July

July

ராஜபக்சா அன் அமெரிக்க – ஐஎம்எப் ரொம் அன் செரித் தொடர்! வெல்வது யாரோ?

கோட்டபாய ராஜபக்சவை ஏன் மேற்குலகு வெறுத்தது? கோட்டபாய ராஜபக்ச தமிழர்களை இனப்படுகொலை செய்ததால் மேற்குலகம் அவரை வெறுப்பதாக எண்ணினால் அது மிகப்பெரும் முட்டாள்தனம். இலங்கையின் வடக்கில் 2009இல் இனப்படுகொலை இடம்பெற்றதாக எந்த சர்வதேச மனிதஉரிமை அமைப்பும் குற்றம்சாட்டவில்லை. யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவே குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த உண்மையை பச்சையாகச் சொன்னதற்காக புலித் தமிழ் தேசியம் சுமந்திரனை துரோகியாக்கியது. மேற்குலகிற்கு ஒன்றும் தமிழரில் காதல் கிடையாது. மனித உரிமைகள் பற்றியும் அவர்களுக்கு அக்கறை கிடையாது. உலகில் மிக மோசமான மனித உரிமை மீறல்களை அமெரிக்காவும் நேட்டோவும் உலகம் முழுக்க மேற்கொண்டு வருகின்றனர். தங்களுடைய மோசமான மனித உரிமைமீறல்களை அம்பலப்படுத்தியதற்காக யூலியன் அசான்ஜ்சை தூக்கில் தொங்கவிட அமெரிக்காவும் பிரித்தானியாவும் மேற்கு நாடுகளும் எல்லாக் குளறுபடிகளையும் மேற்கொள்கின்றனர்.

அமெரிக்க – ஐஎம்எப் க்குப் பணியாமல் சீனாவுடனும் ரஷ்யாவுடனும் நெருங்கிய உறவைக் கொண்டாடுவதால் கோத்தபய ராஜபக்சவை விரட்டியடிக்கும் திட்டத்தில் இவர்கள் தீவிரமாக இருக்கின்றனர். இந்த விடயத்தில் காலிமுகத்திடல் அரகலியாக்கள் உதவியோடு மேற்குலகம் உச்சகட்ட வெற்றியைப் பெற்றது. அரகலியாக்கள் முன்வைத்த ‘கோட்ட கோ கம – கோட்டா கோ ஹோம்’ அவர்களே எதிர்பார்க்காத வெற்றியை அவர்களுக்கு அளித்தது. அமெரிக்க – ஐஎம்எப் சார்பு போராட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்த மேற்கத்திய மோகசக்திகள், படித்து முன்னேறிய ‘கபே லாற்றே – cafe latte’ குடிக்கும் லிபரல்கள், இடதுசாரிகள், ஜேவிபிக்கள் மற்றும் எதுவுமே புரியாமல் கும்பலில் கோவிந்தா போட்டவர்கள் எல்லோரும் பங்கெடுத்தனர்.

இவர்களின் தீவிர போராட்டத்தால் பெற்றோலுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறைக்கப்பட்டு குறைந்தபட்ச ரயில் கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டது. மேலும் மானியங்களைக் குறைக்கவும் பொதுத்துறைகளுக்கான செலவீனங்களைக் குறைத்து வட்டியைக் கட்டுவதற்கு ஐஎம்எப் அரசை வற்புறுத்தி வருகின்றது. இதுநாள் வரை இலங்கை மக்கள் அனுபவித்து வந்த இலவசக் கல்வி, இலவச மருத்துவம், ஓரளவு தரமான வாழ்க்கை முறையை படிப்படியாகக் குறைக்கும் அல்லது இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. கோத்தபாய ராஜபக்ச இவற்றுக்கு உடன்பட மறுத்து, இறக்குமதிகளை முற்றாக நிறுத்தி, சீனா – ரஷ்யா ஊடாக இப்பிரச்சினையில் இருந்து மீள முடிவு செய்ததால் அமெரிக்க – ஐஎம்எப் நிர்ப்பந்தங்களுக்கு உடன்பட மறுத்ததால் இலங்கையில் ஒரு ஆட்சி-ஆள் மாற்றத்தை அமெரிக்க – ஐஎம்எப் முடுக்கிவிட்டிருந்தது. அதன் விளைவாக கோட்டபாய ராஜபக்ச விரட்டி அடிக்கப்பட்டார்.

ராஜபக்சாக்களின் மீள் எழுச்சி தவிர்க்க முடியாதது:

இன்றைய பொருளாதார நெருக்கடி இலங்கை சுதந்திரமடைந்தது முதல் அமெரிக்க – ஐஎம்எப் ஆல் நிர்ப்பந்திக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையின் விளைவு. மேலும் ஜே ஆர் ஜெயவர்த்தனவின் திறந்த பொருளாதாரக் கொள்கையை அடுத்து 1980க்களின் முற்பகுதி முதல் இப்பொருளாதார நெருக்கடி முளைவிட ஆரம்பித்துவிட்டது. நாட்டின் மூலப்பொருட்களையும் அந்நாட்டு தொழிலாளர்களுடைய உழைப்பையும் அடிமட்ட விலைக்கு வாங்கி தங்களுடைய நிறுவனங்கள் மூலம் முடிவுப்பொருட்களாக்கி அதனை உச்ச விலைக்கு அந்நாடுகளுக்கே விற்று உச்ச லாபம் ஈட்டும் அமெரிக்க ஐஎம்எப் கொள்கை.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதிலிருந்து பிரிந்த மொட்டுக் கட்சி – ஐக்கிய மக்கள் முன்னணி – பொதுஜன பெரமுன என்பன புரட்சிகர சமவுடமை பொருளாதாரக் கொள்கையை உடைய கட்சிகள் அல்ல. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியைப் போல் திறந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க திறந்த பொருளாதாரக் கொள்கையின் காப்பாளர்களில் ஒருவர். அதனால் ரணில் மீது மேற்குலகுக்கு ஒரு காதல் எப்போதுமே இருந்து வந்தது. ரையும் கோட்சூட்டும் போடும் ரணிலுக்கும் ‘கபே லற்றே’ குடிக்கும் லிபிரல்களுக்கும் ஒருவித காதல் கிளர்ச்சி இருக்கும். இவர்களுக்கு வேட்டி சறம் கட்டித் திரியும் சிவப்புத் துண்டை போட்டுத்திரியும் ராஜபக்சக்களை கண்டால் பட்டிக்காட்டான் கிராமத்தான் என்கிற மனப்பதிவொன்று இருக்கும். இதுகூட காலிமுகத்திடலில் காணக்கூடியதாக இருந்திருக்கும். அங்கு வேட்டி சறத்தோடு யாரையும் கண்டிருக்க முடியாது.

இன்றைய பொருளாதார நெருக்கடியை ராஜபக்சக்களின் தலையில் கட்டி, அதற்கு சீனாவுடந்தை என்று திரித்து ராஜபக்சாக்களை ஓரம்கட்டுவதன் மூலம் இலங்கையை மேற்குலகுக்கு, அமெரிக்க ஐஎம்எப் ற்கு சாதகமாக வைத்திருப்பதே நடந்து முடிந்த காலிமுகத்திடல் போராட்ட நாடகத்தின் சாரம்சம். இதே மாதிரியான மைத்திரி – ரணில் மூலமாக நிறைவேற்றப்பட்ட நாடகமே தேசிய நல்லாட்சி அரசு. அதனை அரங்கேற்றும் வேளை முன்னாள் பிரித்தானிய பிரதமரும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையுமான ரொனிபிளேயர் இலங்கையில் இரு வாரங்கள் சத்தமில்லாமல் தங்கி இருந்தார். அப்போது தான் இரவு ராஜபக்சவோடு அப்பம் சாப்பிட்ட மைத்திரி காலையில் ராஜபக்சக்களுக்கு ஆப்பு வைத்த சம்பவம் நிகழ்ந்தது.

ஆனாலும் சில ஆண்டுகளிலேயே ராஜபக்சக்கள் சூழியோடி மீண்டும் மிகப்பெரும்பான்மையோடு ஆட்சியைக் கைப்பற்றினர். கியூபாவின் தலைவர் பிடல் கஸ்ரோவை போட்டுத்தள்ள அமெரிக்க உளவுநிறுவனமான சிஐஏ 600 தடவை முயற்சித்தும் தோல்வி கண்டது. அதே போல் எமது உள்ளுரில் கஸரோவை போல் தொப்பி அணிந்த டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்ய புலிகள் 13 தடவைகள் முயற்சித்து தோல்வி கண்டனர்.

அதனால் ராஜபக்சாக்களுக்கும் – அமெரிக்க ஐஎம்எப் க்கும் நடக்கும் ரொம் அன் செரி விளையாட்டு சற்று சுவாரஸ்யமாகவே இருக்கின்றது. இப்போதைய விளையாட்டில் ரணில் பலிக்கடாவாகி விட்டார். இவரைக் காட்டிலும் ராஜபக்சாக்கள் மேல் என்ற உணர்வு ரணில் பதவியேற்ற 48 மணி நேரத்தில் சஜித் பிரேமதசவால் தெரிவிக்கப்பட்டது. இந்த மனநிலை ஏற்கனவே எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. ராஜபக்சாக்கள் மீண்டும் இலங்கை கிராமங்களில் வாழும் சிங்கள மக்களின் பாதுகாவலர்களாக எழுந்து வருவது தவிர்க்க முடியாதது.

ராஜபக்சாக்களை கையாளக்கூடிய சிந்தனைத் திறனும் அரசியல் திறனும் லிபரல்களிடமும் மாணவர்களிடமும் இடதுசாரிகளிடமும் இல்லை. இவர்களிடம் அதற்கான அர்ப்பணிப்பும் கிடையாது. இதனால் இவர்கள் உயர்ந்த கொள்கைத்திட்டங்களைக் கையில் எடுக்காமல் ‘கோட்டா கோ கம, ரணில் கோ கம, ஒக்கம கோ கம’ என்ற புலம்பல் கோசங்களை வைத்து குட்டையைக் கிளப்பி நாட்டை சீரழிப்பதை மட்டுமே செய்வார்கள். இதுவே அரப் ஸ்பிரிங்கில் நடந்தது. அது ஆரம்பித்த துனிஸியாவில் நேற்று யூலை 27 பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தி அதிகாரங்களை குவித்துக்கொண்டார்.

பொருளாதார நெருக்கடியின் சர்வதேச பரிமாணம்:

இன்றைய பொருளாதார நெருக்கடி ஒன்றும் இலங்கைக்கேயானதல்ல. இலங்கையின் பொருளாதார நெருக்கடி உலகிலேயே மோசமானதும் அல்ல. செல்வந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள், வளர்ச்சியடையாத நாடுகள் என்று உலகம் முழுவதுமே பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இலங்கையில் மட்டும் தான் பொருளாதார நெருக்கடியை ஆட்சித் தலைவர் மீது போட்டுக்கட்டி ஆட்சியை மாற்றினால் பெற்றோல் வரும் எரிவாயு வரும் என்றும் நம்பினர். ஆட்சித் தலைவரை வீட்டுக்கு அனுப்பினால் தங்கள் பெற்றோல் ராங்குகள் நிரம்பும் என்று நம்பினர். ஐரோப்பாவில் உள்ள துருக்கியின் விலைவீக்கம் 80 வீதம். அபிரிக்க நாடான கமரூனில் விலைவீக்கம் 250 வீதமாக அதிகரித்து. அங்கு மக்கள் போராடுவதற்கு பதிலாக மாற்று பொருட்களின் உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றனர்.

ஆறு மாதம் காலிமுகத்திடலில் கிடந்ததற்குப் பதிலாக வீடுகளில் தோட்டத்தில் நான்கு கன்றுகளை வைத்திருந்தால் காய்கறியாவது கிடைத்திருக்கும். நாடு சுமுகமாக உள்ளபடியால் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து இருக்கும். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளுர் உற்பத்தியை பெருக்கவும், சூரிய ஒளியைப் பயன்படுத்தி தற்போதுள்ள மின்சாரப் பிரச்சினையை கையாள்வது பற்றி சிந்தித்து இருக்கலாம். துவிச்சக்கர வண்டிகளை குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முயற்சித்திருக்கலாம். இது எதுவுமே செய்யாமல் இலவசக் கல்வியும் தந்து அது முடிய ராஜபக்சக்கள் அவர்களுக்கு வேலையும் எடுத்துக் கொடுக்க வேண்டும். பிறகு இந்த வேலைக்குப் போய் வேலை செய்யாமல் பொழுது போக்கிவிட்டு வர சம்பளமும் வழங்க வேண்டும். இப்படி இருந்தால் நாடு எப்படி உருப்படும்?

ராஜபக்சாக்களின் சொத்துக் குவிப்பு புலம்பல்கள்:

ராஜபக்சாக்களோ மற்றும் அரசியல் வாதிகளோ ஒன்றும் காமராஜர் போல் தன்மூத்திரம் அருந்தி ஒரு சதத்தைக் கூட களவாடாதவர்கள் கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மறைவுக்குப் பின் அரசியலுக்கு வந்த, யுத்தத்தில் சீரழிந்த கிளிநொச்சி மண்ணில் இருந்து பாராளுமன்றம் வந்த சாதாரண பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரனால் ஒரு பத்து ஆண்டு காலத்தில் கணிசமான சொத்துக்களை சேர்க்க முடியுமானால், பரம்பரை அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த, குடும்பமே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ராஜபக்சாக்கள் சொத்து வைத்திருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது?

பிரித்தானியாவின் முன்னாள் நிதியமைச்சரும் தற்போது ஆளும் கொன்சவேடிவ் கட்சித் தலைமைக்கு போட்டியிடுபவருமான ரிஷி சுனாக் பிரித்தானியாவிலேயே மிகச் செல்வந்தரான அரசியல் வாதி. அவரும் ஒன்றும் புனிதரல்ல. அதே போல ராஜபக்சாக்கள் ஆட்சிக் வருவதற்கு முன்னரே 2005இல் 400 கோடி ரூபாய்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு கொடுத்துத் தான் ஆட்சியைக் கைப்பற்றினர். வே பிரபாகரனிடம் 400 கோடி கொடுத்திருந்தால் அவர்கள் எத்தினை கோடிகளுக்கு அதிபதியாக இருந்திருக்க வேண்டும்? மேலும் பணம் பணத்தை உருவாக்கும். புலம்பெயர் தேசங்களில் ஒரு சதம் இல்லாமல் வந்த புலிகளுக்கு பணம் சேர்த்த பலர் இன்று கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். ஆகவே ராஜபக்சக்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல. ஆனால் ஆட்சிக்கு வந்து தான் கொள்ளையடித்தார்கள், அவர்கள் கொள்ளையடித்து தான் நாடு வங்குரோத்தில் போனது என்பதெல்லாம் உப்புச்சப்பற்ற வாதம். ஊதிப்பெருப்பிக்கப்பட்ட விடயங்கள். பிரபல இணைய ரக்ஸி நிறுவனமான ஊபர் தங்களுக்கு சாதகமாக சட்டத்தை இயற்றுவதற்காக பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவல் மக்ரோனுக்கு வழங்கியது 600,000 டொலர்கள் (21 கோடி இலங்கை ரூபாய்).

ராஜபக்சாக்கள் சில மமதையான முட்டாள் தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டு இருந்தாலும் இலங்கையில் உள்ள அரசியல் வாதிகளுடன் ஒப்பிடுகையில் கல்வியில் தேர்ந்தவர்கள், திறமைசாலிகளும் கூட. அதனால் தான் தமிழீழ விடுதலைப் புலிகளை அவர்களால் வேரோடு சாய்க்க முடிந்தது. அவர்களுடைய இத்திறமைகளை சகித்துக்கொள்ள முடியாத அரசியல் எதிரிகளும் ராஜபக்சக்களால் பாதிக்கப்பட்டவர்களும் இன்று முகநூல் மற்றும் வட்ஸ்அப் ஊடாக விக்கிரமாதித்தன் கதைபோல் ராஜபக்சக்கள் பற்றி கதையளக்கின்றனர். கதையளந்து சுய இன்பமடைகின்றனர். அதே போல் புலித் தேசியத்தில் ஊறிப்போன தமிழர்களுக்கும் தங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு அதனைக் கடந்து செல்லும் முதிர்ச்சி இன்னமும் இல்லை. இதேநிலை தான் முஸ்லீம்களுக்கும். ஏதாவது வகையில் ராஜபக்சக்களை தாழ்த்தி நையாண்டி செய்து சிற்றின்பம் அடைகின்றனர்.

அப்போது 1980க்களின் இறுதியில் பிலிப்பைன்ஸில் மக்களைக் கொளையடித்து சூறையாடிய பேர்டினட் மார்க்கோஸ் – இமெல்டா மார்க்கோஸ் தம்பதிகளின் மகன் பொங் பொங் மார்க்கோஸ் தன் பெற்றோர் செய்த சாதனைகளைச் சொல்லி தற்போது அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியேறி உள்ளார். ஆனால் ராஜபக்சக்கள் பேர்டினனட் மார்க்கோஸ் தம்பதிகளளவுக்கு கீழ் நிலையை அடையவில்லை. இன்றும் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் இன்னமும் அவர்கள் நிலைகொண்டுள்ளனர். அதனால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற கனகாலம் பொறுத்திருக்க வேண்டியதில்லை.

இலங்கையில் ஊடகங்களும் ஆய்வாளர்களும் எவ்வித கேள்வியும் இன்றி ஆய்வும் இன்றி தங்களுக்கு சுய கிளர்ச்சியூட்டம் விடயங்களை எழுதுகின்றனரே அல்லாமல் தகவல்களைச் சரி பார்ப்பதில்லை. அதனால் அடிப்படைப் புரிதல் இன்றி வெறும் உணர்ச்சிக் கிளர்ச்சி அரசியலே இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டத்தில் ஈடுபடும் லிபரல்கள், இடதுசாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு மோகத்திலேயே இன்னமும் உள்ளனர். அவர்களிடமும் இலங்கையின் அந்நாட்டு மக்களின் எதிர்காலம் பற்றிய கரிசனை இல்லை. இந்தப் பினனணியில் போராட்டங்கள் பலனளிப்பதற்கான வாய்ப்பு மிக மிக அரிதாகவே உள்ளது. அதனால் ராஜபக்சாக்களின் எதிர்காலத்திற்கு அவ்வளவு பெரிய ஆபத்து ஒன்றும் உள்ளுரில் இல்லை. ஆனால் அமெரிக்க கூட்டுகள் ராஜபக்சாக்களுக்கு எப்படியும் ஒரு பாடம் படிப்பிக்க கங்கணம் கட்டிவிட்டனர். இந்த நெருக்கடி ராஜபக்சாக்களுக்கு இருக்கும். கோட்டபாயாவின் உள்ளாடையை வைற் ஹவுசில் காட்சிக்கு வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஈரானில் பெண்கள் அதிகமாக தூக்கிலிடப்படுகிறார்கள் – சர்வதேச பொது மன்னிப்புச் சபை விசனம் !

ஈரானில் 3 பெண்களுக்கு ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஈரான் மனித உரிமைகள் குழுவின் கூற்றுப்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 32 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

தங்களது கணவரைக் கொன்ற குற்றத்துக்காக மேற்குறித்த மூன்று பேரும் தூக்கிலிடப்பட்டனர். இதில் 15 வயதில் திருமணமான ஷோகிலா அபாதியும் ஒருவர். தூக்கிலிடப்பட்டபோது அவருக்கு  ஷோகிலாவுக்கு 25 வயது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இதுவரை இரண்டு மடங்கு அதிகமானோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதால், அதிகாரிகள் தங்கள் மரண தண்டனையை கணிசமாக முடுக்கிவிட்டதாக நம்பப்படுகிறது.

மற்ற எந்த நாட்டையும் விட ஈரானில் அதிகமான பெண்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதாக உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன, அவர்களில் பெரும்பாலோர் தங்கள் கணவர்களைக் கொன்ற குற்றவாளிகள் என்று கருதப்படுகிறது.

மரணதண்டனை எண்ணிக்கை பற்றிய துல்லியமான புள்ளிவிபரங்கள் கிடைக்கவில்லை, ஏனெனில் ஈரானிய அதிகாரிகள் இறந்த ஒவ்வொரு வழக்கையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இதுகுறித்து ஈரானில் செயற்படும் மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,

‘இந்தக் கொலைகள் எல்லாம் குடும்ப வன்முறைக் காரணமாக நடந்துள்ளன. ஆனால், இவற்றை எல்லாம் ஈரான் நீதிமன்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இந்த ஆறு மாதத்தில் மட்டும் ஈரான் 250 பேரை தூக்கிலிட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவில் ஈரான் பெண்கள் மரணத் தண்டனைக்கு உள்ளாகுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் இதுபோன்ற மரண தண்டனைகள் இன, மத சிறுபான்மையினரான வடமேற்கில் உள்ள குர்தூஸ், தென்மேற்கில் உள்ள அரபுகள் மற்றும் தென் கிழக்கில் உள்ள பாலுச் இனத்தவரை குறிவைத்தே நடத்தப்படுகிறது என ஈரான் மனித உரிமைகள் அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொது மன்னிப்புச் சபையின் அறிக்கையின்படி, ஈரானில் 2021ஆம் ஆண்டு மரண தண்டனைகளின் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மன்னிப்புச் சபையும் மரண தண்டனைகளை ஈரான் அரசியல் அடக்குமுறையாகக் கையாள்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.

நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு இரண்டு கோடி பெறுதியான ஐஸ் போதைப்பொருள் பொதி – சந்தேக நபர் கைது !

கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் இன்று இரண்டு கோடி தொண்ணூற்று ஏழு இலட்சத்து முப்பதாயிரம் ரூபா பெறுமதியான மெத்தம்பட்டமைன் அல்லது ஐஸ் எனப்படும் போதைப்பொருளுடன், சந்தேகநபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த பொதி நெதர்லாந்தில் இருந்து கம்பஹா கணேமுல்லவில் உள்ள கால் மசாஜ் செய்பவருக்கு என பெயரிடப்பட்ட முகவரிக்கு கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு விமான அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் குறித்த பொதியிலிருந்த இயந்திரத்தை பரிசோதித்த போது 01 கிலோ 189 கிராம் எடை கொண்ட 2,973 மெத்தம்பெட்டமைன் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பொதியை பெற்றுக் கொள்வதற்காக பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் உள்ள நபரும் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனைக்கு வந்திருந்த நிலையில், அவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனையின் தபால் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளும் இந்த கைது நடவடிக்கைக்கு உதவினர்.

தற்போது போதை மாத்திரைகள் கையிருப்பு மற்றும் அவற்றை எடுத்துச் செல்ல வந்த நபர், மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா அமைதிப்படைகள் மீது கொங்கோ மக்கள் தாக்குதல் !

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கொங்கோ. இந்நாட்டில் பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சியாளர் குழுக்களும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகள் அந்நாட்டு மக்கள், அரசு படைகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், கொங்கோவில் அமைதியை நிலைநாட்டவும், அரசுப்படைகளுக்கு ஆதரவாகவும் ஐ.நா.வின் அமைதிப்படை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.நா. அமைதிப்படைகள், உள்நாட்டு படைகள் இருந்தபோதும் கொங்கோவில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் அந்நாட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள புடிம்போ நகரில் அமைந்துள்ள ஐ.நா. அமைதிப்படை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். அலுவலகத்திற்கு நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அமைதிப்படை வீரர்களையும் கடுமையாக தாக்கினர். பாதுகாப்பு படையினர் துப்பாக்கியை பறித்து அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையின் போது ஐநா அமைதிபடை வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 வீரர்களில் 2 பேர் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் என்பது தெரியவந்துள்ளது.

காட்டுமிராண்டிகள் போல புதுமுக மாணவர்களை தாக்கியுள்ள யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் – தரங்கெட்டு போய்க்கொண்டிருக்கும் வடக்கின் கல்வி நிலை !

அண்மைய காலகட்டங்களில் வடக்கில் அடுத்தடுத்து சமூக சீரழிவுகளும் – சமூக வன்முறைகளும் பெருகி கொண்டிருக்கின்றன. அண்மையில் கூட முல்லைத்தீவில் ஒரு பாடசாலை ஆசிரியர் உயர்தர ஆண் மாணவர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி குறித்த மாணவர்களின் உதவியுடன் பாடசாலை மாணவிகளை நிர்வாணமாக்கி வீடியோக்களை எடுத்திருந்தனர். அதுபோல யாழ்ப்பாண நகர்புறத்தில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவரிடம் இருந்து அண்மையில் ஹெரோயின் போதைப்பொருள் போலீசாரால் கைப்பற்றப்பட்டிருந்தது. இது தவிர க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையிலும் – உயர்தர பரீட்சை பெறுபவர்களின் அடிப்படையில் வடக்கு மாகாணமே ஒன்பதாவது நிலையில் உள்ளது. (இலங்கையில் ஒன்பது மாகாணங்களே உள்ளன)

இது தான்  வடக்கின் அண்மைய கால கல்வி நிலை.

இவ்வாறான ஒரு நிலையிலிருந்து வடக்கின் கல்வியை மீட்பதற்கு மிகப்பெரும் பொறுப்போடு செயல்பட வேண்டிய தேவை வடக்கு தமிழர் கல்வி வளர்ச்சியின்  மிகப்பெரிய மத்திய நிலையம் என கடந்த காலங்களிலிருந்து தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உண்டு. ஆனால் இன்று வரை இதன் தேவையை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உணரவே இல்லை என்பதே ஆக வேதனையான விடயம்.

வருடா வருடம் என்ன சம்பவங்கள் நடக்கின்றனவோ அல்ல இல்லையோ பகிடிவதை தொடர்பான ஏதேனும் ஒரு பெரிய குற்றம் பதிவாகிவிடும். விசாரணைகள் தீவிரமாக நடக்கின்றன மாணவர்களுக்கு வகுப்பு தடைகள் வழங்கப்பட்டன என  சில செய்திகள் வெளியாகுமே தவிர பகிடி வதைகளை முழுமையாக இல்லாது செய்ய எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் யாழ்.பல்கலைகழக சமூகம் மேற்கொண்டதாக இதுவரை  தெரியவில்லை.

இந்த நிலையில் அண்மையில்  பல்கலைக்கழகத்திற்கு தெறிவாகியுள்ள புதுமுக  மாணவர்களை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் காட்டுமிராண்டிகள் போல அடித்து சித்திரவதைப்படுத்தியுள்ள  ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்;

யாழ்.பல்கலைக்கழத்தின் புதுமுக மாணவர்களை ஒன்று கூடல் எனும் பெயரில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதிக்கு அழைத்து பகிடி வதைக்கு உட்படுத்தப்படுவதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த . கனகராஜ்க்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது . முறைப்பாட்டின் பிரகாரம் அது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளரால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது . அதனை அடுத்து சட்ட நிறைவேற்று அதிகாரி , மாணவர் ஆலோசகர் மற்றும் மாணவர் ஒழுக்காற்று அதிகாரி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று புதுமுக மாணவர்களை சிரேஷ்ட மாணவர்களிடம் இருந்து மீட்டுள்ளனர் . அதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் சிரேஷ்ட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்பத்தடை விதிக்கப்பட்டுள்ளது . அதேவேளை சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் தனது பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளததாக பல்கலைக்கழக தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் மேற்கொண்ட பகிடிவதைகள் நிரூபிக்கப்பட்டால் இரண்டு வருடங்களுக்கு பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளில் இருந்து மாணவர்கள் நீக்கப்படுவார்கள் என இலகுவான தண்டனை ஒன்றையும் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது பகிடிவதைகள் தொடர்பில் யாழ்.பல்கலைகழகத்தின் பொறுப்பற்ற அறிவிப்பாகவே பார்க்க முடிகிறது.

முன்னைய காலப்பகுதிகளில் தமிழர் சமுகத்தின் உரிமை சாரந்த பிரச்சினைகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் குரல்கொடுத்து வந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இன்று தன்னுடைய அடையாளத்தை இழந்து முழுமையாக வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பதையே பகிடிவதை தொடர்பான தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன. யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியும் வெறுமனே பாடசாலை கல்வி போல புத்தகங்கள் வழியானதாக  மட்டுமே மாறிப்போயுள்ள நிலையில் மாணவர்களை சமூகத்துக்கு உரியவர்களாக மாற்றாது புத்தகப் பூச்சிகளாக மாற்றி அனுப்புவதை மட்டுமே இந்த யாழ்ப்பாண  பல்கலைக்கழகம் செய்து கொண்டிருக்கிறது.

யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடி வதைகள் தொடர்ந்தும் இடம் பெற்றுக் கொண்டிருப்பதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களே முழு காரணம். தற்போதைய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்டு சொல்லும் சில விரிவுயாளர்களை தவிர ஏனைய விரிவுரையாளர்கள் ஒரு உழைப்பதற்கான தளமாக மட்டுமே பல்கலைக்கழகத்தை மாற்றியுள்ளனர் – பார்க்கின்றனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு நிலை மிகப் பெரிய விரிசலிலேயே இன்று வரை காணப்படுகின்றது. “எனக்கு சம்பளம் வருகிறது நான் அவர்களுக்கு கற்பிக்கிறேன்“ இந்த மனோநிலையை பல்கலைகழகத்தில் பாதிக்கும் அதிகமான விரிவுரையாளர்களிடம் காணப்படுகின்றது. இவர்கள் மாணவர்களிடம் அடிப்படை மனிதாபிமானம் பற்றியோ – பல்கலைகழக மாணவர்களின் சமூகப் பொறுப்பு பற்றியோ மறந்தும் கூட பேசுவது கிடையாது. பிறகு எவ்வாறு ஆரோக்கியமான சமுதாயம் ஒன்றின் உருவாக்கத்தை  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து எங்களால் எதிர்பார்க்க முடியும்..?

முன்பெல்லாம் தங்களுடைய பிள்ளைகளை சைக்கிள்களிலும் – மோட்டார் சைக்கிளிலும் ஏற்றிச் சொல்லும் பெற்றோர் யாழ்.பல்கலைகழக வளாகத்தை கடக்கும் போது இந்த பல்கலைக்கழகத்துக்கு பிள்ளையை எப்படியாவது படிக்க அனுப்ப வேண்டும் என எண்ணுவர். ஆனால் இந்த பகிடிவதை கலாச்சாரத்தாலும் – முறையற்ற கற்பித்தலாலும்  இன்று நிலை தலைகீழாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் வேண்டாம் என கூறும் நிலை பெற்றோர் மத்தியில் உருவாகியுள்ளது.

தமிழர் பகுதிகளின் கல்வி முன்னேற்றத்துக்கான  நடவடிக்கைகளுக்காகவும் – சமூக மாற்றத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு வடக்கின் மிகப்பெரிய கல்வி நிலையம் என்ற அடிப்படையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உண்டு. ஆனால் இதன் பெறுதியை அங்குள்ள விரிவுரையாளர்களும் சரி மாணவர்களும் சரி உணர்ந்து கொண்டு உள்ளார்களா..? என்றால் இல்லை என்பதே விடை.

தமிழர் பகுதிகளில் இன்னமும் சீர்படுத்தப்பட வேண்டிய எத்தனையோ  சமூகப் பிரச்சனைகள் உள்ளன. அவற்றை முன்னின்று தீர்ப்பதில் யாழ்.பல்கலைகழக மாணவர்களதும் – பல்கலைக்கழக சமூகத்தினதும் பங்களிப்பு மிக அத்தியாவசியமானதாக உள்ள நிலையில் பொறுப்பற்ற இந்த மாணவர்கள் இன்னமும் வன்முறையை வளர்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த பகிடிவதைகளில் ஈடுபடும் இதே மாணவர்கள் இன்னமும் கொஞ்ச நாட்களில் பட்டமும் பெற்றுக்கொண்டு அரச வேலைகளில் – ஆசிரியர்களாக பாடசாலைகளில்  புகுந்துவிடுவார்கள். பின்பு இவர்கள் இவர்களை போல வன்முறை குணம் கொண்ட ஒரு சமூகத்தை தான் உருவாக்க போகிறார்களே தவிர ஆரோக்கியமான சமூக்த்தை அல்ல.

நீண்டகாலமாக பகிடிவதைக்கான ஆகப்பெரிய தண்டனையாக வகுப்புத்தடைகள் மட்டுமே காணப்படுகின்றன. இதனால் எந்த மாற்றமுமே வரப்போவதில்லை. அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாத இழிவான செயல்களை செய்யும் இந்த மாணவர்களை நேரடியாகவே பல்கலைக்கழக கல்வியில் இருந்து நீக்கிவிடுவதே இந்த பகிடிவதைக்கான தீர்வு. அல்லாது விடின் இது வாழையடி வாழையாக இனிமேலும் தொடரத்தான் போகிறது.

அடிப்படை மனிதாபிமானத்தை கூட கற்றுத் தர முடியாத கல்வியால் என்ன பயன்..?

கோட்டாபாய போய் ரணில் ராஜபக்ஷ வந்தார். [ அமெரிக்க – ஐ.எம்.எப்க்கு கைக்கூலியானது காலி முகத்திடல் போராட்டம்] – தேசம் திரை

அமெரிக்காவின் கைக்கூலியானார்கள் கோட்டா கோ கோம் போராட்டக்காரர்கள்

கோட்டாபய ராஜபக்ச போய் ரணில் ராஜபக்ச வந்தார்!! அமெரிக்க – ஐஎம்எப் க்கு கைக்கூலியானது காலிமுகத்திடல் போராட்டம்!!!

காலிமுகத்திடல் அரகலியாக்களின் போராட்டம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை விரட்டிவிட்டு அமெரிக்க – ஐஎம்எப் (சர்வதேச நாணய நிதியம்) ஆல் சிபாரிசு செய்யப்பட்ட ரணிலை ஜனாதிபதியாக்கியது. அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. தங்கள் காரியம் நடந்து முடிந்ததும் அரகலியாக்களை அடித்து விரட்டினர். கோட்டபாய ராஜபக்ச மக்களால் தெரிவு செய்யப்பட்டு இருந்தும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையைக் கொண்டிருந்தும் அரகலியாக்களுக்கு எதிராக தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தவில்லை. அரகலியாக்களின் போராட்டத்தினால் நட்டைவிடே ஓடி பதுங்கி இருக்கின்றார். விரும்பியோ விரும்பாமலோ அதிகாரம் ராஜபக்சக்களின் வசமே இன்னமும் உள்ளது. ராஜபக்சக்கள் யாரைக் காட்டினார்களோ அவர் – ரணில் ராஜபக்ச ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.

அரகலியாக்களும் அமெரிக்க – ஐஎம்எப் கூடலும் ஊடலும்:

இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான சந்தைப் பொருளாதாரத்தையும் அதனை கண்மூடித்தனமாக அமுல்படுத்தக் கோரும் ஐஎம்எப் – சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றியும் உலக வங்கியைப் பற்றியும் காலிமுகத்திடல் அரகலியாக்கள் மூச்சேவிடவில்லை. கடன்களை மீளக்கொடுப்பதை நிறுத்தவும் அரகலியாக்கள் கோரவில்லை. அப்படிக் கோரி இருந்தால் நாடு எதிர்காலத்தில் சுயசார்பாக வந்துவிடும். ஐஎம்எப் – உலகவங்கிக்கு அடிமையாக இராது. அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் முழுமையான ஆதரவு போராட்டகாரர்களுக்கு வழங்கப்பட்டு இராது. இந்தப் போராட்டத்தை மேற்கு நாடுகள் கண்டுகொண்டிராது. போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களுக்கு 45 மில்லியன் டொலர் வழங்கப்பட்டும் இராது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கோக்கோ கோலா குடிபானம் முதல் இலவச உணவுகள் வழங்கப்பட்டிராது.

ஆனால் நடந்தது என்ன? மேலே சொன்னதெல்லாம் போராட்டகாரர்களுக்கு வாரி வழங்கப்பட்டது. காற்று வாங்க வந்த போராட்டகாரர்களுக்கு முதலுதவி முகாம்கள் அமைக்கப்பட்டது. மேற்குறிப்பிட்டது போல முதற்தரமான சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் உலகில் வேறெங்கும் நடக்கவில்லை. காலிமுகத்திடலில் நடந்த ‘கோட்டா கோ கம – கோட்டா கோ ஹோம்’ போராட்டம் தான் உலகில் நடைபெற்ற ஒரே செழிப்பான போராட்டம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் காரிலும் மோட்டார் சைக்கிள்களிலும் வந்துதான் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இறுதிக் கட்டத்தில் தான் கும்பலில் கோவிந்தா என்று பெரும் தொகையானோர் ஈர்க்கப்பட்டனர். இதனை ஜேவிபி இன் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.

பிரித்தானியாவில் இயங்கும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி ஐஎம்எப் இன் நிபந்தனைகளை நிராகரிக்கவும் கடன்களை மீளச்செலுத்த வேண்டாம் என்பது உட்பட பல முற்போக்கான கோரிக்கைகளை வைத்தது. ஆனாலும் இக்கோரிக்கைகள் பெரும்பாலும் தட்டிக்கழிக்கப்பட்டது. தங்கள் கோரிக்கைகள் தட்டிக் கழிக்கப்பட்ட போதும் கூட தமிழ் சொலிடாரிட்டி அரகலியாக்களுடைய அமெரிக்க ஐஎம்எப் சார்புநிலைக்கு ஆதரவளித்தனர். இந்தப் போராட்டங்களில் தலையைக் காட்டாவிட்டால் தாங்கள் துரோகிகள் ஆகிவிடுவோம் என்பதால் மேற்கத்திய ஜனநாயகத்தால் ஈர்க்கப்பட்ட லிபரல்களும் இடதுசாரிகளும் கூட தங்கள் தங்கள் நாடுகளில் ஆதரவுப் போராட்டங்களை கொப்பிகற் முறையில் அல்லது குழவாத உளவியல் மற்றும் டொமினோ தாக்கம் போல் மேற்கொண்டனர்.

அமெரிக்க – ஐஎம்எப் நலன்களுக்காகப் போராடிய இந்த அரகலியாக்களை அமெரிக்க – ஐஎம்எப் ஆதரவு பெற்ற ரணில் பதவியேற்ற 24 மணிநேரங்களிற்குள்ளாக இரவோடு இரவாக விரட்டி அடித்தார். நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி அவர்களை விரட்டி அடித்து, ரணில் தன்னுடைய வீட்டை எரித்ததற்குப் பதிலடி வழங்கினார்.

மக்கள் செல்வாக்கற்ற காலிமுகத்திடல் அரகலியாக்கள்:

பிரித்தானியாவில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்ததும் அவருடைய கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தாங்கள் அடுத்த தேர்தலலில் வெற்றி பெறுவது கடினம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அதனால் அவர்கள் பொறிஸ் ஜோன்சனுக்கு பதிலாக இன்னொருவரை புதிதாக தெரிவு செய்வதன் மூலமே தாங்கள் மக்களிடம் செல்ல முடியும் என்று நம்பினர். அதனால் 24 மணி நேரத்திற்குள் வரலாறு காணாத அளவில் 49 அமைச்சர்கள், துணை அமைசர்கள் பதவி விலகினர்.

ஆனால் ஆறு மாதகாலம் நீடித்த போராட்டத்தின் போதும் அதன் பின் கோட்டபாய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறிய பின்னும் கூட அவருடைய அமைச்சரவையிலோ பாராளுமன்ற பெரும்பான்மையிலோ குறிப்பிடத்தக்க சலசலப்பு ஏற்படவில்லை. அதற்குக் காரணம் கோட்டபாய ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் முன்னணி – பொதுஜனப் பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் அடுத்த தேர்தலிலும் வெற்றிபெறுவோம், அதற்கு ராஜபக்சக்களின் தலைமை தேவை என்ற நம்பிக்கையிலேயே இருக்கின்றனர். பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவு அதனை மிகத் தெளிவாக்கி உள்ளது.

போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜேவிபிக்கு பாராளுமன்றத்தில் மூன்று வாக்குகள் மட்டுமே கிடைத்தது. தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு இப்பதவியை ராஜபக்சாக்களின் பொதுஜன பெரமுன கட்சியினரே வழங்கி இருந்தனர். 134 வாக்குகளை அவர் பெற்றிருந்தார். மறுமுனையில் ரணிலுக்கு எதிராக களமிறக்கப்பட்டவர் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர். அவர் 82 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரும் ராஜபக்சாக்களின் நெருங்கிய சகா. இவ்விருவரில் யார் வெற்றி பெற்றிருந்தாலும் அவர் ராஜபக்சக்களின் அதரவுடனேயே ஆட்சியை மேற்கொள்கின்றார் என்பதே உண்மை. தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவும் ராஜபக்சக்களுக்கு மிகவும் விசுவாசமானவர். இவர்கள் அமைக்கின்ற அமைச்சரவை உறுப்பினர்களும் ராஜபக்சாக்களின் அமைச்சரவை உறுப்பினர்களாகவே உள்ளனர். இலங்கை மக்கள் மத்தியில் ராஜபக்சக்களின் ஆதரவுத் தளத்தில் எவ்வித பாரிய பாதிப்பும் ஏற்பட்டு இருக்கவில்லை என்பதையே இது காட்டுகின்றது.

இழப்பதற்கு தம்முடைய வறுமையைத் தவிர எதுவுமற்ற மக்கள் அமெரிக்க நலன்களுக்கும் ஐஎம்எப்க்கும் மசிந்துவிட மாட்டார்கள். காலிமுகத்திடல் அரகலியாக்களுக்கும் இலங்கை வாழ் சாதாரண மக்களுக்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளது. கொழும்பில் நீர்த்தடாகத்தோடு வீடுவைத்திருக்கும் ஒரு மனிதவுரிமை சட்டத்தரணி, தான் நடுத்தரவர்க்கம் என்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படுவதாகவும் கதையளந்தால் மலையகத்தில் லயன்களில் இலங்கையின் அடிப்படைச் சம்பளத்திலும் குறைவாக சம்பளம் பெறும் குடும்பங்கள் என்ன கருதும்?

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் காரும் மோட்டார் சைக்கிளும் வைத்துள்ளவர்கள். இலங்கை மக்கள் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மருத்துவக் காப்புறுதி உடையவர்கள். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சக்தி கொண்டவர்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தங்களுடைய நாளாந்த தேவைக்கு பெற்றோல் வேண்டும். சமைக்க எரிவாயு வேண்டும். அவர்களுக்கு பெற்றோலுக்கு மானியங்கள் தேவையில்லை. கள்ளச்சந்தையில் பெற்றோலை லீற்றர் 3,000 ரூபாய்க்கும் வாங்கி ஓடக்கூடியவர்கள். ஆனால் இலங்கையின் கிராமப் புறங்களிலேயே வாழும் பெரும்பாலான மக்கள் எரிவாயுவை பயன்படுத்த தெரியாதவர்கள். அடுப்பூதி ஈர விறகை வைத்தே சமைப்பவர்கள். பல லட்சம் கொடுத்து காரையோ மோட்டார் சைக்கிளையோ வாங்க இயலாதவர்கள். சைக்கிள் இல்லாவிட்டால் பொதுப் போக்குவரத்தில் வாழ்பவர்கள்.

இந்த போராட்டங்களில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு ரூபாயாவது வேலை செய்து சம்பாதிக்காதவர்கள். பெற்றோரை கஸ்டப்படுத்தி மோட்டார் சைக்கிளும் அவர்களிடமே ஓசியில் பெற்றோலும் அடித்து முறுக்கித் திரிபவர்கள். ஓசியிலேயே வாழும் இந்த ஜீவன்களுக்கு வாக்களித்து பழக்கம் இருக்கா என்பதே சந்தேகம். இவர்கள ஏன் போராடினார்கள்? என்னத்தை கோரினார்கள்?

‘கோட்டா கோ ஹோம் – பில் மை பெற்ரோல் ராங் (fill my petrol tank)’ போராட்டம் பூரண வெற்றி. இனிவரப்போகும் விளைவுகளுக்கு அவர்கள் பொறுப்பல்ல. இதனால் தான் அரகலியாக்கள் இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான சந்தைப் பொருளாதாரத்தையும் அதனை கண்மூடித்தனமாக அமுல்படுத்தக் கோரும் சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றியும் உலக வங்கியைப் பற்றியும் மூச்சேவிடவில்லை. கடன்களை மீளக்கொடுப்பதை நிறுத்தக் கோரவும் இல்லை.

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலக ரஷ்யா முடிவு !

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை இயக்கி வருகின்றன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் சர்வதேச விண்வெளி மையத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்பை சீர்க்குலைக்கும் என ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலக உள்ளதாக ரஷ்யா திடீரென அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் யூரி போரிசோவ் கூறுகையில்,

2024- க்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். 2024 க்குப் பிறகு ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விலகி, அதன் சொந்த சுற்றுப்பாதையை அமைப்பதில் கவனம் செலுத்த உள்ளது என்றும் அவர் கூறினார். உக்ரைனில் கிரெம்ளின் ராணுவ நடவடிக்கை தொடர்பாக ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புனித வெள்ளி ஒப்பந்த சிற்பி டேவிட் டிரிம்பிள் காலமானார் !

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டின் முதல்-மந்திரியாக இருந்த டேவிட் டிரிம்பிள் தன்னுடைய 77வயதில்  காலமானார்.  அவர் மறைந்துவிட்ட செய்தியை அவரது குடும்பத்தினர் நேற்று உறுதிபடுத்தியுள்ளதாக டிரிம்பிளின் அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சி(யூயூபி) தெரிவித்துள்ளது.

David Trimble, key architect of Good Friday agreement, dies aged 77 |  Northern Irish politics | The Guardian

 

அவருடைய முயற்சியின் கீழ் 1998ம் ஆண்டு பெல்பாஸ்ட் ஒப்பந்தம் நிறைவேறியது. மேலும் அவர் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக திகழ்ந்த சிற்பி என்று போற்றப்படுபவர் ஆவார். அப்பகுதிகளில் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த செக்டேரியன் வன்முறையில் சுமார் 3600 பேர் பலியானார்கள். அங்கு கலவரத்தை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை நிலைநிறுத்த, அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவருக்கு 1998ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

“ஏழை வீட்டில் பிறந்த மகளான நான் இன்று இந்தியாவின் ஜனாதிபதி .” – திரவுபதி முர்மு நெகிழ்ச்சி !

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றார். பதவியேற்ற பிறகு பாராளுமன்ற மைய மண்டபத்தில் அவர் தனது முதல் உரையை ஆற்றினார். அப்போது திரவுபதி முர்மு பேசியதாவது,

ஜனாதிபதியாக பதவியேற்றது பெருமை அளிக்கிறது. என்னை தேர்ந்து எடுத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. முக்கியமான தருணத்தில் நாடு என்னை ஜனாதிபதியாக தேர்ந்து எடுத்துள்ளது. இன்று முதல் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது.

நாடு சுதந்திரம் அடைந்து 50-வது ஆண்டை கொண்டாடும்போது எனது அரசியல் வாழ்க்கை தொடங்கியது என்பது தற்செயல் நிகழ்வாகும். சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் இன்று எனக்கு இந்தப் புதிய பொறுப்பு கிடைத்துள்ளது. அடுத்த 25 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம் தயாராகும் நேரத்தில் சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது பாக்கியம். சாதாரண கவுன்சிலராக தொடங்கி ஜனாதிபதியாக உயர்ந்தது ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவின் மகத்துவமாகும்.

ஏழை வீட்டில் பிறந்த மகளான நான் ஜனாதிபதி ஆக முடியும் என்பதுதான் ஜனநாயகத்தின் சக்தியாகும். ஜனாதிபதி பதவியை எட்டியது என்பது எனது தனிப்பட்ட சாதனை அல்ல. இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனை ஆகும்.

என்னுடைய உயர்வு கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளுக்கான திறவுகோலாக இருக்கும். நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்துக்காக பணியாற்றுவேன். பெண்கள், இளைஞர்களின் நலனில் தனி கவனம் செலுத்துவேன். சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டின் சுய மரியாதையை முதன்மையாக வைத்திருக்க கற்றுக்கொடுத்திருக்கின்றனர். சுதந்திர போராட்டத்தில் பழங்குடியின மக்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர். கொரோனா காலத்தில் உலகத்துக்கே இந்தியா பெரும் நம்பிக்கையாக திகழ்ந்தது.

அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து பாரதத்தை கட்டியெழுப்ப முனைப்புடன் செயல்படுவோம். பன்முக தன்மை கொண்ட நமது நாட்டில் பல மொழிகள், பல மதங்கள், பல உணர்வு, பழக்க வழக்கங்கள் உள்ளன. பெண்கள் மேலும் மேலும் அதிக அதிகாரத்தை பெற வேண்டுமென விரும்புகிறேன். ஒவ்வொரு துறையிலும் பெண்களுடைய பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். பல ஆண்டுகளாக முன்னேற்றம் காணாத பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள் என்னை அவர்களது பிரதிபலிப்பாக பார்க்கலாம். நாட்டின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் முதல் ராம்நாத் கோவிந்த் வரை பல பிரமுகர்கள் இந்த பதவியை அலங்கரித்துள்ளனர். இந்த பதவியுடன் பெரிய பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பையும் நாடு என்னிடம் ஒப்படைத்துள்ளது. அரசியலமைப்பின் வெளிச்சத்தில் எனது கடமைகளை மிகுந்த நேர்மையுடன் நிறைவேற்றுவேன்.

சில நாட்களுக்கு முன்பு இந்தியா 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தி சாதனை படைத்துள்ளது. இந்த முழுப் போரிலும் இந்திய மக்கள் காட்டிய கட்டுப்பாடு, தைரியம் மற்றும் ஒத்துழைப்பு இதற்கு காரணமாகும். கல்வி பற்றிய ஸ்ரீஅரவிந்தரின் கருத்துக்கள் என்னை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன. இளைஞர்களின் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். எதிர்காலத்தை உருவாக்குவது மட்டுமல்ல எதிர்கால இந்தியாவுக்கு அடித்தளமிடுகிறீர்கள் என்பதை நம் நாட்டு இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். ஜனாதிபதி என்ற வகையில் உங்களது முழு ஒத்துழைப்பு எனக்கு எப்போதும் உண்டு. என் வாழ்க்கையில் இதுவரை பொது சேவையில் வாழ்க்கையின் அர்த்தத்தை அனுபவித்து வருகிறேன். உலக நலன் என்ற உணர்வோடு உங்கள் அனைவரின் நம்பிக்கைக்கு ஏற்ப அர்ப்பணிப்புடன் பணியாற்ற நான் எப்போதும் தயாராக இருப்பேன். இவ்வாறு தனது முதல் உரையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.