நிஸ்தார் எஸ் ஆர் எம்

நிஸ்தார் எஸ் ஆர் எம்

சோனகர் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர்… : எஸ் ஆர் நிஸ்தார் மொகமட்

SL_Moorsஎன் அம்மாவின் இயற்பெயர் “நாச்சியா(ர்)”, என்ன அழகான தமிழ் பெயர்? “தலைவி” என்ற பொருள்பட அப்படி இடப்பட்டதாம். பெயரை மாத்திரம் பார்த்து இது சுத்த தமிழ்பெயர் எனவே இவர் இப்போது இல்லாவிட்டாலும் இவரின் பரம்பரை தமிழர் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று இனம் பிரிக்கும் தன்மை தமிழரிடையே காணப்படுவது கண்கூடு. இந்த அடிப்படையில்தான் இரண்டாம் புவனேகபாகுவின் வாரிசு “கலே பண்டார” அல்லது ” வத்ஹிமி” என்பவனின் பெயரை வைத்து அவன் சிங்களவன் என்ற முடிவுக்கு வருவதும் பிழையாகிவிடும். ஏனெனில் அந்த அரசன் “சோனகர்” இனத்தை சேர்ந்தவன். இப்படியாக அடிப்படை விடயங்களில் தெளிவில்லாமல் குழப்பங்களுக்கு மத்தியில் அரைத்த மாவை மீண்டும் மீண்டும் அரைப்பது போல இந்த சர்ச்சைக் குரிய “சோனகர்” இனம் பற்றி மிண்டும் பேச வேண்டியுள்ளதாக தேசம்நெற் கருதுவதால் மிண்டும் உங்களோடு.

இந்த சோனகர் என்ற வரையறைக்குள் வருபவர்கள் அனேகமா “இஸ்லாம்” என்ற சமயத்தை பின்பற்றுவதால், அவர்கள் சமய அடிப்படையில் “முஸ்லிம்” என்ற பெயரையும் பெறுகின்றனர். இந்த முஸ்லிம் என்ற வார்த்தை எல்லைகள், மொழிகள், கலாச்சாரங்களை கடந்த பெயர். அதாவது யார் இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றுகிறார்களோ அவர்களைக் குறிக்கும் சொல். அவர் எங்கு இருக்கிறார், என்ன மொழி பேசுகிறார், என்ன நிறத்தையுடையவர் என்ற கேள்விகளை எல்லாம் தாண்டிய ஒரு அடையாளம். ஆனாலும் இலங்கையை பொறுத்தவரை தெரிந்தோ தெரியாமலோ இதுதான் அது, ஆகவே அதுதான் இது என்ற ஒரு குழப்பத்துக்குள் தமிழர் மாத்திரமல்ல, இந்த சோனகரும் மூழ்கிவிட்டனர்.

இனம் என்பது மொழிவாரியாகத்தான் இருக்க வேண்டும் என்று பலர் வாதிட்டாலும் இனத்துக்கான வரைவிலக்கணம் “ஒரு சமயத்தை பின்பற்றும் அல்லது குறிப்பிட்ட கலாச்சார தன்மைகளை கொண்டுள்ளோரும் கூட தனியான இனமாக வகைப்படுத்தப்படலாம் ” என்கிறது. ஆகவே சமய ரீதியில் முஸ்லிம்கள் என்போர் “தனியான இனம்” என்று வாதிடுவதற்கு இது வழிவகுக்கின்றது. ஆனால் உலகலாவிய ரீதியில் “முஸ்லிம்” என்பவர் ஒரு இனமாக பார்க்கப்படாமையால் இலங்கையில் மாத்திரம் அப்படி பார்க்கப்பட வேண்டும் என்பது பல சிக்கல்களை அரசியல் ரீதியில் உருவாக்கக் கூடியது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

மனிதன் இயற்கையாகவே இப்படியான வேறுபட்ட அடையாளங்களை கொண்டிருக்கும் போது அவனை ஒற்றை சொலுக்குள் அடக்குவது, பாரதியாரின் ஆண், பெண் தவிர இனங்கள் வேறெதுவுமிலலை என்ற நிலைப்பாட்டை ஒத்ததாகும். ஆனால் நடைமுறையில் காரியங்கள் அப்படி நடந்தேறுவதுமில்லை. மனிதன் ஒரு சமூக பிராணி என்பதால் சமூக வாழ்வியல் சூழலில் அவனுக்கு பல அடையாளங்கள் தேவைப்படுகிறன அல்லது அப்படியான அடையாளகள் தேவைகருதி கொடுக்கப்படுகிறன. இந்த அடிப்படையில் சமயம் சார்ந்த அடையாளமாக “முஸ்லீம்” அல்லது “இஸ்லாமியர்” என்ற போதிலும் எமக்கு இன்னும் பல அடையாளங்கள் தேவைப்படுகிறன. அதில் முக்கியமானது “இலங்கையர்” என்பது.

இந்த இலங்கையர் என்ற பதப் பிரயோகம் “அமெரிக்கர்” என்ற பதப் பிரயோகத்தின் தன்மையை ஒத்தல்ல. எழுதப்படாத பல கட்டுப்பாடுகள், சட்டங்கள் மறைமுகமாகவும், சிலவேளை வெளிப்படையாகவும் நடைமுறைப் படுத்தப்பட்டாலும் அரம்பத்தில் அடிமைகளாக அமெரிக்காவுக்குள் கொண்டுவரப்பட்ட கறுப்பினத்தவன், கலப்பினத்தவன் அமெரிக்க ஜனாதிபதியாக முடியுமாய் இருப்பது ஒருவகை அமெரிக்க தன்மை(Americanism) எனலாம். அத்தகைய வாய்ப்பு வசதிகளோ, அரசியலமைப்பு ஏற்பாடுகளோ, வளர்ச்சியடந்த சிந்தனை போக்குகளோ இல்லாத ஒரு நாட்டில் அதுவும் உலகத்தின் தனித்த ஒரு இனத்தையும், தனித்த ஒரு மொழியையும் பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டில் அங்கே உள்ள சிறுபாமையினர் தொடர்பாக எழும் காரணமற்ற ஆனால் அனுபவரிதியில் ஏற்படும் நியாயமான பயத்தின் அடிப்படையில் பெருன்பான்மை சமூகத்தின் அரசியல் நகர்வுகள் வடிவமைக்கப்படும் என்பதில் புதுமை ஒன்றுமில்லை.

இந்த அடிப்படையில் சிறுபான்மையினருக்கு “இலங்கையர்” என்ற அடையாளம் மாத்திரம் அரசியல் ரீதியில் போதுமானதல்ல. ஆகவே இந்த சிறுபான்மையினாரில் ஒரு பிரிவினர், பெருன்பன்மையோரின் அரசியல் நகர்வினாலும், சிறுபான்மையோரில் பெரும் பன்மையாக இருக்கும் தமிழரின் அரசியல் நகர்வுகளினாலும் ஏற்படும் பயத்தின் காரணமாக தங்களுக்கு இருக்கும் அனைத்து அடையாளங்களையும் பாவனையில் வைத்திருப்பது பிழையான அம்சமாக இருக்கப் போவதில்லை. மாறாக இது ஒருவகை பாதுகாப்பு ஏற்பாடகவே அமையும். சிங்களவரையும், தமிழரையும் பொறுத்தவரை மொழிசார்ந்த, இனம் சார்ந்த, சமயம் சார்ந்த அடையாளங்கள் பாவனையில் இருக்கும் போது, முஸ்லிம்கள் என்ற மத அடையாளத்தைக் கொண்டுள்ள இஸ்லாமியர்கள் தமது இன அடையாளத்தை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும். இந்த உரிமை பிரச்சினை என்பது புதிய பிரச்சினைகளை உருவாக்குவதற்கல்ல, புதிதான பிரச்சினைகளின் சாத்தியபாடுகள் மிக அதிகமாகவே உள்ளதால் அவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டுமாயின் நாம் இலங்கையர் என்ற உரிமையோடு, அது பல்லின மக்கள் வாழும் இலங்கை என்ற விடயத்தை அச்சமின்றி, தெளிவாக நிலைநிறுத்த எமது இந்த “சோனகர்” என்ற இன அடையாளம் மிக இன்றியமையாததாகும்.

பிரதேசங்கள் எல்லை இடப்படுவதும், எல்லை இடப்பட்ட பிரதேசங்கள் பெயரிடப்படுவதும் அவற்றை “நாடுகள்” என்று நாம் அழைப்பதும் புதுமையான விடயங்கள் அல்ல. அதேபோல் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் மக்கள் மீள் பகுப்புக்குள்ளாவது ஏற்றுக் கொள்ளப்படுகின்ற ஒரு விடயமாகவே காணப்படுகின்றது. எனவே ஏதோ ஒரு அடிப்படையில் மக்கள் குழுக்களாக, குலங்களாக, கோத்திரங்களாக, இனங்களாக, தேசியங்க்களாக பிரிவடைவதை நாம் மறுதலிக்க முடியாது. அனால் இந்த பிரிவின் அடிப்படையில் ஒருவர் மற்றவரைவிட உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்ற நிலைவரும் போது அல்லது ஒருவர் தன் போன்ற மற்றவர்களுடனான கூட்டுக்கு தடை ஏற்படும் போது அங்கே பிரச்சினைகள் எழுவது தவிர்க்க படமுடியாதுள்ளது.

வரலாறுகள் தோறும் நமக்கு போதுமான படிப்பினைகள் இருப்பினும், இத்தகைய பிரச்சினைகள் பூதாகாரமாகி மனித குலம் அழிவை சந்தித்ததற்கு நாம் சாட்சிகளாக இருந்தபோதும் அதன் பாரதூரம் இன்னும் சரியாக அறியப்பட்டதற்கான அறிகுறிகள் மிக சொற்பமாகவே காணப்படுகின்றன. யூத இனத்துக்கு எதிரான ஆரிய ஹிட்லரின் இன அழிப்பும், ரூவெண்டா நாட்டில் ஹூட்டு, டுட்சி இனங்களுக்கிடையிலான இனவழிப்பு நடவடிக்கைகளும், சூடானில் பூர்விக மகளுக்கும் ஜஞ்சூவின் அறபு நாடோடிகளுக்கும் இடையிலான அழிப்பு நடவடிக்கைகளும், சேர்பியாவில் பொஸ்னிய இன அழிப்பு செய்யற்பாடும், இலங்கையிலே அரசாங்கம், புலி என்ற போர்வைக்குள் பலியாக்கப்பட்ட மக்களும் இந்த பரிதாப நிலையின் சான்றுகள். இத்தகைய அநாகரிகங்களின் அடிப்படை இரண்டு விடயங்களே. ஓன்றில் ஒரு இனம் மற்றைய இனத்தை தாழ்வாகக் கருதுவது, மற்றயது ஒருவரின் அடையாளத்தை மற்றவர் மறுக்க முற்படுவது.

இந்த அடிப்படையிலேயே “இலங்கை சோனகர்” பற்றிய எனது பார்வை அமைந்திருக்கிறது. இலங்கை “பல்லின மக்கள்” வாழும் நாடு. இந்த “பல்லினம்” என்ற வார்த்தை குழப்பமே இந்த விடயத்தை சிக்கலாக்கியுள்ளதாக நான் கருதுகிறேன். சுதந்திரத்துக்கு பின்னான இலங்கையில் தமிழர்களின் “வட்டுக்கோட்டை தீர்மானம்” என்ற தனி நாட்டுக்கான அடித்தளம் இடப்பட்டபோது இலங்கையில் சிங்களம், தமிழ் என்ற இரண்டு மொழிசார் இனங்கள் தான் இருப்பதாகவும் எனவே இலங்கை பெளதிக ரிதியாக இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பது தமிழ் அரசியல்வாதிகளின் ஆசையாக இருந்தது. அங்கே தமிழை அதிகமாக பேசும் ஒருசாரார் (சோனகர்) பற்றியோ, அல்லது சிங்களமும், தமிழும் பேசும் இன்னொரு சாரார்(பறங்கியர்) பற்றியோ பேசப்படவிலை. ஆனால் இங்கிலாந்தில் உருக்கொண்ட ஒரு தீவிரவாத / போராட்ட தமிழ் அமைப்பு “இஸ்லாமியர்”, “தோட்ட தொழிலாளர்”, ஏனைய சிறு இனத்தினரையும் இந்த தமிழ் போராட்டம் உள்ளடக்க வேண்டும், அப்படி இல்லாவிட்டால் தமிழரின் சுதந்திர போராட்டம் வெற்றி பெறாது, வெற்றி பெற்றாலும் நிறைவு பெறாது என்று எதிர்வு கூறினர். அவர்கள் தங்கள் போராட்ட வடிவத்தை இப்போது மாற்றிவிட்டனர் என்றாலும், இஸ்லாமியர், தோட்டத்தொழிலாளர் என்பதோடு பறங்கியர் விடயத்திலும் அவர்களின் கருத்து அவ்வாறே இன்றும் உள்ளது.

ஆனாலும் அவர்கள் சொல்லும் “இஸ்லாமியர்” என்ற பதப்பிரயோகம் அரசியல் ரிதியில் தூர நோக்கு கொண்டதாகக் காணப்படவிலை. ஆகவேதான் அதற்கான மாற்றிடாக , சரியான இன அடையாயளமாக நாம் “சோனகர்” என்ற பதத்தை பிரயோகிப்பதற்கான தேவையை உணர்த்தி நிற்கின்றோம். இந்த சோனகர் என்ற விடயம் வசதிகருதிய புதிய கண்டுபிடிப்போ அல்லது இலங்கையின் அரசியல் சூழ் நிலையை என்றும் குழப்பம் நிறைந்ததாக வைப்பதுவுமாக அமையக் கூடியதல்ல, மாறாக அது இஸ்லாமியர் அல்லது முஸ்லீம் என்ற மத அடையாளத்தில் நாம் எதிர் நோக்கக் கூடிய சாத்தியமான ஆபத்துக்களை விட, சோனகர் என்ற இனஅடையாளதில் சற்று பாதுகாப்பை பெறலாம் என்ற நிலைப்பாடே. எனது இந்த வாதத்தை பிழையாக அர்த்தப்படுத்தி விடக்கூடாது, அதாவது எமது அரசியல் இருப்புக்காக நாம் சோனகர் என்ற இனப் பெயரை முதன்மை படுத்துவதே ஒழிய எந்தக் காரணம் கொண்டும் எமது மத அடையாளத்தையோ அல்லது மதத்தையோ விட்டு விடுவதற்கான யோசனையல்ல, இது என்பதை முதலில் சோனகர் உணர வேண்டும். அடுத்ததாக இந்த பெயரை மீள் நிலை நிறுத்த முயல்வதென்பது ஏனைய இனங்களின் உரிமைகளில் தலையிடும் விடயமும் அல்ல என்பதும் குறிப்பாக தமிழ் இனத்தினரால் உணரப்பட வேண்டும்.

சாதுவான தமிழர்கள் போர்க் குணம் கொண்டோராக மாற்றப்பட்டதும், அதன் தாக்கத்தை நேரடியாக பெரும்பான்மை சிங்கள அரசாங்கதின் மேல் பாய்ச்சி அது மறைமுகமாக சிங்கள இனத்தினை கிலிகொள்ளச் செய்ததும், அதே நேரம் சக மொழி பேசுவோர், இரண்டறக் கலந்து வாழ்ந்தோர் என்றும் பாராமல் அவர்களையும் பயமுறுத்தி தம் கீழ் வைத்திருக்க புலி பயங்கர வாதிகள் எடுத்த முயற்சி, முழு தமிழினத்தின் நிலைப்பாடாக கொள்ளமுடியாது என்றாலும், இலங்கையின் அரசியல் சூழ் நிலையானது குழகப்பரமானதாகவே செல்வதற்கு ஏதுவாக அரசியல் அமைப்பு திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும், இன வாத சிங்கள், தமிழ் அரசியல்வாதிகள் அத்தகைய ஒரு அடிப்படையிலேயே தமது அரசியலை முன் நடத்தி செல்ல முயல்வதாலும் அப்படியான நிலைமைகளுக்கு உறுதியாக நின்று முகம் கொடுக்கவுமே நாம் எமது இனத்தின் அடையாளத்தை தெளிவாக முன்வைக்க வேண்டும் என்பது எனது நிலப்பாடு.

வட்டுக்கோட்டை திர்மானத்துக்கு முன்பிருந்த காலத்திலும், புலி பயங்கரவாத காலத்திலும், அதற்கு பின்பும், கடந்த பொது தேர்தல் காலங்களிலும் தமிழர்களை பெருவாரியாக பிரதி நிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் இலங்கையில் இரண்டு இனங்கள் உள்ளதாகவே பேசின, பேசுகின்றன. அதே போல் இவர்களுடன் சம்பந்தமில்லாத சுயபிரகடனம் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரான திரு. வி. உருத்திரகுமரன் மே/ஜூன் 2010 தில் புதிய திசைகளின் வானொலி அரசியல் ( லண்டன் சூரியோதயம் வானொலியூடாக) கலந்துரையாடல் ஒன்றில் கூறிய ஒரு விடயம் மிகவும் கவனிக்கத்தக்கது. அதாவது இந்த பிரதமர்(?) நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி விளக்கமளித்தபோது நம்மால் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த அரசு பற்றி இலங்கையில் வாழும் தமிழரின் விருப்பம் அறியப்பட்டதோ இல்லையோ நான் அறியேன், இருந்தம் உங்கள் உத்தேச தமிழீழ ஆட்சிக்குள் வரவிருக்கும் சோனகரிடம் அவர்களின் விருப்பு பற்றி அறியப்பட்டதா? என்ற கருவை உள்ளடக்கியதே அந்தக் கேள்வி. அதற்கான அவரின் பதில்,” இந்தியாவின் தமிழ் நாட்டில் ஒரு முஸ்லிம் பிரமுகர் இந்த நாடு கடந்த தமிழீழ அரசை ஆதரித்துளார்” என்பதே. ஆகவே இப்படியான ஒரு ஏமாற்று போக்கு இந்த தமிழ் அரசியல் வாதிகளிடம் இருக்கும் வரை நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டியது எமது கடமையே ஒழிய அது தமிழரின் பிரச்சினை கூட இல்லை. நாம் நம் இனத்தை இது வென்று சொல்லும் போது அதை ஆதாரங்களோடு பிழையென நிறுவுவது வேறு. ஆனால் காரணங்கள் இல்லாமலே அதை தந்திரமாக முறியடிக்க முற்படுவது கேவலமானது. இலங்கை சோனகரை தமிழர் என்று குறிப்பிடுவது விருப்பம்மில்லாத ஒருவரை பலாத்கார கலியாணத்துகு ஒப்புதல் அளிக்க செய்யும் முயற்சி போன்றது. அது ஒரு இனத்துக் கொதிரான உரிமை மீறல். இதைவிட வேறு வார்த்தைகளால் இந்த நிலைப்பாட்டை விளங்கவைக்க முடியாது.

Moors_Map_of_SL01இனி இந்த “சோனகர்” ரின் வரலாற்றைப் பார்ப்போம். மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் இந்தியா நோக்கிய தம் பார்வையை செலுத்தமுன்பே அரேபியர் தெற்கு, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் தமது குடியிருப்புக்களை நிறுவியுள்ளனர். இந்த வகையில் கி.மு. 310 ஆண்டளவில் மடகஸ்கார் தீவுக்கும் சுமாத்திரா தீவுக்கும் இடையிலான வியாபாரபாதையின் கடல் வழி இணைப்பு இலங்கையூடாகவே இடம் பெற்றுள்ளது. எகிப்திய பல்கலை வல்லுனர் க்ளோடியுஸ் தொலமி(Claudius Ptolemy) கி.பி. 150களில் இலங்கை பற்றிய வழங்கிய தகவல்கள் அவர் அறேபியரிடம் இருந்து பெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த தொலமி வரைந்த இலங்கை படத்தில் நதிகள் புலூவியஸ்(Fluvius) என்று கூறப்படுகிறன. அதன் அடிப்படையில் மன்னாரின் தென் புறத்தில் ஓடும் நதி “பாசிஸ் புலூவியஸ்” அதாவது பாரசிகர் நதி, அதாவது அப்பிரதேசத்தில் பாரசிகர் அதிகம் வாழ்ந்ததால் அப்பெயர் வழங்கப் பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இந்த நதி இன்று அருவி ஆறாக பெயர் பெற்றுள்ளது, (மகாவழி கங்கை ஓரத்திலும் பாரசீகர் வாழ்ந்ததாக காணக்கிடைகின்றது). இந்த நதிக்குக் கீழ் இன்றைய புத்தளம் நகருக்கு வடக்காக “சோனா புலூவியஸ்” (Soana Fluvious) என்ற நதியை அவர் வரைந்துள்ளார். சோனகர் நதி என்பதை அது குறிக்கிறது. அதாவது சோனகர் அதிகம் வாழ்ந்த இடமாக அது அடையாளப் படுத்தப்படுகிறது. இந்த நதியினை இன்றும் புத்தள பிரதேச மக்கள் “பொன்பரப்பி ஆறு”, அல்லது “காலாவி ஆறு” என்றழைகின்றனர். இது சிங்களதில் “கலா ஒய” என்றழைக்கப் படுகின்றது. இந்த நதி தீரங்களுக்கே இன்றும் புத்தளம் வாழ் மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று குடிசை(tent)அடித்து, இரவு வேளைகளில் வேட்டையாடி தமது கோடைகாலத்தை கழிக்கும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர். இது ஆற்றங்கரையில் வாழ்ந்தோரின் பழக்க வழக்கங்களின் மிச்சசொச்சங்கள்.

இதே நேரம் கி.மு. 327-326 இடைப்பட்ட காலத்தில் மகா அலெக்ஸ்சந்தரின் கட்டளை பிரகாரம் இலங்கையின் புவி வரை படத்தைத் தந்த கிரேக்க மாலுமி ஓனொஸ் கிறிட்டோஸ்( Oneus Crites ) புத்தளத்திளும் அதைச் சுற்றியுள்ள அயல் பாகங்களுடன் நிலத்தொடர்புடைய பகுதிகளிலும் “சோனகர்”களின் குடியேற்றம், விஜயன் இலங்கைக்கு வர முன்னரே அதிகம் காணப்பட்டதாக குறிப்பிடுகின்றார். அதே நேரம் இந்த பொன்பரப்பி ஆற்றை “சோனாள் பொட்டமஸ்” என்று குறிப்பிட்டுள்ளார். “சோனாள்” என்பது “சோனகரையும்”, “பொட்டமஸ்” என்பது ஆற்றையும் குறிக்கும். இந்த பிரதேசம் தான் அதாவது அருவி ஆற்றுக்கும், மாயன் ஆறு என்றழைக்கப்படும் தெதுறு ஒயாவுக்கும், அதாவது இன்றைய சிலாபத்துக்கு வடக்கே பாயும் தெதூறு ஓயாவில் இருந்து மன்னாருக்கு தெற்காகவுள்ள குதிரைமலைக்கும் இடைப் பட்ட பிரதேசமே “சோனகம்” என்ற பிரதேசமாகவும் இந்த மாலுமி சித்தரிக்கின்றார். இந்த பகுதியை, அதாவது அரிப்பு, பொன்பரப்பு, புத்தளம் பிரதேசத்தை “Igona Civitas” ,அதாவது அறேபிய பழங்குடிகள் வாழ்ந்த இடமாகும் என J.R. Sinnathamby என்ற ஒரு ஆய்வாளரும் குறிப்பிடுகின்றார்.

இன்றைய 21ம் நூற்றாண்டில் நாம் காணும் நாடுகள், கண்டங்களின் அமைவுகள், சமுத்திரங்கள், மலைகள் எல்லாம் உலகம் தோன்றிய நாள் தொட்டு இப்படியே இருக்கவில்லை என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம். இதற்கு “கண்ட நகர்வு”(continental drift) களே காரணமாகும் என்பது நிலவியலாளர் கூற்று. இந்த அடிப்படையில் இன்றைய இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிக்கா முனை இதற்கிடையில் உள்ள தீவுகள் எல்லாம் ஓன்றாக இருந்த பகுதியை “கொண்ட்வானா லேண்ட்”(Gondwana Land) என்றழைப்பர். இந்து மாசமுத்திரத்தில் மூழ்கிப் போன பெரும் பகுதி “லெமுரியா கண்டம்” (Lemuria Continent) என அழைக்கப் பட்டதும் நாம் அறி ந்ததே. இந்த கடற்கோளின் விளைவே தென்பகுதி காணாமல் போக வடபகுதி இமய மலையாக நிமிர்ந்து நிற்பதைக் காணலாம். பின்னர் ஏற்பட்ட சிறிய கடற்கோள்களின் விளைவாக இந்திய நிலப்பரபில் இருந்து இலங்கை பிரிந்து சென்றது என்பதற்கு சான்றுகள் அதிகம் உள்ளன. அதே நேரத்தில் க்ளோடியுஸ் தொலமி(Claudius Ptolomy)யின் பிரகாரம் “தப்ரபேன்” (Taprobane) என்று அழைக்கப்பட இலங்கை இன்றை இலங்கையை விட பல மடங்கு விசாலமானது என்கின்றார். அதன் படி “க்கிறினிச்” (Greenwich) 75வது பாகை இன்றைய இலங்கையின் மேற்கு கரையில் இருந்து சுமார் 400 மைல் தூரத்தில் பண்டைய இலங்கையை ஊடறுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. ஆகவே அன்றைய இலங்கை இன்றைய இலங்கையைவிட விசாலமானது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இத்தகைய புதிய நில அமைவுகளுக்கு முன் இலங்கை இந்தியாவுடன் நிலத்தால் இணைந்திருந்த பகுதி என்பதிலும் யாருக்கும் சந்தேகங்கள் எழ நியாமமிருக்காது.

இந்த இணைபின் மூலம் புத்தளம் பிரதேசத்தில் வட மேற்கில் பாய்ந்தோடும் “சோனகர் நதி” யினதும் அதற்கு எதிராக, அதாவது இந்தியாவின் தென் கிழக்கில் காயல்பட்டிணத்தின் கடலில் சங்கமிக்கும் “தாமிரவருணி ஆறு” (அல்லது பொதிகை நதி(?)) என்றழைக்கப்படும் ஆறும் ஓரே நதியே. இந்த நதியையும் “தப்ரபேன்” என்றே அழைத்துள்ளனர். அந்த காலத்தில் ‘சோனகர்” வாழ்ந்த இடமும் அதுவே. சோனகர் பிரதேசத்தைப் பிரிப்பது “தாமிர வருணீ” என்ற நதியே என்றும் கூறப்பட்டுள்ளது. தாமிரவருணி ஆற்றுப் படுக்கைகளில் வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங்க்கள், குணாதிசங்கள், உடல் அமைப்பு, நிறம், அவர்கள் பேசும் மொழியின் தன்மை(dialact), அவர்கள் வைத்துக் கொள்ளும் பெயர்கள், தாழி அடக்க முறை என்பதெல்லாம் ஓன்றையே சுற்றி நிற்கின்றது. அதுதான் சோனகர் என்ற இனத்தையும், அது காலங்காலமாக வாழ்ந்த இன்றும் வாழ்ந்து வரும் பிரதேசத்தையுமாகும்.

மேலும், இந்தியாவின் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தின் தெற்கு சுவற்றில் உள்ள கல்வெட்டில் இந்த” சோனகம்” பற்றிய தகவல் பெறமுடியும். தமிழ் நாட்டு பேரசர்கள் வெற்றி கொண்ட பிரதேசங்களில் ஒன்றாக “சோனகம்” குறிப்பிடப் பட்டுள்ளதானது அந்த பிரதேசத்தின் இருப்பையும், முக்கியத்துவத்தையும் உணர்த்துவதா உள்ளது. இதே போலவே போர்த்துகேயர்களின் இலங்கை வருகைக்குமுன் மொரோக்கோ நாட்டின் யாத்ரீகர் இபுனு பதுதா(Ibn Batuta) 1345 ஆண்டு 9ம் மாதம் 12ம் திகதி “பத்தள” என்று அழைக்கப்பட்ட புத்தளத்தின் துறைமுகத்தில் தன் தோழர்களுடன் வந்திறங்கியதாக தனது “The travels of Ibn Batuta” என்ற நூலில் அதன் ஆசிரியர் சாமுவேல் லீ குறிப்பிடுகின்றார். இப்னு பதுதா, பாவாதமலையை தரிசிக்க புத்தளத்தில் வந்திறங்கியபோது அங்கு ஒரு பாரசிக மொழி பேசக்கூடிய பாண்டிய மன்னன் ஆட்சி செய்ததாகவும் குறிப்பிடுகின்றார். இந்த பாண்டிய மன்னனாக வருணிக்கப்பட்டவனே “தக்கியூதீன்” என்று இனங்காணப்பட்டான். தக்கீயுதீன் அடிப்படையில் ஒரு பாரசிகன் என்றும் பாண்டிய மன்னனின் படையில் தளபதியாக இருந்தவன் என்பதும் அவன் பாண்டிய மன்னனின் மகள் ஒருவரை திருமணம் முடித்திருந்தான் என்பதும் வரலாறு. ஆகவே இலங்கையின் புராதன துறைமுகங்களில் ஒன்றான புத்தளத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்து அதை தன் நிருவாகதில் வைத்திருக்க தக்கியுதீன் நியமிக்கப்பட்டிருப்பத்ற்கான வாய்ப்புகள் அதிகம்.

Moors_Map_of_SL02இந்த ”சோனகர்” என்ற இனம் ஒரு கலப்பு இனம். இந்த இனத்தின் தோற்றத்துக்கு பல மூலங்கள் உள்ளன. இருப்பினும் அனைத்து மாறுபட்ட மூலத்திலும் ஒரு அசைக்க முடியாத, மாறாத மூலமாக காணப்படுவது அதன் “அரபு” இரத்த கலப்பு. இந்த அரபுக்கள் முதலில் தென் அறேபியாவில் இருந்து, அதாவது இன்றைய யெமனில் (Yemen)இருந்து ஏடன் (Aden) துறைமுகம் ஊடாக வந்தவர்கள் (என் தாயின் தந்தையின் பேரன் ஒரு யெமனி). அவர்களைத் தொடர்ந்து, ஏற்கனவே கிழக்கு ஐரோப்பிய அரபு கலப்பால் உருவாகிய “மூர்”(Moors)கள், பிற்பாடு பாரசீகர், அவர்களுடன் அபிசினியர்கள் (எகிப்து நாட்டவர்), பிற்பாடு தமிழ் நாட்டு சோனவர்கள், இன்றைய கேரளா அதாவது மலையாளிகள் பிற்பாடு வட அறேபியா, அதாவது பாலைவனத்து அரபிகள் என்று இலங்கை சோனகர் இனத்தின் மூலங்கள் பிரிந்து செல்கின்றன. இந்த மூலத்தின் தன்மைக் கேற்பவே இலங்கை ”சோனகர்” பலவித உடல், நிற அமைப்புகளைக் கொண்டுள்ளனர்.

சபாயீன், அதாவது தென் அறேபியர்கள் கி.பி. 7ம் நூற்றாண்டில் தம் அரசியல், சமய செல்வாக்கை வட அறேபியர்கள், அதாவது பாலைவனத்து அறேபியரிடம் இழக்கும் வரை கடல் மூலமான இந்து சமுத்திர வாணிப சாம்ராஜ்யம் அவர்கள் கையிலேயே இருந்தது. இந்த அறபுக்கள் தான் தென் இந்திய கரைகளிலும் வடமேற்கு இலங்கை கரைகளிலும் சங்கு, முத்து குளிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். இவர்களின் வருகை இந்தியாவிலும், இலங்கையிலும் வியாபார நோக்கமாகவே இருந்தது. பிற்காலத்தில் சமய பரப்பலும் அதில் காணப்பட்டது. ஆனால் தென் இந்தியாவிலும், இலங்கையிலும் அறேபியரின் வருகை, வட இந்தியாவுக்கான அவர்களின் அரசியல் அடிப்படையிலான( நாடு பிடித்தல்) வருகையை விட வித்தியாசமானது. அதுவும் கி.பி. 7ம் நூற்றாண்டளவிலேயே இஸ்லாம் என்ற மதம் இந்த வட அறேபிய முஸ்லீம்களால் இலங்கை சோனகர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றது. எனவே இஸ்லாமியர் அல்லது முஸ்லீம் என்ற சமய அடியாளம், சோனகர் என்ற இன அடையாளத்துக்கு மிகவும் பிற்பட்டது. அதாவது சோனகர் என்ற அடையாளம் கி.மு.4ம் நூற்றாண்டுக்கும் முற்பட்டது. சேர் அலெக்ஸாந்தர் ஜொன்ஸ்டன் (Sri Alexander Johnston), இலங்கையின் முதல் பிரதம நீதியரசர், இவரும் இலங்கை சோனகர்கள் அறபுக்களின் வழித் தோன்றல்கள் என்பதை திட்டவட்டமாகக் கூறுகின்றார். முஸ்லீம் என்ற சமய அடையாளத்துடன் இலங்கைக்குள் பிரவேசித்த வட அறேபியர்கள் அனேகமாக அரசியல் அகதிகளாக பிரவேசித்தவர்கள். இவர்கள் அறேபியாவில் இருந்து வெளியேறி, இன்றைய ஈராகின் யூப்ரிடீஸ், டைக்கிறிஸ் நதியூடாக இந்தியாவின் தென் பகுதியிலும், இலங்கைத் தீவிலும், மலாக்காவிலும் குடியேறினர். இந்த அடிப்படையில் இலங்கையில் ஏற்கனவே அறேபிய தொடர்புடைய மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இவர்கள் குடியேறினர். இதில் பிரதான இடங்களாகக் கருதப்படுவது, புத்தளம், கல்பிட்டி, குதிரை மலை, மாந்தோட்டம், மன்னார், யாழ்ப்பாணம், திருக்கோணமலை, மாத்தறை, வெளிகம, காலி, பேருவளை, கொழும்பு, கம்பொலை, ரத்தினபுர என்பனவாகும். மிக பின்னய காலத்தில் போர்த்துக்கேயரின் அச்சுறுத்தளினாலும் துறைமுகப்பட்டணங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டதினாலும் இங்கு வாழ்ந்துவந்த சோனகர்கள் உற்புர கிராமங்களுக்கும், மலை நாட்டு பிரதேசங்களுக்கும் குடியேறினர்.

இரண்டாம் புவனேகபாகுவின் வாரிசு கலேபண்டார (வத்ஹிமி)” ஹஸ்த்தி சைலாபுரம்” என்ற பெயர் கொண்ட ”சோனக” அரசன் இன்றைய குருணாகல் பகுதியை ஆட்சி செய்துள்ளான். அரசனாக இருக்க அடிப்படை தகுதி “பெளத்தன்” ஆக இருத்தல் என்ற அன்றைய, அப்பிரதே மேல்மட்ட அரசியல் வாதிகளின் போக்கினால், இந்த அரசன் எத்துக்கல் மலை உச்சியில் இருந்து வீழ்த்தப்பட்டு கொலை செய்யப்படும் வரை அரசாட்சியிலேயே இருந்துள்ளான். இதைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கும் மன்னனின் எதிர்பாளர்களுக்கும் இக் கொலை தொடர்பாக ஆங்காங்கே கலவரம் நடந்தாக அறியப்படுகின்றது. ஆகவே இந்த விடயமும் இலங்கை சோனகரின் நீண்ட வரலாற்றை கூறுகிறது.

பிற்காலத்தில் இலங்கை கோட்டை, யாழ்ப்பாணம், கண்டி என்ற மூன்று இராச்சியங்களாக பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்ட போதும், இவற்றுக்குப் புறம்பாக ”வன்னிமை” அரசுகளும் இருந்தன. இவை இந்த இராஜதானிகளுக்கு புறம்பாக நிருவாக அதிகாரம் வழங்கப்பட்ட பிரதேசங்களாகும். இதில் முக்கியமானவை கிழக்கில் மட்டக்களப்பு, கொட்டியாரமும், வடமேற்கில் புத்தள பிரதேசமுமாகும். ஆனால் இந்த புத்தள பிரதேசம் ஒருகாலத்தில் கண்டி இராச்சியத்தின் கீழும், இன்னொரு காலத்தில் கோட்டை எல்லைக்கும் உற்பட்டிருந்திருந்தாக அறியக்கிடைக்கின்றது. ஒரு போதும் யாழ் இராஜ்சியதுக்கு கட்டுப்பட்டிருக்கவில்லை. புத்தளத்தில் ஆட்சியை தம் கையில் வைத்திருந்தவன் “தக்கியு தீன்” என்ற பாரசீக தொடர்பும், பாண்டிய மன்னனின் ஆதரவும் கொண்டவனாக சொல்லப்படுகிறது. கண்டி இராஜ்சியத்தின் வெளிநாட்டு வியாபாரம் புத்தளம், கல்பிட்டி துறைமுகம் ஊடாகவே நடைபெற்றுள்ளது. புத்தள நகரின் மேற்கே உள்ள “பெரு வழி ஆறு”, மீ ஒயா என சிங்களத்தில் அழைக்கப்படும், ஆறு புத்தளத்தில் இருந்து, மாத்தளை, அக்குரணை வரையும் செல்கிறது. இந்த ஆற்றோர பாதையை “கண்டிப் பெருவழி” என்றும் அழைப்பர். இந்த ஆற்றங்கரை பாதையில் புத்தளம் முதல் கண்டிவரையும் ஆங்காங்கே இருக்கும் முஸ்லிம்களை அதிகம் கொண்ட சோனக கிராமங்கள், சிறிய நகரங்கள் இன்றும் இருப்பதைக் காணலாம். “பெரு வழி ஆறு” தவளம் எனப்படும் பெருள்காவும் முறை அதாவது கூட்டம், கூட்டமாக மாடுகளின் மேல் பாரமான பொருள்கள் ஏற்றிச் செல்லும் முறைக்கு பெயர் பெற்ற பிரதேசமாகும். கண்டிப்பிரதேசத்தில் இருந்து கண்டிராஜ்ய வெளிநாட்டு ஏற்றுமதி பொருட்கள் புத்தளம், கல்பிட்டி துறைமுகங்கள் வரை கொண்டுவரப்பட்ட முறையும் இதுவாகும். அதேபோல் புத்தள துறைமுகத்திலும், குதிரை மலை துறைமுகத்திலும் இருந்து பொருட்கள் இந்த தவள முறையிலேயே மலைநாடு நோக்கி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆரம்பகால சோனகர் பற்றிய தவல்கள் ஒன்று பின்வரும் செய்தியையும் தருகின்றது. அதாவது கி.பி 437-407 பராக்கிரமபாகு காலத்தில், அநுராதபுரத்தில் “யொனாஸ்’ என்று குறிப்பிட்டு ஒரு பகுதி “சோனவர்”களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாம். இன்றும் சிங்களவர் இலங்கை சோனகரை “யொன்னு” என்றும் அழைக்கின்றனர். இந்த “யொன்னு” என்ற சொல் பாளி மொழியின் “யொன்ன” என்பதன் திரிபாகக் கொள்ளப்படுகிறது. ஆனாலும் “யோனக்க” என்ற சிங்கள சொல்லாலேயே பொதுவாக இன்று ”சோனகர்” அழைக்கப்படுகின்றனர். “மரக்கல” எனும் காரணப் பெயர், அதாவது மரக் கப்பல்களில் இலங்கை வந்த “அரபிகள்” என்று பொருள்படவும் இவர்கள் அழைக்கப்பட்டாலும், இலங்கையின் “மலாய்”, “போரா”, மேமன் முஸ்லிம்கள் தவிர, ஏனைய முஸ்லிம்களின் இனப் பெயராக அவர்களின் பிறப்புசாட்சி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் “சோனகர்” (தமிழ்) ” யோனக்க” (சிங்களம்) என்பதே. ஆனாலும் இவர்களை இஸ்லாம் என்ற சமையத்துடன் அடையாளப்படுத்தியே, அதாவது 95% மேல்பட்ட சோனகர்கள் இஸ்லாமியர்களாக இருப்பதால் அவர்களை குறிக்கும் முகமாகவே இன்றைய இலங்கை கொடியில் “பச்சை” நிறம் தரப்பட்டுள்ளது. இலங்கைக் கொடியின் சிங்க அடையாலமே அரபியர்களின் அன்பளிப்பென்பது வேறுமொரு கதை.

இதைவிடவும் இன்னுமொரு வரலாறு இந்த “சோனவர்”ருக்கு உண்டாம். அதாவது இது மனித வரலாற்றின் ஆரம்பத்துக்கே செல்கின்றது. நாம் ஏற்கனவே பார்த்த இலங்கையும், இந்தியாவும் இன்னும் பல பிரதேசங்களும் ஓன்றிணைந்த காலப்பகுதி அது. அப்போது முதல் மனிதன் “ஆதம்” என்பவர் படைக்கப்படுகின்றார். அவர் இலங்கையின் பாவாதமலை (Adam’s Peak) அல்லது “சமனல கந்த” என்று சிங்களத்தில் சொல்லும் மலை உச்சியில் சுவனத்தில் (Paradise) இருந்து இறக்கப்படுகிறார். அவரின் காலடி அடையாளம் அந்த மலை உச்சியில் இன்றும் யாத்திரிகர்களால் தரிசிக்கப் படுகின்றது. டார்வின்னின் கூர்ப்பு கொள்கையை நம்புவோர்களைவிட மீதிபேர், அல்லது ஆகக் குறைந்தது மதங்களை நம்புவோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்ட விடயம் மனிதன் இறைவனால் படைக்கப்பட்டான் என்பதே. அப்படியானால் உலகத்தில் ஏதோ ஓர் இடத்தில் முதல் மனிதனின் சஞ்சாரிப்பு இருந்திருக்க வேண்டும். ஆப்ரஹாமின் வழி வந்த மதங்களான யூதமும், கிறிஸ்தவமும், இஸ்லாமும் அந்த முதல் மனிதன் “ஆதாம்” என்றே சொல்கின்றன. உலகத்தின் எந்த இடத்திலும் “Adam’s Peak” என்ற இடம் இல்லாமல் அது இலங்கையில் இருப்பதென்பது சிந்தனைக்கு எடுக்க வேண்டிய முதல் விடயமாகும். அதேநேரம் ஐரோப்பியர்தான் இந்த மலைக்கு அப்படி ஒரு பெயர் வைத்தனர் என்பது ஒரு பொய்யான வாதமாகும் என்பதோடு அப்படித்தான் அவர்கள் அம்மலைக்கு பெயர் வைத்தனர் என்றாலும் அது ஒரு தற்ச்செயலான விடயமாக இருக்க முடியாது. ஐரோப்பியரின் இலங்கைக்கான் வருகை ஆரம்பிக்க முன்னரே பல வெளி நாட்டார் இந்த “ஆதம் மலை”யை தரிசிக்கவென்று வந்துள்ளனர். அதில் பிரதானமானவர் நாம் ஏற்கனவே கண்ட மொரோக்கோ நாட்டைச்சேர்ந்த இப்னு பதுதா ஆவார்.

இந்த ஆதாம் சுவனத்தில் இருந்து வந்த படியால்(மதவாதிகளின் நம்பிக்கைப்படி) அவரின் வழிதோன்றகள் “சுவனர்” என அழைக்கப்பட்டனராம். இந்த அடிப்படையிலேயே சுவனர் திரிபடைந்து “சோனகர்” என்றறியப்பட்டனராம். ஆனால் இந்த சோனகரில் பலர் காலவோட்டதின் பிரகாரம் தமது கடவுள் நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டுள்ளனர். அது சிதறியும், திரிபடைந்தும் “நாகர்” என மாற்றம் அடைந்ததாகவும், இதன் அடிப்படையில் பாம்பை வழிபடும் “நாகர்”இனம் தோன்றியதாகவும், பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட கடற்கோள்களினால் இலங்கை இந்தியாவில் இருந்து பிரிந்து செல்ல நாகர்கள் இலங்கையின் வடக்கிலும், இந்தியாவில் பெங்களுரை அண்டிய பகுதியிலும், நாகர்லாந்து என்ற பிரதேசத்திலும் அதிகம் காணப்பட, சோனகர் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும், தென் இந்தியாவின் கீழைக்ரை, காவிரி பூம்பட்டிணம், வேலூர் பகுதிகளிலும் இன்றும் சோனகர்களாகவே காணப்படுகின்றனர். இந்த வரலாறு இன்னும் ஐயந்திரிபர நிறுவப்படாமல் இருக்க, சோனகர் அறபு கலப்புடைய இனமாக இந்தியாவிலும் இலங்கையிலும் இன்னும் சில இடங்களிலும் உருப்பெற்று அந்தந்த இடங்களில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே வாழ்ந்து வந்துள்ள வரலாறு சந்தேகங்களுக் கப்பால் நிருபிக்கப்பட்டுள்ள விடயமாகும்.

இருப்பினும் இந்த சோனகர் காலாகாலமாக வாழ்ந்த பிரதேசம் இன்று வரலாற்றில் இருந்து மறைக்கப்படுவதற்கான முயற்சியாகவே புலிகளின் “தமிழீழ வரைபடம்” அமைந்துள்ளது. அதயே இன்று அடிப்படை ஏதும் இல்லாத நாடுகடந்த தமிழீழ அரசு “தமிழீழம்” என்றும், அது தமிழர் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் பூர்வீக பூமியாகவும் சித்தரிக்கின்றது. இதையே இன்றும் புலம் பெயர் தமிழரும் (புலி ஆதரவு, தமிழ் பேசும் முஸ்லிம் என்ற கொள்கை ஆதரவு) ஒரு வேதவாக்காக காவித்திரிகின்றனர். இதைவிடவும் மோசமான விடயம் என்னவென்றால் சுமார் 225 வருட காலமாக இலங்கையின் மலை நாட்டு பகுதிகளில் வாழ்ந்துவரும் இந்திய தமிழர்களை இலங்கை பிரசைகளாக ஏற்றுக் கொள்ளும் சில இலங்கை தமிழர், கி.மு.னான காலப்பகுதியில் இருந்தே இலங்கையில் வாழ்ந்துவரும் “சோனகர்”களை அப்படியாரும் இல்லையென்றும், அவர்கள் சைவத் தமிழர்களாக இருந்து இஸ்லாமியத் தமிழர்களாக மாறியவர்கள் என்றும் எனவே அவர்கள் இன அடிப்படையில் “தமிழர்” என்ற அடையாளத்துடன் மெளனித்து இருக்கும்படியும், அப்படி இல்லாவிட்டால் நாடோடிகளாக இங்கு வந்த மாதிரி திரும்பிப் போய்விடவேண்டும் என்று கூறுவது ஒரு இனத்துக் கெதிரான உரிமை மீறலாகும். படுமோசமான, மட்டரகமான இனத் துவேசமாகும். அது இப்போதே கலைந்தெறியப் படாவிட்டால், இந்த நிலைப்பாட்டில் இருக்கும் தமிழர்களே எம் இனத்தின் முதல் எதிரிகளும் ஓன்றுபட்ட இலங்கையினதும் எதிரிகளாவார்கள்.

எனவே நான் மேலே நிறுவியது இலங்கையின் சோனகர் என்ற இனத்தின் இருப்பை மாத்திரமல்ல, அவர்களுக்கோர் வரையறுக்கப்பட்ட இடமும் இருந்தது என்பதையுமே. சோனகர்களுக்கு ஒர் இடம் இருந்தது என்பது ஆண்டபரம்பரை மீண்டும் ஆள வேண்டும் என்ற த.வி.கூ யின் அசட்டுத்தனமான கூக்குரல் போன்றதொரு கொள்கையை முன்வைத்து முழு சோனகர் இனத்தையும் அழித்தொழிக்கவுமல்ல. மாறாக யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு அதாவது இலங்கை சிங்களவர்களை பெரும்பான்மையாக் கொண்ட பல்லின மக்கள் வாழும் நாடு. அதில் ஒவ்வொரு இனத்தின் உரிமைகளும் மதிகப்பட்டு ஓன்றுபட்ட இலங்கையாக அது இருக்க 21ம் நூற்றாண்டின் வளர்ச்சியில் நாம் தவர விடப்பட்டாமல் இருக்க வேண்டும் என்ற எனது நிலைபாட்டை ஐயந்திரிபர நிறுவவுமே.

கடைசியாக இது ஒரு ஆராய்ச்சி கட்டுரையாக வடிவமைக்கப்படாததால் இதற்கான உசாத்துணை நூல்கலின் விபரம் தரப்படவில்லை. இருந்தும் இந்த தலைப்பில் கலந்துரையாட விரும்புவோர் உங்கள் நியாயனாம் சந்தேகங்களை, தெளிவின்மைகளை, மேலதிக விளக்கங்களை பகிர்ந்து கொள்ள முனைந்தால் இது ஒரு ஆரோகியமான அடுத்த கட்டத்துக்கு எம்மை இட்டுச் செல்லும். மாறாக இதற்குள் மதங்களை இழுத்து அல்லது தேவையிலாமல் வேறு கருத்துக்களை புகுத்தி இதை குழப்ப முற்படுவது நாகரிகமற்ற செயலாகும் என கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்பேசும் மக்கள்: அடையாள இருட்டடிப்பு – இலங்கை முஸ்லீம்கள் சோனகர்.: நிஸ்தார் எஸ் ஆர் எம்

Mohamed S R Nisthar1948ல் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நீறுபூத்த நெருப்பாய் இருந்து வந்த இன அடக்குமுறையும் அதற்கெதிரான போராட்டமும் 1983இல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இரண்டு தசாப்தங்கள் தாண்டி இன்று இந்த இனப்பிரச்சினைத் தீ அணைந்து போகப் பலரும் பல வழிகளிலும் முன்னின்றுழைப்பது மகிழ்ச்சி தருவதாய் இருந்தாலும் இனப்பிரச்சினையின் உச்சகட்ட காலங்களில் ஆங்காங்கே முளைவிட்ட ஒரு கேள்வி இப்போது மரமாகிக் கிளை பரப்பியுள்ளது. இது பெரு விருட்சமாகி புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்காமல் இருக்க தேவைக்கேற்ப அழகாய், அளவாய் கத்தரித்து பராமரித்து வளர்க்கப்பட வேண்டுமா என்ற கேள்வியும் மிகத் தெளிவான குரலில் ஓங்கி ஒலிக்கின்றது.

பல்லின மக்களைக்கொண்ட இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையைத் தீர்க்க சிங்கள இனத்தின் சார்பில் இலங்கை அரசும் (ஜனாதிபதி நீங்கலாக) தமிழினத்தின் சார்பில் தமிழீழ விடுதலைப்புலிகளும் (வேறு யாரும் சேர்க்கப்படாமல்) பிரதிநிதிகளாகச் செயற்படுவதால் இலங்கையில் இரண்டு இனங்கள் மட்டும் தான் உள்ளன என்பதோ அல்லது வேறு இனங்களுக்கு அரசியலை அடியொட்டியதான பிரச்சினைகள் இல்லை என்பதோ பொருளல்ல. தவிர, போரிட்ட இரண்டு இனங்களும் ஏதோ வொரு தீர்வை அடைந்தால் அது எல்லா இனங்களையும் திருப்திப்படுத்தும் என்ற உத்தரவாதமுமாகாது. ஏனெனில் இலங்கையின் இன்னுமொரு சிறுபான்மையினம் தொடர்பான அதன் அடையாளப் பிரச்சினையில் சில சிக்கல்கள் இருப்பதால் இனப்பிரச்சினை தொடர்பாக அதன் பங்களிப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

“இலங்கை முஸ்லிம்கள்” என்போரே இந்தப் புதிய பிரச்சினையின் கருப்பொருளாகும். 1990இல் நடந்த இரண்டு முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் இந்தப் புதிய பிரச்சினைக்கான தீர்வொன்றின் தேவையை உணர்த்தியது. இதில் 1வது, கிழக்கிலங்கையில் தொழுகை நேரத்தின்போது வயதுபேதமின்றி சிறியோர் முதல் தள்ளாடும் வயதினர்வரை நூற்றுக்கு மேற்பட்டோர் மசூதிக்குள் வைத்து புலிகளால் ஒரே நேரத்தில் காரணமின்றிச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம். 2வது அதே ஆண்டில் யாழ், மன்னார், முல்லைத்தீவு ஆகிய தமிழ் – முஸ்லீம் பூர்வீக பகுதிகளிலிருந்து பலாத்காரமாக ஒரு சில மணிநேரத்தில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை.

மேற்படி இரண்டு சம்பவங்களில் இருந்தும் எழும்பிய புதிய கேள்விகள் இக்கட்டுரையின் அடிப்படைப் பிரச்சினையாகிய “சிறுபான்மையினம்” என்ற பதப்பிரயோகத்தின் சரியான விளக்கமொன்றின் தேவையை உணர்த்தி நிற்கின்றது.

இந்த “முஸ்லிம்களை” விடுதலைப்புலிகள் “தமிழ் பேசும் மக்கள்” என்ற பதப்பிரயோகத்தின் கீழ் அடக்கித் தாம் இனப்பிரச்சினை விவகாரத்தில் “தமிழ் பேசுவோரின்” பிரதிநிதிகள் என்றும், தமிழர்களுக்கும் சிங்களவருக்கும் இடையில் ஏற்படும் தீர்வும் உடன்பாடும் “தமிழ் பேசுவோர் எல்லோருக்குமான தீர்வே” என்ற நிலைப்பாட்டையும் கொண்டுள்ளனர். புலிகளின் இந்த நிலைப்பாட்டிற்கு வலிமை சேர்ப்பது போல் இலண்டனில் மையம் கொண்டுள்ள தமிழ் வானொலிகளும் பத்திரிகைகளும் இலங்கை முஸ்லீம்கள் தொடர்பாக எந்தவித விளக்கமுமின்றி “இஸ்லாமியத் தமிழர்” என்றும் “தமிழ் பேசும் முஸ்லீம்கள்” என்றும் இந்த இனத்தை அடையாளப்படுத்துகின்றனர்.

ஓரு இனம் தொடர்பான மேற்படி அனைத்து பதப்பிரயோகங்களும் அரசியல்ரீதியில் தெளிவை ஏற்படுத்தாதது மாத்திரமின்றி பிற்காலத்தில் புதிய பல பிரச்சினைகளையும் தோற்றுவிக்கக் கூடியதாகவே உள்ளன.

விடுதலைப்புலிகளின் “தமிழ் பேசும் மக்கள்” என்ற பதம் இனபேதமின்றி தமிழ் பேசும் மக்கள் எல்லோரினதும் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக அமைந்திருக்க வேண்டும். அப்படியானால் 1990இல் நடந்த துயரச் சம்பவங்களும் இதுபோன்ற சிறிய அளவிலான குரங்கு பாஞ்சான், ஏறாவூர், மூதூர் போன்ற இடங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும், இனித் தொடரப் போகும் சம்பவங்களுக்கும் விடுதலைப்புலிகளின் சார்பில் சராசரி மனிதர்தானும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்கள், நியாயங்கள், உத்தரவாதங்கள் எதுவுமே இல்லை.

எனவே “தமிழ்பேசுவோர்” என்ற சொற்பிரயோகம் நடைமுறையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பது மிகத்தெளிவு. மேலும் “தமிழ் பேசுவோரின்” பிரதிநிதிகள் தான் புலிகள் என்றால் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) உடனான ஒப்பந்தம் ஏன் செய்யப்பட்டது? அது எதுகுறித்துச் செய்யப்பட்டது என்ற கேள்விகளுக்கப்பால் அப்படியொரு உடன்படிக்கை தேவையும் இல்லாதது. (ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் தெளிவாகப் பகிரங்கப் படுத்தப்படவில்லை). ஆகவே தமிழரும் முஸ்லீம்களும் அரசியல்ரீதியிலும் வேறுபட்டவர்கள் என்பது மிகத்தெளிவு.

மறுபுறத்தில் பொதுசனத் தொடர்பு சாதனங்கள் கூறும் “இஸ்லாமியத் தமிழர்”, தமிழ் பேசும் முஸ்லீம்கள், என்ற பதப் பிரயோகங்களும், மயக்கம்தரும் பண்புகளையே கொண்டுள்ளன. ஏனெனில் தமிழ் இனத்தில் உள்ளவர்கள் “சைவத் தமிழர்” என்றோ, “கிறிஸ்தவத் தமிழர்” என்றோ மதரீதியில் அடையாளம் காணப்படுவது இல்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சைவர்களும் கிறீஸ்தவர்களும் (அதன் உட்பிரிவினரும்) இனரீதியில் தமிழரென்றே கொள்ளப்படுகின்றனர். தமிழ் பேசும் சைவர், தமிழ் பேசும் கிறிஸ்தவர் என்று யாரும் அழைக்கப்படாத நேரத்தில் தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்று மாத்திரம் வரையறைக்குட்படுத்தப்பட்டு உள்ளதைக் காணலாம். இதிலிருந்து தமிழ்பேசும் முஸ்லீம்கள் என்போர் இனத்தால் தமிழர் அல்லர் என்பதோடு மாத்திரம் அல்லாமல் சிங்களம் பேசும் முஸ்லீம்கள் என்போரின் இருப்பையும் உறுதி செய்கின்றது. இது ஒருவகையில் சிங்களம் பேசும் கிறிஸ்தவரின் நிலைபோன்றது.

சிங்களம் பேசும் கிறிஸ்தவரை தமிழ் இனம் உள்வாங்க முடியாது. காரணம் அவர்கள் இனத்தால் சிங்களவர். அதேபோல் தமிழ்க் கிறிஸ்தவர் மதத்தால் சிங்களவர் போன்று கிறிஸ்தவராயினும் இனத்தால் தமிழராகவே இருக்கின்றனர். (இது பேசும் மொழியை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது போல் காணப்பட்டாலும் இது முழுக்க முழுக்க சாரும் இனத்தை அடிப்படையாகக் கொண்டது.) எனவே இங்கு சிங்களம் பேசும் முஸ்லீமை எவ்வாறு சிங்களவர் எனக் கருதக் கூடாதோ, கருத முடியாதோ, அதேபோல் தமிழைப் பேசுவதால் மட்டும் தமிழ் பேசும் முஸ்லீம்களை தமிழர் என்று வரையறுத்துவிட முடியாது.

இந்த இடத்தில் கவனிக்கப்படவேண்டிய இன்னுமொரு விடயம், புதிதாகச் சமயம் மாறுவோர், சமயம் மாறி முஸ்லிமாகவரும் தமிழரும், சிங்களவரும் சமயத்தால் முஸ்லீம் என்பவரே தவிர அவர் இனத்தால் இன்னும் தமிழரும் சிங்களவருமே.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் பௌத்தம் செழிப்புற்றிருந்ததை வரலாறு கூறுகின்றது. அப்போது பௌத்தத்தைப் பின்பற்றிய தமிழர் சமயத்தால் பௌத்தர் என்று இனங் காணப்பட்டதால், அவர்களின் இனம் சிங்களம் என்றாகி விடவில்லை. அவர் அன்றும் இன்றும் என்றும் தமிழரே. அதேபோல் சமயத்தால் முஸ்லிமாக இருக்குமொருவர் சைவராகவோ கிறிஸ்தவராகவோ பௌத்தராகவோ சமயத்தை மாற்றிக்கொண்டாரென்றால் அவர் சைவர், கிறிஸ்தவர் அல்லது பௌத்தரே தவிர அவரின் இனஅடையாளம் தமிழர் என்றோ அல்லது சிங்களவரென்றோ மாறிவிடப் போவதில்லை. அப்படியானால் இங்கு எழும் நியாயமான கேள்வி இந்த இலங்கை முஸ்லீம் என்போர் இனரீதியில் யார் என்பதே.

இதற்கான பதில்

இனப்பிரச்சினைக்கான தீர்வுநோக்கி முன்னேறும் இந்த முக்கியமான வரலாற்றுக் கட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நியாயமானதும் அரசியல் ரீதியில் மிக முக்கியமானதுமான (Politically crucial) விடயம் முஸ்லீம்கள் பற்றிய நிலைப்பாடு ஆகும்.

இக்கட்டத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்யப்படும் தவறுகளும் செய்யத் தவறும் விடயங்களும் நாளைய அமைதியான ஒன்றுபட்ட இலங்கையில் அல்லது சிங்களவர் தமிழர் சுயாட்சிப் பிரதேசங்கள் என்ற அமைப்புக்குள் அல்லது ஸ்ரீலங்கா, தமிழீழம் என்ற இரண்டு இறைமையுள்ள நாடுகளில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை தோற்றுவிக்கும்.

இன்று சிங்கள பேரினவாதம் (மறைமுக) தமிழ்ப் பேரினவாதம் என்பவை மாத்திரமல்ல வளர்ந்து வரும் தனி பௌத்த மதவாதமும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. உலகின் முதல் பிக்குகளாட்சி (Theocracy) ஆட்சிக்கான நாடிப்பிடிப்புகளையும் இந்த இடத்தில் மறுப்பதற்கில்லை. (ஆனால் தமிழரிடையே மதவாதம் வெளிப்படுவதற்கான அறிகுறி அரிதிலும் அரிதாகவே காணப்படுகின்றது).

இலங்கை முஸ்லீம்கள் இன அடையாளம் இல்லாமல் மத அடையாளத்திலேயே தமது அரசியலை நடத்த விரும்பினால் பல இனங்கள் வாழும் நாட்டில் மாறுபட்ட சூழலிலுள்ள ஒரு நாட்டில் அதிலும் நாம் சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாய் வாழும் நாட்டில் சர்வதேசங்களின் கவனம் அதிகரித்து வரும் ஒரு நாட்டில் அது நமது இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

உதாரணமாக விடுதலைப் புலிகளின் முஸ்லீம்கள் தொடர்பான நிலைப்பாட்டை நோக்கும் போது அதில் சந்தர்ப்பவாதம் இழையோடுவதை இலகுவாகக் காணலாம். அவர்களில் தமிழ் பேசும் மக்கள் என்ற நிலையை விடுத்து இப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் முஸ்லீம்களை ஒரு கலாச்சாரக் குழுவாக ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

இந்தக் கலாச்சாரக் குழு என்ற சொற் பிரயோகம், தமிழ் பேசும் மக்கள் என்பதை விடவும் குறைவான நிலை. ஒரு மக்கள் கூட்டத்தில் பல வகையான கலாச்சாரங்கள் பின்பற்றப்படலாம். ஒருவன் உணவு உண்ணும் முறையிலிருந்து நாட்டை நிர்வகிக்கும் விடயங்கள் வரை பலவிதமான கலாச்சாரப் போக்குகளை கடைப்பிடிக்கலாம். இனம் என்ற பரந்த பரப்புக்குள் கலாச்சாரம் என்பது ஒரு சிறு பகுதியே. சரி ஒரு பேச்சுக்காக கலாச்சாரக் குழு என்பதை ஏற்றுக் கொண்டாலும் அக் குழுவின் நிலை என்ன, உரிமைகள் என்ன என்பதற்கு இன்னும் விடை கொடுக்கப்படவில்லை.

இதைவிடவும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஒரு தலைமையின் கீழ் வரவேண்டும் அதன் பிறகு அவர்கள் தனியான குழுவாக (Entity) பேச்சு வார்த்தை மேசைக்கு வரலாமா என்பது பற்றித் தீர்மானிக்கலாம் என்று கூறியது மிகவும் அவதானத்துக்குரியது.

ஆலோசகர் பாலசிங்கத்தின் அரசியல், கூட்டல் கழித்தல் படி ‘இலங்கை முஸ்லீம்கள் பரம்பரை பரம்பரையாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்ந்த அரசியல் நடத்தியவர்கள். 1990களில் துடிப்போடு முன்னேறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) அதன் ஸ்தாபக தலைவர் மறைந்த அஷ்ரஃப்பின் திட்டமிட்ட கொலையின்பின் துண்டு துண்டாகி முஸ்லிம்களின் அரசியல் குரல் அஸ்தமிக்க ஆரம்பித்து விட்டது’ என்பதாகும்.

‘இலங்கை முஸ்லிம்கள் தனியான பிரிவினர் எனவே நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பான சமாதான முன்னெடுப்புகளில் அவர்கள் பங்குகொள்ள வேண்டியது அவசியம். அதை விடுதலைப் புலிகளாகிய நாங்கள் உத்தரவாதப்படுத்துகிறோம். ஆகவே முஸ்லிம்கள் அதற்கான அதிகாரத்தை அவர்கள் விரும்பும் தலைமைக்கு அல்லது கட்சிக்குக் கொடுக்கலாம்’ என்று பாலசிங்கம் கூறி இருந்தால் அதில் சந்தேகிக்க எந்த விடயமும் இல்லை. இதைவிடுத்து முஸ்லிம்கள் முதலில் ஒன்றுபடுங்கள் (ஒன்றுபடமாட்டார்கள் என்பது அவரது எதிர்பார்ப்பு) அப்புறம் மிகுதியைப் பார்க்கலாம் என்பது இனப்பிரச்சினையின் சமாதானத் தீர்வு பேச்சுவார்த்தைகளில் முஸ்லீம்களுக்குத் தனியிடம் இல்லை என்பதற்கான முன் அறிவிப்பாகும்.

இந்த இடத்தில் கலாநிதி சித்தீக்கின் கூற்றொன்றும் சாலப்பொருந்தும். அதாவது முஸ்லிம்களை விட மிக அதிகமாக தமிழர்களே இன்று பிரிந்து காணப்படுகின்றனர். அவர்களின் பிரிவை பத்துக்கும் மேற்பட்டதாக அடையாளங் காணலாம் என்பதாகும். ஆக, இங்கு எத்தனையாக யார் பிரிந்துள்ளனர் என்பது பிரச்சினையல்ல. பேச்சுவார்த்தைக்கு யார் தகுதியான பிரிவினர் என்பதே முக்கியம். அரசதரப்பு, தமிழர்களே முதலில் ஒன்றுபடுங்கள். அப்புறம் மீதியைப் பார்க்கலாம் என்றால், போர் தொடருமே தவிர அருமையான இந்தச் சமாதான ஒப்பந்த சூழல் இன்று இருந்திருக்காது. என்றும் இருக்காது. ஏனெனில், ஜனநாயக ரீதியில் விடுதலைப் புலிகளின் தலைமையின்கீழ், தமிழர் எல்லோரும் ஒன்றுபடுவதென்பது நடக்க முடியாத விடயம்.

இலங்கையில் முஸ்லிம் என்ற சமயவழிப் பதப்பிரயோகம் இலங்கையின் எதிர்கால அரசியலில் அவர்களை ஒரு தேசிய இனத்தின் அந்தஸ்திலிருந்து கீழிறக்கிவிடும். ஆகவே அவர்கள் தமது இனத்தின் பெயரை தூசுதட்ட வேண்டும்.

இலங்கை முஸ்லீம்கள் சமய அடையாளத்தினூடே அரசியலில் செயற்பட விரும்பினால் நாளை சிங்கள இனத்தின் கிறிஸ்தவர்களும் தமிழினத்தின் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர்களின் சிறுசிறு சமயப் பிரிவினரும் (Cult), ஏன் முஸ்லீம்களின் உட்பிரிவினரும் கூட தங்கள் இருப்புக்கான சட்ட அங்கீகாரம் கோரலாம். இலங்கையின் இன்றைய கிறிஸ்தவர், சிங்கள பௌத்தர்களின் உன்னிப்பான அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். சமயரீதியான நெருக்குவாரங்கள் கிறிஸ்தவர்களுக்கு அதிகரிக்கும்போது அதற்கான நிவாரணமாக முஸ்லீம்களுக்கான பிரத்தியேக ஏற்பாட்டை கிறிஸ்தவர்களும் கோரலாம்.

விடுதலைப் புலிகளும் கூட முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளைத் தட்டிக் கழிக்க தமிழ் கிறிஸ்தவர்களைக் காரணம் காட்டி தமதாட்சியில் ஒரு சமயப் பிரிவினருக்கு மாத்திரம் பிரத்தியேக சலுகை தரஇயலாது எனலாம். நிலைமையை தங்களது அடக்குமுறைக்குச் சாதகமாகவும் பயன்படுத்தலாம்.

இதையெல்லாம் விட மிகப் பயங்கரமான விடயம், விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேரலாம். அதிலும் விஷேடமாக அமெரிக்காவுடனோ அல்லது இஸ்ரேலுடனோ அல்லது இரண்டு நாடுகளோடும் சேர்ந்து இலங்கை முஸ்லீம்களை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் என்று பெயரிட்டு மிக இலகுவாக ஓரங்கட்டி விடலாம். இது அதீத கற்பனை அல்ல. ஏகாதிபத்தியவாதிகளினதும் பேரினவாதிகளினதும் கைவந்த கலை. விடுதலைப் போராட்டம், பயங்கரவாதம், நாட்டு நிர்மாணம், உலக ஒழுங்கு, நாகரீக உலகு என்ற பதப்பிரயோகங்கள் அவரவர்களின் நலன் கருதியே பொருள் வழங்கப்படும்.

ஆகவே நாம் நமது இனப்பெயரில் அரசியல் நடத்துவதே அரசியல் சாணக்கியமாகும் (Political manoeuvring). நமது இனத்தின் பெயர் நமது பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் மிகத்தெளிவாகத் தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. சிங்களத்தில் “யோனக்க” என்றும், தமிழில் “சோனகர்” என்றும் ஆங்கிலத்தில் “மூர் (MOOR)” என்றும் எழுதப்பட்டு உள்ளது. இது எமக்கு இழுக்கல்ல. இது ஒரு காரணப் பெயர். எந்த இனமும் தூய்மையான இனமல்ல. அதனால் மாசுபட்டவர் என்ற பொருளல்ல.

நாம் ஒரு கலப்பினம். ஓன்றில் தமிழ்நாட்டில் காயல்பட்டினம், கீழ்க்கரையில் இருந்து வந்த அரபுக் கலப்புடைய தந்தையருக்கும் இலங்கையின் பெரும்பாலும் தமிழ்த் தாய்மாருக்கும் அல்லது நேரடி அரபுத் தந்தையர்களுக்கும் உள்ளுர் தமிழ், சிங்களத் தாய்மார்களுக்கும் அல்லது அரபு கிழக்கு ஐரோப்பியக் கலப்பில் வந்த தந்தை வழியினருக்கும் உள்ளுர் சிங்களத் தமிழ்த் தாய்மாருக்கும் அல்லது மேற்சொன்ன தந்தைவழி வட ஆபிரிக்கக் கலப்பில் தந்தை வழியினருக்கும் உள்ளுர் தமிழ் சிங்களத் தாய்மார்களுக்கும் இடையே ஏற்பட்ட உறவில் அல்லது திருமணப் பந்தத்தின் வழிவந்தவர்கள் இலங்கைச் சோனகர்கள்.

இந்தச் சோனகர் என்போர் இலங்கையில் மாத்திரம் அல்ல, மொரோக்கோ, தமிழ்நாட்டின் சில பகுதிகள் பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களிலும் வாழ்வதால் இலங்கையில் உள்ளோர் இலங்கைச் சோனகர் (Ceylon Moor) என அழைக்கப்படுக்கின்றனர்.

இலங்கைச் சோனகர்களின் இருப்பு, இஸ்லாம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் முன்பு அல்லது அதன் சமகாலத்தில் ஏற்பட்டது என்பது வரலாறு. ஆக, சோனகர் என்பதை இஸ்லாத்துடன் முழுக்க முழுக்கத் தொடர்புபடுத்தி தமிழரில் இருந்தும் சிங்களவரில் இருந்தும் மதமாற்றம் பெற்றோர் எனச் சில இலண்டன் வானொலிகளும் தமிழ்ப் புத்திஜீவிகளும் கூறிவருவது நிரூபிக்கப்பட முடியாத வரலாற்றுப் பிழை. இலங்கைச் சோனகரின் தோற்றமும் வாழ்வும், அதன் மொழி, கலாச்சாரத் தாக்கங்கள், ஐரோப்பியப் படையெடுப்புக் காலங்களில் அந்த இனம் நாட்டுக்கு ஆற்றிய சேவை என்பன எல்லாம் நீண்ட வரலாறு ஆகும்.

ஆக, இலங்கைச் சோனகர் என்போர் தனித்தவொரு இனம். அவர்கள் ஒரு தேசியம் (Nation). அந்தத் தேசியம் தனது விவகாரங்களைத் தானே கவனிக்கும் சுயநிர்ணய உரிமை (Right to Self Determination) அதற்குண்டு. தேவைப்படின், நிபந்தனைகளுடன் கூட்டுச் சேரவும் (இதுதான் விடுதலைபுலிகள் – முஸ்லிம் காங்கிரஸ் வன்னிச் சந்திப்பும் ஒப்பந்தமும் என்றால் பாராட்டப்பட வேண்டியதே) தனியே பிரிந்து செல்லவும் அதற்கு உரிமையுண்டு.

இந்த உரிமையைத்தான் இதுவரை காலமும் இலங்கையின் பேரினவாத அரசுகள் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இலங்கைத் தமிழருக்கு கொடுக்க மறுத்து வந்தனர். இப்போதும் மறுக்க முயல்கின்றனர். சுயநிர்ணய உரிமையை தமிழர் தரப்பு சோனகர்களுக்குத் தரமறுத்தால் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை நியாயமற்றதாகிவிடும். அது அவர்களுடைய போராட்டத்தினை போலியாக்கிவிடும்.

மேலும் ஏதாவது ஒரு இடத்தில் இனசுத்திகரிப்பு (Ethnic Cleancing) என்றால் சற்று நின்று உலக நாடுகள் அப்படியா என்று கேட்கின்றன. அதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டுமென முன்வருகின்றன. புயல் என்றால் வள்ளம் என்றால் பூகம்பம் என்றால் நோய் என்றால் உதவ முன்வரும் நாடுகள் கூட ஒரு சமயத்தவருக்கு பிரச்சினை என்றால் அடிப்படைவாதிகளாக இருக்க வேண்டும் அல்லது பயங்கரவாதிகளாக இருக்க வேண்டும் என்ற ரீதியில் உதவ முன்வருவதில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மதத்தவருக்கு எதிரானவருக்கு கை கொடுத்து உதவுகின்றன. இதில் உள்நாடு வெளிநாடு என்ற பேதமெல்லாம் கிடையாது.

இவை அனைத்தையும் நாம் கவனத்தில் கொண்டால், உலகின் சமகாலப் போக்குக்கேற்பவே எமது உரிமைகளைப் பெறவும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவும் முடியும். சமயம் என்ற போர்வைக்குள் எமது அரசியலுக்கு பலம் சேர்க்க முயலலாம். ஆனால் இனம் என்ற வலுவான அடித்தளத்தில் இருந்து நமது கோரிக்கைகள் பிறக்க வேண்டும் என்பது எனது வாதம்.

(தேசம் இதழ் 17 – 2004) & (தேசம் இதழ் 18- 2004 )

ஐக்கிய ராஜ்ஜியத்தின் எல்லை முகவரகமும் வெளிநாட்டு மாணவர்களும் : நிஸ்தார் மொகமட்

UKBAமாணவர் என்ற போர்வையில் இங்கிலாந்துக்குள் நுழைபவர்களின் தொகை வருடாவருடம் கூடிச் செல்வதுடன் 2004ம் ஆண்டில் அது என்றும் இல்லாதவாறு 186,000 என்ற எண்ணை எட்டியது. இதில் படிப்பபை வெற்றிகரமாக முடித்தோர், முடியாமல் பாதியில் முறித்தோர் எல்லாரையும் சேர்த்து பார்த்தல் அவர்களில் 1/5 பங்கினரே தம் நாட்டுக்கு திரும்பி போகிறார்களாம். மற்றவர் கதி என்ன? குடிவரவுத் திணைக்களத்தைப் பொறுத்தவரை இவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பி விட்டனர். ஆனால் திரும்பவில்லை, இங்கேயே உள்ளார்கள், அதுவும் தலைமறைவாக (Underground) என்பது குடிவரவு திணைக்களத்துக்கு எதிரான மற்றோர்களின் அறிக்கை. அப்படிப்பட்டவர்கள் துணிச்சலாக underground (சுரங்கப்பாதை)யிலும் வெளிப்படையாக வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை இரகசியம். இதில் பலர் குடிவரவு சட்டத்தின் ஓட்டையை பாவித்தும், இங்கிலாந்து அரசாங்கம் வேண்டுமென்றே சட்டத்தை ஓட்டையாக்கி வைத்து அதனுள் புகுந்து விளையாடுங்கள் என்று அனுமதித்துள்ளதாலும் அதைபாவித்து தம்மை இங்கேயே நிரந்தர வதிவிடக்காரர்களாக்கி விடுகின்றனர் (indefinite leave to remain holders). ஆனால் எல்லாருக்கும் இந்த விளையாட்டில் நேரத்தையும், பணத்தையும் செலவுசெய்ய விரும்பமில்லை.

இப்படி மாணவர்கள் வருவதும், போவதுமாய் இருந்தாலும் இங்கிலாந்து அரசாங்கம் இதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முகமாக அவுஸ்திரேலியாவில் கடைபிடிக்கப்படும் புள்ளிகள் அடிப்படையிலான (Points Based System) குடிவரவு முறையொன்றை 2008ல் அறிமுகப்படுத்தி, அதை 1, 2, 3, 4, 5 என்று தட்டுகளாக(Tier) பிரித்து பொதுவாக இங்கிலாந்துக்குள் உள் நுழைவோரை கட்டுப்படுத்த முயற்சித்தது.

இந்த அடிப்படையில் இந்த மாணவர்களை கட்டுப்படுத்தும் முகமாக PBSசின் தட்டு 4 (Tier 4) என்ற புள்ளிகள் அடிப்படையிலான முறையை 31.03.2009ல் அரசாங்கம் அமுல்படுத்தியது. இந்த தட்டு 4 தொடர்பாக, இது திறமைமிக்க மாணவரை மாத்திரம் உள்வாங்கும் முறை, சரியான வடிகட்டல் முறை, நீதியான கட்டுப்படுத்தல் முறை, புதிய அறிமுகம் என்ற முன்னுரைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே மாணவர் தொகை சத்தம் சந்தடி இன்றி கூடிச் சென்று விட்டதாம். 2010 ஜுன்னுக்கு முன்னான 12 மாத காலத்தில் மாத்திரம் இந்த மாணவர் தொகை 288,000தை எட்டியதாம். கற்பதில் என்னே ஆர்வம், புல்லரிக்கிறது. இந்த மாணவருடன் கூடவே வந்து தொல்லை கொடுப்போராக ஐக்கிய இராச்சிய எல்லை முகவர் நிலைய (United Kingdom Border Agency)த்தால் கருதப்படும் அவர்களில் தங்கி இருப்போரையும் சேர்த்தால் அதே காலப்பகுதியில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 320,000.

அட 60மில்லியன் மக்கள் உள்ள நாட்டில் இந்த மூன்று இலட்சத்தி இருபதினாயிரம் என்பது ஒரு சிறு தொகைதானே என்றால், அது சரி இதில் இரண்டு மடங்கு என்றாலும் எமக்கு பரவாயில்லை, ஆனால் இங்கு வந்தால் படித்தோமா, இல்லை படித்து கிழித்தோமா அலுவல் முடிய நடையை கட்டிவிட வேண்டும், அதுதான் எமது எதிர்பார்ப்பு என்று ஆளும் அரசாங்கம் முதல், சாதாரண பிரசைவரை எல்லாரும் ஒருமித்து குரல் எழுப்புகிறார்கள். அவுஸ்திரேலிய PSB முறையை கடைபிடிக்கும் இங்கிலாந்து அங்கு நடந்த வெளிநாட்டு மாணவர்களை, குறிப்பாக இந்திய மாணவரை தீயிட்டும், வெட்டியும், அடித்தும் கொன்ற சம்பவங்களை முன்னுதாரணமாக கொள்ளாதவரை சந்தோசம்.

ஒப்பிட்டு ரீதியில் இங்கிலாந்தில் மேற்படிப்பை வழங்கும் நிறுவனங்கள், அதாவது வெளிநாட்டாரின், அதிலும் குறிப்பாக ஆசிய, ஆபிரிக்கரின் நிறுவாகங்களில் நடாத்தப்படும் கல்வி நிறுவனங்கள் சிறந்த(?) கல்வி வழங்களை விட ஒரு வகையில் குடிவரவை ஊக்குவிக்கும் நிறுவனங்களாகவே செயற்படுகின்றன. இந்த நாட்டில் கல்விசேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களை சிந்தனை/கண்டுபிடிப்புக்கள், பல்கலைக் கழகங்கள், திறமைகளுக்கான திணைக்கள (Department for Innovation, Universities and Skils) சுருக்கமாக DIUS, த்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அந்த திணைக்களம் இந்த நிறுவனங்களை A,B என்ற தரவரிசைபடுத்தி, காலத்துக்கு காலம் அவர்களின் தரத்தையும், நற் போக்குகளையும் கணக்கிட்டு(Appraisal) ஒரு கல்வி நிறுவனம் தொடந்தும் இந்த DIUS சின் பதிவில் இருப்பது நிச்சயிக்கப்படும். இப்படி இதில் இருந்து நீக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தெரியாமல் காசை கட்டி, விஸாவும் இல்லாமல், கட்டிய காசும் இல்லாமல் அல்லலுறும் மாணவர் ஆயிரமாயிரம். இப்படிபட்டோரில் கோயில்களின் அன்னதானம் விடயம் அறிந்தவர்கள் ஒரு நேரபசியை போக்கிக் கொள்வதற்கு அங்கே தஞ்சமடைவதையும் அனேகர் கண்டிருப்பீர்கள்.

சில வேளைகளில் சரியான கல்வி நிறுவனத்தில்தான் சேர்ந்துள்ளோம் எமக்கு பயமில்லை என்றிருக்கும் மாணவர்களும் வேறுவிதமாக மாட்டிக்கொள்வதும் கண்கூடு. இந்த தட்டு 4 முறையின் கீழ், மேலதிக வதிவிட அனுமதி கோரி விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் மீதமாக இருக்கும் கற்கைநெறி பணம் (Course fee), மற்றும் தங்களை பராமரித்துக் கொள்வதற்கான பணமாக லண்டனும், லண்டனை சூழவுள்ள பகுதிகளில் கற்போராயின் மாதமொன்றுக்கு 800 பவுண்டுகளும், லண்டனுக்கு வெளியேயாயின் 600 பவுண்டுகளுமாக ஆகக் குறைந்தது மூன்று மாதங்களுக்கான பணம் தொடர்சியாக UK வங்கிக் கணக்கில் வைப்பில் இருக்க வேண்டும் என இந்த விடயத்தை கையாளும் உள்நாட்டு விவகார அமைச்சின் (Department for Home Affairs) குடிவரவு விதிகள் (Immigration Rules) கூறுகிறது. இந்த இடத்தில்தான் பங்கீனாவின் பார்வை உள்நாட்டு திணைக்களத்தின் மேல் மெல்ல படத்தொடங்கியது.

UK யின் குடிவரவு விவகாரமானது எப்போதுமே ஒரு சூடான பேசு பொருளா(hot topic)கவே காணப்படுகின்றது. உதாரணமாக, UK வெளிநாட்டவரால் நிறைந்து விட்டது, இனி வழிவதுதான் தாமதம் அதற்கு முன்னால் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதும், இந்த வெளிநாட்டார் உள்நாட்டாரின் தொழில் வாய்ப்புகளையெல்லாம் அபகரித்து விடுகின்றனர் எனவே மக்கள் வெகுண்டெழுந்து எசக்கு பிசகாக ஏதாவது நடந்தேற முன் அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும் என்று கடும் போக்காளர் கூக்குரலிடுகின்றனர். இல்லை வெளி நாட்டாரின், குறிப்பாக வெளிநாட்டு மாணவரின் வருகை குறைந்தால் உயர்கல்வி நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரும் என்று கல்வி(விற்பனை) நிலையங்கள் எச்சரிக்கின்றன. வெளிநாட்டு மாணவர்களின் வருகையால் இங்கிலாந்து வருடமொன்றுக்கு சுமார் 3.5 முதல் 8 பில்லியன் பவுண்ட்ஸ் வரை சம்பாதிக்கிறது எனவே அவர்களின் வருகையை கவனமாக கையாள வேண்டும் என்ற பொருளாதர ரீதியிலான நியாயங்கள் வேறு. இப்படி மாணவர்களுக்கு எதிராகவும் சார்பாகவும் வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்க சத்தம் சந்தடி இல்லாமல் 2007ம் ஆண்டு தொழிற்கட்சி அரசாங்கம்(Labour government) சட்டவிரோதமாக இங்கு இருப்போரில் சுமார் 500,000 பேருக்கு நிரந்தர வதிவிட அனுமதி (Indefinite leave to remain)கொடுத்து இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வுகான(?) முற்பட்டது. இந்த முடிவு பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்டாலும், கடந்த பொது தேர்தலின்போது இது தொடர்பாக, முன்னை நாள் பிரதமர் Gordon Brown னும், இன்றைய பிரதமர் David Cameron னும், இன்றைய உதவி பிரதமர் Nick Clegg கும் வெளிப்படையாக ஆடிய நாடகத்தை நீங்கள் மறந்திருக்க நியாயமில்லை.

இன்றைய உதவி பிரதமர் UKயில் சட்டவிரோதமாக அதிககாலம் இருப்போருக்கு அனுமதி வழங்கி அவர்களை சட்டரீதியானவர்களாகுவதன் மூலம் அவர்களை இன் நாட்டின் பொருளாதரத்துக்கு தோள் கொடுக்க செய்யலாம் ஆகவே அவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்து (public amnesty) வெளியே கொண்டு வாருங்கள் என கடந்த பொது தேர்தலின் கட்சி தலைவர்களுக்கான மூன்று கட்ட விவாதத்திலும் தம் Liberal Democratic கட்சி சார்பாக அதை மீண்டும் மீண்டும் வழியுறுத்தினார். அதேநேரம் எமது முன்னை நாள் பிரதமர் அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம், உமது பிந்திய ஞானம் எமக்கு தேவையில்லை என்று சொல்லாமல் அந்த கதையை மழுப்பிக் கொண்டே சென்றார். ஆனால் இன்றைய பிரதமர் அப்படி அனுமதிப்பது கூடாது. அது மற்றோருக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்து விடும், எனவே உள்வந்தவர் வெளியேறவே மாட்டார்கள். ஆகவே இவர்களை கட்டுப்படுத்த ஒரு கடினமான முறை தேவை என்றார். இப்படி தேர்தல் விவாதம் நடக்கும்போதே 250,000 வதிவிட அனுமதி வழங்கப்பட்டது (அதில் பலன்பெற்ற நம்ம ஆட்கள் நாடு சென்று, விடுமுறையையும் கழித்து, பலதும் பத்தும் அறிந்து, வெள்ளை வேனின் கண்பட்டாமல் வெற்றிகரமாக நாடு(UK) திரும்பியுள்ள விவகாரம் வேறு) மிகுதி 250,000 பேருக்கான வதிவிட அனுமதி கொடுபட்டுக் கொண்டிருக்கிறது. 2011 ஜூலையுடன் இதன் காலஎல்லை முற்றுப் பெறுகிறது.

இப்படி இந்த குடிவரவு விவகாரம் பிரச்சினைக்குறிய விடயம் என்பதாலும், இதற்கெதிரான கடும்போக்கை எடுக்காவிட்டால் BNP(British National Party), EDF( English Defence Front) போன்ற இனவாத கட்சிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்பதாலும், அதே நேரம் வெளிநாட்டு மாணவர்களுக்கான எதிர்பை வெளிப்படையாக காட்டினால், வெளிநாட்டாரின் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதாலும், இங்கிலாந்தின் பெயர் சர்வதேச ரீதியில் கெட்டுப் போகும் என்பதாலும் செய்வதறியாது தவிக்கும் இன்றைய Con-Dem கூட்டு அரசாங்கம் மறைமுகமாக பல காரியங்களில் ஈடுபட்டுள்ளது.

இந்த அடிப்படையில் மேலதிக வதிவிட அனுமதி கோரும் மாணவர்களுகான குடிவரவு விதிகளுடன் சேர்ந்து UKBAயின் குடிவரவு கொள்கை(Immigration policy) காலத்துக்கு காலம் மாற்றம் பெறுகிறது. இந்த அடிப்படையில் மாணவர் ஒருவர் தமது விண்ணப்பத்துடன் கற்கை நெறிக்கான அனுமதி உறுதிபத்திரம்(Confirmation of Acceptance of Study), சுருக்கமாக CAS உடன், (இது குறிப்பிட்ட மாணவருக்கு அவர் சார்ந்த கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும்) இரண்டு மாதங்களுக்கான பராபரிப்பு பணம் வைப்பில் உள்ளது என்பதற்கான வங்கி கணக்கு அறிக்கையும்(bank statement) அனுப்ப வேண்டும். CAS க்கு 30 புள்ளிகளும், வங்கி அறிக்கைக்கு 10 புள்ளிகளுமாக ஒரு மாணவர் 40 மொத்த புள்ளிகள் UKBA மூலம் பெற வேண்டும். இது கிடைத்தால் மேலதிக அனுமதி கிடைக்கும், இல்லாவிட்டால், UKBA கழுத்தை பிடித்து தள்ள முன் குறிபிட்ட மாணவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், அல்லது, … அது அந்த சம்பந்தப்பட்டவர் விருப்பம். நாம் புத்தி சொல்ல முடியாது. அது எமது தலைக்கு ஆபத்தாக முடியும்.

இப்படி இந்த பராமரிப்பு பணம் தொடர்பான இறுக்கமான கட்டுப்பாட்டால் ஆயிரக் கணக்கான மாணவர் பாதிக்கபட, யார் செய்த புண்ணியமோ, இந்த பராமரிப்பு பணம் இரண்டு மாதங்களாக குறைக்கப்பட்ட அதேநேரம் அந்த பணம் விண்ணப்ப நாளுக்கு 28 நாட்களுக்கு முன்பிருந்து வங்கிக் கணக்கில் இருந்து வருகிறது என்று ஆதாரத்துடன் காட்டினால் போதும் என்று சென்று கொள்கை சற்று தளர்த்தப்பட்டது. அப்பாடா இந்த இரண்டு மாத தொல்லை தொலைந்தது என்று மாணவர் பலர் சந்தோசப்பட்டனர். பல மாணவர்களும் தெய்வம் நின்று கொள்ளும் என்று சும்மாவா சொன்னார்கள் என்ற திருப்தியில் தமது வதிவிட அனுமதிகளை பெற்றுக் கொண்டனர்.

அட சரி 28 நாட்களுக்கு பணம் வைப்பில் உள்ள மாணவர் தப்பிக் கொள்வர். அப்படி இல்லாத மாணவர் என்ன செய்வர்? ஒருவன் விரும்பிய இடத்தில் படிக்க வேண்டுமென்பது அவனது அடிப்படை உரிமையல்லவா? படிப்பை தொடர பணம் இருந்தால் சரிதானே அதற்கென்ன 28, 82 நாள் என்ற கணக்கு. நாங்கள் வெளி நாட்டார் எதையும் முன் கூட்டியே திட்டமிட்டு, ஏற்பாடுகள் எல்லாம் பூர்த்தியாகி காரியத்தில் இறங்கும் பழக்கமெல்லாம் எம்மிடமில்லை. படிக்க பணம் கட்டினால் சரிதானே, மற்றும்படி நான் சாப்பிட்டல் என்ன, சாப்பிடாவிட்டால் உனக்கென்ன? எனக்கு அனுமதியை தா என்பது மாணவரின் கோசம்.

இந்த நேரத்தில்தான் எல்லா மாணவர்களுடனும் சேர்ந்து ஒரு பிரேசில் நாட்டு மாணவியும் தனது மேலதிக வதிவிட அனுமதிக்கு விண்ணப்பம் செய்தாள். வழமை போலவே தொடர்சியாக 28 நாட்களுக்கு பணவைப்பை உறுதிபடுத்தாத மாணவரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்நாட்டு சட்டத்தின்படி அரச நிறுவனங்கள் ஏதாவது விண்ணப்பமொன்றை நிராகரித்தால் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் சொல்ல வேண்டுமென்பது சட்டம். அப்படியே உள்நாட்டு அமைச்சு சார்பாக இந்த UKBA தமது நிராகரிப்பு காரணமாக “மாணவர்களே நீங்கள் குடிவரவு விதிகளுக்கமைய பராமரிப்பு தொகையொன்றை குறிப்பிட்ட கால அளவுக்கு வைப்பில் வைத்திருப்பதற்கான ஆதாரங்களை காட்டவிலை, ஆகவே நீங்கள் பொது நிதியத்தின் உதவியின்றி (recourse to public funds) உங்களால் உங்களை பராமரிக்க முடியாது. எனவே நீங்கள் என்மை உங்கள் பணம் சம்பந்தமாக விடயத்தில் திருப்திபடுத்தவில்லை. எனவே உங்கள் விண்ணப்பம் பிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எமது முடிவை மேன்முறையீடு செய்ய உங்களுக்கு அனுமதியுண்டு என்று அறிவித்துவிட்டார்கள்.

என்ன ஆட்கள் அப்பா இந்த UKBA உத்தியோகத்தர்கள். இந்த நாட்டில் நிரந்தர வதிவிட உரிமை இல்லாதவர் எப்படி பொது நிதியத்தின் உதவி பெறமுடியும்? அரசாங்க உதவி பெற முதல் தகைமை நிரந்தர வதிவிட உரிமை அல்லவா? இந்த அடிப்படை விடயம் தெரியாமல் ஏன் அங்கு வேலை செய்கிறிர்கள் என்று கேட்டால் பதிலா தரப்போகிறார்கள்? தொடர்ந்தும் தங்கள் பழைய புராணத்தையே பாடுவார்கள், அதாவது இது நேர்மையான ஒரு முறை, அது, இதுவென்று கூக்குரல் செய்வர். எனவே இந்த பாதிக்கபட்ட மாணவர்களில் ஒருவர் தமது மேல் முறை ஈட்டு உரிமையை சரியாக பாவித்து முதல்நிலை குடிவரவு நீதி மன்றில் (First-tier Tribunal) மேன் முறை ஈடு செய்து வெற்றி கிட்டியது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தோல்வியை தழுவிக் கொண்டது. பொல்லு கொடுத்து அடிவாங்கும் கதை நம் எல்லாருக்கும் பழக்கப்பட்டதுதானே, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த தீர்ப்புக்கெதிராக இரண்டாம் நிலை குடிவரவு நீதிமன்றில் (Upper Tribunal) மேன் முறை ஈடு செய்ய அனுமதி கோரி அந்த அனுமதி வழங்கப்பட்டு இறுதியில் வெற்றியும் கண்டனர். மாணவருக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்ட்டது.

தோல்வியடைந்த மாணவி இந்த தீர்ப்பினால் சளைத்து விடவில்லை. அவர் எல்லா வழக்குகளுக்குமான மேல் நீதிமன்றில் (Court of Appeal) மேன் முறைஈடு செய்தார். இந்த மேன் முறைஈட்டு காரணங்களோடு சம்பந்தப்ப்ட்ட (Like cases) மேலும் 5 வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க மேன் முறைஈட்டு நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு தமக்கு பாதகமாக அமையும் என்றாலும், அரசாங்கம், அதன் நிறுவனங்கள் சார்பாக வழக்காடும் திறைசோரி வக்கீல்கள்(Treasury solicitors) சும்மா இருப்பார்களா? அரசாங்க பணம் தானே கொஞ்சம் கை, கால் நீட்டி உழைத்தால் என்ன என்ற “உழைப்பு கோட்பாடு”க் கேற்ப சமாதானதுக் கொல்லாம் தயாரில்லை, நீதிமன்றம் வாருங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டார்கள். இதில் என்ன பரிதாபம் என்றால் ஒரு மாதகாலத்துக்கு மாணவர் ஒருவரின் பராமரிப்புக்கு போதுமானதாக கருதப்படும் 800 பவுண்ட்ஸ் இந்த திறைசோரி வழக்கறிஞரின் சுமார் ஒரு மணி நேரத்துக்கான சம்பளம். என்ன விதமான சுரண்டல். இது மூளையால் செய்யும் வேலை, மூளையின் களைப்படையும் தன்மைக் கேற்ப கூலி அமையவேண்டும் ஆகவே இது சரி என்று வாதாடுவோரும் நம்மில் இருக்கத்தான் செய்வர். என்ன செய்ய நாம் மாடாய் உழைத்து கட்டிய வரிப்பணம் தேவையில்லாத வழக்கிற்காக தேவையில்லாதவன் கையில் போய் கிடைக்கிறது. இந்த கூத்துகளுக்கு மத்தியில் வழக்கின் முடிவு வெளியாகிவிட்டது.

மேலுள்ளது Pankina v. Secretary of State for Home Department என்ற Court of Appeal வழக்கு. இதை விசாரித்த நீதிபதி பிரபு செட்லீ (Lord Justice Sedley), நீதிபதி பிரபு ரிமெர்(Lord Justice Rimer), நீதிபதி பிரபு சலிவன் (Lord Justice Sullivan) கீழ்வரும் தீர்ப்பை வழங்கினர், ” குடிவரவு கொள்கை (policy) என்பது, நிச்சயமாக குடிவரவு விதி(Rules)யாகாது. கொள்கை என்பது சட்டங்கள் அல்லது சட்டங்களின் பகுதியான விதிகளின் கடும்போக்கை கொண்டிருக்க முடியாது. கொள்கைகள் சட்ட அந்தஸ்து பெற வேண்டின் அது பாராளுமன்றத்தின் முன் சமர்பித்து அது ஒன்றில் சட்டமொன்றின் விதியாக அல்லது முழு சடமாக வந்த பின்பே அதை நடைமுறைபடுத்த வேண்டியது அரச நிறுவனங்களின் கடமை. அதை நிலை நிறுத்துவது நீதிமன்றங்களின் கடமை. தேவையான அளவு பணம் வைப்பில் இருக்க வேண்டும் என்பது விதியின் பால்பட்டது. அது இரண்டு மாதம் என்பது கொள்கையாக பின்னால் புகுத்தப்பட்டது. எனவே இந்த கொள்கை விதியின், அல்லது சட்டத்தின் உறுதி தன்மையில் இருந்து பிரித்து பார்க்கப்பட வேண்டியது. இந்த அடிப்படையில் ஒருவரை பராமரிக்க தேவையான இரண்டு மாதப் பணம் 28 நாட்களுக்கு வைப்பில் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. அந்தளவு பணம் 28 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் இருந்தால் போதுமானது. குறிப்பாக விண்ணப்பிக்கும் அந்த நாளில் இருந்ததற்கான அத்தாட்சி காட்டினாலே போதும்.” என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்களே உடனடியாக காரியத்தில் இறங்குங்கள். ஏனெனில் இந்த கொள்கையை பாராளுமன்றில் சமர்பித்து இதற்கு விதி(Rule)வடிவம் கொடுத்தால் எல்லாரும் மீண்டும் மாட்டிக் கொள்வீர்கள். எனவே குடிவரவு முறையில் புதிய விதிகள் புகுத்தப்படமுன் அல்லது புதிய சட்டங்கள் மீண்டும் கடினமாக வரமுன் உங்கள் சட்டத்தரணிகளை பாருங்கள். மேலே சொன்னவை ஒரு சுருக்கமே, இதில் இன்னும் சட்டசிக்கல்கள் வர நிறையவே வாய்ப்புகள் இருப்பதால் DIY( do it yourself) முறையை கைவிட்டு விட்டு துறைசார்ந்தோரை நாடுங்கள். என்ன இருந்தலும் படிக்க வேண்டும் அதிலும் London னில் படித்து, பட்டம் பெற வேண்டும் என்று ஆசைபடுகிறீர்கள் ஒரு சின்ன யோசனை சொன்னேன் அவ்வளவுதான். இலங்கை படிப்பு UK படிப்புக்கு குறைந்தல்ல என்பதையும், அனேகமாக எல்லா ஐரோப்பிய நாட்டின் படிப்புகளும் UK படிப்பைவிட மிக சிறந்தது என்பதையும் எனது தனிப்பட்ட அனுபவத்தின் முலம் உறுதி கூறலாம் அதையும் சற்று கவனத்தில் கொள்ளுதல் நலம்.

Related News & Articles:

லண்டனில் வேலை பெற்றுத் தருவதாக் கூறி யாழில் மோசடி!

Student Visa மோசடி பல்லாயிரம் பவுண் பணத்தையும் இழந்து கல்வி வாழ்வையும் தொலைக்கும் இலங்கை – இந்திய மாணவர்கள்!

செப்டெம்பர் 11(9/11) றும் பார்க் 51(Park 51) றும்: எஸ் ஆர் எம் நிஸ்தார்

Is_America_Islamophobicபயங்கரவாதம், இஸ்லாம், முஸ்லீம், குர்-ஆன்(Qur-‘an) என்ற வார்த்தைகள் மிக அதிகமாக ஊடகங்களில் பாவிக்கப்படுவது 2001 ஆண்டுக்கு பிற்பட்ட காலத்திலேயே. இப்போதெல்லாம் பயங்கரவாதத்துடன் இஸ்லாம் பிணைத்து பேசப்பட்டாலும் மனித மேம்பாட்டுக்கு இஸ்லாத்தின் பங்களிப்பு குறைத்து மதிப்பிட முடியாத அளவுக்கு இதே ஊடகங்கள் தன் பங்களிப்பை செய்வதையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. இதற்கு ஒரு உதாரணமாக ” Intellectually most influenced text in the world- The Qur-‘an” என்ற விவரணப்படத்தை சொல்லலாம்.

11ம் திகதி 9ம் மாதம் 2001ஆண்டு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், 21ம் நூற்றாண்டின் உலக (அரசியல்) ஒழுங்கை திசை திருப்பிய ஒரு நிகழ்வு நடந்த ஆண்டு இது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அமெரிக்க நீவ் யோர்க் (New York) நகரத்தின் உலக வர்த்தக மையம் (World Trade Centre) என்ற பெயர் கொண்ட இரட்டைக் கோபுரம் வெறுமனே இரண்டு உயர்ந்த கட்டிடங்களல்ல. அது உலக முதலாளித்துவதின் ஒரு முக்கிய குறியீடு. மேற்கின் வாழ்வியல் விழுமியத்தின் மையப்புள்ளியை சுட்டி நிற்கும் அடையாலம். அமெரிக்காவின் கெளரவ சின்னம். இத்தகைய புகழ்பெற்ற இந்த கோபுரங்கள் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான அல்-கயிடா(Al-Qaeda- தளம்) வினால் தாக்கியழிக்கப்பட்ட சம்பவமே இந்த உலக ஒழுங்கை திசை திருப்பிய நிகழ்வு. மிக மிடுக்காக நிமிர்ந்து நின்ற கோபுரங்கள் தாக்கியழிக்கப்பட்ட வேளையிலே அங்கே பலியிடப்பட்டது சுமார் 3000 அப்பாவி உயிர்களுமே. கோபுரங்கள் இருந்த அடையாலமே இல்லாதவாறு அந்த இடம் “வெறுமை நிலம்” (Ground Zero) என்ற பெயரையும் இன்று பெற்றுள்ளது.

குறிப்பாக இஸ்லாமியரிடையே இந்த நிகழ்வு தொடர்பாக முக்கிய இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன.
1) இது இஸ்லாமிய கொள்கை, கோட்பாட்டுக்கு முற்றிலும் முரணானது, ஆகவே இது அல்-கயிடாவினால் செய்யப்படவில்லை, இது அமெரிக்க, சியோனிஸ கூட்டு (நாடகம்) நடவடிக்கை.
2) ஆம், இது அல்-கயிடாவினால் தான் நிகழ்த்தப்பட்டது, அப்படி அழித்ததில் தப்பே இல்லை, ஏனெனில் அமெரிக்கர், அங்கு இருந்து கொண்டே லிபியாவின் மருந்து தொழிற்சாலைக்கு ரொக்கட் தாக்குதல் செய்ய முடியுமானால். ஏன் அவர்களுக்குள் புகுந்து நாம் தாக்க முடியாது. ஒஸாமா பின்லாடன் ஏற்கவே மேற்கு மீது, குறிப்பாக அமெரிக்கா மீது போர் பிரகடனம் செய்து விட்டார், எனவே அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அவர்களே கவனம் செலுத்த வேண்டுமே அல்லாமல் நாம்மில்லை. இது புது விதமான யுத்த முறை. எமது போராட்ட வடிவத்தை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். இது இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளை கேள்விகுற்படுத்வில்லை. அவர்கள் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வெளியேறுவதுடன் இஸ்லாமிய நாடுகளில் உள்ள பொம்மை ஆட்சியாளருக்கு மேற்கின், குறிப்பாக அமெரிக்க ஆதரவும், நிதியும் நிறுத்தப்பட்டால் நாம் ஏன் அமெரிக்காவை தாக்க வேண்டும். என்ற வாதங்களே அவை.

அல்-கயிடாவின் விமான தாக்குதலுக்கு முன்பும் இந்த இரட்டை கோபுரம், அல்-கயிடாவினால் தாக்குதலுக்கு உள்ளானதாலும், பின்னைய தாக்குதலுக்கு அவர்கள் உரிமை கொண்டாடியதாலும், மேற்குலகிற்கு அது தொடர்ச்சியாக செய்து வந்த எச்சரிக்கைகளையும் சேர்த்து பார்க்கும் போது, இத் தாக்குதுலுக்கான பொறுப்பு அல்- கயிடா வினுடையதே. அத்தோடு அவர்கள் இஸ்லாமிய எல்லையை மீற மாட்டர்கள் என்பதற்கோ அல்லது எப்போதும் அவர்கள் எல்லை மீறி செயல்படவில்லை என்பதற்கோ ஆதாரங்களும் இல்லை.

அதேநேரம் அமெரிக்காவும், இஸ்ரேலிய சியோனிஸ்டுகளும் இஸ்லாத்துக் கெதிரான போக்கை கைக்கொள்ளாதவர் என்றோ அல்லது திட்டமிட்ட சதிகளை எப்போதும் செய்யவில்லை என்று கொள்ளும் அளவுக்கோ அவர்கள் நிரபராதிகளும் அல்ல. ஆகவே இத்தாக்குதலுக்கும் அவர்கள் மேல் பலியை போட்டு அல்-கயிடாவை நிரபராதியாக்கும் முயற்சியும் முஸ்லிம்களுக்கோ, இஸ்லாத்திற்கோ எந்த விதத்திலும் நன்மை பயக்காது என்பதுடன் அப்படியான செயல் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் பிரதிகூலமாக அமையும் என்பதனையும் நாம் மறத்தலாகாது. பயங்கரவாதம் என்றும் பயங்கரவாதமே. தற்காப்பு போரிலும் பயங்கரம்வாதம் பற்றி எச்சரிக்கும் குர்-ஆன் இந்த இரட்டை கோபுர தாக்குதலை வித்தியாசமாக மொழி பெயர்க்கின்றது என்பது ஒரு முட்டாள்தனமான விவாதமாகும்.

இது இப்படியிருக்க இந்த 9/11ன் இன்றைய விசேடம் தொடர்பானதுடன் அது நிகழ்த்தப்பட்ட இடம் சம்பந்தமான புதிய திருப்புமுனையே இக் கட்டுரையின் சாரம்.

எதிர்வரும் சனிக்கிழமை 11ம் திகதி 9ம் மாதம் இரட்டை கோபுரம் தாக்கியழிக்கப்பட்ட 9வது வருடம், அன்றைய தினம் (இந்த வருடத்தின் தற்செயலான சம்பவம்) உலக முஸ்லீம்களின் ஈகை திருநாளின் ( Eid ul- fithr, ஈதுல்- பித்ர்) இரண்டாம் நாளும் ஒன்றா இணைவதாகும். அன்று அமெரிக்காவின் ப்ளொரிடா(Florida) மானிலத்தில் Gainesville என்ற இடத்தில் டொரி ஜொன்ஸ்(Terry Jones) என்ற ஒரு கிறிஸ்தவ பாதிரி குர்-ஆனின் பிரதிகளை இஸ்லாத்துக்கு எதிரான ஆர்பாட்டக்காரர்களுடன் சேர்ந்து “தீயிட்டு எரிக்க” திட்டம் தீட்டியுள்ளார்.  உலக வர்த்தக நிலைய தாக்குதலைக் கண்டித்து புனித குர்ஆன் பிரதிகளை எரிக்க தேவாலயம் முடிவு

இவரின் தேவலயதில் மொத்தம் 50 உறுப்பினரே. அதிலும் 30 பேரே நிறந்தரமகாக கோவிலுகுச் செல்வோர். அவரின் அடியாளர்களில் எத்தனை பேர் இந்த “எரிப்பார்பாட்டத்தில்” கலந்து கொள்வர் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த “குர்-ஆன்” எரிப்பு தீர்மானத்திற்கான அவரின் நியாயம் குர்-ஆன் என்பது ஒரு புனித நூல் அல்ல என்பதுடன், இறைத் தூதர் ஏசு( peace be upon him) இன்று இருந்திருந்தால் அவரும் அதை எரித்திருப்பார் என்பதாகும். இதுவரை 200 குர்-ஆன் பிரதிகளை சேர்த்து வைத்துள்ள இந்த பாதிரி கடவுளால் எந்த இடையூரும் வராவிட்டால் இந்த முயற்சி தங்கு தடையின்றி தொடரும் என்கிறார். இந்த முயற்சியில் எவ்வளவு தூரம் இவர் வெற்றி பெறுவார் என்ற கேள்விக்கப்பால், இந்த திட்டமிட்ட நிகழ்வு முஸ்லிம்களுக்கிடையே மாத்திரம் பரபரப்பை ஏற்படுத்தவில்லை, மாறாக பிற சமயத்தவர், சமயம் சாராதோர் என்ற பேதமின்றி எதிர்ப்பலைகள் கிழம்பிவிட்டன. இதற்கு எதிரான கையெழுத்து வேட்டை பல இடங்களில் முடக்கி விடப்பட்டுள்ள அதே நேரத்தில், ஆர்பாட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் என்று எதிர் நடவடிக்கைகளும் ஆரம்பித்து விட்டன. மேற்குலக வானொலிகளின் எதிர்ப்பு, வெள்ளை மாளிகையின் உத்தியோக எதிர்ப்பறிக்கை என்று இது உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய நிகழ்வாகவே பொதுவாகக் கொள்ளப்படுகிறது. மேலும் பல எதிர் நடவடிக்கைகள் அந்த தினத்துக்காக திட்டமிடப்பட்டுள்ளன.

சரி அந்த பாதிரி எரித்தால் என்ன அந்த எரிப்பு முயற்சியுடன் சேர்ந்து இஸ்லாம் அழிந்து விடவா போகின்றது? முஸ்லிம்கள் அமைதியாக தத்தமது கருமங்களில் கவனம் செலுத்த வேண்டாமோ? ஏனெனில் இஸ்லாத்தின் ஆரம்ப நாளில் இருந்து இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதானே இருக்கின்றன. அதே வேகத்தில் இஸ்லாமும் வளர்ந்து கொண்டுதானே செல்கிறது. இன்று உலகத்தில் ஒப்பிட்டு ரீதியில் கூடுதலாக மக்கள் இணைவது இஸ்லாத்திலேயே என்பதுடன் அதிகமான கிறிஸ்தவ புத்தி ஜீவிகள் இஸ்லாத்தை ஏற்பதும் கண்கூடு. எனவே குர்-ஆன் எரிப்பு என்பது எந்த வகையிலும் இஸ்லாத்தை பாதிக்காது என்பதுடன் அந்த பாதிரி அந்த எரிப்புக்கப்பால் எதையும் சாதிக்கப் போவதுமில்லை. ஒரு வேளை தனது கோயிலின் உறுப்பினர் எண்ணிக்கையையும் இச்செயல் குறைக்கலாம்.

இந்த உத்தேச குர்-ஆன் எரிப்பு நாளில் சுமார் 25 தேவாலங்களும்(Churches), யூத வழிபாட்டுத் தளங்க( Synagogues)ளும் தத்தமது வழிபாட்டு தளங்களில் குர்-ஆனை தங்களின் பக்த கோடிகளுக்காக வாசிக்க முடிவெடுத்துள்ளார்கள். ஒரு மனிதனின் துவேச முயற்சிக்கு எதிராக 25 பேரின் நற்பு முயற்சி. ஆகவே முஸ்லிம்கள் ஆர்பரிக்கத் தேவையில்லை. அத்துடன் இது அமெரிகாவில் புதிய விடயமும் அல்ல. அமெரிக்க அரசியல் அமைப்பு சமய சுதந்திரத்தை வழியுறுத்திவரும் போதும், அமெரிக்கரின் எல்லையற்ற சுதந்திர உணர்வென்பது சில வேளைகளில் ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தி விடுவதை மறுப்பதற்கில்லை. 1866 ம் ஆண்டு இதே அமெரிக்கர்(கிறிஸ்தவரும் உற்பட) ஆபிரிக்க- அமெரிக்கரின் தேவாலயங்களை தீயிட்ட சம்பவங்களும், 1938ல் பாதிரி சார்ல்ஸ் கெளகின்(Fat. Charles Coughlin) யூதர்களுக்கு எதிரானதும் ஜெர்மனிய நாஷிகளை ஆதரித்தும் நிகழ்த்திய பேச்சுக்கள் என்று பல்வேறு சம்பவங்கள், பல்வேறு கால கட்டங்களில் நடந்தேறியுள்ளன. உலகெங்கும் நடந்தேறுகிறது. இனியும் நடக்கும். அப்படியான சம்பங்களின் புது வடிவங்களில் ஒன்றே பாப்பரசர் 16ம் பெணடிக்காக அறியப்பட்ட முன்னை நாள் நாசிகளின் இளைஞர் படையில் இருந்த ஜேர்மனியரான ராட்சிங்கரின் இஸ்லாம் என்ற மதம் “கொடியது” என்ற அறிக்கை ஏற்படுத்திய பரபரப்பு. அதேபோல் இத்தகைய சேறடிப்பு சம்பவத்தின் புதிய முகமே அமெரிக்கர் அவர்களின் ஜனாதிபதியின் சமயம் தொடர்பான சந்தேகத்தை கிளப்பி மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட பார்கும் முயற்சி. இந்த அடிப்படையில் இப்போது நான்கில் ஒரு அமெரிக்கர் அதிபர் பரக் ஒபாமா(Barek Obama)வை ஒரு “இரகசிய முஸ்லிம்” மாகவே பார்கின்றார்களாம். ஆக இவை எல்லாம் ஒருவகை காரணமற்ற இஸ்லாமிய பீதியே(Islamophobia) என்று ஒதுக்கிவிடுவதில் தவறில்லை.

இன்று உலக சனத்தொகையில் சுமார்1.3 பில்லியன்(Billion) முஸ்லிம்கள். CIA யின் கணக்குபடி உலகலாவிய ரீதியில் செயல்படும் அல்- கயிடா தீவிரவாதிகளின் எண்ணிக்கை 14,000. இதை % பார்த்தால் எத்தனை பூஜியங்களுக்கு பினால் ஒரு இலக்கம் வரும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். சரி இவர்களுடன் கூடவே நாடுகள் தோரும் காணப்படும், நம் நாட்டில் காணப்பட்ட முன்னை நாள்(?) ஜிஹாத் அமைப்பும் உற்பட, முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்களையும் சேர்த்து பார்க்கும் போது எத்தனை பேர் தீவிரவாத போக்குடையோர் அல்லது தீவிரவாதத்தை ஆதரிக்கின்றனர் என்றால் முன்னால் பூஜியங்கள் நிறைந்த ஒரு எண் தான் மீண்டும் பதிலாக வரும்.

ஆகவே நியாய சிந்தையுடைய முஸ்லிம்கள் காலத்துக்கு காலம் வைக்கப்படும் இத்தகைய பொறிகளுக்குள் அகப்பட்டுக்கு கொள்லாமல் விழிப்பாக இருக்க வேண்டும். இந்த பொறிகளில் ஒன்றே இலங்கையில் முஸ்லிம்களுக் எதிரான அடக்குமுறை இலங்கை அரசாங்கதால் முடக்கிவிடப்பட்டுள்ளது என்று காவப்படும் செய்தி. இலங்கை என்பது எம் நாடு அதில் எமக்கு உரிமையுண்டு என்று உரிமையுடன் செயல்படும் போது காரணமற்ற பயங்களுக்குள் நாமும் புதைந்து விட வேண்டியதில்லை.

இப்படி இந்த குர்-ஆன் எரிப்பு என்ற விடயத்துடன் தொடர்புபட்டதே Park 51 என்ற ஒரு இடமும், அந்த இடம் தொடர்பான உரிமை பிரச்சினையும். இந்த விடயம் அமெரிக்காவில் காரசாரமான வாத பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது Lower Manhattan, அதாவது “வெறுமை நிலம்”(Ground Zero) என்றறியப்பட்ட இடத்திலிருந்து கல்லெறி தூரத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பள்ளிவாசலுக்கும், இந்த பார்க் 51 திட்டவாளர், றவூப் கான், அவர் மனைவி டெய்சி கான் ஆகியோருக்கும் ஒரு தலையிடியாக மாறி வருகின்றதாம். இந்த உத்தேச கட்டிட இடத்தை சுற்றி துயிலுரி(strip clubs) நிலையங்கள், மது பாண சாலைகள், மற்றும் மேற்கத்திய களியாட்டு நிலையங்கள் என்று இன்னோரன்ன அம்சங்களை கொண்ட அந்த மன்கெட்டன் பகுதியில் இந்த பார்க் 51க்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்கள், முஸ்லிம்களுக் கெதிரான அவமான பேச்சுக்களும், செயல்களும் இடம் பெறுவதையும் பொருட்படுத்தாது அந்த சிறிய பள்ளீவாயிலை 13 மாடி கட்டடமாக்கி அதில் இஸ்லாமிய (பல் மத நற்புறவு) கலாச்சார மண்டபமும் அமைக்க கட்டிட அனுமதி கேட்டு விண்ணப்பித்தார் திரு, திருமதி கான் அவர்கள். இவர்கள் அமொ¢காவில் பல் மத பு¡¢ந்துணர்வை ஏற்படுத்தும் முகமாக சமயங்க்களுக்கிடையிலான புரிந்துணர்வு கலந்துரையாடலுக்கு (inter-faith dialouge) பெயர் பெற்றவர்களாம். இந்த கட்டிட முயற்சிக்கு நிவ் யோர்க் மேயரும் அனுமதி அளித்துவிட்டார். அதைத் தொடர்ந்து பரக் ஓபாமாவும் வெள்ளை மாளிகையின் நோன்பு திறக்கும் வைபவம் ஒன்றில் அங்கே கலாச்சார மண்டபமும், பள்ளிவாயிலும் கொண்ட கட்டிடம் அமைப்பது முஸ்லிம்களின் சமயத்தை பின்பற்றுவதற்கான அவர்களுக்குள்ள மத சுதந்திரத்தினதும், ஜனநாயக உரிமையின் பாற்பட்டது. இந்த அடிப்படை உரிமை அமெரிக்கர் அனவருக்கும் இருக்கும் உரிமைக்கு சமமான உரிமை என்று பெரிய போடு போட்டார். ஒரு சில நாற்களுக்குப் பின் வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜனாதிபதியின் அன்றைய பேச்சு ஒரு தேவை கருதி நிகழ்த்தப்படடதாகவும், இந்த உத்தேச கலாச்சார நிலைய, பள்ளிவாசல் கட்டிட அனுமதி தொடர்பாக அதை எதிர்ப் போரினது நியாங்களும் கருத்தில் எடுக்கப்பட வேண்டியுள்ளது என்ற ஒரு விடயத்தையும் மெல்லவே விட்டுள்ளார்.

இந்த எதிர்பாளர் வரிசையில் பலதரப்பட்டோரும் காணப்படுவது இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம். பொக்ஸ் செய்தி(Fox news) குழுவில் இருக்கும் லவுரா இங்கிராம் (Laura Ingraham) டெய்சி கானுடனான நேர்காணலுக்குப் பின் பின்வருமாறு கருத்து வெளீட்டுள்ளார், ” இது இஸ்லாத்தின் அதிகார போக்கினதும் அதன் விரிவாக்கத்தினதும் ஒரு செயல்பாடு”. கூடவே இந்த இடத் தேர்வானது தற்செயலான விடயமல்ல, இது ஜெருசலத்தில் ஒரு தேவாலயத்தின் மேல் கட்டப்பட்ட அல்-அக்ஸா பள்ளிவாயிலை ஒத்தது” என்றும் கூறியுள்ளார்.

அதே போல் 9/11ல் தன் சகோதரியை பறிகொடுத்த நிவ் யோர்க் சட்டத்தரணி ஒருவர், தாம் திரு, திருமதி கான் அவர்களின் ஜனநாயக உரிமைக்குட்பட்ட செயற்பாட்டில் கருத்து வேற்றுமை படாவிட்டாலும், அவர்கள் தமது உரிமைகு உட்பட்ட விதத்தில் நடந்தாலும், இந்த முயற்சியானது இந்த சந்தர்பத்தில் ஒரு பொருத்தமான நடவடிக்கையாக தன்னால் பார்க்க முடியவில்லை என்றும், அதே நேரம் இந்த கட்டிட நிர்மானத்துக்கான எதிர்ப்பு இஸ்லாமிய சமயத்துக்கான எதிர்பாக ஒருபோதும் அமையவும் கூடாது என்பதில் அவர் கவனமாக உள்ளாதாகவும் கூறுகின்றார்.

அதேநேரம் இந்த பள்ளிவாசல் நிர்மானத்துக்கான அனுமதி மறுப்பு, தீவிரவாதிகளுக்கு தீனி போடுவதாகவே முடியும். முஸ்ளிம்களுக்கு அவர்களின் ஜனநாயக உரிமையை மறுத்துக் கொண்டு முஸ்லிம்கள் தங்களை முழு அமெரிகர்களாக பார்க்க மறுகிறார்கள் என்று கூறுவது ஒன்றுக் கொன்று முரணான அனுகுமுறை. 15 தீவிரவாதிகளுக்காக முழு உலக முஸ்லீம்களையும் குற்றவாளிக் கூண்டில் போடுவது புத்திசலித் தனமாகாது என்ற கோசங்களும் அமெரிக்க அரசியல் வட்டத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

போர் குற்றவாளி ஜோர்ஜ் டப்லிவ் புஸ்(George W. Bush) கூட 9/11ன் பின்னான நாட்களில் வசிங்டன்னில் உள்ள இஸ்லாமிய நிலையத்துக்கு விஜயம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக எந்த அமெரிக்கரும் செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், பயங்கரவாதம் என்பது இஸ்லாத்தின் முகம் அல்ல என்றும், இஸ்லாம் என்பது ” சாமாதானத்துக்கான் சமயம்” என்பதே தனது நிலைப்பாடு என்றார். இதையே முன்னை நாள் ராஜாங்க செயலர் கொண்டலீஸா ரைசும்(Condoleezza Rice), அனைத்து படை அதிகாரிகளின் தலைவருமான கொலின் பவுள்(Colin Powell)ழும் வழி மொழிந்தனர். இவர்களின் கூற்று தொடர்பாக கருத்து வெளியிட்ட வெள்ளை மாளிகையின் ஓபாமவின் ஆலோசகர்களில் ஒருவரான பட்டேல்(Patel) என்ற முஸ்லிம் பின்வருமாறு கூறுகின்றார், ” பின் லாடனின் தீவிரவாததை ஆதரிக்கும் ஒரு சிறு குழுவினரின் இஸ்லாம் தொடர்பான கருத்தியலுக்கும், அமைதியை விரும்பும் கோடிக்கணக்கான முஸ்ளிம்களின் இஸ்லாம் தொடர்பான கருத்தியலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புஸ்சும், ஒபாமாவும் மிக சரியாகவே புரிந்து வைத்துள்ளனர்”.

ஆக இஸ்லாத்தின் பெயரால் இரட்டை கோபுரம் தாக்கியழிக்கப் பட்டதை எப்படி எதிர்த்தோமோ, அதே போல் இந்த குர்-ஆன் எரிப்பை இஸ்லாத்தின் பெயரால் எதிர்ப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். ஆனால் அத்துமீறல் நிச்சயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

அதேநேரம் இந்த 13 மாடி கலாச்சார நிலையமும், பள்ளிவாசலும் அந்த வெறுமை நிலத்திற்கு (Ground Zero) அண்மையிதான் அமைய வேண்டும் என்று அடம் பிடிப்பதும் சற்று பிரச்சினைக்குறிய விடயம் போலவே தெரிகிறது. அங்கு உயிரிழந்த 3000 பேரின் உறவுகள் இந்த இடத்தில் உங்கள் பள்ளிவாசலை கட்ட வேண்டாம் என்று கேற்பது நீங்கள் அமெரிகாவில் எங்குமே கட்டவேண்டாம் என்று சொல்லும் செய்தியல்ல. அமெரிக்க முஸ்லிம் மற்றவர் போல தமது வணக்கஸ்தளத்தை எங்கும் கட்டலாம் என்ற உரிமை இங்கு கொஞ்சம் விட்டுக் கொடுக்கப்பட வேண்டும் என்று தான் படுகிறது. ஏனெனில் உலகத்தில் குழப்பத்தை உண்டுபண்ண வேண்டாம் என்கிறது இஸ்லாம். ஆகவே நாம் தானே முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

உலக மயமாக்கல் என்ற போர்வையில் இஸ்லாத்திற்கெதிரான நிலைபாடு மேற்கினாலும், அமெரிக்காவினாலும் எடுக்கப்பட்டாலும், சோஸலிசத்தை தோற்கடித்த மேற்கின் அடுத்த குறி இஸ்லாம் என்றாலும். தங்களையறியாமலேயே இஸ்லாத்துடன் ஒட்டி செல்ல வேண்டிய தேவை மேற்கிற்கு மாத்திரமல்ல உலகத்துக்கும் உண்டு. இதற்கு சான்றாகா பாரிய விற்பனை நிலையங்கள்(Supper markets) தம் கதவை திறந்து அங்கிகரிக்கப்பட்ட உணவை(Halal food) சிபாரிசு செய்கிறது, வங்கிகள்( Banks) வட்டியில்லா இஸ்லாமிய வங்கி முறையை அனுமதித்து தமது பொருளாதார மூலத்தில் மாற்றத்தை செய்துள்ளது. விரைவில் பெண்களின் வேலை/காரியாலய உடுப்பில் (Business suit ) மாற்றம் ஏற்படுவதை மேற்கத்தைய பெண் அறிஞ்சர்கள் வரவேற்க ஆயத்தமாக உள்ளனர் என்ற செய்திகள் எல்லாம் செயற்கையான உலகமயமாக்கலுக்கு( Globalization) எதிராக எழும் இயங்கியலாக இஸ்லாமிய மயப்படுத்தல் (Islamization) இயற்கையாகவே நடந்தேறுவதை காணலாம்.

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

University_of_Jaffna_Logoயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய விவாதம் தமிழ்சமூகத்தின் மிகமுக்கிய நிறுவனம் ஒன்றை கேள்விக்கு உட்படுத்தி இருந்தது. இதன்மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய பல்வேறு விடயங்களும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நிஸ்தார் எஸ் ஆர் மொகமட் இன் இக்கட்டுரை பிரசுரமாகிறது. பல்கலைக்கழகங்கள் கண்ணாடி போன்று சமூகத்தை உள்ளவாறே மட்டுமே பிரதிபலிக்க முடியுமா? இல்லையேல் சமூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியனவா? என்ற அடிப்படைகளில் விவாதம் அமைகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:
‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்
._._._._._.

பல வாரங்களுக்கு முன்  ஊடகவியலாளர் திரு. ஜெயபாலனினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சமூகமாற்றமும் யாழ் பல்கலைக்கழகமும் சம்பந்தமான விவாதஅரங்கும் அதை தொடர்ந்து வந்த பேராசிரியர் ஃகூல் அவர்களின் பேட்டியும் ஆரோக்கியமான பல கருத்துகளை தாங்கிவந்த போதிலும் அவை ஒரு அடிப்படை கேள்வியில் கவனம் செலுத்தவில்லை என்றே தெரிகிறது. அதாவது சமூக மாற்றத்திற்கு பல்கலைக்கழகம் தானா அடிப்படை என்ற கேள்வியே அதுவாகும். இருந்தும் இந்த கேள்வி கேட்கப்படாமலே ஒரு முடிவு எய்யப்பட்டுவிட்டதாக தோன்றுகிறது. சமூக மாற்றத்தை யாழ் பல்கலைக் கழகம் செய்யத்தவறி விட்டது என்பதே அந்த முடிவு.

சமூகமாற்றம் என்பது என்ன? அது ஒரே நாளையில் ஏற்படக் கூடியதா? அல்லது அது ஒரு தொடர்ச்சியான இயங்கியலை கொண்டதா? அல்லது ஒரு சமூகத்தின் குறைபாடுகளாக நாம்காணும் அம்சங்களை அச்சமூகத்தில் இருந்து நீக்கிவிட்டால் அது சமூக மற்றமாகுமா? ஏதாவது ஒரு வகையில் தனது பழைய நிலையை ஒரு சமூகம் மாற்றிக்கொண்டால் அதை ஒரு முன்னேறிய சமூகமாக கொள்ள முடியுமா? ஒரு சமூகமாற்றத்துக்கு எல்லை உண்டா? அப்படியானால் அதன் உச்சஎல்லை என்ன? ஏன் அதை பல்கலைக்கழகம் தான் ஏற்படுத்த வேண்டும்? என்ற நியாயமான  கேள்விகளுக்கெல்லாம் அந்த கட்டுரையிலோ அல்லது பேட்டியிலோ பதில்கள் இல்லை. இருந்தபோதிலும்  சமூக மாற்றத்தின் தேவை இருப்பதாக ஏதோ ஒரு வகையில் உணரும் நாம் அச்சமூகத்தில் புரையோடியிருக்கும் பல அடிப்படை விடயங்களை மூடி மறைத்துவிட்டு அல்லது அவைபற்றி அக்கறைபடாமல் சமூகமாற்றம் பற்றி கதைப்பதில் பயனில்லை என்றே தோன்றுகிறது.

சமூகத்தின் அங்கங்களான தனி மனிதர்களில் ஏற்படும் சிந்தனை மாற்றம் அதை பிரதிபலிக்கும் அவர்களின் செயல் மாற்றம் ஒட்டுமொத்த சமூகத்தின் மாற்றத்திற்கு காரணமாகின்றது என்பது எனது நிலைப்பாடு. இந்த அடிப்படை சிந்தனை மாற்றம் என்பது ஒரு பல்கலைக்கழகத்தின் பொறுப்பாக என்னால் பார்க்க முடியாதுள்ளது. ஏனெனில் இந்த உலகத்தின் முதல் பல்கலைக்கழகமான கி.பி 859ல்  மொரோக்கோ (Morroco) வில் உள்ள பெஸ்(Fes) நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்றும் கல்வி சேவை செய்து கொண்டிருக்கும் பெஸ் பல்கலைக்கழகமாகட்டும் அல்லது ஜூலை மாதம் 2010ல்  சுவீடன்(Sweedan) கல்மர்( Kalmar) நகரத்தில் அமைக்கப்பட்ட லின்னயுஸ்(Linnaues) பல்கலைக் கழகமாகட்டும் இவைக்கும் இடையில் அமைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பல்கலைக் கழகங்களாகட்டும் இதில் எதுவுமே சமூகமாற்றதிற்காக அமைக்கப்படவில்லை, சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் தெரியவில்லை. இப்படியிருக்க யாழ் பல்கலைக்கழகத்தை மாத்திரம் தனியாக பிரித்து எடுத்து அது சமூகமாற்றத்தை ஏற்படுத்தியே ஆகவேண்டும், அப்படி ஏற்படுத்தும் அளவிற்கு அதன் நிர்வாகத் திறனும், கல்விசார் மேன்நிலையும் ஏதுவாக இல்லை. எனவே அவைகளை பெற்று தமிழ், குறிப்பாக யாழ் சமூகத்தை மாற்றியாகவே வேண்டும், அதற்கு பேராசிரியர் ஃகூல் அவர்களின் யாழ் பல்கலைக்கழகத்துக்கான வருகை இன்றியமையாதது என்பது போன்றதான கருத்து பரிமாற்றம், கதையை எப்படி முடிப்பது என்று தெரியாமல் ஆரம்பிக்கப்பட்ட தென்இந்திய தமிழ் சினிமா போலவே தென்படுகின்றது. 

அதே நேரத்தில் பல பல்கலைக் கழகங்கள் தங்கள் நாடுகளில் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்களை, நம் காலத்து சான்றாக வேண்டுமானால் 1976 களில் ஆயத்துல்லா ரூஹ¤ல்லா கொமய்னி  பாரிஸ்(Paris) நகரத்தில் இருந்து கொண்டு ஈரானின் தெ·ரான்(Tehran) பல்கலைகழகத்தின் மாணவர்  மூலம் இஸ்லாமிய புரட்சி என்று தொடங்கி  வெறும் அரசியல் மாற்றத்தையும் அதை தொடர்ந்த பாரசீக குடாநாட்டு பிரதேசத்தில் இன்றும் நிலவிவரும் அரசியல் நிலவரத்தையும் குறிப்பிடலாம், நாம்  தவறாக சமூக மாற்றமாக பார்க்க தொடங்கிவிட்டோமோ என்றும் கேட்கத் தோன்றுகிறது.

பல்கலைக் கழகங்கள் நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை என்றால் அதை முற்றாக நிராகரிக்க முடியாதவாறு சான்றுகள் உள்ளன என்பதற்காக சமூகமாற்ற விடயத்திலும் அதுதான் உண்மை என்றால் அதை ஏற்கக் கூடியதாக நம்மிடம் சான்றுகள் இல்லை.  இந்த வகையிலேயே சமூகமாற்றதுக்கு அடிப்படையாக இருப்பவை எவை என்பதையும், அவைகளை வளர்த்தெடுப்பதில் நிறுவனங்களின் பங்கு என்ன என்பதையும், அவை என்னென்ன நிறுவங்கள் என்பதையும் பார்க்கவேண்டும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்.

என்னை பொறுத்தவரை பாடசாலைகள், மத வழிபாட்டு தளங்கள் என்பவைகளே சமூகமாற்றத்திற்கான பொருத்தமான ஆரம்பபுள்ளிகள். அதிலிருந்தே கோடுகள் வரையப்பட்டு அவை பல்வேறு நிறுவனங்கள் ஊடாக இணைக்கப்படல் வேண்டும். எந்த பாடசாலை சமூக அநீதி பற்றி மாணவ குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது, அல்லது எத்தனை பாடசாலைகள் அவ்வாறு முயற்சித்தது?  ஆரம்ப பாடசாலையில் பயிற்றப்படாத மாணவனொருவன் பல்கலைகழகத்தில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எந்த அடிப்படையில் எதிர்பார்ப்பது? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதை நாம் எப்போதோ தெரிந்து வைத்துள்ளோமே. ஆக எமது அடிப்படை குணாம்சங்கள் பல்கலைக்கழக சமூகத்தில் எப்படி பிரதிபலிக்காமல் இருக்கும்?

மாற்றத்தை வேண்டிநிற்கும் விடயங்களில் முக்கியம் பெறுவது சாதி பிரச்சினை என்பது எனது நிலைப்பாடு. இதை தொடர்வது சீதனபிரச்சினை.  இது பாடசாலைகளில் முளைவிடாமல் தடுப்பதற்குப் பதிலாக, அது கதைப் பொருளாக்கப்படாமல், விமர்சனத்துக்கு உட்படுத்தப்படாமல், வெட்ட வெளிச்சத்தில் அங்கேயே ஆரம்பமாகி, வழிபாட்டு தளங்களால் வளர்க்கப்பட்டு, திருமண பந்தத்தில் உறுதியாக்கப்படுகிறது. அப்படியிருக்க இடையில் வரும் பல்கலைகழகத்துக்கு மட்டும் ஏன் இந்த பாரிய பொறுப்பு, ஒரு வகை தண்டனை?

சாதிப் பிரச்சினையும், சீதனப் பிரச்சினையும் காட்டமாக இல்லாவிட்டாலும் காலத்துக்கு காலம் அவை பேசு பொருளாக்கப்பட்டன என்பது உண்மையாயினும் அதை நோக்கிய செயல்பாடுகள் நத்தை வேகத்திலேயே செயல்பட்டன. ஆனால் கல்வி கற்பதில் காட்டும் ஆர்வம் மின்னஞ்சல் போல் அதிவேகமாக செல்கின்றன, அது ஆரோக்கியமான விடயமும் கூட. ஆனால் சமூகமாற்றதுக்கு அது உதவியதா என்றால், அந்த கல்வியையும் கூட ஒரு வியாபாரமாகவே பார்க்கப்பட்டதால் சமூக மாற்றத்தில் கல்வி கைகொடுக்கவில்லை என்றே தெரிகிறது.

சாதி, சீதனபிரச்சினை மாத்திரம்தான் சமூகத்தில் புரையோடியுள்ளதா? என்று கேட்டால் ஒரு நீண்ட பட்டியலுடன் அனேகர் வருவர். அதிலே நான் முக்கியமாக கருதுவது யாழ்  சமூகத்தின் மனப்போக்கு. இதுவும் வீட்டுக்கப்பால் பாடசாலையில் இருந்தே ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. மாணவரின் அறிவு நிலையும், அவர்களின் திறமையும் புத்தகத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்பட்டு மாணவர் கெட்டிக்காரராகவும், மக்குகளாகவும் முத்திரை குத்தப்பட்டுகின்றனர். இந்த முத்திரை குத்தலும் சாதி அடிப்படையில் ஒரு வகை நியாயப்படுத்தலுக்கு உள்ளாகி ஒரு குறிப்பிட்ட சாதிக்கும் கல்வியில் மேதாவிதனத்துக்கும் ஒரு உறவுமுறை கட்டப்படுகின்றது. அல்லது அறியாமைக்கும், இழிநிலைக்கும் இன்னொரு சாதி அல்லது இனம் சொந்தமாக்கப்படுகின்றது. இது மாத்திரமல்ல எப்படியாவது பல்கலைகழகத்தின் வாசல்படி மிதித்துவிட்டால் அது பிறவிப்பயனை அடைந்ததுக்கான அறிகுறியாக கொள்ளப்படுகிறது. ஆண் ஒருவர் பல்கலைக்கழகம் சென்றுவிட்டால் அது சீதனத்தை தீர்மானிக்கும் அளவுகோலாகவும், அதுவே பெண் ஒருவரின் துணையை தெரிவு செய்யும் உரிமையை பறிப்பதாகவும் சிலவேளைகளில் அதுவே அவளுக்கு நிரந்தர கன்னி பட்டத்தையும் பெற்றுத் தருவதாகவும் அமைந்து விடுகின்றது. 

தமிழ் இலக்கிய பாடமாகட்டும், ஓட்டைகளை கிண்டிகிளறும் சட்ட வியாக்கியாணமாகட்டும், சிக்கல் நிறைந்த பெளதீக தேற்றமாகட்டும், தலை சுற்றும் தத்துவமாகட்டும் எதையும் மனப்பாடம் செய்யத் தெரிந்தவன் பகுப்பாய்வுதிறன் இல்லாமலேயே பரீட்சையில் சித்தியடைந்து விடுவான். இது முடியாதவன் கூட “குதிரை” ஓடி விடயத்தை சாதிக்கின்றான். உண்மையில் கெட்டிக்காரனும், திறைமைசாலியும் எந்த சாதியில் இருந்தும் சமூகத்தில் இருந்தும் பிறக்கலாம். ஆனால் அவனை வளரவிடாமல் தடுப்பதில் இந்த பாடசாலைகளும், வழிபாட்டு தளங்களும் அவனுக்கு தடைபோடுவதே சமூக அநீதியின் ஊற்று என்பதை நாம் மறக்கமுடியாது.

இந்த குதிரை ஓட்டத்துடன், கல்விக்கடை(tutory) நடத்தல், பரீட்சை வினாத்தாள் வெளியாக்கம், வினாத்தாள் திருத்த நிலையத்தில் (paper correction centres) ஆள் வைத்து புள்ளி ஏற்றல் என்ற பல்வேறு விடயங்கள் யாழ் சமூகத்தை பொறுத்தவரை ஒரு வெளிப்படை இரகசியம். இது ஒரு சமூகத்துக்கு எதிரான குற்றச்செயல் என்பதை எந்த பாடசாலை வெறுத்து ஒதுக்கிறது? மாறக கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றன.

சரி கல்விநிலையங்கள் தான் அப்படி, சமய வழிபாட்டுத் தளங்களாவது கொஞ்சம் முன்மாதிரியாக நடக்கக் கூடாதா? சாதி குறைந்தவராக கணிக்கப்பட்ட ஒரு வழிபாட்டுகாரனை மதபோதகர் ஒருவர் தேவாலயத்துக்குள் அனுமதித்து விட்டார் என்பதற்காக  உயர்ந்தசாதியாக தன்னை தீர்மாணித்து கொண்ட இன்னுமொரு வழிபாட்டுக்காரன் அந்த ஆலயத்தை பூட்டியதும் இல்லாமல் அங்கு புத்தரின் சிலை ஒன்றை  வைத்து கோயிலை இயங்கவிடாமல் செய்த சம்பவம் போன்று எத்தனை நாடகங்கள். இதை எல்லாம் இன்றும் அனுமதித்துக் கொண்டு ஏன் நேராக யாழ் பல்கலைக்கழகத்துடன் போருக்கு செல்லவேண்டும்?

சமயமும், சாம்பாரும் நாங்கள் முன்மாதிரியானவர்கள், மாக்ஸிய கொள்கை கொண்டவர்கள் எனவே கத்தரிக்காயில் உள்ள நம்பிக்கை எமக்கு கடவுளிடமில்லை என்று யாராவது சொல்வார்களானால் அவர்கள் இந்த சமூகத்தை பிரதிபலிக்கவில்லை. ஆகவே இந்த சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவர அவர்களால் எள்ளளவும் முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிடலாம். பாடசாலையை, சமயத்தை சமூக மாற்றதுக்காக பயன்படுத்த தெரிந்தவன் தான் யாழ் சமூகத்துக்கு தேவையே தவிர பல்கலைக்கழக நிர்வாகத்தை சரியாக செய்யத்தெரிந்த பேராசிரியர் சமூக மாற்றத்துக்கு என்ன செய்யமுடியும் என்பதுதான் என் கேள்வி?

அடுத்து யாழ் சமூக மனப் போக்கில் முக்கிய இடம் பிடிப்பது “முதன்மை” சிந்தனை. இது “கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன் தோன்றிய…” என்ற அடிப்படையில் இருந்து பிறந்த அம்சமாக எனக்கு தோன்றுகிறது. இதை பின்வரும் பல சிறிய உதரணங்கள் மூலம் நிறுவலாம்.   

தமிழ் மொழிமூலம் பல்கலைகழகத்தில் கற்கும் மாணவரில் யாழ் பிரதேச மாணவர்களே எண்ணிக்கை அடிப்படையில் அதிகம். அதற்காக அவர்கள்தான் முதன்மை சித்தி பெற தகுதியுடையோர் என்று பொருள்படாது. ஆனாலும் நடப்பது என்ன?  பட்டப்படிப்பின் ஆரம்பத்திலேயே யாழ் மாணவருக்கு முதல் தர (1st Class) சித்தி தொடக்கம் இரண்டாம்தர கீழ் நிலை(2nd Class lower) சித்திவரை எல்லா சித்திகளையும் (கற்பனையில்) தங்களுக்கிடையே பிரித்து எடுத்துக் கொள்வார்கள். அங்கு யாழ் மாணவர் இல்லாவிட்டால் அல்லது அந்த யாழ் மாணவர் வெளிப்படையாகவே படிப்பில் பின்நிற்பவர் என்றால் அந்த கற்பனை சித்தி திருக்கோணமலை மாணவருக்கு, அப்படியும் முடியாது என்றால் மட்டக்களப்பு மாணவருக்கு, அதுவும் முடியாது போனால் வன்னி மாணவருக்கு, அதுவும் கூட முடியாது போனால் மலைநாட்டு மாணவருக்கு, இது எதுவுமே சாத்தியப்படாது போகும் பட்சத்தில் போனால் போகட்டும் என்று ஒரு சோனக மாணவருக்கு வழங்கப்படும். இங்கு நான் காட்ட முற்படுவது தன்னை புத்திசாலியாக, திறமைசாலியாக நினைப்போருக்கு எதிரான போக்கையல்ல, மாறாக தன்  புத்திசாலிதனத்தையும், திறமையையும் ஒத்த அல்லது அதைவிடவும் கூட மற்றவரிடமும் இருக்க வாய்ப்பிருக்கலாம் என்பதை கொஞ்சமும் யோசிக்காத  அசட்டை  தன்மையையே.

அடுத்த உதாரணமாக ஒரு சுவாரஸ்யமான விடயத்தை சொல்லலாம். கடந்த 2010 உலககிண்ண உதைபந்தாட்ட போட்டி. உதைபந்தாட்ட முதன்மை நாடுகளான ஜேர்மனியும், ஆர்ஜண்டீனாவும் காலிறுதி போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது  படித்த, நான்குவிடயங்கள் தெரிந்த ஒரு திருக்கோணமலை வாசி எம்முடன்  கூட இருந்தார். “இவங்கள் என்ன விளையாடுராங்கள், ரிங்கோ டீம்(Trincomalle team) இறங்கி இருக்கவேண்டும் இன்னேரம் கதை …” என்று அவர் முடிக்கமுன்னமே என் தலையை சுவரில் அடிக்க வேண்டும் போல் இருந்தது. இருந்தும் பொறுமையை வரவழைத்துக் கொண்டு, இந்த போட்டியின் தேர்வு முறை என்ன, இதற்கு தகுதிபெற்று வர எத்தனை நாடுகளை எந்தெந்த படிமுறையில் சந்தித்து உலக கோப்பை ஆட்டத்துக்கு வர ஒருநாடு  அனுமதிக்கப்படும், அத்துடன்  FIFA (Federation of International Football Associations)வின் உலக தர( World rank list) வரிசையில் இலங்கை எத்தனையாவது இடம் (130 வது) அப்படி இருக்க திருக்கோணமலையின் நிலை… என்று விளங்கப்படுத்த எனக்கு சுமார் 45 நிமிடங்கள் தேவைப்பட்டது. நல்ல வேளை “தமிழீழ கழகம்” (Tamil Ealam Team)என்ற ஒன்று இல்லாமல் இருந்தது இல்லையேல் இந்த உலக கோப்பையுடன் நானும் “துரோகி” பட்டம் பெற்றிருப்பேன்.(இப்போதும் என்ன “தியாகி” பட்டமா, என்ன?)

இன்னுமொரு நகைச்சுவையான விடயமும் இங்கு பொருத்தம் என எண்ணுகிறேன்.  செந்தமிழ் சிம்மக் குரலோன் திரு. அப்துல் ஹமீதின் லண்டன்  IBC (பல வருடங்களுக்கு முன் இடம் பெற்ற) வானொலி பேட்டி ஒன்று. அதில் ஒரு யாழ்(ஆதி)வாசி (கல் தோன்றி மண்…. என்ற அர்தத்தில் மட்டும்) ஒரு புத்திசாலிதனமான கேள்வியை முன்வைத்தார். அதாவது, ஹமீத் அவர்களே! உங்கள் மனைவி ஒரு தமிழ் பெண்மணி அதனால்தான் நீங்கள் செந்தமிழ் பேசுகிறீர்கள் இல்லையா? என்று கேட்டு வைத்தார். ஐயா! நீங்கள் தமிழர், உங்கள் மனைவி தமிழர், உங்கள் இருவரின் பெற்றார் தமிழர், பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, அவர்களின் 10, 20 தலைமுறையினர் எல்லாரும் சுத்த தமிழர் உங்களால் செந்தமிழ் பேச முடிகிறதா, இல்லயே ஏன்? என்று கேற்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ “என் தாய் மொழி தமிழ், அதை நான் அழகாக, சுத்தமாக பேசாவிட்டால் எப்படி?” என்றார். இங்கு நான் சொல்ல வருவது “தமிழர்” அல்லாத ஆனால் தமிழை தாய் மொழியாக கொண்ட ஒருவர் “தமிழர்” ஒருவரின் துணையின்றி தமிழை கூட சரியாக பேச முடியாது என்ற அந்த சிந்தனை போக்கையே. 

இதைபோல் இன்னுமொன்று, “உமக்கு தெரியுமா?, இங்கிலாந்து மகாராணிக்கே கணக்கு சொல்லிக் கொடுத்தவன் தமிழன்”. இப்படி ஒரு சம்பாசணையை எனக்கு ஜேர்மனியில் கேட்க நேர்ந்தபோது, இந்த விடயத்தை சொன்ன ஆள் பற்றி நான் நினைத்தது, போச்சுடா, “இவர் நினைக்கிறார் போலும் மகாராணி இந்த உலகத்தின் அதிசிறந்த அறிவாளி, அந்த அறிவாளிக்கே கணக்கு படிப்பித்தவர் அதி, அதி அறிவாளி, அந்த அறிவாளி ஒரு “தமிழர்”, நானும் “தமிழர்”, ஆகவே நானும்  அறிவாளி” என்பதாகும் (இதுவும் ஒரு வகை சமன்பாடு, திரு. தமிழ்வாதம் கோபிக்க வேண்டாம்)

இப்படி “தமிழ்”, “தமிழர்” என்ற விடயங்கள் தான் எங்கும், எதிலும், எப்போதும் முதன்மையானது அல்லது முதன்மைபெற வேண்டும் என்பது கொஞ்சம் சிக்கல் நிறைந்த விடயமே. இந்த அடிப்படையிலேயே பேராசிரியர் கைலாசபதி அவர்கள் கண்ட கனவாக சொல்லப்படும் விடயமும் அமைகின்றது. அதாவது “யாழ் பல்கலைக்கழகத்தை ஆசியாவின் மிகச் சிறந்த பல்கலைக்கழகமாக்கல்” என்பதாகும். கனவுகள் நிஜமாவது ஏதோ உண்மையாகினும் எல்லா கனவுகளும் அப்படியாகும் என்பது கோள்விக்குறியே. ஒப்பிட்டு ரீதியில் யாழ் பல்கலைக்கழகம் இளமையானது, தர வரிசையிலும் பேராதனை, கொழும்பு பல்கலைக் கழகங்களை விட பின்நிற்பது. அங்கே வெளி நாட்டு மாணவர் வந்து கற்கக் கூடிய விதத்தில் ஆங்கில மொழிமூலமான கற்கை நெறிகள் இல்லை. ரஸ்ய, ஜப்பானிய அல்லது ஜேர்மனிய பல்கலைக் கழகங்கள் போல் சுதேச மொழியில் வெளி நாட்டு மாணவருக்கு படிப்பிக்கும் அளவுக்கு தமிழில் புத்தகங்களோ, ஆய்வு நுல்களோ ஏனைய வசதிகளோ இல்லை. ஆங்கிலத்தில் அத்தகைய கற்கை நெறிகள் உருவாகப்படலாம் என்றாலும் வெளி நாட்டு மாணவர் இந்தியாவுக்கோ, சிங்கப்பூருக்கோ அல்லது மலேசியாவுக்கோ சென்று இலகுவாக காரியத்தை முடித்துவிட வசதி வாய்ப்புக்கள் இருக்கும்போது அல்லது அவ்வசதிகள் ஓரளவு பேராதனையிலும், கொழும்பிலும் இருக்கும்போது ஏன் கஸ்டப்பட்டு வெளிநாட்டு மாணவர் யாழ் வரவேண்டும். அப்படி வெளிநாட்டு மாணவர் இல்லாத பல்கலைக்கழகம் ஆசிய தர வரிசையில் எப்படி முதன்மை இடத்தை பிடிக்க முடியும்.  ஆகவே அடிப்படை விடயங்கள் பூர்த்தியாகப்படாமல் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் கனவில் நம்பிக்கை வைத்து அதே கொள்கையில் பிடிப்பாக இருக்கும் பேராசிரியர் ஃகூல் அவர்களின் யாழ் பல்கலைக் கழக வருகையை சமூக மாற்றத்தின் அத்திவாரமாக கற்பனை பண்ணுவது பிரபாகரனின் கனவை நம்பி களமிறங்கிய புலி போராளிகளின் நிலையை ஒத்ததாகும்.

பேராசிரியர் ஃகூல் அவர்களின் யாழ்ப்பாணத்துக்கான மீள்வருகை சமூகமாற்றத்தையே அடிப்படையாகக் கொண்டதென்றால் அது மிகவும் வரவேற்கவேண்டிய விடயம். ஆனால் அதற்காக அவர் யாழ் பல்கலைக் கழகத்துக்குத்தான்  வரவேண்டுமென்பது விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டிய விடயம். அதாவது பேராசிரியரின் கல்விதகைமை, நிருவாக அனுபவமும், திறமையும் சமூக மாற்றத்தை கொண்டுவருமா என்பது தொடர்பான வாத பிரதிவாதங்கள். 

என்னைப் பொறுத்தவரை பேராசிரியரின் பணி ஒரு பாடசாலையில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். ஒரு பாடசாலையை சமூக மாற்றத்திற்கான ஒரு பரிசோதனை கூடமாக பாவிக்கலாம். அந்த மாதிரி பாடசாலையில் சமூக விஞ்ஞானம் ஒரு முதன்மை பாடமாகவும் சமூக மாற்றத்துக்கான மாதிரிகளை கண்டறியவும் அவைகளுக்கு செயலுருவம் கொடுக்கும் களமாகவும் அதற்கு பேராசிரியர் ஃகூல், அல்லது அவரைவிட பொருத்தமானவர் யார் இருப்பினும் அவர் பொறுப்பாக்கப்படல் வேண்டும். இந்த ஐரோப்பிய பாடசாலைகள் போல் நற்புத்துணை (twined Schools) பாடசாலைகள் நிறுவப்பட வேண்டும். இதன்மூலம் ஒரு பிரதேச மாணவர் மற்றைய பிரதேச மாணவரை அறிந்துகொள்ள அவர்களின் கலாச்சார விடயங்களை பகிர்ந்துகொள்ள ஏதுவாகும். பாடசாலைகளில் மாணவருக்கு மற்ற சமயங்களை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்.

பாடசாலை முடித்து பல்கலைக்கழகம் செல்ல முடியாதோருக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப பயிற்சி அளிக்கும் திட்டம் வேண்டும்.  சமூகத்தின் அனைத்து தரத்தினருக்கும் ஏற்றாற்போல் கருத்தரங்குகள், பயிற்சி பட்டரைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும். நாட்டின் பொது பாடத்திட்டத்துக்கு புறம்பாக, யாழ்பகுதியின் அனைத்து பாடசாலைகளும் ஒன்றிணைக்கப்பட்ட  சமூக மாற்றத்துக்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படல் வேண்டும். இவ்வாறு பல சாத்தியமான திட்டங்களை பரீட்சார்த்த ரீதியிலேனும் செய்துபார்க்க வேண்டும்.

ஊழல், லஞ்சம் என்பன யாழ் சமூகத்தில் மாத்திரம் குடிகொண்டுள்ளதாக கொள்ளமுடியாது. இவை நாட்டின் சகல இன மக்களாலும் கைக்கொள்ளப்படும் விடயங்களாகும். பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம் என்ற நிலைபாட்டை உடைக்கும் முகமாக இதில் முக்கிய கவனம் செலுத்தப்படல் வேண்டும். இவற்றை முறியடிக்க சரியான வேலை திட்டங்கள் இல்லாததினால் தான் யாழ் பல்கலைக்கழகம் மீதும் அது வழங்கும் பட்டங்கள் மீதும் சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. பாடக்குறிப்பை மனனம் செய்து அச்சொட்டாக அதை மீளகொடுத்து, அதற்கு திறமைசித்தி பெற்று, அங்கேயே பதவியும் பெற்று புதிய மாணவருக்கு கற்பிக்கும்போது மீண்டும் அதே பாடக்குறிப்பு கைமாறப்படும் போது எப்படி சிறந்த கலாநிதிகளை உருவாக்கமுடியும்? வெறும் கல்லா நிதிகள் அல்லவா உற்பத்தி பண்ணப்படுவர்.  

ஆக, சமூகமாற்றம் என்பது அடி மட்டதில் இருந்து பிறக்க ஆயத்தங்கள் செய்யாமல், ஒன்றல்ல பத்து ஏன் நூறு பேராசிரியரிர் ஃகூல்கள் வந்தாலும்  யாழ் பல்கலைக்கழகம் அதன் நிலையில் இருந்து மாற்றமடையாது என்பது என் நிலைப்பாடு.

Mohamed SR. Nisthar.

தமிழ்ஸ்ரேலா? ஈழஸ்தீனா? : எஸ் ஆர் எம் நிஸ்தார்

Map_of_Israel_and_PalestineTamil Eelamமேலே உள்ளது ஒரு றீ-மிக்ஸ்(re-mix). அதில் என்ன சூட்சுமம் உள்ளது என்பதைத்தான் இனி பார்க்கப்போகிறோம். பொதுவாக மற்றவன் செய்வதை நாமும் செய்துவிட வேண்டும் என்று நம்மவர்களுக்கு எற்படும் ஆசையை நாம் பார்த்திருக்கிறோம். சாதாரணமாக பரத நாட்டியம் பழகுவது, கடை வைப்பது, கார் வாங்குவது, வெளி நாட்டில் வீடு கட்டுவது என்றால் சரி போகட்டும் இவையெல்லாம் சாதாரண மனித ஆசைகள் தானே எனலாம். ஆனால் அதையும் கடந்து இந்திய துணை கண்டத்தில் “பங்களாதேஷ் “(Bangladesh) என்றால் சம்பந்தம் இல்லாமல் “யாழ் தேஷ்” என்று யாழ்ப்பாணத்தில் கோசம் போடுவது, ஐரோப்பாவில் “கொசொவோ”(Kosovo) என்றால் இலங்கையின் “கொசொவோ”வை எப்போது பெற்றுத்தர போகிறாய் என சர்வதேச சமூகத்தை அதட்டலாக கேட்பதெல்லாம் சாதாரண ஆசையாக இருக்க முடியாது என்பது எமது நிலைப்பாடு.

அப்படியான ஆசையை நாம் கொச்சைபடுத்துவதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. சரி இந்த ஆசையை “உரிமை” என்று சற்று நாகரீகமாக சொன்னாலும் அந்த உரிமை என்பது ஒரு தனியான விடயம், அந்த உரிமை நியாயமானதாக இருக்க வேண்டியது அதன் முக்கிய தன்மைகளில் ஒன்று, அந்த நியாயமான உரிமையையும் நியாயமான முறையில் அடைய முயற்சிப்பது என்பது வேறோர் விடயமென்பதையும் நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

ஒடுக்கப்படும் மக்கள் கூட்டம், கலாச்சாரக் குழு, சமயப் பிரிவு, குலம், கோத்திரம், தேசியம், நாடு என்று மனித நாகரீகத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே வரலாற்றின் ஊடாக நாம் பலதையும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இந்த அடிப்படையில் ஒன்றாய் இருந்த நாடுகள் பிரிந்தும், பிரிந்தவை சேர்ந்தும், புதிதாக பிறந்தும், பிறந்து வளர்ந்தவை முக்கல் முனங்கள் இன்றி நிரந்தரமாக அழிந்துள்ளதையும் கூட நாம் காணக்கூடியதாக உள்ளது. இந்த பின்னணியிலேயே தமிழர்களின் “தனி நாட்டு”க்கான கோரிக்கை (வெற்று கோசம்) என்பதை பார்ப்பது தவிர்க்க முடியாதுள்ளது.

தனிநாடு காண புறப்பட்டவர்கள், அதே நோக்கத்தை கனவிலும், நினைவிலும் இன்றும் காவித்திரிபவர்கள் தமக்கு “இஸ்ரவேல்” ஒரு பாடமாக அமையவேண்டும் என்று சொல்வதையும், சில நேரங்களில் தமது நிலைமை “பாலஸ்தீனர்கள்” ளின் நிலைமையை ஒத்ததென்று ஒன்றுக்கொன்று பொருந்தாத முறையில் பகிரங்கமாக எழுதுவதும், பேசுவதும் வியப்பை அளிப்பதாக உள்ளது. ஆகவே இந்த கோசம் எழுப்புவோருடன் நியாய சிந்தையுள்ளவர்கள் கோட்பாட்டு ரீதியாக சற்று ஒதுங்கி இடைவெளிவிட்டு நிற்கின்றதை நாம் மறத்தல் ஆகாது.

சுதந்திரம் என்ற(வார்த்தையை)தை தவிர நம் நாட்டு (இனப்) பிரச்சினை வேறு எந்த நாட்டு பிரச்சினைகளுடன் நேரடி ஒப்பீட்டுக்கு ஒத்ததாக தென்படவில்லை. அதைவிட முக்கியமாக இன்னொரு நாட்டின் தலையீட்டினால் இந்த பிரச்சினை ஏற்படவில்லை என்பதனால், இது உள்நாட்டு பிரச்சினை என்று மற்றவர்களை உள் நுளைய விடாமல் தடுப்பதற்கு உதவியாகவும் இது அமைந்து விடுகின்றது.

ஆகவே பங்களாதேஷ், கிழக்கு தீமோர், கொசொவோ, எரித்திரியா, கஸ்மீர், பலஸ்தீனம் என்பதை எல்லாம் நம் பிரச்சினையுடன் போட்டு குழப்பி அந்த குழப்பத்தில் இருந்து நாம் வெளிவர முடியாதவர்களாக இருந்து கொண்டு நம் பிரச்சினைகளுக்கு அடுத்தவர் பாணியில் பரிகாரம் தேட முயல்வது நம்மை எப்போதும் குழப்பத்திலேயே வைத்திருக்கும். ஆகவே இலங்கை பிரச்சினையை இஸ்ரவேலுடன் அல்லது பலஸ்தீனத்துடன் ஒப்பிடுவோர் பின்வரும் விடயங்களை சற்று நோக்க வேண்டும்.

இன்றைய வரலாற்று காலத்துக்கு முற்பட்டகாலத்தில் இஸ்ரவேல் என்ற ஒரு நாட்டை உலகப் படத்தில் காணமுடியாது. பாலஸ்தீனம் என்ற ஒரு பிரதேசத்தின் பெயர் இஸ்ரவேலர் அப்பிரதேசத்தில் குடியேறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏற்பட்ட ஒன்று. இது யூதர்களின் ஹிப்ரு (Hebrew)மொழியில் “ப்லெஸ்த்”(Plesht), அதாவது பிலிஸ்தீனர்களின் நிலம்( land of Philistines) என்று அறியப்பட்டது. இந்த பெயரும் ஜோர்தான் பள்ளத்தாகில் (Jordan Valley) கி.மு.5000-4000 (Early Bronze Age) ஆண்டுகளில் வாழ்ந்ததாக சொல்லப்படும் க்ஹசலியர்களி( Ghassulians) ன் இப்பிரதேசத்துக்கான குடியேற்றத்துடன் வந்தாக வரலாறுகள் கூறுகின்றன. பிற்பாடு “பிலஸ்டியா” (Philastia) என்ற பெயருடன் இன்றைய காஸா(Gaza) பிரதேசத்தில் சற்று கூடிய நிலப்பரபுடன் ஒரு பிரதேசம் காணப்பட்டதையும் வரலாறு எமக்கு காண்பிக்கின்றது. பைபிளின் கூற்றுப்படி இந்த பிரதேசத்துக்கு இஸ்ரேலியர் என்ற கோத்திரத்தினர் (tribe) குடியேறியது கி.மு. 2000- 1550 (Middle Bronze Age) காலத்திலாகும். பிற்காலத்திலும் ரோமர்கள் இப்பிரதேசத்தை சிரியா பலஸ்தீனா (Syria Palaiestina) என்றே அழைத்தனர். இந்த பிரதேச மக்கள் தமது சனத்தொகை விரிவிற்கேற்ப வாழ்விட நிலப்பரப்பை அதிகரித்து சென்றனர்.

அதேபோல் ஆப்பிரஹாமின்(Abraham) அடியை ஒட்டிய ஏகத்துவ இறை(monotheistic)கொள்கையை மூலமாக கொண்ட மூன்று சமயங்கள், அதாவது யூதம் (Judaism), கிறிஸ்தவம்(Christianity), இஸ்லாம்(Islam) என்பவற்றுள் மூத்த சமயமான யூதத்தை பின்பற்றியவர்களே யூதர்கள்( இன்று யூத இனதில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயத்தை பின்பற்றுவோரும் உள்ளனர்). இந்த இனத்தின் தந்தையாகிய யாக்கோபு (Jacob) முதலில் “இஸ்ரவேல்” என்று அழைக்கப்பட்டார். அடிப்படையில் ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்ட பெயர் இது. இவரின் சந்ததியினர் “இஸ்ரவேலர்” என்று பின்னர் அழைக்கப்பட்டனர். இவர்களும் அந்த பிரதேசத்திலே மற்றவருடன் கூடி வாழ்ந்தார்கள். ஆகவே இந்த பிரதேசத்திற்கான யூதர்/இஸ்ரவேலர்களின் வரவு பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று. எனவே பாலஸ்தீனத்துக்கு யூதர்/இஸ்ரவேலர்கள் குடியேறியவர்களே அல்லாமல் அதன் அடிப்படை உரித்தாளர்களில்லை.

இந்த இடத்தில் சற்று இலங்கையை நோக்குவோமானால் இயக்கர், நாகர் (நாகர்களே பிற்காலத்தில் “சோனகர்” என்று அறியப்பட்டார்கள் என்ற (உறுதி படுத்தப்படாத) கருத்தும் நிலவுகின்றது) என்ற மக்கள் கூட்டம் வாழ்ந்த இலங்கையில் பிற்காலத்தில் புத்தளத்தின் “தம்பண்ண” என்ற பகுதியில் தோழர்களுடன் வந்திறங்கிய விஜயனின் வழித்தோன்றல் சிங்கள மக்களாகவும், கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்த, முக்குவர் உட்பட, யாழ் பகுதியில் குடியேறியோர் தமிழ் மக்களாகவும் இலங்கையில் வாழ்வதை நினைவூட்டுவதாக உள்ளது. ஆகவே இலங்கையில் சிங்களவரும், தமிழரும் பிற்காலத்தில் குடியேறியோரே அல்லாமல் இலங்கையின் அடிப்படை உரித்தாளர்கள் இல்லை.

காலத்துக்கு காலம் எகிப்தியர் (Egyptians), அஸரியர்(Assyrians), பபிலோனியர்(Babylonians), பாரசீகர் (Persian), கிரேக்கர்கள்(Greeks- பேரசர் அலக்ஸாந்தர் (Alexander the Great),ரோமர்(Romans), பைசாந்தியர்(Byzantines), உமையாக்கள்(Umayyads), அப்பாசிகள்(Abbasids), பாத்திமர்கள்(Fatimids), சிலுவை யுத்தகாரர்கள்(Crusaders), ஐயூபிகள்(Ayyubida), மம்லுக்கர்(Mamluks) துருக்கியர் (Ottoman Turks)களால் ஏற்பட்ட படை எடுப்புகள் காரணமாக பலஸ்தீனிலும், கானான் பிரதேசத்திலும் இருந்த யூதர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர், இன்னும் ஒரு பகுதியினர் ஆக்கிரமிப்பாளர்களின் நாட்டு பிரஜா உரிமையை பெற்றனர், மிகுதியானோர் உலகம் பூராவும் குடியேற்றத்தில் ஈடுபட்டனர்,

அதேபோல் இந்த இடத்தில் இலங்கையை ஒப்பிடும்போது இந்நாடு மீதான இந்திய படையெடுப்புகள், ஐரோப்பியரின் காலனித்துவம் என்பன இலங்கையை நோக்கியதான குடிவரவை ஏற்படுத்தியதே அல்லாமல் குடி அகள்வை ஏற்படுத்தவில்லை. எனினும் 1983ல் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவினால் அரங்கேற்றப்பட்ட தமிழருக்கெதிரான இனக்கலவரத்தை தொடர்ந்து தமிழ் மக்கள் பெருவாரியாக இலங்கையை விட்டு வெளியேறியதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இன்று சுமார் 1.5 மில்லியன் தமிழர் (வெளியேறியோரும் அவர்களின் வழித்தோன்றல்களும்) உலகம் பூராகவும் பரந்து காணப்படுகின்றனர்.

இறுதியாக முதலாம் உலக போர் முடிவில் பாலஸ்தீனத்தின் ஆட்சி அதிகாரம் (administrative mandate) உலக சபையினால் (World Organization) பிரித்தனியாவின்(British) கையில் ஒப்படைக்கப்படுகின்றது. இக்காலத்தில் எல்லாம் இப்பிரதேசம் “பலஸ்தீன்” என்றே அறியப்பட்டது, அழைக்கப்பட்டது. பெரும்பான்மை மக்கள் நினைப்பது போல் “இஸ்ரவேல் அல்லது இஸ்ரேல்” என்ற பிரதேசம் பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதல்ல.

“பலஸ்தீன்” என்ற இப்பிரதேசம் பிற்காலத்தில் “இஸ்ரவேல்”லாக மாறியது பின்வரும் முறையிலேயே. கி.பி1882ம் ஆண்டில் லியோன் பின்ஸ்கர் (Leon Pinsker)என்பவர் யூதர்களுக்கான ஒரு தனிநாட்டை அமைப்பதற்கான ஒரு கொள்கையை, அதாவது யூதர்களுக்கு மாத்திரம் என்று பொருள் கொள்ளக்கூடிய “சியோனிஸம்” (Zionism) என்ற கொள்கையை உருவாக்கினார். இந்த காலப்பகுதியில்தான் ஐரோப்பா எங்கிலும் யூதர்கள் இனப்படுகொலைக்கு(Genoside)முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இத்தருணத்தில் யூதர்களின் மீட்சி என்பது அவர்களின் விடுதலையிலும், தமக்கான தனி நாடொன்றை அமைப்பதிலுமே தங்கியுள்ளது என பின்ஸ்கர் மிக திடமாக நம்பினார். மேலும் யூதர்களின் ஒட்டு மொத்த சன வெளியேற்றம்(mass exodus) ஆர்ஜண்டீனா(Argentina)வை நோக்கியதாக இருக்கவேண்டும் என்றும் பின்ஸ்கர் அடையாளம் கண்டார். இந்த கருத்தானது ஸியோனிசத்தின் தந்தை என்றழைக்கப்படும் தியோடொர் ஹேர்ஷல் (Theodor Herzel)என்பவரினால் கட்டிக் காக்கப்பட்டது. ஆனாலும் ஹேர்ஷல் யூத குடியேற்றத்துக்கு ஆபிரிக்காவின் உகண்டா(Uganda) வே உகந்தாக கருதினார். இருப்பினும் பிற்காலத்தில் அவரின் பார்வை பலஸ்தீனை நோக்கி காணப்பட்டதால் ஐரோப்பா எங்கும் பரவிக்கிடந்த யூதர் “பலஸ்தீன்” என்ற நிலப்பரப்பையே தமக்கான தீர்வாகக் கருதினர். எனவே இஸ்ரவேல் என்பது வசதிகருதி பலஸ்தீனில் உருவாக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பு என்பதற்கப்பால் அப்போது அதற்கு ஒரு சட்டரீதியான (உரிமை) (அல்லது) அங்கீகாரம் இருந்ததில்லை. பிற்பாடு 1897ல் சுவிற்சர்லாந்து(Switzerland) பாசலில் (Basle) நடைபெற்ற முதலாவது ஸியோனிச மாநாட்டில்(Zionism conference) பலஸ்தீனில் இஸ்ரவேலை உருவாக்குவதற்கான கருத்து முடிவாகியது. இதன்படி யூதர்களுக்கான நாடாக பலஸ்தீன பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டு யூதர்களை அப்பிரதேசம் நோக்கி குடிப்பெயர்வு செய்வதற்கான நிதி சேகரிப்பும் தொடங்கி வைக்கப்பட்டது.

இதை சற்று இலங்கை நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 1815ல் கண்டி ராச்சியம் ஆங்கிலேயர் கையில் வீழ்ச்சி அடைய 1833 அளவில் முழு இலங்கையும் ஒற்றை நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டே தமிழருக்கு அரசியலை ஒட்டியதான பிரச்சினை இருந்த(தாக சொல்லப்பட்ட) போதிலும், 1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலமே அப்பிச்சினைக்கான தீர்வு “தமிழ் ஈழம்” என்ற தனிநாடு என்றாகியது. அதிலும் இந்த தமிழ் ஈழம் இலங்கையின் மேற்கு கரையில், அதாவது நீர்கொழும்புக்கு வடக்கேயுள்ள “கொச்சிச் கடை” பாலத்தின் மேலிருந்து வென்னப்பு, நாத்தாண்டி, மாதம்பை, சிலாபம், புத்தளம், வில்பத்து, மன்னார், முழு யாழ்குடா நாடு, முல்லைத் தீவு, திருக்கோணமலை, ஏராவூர், வாழைச்சேனை, மட்டக்களப்பு, கல்முனை, சம்பாந்துறை, அக்கரைபற்று, அம்பாறைக்கும் அப்பால் இலங்கையின் தென்கிழக்கு மூலைவரை சென்றதோடு மத்திய இலங்கையில் ஒரு பெரிய நிலப்பரப்பையும் தன்னகத்தே கொண்ட “தமிழ் ஈழம்” என்ற நிலப்பரப்பு தமிழருடையது என்று அதற்கு நிலஉரிமை கோரப்பட்டது.

ஹேர்ஷல் இஸ்ரவேலின் உருவாக்கத்துக்கான சர்வதேச ஆதரவு என்பது ஏதாவது ஒரு வல்லரசின் ஒத்துழைப்புடனேயே சாத்தியப்படும் என்ற உண்மையை கண்டறிந்தார். இந்த சந்தர்ப்பத்தில் பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி இஸ்லாம் என்ற சமயத்தை அடிப்படையாகக் கொண்ட உதுமாணிய மக்களதிபர்(கலிபா) (Ottoman Khilafah) ஆட்சின் வீழ்ச்சியை எதிர்பார்த்திருந்த பிரித்தானியா 1917ல் பல்போர் தீர்மானத்தை(Balfour Declaration) வெளியிட்டு பலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தாய் நாடு அமைவதற்கான தமது விருப்பத்தை தெரிவித்துக்கொண்டது.

Map_of_Israel_and_Palestineஏற்கனவே ஹிட்லரின் இன சுத்திகரிப்பு( ethnic cleansing), “ஹொலொகோஸ்ட்” (Holocaust) என்று சொல்லப்படும் திட்டமிட்ட பாரிய இன அழிப்புக்கு முகம் கொடுத்த யூத மக்கள் தமது இனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத்தால் நிலைகுலைந்திருந்தாலும், முதலாம் மகா யுத்தத்தை தொடர்ந்த பிரித்தானியாவின் பொருளாதார நெருக்கடியும், யூதர்களின் குடியேற்றத்துக்கு ஸியோனிஸ்டுகள் வழங்கிய அபரிமிதமான பொருளாதார உதவிகளும், நீண்டகால நில உரித்து கொண்ட(indigenous) பலஸ்தீனியரை அவர்களின் நிலப்பரப்பிலேயே வறுமையில் வீழ்த்தியதால் பொருளாதார மீட்சிக்காக பலஸ்தீனியரின் நிலங்கள் யூதர்களால் வாங்கப்பட்டன. அதேநேரம் யூத தொழிலார்களுக்கே அப்பிரதேசத்தில் முன்னுரிமையும் கொடுக்கப்பட்டது. இந்த நிலைமைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திய யூதர்கள் தமது சமூக அபிவிருத்தி, பாதுகப்பு நிலமைகளை கருத்தில் கொண்டு மத்திய, பிராந்திய நிர்வாக அமைப்புக்களை ஏற்படுத்தினர். பாடசாலை, தபால் நிலையங்கள், சுகாதார நிலையங்கள் என்பவற்றுடன் இர்குன்(Irgun), ஹகனா(Haganah) என்ற இரண்டு மூர்க்கமான ஆயுத குழுக்களையும் நிறுவினர். இது பலஸ்தீனியரை இரண்டாம்தர பிரசைகளாக்கியது. இது பற்றிய பலஸ்தீனியரின் அதிருப்தியும், முறைப்பாடுகளும் பிரித்தானியரிடம் எடுபடவில்லை. பலஸ்தீனரிடையே அதிருப்தியாளர் அதிகரிக்கத் தொடங்கவே 1937ல் பிரித்தானியர் பலஸ்தீனிய அரபு மக்களுக்கு எதிரான அடக்கு முறைக்கு இஸ்ரேலிய ஹகனா குழுவின் ஆதரவை நாடினர். இதன் அடிப்படையில் 1938ல் ஹைபா(Haifa) பழச்சந்தை குண்டு தாக்குதலில் 74 மக்கள் பலியாகினர். இஸ்ரேலிய வரலாற்று ஆசிரியர் அயன் பபே(Ian Pappe)யின் கூற்றுப்படி இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண நிலையில் ஹகனா குழு அங்கே இன சுத்திகரிப்பு நடவடிக்கையை ஒன்றை மேற்கொண்டது. நிலைமை கட்டுக்கடங்காது போனதினால் பிராந்திய அரபு நாடுகளிடம் இருந்து வரும் எதிர்ப்பை சமாளிக்க பிரித்தானியா தாங்கள் யூதர்களின் தனிநாடு அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அரபு உலகத்தை சமாதானப்படுத்தியது. இருந்த போதிலும் நிலத்தையும், அது தொடர்பான அதிகாரத்தையும் கைப்பற்றுவதற்கான ஸியோனிஸ்டுகளின் வேட்கையை இது குறைத்து விடவில்லை.

இந்த சந்தர்ப்பத்திலேயே பின்னை நாள் இஸ்ரேலிய பிரதமரான பென் கூறியன்(Ben Gurion) பிரித்தானியாவுக்கு எதிரான ஆயுத கிளர்ச்சியை இர்குன் குழுவினர் மூலமாக மேடை ஏற்றினார். இந்த ஆயுத கிளர்ச்சியில் ஜெருசலம் புகையிரத நிலையம், பிரித்தானிய ஆட்சி அதிகார சபை, அரசர் டேவிட் விடுதி(King David hotel) என்பன முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டன. எனவே நிலைமை மோசமடைவதை கண்ட பிரித்தானியா உலக சபையினால் (பிற்பாடு ஐ.நா சபையினால்) தனக்கு தரப்பட்டிருந்த பலஸ்தீன் மீதான நிர்வாக அதிகாரத்தை மீளகையளிக்கும் எண்ணத்தை 1947ல் வெளிப்படுத்தியது.

இந்த அசாதாரண நிலையில் ஐ.நா சபையின் “UNSCOP” என்ற காரிய குழு(Working Group) “இரு நாட்டு தீர்மானம்” (two states solution)ஒன்றையும் அதே நேரத்தில் ஜெருசலம் சர்வதேச கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதற்கான திட்டமொன்றையும் முன் மொழிந்தது. அந்த ஏற்பாட்டிற்கான ஆதரவு அமெரிக்க பக்கமிருந்து மிக அழுத்தமாக இருந்ததால் 33க்கு 13 என்ற வாக்கு வித்தியாசத்தில் இத் தீர்மானம் வெற்றி பெற்றது. இருந்தும் இந்த ஏற்பாட்டை பலஸ்தீனியர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இஸ்ரேலர்களோ மிகவும் ஆர்வத்தோடும், விருப்புடனும் இந்த இரு நாட்டு தீர்வை ஏற்றுக்கொண்டனர். இதை இர்குன் குழுவின் தலைவர் மெனச்சம் பெகின் (Menachem Begin) னின் பின்வரும் கூற்று உறுதிபடுத்துகிறது, அதாவது “அந்த நாட்களில் தனக்கு இருந்த கவலை எல்லாம் எங்கே இந்த அரபுக்கள் இரு நாட்டு யோசனையை ஏற்றுக் கொண்டு ஐ.நா. வினால் வரையப்பட்ட எல்லை கோட்டுக்குள் இஸ்ரேல் என்ற நாட்டை சுருக்கி விடுவார்களோ என்பதுதான்”.

இந்த அசாதாரண நிலையை இலங்கையுடன் ஒப்பிடும் போது நாம் காணக்கூடியதாக இருந்தது பின்வரும் விடயமே, அதாவது தமிழ் ஈழம் என்ற பாரிய நிலப்பரப்பு சம்பந்தமாக எந்த ஒரு ஏற்பாடுமின்றி, வடக்கையும், கிழக்கையும் மாத்திரம் ஒன்றிணைத்த ஒரு பிரதேசம் இந்திய, இலங்கை (ராஜீவ், ஜெயவர்தன) உடண்பாட்டால் தமிழருக்கான ஆட்சி பிரதேசமாக ஏற்றுக்கொள்ளபட்ட போதும் அது மூர்க்கமாக தமிழ் புலிகளினால் நிராகரிக்கப்பட்டது. அன்று அந்த பிரதேசம் புலிகளினால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்திருந்தால் இன்று தமிழர் (ஓரளவேனும்) நிம்மதியாக இருந்திருக்கலாம். அதே நேரத்தில் இன்றைய உள்நாட்டு தமிழ் அரசியல்வாதிகள் மலைநாட்டையும், வட மேற்கையும் கைவிட்டுவிட்டு வடக்கையும், கிழக்கையும் இணைத்த ஒருபிதேசத்தை தமிழர்களின் பூர்வீக நிலமாக இலங்கை அரசு ஏற்று கொண்டால் தாம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ விரும்புவதாக கூற, அதாவது இந்திய, இலங்கை ஒப்பந்த அடிப்படையில் ஒரு தீர்வுக்கு வர எத்தனிக்கும் போது, வெளிநாட்டு (புலி) தமிழ் அரசியல்வாதிகளோ, மலை நாடு தவிர்ந்த ஆனால் வடமேற்கு, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட “தமிழ் ஈழம்” என்ற நிலப்பரப்புக்காக “நாடு கடந்த (உத்தேச) தமிழீழ அரசு” ஒன்றை உருவாக்க முனைகின்றனர். ஆனால் தமிழர்களின் தாயகம் என்ற பிரதேசம் தொடர்பான சரியான வரையறை இன்றி, தேவைக்கு ஏற்ற விதத்தில் எல்லைகளை மாற்றி “தமிழ் ஈழம்” என்று கூறிக்கொள்ளும் இந் நிலைப்பாடானது இஸ்ரேலின் பலஸ்தீன் மீதான வசதிகருதி செய்யப்பட்ட நில உரிமை கோரல் போன்றதாகும்.

அன்று ஏன் இரு நாட்டு தீர்வை பலஸ்தீனியர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு இன்று “ஹமாஸ்”(Hamas) இயக்கத்திடம் (சரியோ, பிழையோ) நிறைய காரண காரியங்கள் உள்ளன. ஆனால் பலஸ்தீனியர் அன்று அந்த தீர்வை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று ஒப்பிட்டு ரீதியில் இப் பிரதேசத்தில் அமைதி நிலவ வாய்ப்பு இருந்திருக்கும். இருப்பினும் 13 செப்டம்பர் 1993ன் ஒஸ்லோ தீர்மானம் (Oslo Accord) மூலம் இரு நாட்டு தீர்வை பத்தா(Fatha)அமைப்பின் தலைமையிலான பலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) ன் தலைவர் யாசிர் அரபாத் ஏற்றுக்கொண்டதால், மேற்கு கரை(West Bank)யிலும், காஸா(Gaza) பகுதியிலும் ஓரளவு சுயாட்சி அதிகாரம் கொண்ட “பலஸ்தீன அதிகார சபை” உருவாக்கப்பட்டது. ஆனால் ப.வி.இ(P.L.O) க்கும் ஹமாஸகும் இடையே ஏற்பட்ட கொள்கை ரீதியான இணக்கமின்மையால், இருநாட்டு தீர்வு முன்னேறிச் செல்ல முடியாதுள்ளது.

அத்துடன் இஸ்ரேல் ஐ.நா சபையினால் வரையப்பட்டு தங்களால் முன்னர் ஏற்றுக்கொள்ளபட்ட நிலப்பரப்பை விட 50% மேலதிக நிலத்தை 1967 யுத்தத்தின் மூலம் அபகரித்துக்கொண்டது. மேலும் தொடர்ந்த இஸ்ரேலின் அத்துமீறிய மேற்கு கரை யூத குடியேற்றமும், மதில்கட்டி காஸா பிரதேசத்தை தனிமை படுத்தி மேற்கு கரை மாத்திரமே பலஸ்தீனியரின் நிலப்பரப்பாக்க வெளிப்படையாக எடுக்கும் (மறைமுக) நடவடிக்கைகளும், ஹமாஸின் அனைவருக்கும் பொதுவான பலஸ்தீனம் என்ற விடாபிடியும், அதற்கு ஊக்கம் கொடுக்கும் “இஸ்ரவேலை உலக படத்தில் இருந்து நீக்குதல்” என்ற (இன்றைய) ஈரானின் நிலைப்பாடும் இப்பிரதேசத்தை ஒரு “நிரந்தர கொந்தளிப்பு” பிரதேசமாகவே (hot region) வைத்துள்ளது.

இஸ்ரேல் அமைப்பதற்கான மேற்படி நவம்பர் 1947 வாக்கெடுப்புக்கு பின்னால் டிசம்பர் மாதம் 1947ம் ஆண்டு அரபு பொதுமக்கள் நிலைகள் மீது தொடுக்கப்பட பல குண்டு தாக்குதல்கள் பலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலியருக்கும் இடையில் சிவில் யுத்தம் ஒன்று மூள்வது தவிர்க்கமுடியாத விடயமாகியது. இத்தகைய குட்டி சிவில் யுத்தமானது பொருளாதாரத்தில் அபிவிருத்தியோ, போர் முறையில் அனுபவமோ, திட்டமிடலோ இல்லாத பலஸ்தீனியருக்கு ஆயுத ரீதியாக பயிற்றப்பட்ட இஸ்ரேலியருக்கு முன்னால் அழிவையும், உயிர் நீத்தலையுமே பரிசாக கிடைக்கச் செய்தது.

இத்தகைய நடவடிக்கையின் இறுதி கட்டம்தான் மார்ச் 1948ல் இடம் பெற்றது. இந்த பிரச்சினைக்குரிய பிராந்தியத்தில் அரபு வானொலி மூலம் ஸியோனிஸ்டுகள் அரபுக்களுக்கு பகிரங்க அச்சுறுத்தலை வெளியிட்டனர். அந்த பயமுறுத்தல் வெறும் வாய்ப்பந்தல் இல்லை என்று நிருபிக்கும் முகமாக டெயிர் யசின்(Deir Yassin) என்ற இடத்தில் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 250 பலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இச் சம்பவமானது 750,000( ஏழு லட்சத்து ஐம்பதாயிரம்) பலஸ்தீனியர் தமது சொந்த வீடு வாசல்கள், வியாபார நிலையங்கள் என்பவற்றை விட்டு அகதிகளாக வெளியேறச் செய்தது. இத்தகைய நிலைப்பாடானது யூதர்கள் ஐரோப்பாவில் தாம் அனுபவித்த சொல்லொனா துன்பத்தையும், அட்டூழியங்களையும் சற்றும் நினைத்து பார்க்காமல் அப்பாவி பாலஸ்தீனர் மேல் கட்டவிழ்த்த பயங்கரவாதம் வெட்கித் தலைகுனிய வைக்கும் செயலாகும். இந்த பயங்கரவாதத்தை விடுதலை போராட்டம் என்று குறிப்பிடுவது நகைப்புக்கிடமானதே.

இத்தகைய ஒரு முரண்பட்ட நிலமையை இலங்கையிலும் அவதானிக்கலாம். அதாவது 1983 ஜூலை கலவரத்தில் அப்பாவி தமிழர் உயிருடன் தீயிட்டு கொழுத்தப்பட்ட, அடித்து கொல்லபட்ட, பல்லாண்டுகளாக வாழ்ந்த இடத்தை விட்டு அனாகரீகமான முறையில் வெளியேற்றப்பட்ட சம்பவங்களை மிக எளிதில் மறந்துவிட்டு இரத்தம் உறைந்த நிலையில் மன்னார், யாழ் குடா நாடு, முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து சோனகர்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட நிகழ்வானது யூதர்களின் பலஸ்தீன் மக்கள் மீதான பயங்கரவாதத்தை நினைவூட்டுகிறது. 1983ன் கலவரத்தை தொடர்ந்த இரண்டொரு மாதங்களில் விரட்டியடிக்கப்பட்ட தமிழர் மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு திரும்பினர். ஆனால் விரட்டியடிக்கப்பட்ட சோனகர்களோ சுமார் 20 வருடங்கள் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது. ஆகவே தமிழர்களின் “தமிழ் பேசுவோருக்கான” போராட்டமாக (புலிகளால்) கூறப்பட்ட இந்த போராட்டம் ஒரு வசதி கருதிய(பயங்கரவாத) விடயமே.

இந்த பின்னணியில் 14 மே 1947 பிரித்தானியர் தமது நிர்வாக ஆட்சியாணையை (Administrative Mandate) கலைத்த அடுத்த நிமிடம் டேவிட் பென் கூறியன்(David Ben Gurion) இஸ்ரேல் என்ற தனிநாட்டை பிரகடனம் செய்து இஸ்ரேலின் முதல் பிரதமரானார். அமெரிக்க அதிபர் ட்ரூமன்( President Truman) இதை அங்கீகரித்து தமது அறிக்கையை விட தொடர்ந்து ரஸ்யா இஸ்ரேலுக்கான தமது அங்கிகாரத்தை வழங்கியது.

இந்த வெற்றிக்கான மிகவும் ஆழமான திட்டமிடல் அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டதற்கு காரணமாக அமைந்தது இஸ்ரேல் ஒரு பலமிக்க நண்பனாக தன்னுடன் பிற்காலத்தில் செயல்படும் என்ற நோக்கிலாகும். அதாவது இந்த பிராந்தியத்தில் அமெரிக்க நலனை பாதுகாக்கும் நாடாக இஸ்ரேல் என்றும் செயல்ப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும். இதன் நீண்டகால நோக்கு மேற்குக்கும் இஸ்லாம் (West and Islam) என்ற சமயத்துக்கும் இடையிலான கருத்தியல்(Ideological) பனிப்போரையும்(cold war), கலாச்சார பொருதுதலை(cultural conflict)யும் அதை ஒட்டிய நடவடிக்கைகளையும் நசுக்கும் திட்டமாகும்.

ஆனால் இத்தகைய ஒரு நிலை இலங்கை தமிழரை பொறுத்தவரை இருக்கவில்லை. 1983ம் ஆண்டின் தமிழருக்கு எதிரான மிக மோசமான இனக்கலவரமானது சர்வதேச அளவில் தமிழர்பால் ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தியதே அல்லாமல் தமிழரின் இறுதி இலக்கை அடைய அது உதவமாட்டாது என்பதை தமிழர் அறிய தவறியதுமல்லாமல் அதை தங்களுக்கான நிபந்தனையற்ற பூரண ஆதரவாக பொருள் படுத்தி விடயங்களை நகர்த்திச் சென்றனர். இதை இனங்கண்டு எச்சரித்த(தமிழர்)வர்(கள்) இளக்காரமாக பார்க்கப்பட்டனர். இதன் வெளிப்பாடே புலிகளின் தனி தேசிய தலைமை என்ற நிலைப்பாடும் அதை தொடர்ந்த அவர்களின் அடாவடித்தனங்களுமாகும். சர்வதேச ஆதரவு தமக்கு உண்டு என்ற இந்த நிலைப்பாட்டின் ஒரு அம்ச(வடிகட்டிய முட்டாள்தன)மே 13மே 2009 இந்திய பொது தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி மத்தியிலும், அவர்களின் சார்பு கட்சியான ஜெயலலிதாவின் அ.தி.மு.க தமிழ் நாட்டிலும் ஆட்சியை கைபற்றும், எனவே அக்கட்சியுடன் கூட்டு வைத்துள்ள ம.தி.மு.கவின் வை.கோவும் ஜெயலலிதாவும் சேர்ந்து தமிழீழம் பெற்றுத்தருவர் அல்லது ஆகக்குறைந்தது புலித்தலைவர் வே. பிரபாகரனை மீட்டுத்தருவர் என்பதாகும். இதை விடவும் மோசமான(நகைச்சுவையான) கற்பனை கடைசி யுத்தகாலத்தில் அமெரிக்காவின் (உறுதி படுத்தப்படாத) உதவியை நாடியமையாகும். இதை விடவும் “வணங்கா மண்” கப்பல் முல்லை கடலுக்கு செல்ல எத்தனித்தது இறுதி கட்டத்தில் (எதுவுமே கை கூடாவிட்டால்) தலைவரையும் அவருக்கு வேண்டிய முக்கியஸ்தர்களையும் ஏற்றிக் கொண்டு ஐரோப்பா (நோர்வே) கொண்டு செல்ல எத்தனித்த (உறுதி படுத்தபடாத) விடயமுமாகும்.

அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான வலிந்த உதவி அமெரிக்க நலங்கொண்டது. அத்தகைய வலிந்த உதவியை (புலி) தமிழரின் தனி நாட்டுக்கு செய்யவேண்டிய தேவை இப்பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள எந்த ஒரு நாட்டுக்கும் இல்லை. மாறாக இலங்கையுடன் நற்பை பேணி தமது நலனையும் அடையவே சர்வதேச நாடுகள் முயலும், முயன்று வெற்றியும் அடைந்துள்ளன.

மேலும் இன்று பலஸ்தீனுக்கு வெளியே உள்ள 3.5 (இன்றைய இஸ்ரேல் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டோர்) மில்லியன் பலஸ்தீன் அகதிகளின் கோரிக்கை தம்மை மீண்டும் தமது பிராந்தியத்தில் குடியேற அனுமதிக்க வேண்டும் என்பதாகும். இன்றும் 80% மேலானோர் தமது நிலத்துக்கான உறுதி(Deed), வீடுகளுக்கான திறப்பு(Keys)களுடன் தமது தாய் நாட்டில் கால்வைக்கும் காலத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைதான் ஹமாஸின் அரசியல் காய் நகர்த்தலை இலகுவாக்குகின்றது, அதாவது என்றோ ஒரு நாள் இந்த அகதிகள் தமது சொந்த இடங்களுக்கு (இன்றைய இஸ்ரேலுக்குள்) அனுமதிக்கப்படும் போது அது இஸ்ரேலின் சனத்தொகையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அப்படி ஏற்படுத்தும் போது இஸ்ரேல் என்ற நாடு தானாகவே உலக படத்தில் இருந்து நீங்கும் அல்லது நீக்கப்படும் என்பதாகும். எனவே அதுவரை இரு நாட்டு தீர்வு இழுத்தடிக்கப்படும்.

2009 டிசம்பரில் இஸ்ரேலின் மொத்த சனத்தொகை 7,515,400(7.5 மில்லியன்). இதில் 1,213,000(1.2 மில்லியன்) அரபு மக்கள். இது விகிதாசாரத்தில் சுமார் 17% (15% முஸ்லீம்கள், 2% கிறிஸ்தவர்கள்). பலஸ்தீனியர்களின் மொத்த சனத்தொகை சுமார் 12 மில்லியன் இதில் 3,761,000 (சுமார் 3.7மில்லியன்) மாத்திரமே மேற்குகரையிலும், காஸா பகுதியிலும் வாழ்கின்றனர். ஆகவே மொத்த அரபுக்களில் 1/2 வாசி சனத் தொகையிலும் குறைந்தோரே இஸ்ரேலை உள்ளடக்கிய பலஸ்தீனில் வாழ்கின்றனர். ஏனையோர் (அதாவது இன்றைய இஸ்ரேல் பகுதியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டோரும், மேற்குக்கரை, காஸா பகுதியில் இருந்து வெளியேறியோரும்) உலகம் பூராகவும் பரவிக் காணப்படுகின்றனர். இஸ்ரேலில் இருந்து துரத்தப்பட்டோர் மீள குடியேற அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உலக நாடுகளின் வலியுறுத்தலே இன்றைய இஸ்ரேல்- பலஸ்தீன பிரச்சினையின் முக்கிய அம்சமாகும்.

இத்தகைய ஒரு நிலையும் இலங்கையில் இல்லை. குடி அகளந்துள்ள சுமார் 1.5 மில்லியன் இலங்கைய தமிழர் மீண்டும் தம் நாட்டுக்கு குடியேறுதல் என்பது நடக்க முடியாத காரியம். ஏனெனில் வெளிநாட்டு தமிழரின் தனிநாட்டு கோசமானது இலங்கையில் இப்போது வாழும் தமிழர்களின் (விருப்பம் அறியப்படாமல் அவர்கள்) மேல் செய்யும் திணிப்பேயாகும். அதைவிட இன்று சட்டத்தால் வலுவிழந்துள்ள வடக்கு, கிழக்கு இணைப்பானது மீண்டும் நிலைபெற இந்த வெளிநாட்டு (புலி) தமிழர் கோருவது வடகிற்கும், கிழக்கிற்குமான சர்வசன வாக்கெடுப்(referendum) பாகும். இத்தகையதொரு சர்வசன வாக்கெடுப்பு வெற்றி பெறுவதற்கான சாத்தியம் இல்லை என்பதைக் கூட மறுக்கும் அளவுக்கு வெளிநாட்டு (புலி) தமிழர் அரசியல் தெளிவின்றி இருப்பது கவலைக்குரியது. அப்படி வடக்கும், கிழக்கும் இணைவதற்கு அப்பிரதேசத்தில் வாழும் தமிழர் அல்லாத சோனகரும், சிங்களவரும் விருப்பம் தொ¢ரிவித்தாலும் வடமேற்கின் நிலை(நாடு கடந்த தமிழீழ அரசுக்கான விளக்கக் கோவையின் வரை படத்தின்படி)என்ன என்பதற்கு திரு. உருத்திரகுமரனுக்கேனும் பதில் தெரியும் என்பது சந்தேகமே.

மேலும் லண்டனை தளமாக கொண்ட புலி ஆதரவு பத்திரிகையான “ஒரு பேப்பர்”(Oru paper)ரின் ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. ரவி அருணாச்சலம் 2009 ஆரம்பத்தில் வெளிப்படுத்திய அவரின் பேராசையை, அதாவது இன்று உலகத் தமிழருக்கு தேவைப்படுவது இரண்டு நாடுகள், ஒன்று “தமிழ்நாடு” என்ற ஒரு தனி நாடு இந்தியாவிலும், “தமிழ் ஈழம்” என்ற தனிநாடு இலங்கையிலும் அமையப் பெறுவதற்கான சாத்தியமற்ற ஆசை, கைவிட்டு இலங்கையில் இரண்டு பிரதேச/மாகாண ஆட்சி அலகுகளை தம்வசம் வைத்திருக்க வடக்கையும். கிழக்கையும் ஒன்றாக இணைக்காமலும் அத்தகைய ஒரு யோசனைக்கு ஆதரவு அளிக்காமலும் இருப்பது தமிழர்களுக்கு எந்த வகையிலும் தீமையாக அமையாது. அத்துடன் இது கிழக்கில் இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதோடு வடக்குக்கும், கிழக்குக்கும் இடையேயும் விரிசலையும் ஏற்படுத்தாது. மாறாக இரண்டு பிரதேச/மாகான ஆட்சிகளைக் கொண்டிருப்பதால் தமிழருக்கு ஏற்பட்ட அல்லது ஏற்படப்போகும் ஆபத்தையும், வடக்கும், கிழக்கும் இணைவதால் ஏற்படப்போகும் நன்மையையும் தெளிவாக எடுத்துக்காட்ட ஆகக் குறைந்தது திரு. ரவி அருணாசலமாவது முன்வருவாரேயானால் இந்த இணைவின் அவசியத்தின் நியாய தன்மையை எல்லாரும் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். நிற்க.

ஐ.நா பொதுச் சபையினாலும், பாதுகாப்பு சபையினாலும், இஸ்ரேலும் அதன் அண்டை நாடுகள் தொடர்பாகவும், இஸ்ரேலு- பலஸ்தீன் தொடர்பாகவும், மேற்கொள்ளப்பட்ட சுமார் 100 க்கும் அதிகமான தீர்மானங்கள்(resolutions) இஸ்ரேலினால் தூக்கி வீசப்பட்டுள்ள நிலையில் இலங்கை தமிழர் இஸ்ரேலியரை போல் இருக்கவேண்டும் அல்லது செயல்பட வேண்டும் என்பது தர்க்க ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் (logically and ethically) பிழையானது என்பதோடு அது உலக அரசியலில் இருந்து அவர்களை ஓரங்கட்டும். இத்தகைய ஒரு செயலுக்கு தமிழர் என்றும் பிராயச்சித்தம் செய்ய வேண்டியவராவர். அதேநேரம் தமிழர் தங்களை பலஸ்தீனியரின் நிலையில் வைத்து பார்ப்பது உலக அரங்கில் அவர்களை என்றும் நகைப்புக்குரியவர்களாகவே காட்டி நிற்கும். ஏனெனில் ஒப்பிட்டு ரீதியில் அனைத்துலக சமூகத்தால் ஏற்றுக்கொள்ளபட்ட பலஸ்தீன போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உலக சரித்திரத்தில் எங்குமே முன்னுதாரணம் இல்லாத செயலான, அதாவது நம் வார்த்தயில் சொல்வதானால் வேலியே பயிரை மேயுமாப் போல், கடைசிகட்ட யுத்தத்தில் தம் சொந்த மக்களையே வகைதொகை தெரியாமல் அங்கவீனராக்கியும், சுட்டுக் கொன்றும் இனஅழிப்பு செய்த புலிகளின் பயங்கரவாதத்துடன் (பிரபாகரனியம்/பிரபாகரனிஸம்) ஒப்பிடுவதும், அதை எந்தவித கேள்வியும் இல்லாமல் ஆதரித்த புலம்பெயர் புலி(புத்திஜீவிகளும்) ஆதரவாளர்களும், அவர்களால் வஞ்சகமான முறையில் வழி நடத்தப்பட்ட அப்பாவி தமிழரும் கூட தாங்கள் ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுப்போராக உரிமை கோர முடியாதவர்களாகிய நிலையை ஏற்படுத்திய செயலாகும்.

எனவே எவ்வகையில் பார்த்தாலும் தமிழர் நிலையானது முற்றும் முழுதாக இஸ்ரேலின் நிலையையோ அல்லது பலஸ்தீனியரின் நிலையையோ பிரதிபலிக்கவில்லை, பிரதிபலிக்க வேண்டியதுமில்லை. ஒரு சில ஒருமைப்பாடுகள் அங்கொன்று இங்கொன்றாக காணப்பட்டாலும், இலங்கை தமிழரின் பிரச்சினை தனித்துவமானது, ஆகவே அதற்கு தனித்துவமான தீர்வே வேண்டும், தமிழரின் வாழ்விட சூழலுக்கு ஒவ்வாத “மாதிரி தீர்வுகள்”(Model solutions) உள்ள பிரச்சினைக்கு தீர்வாக அமைவதை விட புது பிரச்சினைகளை நிச்சயம் தோற்றுவிக்கும் என்பது எமது நிலைப்பாடு. ஆகவே தமிழர் தமிழராக மட்டும் நின்று தமது உரிமையை பெறமுயல்வது நன்று.

பொது தேர்தல் – 6 மே 2010 UK: முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்

election.jpgநான்காம் முறையாக தொங்கு பாராளுமன்றம் (hung Parliament) ஒன்றை அமைப்பதுக்கான தேர்தலாகவே இத்தேர்தல் பலராலும் பார்க்கப்படுகின்றது. இதை சரியாக விளங்கிக் கொண்ட, எதிர்கட்சி தலைவர் டேவிட் கமமொரன் (David Cameron) இத்தகைய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விடவேண்டாம் என வாக்காளர்களை கெஞ்சாக் குறையாக கேட்கிறார். இவரை பொறுத்தவரை தொங்கு பாராளுமன்றம் அல்ல பிரச்சினை. யாருடன் கூட்டு சேர்வதென்பதே இவரை அரித்துக் கொண்டிருக்கும் விடயம். அறுதி பெரும்பான்மை இல்லாத நிலையில், அதாவது 326 ஆசனங்கள் கிடைக்காவிட்டால், ஆகக்கூடிய பெரும்பான்மையில் ஆட்சி செய்வதென்பது சர்க்கஸ்காரர்கள் (circus) கயிற்றில் நடக்குமாப் போல் சாதாரண மனிதன் செய்யும் முயற்சி போன்றது. விழுவது நிச்சயம். எனவே பழமைவாத கட்சி(Conservertive) கேட்பது அறுதி பெரும்பான்மை. ஆனால் கிடைக்கத்தான் வாய்ப்பில்லை.

ஆளும் தொழிற்கட்சியோ (Labour) மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் இன்றைய முக்கிய பிரச்சினையான பொருளாதார பிரச்சினையை சீர்செய்து விடுவோம் என்கின்றனர். கோர்டன் பிறவுன் (Gordon Brown) மிகவும் பணிவாக எமக்கு இப்படி சொல்கின்றார், ’13 வருடங்கள் தன் கட்சியால் செய்ய முடியாது போனதை (அல்லது தான் செய்ய எத்தனிக்காத விடயத்தை) அடுத்த ஐந்து வருடத்தில் செய்து முடிப்பாராம்’. மந்திரத்தால் மாங்காய் பழுக்க வைப்பதை அனேகமாக மக்கள் விரும்புவதில்லை. இது அவருக்குப் புரியவில்லை போலும்.

பந்தயத்தில் நம்பிக்கையோடு ஓடும் அடுத்த குதிரை தாராளவாத ஜனநாயக (Liberal Democratic) கட்சி. அதன் தலைவர் நிக் க்லெக்( Nick Clgge ) ஒரு விடயத்தை தெளிவாக சொல்கிறார் (தேசம்நெற்காரர் புலி ஆதரவாளர்களிடம் சொல்வது போல்) ஒளிவு மறைவு வேண்டாம், பொருளாதார பிரச்சினை பொதுபிரச்சினை ஒன்றாக இருந்து பேசுவோம். குடிவரவு பிரச்சினை ஏற்கனவே புரையோடிப்போன பிரச்சினை அதை ஏற்றுக் கொண்டு பரிகாரம் தேடுவோம். அத்தோடு இந்த இரண்டு பெரிய கட்சிகளும் நாட்டை குட்டிச் சுவராக்கிவிட்டனர். நாட்டை என்னிடம் தாருங்கள், பரிகாரம் என்னிடம் உண்டு என்கிறார். மக்கள் குழம்பி போய்விட்டார்கள்.

13 வருடம் உண்மைதான், பிறவுன் என்ன செய்வார் பாவம். இந்த பிளயார் (Blair) அடித்துவிட்டு ஓடி (hit and run) விட்டார். ஆகவே படைகளை ஈராக்கில் இருந்தும், ஆப்கானிஸ்தானிலிருந்தும் இலகுவில் விலக்கிக்கொள்ள முடியாது. அதாவது ராணுவ செலவை கட்டுப்படுத்துவது என்பது யோசிக்கவே முடியாத விடயம். பிறவுனின் கெட்ட காலமோ என்னவோ உலக பொருளாதார சரிவு (economic downturn) வேறு. சின்ன, சின்ன நாடுகளை தூக்கி விடவேண்டாமா என்ன? உலக தலைமைத்துவ நாடுகளில் ஒன்றல்லவா யூ.கே. ஓபாமா கூட தனது எதிரி சீனாவிடம் கடன் வாங்கி அமெரிக்க பொருளாதாரத்தை சீர் செய்தார்தானே என்று மனுசன் கஸ்டப்பட்டு பல நாடுகளிடம் கடன்வாங்கி மற்ற நாடுகளையும் தூக்கிவிட்டு, தன் நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்செய்து வருகிறார். அப்புறம் ஏன் அவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது என்று மக்கள் யோசிக்கும் போதுதானே இந்த பத்திரிகைகள், குறிப்பாக கார்டியன் (Guardian), தி ஒப்சேவர் (The Observe ) என்பன நிக் க்லெக்குக்கு ஆதரவு கொடி காட்டிவிட்டார்கள்.

லிபரல் டெமொக்ரடிக் கட்சி மெது மெதுவாக வளர்ந்து வரும் கட்சி. இவர்களின் வளர்ச்சி பெடி அஸ்ட்ரோன் (Peddy Astron), சார்ல்ஸ் கெனடி ( Charles Kennedy ) ஆகியோரின் தலைமையில் மிகவும் உறுதியாக மேல் நோக்கிச் சென்றது. இப்போது அறுவடை காலம். நிக் க்லெக்கின் ராசிபலன் இலக்கம் 10ல் கண் வைத்துவிட்டார். இருந்தும் இலக்கம் 10 நிக் க்லெக்கு சற்று பெரியது.

அரசர் 2ம் சார்ல்ஸ்சின் (King Charles II) பரம்பரையில் வந்த நான் பிரதமர் பதவியை கை நழுவவிடுவதா? ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் (TULF போல) என்ன தவறு என்று நேரடியாக கேட்காவிட்டாலும் நாடு குட்டிச் சுவராகிவிட்டது. தொழிற்கட்சியே அதற்கு காரணம். ஐரோப்பிய ஒன்றியம் (European Union) எம்மை சகல வழிகளிலும் கட்டுப்படுத்துகிறது. நாம் என்ன யாருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களா? நாட்டில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களை குறைக்க வேண்டாமா? என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்கிறார் டேவிட் கமரொன். கடைசி 24 மணித்தியாலத்திலும் தூக்கமின்றி பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இருந்தும் இலக்கம் 10 கை நழுவியே செல்கிறது.

யார் யார் எது செய்தாலும் முடிவு பின்வருமாறு அமையுமென்றே எதிர்பார்க்கப்படுகின்றது. பழைமைவாத கட்சி முதலாவது இடத்துக்கும், இரண்டாம் மூன்றாம் இடங்களுக்கு முறையே லிப்.டெம், தொழிற்கட்சி தள்ளப்படும் அல்லது தொழிற்கட்சி இரண்டாம் இடதுக்கும், லிப்.டெம் மூன்றாம் இடத்துக்கும் இடம் மாறலாம். அல்லது இந்த ஒழுங்கு கூட மாற்றமடைந்தாலும் தாராளவாத ஜனநாயக கட்சியின் இணைவு இல்லாமல் யாரும் இம்முறை ஆட்சி அமைக்க முடியாது என்பதனால் இத் தேர்தலில் லிப். டெம் மிக முக்கியம் இடம் பெறுகிறது.

எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் பொது சேவைகளுக்கான செலவினங்கள் மிகவும் குறைக்கப்படும் என்பதாலும், வரிகள் அதிகரிக்கப்படும் சாத்தியம் மிக அதிகமாகக் காணப்படுவதாலும், நாடு இன்னுமொறு 4, 5 ஆண்டுகளுக்கு மந்த கதியிலேயே பொருளாதாரத்தில் மேல்நோக்கிச் செல்லும் என்பதாலும் இந்த இரண்டு பெரிய கட்சிகளின் கொள்கை விளக்கங்களுக்கு சற்று மாற்றமாக பேசும் லிப்.டெம் எதிவரும் அரசாங்கத்தை தீர்மானிக்கும் அளவுக்கு போதியளவு வாக்குகள் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அரச செலவீனங்கள் தொடர்பான நிக் க்லெக்கின் வாதம், ஆப்கானிஸ்தனில் இருக்கும் ஜக்கிய இராட்சிய படைகளை மீளப் பெறுவதின் மூலமும், ட்ரெய்டன் (Trident missile) அணு ஏவுகணை திட்டத்தை கைவிடுவதின் மூலமும் பெருந்தொகை பணத்தை மீதப்படுத்தலாம் என்பதாகும். அந்த பணத்தை தேசிய சுகாதார சேவைக்கும் (NHS ), கல்வி அபிவிருத்திக்கும் பயன்படுத்தலாம் என்பதும் க்லெக்கின் திடமான வாதாட்டம். அதேபோல் கறுப்பு பொருளாதாரத்திற்கு (black economy)காரணமாக இருக்கும் சட்டபூர்வமற்ற குடிவரவு (illegal immigrants) காரர்களை வெளியே கொண்டு வருவதன் மூலம் அவர்களை நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்ய ஏற்பாடு செய்வதும், இனிமேல் இந்த சட்ட விரோத குடியேற்றகாரர்களை கட்டுப்படுத்த சரியான திட்டமிடலை செய்ய இது பெரிதும் வழிவகுக்கும் என்பதுமாகும். இந்த வாதம் அனேகமாக வாக்காளர் மத்தியில் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளதை நாம் அலட்சியம் செய்து விட முடியாது. மனிதன் வெளிப்படையாக பேசுகிறார். ஆனால் “வெளிப்படையாக பேசல்” என்ற தன் கொள்கையில் விடாப்பிடியாக இருப்பாரா?, பேசுவதுடன் மாத்திரம் நின்று விடுவாரா? அல்லது செயல்வீரனாக திகழ்வாரா? என்பதுதான் அந்த கேள்விகள்.

நான் எந்த பேயுடனும் சேர்ந்து பணியாற்ற தயங்கமாட்டேன் என்று நிக் க்லெக் கூறினாலும், கொள்கை ரீதியில் பழைமைவாதிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முன்வரமாட்டார். பொதுவாக மாணவர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ள நிக் க்லெக் தொழிற்கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க தயார் நிலையில் உள்ளார். தொழிற்கட்சியும் வேறு தேர்வு இல்லாமல் அல்லது கொள்கை ரீதீயில் சற்று ஒத்துபோக கூடியவர்கள் என்ற ரீதியில் லிப்.டெம் உடன் சேர்ந்து ஆட்சி அமைக்க தீர்மானித்து விட்டனர்.

இருந்தும் இங்கே ஒரு அரசியல் விளையாட்டு நடைபெறவுள்ளதை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. அதாவது; தொழில் கட்சி மூன்றாம் இடத்தை பெற்று லிப்.டெம் முடன் சேர்ந்து அரசாங்கம் அமைக்க நேரிடும் பட்சத்தில், நிக் க்லெக்கின் முக்கிய மூன்று கோரிக்கைகள் 1. பிரதமர் பதவி, 2. நிதி மந்திரி பதவி (Chancellor of Exchequer), 3. வெளிநாட்டு அமைச்சு பதவி என்பன லிப்.டெம் முக்கு தரப்பட வேண்டும் என்பதாகும். தொழிற்கட்சி இரண்டாம் இடத்தை பெறும் போது நிக் க்லெக்கின் இரண்டு கோரிக்கைகள் 1. நிதி மந்திரி, 2. வெளி நாட்டலுவல்கள் அமைச்சு பதவிகள். இந்த கோரிக்கைகள்தான் தொழிற்கட்சிக்குள் பிரச்சினையை தோற்றுவிக்கப் போகிறது.

தொழிற்கட்சி மூன்றாமிடத்தை பெறும்போது, நிக் க்லெக்கின் கோரிக்கையை ஏற்று ஆட்சியில் தொடர்ந்தும் இருக்க கோர்டன் பிறவுனை வெளியேற்றவும் பலர் தயாராகவுள்ளனர். அவர்களில் மண்டெல்சன் பிரபு ( Lord Mandelson), உதவி பிரதமர் ஹரியட் ஹார்மன் (Harriet Harman ), நீதி அமைச்சர் ஜக் ஸ்ட்ரோ (Jack Strow ), வெளி நாட்டமைச்சர் டேவிட் மிலபண்ட் (David Milaband ) ஆகியோர் முக்கியமானவராவர். ஒரு வேளை க்லெக்கின் கோரிக்கை நிறைவேறலாம். அது அவர் கட்சி பெறும் ஆசனங்களைப் பொறுத்தது. அப்படியானால் கோர்டன் பிறவுனின் நிலை? அம்போ.

ஆனால் தொழிற்கட்சி முதலாம் அல்லது இரண்டாம் இடத்திற்கு வரும் போது, லிப்.டெம் முக்கு நிதிஅமைச்சு பதவி கொடுத்தாவது அக்கட்சியை தம்பக்கம் வைத்திருக்க வேண்டிய தேவை தொழிற்கட்சிக்குண்டு. அதைவிட அதிகம் எதிர்பார்ப்பது க்லெக்குக் ஆபத்தாக முடியாவிட்டாலும் லிப்.டெம் மின் நிலைமையை கஸ்டத்துக்குள்ளாக்கும் அபாயம் உள்ளது. இருந்தும் ஆளும்கட்சி ஆசனமா அல்லது எதிர்கட்சி ஆசனமா என்ற கேள்விக்கு முகம்கொடுக்க நேரிடும்போது தொழிற்கட்சி கோபத்துடனும், சலிப்புடனும் லிப்.டெம் மை அரவணைத்தே செல்லும். நிக் க்லெக் இந்த சந்தர்ப்பத்தை தவற விடமாட்டார் என்றே தெரிகிறது. எனவே பழைமைவாத கட்சி ஆட்சிக்கு வருவதை தவிர்க்கும் வகையில் தொழிற்கட்சி, லிப்.டெம் கூட்டணி தவிர்க்கப்படலாகாது. ஏற்பாடுகளும் அதை நோக்கியே போகின்றன.

ஆக தொழிற்கட்சிக்கு எப்படியாவது ஆட்சியை தக்கவைக்க வேண்டும், பழைமைவாத கட்சியை பொறுத்தவரை 13 வருடங்களுக்குப் பின்னும் ஆட்சியை கைப்பற்றவில்லை என்றால் அந்த கட்சியின் மீதான நம்பிக்கையீனம் அதிகரிக்கும், கமெரோனின் மாணவபருவ கனவு சுக்கு நூறாகிவிடும். ஆனால் க்லெக்குக்கோ தனது கோரிக்கைகளை எந்த அளவுக்கு அதிகமாக அடையலாம் என்பதை தவிர வேறு பிரச்சினைகள் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் அவர்தான் அடுத்த அரசாங்கத்தை தீர்மானிப்பவர் (king maker) .

யார் ஆட்சிக்கு வரினும் எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் கடினமானவை. ஆட்சியாளர்களுக்கு மாத்திரமல்ல, பொது மக்களுக்குமே. சமூகநல உதவியில் வாழ்வோர் இப்போதே தொழில் தேட ஆரம்பிக்க வேண்டும். பிரஜா உரிமை பெற விரும்புவோர் நல்ல பிள்ளைகளாய் இருக்கப் பழக வேண்டும். ஆங்கிலம் தெரியாதோர் பிரஜாவுரிமை பற்றி யோசிக்கத் தேவையே இல்லை. கிட்டடியில் ஓய்வூதியம் பெற யோசித்தோர் உடனடியாக யோசினையை மாற்றி 70 வயது வரையினும் மாரடிக்க வேண்டும். வரி செலுத்துவோர் வயிற்றை சற்று இறுக்கமாக கட்டிக்கொள்ள வேண்டும். மொத்தத்தில் எல்லோரும் சற்று அனுரிசத்து செல்லவேண்டும்.

ஐஸ்லாந்து, கிரீஸ் நிலைமைக்கு நாட்டை இட்டுச் செல்லாது ஏனைய ஐரோப்பிய நாடுகளுக் சமமாக யூ.கே யை கட்டி எழுப்பவேண்டியது அடுத்த கூட்டரசாங்கத்தின் பொறுப்பு மிக்க பணி. செய்வார்கள் என நம்புவோம்.

முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்.

மீண்டும் ஒரு தேர்தல்- மே 2010 : முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்

tgta.jpgஏப்ரல் 8ல் தானே இலங்கையில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது, பிறகு என்ன “மே தேர்தல்” என குழம்ப வேண்டாம். இது நம் நாட்டு தேர்தல் அல்ல, ஐ.இ (UK)தில் மே 6ல் நடக்கும் பொதுத் தேர்தலும் அல்ல. இது ஒரு விசித்திரமான தேர்தல். உலகத்தின் முக்கிய நகரங்களில் நடக்கவுள்ள தேர்தல், அதுவும் புலம் பெயர் இலங்கை தமிழர்களால் நடத்தப்படும் தேர்தல்.

மே 2ம் திகதி முக்கிய மூன்று கண்டங்களில், ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா வின் முக்கிய நகரங்களில் ஒரே நாளில் “தமிழ் புலி” (Tamil tigers)களின் ஆதரவாளர்கள் இலங்கையின் இறையாண்மையில் (Sovereignty) இருந்து பிரிந்து சென்று தனியான ஒரு ஆட்சியை இலங்கையின் வடக்கு, கிழக்கு இணைந்த பிரதேசத்தில் நிறுவி “தமிழ் ஈழம்” (Tamil Ealam) என்ற தனி இறைமை கொண்ட நாடொன்றை (State) பிறசவிப்பதே இத் தேர்தலின் நோக்கு.

இத் தேர்தலுக்கு “நாடு கடந்த தமிழீழ அரசு(Transnational government of Tamil Ealam)” சுக்கான தேர்தல் என்ற பெயரும் சூடப்பட்டுள்ளது. இந்த நா.க.த.அ சின் இணைப்பாளரான அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை/அமெரிக்க சட்டத்தரணி திரு. வி. உருத்திரகுமரனின் கூற்றுப்படி தமிழர் செறிந்து வாழும் புலம்பெயர் நாடுகளில் தேர்தல் மூலம் இலங்கை தமிழர்களால் தெரிவு செய்யப்படும் நபர்கள் (புலி ஆதரவாளர்கள்) தனித்தனியான குழுவாக, அதாவது நா.க.த.அ சின் அங்கமாக அந்தந்த நாடுகளில் செயல்பட்டு இறுதி இலக்கை அடைய (படாத) பாடுபடுவர்.

சர்வதேச சட்டத்தில் (International Law) இந்த நாடுகடந்த அரசை தஞ்ச அரசு (Government in Exile) என்றும் அழைப்பர். இந்த தஞ்ச அரசிற்கான சர்வதேச சட்டத்தின் வரைவிலக்கணம் பின்வருமாறு அமைகின்றது:

“இறைமையுள்ள நாட்டின் (அரசொன்றின்) அரசாங்கம் அந்நிய நாடொன்றின் இரானுவத்தால் பலாத்காரமாக பறிக்கப்பட்டு, அப்பிரதேசம் அந்நிய நாட்டின் ஆதிக்கதில் இருக்கும் போது அதிகாரம் இழந்த அரசாங்கம் மூன்றாம் நாடொன்றில், அந் நாட்டின் அனுசரணையுடன் தற்காலிகமாக ஒரு அரசாங்கத்தை நிறுவுவது” என்பதாகும்.

இந்த வரைவிலக்கணத்தை இலங்கையுடன், குறிப்பாக இலங்கையின் தமிழ் பிரதேசத்துடன் (வடக்கு, கிழக்கு) பொருத்தி பார்க்கும் போது இது முற்றும் பொருந்துவதாகவில்லை. ஏனெனில் இலங்கையின் வடக்கு, கிழக்கு இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குற்பட்டது. வடக்கு, கிழக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தனியான ஆட்சி ஒன்று நிலவவில்லை. இலங்கை ராணுவம் என்பது இலங்கையின் வடக்கையும், கிழக்கையும் உள்ளடக்கிய மொத்த ஆள்புல பிரதேசத்திற்கும் சொந்தமானது. இந்த ராணுவத்தை அந்நிய நாட்டு ராணுவமாக கருத முடியாது. இந்த மே 2 தேர்தலில் போட்டி இட்டு நா.க.த.அ சின் உறுப்பினராக வர இருப்போரும் பதவி இழக்கச் செய்யப்பட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் அல்லர். எனவே இந்த நா.க.த.அ என்பது ஒரு தஞ்ச அரசாங்கம் என்ற வரைவிலக்கணத்துக்குள் வரவில்லை. ஆகவே இந்த நா.க.த.அ என்பது சர்வதேச சட்டவரம்பில் ஒரு பரிசோதனை (Experiment) மட்டுமே. பரிசோதனை என்பதால் அது வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு 2:1, இருப்பினும் இன்றைய சர்வதேச அரசியல் போக்கிலும், நாட்டின் சமகால அரசியல் நிலைமையிலும் இது என்றும் வெற்றி பெற முடியாத ஒரு விடயமே. சுருங்கக் கூறின் ஒரு கனவு, அதுவும் பகற்கனவு.

இந்த நா.க.த.அ தேர்தலுக்காக ஐ. இரா (UK) தில் வெளியிடப்பட்டுள்ள விஞ்ஞாபனத்தில் முக்கியமாக இரண்டு விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. தமிழர்களுக்கான தனி நாடொன்றை மிக விரைவில் (மூன்று ஆண்டுக்குள்) அமைத்து தமிழரின் சுதந்திர வாழ்வை உறுதிபடுத்துதல், மற்றையது இனஅழிப்பு, போர்குற்றம் தொடர்பாக முக்கியமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவர் சகோதரர், பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லல் என்பவையாகும். இவை இரண்டும் நடந்தேறுவதற்கான அறிகுறி இப்போதைக்கு இல்லை என்பதை இந்த தேர்தல் வேட்பாளர்கள் வேண்டுமென்றே விளங்க மறுக்கின்றனர். இதை விடவும் ஐ.இரா வேட்பாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வேட்பாளர் ஒருபடி மேலே சென்று இந்த நோக்கம் நிறைவேறாத பட்சத்தில் மீண்டும் ஆயுத வழிக்குச் செல்வதை விட வேறு வழியில்லை என்றும் கூறியுள்ளார். ஆக இவர்கள் புலிகள் முடித்த இடத்திலிருந்து தொடங்க எத்தனிக்கின்றனர் எனலாம்.

நிற்க, தமிழர்களுக்குகான தனி நாடென்பது “வட்டுக்கோட்டை தீர்மான (VaddukKodai Resolution)” த்தின் அடிப்படையை கொண்டது. இந்த வட்டுக்கோட்டை தீர்மானமானது இலங்கையின் பல்லினத்துவ (Multi Ethnic) தன்மையை குறுக்கி அதை இருவின நாடாக காண முற்படுவது. அதாவது இலங்கையில் சிங்களவர், தமிழர் என்ற இரண்டு இனங்களே உள்ளனர் என்றும், இந்த இனங்களுக்கே அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் சுய நிர்ணய உரிமை (Right to self determination) உள்ளதாக சொல்லப்படுகின்றது. எனவே இலங்கையின் வடக்கும், கிழக்கும் சேர்ந்த தமிழரின் பூர்வீக நிலத்தில் தமக்கான தனி அரசை நிறுவ தமக்கு தார்மிக ரீதியிலான அரசியல் அதிகாரம் உள்ளதாகவும். அதை சிங்கள அரசு முற்றாக நிராகரிக்கிறது என்பதுமே இந்த வேற்பாளர்களின் ஒட்டுமொத்த அரசியல் ஞானமாகின்றது. இந்த அடிப்படையிலேயே தமது நா.க.த.அ சுக்கான கோரிக்கையை நியாயப்படுத்துகிறார்கள். இந்த நியாயப்படுத்தலை தான் சர்வதேசத்திடமும் கொண்டு செல்லவுமுள்ளார்கள்.

வட்டுக்கோட்டை தீர்மானம் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் பேசும் இன்னொரு தேசிய இனத்தால், அதாவது இலங்கை சோனகர்களால் (Sri Lankan Moors) நிராகரிக்கப்பட்டது. தமிழர் சொல்லும் பூர்வீக நிலம் என்ற பிரதேசத்தில் சோழனின் இலங்கை மீதான ஆக்கிரமிப்புக்கு முன்பே சோனகர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. எனவே அப்பிரதேசம் தமிழரைவிட சோனகர்களுக்கே அதிகம் உரித்துடையது. இந்த வகையில் இலங்கையின் கிழக்கு தொடர்பாக பேசும் போது அல்லது அது தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கும் போது இலங்கை சோனகர் புறந்தள்ளபட முடியாதுள்ளனர். எனவே அவர்களின் விருப்பு இல்லாமல் அந்த பிரதேசத்துக்கு அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் அதிகாரம் இல்லை. மேலும் இந்த இலங்கை சோனகர் தமிழர்களிடம் இருந்து பிரிந்து சென்று சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ எத்தனிக்கும் போது அத்தகைய சூழ்நிலையை எப்படி இந்த நா.க.த.அ எதிர்கொள்ளும் என்பது தொடர்பாக எந்த ஏற்பாடுகளும் இருப்பதாக தெரியவில்லை.

அத்துடன் புலி ஆதரவாளர்கள் இன்னும் 1970ம் ஆண்டின் சனத்தொகை கணிப்பின்படியே வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தமிழர் பெரும்பான்மை என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இது வரை 1.5 மில்லியன் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர் என்பதையோ, அவர்களில் சுமார் 20% மேலானோர் இலங்கை பிரஜா உரிமையை இழந்து விட்டனர் என்பதையோ, மீதமானோர் வெளிநாட்டு பிரஜா உரிமையை எதிர்பார்துள்ளனர் என்பதையோ இவர்கள் கணக்கில் எடுக்கத் தவறுகின்றனர். இதைவிடவும் 2010 ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பு தரவுகள் எவ்வாறு அமையும் என்பதையும் எதிர்வு கூறமுடியாதுள்ளனர். ஆகவே வடக்கிலும், கிழக்கிலும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) நடைபெறும்போது இந்த தனி நாட்டுக்கான கோரிக்கை கிழக்கு தமிழராலும், கிழக்கு சோனகராலும் தோற்கடிக்கப்படும் என்பதை இப்போதே அழுத்தம் திருத்தமாக சொல்லிவிடலாம். ஆக இந்த நா.க.த.அ யாருக்கு என்ற கேள்விற்கு முகங்கொடுக்க வேண்டியவர் இந்த வேற்பாளர்களே. இதை விடவும் இலங்கையின் கடந்த பொதுத் தேர்தலில் புலிகளுடன் ஒட்டி நின்று பிரிவினையை ஆதரித்த முக்கிய போட்டியாளர்கள் தோற்கடிக்கப் பட்டுள்ளதையும், இந்த நா.க.த.அ ஏற்பாட்டாளர்களுடன் அரசியல் ரீதியாக ஒத்து போகாத ஒருவகை மிதவாத தமிழர்களே மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளதையும் நாம் மறந்துவிட முடியாது.

இருந்த போதிலும் புலம் பெயர் நாடுகளில் வாழும் (புலி) தமிழர்கள் ஆகக் குறைந்தது இலங்கையில் வாழும் தமிழ் இனத்தின் விருப்பு வெறுப்புகளையோ, இந்த நா.க.த.அ தொடர்பான அவர்களின்அபிப்பிராயத்தையோ கருத்தில் எடுக்காமல் ஒருதலை பட்சமாக இந்த முடிவுக்கு சென்றுள்ளதென்பது நா.க.த.அ சுக்கான ஏற்பாட்டாளர்களின் அரசியல் மதியீனத்தையும், தமிழர்களின் இயல்பு வாழ்க்கையில் அக்கறை இல்லா தன்மையும், சர்வதேச அரசியல் நகர்வுகளை மதிப்பிட திராணியில்லா நிலையையும் தெளிவாக காட்டி நிற்கின்றது.

இந்த உத்தேச நா.க.த.அ க்கு மொத்தமாக 135 பிரதிநிதிகள் உலகளாவிய ரீதியில், இலங்கை நீங்கலாக, தெரிந்தெடுக்கப்படப் போகிறார்கள். இதில் 115 பேர் தேர்தல் மூலமும், 20 பேர் நியமன பிரதிநிதிகளாகவும் உள்வாங்கப்படுவர். ஐ.இ (UK) தில் போட்டியிடும் 38 பேரில் 25 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். நடைமுறையில் இந்த 135 பேரும் தமிழ் புலிகளின் மே18க்கு பின்னான முகவர்களே. புலிகள் காலால் இட்ட கட்டளையை தலையால் செய்து முடித்த அன்றைய த.தே.கூ (TNA) அங்கத்தவலும் பார்க்க இவர்கள் அரசியல் அதிகாரம் எதுவுமே இல்லாதவர்கள். இவர்களுக்கு இருக்கும் அதி கூடிய தகைமை, ஐ.இ (UK) நா.க.த.அரசுக்கான தேர்தல் வேற்பாளர்களின் ஒப்புதல்படி, 2009ம் ஆண்டு தை முதல் வைகாசி மாதம் வரை ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற அரச எதிர்ப்பு/புலி ஆதரவு ஊர்வலங்களில் கலந்து கொண்டமை. அதே நேரத்தில் இவர்களின் கல்வி தகைமையை பார்க்கும் போது ஆச்சரியப்படத்தக்க வகையில் அனேகமாக எல்லோரும் படித்தவர்கள். ஆனாலும் கனடாவில் போட்டியிடுவோரில் அனேகர் பண விவகாரங்களில் கறுப்பு புள்ளி பெற்றவர்களாம். இந்நிலையில் இவர்களின் தகைமை, தகுதி என்பவற்றில் கவனம் செலுத்துவதற்கு முன்பாக இந்த நா.க.த.அ சை நிறுவுவதற்கான சாத்தியபாட்டையும் அது சுதந்திரமாக வளர்ந்து செல்லும் சாத்தியத்தையும் (Viability) பார்த்தால் அது ஆரம்பிக்கும் வேகத்திலேயே அதன் முடிவையும் சந்திக்கும் என்பதை எதிர்வு கூர்வதில் சிரமம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

ஆக, இந்த நா.க.த.அ என்பது ஒரு பொழுது போக்குக்கான விடயம், புலம்பெயர் அப்பாவி தமிழர் இந்த கனவரசின் நடைமுறை செலவினத்தை பொறுப்பேற்க நிர்ப்பந்திக்கப்படுவர். புலம்பெயர் நாட்டின் தேசிய அரசியலில் இருந்து தமிழர்கள் அப்புறப்படுத்தப்படுவர். சர்வதேச ரீதியில் தமிழர் பிரச்சினைக்குரியவர் என்ற நிரந்தர பட்டத்தையும் பெறுவர். எஜமானார்களோ இலங்கையின் முன்னைய புலித் தலைவர்கள் போல் தம் சொந்த வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருப்பர். ஆகவே இந்த அரசியல் நகர்வு என்பது தமிழ் அரசியலில் அத்தியாயம் 2. புத்தியுள்ள தமிழர் இதை எதிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் அமைதியாக இதை நிராகரித்து மீதமுள்ள தமிழரை காத்தல் வேண்டும். இது தமிழர்களின் தார்மீக அரசியல் பணி.

நன்றி, Mohamed SR. Nisthar.(from London)

ஷரியா(Shari’ah) சட்டம்: பாண் திருடிய சிறுவனின் கை சிதைப்பு! – Mohamed S R Nisthar

Shariah_Law_IranShariah_Law_Iranமேலே உள்ள படங்கள் என் நண்பனால் அனுப்பி வைக்கப்பட்டன. “அரசியலும் சமயமும்” என்ற கட்டுரையில் சமயங்களின் நன் நோக்கங்கள் பற்றி நீதானே எழுதி இருந்தாய், பார்த்தாயா சமயங்களின் சமுக முன்னேற்ற செயற்பாடுகளை என்று என்னைப் பார்த்து அந்த படங்கள் நக்கலாக (sarcastic) கேட்பது போல் தோன்றியது.

ஈரானில் நடந்தாக கூறப்படும் ஒரு சம்பவம் அதற்கு ஆங்கிலத்துடன் ஹிப்ரு மொழியிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால் இது ஈரானுக்கும், இஸ்ரவேலுக்குமான பனிப்போர் என்று இதை விட்டுவிடவும் முடியாதுள்ளது. அதேநேரம் இந்த படங்களின் உண்மை தன்மையை(veracity) அறிவதன் மூலமோ, அல்லது புகைப்பட நிபுணத்துவ யோசனை (expert opinion) பெறுவதன் மூலமோ இந்த படங்களின் ஊடாக சம்பந்தப்பட்டோர் சொல்லவந்த விடயம் என்னவென்றும் அறியமுடியாது.

இருப்பினும் அந்த படங்களின் விளக்கத்தையும் எழுப்பப்படும் கேள்வியையும் பார்க்கும் போது அதாவது “in the name of Islam he is being punished”, “ Is this religion of peace and love” இது ஒரு சமயத்தை குறி வைத்து, அந்த சமயம் மனித விழுமியங்களுக்கு எதிரான விடயங்களை போதிப்பதாகவும், எனவே அந்த சமயத்தை பின்பற்றுவோர் பயங்கரவாத சுபாவம் கொண்டோர் என்ற முடிவு நோக்கி மனித சமூகத்தை நிர்ப்பந்திக்கின்றது போலவும் தோன்றுகிறது.

இதுவரை தொலைகாட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவராத இந்த புகைப்படங்களின் பின்னணி இத்தகைய உள் நோக்குத்தான் என்றால், தற்போது திரையரங்குகளில் காண்பிக்கப்படும் “My name is Khan” என்ற திரைப்படம் இந்த புகைப் படங்களுக்கு நல்லதொரு பதிலாகும். ஆனாலும் இந்த புகைப் படங்கள் என் நண்பன் போன்ற பல்லாயிரக்கணக்கானோரின் மனதில் ஷரியா சட்டம் பற்றிய தப்பபிராயம் ஆழ்ப்பதியக்கூடிய ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் இதை சற்று ஆழமாக ஆராய்வதன் மூலம் இந்த படங்கள் அடிப்படையில் எதை கேள்விக்குற்படுத்துகிறதோ அதன் தர்க்க நியாயங்களை நாம் அறிய வழி வகுக்கும் என நம்புகிறேன்.

இந்த வகையில் 8 வயது பாண் திருடனின் கை சிதைப்பு என்ற குற்றச்சாட்டு இஸ்லாமிய மார்க்க சட்ட (ஷரியா)த்துடன் நேரடி சம்பந்தப்பட்டது. ஆகவே இந்த ஷரியா சட்டமானது கை, கால் வெட்டல், தலை தவிர முழு உடலையும் நிலத்துக்குள் புதைத்து கல்லால் அடித்து கொல்லுதல், வெறும் மேனியுடன் கசையடிக்கு உட்படுத்துதல், சிறை பிடிக்கப்பட்டோரின் அல்லது பணயம் வைக்கப்படோரின் தலை கொய்தல் போன்ற வெறும் தண்டனை கொடுக்கும் முறை என்ற கருத்து நிலவுவதை நாம் மறுப்பதற்கில்லை.

ஷரியா என்பது அடிப்படையில் கடவுளுக்கும் மனிதனுக்குமான தொடர்பை வரையறுப்பது. அதன் அடுத்த கட்டம் மனிதர்களுக்கிடையிலான தொடர்பு ஆதாவது திருமணம், குழந்தைகள் விவகாரம், விவாகரத்து, வணிகம், குற்றமும் தண்டனையும், நல்லாட்சி, சர்வதேச தொடர்புகள், யுத்தமும் சமாதானமும், மரணம், வாரிசுரிமை என்ற முற்றுப் பெறாத பட்டியலை கொண்டிருந்த போதிலும், இந்த ஷரியா சட்டம் முற்றும் முழுதாக அமுலில் இல்லாத நிலையிலும் இஸ்லாமியர்கள் இதில் சிலதை தெரிந்தெடுத்தும், சிலதை கைவிட்டு( pick and choose) இருப்பதும், பல சமூகங்களின் கலாச்சார தாக்கங்கள் இந்த சட்டத்துக்குள் சத்தமின்றி புகுந்துள்ள நிலைமையும் ஷரியா சட்டத்தின் மூலங்களையே(source) கேள்விக்குற்படுத்துவதாக அமைந்து விடுகின்றது.

ஷரியாசட்டத்தின் மூலம் என்பது:
1) புனித குர்-ஆன்( Holy Qur’an)

2) ஹதீத் ( Hadith -இறுதி இறை தூதர் முஹம்மது அவர்களின் சொல்லும், செயலும்) அதாவது, இறை தூதர்(நபி/ prophet) முஹம்மது அவர்களின் குர் ஆனை அடியொட்டிய நம்பிக்கை, அந்த நம்பிக்கையை பிரதிபலிக்கும் அவரின் சொல், செயல் என்பவற்றை சுட்டுவதாகும். இவரின் 63 கால உலக வாழ்வில் குறிப்பாக 23 வருட இறை தூதத்துவ (prophet hood)வாழ்வில் குர் ஆனின் போதனைகள் முற்றிலும் இவர் வாழ்வில் பரிட்சிக்கப்பட்டு வரம்பு நிர்ணயிக்கப்பட்டதற்கான சாட்சியமாகவே இதை கொள்ள வேண்டியுள்ளது.

மேலும் எல்லாம் வல்ல, எல்லாம் நல்ல, எல்லாம் அறிந்த தன்மைகள் இறைவனின் குணாம்சங்களாக(characters) இருப்பதால் இறைவனால் அருளப்பட்ட இந்த ஷரியா சட்டம் முழுமை பெற்றது. இது மாறாத்தன்மை கொண்டது. இதில் அகல்தல்(repeal) சேர்த்தல் (addition) என்பதற்கு இடமில்லை. ஏனெனில் இறைவாக்கு என்பது கால, நேர, இடங்களுக்கு அப்பாற்பட்டது. எக்காலத்துக்கும் எவ்விடத்துக்கும் பொருத்தமானது.

இருந்த போதிலும் இந்த படங்கள் குறிப்பாக ஒரு குற்றச்சாட்டையும் அதற்கான தண்டனையின் தன்மையையும் விமர்சிப்பதனால், ஷரியா சட்டத்தில் “குற்றமும், தண்டனையும்” என்ற விடயத்தை மாத்திரம் இங்கு பார்ப்பது மிக பொருத்தமாக அமையும் என நம்புகிறேன்.

இந்த அடிப்படையில் ஷரியா சட்டம் என்பதன் நோக்கம் “சமூகத்தை பாதுகாத்தல்” என்பதனால் வரம்பு மீறிய சுதந்திரம் (unlimited freedom), தனி மனிதத்துவம் (individualism), பொருள் முதல் வாதம் (materialism) என்பன இங்கு முதன்மை பெற இடமில்லை. இதை அடிப்படையாக கொண்டே விழுமியங்களும், அதை நடைமுறைபடுத்த விதிகளும், விதிகள் மீறப்படும் போது அதற்கு தண்டனையும் வழங்கப்படுகின்றது.

சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் முதலில் அதன் அங்கமான தனிமனிதன் பாதுகாக்கப்பட வேண்டும். தனி மனிதனின் பாதுகாப்பு என்பது முதலில் அவனின் மனம் (mind) பாதுகாக்கப்படல் என்பதில் தங்கியுள்ளது. ஆகவேதான் ஒழுக்க கல்வி ஆணுக்கும், பெண்ணுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தாற் போல் சமத்துவ சமூக (just society) அமைப்பு அவசியமாகின்றது. அதற்குப் பிறகு நல்லாச்சியின் (good governance) தேவை அவசியமாகின்றது. அடுத்த நிலையில் குற்றம் சாட்டுவோரின் அதி கூடிய சாட்சிய பொறுப்பு (high evidential burden) தேவைப்படுகின்றது. இதன் மூலம் சட்ட துஸ்பிரயோகம் (miscarriage of justice) தவிர்க்கப்பட வற்புறுதப்படுகின்றது. அடுத்தாற் போல் அளிக்கப்படும் தண்டனை நிருபிக்கப்பட்ட குற்றத்துக்கு சமமானதாக (proportion) இருப்பது ஒரு மீற முடியாத நிபந்தனையாகவுள்ளது. இறுதியாக தண்டனை என்பது மற்றோரை குற்றம் செய்யாமல் தடுக்கும் (deterrent) விதத்திலும் அமைதல் வேண்டும் என்பதும் கவணத்தில் கொள்ளப்பட வேண்டிய தேவையும் உள்ளது. எனவே மேலே சொன்னவை சாத்தியமில்லாத நிலையில் அளிக்கப்படும் தீர்ப்பு (judgment/verdict) ஷரியா சட்டமாக கொள்ள முடியாது.

எனவே இந்த பாண் விவகாரத்துக்கான தண்டனை மேல் சொன்ன வடிகட்டல் (scrutinizing) முறையின் ஊடாக பெறப்பட்டதா என்ற கேள்வி இயல்பாக எழுவதை தடுக்க முடியாதுள்ளது. இதை விடவும் குற்றம் இழைக்கப்பட்டவர் விரும்பின் குற்றம் செய்தவரை சுயமாக மன்னிக்கவும் அல்லது நட்டஈடு பெற்றுக் கொண்டு மன்னிப்பளிக்கவும் ஷரியா சட்டத்தில் இடமுண்டு. இப்படி செய்ய பாண் வியாபாரி முன்வரவில்லையா என்ற கேள்வியும் தொடர்ந்தே வருகின்றது.

கொலை வழக்குகளில் கூட நட்டஈடு/பாவபணம் (blood money) செலுத்தி கொலைகாரர் மன்னிப்பு பெற்ற சம்பவங்கள் ஈரானிலும் நடந்துள்ளன. ஆகவே இந்த பாண் திருட்டு சம்பவத்தில் பாண் வியாபாரிக்கு நட்டஈடு கொடுத்து சிறுவனை காக்க அந்த சமூகம் முன்வரவில்லையா என்ற கேள்வியை என்னால் அலட்சியம் செய்ய முடியவில்லை.

அதையும் விட மூளை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் முன்னேற்றம் அடைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் குற்றச் செயல்களை தூண்டும் gene சிலருக்கு பிறப்பில் இருந்தே இருந்து வருவதாக சொல்லப்படுவதால், இத்தகைய களவுகளுக்கு இந்த ஜீன்னின் பங்களிப்பு என்ன என்பதும் கட்டாயமாக ஆராயப்பட வேண்டும். இந்த “ஒப்பு உவமை” (comparative exercise) செய்யும் முறையையும் தீர்ப்பளிப்போர் அறிந்திருக்கவேண்டும் என்பது ஷரியா சட்டத்தின் இன்னுமொரு அம்சம்.

எனவே இந்த படங்கள் உண்மையானவை என்றும் அதனடிப்படையில் இத்தீர்ப்பு பிழையென்று கொள்வோமாயின், தீர்ப்பளிப்போருக்கான பின்பற்றல் விதி முறையில் ஏதும் பிழை (procedural error) ஏற்பட்டிருக்கலாமே தவிர அல்லது அப்படியான சந்தர்பங்களில் தீர்ப்புக்கு எதிராக மேன்முறைஈடு (appeal) செய்ய வேண்டுமே தவிர ஷரியா சட்டம் பிழையானது என்ற கூற்று தண்டனை பெற்றவருக்கான பரிகாரமாகாது.

அரசியலும் சமயமும்: நிஸ்தார் எஸ் ஆர் எம்

Religion & Politicsஅரசியலுடன் சமயத்தை கலத்தலாகாது. இது நான் போடும் கட்டளையல்ல, மாறாக பெரும்பான்மை பொதுமக்கள் தொடக்கம் சமயவாதிகள் ஈறாக அரசியல்வாதிகள் வரை அடித்து சொல்லும் விடயம். இதன் தர்க்க நியாயங்களை சீர்தூக்கிப் பார்க்காமல் ஆம் அரசியலுடன் சமயம் கலக்கவே கூடாது என்று தேசம்நெற் பின்னூட்டகாரர் சிலர் காட்டமாக சொல்வதால் இவை இரண்டுடனும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டுள்ள நம்மில் அனேகர், பின்னூட்டகாரர்களும் உள்ளடங்களாக, இதில் எதை தீண்டதகாத விடயமாக கருதுகின்றனர்? அல்லது இவை இரண்டும் சேர்வதால் நாம் இழக்கப்போகும் நன்மைகள் எவை என்பதை அவர்களிடமிருந்து அறிய நாம் ஆர்வமாய் இருக்கிறோம். அதற்கு களமமைப்பதே இக்கட்டுரையின் உள்நோக்கு. அதற்கு முன் இந்த சமய விடயத்துடன் ஆத்மீகத்தை (spirituality) கலந்து குழப்பிவிட வேண்டாம் என்பதோடு இதை ஒரு சமய பிரச்சாரமாகவும் அர்த்தப்படுத்த வேண்டாம் என்றும் பணிவாய் வேண்டுகிறேன்.

அல்லாஹ¤ அக்பர் (இறைவனே அதி உயர்ந்தவன்) என்ற அடிப்படையில் அரசியல் செய்யும் பின்லாடனுக்கும் (Bin Ladan), அரசியல் வேறு சமயம் வேறு என்று கூறும் பிளயர் (Blair) கூட்டணி, அதே கருத்து கொண்ட புஸ் (Bush) கூட்டணி என்போர் செய்த அல்லது அதே பாணியில் நிகழும் ஐரோப்பிய, அமெரிக்க அரசியலுக்கும் என்ன வேறுபாடு என்று பார்த்தால் ஒன்றுமில்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது.

இன்று நம்மிடையே காணப்படும் எந்த சமயமும் இயற்கை நீதிக்கும், ஒழுக்க விதிகளுக்கும், மனித குலத்தின் ஒட்டுமொத்த நன்மைக்கும் எதிரான கருத்தெதையும் போதிக்கவில்லை. மாறாக அன்பையும், நீதியையும், சக வாழ்வையும், ஒழுக்கத்தையும், உலக சமாதானத்தையுமே போதிக்கின்றன. இந்த அடிப்படை தன்மைகளே ஒரு அரசாங்கத்தின் நிகழ்சி நிரலிலும் காணப்பட வேண்டும் என ஆளப்படுவோர் விரும்பின் இந்த அரசியலும், சமயமும் சேர்ந்து செயல்படும் பட்சத்தில் அந்த அடிப்படை தன்மைகள் அடையப்பட முடியாது என்று கூறுவதின் தர்க்கம் புரிந்து கொள்வதற்கு கடினமாக உள்ளது.

கொலை, கொள்ளை, சூது, குடி என்று சராசரி அறிவுள்ள மனிதனும் வெறுக்கும் செயல்களுடன் மண், பெண், பொன்னாசை என்பவையும் எந்த சமயத்தாலும் ஊக்குவிக்கப்படவில்லை என்பதோடு அபரிமித இலாபம், வட்டி சுரண்டல் என்ற முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படைகளையும் இந்த சமயங்கள் நிராகரிக்கின்றன. அதேநேரம் சமயம் கலக்காத அரசியல் எந்தெந்த நாடுகளில் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் மேற்சொன்னவை சர்வசாதாரணமாக காணப்படுவதை நாம் மறந்துவிட முடியாது. உதாரணமாக சமயமும் அரசியலும் கலக்காத தூய்மையான அரசியல் நடப்பதாக கூறும் பிரித்தானியாவில், பரந்துபட்ட ஐரோப்பாவில், அமெரிக்காவில் சுபர் கசினோ, சூதாட்ட கிராமங்கள்( Las Vegas style villages), சட்ட ரீதியான, சட்ட ரீதியற்ற காம வியாபார(Sex industry ) நிலையங்கள், 12-13 வயது குழந்தைகள் வயிற்றில் குழந்தைகளை சுமக்கும் காட்சிகள், ஒரு நிமிடத்துக்கு பல கொலைகள், கற்பழிப்புகள், போதை பொருள் பாவிப்பால் உடல், உள விருத்தி குறுகி சமூகத்துக்கு பாரமாக காணப்படும் இளைஞர் கூட்டம் என்று மனித நாகரீகத்துக்கு ஒவ்வாத காட்சிகள் இந் நாடுகளில் காணப்படுவதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. ஒப்பீட்டு ரீதியில் இத்தகைய காட்சிகள் சமயம் கலந்த அரசியல் நடைபெறும் நாடுகளில் காணமுடியாது என்பதையும் நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாதுள்ளது.

ஆக, கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முற்பட்ட மனிதனுக்கும் நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக சொல்லும் இன்றைய மனிதனிக்கும் அவன் செயல் தொடர்பாக அதிகம் வித்தியாசம் காணப்படவில்லை. ஆகவே இந்த நிலைமை சமயமும் அரசியலும் கலந்ததாலா அல்லது அரசியலுடன் சமயம் கலக்காததாலா என்பது புரிவதற்கு கஸ்டமான விடயமுமில்லை.

ஜீவ காருண்யம் போதிக்கும் பௌத்தம் சரியாக பின்பற்றப் பட்டிருந்திருந்தால் இலங்கை ஒரு கொலை களமாக மாறியிருக்குமா?, அன்பே சிவன் என்று பிரபாகரன் சொல்லியிருந்திருந்தால் முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்டோர் எல்லாம் எம்முடன் இன்றும் இருக்கமாட்டாரா?, தற்காப்பு போரிலும் பயங்கரவாதம் தடை செய்யப்பட்டுள்ளதே தன் சமயத்தில் என்று பின்லாடன் யோசித்திருந்தால் இரட்டை கோபுரத்தில் 3000 அப்பாவிகள் உயிரிழந்திருக்க மாட்டார்களே. சமயத்துக்கும் சுரங்கப்பாதை ரயில்களுக்கும் சம்பந்தமே இல்லையே என்று சமயத்தை பிழையாக விளங்கிய இளைஞர் சற்று யோசித்திருக்க 07/07 நடந்து இருக்காதல்லவா? கிறிஸ்தவ விழுமியங்களை பிரித்தானிய அரசு என்றும் கைவிடாது என்று அடிக்கடி கூறும் பிளயார் பெரிய வெள்ளி உடன்படிக்கை ( Good Friday Agreement ) க்கு பதிலாக பிரித்தானிய படைகளை வட அயர்லாந்தில் இருந்து வாபஸ்பெற உடன்பட்டிருக்கலாமே. ஏன் பிளயாரின் நில ஆக்கிரமிப்புக்கு கிறிஸ்தவம் வழி வகுத்ததா? அரசியலுடன் சமயம் கலக்க அனுமதிக்க முடியுமாயின் அதன் அளவு என்ன? அல்லது அப்படி ஒரு அளவுகோல் உண்டா? எனவே பிரச்சினை சமயங்களில் இல்லாதது போலவும், தான் சமயவாதி என்பவனில் அல்லது தான் சமயவாதியல்ல என்பவனில் தான் ஏதோ பிரச்சினை இருப்பது போலவும் அல்லவா தெரிகின்றது.

சரி சமயம் இல்லாத அரசியலே சரியானது என்போரெல்லாம் என்ன நாஸ்திகவாதிகளா? இந்த ஐக்கிய ராச்சியத்தில் அரசியல்வாதிகள் பொதுவாக சொல்வது கடவுள் அரசியை காப்பாராக (God bless the Queen) என்பதுதானே. அமெரிக்கர் எதற்கெடுத்தாலும் கடவுள் அமெரிக்காவை காப்பாராக (God bless America)என்று தானே கூறுகின்றனர். இங்கெல்லாம் ஏன் கடவுளின் துணை தேவைப்படுகிறது?, இவர்களின் பதவி பிரமாணங்கள் எல்லாம் ஒரு கையில் பைபிளுடன் தானே செய்யப்படுகின்றது. இதையும் விட கடவுளின் ஆணையின் பேரிலேயே ஈராக்கின் மீது படை எடுத்ததாக புஸ் கூறினார். மேல் சொன்ன நாடுகளில் அரசியலுடன் சமயம் கலந்துள்ளதா, இல்லையா? சதாம் ஹ¤செய்ன் அரசியலுக்காக தூக்கிலே தொங்கி உயிர் பிரியும் கடைசி கணத்தில் மிக சத்தமாக கூறியது என்ன, இறைவன் அதியுயர்ந்தவன் (அல்லாஹ¤ அக்பர்) என்பதுதானே. இது அமெரிக்காவுக்கு அடிபணியமாட்டேன், மண்டியிடமாட்டேன் என்ற அரசியலா அல்லது உயிருடன் இருக்கும் போது சமயம் வெறுக்கும் அத்தனையையும் செய்துவிட்டு, உயிர் போகும் நேரத்தில் யாரும் உதவிக்கு இல்லையே என்ற சமய சாயம் பூசப்பட்ட அவலக்குரலா?

குற்றம் செய்தால் தண்டனையும், நன்னடத்தைக்கு சன்மானமும் என்பதுதான் இயற்கை நீதியின் (Natural Law) அடிப்படை. இந்த அடிப்படையில் அரபு நாடுகளில் பாரிய குற்றம் செய்தோருக்கு பகிரங்க மரண தண்டனை நிறைவேற்றப் படுகின்றன. தண்டனை என்பது குற்றம் புரிந்தவரை தண்டனைக்குட்படுத்துவது மாத்திரமல்ல, அது மற்றவரை குற்றம் செய்யாமல் தடுக்கவும் (Deterrent) வேண்டும் என்பது தண்டனை சட்டங்களின் (Penal Code)அடிப்படை. ஆனால் இந்த பகிரங்க மரணதண்டனை மனித நாகரீகத்துக்கு ஒவ்வாது என மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூப்பாடு போட அமெரிக்காவின் அனேக மாநிலங்களில் இந்த மரணதண்டனை சிறைச்சாலைகளில் தினம் தினம் நிறைவேற்றப்படுவதை இந்த நாடுகள் அனேகமாக கண்டுகொள்வதில்லை. பகிரங்க தண்டனை என்னைப் பொறுத்தவரை மற்றோரை குற்றம் செய்வதிலிருந்து தடுக்கும் ஒரு சாதகமான முறை. சரி அப்படி இல்லாவிட்டாலும் கூட இந்த இரண்டு முறைக்கும் அடிப்படை வித்தியாசம் என்ன? குற்றத்துக்கு தண்டனை என்பதுதானே.

” சமயம்/மதம் ஒரு அபின்” என்று கார்ல் மார்க்ஸ் சொல்லிவிட்டார் என்பதற்காக மனித வாழ்வின் ஒரு அம்சமான அரசியல், பொருளாதார முன்னேற்றத்துக்கு சமயத்தை வெறுத்தே ஆகவேண்டும் என்று வாதிடுவது, புலிகளின் பயங்கரவாத்தை கணக்கில் எடுத்து ஒடுக்கப்பட்டோர் புரட்சி வழியை திரும்பி பார்க்கவே கூடாது என்பது போல் இல்லையா? கார்ல் மார்க்ஸ் ஏன் சமயத்தை ஓரங்கட்டினார் என்பதை எப்போதாவது கேள்விற்குற்படுத்தினோமா?
அவரின் குடும்பம் கிறிஸ்தவ பாரம்பரியம் கொண்டது. அவரின் குடும்பத்தில் பாதிரியார்களும் இருந்தனர்(?) என்று கூறப்படுகின்றது. அவர் வாழ்ந்த காலத்தில் ஜேர்மனியிலே கிறிஸ்தவம் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியது என்பதை நாம் ஏன் ஆய்வுக்குட்படுத்தவில்லை? கிறிஸ்தவத்திற்கப்பால் கார்ல் மார்க்ஸ் என்னென்ன சமயங்களில் பரிச்சயம் உள்ளவர் என்பதை யாராவது கூற முடியுமா? அவரின் சமயம் சம்பந்தமான பார்வை கிறிஸ்தவத்துடனான அவரின் அனுபவத்துடன் மாத்திரம் எல்லை இடப்படவில்லை என்று யாராலும் நிருபிக்க முடியுமா? அல்லது மனித சமுதாயத்தின் முழு அபிவிருத்தியும், முன்னேற்றமும் வெறுமனே இந்த அரசியல், பொருளாதார முன்னேற்றத்துடன் குறுகிக்கொள்ள வேண்டுமா? மனிதனுடன் மனம், ஆத்மா என்ற அம்சங்கள் உள்ளதையும் அரசியல், பொருளாதார அபிவிருத்தியை அடையும் போது அது மனத்தினதும், ஆத்மாவினதும் முழு அபிவிருத்தியும் அடைந்ததுக்கு சமம் என்றாகிவிடுமா? இல்லை என்றால் மனம், ஆத்மா என்பவற்றின் அபிவிருத்தி பற்றி நாம் கவலைபட வேண்டிய அவசியமே இல்லையா? இல்லை அது அவசியம் என்றால் அதை சமயத்தால் நிறைவேற்ற முடியாதா? முடியாது என்றால் அது எதனால் சாத்தியப்படும் என்று சொல்ல முடியுமா?

இந்த இரண்டு விடயங்களிலும் அங்கமாக இருக்கும் மனிதனுக்கு இந்த இரண்டுக்குமான பிரிகோடு இதுதான் என்று திட்டவட்டமாக சொல்லமுடியாத அளவுக்கு ஆற்றல் இல்லாத போது தன் நலன் சார்ந்த நிலையிலேயே அரசியலையும் சமயத்தையும் பிரித்துவைத்து குழப்பம் விளைவிக்க முனைகின்றான் மனிதன் என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது. இந்த தன்மை விரிவடைந்து ஒரு தேசியத்தின் நலன் மற்றைய தேசியத்தை விட மேம்பட்டதாக கருதப்படுகிறது. ஒரு வர்க்கத்தின் நலன் மற்றைய வர்க்கத்தின் நலனை விட விசேடமாக பேசப்படுகின்றது. ஒரு நாட்டின் நலன் இன்னொரு நாட்டின் நலனிலும் மேலாக சொல்லப்படுகின்றது. ஆக சமயத்தை ஒரு ஆக்க சக்தியாக பார்க்க, அப்படி அதை செயற்படவைக்கத் தெரியாத மனிதன் அல்லது விரும்பாத மனிதன் பிரிந்திருக்கச் சொல்கிறான், பிரித்து வைக்கின்றான் என்பதற்காக நாம் அப்படியாகிவிட முடியாது என்பது என் நிலைப்பாடு.