19

19

ஜே.வி.பிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து போரிட்டாலும் நாம் எதிர்கொள்ளத்தயார் – நலிந்த ஜயதிஸ்ஸ

மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டாலும் அதனை தாம் வரவேற்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ரணில், சந்திரிக்கா, சஜித், மஹிந்த, கோட்டாபய மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஒன்றாக இணைந்து எங்களுக்கு எதிராக போட்டியிடுவார்களாக இருந்தால் அப்போதுதான் எங்களுக்கு கிடைத்த வெற்றி.

எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அதனை நாம் விருப்பத்துடன் வரவேற்போம்.

கடந்த 1947 ஆம் ஆண்டில் இருந்து ஆட்சி செய்த அனைவருமே இந்த நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்தனர். எனவே இவர்கள் ஒன்றாக இணைந்து எம்மை எதிர்க்கும் போது அதனை மக்களுக்கு இலகுவாக அடையாளம் காட்டமுடியும்.

நாட்டில் தீய விளைவுகளை ஏற்படுத்தியவர்கள் இவர்களே. நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள் இவர்களே நாட்டை கொள்ளைடித்தவர்களும் இவர்களே.எமது பக்கம் இருப்பவர்கள், நாட்டை வளச்சி பாதையில் இட்டுச் செல்ல எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்கள்.

புதிய வேலைத்திட்டங்களுடன், புதிய அரசியல் தலைவருடன் மக்களின் திசைக் காட்டியாக எம்முடன் பலர் இருக்கிறார்கள்.

இன்னும் இரு நாட்களில் குறித்த இரு குழுக்கள் குறித்து நாட்டு மக்களுக்கு தெரியவரும் என நினைக்கின்றேன். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தற்போது சந்திரிகாவின் காலடியில் வைத்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவில் அநேகமான அமைச்சர்கள் தற்போது ரணிலுடன் இருப்பதாக கூறப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்திக்கும் தற்போது வலைவீசப்பட்டுள்ளது” இவ்வாறு நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து திருட்டுத்தனமாக திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படும் சுண்ணக்கல் – யார் அனுமதி கொடுத்தது என சிறீதரன் கேள்வி!

யாழ்ப்பாணத்தில் இருந்து தற்போதும் தினசரி சுண்ணக்கல் அகழப்பட்டு இரகசியமான முறையில், திருட்டுத் தனமாக திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

 

நேற்று (18) இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இதனை சிறீதரன் இதனைக் குறிப்பிட்டார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “காங்கேசன்துறையில் இயங்கிய சீமெந்து ஆலைக்காக சுண்ணக்கல் அகழ்ந்த பிரதேசங்களான காங்கேசன்துறை, பலாலி தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள பாரிய இரு குழிகளும் இன்று மூடப்படமால் இருக்கின்றது.

ஆபத்தான நிலையில் குடிமனைகளின் நடுவே இந்த குழிகள் உள்ளன. இந்தநிலையில், தற்போது புத்தூர், மாதகல், இளவாலைப் பகுதிகளில் சிலர் இரகசியமான முறைகளில் சுண்ணக்கல்லை அகழ்ந்து மூடிய பார ஊர்திகளில் எடுத்துச் செல்கின்றனர்.

இவ்வாறு தினமும்10 முதல் 15 வரையான பார ஊர்திகளில் (கெண்டெயினர்களில்) கற்கள் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு எந்தத் திணைக்களமாவது அனுமதி வழங்கியதா“ எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

இதேவேளை இதற்குப் பதிலளித்த புவிச் சரிதவியல் திணைக்களத்தைச் சேர்ந்த மயூரன் அவ்வாறான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் கடத்தலில் யாழ்ப்பாண பொலிஸாருக்கும் தொடர்பு – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

 

யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது.

 

இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளோம்.

 

மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த விடயம் தொடர்பில் பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர் கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார்.

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்!

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் இன்று (19) தனது 89ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

 

உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

1958ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்துக்கு ஆற்றலை வெளிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

 

இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்துக்கு உள்ளது.

 

1962ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

 

யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஆகஸ்ட் 24ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார்.

 

பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது.

 

இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The World Press Photo of the Year – உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது !

2024 ஆம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் புகைப்பட விருதை வென்றுள்ளார் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம் என்ற பத்திரிகையாளர்.

 

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பிற்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது கிடைத்துள்ளது.

 

இந்தப் புகைப்படம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தெற்கு காசாவின் கான் யூனிஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

மருத்துவமனையின் சவக்கிடங்கில் துணியால் சுற்றப்பட்ட உயிரிழந்த தனது 5 வயது மருமகளின் உடலைப் பார்த்து பெண் ஒருவர் அழுவதை தனது கமரா கண்களின் வழியே படம் பிடித்திருந்தார் முகமது சலேம்.

ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாகக் கொண்ட வேர்ல்ட் பிரஸ் போட்டோ ஃபவுண்டேஷன் அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த படத்துக்கான விருதை வழங்கி வருகிறது.

 

அந்த வகையில் யுத்தம், மோதல் போன்ற பகுதிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை அங்கீகரிப்பது அவசியம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபரில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான மோதலில் சுமார் 99 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் தமது இன்னுயிரை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முகமது சலேம், 39 வயதான பலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவர். புகைப்பட பத்திரிகையாளர். 2003 முதல் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு கடந்த 2010இல் வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார்.

“காசாவின் நிலை என்ன என்பதை இந்தப் படம் விளக்குகிறது. தங்கள் அன்பானவர்களின் நிலையை குறித்து அறிந்து கொள்ள மக்கள் அங்குமிங்கும் அல்லாடிய நேரம் அது. அப்போது இந்தப் பெண், குழந்தையின் உடலுடன் கலங்கி நின்றார். அதனை நான் கவனித்தேன். அந்த வேதனையை ஒளிப்படத்தின் வழியே உலகுக்கு கடத்த நினைத்தேன்” என இந்தப் படம் எடுத்ததற்கான காரணம் குறித்து சலேம் விளக்கியுள்ளார்.

விருது வென்ற குறித்த புகைப்படம் கடந்த நவம்பர் மாதம் முதன்முதலில் பத்திரிகையில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் அணுசக்தி திட்ட நகரத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – மேலும் பதற்றமடையும் நிலவரம் !

இஸ்ரேல் ஈரானிற்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டுள்ளதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

 

அடுத்த 48 மணித்தியாலத்திற்குள் தாக்குதலை மேற்கொள்வோம் என இஸ்ரேல் அமெரிக்காவிற்கு தெரியப்படுத்தியது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

 

ஈரானின் அணுஉலைகளை தாக்கமாட்டோம் எனவும் இஸ்ரேல் அமெரிக்காவிற்கு உத்தரவாதம் வழங்கியிருந்தது.என சிஎன்என் தெரிவித்துள்ளது.

இதேவேளை; இஸ்ரேல் ஈரானில் தாக்குதலிற்கு தெரிவு செய்த இஸ்ஃபஹான் நகரம் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மையம் என முன்னாள் அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ஃபஹான்ம் நகரம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது ஏன் இஸ்ரேல் அந்த நகரத்தை தெரிவு செய்தது என்பது குறித்து அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்க செயலாளர் மார்க் கிமிட் பிபிசிக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

 

இஷ்பஹான் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மையம் என குறிப்பிட்டுள்ள அவர் பயிற்சி ஆராயச்சி மற்றும் ஈரானின் அணுசக்திதிறமையை உருவாக்குதல் போன்றவற்றிற்கு இந்த நகரமே பிரதானமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

 

இதன் காரணமாகவே இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிக்கு 800 ரூபாய்க்கு வடை – உணவக உரிமையாளர் கைது !

வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு வடை மற்றும் தேநீர் கொடுத்துவிட்டு ரூபா 800 வசூலித்த உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

களுத்துறையில் உள்ள உணவகமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியான நிலையிலேயே குறித்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக தனி வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் சுற்றுலா பயணி ஒருவருக்கு 1900 ரூபாய்க்கு கொத்து விற்பனை செய்ய முயற்சித்த உணவக உரிமையாளர் ஒருவர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் வசிக்கும் பகுதியில் கொட்டப்பட்ட யாழ்ப்பாண வைத்தியசாலை கழிவுகள் – மக்கள் போராட்டத்தால் உடனடியாக அகற்ற ஏற்பாடு!

வடக்கில் தனியார் காணியொன்றில் வைத்தியசாலை கழிவுகளை குவித்து சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு எதிராக பிரதேசவாசிகள் போராடியதை அடுத்து குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

யாழ்ப்பாணம், அரியாலைப் பிரதேசத்தில் நீண்டகால குத்தகை அடிப்படையில், கண் வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கென, யாழ். போதனா வைத்தியசாலைக்கு, சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தனியார் காணியில் வைத்தியசாலை கழிவுகள் கொட்டப்படுவதால் பிரதேசவாசிகள் சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டி, கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி வைத்தியசாலை அதிகாரிகளுக்கு மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

 

இந்த நிலையில், குறித்த பகுதியில் பெருமளவான குப்பைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

எவ்வாறாயினும், நிலத்தடி நீர் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

அரியாலைப் பிரதேசத்தில், யாழ்ப்பாணம்-கண்டி பிரதான வீதியை மறித்து, சுமார் மூன்று மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மக்கள், கழிவுகளை உடனடியாக அகற்றி, மக்கள் வாழ்வதற்கு ஆரோக்கியமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

 

எந்தவொரு வைத்தியசாலையும் நிர்மாணிக்கப்படவில்லை எனினும் மிகவும் ஆபத்தான வைத்தியசாலைக் கழிவுகள் காணியில் கொட்டப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் வலியுறுத்தினார்.

“குறித்த இந்த காணி 10 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கண் வைத்தியசாலை அமைப்பதற்கு நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் வழங்கப்பட்டது. நீண்டகாலமாக இங்கு எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் இந்த காணியில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. கழிவு பொருட்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

 

இந்த நிலையில் துர்நாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அருகில் இருப்பவர்கள் சென்று பார்த்தபோது, மிகவும் ஆபத்தான வைத்திய கழிவுகள், இரத்தத் துணி துண்டுகள், ஊசி ஏற்றும் சிரஞ்சுகள், குளுகோஸ் ஏற்றும் குழாய்கள் என அனைத்தும் இங்கு இருக்கின்றன. இது மிகவும் ஆபத்தான வைத்திய கழிவுகள்.”

 

இப்பகுதியில் எவ்வளவு காலமாக வைத்தியசாலை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றது என்பது பிரதேசவாசிகளுக்கு தெரியவில்லை எனவும், அண்மைக்காலமாக துர்நாற்றம் வீச ஆரம்பித்ததோடு, அங்கு எரிக்கப்பட்டமைக்கான காரணம் குறித்து பொது மக்கள் ஆராய்ந்தபோதே இந்த விடயம் அம்பலமானதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்நிலையில், பிரதேச மக்கள் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என போராட்டக்காரர் ஒருவர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

 

“என்ன அடிப்படையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் இந்த வைத்திய கழிவை போட்டீர்கள்? இதனை எப்போது பாதுகாப்பாக அகற்றித் தருவீர்கள்? இவற்றை அகற்றிய பின்னர் நிலத்தடி நீரிலும், சுற்றுச்சூழலிலும் பாதிப்பு ஏற்படாமல் எப்படித் தடுப்பீர்கள்?”

 

போராட்டத்தை தடுத்து நிறுத்த பொலிஸாரின் முயற்சி தோல்வியடைந்ததாக தெரிவிக்கும் பிரதேச ஊடகவியலாளர்கள், வைத்தியசாலை அதிகாரிகள் வந்து தீர்வு வழங்கும் வரை போராட்டத்தை நிறுத்துவதற்கு பிரதேச வாசிகள் இணங்கவில்லை என சுட்டிக்காட்டுகின்றனர்.

 

பின்னர் யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து வைத்தியசாலை கழிவுகளை ஏழு நாட்களுக்குள் (ஏப்ரல் 18ற்குள்) அகற்றுவதாக உறுதியளித்ததையடுத்து, அரியாலை பிரதேச மக்கள் போராட்டத்தை கைவிட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் வீழ்ச்சி கண்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை!

நாடளாவிய ரீதியில் உள்ள 354 சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் தற்போது 9,147 சிறுவர்கள் காணப்படுவதாக நன்னடத்தை மற்றும் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

மாற்றீடான பாதுகாப்பின் கீழ், சிறுவர்கள் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்படுவதுடன், சிறுவர்கள் குடும்பமொன்றின் கீழ் வளர்வது அவசியமானது என நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அத்தோடு, சிறுவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பொருத்தமான பாதுகாவலரின் குடும்பத்தின் கீழ் சிறுவர்கள் வளர வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் பணியாற்றுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது..

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு – இரு பொலிஸ் அதிகாரிகள் கைது !

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 

மாவத்தகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் தொருட்டியாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

குறித்த சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது