுவரை எவ்வித நீதியும் கிடைக்கவில்லை என கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பட்டித்திடல் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் படு கொலை செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 26 ஆம் திகதியுடன் 37வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. எனினும் இதுவரை பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு எவ்வித நீதியும், நிவாரணங்களும் கிடைக்கபெறவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் கிராமத்தில் 26.04.1987 ஆம் ஆண்டு இறைவழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒரே குடும்ப உறுப்பினர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

அதில் மூன்று கைக்குழந்தைகளும் பாடசாலை மாணவ, மாணவிகளும் அடங்குவர். தாக்குதல் நடந்த வீட்டிலிருந்து இருவர் மட்டுமே உயிர் தப்பியிருந்தார்கள்.

குறித்த கொலைச் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று காலை பட்டித்திடலுக்கு அண்மித்த பகுதியின் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் வைத்து கண்ணிவெடி தாக்குதலில் சில இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதன் பின்னணியிலேயே இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊழல்வாதிகளால் சீரழியும் வடக்கின் கல்வித்துறை – பின்னணியில் ஆளுநரா என தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு !

வடக்கு மாகாணத்தில் கல்வியில் ஊழல் மலிந்து காணப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படும் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படாமல் பதவி உயர்வு வழங்கும் நடைமுறை  இருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் மேற்படி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றையதினம் (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படும் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படாமல் பதவி உயர்வு வழங்கும் நடைமுறை வடக்கில் காணப்படுவது வடக்கு கல்வியை அழித்துவிடும் செயற்பாடாகவே பார்க்கிறேன்.

ஆசிரிய மற்றும் அதிபர்கள் இடமாற்றத்தில் முறைகேடுகள் இடம்பெறுகின்ற நிலையில் இடமாற்ற சபையின் அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன.

வன்னி ஒட்டுசுட்டான் பாடசாலையில் பாடசாலை வளங்கள் ஊழல் செய்யப்பட்ட நிலையில், குறித்த பாடசாலை அதிபருக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் நிதி நிர்வாக விடயங்களில் முறைகேடுகளுடன் தொடர்புபட்ட நிலையில் அவருக்கு தண்டனை வழங்கப்படாமல் உயர் பதவி ஒன்றில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகளை வடக்கு உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கில் காணப்படும் நான்கு அமைச்சுகளில் தகுதியான செயலாளர்கள் இல்லாத காரணத்தினால் நிர்வாக ரீதியான முடிவுகள் எடுப்பதில் பிரச்சனைகள் காணப்படுகிறது.

தகுதியானவர்களை நியமிக்க வாய்ப்புகள் கிடைத்தும் அவர்களை ஒதுக்கி தமக்குத் தேவையான அலிபாபா திருடர்களை பதவியில் வைத்திருப்பதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர்.

வடக்கு ஆளுநர் இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுவதை கண்டும் காணாமல் இருக்கிறாரா அல்லது அவரும் இத்தகைய செயற்பாடுகளின் பின்னணியில் உள்ளாரா என சந்தேகம் எழுகிறது.

ஆகவே, வடக்கு கல்வி ஊழல்வாதிகளால் சீரழிந்து வருகின்ற நிலையில் வட மாகாண ஆளுநர் வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.“ என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சனத்தொகையில் 10 சத வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிப்பு !

இலங்கையின் சனத்தொகையில் 10 சத வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம வைத்தியர் சஞ்சய ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நீரிழிவு நோயே பிரதான காரணியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நமது நாட்டில் சுமார் 10 சத வீதமானோர்  சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்மையில் பல்வேறு காரணிகள் இந்தப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.  இந்த நோய் தவிர்க்கப்பட வேண்டும்.

குறிப்பாக நம் நாட்டில் சிறுநீரகத்தைப்  பாதிக்கும் முக்கிய காரணியாக சர்க்கரை நோய் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

‘நாசம் நாசம் கனவுகள் நாசம்’ – யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் போராட்டம் !

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று காலை இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது ஏமாற்றாதே ஏமாற்றாதே பட்டதாரிகளை ஏமாற்றாதே, வேண்டும் வேண்டும் வேலை வேண்டும், நாசம் நாசம் கனவுகள் நாசம் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியிருத்தனர்.

மேலும் பலவருட கனவு வெறும் கனவாகவே போய் விடுமா, எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது, அழிக்காதே அழிக்காதே எமது எதிர்காலத்தை அழிக்காதே, வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து நீண்ட காலமாக வேலையில்லாமல் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் பாதிப்புக்களை சுட்டிக்காட்டி தமக்கான வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஐனாதிபதிக்கு மகஜர் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.

அதே போன்று இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல்வாதிகளுக்கும் அந்த மகஜரின் பிரதிகளை அனுப்பி வைக்க உள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடாத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மே தின கூட்டங்களுக்காக மக்களை திரட்ட சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிடும் இலங்கை கட்சிகள் !

பிரதான அரசியல் கட்சிகள் தமது அதிகாரத்தை மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் மே தினக் கூட்டங்களில் அதிகம் மக்களை பங்குபற்ற செய்வதற்காக சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளதாக கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு, பிரதான அரசியல் கட்சிகள், மே தினக் கூட்டங்கள் மூலம் தமது அதிகபட்ச அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் வகையில், மே தினத்தில் இவ்வளவு பணத்தைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மே பேரணிகளில் பங்கேற்கும் தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு பயண வசதி செய்து கொடுக்கவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் பேருந்துகளுக்கும் இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படும்.

இந்தத் தொகையுடன், மே பேரணி நடைபெறும் இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள், கட்-அவுட் அலங்காரங்கள், மேடைகள், ஒலிபெருக்கிகள் அமைக்க பல இலட்சம் செலவை அரசியல் கட்சிகள் மேற்கொள்ளவுள்ள

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் கொழும்புக்கு வரவுள்ளன.

மேல் மாகாணத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்கு ஒரு பேருந்துக்கு 30,000 முதல் 35,000 ரூபாய் வரையிலும், அனுராதபுரம் போன்ற தொலைதூரப் பகுதிகளில் இருந்து கொழும்பு வரும் பேருந்துக்கு 1,50,000 ரூபாய் வரையிலும் கட்டணம் செலுத்த வேண்டும். ஒருவருக்கு மதிய உணவுக்கு 300 முதல் 450 ரூபாய் வரை செலவாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது

இதற்கு முக்கிய அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்படும் பணம் போதாது என்பதால், தொகுதி அமைப்பாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் பணம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வல்லவராகவும் நல்லவராகவும் தன்னை நிரூபித்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியே தமிழ் மக்களின் வெற்றியாகும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஒப்பீட்டளவில் வல்லவராகவும் நல்லவராகவும் தன்னை நிரூபித்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை தமிழ் மக்களின் வெற்றியாக மாற்றும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகள் அமைய வேணடும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே செயலாளர் நாயகத்தினால் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமகால அரசியல் நிலவரங்கள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சு சார்ந்த முன்னெடுப்புக்கள் போன்றவை தொடர்பிலும், அவை சரியான முறையில் மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தும் வகையில் குறித்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.

 

அதன்போது, தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வெற்றியடைய செய்ய வேண்டிய அவசியம் தொடர்பாக வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் பொது வேட்பாளரை தேர்தலில் நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பான விமர்சனத்தினையும் முன்வைத்துள்ளார்.

 

அத்தோடு, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவலங்களையும் அரசியல் கோஷங்களாக பயன்படுத்தி குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் தரப்புக்கள், தமது நலன்களுக்காக தமிழ் மக்களை இன்னுமொருமுறை பலிக்கடாவாக்க முனைகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும், இவ்வாறான முட்டாள்தனமான முயற்சிகள் கடந்த காலங்களில் ஆயுதப் போராட்ட குழுக்களினாலும் மிதவாத தமிழ் தலைமைகளினாலும் பலமுறை முன்னெடுக்கப்பட்டதாகவும் ஆனால் அவற்றினால் எமது மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கவில்லை என்றும் மாறாக மீளமுடியாத பின்னடைவுகளையே ஏற்பட்டதாகவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.