17

17

“சர்வதேச நாணய நிதியத்தை சமாளிக்க இலங்கைக்கு உதவிய ஒரே நாடு இந்தியா“ – நினைவுபடுத்துகிறார் எஸ் ஜெய்சங்கர் !

பிராந்தியம் முக்கியத்துவம் பெறுவதால், பல நாடுகள் இந்திய பெருங்கடலில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கின்றன என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட சீன ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான ‘யுவான் வாங் 5’ தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தியப் பெருங்கடல், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மற்றொரு விசேட அம்சமாக மாறாது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா தனது தேசிய நலன்களை கவனித்துக்கொள்ள வேண்டும், ஆனால் பிராந்தியத்தில் தனித்துவத்தை கோர முடியாது. இந்தியாவின் அண்டை நாடுகள் கலாசார ரீதியாக ஒன்றுப்பட்டுள்ளதுடன், பொருளாதார ரீதியாகவும் பிணைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நாணய நிதியத்தை சமாளிப்பதற்கு முன்வருவதற்கு உதவிய ஒரே அண்டை நாடு இந்தியா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் 17 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு !

தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள பல இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தாய்லாந்து காவல்துறையினரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தாய்லாந்தின் தென் பகுதியில் பட்டணி, நாராதிவத், யால ஆகிய நகரங்களில் உள்ள 17 இடங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த குண்டு வெடிப்புகள் மற்றும் தீவைப்புச் சம்பவங்களில் மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் பெரும்பாலும் சிறிய கடைகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இடம்பெறுள்ளன. நேற்று (16) இரவு சந்தேக நபர் ஒருவர் யால, யஹா மாவட்டங்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் மற்றும் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து கறுப்பு பை ஒன்றை அங்கு வைத்து விட்டு சென்றுள்ளார்.

அத்துடன், மரணிக்க விரும்பவில்லை என்றால், அங்கிருந்து வெளியேறுமாறு ஊழியர்களுக்கு எச்சரித்துள்ளதாக தாய்லாந்து காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும், ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறிய 10 விநாடிகளுக்குப் பின்னர் குண்டு வெடித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் இந்தியாவின் அதானி குழுமத்திற்கு !

500 மில்லியன் டொலர் முதலீட்டிற்கு இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் பூனேரியில் 234 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி பசுமை சக்திக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர், இலங்கை மின்சார சபை மற்றும் நிலையான அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

மின்சார சபை சட்டத் திருத்தங்கள் காரணமாக தாமதமான 46 திட்டங்களில் 21 திட்டங்களுக்கு அடுத்த வாரம் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் 26 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முன்மொழிவுகளுக்கு தற்காலிக அனுமதி அளிக்கப்பட்ட ஆர்வங்களின் வெளிப்பாட்டில் இருந்து அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏனைய திட்டங்களும் 30 நாட்களுக்குள் மதிப்பீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.