10

10

முடிவுக்கு வந்ததது காலிமுகத்திடல் போராட்டம் – ரணிலை ஜனாதிபதியாக்கியதை தவிர எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத சிறுபிள்ளை வேளாண்மை !

தொடர்ச்சியாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ராஜபக்சக்களின் ஆட்சியே என குற்றஞ்சாட்டப்பட்டு காலி முகத்திடலில் ஆரம்பித்த போராட்டத்தால் ராஸபக்சக்களின் ஆட்சி கவிழ்க்கப்படவும்  இன்று கோட்டாபய சிங்கப்பூரில் அடைக்கலம் கோருவதற்கும் இலங்கை ஜனாதிபதியாக  ரணில் விக்ரமசிங்க பதவியேற்பதற்கும் காரணமானது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் நோ டீல் கம என ரணிலுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்ட இயக்கம் மௌனித்துப்போனதுடன் – அடுத்தடுத்து கோட்டா கோ கம போராட்டத்தின் முக்கியமான  போராட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டனர். ஒரு பக்கத்தில் ஆட்சியை பிடிப்பதற்கான இடதுசாரிகளின் போராட்டம் தான் கோட்டாகோகம என பேசப்பட்ட நிலையில் போராட்டத்துக்கு முன்னணியில் நின்ற செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாட்டிலிருந்து கிடைத்த அதிகப்படியான நிதியுதவி, ரணில் பதவியேற்றதும் தொடர்ந்து பேணப்பட்ட  போராட்டக்காரர்களின் மௌனம் என பல விடயங்கள் போராட்டம் ரணிலுக்கு சார்பான மேற்குலக நாடுகளால் நகர்த்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பார்க்கப்பட்டது.

 

இந்த நிலையில், காலிமுகத்திடல் பகுதியில் கடந்த 125 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் அங்கிருந்து வாபஸ் பெறப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் நேற்றையதினம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக  09.08.2022 காலி முகத்திடல் போராட்டத்திற்கு மக்கள் வராவிட்டால் தானும் ஏனைய மக்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவோம் என போராட்ட களத்தில் தங்கியிருந்த வணக்கத்திற்குரிய தம்ம சுஜாத தேரர் தெரிவித்திருந்தார்.

அரசுக்கெதிரான இன்றைய போராட்டத்தில் மக்களை சுனாமியாக கொழும்புக்கு வருமாறு கோரப்பட்ட போதிலும் இன்று காலி முகத்திடலில் மக்கள் எவரும் ஒன்றுதிரளவில்லை.இதனால் போராட்டம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

இந்த நிலையிலேயே போராட்டக்காரர்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

 

போராட்டத்தில் எந்தவொரு வலுவான கோரிக்கைகளையும் இந்த போராட்டக்காரரர்கள் முன்வைக்கவில்லை. பாரிய மக்கள் போராட்டம் என கூறப்பட்டதே தவிர ஆக்கபூர்வமான வெற்றிகள் எவையுமே கிடைக்கவில்லை. பொருளாதார மீட்பையே வலியுறுத்தியதாக இந்த போராட்டக்காரர்கள் கூறியிருந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நிலை இன்னமும் அதளபாதாளத்திலேயே வீழ்ந்து போயுள்ளது. சுருக்கமாக சொல்வதாயின் சமூக வலைத்தளங்களில் இயங்குநிலையில் உள்ள ஒரு இளைஞர் கூட்டமும் – அரசியல் லாபமீட்ட முனைந்த சில பெரியவர்களுமாக சேர்ந்து செய்த இந்த போராட்டம் சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பது போல எந்த வெற்றியும் தராது முடிந்து போயுள்ளது.

 

இந்த போராட்டங்களின் ஒரே விளைவு மக்களின் ஆணையால் வழங்கப்படாத ரணிலின் நீண்ட கால ஜனாதிபதி இருக்கையை அவர் பிடித்துக்கொண்டது மட்டுமே. வேறு எந்த மாற்றத்தையுமோ – சிங்களவர்களின் ஆதிக்க மனோநிலை சார்ந்த எந்த மாற்றத்தையுமோ இந்த போராட்டங்கள் வழங்கவில்லை என்பதே உண்மை.

அமெரிக்க – ஐஎம்எப் க்கு எதிரான பதிவை பேஸ்புக் முடக்கி உள்ளது!!!

தேசம்நெற்றில் அமெரிக்க – ஐஎம்எப் க்கு எதிராக எழுதப்பட்ட கட்டுரையை: “ராஜபக்சா அன் அமெரிக்க – ஐஎம்எப் ரொம் அன் செரித் தொடர்! வெல்வது யாரோ?” சமூகவலைத்தளமான பேஸ்புக் முடக்கி உள்ளது. யூலை 30இல் இல் தேசம்நெற்றில் வெளியான கட்டுரை, அதனை எழுதிய கட்டுரையாளரால் அவருடைய முகநூல் தளத்திலும் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. ரணில் விக்கிரமசிங்கவின் படத்தோடு வெளியான கட்டுரையை பேஸ்புக் முடக்கியுள்ளது. குறிப்பிட்ட கட்டுரையை அருகில் உள்ள இணைப்பில் காணலாம். https://www.thesamnet.co.uk//?p=87861

அமெரிக்க ஐஎம்எப் இன் மிலேச்சத்தனமான திறந்த பொருளாதாரக் கொள்கையை கடுமையாக விமர்சித்து இருந்த இக்கட்டுரை, காலிமுகத்திடல் போராட்டத்தை அதன் தொடர்ச்சியாக குறிப்பிட்டதுடன் பாகிஸ்தானில் இம்ரான் கானை ஆட்சித் தலைமையில் இருந்து நீக்கிவிட்டு தங்களுக்கு சாதகமானவர்களை அங்கு ஆட்சியில் அமர்த்தி இருந்ததையும் அக்கட்டுரை சுட்டிக்காட்டி இருந்தது. கோட்டாபாய ராஜபக்ச ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டு ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் அமர்த்தப்பட்டதும், இலங்கையில் அமெரிக்க – ஐஎம்எப் நலன்களைப் பாதுகாக்கவே என்பதையும் அக்கட்டுரை தெளிவுபடுத்தி இருந்தது.

சமூக வலைத்தளமான பேஸ்புக் – முகநூல் கருத்தியல் சர்வதிகாரத்தை நிறுவுவதில் பெரும்பிரயத்தனம் செய்து வருகின்றது. இவ்வாறு கட்டுரைகள் ஆக்கங்கள் முடக்கப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல. பல ஆயிரக்கணக்கானோரின் லட்சக்கணக்கானோரின் முகநூல்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன. முன்னர் பயங்கரவாத நடவடிக்கைகள், தொடர்கொலைகள், மற்றும் குற்றச்செயல்களுக்காகவே குறிப்பாக அறியப்பட்ட படங்களை வைத்து பதிவுகளை நீக்கி வந்த முகநூல் தற்போது பதிவுகளின் உள்ளடக்கத்தையும் அதன் ஆழமான கருத்தியலையும் ஆராய்ந்து அதற்கேற்ப பதிவுகளை நீக்கி வருகின்றது. இதன் மூலம் கருத்தியல் சர்வதிகாரம் ஒன்றை நிறுவ முயல்கின்றது. இதில் தேசம்நெற் போன்ற சின்னஞ்சிறு இணையங்கள் மட்டுமல்ல முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம் கூட மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பை இழக்கின்றார். எந்த பேஸ்புக் அவரை ஜனாதிபதி ஆக்கியதோ அதே பேஸ்புக் இன்று அவரை ஓரம்கட்ட முயற்சிக்கின்றது.

உலகம் தட்டை என்றும் சூரியன் தான் பூமியைச் சுத்துகிறது என்று முகநூல் தீர்மானித்தால் அதுவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக்கப்பட்டுவிடும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. முதலாளித்துவத்தின் அதீத உற்பத்தியும் ஆதிக்கமும் (mass production) எவ்வளவு ஆபத்தானதோ அதனைக்காட்டிலும் ஆபத்தானது சமூகவலைத்தளங்களின் பெரும் தொடர்பாடல் (mass communication). உலகத்துக்கு ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்கிறோம் என்ற பெயரில் முதலாளித்துவ தொழில்நுட்பம் வழமைபோல் உலகை தன்னுடைய சர்வதிகாரத்திற்குள் கொண்டுவந்து இதுவரை பொருளாதார அடிமைகளாக இருப்பவர்களை கருத்தியல் அடிமைகாகவும் என்றென்றைக்கும் கட்டுக்களை உடைக்க முடியாதவர்களாகவும் ஆக்குகின்றது.