06

06

சீனாவும் – ரஷ்யாவும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானம் !

மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட சீனாவும் ரஷ்யாவும் முடிவு செய்துள்ளன.

குளிர்கால ஒலிம்பிக்கிற்கான விளாடிமிர் புட்டின் விஜயத்தின் போது பல சிக்கல்கள் குறித்த அவர்கள் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கத்திய சக்திகள் ரஷ்யாவை குறைமதிப்பிற்கு உட்படுத்த நேட்டோ பாதுகாப்பு கூட்டணியை பயன்படுத்துவதாக விளாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யர்களும் உக்ரைனியர்களும் ஒரே நாட்டவர்கள் என தெரிவிக்கும் புடின் எல்லையில் சுமார் 100,000 ரஷ்ய துருப்புக்களை களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கை, உக்ரைனை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், நேட்டோ ஒரு பனிப்போர் சித்தாந்தத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டியுள்ளன. இதேவேளை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா இடையேயான அவ்க்கஸ் பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து இரு நாடுகளும் கவலை வெளியிட்டுள்ளன.

ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் குறித்த ஒப்பந்தத்தை அவுஸ்ரேலியா கடந்த ஆண்டு அறிவித்தது.

தென் சீனக் கடல் போன்ற சர்ச்சைக்குரிய பிரதேசங்களில் பதற்றத்தை அதிகரிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட சீனாவை எதிர்கொள்ளும் முயற்சியாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் – விசேட அவதானம் செலுத்தும் பிரித்தானியா !

இலங்கையில் படையினரால், பாதுகாப்பு தரப்பினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்படுவதாக பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் , இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரத்தைக் கண்காணிப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து பிரித்தானியா ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் டொனியா அன்டோனியஸியினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அமன்டா மில்லிங், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 கீழ் ஒன்று தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கடப்பாடுகள் நிறைவேற்றப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

92வது வயதில் காலமானார் இந்திய பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் !

இந்திய பிரபல பாடகி, லதா மங்கேஷ்கர் உடல்நல குறைவு காரணமாக தனது 92வது வயதில் இன்று காலமானார்.

அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் உடல்நிலை ஓரளவு தேறிய நிலையில், மீண்டும் மோசமானது.

why Lata Mangeshkar Never Got Married ? This is the Reason | லதா மங்கேஷ்கர்  திருமணம் செய்துகொள்ளாதது ஏன்? | Movies News in Tamil

இந்நிலையில், லதா மங்கேஷ்கர் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது ஆன்மா அமைதியடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவரது சகோதரி உஷா மங்கேஷ்கர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தாதா சாஹிப் பால்கே விருது உள்ளிட்ட உயரிய விருதுகளையும் லதா மங்கேஷ்கர் பெற்றுள்ளார்.

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் இந்தி, தமிழ் மற்றும் மராத்தி என பல்வேறு மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

லதா மங்கேஷ்கர் முதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்திப் பாடலைப் பாடினார். கடந்த 70 ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழில் வளையோசை – ஆராரோ ஆராரோ – எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் – உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க 5 நாள் முயற்சியும் வீண் – பிரிந்தது ரயான் அவ்ரமின் உயிர் !

மொராக்கோவின்  வடக்கு பகுதியில்  இகரா என்ற கிராமத்துக்கு அருகே சுமார் 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது.

சிறுவன் Rayan உயிரிழப்பு.., கடும் துயரத்தில் மொராக்கோ.. - லங்காசிறி நியூஸ்

கடந்த செவ்வாய்கிழமை ரயான் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன், குறித்த ஆழ்துறை கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டான். உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தை தோண்டி, சிறுவனை மீட்கும்  பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர்.

சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் தண்ணீர் மற்றும் பிராணவாயு வழங்கப்பட்டது. கைப்பேசி மற்றம் கெமரா மூலம் சிறுவன் இருந்த பகுதியை கண்டறிய முயற்சி எடுக்கப்பட்டது.

இந்த சிறுவனை மீட்கும் நடவடிக்கையானது உலக நாடுகள் முழுவதினதும் கவனத்தை ஈர்த்தது. எனினும் பாறைகள் காரணமாகவும், நிலச்சரிவு அச்சுறுத்தலாலும் மீட்புப் பணி பாதிக்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவனின் உடல் மீட்பு மீட்பு பணி நடைபெறும் பகுதியில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சிறுவனை உயிருடன் திரும்ப வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன் ரயான் உயிரிழந்து விட்டதாக இரண்டு அரச அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

அத்துடன் மொரோக்கோ நாட்டின் மன்னர் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு ரயானின் பெற்றோரைச் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார். ரயானுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளனர்.