August

August

அமெரிக்காவில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா – எதிர்க்கும் வட அமெரிக்கா இந்துகள் கூட்டணி !

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டமன்றத்தில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்து. சாதி பாகுபாட்டை எதிர்த்து மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சமூகங்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த இந்த சட்ட மசோதா உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மசோதா அம்மாநில கவர்னர் கவின் நியூசோமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும், சட்டமாக்கப்படும். மசோதா நிறைவேற்றியதன் மூலம், சாதி பாகுபாடு எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றிய முதல் அமெரிக்க மாநிலம் என்ற பெருமையை கலிபோர்னியா பெற்றுள்ளது. உறுப்பினர் ஆயிஷா வஹாப் அறிமுகப்படுத்திய இந்த மசோதாவிற்கு ஏராளமான சாதி சமத்துவ மக்கள் உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன.

 

எஸ்.பி.403 சட்ட மசோதாவிற்கு ஆதரவு அளித்த அனைத்து உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்த வஹாப், நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பாகுபாட்டில் இருந்து மக்களை பாதுகாக்கிறோம் என்றார். அதேவேளையில் வட அமெரிக்கா இந்துகள் கூட்டணி (CoHNA) கலிபோர்னியா வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள் எனக் குறிப்பிட்டுள்ளது.

பள்ளிகளில் முஸ்லிம் சிறுமிகள் ‘அபாயா’ ஆடையை அணியத் தடை – பிரான்சில் புதிய கட்டுப்பாடு !

பிரான்ஸ் பள்ளிகளில் முஸ்லிம் சிறுமிகள் ‘அபாயா’ எனப்படும் முழு அங்கி ஆடையை அணியத் தடை விதிக்கப்படும். அரசுப் பள்ளிக்கூடங்களில் இந்தக் கட்டுப்பாடு அமுலுக்குக் கொண்டுவரப்படும்” என்று பிரான்ஸ் நாட்டின் கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டால் தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது அந்நாட்டில் விவாதப் பொருளாகியுள்ளது.

 

பிரான்ஸ் நாட்டில் அரசுப் பள்ளிகளில் எந்தவித மத அடையாளங்களுடன் மாணவர்கள் வரக் கூடாது என்பது சட்டமாக உள்ளது. அதன்படி பெரிய அளவிலான சிலுவைகள், யூதர்களின் கிப்பாஸ், முஸ்லிம்கள் பயன்படுத்தும் தலையை மறைக்கும் முக்காடு என எதுவும் அனுமதிக்கப்படுவதுல்லை. இந்நிலையில், இஸ்லாமிய சிறுபான்மையினச் சிறுமியர் அணியும் அபயா எனப்படும் முழு அங்கியை அச்சமூக சிறுமிகள் அரசுப் பள்ளிக்கு அணிந்துவர தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

 

முன்னதாக, கடந்த 2004-ல் பள்ளிகளில் தலைக்கு மட்டும் அணியப்படும் முக்காடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. 2010-ல் முகத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பிரான்ஸின் 50 லட்சம் முஸ்லிம்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இந்தச் சூழலில் அபயாவுக்கு தடை விதிப்பது தொடர்பாக அந்நாட்டு கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டால் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “அபயா எனப்படும் முழு அங்கியை இனிமேல் பள்ளிச் சிறுமிகள் அணிந்துவர அனுமதிக்கப் போவதில்லை. ஒரு குழந்தை பள்ளி வகுப்பறைக்குள் நுழையும்போது அதன் புறத்தோற்றத்தைக் கொண்டு குழந்தையின் மதத்தை கண்டுபிடிக்கும்படி அவர்கள் ஆடை, அணிகலன்கள் இருக்கக் கூடாது” என்றார். ஏற்கெனவே பிரான்ஸில் பெண்கள் ஹிஜாப் அணியத் தடையிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 

இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள பிரான்ஸ் நாட்டின் முஸ்லிம் சிறுபான்மையின அமைப்புகளின் கூட்டமைப்பான தி பிரென்ச் கவுன்சில் ஆஃப் முஸ்லிம் ஃபெயித், ஆடை மட்டுமே மத அடையாளம் ஆகிவிடாது. ஆகையால் அபயா தடை ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள சூழலில் அந்நாட்டு கல்வி அமைச்சரின் இந்த புதிய கெடுபிடி பலதரப்பு மக்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் அதிருப்தியில் உள்ளனர்.

EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக கொழும்பில் போராட்டம் – குவிக்கப்பட்ட பாதுகாப்பு படை !

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (28) இந்த போராட்டம் இடம்பெற்றது.

கொழும்பில் பதற்றம்! முக்கிய இடத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினர் (படங்கள்) | Colombo Etf Epf Protest

குறித்த போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவு இன்று (28) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அதிபர் மாளிகை, அதிபர் செயலகம், நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிற்குள் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி துமிந்த நாகமுவ, முஜிபுர் ரஹ்மான், ஹிருணிகா பிரேமச்சந்திர, சரித ஹேரத், வாசுதேவ நாணயக்கார, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 24 பேர் மற்றும் அவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவுள்ளவர்களுக்கு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பதற்றம்! முக்கிய இடத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினர் (படங்கள்) | Colombo Etf Epf Protest

 

சிம்பாப்வேவின் புதிய ஜனாதிபதியாக எம்மர்சன் மங்கக்வா !

ஆப்பிரிக்க நாடான சிம்பாப்வேவில் ஜனாதிபதி எம்மர்சன் மங்கக்வா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அதிபர் தேர்தல் கடந்த 23, 24-ந் திகதிகளில் நடந்தது. இதில் ஜனாதிபதி  எம்மர்சன் மங்கக்வா, எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சமிசா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

 

தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் ஜனாதிபதி  எம்மர்சன் மங்கக்வா 52.6 சதவீத வாக்குகள் பெற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதான எதிர்க்கட்சி தலைவரான நெல்சன் சமிசா 44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். இதன் மூலம் ஜனாதிபதி எம்மர்சன் மங்கக்வா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார். ஆனால் தேர்தல் முடிவை எதிர்க்கட்சி ஏற்க மறுத்து உள்ளது.

 

இதுகுறித்து எதிர்க்கட்சி செய்தி தொடர்பாளர் கூறும்போது, சரியான சரி பார்ப்பு இல்லாமல் அவசர மாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றார். தேர்தல் 23-ந்திகதி ஒரு நாள் மட்டுமே நடத்தப்பட இருந்தது. ஆனால் வாக்கு சீட்டு அச்சடிப்பதில் ஏற்பட்ட தாமதம், சிக்கல்கள் காரணமாக 24-ந்திகதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மேலும் ஜனாதிபதி தேர்தல் முடிவு நாளை வெளியிடப் படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒரு நாள் முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ராபர்ட் முகாபே அரசு, இராணுவ புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. அதன்பின் இடைக் கால அதிபராக எம்மர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த தேர்தலில் எம்மர்சன் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். இதனால் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதை எம்மர்சன் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினார். தற்போது 2-வது முறையாக எம்மர்சனின் வெற்றியை எதிர்க்கட்சி ஏற்காததால் போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளது.

இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற போது முக்கிய பதவியிலிருந்த சந்தோஷ் ஜா !

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக இராஜதந்திர சேவையில் உள்ள சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார். 2020ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலமும் கொழும்பில் உயர்ஸ்தானிகராக இருக்கும் கோபால் பாக்லே அவுஸ்திரேலியாவில் இந்தியாவின் இராஜதந்திர பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.

2020ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக நியமனம் பெற்ற சந்தோஷ் ஜா, 2019 முதல் ஜூலை 2020 வரை உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார்.

மேலும், 2017 – 2019 ஆண்டுகளில்  வொஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதுவராக கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், 2015 – 2017 வரையிலான ஆண்டுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சின் கொள்கை திட்டமிடல் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இந்த காலப்பகுதியில், இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய ஈடுபாடுகளுக்கும் சவால்களுக்கும் பதிலளிக்கும் திறன் கொண்ட இராஜதந்திர பிரிவை உருவாக்க பங்களிப்பு செய்திருந்தார்.

குறிப்பாக, முக்கிய இந்திய வெளியுறவுக் கொள்கை முன்முயற்சிகளை உருவாக்குவதிலும், பல மூலோபாய உரையாடல் மன்றங்களை நிறுவுவதிலும் நெருக்கமாக செயற்பட்டவராகவே இராஜதந்திரி சந்தோஷ் ஜா காணப்படுகிறார்.

அதே போன்று பூகோள அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மையப்படுத்தி உலகளவில் புகழ்பெற்ற ரெய்சினா கலந்துரையாடல்களிலும் முக்கிய பங்கை வகித்துள்ளார். அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களையும் கையாண்டுள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற 2007 தொடக்கம் 2010 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் உள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயத்தில் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அதனை தொடர்ந்து, அமெரிக்க – இந்திய அணு ஆயுத பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினராகவும் பொறுப்புக்களை ஏற்றிருந்தார். இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக, இலங்கையில் இறுதிப்போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மற்றும் கட்டுமான துறைகளை மேம்படுத்தும் இந்திய திட்டங்களிலும் முக்கிய பங்கை வகித்திருந்தார்.

எனவே, இலங்கையின் உள்ளக அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பரந்துபட்ட அனுபவத்தை கொண்ட மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜாவை கொழும்பில் அடுத்த உயர்ஸ்தானிகராக கடமைகளை பொறுப்பேற்க டெல்லி அனுப்புகிறது.

இலங்கையை மையப்படுத்திய சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து இந்தியாவின் மூலோபாய கவலைகள் அதிகமாக காணப்படுகின்ற சூழலில் இந்த நியமனம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொலிஸார் எடுத்த mugshot புகைப்படத்தில் டொனால்டு ட்ரம்ப் அழகாக இருக்கிறார் – ஜோ பைடன்

போலீஸார் எடுத்த மக்-ஷாட் (பொலிஸ் பதிவு படம்.) புகைப்படத்தில் டொனால்டு ட்ரம்ப் அழகாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு தெற்கு மாகாணமான ஜார்ஜியாவின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதற்காக, தேர்தல் மோசடி குற்றச்சாட்டின் பேரில் அட்லாண்டா கோர்ட்டில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் உத்தரவாதத்தின் பேரில் போலீஸார் சில நிமிடங்களில் ட்ரம்ப்பை பிணையில் விடுவித்தனர். ஜார்ஜியா தேர்தல் மோசடி வழக்கில் ட்ரம்ப் 13 குற்றச் செயல்களை எதிர்கொள்கிறார். இதே தேர்தல் மோசடியில் 18 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

தனது கைது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “இது அமெரிக்காவில் இன்னொரு சோகமான நாள்!” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை போலீஸார் எடுத்த ‘மக்-ஷாட்’ புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலாக பரவியது.

 

இந்த நிலையில், ட்ரம்ப்பின் புகைப்படம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ட்ரம்ப் மிகவும் அழகான நபர் என்று பதிலளித்துவிட்டு சென்றார்.

குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானிக்கிறது – ஜுலி சங்

குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜுலி சங் தனியார் விருந்தினர் விடுதியொன்றில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”குருந்தூர் மலை விவகாரத்தில், சட்ட பிரச்சனை, காணிப்பிரச்சனை, அரசியல் பிரச்சனை என மூன்று விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.

 

இதனை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளுகின்றது என்பதனை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கிறோம்.

 

இச் சிக்கலுக்கு இலங்கை அரசாங்கம் மிக விரைவில் அமைதியான தீர்வை வழங்க வேண்டும். இல்லாவிடின் இது பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும். அத்துடன் இப்பிரச்சனையை விரைந்து தீர்ப்பதற்கு, அமெரிக்காவும் அழுத்தங்களை பிரயோகிக்கும்” என ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

வாக்னர் படைத் தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழப்பு !

வாக்னர் படைத் தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

10 பேர் சென்ற ஜெட் விமானத்தில் வாக்னர் படைத்தலைவர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ட்வெர் பிராந்தியத்தில் நடந்த விமான விபத்தில் இறந்தவர்களில் வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினும் அடங்கியுள்ளார்.

 

ரஷ்ய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ரோசாவியாட்சியா யெவ்ஜெனி பிரிகோஜின் இறந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான RIA நோவோஸ்டியின் தகவலின்படி, விபத்து நடந்த இடத்தில் எட்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

பிரிகோஜின் சென்ற விமானம் ரஷ்யாவில் விபத்துக்குள்ளானது குறித்து வெளியான செய்தியால் தாம் ஆச்சரியப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார்.

 

இந்த சம்பவத்திற்கு விளாடிமிர் புடின் தான் பொறுப்பு என்று நினைக்கிறீர்களா என்று நெவாடாவில் நிருபர்கள் கேட்டதற்கு, “ரஷ்யாவில் புடின் பின்தங்கியிருக்காத அளவுக்கு எதுவும் நடக்கவில்லை.”என்று தெரிவித்தார்.

 

சூடான் போர்ப்பதற்றம் – பட்டினியால் இறக்கும் சிறுவர்கள்!

கடந்த மே முதல், ஜூலை வரையில், 316 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளதோடு, இதில் பெரும்பாலான குழந்தைகள் 5 வயதுக்கும் குறைவானவர்கள் என சூடானின், ‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற அமைப்பின் இயக்குனர் ஆரிப் நுார் தெரிவித்துள்ளார்.

 

கிழக்கு ஆபிரிக்க நாடான சூடானில், இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் மோதல் வெடித்தது. இது மிகப் பெரிய சண்டையாக உருவெடுத்ததை அடுத்து, தலைநகர் கார்தோம் உள்ளிட்ட நகர்ப்புறங்கள் போர்க்களங்களாக காட்சி அளிக்கின்றன.

 

நாடு முழுதும் பதற்றம் நீடித்து வருகிறது. பொதுமக்கள் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர்.

 

நாட்டின் சுகாதார வசதி முற்றிலுமாக முடங்கி உள்ளது. அத்துடன், சரியான உணவு கிடைக்காமல் அந்நாட்டு குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்து வருகின்றனர்.

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

 

“ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, 2,400 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கிழக்கு கடாரிப் மாகாணத்தில் உள்ள அரச குழந்தைகள் மருத்துவமனையில், 132 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால், ஏப்ரல் முதல், ஜூலை வரையிலான காலத்தில் உயிரிழந்தனர்.

தலைநகர் கார்தோமில் உள்ள அரசு ஆதரவற்றோர் இல்லத்தில், 20க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகள் உட்பட 50 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.

ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு சிகிச்சை பெற முடியாமல், 31,000 குழந்தைகள் தவித்து வருகின்றனர்” என்றார்.

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது இந்தியாவின் சந்திரயான்-3 !

இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

 

சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது.

 

அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.

 

சந்திரயான் -2 தோல்விக்கு பிறகு, பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14 ஆம் திகதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

 

பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னா் நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் பயணித்தது. சந்திரயான் 3-இல் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டா் கலன் கடந்த 17 ஆம் திகதி விடுவிக்கப்பட்டது.

 

நிலவுக்கும் லேண்டர் கலனுக்கும் இடையேயான தூரத்தை பல்வேறு கட்டங்களாக படிப்படியாக இஸ்ரோ குறைத்தது. இறுதியில், குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் லேண்டர் கொண்டுவரப்பட்டது.

 

பின்னர் நிலவின் தரையிலிருந்து 150 மீட்டா் உயரத்துக்கு லேண்டா் கொண்டுவரப்பட்டது. சில விநாடிகள் அந்த நிலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர், அதிலுள்ள சென்சாா்கள் மூலம் தரையிறங்க சரியான சமதள பரப்புடைய இடம் தோ்வு செய்யப்பட்டது.

 

லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும், மெதுவாக நிலவில் தரையிறக்கும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

 

இந்த முயற்சி பலன் அளித்ததால், சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

 

சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

 

சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதால், புதிய இந்தியா உருவாகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.