யாருடைய வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் ! எக்கட்சி தோற்கின் எக்கட்சி வெல்லும் !
தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ்ம் எழுபதுக்களில் தமிழ் மக்களிடம் பெருத்த அடியைவாங்கி வாக்கு வங்கியை இழந்தது. இழந்த வாக்கு மீளக் கைப்பற்ற அன்று இனவாதத்தைக் கக்கினர். தாங்கள் மீண்டும் மண்கவ்விவிடக் கூடாது என்பதற்காக தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ்ம் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினனர். அதன் உத்தியாக தமிழீழப் பிரகடனம் செய்தனர். அன்று இடதுசாரிகளுடன் ஆட்சியை அமைத்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு பல்கலைக்கழகத்தை அமைத்ததை மிகக் கடுமையாக எதிர்த்தனர்.
இன்றுவரை யாழ்ப்பாணத்தின் பெயர் சொல்லும் துரையப்பா ஸ்ரேடியம் – மைதானம் நியூ மார்க்கற் என்பன துரையாப்பா காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவை. அன்று மக்களுடன் மிக நெருக்கமாக இருந்த அல்பேட் துரையப்பாவுக்கு இயற்கை மரணம் இல்லை என தமிழ் தேசியம் முழங்கியது. இன்றைய பா உ அர்ச்சுனாவின், பா உ சிறிதரனின் ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் மோசடிக்கும்பல் போல் அன்று துரையப்பா பெண்களை சிங்களவர்களுக்குக் கூட்டிக்கொடுக்கிறார் என்ற பொய்ப் பிரச்சாரங்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டன.உணர்ச்சிவசப்பட்ட விவேகமற்ற புலிகளின் தலைவர் பிரபாகரன் துரையப்பாவை தமிழ் தேசியத்தின் பெயரால் படுகொலை செய்தார். அடுத்த பத்து ஆண்டுகளுக்குப் பின் தனக்கு உத்தரவு போட்டவர்களையும் பிரபாகரன் படுகொலை செய்ய நேரிட்டது.
வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ளாவிட்டால் வரலாறு எம்மை மோசமாகத் தண்டிக்கும் என்பதை அண்மைய வரலாறும் மீள வலியுறுத்துகின்றது. தலைவர்கள் மட்டுமே மாறிய தமிழ் தேசியக் கட்சிகள் மீண்டும் தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸம் 2024 செப்ரம்பர் ஜனாதிபதித் தேர்தலிலும் நவம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வியடைந்தன. பெரினவாதத்தை ஜேவிபி அடக்க தமிழனவாதம் ஊற்றெடுத்தது.
தமிழ் காங்கிரஸின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரை தேசியத் தலைவர் என்றார் அதன் முக்கிய பிரமுகர் ‘வண்டு முருகன்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் கனகரத்தினம் சுகாஸ்.
நீங்கள் கரன்ட் தூண் என்றால் நாங்கள் கரண்ட் தொட்டா அடிச்சிடுவம் என்றவர் பா உ சிறிதரன். தற்போது ரோகன விஜய வீரவின் மானத்தைக் காப்பாற்றியவன் தமிழன் ஆனால் ஜேவிபி எங்கள் மானத்தை உருவுகின்றது என்று குமுறுகின்றார் பா உ சிறிதரன்.
மோசடி இணையத் தளங்களின் தமிழ் தலிபான்களின் தலைவராகியுள்ள பா உ அர்ச்சுனா மாவீரர்களிலும் பிரபாரனிலும் ஒட்டுண்ணியாகப் பற்றிக்கொண்டு தன்னுடைய பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார்.
இதையெல்லாம் தாண்டி வட்டுக்கொட்டையில் என்பிபி – ஜேவிபி இலும் தாங்கள் ஒருவோட்டுக் குறைவாக எடுத்தாலும் தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கனகரத்தினம் சுகாஸ் சவால் விட்டுள்ளார். ஜேவிபி யை சவப்பெட்டிக்குள் அனுப்புவோம் எனவும் அவர் கூறுகின்றார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஊடகவியலாளர் சந்திப்பில் தங்களை யாழ் மக்கள் நிராகரித்தால் தையிட்டி விகாரை விடயத்திலிருந்து தாங்கள் ஒதுங்குவோம் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து தேர்தலில் தோல்வியைச் சந்தித்த தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ்ம் 1970க்களில் தோல்விக்குப் பின் வேண்டாத திருமணம் செய்து கொண்டது போல இப்போது மீண்டும் ஜேவிபியை – என்பிபியை தொற்கடிப்பதற்காக இணைய முயற்சிக்கின்றனர். தேர்தலுக்கு முன் இணையாவிட்டாலும் தேர்தலுக்குப் பின்னாவது இணைந்து உள்ளுராட்சி சபையைக் கைப்பற்றலாம் என எண்ணுகின்றனர்.
தமிழ் தேசியக் கட்சிகள் சுழல் பந்து வீச்சு, வேகப் பந்துவீச்சு, குறளிப் பந்துவீச்சு, குறுக்கால பந்து வீச்சு என்று பலவகையில் பந்து வீசினாலும் அது சமூக வலைத்தளங்களைத்தள கொசிப்புக்கு அப்பால் மக்களுடைய மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஏழு மாதங்களில் தேசிய மக்களின் சாதனைப் பட்டியல் மிக நீண்டதாகவே உள்ளது. வடக்கு – கிழக்கு கடற்கரையை ஆக்கிரமிக்கும் இந்தியப் படகுகளின் நடமாட்டம் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்படுகின்றது. அரச அலுவல்கள் கணிசமான அளவு திறம்படச் செயற்படுகின்றது. பாதைகள், காணிகள் விடுவிக்கப்படுகின்றது. மக்கள் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்துள்ளனர். அண்மையில் விடுவிக்கப்பட்ட பாலாலி – வயாவிளான் வீதியில் பஸ் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டதை வரவேற்க பலர் கூடியுள்ளனர். அவ்வீதியின் பஸ் போக்குவரத்தை 1990க்களில் மேற்கொண்ட பெரியவர் அதனை வரவேற்கின்றார்.
நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களுக்கு பல செய்திகளைச் சொல்லும். கிராமங்களின் அபிவிருத்தி அதன் எதிர்காலம் என்பன நாளைய தேர்தல் முடிவுகளில் வெளிப்படும். தமிழ் தேசியம் முழுவீச்சில் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் தேர்தலில் தங்கள் பரப்புரைகளை முடுக்கி விட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் சக்தியின் பிரதான வேட்பாளர் பேராசிரியர் கபிலன் வெற்றி பெற்றால் அவரை பதவியேற்க விடாமல் வழக்குத் தொடுத்து அவரது வெற்றியைப் பறிப்பேன் என சுமந்திரன் சபதமிட்டுள்ளார். எம் ஏ சுமந்திரனை தமிரசசுக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என பொன்னம்பலம் கஜேந்திரகுமார் கங்கணம் கட்டியுள்ளார். ஆனாலும் இருவரதும் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளதால் அவர்கள் மீண்டும் வேண்டாத திருமணத்தைச் செய்ய முனைந்துள்ளனர். இன்னுமொரு விவாகரத்துக்கு முத்தாய்ப்பு செய்கின்றனர்.
இவற்றுக்கு பதலளித்த அமைச்சர் சந்திரசேகரன் தமிழ் மக்களின் மனங்களை வென்றவராக மிக நிதானமாகவே பதிலளித்துள்ளார். அதில் அவர் தமிழ் தேசியம் பேசுகின்ற அதே பொழியாடல்களைத் தவிரத்து இருக்கலாம். ‘நொண்டி’ போன்ற சொற்றொடர்கள் ஊனமுற்றவர்களை அவர்களின் பெற்றோரை புண்படுத்துவதாக அமைந்ததாக ஊனமுற்ற பிள்ளையின் தந்தையும் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ரட்ணசிங்கம் அனஸ்லி தேசம்நெற்க்கு தெரிவித்தார்.
அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தி பா உ மீது தமிழ் தேசியம் மிகப்பாரிய அளவிலான அவர்களது உருவம், பேச்சு வழக்கு மற்றும் சமூகப் பின்னணிகளை வைத்து உடற்கேலிகள் செய்துவருகின்றனர். அதனால் வாக்காளர்கள் தமிழ் தேசியக் கட்சிகளில் இருந்து தங்களை அந்நியப்படுத்திச் செல்வதையே காணக்கூடியதாக உள்ளது. தமிழ் தேசியத்திற்கு தமிழ் மக்களைப் புரிந்துகொள்ள முடியவில்லையோ என்றே எண்ணத் தோண்றுகின்றது. அமைச்சர் சந்திரசேகரனும் தேசிய மக்கள் சக்தியும் தமிழ் மக்களும் ஒரே மொழியில் உரையாடுவதாகவே தோண்றுகின்றது. வரும் புதின் கிழமை யாருடைய வெற்றி என்பதும் இக்கட்சி தோற்கின் எக்கட்சி வெல்லும் என்பதும் தெரியவிந்துவிடும்.