February

February

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிடிக்குள் அகப்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கொல்லப்பட்டுள்ளனர்.” – சிறிதரன் சாடல் !

தமிழ் மக்களைச் சாகடிக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னும் நீக்கப்படாமல் இருப்பது நாட்டுக்கு மிகப்பெரிய அவமானமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துக் செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் பல பகுதிகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் ஸ்கந்தபுரம் பொதுச் சந்தையில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் பொதுச் செயலாளருமான சுப்பிரமணியம் சுரேன், கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் பிரதேச அமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் இன்று கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் சந்தையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிடிக்குள் அகப்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம் !

இலங்கையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அமுலிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றபட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் 47ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இன்று திங்கட்கிழமை (28) பிற்பகல் இடம்பெற்றபோதே இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இப்பிரேரணையை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான ஹென்றி மகேந்திரன் சமர்ப்பித்திருந்தார். இதனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் வழிமொழிந்தார். இதையடுத்து மாநகர முதல்வர் உட்பட உறுப்பினர்கள் பலரும் பயங்கரவாத தடைச்சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கருத்துரைத்தனர்.

இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி எவ்வித குற்றமும் இழைக்காத அப்பாவி தமிழ், முஸ்லிம் இளைஞர்களும் புத்திஜீவிகளும் கைது செய்யப்பட்டு, வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டு, துன்புறுத்தப்படுகின்றனர் என்று இதன்போது அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.எம்.நிஸார் இப்பிரேரணைக்கு எதிராக கருத்துத் தெரிவித்த நிலையில், சபைக்கு சமூகமளித்திருந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பெலாரஸ் நாட்டில் உள்ள தூதரகத்தை மூடியது அமெரிக்கா !

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு ரஷ்யா, உக்ரைன் இடையே பெலாரஸ் நாட்டில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்நிலையில், பெலாரஸ் நாட்டில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா மூடி உள்ளது. மேலும், ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களில், அத்தியாவசிய பணிகள் தொடர்பான ஊழியர்கள் தவிர மற்ற ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய படைகளின் நியாயமற்ற தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு பிரச்சினைகள் உருவாகியிருப்பதால் இந்த நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன் கூறி உள்ளார்.

“அவமானங்கள் அனைத்தும் எனக்கு பழகி விட்டது.” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

“54 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட அவதூறுகள், அவமானங்கள் அனைத்தும் எனக்கு பழகி விட்டது.” என  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தனது ஆட்சிக் காலத்தில் இவ்வாறான ஒரு துயரமான கதியை மக்கள் எதிர்கொண்டதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் அவர் தெரிவித்த போது,

எனது ஆட்சிக்கு பிறகு பிரச்சனைகள் இல்லாத அழகான நாட்டைக் நான் கையளித்தேன். மக்கள் உணவருந்தி மகிழ்ச்சியாக இருந்தார்கள், விவசாயிகள் நன்றாக விவசாயம் செய்தார்கள், என் காலத்தில் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கவில்லை, ஆனால் இந்நாட்டு குடிமக்களின் அன்றாட வாழ்க்கை இன்று இருக்கும் நிலைக்கு வீழ்ச்சியடைந்திருக்கவில்லை.

அரசாங்கத்தை குற்றம் சாட்டி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைந்து நாட்டை காப்பாற்ற, சிதைந்து கொண்டிருக்கும் நாட்டை மீட்டெடுக்க இது ஒரு சந்தர்ப்பமாகும். இன்று என்னை அவதூறாக பேசுகின்றனர், இழிவு படுத்துகின்றனர். ஏறக்குறைய 54 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட அவதூறுகள், அவமானங்கள் அனைத்தும் எனக்கு பழகி விட்டது.

இன்று நம் நாட்டில் பல பிரச்சனைகள் உள்ளன, விவசாயிகள் கண்ணீரில் வாழ்கிறார்கள், நான் கடந்த ஒரு வருடமாக விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசி வருகிறேன். பொலன்னறுவை மக்களிடம் வாக்குகளைப் பெற்ற மூன்று அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். என்னைத் தவிர. அவர்களில் ஒருவரேனும் நாடாளுமன்றத்திலோ அல்லது அதற்கு வௌியிலோ விவசாய சமூகத்தின் அவல நிலையைப் பற்றிப் பேசுவதில்லை. எல்லாவற்றிற்கும் ஆமாம் சார். ஆமாம் சார். அவ்வளவுதான்.”

ஆரம்பமானது ரஷ்யா – உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை !

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷ்யாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இரு நாடுகளும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின. ஆனால் ரஷ்யாவின் அழைப்பை உக்ரைன் முதலில் ஏற்கவில்லை. பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதை உக்ரைன் விரும்பவில்லை. மீண்டும் ரஷ்யா அழைப்பு விடுத்தபோது, பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தது.

அதன்படி, ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்பியது. அந்த குழுவினர், ரஷ்ய பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தையை தொடங்கினர். இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை முதலில் நிறுத்த வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்படும். இதேபோல் ரஷ்யா தரப்பில் உக்ரைனுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படும்.

உக்ரைனில் உள்ள ரஷ்ய வீரர்கள் உடனே வெளியேற வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவுறுத்தியதுடன், ‘உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீதான படையெடுப்பு – ரஷ்யாவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்தது சர்வதேச ஒலிம்பிக் சபை !

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.

இதனால் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்ய சர்வதேச ஒலிம்பிக் சபை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் சபை , “ரஷ்ய மற்றும் பொலரஸ் அரசாங்கங்கள் ஒலிம்பிக் ஒப்பந்தத்தை மீறியுள்ளன. விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பிற்கு முழுமையான முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதனால் ரஷ்யா மற்றும் பொலரஸில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளையும் வேறு இடத்துக்கு மாற்றவும் அல்லது ரத்து செய்யவும் அனைத்து விளையாட்டு கூட்டமைப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

“மேடையில் வீற்றிருந்து மக்களுக்கான நல்ல திட்டம் என கூறிவிட்டு ஊடகங்களிடம், இது ஒரு பிரயோசனமற்ற வேலைத்திட்டம் என அடைக்கலநாதன் கூறினார்.” – கு.திலீபன் சாடல் !

“ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் வவுனியா மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். நாட்டில் கொரோனா தாக்கம் இருந்தாலும் எமது மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதில் எமது அரசாங்கம் பின்நிற்கவில்லை. மக்களது பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.” என வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 45 குடும்பத்தினருக்கு தையல் இயந்திரம், ஆடு மற்றும் கோழி வளர்ப்பிற்கான பணம், விவசாயத்திற்காக மோட்டர் மற்றும் வேலி முள்ளுக்கம்பி, சமையல் உபகரணங்கள், சலூன் உபகரணங்கள், பிரிண்டர், வாகன திருத்தும் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி அவர்கள் வருகை தந்த போது காணி பிரச்சனை, வன இலாகா பிரச்சனை தொடர்பில் எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இதனை தீர்ப்பதற்காக நடமாடும் சேவை நடைபெற்றது. இதில், வேடிக்கையான விடயம் என்னவென்றால், நடமாடும் சேவை மேடையில் வீற்றிருந்து மக்களுக்கான காணிப் பத்திரங்களை எம்முடன் இணைந்து வழங்கிவிட்டு, அந்த மேடையில் இது ஒரு சிறந்த திட்டம். மக்களுக்கு பயனுள்ள திட்டம் என்று அங்கு வீற்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்காலநாதன் அவர்கள் தெரிவித்திருந்தார். அங்கு அந்த நிகழ்வை வரவேற்ற அவர் மேடையில் இருந்து இறங்கி செல்லும் போது ஊடகங்களிடம், இது ஒரு பிரயோசனமற்ற வேலைத்திட்டம் என கருத்து தெரிவித்திருந்தார். மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கபடவில்லையாம் என கூறியிருந்தார்.

அந்த இடத்தில் இரண்டு பேருக்கு இருக்கிற காணிப்பிரச்சனை கூட வந்தது. அதனை உடனடியாக அந்த இடத்தில் தீர்க்க முடியாது. பிரதேச செயலாளர் ஆராய்ந்து அதற்குரிய தீர்வை வழங்க வேண்டும். அவ்வாறான பிரச்சனைகளுக்கு பிரதேச செயலாளரை தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், 200 குடும்பங்களுக்கு மேல் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது. துரித கதியில் மத்திய தர வர்க்கத்தின் காணிகளில் குடியிருப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் காணி அமைச்சருடன் இணைந்து ஆராய்ந்தோம். அதற்கான முடிவு விரைவில் வரும். எனவே மக்களுக்கான வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன. இனியும் நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் ஒரு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ !

அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கடுவ​ளை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து  நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மன்றுக்கு அறிவிக்கப்பட்டமைக்கு அமைய, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்ட நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

திவிநெகும திணைக்களத்தின் நிதியை முறையற்ற வகையில் கையாண்டமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கெடுக்கும் உக்ரைன் அழகி அனஸ்தீசியா லென்னா !

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 5-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே நடந்து வரும் மோதலில் 5,300 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனை கைப்பற்ற வந்தால் கொலைதான் - மிஸ் உக்ரைன் அழகி போர்க்கொடி..! -  TamilSpark
உக்ரைன் இராணுவத்தில் சேரும்படி அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தனது மக்களிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில் டென்னிஸ் வீரர், அந்நாட்டின் இளம்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் ஆர்வமுடன் படைகளில் சேர்ந்து வருகின்றனர். சொந்த நாட்டில் வசிக்கும் மக்கள் ராணுவத்தினரிடம் பயிற்சி பெறுகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு மிஸ் உக்ரைன் பட்டம் வென்ற அழகியான அனஸ்தீசியா லென்னா (31) என்பவர் தனது நாட்டை காக்கும் பணியில் இறங்கி உள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், படையெடுக்கும் நோக்குடன் உக்ரைன் எல்லையை கடக்கும் ஒவ்வொருவரும் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுடன் துணை நில்லுங்கள், உக்ரைனுடன் கைசேருங்கள் என இரு ஹேஷ்டேகையும் பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பை நிறுத்தக்கோரி போராடிய 5000திற்கும் அதிகமானோரை ரஷ்யாவில் கைது !

யுத்தத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்திய சுமார் 2000திற்கும் அதிகமானோரை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் சுமார் 50திற்கும் அதிகமான, போராட்டங்கள், யுக்ரேனுக்கு எதிரான யுத்தத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 2000 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, யுக்ரேன் படையெடுப்பிற்கு எதிராக தற்போது வரை 5000திற்கும் அதிகமானோரை ரஷ்யா, உள்நாட்டில் கைது செய்துள்ளதாக OVD-Info என்ற அமைப்பின் தரவுகள் கூறுகின்றன.