அபிவிருத்தியும் வேண்டும் அரசியல்த் தீர்வும் வேண்டும் ! : கங்கா ஜெயபாலன்

அபிவிருத்தியும் வேண்டும் அரசியல்த் தீர்வும் வேண்டும் ! : கங்கா ஜெயபாலன்

மார்ச் மாதம் 28 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு 2430 இலக்கமிடப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியின்படி 5 940 ஏக்கர் காணிகள் அரச உடமையாக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் வெற்றிலைக்கேணி தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான கைவிடப்பட்டுள்ள காணிகளை மூன்று மாத்திற்குள் காணிச் சொந்தக்காரர்கள் உரிமை கோராவிடில் அரச உடமையாக்கப்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலானது சிங்களத்திலும் மற்றும் ஆங்கிலத்திலுமே முதலில் வெளியிடப்பட்டிருந்தது. ஒரு மாதம் கழிந்த நிலையில் தற்போது தமிழிலிலும் வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமாக வர்த்தமானியில் குறிப்பிடப்படும் காணிகள் இருக்கும் இடங்களில் வாழ்வது தமிழ்மக்களேயாகும். அவர்களுக்கு புரியும்படியான மொழியிலேயே அவ்வறிவித்தல்கள் விடப்பட்டிருக்க வேண்டும்.

என்பிபி அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க இராணுவத்தின் பிடியிலுள்ள தனியாருக்கு சொந்தமான அனைத்து காணிகளும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் விடுவிக்கப்படும் என்று வாக்குறுதியளித்துள்ளார். அதன்படி காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காதும் காதும் வைத்தமாதிரி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. என்பிபி அரசாங்கம் பதவியேற்று 6 மாதங்கள் தான் கடந்திருக்கின்றன . இந்தக் குறுகிய காலத்தில் கைவிடப்பட்டுள்ள காணிகளை இவ்வளவு விரைவாக இனங்கண்டு இருக்க முடியாது. எம். ஏ. சுமந்திரனின் கருத்துப்படி கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவை தற்போதைய என்பிபி அரசாங்கத்தின் காணி அமைச்சரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளிவந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அப்படியானால் கடந்த கால ஆட்சியில் இந்த காணிகளை அரசவுடமையாக்கும் திட்டத்தின் பின்னணியில் ஏதும் சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததா? என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது. இது தொடர்பில் ஆளும் என்பிபி அரசாங்கம் தான் பதிலளிக்க வேண்டும்.

யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் பலர் இன்னும் தமது காணிகளுக்கு திரும்பவில்லை. யுத்தம் நடந்த இடங்களிலிருந்து வெளியேறிய பலரின் வாழ்விடங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. காணிகளிலிருந்து வெளியேறியவர்கள் உடனடியாக திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். பலருடைய காணிகளின் ஆவணங்கள் யுத்தத்தின் போது தொலைந்து விட்டன. அல்லது சேதமடைந்து விட்டன. இந்தச் சூழ்நிலையில் இரு மாதங்களே நிலுவையிலுள்ள நிலையில் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள காணிகளை உரயவர்கள் உரிமை கோருவது என்பது நடைமுறைச் சாத்தியம் இல்லை. எனவே ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க இந்த விடயத்தில் தலையிட்டு 2430 இலக்க சம்பந்தப்பட்ட வர்த்தமானியை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

இந்த வர்த்தமானி அறிவித்தலை மே 28 க்கு முன்னர் அரசாங்கம் மீளப்பெறாவிட்டால் மே 29 முதல் சாத்வீக ரீதியில் பாரிய சட்ட மறுப்பு போராட்டத்தை மேற்கொள்வோம் அரச இயந்திரம் எங்களுடைய மாவட்டங்களில் இயங்க முடியாமல் செய்வோம் ” என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் மதியாபரம் அபிரகாம் சுமந்திரன் அரசாங்கத்துக்கு ஒருமாதம் காலக்கெடு விதித்துள்ளார்.

அதேநேரம் நேற்றைய தினம் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணி குழுவினர் வடமராட்ச்சி கிழக்குப்பகுதியில் மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கியுள்ளனர். அதேபோன்று சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் உமாகஜன் ராசையா போன்றோரும் இலவச சட்ட உதவி இந்த வர்த்தமானி விடயத்தில் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட வர்த்தமானி விடயத்தில் தமிழ்க்கட்சிகளும் அரசியல் செயல்ப்பாட்டாளர்களும் கண்ணை மூடிக் கொண்டு இருந்தமையும் கண்டிக்கத்தக்கது. உள்ளூராட்சித் தேர்தலில் வாக்குகளைப் பெற இந்த விடயத்தில் அரசியல் செய்யாமல் இதய சுத்தியுடன் விரைந்து செயற்பட வேண்டும்.

தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையும் கொள்கை உடன்பாடின்மையும் சுயநலப் போக்குமே இலங்கையில் தமிழ் மக்கள் தமது நியாமான அரசியல் கோரிக்கைகளையும் அபிவிருத்தியையும் அடையத் தடையாகவுள்ளன. தமிழ்த் தேசிய அரசியல் என்பது உணர்ச்சி அரசியலாக வெறுமனே வாய்ச்சவாடல்களாக உசுப்பேத்தும் அரசியலாகவே தொடர்கின்றன. இலங்கையில் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் அபிவிருத்தியுடன் கூடிய சகல விதமான அரசியல் உரிமைகளுடனும் வாழ்வதற்கான யதாரத்த அரசியலை மேற்கொள்ள தமிழ்க்கட்சிகள் தயாராகவில்லை.

தையிட்டி விகாரை விடயத்திலும் குளிர்காயும் அரசியல் செய்யாது, உடனடியாக தீர்வு காணக்கூடிய வகையில் செயற்படலாம். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை விடுத்து மிகுதிக் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான அழுத்தத்தை அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும். பின்னர் தையிட்டி விகாரைக் காணிக்கு சொந்தக்கார பெண்மணி மலேசியாவில் இருப்பதாக எம். ஏ. சுமந்திரன் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண்மணியும் தையிட்டு விகாரை நிர்வாகவும் மேற்க்கொண்டு குறிப்பிட்ட விவகாரத்தில் முடிவு எடுக்கட்டும்.

அதேநேரம் வடக்கு கிழக்கில் தையிட்டி விகாரைக்கு என சட்டத்திற்குப்புறம்பாக தனியார் காணிகளை சுவீகரிக்கும் சந்தர்ப்பங்களை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இலங்கையில் 30 வருடமாக நடந்த யுத்தம் பல படிப்பினைகளை விட்டுச் சென்றிருக்கின்றது. இலங்கையில் வாழும் அனைத்து சாமானிய மக்களுமே யுத்ததின் கோரத்தின் அழிவுகளை சந்தித்துள்ளார்கள். அந்தவகையில் தமிழ்மக்களின் இழப்புக்கள் அதிகம். அவர்களின் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலிருந்த நியாயத்தையும் யாரும் மறுக்க முடியாது. இலங்கையில் அனைத்து சமூகங்களும் சம உரிமைகளுடன் சமத்துவமாக வாழ வேண்டும். ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டு கடந்த காழ்ப்புணர்வுகளுடன் வாழ்வது நீண்டகாலத்திற்கு நிரந்தரமான சமாதானத்தை இலங்கையில் கொண்டுவராது.

இலங்கையின் பன்மைத்துவத்தையும் ஒவ்வொரு இனத்திற்கும் இருக்கும் பிரத்யேக பிரச்சினைகளை கருத்தில் கொண்டு புதியவொரு அரசியலமைப்பையும் புதியவொரு அரசியல் கலாச்சாரத்தையும் உருவாக்க வேண்டியது அதிகாரத்திலிருப்பவர்கள் உட்பட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும். என்பிபி அரசாங்கத்திற்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பெரும்பான்மை சமூகத்தின் மீது நம்பிக்கையிழந்துள்ள தமிழ்மக்களிடம் மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்.

திடீரென வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுதல். காணிகளை கையகப்படுத்தல், புத்த விகாரைகளை அமைத்தல் என்ன இன்னபிற வழமையான இனவாத அரசாங்கங்களின் வழியில் செல்லாது என்பிபி அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவே என்பிபி அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் எதிர்பார்க்கிறார்கள். என்பிபியின் வாதப்படி தமிழ்மக்கள் அனைத்து உரிமைகளுடனும் சமமாக சம அபிவிருத்தியுடன் வாழ வைத்தால் அவர்கள் ஒற்றையாட்சி இலங்கைக்குள் வாழ்வார்கள் என்பதாகும்.

கடந்த காலங்களில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த உயர்குலாம் சிங்களப் பேரினவாத அரசாங்களின் இனவாத அரசியலாலேயே நாடு பிளவுபட்டது. தமிழர்கள் ஆயுதம் ஏந்தினர். ஆனால் வர்க்க அரசியல் பேசும் என்பிபி அரசாங்கத்தில் தமிழ்மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் போதும் அவர்களுக்கு யுத்தத்தில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு நிவாரணத்தையும் வழங்கும் போது இனப்பிரச்சினை என்றொன்று இருக்கப் போவதில்லை என்பதாகும். என்பிபியின் ஆட்சிக்காலம் வரை தமிழ்மக்கள் சமமாக நடத்தப்படலாம். ஆனால் எதிர்வரும் காலங்களில் ஆட்சிமாற்றங்கள் ஏற்படும் போது என்பிபி குறிப்பிடும் அதே இனவாத அரசாங்கங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரலாம். அவர்கள் தமிழ்மக்கள் மீது தமது இனவாத அடக்குமுறைகளை தொடர மாட்டார்கள் என்பதற்கும் தமிழர்களை மட்டுமல்ல சிறுபான்மையினரை இரண்டாம்தர பிரஜைகளாக நடத்த மாட்டார்கள் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது.

என்பிபி கூறுவது போன்று அவர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றது என்பதை தாம் உணர்ந்திருப்பதாகவும் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றவே தமக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளதாக கூறிவது உண்மையாக இருந்தால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கும் தீர்வு காணவேண்டும். எதிர்காலத்தில் என்பிபி ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதும் தமிழ் மக்கள் சுதந்திரமாக சகல உரிமைகளுடனும் வாழ்வதற்கான உத்தரவாதம் புதிதாக உருவாக்கப்பட போகிற அரசியல் அமைப்பில் வழங்கப்பட வேண்டும். அப்படியானவொரு அரசியல் தீர்வை என்பிபி தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கான அரசியல் அழுத்தத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வழங்க வேண்டும்.

உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் வாக்காளர்கள் அபிவிருத்தியும் வேண்டும் அரசியல் தீர்வும் வேண்டும் என சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *