28

28

பெலாரஸ் நாட்டில் உள்ள தூதரகத்தை மூடியது அமெரிக்கா !

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு ரஷ்யா, உக்ரைன் இடையே பெலாரஸ் நாட்டில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்நிலையில், பெலாரஸ் நாட்டில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா மூடி உள்ளது. மேலும், ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களில், அத்தியாவசிய பணிகள் தொடர்பான ஊழியர்கள் தவிர மற்ற ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய படைகளின் நியாயமற்ற தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு பிரச்சினைகள் உருவாகியிருப்பதால் இந்த நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன் கூறி உள்ளார்.

“அவமானங்கள் அனைத்தும் எனக்கு பழகி விட்டது.” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

“54 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட அவதூறுகள், அவமானங்கள் அனைத்தும் எனக்கு பழகி விட்டது.” என  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தனது ஆட்சிக் காலத்தில் இவ்வாறான ஒரு துயரமான கதியை மக்கள் எதிர்கொண்டதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் அவர் தெரிவித்த போது,

எனது ஆட்சிக்கு பிறகு பிரச்சனைகள் இல்லாத அழகான நாட்டைக் நான் கையளித்தேன். மக்கள் உணவருந்தி மகிழ்ச்சியாக இருந்தார்கள், விவசாயிகள் நன்றாக விவசாயம் செய்தார்கள், என் காலத்தில் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கவில்லை, ஆனால் இந்நாட்டு குடிமக்களின் அன்றாட வாழ்க்கை இன்று இருக்கும் நிலைக்கு வீழ்ச்சியடைந்திருக்கவில்லை.

அரசாங்கத்தை குற்றம் சாட்டி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைந்து நாட்டை காப்பாற்ற, சிதைந்து கொண்டிருக்கும் நாட்டை மீட்டெடுக்க இது ஒரு சந்தர்ப்பமாகும். இன்று என்னை அவதூறாக பேசுகின்றனர், இழிவு படுத்துகின்றனர். ஏறக்குறைய 54 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட அவதூறுகள், அவமானங்கள் அனைத்தும் எனக்கு பழகி விட்டது.

இன்று நம் நாட்டில் பல பிரச்சனைகள் உள்ளன, விவசாயிகள் கண்ணீரில் வாழ்கிறார்கள், நான் கடந்த ஒரு வருடமாக விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசி வருகிறேன். பொலன்னறுவை மக்களிடம் வாக்குகளைப் பெற்ற மூன்று அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். என்னைத் தவிர. அவர்களில் ஒருவரேனும் நாடாளுமன்றத்திலோ அல்லது அதற்கு வௌியிலோ விவசாய சமூகத்தின் அவல நிலையைப் பற்றிப் பேசுவதில்லை. எல்லாவற்றிற்கும் ஆமாம் சார். ஆமாம் சார். அவ்வளவுதான்.”

ஆரம்பமானது ரஷ்யா – உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை !

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷ்யாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இரு நாடுகளும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின. ஆனால் ரஷ்யாவின் அழைப்பை உக்ரைன் முதலில் ஏற்கவில்லை. பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதை உக்ரைன் விரும்பவில்லை. மீண்டும் ரஷ்யா அழைப்பு விடுத்தபோது, பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தது.

அதன்படி, ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்பியது. அந்த குழுவினர், ரஷ்ய பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தையை தொடங்கினர். இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை முதலில் நிறுத்த வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்படும். இதேபோல் ரஷ்யா தரப்பில் உக்ரைனுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படும்.

உக்ரைனில் உள்ள ரஷ்ய வீரர்கள் உடனே வெளியேற வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவுறுத்தியதுடன், ‘உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீதான படையெடுப்பு – ரஷ்யாவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்தது சர்வதேச ஒலிம்பிக் சபை !

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.

இதனால் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்ய சர்வதேச ஒலிம்பிக் சபை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் சபை , “ரஷ்ய மற்றும் பொலரஸ் அரசாங்கங்கள் ஒலிம்பிக் ஒப்பந்தத்தை மீறியுள்ளன. விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பிற்கு முழுமையான முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதனால் ரஷ்யா மற்றும் பொலரஸில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளையும் வேறு இடத்துக்கு மாற்றவும் அல்லது ரத்து செய்யவும் அனைத்து விளையாட்டு கூட்டமைப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கெடுக்கும் உக்ரைன் அழகி அனஸ்தீசியா லென்னா !

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 5-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே நடந்து வரும் மோதலில் 5,300 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனை கைப்பற்ற வந்தால் கொலைதான் - மிஸ் உக்ரைன் அழகி போர்க்கொடி..! -  TamilSpark
உக்ரைன் இராணுவத்தில் சேரும்படி அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தனது மக்களிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில் டென்னிஸ் வீரர், அந்நாட்டின் இளம்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் ஆர்வமுடன் படைகளில் சேர்ந்து வருகின்றனர். சொந்த நாட்டில் வசிக்கும் மக்கள் ராணுவத்தினரிடம் பயிற்சி பெறுகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு மிஸ் உக்ரைன் பட்டம் வென்ற அழகியான அனஸ்தீசியா லென்னா (31) என்பவர் தனது நாட்டை காக்கும் பணியில் இறங்கி உள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், படையெடுக்கும் நோக்குடன் உக்ரைன் எல்லையை கடக்கும் ஒவ்வொருவரும் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுடன் துணை நில்லுங்கள், உக்ரைனுடன் கைசேருங்கள் என இரு ஹேஷ்டேகையும் பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பை நிறுத்தக்கோரி போராடிய 5000திற்கும் அதிகமானோரை ரஷ்யாவில் கைது !

யுத்தத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்திய சுமார் 2000திற்கும் அதிகமானோரை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் சுமார் 50திற்கும் அதிகமான, போராட்டங்கள், யுக்ரேனுக்கு எதிரான யுத்தத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 2000 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, யுக்ரேன் படையெடுப்பிற்கு எதிராக தற்போது வரை 5000திற்கும் அதிகமானோரை ரஷ்யா, உள்நாட்டில் கைது செய்துள்ளதாக OVD-Info என்ற அமைப்பின் தரவுகள் கூறுகின்றன.

கூகுள் மேப் உதவியுடன் உக்ரைனை தாக்கும் ரஷ்ய படைகள் – கூகுள் எடுத்த அதிரடி முடிவு !

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து  5-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.  ஏராளமான இராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்துள்ள ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
இந்நிலையில் ரஷ்ய படைகள் கூகுள் மேப் உதவியுடன் வழிதடங்கள் மற்றும் போக்குவரத்து குறித்து அறிந்துகொள்வதை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் அரசிடம் பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்ய தாக்குதல்களை தடுப்பதற்கு இது ஓரளவு உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.