09

09

தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து சீனா போர் பயிற்சி – தொடரும் பதற்றம் !

சீனாவில் 1927-ம் ஆண்டு முதல் 1949-ம் ஆண்டு வரை நடந்த உள்நாட்டு போருக்கு பின் தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக உருவானது. ஆனால் சீனாவோ தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என்று தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் உலகின் பிற நாடுகள் தைவானின் சுதந்திரத்தை ஆதரிப்பதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. ஆனால் அதை மீறி தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது.

 

இந்த விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு நீடிக்கும் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவானுக்கு சென்றார். இதனால் கடும் கோபம் அடைந்த சீனா தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து கடல் மற்றும் வான்வெளியில் போர் பயிற்சியை தொடங்கியது. சீன நேரப்படி கடந்த 4-ந் திகதி மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த போர் பயிற்சி 8-ந் திகதி மதியம் 12 மணி வரை தொடரும் என சீன இராணுவம் அறிவித்தது. அதன்படியே நேற்று முன்தினம் மதியம் 12 மணி வரையில் தொடர்ந்து 4 நாட்களாக சீனா இராணுவம் கடுமையான போர் பயிற்சியில் ஈடுபட்டது.

 

சீன இராணுவத்தின் இந்த போர் பயிற்சி தங்கள் நாட்டின் மீது படையெடுப்பதற்கான ஒத்திகை என தைவான் குற்றம் சாட்டியது. இந்த நிலையில் சீன இராணுவம் நேற்று தைவானை சுற்றி புதிய போர் பயிற்சியை தொடங்கியது. கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் மூலம் கடல்வழி தாக்குதல் மற்றும் தொலைதூர வான்தாக்குதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் இந்த போர் பயிற்சி நடத்தப்படுவதாக சீன இராணுவம் கூறியது. அதேசமயம் இந்த புதிய போர் பயிற்சி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதை சீன இராணுவம் தெரிவிக்கவில்லை. தைவானை சுற்றி தொடர்ந்து 4 நாட்கள் போர் பயிற்சியை நடத்திய பின்னர் சீனா மீண்டும் மிகப்பெரிய போர் பயிற்சியை தொடங்கி இருப்பதால் தைவான்-சீனா இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

உக்ரைனுக்கு தொடர்ந்தும் ஆயுதங்களை வழங்கி போரை தூண்டும் அமெரிக்கா !

உக்ரைனுக்கு மேலதிகமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஆயுத பாதுகாப்பு உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைன் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த உதவி வழங்கப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்த உதவி மூலம் உக்ரைன் படைகள், ரஷ்ய படைகளை தாக்க உதவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

75,000 ரவுண்டுகள் கொண்ட பீரங்கி வெடிபொருட்கள் மற்றும் 50 கவச மருத்துவ சிகிச்சை வாகனங்கள் ஆகியவை இதில் அடங்கும். கணிசமான அளவு கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட அமெரிக்க உதவிகள் உக்ரைன் மக்களையும் அந்த நாட்டையும் பாதுகாக்கவும் என்று பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் விடுவிக்கப்படும் வரை நாங்கள் தொடர்ந்து அந்நாட்டுக்கு ஆதரவு அளிப்போம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அன்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.

இதே வேளை போரை முடித்துவைப்பதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளாலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி போரை தூண்டுவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகின்றது.

இதே நேரம் ரஷ்யா – உக்ரைன் போரினால் தொடர்ந்தும் பல நாடுகளில் உணவுக்கான தட்டுப்பாடு அதிகரித்துச்செல்கின்றது. இதனை கருத்தில் கொண்டு போரை முடித்து வைக்காது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எந் தமுயற்சியும் மேற்கொள்ளாது  போரை தூண்டி விட்டு தங்களுடைய நீண்டகால விரோதியான ரஷ்யாவை பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பல அரசியல் விமர்சகர்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதே வேளை சீனாவுடனான ஆதிக்கப்போரை தாய்வானை சீனாவுக்கு எதிராக தூண“்டிவிடுவதன் மூலம் அமெரிக்கா தீவிரமாக செயற்படுத்துவதால் தென்சீனக்கடல் பகுதியில் போர் ஏற்படுவதற்கான அபாயமான சூழல் உருவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.