வாசுதேவன் எஸ்

வாசுதேவன் எஸ்

எல்லா இசைப்பிரியாக்கள் பற்றிய உண்மையும் வெளிவரவேண்டும்! தண்டிப்பதற்காக அல்ல! உண்மையை அறிந்து அமைதிகொள்ள! : வாசுதேவன்

Isaipiriya_LTTE_Jounalistஅந்த அழகிய கண்கள் இன்னமும் என் மனதை உறுத்துகிறது! உன் மரணம் என்னை உறைய வைத்துவிட்டது! முன்பொருமுறை உன்னை நிதர்சனம் தொலக்காட்சியில் உன் அழகைப்பார்த்து பார்த்து என் நண்பனுக்கு மணிக்குட்டி என என் ஆண்மைக்கே உரிய வக்கிர புத்தியுடன் கூறியது இன்னமும் நினைவிருக்கிறது! ஆனால் நீ இன்று இல்லை! நீ ஏன் கொல்லப்பட்டாயோ தெரியவில்லை. ஆனால் நீ கொல்லப்பட்டு ஒன்றரை ஆண்டுகளை கடந்த நிலையில் உன் சடலத்தின் புகைப்படங்களை பார்க்கிறோம்! உன் சடலத்தை இணையங்களில் புலிவியாபாரிகள் ஏலம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்! உற்றுப் பார்க்கிறேன். ஆம் நீ சுடப்பட்டுதான் இறந்திருக்கிறாய்! ஆனால்.. ஆனால்… அப்போது என் மனம் சஞ்சலப்படுகிறது நீ எப்படி கொல்லப்பட்டாய் என்பது புலனாகிறது.

ஆனால் 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30திகதி புலிகளால் கைது செய்யப்பட்ட செல்வி எப்படி கொல்லப்பட்டிருப்பாள் என்ற கேள்வி என்னை இப்போ உறுத்தத் தொடங்கிறது! அகில உலக பென் விருது பெற்ற ஒரு பெண் கவி! இவளைக் கடத்திய புலிகள் இவளை சுட்டுக் கொன்றிருப்பாரகளா? அடித்துக் கொன்றிருப்பாரகளா? அல்லது உயிருடன் தான் புதைத்திருப்பார்களா? 1991இல் மோபைல் கமரா கிடையாததால் தான் அவளின் படங்களும் இணையத்தில் உலா வரவில்லையோ என்னவோ! யாரும் அதைப்பற்றி கதைப்பதும் கிடையாது! இன்று மனித உரிமைகள் பற்றி கூவுபவர்கள் தயவு செய்து சொல்லுங்கள் செல்வியை எப்படிக் கொன்றீர்கள்? ரவைகள் வீணாகிவிடும் என்று உயிருடன் தான் புதைத்திருந்தாலும் பரவாயில்லை! தயவு செய்து கூறுங்கள்! அவளின் சொந்தங்கள் உங்களை இன்னமும் மன்னிக்க தயாராவே உள்ளார்கள்!

நேற்று முன்தினம் மீளவும் இசைப்பிரியா வருகிறாள். இந்த முறை சனல் 4 தொலைக்காட்சியில் வருகிறாள். அவளின் தோழி, கொல்லப்பட்டது இசைப்பிரியா தான் என உறுதியளித்து விட்டு அவள் ஒரு போராளி அல்ல, ஒரு ஊடகவியலாளினி மற்றும் அவள் ஒரு சிறந்த கலைஞி என்று கூறுகிறாள். எனக்கு கோபம் மீளவும் வருகிறது! ஆயுதம் தரிக்காது ஒரு பெண்! என்னைப் போன்ற ஒரு கலைஞி அவளை எப்படி இப்படிக் குரூரமாக கொலை செய்யலாம்? ஆனால் மீளவும் என்மனம் எங்கோ போகிறது! இன்று தொலைக்காட்சியில் பார்த்த அந்தக் குரூரத்தை நேரில் பார்த்த அந்தக் கணங்களை நோக்கி என் மனம் மீளவும் போய்விடுகிறது! செப்டெம்பர் 21, 1989 அன்று மதியம் திருநெல்வேலியில் நண்பன் வீட்டில் இருந்து மானிப்பாய் செல்ல சைக்கிளில் போகையில் பட், பட் என்று துப்பாக்கி சத்தம். சனங்கள் அல்லோல கல்லோலப்பட்டு ஓடுகிறார்கள்! ஒரு பெட்டையை யாரோ மண்டையில் போட்டு விட்டார்கள்! நான் சைக்கிளில் அந்த இடத்தை கடந்து தான் போக வேண்டும்! ஒன்றரை ஆண்டுகள் யாழ் வைத்தியசாலையில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் அவதியுற்றதாலோ என்னவோ இரத்தம் என்றால் எனக்கு மயக்கம் வரும். இருந்தாலும் விரைவாக நான் அந்த இரத்தம் சொட்டும் உடலைக் கடந்து தான் போக வேண்டும்!

ஆமி வரமுன் போக வேண்டும். இதயம் வேகமாக துடிக்க எழுந்து நின்று சைக்கிளை மிதிக்கிறேன். சடலத்தை கடக்கும் போது திரும்பி பார்க்கிறேன்! இரத்த வெள்ளத்தில் ஒரு பெண்! அந்த சிவப்பு ரத்தம் என் தலையை கிறுகிறுக்க வைக்கிறது, மயக்கம் வருவது போல் உள்ளது, இருந்தும் வேகமாக சைக்கிளை மிதிக்கிறேன், சிறிது தூரம் போனதும் திரும்பி பார்க்கிறேன், எதுவும் தெரியவில்லை. ஆனால் அந்த பெண்ணில் இருந்த வடிந்த குருதிச் சிவப்பு மட்டும் மின்னல்போல் கண்களுக்கள் பளிச்சிடுகிறது. அவள் இறந்து விட்டாளா? இல்லையா கேள்விகள் வர கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் விடுப்பறிய சைக்கிளை நிறுத்தினேன்! ஆரோ காட்டிக் கொடுக்கிறவளாம் என்றார் ஒருவர்! இல்லை அவள் புலி என்றார் இன்னொருவர்! பின்னர்தான் தெரிந்து கொண்டேன் அது ஒரு பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் ராஜனி திரணகம என்று! அவளும் ஒரு எழுத்தாளி! கலைஞி எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் காக்கும் ஒரு மருத்துவ கலாமணி! தெருவேராத்தில் ஒரு தெரு நாயை கூட இப்படி சுட்டுக் கொன்றிருக்க மாட்டார்கள்! அவளை யார் கொன்றார்கள் என்ற விவாதமே இன்னும் தொடர்கிறது! தயவு செய்து யாராவது கூறுங்கள்! யார் கொன்றீர்கள் ஏன் கொன்றீர்கள்? விசாரணை தான் வேண்டாம்! ஒரு உண்மையை கூறும் கவுன்சிலாவது அமைத்து நடந்த உண்மைகளை கூறுங்கள்!

1984 என்று நினைக்கிறேன்! யாழ் நவாலி கல்லுண்டாய் வெளிக்கு அருகில் ஒரு புதை குழியிலிருந்த இரு சடலங்கள் அந்த பகுதி மக்களால் தோண்டி எடுக்கப்படுகிறது! ஒரு ஆண். ஒரு பெண்! அந்த பெண்ணும் கிட்டத்தட்ட இசைப்பிரியா போன்றே தோற்றம் கொண்டவள்! ஓழுங்காக புதைக்காமையல் துர்நாற்றம் வீச சந்தேகத்தில் மக்கள் தோண்டியபோது கண்டுபிடிக்கப்பட்ட அந்த சடலங்கள் அடையாளம் காணாமலே புதைக்கப்பட்டன. அந்த காலப் பகுதியில் இராணுவம் நிலை கொண்டிருக்கவில்லை. இயக்கங்களே அந்த பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இவைபோல் இன்னும் எத்தனை புதைகுழிகளில் எத்தனை இசைப்பிரியாக்கள் உறங்குகிறார்களோ தெரியாது! இந்த உண்மைகளை கூற யாராவது முன்வருவார்களா?

விடுதலைப் புலிகளின் புலேந்திரன் அம்மான் திருமலையில் இருந்த போது சிங்கள் குடியேற்றங்கள் அடிக்கடி தாக்கப்படும்! அங்கு பெண்கள் குழந்தைகள் என்று பாராது பல்வேறு கொலைகள் அன்று நடைபெற்றது! அந்த கொலைகளை நடாத்திய ஒரு நபர் யாழ் வந்திருந்தபோது தங்கள் வீர பிரதாபங்களை கதைகதையாக சொல்வார்கள். அதில் கேட்கவே மனம் பதைபதைக்கும் ஒரு விடயம். பெண்களை கொல்கையில் அவர்கள் கால்களுக்கிடையில் வாளை எப்படி சொருகினார்கள் என்று நேர்முக வர்ணனை செய்வது! அழகான அந்த பெண்களின் அழகினை அவர்கள் அன்று வர்ணித்தபோது அவர்களும் இந்த இசைப்பிரியா போல் அழகாக இருந்திருப்பார்கள் என்ற கற்பனையே என்முன் இன்று வருகிறது! ஆனால் இதைப்பற்றி இப்போது கதைத்தால், ‘அது பழைய கதை. செய்தவர்கள் எல்லாம் செத்து விட்டார்கள். அதைக் கிளறாது வன்னயில் நடந்த கொடுமைக்கு நியாயம் வேணும்’ என்று கூறுகிறார்கள்! ஆனால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறரர்கள். அவர்களிற்கும் அந்த பெண்கள், இசைப்பிரியாகள் தானே! செய்தவர்கள் பலர் இன்றும் உயிருடன் உள்ளார்கள்! செய்தவர்களிற்கு தண்டணைதான் வேண்டாம், குறைந்தபட்சம் நடந்த உண்மைகளாவது தெரிய வேண்டாமா? இனிவரும் காலங்களில் தமிழ் தரப்பு இப்படிச் செய்யாது என்பதற்கு இந்த உண்மைகள் உத்தரவாதம் தராதா?

வன்னி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டமை மறுக்க முடியதா உண்மைகள்! புலிகள் இராணுவம் இரண்டுமே மனித உரிமைகளை மீறியுள்ளனர். வெறுமனே இராணுவத்தின் மனித உரிமைகளை சுட்டிக்காட்டும் தமிழ் அமைப்புகள் புலிகளால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனித உரிமை மற்றும் போர்க்குற்றச் சாட்டுகளை மறுதலிப்பது தான் மிகவும் மோசமான அராஜகம்! இன்று இராணுவத்தில் உள்ள சில அதிகாரிகளே தமது தரப்பு பிழை விட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களே இந்த ஆதரங்களை கசியவும் விட்டுள்ளார்கள். ஆனால் இசைப்பிரியாக்களை வைத்து இன்னமும் புலிகளை புனிதர்களாக காட்டுவதில் முழுக்கவனம் செலுத்துவதுடன் தங்கள் சொந்த இலாபங்களிற்காகவே இன்று இசைப்பிரியா போன்ற பெண்களின் மரணத்தை காவித்திரிகிறார்கள்! இந்த இசைப்பிரியாவையும் இன்னும் நூற்றுக்கணக்கான இசைப்பிரியாக்களையும் இந்த புலம்பெயர் சமூகம் நினைத்திருந்தால் அன்று காப்பாற்றியிருக்க முடியம்! புலிகளை உசுப்பேத்துவதை நிறுத்தி மக்களை கேடயங்களை பாவிப்பதை நிறுத்தி புலிகளை ஆயுதங்களை கீழே போடவைத்திருந்தால் மனிதக் கேடயங்களாகப் பாவிக்கப்பட்ட மக்களை விடுவிக்கும்படி கோரியிருந்தால் இந்த இசைப்பிரியா காப்பற்றப்பட்டிருப்பாளோ என்னவோ?

எல்லாம் நடந்து முடிந்து ஒன்றரை ஆண்டுகள் போன பின்னர் பழிக்கு பழி ரத்தத்திற்கு ரத்தம் என்று புலிக்கொடியுடன் இன்னமும் ஒரு கூட்டம் ஓடித்திரிகிறது! கேட்டால் வன்னி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டுமாம்! மகிந்தாவையும் அவர் கூட்டாளிகளையும் கூண்டில் ஏற்ற என்று புலம்பெயர் சமூகத்திடம் ஆயிரக்கணக்கில் பெற்ற காசை வங்கியில் வைப்பிலிட்டு விட்டு ஒரு 3000 பவுண்களுடன் இறுதி நேரத்தில் கிழக்கு லண்டன் இமிக்கிறேசன் லோயரை பிடித்த இந்த கூட்டமா வன்னியில் இறந்த மக்களிற்கு நீதி பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்? நீங்கள் அவர்களிற்கு நீதி வாங்கி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அவர்களை நிம்மதியாக இனியாவது இருக்கவிடுங்கள்! இதுபற்றி அங்குள்ள மக்கள் மிகத்தெளிவாகவே இருக்கிறார்கள்! புலிகளால் நாம் பட்டதுபோதும்! புலம்பெயர் மக்கள் புலிப்பூச்சாண்டி காட்ட காட்ட இங்குதான் நாம் வேதனைப்படுகிறோம். ஏற்கனவே வெள்ளம் வந்து தகர குடியிருப்புகளை அள்ளிச்சென்ற நிலையிலும் இன்னமும் அதைப்பற்றி அக்கறை காட்டாத புலம்பெயர் தமிழ் சமூகம் மாவீர்தின வெற்றி, மகிந்தா வெற்றியென்று தம் ஈகோக்களை திருப்திப்படுத்தியபடி உள்ளனர். இவர்களா அந்த மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள். இவர்களின் ஒரே கவலை வன்னி மக்களை இன்னமும் இராணுவம் கொல்லவில்லையே என்பது தான்! இன்னமும் இசைப்பிரியாக்கள் இறக்கிறார்கள் இல்லை என்பதே இவர்களின் கவலை!

கடந்த சில வாரங்களாக தமிழ் இணையங்கள், தொலைக்காட்சிகளை ஆக்கிரமிக்கும் இறந்த பிணங்களின் உடலங்களில் வக்கிரமானவை பெண்கள் பற்றிய படங்கள்! எமது கலாச்சரம் பற்றி தம்பட்டம் அடிக்கும் தமிழர்கள் ஒரு வக்கிர புத்தியுடன் இணைக்கும் இந்த படங்கள் இறந்த அந்த பெண்களை இன்னமும் மானபங்கப்படுத்துகிறது! போர் குற்றம் என்று குற்றம் சுமத்துபவர்கள் இன்று மனித நேயத்தை தொலைத்து விட்டு பிணங்களை வைத்து வியாபாரமும் விபச்சாரமும் செய்கிறார்கள்! மேற்குலகில் பல பெண்கள் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட போதும் அவர்களின் புகைப்படங்களை ஊடகங்கள் வெளிவிடுவதே கிடையாது! விசாரணைக்கு அவை சம்பந்தபட்டவர்களிடம் கொடுக்கப்படுவதுடன் அந்தப் படங்கள் வெளிவருவதே கிடையாது! ஆனால் எம்மவர்கள் மிகவும் கேவலமாக இந்த பெண்களின் படங்களை தங்கள் சுயநல விளம்பரங்களிற்கும் பணத்திற்கும் இன்று விற்பதை நான் விபச்சாரம் என்று கூறாது என்னவென்று கூறுவது!

நடந்து முடிந்த யுத்தம் பல உண்மைகளை மறைத்து நிற்கிறது! இங்கே குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவது தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாகாது! அனைவரும் ஏதோவகையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மாறாக மேலும் குரோதங்களை வளர்க்கும். உண்மைகள் வெளிவரவேண்டும்! குற்றம் இழைத்தவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்! பொது மன்னிப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டு மீளவும் தவறுகள் நடைபெறாத வகையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்! திரும்ப திரும்ப இசைப்பிரியாக்களை தொலைக்காட்சியிலும் வானொலியிலும் கொல்வது அவர்களின் ஆத்மாக்களையும் கொன்று புதைப்பதற்கு ஒப்பானது!

எனது பார்வையில் கே பி : ”உலகை மாற்ற வேண்டுமாயின் நீ முன்னுதாரனாமாயிரு. – Be the change you want to see in the world.” மகாத்மா காந்தி : எஸ் வாசுதேவன்

NERDO_KP_Meetsமகாத்மா காந்தியின் பொன்வாக்குளில் ஒன்று. ”உலகை மாற்ற வேண்டுமாயின் நீ முன்னுதாரனாமாயிரு.” இதன் அவசியம் இன்று நம் தமிழ் சமூகத்தில் அவசியமான ஒன்றாக இருக்கிறது. சமூக மாற்றம் பற்றி பேசும் பலரே இன்று சமூகத்தின் பல்வேறு சிரழிவுகளுக்கு காரண கர்த்தாக்களாக இருக்கிறார்கள். இது தாயகத்தில் மிகவும் ஒரு மேசமான நிலையில் உள்ளது. அதற்காக புலம் பெயர் மண்ணில் உள்ளதெல்லாம் திறம் என்று கூறவரவில்லை. புலம்பெயர் மண்ணில் இன்று வேறு ஒரு வியாதி பிடித்துள்ளது. கற்பனையில் கப்பலோட்டும் தமிழனாக புலம்பெயர் தமிழன் மிகவும் மோசமான ஒரு தமிழ் சமூகத்தை புலம்பெயர் மண்ணில் உருவாக்கி வருகிறான்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்காக 20 வருடங்களுக்கு மேலாக உழைத்து பின்னர் தகடு வைப்புகளால் ஓய்வு பெற்ற கே.பி என்று அழைக்கப்படும் திரு செல்வராசா பத்மநாதன் அவர்கள் புலிகளின் மறைவிற்கு பின் பரவலாக அதிகம் பேசப்பட்டு வந்த ஒருவர். இவர் நல்லவரா கெட்டவரா என்ற விவதாம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. ஆனால் அண்மையில் தமிழ் பத்திரிகையாளர் டீ. பி. எஸ் ஜெயராஜ் நான்கு பகுதிகளாக கே.பியுடனான நேர்காணலை மிகவும் விறுவிறுப்பாக எழுதியிருந்தார்.

நம்மவர்களுக்கு விடுப்பு பூராயம் அறிவதில் மிகுந்த அக்கறை! ஆனால் இந்த நேர்காணல் இந்த விடுப்பு பூராயங்களை விறுவிறுப்பாக்கவில்லை. யதார்த்த நிலையை விளக்கியது. கே.பி முன்னர் வெளியில் இருந்து சொன்னதைதான் மீளவும் சொல்லியிருக்கிறார். கே பி உடன் மே18க்குப் பின் பலதடவை உரையாடி இருந்தேன். விவாதித்தும் இருந்தேன். தேசம்நெற் ஆசிரியர்களும் கே பி யுடன் கதைத்ததைப் பதிவு செய்திருந்தனர். இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் என்ன விடயங்களைப் பேசினாரோ அதே விடயங்களையே அவர் கைது செய்யப்பட்ட பின்னரும் பேசுகின்றார். நானும் விடுதலைப் புலிகளுடன் செயற்பட்டவன் என்பதை முன்னரே எழுதி உள்ளேன். அவ்வாறே கே பி யும் விடுதலைப் புலிகளுடன் நீண்ட காலம் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்.

இப்போதுள்ள நிலையில் கே பி தங்களால் வழிநடத்தப்பட்ட இளைஞர்கள் சிறைகளில் வாடுவதனாலும் தங்களை நம்பிய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி அனைத்தையும் இழந்த நிலையில் இருப்பதால் அவர் குற்ற உணர்விற்கு உள்ளாகி இருப்பதை அவருடன் உரையாடியதில் இருந்து உணருகிறேன். அந்தக் குற்ற உணர்வு பாதிக்கப்பட்டவர்களிற்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற உந்துதலை வழங்குகின்றது.

ஆனால் இதுபற்றி உடைந்து போய் பல்வேறு அணிகளாகி உள்ள புலம்பெயர் புலிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைகளை தம் வசதிக்கேற்ப வெளியிடத் தொடங்கினார்கள். கே.பியே அடுத்த முதல்வர்! கே.பி டீ.பி.எஸ் கூட்டில் ஒரு பத்திரிகை. கே.பி ஒரு ஆயுதக்குழுவை கட்டுகிறார். கே.பி அபிவிருத்தி என்ற பெயரில் காசு சேர்க்கிறார். கே.பி மீளவும் புலிகள் பாணியில் மாபியா நடத்த முனைகிறார். என்று தாம் விரும்பிய படி காது மூக்கு வைத்து தொடங்கிய கதைகள் இன்று கடைசியல் கே.பிக்கு அரசு 500 பரப்பு காணியை இலவசமாக வழங்கியுள்ளதில் என்பதில் வந்து நிற்கிறது.

Kumaran_PathmanathanKumaran_PathmanathanKumaran_Pathmanathanஇயக்கத்தை விட்டு கே.பியை ஓய்வெடுக்க சொன்னபோது அவரிடம் இருந்த கடைசி குண்டூசி வரை இயக்கத்தால் பொறுப்பேற்கப்பட்டது. அதன் பின்னர் வெளிநாட்டு புலிகளிடமிருந்து ஒரு ஓய்வூதிய சம்பளமே அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இயக்கத்தின் செயற்பாடுகளில் இருந்து ஓதுங்கியிருக்க கூறிய அதே இயக்கம் கே.பியை ஒரு அரசியல் ஆலோசகராக 2003இல் கொண்டுவர மீளவும் விடுதலைப் புலிகளின் தலைவர் முயன்றதை பலர் மறந்து விட்டனர். அதை அன்று இக்பால் அத்தாஸ் ஹின்டு பத்திரிகையில் விலாவாரியாக எழுதியிருந்தார். http://www.hinduonnet.com/2003/10/15/stories/2003101511111000.htm

கே.பியை எப்படியாவது இயக்கத்தினுள் வைத்திருக்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முயன்ற போதும் அதுவும் கூடிவரவில்லை. இதற்கு பின் நடந்தவைகளை தனது நேர்காணலில் கே.பி விரிவாக கூறியள்ளார். கே.பியுடன் வேலைசெய்த முன்னைநாள் இயக்க நண்பர்கள் பலர் இன்று வெளிநாடுகளில் தாமுண்டு, தம்பாடு உண்டு என்று இருக்கிறார்கள். இவர்கள் யாரும் கே.பியை குறை கூறவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டு விலத்திய பல்வேறு பதவிகளை வகித்தவர்கள் இன்று புலம்பெயர் மண்ணில் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் யாரும் கே.பியின் இந்த அறிக்கை பொய் என்று கூறவில்லை.

ஆனால் இதெல்லாம் சும்மா கட்டுக்கதை என்று இவர் தற்போது ஒரு சூழ்நிலைக்கைதி எனவே இவரை விட்டு விட்டு நாம் நமது வேலையான தேசியத்தை கட்டுவோம் என்று தேசிய வியாதி பிடித்த கூட்டம் அலைகிறது. இவர்களில் 99வீதமானோர் எந்த ஒரு இயக்கத்திற்கும் போகாதவர்கள். போராட்டம் தொடங்கிய மறு கணமே வெளிநாடு வந்தவர்கள். ஒரு சிலர் வெறும் சாக்கு போக்குக்காக தம் சொந்த நலனுக்காக இயக்கங்களிற்கு போனவர்கள். இவர்களில் பலர் புலம்பெயர் ஊடகங்களை தம் வசம் வைத்திருப்பவர்கள். இவர்கள் தான்  இன்று கே.பியை ஒரு துரோகியாக்கி அவரை ஏதாவது ஒரு நாட்டின் உளாவளி என்று முத்திரை குத்தமுனைபவர்கள். இவர்களில் ஒரு தரப்பு உலகப் புகழ் பெற்ற புனைபெயர் தமிழ் ஊடகவியலாளர்கள். இணைய செய்திகளை படித்து விட்டு நோரக கண்டது போல் விலாவாரியாக எழுதித் தள்ளுகிறார்கள்.

ஊடக தர்மத்திற்காக இலங்கைக்கு உயிரைப்பணயம் வைத்து சென்ற டைம்ஸ் சஞ்சிகையின் மேரி வாழும் இந்த நாட்டில் தான் இந்த கூட்டமும் வாழ்கிறது. ஒரு ஊடகவியலாளனிற்கு இருக்க வேண்டிய அடிப்படை தகமைகள் கூட இருக்க வேண்டாம்? குறைந்த பட்சம் நேர்மையாவது வேண்டாமா?

நான் கடந்த ஆவணியில் இலங்கை போய் வந்ததும் மீண்டும் எனக்கு கே.பியுடன் பேச வாய்ப்பு வந்தது. பேசிய பின் தான் அங்கு அவரைப் போய் பார்த்திருக்க வேண்டும் என்று பின்னர் கவலைப்பட்டேன். காரணம் தற்போது அவர் செய்யும் முயற்சி! அந்த முயற்சி வெறும் கண்துடைப்புக்காவோ காசு பணம் சேர்க்கவோ செய்யும் முயற்சி அல்ல. நான் வன்னியில் நேரடியாக பார்த்து பாதிக்கப்பட்ட விடயங்களை விட அவரை பல விடயங்கள் மிகவும் மன அழுத்தத்திற்குள்ளக்கி இருந்தது. இதை அவருடனான உரையாடலில் புரிய முடிந்தது. இயக்கம் நடாத்திய காலங்களில் அதீத விசுவாசம் காட்டாது அந்த மனிசனும் சொத்து சேர்த்திருந்தல் மலேசியா போயிருக்கத் தோவையில்லை. பிடிபட்டிருக்கவும் மாட்டார்.

பத்மநாதனின் படமே அவர் பிடிபட்ட பின்னரே ஊர்ஜிதம் செய்யப்பட்டது. புலம்பெயர் நாட்டில் மே 18 இற்கு பின் தலைமறைவான பணக்காரப் புலிகளில் ஒருவராக கே.பியும் இருந்திருக்க முடியும். இயக்கம் முழுவதும் அழிந்ததை ஊர்ஜிதம் செய்த செல்வராசா பத்மநாதன் ஒரு பற்றிக்காக (Patrick) தென் ஆபிரிக்காவிலேயோ அல்லது டேவிட்டாக எரித்திரிவியாவிலோ ஒதுங்கியிருக்க முடியதா?

NERDO_KP_Meetsமக்கள் மீது பற்றுள்ளவர்கள் மக்களை விட்டு  ஓட மாட்டார்கள். நம்பிக்கை இழந்த மக்களிற்கு தன்னால் ஏதாவது செய்ய முடியுமா என்றுதான் சிந்திப்பார்கள். இந்த ஒரு நோக்கிற்கா தன் அடையாளத்தை வெளியில் கொண்டு வந்த கே.பியை இலங்கை அரசு கைது செய்ததையே பொய் என்று தமிழீழத்தை இதோ நெருங்கிக் கொண்டிருப்பதாக எழுதிய அதே புலம்பெயர் ஊடகவியலாளர்கள் ஆய்வு செய்து எழுதுகிறார்கள்.

கே.பி மலேசியவில் தங்கியிருந்த போது பல்வேறு தடவைகள் மணிக்கணக்கில் தொலைபேசியில் கதைக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்து. ”புலிகளின் ஏகப்பிரதிநிதுத்துவத்தை நீங்கள் மூட்டை கட்டிவைக்க வேண்டும்” என்று நான் தொடங்கவே, ”தம்பி இது தான் நாங்கள் விட்ட பெரிய பிழை இதை இனியும் விடக்கூடாது” என்று கூறியதோடு நிற்காது, பல்வேறு பட்ட இயக்க தோழர்களை அணுகியதுடன் அவர்களை தொடர்ந்து சந்தித்தும் வந்தார். இது தான் இங்குள்ள ஏகப்பிரதிநிதித்துவ புலிகளின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது. தமது பதவிகள் பணம் அனைத்தும் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் கே.பி எதிர்ப்பு யுத்தத்தை அவர்கள் அன்றே ஆரம்பித்து விட்டார்கள்.

இன்று புலிகள் செய்த அனைத்து தவறுகளிற்கும் அனைவரிடமும் பொது மன்னிப்பும் கோரியுள்ளார் கே.பி. புலிகளின் அராஜகத்தை விமர்சித்து அவர்களை விட மிக மோசமாக ஆராஜகம் செய்த கட்சிகள் கூட இன்னமும் குறைந்த பட்ச மன்னிப்பை கூட இலங்கை மக்களிடம் கோரவில்லை. ஆனால் இதைக் கூட இந்த போலி ஊடகவியலாளர்கள் எள்ளி நகையாடுகிறார்கள். இவர் சூழ்நிலைக் கைதியாம்.  அதுதான் மன்னிப்பு கேட்டவராம்.

”மாற்றம் என்பது உன்னுள் ஆரம்பிக் வேண்டும்” என்பதை கே.பி இன்று நிரூபித்துள்ளார்.

NERDO_Book_Donationநேர்டோ என்ற அமைப்பை கே.பி தொடங்கியதன் காரணம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் கஸ்டத்திற்கு தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்வு மட்டும் அல்ல. மாறாக மனித நேயம் கொண்ட எந்த ஒரு மனிதனுக்கும் உருவாகும் ஒரு உணர்வு. வன்னிக்கு நேரடியாக சென்று நிலைமைகளை பார்த்து அந்த மக்கள் படும் அவலங்களை பார்க்கும் ஒவ்வரு மனித நேயம் கொண்டவர்களுக்கு உருவாகும் அந்த உணர்வே கே.பிக்கும் உருவாகியது.

தடுத்து வைக்கப்படுதலின் உளவியல் தாக்கத்தை தானே அனுபவித்து உணர்ந்த கே.பி, தடுத்து வைக்கபட்டிருக்கும் முன்னை நாள் போராளிகளின் வேதனையையும் தாக்கங்களையும்  நன்கே உணர்ந்தார். இவை பற்றி பேசும் ஒவ்வொரு கணமும் அவர் உணர்ச்சிவசப்படுவதை என்னால் புரிய முடிந்தது. ”நான் வாழ்ந்து முடிந்து விட்டேன் ஆனால் இவர்கள் வாழவேண்டும்” என்பதிலும் ”அவர்கள் நல்ல மனிதர்களாக வெளியில் வந்து தங்கள் சொந்த காலில் நிற்பதை பார்க்க வேணும்” என்பதே அவரின் விருப்பம். கே.பியும் ஒரு கொஞ்ச காலம் சிறையில் அப்பிடி இப்பிடி காலத்தை தள்ளிப்போட்டு பொது மன்னிப்பில் மயிலிட்டியில் தன் வாழ்க்கையை முடித்திருக்க முடியம். ஆனால் அதை செய்ய அவர் விரும்பவில்லை.

”அரசாங்கம் செய்யட்டும். நாங்கள் ஏன் செய்ய வேண்டும்” என்று விதண்டாவாதம் பேசவில்லை. அவர் இதை வைத்து அரசியலும் செய்யவும் விரும்பவில்லை. யுத்தத்தால் பாதிகப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை ப+ர்த்தி செய்ய தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யவே முனைகிறார். இன்று வட கிழக்கில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குறிப்பாக இந்த போராட்டத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை நேரில் பார்த்த, மனச்சாட்சி உள்ள ஒரு சாதாரண மனிதன் செய்யும் ஒரு செயற்பாட்டையே இன்று நேர்டோ ஊடாக கே.பியும் செய்ய முனைகிறார்.

NERDO_KP_Meetsஅண்மையில் மிகவும் இரகசியமாக புலம்பெயர் மண்ணிலிருந்து சென்று கே.பியை சந்தித்தவர்கள் அங்குள்ள பலரிற்கு பல வாக்குறுதிகளை கொடுத்து விட்டு நாடு திரும்பினர். கே.பியும் இவர்கள் ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்திருக்க வந்த ஒருவர் போட்ட குத்துக்கரணத்தால் எல்லாமே தலைகீளாக மாறியது. உதவியை எதிர்பார்த்தவரகள் ஏமாற்றம் அடைந்தனர். இலங்கை அரசை சார்ந்தவர்களோ பார்தீர்களா புலம்பெயர் தமிழர்களை என்று ஏளனம் செய்தனர். ஆனால் நல்ல மனம் படைத்த ஒரு சிலரின் உதவியுடன் தன்னால் இயன்றதை கே.பி செய்யாமல் இருந்து விடவும் இல்லை.

இன்று அவர்களிற்கு கோடிக்கணக்கில் பணம் தேவையில்லை. ஆழுக்கொருவர் ஒரு பவுண் மாதம் கொடுத்தாலே அது ஒரு மாற்றத்தை கொண்டுவரும். புலிகளின் பணத்தை இங்கு வைத்துள்ளவர்கள் அதை காப்பாற்ற கே.பியை துரோகியாக்குவதிலேயே கவனமாயுள்ளனர்.  இவர்களிற்கு மக்களைப் பற்றியோ அவர்கள் படும் துன்பம் பற்றியோ அக்கறை கிடையாது.  கே.பி ஏன் செய்ய வேண்டும்? எம்மை நேரடியாக செய்ய அரசு ஏன் தயங்குகிறது என்று ஒருவர் கேட்கிறார்.

20 வருடங்களிற்குமேல்  தனது உழைப்பால் ஒரு அமைப்பை எந்தவித சுயநலமும் பாராது கட்டிக்காத்ததுடன் இன்று ஒரு சதம் காசு கூட கையில் இல்லாது வெறும் கைதியாக இருப்பதே  ஒரு முக்கிய காரணம். காசுதான் பெரிது என்றிருந்தால் கே.பி மலேசியா முதல் மயிலிட்டி வரை பினாமி பெயர்களில் முதலிட்டு விட்டு இன்று சொகுசாக வாழ்ந்திருக்க முடியும்!

இலங்கை அரசை அணுகி தாம் ஒரு அரச சார்பற்ற ஸ்தாபனத்தை நடாத்த போகிறோம் என்றதும் அரசு இணங்கியதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. இந்த விடயத்தில் ஏற்கனவே பலரை நம்பி செயற்பட விட அவர்கள் தமது கஜானாக்களை நிரப்புவதிலேயே கவனம் செலுத்த முனைந்தார்கள். ஆனால் தனது எதிர்காலம் என்ன என்று தெரியத நிலையிலும் அதைப்பற்றி கவலைப்படாது யுத்தத்தால் பாதிக்ப்பட்ட  மக்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படியாவது உயர்த் வேண்டியது தனது கடமை என்று இலங்கை அரசிடம் கோரி அவர்களை இணங்க வைத்தார். அதை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தற்போது செய்து வருகிறார்.

School_Under_TreeNERDO_School_Supportஉடல் நலம் ஓத்துளைக்காது போதும்  வன்னிக்கு அடிக்கடி சென்று அந்த மக்களுடன் ஒன்றாக இருந்து அவர்களின் நலனை எந்த வித அரசியல் லாபமும் பாரக்காது முழுநேரமாக  தன்னை அர்ப்பணித்து செயலாற்றி வருகிறார். கே.பியை பொறுத்தவரை இது சமூக சேவை மாத்திரம் அல்ல. தன் மனதில் ஏற்பட்ட வடுக்களை போக்க உதவும் ஒரு நீவாரணம். கே.பி மீதான  அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் தொடரவே போகிறது. ஆனால் அவை அனைத்துமே காலப்போக்கில் அடிபட்டுப்போகும். தனது விடா முயற்சியால் எவ்வாறு புலிகள் என்ற அமைப்பை கட்டியமைக்க உதவினாரோ அதேபோல் இந்த மக்களின் வாழ்வை கட்டிமையக்க இவரால் நிச்சயம் முடியும் என நம்புவோம்!

குமரன் பத்மநாதனின் நேர்காணல்கள்:

(யூன் 14 2009ல் குமரன் பத்மநாதன் வே பிரபாகரனின் மரணம் தொடர்பாக தேசம்நெற் க்கு தெரிவித்த கருத்துக்கள். இப்போது வெளியிட்டு வரும் கருத்துக்களை பெரும்பாலும் 2009 யூனிலும் குமரன் பத்மநாதன் கொண்டிருந்தார். இவை தேசம்நெற் இல் வெளியாகி இருந்தது. தவிபு தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே வீர மரணம் எய்தி விட்டார். : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை , VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன் )

”ஹெலிகொப்டர் முயற்சி சாத்தியமற்றுப் போனது. நெடியவன், காஸ்ட்ரோ மீது சினங்கொண்டேன்.” குமரன் பத்மநாதன்

”நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர், நண்பர். ஓர் மூத்த சகோதரன்.” : குமரன் பத்மநாதன்

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்

”ஆயுதக்கொள்வனவில் வெற்றி! தலைமையை இயக்கத்தை காப்பதில் தோல்வி! மக்களின் வாழ்வை மீள் கட்டியெழுப்புவதில் நிச்சயம் வெற்றிபெறுவேன்!” குமரன் பத்மநாதன்

இலங்கை தமிழனின் இன்றைய யதார்த்தம்! : வாசுதேவன்

Students_Mannarதமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் இன்று குழிதோண்டிப் புதைத்துவிடப்பட்டுள்ளது. ஆனால் புலம்பெயர் மன்ணில் உள்ள எச்ச சொச்ச தேசிய படை வீரர்கள் கறுப்பு சிவப்பு என்று தற்போது தமக்குள் மோத வெளிக்கிட்டுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் இருப்பை காக்க என்று தொடங்கிய போராட்டம் இன்று தமிழ் மக்களின் அரசியலை நிர்வாணமாக்கி அவர்களை நட்டாற்றில் விட்டுள்ளது. தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆயுதப்போராட்டமாக மாற்றிய அனைவரும் புலிகளின் அராஜகத்தால் அழித்தொழிக்கப்பட மிஞ்சிய புலிகளும் அரசினால் அழித்தொழிக்கப்பட்டு உள்ளனர். தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அவர்களுக்கு இருந்த உரிமைகளையும் பறிகொடுப்பதற்கே வழி வகுத்தது. தமிழ் பேசும் மக்களிற்கு குறைந்தபட்சம் கிடைக்க இருந்த பல தீர்வுகள் இந்த போராட்டத்தல் நிராகரிக்கப்பட்டு இன்று தருவது எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கில் தமிழ் மக்கள் உள்ளனர்.

இந்த போராட்டத்தினால் இன்றும் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் சொல்லில் அடங்காது. பட்டினிக் கொடுமைகளை காணத வடக்கு கிழக்கில் இன்று பலர் பட்டினிக் கொடுமையால் தங்கள் குழந்தைகளை அநாதை இல்லத்தில் சேர்க்கும் கட்டத்தில் உள்ளனர்! வேலையற்ற எந்த வித தொழில் பயிற்சியுமற்ற மற்றவர்கள் தருவதை எதிர்பார்க்கும் ஒரு சமூகத்தை இந்த போராட்டம் தோற்றுவித்துள்ளது. எண்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் இன்று தமது எதிர்காலத்தை வெறும் சூனியத்துடன் எதிர் நோக்கியுள்ளனர். வீதியோரங்களில் தம் வீடுகளை இழந்த சமூகம் ஒன்று வெறும் கொட்டில்களை போட்டு முற்றாக  நம்பிக்கையிழந்த நிலையில் ஏதோ வாழ வேண்டும் என்று தம் வாழ்கையை தொடங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான அநாதைக் குழந்தைகள் பெற்றோர்கள் அற்ற தம் வாழ்க்கைகளை அன்னியர்களுடன் வாழத் தொடங்குகிறார்கள். விடுதலைத் தீயினில் சங்கமிக்க வாருங்கள் என்று அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண்களும் ஆண்களும் ஆயிரக்கணக்கில் சிறைகளில் தம் இருண்ட எதிர்காலத்தை உறுத்துப்பார்த்தபடி விரக்தியுடன் காலத்தை ஓட்டுகின்றனர். இவர்களின் பலர் தங்கள் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு யுத்த களத்தில் நிறுத்தப்பட்டவர்கள். 

IDP_Camp_Injured_Manஆனால் புலத்திலோ கறுப்பு சிவப்பு பச்சை என்று பல்வேறு கூட்டங்கள் தங்கள் இருப்பை காக்க தங்களுக்குள் மோதிக்கொண்டு ஆளுக்காள் சேற்றை வாரியடித்துக் கொண்டுள்னர். யுத்த காலத்தில் அள்ளி அள்ளி கொடுத்தவர்கள் இன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அரைச்சதம் கொடுப்பதற்கு ஆயிரம் கதை கூறுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசு தான் எனவே சிறீலங்கா அரசு செய்யட்டும் என்று புறந்தள்ளி விட்டு தங்கள் குழந்தை செல்வங்களின் முதல் மாதவிடாய்க்கு 5 நட்சத்திர விடுதியில் விழா எடுக்கிறது புலம்பெயர் சமூகம்! ஆயிரக்கணக்கில் அகதிகள் அனாதைகள் விதவைகள் அடுத்த வேளை உணவிற்கு அல்லலுறுகையில் மாதமொரு ஆண்டு விழா வாரமொரு அரங்கேற்றம் நாளுக்கொரு பிறந்தநாளுடன் இருக்கின்ற சுபதினங்களில் கல்யாணம் கச்சேரியில் வயிறுபுடைக்க உண்டுவிட்டு தலைவர் நடுக்கடலிலை சுத்துறார் ஒரு நாளைக்கு வெளியிலை வருவார் என்று ஏப்பக்கதைகள் கதைக்கிறார்கள். இவர்கள் உண்ணாத உணவுகளை கறுத்தப்பைகளில் சேர்க்க கோட்டு சூட்டுடன் வாடகைக்கு அமர்த்தப்படும் வெள்ளைக்காரர்கள்.

ஒவ்வொரு ஈழப்போரிற்கும் அள்ளிக் கொடுத்த வள்ளல்கள் புலிக்கு பணம் சேர்த்த பண முதலைகளின் இருப்பை காக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்கிறார்கள். போரில் வெற்றி வந்தால் கொண்டாடும் இந்த சமூகம் தோல்விக்கு இன்று ஒருவரை தேடி அவரை துரோகி என முத்திரை குத்துவதில் காலத்தை ஓட்டுகின்றனர். தற்போது இந்த துரோகிகள் பட்டியல் மைல் கணக்கில் நீண்டுகொண்டு முடிவற்று செல்கிறது. அதிலும் பதவிகள் துரோகி மேஜர் ஜெனரல், துரோகி லெப்டினட் கேணல் என்று. ஆனால் இந்த பட்டியலில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் மட்டும் வரவே வராது! ஏனெனில் அவர் இப்போது எம்மோடு இல்லை. குறைந்தபட்சம் புலிகளின் தோல்வியை கூட சுதந்திரமாக சுயவிமர்சம் செய்யத் தயங்கும் இவர்கள் இன்னமும் புலிகள் வளர்த்த புழுத்துப்போன கலாச்சாரத்தில் நின்று சுற்றி சுற்றி வருகிறார்கள் ‘அவர் வருவார், வந்து ஒரு பதில் தருவார்’ என்று கனவுலகில் சஞ்சரிக்கும் இவர்கள் தற்போது நாடுகடந்து தமிழீழம் அமைக்க முயல்கிறார்கள்.

தாயகத்தில் அரசிற்கும் புலிகளிற்கும் இடையில் சிக்கி சின்னாபின்மாகிப் போன மக்களை யாரும் கவனிக்க தயாராக இல்லை! சிறு சிறு குழுக்களாக ஒரு சிலர் இன்று பல்வேறு உதவிகளை செய்த போதும் இது தேவைப்படும் உதவிகளில் ஒரு கடுகளவே! உதவிகள் என்பது வெறும் பணம் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. உளவியல் ரீதியாக இன்று பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மக்களிற்கு பல்வேறு தேவைகள் இன்று உள்ளன. பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்கள் தம் மன அழுத்தங்களால் இன்று மனநோயாளிகளாக மாறி வருகின்றனர். யுத்தம், இரத்தம், சதைத் துண்டங்கள் போன்ற அவலங்களை பார்த்த குழந்தைகள் மூர்க்கதனமான பழக்க வளக்கங்களை சாதரணமாக செய்கிறார்கள். தன்னுடன் படிக்கும் சக மாணவனை கல்லால் அடித்து விட்டு ரத்தம் ஒழுகுவதை பார்த்து ரசிக்கும் கூரூர மனப்பாங்கில் உள்ள பல குழந்தைகளை இன்று ஆசிரியர்கள்  எதிர்நோக்க வேண்டியுள்ளது. தன் கண்முன்னே கொல்லப்பட கணவனை அரை குறையாக புதைத்து விட்டு ஓடிய மனைவியின் மன அவலங்கள் இன்னும் அவர்களின் மனதில் ஒட்டியுள்ளது. இந்த மன உளைச்சலுடன் வெளியல் வந்து தம் வாழ்வை தொடங்க முயல்கையில் ‘முண்டச்சி முழிவியளத்திற்கு வந்திட்டுதுகள்!’, ‘தாலியறுந்ததுகள் வீடுகளுக்கை இருக்காமல், எங்கடை உயிரை எடுக்குதுகள்’ என்று வசைவாங்கியே தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

IDP_Camp_Barbed_Wireஇதற்கும் மேல் இடம்பெயர்ந்து வந்த ஒரு புதுச்சாதி யாழ் குடாவில் உள்ளது. இவர்களை ஒரு தாழ்த்தப்பட்ட சமூகமாக அங்கு வசித்து வருபவர்கள் ஒதுக்கி வைத்து உள்ளனர். காரணம் இவர்கள் என்ன சாதியென்று தெரியாதாம். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வந்த இந்த மக்கள் புலிகள் அல்லது புலிகளின் ஆதவராளர்கள். எனவே இவர்களுக்கு தொழில் கொடுக்க பயப்படுவதுடன் இவர்களை ஒரு கள்வர்களை போல பார்க்கிறர்கள். சந்திக்கு சந்தி நின்று பெண்களுடன் சேட்டை பண்ணும் இன்னுமொரு கூட்டம் மாலையானதும் மதுவில் மயங்குகிறார்கள். மாலை மயக்கதில் வீடுகளை பூட்ட மறந்தால் முகமூடிக் கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து இரத்தம் கண்ட பின்னே அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு சென்று விடுவார்கள்.

இன்று யாழ் குடாவில் தற்போது பல வீதிகள் செப்பனிடும் பணி ஆரம்பமாகியுள்ளது. ஆனால் இதற்கு கூட தெற்கில் இருந்து தான் ஆட்களை கெண்டு வரவேண்டியுள்ளது. காரணம் பலருக்கு இந்த வேலைகள் பிடிப்பில்லை. அத்துடன் ஒரு சிலருக்கே இந்த தொழில் தெரிந்திருக்கிறது. மேசன் வேலை செய்ய ஆட்கள் இல்லை. தச்சுத் தொழில் செய்ய வவுனியாவிலிருந்து ஆட்களை கொண்டு வரவேண்டியுள்ளது. இதற்கு காரணம் புலம்பெயர் நாட்டில் இருக்கும் நம்மவர்கள் அனுப்பும் பணமா அல்லது சோம்பலா அல்லது தொழில் சார் அறிவீனமா? புரியவில்லை. ஒரு சிறு வேலையை கூட சுயமாக சிந்திக்க தெரியாத ஒரு சமூகமாக உருவாகியுள்ள சமூகத்தில் இன்று ஓரளவு படித்து வேலை செய்பவர்கள் வெளிநாடு போவதையே லட்சியமாக கொண்டுள்ளனர்.

அரசு கவனிக்கவில்லை அரசு புறந்தள்ளுகிறது என்று சோம்பேறித்தனமாக சாட்டுச் சொல்பவர்கள் மத்தியல் ஒரு சிறுபான்மையானவர்கள் கடும் வேலைசெய்து முன்னேற முனைவது ஒரு சிறு ஆறுதலாக உள்ளது. வெளிநாட்டில் உறவினர்கள் ஏதுமற்ற குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அண்மையில் தன் தாயாரிற்கு 7 லட்சம் செலவு செய்து இருதய சத்திரசிகிச்சை செய்துள்ளார். இவர்கள் அனைவரும் யாழ் குடாவில் படித்து அங்கேயே தங்கி வேலை செய்பவர்கள். அரச வேலை செய்யும் அதே நேரம் ஒரு சிறு வியாபார நிறுவனத்தை நடாத்தி அதன் மூலம் தங்கள் வருமானத்தை பெருக்கி இந்த மருத்துவ சிகிச்சைக்கு யாரிடமும் கை நீட்டாது தங்களின் தாயாரின் உயிரை காப்பாற்றியுள்ளனர். இவர்கள் ஒன்றும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல. தாயார் தையல் தொழில் தந்தையார் மரக்கறி வியாபாரி. இவர்களும் மற்றவர்கள் போல் யாழ் குடாவில் பல்வேறு சமயங்களில் இடம் பெயர்ந்தவர்கள். சொந்த காணி கூட இல்லாது வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள். தங்கள் விடா முயற்றியால் இன்று சொந்தமாக ஒரு காணி வாங்கி வீடு கட்டி வருகிறார்கள். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்  என்பதை இவர்கள் நிருபித்துள்ளார்கள். 

தாயகப்பிரதேசம் வடக்கு கிழக்கு அது இணைந்தே தீர்வே தீர்வு என அகங்காரமாக வந்த தீர்வுகளையெல்லாம் தூக்கியெறிந்த ஆளப்பிறந்த இனம் என கொக்கரித்த தமிழ் தேசியப்பற்றாளர்கள்  இன்று ஆட்டம் கண்டு என்ன செய்வது என்று தெரியாது நிற்கிறார்கள். ஆள ஒரு துண்டு நிலம் கொடுத்தாலும் ஆட்சி செய்ய மன்னன் அற்ற நிலைதான் இன்று. இதன் வண்ட வாளங்களை இன்று வவுனியா நகரசபை நிர்வாகங்களில் நன்கே காண முடிகிறது. நகர சபைகளை கூட இயக்க தகுதியற்றவர்கள் மாகாண சபையை எப்படி நிர்வாகிக்க போகிறார்கள்? இது அவர்களின் தவறல்ல. தொழில் சார் அறிவு முகாமைத்துவ அனுபவம் தனிமனித தலைமைத்துவ பண்புகளற்ற ஒரு சமூகத்தை தான் இந்த போர் படைத்துள்ளது. இதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் சிந்திக்க வேண்டிய காலம்.

Murukandi_Kovilஅண்மையில் பேராசியர் ராஜன் கூல் நாடு திரும்ப முன் சந்தித்த சந்திப்பில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஒன்றுபட்ட விடயம் நிரந்தரமாக நாடுதிரும்ப முடியாத அறிஞர்கள் விடுமுறையிலாவது அங்கு சென்று தம் அறிவுசார் அனுபவங்களை அங்குள்ள துறைசார்ந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது.

Nallur_Thiruvillaசிறுதுளி பெரு வெள்ளம் போல் இன்று தோன்றிய இந்த சிறு மாற்றங்கள் தொடரும் பட்சத்தில் மீண்டும் வடக்கு கிழக்கில் ஒரு மாற்றும் உருவாகும் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது. ஆனால் இன்று பல்வேறு திசைகளில் பயணிக்க தயாராகும் புலம்பெயர் தமிழர்கள் ஒற்றுமையாக குறைந்த பட்சம் அந்த மக்களின் வாழ்விற்காகவவது ஒன்றுபடுவார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்! 

வெற்றி பெறுபவர்களை மட்டும்தான் ஆதரிக்க வேண்டுமா?: வாசுதேவன்

பதவிக்கு வரும் ஒருவரை மட்டும் ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தில் சிலவேளை ஒரு அரசியல் ஆதாயம் இருக்கலாம். ஆனால் ஒருவரை மீளவும் பதவிக்கு வரவைக்க கூடாது என்ற பழி வாங்கும் நோக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தர எடுத்திருக்கும் முடிவு சரியானதா என்ற விவாதமே தற்போது மிகவும் சூடுபிடித்துள்ள விவாதமாகும். ஆனால் 30 வருட காலமாக தமிழ் பேசும் மக்கள் எந்த அரசியல் உரிமைக்காக போராடினார்களோ அந்த போராட்டத்தை நிவர்த்தி செய்ய குறைந்த பட்சம் விரும்பும் பிரதிநிதிகளையாவது ஆதரித்திருக்கலாம் என்ற ஆதங்கமும் பலர் மனதில் தோன்றியுள்ளது. 2010 ஜனாதிபதி தேர்தலில் தற்போது போட்யிடும் 20 பேரில் மிகவும் புதிய திட்டங்களுடன் ஒரு உண்மையான மாற்றத்தை தேடி நிற்கும் ஒரு வேட்பாளர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கோ அல்லது தமிழ் பேசும் மக்களின் அரசியலில் அக்கறையுள்ளவர்களிற்கு தெரியாமல் போனது மிகவும் வேதனையான ஒரு விடயம். இங்கே தான் தனியே வெற்றி பெறும் வேட்பாளர்கள் நோக்கிய ஒரு பார்வை புலனாகிறது.

கட்சியில்லா மக்கள் அரசியலதிகாரம் என்ற கோஷத்தின் அடிப்படையில் சுவராஜ்ய என்ற அமைப்பு அரசியல் அதிகாரம் மக்களாகிய நமக்கே என்ற மாற்றத்தினை கொண்டு வருவதினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குறியீடாக இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளரை சுயேட்சையாக நியமனம் செய்துள்ளது. இன்று தேர்தலில் நிற்கும் இரண்டு முக்கிய வேட்பாளர்களும் மீளவும் இனங்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் பேச்சுகளை பேசி வருகிறார்கள். சிங்கள தேசிய வாதத்தை மிகவும் முனைப்போடு பேசும் அதேநேரம் சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தும் சில சலுகைகளை இவர்கள் ஏலம் போடுகிறார்கள். ஆனால் மக்களின் உண்மையான விடுதலையை நேசிக்கும் வேட்பாளர்கள் வெல்ல முடியாதவர் என்ற ஒரு காரணத்திற்காக ஓதுக்கப்படுவதுடன் அவர்கள் சொல்ல வரும் செய்தியையும் இந்த ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வது மிகவும் வேதனையானது.

பிளவுகளை ஏற்படுத்தும் இந்த அரசியற் கட்சிகளுக்கு மாற்றாக சுதந்திரம் என்பது அடி மட்டத்திலிருந்து ஆரம்பமாக வேண்டும், ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவுடையதாகவும் தனது விவகாரங்களை தானே கையாளக் கூடிய ஆற்றல் மிக்கதாக வளரவேண்டும் என்ற காந்திய கொள்கையை பின்பற்றும் சுவராஜ்ஜியவின் சார்பில் போட்டியிடும் திரு யு. பி விஜேகோன் தமிழ் பேசும் மக்களிற்கு மிகவும் அறிமுகமானவர். சுவராஜ்யாவின் அரசியல் அமைப்பு இனவாதத்தால் பிரிந்து போயுள்ள நாட்டை மீள இணைப்பதுடன் மக்கள் தமது சொந்த தலைவிதியை தாமே நிர்ணயித்துக் கொள்வதற்கும் வழிவகுக்கும் புதிய திட்டம். இதில் அரசியல் கட்சிகள் கிடையாது! மாறாக 14500 கிராம சபைகளும் சுதந்திரமான சுயாட்சி அலகு முறைக்குள் உட்படுத்தப்படும். நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரங்கள் தொடர்புடைய ஒவ்வொரு படிமுறையும் இந்த கிராம சபைகளில் இருந்தே ஆரம்பிக்கும்!

இவ்வாறு மக்களிடம் மீள ஆதிகாரங்களை கையளிக்கும் வகையிலான திட்டங்களை வெளிப்படுத்தும் இந்த அமைப்பு 60வருட காலமாக காலனித்துவ ஆட்சியார்கள் விட்டுச்சென்ற அரசியல் அமைப்பை உதறித் தள்ளி விட்டு நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற அரசியல் அமைப்பை மீள புதுப்பிக்க முனைகிறது. மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் தவறிழைக்கும் பட்சத்தில் மக்களால் திருப்பியழைக்கும் உரிமையையும் இது உத்தரவாதம் செய்கிறது. இது நடைமுறைக்கு சாத்தியம் அற்ற ஒரு அமைப்பு எனவே இதைப்பற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை என்பதே அனேகரின் வாதம். ஆனால் புதிய அரசில் மாற்றம் ஒன்றை ஆரம்பிக்க எங்காவது ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டுமல்லவா? அந்த ஆரம்பம் என் இந்த மாற்றமாக இருக்க கூடாது?

அரசியல் அதிகாரங்கள் குவிந்து போயுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது அல்ல யு பி விஜேக்கோனின் நோக்கம். அந்த புதிய மாற்றத்திற்கான அடித்தளத்தை நாட்டும் முகமாக ஒரு செய்தியாளனாகவே இவர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். யு பி விஜேக்கோன் வெறும் வார்தை ஜாலங்களுக்காகவோ அல்லது புகழுக்காகவோ அல்லது ஒரு வேட்பாளரை தோற்க வைப்பதற்காகவோ இந்த தேர்தலில் நிற்கவில்லை. அரசியல் அதிகாரம் மக்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற தனது கொள்கையை இவர் மந்திரியாக இருந்தபோதே சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தியவர். கிராம சபைகள் கூடிய அதிகாரங்களை பெற இவர் அதிகாரத்தில் இருந்தபோதே பல வேலைத்திட்டங்களை செய்துள்ளார். பிரேமதாச ஆட்சிக் காலத்தில் இவர் கிராமசபைகளை மறு சீரமைத்ததுடன் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை வலுவூட்டினார். அரசியல் அதிகாரம் அடிமட்ட மக்களிடமிருந்து வரவேண்டும் என்ற தன் கொள்கையை யுஎன்பி ஆட்சிக்காலத்திலும் அறிமுகப்படுத்திய ஒருவர். யு பி விஜேக்கோன் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் 1980களில் யாழ் மாவட்ட அமைச்சராக பதவி வகித்தவர். அமரர் திரு அமிர்தலிங்கத்தாலேயே பாராட்டப்பட்ட ஒரு மனிதர். அவரின் மனித பண்புகளுக்காக யாழ் மக்கள் அவரை கௌரவித்தனர்.

இவ்வாறு இலங்கை அரசியலில் உண்மையான மாற்றத்தை தேடும் ஒரு நேர்மையான மனிதர் தமிழ் பேசும் கட்சிகளின் கண்களுக்கு தெரியமால் போனதன் காரணம் என்ன? விஜேக்கோன் விரும்பும் மாற்றத்தால் இந்த அரசியல்வாதிகளிற்கு ஒரு இலாபமும் இல்லாமல் போய்விடும் என்பதாலா? அல்லது கட்சிகள் இல்லாது போனால் தங்கள் இருப்பே போய்விடும் என்பதாலா? மக்களின் விடுதலையை நேசிக்கும் எந்த ஒரு சக்தியும் இந்த மாற்றத்தை விரும்பும். கடந்த முப்பது வருட காலமாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்காக தமிழீழ தனியரசமைக்க முனைந்த தமிழ் தேசியம் கிராம ராஜ்யம் என்ற அமைப்பின் ஊடக அந்த மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாதா? தேசிய விடுதலைப் போராட்டதில் புலிகளிற்கு எந்தவித நிபந்தனையும் இன்றி தமது ஆதரவை செலுத்திய இந்தக் கூட்டமைப்பினர் கண்களுக்கு மாநில சுயாட்சி தான் தெரியுமா? அதைவிட மக்களிடம் அதிகாரங்களை வழங்க கூடிய கிராமிய சுயாட்சி இவர்களின் கண்களிற்குத் தெரியாது போனதன் மர்மம் என்ன?

இந்த உலகத்தில் நீங்கள் காண விரும்புகின்ற அந்த மாற்றம் நீங்களேயாக வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் வாசகங்கள் பொறித்த சுவராஜ்ய அல்லது கிரமா ராஜ்ய என்ற அமைப்பின் தேர்தல் துண்டுப்பிரசுரம் நம்பிக்கை தருவதாக இருந்தாலும் இதை யாரும் கண்டு கொள்ளாது விட்டது நாம் தொடர்ந்தும் வெற்றிபெறக் கூடியவர்களை மட்டுமே ஆதரிப்பதாக முடிகிறது

நேரடி அனுபவம்: மீண்டும் ஒரு தரம் தாயகத்தில்… : வாசுதேவன்

Jaffna_to_Colombo_Bus_Servicesஎட்டு வருடங்களிற்கு பின் இந்த நத்தார் புதுவருட விடுமுறையில் மீண்டும் தாயகம் சென்று வர ஒரு வாய்ப்பு கிட்டியது. புலம்பெயர் ஊடகங்கள் பல குறிப்பாக தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் இலங்கையில் இன்னும் போர்  முடியவில்லை! மக்கள் காணாமால் போகிறார்கள்! இராணுவம் ஆட்களை கடத்துகிறது. கட்டுநாயக்காவில் வெளிநாட்டவர்கள் மணிக்கணக்கில் விசாரிக்கப்படுகிறார்கள்! கொழும்பில் தமிழ் மக்கள் பயத்துடன் வாழ்கிறார்கள்! இதுபோல் பல மிரட்டல்கள் என் மனதில் பயங்கரமாக ஓடி விளையாடியது! போனால் உயிருடன் திரும்பி வருவேனா? கடத்தப்படுவேனா? காணாமல் போவேனா? என்ற அச்சசத்துடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கினேன். வானில் குடும்பத்துடன் ஏறி வெளியில் வருகையில் ஒரு சோதனைச்சாவடி. அதில் எமது பாஸ்போட்டுகளை பார்த்தது தான்! இலங்கை மீண்டும் தன் நிலைக்கு திரும்புகிறது என்பதை உணர முடிந்தது. தற்கொலை போராளிகள் தாக்குவார்கள் என்ற அச்சமின்றிய இராணுவ மற்றும் முப்படையினரும் மிகவும் மதிப்பாக அனைவரையும் நடாத்துவதை காண முடிந்தது! யாழ் குடாவில் இராணுவ பிரசன்னம் இருந்தாலும் அங்கு வீதி தடைகள் அகற்றப்பட்டு மக்கள் சுதந்திரமாக திரிய முடியும். ஆனால் கொழும்பில் சில இடங்களில் வீதி சோதனை சாவடிகள் இன்னமும் இயங்குகிறது!

இதை புரியாத சில புலம்பெயர் ஊடகங்கள் யாழ் குடா மக்கள் இன்னமும் திறந்தவெளி சிறைச்சாலையில் என்ற கருத்துப்பட எழுதுவது புலம்பெயர் மக்களை இன்னும் முட்டாள்களாக வைத்திருப்பதற்கே என்பதை என்னால் உணர முடிந்தது! இன்னுமொரு ஊடகமோ வன்னி முகாம்கள் இன்னமும் வதை முகாம்கள் என்ற தலைப்பில் செய்திகளை வெளியிடுகிறது. வன்னி முகாம் மக்கள் இன்று சுதந்திரமாக நடமாடுவது இவர்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறார்களா? முகாமில் வதியும் மக்கள் தமது தேவைக்கு அதிகமான கொடுப்பனவு பொருட்களை வெளிப்படையாக வவுனியாவில் வைத்து விற்கிறார்கள். வதை முகாம்களில் அப்படிச் செய்ய முடியுமா? வன்னி முகாமில் தற்போது எண்பதினாயிரம் மக்களே இருப்பதாக அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். அவர்களில் பலர் தற்போதைக்கு மீளக் குடியேறும் நோக்கத்தில் இல்லை என்பதே உண்மை. இதனை தேசம்நெற்றில் சில மாதங்களுக்கு முன்னரேயே முகாம் மக்கள் தெரிவித்து இருந்தனர். அவர்கள் தங்கள் முன்னைய வாழ்விடங்கள் முற்றாக கண்ணி வெடியகற்றப்படுவதுடன் தங்கள் தொழில் வாய்ப்பிற்கான சகல ஏற்பாடுகளையும் செய்த பின்னரே மீளக்குடியேற விரும்புகின்றனர்.

எனது முன்னைய கட்டுரை ஒன்றில் கிளிநொச்சி தரை மட்டமாகியது என்ற கருத்துபட சில வரிகளை எழுதியிருந்தேன். இது சம்பந்தமாக பலர் பின்னோட்டத்தில் என்னை கடித்து குதறியும் இருந்தார்கள். உண்மை தான்! கிளிநொச்சியில் பல கட்டடங்கள் இன்னும் தரை மட்டமாகவில்லை! ஆனால் கட்டடங்களில் கூரைகளையோ கதவுகள் யன்னல்களையோ காணவில்லை. இராணுவம் வர முன்னரே மக்களும் புலிகளும் இவற்றை தம்முடன் எடுத்து சென்று விட்டனர். விமான தாக்குதலில் சில கட்டங்கள் சேதமாகியிருக்கிறது. இன்று புலம்பெயர் நாடுகளில் இருந்து ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதும் பலர் தாம்  கேள்விப்படுபவைகளும் தாயக ஊடகங்களில் வருவதை மட்டும் கருத்தில் எடுத்து தமது கருத்தை அதற்குள் திணித்து ஒரு கட்டுரையை வெளியிடுவார்கள். அதை பார்க்கும் புலம்பெயர் வாசகர்கள் தமது பாணிக்கு கற்பனை பண்ணி ஒரு தவறான நிலைப்பாட்டில் பின்னோட்டம் விடுவார்கள். குறிப்பாக ஊடகங்களின் தற்போதைய நிலைமை இது தான்! இதற்கு நானும் விதிவிலக்கல்ல! கிளிநொச்சி கூரை விடயத்தை நான் ஆராயத் தவறிவிட்டேன். ஆக மொத்தத்தில் இரு தரப்புமே யுத்ததில் அழிவுகளை தவிர்க்க முன்வரவில்லை என்பதே உண்மை.

மக்களின் மீள் குடியேற்றங்கள் அரசு கூறுவது போல் சுமுகமாக இல்லை என்பதில் உண்மைகள் இருந்தாலும் இந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கு உதவி செய்யும் அனைத்து வசததிகளையும் கொண்ட புலம்பெயர் மக்கள் அந்த மக்களிற்கு ஒரு குண்டுமணி கூட வழங்க தயாராக இல்லை! ”புலிகளிற்கு ஆயுதம் வாங்கி அள்ளிக்கொடுத்த இந்த வள்ளல்கள் இலங்கை பற்றியோ இலங்கை அரசியல் பற்றியோ கதைப்பதற்கே அருகதை அற்றவர்கள்.” இதை நான் கூறவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தம் வாயால் கூறுகிறார்கள். மீள் குடியேறும் மக்கள் கூரைகள் அற்ற வீடுகளிலும் தற்காலிக முகாம்களிலும் அல்லல் படுகிறார்கள். புலிகளால் கண்மூடி வன்னியெங்கும் விதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் தினமும் அகற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வன்னியிலிருந்து பின் வாங்கிய புலிகள் தாறுமாறாக கண்ணி வெடிகள் விதைத்ததை புலம்பெயர் நாடுகளில் இருந்தவர்களுக்கு தெரியாமால் போனாலும் இவர்கள் வாங்கி கொடுத்த இந்த கண்ணி வெடிகளே மீள் குடியேற்றத்திற்கு மிகுந்த தடையாக உள்ளது.

அரசு மீள்குடியேற்றத்திற்கு பெரிய அளவில் உதவி செய்யவில்லை என்பது உண்மை! ஆனால் புலம்பெயர் மக்கள் அந்த கடமையை செய்ய அனைத்து வசதிகளும் கொண்டுள்ளார்கள். ஆனால் செய்வார்களா? இது தான் வன்னி மக்களின் அங்கலாய்ப்பும்! வன்னி மக்கள் புலம்பெயர் மக்களிடம் இருந்து கேட்பது நாடு கடந்த தமிழீழம் அல்ல! குறைந்த பட்சம் பானை சட்டி அல்லது அவர்களின் வாழ்க்கையை கொண்டு செல்ல உதவும் ஒரு சிறு தொகையே! அவர்கள் பிச்சை கேட்கவில்லை. நாம் வாங்கி கொடுத்த அயுதங்களினால் அழிக்கப்பட்ட அவர்களின் வீடுகளையும் அவர்களின் தொழிலை கொண்டு செல்ல ஒரு சிறு தொகையையுமே அவர்கள் கேட்கிறார்கள். எம்மால் நடாத்தப்பட்ட யுத்தத்தில் இழந்தவற்றையே மீளக் கேட்கிறார்கள். இந்த மக்களை பொருளதார ரீதியாக உயர்த்துவதே புலம்பெயர் மக்கள் செய்ய கூடிய பேருதவியாக இருக்கும்.

வட்டுக்கோட்டை தீர்மானம் இந்த மக்களின் தலைவிதியை மாற்றப்போவதில்லை! வன்னி மக்களிற்கு வட்டுக்கோட்டை பிரகடணம் மரண சாசனம்! யாழ் மக்களிற்கு வட்டுக்கோட்டை தீர்மானம் வடிவேலு காமடி! தென் பகுதி தமிழர்களுக்கு வட்டுக்கோட்டையும் நாடு கடந்த தமிழீழமும் கவுண்டன் செந்தில் கலாட்டா!

யுத்ததின் பின் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் உணரும் ஒரு விடயம் இலங்கை என்ற நாட்டில் மூவினங்களும் ஒன்றாக வாழ முடியும் என்பதே! இலங்கையில் முஸ்லீம் மக்களின் வாழ்வியலை பார்த்து பல பாடங்களை தமிழர்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர்கள் கற்க வேண்டும் என்ற கருத்து இன்று அந்த மக்களிடம் மேலோங்கியுள்ளது.

இலங்கை என்ற நாடு தற்போது புதிய ஒரு அத்தியாயதிற்குள் நுழைந்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ், முஸ்லீம்கள் தமது கடந்த கால காழ்ப்புணர்வுகளை மறந்து புதிய காலத்திற்குள் கால் பதிப்பதை பார்க்க முடிகிறது! மார்கழி 31ம் திகதி இரவு 9 மணிக்கு பெற்றா மெயின் வீதி கடைகளின் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் எந்த வித பாகுபாடுமின்றி சகஜமாக தமது புதுவருடப் பொருட்களை முண்டியடித்து வாங்குவதை பார்த்த போது நான் மீண்டும் 1983 முந்தைய இலங்கையில் இருக்கும் ஒரு உணர்வை பெறக் கூடியதாக இருந்தது.

யாழ் குடாவில் இராணுவத்தின் பிரசன்னம் காணப்பட்டாலும் சோதனைச் சாவடிகள் பெருமளவில் குறைந்துள்ளது. மக்கள் சுதந்திரமாக நடமாட அனைத்து வசதிகளும் உள்ளது. உயர் பாதுகாப்பு வலயங்கள் மெதுவாக சுருங்கிக்கொண்டு வருவதை அவதானிக்க முடிந்தது. ஏ9 மீள திறந்த பின் அனைத்துப் பொருட்களும் மிக இலகுவாக பெறகூடியதாக இருக்கிறது. ஆனால் இலங்கை முழுவதும் பண வீக்கத்தின் பாதிப்பை நன்கே உணர முடிந்தது. இருப்பினும் யாழ் நகரில் பல பொருட்கள் கொழும்பு விலையை விட குறைவாகவே உள்ளது. வெளிநாட்டு பணத்தில் வாழும் மக்களை தவிர ஏனையவர்கள் தமது அன்றாட வாழ்விற்கு மிகவும் அவதியுறுகின்றனர். மக்கள் இதைப்பற்றியே அதிகமாக குறைப்பட்டனர்.

என்னுடன் உரையாடிய தமிழ் சிங்கள் முஸ்லீம் மக்கள் அனைவரும் ஒரு கருத்தில் ஒன்று பட்டார்கள். இலங்கை என்ற தேசத்தை அனைவரும் கட்டியெளுப்ப இது ஒரு அரிய சந்தர்ப்பம். இலங்கை மக்கள் தமக்குள் அடிபடுவதை நிறுத்தி நாட்டின் நலனுக்காக ஒன்றுபட்டு உழைக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் இதைப் புரியாத புலம்பெயர் மக்கள் நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டை என்ற பிரிவினை கோசங்களை வைப்பதை மீண்டும் பிரிவினையை தூண்டும் ஒரு ஆபத்தான சமிக்சையாகவே பார்க்கிறார்கள். தம்மை மீண்டும் பிரித்து விடுவார்களோ என்ற அச்சம் அவர்களிடம் இருப்பதை உணர முடிந்தது.

மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்கள் மாகாண ரீதியல் பரவலாக்கம் செய்வதுதான் ஒரே வழி என்பதை சிங்கள மக்களும் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர். யுத்த வெற்றியை சிங்கள மக்கள் கொண்டாடினாலும் தமிழ் மக்களின் மீது ஒரு பரிதாப உணர்வு வந்திருப்பதையும் மறுக்க முடியாது. கடந்த காலங்களில் சிறுபான்மை இனத்தவர்கள் அனைவரும் இந்த நாட்டில் சரி சமமாக நடத்தப்படவில்லை. மீளவும் ஒரு யுத்தம் மீண்டும் வராது தடுக்க வேண்டியது சிங்கள் தலைமைகளின் தற்போதைய கடமை என்ற கருத்தை பல சிங்கள நண்பர்களிடம் காண முடிந்தது. சிங்கள மக்கள் சுயாதீனமாக தமிழ் பகுதிகளில் குடியேறுவதை  தமிழர்கள் எதிர்க்கக் கூடாது என்ற கூறிய சிங்கள நண்பர் இதனை அரசு திட்டமிட்டு செய்வதை கண்டிக்கவும் தவறவில்லை. ஒரு தமிழனோ முஸ்லீமோ நாட்டின் எந்த பகுதியிலும் குடியேற உரிமையுள்ளது. அதே உரிமை சிங்கள் மக்களிற்கும் உள்ளது என்பதை தமிழர்கள் மதிக்க வேண்டும் என்ற அவரின் கூற்று எனக்கு நியாயமாகவே இருந்தது.

புதுவருட தினம் தொடர்ந்த பட்டாசு வான வெடியுடன் பிறந்த போது தமிழ் பேசும் கிறீஸ்தவர்கள் புத்தாண்டு பிரார்தனைகளை முடித்து விட்டு எந்தவித பயமுமின்றி அதிகாலை 1 மணிக்கு வீடு சென்றார்கள். இந்த நிலை தேர்தலுக்கு பின்னும் நீடிக்குமா என்ற சந்தேகம் தமிழர்கள் மனதில் இல்லாமல் இல்லை. நான் தாயகத்தில் தங்கி நின்ற காலப்பகுதியல் இரண்டு தமிழர்கள் கொழும்பில் கடத்தப்பட்டதாக ஒரு செய்தி வந்தது. ஆனால் பின்னர் அதைப் பற்றிய செய்திகள் வரவில்லை.

ஆனால் கொழும்பில் தற்போது தேர்தல் வன்முறைகள் ஆரம்பமாகியுள்ளது. ஆளும் கட்சி பழிவாங்கலாக பலரை கைது செய்கின்றார்கள். கடத்துகிறார்கள். மருதானையில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரரான கித்ஜஸிரி ராஜபக்ஷ கடத்தப்பட்ட போது அந்த பகுதி மக்கள் இன பேதமின்றி தெருவில் இறங்கி போராடியதை காண முடிந்தது. இந்த போராட்டத்தின் விளைவோ என்னவோ முகமூடி அணிந்தவர்களால் கடத்தப்பட்ட அந்த அமைப்பாளர் பின்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த நபர் ஏற்கனவே பொலீசாரால் சமூக விரோத செயற்பாடுகளிற்காக எச்சரிக்கப்பட்டவர். கடந்த மே மாதத்திற்கு பின்னர் பாதாள உலக அமைப்பை சேர்ந்த பலர் இவ்வாறு முகமூடி அணிந்தவர்களால் கடத்தி செல்லப்பட்டு பின்னர் தெருக்களில் பிணமாக மீட்கப்பட்ட செய்திகளை பலர் இந்த நேரத்ததில் நினைவு கூர்ந்தனர். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

அதனால் இலங்கையில் ஜனநாயகம் தளைக்க மக்கள் அனைவரும் இன மத பாகுபாடின்றி போராட வேண்டிய தேவை இன்று மிகவும் அவசியமாக உள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு புதிய மாற்றம் ஒன்றை  சகல இனத்தவர்களும் விரும்பினாலும் அதை நிறைவேற்றும் ஒருவர் இந்த தேர்தலில் நிற்கவில்லை என்ற கருத்தே பெரும்பான்மையாக உள்ளது. வடக்கில் உள்ள மக்கள் இந்த தேர்தல் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இந்த தேர்தலை பாவித்து குறைந்தபட்சம் சில சலுகைகளையாவது தமிழ் கட்சிகள் தமக்கு பெற்று தர வேண்டும் என்ற கருத்தில் தமிழ் மக்கள் பலர் உடன்பட்டார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் யாருக்கு ஆதரவளிப்பது என்ற முடிவுக்கு வர இழுத்தடித்தை குறையாக கூறிய மக்கள் தேர்தல் காலங்களில் என்னென்ன சலுகைகளை பெற முடியேமோ அவற்றை பெற வேண்டியதுதான் ஒரேவழி என்று கூறினர். முஸ்லீம்களை பொறுத்தவரை அவர்களின் வாக்குகள் பிரியும் நிலைப்பாடே உள்ளது. ஜேவீபியின் பிரசன்னம் சரத் பொன்சேகாவிற்கு போகும் முஸ்லீம் வாக்குகளை மகிந்த ராஜபக்சவிற்கு திருப்பியுள்ளது. மேலும் ஒரு இராணுவ தளபதியை நாட்டின் ஜனாதிபதியாக்குவது ஆபத்தானது என்ற கருத்தில் சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அச்சம் தெரிவிப்பதும் மகிந்த மீதான ஆதரவை கூட்டியுள்ளது.

திரும்பும் பக்கமெல்லாம் கண்ணில்படும் மகிந்த ராஜபக்ஷவின் படங்கள் விளம்பரங்கள் சிலவேளை எதிர்மறையான விளம்பரமாக மாறலாம். இந்தியாவில் நான் பார்த்த கட்அவுட்டுகளை மிஞ்சும் அரசின் பிரச்சாரங்கள் நேர்மறையான தேர்தல் முடிவை கொண்டு வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

யார் குத்தி என்றாலும் அரிசி வரட்டும் மக்கள் கஞ்சியாவது குடிக்க முடிகிறதா என்று பார்க்கலாம். இன்று பெரும்பான்மையான சிங்கள தமிழ் முஸ்லீம் மலையக மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஒன்றாகவே எனக்குப்படுகிறது. ஆனால் இந்தத் தேர்தல் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கொண்டுவரப் போவதில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வைக்கொண்டு வருவதற்கு இன மத பேதங்களுக்கு அப்பால் மக்கள் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே தீர்வு கிட்டும்.

அந்த வகையில் தெருவில் காவல் கடைமையில் நின்ற ஒரு இராணுவ சிப்பாயின் “இந்த கிழட்டு அரசியல்வாதிகளை வீட்டுக்கனுப்பி விட்டு இளையவர்கள் பாராளுமன்றம் சென்று இந்த நாட்டை வளம்படுத்த வேண்டும்” என்ற அங்கலாய்ப்பு நியாயமானதாகவே இருந்தது.

இலங்கை சென்ற மற்றவர்களின் அனுபவம்:

புலம்பெயர் புனைகதைக்குள் புகுந்துவந்த பயணம். : வவுனியன்

புலம்பெயர்ந்த தமிழர் குழு – இலங்கை அரசு – கொழும்பு மாநாடு : ரி கொன்ஸ்ரன்ரைன்

தேசியத் தலைவரின் உரைக்கு லண்டன் எக்செல் மண்டபத்தில் மதியுரைஞர் வழங்கிய பொழிப்புரை : எஸ் வாசுதேவன்

Maaveerar_Naal_Excel2009அன்பான தமிழீழ மக்களே வழமை போல இந்த ஆண்டும் எங்கட தலைவரின்றை உரையிலை (சுடச் சுடச் ஆற்றும் மாவீரர் தின உரை : ஈழமாறன்)  ஒளிச்சிருக்கிற சில விசியங்களை உங்களுக்கு இங்கை சொல்லப் போறன். இந்த ஈழமாறன் ஒரு மாறாட்டக்காறன். அவனுக்கு நான் அடிக்கடி சொல்லுறனான் எடேய் கவனமா எழுத்துப் பிழையளை பார் எண்டு! அவன் பாங்கோக்கிலை எங்கட பெடியள் பேச்சுவார்த்தை காலத்திலை கொடியிடை பெட்டயளை ஆவெண்டு பாத்தமாதிரி பாத்து நான் தலைவருக்கு சொன்ன உரையிலை ஒரு பெரிய பிழை விட்டுட்டான். வழமையா ரைப்பண்ணிற பெடியளை இந்த துலைவார் வன்னியிலையிருந்து அள்ளி கொண்டுபோய் எல்லா இடமும் தலையாட்ட வைச்சதிலை உவன் ஈழமாறனை ரைப்பண்ண தலைவர் சொன்னவர்! அவன் ஒரு பெரிய எழுத்துப்பிழை விட்டிட்டான்.  வெளிநாட்டிலை இருக்கிற நம்மட ஆட்கள் தயவு செய்து மன்னிச்சுக் கொள்ளுங்கோ. புலன்பெயர்ந்த மக்குகளாகிய உங்களை அவன் புலம்பெயர்ந்த மக்கள் எண்டு ரைப்பண்ணி உங்களை அவமதிச்சுப் போட்டான். ஆனால் தலைவர் அதுக்குள்ளையும் சூசகமா ஒரு செய்தி சொல்லியிருக்கிறது உங்களுக்கு தெரியம் தானே.

தலைவர் தன்றை உரையிலை யாழ்ப்பாணம் எண்ட சொல்லை ஒரு இரண்டு இடத்திலை மட்டும் தான் சொல்லியிருக்கிறார் எண்டு நீங்கள் கவலைப்படக் கூடாது. யாழ்ப்பணத்திலை வன்னி எவ்விடம் என்பது உங்களுக்கு தெரியும். நாங்கள் யாழ்ப்பாண ஆக்கள் படிச்ச ஆக்களா இருந்தாலும் அந்த வன்னி மக்களின்றை வீரத்தை வீச்சா காட்ட வேணும் எண்டுதான் தலைவர் வன்னி என்ற சொல்லை பல இடத்திலை பாவிச்சிருக்கிறார் எண்டதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தலைவர் தான் இறந்ததை பற்றியும், இறக்காததைப் பற்றியும் மிகவும் தெளிவாக சொல்லியிருக்கிறார். அதுக்குள்ளை இன்னுமொரு விசியம் ஒளிஞ்சிருக்கு. அதை நீங்கள் வலு கவனமாக பாக்கவேணும். முன்பு புலன்பெயர்ந்த மக்கள் “தலைவர் இருக்கிறார், இல்லை” என்ற விளையாட்டை விளையாடிச்சினம். இப்ப “ராம் (கிழக்கு மாகாண தளபதி) உள்ளே, வெளியே” விளையாட்டு விளையாடினம். இது எங்கட தலைவரின்றை துரதரிசனத்தை வடிவா காட்டிறதை நீங்கள் பாக்கலாம். இதிலை தலைவர் சொல்லுற முக்கிய விசியம் புலன்பெயர் மக்களுக்கு தமிழீழ போராட்டம் ஒரு விளையாட்டு! அவை எங்களை வைச்சு ஒரு காலத்திலை துரோகி, தியாகி என்ற விளையாட்டும் விளையாடுவினம் என்ட உண்மையையும் தலைவர் இதிலை கலந்திருக்கிறார். புலன்பெயர் நாட்டிலை இருக்கிற எங்கடை பெடியள் காசு விசியத்திலை வலு கவனம் எண்டதை தலைவர் சொன்னாலும் அவர் உண்மையிலை இந்த காசுக்காகத் தான் அவை குழி பறிச்சவை எண்டதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

மற்றது இவன் டக்கிளசை நாங்கள் எத்தனை தரம் கட்டிப்பிடிச்சு கொஞ்ச நினைச்சும் அவன் தப்பீட்டான். கட்டிப்பிடிக்கிற வெறியிலை கடைசியிலை  நாங்கள் வன்னி மக்களை எப்படி கட்டப்பிடிச்சம் எண்டதையும் தலைவர் இஞ்சை சொல்லியிருக்கிறார். தோழரே துப்பாக்கியை உயர்த்தும் எதிரி தானே அது! குறி பார்த்து நல்லா சுடு. எதிரி இல்லையா இருக்கவே இருக்கிறான் சக போராளி! அவனும் இல்லையா இருக்கவே இருக்கிறார்கள் மக்கள். கடைசி நேரத்திலை நூற்றுக்கணக்கான மக்கள் எங்கட பிடியிலை இருந்து தப்பிச் செல்லேக்கை எங்கட இயக்கம் எவ்வளவு விசுவாசமாக குறி தவறாது சுட்டார்கள் என்பதை தலைவர் மிகவும் விலாவாரியாக விளக்கியுள்ளார்.

இந்தியா, பின்நவீனத்துவம், எம்ஜிஆர், சீனா, வணங்கா மண், அமரிக்கா என்று எங்கடை இயக்கம் அவையோடை செய்த அரசியலாலை மக்கள் என்ன பலன் பெற்றிருக்கினம் எண்டதை தலைவர் சொல்ல மறக்கேல்லை. அதிலை ஒரு செய்தி ஒளிச்சிருக்கிறதை நீங்கள் கவனிச்சிருக்க மாட்டியள்.  சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தானை போன்ற எதிரும் புதிருமான நாடுகளை ஒரு குறைந்த பட்ச புரிந்துணர்வுடன் (புலி அழிப்பு) ஒரு வேலைத்திட்டத்தை போட்டுக்கொடுத்தவர் எங்கடை தலைவர் தான். இந்த கூட்டுக்குள்ளை அமரிக்காவையும் ஏன் சர்வதேசத்தையே புத்திசாலித்தனமாக இணைத்த பெருமை எங்கடை தலைவரைச் சாரும். உந்த சூழல் மாசடையிற விசியத்திலை கூட அடிபடுகிற சர்வதேசம் எங்கட தலைவரின்றை சிந்தனையாலை எப்பிடி ஒற்றுமைபட்டு இந்த ஒப்பிறேசன் பீக்கனை வடிவா முடிச்சிரிக்கினம் எண்டதை நீங்கள் வடிவாக இப்ப பாக்கிறியள். ஆனால் இந்த மாற்று இயக்க ஆக்கள் இன்னும் குறைந்த பட்ச புரிந்துணர்வில ஒரு தளம் அமைக்க படுகிறபாட்டை கிட்டடியிலை சுவிசிலை கூட பாத்திருப்பியள்.  எங்கட தலைவரின்றை கெட்டித்தனம் இப்ப இவைக்கு விளங்கியிருக்கும்.

மற்றது பாருங்கோ அமரிக்கன் கப்பல் அனுப்புவான் எண்டு ஆவெண்டு கொண்டு நில்லாமல் தலைவர் இந்தியா தேர்தல் முடிவை பாத்து ஏமாந்ததை தலைவர் தன்றை உரையில் சொல்லாததன் காரணத்தை நான் கட்டாயம் விளக்க வேணும். இந்த ஜெயலலிதா அம்மாவிலை தலைவருக்கு எப்பவும் ஒரு கண். அவா எம்ஜீஆருக்கு நல்லா பிடிச்ச ஒரு ஆள்தானே அதாலை தலைவருக்கும் அவாவை நல்லா பிடிக்கும். தயவு செய்து சும்மா எல்லாத்துக்கும் விசில் அடிக்காது இதை வடிவா கேளுங்கோ. இந்திய தேர்தலிலை அம்மா வெண்டிருந்தா பிறகு அவாவை கட்டிப்பிடிக்க பொட்டன்றை ஆட்களே அனுப்ப வேண்டி வந்திருக்கும். அம்மா முந்தி பகிடிக்கு சொன்ன விசியங்களை தலைவர் ஒரு காலமும் மறக்க மாட்டார். மற்றது அம்மாவும் சும்மா பம்மாத்துக்கு தானே தமிழீழத்திற்கு ஆதரவு எண்டு சொன்னவா. நல்ல காலம் அங்கை அம்மா வராதது.

தலைவர் புலன்பெயர் நாட்டிலை எங்களை காப்பற்ற நடைபெற்ற எல்லா போராட்டத்தை பற்றியும் கூறேல்லை எண்டு லண்டன் தவிர்ந்த மற்ற நாட்டு மக்கள் கோவிக்க கூடாது. சுவிசிலை ஒருத்தர் மணவறை போட்டு உண்ணாவிரதம் இருந்தது தான் தலைவருக்கு மிகவும் பிடிச்ச உண்ணாவிரதம். ஆனால் மக்டொனாலஸ் உண்ணாவிரதம் தலைவரின் அமரிக்க விசுவாசத்திற்கு கிடைத்த ஒரு பாராட்டாக நினைத்து தான் தலைவர் பரமேஸ்வரனுக்கு மட்டும் தன்றை நன்றியை தெரிவித்திருக்கிறார்.

தலைவர் தான் படிக்காட்டிலும் தமிழர்கள் நல்லா கணக்கு படிச்சவை எண்டு தான் வன்னியிலை இடம்பெயரந்த மக்கள் பற்றின கணக்கை கொஞ்சம் கொம்பிளிக்கேற்றா சொல்லீட்டர். நான் அதை கட்டாயம் உங்களுக்கு விளக்கவேணும். பொட்டனிடம் தலைவர் வேதனையுடன் எத்னை ஆயிரம் மக்கள் இன்னும் இருக்கினம் எண்டு கேட்டது தற்சமயம் நாங்கள் பலி கொடுக்க ஆட்கள் காணாட்டி பிறகு தலைவற்றை உயிருக்கு ஆபத்து என்பதை நல்லா புரிஞ்சுகொண்டார்.  அந்த பய கெலியிலைதான் எத்தனை ஆயிரம் மக்கள் இன்னும் வன்னியலை இருக்கினம் எண்டு கேட்டவர்.  3 லட்சம் மக்களை வைத்து கடைசி ஒரு மூன்று மாதம் சமாளிக்க முடியும் என்று தலைவருக்கு தெரியும். ஆனால் அவர் கே.பியின்றை திட்டத்தை நம்பினதாலை தான் மோசம் போனதையும் வலு கிளியரா தலைவர் சொல்லியிருக்கிறார்.

தலைவரின் எதிர்கால சிந்தனை என்ற பெயரிலை வெகு விரைவிலை ஒரு புத்தகத்தை அடிச்சுவிட லண்டன் புலியள் இப்ப முடிவெடுத்திருக்கினம். அந்த சிந்தனையளை வடிவா தலைவர் உங்களுக்கு விளக்கியிருக்கறார். புத்தகம் வந்ததும் அதுக்கொரு விழா வைச்சு அங்கை வெளியிடேக்கை கண்ணை மூடிக்கொண்டு அன்பழிப்புகளை அள்ளி வழங்குங்கோ. தலைவரின் எதிர்கால சிந்தனையிலை தலைவர் ஒரு விசயத்தை சொல்லாமல் விட்டதை நீங்கள் கவனிச்சிருப்பியள். வட்டுக்கொட்டை தீர்மானம் மற்றது காலம் கடந்த தமிழீழ அரச. இதிலை வட்டுக்கொட்டையாலை தலைவர் இவ்வளவு காலமும் பட்ட கொதிவலியை தெரியாதவை கொஞ்சப்பேர் திரும்பவும் வட்டுக்கொட்டை பற்றி பறையினம். தலைவர் உள்ளுக்குள்ளை நல்லா சிரிச்சுப்போட்டு உவையும் தன்னை மாதிரி நல்லா அவதிப்படட்டும் எண்டு தான் அவர் ஒண்டும் சொல்லேல்லை.

மற்றது காலம் கடந்த தமிழீழ அரசு. உவர் உருத்திரர் வந்து என்றை பதவிக்கு பலநாளாக கண் வைச்சிருந்தவர். அது எங்கடை தலைவருக்கும் நல்லா தெரியும். அது தான் அவரும் அதைப்பற்றி பெரிசா கதைக்கேல்லை. உந்த காலங்கடந்த தமிழீழ அரசு என்ற பேரை மாத்தி புலன்பெயர் காசுபுடுங்கும் அரசு எண்டு மாத்தச் சொல்லி தலைவர் அவைக்கு கடும் உத்தவை போட்டிருக்கிறார். புலன் பெயர் மக்கள் தன்னை விட மிக முட்டாள்கள் எண்டதையும் தலைவர் இதிலை நல்லா விளக்கியிருக்கறார்.

அன்பார்ந்த புலன்பெயர் மக்குகளே!
அடுத்த வரியம் உங்களை சந்திக்க எலுமோ தெரியாது. ஆனால் தலைவர் தலைவர் எண்டு வரிக்கு வரி சொன்னதை நீங்கள் வலு கவனமாக கவனிச்சிருப்பியள். இல்லாட்டி நீங்கள் என்னையும் துரோகியாக்கி போடுவியள்.

புலியளின் தாகம் புஸ்வான தாயகம்!
டாக்டர் மதியுரைஞர்.

மாவீர்கள் என்றால் யார்? வணங்கப்பட வேண்டியவர்கள் யார்? – கார்த்திகை 27 ஒரு சுயவிமர்சனம் (2) : வாசு (முன்னாள் போராளி)

Pirabakaran_Mahathayaபுலிகளால் படுமோசமாக சித்திரவதைக்கு உட்பட்டு பின்னர் கொல்லப்பட்ட புலிகள் அமைப்பின் முன்னாள் உப தலைவர் மாத்தையா உட்பட 700 போராளிகளை எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். புலிகளால் துரோகி முத்திரை குத்தப்பட்ட இவர்கள் தமிழ் மக்களின் நலனுக்காக தானே இயக்கத்தில் இணைந்தவர்கள்? பிரபாகரனின் முட்டாள்தானமான முடிவுகள் தமிழ் பேசும் மக்களிற்கு ஒரு விதமான விடிவையும் ஏற்படுத்தாது என்பதை உணர்ந்து தானே அவர்கள் புலிகளின் தலைமையை மாற்ற அன்று முனைந்தார்கள். இந்தியாவுடன் இணைந்து அவர்கள் செயற்பட முனைந்தது அன்று ஒரு முட்டாளை தலைமைப் பதவியில் இருந்து தூக்கவே என்பதை இன்று நாம் நன்கே உணர முடிகிறது. தமது பாதுகாப்புக்காக மக்களை ஆயிரக்கணக்கில் இன்று பலி கொடுத்த பிரபாகரனின் தலைமையுடன் ஒப்பிடுகையில் அன்று மாத்தையா வென்றிருந்தால் இந்த அவலங்கள் தடுக்கப்பட்டிருக்குமல்லாவா? புலிகளின் இன்றைய அழிவு தமிழ் மக்களின் நீதியான போராட்டத்தையும் அல்லவா அழித்து விட்டு சென்றுள்ளது.  ஆனால் இந்த அழிவை தடுத்து நிறுத்த முனைந்த மாத்தையா மற்றும் அவருடன் கொல்லப்பட்டவர்கள் இன்னமும் துரோகிகள். அவர்களை கொன்றவர்கள் மாவீரர்கள்.

நான் ஒரு வாதத்திற்காக மேற்சொன்ன விடயத்தை எடுத்தாலும் 1986 ரெலோ மீதான தாக்குதலுடனேயே புலிகளின் அனைத்து தலைவர்களும் தமிழ் மக்களின் விரோதிகளாக மாறி விட்டார்கள்.  அன்று ரெலோ மீதான தாக்குதல் நடாத்துகையில் யாழ் மக்கள் கொக்கோகொலா கொடுத்ததை நேரில் கண்டவன்! ரெலோ மீதான தாக்குதல் நடாத்துகையில் யாரும் கேள்வி கேட்கவில்லை. மாறாக உற்சாகப்படுத்தினார்கள். ரெலோவின் தாக்குதலை நியாயப்படுத்த நாமே (புலிகள்) கொள்ளையடித்த வாகனங்களை வரிசையில் நிற்பாட்டி விழா நடாத்துகையில் மக்கள் கைகொட்டி ஆரவாரம் செய்தார்கள். புலிகள் தொடர்ந்தும் மிகமோசமாக மாற்று இயக்கங்களை வேட்டையாடினார்கள். அதையும் மக்கள் பார்த்து மௌனித்து இருந்தார்கள். புலிகளின் கையில் இருந்த துப்பாக்கி அவர்களை மௌனிக்க வைத்தது. புலிகளால் கொல்லப்பட்ட அனைவரும் தமிழ் மக்களின் விடுதலையை உண்மையில் நேசித்தவர்கள். அரசியல் சித்தாந்த சிந்னையற்று  புலிகள் அமைப்பால் வளர்க்கப்பட்ட பலர் புலிகளின் பாசிச குணத்தை புரிந்து கொள்ளாது மேலும் மேலும் சகோதர படுகொலைகளை புரிந்து வந்தார்கள். இந்த கொலைகளை செய்தவர்கள் பிரபாகரனினால் புலிகளின் முக்கிய தளபதிகள் ஆக்கப்பட்டார்கள்.

கந்தன் கருணை படுகொலை! மக்களின் விடுதலையை நேசித்தவர்கள், நிராயுதபாணியாக தடுத்து வைக்கப்பட்டவர்கள்! அருணா என்ற புலிகளின் மூத்த தளபதியால் படுகோரமாக கொல்லப்பட்டவர்கள்! மக்கள் விடுதலையை நேசித்து இயக்கங்களுக்கு சென்றவர்கள் துரோகிகள். ஆனால் நிராயுதபாணிகளான அந்த போராளிகளை கொன்ற அருணா ஒரு மாவீரனாக கார்திகை 27இல் தரிசிக்கப்படுவான்.

Kittu_Colநினைக்கவே மனம் கொந்தளிக்கிறது! புலிகளின் முக்கிய தளபதி கிட்டு! ஆயிரக்கணக்கான ரெலோ, புளட், மற்றும் பல இயக்கங்களின் போராளிகளை கொன்று குவித்த ஒரு போர்க் குற்றவாளி! இவரினது படங்கள் கார்த்திகை 27இல் பாரிய மண்டபத்தை அலங்கரித்து நிற்கும். மக்கள் அதற்கு பூ போட்டு வணங்குவார்கள்! ஆனால் இவரால் கொல்லப்பட்ட அத்தனை மனிதங்களும் துரோகிகள்! ரெலோ சிறீ சபாரட்னம், புளட் சின்ன மென்டிஸ் உட்பட பல நூற்றுக் கணக்கான மாற்று இயக்கப் போராளிகளை தனது சொந்த கைகளால் நிராயுதபாணிகளாக வைத்து கொலை செய்த கிட்டு ஒரு மாவீரன். விடுதலையை நேசித்து சென்ற மாற்று இயக்கத்தினர் துரோகிகள்!

புலிகளின் கிழக்கு மாகாண தளபதிகள் புலேந்திரன், குமரப்பாவின் மரணத்தை அண்மையில் ஐரோப்பா எங்கும் சிறப்பாக கொண்டாடினார்கள். இவர்களும் இந்த முறை மாவீரர் தின மண்டபங்களில் புலம்பெயர் தமிழ் மக்களின் சிர வணக்கத்திற்குள்ளாகும் முக்கிய தளபதிகள். ஆனால் இந்த இருவரது தலைமையிலும் கொல்லப்பட்ட எல்லைக் கிராம அப்பாவி சிங்கள மக்கள் மற்றும் சிறு குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? இவர்களின் கொலை வெறிக்கு நூற்றுக்கணக்கான அப்பாவி சிங்கள மக்கள் மட்டும் கொல்லப்படவில்லை. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பல போராளிகளும் இவர்கள் இருவரினதும் கட்டளையால் கொல்லப்பட்டனர்.

மன்னார் தளபதி விக்டர். இவரின் படமும் மாவீரர் மண்டபங்களை அலங்கரிக்கும் ஒரு படம். ஆனால் அனுராதபுரம் தாக்குதலை தலைமை வகித்து சென்று  அப்பாவி நிராயுதபாணி சிங்கள மக்கள் வெட்டியும் சுட்டும் கொலை செய்த இந்த மனிதன் ஒரு மாவீரன்? தமிழ் சமூகமே வெட்கி தலைகுனிய வேண்டிய கொலைகளை மிக சர்வசாதாரணமாக செய்த இந்த புலித் தலைமைகள் மாவீரர்கள்? மக்களை நேசித்து மக்களிற்காக இவர்களால் கொல்லப்பட்டு இறந்தவர்கள் துரோகிகள்?

இதற்கெல்லாம் சிகரம் வைத்தால் போல் புலித் தலைமை செய்த இனச்சுத்திகரிப்பு! தமிழ் பேசும் முஸ்லீம் மக்களை யாழ் குடாவில் இருந்து சில மணித்துளிகளுக்குள் வெளியேற சொன்ன புலிகளின் தலைவருக்கும் நாசிகளுக்கும் ஒரு கொஞ்ச வித்தியாசமே. நாசிகள் யூதர்களை கொன்று குவித்தார்கள், புலிகள் முஸ்லீம் மக்களை உயிருடன் நடை பிணமாக யாழ் குடாவை விட்டு வெளியேற்றினார்கள். இந்த நிகழ்வுக்கு காரணமான பல தளபதிகள் இன்று மாவீரர் பட்டியலில் விளக்கேற்றி கௌரவிக்கப்படுவார்கள். ஆனால் இவர்களால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம் சகோதரர்கள் இன்னமும் புத்தளத்தில் அகதிகளாக வாழ்கிறார்கள்.

கார்த்திகை 27இல் நீங்கள் இறந்த போராளிகளை வணங்குவதில் தவறில்லை. ஆனால் வணங்கப்படுபவர்கள் தவறானவர்கள். இவ்வளவு காலமும் புலிகளிடம் ஆயுதம் இருந்தது கேட்க பயந்தோம். இனியும் இதை கேட்காது போனால் நாம் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் மட்டுமல்ல மானிட குலத்திற்கே துரோகம் செய்தவர்கள் ஆகி விடுவோம். ஹிட்லரும் ஜேர்மனி என்ற தேசத்தை நேசித்தவன் தான். ஆனால் அவன் மனித நேயத்தை முழுவதுமாக மறந்த மனிதன். நாம் மாவிரர் தினம் கொண்டாடுவது கிட்டத்தட்ட நாசிகளின் மரணத்தை கொண்டாடுவதற்கு ஒப்பானது. புலிகளில் இருந்து கரும்புலிகளாகி பிரபாகரனை நம்பி மோசம் போனவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள்! புலிகள் இயக்கத்தில் மக்களின் விடுதலையை நேசித்து சென்ற இறந்தவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் மட்டுமல்ல மக்களை நேசித்து மக்களிற்காக போராடி இறந்த அனைத்து இயக்கப் போராளிகளும் வணங்கப்பட வேண்டியவர்கள். இந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களும் வணங்கப்பட வேண்டியவர்கள்.

ஆனால் மக்களை ஏமாற்றி இந்த போராளிகளை மற்றும் தமிழ் சமூகத்தையே ஏமாற்றிய புலித் தலைமைகள் காலத்தால் மறக்கப்பட வேண்டியவர்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் வாழ்வை துறந்தவர்களை வஞ்சித்த புலி, புளொட், மற்றும் ரெலோ அமைப்புகளின் தலைமையை வணங்குவது மனித குலத்திற்கு அவமானம் தேடித்தரும் ஒரு செயல்! மக்கள் இதை மறந்தால் தமிழ் சமூகமே மனித குலத்திற்கு அவலத்தை தந்த ஒரு இனமாகவே மற்றவர்களால் பார்க்கப்படும்!

மாவீரர்களை நினைவுகூருவோம்!!!
அவர்களைக் கொச்சைப்படுத்தாமல்!

கார்த்திகை 27 ஒரு சுயவிமர்சனம் (1) : வாசு (முன்னாள் போராளி)

Maaveerar_Illamகாரத்திகை 27 மாவீரர் நாள்! புலிகள் அமைப்பில் இருந்து தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த புலி வீரர்களை மட்டும் நினைவு கூரும் நாள்! தம் சுயநலம் பாராது பொது நலனுக்காக தமது உயிர்களை அர்ப்பணித்த இந்த மனிதங்களை நினைவு கூர வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை. இயக்க வேறுபாடுகளை மறந்து இன்னுயிர்களை தியாகம் செய்த இந்த மறவர்கள் காலா காலத்திற்கு வணங்கப்பட வேண்டியவர்கள். மறுக்கப்பட முடியாத உண்மை.
ஆனால் கடந்த மே மாத நிகழ்வுகள் அதன் பின்னான அரசியல் மாற்றங்கள், அதற்கு முன்னான விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் செயற்பாடுகள் அனைத்தும் இந்த மாவீரர்களின் வீர மரண நியாயத்தை ஒரு அநியாயமான மரணமாக மாற்றி விட்டது என்பது சகிக்க முடியாத உண்மை. இன்று இலங்கையில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்களின் வெறுப்பை விடுதலைப் புலிகள் சம்பாதித்துள்ளனர். வெளி நாடுகளில் வாழும் தமிழர்களும் மெல்ல மெல்ல புலிகளின் பாசிச போக்கை உணர ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் புலிகள் இயக்கத்தில் இணைந்த 99 வீதமான போராளிகள் தேச விடுதலை என்ற ஒரு நோக்கோடுதான் அந்த அமைப்பில் இணைந்தார்கள். பலர் பலவந்தமாக இணைக்கப்பட்டார்கள். ஆயிரக்கணக்கில் தம் இன்னுயிர்களை தியாகம் செய்த இந்த போராளிகள் அனைவரும் புலிகள் அமைப்பின் இருப்பை காக்கவே பலி கொடுக்கப்பட்டார்கள் என்ற உண்மையை இன்று நாம் வெளிப்படையாக காண முடிகிறது. முள்ளிவாய்கால் முற்றுகைக்கு முன் புலிகளின் பாரிய தாக்குதலை புதுக்குடியிருப்பில் இராணுவம் முறியடித்தததை நாம் அறிவோம். அந்த தாக்குதலில் புலிகளின் அதி சிறந்த பல தளபதிகள் கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான போராளிகள் அவர்களுடன் கொல்லப்பட்டார்கள். இவர்களை அனைவரும் கொல்லப்பட்டது தனி ஒரு மனிதனை காப்பாற்றவே! பிரபாகரன் என்ற ஒரு மனிதனை காக்க புலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட 500 போராளிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பின்னர் பிரபாகரனிடம் சென்ற பொட்டு ‘நாங்கள் இங்கையிருந்தால் எல்லாரும் கொல்லப்படுவோம், உடைத்துக்கொண்டு வெளியேறுவோம்’ என்று கூற இந்த சமயத்திலும் பிரபாகரன் ‘இஞ்சை பாராடா பொட்டுவுக்கு மரண பயம் வந்திட்டது’ என்று அங்கு கூடியிருந்த சகபோராளிகளிடம் நக்கலடித்தார். இறந்த தளபதிகளின் பெயர்களை வெளியிட மறுத்ததுடன் ஏனைய போராளிகளை காப்பாற்றும் எந்த நடவடிக்கையையும் எடுக்க அவர் முனையவில்லை. மாறாக மேலும் பல போராளிகளை பலி கொடுக்கவும் மக்களை ஆயிரக்கணக்கில் பலிக்கடாக்கள் ஆக்கி வெளிநாடுகளில் இருந்து ஒரு அனுதாப அலையை பெறவே முழுமையாக முயற்சித்தார். இதன் விளைவு மக்கள் கூடியிருந்த இடங்களில் இருந்து வலிந்து தாக்கி அந்த இடங்களை இராணுவத்தின் குறிகள் ஆக்குவது.

மக்களும் போராளிகளும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போதும் சரணடையவோ அல்லது தப்பி செல்லவோ பிரபாகரன் முயற்சிக்கவில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் முற்றுகையில் தனது புத்திர செல்வம் காயமுற்றதும் பதைபதைத்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடேசன் மூலம் இராணுவத்திடம் உடனடியாக சரணடைய உத்தரவிட்டார். பிரபாகரனை ஒரு மிகமோசமான சுயநலவாதி  என்பதை அன்றுதான் பல புலிப் போராளிகள் உணர்ந்தார்கள். ஏற்கனவே தலைமையை காப்பாற்ற இவ்வளவு அழிவு வேண்டுமா என பல போராளிகள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தார்கள். இதன் உச்சக்கட்டம் பானுவை போட்டுத்தள்ள தலைவர் பிறப்பித்த உத்தரவு பல அதிர்வலைகளை புலிகள் மத்தியில் உருவாக்கியது.

இறுதிக் காலத்திலும் தனது பாசிச குணத்தை பிரபாகரன் விடவில்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகியது. ஆரம்ப காலங்களில் மைக்கல் என்ற விடுதலை புலி உறுப்பினரை தனது சொந்த நலனுக்காக பாயில் வைத்து சுட்டுக்கொன்ற பிரபாகரன் இறுதியில் அதேவிதமாக தன் மரணத்தை தழுவினார். பிரபாகரன் மரணம் பற்றி பல விதமான கதைகள் வந்தாலும் நான் நம்பகரமாக கேள்வியுற்றது இவரின் மெய்பாதுகாலரே இவரை போட்டுத் தள்ளியதாக! இரவு நந்தி கடலை கடக்க முயற்சிசெய்து அது முடியாது போக சற்று ஓய்வெடுத்த பிரபாகரனை அவரின் மெய்பாதுகாவலர்கள் திட்டமிட்டு நெற்றிப்பொட்டில் சுட்டுவிட்டு நந்திக் கடலில் தூக்கி போட்ட பின் அந்த பாதுகாவலர்கள் பின்னர் இறந்தவர்கள் போல் பாசாங்கு செய்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த தகவல்களை வன்னியில் இருந்து தப்பி சென்ற புலிகளின் முக்கியமான ஒரு தளபதியின் துணைவியார் உறுதிப்படுத்தினார். 

தனது சொந்த நலனுக்காக தனது போராளிகளை மாவீரர்கள் ஆக்கிய பின்னர் அவர்களை  வணங்கும் பிரபாகரன் தனது இயக்கத்தின் முதலாவது போராளி இறந்த தினத்தை மாவீரர் தினமாக பிரகடனம் செய்தார். இந்த மாவீரர் தினம் பின்னர் மாவீரர் வாரமாக ஒரு வாரம் அனுட்டிக்கப்பட்டு கார்திகை 27இல் உலகெங்கும் மாவீரர் தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. தாயகத்தில் இந்த நாட்கள் உணர்ச்சிகரமாக கொண்டாடப்பட்டு வந்தாலும் புலம்பெயர் நாடுகளில் இது பணம் கறக்கும் சடங்காகவே மாற்றப்பட்டது. 2002 இற்கு பின்னர் புலிகளின் தொழில் நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கையில் பிரபாகரனின் கொள்கை விளக்க உரையை நேரடியாக ஒலிபரப்பும் ஒரு விழாவாக இது மாற்றப்பட்டது.

லண்டனில் நடைபெறும் மாவீரர் நிகழ்வில் வாசலில் ஒரு கார்திகை பூ ஐந்து பவுண்களுக்கு விற்பார்கள். பிறகு உள்ளே வரிசையாக கோயில் திருவிழா வியாபாரிகள் போல் உதவியாளர்கள் பலர் புலி விளம்பர பொருட்களை விற்பார்கள். இதில் புலி சின்ன கோப்பையிலிருந்து புலிச்சின்ன துவாய், புலிச்சின்ன குடை, போன்ற பொருட்களை மக்களிடம் திணிப்பதுடன் மறுபுறத்தில் கொத்துறொட்டி முதல் கொக்கோகோலாவை 3 மடங்கு விலையில் மக்களிடம் விற்பார்கள். ஆக இறந்த மறவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளையும் புலிகளின் தலைமை தனது இயக்கத்தை சந்தைப்படுத்தும் நாளாக மாற்றியது.

இன்று புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டு ஐந்து மாதமாகிறது. புலிகளின் தலைவர் இருக்கிறார் இல்லை என்று முட்டாள் தனமான ஒரு விவாதத்துடன் இருக்கும் புலம்பெயர் புலி உறுப்பினர்கள் மீண்டும் கார்த்திகை 27ஐ விமர்சையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். பாரிய செலவில் லண்டனில் ஒரு பெரிய மண்டபம் இந்த முறையும் இதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதி திரட்டலுக்கு மாவீரர் தின ரிக்கற்றுகள் புலிகளின் லண்டன் உறுப்பினர்களால் தற்போது விற்கப்பட்டு வருகிறது. ரிக்கற் அனுமதி பத்திரமா அல்லது செலவிற்கான நன்கொடையா என்று தெரியவில்லை.

வன்னியில் தம் வாழ்விடங்களில் இருந்து மந்தைகள் போல் மிரட்டி தமது பாதுகாப்பிற்காக பிரபாகரானல் கடத்திச் செல்லப்பட்ட மக்கள் கூட்டம் இன்று அரச தடுப்பு முகாம்களில் அவல வாழ்வை எதிர் கொள்ளும் இந்த நேரத்திலும் இந்த புலிகள் மாவீரர் தினத்தை விமர்சையாக கொண்டாட மக்களிடம் ரிக்கற்றுகளை விற்பது மிகவும் கேவலமானது! இந்த புலம்பெயர் புலிகள் வன்னி இறுதி யுத்தத்திற்காக எனக்கு தெரிந்த பல நண்பர்களிடம் கெஞ்சி கூத்தாடி பின்னர் மிரட்டி  கடந்த மே மாதம் கூட ஆயிரக்கணக்கான பவுன்ஸை புடுங்கினார்கள். இந்த காசு அங்கு போய் சேர முன்பே தலைவர் போய்ச் சேர்ந்து விட்டார். காசை கமுக்காமாக அடித்த புலிப் பிரதிநிதிகள் இப்ப தலைமறைவு! ஆனால் இப்ப புதிதாக சில முகங்கள்  மாவீரர் தின நிதிப்புடுங்கலுக்காக புலம்பெயர் புலித் தலைமையினால் வீடுகள்தோறும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் தமிழ் மக்கள் மௌனமாக பார்த்துக்கொண்டு பணத்தை மீண்டும் இந்த பினாமிகளிடம் கையளிப்பது வன்னியில் தடுப்பு முகாம்களில் இருக்கும் அனைத்து மக்களிற்கும் செய்யும் மிக மோசமான துரோகம்! இதை விட மிக மேசமான துரோகம் காரத்திகை 27ஐ மாவீரர் தினத்தை விமர்சையாக கொண்டாடுவது!

மாவீர்கள் என்றால் யார்? வணங்கப்பட வேண்டியவர்கள் யார்? – கார்த்திகை 27 ஒரு சுயவிமர்சனம் (2) : வாசு

ஓசியில் ஒரு இந்திய எதிர்ப்பு ஓலம்! : வாசு

Pirabakaran V & Mahathaya‘மறை களண்ட கோமளிகள்!’, ‘வெள்ளி பார்க்க வந்த வெங்காயங்கள்!’, ‘இந்தியா ஒரு வாந்தி!’, ‘சோனியா ஒரு சோந்தி!’, ‘வடக்கன் வம்பிலை பிறந்தவன்’ இது நான் சொல்வது அல்ல. இந்தியா பற்றி அண்மையில் புலம்பெயர் தமிழ் தேசிய ஊடகங்கள் வெளிக்கொணர்ந்த பதங்கள்! 1980களில் இந்தியாவையும் இந்திய அரசை மட்டும் நம்பி படையெடுத்த தேசிய விடுதலைப் போராட்டம் இன்று இந்தியாவை வாந்தி பேந்தி என்று திட்டுமளவிற்கு வந்த காரணங்கள் வெள்ளிடைமலை!. சுருங்ககூறின் புலிகளின் இருப்பை இந்தியா கேள்விக்கு உள்ளாக்கியமையும் புலிகளை அழிக்க சிறீலங்கா அரசிற்கு உதவியமையுமே இந்த இந்திய எதிர்பின் இன்றைய உச்சக் கட்டம். ‘ஆகாசவாணி’யின் செய்திகளை மெய்மறந்து  கேட்ட யாழ்பாண மக்கள் இன்று அதே ஆகாசவாணியை அழிக்க வேண்டும் என்ற பார்வையில் கட்டுரைகள் பல  எழுதப்பட்டு வருகிறது. அதாவது இந்தியா என்ற தேசம் இருக்கும் வரை தமிழீழம் கிடைக்காதாம். இதை எழுதியவர் ஒரு அரசியல் ஆய்வாளராம். இவர் பெயர் சபேசனாம்!. நாம் அனைவரும் இந்தியாவை அழிக்க சீனாவுடன் கூட்டுப் புணர்ச்சி செய்ய வேண்டும் என்று நாசூக்காக வேறு சொல்லுகிறார். அட முட்டாள் பயலுகளே இந்தியாவில் இப்ப பிரபலமாக விற்கப்படும் பிள்ளையார் சிலைகள் செய்யப்படுவதே சீனாவில்தான்.

இந்த ஆய்வாளர் திலகம் இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி போற போக்கில இந்தியாவுக்கு விசா எடுப்பற்கு நாங்கள் ‘இந்தியாவின் இறைமைக்கு ஆதரவாக இருப்போம்’ என்று கற்பூரத்தில் அடித்து சத்தியப் பிரமாணம் எடுக்க  வேண்டி வந்தாலும் வரும்!. இதுதான் இந்த ஆய்வாளரின் இந்திய எதிர்ப்பின் பலாபலனாக இருக்குமே ஒழிய வேறு எதுவும் நடந்துவிடப் போவதில்லை.  1980களில் இருந்த நிலையில்தான் சர்வதேச அரசியல் இருப்பதாக  இந்த பத்திரிகையாளர் நினைப்பதுதான் ‘மறை களன்ட கோமாளி’யின் சிந்தனை. இதை லண்டன் வாழ் தமிழ்மக்கள் ஓசியில் படிப்பது….. ???

இந்திய எதிர்ப்பை இன்று மிக மோசமாக நடாத்திவரும் இந்த பத்திரிகைகளும் வானொலிகளும் யதார்த்தத்தை மறந்து கற்பனை உலகில் இருக்கிறார்கள்.  1986இல் சிறிலங்கா இந்திய ஒப்பந்தம் இடம்பெற்றபோது நான் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி கல்வி கற்றுக்கொண்டிருந்த சமயம். புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட சமயம், நான் புலிகளின் முக்கிய தளபதியாக இருந்த செங்கமலத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து. அப்போது அவர்களின் மனநிலை மிகவும் குழம்பியதாக இருந்தது. ”இந்தியாவின் உதவியுடன் நாம் மிகவும் நல்லவிதமாக நமது போராட்டத்தை வென்றெடுக்க முடியும். ஆனால் தலைமை பிழை விடுகிறது. என்ன செய்வது தலைமையின் சொல்லை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என அவர் மன வேதனையுடன் கூறியது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.

இந்தியா தனது நலனை தவிர வேறு எந்த நலனுக்காகவும் இலங்கைக்கு வரவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை! ஆனால் இந்திய இராணுவம் தமிழ் மக்களின் காவலாளிகளாகவே அன்று தமிழ் மக்களால் பார்க்கப்பட்டார்கள். கிழக்கில் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை இல்லாது செய்ய இந்தியா சில திட்டங்களை புலிகளுடன் தீட்டியது பலருக்கு தெரிய நியாயமில்லை. அது மட்டுமல்ல புலிகளின் தலைமைக்கு பல வாக்குறுதிகளை கொடுத்ததுடன் ”மாகாணசபையை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். சிங்கள இனவாத அரசு அதை நிச்சயம் மறுக்கும். அந்த நேரத்தில் நமது இராணுவம் வடக்கு கிழக்கில் உங்களிற்கு பயிற்சி அழித்து ஒரு தமிழ் தேசிய இராணுவத்தை ஏற்படுத்த அனைத்தும் செய்வோம்” என்று உறுதிமொழியும் வழங்கப்பட்டது.

ஆனால் ”வடக்கு கிழக்கில் புலிகள் மட்டுமல்ல மற்றைய குழுக்களும் இயங்க புலிகள் வழி சமைக்க வேண்டும்” என்றும் கோரப்பட்டது. இதுதான் புலிகளை உசுப்பேத்திய ஓரே ஒரு பிரச்சனை. இந்த நிபந்தனை இல்லாதிருந்திரதால் புலிகள் இந்திய இராணுவத்திற்கு நிச்சயம் சலாம் போட்டிருப்பார்கள்.  புலிகள் தம்மை தவிர எந்த ஒரு இயக்கமும் இருக்க கூடாது என்பதில் முனைப்பாக இருந்த ஒரே காரணம்தான் அவர்களை இந்தியாவுடன் மோத வைத்தது என்பதை புலிகளின் பல முன்னைநாள் போராளிகள் அன்றே ஒப்புக் கொண்டார்கள். மக்களின் நலனில் எந்தவித அக்றையும் கொள்ளாத புலிகள் தமது இருப்பை மட்டும் முன்நிறுத்தியது என்ன நியாயாம்? காலா காலமாக சிங்கள இனவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளான கிழக்குவாழ் தமிழ் மக்கள் இந்திய இராணுவ பிரசன்னத்தில் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தார்கள். புலிகள் மெதுவாக மக்களிடமிருந்து ஒதுக்குப்பட்டார்கள். இதைக் கண்ணுற்ற புலிகள் இனியும் இந்த நிலை நீடித்தால் தாம் முழுவதுமாக மக்களிடமிருந்து ஒதுக்குப்பட்டு விடுவோம் என்ற நிலையில் இந்திய இராணுத்துடன் மோதுவதே தம்மை காக்கும் என பிரபாகரன் உணர்ந்தார். புலிகளின் தலைவர் பிரபகாரனின் இந்த தனிப்பட்ட முடிவு தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றியதுடன் இந்தியா தமிழர்களுக்கு எதிரான ஒரு நாடாக மாற்றப்பட்டது.

வடக்கு கிழக்கு மக்களிடம்  எந்தவித அபிப்பிராயமும் கேட்காது தான்தோன்றி தனமாக யுத்த நிறுத்தத்தை மீறியது புலிகளே. இந்த முடிவை பல புலிப் போராளிகள் எதிர்த்தபோதும் தலைமைக்கு கட்டுப்பட்டு இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராடினார்கள். இதே போராளிகள் பின்னர் இந்தியாவுடன் சேர்ந்து பிரபாகரனை அழிக்க சதி செய்ததாக கூறி போட்டுத் தள்ளப்பட்டார்கள். மாத்தையா, சுசீந்திரன், செங்கமலம் உட்பட 700 புலிப் போரளிகள் பிரபாகரனினாலும் பொட்டம்மானாலும் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார்கள். இதன் பின்னர் இந்தியாவில் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்ட இந்திய முன்னைநாள் பிரதமரை எந்தவித அரசியல் காரணங்களும் இன்றி பிரபாகரனின் தனிப்பட்ட குரோத வெறிக்கு பலியாக்கியது தமிழ் மக்களை இந்தியாவின் நிரந்தர எதிரியாக்கியது. மிகவும் முட்டாள்தனமான இந்திய எதிர்ப்பு முடிவுகளை எடுத்தது புலிகள் அமைப்பும் அதன் தலைமையுமே!

ஒரு காலத்தில் சிறீலங்காவில் இருந்து இராணுவத்தால் துரத்துப்பட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தபோது இந்த புலித் தலைமைக்கு பாதுகாப்பும் பயிற்சியும் கொடுத்தது இந்தியாவே.! இந்தியா தனது நலனுக்காக தான் இலங்கைக்கு வந்தது என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால் அதை நமது அரசியல் இலாபத்திற்கு பாவிக்க தெரியாத முட்டாள்களாக இருந்த புலிகளின் தலைமை படு முட்டாள்கள் தான் என்பதை 22 வருடங்களின் பின் மீண்டும் நிரூபித்துள்ளார்கள். அன்று சமயோசிதமாக முடிவெடுத்திருந்தால் நாம் இன்று இந்த இழப்புகளை சந்தித்திருக்க தேவையில்லை. புலிகளின் பொய்யான பிரச்சாரங்கள் இன்று புலம்பெயர் மக்களை இந்தியாவிற்கு எதிராக திருப்பியதை ஏன் இந்த பத்திரிகையாளர்கள் உணர மறுக்கிறார்கள். அனைத்து தவறுகளையும் துரோகங்களையும் நாமே செய்துவிட்டு இன்று இந்தியா துரோகி அதை அழிக்க வேண்டும் என்பது என்ன நியாயாம்? வரலாறு தெரியாதவர்கள் ஓசியில் பத்திரிகை நடாத்தினால் இதைவிட வேறு எதைதான் எழுதுவார்கள்?

ஓசியில் பேப்பர் விடுவது இலகுவான விடயம் அல்ல. அதற்கு வர்த்தகப் பெருமக்களின் ஆதரவு வேண்டும்! அவர்களுக்கென்ன, என்ன விடயம் பத்திரிகையில் இருக்கிறது என்பது அவர்கள் கவலையில்லை. எத்தனை பேர் ஓசியில் படிக்கிறார்கள் என்பதே அவர்களின் கவலை! அண்மையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் சிறீலங்காவின் போர்கால நிலவரம் தொடர்பாக வெளியிட்ட 72 பக்க அறிக்கையில் உள்ள பல தகவல்கள் நமக்கு தெரிந்தவையே! குறிப்பாக சிறீலங்கா அரசு செய்த அத்தனை மனிதஉரிமை மீறல் விடயம் முதல் மக்களை கும்பல் கும்பலாக ஷெல்லடித்து கொன்றது வரை, இந்த ஓசி பேப்பர்கள் இதை வரிக்குவரி எழுதியதோடு அதை ஊதிப் பெரிப்பித்து  இலங்கையில் ஒரு இனப்படுகொலை நடக்கிறது என்று ஓலமிட்டு அழுதன.

ஆனால் அமெரிக்க ராஜாங்க திணைக்கள அறிக்கையில் வரிக்குவரி புலிகள் செய்த அக்கிரமங்கள் பற்றி இந்த ஊடகங்கள் ஒரு மூச்சுக்கூட விடவில்லை. மாறாக அங்கு  நடப்பவை எல்லாம் சரியெனவும் மக்கள் ஒரு சில தியாகங்களை செய்தால்தான் விடுதலை பெறமுடியும் என்றும் இந்த  சேயோன்களும் சபேசன்களும், கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதிக் குவித்தார்கள். ஆனால் தப்பிச் செல்ல முனைந்த தமிழ்மக்களை புலிகள் சுட்டுக் கொன்றதையோ பத்து வயதுப் பாலகன்களை கடத்தி சென்றதை பற்றியோ எந்த மூச்சும் விடவில்லை. அது மட்டுமல்ல ஒரு சில முதுகெலும்புள்ள ஊடகங்கள் அந்த செய்திகளை வெளியிட அவர்களை புலியெதிர்ப்பு ஊடகங்கள் என்று முத்திரை குத்தி அவர்களையும் துரோகிகளாக்கினர்.

இந்த பத்திரிகை ஒருகாலத்தில் பயோடேட்டா என்ற பெயரில் புலம்பெயர் வாழ் பெண் ஜனநாயகவாதிகளை புலியெதிர்ப்பாளர்கள் என்ற போர்வை சுமத்தி அவமானப்படுத்தினார்கள். ஆனால் புலிகள் மக்களை கொடுமைப்படுத்தியதை இன்று வன்னி தடுப்பு முகாம் மக்கள் கூறுவதைக் கூட தமது பத்திரிகையில் போட திரணியற்று நிற்கின்றனர். ஆனால் இந்த சேயான்களுக்கு ராஜேஸ் பாலாவையும் நிர்மலாவையும் உச்சரித்தால் மட்டும் கிக் வந்துவிடும். இவர்களுடைய அந்த எழுத்துக்களுக்கு இவர்கள் ஓசியில் பத்திரிகை அடிப்பதை விடுத்து காசுக்கு விற்பனை செய்யும் மஞ்சள் பத்திரிகையே நடாத்தி இருக்கலாம்.

அதற்குள் தாங்கள் சிவப்புச் சட்டைகாரராம் என்று சிலருக்கு தற்பெருமை. மம்மி ஜெயலலிதா தம்பிக்கு தமிழீழம் வாங்கித் தருவார் என்று அரசியல் ஆய்வு செய்தவர்கள், ஓபாமாவும் ஹிலரியும் கப்பல் அனுப்புவார்கள் என்று தலைவரை நந்திக்கடல் ஓரத்தில் வெள்ளி பார்க்கவிட்ட பெருமை ஒரு பேப்பர் உட்பட தேசிய ஊடகங்களையே சாரும். தலைவரை உசுப்பேத்தி உசுப்பேத்தி முருங்கை மரத்தில் ஏத்தி முள்ளிவாய்காலில் தள்ளிவிட்ட இந்த ஜம்பாவான்களுக்கு மாவீரர் தினத்தன்று தேசிய ஆய்வாளர் விருதுகைள வழங்கி கௌரவிக்க வேண்டும். அப்போது தான் தலைவரின் ஆத்மசாந்தி அடையும்.

தடுப்பு முகாம் தமிழர்கள் இலங்கை பிரஜைகளா? : வாசு

Wanni IDPsகடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழீழ தனித்தேசம் அமைக்க நடைபெற்ற ஆயுதப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் கடந்த நான்கு மாதங்களாக இலங்கை அரசின் தடுப்பு முகாம்களுக்குள் இருக்கும் மக்களின் அவல வாழ்விற்கு முற்றுப்புள்ளி வந்தபாடில்லை. இந்த மக்கள் இன்னுமொரு நாட்டின் போர்க் கைதிகள் போலவே தற்போதும் நடாத்தப்பட்டு வருகிறார்கள். விடுதலைப் புலிகளை களையெடுப்பதாகவும் அதனால் தான் மக்களை தடுத்து வைத்திருப்பதாகவும் அரசு கூறுகிறது.

ஆனால் விடுதலைப் புலிகளின் மிக முக்கியமான புள்ளிகளான தயா மாஸ்டரையும் ஜோர்ஜ் மாஸ்ரையும் பிணையில் விடுவித்துள்ளது.  புலிகளின் இந்த இரு மாஸ்டர்களும் புலிகள் இயக்கத்தில் மிக முக்கிய பதவி வகித்தவர்கள். புலிகளின் தலைவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள். ஆனால் இவர்களை சுதந்திரமாக வெளியில் செல்ல அனுமதித்த அரசு புலிகள் இயக்கத்தால்  வலிந்து கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்களையும் யுவதிகளையும் மக்களையும் இன்னமும் தடுப்பு முகாம்களில் வைத்திருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. புலிகளை பிரித்தெடுக்கிறோம் வடித்தெடுக்கிறோம் என்று புனைகதை பேசும் அரசு நூற்றுக்கணக்கான விடுதலைப் புலி உறுப்பினர்கள் இந்த முகாம்களில் இருந்து படையினருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து வெளியேறியதை அறியவில்லையா? புலிகள் அமைப்பின் நிதர்சனம்  தொலைக்காட்சியில் அடிக்கடி வந்து போன திருநாவுக்கரசு கொழும்பு விமான நிலையத்தின் ஊடாக தப்பி சென்றபோது இலங்கை அரசு கண்களை இறுக மூடிக்கொண்டிருந்ததா?

இன்று வன்னி பிராந்தியத்தில் முழு அமைதி நிலவுகிறது. புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர். புலிகள் அமைப்பின் அதிகாரங்களை முழுவதுமாக தம்வசம் வைத்திருந்த புலிகளின் மேல்கட்டுமானம் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர்கள் கொல்லப்பட்டும் கைது செய்யப்பட்டும் உள்ளனர். அது மட்டுமல்லாது மே 17ம் திகதி  முள்ளிவாய்க்கால் முற்றுகையை உடைத்து சென்ற புலிகளின் ஒரே ஒரு தளபதியான கெங்காவும் (கருணாவின் அந்தஸ்தை ஒட்டிய ஒரு கிழக்கு மாகண தளபதி) கடந்த ஜுலை 26ம் திகதி வெள்ளை கொடியுடன் விசுவமடுவில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார். உண்ண உணவும் இன்றி வெளியுலகில் எந்த தொடர்புமற்ற நிலையில் ஜெயந்தன் படையணியின் முக்கிய தளபதி இவ்வாறு சரணடைந்தது வன்னியில் புலிகளின் இருப்பை நன்கே வெளிப்படுத்துகிறது. உதிரிகளாக காடுகளுக்குள் அனாதரவாக திரியும் ஏனைய புலிகள் தலைமையின் தொடர்புகள் அற்று பட்டினியையும் தனிமையையும் எதிர்கொள்ள முடியாது காடுகளில் இருந்து கிராமங்களை நோக்கி வருகின்றனர். இவர்களில் பலர் தற்போது கைது செய்யப்பட்டும் உள்ளனர். இந்த நிலையில் இன்னமும்  புலிகள் போரட இருக்கிறார்கள் என்ற பயப்பிராந்தியை அரசு தோற்றுவிப்பதுதான் வேடிக்கையாக உள்ளது.

இரண்டரை லட்சம் மக்களை தொடர்ந்து முகாம்களில் வைத்திருப்பதுடன் வன்னியில் மக்களின் சுதந்திர நடமாட்டங்களை தடுப்பதே அரசின் தற்போதைய நோக்கமாக தெரிகிறது. கடந்த வாரங்களில் ஒரு தொகை மக்கள் மீளக் குடியமர்த்த கிழக்கிற்கும் யாழ் நாகரிற்கும் எடுத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் பலர் இன்னமும் இடைத்தாங்கல் முகாம்களில் தடுத்து வைத்திருப்பது அரசு மேலான சந்தேககங்களை மேலும் வலுப்படுத்துகிறது. இருப்பினும் கிட்டதட்ட 5000 பேர் கிழக்கில் மீள குடியமர்த்தப்பட்டு உள்ளதாக தெரியவருகின்றது. இந்த மக்கள் அண்மையில் தாம் முகாம்களில் பட்ட அவலங்களை வெளிப்படையாக கூறியதுடன் அரசின் அசமந்தை போக்கை வெளிப்படையாகவே விமர்சித்தார்கள்.

இன்று அரசு இவ்வளவு தாமதமாக பாதிக்கப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்த முயல்வது தமிழ் பேசம் மக்களின் பாரம்பரிய வாழ் நிலங்களின் வரைபடத்தை மாற்றவே. கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு நிலையை வன்னி பிராந்தியத்தில் கொண்டுவரவே இலங்கை அரசு முயல்கிறது. கிழக்கில் ஏற்கனவே சிங்கள மக்களின் குடியேற்றங்கள் அவர்களின் நிரந்தர வாழ்விடமாகவும் மாறியுள்ளது. இன்று கிழக்கில் ஏறக்குறைய தமிழ் மக்களின் பெரும்பான்மைக்கு சமமான சனத்தொகையில் சிங்களவர்கள் குடியிருக்கிறார்கள். அதே போல் வன்னியிலும் சிங்கள மக்களை குடியேற்றுவதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையக  இல்லாதொழிக்க முனைவதாக பலத்த சந்தேகம் எழுகிறது.

அண்மையில் கிளிநொச்சியூடாக பயணம் செய்த ஒரு பயணியின் தகவல் அடிப்படையில் கிளிநொச்சியில் முன்பு இருந்த அனைத்து கட்டிடங்களும் புல்டோசர்களால் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளது. கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட போது முதல் தடவையாக சென்ற போது அரைகுறையாக இருந்த கட்டிடங்கள் கூட தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள கட்டிடங்கள் மட்டும் சிறப்பாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மக்களை இந்த பகுதியில் குடியமர்த்த வேண்டுமாயின் வீடுகள் மீளக்கட்டப்பட வேண்டும். இந்த நிலையில் வன்னி மக்கள் தொடர்ந்தும்  தடுப்பு முகாம்களில் நீண்ட காலம் தங்கி இருக்க வேண்டிய கட்டாயம் தொடரப் போகிறது. மக்கள் மீள குடியமர்வில் கண்ணி வெடிகளின் அபாயம் என்ற அடுத்த காரணத்தை கூறும் அரசு  மக்களை தம் வாழிடங்களுக்கு செல்ல தடுப்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விடயம். அண்மையில் அரியாலையில் வெடித்த கண்ணி வெடியில் மக்கள் பாதிக்கப்பட்டது தெரிந்த விடயமே. அரியாலை பகுதி 1995இல் விடுவிக்கப்பட்ட ஒரு பிரசேதம். இருப்பினும் கண்ணிவெடிகளை 100 வீதம் அகற்ற முடியாது என்பதற்கு இது ஒரு சான்று. 

ஆனால் இந்த காரணங்களை காட்டி மக்களை தொடர்ந்தும் முகாம்களில் வைத்திருப்பது அவசியமான ஒன்றாக இருப்பதை நாம் ஒப்புக்கொண்டாலும் மக்களின் சுதந்திர நடமாட்டத்தை ஏன் அரசு தடுக்கிறது என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. கண்ணி வெடியுள்ள பிரதேசங்களை குறீயீடு செய்து அந்த பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தடுப்பது நியாயாமே. ஆனால் தடுப்பு முகாமில் உள்ள மக்களை தொடர்ந்தும் துப்பாக்கி முனையில் காவலில் வைத்திருப்பது என்ன நியாயம்? காவல்கள் அகற்றப்பட்டு மக்களின் சுதந்திர நடமாட்டம் அனுமதிக்கப்பட்டால் மக்கள் தாம் விரும்பியதை செய்வார்கள். புலிகளால் வலிந்து அழைத்து செல்லப்பட்ட இந்த மக்களிற்கு இன்று முக்கிய தேவையாக இருப்பது சுதந்திர நடமாட்டமே. புலிகளின் மிகமோசமான அடக்குமுறைக்குள் சிக்கி தவித்த இந்த மக்களின் இன்றைய தேவை சுதந்திரமான வாழ்வு. தொடர்ந்தும் துப்பாக்கி முனையில் திறந்தவெளிச் சிறைக்கைதிகளாக இருக்க இவர்கள் செய்த பாவம்தான் என்ன? தமிழர்களாக பிறந்த ஒரு குற்றமும் புலிகளின் அடக்கு முறைக்குள் சிக்கி தவித்ததுமே இந்த மக்கள் செய்த குற்றங்களா?

அண்மையில் மெனிக்பார்ம் முகாமில் கடமை புரியும் ஒரு உதவியாளர் தெரிவிக்கையில் முகாம் மக்கள் மிக விரைவில் மீள குடியேற்ற தவறும் பட்சத்தில் பல்வேறு சிக்கல்களை அரசு எதிர்நோக்க வேண்டியிருக்கும் என தெரிவித்தார். பருவகால மழை இந்த மாத இறுதியில் ஆரம்பித்தால் முகாம்கள் வெள்ளத்தில் மூழ்குவதுடன் தொற்று நோய்கள் மூலம் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் தெரிவித்துள்ளார். மூன்று நான்கு நாட்கள் மட்டுமே பெய்த மழையில் இடம்பெற்ற அவலங்களை நாம் முன்னர் கண்டோம். ஆனால் பருவகால மழை தினமும் பெய்யும் பட்சத்தில் நிலைமைகள் மிகவும் மோசமாக இருக்கும் என அச்சம் தெரிவித்ததார். அவர் மேலும் தெரிவிக்கையில் இளைஞர்கள் மிகவும் விரக்தியான நிலையில் இருப்பதாகவும் தமக்கு பேசுவதற்கோ சுதந்திரமாக நடமாடுவதற்கோ எந்த அனுமதியும் இல்லை என்று அங்கலாய்ப்பதாகவும் பாதுகாப்பின்மை, கல்வியின்மை, எந்தவித தொழில்சார் பயிற்சிகளும் அற்ற நிலையில் தாம் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாகவும் இவர் தெரிவிக்கின்றார். பல இளைஞர்கள் தாமாகவே படித்து க.பொ.தா உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதிக்கான சித்தியும் பெற்றுள்ளார்கள். ஆனால் இவர்கள் இந்த முகாம்களை விட்டு வெளியேறி பல்கலைக்கழகம் போக முடியாத நிலையில் உள்ளனர். தாம் ஏன் வாழ வேண்டும் என்ற கேள்வியுடன் வாழும்  இந்த இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவதைதான் அரசு விரும்புகிறதா?

கடந்த மே மாதம் புலிகளை வெற்றி கொண்ட  விழாவில் பேசிய ஜனாதிபதி இலங்கையின் அனைத்து பகுதிகளும் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறியவர் அனைத்து மக்களும் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் சுதந்திரமாக செல்ல முடியும் என்று கூறினார். ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்து மாதங்கள் 4 கடந்தும் யாழ் குடாவில் உயர்பாதுகாப்பு வலயங்கள் இன்னும் அசையாது அப்படியே இருக்கிறது. இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இன்னமும் அகதிகளாகவே வாழ்கிறார்கள். கிட்டத்தட்ட 14 வருடங்களிற்கு மேலாக யாழ் குடாநாடு அசர கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் இந்த உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்ற ஜனாதிபதி மறுப்பது மிகவும் அபத்தமானது. இது தமிழர்களின் பிரதேசம் என்பதால்தான் இந்தநிலை என்ற குற்றச்சாட்டிற்கு அரசின் பதில் என்ன? வன்னியிலும் தற்போது இவ்வாறான உயர்பாதுகாப்பு வலயங்கள் தோன்றி வருகிறது. இனி வன்னி மக்களும் தாங்கள் தமது வாழ் நிலங்களுக்கு மீளவே செல்ல முடியாத ஒரு நிலை வரலாம் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்தியாவும் அமெரிக்காவும் இந்த மக்களை முகாம்களை விட்டு வெளியேறி சுயாதீனமாக வாழ விடுமாறு இலங்கைக்கு பல்வேறு விதமான அழுத்தங்களை பிரயோகித்து வருகிறது. மக்களை மீள குடியமர்த்தும் பணிக்கு உதவியாக அமெரிக்கா கடந்த ஜுலை மாதம் மேலும் 8 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது. இது போல் ஏனைய நாடுகளும் பெருந்தொகை பணத்தை மீள் கூடியேற்றத்திற்காக கொடுத்துள்ளனர். அண்மையில் அமெரிக்க மற்றும் ஐநாவின் முக்கிய பிரமுகர்களின் வன்னி விஜயம் அத்துடன் இலங்கைக்கான இந்திய தூதுவரின் மெனிக் பார்ம் விஜயமும் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு செயற்பாடக இருந்தபோதும் இலங்கை அரசு அகதிகளை விடுவிப்பதில் எந்தவித அவசரத்தையும் காட்டுவதாக தென்படவில்லை. மந்தகதியல் மீளக்குடியேற்றம் செய்யும் அரசு, மீள் குடியேற்றம் தாமதமாகும் பட்சத்தில்  குறைந்த பட்சம் இந்த முகாம்களின் பாதுகாப்பை தளர்த்தி மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு உத்தரவாதம் வழங்க வேண்டும். மரணத்தின் பிடியில் சிக்கி தப்பிவந்து விரக்தியுடன் வாழும் மக்களின் பொறுமை ஒரு எல்லைவரை தான் போகும். அண்மையில் இந்த முகாம்களில் மக்கள் கொந்தளித்து காவல் புரிவோருக்கு எதிரான வன்முறையில் இறங்கியதை வெறும் சம்பவமாக பாராது அதை ஒரு எச்சரிக்கையாக அரசு எடுக்க வேண்டும். இந்த முகாம்களில் இருப்பவர்களும் இலங்கை நாட்டின் பிரசைகள் என்பதை அரசு உணர மறுக்கும் பட்சத்தில் அரசின் இராணுவ வெற்றி தமிழ் பேசும் மக்களை ஓடுக்க பெற்ற வெற்றியாகவே கருதப்படும்.