August

August

விண்வெளியில் நெற் செய்கை – வியக்கவைத்த சீனா !

விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்துடன் சீனா பணியாற்றி வருகிறது. இந்நிலையில், கட்டுமான பணி நிறைவடையாத சீன விண்வெளி நிலையத்தில், பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட வென்சியான் என்ற ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இதற்கான பணிகள் கடந்த ஜூலையில் தொடங்கின. இதற்காக இரு வகை செடிகளின் விதைகளை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

தாலே கிரஸ் மற்றும் அரிசி வகை செடியை உற்பத்தி செய்யும் பணியானது தொடங்கியது. இதில், தாலே கிரஸ் 4 இலைகளை உற்பத்தி செய்தது. இந்த செடியானது, நம்மூரில் உள்ள முட்டைகோஸ் போன்ற பசுமையான இலைகளை கொண்ட காய்கறிகளை ஒத்தது. ஆனால், அரிசி விதையானது 30 செ.மீ. உயரத்திற்கு வளர்ந்து விஞ்ஞானிகளை ஆச்சரியமடைய செய்துள்ளது. விண்வெளியில் கதிரியக்கங்கள் அதிக அளவில் இருக்கும். இந்த சூழலில், தாவரங்கள் எப்படி நடந்து கொள்கின்றன என்பது பற்றி புரிந்து கொள்வதற்காக சீன விஞ்ஞானிகள் வாழ்க்கை அறிவியல் பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி சீன அறிவியல் அகாடெமியின் ஆராய்ச்சியாளர் ஜெங் ஹுகியாங் கூறும்போது, விண்வெளியில் தலா இரு தாவரங்களின் வாழ்க்கை சுழற்சி பற்றி இரண்டு பரிசோதனைகள் வழியே பகுப்பாய்வு செய்யப்படும். அவற்றை வளர்க்க நுண்ணிய ஈர்ப்பு விசை கொண்ட சுற்றுச்சூழல் அமைப்பினை எப்படி பயன்படுத்தலாம் என்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பது பற்றியும் அறியப்படும் என கூறியுள்ளார்.

பூமி போன்ற சூழலை ஒத்த, செயற்கை சுற்றுச்சூழலை கொண்டு மட்டுமே இந்த பயிர்களை வளர்க்க முடியும். செடிகளின் வளர்ச்சியை ஒப்பிட்டு, விண்வெளியில் தகவமைத்து கொள்ளும் வகையிலான கூடுதல் பயிர்களை ஆய்வின் வழியே நாம் கண்டறிய முடியும் என அவர் கூறியுள்ளார். விண்வெளியில் தாவர விதைகள் பரிசோதனையில் சீனா ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஜூலையில், விண்வெளியில் இருந்து திருப்பி கொண்டு வந்த விதைகளை வைத்து முதல் தொகுதி அரிசியை அறுவடை செய்தது.

சொர்க்கத்தில் இருந்து வந்த அரிசி என பெயரிடப்பட்ட இந்த வகை அரிசிக்கான 40 கிராம் விதைகள், 7.6 லட்சம் கி.மீ. தொலைவுக்கு நிலவுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு பூமிக்கு திரும்பி கொண்டு வரப்பட்டது. அதிக கதிரியக்கங்கள், புவியீர்ப்பு விசையற்ற சூழல் போன்ற சுற்றுச்சூழலில் விண்வெளியில் சீன விஞ்ஞானிகள் அரிசியை உற்பத்தி செய்து இருப்பது விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த நிலையாக உற்று நோக்கப்படுகிறது.

“கோட்டாபய ராஜபக்ஷவிற்காக 4 ரூபாயினை கூட செலவிடவில்லை.” – ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்காக அரசாங்கம் 400 மில்லியன் ரூபாவை செலவிடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இடைக்கால வரவு – செலவுத்திட்டம் மீதான விவாதம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்தநிலையில் நாடாளுமன்ற அறைக்கு வருகை தந்த ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்காக 4 ரூபாயினை கூட செலவிடவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

“மரண தண்டனையை நிறைவேற்ற நான் கையொப்பமிடப் போவதில்லை.”- ஜனாதிபதி ரணில்

மரண தண்டனையை நிறைவேற்ற தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (31) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற 2019 இல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருந்தார். இந்த தீர்மானத்தை வலுவற்றதாகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரித்த போதே சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாட்டை நீதிமன்றுக்கு அறிவித்தார்.

விஜித் மல்லல்கொட, எல்.ரீ.பி. தெஹிதெனிய மற்றும் முருது பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. தண்டனையை மீள அமுல்படுத்துவது தொடர்பில் சட்டமா அதிபர் நேற்று (30) ஜனாதிபதியின் நிலைப்பாட்டை வினவியபோது, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தனது கையொப்பத்தை, இனிமேல் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, தமது நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, மரண தண்டனையை அமுல்படுத்துவதில்லை என அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை எடுத்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மனுக்கள் மீதான விசாரணையைத் தொடர வேண்டிய அவசியம் உள்ளதா என்பது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதியரசர் குழாமின் தலைமை நீதியரசர் விஜித் மலல்கொட மனுதாரரின் சட்டத்தரணிகளுக்கு அறிவித்தார். முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதியரசர் குழாம், இந்த மனுக்களை அடுத்த வருடம் பெப்ரவரி 23 ஆம் திகதி ஆராய தீர்மானித்தது.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு கைதிகளின் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு தாம் கையொப்பமிட தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஜூன் 26 அறிவித்திருந்தார். மைத்திபால சிறிசேனவின் இந்தத் தீர்மானத்தை வலுவற்றதாக்கக் கோரி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், கைதிகளைப் பாதுகாக்கும் அமைப்பு உள்ளிட்ட பல தரப்பினர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு – கைதுக்கும் வாய்ப்பு !

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான்கான், இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவரது உதவியாளர் ஷாபாஸ் கில் கைது செய்யப்பட்டது குறித்தும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்தும் கண்டம் தெரிவித்த இம்ரான், இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் நீதிபதி மீதும் வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

 

இதையடுதது பொதுக் கூட்டத்தில் நீதிபதி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதாக இம்ரான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இம்ரான்கானின் பொதுக் கூட்டப் பேச்சை உள்ளூர் ஊடகங்கள் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது இம்ரான்கான் பேச்சை விமர்சித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, இராணுவம் உள்பட பிற அமைப்புகளை குறி வைக்கும் போக்கின் தொடர்ச்சியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் கானின் வீட்டிற்கு செல்லும் சாலையில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை கைது செய்ய ஷாபாஸ் ஷெரிப் அரசு திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் துணைத் தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை – ஜெனீவா கூட்டத்தொடரை மையப்படுத்தி நகரும் ரணில் அரசு !

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவற்றுள் அரசியல் கைதிகள் விவகாரமும் ஒன்று. இதனைக் கருத்தில்கொண்டு அரசு செயற்படும். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடனும் என்னுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

அவர்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில் பரிசீலித்து வருகின்றோம். அதற்கமைய முதல் கட்டமாக குறிப்பிட்ட சில தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கும். அதன் பின் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கி விடுவிக்க அதிபர் நடவடிக்கை எடுப்பார்” என்றார்.

………………..

ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் ரணில் தலைமையிலான அரசு தமிழர்களை ஆதரித்து நடத்துவது போன்றதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவே இந்த அரசியல்கைதிகளின் விடுதலை என்ற நாடகத்தை நடாத்துவதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது புதுமையான விடயமும் அல்ல. ஒவ்வொரு முறையும் ஜெனீவா கூட்டத்தொடர் தொடங்கும் போது தமிழர்கள் தொடர்பில் தளர்வாக நடந்துகொள்வது போல ஒரு விம்பத்தை இலங்கை அரசு ஏற்படுத்தும். மேலும் இதன் மூலம் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டதாக நம்பப்படும். ஜெனீவா கூட்டத்தொடர் முடிவடைய அரசாங்கம் தனது இனவாத முகமூடியை மீண்டும் அணிந்து கொள்ளும். இது தான் நடந்த ஒரு தசாப்த காலமான இலங்கையின் நடைமுறை.

“ராஜபக்சக்கள் மீண்டும் இலங்கை அரசியலினுள்.”- தடுக்க வேண்டும் என்கிறார் சம்பிக்க ரணவக்க !

“சர்வகட்சி அரசாங்கத்தில் ஊழல்வாதிகள் மற்றும் ராஜபக்ஷ்வினர் இல்லாமல் அமைக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது.” என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கண்டியில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சுதந்திரமாக செயற்படும் நிலையில் , இந்த வங்குரோத்து நிலைமையால் தங்களின் வாழ்க்கை அழிவடைந்தமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கிறங்கிய மக்களை தண்டிப்பதை அனுமதிக்க முடியாது. அரசாங்கத்துக்கு தற்போது சவாலாக இருப்பது மக்களின் நம்பிக்கையை வெற்றிகொள்வதாகும்.

அதனால்  அரசாங்கம் அடக்குமுறையை நிறுத்த வேண்டும். யாராவது சட்டத்தை மீறி செயற்படுவதாக இருந்தால், அதளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நாங்கள் எதிர்ப்பு இல்லை. அனைவருக்கும் ஒரேமாதிரி சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்.

அத்துடன் நாட்டை அதலபாதாளத்துக்கு இட்டுச்செல்ல காரணமாக இருந்த ராஜபக்ஷ்வினர் மீண்டும் அரசியல் களத்துக்கு வந்து செயற்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்கள் மீண்டும் தங்களின் ஊழல் நடவடிக்கைகளை மேற்கொண்டுசெல்ல முயற்சித்து வருகின்றனர்.

அதனால் எதிர்காலத்தில் அமைக்க இருக்கும் தேசிய அல்லது சர்வகட்சி அரசாங்கத்தில் ஊழல்வாதிகள் மற்றும் ராஜபக்ஷ்வினர் இல்லாமல் அமைக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அவ்வாறு அமையாவிட்டால் இதுதொடர்பில் அடிப்படை நம்பிக்கை இல்லாமல்போகும்.

மேலும் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர்கள் மற்றும் நாட்டை வங்குராேத்து அடையச்செய்ய  காரணமான இருந்த  அரசியல்வாதிகள் இல்லாத நாட்டையே . அவ்வாறு இல்லாவிட்டால், அரசாங்கம் எந்தவகையான அடக்கு முறைகளை கொண்டுசென்றாலும் மக்கள் போராட்டத்துக்கு செல்வதை தடுக்க முடியாது என்றார்

கோட்டாபய ராஜபக்சவினாலேயே நாட்டுக்கு இந்த நிலை – ஜி.எல். பீரிஸ் அந்தர் பல்டி !

“கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட முடிவுகளை எடுத்ததாலேயே நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.” என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட முடிவுகளை எடுத்ததாலேயே நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட முடிவுகளை எடுத்தார். குழுவாக முடிவு எடுக்கப்படவில்லை.அதில் உர விவகாரம் ஒன்று, விஷயம் தெரிந்தவர்களிடம் ஆலோசனை கேட்கவில்லை. இவ்வாறான அவரின் முடிவுகள் நாட்டுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லாதது இதேபோன்ற பிரச்சினையாகும்.

இத்தகைய எடுத்துக்காட்டுகள் முடிவற்றவை மற்றும் எண்ணற்றவை. ஆனால் நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரம் தேவைப்பட்டது. அதைத்தான் டலஸ் தலைமையில் செய்ய முயற்சித்தோம். கடந்த சில வருடங்களில் அமைச்சரவை முறைமையும் விலக்கப்பட்டிருந்தது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க கட்சி விவாதம் மூலம் தீர்மானம் எடுக்கவில்லை. பொதுச் செயலாளரால் பதில் சொல்ல முடியவில்லை. கட்சியில் உள்ள ஒருவரின் தனிப்பட்ட கருத்தின்படி அந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒரு கட்சி அப்படி நடந்து கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.

கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியிலிருந்த கல்வி அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் என பல பதவிகளை வகித்தவர் ஜீ.எல். பீறிஸ். கோட்டாபாய ராஜபக்ச எடுத்த முடிவுகளுக்கு பாராளுமன்றில் ஆதரவு வழங்கி வந்த பீறிஸ் தற்போது கோட்டாபாய ராஜபக்ச பதவி விலகியதும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். கோட்டாபாயவின் ஆட்சியின் தோல்வியில் அமைச்சர்களாக பொறுப்பேற்ற ஜீ.எல்பீரிஸ் போன்றோரும் பதில் சொல்ல வேண்டியவர்களே !

25 வருடங்களுக்கு மேல் பாதை சீர் செய்யப்படாத மண்பாதை – புனரமைத்து தருமாறு கோரி மக்கள் போராட்டம் !

பொகவந்தலாவ சிங்காரவத்தை தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரி தோட்ட மக்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் நேற்றுமுன்தினம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சிங்காரவத்தை தோட்டத்தின் கிராம அபிவிருத்தி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் சுமார் இரண்டு மணித்தியாலயம் இடம்பெற்றது. நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட சிங்காரவத்தை தோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை சார்ந்த 1800க்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பொகவந்தலாவ நகரத்திலிருந்து இத்தோட்டத்திற்கு செல்லும் ஒன்பது கிலோமீற்றர் கொண்ட பிரதான வீதி குன்றும், குழியுமாக போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுகிறது.
இப்பாதையை நோயாளர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியோர்கள் என அன்றாடம் தொழிலுக்கு செல்பவர்களும் பயன்படுத்துகின்றனர்.

இதேவேளை ரொக்கில், சிங்காரத்தை, வானக்காடு, மோரார் மேற்கு பிரிவு ஆகிய தோட்டங்களை சேர்ந்த மக்களும் இப்பாதையை பயன்படுகின்றனர் . சுமார் 25 வருடங்களுக்கு மேல் பாதை சீர் செய்யாத காரணத்தினால் மண் பாதையாகவே காணப்படுகிறது.

புனரமைப்பு செய்து தருவதாக அரசியல்வாதிகள் அடிக்கல் நாட்டிய போதிலும் பாதையை புனரமைக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினால் இத்தோட்டத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி பிரதான வீதியில் எதிர்ப்பினை முன்னெடுத்தனர்.

“சர்வதேசத்தை ஏமாற்றவே அமைச்சர்கள் வடக்கை நோக்கபுறப்படுகிறார்கள். ” – சிறீதரன்

“மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரை மையமாக கொண்டே அமைச்சர்கள் வடக்குக்கு வருகிறார்கள்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

உதயநகர் வட்டார மக்களுடனான சந்திப்பில் பேசிய போதே அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடூரத்தை சிங்களதேசம் தற்போதே உணர தொடங்கியுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம், தமிழ் இளைஞர்களை அச்சுறுத்தவும் தமிழ் மக்களை துன்புறுத்தவுமே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பாய இருக்கின்றது.

இதேவேளை மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாக இருக்கின்ற நிலையில் அமைச்சர்கள் வடக்கை நோக்கபுறப்படுகிறார்கள்.  இருப்பினும் அவர்களின் போலி முகத்தையும் இரட்டை வேடத்தையும் சர்வதேச சமூகம் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது.

பொருளாதார ரீதியில் அதளபாதாளத்திற்கு போயிருக்கும் இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டுமெனில் முதலில் இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

“வேலை செய்ய முடியாவிட்டால் வீடுகளுக்கு செல்லுங்கள். சம்பளமும் தரமுடியாது.” – ரணில் காட்டம் !

வேலை செய்ய முடிந்தால், வேலை செய்யுங்கள், முடியாவிட்டால், வீட்டிற்குச் செல்லுங்கள். நாங்கள் வேலை செய்யாமல் பணம் வழங்கத் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் கோல்டன் மெங்கோ மண்டபத்தில் இன்று (21) நடைபெற்ற அனுராதபுர மாவட்ட அபிவிருத்தி சபையில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் தேர்தலுக்குச் சென்று ஆட்சியைப் பெற்றுவிடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். கட்சி, நிற, இன, மத பேதமின்றி நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைக்கும் கடந்த காலப் பாடத்தை ஐக்கிய தேசியக் கட்சி கற்றுத் தந்துள்ளது. எதிர்காலத்திலும் நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே எனது நோக்கம்.

 

ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு தாம் யாரையும் கோரவில்லை. நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு காலதாமதம் செய்யாமல் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறேன்.

இப்போது நமக்கு இருக்கும் ஒரே உதவி நாம்தான். வெளியாட்களின் உதவி இப்போது முடிந்துவிட்டது. இந்தியா எங்களுக்கு உதவி செய்துள்ளது. உலக வங்கி மற்றும் பிற நாடுகள் எங்களுக்கு உதவி செய்துள்ளன. இந்த சலுகைகளுடன், விவசாயத்துடன் நமது விவசாயப் புரட்சியைத் தொடங்குவோம்.

இன்று நாட்டு மக்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். வரலாற்றில் இத்தகையதொரு அழுத்தம் ஏற்பட்டதில்லை. அந்த நிலையிலிருந்து நாம் மீள வேண்டும். கடந்த வருடத்தை விட நமது பொருளாதாரம் 8% சதவீதத்தால் குறையும். இது வேகமாக இடம்பெறுகிறது. அதன் பிரதிபலனை அனைவரும் அனுபவிக்க வேண்டிவரும். இவ்வாறு நிகழும்போது, நாம் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்று சிந்திக்க வேண்டும்.

நாம் இந்தப் பெரும்போகத்தில் விவசாயத்தை வெற்றிகரமாகச் செய்தால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். அப்போது இந்தப் பொருளாதார அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

இப்பணியில் குறிப்பாக உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என்ன குறை இருக்கிறது? என்ன செய்ய வேண்டும்? என்பதை உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்கள் அது பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவார்கள். இவை அனைத்தையும் ஒன்றிணைத்துக் கொண்டு இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம்.

கீழ்மட்டத்தில் ஏராளமான அரச அதிகாரிகள் உள்ளனர். ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு சுமார் 09 அதிகாரிகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர்களது கிராம உத்தியோகத்தர் பிரிவைப் பிரித்து ஒவ்வொருவரும் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாங்கள் யாருக்கும் இலவசமாக உணவளிக்க முடியாது. ஏதாவது செய்ய வேண்டும். என்ன ஆனாலும் இலவசமாக சாப்பிட முடியாது, இந்த நாட்டை முன்னேற்றா விட்டால் நானும் வெளியேற வேண்டும். எனவே முதலில் கிராமத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.