05

05

பிரித்தானியாவின் முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா! ஜனாதிபதி கோட்டாவுக்கு முன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நிரந்தரமாகவே வீட்டுக்குப் போக வேண்டி வரலாம்!!

சில மணிநேரங்களுக்கு முன்பாக குறிப்பாக பிரித்தானிய July 05, நேரம் மாலை ஆறுமணி இரு நிமிடங்கள் அளவில் பிரித்தானிய சுகாதாரத்துறைச் செயலாளர் சஜித் ஜாவட் அமைச்சுப் பதவியில் இருந்து ராஜிநாமாச் செய்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த பத்து நிமிடங்களில் பிரித்தானிய சான்சிலர் ஒப் எஸ்செக்கர் என்றழைக்கப்படும் நிதியமைச்சர் ரிஷி சுனாக் பதவி விலகினார். பிரித்தானியாவின் மிக முக்கியத்துவமான இரு அமைச்சர்கள் பத்து நிமிட இடைவெளியில் பதவி விலகியுள்ளனர்.

“அரசாங்கம் சரியாகவும் தகமையுடனும் கனதியுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதற்கு தகுதியுடையவர்கள்” என்றும் இந்த அடிப்படைகளுக்காக போராடுவது அவசியம் என்பதால் தான் பதவி விலகுவதாக ரிஷி சுனாக் தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

“பணிவு, பற்றிக் கொள்ளல், புதிய பாதை என்பனவே கடந்த மாதம் பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் அடிப்படை. ஆனால் கவலைக்குரிய விடயம் அது உங்கள் தலைமையில் சாத்தியமில்லை. அதனால் அமைச்சுப் பொறுப்பை ராஜிநாமாச் செய்கின்றேன்” என்று சுகாதார அமைச்சர் சஜித் ஜாவட் தெரிவித்து இருந்தார்.

பிரித்தானிய பிரதமரின் நேர்மையற்ற, ஓழுக்கமற்ற போக்குகள் நாட்டை முடக்கத்தில் போட்டுவிட்டு அரசு குடித்து கும்மதாளம் போட்டது போன்ற விடயங்கள் அண்மைக்காலமாக பெரும் நெருக்கடியை பிரித்தானிய அரசியலில் ஏற்படுத்தி இருந்தது. இவ்வாறான நெருக்கடிகளின் போதெல்லாம் உண்மைக்குப் புறம்பாக எல்லாவற்றையும் மூடி மறைத்து பொய்யை உண்மையாகவே சொல்லும் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், உண்மைகள் அம்பலத்துக்கு வந்ததும் அதனை வெறும் கண்துடைப்புக்காக ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோருவார். இது ஒன்றல்ல இரண்டல்ல பல தடவைகள் நடந்தேறி பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நம்பத்தகுதியற்ற ஒருவராக ஆனார்.

இதைவிட பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் ஆளும் கன்சவேடிவ் கட்சிக்குள் பாலியல் வல்லுறவு துன்புறுத்தல் சம்பவங்கள் மிகவும் சாதாரணமாக இடம்பெற்று வந்தது. இவ்வாறான கயவர்களுக்கு எதிராக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் எவ்வித இறுக்கமான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.

இந்நிலையில் கிறிஸ் பின்சர் கொன்சவேடிவ் கட்சியின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு பொறுப்பான உதவித் தலைவராக நியமிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் கிரிஸ் பின்சர் பாலியல் தொந்தரவு பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருபவர் என்ற குற்றச்சாட்டு ஏழுந்திருந்தும் பிரதமர் உடன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கடுமையான அழுத்தங்கள் வரவே விசாரணைகள் முடியும் வரை கிரிஸ் பின்சர் பாராளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலத்தி வைக்கப்பட்டார்.

ஆனால் தற்போது அமைச்சர்கள் பதவி விலகுகின்ற அளவுக்கு போனதற்குக் காரணம், பிரித்தானிய பிரதமர் தெரிவித்த இன்னுமொரு பொய். அதாவது கிரிஸ் பின்சரை இந்த முக்கிய பதவியில் அமர்த்துகின்ற போது அவர் ஒரு பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர் என்ற விடயம் தனக்கு தெரியாது என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்து இருந்தார். ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரே பிரதமருக்கு தனக்கு ஏற்பட்ட பாதிப்பை எடுத்துக் கூறியிருக்கின்றார். தற்போது எல்லாம் அம்பலமானதும் பிரதமர் பொறிஸ் தனது நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோரி இருக்கின்றார்.

ஏற்கனவே குடியும் கும்மாளமும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கி இருக்கையில், கிறிஸ் பின்சர் விவகாரமும் அதனைத் தொடர்ந்து முக்கிய அமைச்சர்கள் ராஜிநாமாச் செய்ததும் பிரித்தானிய அரசியலில் பெரும் நெருக்கடி நிலையைத் தோற்றுவித்துள்ளது. கொன்சவேடிவ் கட்சிக்குள் தலைமைத்துவப் போட்டி இடம்பெற்றால் சஜித் ஜாவட் உம் ரிஷி சுனாக் கும் களமிறங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் தங்களை அடுத்த தலைமைத்துவப் போட்டிக்கு தயார்படுத்தவே பதவி விலகியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.

“பெட்ரோல் செட்டில் பௌத்த பிக்குவின் அடாவடிக்கு அடங்கும் பொலிஸார்“ – தினமும் கால்கடுக்க காத்துநின்று ஏமாறும் சாதாரண மக்கள் !

கந்தளாயில் தமக்கு பெற்றோல் பெற்றுத்தருமாறு கோரி இராணுவத்தினருடன் பௌத்த துறவியொருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு (4) இரவு 7.30 மணியளவில் கந்தளாய் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

கந்தளாயில் உள்ள மெதகம விகாரையின் விகாராதிபதி ஒருவரே இவ்வாறு எரிபொருள் நிரப்புமாறு கோரி இராணுவத்தினருடன் ரகளையில் ஈடுபட்டார்.

பௌத்த துறவி தினமும் எரிபொருள் நிரப்புவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, எரிபொருள் நிரப்பமுடியாது என தெரிவித்ததையடுத்தே பௌத்த துறவி ரகளையில் ஈடுபட்டார்.

தமக்கு எரிபொருள் நிரப்ப முடியா விட்டால் இராணுவத்தினருக்கெதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து இராணுவத்தினருக்கு கடுமையான வார்த்தை பிரயோகங்களை பௌத்த துறவி மேற்கொண்டார்.

இதனையடுத்து பொலிஸார் துறவியை சமாதானப்படுத்தி எரிபொருள் நிரப்பினார்கள். வரிசையில் எரிபொருளுக்காக காத்திருந்த பொதுமக்கள் பௌத்த துறவியின் செயற்பாட்டை கடுமையாக விமர்சித்தார்கள். இதனையடுத்து பௌத்த துறவி புறப்பட்டு சென்று விட்டார்.

………………………………….

இலங்கையின் எல்லா பகுதிகளிலும் பெற்றோலுக்கான தட்டுப்பாடு காரணமாக பல கிலோமீட்டர்கள் நீளத்துக்கு வரிசைகள் காணப்படுகின்றன. பல இடங்களில் மக்கள் 5 – 10 நாள் வரை காத்திருந்து 2 லீட்டர் பெற்றோல் பெறும் துர்பாக்கியமான சூழல் காணப்படுகின்றது. மேலும் பல இடங்களில் பல நாட்களாக தொடரும் பெட்ரோல் கரிசையால் 10க்கும் அதிகமானோர் இறந்து போன சோகங்களும் அரங்கேறியுள்ளன.

iftamil - இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துமாறு கோரிக்கை

மக்கள் கால் கடுக்க – மனது வலிக்க நீண்ட வரிசையில் நின்றும் கிடைக்காத இந்த பெட்ரோல் ஆளும் வர்க்கத்தினருக்கும் – சமய குறிப்பாக பௌத்த பிக்குகளுக்கும் – காவல்துறையினர் , அரச ஊழியர்களுக்கு இலகுவாக கிடைத்துவிடுகிறது.  பொலிஸார் தம் இஷ்டத்துக்கு ஏற்ப பெட்ரோலை பதுக்குகின்றனர். மேலும் பல அரச ஊழியர்கள் தமது தேவைக்கு மட்டுமன்றி தமது உறவினர்களின் தேவை தொடங்கி பல தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள சலுகைகளை பயன்படுத்தி அடுத்தடுத்து – அடிக்கடி வந்து பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர்.

பாவம் சாதாரண மக்கள் ஏன் என்றும் கேட்க முடியாமல் – என்ன செய்வதென்றும் தெரியாமல் கால்கடுக்க காத்து நின்று மன உளைச்சளைடைவது மட்டும் தான் மிச்சம். இதே நேரம் தமது அலுவலகங்களுக்கு சாதாரண மக்கள் வரும் போது மட்டும் வரிசையில் நில்லுங்கள் – அமைதியாக இருங்கள் – என சட்டம் – ஒழுங்கு பற்றி பேசும் உத்தியோகத்தர்களின் ஒழுக்கம் என்பது எப்படியானது என்பதை இந்த பெட்ரோல் வரிசைகளுக்கு சென்று பார்த்தால் தெரிந்து விடும். நான் உயர் அதிகாரி என்னை முன்னுக்கு விடுங்கள் என கூறும் அதிகாரி ஒரு பக்கம் – நான் தான் இந்த பிரதேசத்தின் பிரதான அதிகாரி எனக்கு முதலில் பெட்ரோல் நிரப்புங்கள் என கூறி  மக்கள் நீண்ட நேரடமாக காத்து நிற்கும்  வரிசைக்கு நடுவில் நுழைந்து பெட்ரோல் நிரப்பும் அளவிற்கு இந்த அரச அதிகாரிகளின் மனோநிலை பூச்சிய அடைவில் உள்ளது என்பதே சோகம்.

அதே வரிசையில் எனக்கு முன்பு கத்தரிக்காய்களை மூடையாக கட்டிக்கொண்டு நின்ற அந்த விவசாயி எவ்வளவு கேட்டும் ஒரு லீட்டர் பெட்ரோல் கொடுக்க அங்கிருந்த காவல்துறையினரோ – பெட்ரோல் செட் ஊழியர்களோ யாரும் முன்வரவில்லை. பொறுமையிழந்த அந்த முதுமையான விவசாயி பைக்கை உருட்டிக்கொண்டே சந்தைக்கு சென்றுவிட்டார்.

நாளாந்தம் உண்பதற்கு சோறு போடும் விவசாயம் அத்தியாவசியமா – இந்த அரசாங்க அதிகாரிகள் வேலையே செய்யாது தேய்த்துக்கொண்டிருக்கும் இந்த நாட்காலிகள் அத்தியாவசியமானதா என்றே தெரியவில்லை. இந்த அரச அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்யாததும் கூட இன்றைய நாட்டின் சீர்கேட்டுக்கு ஒரு காரணம்.

இந்த லட்சணத்தில் தான் ஒரே நாடு ஒரே சட்டம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

“நிலவிலும் தொடரும் சீனா – அமெரிக்கப் பகை“ – இலக்கு வைக்கப்படும் நிலவின் தென்துருவம் !

சீனா ஒரு இராணுவத் திட்டத்தின் ஒரு பகுதியாக சந்திரனை கைபற்றக்கூடும் என நாசா குற்றமசாட்டி இருந்தது. சந்திரனை ஆராய்வதில் சீனா தனிக் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் சீனா தனது விண்வெளித் திட்டத்தின் வேகத்தை முடுக்கிவிட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டில் சீனா முதன்முதலாக சந்திரனில் தரையிறங்கியது மற்றும் இந்த தசாப்தத்தின் இறுதியில் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் அளவுக்கு சக்திவாய்ந்த ரொக்கெட்டுகளை ஏவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்து இருந்த நாசா நிர்வாகி பில் நெல்சன்,

“சீனா நிலவில் இறங்குவதைப் பற்றி நாம் மிகவும் கவலைப்பட வேண்டும். இது இப்போது எங்களுடையது, நீங்கள் வெளியே இருங்கள். சீனாவின் விண்வெளித் திட்டம் இராணுவத் திட்டம் ஆகும். மற்றவர்களிடமிருந்து யோசனைகளையும் தொழில்நுட்பத்தையும் சீனா திருடிவிட்டது என கூறினார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:-

“அமெரிக்க தேசிய விண்கலம் மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் தலைவர் உண்மைகளை புறக்கணித்து சீனாவைப் பற்றி பொறுப்பற்ற முறையில் பேசுவது இது முதல் முறை அல்ல. சீனாவின் இயல்பான மற்றும் நியாயமான விண்வெளி முயற்சிகளுக்கு எதிராக அமெரிக்கத் தரப்பு தொடர்ந்து ஒரு அவதூறு பிரச்சாரத்தை செய்து வருகிறது. மேலும் இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துக்களை சீனா உறுதியாக எதிர்க்கிறது. விண்வெளியில் மனிதகுலத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலத்தை உருவாக்குவதை சீனா எப்போதும் ஊக்குவித்து வருகிறது, மேலும் விண்வெளியில் ஆயுதப் பந்தயம் மற்றும் ஆயுதப் போட்டி ஆகியவற்றை எதிர்க்கிறது என கூறினார்.

நாசா, அதன் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ், 2024 ஆம் ஆண்டில் சந்திரனைச் சுற்றிவர ஒரு குழுவை அனுப்பவும், 2025 ஆம் ஆண்டு சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் ஒரு குழுவினர் தரையிறங்கவும் திட்டமிட்டுள்ளது. சீனா இந்த தசாப்தத்தில் நிலவின் தென் துருவத்திற்கு சில நேரங்களில் திட்டமிடப்படாத பயணங்களைத் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் சுதந்திரதினத்திலும் துப்பாக்கிச்சூடு – 06 பேர் பலி !

அமெரிக்காவின்  246-வது சுதந்திர தின விழா  நேற்று இரவு கொண்டாடப்பட்டது. இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணி வகுப்பு தொடங்கியது. இதில் ஏராளமான பொது மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

அணிவகுப்பு தொடங்கிய 10 நிமிடத்தில் வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் பொது மக்களை நோக்கி சரமாரியாக சுட்டார். அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தினார். அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி துடித்துக் கொண்டு ஓடினர். துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருந்தனர்.

 

அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுதந்திர தின அணி வகுப்பில் மர்ம நபர் துப்பாக்கியால் 25 சுற்றுகள் சுட்டதாகவும் அவருக்கு 18 முதல் 20 வயது வரைக்குள் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிய வாலிபரை போலீசார் தேடினர். இந்த நிலையில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர். அவனது பெயர் ராபர்ட்-இ-க்ரைமோ. 22 வயதான அந்த வாலிபரை துப்பாக்கி சூடு நடந்த பகுதி அருகே மடக்கி பிடித்தனர்.

 

அப்போது அவரிடம் இருந்து அதிநவீன துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

இதுகுறித்து ஐலேண்ட் பார்க் பொலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது

“துப்பாக்கி சூடு தொடர்பாக ராபர்ட் க்ரைமோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பலியானவர்களில் ஒருவர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர். குழந்தைகள் உள்பட பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றார். வாலிபர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை. துப்பாக்கி சூடு காட்சி வீடியோக்கள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையின் தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து போராடுவேன். அதை கைவிட போவதில்லை. இந்த சுதந்திர தினத்தன்று அமெரிக்க சமூகத்திற்கு மீண்டும் வருத்தத்தை ஏற்படுத்திய புத்தியில்லாத துப்பாக்கி வன்முறையால் நானும், மனைவி ஜில்டை னும் அதிர்ச்சி அடைந்தோம் என்றார். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வரும் நிலையில் சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 21 பேர் பலியானார்கள். இதையடுத்து துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்த ஜோபைடன், துப்பாக்கி கட்டுப்பாடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் அமல்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.