உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

கோவிட் 19 இன் மீள்வருகையா ? கடந்து வந்த காலங்கள் !

கோவிட் 19 இன் மீள்வருகையா ? கடந்து வந்த காலங்கள் !

உலனத்தின் பெரும்பாலான மாற்றங்கள் கண்டுபிடிப்புக்கள் அழிவுகளைத் தொடர்ந்தே உருவானது. இன்று நாங்கள் அனுபவிக்கின்ற தொழில்நுட்பங்களும் வாழ்க்கை முறையும் இரண்டாவது உலக யுத்தத்தின் விளைவு. இன்று பெண்கள் அனுபவிக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் கூட இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவு தான்.

COVID-19 ஒரு புதிய வாழ்க்கை முறையைக் கற்றுத்தந்து முன்னேற்றங்கள் தொலைவேலை (Work from Home) ஒரு புதிய பணியாற்றும் முறை என அறிமுகமானது. ஆன்லைன் கல்வி, டிஜிட்டல் சுகாதார சேவைகள் முக்கியத்துவம் பெற்றன. மக்கள் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையுடன் செயல்பட்டனர்.

இருப்பினும் தற்போது covid 19 மீண்டும் பரவ ஆரம்பித்து உள்ளமை மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. வருமுன் காப்பதே பொருத்தமானது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந், ஹொங்கொங் ஆகிய நாடுகளில் கோவிட் 19 மீண்டும் தலையெடுக்கின்றதா எனப் புருவங்கள் உயர்கின்றது.

மனித இனத்தின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தொற்றுநோய்களில் ஒன்றாக COVID-19 (கொரோனா வைரஸ் நோய்) கருதப்படுகிறது. இது 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் ஊஹான் நகரில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. குறுகிய காலத்திலேயே உலகெங்கும் பரவிய இந்த நோய், கோடிக்கணக்கான மக்களின் உயிரை வாங்கி அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு துறையையும் மாற்றியமைத்தது.

சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல், சுவை மற்றும் மணம் இழப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தான நிலைகளையும் உருவாக்குகிறது. வைரஸின் வேகமான பரவலைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கு, சமூக இடைவெளி, முகக்கவசம், தடுப்பூசி ஆகியவை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன.

COVID-19 வைரஸ், மருத்துவ ரீதியில் “SARS-CoV-2” என அழைக்கப்படுகிறது. இது முதலில் விலங்குகளில் இருந்த வைரஸாக இருந்து, மனிதர்களிடம் பரவ ஆரம்பித்ததாக நம்பப்படுகிறது. ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவருக்கு சிறுநீரகம், இருமல், தொடுதல் போன்ற வழிகளில் பரவுகிறது.

அதிக வேகத்தில் பரவும் தன்மை காரணமாக, உலக சுகாதார அமைப்பு (WHO) 2020 மார்ச்சில் இதனை “பாண்டமிக்” என அறிவித்தது. அதன் பின்பு உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து, மருத்துவ வசதிகளை மேம்படுத்த தொடங்கின.

மிகவும் மோசமான நிலைமையில், இது குருதிச்செறிவு, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பரிதாப நிலைகளுக்கு வழிவகுக்கும்.உலகெங்கும் இந்த வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
COVID-19 உலகின் இயங்கும் முறைமைகளைத் தற்காலிகமாக முடக்கி வைத்தது. தொழில்கள் மூடப்பட்டன, பணியிழப்பு ஏற்பட்டது, பல நாடுகளில் பொருளாதாரம் சரிந்தது. கோடிக்கணக்கான உயிர்கள் இழந்தன. பள்ளி மற்றும் கல்லூரிகள் அடைக்கப்பட்டதால் மாணவர்கள் ஆன்லைன் கல்விக்கே மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பின. மருத்துவர், செவிலியர்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளானார்கள்.

தனிமைப்படுத்தல், பயம், நோயிழப்பு போன்ற காரணங்களால் மக்களில் மன அழுத்தம், கவலை, மன உளைச்சல் போன்ற மனநிலைச் சிக்கல்கள் அதிகரித்தது.

COVID-19 ஐ கட்டுப்படுத்தும் மிக முக்கியமான வழியாக தடுப்பூசி விளங்கியது. Pfizer-BioNTech, Moderna, AstraZeneca, Covaxin, Covishield ஆகியவை முன்னிலை பெற்ற தடுப்பூசிகளாகும். தடுப்பூசி பெறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம் நோயின் தாக்கம் குறைக்கப்பட்டு, மரண விகிதமும் குறைந்தது.

2025 ஜூன் 4 ஆம் தேதியின்படி, இந்தியாவில் COVID-19 தொற்றுநோயின் நிலைமை மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய COVID-19 நிலவரப்படி 4,302 பேருக்கு நோய் தொற்று அடையாளம் காணப் பட்டு உள்ளது. 24 மணி நேரத்தில் 864 பேருக்கு தொற்றியுள்ளது. மொத்தமாக 44 பேர் உயிரைந்துள்ளனர். 24 மணி நேரத்தில் 7 மரணங்கள் பதிவாகியுள்ளது. முக்கியமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களாக கேரளாவில் 1,373 நோயாளிகள், மகாராஷ்டிரா 510, குஜராத்: 397, டெல்லி: 393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தற்போது பரவி வரும் COVID-19 வைரஸ் வகைகள்: LF.7; XFG; JN.1; NB.1.8.1; இந்த வகைகள் அனைத்தும் Omicron வகையின் துணை வகைகளாகும். NB.1.8.1 வகை தற்போது உலக சுகாதார அமைப்பால் ‘Variant Under Monitoring’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் இடம் இருந்து எம்மை காத்துக் கொள்ள முகக்கவசம் அணியவும், கைகளை அடிக்கடி கழுவவும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களைத் தவிர்க்கவும், அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் தற்போது COVID-19 தொற்று தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் செயல்பாட்டில் உலகளாவிய அதிகரிப்பு 2025 பிப்ரவரி முதல் பதிவாகியுள்ளது.

இலங்கையின் சுவாச கண்காணிப்பு அமைப்பின்படி, 2024 ஆம் ஆண்டில், SARS-CoV-2 வைரஸிற்காக சோதிக்கப்பட்ட சுவாச மாதிரிகளில் 3% நேர்மறையான முடிவுகளை வழங்கியுள்ளன. இந்த எண்ணிக்கை 2024 மே மாதத்தில் 9.6% ஆக உயர்ந்தது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டு இதுவரை SARS-CoV-2 வைரஸின் சராசரி நேர்மறையான முடிவுகள் கிட்டத்தட்ட 2% ஆக உள்ளன. தற்போது சிறியளவிலான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, உடனடியாக எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்று கூறியுள்ளார். இருப்பினும், அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் இலங்கையில் பரவி வருவதாக பகிரப்படும் பல தகவல்கள் உண்மை இல்லை என Fact Crescendo போன்ற உண்மை கண்டறியும் நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பிற நாடுகளில் ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து போன்ற சில நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவ, சமீபத்திய கொவிட்-19 வைரஸின் திரிபு மிகவும் பாரதூரமானது அல்ல எனவும், உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியில் அதிக கவனம் செலுத்தியதால் வைரஸின் வீரியம் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். சுருக்கமாக, இலங்கையில் கோவிட்-19 வைரஸ் தொடர்பாக சிறியளவிலான அதிகரிப்பு காணப்பட்டாலும், குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. மேலும், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

COVID-19 என்பது வெறும் ஒரு தொற்றுநோய் மட்டுமல்ல. அது மனித இனத்திற்கே ஒரு நெருக்கடியான பாடமாக இருந்தது. இது நம்மை எச்சரிக்கிறது மனிதன் இயற்கையுடன் சுமூகமாக வாழ்கின்ற அளவிற்கே பாதுகாப்பானது.

நாம் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட தொற்றுநோய்களை எதிர்கொள்ள எச்சரிக்கையுடன், முன்னெச்சரிக்கையுடனும், அறிவுடனும் செயல்பட வேண்டும். சுகாதார ஒழுங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது அறிவு ஆகியவை இனிமேலும் நம் வாழ்க்கையில் முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.

COVID-19 ஒரு எச்சரிக்கையாகும் இயற்கையோடு நமக்கு இருக்க வேண்டிய சமநிலையை உணர்த்தியது. எதிர்காலத்தில் இப்படிப் பட்ட தொற்றுநோய்களை எதிர்கொள்வதற்கான சீரான மருத்துவ மற்றும் சமூக தயாரிப்புகள் அவசியம் என்பதை COVID-19 நமக்கு உணர்த்தியுள்ளது.

இலங்கையில் ஓக்ரோபர் 27, 2024 திகதியில் வெளியான விபரங்களின் படி கோவிட் இனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 6,72,754; இறந்தவர்களின் எண்ணிக்கை: 16,897; அன்று பாதிக்கப்பட்டிருந்தவர்கள்: 5 பேர் மட்டுமே. நோயிலிருந்து குணமடைந்தவர்கள்: 6,55,852 பேர்; இறப்பு வீதம்: 2.5 சதவிகிதம்; பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 36 இலட்சம் பேர்.

பெண்களின் நாளாந்த வாழ்வை அச்சுறுத்தும் – கர்பணித் தாயின் தலையை வெட்டிக் கொய்யும், அதனைக் கொண்டாடும் காட்டுமிராண்டி மனநிலை !

பெண்களின் நாளாந்த வாழ்வை அச்சுறுத்தும் – கர்பணித் தாயின் தலையை வெட்டிக் கொய்யும், அதனைக் கொண்டாடும் காட்டுமிராண்டி மனநிலை !

நேற்றைய தினம் வவுனியாவில் கணவனால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலை ஆசிரியையும் கர்ப்பணித் தாயுமான சொர்ணலதா விவகாரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் சமூகத்திற்கு ஒரு மிகப் பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் பகுதியில் குடும்ப வன்முறையின் உச்ச கட்டமாக இதனைப் பார்க்க வேண்டும். கொலையான பெண் தவறு இழைத்தாரா?அல்லது இழைக்கவில்லையா? என்ற விவாதத்திற்கு அப்பால் அப்பெண்ணை கொலை செய்யும் அதிகாரம் கொலை செய்த ரா ஜூட் என்ற கணவனுக்கு இல்லை.

யுத்த காலம் கண்டிராத கொடூரத்தை தமிழ் பெண்கள் தற்போது அனுபவிக்கின்றனர். புங்குடுதீவு வித்தியா முதல் வவுனியா சொர்ணலதா வரை தமிழ் சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏதும் நிகழவில்லை. மாறாக பெண்களை பாலியல் பண்டங்களாகவும் பிண்டங்களாகவும் நோக்கும் கருத்தியல் தமிழ் தேசிய மனநிலையாக ஆண்கள் மத்தியில் உருவாகி வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் எந்தச் சந்தர்ப்பத்திலும் பெண்களை கண்ணியக் குறைவாக அணுகவில்லை. ஆனால் பிரபாகரனையும் மாவீரர்களையும் வைத்து அரசியல் செய்யும் அரசியல் தலைவர்களும் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் அவர்களது பெயரைச் சொல்லும் ரிக்ரொக் விசிலடிச்சான் குஞ்சுகளும் தமிழ் தேசியத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டு பாலியல் லஞ்சம், பாலியல் சுரண்டல், பெண்களை இழிவுசெய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இந்த தமிழ் தலிபான்கள் தமிழ் மக்களுடைய முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். ஒரு கர்பிணித் தாயின் தலையைக் வெட்டிக் கொய்வதும் அவர்களை மாவீரர்களாக்குவதும் இதிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது.

ஆசிரியையின் படுகொலை விவகாரத்தில் வழமை போலவே சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடும் பெரும்பாலான தமிழ் ஆண்கள் கொலை செய்த கணவனை மாவீரனாக புகழ்கிறார்கள். வக்கிரமான கருத்துக்களை பதிவிடுகிறார்கள். மேலும் மற்றைய ஆண்களை கத்திகளை தீட்டி தயாராக வையுங்கள் என உற்சாகப்படுத்துகிறார்கள். கொலையான ஆசிரியை தன்னை விட வயது குறைந்த இளைஞர் ஒருவரோடு உறவில் இருந்தமையே இக்கொலைக்கான பின்னணி என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஏதாவது உண்மை உள்ளதா ? அல்லது வழமையாக சில கணவன்களுக்கு இருப்பது போன்ற சந்தேக புத்தியில் வந்ததா? அல்லது படுகொலை செய்யப்பட்ட பெண் தொடர்பில் குறித்த இளைஞன் பரப்பிய கிசுகிசுவா ? என்ற எவ்வித விசாரணையும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிரான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

இந்த ஆண்மையவாதச் தமிழ் தலிபான்கள் சொல்வது போல் திருமண உறவைத் தாண்டிய உறவைப் பேணுபவர்களின் தலையை வெட்டிக் கொய்யலாம் என்றால் இந்த சமூகவலைத் தளங்களில் புகழாரம் சூட்டும், மற்றும் பல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆண்களின் தலைகள் பல தடவை கொய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தப் படுகொலை விவகாரம் வெறுமனே திருமண உறவை தாண்டிய உறவு தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் என கடந்து செல்ல முடியாது. திருமண உறவில் நம்பிக்கைத் துரோகம் செய்யும் துணையை கொலை செய்து தான் தண்டிக்க வேண்டும் என்று பாதிக்கப்படுவோர் கிளம்பினால் பொலிஸ் ஸ்ரேசன் வாசலில் நூற்றுக்கணக்கான ஆயிரக் கணக்கான உயிரற்ற மனித தலைகள் தான் உருளும்.

பொதுவில் ஒரு ஆண் திருமண உறவில் இருந்து கொண்டு வேறொரு பெண்ணுடன் உறவை ஏற்படுத்தும் போது அது சமூகத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்துவதில்லை. அந்த விவகாரம் மானம் போன இழிச் செயலாக கருதப்படுவதில்லை. ஆண் என்றால் அப்படித்தான் ”சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் கழுவுவான்” என சமூகம் சமாதானம் கூறுகிறது. மறுபுறமாக பெண் என்றால் “சேலை முள்ளில் விழுந்தாலும், முள் சேலையில் விழுந்தாலும் சேலை தான் கிழியும்“ என பெண்களை பயமுறுத்தி பெண்கள் மீதே பழி போடுகிறார்கள். வவுனியாவில் கொலையான கர்ப்பணித் தாய் மீதான அவரது கொலை வெறித் தாக்குதல் வரலாற்றுக்கு முந்திய கடைத்தனம் மிருகத்தனமானம் நிறைந்தது. இதனை வரவேற்பவர்கள் மிகமோசமான அடிப்படைவாதிகள். இவர்கள் நவீன சமூகத்தில் வாழத் தகுதியற்ற மனிதர்கள். இது பெண்களை உடமையாக பார்க்கும் ஆணாதிக்க கருத்தியலின் மனப்பாங்கின் வெளிப்பாடாகும். கொடூரமாக கொலை செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்க்காக குரல் கொடுக்காத சமூகம் அப்பெண்ணின் நடத்தையே அவர் கொலையானதற்கு காரணம் என அவதூறு பேசுகிறது. இதுவொரு இரட்டைக்கொலை.

சமீபத்தில் மட்டக்களப்பில் பட்டப்பகலில் வீட்டில் தனியே இருந்த 37 வயது குடும்பப் பெண் விதுஷாவும் மர்மமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளி அல்லது கொலையாளிகள் கண்காணிப்புக் கமராப் பதிவு றிசீவரை எடுத்துச் சென்றுள்ளனர். கொலை நடந்து நாலைந்து நாட்கள் கடந்தும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொலையாளிகள் கொலை செய்யப்பட்டவருக்கு தெரிந்தவராக இருக்க வாய்ப்பு உண்டு. கொலைக்கான பின்னணியும் மர்மமாகவேயுள்ளது. பெரும்பாலும் பெண்கள் வீட்டு வன்முறைகளில் தமது கணவன் மற்றும் நெருங்கிய உறவினர்களாலேயே கொல்லப்படுகின்றனர்.

உலகமயமாக்கமும் பரந்துபட்ட இணையப் பயன்பாடும் பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளை அதிகரித்திருக்கின்றன. கட்டற்ற இணையப் பயன்பாடு பெண்கள் மீதான விரோத மனப்பாங்கை மற்றும் கருத்தியலை கட்டியெழுப்ப பேருதவி புரிகின்றன. தற்போதைய நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பெண்களை நிர்வாணமாக்கி அவர்களது படங்களை பகிர்வதையும் அவர்களுக்கு எதிராக கருத்துக்களைப் பதிவதையும் தமிழ் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்நின்று செய்கின்றனர். வேழமாளீதன் போன்ற பாலியல் லஞ்சம் கோருபவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக நியமித்துள்ளார். இவர்களே வெவ்வேறு பெயர்களில் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் வலைத்தளங்களை முகநூல்களை உருவாக்கி பெண்கள் மீதான தங்களுக்கு பிடிக்காதவர்கள் மூலமான தாக்குதல்கலை தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்கின்றனர்.

தனியார் கல்வி நிறுவனத்தின் கலைவிழாவில் நடனமாடிய மாணவியை பாலியல் தொழிலாளியாக சித்தரிக்கும் ஊழல் ஒழிப்பு அணி வன்னியின் அட்டூழியம். நிஜ உலகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகள், ஒடுக்குமுறைகள், வீட்டு வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளுக்காக மேலாக இணையத்தில் மோசமான கருத்தியல் ரீதியான வன்முறைகள் நாள்தோறும் நடக்கின்றன.

எம்பி அர்ச்சுனா இராமநாதனின் பினாமிகளால் நடத்தப்படும் ஊழல் ஒழிப்பு வன்னி அணி என்னும் போலி முகநூலின் பின்னால் மறைந்து கொண்டுள்ள ஒரு பாலியல் வக்கிரம் கொண்ட ஆண்மையவாத கூட்டம் சமூகவலைத்தளங்களில் தமிழ்ப் பெண்கள் மீதான மோசமான தாக்குதலை மேற்கொள்கின்றது. இவர்களே வெவ்வேறு பெயர்களில் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் வலைத்தளங்களை முகநூல்களை உருவாக்கி பெண்கள் மீதான தங்களுக்கு பிடிக்காதவர்கள் மூலமான தாக்குதல்கலை தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்கின்றனர். ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களை நிர்வாணமாக்கி அதன் மூலம் விளம்பரம் தேடுகின்றனர்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக காட்டும் எதிர்வினை தமிழ்ச் சமூகத்தில் மிக அசமந்தமாகவே உள்ளது. இந்தப் போக்கினை சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும் போதும் காணலாம். சமீபகாலங்களாக பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகள் அல்லது இளம்பெண்கள் தொடர்பில் காட்டும் கரிசனத்தை விட சம்பந்தப்பட்ட குற்றம் சுமத்தப்பட்ட ஆண்களை பாதுகாக்கும் சமூக மனப்பாங்கே காணப்படுகின்றது. இந்த பாரபட்சமான வக்கிரமான மனப்பாங்கு ஆண்மையவாத அரசியல், சமூக, சமய மற்றும் கலாச்சார கருத்தியலின் விளைவாகும். இதனை கொழும்பு கொட்டாஞ்சேனையில் ஏப்பிரல் 29 ஆம் திகதி 7 ஆவது மாடியிலிருந்து குதித்த இறந்த மாணவி டில்ஷி அம்ஷிகாவின் தற்கொலை விடயத்திலும் கணவனால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சொர்ணலதா விடயத்திலும் சமூக ஊடகங்களின் பின்னூட்டல்களில் இடப்படும் கருத்துக்களிலிருந்து அப்பட்டமாக தெரிகிறது.

கஜாவின் முன்னணியைக் கைவிடும் தமிழ் மக்கள் ! தமிழ் கட்சிகளும் கைவிடும் அபாயம் !

கஜாவின் முன்னணியைக் கைவிடும் தமிழ் மக்கள் ! தமிழ் கட்சிகளும் கைவிடும் அபாயம் !

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் அரசியல் கண்ணாடியாக உண்மையைப் பிரதிபலித்து நிற்கின்றது. சமூக வலைத்தளங்களும் பாரம்பரிய ஊடகங்களும் கட்டமைத்த பிம்பங்களை இத்தேர்தல் முடிவுகள் தகர்த்து எறிந்துள்ளது என்றால் அது மிகையல்ல. ‘அபிவிருத்தி என்பது சலுகை எங்களுக்கு சலுகை வேண்டாம் உரிமை தான் வேண்டும் என்று கோரி’ தமிழ் மக்களின் முன்னேற்றத்ததைத் தடுத்து வந்தன இந்தத் தமிழ் தேசியக் கட்சிகள். ஆனால் தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளின் அடிப்படை என்ற அபிவிருத்தி என்பதை மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டு அதற்கேற்ப வாக்களித்துள்ளனர். தமிழ் மக்களின் மனோநிலையை G L Tharshan னின் இக்காணொலிப் பதிவு மிகத் தெளிவாக முன்வைக்கின்றது.

இனவாதக் கருத்துக்களை கக்கி உரிமை தவிர வேறேதும் சலுகை வேண்டாம் என்ற கோடீஸ்வரர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தையிட்டி காணிப் பிரச்சினைக்காக ஒவ்வொரு பௌர்ணமியும் போராடி வருகின்றது. உரிமைப் பிரச்சினை, காணிப் பிரச்சினையை முன்வைத்து தன் அரசியல் வாக்கு வங்கியைக் கட்டமைத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி இத்தேர்தலில் மிகுந்த பின்னடைவைச் சந்தித்தது. இக்கட்சியானது உதிரிகளான பலரையும் ஒன்றிணைத்து தமிழரசுக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் ஒரு சவாலாக இருப்பதாக கற்பிதம் செய்திருந்தது.

தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் நேரடிப் பிரதிநிதிகள் போலவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலை தாங்களே முன்னெடுப்பதாகவும் இவர்கள் தங்களைத் தாங்களே நம்ப ஆரம்பித்துவிட்டனர். அதற்கும் ஒருபடி மேலே போய் தேசியத் தலைவருக்குப் பின் அடுத்த தேசியத் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பிரச்சாரப் பிரங்கியான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்தார்.

ஆனால் தேர்தல் முடிவுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கீழ் நிலைக்குத் தள்ளியுள்ளது. 2018 பெப்ரவரியில் நடந்த உள்ளுராட்சித் தேர்தலில் 0.69 வீத வாக்குகளைப் பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வாக்கு வங்கி 0.68 வீத வாக்குகளாகக் குறைந்தது. 85,000 வாக்குளை 2018 இல் பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் 71,000 வாக்குகளையே பெற்று வடக்கு கிழக்கில் 4வாது இடத்துக்கு தள்ளப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்னமும் குண்டுச் சட்டிக்குள் குதிரையோடுவது போல் பெரும்பாலும் குடா நாட்டிற்குள்ளேயே செயல்படும் ஒரு கட்சியாகவே இன்றும் உள்ளது.

சுமந்திரனுக்கு எதிராக தனிப்பட்ட தாக்குதலை நடாத்தி வந்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தங்களுடைய பரம்பரை எதிரியாக உள்ள தமிழரசுக் கட்சியை அதன் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரனை நிராகரிக்க வேண்டும் என்பதையே அவர் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனமாகக் கொண்டிருந்தார். கடந்த பத்து ஆண்டுகளாக சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அவர்களுடைய பிரதான ஆதரவுத்தளமான புலம்பெயர் தமிழர்களும் மேற்கொண்டு வந்தனர். ஆனால் வாக்குரிமையைக் கொண்ட களத்தில் வாழும் மக்கள் தங்கள் வாக்குகளை தமிழரசுக் கட்சிக்கும் சமந்திரனுக்கும் ஆதரவாகத் திருப்பி உள்ளனர். 2018 தேர்தலில் 2.73 விகித வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி கடந்த வாரம் நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் 2.96 விகித வாக்குகளைப் பெற்றுள்ளது.

கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கட்சியாக கூட்டணியாகப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கடந்த வாரம் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் தனித்தப் போட்டியிட்ட போதும் கணிசமான வாக்குகளை அவர் பெற்றிருந்தனர். ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 0.85 வீத வாக்குகளைப் பெற்று 106 ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது. அதே போல் தேசிய மக்கள் சக்தியும் கடந்த காலங்களில் எவ்வித ஆசனங்களும் இல்லாமல் தனது பயணத்தை ஆரம்பித்து இன்று வடக்கு கிழக்கின் இரண்டாவது பெரும் கட்சியாக தன்னை நிலைப்படுத்தி உள்ளது. எம் ஏ சுமந்திரனின் தேர்தல் வியூகம் அவர் இழந்த பலத்தை மீளப் பெறுவதற்கு வாய்ப்பைக் கொடுத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியுடைய அரசியல் செயற்பாடுகள் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் தமிழ், சிங்களக் கட்சிகள் எதிர்கால அரசிலை தலைமுழுக வேண்டும் என்கிறார் ஒரு பெரியவர். அவரின் கணிப்பின் படி தேசிய மக்கள் சக்தி மிக மெதுவாக ஆனால் ஸ்தீரமாக முன்னேறுகின்றது.

அவர்களைக் கையாளும் ஆற்றல் தமிழ் தேசியக் கட்சிகளிடம் போதாமையாக இருப்பதை ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரேன் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சிக்கும் – தமிழ் காங்கிரஸ்க்கும் இடையே உள்ள பரம்பரைப் போட்டியும் தனிநபர் தாக்குதலும், இவ்விரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான சூழ்நிலையைக் கடினமாக்கி உள்ளது. அதனால் எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. இதனை ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரேன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர்கள் யாழ் மாநகர சபையில் ஈபிடிபி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் கூட இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக குருசாமி சுரேன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

 

நாளாந்த பயணம் – இறுதிப் பயணமாகிறது ! 21 பேர் மரணம் ! இலங்கையின் வீதிகள் மரணவாயில்களா ?

நாளாந்த பயணம் – இறுதிப் பயணமாகிறது ! 21 பேர் மரணம் ! இலங்கையின் வீதிகள் மரணவாயில்களா ?

மே 11 கொத்மலையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 21 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயப்பட்டுள்ளனர். இவ்வாவான விபத்துக்கள் நாளாந்த நிகழ்வுகளாகிவிட்டாலும் ஒரே விபத்தில் இவ்வளவு பெரும்தொகையானவர்கள் கொல்லப்பட்டது அண்மையில் நிகழ்ந்த கொடூரமான விபத்தாக மாறியுள்ளது. வழமையாக ஒரு விபத்தில் ஓரிருவரே கொல்லப்பட்டு வந்தனர். இலங்கையில் விபத்துக்கள் தற்செயலானவையல்ல. அவை தினமும் எதிர்பார்க்கப்படுபவையாக உள்ளது. இதற்கு கடந்த தசாப்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் மோசடிகள் முக்கிய காரணங்களாக இருந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் மலையகத்தில் நிகழ்ந்த மற்றுமொரு விபத்தில் வீதிப் பாவனைக்குரிய நிலையில் இல்லாத பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு பள்ளத்தில் வீழ்ந்தில் சிலர் கொல்லப்பட்டனர். இவ்வாறு பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

பாதுகாப்பற்ற – வீதிகள், மோசடியான வீதிப் பாவனைக்குரிய சான்றிதழ்கள், சரியான முறையில் பயிற்றுவிக்கப்படாத அல்லது லஞ்சம் கொடுத்து பெறப்படும் வாகன அனுமதிப் பத்திரங்கள், வீதிப் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காத சாரதிகள் இவ்வாறு பல்வேறு காரணங்கள் இந்த விபத்துக்களுக்கு காரணமாகின்றது. அந்த வகையில் பொருத்தமற்ற வாகனச் சோடிணைகள் அகற்றப்பட்டுள்ளது. ஏனைய விடயங்கள் தொடர்பில் கூடுதல் இறுக்கங்கள் கொண்டுவரப்பட வேண்டும். வீதிப் போக்குவரத்து மிகக் கடுமையாக்கப்பட வேண்டும். நாளாந்த பயணங்கள் இறுதிப்பயணங்களாகக் கூடாது. 2024 இல் மட்டும் 2541 பேர் வீதி விபத்துக்களில் கொல்லப்பட்டுள்ளனர். 2019இல் 3,097 ஆக இருந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் இது இன்னமும் குறைக்கப்பட வேண்டும்.

மேலும் மரணங்களைத் தவிர உடல் ஊனங்கள் மற்றும் குடும்பத்தின் பொருளாதார இழப்பு, மனநிலை பாதிப்பு, எதிர்காலம் என மதிப்பிட முடியாத பல துன்பியலுக்கு இந்த விபத்தக்கள் காரணமாகின்றன. இலங்கை போன்ற 22 மில்லியன் சனத்தொகை கொண்ட ஒரு நாட்டுக் இந்த விபத்துக்களும் அதனால் ஏற்படுகின்ற பொருளாதாரப் பாதிப்புகளும் மிக அதிகம். 70 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1,650 பேர் வரையானவர்களே வீதி விபத்துக்களில் இறந்துள்ளனர்.

இலங்கையில் இன்று இடம்பெற்ற விபத்தில் இந்த 21 பேரைத் தவிரவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மேலும் ஐந்து பேர் வரை கொல்லப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விபத்து மரணங்கள் தொடர்பில் இருக்கின்ற சட்டங்களை இறுக்கமாக அமுல்படுத்துவதுடன் தேவைப்பட்டால் புதிய சட்டவிதிமுறைகளைக் கொண்டுவரவேண்டும். மேலும் வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்தி சாரதிகளுக்கான தொடர்ச்சியான பயிற்சிமுறைகளை அமுஸ்படுத்த வேண்டும். வாகன வரியும் அதிகரிக்கப்பட வேண்டும். பொதுப் போக்குவரத்தை பாதுகாப்பானதாக்க வேண்டும்.

ஒற்றுமை மட்டும் போதாது – அபிவிருத்தியும் முக்கியம் ! சுமந்திரனை வைத்து அல்ல கட்சியின் கொள்கை அடிப்படையிலேயே உள்ளூராட்சி கூட்டுக்கள் அமையும் !

ஒற்றுமை மட்டும் போதாது – அபிவிருத்தியும் முக்கியம் ! சுமந்திரனை வைத்து அல்ல கட்சியின் கொள்கை அடிப்படையிலேயே உள்ளூராட்சி கூட்டுக்கள் அமையும் !

டிரிஎன்ஏ பேச்சாளர் குருசாமி சுரேன் எதிர்கால உள்ளூராட்சி சபைகள் கூட்டணிகள் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட உரையாடல்..!

உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் நீதியாகவும் சுதந்திரமாகவும் அமைதியாகவும் இடம்பெற்றன!

உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் நீதியாகவும் சுதந்திரமாகவும் அமைதியாகவும் இடம்பெற்றன!

அகில இலங்கை ரீதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடந்து முடிவடைந்துள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குக்குப் பதிவுகள் மாலை 4 மணிவரை நடைபெற்றன.

அந்தவகையில் வாக்களிப்பு மிகவும் சுமூகமாக நடைபெற்றது. ஏற்கெனவே நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத்தேர்தல்கள் போன்றே வன்முறைகள் பெரிதும் அற்ற தேர்தல்களாக உள்ளூராட்சித் தேர்தல்களும் அமைந்திருந்ததாக கண்காணிப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் மீண்டும் 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெற்றிருக்க வேண்டும்.

ஆனால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி இடர்கால ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தாது பிற்போட்டு வந்தார். மேலும் உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படும் என அறிவித்து வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இருந்த போதும் ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த துணியவில்லை.

எவ்வாறாயினும் ரணில் விக்ரமசிங்க மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியாகவே வந்திருந்தார். அதனால் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்கு முன்னர் ரணில் தனது அதிகாரத்தை நிலை நாட்ட ஜனாதிபதித்தேர்தலை நடத்தினார்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என இரண்டிலும் வெற்றி பெற்று அநுரகுமார திஸ்ஸநாயக்க தலையில் என்பிபி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது . “ நாடு அநுரவோடு” என்ற சுலோகத்துடன் இலங்கையில் முதன்முறையாக ஒரு ஆயுதப்போராட்டத்தை நடத்திய இயக்கம் என்பிபியாக அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

என்பிபிக்கு இலங்கையில் வாழ்கிற அனைத்து இன மக்களின் வாக்குகளும் கிடைத்தன. என்பிபி ஒரு தேசிய கட்சியாக தனித்து தேர்தல்களில் போட்டியிட்டு பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது.

மீண்டும் உள்ளூராட்ச்சித் தேர்தலில் என்பிபி தனித்து அனைத்து சபைகளிலும் “ வெற்றி நமதே ஊர் எமதே” என்ற சுலோகத்துடன் போட்டியிட்டுள்ளது. வடக்கு கிழக்கை பொறுத்தவரையும் கூட தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் செயற்ப்படும் கட்சிகளும் பல்வேறு வகையில் தமது தேர்தல் கூட்டணிகளை உருவாக்கிக் கொண்டு இது தமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் தேர்தல்கள் என்று கூறி இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கு உள்ளூர் சபைகளின் அதிகாரம் தமிழர்களிடம் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு சிங்களகட்சியின் கீழ் உள்ளூராட்சி மன்றங்கள் தமிழ்ப் பிரதேசங்களில் செல்வது தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு விழும் சாவு மணி எனக் கூறி உள்ளூராட்சித் தேர்தலில் குதித்திருந்தன.

இதன்படி இன்று 13 759 வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல்கள் நடைபெற்றன.
வாக்காளர்களில் 16 ,854 ,298 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். 341 உள்ளூர் ஆட்சி மன்றங்கள் உள்ள நிலையில் இம்முறை 339 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமே தேர்தல்கள் நடைபெற்றன. இதில் கல்முனை மாநகர சபை மற்றும் அல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த 28 மாநகர சபைகள் 36 நகர சபைகள் 275 பிரதேச சபைகள் என 339 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன.

அந்தவகையில் 339 உள்ளுராட்சி சபைகளுக்கு 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 75589 பேரில் 8257 பேரை தெரிவு செய்வதற்காக மக்கள் தமது ஜனநாயக கடமையை சரிவரச் செய்திருந்தனர்.

அதிகளவான வாக்காளர்களைக் கொண்ட பிரதேசமாக கொழும்பு மாநகர சபை காணப்படுவதாகவும் இதில் 394 533 வாக்காளர்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மிகக் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட பிரதேசமாக ஹப்புத்தளை நகர சபை காணப்படுவதாகவும் இதில் 3051 வாக்காளர்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

நடந்து முடிந்துள்ள தேர்தல் நிலவரப்படி நண்பகல் இரண்டு மணி வரை முக்கியமான மாவட்டங்களைப் பொறுத்தவரை 50 வீதத்திற்கு குறைவான வாக்களிப்பு வீதமே பதிவாகியுள்ளது. குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் 38 சத வீதமும் , யாழ்ப்பாணத்தில் 34 சதவீதமும், கிளிநொச்சியில் 39 சதவீதமும், மட்டக்களப்பில் 38 சதவீதமும், களுத்துறை 45 சதவீதமும், அநுராதபுரம் 40 சதவீதமும், பதுளையில் 48 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

அந்தவகையில் நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குகள்
5783 நிலையங்களில் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இத்தேர்தலில் தேர்தல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கில் உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் 4450 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்ச்சி மன்றத் தேர்தல் முடிவுகள் விரைவில் படிப்படியாக வெளிவரவுள்ளன. இத்தேர்தல் முடிவுகள் கடந்த காலக் காட்டிலும் மிகுந்த எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளன. பொருளாதார நெருக்கடியின் போது ஆட்சியை மக்கள் ஊழலுக்கு எதிரான என்பிபியிடம் ஒப்படைத்திருந்தனர். ஆறுமாதகாலமாக ஆட்சி புரியும் என்பிபி மீதான நம்பிக்கை மக்களிடம் எந்தளவு உள்ளது என்பதை இத்தேர்தல் முடிவுகள் கட்டியம் கூறவுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் தேசியத் தலைமைகளின் சட்டத்தரணிகளின் ஈகோ – அகம்பாவம் தான் தமிழரின் நிலைக்குக் காரணம் !

தமிழ் தேசியத் தலைமைகளின் சட்டத்தரணிகளின் ஈகோ – அகம்பாவம் தான் தமிழரின் நிலைக்குக் காரணம் ! தமிழரசுக் கட்சி ஆதரவாளர் இளைப்பாறிய பேராசிரியர் எஸ் சிவகுமார் மனம் திறந்து உரையாடுகின்றார்.

 

Watch Full Video : https://youtu.be/pOekfSbaCQo?si=MzNS1mhpjIOkFJrJ

யாருடைய வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் ! எக்கட்சி தோற்கின் எக்கட்சி வெல்லும் !

யாருடைய வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் ! எக்கட்சி தோற்கின் எக்கட்சி வெல்லும் !

தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ்ம் எழுபதுக்களில் தமிழ் மக்களிடம் பெருத்த அடியைவாங்கி வாக்கு வங்கியை இழந்தது. இழந்த வாக்கு மீளக் கைப்பற்ற அன்று இனவாதத்தைக் கக்கினர். தாங்கள் மீண்டும் மண்கவ்விவிடக் கூடாது என்பதற்காக தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ்ம் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினனர். அதன் உத்தியாக தமிழீழப் பிரகடனம் செய்தனர். அன்று இடதுசாரிகளுடன் ஆட்சியை அமைத்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு பல்கலைக்கழகத்தை அமைத்ததை மிகக் கடுமையாக எதிர்த்தனர்.

இன்றுவரை யாழ்ப்பாணத்தின் பெயர் சொல்லும் துரையப்பா ஸ்ரேடியம் – மைதானம் நியூ மார்க்கற் என்பன துரையாப்பா காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவை. அன்று மக்களுடன் மிக நெருக்கமாக இருந்த அல்பேட் துரையப்பாவுக்கு இயற்கை மரணம் இல்லை என தமிழ் தேசியம் முழங்கியது. இன்றைய பா உ அர்ச்சுனாவின், பா உ சிறிதரனின் ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் மோசடிக்கும்பல் போல் அன்று துரையப்பா பெண்களை சிங்களவர்களுக்குக் கூட்டிக்கொடுக்கிறார் என்ற பொய்ப் பிரச்சாரங்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டன.உணர்ச்சிவசப்பட்ட விவேகமற்ற புலிகளின் தலைவர் பிரபாகரன் துரையப்பாவை தமிழ் தேசியத்தின் பெயரால் படுகொலை செய்தார். அடுத்த பத்து ஆண்டுகளுக்குப் பின் தனக்கு உத்தரவு போட்டவர்களையும் பிரபாகரன் படுகொலை செய்ய நேரிட்டது.

வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ளாவிட்டால் வரலாறு எம்மை மோசமாகத் தண்டிக்கும் என்பதை அண்மைய வரலாறும் மீள வலியுறுத்துகின்றது. தலைவர்கள் மட்டுமே மாறிய தமிழ் தேசியக் கட்சிகள் மீண்டும் தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸம் 2024 செப்ரம்பர் ஜனாதிபதித் தேர்தலிலும் நவம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வியடைந்தன. பெரினவாதத்தை ஜேவிபி அடக்க தமிழனவாதம் ஊற்றெடுத்தது.

தமிழ் காங்கிரஸின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரை தேசியத் தலைவர் என்றார் அதன் முக்கிய பிரமுகர் ‘வண்டு முருகன்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் கனகரத்தினம் சுகாஸ்.

நீங்கள் கரன்ட் தூண் என்றால் நாங்கள் கரண்ட் தொட்டா அடிச்சிடுவம் என்றவர் பா உ சிறிதரன். தற்போது ரோகன விஜய வீரவின் மானத்தைக் காப்பாற்றியவன் தமிழன் ஆனால் ஜேவிபி எங்கள் மானத்தை உருவுகின்றது என்று குமுறுகின்றார் பா உ சிறிதரன்.

மோசடி இணையத் தளங்களின் தமிழ் தலிபான்களின் தலைவராகியுள்ள பா உ அர்ச்சுனா மாவீரர்களிலும் பிரபாரனிலும் ஒட்டுண்ணியாகப் பற்றிக்கொண்டு தன்னுடைய பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார்.

இதையெல்லாம் தாண்டி வட்டுக்கொட்டையில் என்பிபி – ஜேவிபி இலும் தாங்கள் ஒருவோட்டுக் குறைவாக எடுத்தாலும் தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கனகரத்தினம் சுகாஸ் சவால் விட்டுள்ளார். ஜேவிபி யை சவப்பெட்டிக்குள் அனுப்புவோம் எனவும் அவர் கூறுகின்றார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஊடகவியலாளர் சந்திப்பில் தங்களை யாழ் மக்கள் நிராகரித்தால் தையிட்டி விகாரை விடயத்திலிருந்து தாங்கள் ஒதுங்குவோம் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து தேர்தலில் தோல்வியைச் சந்தித்த தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ்ம் 1970க்களில் தோல்விக்குப் பின் வேண்டாத திருமணம் செய்து கொண்டது போல இப்போது மீண்டும் ஜேவிபியை – என்பிபியை தொற்கடிப்பதற்காக இணைய முயற்சிக்கின்றனர். தேர்தலுக்கு முன் இணையாவிட்டாலும் தேர்தலுக்குப் பின்னாவது இணைந்து உள்ளுராட்சி சபையைக் கைப்பற்றலாம் என எண்ணுகின்றனர்.

தமிழ் தேசியக் கட்சிகள் சுழல் பந்து வீச்சு, வேகப் பந்துவீச்சு, குறளிப் பந்துவீச்சு, குறுக்கால பந்து வீச்சு என்று பலவகையில் பந்து வீசினாலும் அது சமூக வலைத்தளங்களைத்தள கொசிப்புக்கு அப்பால் மக்களுடைய மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஏழு மாதங்களில் தேசிய மக்களின் சாதனைப் பட்டியல் மிக நீண்டதாகவே உள்ளது. வடக்கு – கிழக்கு கடற்கரையை ஆக்கிரமிக்கும் இந்தியப் படகுகளின் நடமாட்டம் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்படுகின்றது. அரச அலுவல்கள் கணிசமான அளவு திறம்படச் செயற்படுகின்றது. பாதைகள், காணிகள் விடுவிக்கப்படுகின்றது. மக்கள் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்துள்ளனர். அண்மையில் விடுவிக்கப்பட்ட பாலாலி – வயாவிளான் வீதியில் பஸ் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டதை வரவேற்க பலர் கூடியுள்ளனர். அவ்வீதியின் பஸ் போக்குவரத்தை 1990க்களில் மேற்கொண்ட பெரியவர் அதனை வரவேற்கின்றார்.

நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களுக்கு பல செய்திகளைச் சொல்லும். கிராமங்களின் அபிவிருத்தி அதன் எதிர்காலம் என்பன நாளைய தேர்தல் முடிவுகளில் வெளிப்படும். தமிழ் தேசியம் முழுவீச்சில் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் தேர்தலில் தங்கள் பரப்புரைகளை முடுக்கி விட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் சக்தியின் பிரதான வேட்பாளர் பேராசிரியர் கபிலன் வெற்றி பெற்றால் அவரை பதவியேற்க விடாமல் வழக்குத் தொடுத்து அவரது வெற்றியைப் பறிப்பேன் என சுமந்திரன் சபதமிட்டுள்ளார். எம் ஏ சுமந்திரனை தமிரசசுக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என பொன்னம்பலம் கஜேந்திரகுமார் கங்கணம் கட்டியுள்ளார். ஆனாலும் இருவரதும் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளதால் அவர்கள் மீண்டும் வேண்டாத திருமணத்தைச் செய்ய முனைந்துள்ளனர். இன்னுமொரு விவாகரத்துக்கு முத்தாய்ப்பு செய்கின்றனர்.

இவற்றுக்கு பதலளித்த அமைச்சர் சந்திரசேகரன் தமிழ் மக்களின் மனங்களை வென்றவராக மிக நிதானமாகவே பதிலளித்துள்ளார். அதில் அவர் தமிழ் தேசியம் பேசுகின்ற அதே பொழியாடல்களைத் தவிரத்து இருக்கலாம். ‘நொண்டி’ போன்ற சொற்றொடர்கள் ஊனமுற்றவர்களை அவர்களின் பெற்றோரை புண்படுத்துவதாக அமைந்ததாக ஊனமுற்ற பிள்ளையின் தந்தையும் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ரட்ணசிங்கம் அனஸ்லி தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தி பா உ மீது தமிழ் தேசியம் மிகப்பாரிய அளவிலான அவர்களது உருவம், பேச்சு வழக்கு மற்றும் சமூகப் பின்னணிகளை வைத்து உடற்கேலிகள் செய்துவருகின்றனர். அதனால் வாக்காளர்கள் தமிழ் தேசியக் கட்சிகளில் இருந்து தங்களை அந்நியப்படுத்திச் செல்வதையே காணக்கூடியதாக உள்ளது. தமிழ் தேசியத்திற்கு தமிழ் மக்களைப் புரிந்துகொள்ள முடியவில்லையோ என்றே எண்ணத் தோண்றுகின்றது. அமைச்சர் சந்திரசேகரனும் தேசிய மக்கள் சக்தியும் தமிழ் மக்களும் ஒரே மொழியில் உரையாடுவதாகவே தோண்றுகின்றது. வரும் புதின் கிழமை யாருடைய வெற்றி என்பதும் இக்கட்சி தோற்கின் எக்கட்சி வெல்லும் என்பதும் தெரியவிந்துவிடும்.

‘வடக்கத்தையான்’ மனநிலையில் தமிழ் தேசியக் கட்சிகள் ! ஊழல் இல்லாமல் கிராமங்களின் அபிவிருத்தியைச் செய்பவர்கள் தெரிவாக வேண்டும் !

‘வடக்கத்தையான்’ மனநிலையில் தமிழ் தேசியக் கட்சிகள் ! ஊழல் இல்லாமல் கிராமங்களின் அபிவிருத்தியைச் செய்பவர்கள் தெரிவாக வேண்டும் !

 

அரசியல் சமூக செயற்பாட்டாளர் சோலையூரானுடன் உரையாடல்

 

அபிவிருத்தியும் வேண்டும் அரசியல்த் தீர்வும் வேண்டும் ! : கங்கா ஜெயபாலன்

அபிவிருத்தியும் வேண்டும் அரசியல்த் தீர்வும் வேண்டும் ! : கங்கா ஜெயபாலன்

மார்ச் மாதம் 28 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு 2430 இலக்கமிடப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியின்படி 5 940 ஏக்கர் காணிகள் அரச உடமையாக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் வெற்றிலைக்கேணி தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான கைவிடப்பட்டுள்ள காணிகளை மூன்று மாத்திற்குள் காணிச் சொந்தக்காரர்கள் உரிமை கோராவிடில் அரச உடமையாக்கப்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலானது சிங்களத்திலும் மற்றும் ஆங்கிலத்திலுமே முதலில் வெளியிடப்பட்டிருந்தது. ஒரு மாதம் கழிந்த நிலையில் தற்போது தமிழிலிலும் வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமாக வர்த்தமானியில் குறிப்பிடப்படும் காணிகள் இருக்கும் இடங்களில் வாழ்வது தமிழ்மக்களேயாகும். அவர்களுக்கு புரியும்படியான மொழியிலேயே அவ்வறிவித்தல்கள் விடப்பட்டிருக்க வேண்டும்.

என்பிபி அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க இராணுவத்தின் பிடியிலுள்ள தனியாருக்கு சொந்தமான அனைத்து காணிகளும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் விடுவிக்கப்படும் என்று வாக்குறுதியளித்துள்ளார். அதன்படி காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காதும் காதும் வைத்தமாதிரி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. என்பிபி அரசாங்கம் பதவியேற்று 6 மாதங்கள் தான் கடந்திருக்கின்றன . இந்தக் குறுகிய காலத்தில் கைவிடப்பட்டுள்ள காணிகளை இவ்வளவு விரைவாக இனங்கண்டு இருக்க முடியாது. எம். ஏ. சுமந்திரனின் கருத்துப்படி கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவை தற்போதைய என்பிபி அரசாங்கத்தின் காணி அமைச்சரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளிவந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அப்படியானால் கடந்த கால ஆட்சியில் இந்த காணிகளை அரசவுடமையாக்கும் திட்டத்தின் பின்னணியில் ஏதும் சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததா? என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது. இது தொடர்பில் ஆளும் என்பிபி அரசாங்கம் தான் பதிலளிக்க வேண்டும்.

யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் பலர் இன்னும் தமது காணிகளுக்கு திரும்பவில்லை. யுத்தம் நடந்த இடங்களிலிருந்து வெளியேறிய பலரின் வாழ்விடங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. காணிகளிலிருந்து வெளியேறியவர்கள் உடனடியாக திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். பலருடைய காணிகளின் ஆவணங்கள் யுத்தத்தின் போது தொலைந்து விட்டன. அல்லது சேதமடைந்து விட்டன. இந்தச் சூழ்நிலையில் இரு மாதங்களே நிலுவையிலுள்ள நிலையில் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள காணிகளை உரயவர்கள் உரிமை கோருவது என்பது நடைமுறைச் சாத்தியம் இல்லை. எனவே ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க இந்த விடயத்தில் தலையிட்டு 2430 இலக்க சம்பந்தப்பட்ட வர்த்தமானியை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

இந்த வர்த்தமானி அறிவித்தலை மே 28 க்கு முன்னர் அரசாங்கம் மீளப்பெறாவிட்டால் மே 29 முதல் சாத்வீக ரீதியில் பாரிய சட்ட மறுப்பு போராட்டத்தை மேற்கொள்வோம் அரச இயந்திரம் எங்களுடைய மாவட்டங்களில் இயங்க முடியாமல் செய்வோம் ” என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் மதியாபரம் அபிரகாம் சுமந்திரன் அரசாங்கத்துக்கு ஒருமாதம் காலக்கெடு விதித்துள்ளார்.

அதேநேரம் நேற்றைய தினம் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணி குழுவினர் வடமராட்ச்சி கிழக்குப்பகுதியில் மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கியுள்ளனர். அதேபோன்று சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் உமாகஜன் ராசையா போன்றோரும் இலவச சட்ட உதவி இந்த வர்த்தமானி விடயத்தில் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட வர்த்தமானி விடயத்தில் தமிழ்க்கட்சிகளும் அரசியல் செயல்ப்பாட்டாளர்களும் கண்ணை மூடிக் கொண்டு இருந்தமையும் கண்டிக்கத்தக்கது. உள்ளூராட்சித் தேர்தலில் வாக்குகளைப் பெற இந்த விடயத்தில் அரசியல் செய்யாமல் இதய சுத்தியுடன் விரைந்து செயற்பட வேண்டும்.

தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையும் கொள்கை உடன்பாடின்மையும் சுயநலப் போக்குமே இலங்கையில் தமிழ் மக்கள் தமது நியாமான அரசியல் கோரிக்கைகளையும் அபிவிருத்தியையும் அடையத் தடையாகவுள்ளன. தமிழ்த் தேசிய அரசியல் என்பது உணர்ச்சி அரசியலாக வெறுமனே வாய்ச்சவாடல்களாக உசுப்பேத்தும் அரசியலாகவே தொடர்கின்றன. இலங்கையில் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் அபிவிருத்தியுடன் கூடிய சகல விதமான அரசியல் உரிமைகளுடனும் வாழ்வதற்கான யதாரத்த அரசியலை மேற்கொள்ள தமிழ்க்கட்சிகள் தயாராகவில்லை.

தையிட்டி விகாரை விடயத்திலும் குளிர்காயும் அரசியல் செய்யாது, உடனடியாக தீர்வு காணக்கூடிய வகையில் செயற்படலாம். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை விடுத்து மிகுதிக் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான அழுத்தத்தை அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும். பின்னர் தையிட்டி விகாரைக் காணிக்கு சொந்தக்கார பெண்மணி மலேசியாவில் இருப்பதாக எம். ஏ. சுமந்திரன் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண்மணியும் தையிட்டு விகாரை நிர்வாகவும் மேற்க்கொண்டு குறிப்பிட்ட விவகாரத்தில் முடிவு எடுக்கட்டும்.

அதேநேரம் வடக்கு கிழக்கில் தையிட்டி விகாரைக்கு என சட்டத்திற்குப்புறம்பாக தனியார் காணிகளை சுவீகரிக்கும் சந்தர்ப்பங்களை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இலங்கையில் 30 வருடமாக நடந்த யுத்தம் பல படிப்பினைகளை விட்டுச் சென்றிருக்கின்றது. இலங்கையில் வாழும் அனைத்து சாமானிய மக்களுமே யுத்ததின் கோரத்தின் அழிவுகளை சந்தித்துள்ளார்கள். அந்தவகையில் தமிழ்மக்களின் இழப்புக்கள் அதிகம். அவர்களின் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலிருந்த நியாயத்தையும் யாரும் மறுக்க முடியாது. இலங்கையில் அனைத்து சமூகங்களும் சம உரிமைகளுடன் சமத்துவமாக வாழ வேண்டும். ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டு கடந்த காழ்ப்புணர்வுகளுடன் வாழ்வது நீண்டகாலத்திற்கு நிரந்தரமான சமாதானத்தை இலங்கையில் கொண்டுவராது.

இலங்கையின் பன்மைத்துவத்தையும் ஒவ்வொரு இனத்திற்கும் இருக்கும் பிரத்யேக பிரச்சினைகளை கருத்தில் கொண்டு புதியவொரு அரசியலமைப்பையும் புதியவொரு அரசியல் கலாச்சாரத்தையும் உருவாக்க வேண்டியது அதிகாரத்திலிருப்பவர்கள் உட்பட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும். என்பிபி அரசாங்கத்திற்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பெரும்பான்மை சமூகத்தின் மீது நம்பிக்கையிழந்துள்ள தமிழ்மக்களிடம் மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்.

திடீரென வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுதல். காணிகளை கையகப்படுத்தல், புத்த விகாரைகளை அமைத்தல் என்ன இன்னபிற வழமையான இனவாத அரசாங்கங்களின் வழியில் செல்லாது என்பிபி அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவே என்பிபி அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் எதிர்பார்க்கிறார்கள். என்பிபியின் வாதப்படி தமிழ்மக்கள் அனைத்து உரிமைகளுடனும் சமமாக சம அபிவிருத்தியுடன் வாழ வைத்தால் அவர்கள் ஒற்றையாட்சி இலங்கைக்குள் வாழ்வார்கள் என்பதாகும்.

கடந்த காலங்களில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த உயர்குலாம் சிங்களப் பேரினவாத அரசாங்களின் இனவாத அரசியலாலேயே நாடு பிளவுபட்டது. தமிழர்கள் ஆயுதம் ஏந்தினர். ஆனால் வர்க்க அரசியல் பேசும் என்பிபி அரசாங்கத்தில் தமிழ்மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் போதும் அவர்களுக்கு யுத்தத்தில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு நிவாரணத்தையும் வழங்கும் போது இனப்பிரச்சினை என்றொன்று இருக்கப் போவதில்லை என்பதாகும். என்பிபியின் ஆட்சிக்காலம் வரை தமிழ்மக்கள் சமமாக நடத்தப்படலாம். ஆனால் எதிர்வரும் காலங்களில் ஆட்சிமாற்றங்கள் ஏற்படும் போது என்பிபி குறிப்பிடும் அதே இனவாத அரசாங்கங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரலாம். அவர்கள் தமிழ்மக்கள் மீது தமது இனவாத அடக்குமுறைகளை தொடர மாட்டார்கள் என்பதற்கும் தமிழர்களை மட்டுமல்ல சிறுபான்மையினரை இரண்டாம்தர பிரஜைகளாக நடத்த மாட்டார்கள் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது.

என்பிபி கூறுவது போன்று அவர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றது என்பதை தாம் உணர்ந்திருப்பதாகவும் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றவே தமக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளதாக கூறிவது உண்மையாக இருந்தால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கும் தீர்வு காணவேண்டும். எதிர்காலத்தில் என்பிபி ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதும் தமிழ் மக்கள் சுதந்திரமாக சகல உரிமைகளுடனும் வாழ்வதற்கான உத்தரவாதம் புதிதாக உருவாக்கப்பட போகிற அரசியல் அமைப்பில் வழங்கப்பட வேண்டும். அப்படியானவொரு அரசியல் தீர்வை என்பிபி தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கான அரசியல் அழுத்தத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வழங்க வேண்டும்.

உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் வாக்காளர்கள் அபிவிருத்தியும் வேண்டும் அரசியல் தீர்வும் வேண்டும் என சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.