விமல் குழந்தைவேல்

விமல் குழந்தைவேல்

தமிழ் நாட்டில் தொங்கும் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் : விமல் குழந்தைவேல்

Vimal_Kulanthaivelஇலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த விமல் குழந்தைவேல் தனது நாவல்கள் மூலம் அறியப்பட்ட குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவர். லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் இவர் தொடர்ந்தும் படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர். இவர் 2002 யூனில் தேசம் சஞ்சிகையின் இதழ் 8ல் எழுதிய இக்கட்டுரையை மீள்பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அதனை மீள்பிரசுரம் செய்கிறோம். கொழும்பில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராக தமிழக எழுத்துலகின் இலக்கியத் தசைகளாகத் தொங்கும்  புலம்பெயர் எழுத்தாளர்களின் கையெழுத்துப் போர் ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழலில் அதன் பொருத்தம் கருதி இக்கட்டுரை மீள்பதிவிடப்படுகிறது.

._._._._._.

Vimal_Kulanthaivelமருத்துவர்களாகவும் பொறியியலாளராகவும் இன்னும் பல துறை படிப்பாளிகளாகவும் தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுள் எழுத்தாளர்களும் உருவாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிக் கூறியவர் தமிழ் நாட்டில் புகழ் பெற்ற எழுத்தாளர் சுஜாதா அவர்கள்.

ஈழத்திலும் சரி புலம்பெயர் நாட்டிலும் சரி எப்படிப்பட்ட திறமையான எழுத்தாளனையும் அங்கீகரிக்கவோ முன்மொழியவோ தமிழ்நாட்டு இலக்கிய வாதிகளையே அன்றிலிருந்து இன்றுவரை நம்பி இருக்க வேண்டிய கட்டாய நிலையிலேயே ஈழத்து இலக்கியம் இருக்கின்றது. எழுத்தாளர்களையும் இலக்கியவாதிகளையும் அரவணைத்துச் செல்லும் பக்குவம் நம் இலக்கியச் சிங்கங்களிடம் இன்னும் இல்லாததே இதற்குக் காரணம்.

டொமினிக் ஜீவா, சிவத்தம்பி போன்றோர் கூடத்தங்களை அங்கீகரித்துக் கொள்ள தமிழ் நாட்டைத் தான் நாடியிருக்கின்றார்கள். அந்த நாடல் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, வாஸந்தி, பாலுமகேந்திரா, சுந்தரராமசாமி, அனுராதா ரமணன், வைரமுத்து, மேத்தா ரகுமான், சிவசங்கரி இன்னும் இவர்களைப் போன்ற தமிழ் நாட்டில் பிரபல்யம் ஆனவர்களின் முன்னுரைகளைப் பெற்றுத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் புலம்பெயர் எழுத்தாளர்கள் மத்தியில் இன்று வரை அறியப்படாமலும் அறிமுகப்படுத்தப்படாமலும் அங்கீகாரம் பெறாமலும் இருக்கும் புலம் பெயர் எழுத்தாளர்களை தமிழ்நாட்டு இலக்கியம் அறியத் தேவை இல்லை. தாய் நாட்டுச் சகோதரர்களாவது கண்டு கொள்ளலாமே.

தமிழ் நாட்டில் அரசியலும், இலக்கியமும், சினிமாவும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிக் கொள்ளாமல் பின்னிப் பிணைந்து கிடக்கின்றது. ஈழத்தைப் பொறுத்தவரை அப்படியல்ல. எழுத்தாளனாகப் பெயர் எடுக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட கூட்டத்தினருக்கு தானும் ஆதரவாளனென்று ஆட்டுமந்தை பின்னால் ஓடும் குட்டி ஆடு போல ஓட வேண்டி இருக்கின்றது. வேற்று மொழி எழுத்தாளர்களின் பெயர்களை மனப்பாடம் செய்துகொள்ள வேண்டி இருக்கின்றது. தமிழ் நாட்டு எழுத்தாளர்களை இவர்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடு வதை கண்டு ரசிக்க வேண்டி இருக்கின்றது. ஈழத்து இலக்கியத்தைக் கட்டிக்காக்க வந்த இந்த இலக்கி யக் காவலர்களை எத்தனை நாளைக்குத் தான்  ஒத்தூதிச் செல்ல முடியும்.

இலக்கியவாதிகள் போகட்டும் புலம்பெயர் சஞ்சிகைகள் மட்டுமென்ன. அவர்களுக்கும் இந்திய எழுத்தாளர்களின் ஆக்கங்கள் தான் தேவைப்படுகின்றன. அல்லது மொழிபெயர்ப்புக் கவிதைகளும் கட்டுரைகளும் தான் தேவைப்படுகின்றன. இல்லையெனில் தங்களுக்குப் போட்டியான இன்னொரு சஞ்சிகையினரின் வாழ்க்கை அந்தரங்கங்களை கொஞ்சக் காலத்துக்கு விமர்சனம் செய்துவிட்டு இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள். புலம்பெயர் எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பிரசுரம்  செய்து அவர்களை சொந்த நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து கொள்வதை கொழும்புப் பத்திரி கைகள் (தமிழ்) விரும்புவதில்லையாம் என்பதே தனிச்சோகமான செய்தி. என்ன செய்வது அந்தப் பத்திரிகையின் வாசகர்கள் அப்படி. தமிழ்நாட்டு சினிமா பற்றிய கவலையைத் தவிர அந்த வாசகனுக்கு வேறென்ன கவலை?

சரி இவைகள் தான் இப்படியென்றால் புலம்பெயர் எழுத்தாளனின் இன்னொரு புலம்பல் தன்னை சக புலம்பெயர் எழுத்தாளனே கண்டு கொள்வதில்லை என்பது தான். இதற்கு பல காரணங்கள் உண்டு. புலம்பெயர் எழுத்தாளர்களுள் மூத்த எழுத்தாளர்கள் என்றொரு வர்க்கம் உண்டு. அவர்களில் சிலர் தங்களுக்கென்றொரு வாசகர்களையும் எழுத்தாளர்களையும் வைத்திருக்கின்றார்கள். தாங்கள் எழுதுவதையும் தங்களுக்குத் தெரிந்தவர்கள் எழுதுவதையும் தவிர இவர்கள் வேறு எதுவுமே வாசிப்பதில்லை. ஜனரஞ்சக பத்திரிகைகள் வாசிப்பதில்லை என்பார்கள். தங்கள் வீட்டுமேசையில் எப்போதும் அந்தப் பத்திரிகைகள் இருக்கும். குறிப்பிட்ட சில பத்திரிகைகளில் தங்களின் ஆக்கங்கள் பிரசுரமாகியிருக்கும். கேட்டால் தாங்கள் அனுப்பவேயில்லை எப்படியோ வந்திருக்கின்றது என்பார்கள். இந்தப் பின்கதவு கௌரவ இலக்கியவாதிகள் புதிய எழுத்தாளர்களிடம் நெருங்கிப் பழகுவதை கௌரவக் குறைவாக எண்ணுகின்றார்கள். இந்த நிலையில் புலம்பெயர் புதிய எழுத்தாளனின் ஆக்கத்தை இன்னொரு புதிய புலம்பெயர் எழுத்தாளன் கண்டும் காணவில்லை என்று கூறினால் இதை யாரிடம் சொல்லி அழுவது.

 ‘உன்னுடைய கதையொன்று பத்திரிகையில் வந்திருக்கே தெரியுமோ?’
 ‘ஆ……அப்பிடியே எப்பிடிக் கதை’
 ‘நேரமில்லை நான் வாசிக்கவில்லை’
 இது தான் புலம்பெயர் எழுத்தாளனுக்குரிய பண்பு.

இவைகள் எதுவும் தேவையில்லை. ஒரு எழுத்தாளன் அறியப்பட நல்ல விமர்சனம் ஒன்றே போதுமானது. அதற்குக் கூட ஆளில்லை. விமர்சனம் என்று அழைத்தால் மேடைச் சந்தர்ப்பம் கொடுத்ததற்கு நன்றிக்கடனாகவும் முகஸ்துதிக்காகவும் எழுத்தாளனை புகழ்ந்து தள்ளிவிட்டு மேடையில் இருந்து இறங்கி கூட்டம் சேர்த்து குறைசொல்வதற்கு என்றே நமது விமர்சகர்கள் பலர் இருக்கின்றார்கள். இதற்குக் காரணம் பயம்.

குறைகளைச் சொல்லி விமர்சனம் செய்தால் விளம்பரமாகி சல்மான் ரூஷ்டியாகி விடுவானோ என்ற காழ்ப்புணர்ச்சிப் பயம். இந்த விதிகளைத் தாண்டியும் துணிந்து விமர்சனம் செய்பவர்கள் என்றால் லண்டனில் ஜமுனா ராஜேந்திரனையும், மு.நித்தியானந்தனையும் மட்டுமே குறிப்பிட வேண்டும். ராஜேந்திரனைப் பொறுத்தவரை சத்தியஜித்ரேயையும், பத்மா சுப்பிரமணியத்தையும் தவிர வேறு யாரையும் படைப்பாளிகள் என்றே சொல்லமாட்டேன் என்று பிடிவாதமாய் நிற்கிறார். ஆனாலும் அவரின் விமர்சனம் காத்திரமானதும், தேவையானதும் என்பது உண்மை. மு.நித்தியானந்தன் அப்படியல்ல. நல்ல படைப்பாளிகளை இனம்கண்டு அவர்களிடத்தில் உள்ள குறைகளை நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது போல் சுட்டிக்காட்டிவிட்டே செல்வார். என்ன பயமோ பயமுறுத்தலோ தெரியாது. எந்தக் குளிரிலும் முகம் எல்லாம் வியர்த்துக் கொட்ட உணர்ச்சிவசப்பட்டு இவர் குறைகளைக் கூறி விமர்சனம் செய்வதே ஒரு தனி அழகு தான்.

ஒரு விமர்சனம் படைப்பாளியை வெளிக்கொணரும் விளம்பரம் என்பது உண்மையே. அதற்காக அது புகழ்ச்சி விமர்சனமாக மட்டும் இருந்துவிடக் கூடாது. புகழ்ச்சியை விட படைப்பாளியின் படைப்பில் உள்ள குறைகளைக் குற்றம் கூறியும் கருத்துக் கட்டுடைப்புச் செய்தும் செய்யும் விமர்சனத்துக்கு வலு அதிகம். அந்த சம்பிரதாயங்கள் கூட ஈழத்துப் புலம்பெயர் இலக்கியத்தில் மிகமிகக் குறைவு.

அரவிந்தனின் கவிதைத் தொகுதி வெளியீட்டுக் கூட்டத்தில் அரவிந்தன் கழுத்தில் விழுந்து கொண்டிருந்த புகழ்ச்சி மாலையை தடுத்தாட்கொணரவும் கவிதைத் தொகுதியின் கருத்தைக் கட்டுடைப்புச் செய்யவும் சபையிலிருந்து எழுந்த சேனன் அருகிலிருந்தவர்களால் தடுத்தாட் கொள்ளப்பட்டார் என்பது தான் உண்மை.

புலம்பெயர் ஈழத்து இலக்கியத்தில் விமர்சனச் சுதந்திரம் இல்லை. சபைப்பேச்சுச் சுதந்திரம் இல்லை. தப்பித்தவறி சேனன் போன்றவர்கள் எழுந்தால் சபைகுழப்பி, தறுதலை என்ற பெயர்களுடன் தான் உட்காருகிறார்கள். தமிழ் இலக்கியம் என்ற வகையில் தமிழ் நாட்டைத்தான் நாம் உதாரணத்துக்குக் கூட எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. அங்கு இலக்கிய விமர்சனச் சுதந்திரம் தாராளமாக இருக்கின்றது. எழுத்தாளனின் படைப்பை எரிக்கவும் எதிர்க்கவும் அவனை நீதிமன்றத்துக்கு இழுக்கவும் கூட விமர்சனம் என்ற வழிமுறை உதவுகின்றது. புலம்பெயர் இலக்கியத்தில் அப்படியல்ல. இருந்தும் விதிவிலக்காக பிரான்ஸில் மட்டும் வருடத்துக்கு ஒரு தடவை நான்கு பெண்களாவது சந்தித்து குய்யோ முய்யோ என்று விமர்சனக் கத்தல் செய்கிறார்கள் என்பதில் கொஞ்சம் சந்தோசம்.

ஈழத்திலிருந்து அடிக்கடி எழுத்தாளர்களென்றும் இலக்கியவாதிகளென்றும் பலர் வருகின்றார்கள். புலம்பெயர் எழுத்தாளர்களை அவர்கள் அறிந்தவர்களும் இல்லை. அவர்களை புலம்பெயர் எழுத்தாளர் பலர் அறிந்திருப்பதும் இல்லை. அவர்கள் கூட வந்ததும் வராததுமாக

நீங்கள் எல்லாம் ஏன் இந்தியாவுக்குப் போய் எங்கள் இலக்கியத்தை விற்கின்றீர்கள் என்கிறார்கள். சரி உங்களிடமே வருகிறோம் சேர்த்துக் கொள்ளுங்களேன் என்றால் ஆழம் தெரியாமல் காலைவிட்டு எங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்கிறார்கள். காரணம் அவர்களிடத்தில் அறியப்படவில்லை. அறியப்படாததற்கு காரணம் ஈழத்து இலக்கிய விமர்சகர்களின் காழ்ப்புணர்ச்சி.

விமர்சனம் எழுத்தையும் எழுத்தாளனையும் வெளிப்படுத்தும், தெரியப்படுத்தும். அதற்குரிய ஆட்கள் தான் நம்மிடத்தில் இல்லை. விமர்சனமும் ஓர் இலக்கியம் தான். அந்த இலக்கியம் ஈழத்தில் குறைவு. தன்னை அங்கீகரிக்காத ஒருவரை மேடையேறி பூதம் என்று சொல்லி அவரின் உருவ அமைப்பை கேலி செய்யும் விமர்சனப்பாணியை கைவிட்டுவிட்டு நல்ல விமர்சனம் மூலம் புதிய புலம்பெயர் எழுத்தாளர்களை வெளிப்படுத்தும் பரந்த மனம் வேண்டும். இல்லையேல் கடந்த காலங்கள் போல் இனிவரும் காலங்களிலும் தமிழ் நாட்டின் பிரபல்யமானவர்களின் பெயர்களுக்குப் பின்னால் தொங்கிக் கொண்டு தான் அலைய வேண்டும்.