உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

சாணக்கியன் – செல்வம் கிளீன் சிறிலங்கா விசாரணைக்குள் வருகிறார்களா ?

சாணக்கியன் – செல்வம் கிளீன் சிறிலங்கா விசாரணைக்குள் வருகிறார்களா ?

கடந்த ஆண்டு யூலை 25 அபிவிருத்திக்காக இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு கிடைத்த 400 மில்லியன் நிதியை அவர் திறம்பட செலவழியாமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டுகிறார் ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்ரனிசில் ராஜ்குமார்.

அதேசமயம் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

அநுரவின் கிளீன் சிறிலங்கா திட்டத்தின் மூலம் சாணக்கியனின் ஊழலை விசாரிக்கும் படி நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் அறை கூவல் விடுத்தார். சாணக்கியனின் அநுசரணையில், கல்லாத்தில் ஒரு கூட்டுறவுச் சங்க கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு 50 இலட்சம் ரூபாய்களே செலவிடப்பட்டதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது என கூறும் அன்ரனிசில். பூரணமாக கட்டி முடிக்கப்படாத கட்டத்திற்கு 50 இலட்சம் செலவானதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது என்கிறார். பூரணமாகாத கட்டத்தின் படங்களையும் செய்தியாளர் மாநாட்டில் காட்டினார் அன்ரனிசில். அவர் மேலும் தான் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்ட ஆவணங்களின் அடிப்படையில் புள்ளிவிபரங்களை குறிப்பிட்டு மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் விநோதமான ஒரு கோரிக்கையை அனைத்து மத குருமார்களிடம் முன்வைத்தார். அதாவது மக்களை கசக்கி பிழிந்து பெறப்பட்ட வரிப்பணத்தையே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் மத ஸ்தாபனங்களுக்கு ஒதுக்குகிறார்கள். எனவே அந்த கொடைகளை பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தந்தார் என ஒலிபெருக்கியில் பிரச்சாரம் செய்வது ஏனைய கட்சி உறுப்பினர்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஏனவே சாணக்கியனுக்கு இலவச விளம்பரம் செய்ய வேண்டாம் என மறைமுகமாக கேட்டுக் கொண்டார்.

 

மக்களோடு மக்களாக உலவும் என்.பி.பி பா உ க்கள், அமைச்சர்கள் !

மக்களோடு மக்களாக உலவும் என்.பி.பி பா உ க்கள், அமைச்சர்கள் !

தொடருந்து சேவையில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மக்களோடு மக்களாக தொடருந்தில் பயணித்துள்ளார்.

இதன்போது, தொடருந்தில் தன்னுடன் பயணித்த பயணிகளிடம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கலந்துரையாடிய காணொளி பலருடைய கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

அடிக்கடி இடம்பெறும் தொடருந்து தாமதங்கள், மின் விசிறிகள் பழுது, தொடருந்துகளில் ஏறுவதில் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் தொடருந்து நிலையங்களில் சுகாதார சீர்கேடு, பாதுகாப்பற்ற பாழடைந்த தொடருந்தை தொடர்ந்து பயன்படுத்தல் போன்ற பிரச்சினைகளை பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேட்டறிந்துள்ளார்.

இதே போன்று யாழ் பா உ க இளங்குமரன் யாழ் பஸ்தரிப்பு நிலையத்திற்குச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

முன்னதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மழைவெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியான கள ஆய்வு மூலம் ஆராய்ந்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தது மீனவர்கள் பலரையும் மகிழ்ச்சிப்படுத்தியிருந்தது.

தமிழ் பகுதியில் தமிழுக்கு முன்னுரிமை வேண்டும் – அமைச்சர் சந்திரசேகர் ! முதுகெலும்பற்ற தமிழ் தேசியம் மௌனம் !

தமிழ் பகுதியில் தமிழுக்கு முன்னுரிமை வேண்டும் – அமைச்சர் சந்திரசேகர் ! முதுகெலும்பற்ற தமிழ் தேசியம் மௌனம் !
இந்திய அரசின் நிதி பங்காளிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மையமானது திருவள்ளுவர் கலாச்சாரம் மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டமை , குறித்த நிகழ்வின் திரையில் தமிழ்மொழி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டமை என பல விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இது தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் மக்கள் வாழும் பகுதியில் தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இலத்திரனியல் திரையில் தமிழுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டமை கவலை தரும் விடயமாக இருந்தது. அதனைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். திருவள்ளுவர் கலாச்சார மையம் எனப் பெயர் மாற்றியது குற்றம் அல்ல. யாழ்ப்பாணத்திற்கே உரித்தான பெயர்களான யாழ். கலாச்சார மையம் அல்லது யாழ். பண்பாட்டு மையம் என்ற பெயர் சூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து எனவும் நிச்சயமாக அது தொடர்பில் கலந்துரையாடி இனிவரும் காலங்களில் தவறுகள் இடம்பெறா வண்ணம் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
யாழில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றப்பட்ட பின்னணியில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்க முனைகின்ற தீய சக்திகளின் மறைகரம் இருக்குமோ என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஆனால் இவ்விடயம் தொடர்பில் முதகெலும்பற்ற தமிழ் தேசியவாதிகள் மௌனம் காத்தனர். யாழ் மண்ணில் தமிழுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டது தொடர்பில் அவர்கள் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. தங்கள் எஜமானர்களான இந்தியத் தூதரக அதிகாரிகள் மனம் கோணக்கூடாது என அவர்கள் மௌனம் காக்கின்றனர். இது விடயத்தில் சமூக வலைத்தளங்களும் பொங்கி எழுந்துள்ளன. ஆனால் தமிழ் தேசிய பாரம்பரிய ஊடகங்கள் இதுபற்றி எதுவும் தெரியாதது போல் அடக்கி வாசித்தனர்.
யாழ் மண்ணில் இந்திய தூதரக அதிகாரிகள் ஏதேச்சையாக தாங்கள் நினைத்தபடி நடக்கத் தலைப்படுகின்றனர். அப்பிரதேச மக்களோடு மக்கள் பிரதிநிதிகளோடு கலந்துரையாடாமல் பெயர் மாற்றம் மேற்கொண்டுள்ளனர். அமைச்சரைக்கூட எழும்பி இடம்மாறியிருக்க நிர்ப்பந்தித்துள்ளனர். இந்நிலைமைகளுக்குக் காரணம் முதகெலும்பற்ற தமிழ் தேசியவாதிகள் கொடுத்த இடமே.

மக்கள் எங்களுக்கு ஆறு மாதங்களை இல்லை ஐந்து ஆண்டுகளை தந்திருக்கிறார்கள் – ரில்வின் சில்வா

மக்கள் எங்களுக்கு ஆறு மாதங்களை இல்லை ஐந்து ஆண்டுகளை தந்திருக்கிறார்கள் – ரில்வின் சில்வா

அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால், இந்த வருடம் ஏப்ரலில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம் என ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டை பௌதீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் மாற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும், அதற்கான முயற்சியில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்த ரில்வின் சில்வா, நாட்டை மாற்றுவதற்கு மக்கள் 5 வருட ஆணையை வழங்கியுள்ளதாகவும், முன்வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களால் யாரும் கலங்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை பௌதீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் மாற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அதற்கான முயற்சியில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டை மாற்றுவதற்கு மக்கள் 5 வருட ஆணையை வழங்கியுள்ளனர், முன்வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களால் யாரும் கலங்க வேண்டாம்.

மோசடி மற்றும் ஊழலை தடுக்க முயற்சிக்கும் போது, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அதை எதிர்க்கின்றனர். நாங்கள் வீதி விதிகளை அமுல்படுத்த முயற்சிக்கும்போது, விதிகளை கடைபிடிக்க தயங்குபவர்கள் அதை எதிர்க்கின்றனர் என்றார்.

 

அரசாங்கத்திடம் வேலையில்லை ஆனால் வேலைகேட்டுப் போராட்டம் ! தனியார் நிறுவனங்களில் வேலையிருக்கு ஆனால் விண்ணப்பிக்கிறார்கள் இல்லை ! 

அரசாங்கத்திடம் வேலையில்லை ஆனால் வேலைகேட்டுப் போராட்டம் ! தனியார் நிறுவனங்களில் வேலையிருக்கு ஆனால் விண்ணப்பிக்கிறார்கள் இல்லை !

யாழ்ப்பாணத்தில் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தால் நேற்றையதினமும் தமக்கு அரசாங்க வேலை வழங்குமாறு கோரிய போராட்டம் ஒன்று வடக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் 14 லட்சமாக தேவைக்கு மிக அதிகமாக உள்ள அரச பணியாளர்களை ஏழு லட்சமாக குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. ஆனால் தனியார் துறையில் பல வேலைகளுக்கு வெற்றிடங்கள் உள்ளது. ஆனால் அதற்கு யாரும் விண்ணப்பிக்கின்றார்களில்லை.

அரசவேலைகளைப் பெற்றால் வேலை செய்யாமலேயே சம்பளம் எடுக்கலாம் என்ற மனப்பாங்கு சிலரிடம் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே அரசாங்க வேலை தான் வேண்டும் என முயற்சிக்கின்றனர் என்ற கருத்துப்பட ஆளநர் நா வேதநாயகன் அண்மைய நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த வேலையற்றவர்களின் போராட்டங்கள் தற்போது நகைச்சுவையாகும் அளவுக்கு அவர்களது நடவடிக்கைகள் அமைந்துள்ளது.

அரசாங்கம் வெற்றிடங்களை நிரப்பும் நிலையில் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளாது, இதன்பொழுது கருத்து தெரிவித்த வட மாகாண பட்டதாரிகள் சங்க தலைவர், வடக்கில் பல்வேறு திணைக்களங்களில் வெற்றிடங்கள் உள்ளன. அந்த வேலைவாய்ப்புக்கள் எமது பட்டதாரிகளுக்கு வழங்கப்படவேண்டும். இதேவேளை இன்று இந்த கல்வி திட்டத்தின் ஊடாக முறையான தகுதி திறனை நாம் கொண்டிருக்கின்றோம். எமக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை எனில் அதற்கு முழுப் பொறுப்பும் இந்த கல்வி திட்டத்தினை உருவாக்கிய – கொண்டிருக்கக்கூடிய அரசினதே ஆகும் என தெரிவித்தார்.

இதன் போது வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள், வீதியை மறிக்க முற்பட்டதால் பொலிஸாருடன் தர்க்கம் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து குறித்த சிலரை ஆளுநர் பேசுவதற்கு அழைத்தார்.

வேலையில்லாப் பட்டதாரிகள் பெரும்பாலும் சான்றிதழ்களுக்காக கலைப்பாடங்களைக் கற்றவர்களாகவே உள்ளனர். ஏனைய துறைசார்ந்த பாடங்களைக் கற்றவர்கள் வேலையில்லாமல் யாரும் இல்லை. துறைசார்ந்த திறமையானவர்கள் இல்லாததால் தெற்கிலிருந்து அவர்களை வேலைக்கு அழைத்து வரவேண்டியதைச் சுட்டிக்காட்டியிருந்த ஆளுநர் வேதநாயகன், வேலைக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார்.

போராட்டக்காரர்களைச் சந்தித்த ஆளுநர் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனை நாடு முழுவதும் இருப்பதாகவும் இது தொடர்பான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டு அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார். கலைப்பீடப் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில் அவரது பதில் திருப்தியானதாக இல்லை என்றும் ஆளுநரைச் சந்தித்த பட்டதாரிகள் தெரிவித்தனர்.

 

உலக சந்தைக்கு எண்ணெய் வழங்கும் நாடாக இலங்கையை மாற்றுவோம் – மத்திய கிழக்குக்கு விரைவில் பயணமாகிறார் ஜனாதிபதி அனுர !

உலக சந்தைக்கு எண்ணெய் வழங்கும் நாடாக இலங்கையை மாற்றுவோம் – மத்திய கிழக்குக்கு விரைவில் பயணமாகிறார் ஜனாதிபதி அனுர !

நாட்டுக்கு தேவையான எண்ணெய் விநியோகத்துக்கு திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய் தாங்கிகள் தேவைக்கு அதிகமானவை என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

1 மில்லியன் மெட்ரிக் தொன் மொத்த சேமிப்புத் திறன் கொண்ட 99 தொட்டிகளைக் கொண்ட திருகோணமலை வளாகம், 1960 களில் பிரிட்டிஷ் நிறுவனத்திடம் இருந்து கையகப்படுத்தப்பட்டதிலிருந்து பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

திருகோணமலைக்கு இவ்வளவு எண்ணெய் தாங்கிகள் தேவையில்லை. பிராந்திய எண்ணெய் விநியோகத்திற்கு 24 எண்ணெய் தாங்கிகள் இருந்தால் போதுமானது. 24 ஐ எமது பெற்றோலிய கூட்டுத்தாபணத்திற்கு எடுத்துகொண்டு ஐ ஓ சி க்கு 10 எண்ணெய் தாங்கிகளை ஒதுக்கினோம். எமக்கு 61 எண்ணெய் தாங்கிகள் எஞ்சின. திருகோணமலையில் மேலதிகமாக உள்ள 61 எண்ணெய் தாங்கிகளை , இந்திய நிறுவனமும் பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனமும் இணைந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணித்து எண்ணெய் தாங்கிகளில் சேமித்து வைத்து உலக சந்தைக்கு எண்ணெய் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

இதேவேளை, ஜனாதிபதி விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு நன்மை பயக்கும் வகையிலான ஒப்பந்தங்கள் மூலம் எரிபொருளை இலங்கைக்கு கொண்டு வருவதில் தொடர்பில் இந்த கலந்துரையாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்.பி.பி அரசிலும் தொடரும் வனவள – தொல்லியல் திணக்களங்களின் அத்துமீறல்

என்.பி.பி அரசிலும் தொடரும் வனவள – தொல்லியல் திணக்களங்களின் அத்துமீறல்

வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் காத்திரமான நடவடிக்கையை மேற்கொள்வதாக சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி வாக்குறுதி வழங்கியதாக வன்னி பா.உ ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பா.உ ம.ஜெகதீஸ்வரன் கருத்து வெளியிட்ட போது, “யுத்தம் நிறைவடைந்த பின்னர் வனவள திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட எல்லையிடப்படும் நடவடிக்கையின் போது பொதுமக்களுடைய விவசாய காணிகள் உட்பட பல காணிகள் வனவளத் திணைக்களத்தினுள் உள்வாங்கப்பட்டது.

அவை வனவள திணைக்கத்தால் விடுவிக்கப்படாமையால் பொதுமக்கள் எதுவித அபிவிருத்தி நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியாதுள்ளனர். திணைக்களங்களும் அபிவிருத்தி சார் திட்டங்களினை முன்னெடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து எமக்கு கிடைத்த பல்வேறு முறைப்பாட்டின் அடிப்படையில் சுற்றாடல் அமைச்சர், வனவள பாதுகாப்பு ஆணையாளர், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உடன் கலந்துரையாடப்பட்டது. அதன்போது இதற்கான காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வாக்குறுதி வழங்கியிருந்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் வனவளத்துறையினரின் அத்துமீறல்கள் தொடர்வது மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கடந்த அரசாங்கங்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்.பி.பி அரசாங்கமும் இது தொடர்பில் இன்றுவரை அமைதிகாத்து வருகின்றமை ஏமாற்றமளிப்பதாக தமிழ் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கிழக்கில் திருகோணமலையின் வெருகல் பகுதியில் தொடரும் தொல்லியல் திணக்களத்தின் நில அபகரிப்பு தொடர்பிலும் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதுதொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் நடவடிக்கை அதிருப்தி அளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 

அனுர அலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் உருவாக்கும் மாற்றுப் பாராளுமன்றம் – ரணில் புதிய திட்டம் ! 

அனுர அலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் உருவாக்கும் மாற்றுப் பாராளுமன்றம் – ரணில் புதிய திட்டம் !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மாற்று நாடாளுமன்றத்தை(நிழல் நாடாளுமன்றம்) நிறுவுவதற்கான முன்மொழிவு குறித்து விவாதங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் வி உருத்திர குமார் நாடுகடந்த தமிழீழ அரசின் பாராளுமன்றத்தை உருவாக்கி பிரதமர் ஆனார். இங்கே நாட்டிற்குள் மாற்றுப் பாராளுமன்றம் அமைத்து ரணில் ஜனாதிபதியாக விரும்புகின்றார்.

இந்த மாற்று நாடாளுமன்றத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஆனால் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மூத்த உறுப்பினர்களிடமிருந்து அரசாங்க அமைச்சகங்களின் எண்ணிக்கைக்கு சமமான அமைச்சர்களைக் கொண்ட நிழல் அமைச்சரவை நியமிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மூத்த அரச தலைவர்களுக்கு இலங்கையின் மாற்று நாடாளுமன்றத்தில் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது ஏற்பட்ட என்.பி.பி அனுர குமாரவின் அலையினால் மூத்த அரசியல் தலைவர்கள் உட்பட இருநூற்றுக்கும் அதிகமானோர் மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தனர். மேலும் கடந்த பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்ற 160 வரையானோர் இந்த பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெறாமை உலக அரசியல் நிபுணர்களை வியப்படைய செய்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனநாயக தேர்தல் மூலம் நிராகரிக்கப்பட்ட அத்தனை அரசியல்தலைவர்களும் ஓர் மாற்றுப்பாராளுமன்றத்தை உருவாக்கவுள்ளனர் என்ற தகவல் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. மக்களின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாத அளவுக்கு பதவி மோகம் அவர்களது கண்களை மறைத்துள்ளது.

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் குடும்பஸ்தர் மர்ம சாவு !

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் குடும்பஸ்தர் மர்ம சாவு !

கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை சந்திரகுமார் சந்திரபாலன் எனும் 49 வயதுடைய குடும்பஸ்தர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் எனக் கூறப்படுகிறது. சந்திரபாலனுக்கு எதிராக விடுக்கப்பட்டிருந்த பிடியாணை காரணமாகவே அவர் விசாரணைகளுக்காக கொண்டு செல்லப்பட்டிருந்தார். அவர் கைதாகும் போது மதுபோதையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கைதான நபர் சனிக்கிழமை இரவே உயிரிழந்துள்ளார். அவருடைய உடல் முதலில் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்கு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சந்தேக மரணமாகையால் உடற்கூறு பரிசோதனையில் மேலதிக தகவல்களை பெறும் பொருட்டு சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுள்ளது. இறந்தவரின் உடலில் அடிகாயங்கள் காணப்படுவதால், பொலிஸாரின் சித்திரவதையினால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என உறவினர்களும் அப்பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர்.

இதேமாதிரி 2023 இல் வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகிய நாகராசா அலெக்ஸ் எ‌‌ன்ற இளைஞர் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மகிந்த வீட்டுக்கு மாத வாடகை 46 லட்சம் மக்களின் வரிப் பணத்தில் !

மகிந்த வீட்டுக்கு மாத வாடகை 46 லட்சம் மக்களின் வரிப் பணத்தில் !

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் அரசாங்கம் மீளப்பெறும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். களுத்துறை – கட்டுகுருந்தவில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த ஜனாதிபதி, தற்போதுள்ள சட்டங்களின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒரு குடியிருப்பு அல்லது அவர்களின் சம்பளத்தில் 1/3 பங்கைப் பெற உரிமை உண்டு. அரசாங்கம் இப்போது இந்த நன்மையை ரூ. 30,000 ரொக்க உதவித்தொகையாகக் கட்டுப்படுத்த முடிவுசெய்துள்ளது. இது அவர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கான வாடகை மாதத்திற்கு ரூ. 4.6 மில்லியன் ஆகும். இதில் நில மதிப்பு சேர்க்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவர்களது வீடுகளை காலி செய்யவோ அல்லது வாடகையை செலுத்தவோ தெரிவுகளை வழங்குவோம்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை தவிர அனைத்து அமைச்சர் பங்களாக்களும் ஹோட்டல் திட்டங்கள் அல்லது பிற பொருத்தமான பயன்பாடுகளுக்காக மீண்டும் பயன்படுத்தப்படும் என்றார்.