17

17

தனிச்சிங்கள சட்டத்தால் நாடு பெரும்பாதிப்பை எதிர்கொண்டது – ஏற்றுக்கொள்கிறார் பண்டாரநாயக்கவின் மகள் சுனேத்திரா !

தனது தந்தை கொண்டுவந்த தனிச்சிங்கள சட்டத்தினால் நாடு பெரும்பாதிப்பை எதிர்கொண்டது என்பதை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் பிரதமர்  எஸ்.டபியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் மகள் சுனேத்திரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் கருத்துப்பரிமாறல் நிகழ்வில் கலந்துகொண்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உங்களது தந்தை தனிச்சிங்கள சட்டத்தை கொண்டுவந்திருக்காவிட்டால் நாடு தற்போது மிகவும் முன்னேற்றகரமான நிலையில் இருந்திருக்கும். இதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?  என நேயர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சுனேத்திரா பண்டாரநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஆம், நான் இதற்கு பதிலளிக்க விரும்புகின்றேன். அவர் எனது தந்தை, ஆனால் இந்த நேயர் அல்லது நபர் ஒருவர் தெரிவித்ததை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன் என எஸ்டபில்யூஆர்டி பண்டாரநாயக்கவின் மூத்த புதல்வியான சுனேத்திரா தெரிவித்துள்ளார்.

நான் இதனை எப்போதும் தெரிவித்திருக்கின்றேன். உண்மையை சொல்லியாகவேண்டும்.

ஆம், ஏன் அவர் தனிச்சிங்கள சட்டத்தை  கொண்டுவந்தார்? அரசியல் சந்தர்ப்பவாதம் அரசியல் ரீதியில் பிரபலமாவது –  உண்மையில் எனக்கு தெரியாது.

ஆனால் இந்த நபர் தெரிவிப்பது உண்மை. அது எனக்கு ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது என சுனேத்திரா தெரிவித்துள்ளார்.

இதற்கு சமூக ஊடகங்களில் பராட்டுக்கள் வெளியாகியுள்ளன.

2023இல் அதிகரித்த சைபர் குற்றங்கள் – 75 பேர் கைது !

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் சைபர் குற்றங்கள் தொடர்பான 1,187 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

அதன்படி, இதுபோன்ற புகார்கள் தொடர்பாக 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவற்றில் 108 புகார்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஒன்லைன் ஊடகங்கள் மூலம் செய்யப்பட்ட நிதிக் குற்றங்கள் தொடர்பானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, சலுகைகள் மற்றும் விளம்பரப் பொருட்கள் தொடர்பான சமூக ஊடகங்கள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகளை கவனத்தில் கொள்ளுமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் தெரியாத நபர்களுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறும் பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், கொவிட்-19 நெருக்கடி காலத்தில் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் அதிகரித்தன. 2021 ஆம் ஆண்டில், பொலிஸார் 2021 ஆம் ஆண்டில் 4,688 புகார்களைப் பெற்றுள்ளது, கடந்தாண்டு 3,168 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடுமையான பொருளாதார நெருக்கடி  – வங்கிகளை கொள்ளையடிக்கும் மக்கள் !

லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடி  நிலவிவருகின்றது.

குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து லெபனான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு  முகம் கொடுத்து வருகின்றது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கமும், மத்திய வங்கியும் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

இதனால் பொதுமக்களின் வங்கி சேமிப்புகளை எடுக்க முடியாத சூழல் அங்கு நிலவுகின்றது. இந்நிலையில்  வங்கிகளின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது  ”பலரின் வாழ்வாதார சேமிப்புகள் அழிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டும் போராட்டக்காரர்கள், தங்கள் பணத்தை திரும்ப கேட்டும், இந்த நெருக்கடிக்கு மத்திய வங்கி ஆளுநர் ரியாத் சலாமே உட்பட ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் பொறுப்பெற்க வேண்டும் ”என  வலியுறுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில்  அங்குள்ள வங்கிக் கட்டிடங்கள் பலவற்றையும் போராட்டக்காரர்கள் சூறையாடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளை மீள உருவாக்க போதைப்பொருள் கடத்தியதாக பத்து இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு !

விடுதலைப்புலிகளை மீள உருவாக்குவதற்காக ஆயுதங்கள் – போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பத்து இலங்கையர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு குற்றச்சாட்டுகளை பதிவுசெய்துள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவில் விடுதலைப்புலிகளிற்கு புத்துயுர் அளிப்பதற்காக ஆயுதங்களை சேகரித்தல், பதுக்கிவைத்தல் போன்றவற்றிற்காக இவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என இந்தியாவின் என்.ஐ.ஏ குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இலங்கையை சேர்ந்த குணா என அழைக்கப்படும் குணசேகரன் பூக்குட்டி கண்ணா என அழைக்கப்படும் புஸ்பராஜாவும் பாகிஸ்தானை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் ஹாஜிசலீம் என்பவருடன் இணைந்துசெயற்பட்டனர் எனவும் இந்திய புலனாய்வு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

அவர்கள் கடந்தவருடம் திருச்சி விசேட முகாமில் கைதுசெய்யப்பட்டனர் குற்றச்செயல்கள் மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் எனவும் இந்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத்தோடு பெருமளவு பணமும் தங்கப்பாளங்களும் கைப்பற்றப்பட்டன என இந்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலமே பணமும் தங்கமும் கிடைத்துள்ளது, இந்த பணத்தை இவர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பரிமாறியுள்ளனர் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

“காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் அச்சமடைய தேவையில்லை.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கோப்பாய் பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக அரசுடமையாக்கும் நோக்கில் வர்த்தமானி வெளியிடப்பட்ட சுமார் 6 ஆயிரத்து 300 ஏக்கர் நிலப்பரப்பில் கணிசமானவை தற்போது விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறித்த காணிகள் சட்ட ரீதியாக அரச காணிகளாகவே இப்போதும் காணப்படுகின்றமையினால், 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்ட வர்த்தமானியை மீளப் பெறுகின்ற வகையில் புதிய வர்த்தமானி வெளியிட வேண்டியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் 2013 வர்த்தமானியை மீளப்பெறுவதற்கும், தற்போதும் விடுவிக்கப்படாமல் இருக்கின்ற காணிகளில் முடிந்தளவு காணிகளை விடுவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே காணி அளவீடுகள் மேற்கொள்ளப்படும் போது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வைத்தியர்கள் இல்லை – மூடப்படும் அபாயத்தில் முல்லைத்தீவு வைத்தியசாலை !

விசேட வைத்தியர்கள் உட்பட பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால் முல்லைத்தீவு வைத்தியசாலையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வருடம் வைத்தியர்களாக நியமிக்கப்பட்ட 1,300 பேரில் 100 பேர் சுகாதாரத் துறையில் வேலை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நியமனம் செய்யப்பட்ட சுமார் 50 வைத்தியர்கள் நியமனக் கடிதங்களை பெற்றுக் கொள்ள வரவில்லை எனவும் சுமார் ஐம்பது பேர் நியமனக் கடிதங்களை ஏற்றும் பணிக்கு சமூகமளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதே நிலை நீடித்தால், எதிர்காலத்தில் சுகாதாரத் துறை கடுமையான நெருக்கடிக்கு ஆளாவதை தவிர்க்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மருத்துவ சேவையில் இணைந்துகொள்ளும் வைத்தியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் 54,000 ரூபா எனவும் அதற்கமைய அவரின் நாளாந்த சம்பளம் 2000 ரூபாவை அண்மித்துள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார். இந்த நிலையில் ஒரு வைத்தியருக்கு வீடு கட்டி திருமணம் செய்வது கனவாக உள்ளதனால் இன்று பல வைத்தியர்கள் மருத்துவ துறையில் நிலைத்து நிற்கும் நம்பிக்கை இல்லை எனவும் வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்தார்.

விசேட வைத்தியர்கள் உட்பட பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால் ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், கந்தளாய், தெஹியத்தகண்டிய போன்ற வைத்தியசாலைகளின் திணைக்களங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு வைத்தியசாலையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

மதிப்பைக் கணக்கிட்டு, மருத்துவர்களின் சம்பளம் வழங்கப்பட வேண்டும், சுகாதாரத் துறையைப் பாதுகாக்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். கட்டுப்பாடற்ற வரிக் கொள்கை மற்றும் பொருளாதார அழுத்தம் காரணமாக வைத்தியர்கள் மற்றும் ஏனைய அரச மற்றும் தனியார் துறை அறிஞர்கள் வீடுகளை விற்று வெளிநாடு செல்லும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவனை தாக்கிய பாடசாலை அதிபர் கைது !

தரம் 4இல் கல்வி கற்கும் மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 15ஆம் திகதி மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவனிடம் ஏ4 தாளை கொண்டு வருமாறு கூறப்பட்டுள்ளது. எனினும் அதனை கொண்டு வராததால் அதிபா் மாணவனின் முதுகில் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்ற மாணவன் திடீரென வாந்தி எடுத்ததையடுத்து பெற்றோர் மாணவனிடம் வினவியுள்ளனா். இதன்போது அதிபா் தாக்கியமை தொடா்பில் பெற்றோரிடம் மாணவன் கூறியுள்ளான்.

பின்னா் மாணவன் அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இதனையடுத்து பெற்றோர் சம்பவம் தொடா்பில் பங்கம பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த அதிபர் நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (17) மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

“65 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டுமளவிற்கு தனியார் கல்வி நடவடிக்கைகள் வியாபாரமாகியுள்ளது.” – உயர் கல்வி அமைச்சு

உயர் தரத்திற்கான தனியார் வகுப்புகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் அமைப்புடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

65 மில்லியன் ரூபா வருமானம் பெறும் அளவிற்கு தனியார் கல்வி நடவடிக்கைகள் வியாபாரமாகியுள்ளது. எவ்வாறாயினும், தனியார் வகுப்புகளை ஒழுங்குபடுத்தும் முறையொன்று காணப்படவில்லை. தனியார் வகுப்புகளை நடத்துபவர்களின் கல்வித் தகைமை, அவர்களுக்கு உள்ள உளத்தகைமை, கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தொடர்பான விபரங்கள், துறைசார் அறிவு என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

4000-இற்கும் அதிகமான தனியார் வகுப்புகளை நடத்துபவர்கள் இலங்கையில் உள்ளதாகவும், அவர்களுக்கான அமைப்புகள் காணப்படுவதாகவும் அவர்களுடன் கலந்துரையாடி தனியார் வகுப்புகளை ஒழுங்குபடுத்தும் முறையொன்றை உருவாக்குவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தனியார் வகுப்புகள் நடத்தப்படும் இடங்களின் வசதிகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு, சுகாதார வசதிகள், தளபாட வசதிகள் உள்ளிட்டவை தொடர்பிலும் கண்காணிக்கப்படவுள்ளது.

‘இன்று  நாம் 21 வது நூற்றாண்டில் இருக்கின்றோம். ஆனால் எம்மிடம் 20 ஆம் நூற்றாண்டின் கல்வி முறைமையே உள்ளது..” – ஜனாதிபதி ரணில்

அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா, ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

அலரி மாளிகையில்  நேற்று வியாழக்கிழமை (16)  இடம்பெற்ற 2018- 2022 கல்வியாண்டு தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்வியற் கல்லூரிகளை உருவாக்கும் திட்டத்தின் ஸ்தாபகரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  தேசிய பாடசாலைகளுக்கான 1729 நியமனங்களும் மேல் மாகாணத்திற்கான 626 நியமனங்களும் வழங்கப்பட்டன. அதனையடுத்து ஏனைய 8 மாகாணங்களுக்குமான நியமனங்களும் வழங்கப்பட்டதோடு  மொத்தமாக இன்றைய தினத்தில்  7342 டிப்ளோமாதாரிகளுக்கு  நியமனங்கள் வழங்கப்பட்டன.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிற்குள்  2050 ஆம் ஆண்டிற்கு பொருத்தமான கல்வி முறையை உருவாக்குவதற்கான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.

இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதற்கான முதன்மைக் காரணி மனித வளம் என வலியுறுத்திய ஜனாதிபதி மனித வளத்தை தயார்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களை சார்ந்துள்ளது என்றார்.

தற்போது நாட்டிற்குள் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்திலும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்டாமல் இருக்க வேண்டும் எனில் ஏற்றுமதி  பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும்  அதற்கு ஏற்றவாறு கல்வி முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இங்கு  மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“நியமனங்களை பெற்றுக்கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.  கொவிட்  பரவல் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 வருடங்கள் மேலதிகமாக கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருந்திருந்தீர்கள். உங்களுக்கு கற்பித்த பீடாதிபதிகளுக்கும் விரிவுரையாளர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.

1985 களில் நான் கல்வி அமைச்சராக இருந்தபோதே கல்வியற் கல்லூரிகள்  ஆரம்பிக்கப்பட்டன.  தற்போது கல்வியற் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டு 38 வருடங்களாகின்றன. இந்த 38 வருடங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அன்று கையடக்கத் தொலைபேசிகள் இருக்கவில்லை. சிறிதளவு கனிணிகள் மாத்திரமே இருந்தன. அவை அனைத்தும் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் மாத்திரமே தயாரிக்கப்பட்டன. இன்று அந்த நிறுவனங்கள் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளன. அந்த உற்பத்திகள் சீனா அல்லது இந்தியாவிலேயே இடம்பெறுகின்றன. அந்த இரு நாடுகளிலுமே கனிணி உற்பத்தி துறைசார் நிபுணத்துவம் காணப்படுகின்றன. அவற்றில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதோடு அறிவியலும் இணைந்துள்ளது.

இன்று  நாம் 21 வது நூற்றாண்டில் இருக்கின்றோம். ஆனால் எம்மிடம் 20 ஆம் நூற்றாண்டின் கல்வி முறைமையே உள்ளது. அதனால் 21 ஆவது நூற்றாண்டிற்கு அவசியமான கல்வி முறைமையை கட்டமைப்பதற்காக அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படும்.

இது பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த நாம் மீண்டெழும் நேரமாகும்.  இந்நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருந்தாலும் பொருளாதார நெருக்கடி ஏற்படாதவாறு செயற்பட்டால் மாத்திரமே வர்த்தக நடவடிக்கைகளை  மேம்படுத்த முடியும்.  அதேபோல் ஏற்றுமதியால் வருமானம் ஈட்ட வேண்டும். நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றினையும் உருவாக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் அதேநேரம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுவூட்டக்கூடிய வகையிலான கல்வி முறையொன்றினையும் தயாரிக்க வேண்டியது அவசியமாகும்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக நாம் கொண்டுள்ள முதன்மை வளமாக மனித வளமே காணப்படுகின்றது. அந்த வளத்தை ஆசிரியர்களே பலப்படுத்துகின்றனர்.  அதனால் ஆசிரிய வளத்தையும் நாம் மேம்படுத்த வேண்டும்.

கல்விக்கான தனியானதொரு அமைச்சர்கள் குழுவை நாம் நியமித்துள்ளோம். கல்வித் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரங்களை அவர்களுக்கு வழங்குவோம்.  தற்போது அது தொடர்பிலான அறிக்கையொன்றை தேசிய கல்விக்குழு எம்மிடத்தில் கையளித்துள்ளது.  அதற்கு மேலதிகமாக பிரமரின் செயலாளர் தலைமையில் கல்வி நவீனமயபடுத்தல் தொடர்பிலான குழுவொன்று ஒவ்வொரு துறைசார்  குழுக்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து அறிக்கைகளும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்பாக எனக்கு கிடைக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளேன். அதனூடாக  21ஆம் நூற்றாண்டிற்கு பொருத்தமானதும்  2050ஆம் ஆண்டுக்கு பொருத்தமானதுமான கல்விக் கொள்கையொன்றை உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

தரம் 8 இல் பரீட்சையில் சித்தி பெற்றமை மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெறவில்லை என்ற காரணங்களுக்காக மாணவர்களின் கல்வியை இடைநிறுத்த அனுமதிக்க கூடாது. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட பாடசாலை கல்வியை கட்டாயமாக வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்துள்ளது. அரசாங்கம் என்ற வகையில் அதனை நாம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளோம். அதேபோல் அதற்கு பொருத்தமான வகையில் பாடசாலை கல்வியையும் கட்டமைக்க வேண்டும்.

அதேபோல் சங்கீதம்,கலைகள் மீது ஆர்வம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களது தெரிவுகளையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.  குறிப்பாக ஸ்கெண்டினேவிய நாடுகளில் அவ்வாறான வாய்ப்புக்கள் உள்ளன.  அதுபோன்ற வேலைத்திட்டங்களுக்கு நாமும் செல்ல வேண்டும்.  உயர்தர பாடங்கள் மாத்திரமின்றி  வாழ்க்கைக்கு அவசியமான கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதனூடாக கிட்டும்.

13 வருட கல்வியை வழங்குகின்ற போது சாதாரண தர பரீட்சை அவசியமா என்ற கேள்வி எழுகின்றது.  சாதாரண தர பரீட்சை அவசியமில்லை என்பதே பலரதும் நிலைப்பாடாக உள்ளது. உலகின் அபிவிருத்தி அடைந்த நாடாக விளங்கும் அமெரிக்காவே அதற்கு உதாரணமாகும். அங்கு சாதாரண தர பரீட்சையும் இல்லை உயர்தர பரீட்சையும் இல்லை.  நம்மால் அதனை செய்ய முடியும் என நான் நம்பவில்லை. இருப்பினும் சாதாரண தர பரீட்சை தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியது அவசியமாகும்.  அதனை மாற்று முறையில் நடத்துவதா அல்லது சித்தி பெறல், சித்தி பெறாமையை அடிப்படையாக கொண்டு நடத்துவதா என தீர்மானிக்க வேண்டும்.

13 வருட கல்வியை பெற்றுக்கொடுக்கின்ற போது அதற்கு உகந்த வகையில் பரீட்சைகளை நடத்த வேண்டிய பொறுப்பு எம்மை சார்ந்துள்ளது. தற்போது பரீட்சை தினங்கள் மாறுகின்றன ஜனவரி முதல் டிசம்பர் வரையில் ஒவ்வொரு திகதியில் உயர்தர பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. அதேபோல் டிசம்பர் மாதத்தில் பரீட்சை இடம்பெறுவதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்துக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.  அதன்படி பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்த வேண்டிய பொறுப்பு பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஏற்படும்.

பல்கலைக்கழக பட்டத்தை பெற்றுக்கொள்ளும் போது எனக்கு 21 வயது.  குறைந்தபட்சம் 23 வயதிலாவது பல்கலைக்கழங்களிலிருந்து வெளியேற வேண்டியது அவசியமாகும். அதேபோல் இன்று பல புதிய பாடத்திட்டங்கள் உள்ளன.  ஆங்கில கல்வி மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது.  ஆங்கில மொழி தெரியவில்லை என்ற நிலைமை எவருக்கும் ஏற்படக்கூடாது.

19 – 20 ஆம் நூற்றாண்டுகளில்  சிங்கள எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கினர்.  வண. ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்ல நாயக்க தேரர், ஈ.ஆர்.சரத்சந்திர,மார்ட்டின் விக்ரமசிங்க ஆகியோர் அனைவரும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்கள் ஆவர்.

அதனால் அனைவருக்கும் ஆங்கில கல்வியை வழங்கும் வேலைத்திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். அதற்காக முதலில் ஆங்கில ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். அடுத்த 05 வருடங்களுக்குள் அந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அதன் பின்னர் ஆங்கில மொழியை தேசிய மொழியாக நடைமுறைப்படுத்த முடியும். ஆங்கிலம் அரசகரும மொழியாக இல்லாவிட்டாலும் பல்வேறு ஆவணங்கள் இன்னும் ஆங்கில மொழியிலேயே பேணப்படுகின்றன. நாம் ஒரு இடத்தில் முடங்கிக் கிடக்காது சீன மொழி,ஜப்பானிய மொழி, ஹிந்தி, அரபு போன்ற மொழிகளையும் கற்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.

அதேபோல் எமது பல்கலைக்கழக கட்டமைப்பினையும் நவீனமயப்படுத்த வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடரும் காலத்தை 3 வருடங்களா அல்லது 4 வருடகங்களா என்பதை தீர்மானிக்க வேண்டும். அதேபோல் அரச பல்கலைக்கழகங்களை நவீனமயப்படுத்த வேண்டும்.

தற்போது, ஆண்டுக்கு சுமார் 40,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.  மேலும் ஒரு குழுவினர் வெளிநாடு செல்கிறனர். இன்னும் சிலர் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ளனர். எனவே, அரச பல்கலைக்கழகங்கள், தேசிய பல்கலைக்கழகங்களைப் போன்று அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் நாம் வாய்ப்புகளை வழங்குகிறோம்.

அவ்வாறு, அரச சார்பற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் நிறுவப்படவேண்டுமாயின், அந்த நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலகு வட்டி அல்லது வட்டியில்லா கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் தான் ஒரு மாணவர் கற்க வேண்டிய பாடத்தை அரசாங்கம் தீர்மானிக்கிறது. ஏனைய எல்லா நாடுகளிலும் உள்ள மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடத்தைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு. அந்த முறையை நாம் உருவாக்க வேண்டும்.

இன்னும் 15-20 வருடங்களில் வகுப்பறை எவ்வாறு இருக்கும் என்று யாராலும் கூற முடியாது. தற்போது இருக்கும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்துடன் நாம் எவ்வாறு முன்னேற முடியும் என்று பார்க்க வேண்டும். Chat GPT காரணமாக  எதிர்காலத்தில், கற்பித்தல் முறைகளும் முற்றிலும் வேறுபடும். நாம் பெரும் மாற்றத்தின் சகாப்தத்தில் இருக்கிறோம். எனவே அந்த தொழில்நுட்பத்துடன் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.