உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

உக்ரைன் படைகள் பின்வாங்குகின்றன: ரஸ்யாவுக்கு சீனா ஆயுத விநியோகம் – உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு !

உக்ரைன் படைகள் பின்வாங்குகின்றன: ரஸ்யாவுக்கு சீனா ஆயுத விநியோகம் – உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு !

கடந்த மார்ச் மாதம் முதல் ரஸ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. அமெரிக்கா உக்ரைன் யுத்தத்திலிருந்து தள்ளியே நிற்கின்றது. உக்ரைனுக்கு ஆயுதங்களோ புலனாய்வுத் தகவல்களோ வழங்கப்படவில்லை. அதனால் உக்ரைன் படைகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன. அதனால் உக்ரைன் தனது நிலப்பிரதேசங்களை வேகமாக இழந்து வருகின்றது. ரஸ்யா திட்டமிட்டது போல் உக்ரைனில் ரஸ்யர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை விரைவில் கைப்பற்றிவிடும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. உக்ரைன் படைகள் தாக்குதலின் உக்கிரத்தால் சரணடைவதாகவும் உறுத்திபடுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கி வருவதாகவும், சீன அரசின் பிரதிநிதிகள் ரஷ்யாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த தகவல்களுக்கு ஆதாரங்கள் உண்டு என்றும், அதனை எதிர்வரும் நாட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, ரஷ்யாவிற்கு ஐஎஸ்காண்டர் ஏவுகணைகளை தயாரிக்கின்றதாக கூறப்படும் மூன்று சீன நிறுவனங்களுக்கு உக்ரைன் தடைகளை அறிவித்துள்ளது.

ஆனால், ஜெலென்ஸ்கியின் குற்றச்சாட்டுகளை சீனா முற்றிலும் நிராகரித்துள்ளது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும் எனவும், சீனாவின் நிலைப்பாடு தெளிவானது எனவும் சீன வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் லின்ஜியான் கூறினார். மேலும், யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும், சமாதான பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும் சீனா முயற்சித்து வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலகின் முதல் குழந்தை !

AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலகின் முதல் குழந்தை !

மெக்சிக்கோவில் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் உதவியுடன் உலகின் முதல் குழந்தை பிறந்து வரலாற்று சாதனையை படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகோ நாட்டில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையமொன்றில், ஏ.ஐ மற்றும் ரோபோ உதவியுடன் விந்தணுவை கருமுட்டையினுள் ஊசியின் மூலம் செலுத்தி வெற்றிகரமாக கருவுறச்செய்து அதனை 40 வயதான பெண்மணியின் கருப்பையினுள் பொருத்தி, குழந்தையை வளரச் செய்து கடந்த மார்ச் மாதம் ஆரோக்கியமாக ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

இந்தநிலையில், இந்த ஏ.ஐ தொழில்நுட்பத்தால் கருத்தரிக்க இயலாத தம்பதிகளுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு மிக மிக அதிகமான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த சிகிச்சை முறை தொடர்பில் வைத்தியர்கள் கருத்து தெரிவிக்கையில், ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு முட்டையையும் கருத்தரிக்க ஒன்பது நிமிடங்கள் 56 வினாடிகள் ஆனது. ஏ.ஐ உதவியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை ஆரோக்கியமாக பிறந்துள்ளமையானது மருத்துவ உலகில் பெரும் திரும்புமுனையாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

அயல்வீட்டு ஆச்சியை அடித்துக் கொன்று திருட்டு !

அயல்வீட்டு ஆச்சியை அடித்துக் கொன்று திருட்டு !

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் களவுக்கு சென்ற இளைஞன் தாக்கியதில் 69 வயதுடைய மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஏப்ரல் 20 ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இரண்டு வயோதிப பெண்கள் குறித்த வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களின் ஒருவர் ஈஸ்டர் ஆராதனைக்காக காலை தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இருவரும் தேவாலயத்திற்கு சென்றிருப்பார்கள் என்ற எண்ணத்தில் 20 வயதான, அயல்வீட்டு இளைஞன் திருடுவதற்தாக அங்கு சென்றுள்ளார். வயோதிப பெண் இளைஞனை கண்டவேளை கொட்டன் ஒன்றினால் மூதாட்டியை தாக்கி கொலை செய்துள்ளார். தேவாலயத்திற்கு சென்ற மற்றைய மூதாட்டி வீட்டிற்கு வந்த போது மூதாட்டி இரத்த வெள்ளத்தில் சடலமாக காணப்பட்டதனை அவதானித்து அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிய நுளம்பு இனம் !

இலங்கையில் புதிய நுளம்பு இனம் !

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சின்டெக்லஸ் (Culex Lephoceraomyia cinctellus) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நுளம்பு இனம் ஒரு முக்கிய வைரஸ் கடத்தியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தலில் கவனித்துக் கொள்ளுங்கள்: குப்பை மேடாக மாறும் நுவரெலியா – பிரதேசங்கள் !

உள்ளுராட்சித் தேர்தலில் கவனித்துக் கொள்ளுங்கள்: குப்பை மேடாக மாறும் நுவரெலியா – பிரதேசங்கள் !

சுற்றுலாத்தலமான நுவரெலியாவிற்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் ஏப்ரல் மாத முதலாம் திகதி முதல் முப்பதாம் திகதி வரை வசந்தகால கொண்டாட்டம் நடைபெறுவதால் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இயற்கை எழில் சூழ்ந்த நுவரெலியா தற்போது எங்கும் குப்பை குவியல்களும், பிளாஸ்டிக் கழிவுகளும் நிறைந்து காணப்படுகின்றது. மேலும் அதிகமாக சுற்றுலா பயணிகள் கூடும் மையங்களில் குப்பை தொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதுடன், இயற்கையும் பாதிக்கப்படுகிறது.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு, எஞ்சிய உணவுக் கழிவுகள், மாமிசங்கள், எலும்புத்துண்டுகள், பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள், எளிதில் மக்கிப்போகாத பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட சில கழிவுப்பொருட்களை அதே இடங்களில் வீசிவிட்டுச் செல்கின்றனர்.

இவற்றை உட்கொள்ள கால்நடை விலங்குகள் அப்பகுதியை முற்றுகையிடுகின்றன. நாய்கள்,
பறவைகள், மட்டக்குதிரைகள் கழிவுகளை நாலாப்புறமும் இழுத்துச் சென்று போடுவதால் நடைபாதைகள் உட்பட நகரின் பல இடங்களும் மாசுப்படுகின்றது.

இவை அவ்வப்போது குப்பை அதிக கிடக்கும் இடத்தில் இறந்து கிடப்பதும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளில் உள்ள மாசடைந்த பொருட்களை உண்பதும் காரணம் என தெரிய வந்துள்ளது.
நுவரெலியாவில் தற்போது அதிக இடங்களில் வீதியோரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வர்த்தக நிலையங்களில் சேகரித்து கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதன் காரணமாக அதிக சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களில் புகை மண்டலம் சூழ்ந்தது போல் காட்சி அளிக்கிறது. மேலும் காற்று மாசு ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இவற்றை நுவரெலியா மாநகர சபையோ கண்டுகொள்வதில்லை எனவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

எனவே, சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் தேவைக்கேற்ப குப்பைத் தொட்டிகளை வைப்பது அவசியம் எனவும் அப்பகுதிகளுக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள் இதனை கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இது நுவரெலியாவுக்கு மட்டுமல்ல ஏனைய சுற்றுலாத் தலங்களுக்கும் பொருத்தமானது.

இலங்கை தனது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு சுற்றுலாத்துறை மிக முக்கியமானதாக உள்ளது. அதற்கமைவாக நாடு சுற்றுலாப் பயணிகளை ஈரக்கும் வகையில் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதே சமயம் உள்ளுர் மக்களின் சுகாதாரமும் வாழ்வியலும் கூட கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குப்பபைகள் கழிவுகளை ஒழுங்குமுறையில் சேகரித்து பதப்படுத்தி சேதன உரங்களாக பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் போது அதனை எரித்து சுற்றாடலை மாசுபடுத்த வேண்டி அவசியம் என்ன.

இந்த உள்ளுராட்சித் தேர்தல் காலகட்டத்தில் மக்கள் தங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யக் கூடிய, தங்களுடைய பிரதேசங்களை தூய்மையான ஒளிமயமான பிரதேசங்களாக்கக் கூடியவர்களுக்கு வாக்களித்து பொறுப்பானவர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.

 

இனப்படுகொலைக்கு பூகோள அரசியல் போட்டிகளே காரணம் : எம். பி. கஜேந்திரகுமார் – கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் !

இனப்படுகொலைக்கு பூகோள அரசியல் போட்டிகளே காரணம் : எம். பி. கஜேந்திரகுமார் – கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் !

 

வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலால் ஈழத் தமிழர்கள் பாதிக்கப்படுவதாக நோர்வேயின் இரகசிய புலனாய்வாளர் என அதாவது சிலிப்பர் ஷெல் என்றும் குற்றம்சாட்டப்படும் நியூட்டன் மரியநாயகத்தின் புத்தக வெளியீட்டில் எம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புலம்பியுள்ளார்.

‘பூகோள அரசியலில் வல்லரசுகளின் போட்டி உச்ச நிலையிலிருந்த போதே ஈழத் தமிழர்கள் இனப் படுகொலையானவர்கள். இந்த வல்லரசுப் போட்டியால் தான் தமிழர்கள் உரிமைகளை பெறுவதிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். யுத்தம் முடிந்தும் வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலை கையாள திராணியில்லாத நிலையில் ஈழத் தமிழர்கள் இருப்பதாகவும்’ கஜேந்திரகுமார் விரக்தியாக உரையாற்றியுள்ளார்.

புலிகள் அமைப்பிலிருந்து கருணாவை பிரிக்கும் சதிக்கு பிள்ளையார் சுழி போட்டு தொடக்கி வைத்தவரே நியூட்டன் மரியநாயகம் எனக் கூறப்படுகிறது. அவர் எழுதிய “காட்டிக்கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்” நூல் வெளியீட்டு விழாவிற்குப் போய் கஜேந்திரகுமார் தன்னையறியாமலேயே வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலில் தாமும் இயங்குவதை தன்னையறியாமலே வெளிப்படுத்தியுள்ளார்.

2009 ஈழப்போரின் முடிவின் பின்னரான ஈழத்தமிழர்களின் அரசறிவியல் அறிஞர்களான மு. திருநாவுக்கரசு குழுவினரின் சீனபூச்சாண்டியை காட்டி இந்தியாவை வைத்து தமிழீழம் எடுக்கலாம் என்ற ஈழத் தமிழர்களின் வெளிவிவகார கொள்கையிலிருந்து சற்று விலகி, நோர்வையின் புதிய வெளிவிவகார கொள்கையை கஜேந்திரகுமார் விதந்துரைத்துள்ளார்.

அதாவது இந்தியாவின் உள்ளக தேசிய பாதுகாப்பிற்கு, இலங்கை அரசியலில் இந்தியாவின் நலனுக்கு முன்னுரிமையுள்ளது. அதேநேரம் இந்தியாவின் போட்டி நாடான சீனா ஈழத்தமிழர்களுக்கு பொருளாதார உதவி வழங்கும் போது தமிழர்கள் அதனை ஏற்க வேண்டும். நாங்கள் யாரையும் பகைக்க கூடாது. ஆனாலும் வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலால் தமிழர்கள் பாதிக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது எனவும் மீசையை முறுக்கியுள்ளார்.

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் இலங்கைத் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறும் கஜேந்திரகுமார், அதற்காக இந்தியாவை பகைக்க முடியாதென்றும் கூறுகிறார். அதேநேரம் சீனாவும் கடலட்டை பண்ணைகள் மூலம் இலங்கை கடற்பரப்பில் இந்தியாவுக்கு போட்டியாக செயற்படுகின்றது என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். சொல்லப் போனால் மரியநாயகம் நியூட்டன் மற்றும் மேட்டுக்குடி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோரும் அமெரிக்கா மற்றும் நோர்வே போன்ற வல்லரசுகளின் ஏஜன்ட்களே என்கின்றனர் இராணுவ மற்றும் அரசியல் புலனாய்வு ஆய்வாளர்கள்.

 

ஈஸ்டர் தாக்குதல் ஆட்சியைக் கைப்பற்ற என்றால், ஏன் கோட்டா கைது செய்யப்படவில்லை ! புலனாய்வு அறிக்கை நம்பகத்தன்மையானதா ? இந்தியாவின் பாத்திரம் என்ன ?

ஈஸ்டர் தாக்குதல் ஆட்சியைக் கைப்பற்ற என்றால், ஏன் கோட்டா கைது செய்யப்படவில்லை ! புலனாய்வு அறிக்கை நம்பகத்தன்மையானதா ? இந்தியாவின் பாத்திரம் என்ன ?

ஈஸ்ட்ர் குண்டுத் தாக்குதலின் மையப் புள்ளியை விசாரணைகள் ஏன் நெருங்கவில்லை என்ற கேள்வியை தேசம்நெற் எழுப்பியுள்ளது. ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் நடப்பதற்கு முன்னரேயே இத்தாக்குதல் திட்மிடப்பட்டுள்ளது பற்றியும் தாகுதல் எங்கு, எப்போது நடத்தப்படும் என்பது குறித்தும் தெளிவான புலனாய்வுத் தகவல்களை இந்திய உளவுத்துறை இலங்கை உளவுத்துறைக்கு வழங்கியிருந்தது. இது இந்தியத் தூதரகத்திற்குத் தெரியுமா ? அதுதொடர்பில் இந்தியத் தூதரகம் இலங்கை அரசியல் தலைமைகளுக்கு ஆழத்தங்களை வழங்கியதா ? போன்ற விடயங்கள் இதுவரை பேசாப்பொருளாகவே உள்ளது.

தாக்குதலாளிகள் தாக்குதலுக்கான அத்தனை வேலைகளையும் தென்னிந்திய மண்ணிலிருந்தே மேற்கொண்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டாலென்ன, இலங்கைக்கு கேரளக் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் வந்தாலென்ன தற்போது ஈஸ்ரர் குண்டுத் தாக்குதலாளிகளும் கூட தென்னிந்தியாவிலிருந்தே பயிற்சி பெற்று வந்தள்ளனர். இது தொடர்பில் இது வரை எந்த அரசியல் தலைமைகளும் ஜேவிபி உட்பட மௌனமாகவே உள்ளனர்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் இலங்கை இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகார நிலையில் இல்லை. அதனால் இந்தியா தானாக முன்வந்து அதன் மீதுள்ள சந்தேகங்களைக் களைவதற்கு இவ்விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இத்தாக்தல் தொடர்பில்இ தாக்குதலுக்குப் பயன்படுத்திய வெடிமருந்துகள், தற்கொலை அங்கிகள், அதற்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை இந்தியா வெளியிட வேண்டும். தாக்குதலாளிகளை ஏன் கைது செய்யவில்லை. ஏன் அவர்களைப் பின்தொடரவில்லை. போன்ற விடயங்களும் வெளியிடப்பட வேண்டும்.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர திசாநாயக்கவின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளரால் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

ஏப்ரல் 21, 2019 அன்று இலங்கையில் பல இடங்களில் 260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஆழமான விசாரணைகளைத் தொடர புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிக்கை தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை வெளியிடுவதுடன் பல கேள்விகளையும் எழுப்புகின்றார், கொழும்பு அரசியல் வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட அரசியல் சமூக செயற்பாட்டாளர் அனஸ்லி ரட்ணசிங்கம். அவர் நேற்று தேசம்நெற்றுக்கு வழங்கிய நேர்காணலில் தேசிய மக்கள் சக்தி அரசு அவர் சொன்னார், இவர் சொன்னார் என்ற கதைகளை வைத்துக்கொண்டு இந்த விசாரணைகளை நடத்த முடியாது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர்கள் குற்றப்புலனாய்வு அறிக்கைகளை கிரிக்கட் கொமன்ரிபோல் வெளியிட்டுக் கொண்டிருப்பது ஒரு சரியான விசாரணைமுறையில்லை எனவும் தெரிவித்தார்.

இலங்கைப் புலனாய்வுத்துறையினருக்குக் கூட பயிற்சி அளித்தவர்கள் இந்தியப் புலனாய்வுத்துறையினரே. இவர்களிடையேயும் ஒரு உறவு உண்டு. வன்னி யுத்தம் முடிவுக்கு வந்த பிற்பாடு புலிகளை கைது செய்தது நான்காம் மாடியில் வைத்து விசாரித்ததில் எல்லாம் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டதாக நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டு தற்போது லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றனர்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மேம்போக்காக அதனைச் சொல்லிவிட்டு அரசாங்கம் இதனை கடந்து செல்ல முடியாது. ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கியுள்ள இந்த அறிக்கைக்கு அப்பாலும் இப்பாலும் சென்று பூரண சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். சர்வதேச புலனாய்வு நிறுவனங்களின் கைகள் இதில் உள்ளதா என்பதும் இங்கு முக்கியமாக ஆராயப்பட வேண்டும்.

தற்போது இந்தியாவில் உள்ள இந்துமத அடிப்படைவாத பிஜேபி அரசு, அண்மைய ஆண்டுகளில் இலங்கையைச் சேர்ந்த சில முஸ்லீம்களை பயங்கரவாதிகள் எனக் குற்றம்சாட்டி கைதுசெய்துள்ளது. இவை எல்லாம் எழுந்தமான விடயங்களா ? இதற்கிடையேயான புள்ளிகள் இணைக்கபட வேண்டுமா என்பதை காலம் தான் வெளிப்படுத்த வேண்டும்.

பிள்ளையானின் சாரதி CID யால் அதிரடியாக கைது !

பிள்ளையானின் சாரதி CID யால் அதிரடியாக கைது !

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதி இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.

பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியான ஜயந்தன் என்பவரே இவ்வாறு நேற்றைய தினம் ஏப்ரல் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே அவரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காதலில் தகராறு ஏற்பட்டதில் இளம் பெண் கழுத்து அறுத்து கொலை!

காதலில் தகராறு ஏற்பட்டதில் இளம் பெண் கழுத்து அறுத்து கொலை!

ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி மத்துகம, தொலஹேன பகுதியில் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர், 33 வயதுடைய மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன. காதல் உறவு தொடர்பான தகராறு காரணமாக இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபரை கைது செய்ய மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

எலிக்காய்சல் பரவும் அபாயம்

எலிக்காய்சல் பரவும் அபாயம் !

நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். விசேடமாகப் புத்தாண்டு காலப் பகுதியில் வயல்வெளிகளுக்கு அருகில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல், தலைவலி, தசை உளைவு, மூட்டுகளில் வலி, சரும எரிச்சல் போன்றவற்றுடன் வாந்திபேதி, தசை வீக்கம் என்பனவும் எலிக்காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.