June

June

பொலிசாரால் சுட்டக்கொல்லப்பட்ட சிறுவன் – போராட்டக்களமான பிரான்ஸ் !

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நாந்த்ரே பகுதியில் உள்ள சிக்னலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து டிரைவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த காரை ஓட்டி சென்ற ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த நேல் என்ற 17 வயது சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து காருக்குள்ளேயே இறந்தார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

 

போலீசாரின் இந்த நடவடிக்கை பிரான்ஸ் நாட்டு பொதுமக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுவதும் பல இடங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் வெடித்தது. கார்கள், பள்ளிகள், போலீஸ் நிலையங்கள், குப்பைத்தொட்டிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல பகுதிகளில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. வன்முறைகளில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர்.

 

நேற்று இரவும் 3-வது நாளாக கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டது. இந்த கலவரத்தில் இதுவரை 40 கார்கள் சேதம் அடைந்தது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 170 போலீசார் காயம் அடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக போலீசார் 180-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக 40 ஆயிரம் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

 

அவர்கள் முக்கிய நகரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையை தடுக்க பாரீஸ் புறநகர் பகுதியான கிளமார்ட் பகுதியில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வருகிற திங்கட்கிழமை வரை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரான்ஸ் நாட்டில் பொதுமக்களின் போராட்டம்-வன்முறை சம்பவங்கள் நீடித்து வருவதால் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உயர் மட்ட குழுவை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இம்மானுவேல் மேக்ரான் கூறும் போது சிறுவன் கொல்லப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். குற்றவாளி தண்டிக்கப்படுவார். பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும். பள்ளிகள்,போலீஸ்நிலையங்கள்,குடியரசுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்து உள்ளார்.

ஹெரோயின் அடங்கிய பொதியுடன் 6 ஈரானியர்களும் இரண்டு பாகிஸ்தானியர்களும் கைது !

மாலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் ஹெரோயின் அடங்கிய பொதியுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 ஈரானியர்களும் இரண்டு பாகிஸ்தானியர்களும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மாலைத்தீவுக்கு அருகில் உள்ள கடலில் சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் கப்பலை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து ஜூன் 22 அன்று வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 மற்றும் 48 வயதுடையவர்களாவர்.

அவர்கள் 926 கிராம் ஹெரோயின் வைத்திருந்தனர்.

அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

மூன்று லட்சம் மேன்முறையீடுகள் – “அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட ஏழைகளும் உள்வாங்கப்பட்ட செல்வந்தர்களும் !

இலங்கையின் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து இலங்கை மக்களிடையேயான ஏழ்மை நிலை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் சாதாரண ஏழை மக்களிடையே காணப்படக்கூடிய ஏழ்மை நிலையை போக்குவதற்காக ‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தில் தகுதியானவர்கள் உள்வாங்கப்படவில்லை என இலங்கையின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் அதிருப்தி வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
‘அஸ்வெசும’ நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் முதியோர்கள், விதவைகள் , தேவையுடைய ஏழ்மையான குடும்பங்கள் என வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாத நிலையில் இது தொடர்பான அதிருப்தி பல பகுதிகளில் மக்களைப் எதிர்ப்பு போராட்ட களத்திற்கும் தள்ளி உள்ளது.
பெயர்ப்பட்டியல் வெளியானமை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டு வரும் மக்கள் 26.06.2023 அன்று மலையகம் குறிப்பாக நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளில் எதிர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதே வேளை 27.06.2023 அன்று வடக்கின் சில பகுதிகளிலும் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வவுனியாவில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றி தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர். வவுனியாவின் ஆசி குளம் பகுதியில் சுமார் 12 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தமக்கு நீதி வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டு 27.06.2023 அன்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த சமூக ஆர்வலர் ஒருவர் பேசிய போது ” அஸ்வெசும பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு எமது கிராமத்தில் பலர் வாழ்கின்றோம். எமது பகுதியில் தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகவும் பெயர் விபரங்கள் சமர்ப்பித்தும் தங்களுடைய விபரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அதிகமாக ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தேவை உள்ள குடும்பங்கள் பல நிராகரிக்கப்பட்டு வசதி வாய்ப்புள்ள குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் அறிவிக்கப்பட்டுள்ளமை ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கும் – தெரிந்தவர்களுக்கும் இந்த அஸ்வெசும நலன்புரி உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் வடக்கின் பல பகுதிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து உள்ளவர்களின் குடும்பங்களுக்கு இந்த உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளை வீட்டுப் பணிகளுக்காக மத்திய கிழக்காசிய நாடுகளுக்கு தொழில் தேடி சென்ற வறுமை கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்கள் பல இந்த உதவி திட்டத்திற்குள் உள்வாங்கப்படவில்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுஜன பெரமுனவின்நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார் சுமித்ராராச்சி அவர்கள் இது தொடர்பில் குறிப்பிட்ட போது” அஸ்வெசும நிவாரண செயற் திட்டம் சமூக கட்டடைப்பில் பாரிய முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் . ஏழ்மையில் நிலையில் உள்ளவர்கள் இந்த செயற்திட்டத்தில் உள்வாங்கப்ப டவில்லை . ஆகவே முறையான மதிப்பீட்டை மேற்கொள்ளும் வரை அஸ்வெசும செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதை இடைநிறுத்த வேண்டும். சமூக கட்டமைப்பில் தீவிரம டைந்துள்ள ஏழ்மை நிலையை இல்லாதொழிக்க அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அஸ்வெசும செயற்திட்டம் சமூகக் கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகளை தோற்றுவிக் கும் வகையில் உள்ளது . தகுதியானவர்களுக்கு மாத்திரம் நிவாரண தொகை வழங்கப்பட வேண் டும் என குறிப்பிடப்பட்டது . அஸ்வெசும நிவாரண செயற்திட்டத்தில் நிவாரணம் பெறுவதற்குத் தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டுள் ளார்கள் . தகுதியற்ற செல்வந்தர்கள் நிவார ணத் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட் டுள்ளார்கள் . ஆகவே இந்தத் திட்டத்தில் உண்மையான தரப்பினர் அடை யாளப்படுத்தப்படவில்லை.”என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .
இது தொடர்பில் பேசியுள்ள திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மகரூப் “, நாடு முழுவதும் இலட்சக்கணக்கான ஏழை மக்கள் சமூர்த்திக் கொடுப்பனவு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும், சில அதிகார பின்புலத்திலுள்ளவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே இந்த பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.
நாடு இன்று பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையில் அப்பாவி ஏழை மக்களும் வயிற்றுப் பசியை போக்க பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுக்கின்றனர். அவர்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவு ஆறுதலாக இருந்தது.
எனினும், சிலர் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இவர்களின் சமுர்த்திக் கொடுப்பனவை நிறுத்துவதற்கு பின்புலத்திலிருக்கின்றனர். இது பெரும் அநீதி எனவும் மக்களை கஷ்டத்துக்குள் தள்ளிவிடும் இந்த மோசமான செயலை செய்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் கரிசனையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பில் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களை கொண்டுள்ள வடக்கு – கிழக்கு பகுதிகளின் தமிழ் அரசியல் தலைவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. புலி அரசியலுக்கும் – போலித் தேசியம் பேசவும் முண்டியடித்துக் கொண்டு வரும் எந்த அரசியல்வாதிகளும் இது தொடர்பில் எதுவித எதிர்ப்பையும் இந்த செய்தி உருவாக்கப்படும்வரை வெளியிடப்படவில்லை என்பது வேதனையான விடயம்.
இதேவேளை அஸ்வெசும’ சமூக நலன்புரி திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி “எவரையும் கைவிடாத வகையில் ‘அஸ்வெசும’ சமூக நலன்புரி திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு  ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் குறித்த நலன் குறித்த திட்டம் தேவையுடைய ஏழ்மையான குடும்பப் பின்னணி உள்ளவர்களுக்கு மட்டுமே சென்றடையும் எனவும் ஏழ்மை நிலையிலிருந்து குறித்த திட்டத்திற்குள் உள்வாங்கப்படாத குடும்பத்தினர்கள் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி வரை தங்களுடைய பிரதேச செயலகங்களுக்கு சென்று மேல்முறையீடு செய்து குறித்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள முடியும் என அரசு தரப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ‘அஸ்வெசும’ எனும் ஆறுதல் நலன்புரி திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பில் இதுவரை அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக இதுவரை 383,232 மேன்முறையீடுகளும் 5,045 ஆட்சேபனைகளும் பெறப்பட்டுள்ளன என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். மேலதிக விசாரணைகளுக்கு, பொது மக்கள், வார நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயற்படும் ‘1924’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.
மேலும் யாழ்ப்பாணத்திலும் இது தொடர்பில் அதிக ஏழை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அதற்கு மேன்முறையீடு செய்வதற்கு 10 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது நடக்காத காரியம் – ஜஸ்மின் சூக்கா

இலங்கை அரசாங்கம் கோட்டாபய ராஜபக்சவை பொறுப்பு கூறச்செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் என சர்வதேச உண்மை நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்ற பாரதூரமான மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது, ஜே.வி.பி காலத்திலிருந்து கோட்டாபய ராஜபக்ச மாத்தளைக்கு பொறுப்பாக காணப்பட்ட காலம் வரை நீள்கின்றது என்பதை மனிதப் புதைக்குழிகள் குறித்த புதிய அறிக்கை வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அன்று தொடக்கம் இன்று வரை ஜே.வி.பி காலத்தில் போர் குற்றத்தில் ஈடுபட்டவர்களோ – அல்லது யுத்தத்தில் இறுதியில் போர் குற்றத்தில் ஈடுபட்டவர்களோ பொறுப்பு கூறலிற்கு உட்படுத்தப்படவில்லை எனவும் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இடம் பெற்ற சம்பவங்களிற்காகவோ அல்லது யுத்தம் முடிவில் இடம்பெற்ற சம்பவங்களிற்காகவோ இந்த அரசாங்கம் கோட்டாபய ராஜபக்சவை பொறுப்பு கூறச் செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அதன் இருப்பிற்காகவும் ஆதரவிற்காகவும் கோட்டாபய ராஜபக்சவிற்கு கடமைப்பட்டிருப்பது இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யார் இந்த யெவ்ஜெனி பிரிகோஸின்..? – வாக்னர் ஆயுதக் குழுவின் பின்னணி என்ன..?

உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட தனியார் இராணுவ கூலிப்படையினர் எனக் கூறப்படும் வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்யாவில் தடை உள்ளது. எனினும், ரஷ்யா – உக்ரைன் போர் உச்சத்தில் இருந்தபோது, பக்முட் நகரைக் கைப்பற்றுவதில் வாக்னர் குழுவினர் வெற்றி பெற்றனர். இந்த நிலையில், தற்போது வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்ய அரசு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், ரஷ்யாவுக்கு எதிராக அக்குழுவினர் திரும்பியுள்ளதாகத் தெரிகிறது.

வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்ய அதிபர் எச்சரிக்கை - Daily Ceylon

இந்த நிலையில் ’ரஷ்ய ராணுவத் தலைமையை அழிப்போம் என்றும், எங்கள் வழியில் யார் குறுக்கே வந்தாலும் துவம்சம் செய்வோம்’ என்றும் வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் எச்சரித்துள்ளார். ஏற்கெனவே ரஷ்ய ராணுவத்தைத் தாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதிக்குள் தங்கள் படைகள் நுழைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அவர் வெளியிட்டிருந்த ஆடியோ ஒன்றில், “நாங்கள் 25,000 பேர் இருக்கிறோம். ரஷ்யாவின் ராணுவத் தலைமையை எதிர்த்து முன்னேறுகிறோம். வழியில் எது தடையாக இருந்தாலும் எங்கள் பாணியில் துவம்சம் செய்வோம்” என்று எச்சரித்திருந்தார்.

மற்றொரு ஆடியோ ஒன்றில், “புடினின் வேண்டுகோளை எனது படை வீரர்கள் கேட்க மாட்டார்கள். ஏனெனில், எங்களுக்கு எங்களின் தேசம் ஊழல், சதி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கியிருப்பதில் விருப்பமில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இதனால் ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகர் மாஸ்கோ உட்பட பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆயுதப் போராட்டத்திற்குத் தூண்டுவதாக வாக்னர் தலைவர் பிரிகோஸினை கைதுசெய்ய உத்தரவிட்டுள்ள ரஷ்ய அரசு, சட்ட விரோத நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், “மாஸ்கோவில் தீவிரவாத தடுப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள் தேசத்துரோகிகள் ஆவர். ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்தின் முதுகில் குத்திவிட்டனர். ரஷ்யாவில் உள்நாட்டுப் போரை அனுமதிக்க முடியாது. மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இந்தச் சூழலில் தனி நபர்களின் தனிப்பட்ட விருப்ப வெறுப்புகள் தேசத் துரோகமாகும்.

ஆயுதக் கிளர்ச்சியை தூண்டிய தலைவர் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார். அவர் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்திடம் சரண் அடைய கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே உக்ரைன் போர் காரணமாக நெருக்கடியில் உள்ள ரஷ்யாவுக்கு இந்த உள்நாட்டுப் பிரச்னை புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யாவிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உக்ரைன், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர முயன்றது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யாவுக்கு உதவும் வகையில் பணியமர்த்தப்பட்ட தனியார் ராணுவ ஒப்பந்ததாரர்களே வாக்னர் ஆயுதக் குழுவினர். சிரியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் செயல்பாட்டில் உள்ள இந்தக் குழு, போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருவதாகத் தொடர் குற்றச்சாட்டுக்கும் ஆளானது.

2014இல் ரஷ்யா, கிரிமியாவை இணைத்தபோது வாக்னர் குழு முதலில் செயல்பட்டதாக நம்பப்படுகிறது. ரஷ்ய சிறைகளில் உள்ள குற்றவாளிகளைத் தங்களது குழுவில் வாக்னர் இணைத்துக் கொள்வதாகவும், 2022 நவம்பருக்கு முன்பு, ரஷ்ய சிறைகளில் உள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை 23,000க்கும் அதிகமாகக் குறைந்திருப்பதாகவும் தரவு ஒன்று கூறுவதாக பிரிட்டன் அதிகாரிகள் கடந்த 6 மாதத்திற்கு முன்பே குறிப்பிட்டுள்ளனர்.

தவிர, இந்தக் காலகட்டத்தில்தான் வாக்னர் குழு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ரஷ்யாவின் பல குற்றவாளிகள் வாக்னருடன் இணைந்ததாக நம்பப்படுகிறது. குழுவில் இணைந்து பணியாற்றும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதோடு, ஆறு மாதங்கள் பணியாற்றிய பின்னர் அவர்களது தண்டனையும் குறைக்கப்படும் என்று அவர்களிடம் கூறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தேசியப் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளரான ஜான் கிர்பி, ”இந்தக் குழு இப்போது அதிகாரத்தில் உள்ள ரஷ்ய ராணுவத்திற்குப் போட்டியாக இருக்கும்” என கடந்த 6 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த வாக்னர் குழுத் தலைவராக இருப்பவர்தான் யெவ்ஜெனி பிரிகோஸின். இவர் குழுவிலான ராணுவ அமைப்பு, உக்ரைனில் பல பகுதிகளைச் சேதப்படுத்தியதிலும் கைப்பற்றியதிலும் தூணாகச் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், உக்ரைனில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, யெவ்ஜெனி பிரிகோஸின் உலக நாடுகளின் கவனத்தை பெற்றார். இவர்தான் தற்போது ரஷ்ய அரசுக்கு எதிராக மாஸ்கோ கூலிப்படையை இணைத்துக்கொண்டு உள்நாட்டுப் போரைத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்று ரஷ்ய அரசை அச்சுறுத்தி வரும் பிரிகோஸின், கடந்த 1961ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்தவர். 1981ஆம் ஆண்டு, கொள்ளை மற்றும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்த பிரிகோஸினுக்கு 12 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அதிலிருந்து விடுதலையான அவர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உணவகம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்தச் சூழலில்தான் அப்போது நகரின் துணை மேயராக இருந்த புடினின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதன்மூலம் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி உள்ளனர். மேலும் புடினின் நட்பு வட்டத்தால் சமையல் வணிகத்தில் அவர், ரஷ்ய அரசாங்க ஒப்பந்தங்களை அதிகமாகப் பெற்றுள்ளார். இதனால், ’புடினின் சமையல்காரர்’ என்றும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறார்.

ரஷ்ய ராணுவத்தால் செய்ய முடியாத சில சட்டவிரோதச் செயல்களை விளாடிமிர் புடின், வாக்னர் ஆயுதக் குழுவின் மூலம் மேற்கொண்டதாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் குற்றம்சாட்டின. இது ரஷ்யாவுக்கு பிரச்னையை ஏற்படுத்தியது. மேலும், உக்ரைனில் டொனெட்ஸ்க் பகுதியில் உப்புச் சுரங்க நகரமான சோலேடரை ரஷ்யா கைப்பற்றியது. ’இந்த நகரை நாங்களே கைப்பற்றினோம். வாக்னர் குழுவின் வெற்றியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் பறிக்க நினைக்கின்றன’ என வாக்னர் யெவ்ஜெனி பிரிகோஸின் குற்றம்சாட்டினார்.

மேலும், ‘பக்முட் நகரைக் கைப்பற்றுவதற்கு வாக்னருக்கு போதுமான வெடிமருந்துகளை வழங்க ரஷ்ய ராணுவம் தவறிவிட்டது, ஒருகட்டத்தில் தங்களையே ரஷ்ய ராணுவம் தாக்கத் தொடங்கியது’ எனத் தெரிவித்த வாக்னர் குழு, ’உக்ரைனில் ஏற்பட்ட தோல்விகளுக்கு ரஷ்யாவின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள்தான் காரணம்’ எனவும் குற்றம்சாட்டியது. ரஷ்ய அரசுக்கும் வாக்னர் குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட இதுதான் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

வாக்னரின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அக்குழுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதின் செயல்பட ஆரம்பித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. வாக்னரின் குழுவினர் ரஷ்ய ராணுவத்தால் தடுத்தும் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் வெகுண்ட அவர்கள் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சிக்குத் தயாராகி கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரம் காட்டியதாகவும், அது தற்போது வெடிக்கத் தொடங்கியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே உக்ரைனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துவிட்ட இந்த கூலிப்படையினர், ரஷ்யாவின் தென்பகுதியில் முக்கிய நகரம் ஒன்றை கைப்பற்றிவிட்டதாகவும், அங்கிருந்து அவர்கள் தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து ரஷ்ய மக்கள், “இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், ஆங்காங்கே குண்டு சத்தம் மட்டும் கேட்கிறது. மக்கள் ஆங்காங்கே ஓடுகின்றனர். எங்களுக்கு மிகவும் பதற்றமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் தொடங்கியிருக்கும் உள்நாட்டுப் போர் குறித்து உக்ரைன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், ”அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம். ரஷ்யாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உக்ரைனில் எத்தனை நாட்கள் தனது படைகளை வைத்துள்ளதோ, அவ்வளவு பெரிய பிரச்னை ரஷ்யாவிற்கு ஏற்படும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, ரஷ்ய ஜனாதிபதி புடின் சிறப்பு விமானத்தில் தலைநகர் மாஸ்கோவைவிட்டு வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. புதின் சிறப்பு விமானம் மூலம் வடமேற்குத் திசையில் புறப்பட்டுச் சென்றதாக அவர்கள் பதிவிட்டுள்ளனர். ஆனால், அந்தச் சிறப்பு விமானத்தில் புதி

இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதற்காக இலங்கையை நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் நிலைநிறுத்துவதில் தாம் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அத்துடன், தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட எதிர்கால செயற்பாடுகளில் இந்தியாவுடன் கூட்டிணைந்த செயற்பாடுகளுக்கு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பரந்துபட்ட அளவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அண்மையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. பிரதானி வில்லியம் பேர்ன் தலைமையிலான தேசிய பாதுகாப்பு குழுவினர் இலங்கைக்கு நேரில் விஜயம் செய்து குறிப்பிட்ட மணித்தியாலங்கள் தங்கியிருந்ததன் பின்னணியில் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபை உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளான சுரேன் சுரேந்திரன் (பிரித்தானியா), கலாநிதி சோமா இளங்கோவன்(அமெரிக்கா), கலாநிதி எலியஸ் ஜெயராஜ்(அமெரிக்கா), கலாநிதி வாணி செல்வராஜ்(கனடா), கலாநிதி காருண்யன் அருளானந்தம்(அமெரிக்கா) உள்ளிட்டவர்கள் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் டொனால்ட் லூ, உலகளாவிய குற்றவியல் நீதிக்கான துணைச் செயலாளர் அம்பெத் வான், தேசிய பாதுகாப்பு சபையின் இலங்கை,  நேபாளம் மற்றும் மாலைதீவு ஆகியவற்றுக்கான பணிப்பாளர், செனட் அலுவலகத்தின் வெளி விவகார குழுவின் சிரேஷ்ட பணிப்பாளர், உட்பட பல முக்கிய அதிகாரிகளுடன் சந்திப்புக்கள் நடைபெற்றிருந்தன.

இந்த சந்திப்பின்போதே அமெரிக்க பிரதிநிதிகள் தரப்பில் மேற்கண்டவாறு உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்விடயம் சம்பந்தமாக அமெரிக்க பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் உள்ள நிலைமைகளை தொடர்ச்சியாக உன்னிப்பாக அமெரிக்கா கவனித்து வருகிறது. இந்நிலையில், இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான ஊக்குவிப்புக்களையும் ஒத்துழைப்புக்களையும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.

இவ்வாறான பின்னணியில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் கால எல்லை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவுக்கு வருகின்ற நிலையில், நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதற்கான சர்வதேசத்தின் கரிசனை தொடர்ச்சியாக இருக்குமா என்பது தொடர்பில் பலத்த கேள்விகள் எழுந்துள்ளன.

அமெரிக்காவை பொறுத்தவரையில், இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதற்கான அர்ப்பணிப்பான பங்களிப்பை அளிக்கின்றது.

அதன் பிரகாரம், இலங்கையின் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதற்காக இலங்கை செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் நிலைநிறுத்தப்படும் என்பதை உறுதியாக கூற முடியும்.

அத்துடன், இலங்கையில் தற்போது அரசியல், பொருளாதார ஸ்திரமற்ற நிலைமை காணப்படுகிறது. இந்த குழப்பான சூழலை ஒரு எதிர்மறையான விடயமாக கருதாமல் அமெரிக்கா அனைத்து இன மக்கள் மத்தியிலும் மேற்கொண்டுள்ள உரையாடல்களின் அடிப்படையில் தற்போதைய சூழலை, நாட்டின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு எவ்வாறு சாதகமாக பயன்படுத்த முடியும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

இந்த விடயத்தில் வெவ்வேறு இனங்களைக் கொண்ட இலங்கையின் பிரஜைகள் முற்போக்காக சிந்திக்க ஆரம்பித்துள்ளமையை அடையாளம் காண்பதற்கு முடிந்துள்ளது.

இதேநேரம், தமிழ் மக்கள் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்துக்கு பிரதான இடத்தினை கொண்டுள்ளார்கள். அந்த விடயத்தில் இந்தியாவின் வகிபாகம் முக்கியமானதாக உள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தேசிய இனப் பிரச்சினையின் மைய விடயமான அதிகாரப்பகிர்வு விடயத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

இருப்பினும், இந்தியா தொடர்ச்சியாக அதிகாரப்பகிர்வு விடயத்தில் அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தினை அமுலாக்குமாறு வலியுறுத்தி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட பிரதான விடயங்களில் இந்தியாவுடன் கூட்டிணைந்த செயற்பாடுகளை பரந்துபட்ட அளவில் முன்னெடுப்பதற்கு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சந்திப்பு தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இம்முறை வழமைக்கு மாறாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் அழைப்பின் பேரில் நாம் பல்வேறு முக்கிய சந்திப்புக்களில் பங்கேற்றிருந்தோம்.

அச்சந்திப்புக்களின்போது, 5 ஆண்டுகளுக்கும் மேலாக காலாவதியான மாகாண சபைத் தேர்தலின் முக்கியத்துவத்தை நாங்கள் தெளிவாக வெளிப்படுத்தினோம்.

உள்நாட்டு யுத்தம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பாதித்தது.

இருதரப்பு மற்றும் சர்வதேச அரங்குகளில் இந்தியா தொடர்ச்சியாக 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்குமாறு வலியுறுத்தி வருகிறது.

2006ஆம் ஆண்டு துணைச் செயலாளராக இருந்த ரிச்சட் பௌச்சரும், 2015இல் இராஜாங்க செயலாளராக இருந்த ஜோன் ஹரியும் மட்டுமே அதிகாரப்பகிர்வு விடயத்தினை பற்றி அழுத்தங்களை பிரயோகித்தனர்.

இந்நிலையில், இந்தியாவைப் போன்று அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

புலம்பெயர் மக்கள், ஏனைய முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து பொருளாதார ஆதரவைப் பெறுவதற்கு தமிழ் தேசிய பிரச்சினைக்கு நிரந்தரமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வினை காண்பது முக்கியமானதாகும்.

அத்துடன், 2024 செப்டெம்பர் மாதத்துக்குப் பின்னரும் இலங்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் நிலைநிறுத்துதல், சர்வதேச சட்ட மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெடித்துச் சிதறியது டைட்டானிக் கப்பலை காண செல்வந்தர்களுடன் சென்ற டைட்டன் !

டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள ஆழமான கடல் பகுதியில் காணாமல் போன ரைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி இருக்கலாம் என அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க கடலோர காவல் படை அதிகாரிகள், நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள ஆழமான கடல் பகுதியில் நீர்மூழ்கி கப்பல் இருந்த போது அழுத்தம் காரணமாக பயங்கரமாக வெடித்து சிதறி அதில் 5 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என அமெரிக்க கடலோர காவல் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

டைட்டானிக்(Titanic) கப்பலை பார்வையிட 5 பேருடன் கடலின் அடிக்கு சென்ற ரைட்டன் submarine இன் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர கடற்படை சற்றுமுன் அறிவித்துள்ளது.

1912ம் ஆண்டு 2224 பேருடன் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய Titanic கப்பலை பார்வையிடுவதற்காக அதிநவீன நீர் மூழ்கிக் கப்பலில் சுற்றுலா பயணிகள் 5 பேர் சென்றனர். ஒருவர் தலா ரூ.2 கோடி கொடுத்து இந்த பயணத்தை மேற்கொண்டனர்.

இந்நிலையில், பயணம் தொடங்கிய ஒரு மணிநேரம் 45 நிமிடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நீர்மூழ்கி கப்பலுக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

 

இதையடுத்து, அந்த கப்பல் எங்கு சென்றது, அதில் உள்ளவர்களின் நிலை என்ன என எந்த விபரங்களும் தெரியவில்லை. இருந்தபோதிலும், 96 மணிநேரம் நீர்மூழ்கி கப்பலுக்குள் ஒக்சிஜன் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அமெரிக்கா, கனடா நாடுகள் இணைந்து நீர் மூழ்கிக் கப்பலை தீவிரமாக தேடி வருகின்றன. இதனிடையே, இந்த நீர்மூழ்கிக் கப்பலில் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டதால் இதன் தொடர்பு அறுந்துபோக வாய்ப்பே இல்லை என அதனை வடிவமைத்த நிறுவனம் கூறியுள்ளது.

 

ஆழ்கடலில் மிகப்பெரிய ராட்சத மீன் ஏதாவது தாக்கி இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் மர்மமான விஷயம் நடந்திருந்தால் மட்டுமே அந்த நீர்மூழ்கி கப்பல் வழிதவறி சென்று மாயமாவதற்கு வாய்ப்புகள் உள்ளன எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறு பல கதைகள் குறிப்பிட பட்ட நிலையில், குறித்த submarineஇன் சிதைவுகள் என சந்தேகிக்கபடும் பாகங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை அறிவிப்பு ஒன்றை சற்றுமுன்னர்வெளியிட்டுள்ளது.

 

 

 

 

மேலும் டைட்டானிக் கப்பல் சுற்றுலா தொடர்பாக காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் குறித்த சர்வதேச தேடல் தற்போது கடுமையான சூழ்நிலையில் நிறைவு பெறுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைதுசெய்வதற்கான பலவந்தமான முயற்சிகள்.” – ஐ.நா.வின் பிரதி மனித உரிமை ஆணையாளர்

இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் நிலவும்வரை உண்மையான நல்லிணக்கமோ நீடித்த சமாதானமோ சாத்தியமில்லை என ஐ.நா.வின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீப் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையிலேயே நேற்று அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் இலங்கை மக்களின் உரிமை மற்றும் நலன்களின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பொருளாதார சீர்திருத்தத்தின் சுமைகள் சமத்துவம் இன்மைகளை மேலும் அதிகரிக்காமலிருப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் மிகவும் நலிந்த மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு வலையமைப்புகள் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்

துரதிஸ்டவசமாக மிகவும் ஆபத்தான சட்டங்கள் எதிரணியினரை கட்டுப்படுத்துவதற்கும் சிவில் சமூகத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கும் பயன்படுத்தப்படுவதை கடந்த மாதங்களில் பார்க்கமுடிந்துள்ளதாகவும் ஐ.நா.வின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீப் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அனேகமான தருணங்களில் கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைதுசெய்வதற்கான பலவந்தமான முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டிய அவர், பொலிஸாரின் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இராணுவத்தினர் பயன்படுத்தப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தன்கட்சியை சேர்ந்த குடுமி ஜெயாவின் ஊழல்களை கேள்வி கேட்க முடியாத உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண ஆளுநர் நியமனத்துக்கு எதிராக போர்க்கொடி !

அண்மையில் வடக்கு மாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள  பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் உள்ளூராட்சி சபை தேர்தல் அண்மித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி  ரணிலை கைப்பொம்பையாக பாவித்து தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து பதவி விலகி, வட மாகாண ஆளுநர் பதவியை அரசியல் இலஞ்சமாக பெற்றுக்கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் முன்வைத்துள்ளார்.

இலஞ்சமாக வழங்கப்பட்டதா வட மாகாண ஆளுநர் பதவி | Bribery Charges Against Northern Governor

தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். குறித்த செவ்வியில் மேலும் பேசிய அவர்,

“ தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து பதவி விலகியமைக்காக கொடுக்கப்பட்ட இலஞ்சத்தை பதவியாக பெற்றுக்கொண்டவரே தற்போதைய வடக்கு ஆளுநர். அவர் நிச்சயம் பெற்றிருக்கக் கூடாது, வடக்கு மாகாண ஆளுநர் பதவியை பெறுவதற்காகவே தேர்தல் ஆணைக்குழுவில் இருந்த பதவியை இழந்தது உண்மை.

ஒரு பதவியை பெறுவதற்காக இன்னுமொரு பதவியை இழந்து இருப்பது மக்கள் நலன் சார்ந்த விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், ஆளுநர் பதவியை விட ஜனநாயக முறைமையோடு சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் பதவியென்பது முக்கியமான ஒன்று.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் எனும் முக்கியமான பதவியை துறந்து, இந்த ஆளுநர் பதவியை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட அம்மையாரை நான் கவலையோடு பார்க்கிறேன்.” என அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக உடனடியாக குரல் கொடுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் தன்னுடைய கட்சிக்காரர் செய்த ஊழல்களுக்கு மட்டும் துணைபோகின்ற ஒரு அவலமான நிலையும் – அதனை கண்டிக்காத நிலையம்  காணப்படுகின்றது.

இலங்கையில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புள்ள சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயந்திரன் ஒரு பெரும் ஆள்மாறாட்டம் செய்துள்ளதுடன் இளம்பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்யும் மோசடியாளார் என்பதும் பிரான்ஸில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்துள்ளார் என்பதும் தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரியவந்திருந்தது.  ஒரு தேசியக் கட்சி, தேசிய சிறுபான்மை இனத்தின் பிரதான அமைப்பாளரை நியமிக்கின்ற போது, அந்நபர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் ஆய்வுகளும் இல்லாமல் அச்சமூகத்தில் உள்ள ஒரு அயோக்கியரை கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ் மாவட்டத்தின் அமைப்பாளராக நியமித்திருப்பது யாழ் மாவட்டத் தமிழர்களை அவமானப்படுத்துகின்ற செயல் என யாழ் கல்வியியலாளர்கள் தெரிவிந்திருந்த நிலையில் இந்தப் பிரச்சனை தொடர்பிலும் – பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை தொடர்பிலும் தேசம் நெட் அதிக கவனம் செலுத்தி இருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளராக உள்ள ஜெயசந்திரன் எனும் குடுமி ஜெயா தொடர்ச்சியாக பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டவர் என்பதுடன் – சாதிய மனோநிலையில் இருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பாக அச்சமுதாயத்தின் பெண்களை தன்னுடைய இச்சைகளுக்காக பயன்படுத்துகின்ற ஒரு அராஜகப் போக்கில் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார். பொதுவெளியில் கூட பெண்களை மிக இழிவாக தரக்குறைவாக கதைக்கக்கூடிய மனோநிலையில் உள்ள குறித்த ஜெயச்சந்திரன் என்பவரை ஆதரிக்கின்ற –  அவருடைய சக பாடிகளுள் ஒருவரே ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான  உமாசந்திரா பிரகாஷ் ஆவார்.

“ஆம், தமிழ் ஒரு பொது உடமை, உலகத்தில் முதல் முதலாக தோன்றிய மொழி தமிழ்” என்ற வாக்கியத்தோடு முகநூலில் வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளரான உமாசந்திரா பிரகாஷ் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளராகவும் உள்ளார். ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டு வந்ததில் இவருக்குள்ள பங்கை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் தான் ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டுவரவில்லை என்றும் ஆனால் ஜெயந்திரனுடைய உறவுகள் பற்றித் தனக்குத் தெரியும் என்றும் அவருடைய சினேகிதிக்குத் தெரிவித்துள்ளார். ஜெயந்திரனுடைய தனிப்பட்ட வாழ்க்கை வேறு அரசியல் வேறு அதனால் தான் அவருடன் சேர்ந்து அரசியலில் பயணிக்க தான் முன்வந்தாக இவர் தன்னுடைய சினேகிதிக்கு விளக்கமளித்துள்ளார். தன்னை பெண்ணியவாதியாகவும் காட்டிக்கொள்ளும் உமாசந்திர பிரகாஷ் ஜெயந்திரனின் தாய்வழி உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

உமாசந்திர பிரகாஷ் தற்போது பாதிக்கப்பட்டுள்ள மூன்று பெண்களின்: ஜெயந்திரனின் கொடுமை தாங்காமல் விவாகரத்துக்குக் கோரி நிற்கும் இரு பிள்ளைகளின் தாய், திருமணமாகாமலேயே குழந்தையுடன் தற்போது ஜெயந்திரனின் கீழ் அடி உதை வாங்கி வாழும் ஒரு பெண் குழந்தையின் தாய், குழந்தை முகம் கலையாத தற்போது வசீகரிக்கப்பட்ட பெண் – என அனைவரின் அவலத்தையும் நன்கு அறிந்தவர். ஆனாலும் ஜெயந்திரனின் பணத்துக்காக லக்ஸ் ஹொட்டலுக்காக இவற்றை சகித்துக்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அலுவலகம் லக்ஸ் ஹொட்டலிலியே இயங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் நேற்றையதினம் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் உமாசந்திர பிரகாஷ் மேற்கண்டவாறு ஆளநர் நியமனம் பற்றி விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பிரித்தானியாவின் வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தில் இலங்கையும் உள்ளடக்கம் !

பிரித்தானியா இன்று நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ள வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பிரித்தானியா நடைமுறைப்படுத்தியுள்ள வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தில் 65 நாடுகள் உள்ளடங்குவதாக ஸ்ரீலங்காவிலுள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் நாடுகளுக்கு கட்டணக் குறைப்பு மற்றும் எளிமையான வர்த்தக விதிமுறைகள் போன்ற சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தக ஏற்றுமதி சந்தையாக பிரித்தானியா இருப்பதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்த உறவை மேலும் வலுப்படுத்த பிரித்தானியா ஆர்வம் காட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கட்டணக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள பொருட்களை இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்வார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக பிரித்தானியா அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் சாரா ஹல்டன் மேலும் கூறியுள்ளார்.